கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்  
 

புலவர் பண்டித பொ. ஜெகந்நாதன்

 

யாழ்ப்பாணத் தமிழரசர்
வரலாறும் காலமும்

ஆக்கியோன்
புலவர் பண்டித
பொ. ஜெகந்நாதன்
வேலணை

பதிப்புரிமை ஆசிரியர்க்கே

வெளியீடு
யாழ். இலக்கிய வட்டம்
யாழ்ப்பாணம் : இலங்கை

Bibliographical Data
Title of the book : Yarlpana Thamilarasar Varalarum Kaalamum

Editor : P. JEGANATHAN

Publisher : Jaffna Literary Circle, Jaffna.

Publication No : 39

Language : Tamil

Size of the book : 42X26 cm.

Price: 30/-

Printers: Aseervatham Press, Jaffna.

Cover Printers: Vijeya Printers, Jaffna.

Artist : V. Kanagalingam (V.K.)

Subject: History

First Edition : August 1987



“யாழ்ப்பாணத் தமிழரசர்
தமிழரசர் வரலாறும் காலமும்”

வாழ்த்துரை
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன்
துணைவேந்தர், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம்

இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உருவாகிவந்த தமிழ்ச் சமுதாயம் ஒரு காலகட்டத்திலே தனித்துவம் வாய்ந்த சமுதாய நிறுவனங்களையும் அரசியல் அமைப்புக்களைம் பண்பாட்டு நெறிகளையும் வகுத்தும் கொண்டது. அதுவே ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற யாழ்ப்பாணத்தரசர் காலமாகும். அம்மன்னர்கள் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாட்டையும், மன்னார் மாதோட்டம் போன்ற பகுதிகளையும் ஆண்டு வந்தனர். திருகோணமலை, அடங்காப்பற்று ஆகிய பகுதிகளிலுள்ள வன்னிமைகள் மேலும் ஆரியச் சக்கரவர்த்திகள் மேலாதிக்கம் செலுத்தினர். அவர்கள் ஆட்சி பதினேழாம் நூற்றாண்டு வரை நிலைபெற்றது.

வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு முதலிய வரலாற்று நூல்கள் அவர்களின் காலத்தவை. இவற்றுட் கைலாயமாலை என்பது ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரில் இராசதானி அமைத்து யாழ்ப்பாண நாட்டில் அரசாட்சி ஏற்படுத்தியமை பற்றிக் கூறும் சிறப்புடையது. அவர்களின் ஆட்சியில் வன்னி நாட்டின்மீது ஏற்பட்ட படையெடுப்புக்கள், குடியேற்றங்கள், அரசியல் மாற்றங்கள் பற்றிக் கூறுவதே வையா என்ற நூலாகும். இந்நூல்கள் நன்கு ஆராயப்பட்டு விரிவான வரலாற்றுக் குறிப்புக்களுடன் புதிதாகப் பதிப்பிக்கப்படல் வேண்டும். இவற்றை ஆதாரமாகக் கொண்டே பதினெட்டாம் நூற்றாண்டில் மயில்வாகனம் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலை எழுதினார்.

யாழ்ப்பாண வரலாறு பற்றிப் பல நூல்கள் சென்ற நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்டு வந்துள்ளன. இவற்றிலே பெரும்பாலானவை கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை என்பவற்றையே ஆதாரங்களாகக் கொண்டுள்ளன. அண்மைக் காலங்களில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் பயனாக ஆரியச் சக்கரவர்த்திகள், வன்னிமைகள், வேளைக்காரப் படைகள், வணிக நகரங்கள், பெருங்கற் பண்பாடு போன்ற விடயங்கள் பற்றி ஆக்கபூர்வமான நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இவற்றிலே பெரும்பாலானவை ஆங்கிலத்திலுள்ளன. இலங்கைத் தமிழ்ச் சாசனவியலில் ஏற்பட்ட முன்னேற்றம் வரலாற்று ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் துணையாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழரின் வரலாற்றை முழுமையாகவும் விரிவாகவும் தமிழில் எழுதி வெளியிட வேண்டியது இக்கால கட்டத்திலே மிக அவசியமான தேவையாகும். இப்பொறுப்பை நிறைவேற்றும் தகைமையும் பொறுப்பும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்ததாகும்.

வரலாற்று நூல்கள் பல்வேறு மட்டங்களிலே எழுதப்படுகின்றன. பல்கலைக்கழக மட்டத்து ஆராய்ச்சிகளின் பயனாக எழுதப்படுபவை பெரும்பாலும் வித்துவத் தன்மை பொருந்தியவை. பொதுமக்கள் மத்தியிலே ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்ட வல்லது ஒரு தேசத்தின் வரலாறு. அதைப் பொதுமக்களின் கவனத்தைப் பெறும் வகையிலும் எழுதுதல் வேண்டும். நாடகம், நாவல் சிறுகதை என்ற இலக்கிய வடிவங்கள் சிலவும் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படுகின்றன. வரலாற்றுச் சார்புடைய பூதத்தம்பி விலாசம், சங்கிலியன் நாடகம் என்ற நாடகங்கள் எமது மக்களின் வரலாற்றுணர்வுகளைத் தூண்ட வல்லனவாய் விளங்கி வருகின்றன.

பொ. ஜெகந்நாதன் அவர்களின் “யாழ்ப்பாணத்தரசர் வரலாறும் காலமும்” என்ற நூல் காலத்தின் தேவைக்கேற்ப எழுந்த தொன்றாகும். இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சிறப்பினைப் பற்றிய சிந்தனைகளைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த வல்லதொன்றாகும். யாழ்ப்பாண வரலாற்றில் அவர் கொண்டுள்ள ஆர்வமும் ஈடுபாடும் பாராட்டிற்குரியனவாகும்.
சு. வித்தியானந்தன்
1 – 6 – 87

யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்

எழுதியவர்
புலவர் பண்டிதர் பொ. ஜெகந்நாதன்

மதிப்புரை
இலங்கைத் தமிழர் வரலாறு பூரணமாக வெளிவர இன்னும் பல ஆண்டுகள் செல்லக்கூடும். இலங்கைத் தமிழருள் ஒரு சாராரான யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு ஓரளவு துலக்கம் பெற்றுள்ளது. இங்குகூட, பல விடயங்கள் இன்னும் தெளிவுபெற வேண்டியுள்ளன. இந்தப் பணியிலேயே புலவர் பண்டிதர் ஜெகநாதன் ஈடுபட்டுள்ளார்.

கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்றும் மூலாதாரங்களை வரலாற்றாசிரியர்கள் தகுந்த முறையிலே பயன்படுத்தவில்லை என்பது ஜெகநாதனுடைய வாதம். இவர் பல புதிய கருத்துக்களைத் துணிந்து முன்வைத்துள்ளார். இவற்றுட் சில, எதிர்கால வரலாற்றாய்வைத் தூண்டக்கூடியன. செங்கடகநகர் பற்றிய கருத்து அத்தகையது.

எண்பதாவது வயதை அண்மிக் கொண்டிருக்கும் நிலையிலும் வரலாற்றாய்விலே இவர் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்படுகிறார். வரலாற்றுண்மைகளைத் தேடுவதிலும் தமக்கு உண்மைகளாகப் படுவனவற்றை வலியுறுத்துவதிலும் இவருடைய கடும் முயற்சி போற்றத்தகுந்தது.

இந்நூலிலே அச்சுப்பிழைகள் பல இடம்பெற்றுள்ளமையால், நீண்ட பிழை – திருந்தம் பகுதி இடம்பெறுகிறது. தென்னாசிய வரலாற்றுப் பின்னணியிலே, நூலாசிரியரின் கருத்துகளுட் சில மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளன. இந்த நூலின் இரண்டவாது பதிப்பு திருத்தங்களோடு வெளிவருமானால், இந்நூல் யாழ்ப்பாண வரலாற்றாய்வுகளிலே போற்றப்படக்கூடிய ஓர் இடத்தைப்பெறுமென்பதில் ஐயமில்லை.
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை,
தமிழ்த்துறைத் தலைவர்,
3-7-1987 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.


மதிப்புரை
யாழ் - இலக்கிய வட்டம் அளித்தது
அறிஞர் பொ. செகந்நாதன் அவர்களால் ஆக்கப்பட்டு, 1944ஆம் ஆண்டு தென்னிந்தியப் பதிப்பகம் ஒன்றினால் அச்சிட்டு வெளியிடப்பட்ட “அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சி” என்ற ஆய்வு நூலினைப் படித்தபோது எனக்கு வியப்பும், நம் நாட்டவர் ஒருவர் ஆக்கிய நூல் என்பதால் பெருமிதமும் ஏற்பட்டன. படித்து முடித்தபோது நிச்சயமாக இந்நூல் தத்துவக் கலாநிதிப் பட்டத்திற்கு விதந்துரைக்கத்தக்க ஆராய்வு நூல் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இன்று அதே அறிஞரின் “யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்” என்ற இந் நூலினைப் படித்தபோது, என தொடக்கத்து எண்ணம் மீண்டும் வலுப்பெறுவதை உணர்கிறேன்.

நமது நாட்டில் பிறந்து வளர்ந்து இலக்கிய ஆக்கங்கள் மூலம் தமிழைப் பெருமைப்படுத்தும் அறிஞர்கள் பலரை நாம் சரிவரக் கணிக்கவில்லை. மதிக்கவில்லை. நாற்பத்திமூன்று வருடங்களுக்கு முன் ஆராய்ச்சி நூல் ஒன்றினை எழுதி வெளியிட்ட அறிஞர் பெருமகன் குறித்து நாம் மறந்துவிட்டோம்.

புலவர் செகந்நாதன் அவர்களுக்கு இன்று எழுபத்தொன்பது வயதாகிறது. 1908ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வேலணையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையிலும், சரஸ்வதி வித்தியாசாலையிலும் பெற்றார். பின்னர் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1933ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். வேலணை சரஸ்வதி வித்தியாசாலை, இடைக்காடு புவனேஸ்வரி வித்தியாசாலை, கல்வியங்காடு செங்குத்தாக் கல்லூரி, யாழ்ப்பாணம் சேனியதெருப் பாடசாலை, நயினாதீவுத் தமிழ்க் கலவன் பாடசாலை எனப் பல பாடசாலைகள் இந்த அறிஞரின் கற்பித்தலால் சிறப்புப் பெற்றன.

செகந்நாதன் அவர்கள் தனது பதினெட்டாவது வயதில் கவிதைகள் ஆக்கத் தொடங்கினார். ஏட்டில் இடம் பெறாத, அச்சு வாகனமேறாத கவிதைகள் பல நூறு. வேலணைப் பெருங்குளம் முத்துமாரியம்மான் மீது இவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். அவை அச்சிலுள்ளன. செகந்நாதனின் கவிதைகளைக் கேட்ட, படித்த வேலணையூர் மக்கள் அவருக்குப் புலவர் என்ற கௌரவத்தை அளித்தார்கள்.

புலவர் செகந்நாதனின் இலக்கியப் பணிகளில் தலையாயது என அவர் ஆக்கிய “அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சி” நூலினைக் குறிப்பிடலாம். சிவப்பதிகாரத்திற்கு முதன் முதல் உரையெழுதிய அடியார்க்கு நல்லாரும் இலங்கையில் அமைச்சராகவிருந்து அடியார்க்கு நல்லாரும் ஒருவரேயென செகந்நாதன் அவர்கள் இந்த ஆராய்ச்சி நூலில் நிறுவியிருக்கிறார். “இம் முடிவு புதுமையேயாயினும் தக்க சான்றுகளோடு மாறு கொள்ளாதவரையில் உறுpயுடையதென்பதில் இழுக்கில்லையெனலாம். இந்நிலையில் இவ்வாசிரியரின் அறிவும் ஆற்றலும் ஊக்கமும் உழைப்பும் பாராட்டிற்குரியன.” என செந்தமிழ்ப் பத்திரிகையில் மதுரைத் தமிழ்ச் சங்கம் மதிப்புரை எழுதியிருக்கின்றது.

“இந்நூல் புதுவது கிளக்கும் ஓர் ஆராய்ச்சி நூலாகும். முத்தமிழ்க் கருவூலமாகிய சிலப்பதிகாரத்திற்கு உரைகண்ட அடியார்க்கு நல்லாரது சரித்திர சம்பந்தமாக இதுகாறும் தமிழுலகம் அறியாத சில முக்கிய செய்திகளை இந்நூலை தக்க ஆதாரங்காட்டி விளக்குகின்றது” என அறிஞர் க. நடேசபிள்ளை மதிப்புரை தந்துள்ளார்.” இந்நூல் தமிழுலகிற்கு ஓர் அரிய விருந்தாகும். இந்நூலிலிருந்து செகந்நாதனுடைய பொறுமையான ஆராய்ச்சிவன்மையும் நுண்மதியும் தெரிகின்றது.” என மகாவித்துவான் பிரம்மஸ்ரீ சி. கணேசையர் பாராட்டியுள்ளமையொன்றே இந்நூலின் சிறப்பிற்குப் போதுமான சான்று. இந் நூல் இதுவரை காலமும் ஈழத்தில் வெளிவந்த சிறந்த ஆய்வு நூல்களிலொன்று என இலங்கை இலக்கியப் பேரவையின் விருதினையும் பெற்றது.

அறிஞர் பொ. செகந்நாதனின் ஆற்றலை அறிஞர் பெருமக்கள் பலரும் இனங்கண்டிருக்கிறார்கள். அவரது ஒரேயொரு ஆராய்ச்சி நூலிலிருநடது அவரின் திறனையும் மதிநுட்பத்தையும் உணர்ந்து போற்றியிருக்கிறார்கள். அத்தகைய அறிஞர் இன்று தனது இரண்டாவது ஆராய்ச்சி நூல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். யாழ்ப்பாணச் சரித்திரத்தின் மெய்மையான ஆய்வொன்றினை, மூன்று தசாப்தங்களாக ஆராய்ந்து கண்ட முடிவுகளைக் கொண்டு, “யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இந் நூல் மிக விரிவாகவும் நுட்பமாகவும் ஆராயப்பட்டிருக்கிறது. தக்க ஆதாரங்களின் துணைகொண்டு அவரது கருதுகோள்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறும் மூலநூல்களாக கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய மூன்றுங் கருதப்படுகின்றன. இந்நூல்களின் அடியொற்றியும், இத்துறை சார்ந்த பல்வேறு நூல்களின் துணைகொண்டும் கல்வெட்டுக்கள், சாசனங்கள், அகழ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டும் காலத்திற்குக் காலம் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாண வைபவ கௌமுதி (க. வேலுப்பிள்ளை – 1918), யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (சுவாமி ஞானப்பிரகாசம் - 1928), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஜோன் - 1980), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை – 1933), வுயஅடைள யனெ ஊநலடழn (சி. எஸ். நவரத்தினம்), வுhந ழேவாநசn முiபெனழஅ (எஸ். நடேசன் - 1960). யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் (கா. இந்திரபாலா – 1972), வுhந முiபெனழஅ ழக துயககயெ (ச. பத்மநாதன் - 1978) ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. பின்னைய நூல்கள் பெரிதும் செ. இராசநாயக முதலியாரினதும். சுவாமி ஞானப்பிரகாசரினதும் வழி தழுவியனவாகவுள்ளன. மூலநூல்களாகக் கொள்ளத்தக்கவற்றினைத் தள்ளிவிடும் போக்கினையும் கொண்டன. இவ்வழியில் முற்றிலும் வேறுபட்ட ஆராய்வுக்கோணத்தில் தன் முடிவுகளைப் புலவர் செகந்நாதன் இந் நூலில் முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தமிழரசு 13ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானதென்பது புதிய வரலாற்றாய்வாளரின் கணிப்பு. ஆனால் செகந்நாதன் அவ்வாறன்றி யாழ்ப்பாணத்தமிழரசு 8ஆம் நூற்றாண்டில் உருவாகிவிட்டதென இந்நூலில் நிறுவியுள்ளார். கலிங்கமாகானே முதலாவது சிங்கையாரிய மன்னனென்று நவீன வரலாற்றறிஞர்கள் இன்று நிறுவ முயல்கின்றனர். அது தவறு கலிங்க மாகனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பில்லை. இருவரும் வௌ;வேறு புருடர்கள் என செகந்நாதன் இந்த நூலில் நிறுவியிருக்கிறார். நல்லூர்க் கந்தவேள் கோட்டத்தை நிறுவிய புவனேசுவாகுவும் செண்பகப்பெருமாள் புவனேகபாகுவும் ஒருவரல்லர். கயிலாயமாலையைப் புராணம் என ஒதுக்கிவிட்டு யாழ்ப்பாண இராச்சியத்தி; மெய் வரலாற்றை ஒரு போதும் கூறிவிட முடியாதென இந்நூலில் செங்கந்நாதன் நிறுவியிருக்கிறார். சிங்கைநகர் நல்லூரே என அவர் அறுதியிட்டு தக்க ஆதாரங்களோடு இந்த ஆராய்ச்சி நூலில் காட்டியிருக்கிறார். சிங்கையாரியன் வந்த ஆண்டு எண்ணூற்றெழுபது என்பதை 1170 எனப்பிழையாகப் பொருள் கொண்டு, கலிங்கமாகனது வருகையுடன் தொடர்புபடுத்த நவீன ஆய்வாளர்கள் முயல்வதை செகந்நாதன் கண்டிக்கிறார். உண்மையில் அது சிங்கையாரியன் சாலிவாகன சகலருடன் 870 ஆம் ஆண்டே வந்தான் என்பது அவர் முடிபு. அத்துடன் யாழ்ப்பாண வைபவ விமர்சன ஆசிரியரும், யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியரும் உரைத்த பிழைகள் பலவற்றை இந்நூலில் அவர் சுட்டிக் காட்டுகிறார். எனவே இவற்றின் அடியொற்றி நோக்கும்போது யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்று ஆய்விற்குப் புதியதொரு பரிமானத்தைச் சேர்ப்பதாக செகந்நாதனின் யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் என்ற இந்த ஆராய்ச்சி நூல் அமைகின்றது.

அறிஞர் செகந்நாதனின் ஆளுமைக்கும், ஆராய்வுத்திறனுகளும், அனுபவத்திற்கும் ஏற்ப இந்நூலில் அவர் முன் வைத்துள்ள வரலாற்றுச் செய்திகளின் மெய்மை உள்ளது. ஏற்பதும் ஏற்காதுவிடுவதும், தக்க ஆதாரங்களுடன் மறுப்பதும் போற்றுவதும் இந்நூலினைச் சீர் தூக்கிப் பார்க்கும் அறிஞர் பெருமக்களின் பணியாகும்.

அறிஞர் செகந்நாதனின் இந்நூலினை வெளியிடுவதில் யாழ். இலக்கியவட்டம் பெருமிதமடைகின்றது. புலவர், பண்டிதர், அறிஞர் செகந்நாதனின் பணி சிறக்கவும் இன்னமும் பல ஆராய்ச்சிகளைப் புரிந்து தமிழின் பெருமையை உயர்த்தவும் வாழ்த்துகின்றது.

வாழ்க. நீ அறிஞ!

கந்தையா குணராசா எம்.ஏ.இ.நி.சே.
உதவி அரசாங்க அதிபர், (செங்கை ஆழியான்)
கிளிநொச்சி. செயலாளர், யாழ், இலக்கிவட்டம்
10-7-87


முகவுரை
யாழ்ப்பாணம் எம் தாயகம், யாழ்ப்பாணத் தமிழரசர் பண்டைக் காலத்திலே இந்த யாழ்ப்பாண நாட்டை ஆட்சிசெய்தார்கள். அவர்கள் சரித்திரத்தைக் கூறும் யாழ்ப்பாணச் சரித்திர நூல்கள் இன்றும் உள்ளன. அவைகளுட் சில, சிற்சில உண்மைகளை மாறுபாடு கொண்டுரைக்கின்றன. அதனால் பயில்வார்க்கு உள்ளபடியான உண்மைகளை ஐயம்திரிபில்லாமல் உணர்ந்து கொள்வதில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. அவ்விடர்ப்பாடுகளை நீக்கியும், விளக்கத்தை எளிதாக்கியும் கூறவல்ல யாழ்ப்பாணத் தமிழரசர் கால நூல்கள் இக்காலத்தில் வெளிவரவேண்டும் என்று எண்ணி இந்நூலை எழுதினார். தமிழரசர் நம் நாட்டிற்குச் செய்த நன்மைகளை நினைத்து நன்றிகூரவும், அவர்கள் ஞாபகத்தை நிலை நிறுத்தவும் இந்நூல் உதவும் என்பது நமது நம்பிக்கை.

யாழ்ப்பாணத் தமிழரசர் காலம் யாழ்ப்பாணத் தமிழரின் சுதந்திரகாலம், அக்காலத்தில் தமிழரசர் அரசு புரிந்தார்கள், அவர்கள் வரலாறு பொய்யாப் பழங்கதையாய், இல்லையாய்ப் போகாமல் உறுதிப்படுத்தி வைக்கவேண்டுமென்பதுதான் நம் நாட்டபிமானம் படைத்த பெரியோர்களது கொள்கை. சுதந்திரதாகம் மிக்க இக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாற்றை எழுதி nவிளிவிடுதல் அவசியமென எண்ணினேன். இந்நூலினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களும் இக்காலத் தேவைக்கு ஏற்ப எழுந்த ஒன்றாகுமென்று குறிப்பிட்டுள்ளார்கள். இந் நூலில் யாழ்ப்பாணத் தமிழரசர் காலச் சரித்திரச் சிக்கல்கள் சில. பல வெட்டப்படுகின்றன பல புதுவிடயங்கள் அரிதிற்கண்டு சொல்லப்படுகின்றன. இக்காலத்திலே ஒரு நூலை அச்சிட்டு வெளியிடுவதென்பது மிகவும் கடினமான செயலே என்பது யாவரும் அறிந்ததே. யாழ்ப்பாணத் தமிழரசர் மேல் யாம் கொண்ட அன்பினாலும் அபிதானத்தினாலுமே இந்நூலே எழுதலானோம்@ நிற்க.

மாவிட்டபுரம் கந்தக்கடவுள் அருளிலே அக்கோயில் ஆதினகர்த்தர் மகாராஜ் ஸ்ரீ.சு.து. ஷண்முகநாதக் குருக்கள் அவர்கள் இந்நூலிற்கு ஆசியும், ஆதரவும் நல்கியுள்ளார்கள். அப்பெருந்தகைக்கு இயல்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணத் தேசாபிமானம், சைவசமயாபிமமானம், யாழ்ப்பாணத் தமிழரசர்மேல் கொண்ட நல்லபிமானம் என்பனவே இவற்றை இவ்வாறு நல்கக் காரணங்களாயிருந்தனவென்றறிந்து நாமவரைப் போற்றுகின்றோம்.

இவர் சிதம்பரம் அந்தணர் தில்லை மூவாயிரவர் குடும்பத்தைச் சேர்ந்தவராய் சோழராசாவால் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு முதலாவது ஆதினகர்த்தராக நியமிக்கப்பட்ட பெரிய மனத்துள்ளாரின் உத்தேசமாக நாற்பதாவது பேரனாக யாழ்ப்பாண வைபவமாலைப்படி அறியப்படுகின்றனர்.

இந் நூலிற்கு வேறும் பல பெரியர்கள் உதவிபுரிந்துள்ளார்கள்@ யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் திரு. சு. வித்தியானந்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். கலாநிதி திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் மதிப்புரை அளித்துள்ளார்கள். மேலும் யாழ். இலக்கிய வட்டத்தார் இந்நூலிற்கு மதிப்புரை அளித்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாழ். இலக்கிய வட்டச் செயலாளர் செங்கையாழியான், இந் நூல் வெளியீட்டிற்கு பல்வகை ஒத்துழைப்பும் நல்கினார். அது அவரது சால்போ, இயல்போ என்று உணர்ந்து கொள்வதன்றி சொல்லி விளக்க இயலோம்.

யாழ். பல்கலைக் கழக நூலகர் திரு. முருகவேள் அவர்கள் இந் நூலாராய்ச்சிக்கு வேண்டிய நூல்களை அக் கழக நூலகத்தில் பார்வையிட அனுமதித்தார்கள். யாழ். மத்திய கல்லூரி நூலகர் திரு. மு. மாணிக்கவாசகர் தம் நூல் நிலையத்திலும் வேண்டிய நூல்களைப் பார்வையிட அனுமதி தந்தார். கலாநிதி சி.க. சிற்றம்பலம் அவர்களும் இவ்வாராய்ச்சிக்கு வேண்டிய சில நூல்களைத் தந்துதவினார்கள். நம்வீட்டயலவரும் நம் மாணாக்கரும் ஆகிய ஒரு வர்த்தகப் பிரமுகர் தாமே முன்வந்து இவ்வாராய்ச்சிப் பணிக்குப் பயன்படுத்தும்படி ஒருதொகைப் பணத்தைத் தந்துள்ளார்கள். இவர்கள் அனைவர் நன்றியையும் யாம் போற்றுகின்றோம்.

இந் நூல் வெளிவரவேண்டுமென்று ஆவல்கொண்டிருந்தவரும் ஒத்தாசை புரிந்தவருமான எனது மனைவி நூல் வெளிவர முன்பு இறைவனடி சேர்ந்துவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இந் நூலின் வாசிப்போர் இதில் புதிதாக வெளியாகும் உண்மைகளையும், மறுத்துரைக்கும் உண்மைகளையும் கவனித்துப் பயில்வார்களாக, இந் நூலில் உள்ள அச்சுப் பிழைகளை முதற்கண் அறிந்து திருத்திப் பயிலும்படி வேண்டிக்கொள்கிறேன். இந் நூலினை அழகுற அச்சிட்டுத் தந்த யாழ். ஆசீர்வாதம் அச்சகத்தாருக்கும். மேல் அட்டை வேலைகளை அழகுறச் செய்து தந்த யாழ். விஜயா அச்சகத்தாருக்கும் நன்றி கூறுகின்றேன்.

இங்ஙனம்
பொ. ஜெகந்நாதன்

பொருளடக்கம்
பக்கம்
1. ஓர் ஆராய்ச்சி நூலின் ஆய்வு முறை 1
2. யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசன் அரசாட்சி ஆரம்பம் 6
3. வைபவமாலை நூலமைப்பு 7
4. கைலாயமாலை நூலமைப்பு 8
5. தமிழ் அரசர்கால வரலாறு இன்றுள்ள நிலை 22
6. கதிரமலை இராச்சியமும் காலமும் 24
7. மாருதப்பிரவல்லி 27
8. கைலாயமாலையில் மாருதப்பிரவல்லி வரலாறு 31
9. உக்கிரசிங்கன் தலைநகர் 32
10.இடப்பெயர்கள் 33
11. பெரியமனத்துள்ளார் விவாகம் 38
12. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் பிற்காலவரலாறு 39
13. செங்டகநகர் இராச்சியம் 41
14. யாழ்பாடியின் யாழ்ப்பாண இராச்சியம் 47
15. நல்லூர் இராச்சியம் 54
16. பாண்டிமழவன் அழைத்துவந்த சோழ இராசகுமாரன் 63
17. பிறர்கண்ட சிங்கைநகர் 66
18. சிங்கை ஆரியகுல மன்னரும் நாம ஆவலியும் 72
19. சிங்கை ஆரியனும் கலிங்கமாகனும் 76
20. காலிங்கை - கூழங்கை 84
21. மாகன் காலத்துக்கு முன்னரே நல்லூரில் தலைநகர்
அமைந்திருந்தது 86
22. வல்லிபுரத் தலைநகர் சிங்கைநகரல்ல 88
23. பரராசச்சேகரன் திருப்பணி கூறும் சிதம்பரப்பட்டயம் 96
24. குயிற்றூதில் காணப்படும் குறிப்புகள் 101
25. புகழேந்திப் புலவர் வரவு 106
26. வல்லிபுரத்திலுள்ள தலைநகர் செங்கடகநகர் 108
27. செண்பகப்பெருமாள் படையெடுத்த தலைநகர் நல்லூர் 109
28. நல்லூர் இராச பரம்பரை 111
29. தலைநகர் ஒன்று பெயர்கள் மூன்று 114
30. நல்லூரில் இருந்த தலைநகர்க் களம் ஒன்று, குலமும் ஒன்று 118
31. நல்லூரும் சிங்கை நகரும் 122
32. சிங்கை நகர் 128
33. சிங்கை நகரும் சிலாசனமும் 129
34. இலகியசகாப்தம் எண்ணுற்றெழுபது 137
35. அமைச்சர் புவனேகபாகு 137
36. சிங்கை நகர் 140
37. யாழ்ப்பாண வைபவமாலையும், யாழ்ப்பாண வைபவ விமர்சனமும் 141
38. கோட்டை அரசன் செண்பகப்பெருமாள் வரலாறு 144
39. நல்லூர்த் தலைநகர் இருந்த களம் 148
40. பிறர்கருத்து 150
41. நல்லூர் நகர் வீழ்ச்சி 152
42. யாழ்ப்பாணம் என்றும் பெயர் 156
43. இந்நூலில் புதிதாக வெளியாகும் உண்மைகளுள் அனேகம் 159
44. யா. வை. காரரும் யா, ச. காரரும் உரைத்த பிழைகளும்
அனேகம் 161
45. முதற்குறிப்புக்களும் விளக்கமும் 164
46. இந்நூலின் ஆதார நூல்கள் 164


1. ஓர் ஆராய்ச்சி நூலின் ஆய்வு முறை
ஓர் ஆராய்ச்சிக்காரரோ யாரோ ஒரு ஆராய்ச்சிக் களத்திடை ஒன்றினைக் கூறம்புகுங்கால அந்தக் கூறப்புகுந்த பொருளிலே முன்னர் யாரும் ஏதுங் கூறிஇருக்கிறார்களா என்று பார்த்தல் வேண்டும். அங்ஙனம் பார்த்த அளவானே அதனில் தம் கருத்துக்கு ஒவ்வாமை இருப்பக் கண்டால் உடனே அவைகளை மறுத்து எழுதிவிட வேண்டும். அங்ஙனம் மறுத்த பின்னரே அதன் உண்மை இல்லையாய்விடும். அதன்பின்னர்த்தான கைக்கண்உள்ள சான்றுக்களை எடுத்துக்காட்டித்தான் சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை நிச்சயம் செய்தல் வேண்டும். அங்ஙனம் மறுக்க இயலாவிட்டால் ஒப்புக்கொண்டாக வேண்டும். பிறர் முன்னர் ஒன்று கூறிஇருப்ப அப்பொருள் பற்றி பின் எழுதுபவர் பின்னொன்று கூறினால் பயில்வார் மலைப்பர் அவர்க்கு அதுசரியா இதுசரியோ என்று துணிதற்கு இயலாது இடர்ப்படுவர் எழுதும் நூலின் நோக்கம் சித்தி பெறாது.

ஒரு பொருளிலே இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் கிடப்பனவாக இருக்கும். இவ்வாறிருத்தல் பயில்வார்க்குச் சிக்கலை விளைக்கும் முறைகள். இங்ஙனமாக அநேகமாக இவைகள் ஒன்றனையும் பின்பற்றாமல் பின்வந்த யா.வை. விகாரரும் யா. ச. காரரும் பற்பல நூற்றாண்டுகளுக்கு முற்படத் தோன்றிய கைலாயமாலை, வைபவமாலை நூல்களின் முடிபுகளுக்கு மாறாக ஒருமித்தும் தனித்தும் வேறு வேறு கோட்பாடான முடிபுகளைக் கூறி இருக்கிறார்கள். அங்ஙனம் செய்யுமவர் முன்னர் வெளியான நூல்களின் புரைபாட்டை எடுத்துக் காட்டி ஆதாரங்களுடன் அவை விலைஇல்லா தொழிந்தவற்றை விளக்கவில்லை. தம்மனம் புத்திபோன போக்கின்படி தம்வாயொன்றினாலே தம் மாறுபட்ட கருத்தைக்கூறி இருக்கிறார்கள். இங்ஙனம் செய்வது பெரும்பிழையே. இன்னும் என்னையெனில் இவ்வாதார வைபவமாலை, கைலாயமாலை நூல்களில் சொல்லப்பட்ட சரித்திர சம்பவங்கள் முன்னர் நடந்து முடிந்தவை. அங்ஙனம் நடந்து முடிந்தவைகளைத் திரட்டித்தான் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள் அவைபின்னாலே தோன்றுபவர்களுக்கு அறிவிக்கும் அவாவினாலே பரோபகாரமாக வெளியிடப்பட்டவைகளாகும்.

உதாரணமாக
முன்னாள் மந்திரியாய் இருந்த மகாதேவா யாழ்ப்பாணம் ஆசுபத்திரிக்கு அத்திவாரக் கல்லிட்டார் என்று அவ்வாசுப்பத்திரிமதிலில் எழுதப்பட்டிருக்கிறது.

அவர் அவ்வாறு இடவில்லை என்று நாம் மறுக்க முடியுமா? மறுக்கச் சான்று கிடைக்குமா? இவ்வாறு யாழ்ப்பாண நூல்நிலையத்திலும் சம்சபாபதி அத்திவாரக் கல்லிட்டார் என்று எழுதப்பட்டிருக்கிறது அது பொய்யென்று நாம் மறுக்கமுடியுமா? இவைபிறர் அறிதல் உபகாரம் கருதியல்லவா எழுதப்பட்டிருக்கு. இவ்வாறு உபகாரம் கருதித்தான் வைபவமாலை, கைலாயமாலை ஆதார நூல்களில் எழுதப்பட்டு வெளிவந்த பொருள்களுமென்க. அவைகளை மறுக்க அக்காலத்து வெளிவந்த மாறுபட்ட முடிவைக் கொண்ட ஆதாரங்கள் கிடைத்தாலல்லது நம்புத்தி ஆதாரதோ யூக ஆதாரமோ செல்லாது அவைகள் உண்மையானால் மாறுபட்ட ஆதாரங்கள் கிடைக்கா. இவ்வாதார நூல்களை மரபு நூல்கள் என்று சொல்லுவார்கள். என்னையெனின் ஒன்றனில் சொல்லப்பட்டவைகளை – எழுதப்பட்டவைகளைப் பார்த்து மற்றது எழுதப்பட்டு வருதலால் கைலாயமாலையிற் சொல்லப்பட்டவைகளை வைபவமாலை அப்படியே ஒப்புக்கொண்டு எழுதியிருப்பது இதற்குதாரணம் பண்டைய சரிதத்திலே நாம் ஒன்று கூறப்புகுங்கால் அவ்வாதார நூல்களில் சொல்லப்பட்ட அன்றியும் அக்காலத்தவர் சொல்லி வைத்த வரம்பின்படிதான் போக வேண்டும். அதற்காகத்தான் நடுகல்லைப் புதைபொருளை ஆராய்ச்சிக்காரர் தேடுவதுமென்க (இவ்வாறு ஆராய்ச்சி வரம்பை முறையைப் பின்பற்றிப் போகாமல் தம் புத்திபோன போக்கின்படி போய்பிறர்யாழ்ப்பாணச் சரித்திரத்திலே பல பிழைகளை யா.வை.வி. காரர் யா.ச.காரர் விளைத்து விட்டனர் இவைகளை இந்நூலின் பிற இடங்களில் காணலாம்.

அன்றியும் யாழ்ப்பாணத்திலே வேறும் பாரிய கட்டிடங்கள் பாலங்கள் என்பவற்றில் இன்னார் இன்ன காலத்தில் இதனை இயற்றினார் என்று எழுதி இருக்கிறார்கள். இவை பொய்யாகவா எழுதப்பட்டிருக்கின்றன.

வைபமாலை 18ம் நூற்றாண்டது. யா.வை. விகாரர் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவருக்கு வைபவமாலைக் கூற்றுக்கள் நன்கு தெரிந்துள்ளன. அவற்றுள் ஒன்று தமக்குடன்பாடில்லை என்றால் அதனைத் தக்க சான்று கொண்டு மறுத்துத் தமக்குடன்பாடான ஒன்றுக்கு ஏது காட்டிச் சொல்லவேண்டும். அங்ஙனம் இல்லாமல் முன்னைய கூற்று அப்படியே இருக்க பின்னொன்று சொன்னால் அதையேன் தள்ளவேண்டும் இதையேன் கொள்ள வேண்டும் என்று வாசகர் தெரியாராய் இரண்டனையுங் கொள்ளாது விடுவார் இம்முறையாக எழுதுவது ஆராய்ச்சி வழிமுறை இது சரியில்லை. வைபவமாலை அமைச்சர் கோயில் கட்டினார் என்றும் அவர்தான் தலைநகர் கட்டினார் என்றும் அவர்தான் விருந்துண்டார் என்றும் சொல்லியிருக்க இவர் அச்செயல்களை ஒரு காரணமும் காட்டி மறுக்காமல் இவைகளைச் செண்பகப்பெருமான் செய்தான் என்று சொல்லுகிறார். மறுக்கவும் சான்று காட்டவில்லைகொள்ளவும் சான்று சாட்டவில்லை. பிறமுடிபு கட்டும் நற்சான்று வேறு காணாத வரை அவ்வுரைத் துணிபே உண்மையாகலாம். எனத்தடையில்லை என்க. என்னை கோயில் கட்டினது அமைச்சர் ஆனால் செண்பகப் பெருமாள் கட்டினான் என்று சான்று கிடைக்குமா அவ்வாறு விருந்துண்டது அமைச்சரானால் செண்பகப் பெருமாள் உண்டதை தெரிவிக்கச் சான்று கிடைக்குமா இன்னவாறே பிறவும் ஆகவே சான்று கட்டாதவைகள் உண்மையில்லை எனவும் அவை ஏற்றுக்கொள்ளக் கூடாதெனவும் விளங்குக. ஆகவே ஒரு உண்மையைக் கொள்ளவும் சான்று வேண்டும் தள்ளவும் சான்று வேண்டும் என்க.

இந்நூல் முதல் நூலுமன்று, வழிநூலுமன்று சார்பு நூல் ஆகையால் முன்னர் அறிமுகம் செய்து வைத்த ஆதாரங்களை முழுத் துணையாகவும் பிறவாக வந்து அவ்வுண்மைகளை வற்புறுத்தும் பிற ஆதாரங்களைப் பக்கத்துணையாகவும் கொண்டு இத் தமிழ் அரசர் காலத்தைப் பூரணமாக நிறைவுசெய்யக் கருதுகிறோம்;. இஃது ஓர் சார்பு நூலாதல்பற்றி முந்து நூல்களாகவும் ஆதார நூல்களாகவும் இருக்கும் கைலாயமாலை, வைபவமாலைகளின் வழித்தாகவே நாம் செல்ல வேண்டும் என்னையெனில்.

“முன்னோர் மொழிபொருளேயன்றி யவர் மொழியும்
பொன்னேபோற் போற்றுவோர் என்பதற்கும் - முன்னோரின்
வேறுநூல் செய்து மிலம் மேற்கோளில் என்பதற்கும்
கூறு பழஞ்சூத்திரத்தின் கோள்”

என்பதே இலக்கணமாகலின் என்க.

முன்னோரின் வேறுநூல் செய்தல் முக்கியமாக இச் சரித்திர பாடத்தைக் கொவ்வாது முன்னரே சரித்திர நிகழ்ச்சிகள் நிகழ்ந்து முடிந்த பின்னர் அவ்வச் சம்பவங்களையெல்லாந் திரட்டி, காலத்தாற் பின் வருவார்க்கு அறிய வைக்க வேண்டும் என்றும் நன்நோக்கமே கொண்டு அக்காலத்துண்டான சான்றோர்கள் அவைகளை எழுதி வைத்திருக்கின்றனர் ஆகையால் என்க.

அவை வெளிவந்து பற்பல நூற்றாண்டுகளின் பின்னர் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவைகளை அவர்கள் எழுதித் தராவிட்டால் எப்படி அப் பண்டை நாள்களின் விஷயங்களை நாம் அறிந்துகொள்ளமுடியும். நாம் சொல்லக் கூடியவை நம்வாழ்நாளில் நாம் கண்டவைகள் கேட்டவைகள். அதற்கு முற்பட நம்முன்னோரால் நமக்கச் சொல்லப்பட்ட கதை பரம்பரைக் கதைகளாக உள்ள இவைதான். அதற்கு முற்பட்ட நிகழ்ச்சிகளை நாம் சொல்லப் போனால் கண்டிப்பாக அவைகள் ஆதாரம் காட்டியே சொல்ல வேண்டும். கைலாய மாலை மாருதப் பிரவாகவல்லி கதையில் இருந்தே தொடங்கி சரிதத்தைச் சொல்லியிருக்கிறது.

எக் காரணங் கொண்டோ அது அவள் வரலாற்றுக்கு முற்பட்ட விஷயங்களை சொல்லவில்லை. அது நூல் செய்ய எடுத்துக்கொண்ட உத்திக்கேற்ப அவ்வாறு சொல்லி இருக்கலாம். நாம் அதற்கு முற்படவும் வாய்ப்பு வருவழிச் சொல்லவிழைகின்றோம். விளக்கங்களை எளிது படுத்தும் பொருட்டாக ஒவ்வொர் இராச்சியமாகக் கால அடைவின்படி சொல்லுற்றாம் கால அடைவின்படி என்பது காலமுன்னிருந்து பின்னாக நிகழ்ச்சிகள் நடந்து நடந்து முடிந்த ஒழுங்கின்படி சொல்லுவது என்க.

இந்நூலின் காலம் வரை தமிழ் அரசர் காலச் சரிதங்களைச் சிக்கறுத்து வரையறையாகக் கூறியவைகளாக நூல்கள் இராமல் அங்கொரு சில குறிப்புகளும் இங்கொரு சில குறிப்புகளும் கொண்டனவாகவே பிறநூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூல் பெரும்பாலும் கருத்து வேற்றுமைகளை ஒழித்துக்கட்டி ஒரு முகமாகவே உண்மைகளைச் சொல்வதாகவே நோக்கமாகக் கொண்டது.

ஒருவன் தான் ஜெனனமாகி நூறு ஆண்டுவரை வாழ்ந்தான் என வைத்துக்கொள்வோம். அவன்தன் கால எல்லைக்குள்ளே சம்பவித்த நிகழ்ச்சிகளை நான் நேரே கண்டேன் கேட்டேன் என்ற சொல்லலாம் பிறரும் நம்பலாம். அவன் காலத்துக்கு முற்பட்ட நிகழ்ச்சியைக் கர்ணபரம்பரைக் கதை வழியாகச் சொல்லக் கேட்டேன் எனலாம். அவைகளையும் ஒருவர் நம்பலாம் அதற்கு முற்பட நிகழ்ந்த நிகழ்ச்சியை ஒருவன் எப்படிச் சொல்ல முடியும் முடியாது. அங்ஙனம் சொல்லவேண்டுமேல் அவைகளுக்காதாரம் காட்டியே சொல்லவேண்டும். அங்ஙனம் சொல்லப்படும் உண்மைகளை தமக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தோம் சிலையிலேயோ, சிற்பத்திலோ, சுவரிலோ ஏதேன் எழுத்து வகையாக எழுதிவைத்த சுவடிகளிலோ இன்னும் அகழ்வாராச்சியாற் பெறப்பட்ட குறிப்புகளில் இருந்துதோ தான் சொல்ல வேண்டும். அந்த வகையிலே இந் நூல் வைபவமாலையையும் கைலாயமாலையையும் ஆதார நூல்களாகக் கொண்டமைகிறது. என்னையெனில் முன்னோர் நூலின்படி யொருங்கொத்து அழியாமரபினது வழிநூலாகும் என்பதனாலும் பின்னர் நூல் செய்வோர் முன்னோர் உரைத்த சரித்திரக் குறிப்பை போற்றிக் கொள்ளவேண்டும் அதுவே விதியாதலாலும் இந்நூல் முன்னைய யாழ்ப்பாணச் சரித்திர ஆதார நூல்களை ஆதாரமாகக் கொண்டே உரைக்கப்பட்டதென அறிக.

இங்கே நாம் பிரஸ்தாபிக்க இருக்கும் தமிழரசர் காலம் எதுவெனக் காண்போம். தமிழரசர் காலம் கி.பி. 795 தொடங்கி கி.பி. 1620 வரையும் சுதந்திர மன்னராக ஆட்சி புரிந்தார்கள் மொத்தம் 825 ஆண்டு அதன் பின்னர் கி.பி. 1658வரை போர்த்தருக்கடங்கிய சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்தார்கள் அந்த இரண்டு வகையாலும் 863 ஆண்டுகள் என்னலாம் இக்காலச் செய்திகளைத்தான் இயன்ற வரை நாம் இங்கே சொல்லலுற்றாம்.


2. யாழ்ப்பாணத்தில் தமிழரசர்
அரசாட்சி ஆரம்பம்
சாலிவாகன சகர்ப்தம் 717ல் (கி.பி. 795) விஜயராசனின் சகோதரன் மரபில் பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையில் இருந்து வெகு திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சில தலைமுறையாய் இழந் போன இவ்விலங்கை அரசாட்சியில் அரைவாசி வரைக்கும் பிடித்து கதிரைமலையிலிருந்து அரசாண்டு வந்தான் தென்னாடுகளை வேற்றசன் ஆண்டுவந்தான். (யா.வை.மா.பக். 13) என்று வைபவமாலையார் சொற்றனர். இக்கூற்றுகளைச் சுட்டி யா.வை. விகாரர் பக்கம் 48ல் யாழ்ப்பாண அரசனின் ஆதி இராசதானி கதிரைமலை அல்லது கதிருமலை எனும் இடமாய் அமைந்தமை உண்மைப் பகுதியாகலாம். எனவும் ஆயின் அம்மாலை யார் ஆண்டைச் சகாப்தம் 717 என்பது பொருந்தாதெனவும் மொழிந்து அப்பாலும் மொழிவதாவது யாழ்ப்பான வை. மாலை தந்திருக்கின்ற பூர்வகால ஆண்டுக் கணக்குகளை பெரும்பான்மை ஒப்புகின்றனவராகிய இராச நாயக முதலியார் எட்டாம் நூற்றாண்டு தொடக்கம் (கி.பி. 795 தொடக்கம் கரைமலையில் உக்கிரசிங்கன் இருந்து யாழ்ப்பாண அரசியற்றினான் எனவும் சொற்றனர் எனவும் சொல்லுகிறார். நிற்க மேற்படி கதிரைமலையைத் தலைநகர் இருந்தாகக் கருதப்படும் சுன்னாகப் புகையிரத ஸ்தானத்துக்கருகே இருக்கும் சிவன்கோவில் கதிரைமலைச் சிவன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

யா.வை. விகாரர் பக். 48ல் வைபவ மாலையார் சுட்டுகின்ற கதிரைமலையும் கந்தரோடையாகலாம். இவ்வூருக்கணிமையின் சுன்னாகத்தில் கதிரைமலை என்னும் மேடு அபரதஸ்தானத்துக்கும் சந்தைக்குமிடையில் இருத்தலையும் கவனிக்க என்கின்றார். எனவே மேற்படி கதிரை மலையைத் தலைநகராகக் கொண்டு உக்கிரசிங்கன் கி.பி. 795 தொடக்கம் அரசு புரிந்தான் என்று வைபவமாலை சொல்லுகிறது. இதுவேதான் யாழ்ப்பாண நாட்டின் கண்தோன்றிய முதற் தலைநகரம் என்றறிக.

தார்க் கடம்பன் பேர்முருகன் றாமோ தரன் மருகன்
சீர்க்குரவன் தேவர் திரட்டுக்கொருவன் - சூர்பகையை
மாற்றும் குகன் குழகன் வாய்ந்தவடியார்துயரை
யாற்றுங் குமரனருளாலே – போற்றுதவர்
வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத்
தாய்ந்த நராகத் தடல் ஏறு சாய்ந்து கங்சூல்
போவதன்முன் னேகியந்தப் போர் வேந்தன் மாமகடன்
காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே – ஆவலுடன்
கொண்டேகித் தன்பழைய சேலமலை மா முழைஞ்சில்
வண்டார் குழலை மணம்பு ணர்ந்து “கை.மா.கண். 10-16


கீரிமலைப் பக்கத்திலே கூடாரம் அடித்திருந்த வல்லியைப் பொழுது பட்டு இரவு நேரத்தில் கைபிடித்து அவ்விரவு கழியமுந்தி தன்கதிரமலைக்குக் கொண்டு போனான் என்று குறிப்பிடப்படுவதால் அப்படி இரவு கழிவதன் முன் வரக்கூடிய இடைத் தூரத்தில்தான் மேற்படி சுன்னாகக் கதிரைமலை இருப்பதையறிக. எனவே கதிரைமலை இடநிச்சயம் சரி என்றறிக. நிற்க, எனவே யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுஆரம்பம் 8ம் நூற்றாண்டென்று அறிக. இவ்வுக்கிரசிங்கன் அரசு சிற்றரசு. பேரரசாரம்பம் கி.பி.10ம் நூற்றாண்டு அது நல்லூர்ப் பேரரசு. அதன் வரலாற்றை இந்நூலில் கண்டு கொள்க. ஆகவே யாழ்ப்பாணத்தில் சிற்றரசு 8ம் நூற்றாண்டிலும் பேரரசு 10ம் நூற்றாண்டிலும் என்று யாழ்ப்பாண வாதாரநூல்களில் சொல்லப்பட்டிருக்க இவற்றினை ஆதாரம் காட்டி மறுக்காமல் ஆதாரம் இல்லாமல் வாளா 13ம் நூற்றாண்டென்பது அர்த்தமற்ற பேச்சென்க.


3. வைபவமாலை நூலமைப்பு
இவ் வைபவமாலை யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தினையறிய ஒரு முக்கியமான நூல் இந்நூலைப்பற்றியும் இந்நூலில் நாம் எடுத்தாளும் ஆதாரங்களைப்பற்றியும் அறிந்தாற்றான் உண்மையை அறிந்துகொள்ளமுடியும். ஒருவன் ஒரு செய்தியை ஒரு சம்பவத்தைத்தான் நேரடியாகக் கண்டறியலாம். அவன்வாழ்வும் ஒரு நூறாண்டு என்று வைத்துக் கொள்வோம் அன்றியும் அவன் முற்பட்ட சங்கதிகளை தந்தை அவன்றந்தையாகிய முன்னோர் தாம்கேட்டறிந்தவைகளை அவனுக்குச் சொல்லும் கர்ணபரம்பரையைக் கேட்டறியலாம். அவ்வாய்ப்பும் அவனுக்கு 50ஆண்டுவரை முற்பட்டவைகளாகத்தான் இருக்கமுடியும் எனவே ஒருவன் தன்காலத்து 150 ஆண்டுவரை பழமை வரையுள்ள செய்திகளை பிறர்க்குச் சுட்டியுரைக்கும்போது அவ்விஷயத்தை நான் கண்டேன் கேட்டேன் கர்ண பரம்பரைக் கதைமூலம் கேட்டேன் என்று சொல்லலாம்.

இந்த 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்தியை ஒருவன் பிறர்க்கு எடுத்துரைக்கும்போது அந்த செய்தியை அல்லது உண்மையை சிவாசனத்தையோ புதைபொ ருளையோ, எவ்வகைச்சுவடியாகவோ, நூலாகவோ ஆதாரம் காட்டாமல் வாளாதம் வாயாலே சொல்லலாமோ சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று நம்பலாமோ. எப்படி அவரால் ஆதாரம் இல்லாமல் காணமுடியும்.

ஆதாரம் இல்லாதவைகளை எப்படி உண்மை இருக்குமென்று நம்பமுடியும் இப்படித்தானே ஆராய்ச்சிக்காரர் சிலர் வளாதம் வாயாதாரமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதனாலேதான் சிக்கல்கள் அதிகம் உண்டாயின. இவ்வைபவமாலை ஒல்லாந்த மன்னனுக்கு தமிழரசர் காலச் சம்பவங்களை அறியும் பொருட்டாக எழுதப்பட்ட ஒரு சிறந்த நூல் இந்நூல் தனக்கு முற்பட நிகழ்ந்த பல சங்கதிகளைச் சொல்லியுள்ள பல ஆதார நூல்களில் இருந்து விஷயங்களைச் சேர்த்துக் கொண்டு திரட்டி எழுதப்பட்டது. என்க.

இவை எதிர்கால மக்களுக்கு உண்மையைச் சொல்லி வைக்கவேண்டும் என்னும் ஆசையோடு எழுதப்படுபவை. அவைகளை எழுதும் ஆக்கியோன் பொய்யோ புனைவோ அற்பமேனும் அவற்றுள் இருக்க விரும்பர் முக்குண வயத்தான் முறை பிறழ்ந்துரைத்தல் மக்கள் இயற்கை என்பவாகவின் ஒரேவழி முக்குணவயப்பட்டு அவன் வாக்கில் தற்செயலாகப் பிழை நேரலாம். ஆராய்ச்சிக்காரன் தன் அறிவாற்றாலாலும் ஆராய்ச்சித் திறந்தாலும் பிறநூல்களின் உதவியாலே அப்பிழைகளைக் கண்டு கொள்ளமுடியும்.

அங்ஙனமே வாய்மையாயின் என்னை? பிறர் போர்த்துக்கேயர் வரலாற்றினை வைபவமாலையார் சொன்ன வகையிலே குறை சொன்னார் எனின் வைபவமாலையார் போர்த்துக்கேயர் வரலாறு சொல்ல எடுத்துக் கொள்ளவில்லை என்க. காரணம் போர்த்துக்கேயர் வரலாற்றைச் சொல்லும்படி ஒல்லாந்த மன்னன் கேட்கவில்லை போர்த்தர் அண்டைநாடாக இருந்ததாலும் அவர் வரலாறு அவர்களே தெரிந்து கொண்டிருந்திருப்பர். பாதர் குவிறோஸ் போர்த்தர் படையோடேயே வந்து முன்னரே அந்நூலை எழுதியிட்டார் ஆதலாலும் (அன்றியும் அந்நூல் அப்பொழுது போர்த்தர் போருக்குப்படையனுப்பி வைத்த கோவைத் தேசாதிபதிக்கு அவர் மேலதிகாரப் பொறுப்படையவராய் இருந்தமையின் இவர் அவர்க்கு எடுத்துச் சொல்லும் பொறுப்புடையவராய் இருந்தே அந்நூலை எழுதி அங்ஙனம் பின்னர் அவர்க்கே சொல்லி அந்நூலை அவர் முன்னிலையிலேயே அரங்கேற்றினார் ஆதலாலும் என்பது, அந்நூற் சரிதம்) முற்றிலும் இனத்தால், தூரத்தால் பாஷையால் சமயத்தால் உருவத்தால் கலாசாரத்தால் நாகரீகத்தால் தம்மிலும் வேறுபட்ட தமிழரசர் ஆட்சிமுறையை அவர்கள் வரலாற்றை அறியத்தான் ஒல்லாந்தர் சொல்லும்படி கேட்டார் என்க. எனவே மேக்கறூன் என்றோதும் ஒல்லாந்த மன்னன் மயில் வாகனப்புலவரைச் சொல்லும்படி கேட்டது. தமிழரசர் வரலாற்றை என்க. வைபவ மாலையார் சொன்னதும் தமிழரசர் கால வரலாற்றை என்க. இவ்வுண்மை இன்னும் எவ்வாறு வலியுறுக்கப்படுகிறதெனின்.

உரராசர் தொழு கழன் மேக் கறூனென் றோது
முவாந்தேச் மன்னனுரைத் தமிழாற் கேட்க
வரராச கைலாய மாலை தொன்னூல்
வரம்பு கண்ட கவிஞர் பிரான்வையா பாடல்
பரராச சேகரன் னுலாவுங் காலப்
படிவழுவா துற்றசம்ப வங்க டீட்டுந்
திரராசா முறைகளும் தேர்ந்தியாழ்ப் பாணத்தின்
செய்திமயில் வாகனவேள் செப்பி னானே”

என்னும் பாடலால் மதிப்புரை அளித்தவர் தமிழரசர் காலவரலாற்றைச் சொல்லுகிற கைலாயமாலை வையா பாடல், பரராசசேகரன் உலா இராசமுறை என்னும் நூல்களை ஆராய்ந்தே வைபவ மாலையார் அவ்வாறு சொன்னார் என்று சொல்லியிருத்தலால் தேர்ந்து கொள்க. போர்த்துக்கேய வரலாற்றையுடைய எந்த நூலையும் அவர் ஆதார நூல்களாக எடுத்தார் என்று சொல்லப்படவில்லை. அவர் சொல்லவும் இல்லை என்க. அவர் நூல் எழுதியது போர்த்தர் காலத்தைக் கடந்தாதலின் தமிழரசர் காலவரலாற்றை நிறைவு செய்வான் ஆண்டைக்கு வேண்டும் பகுதியையோ சொன்னார் என்க. அன்றியும் எதிர்காலத் தமிழர்க்கு போர்தகர் காலத்து நிகழ்ந்த புதுமையும் வியப்பும் நிறைந்த சில சம்பவங்களையும் தம்மார்வத்தால் கூட்டிச் சொன்னார் என்க. இஃதென்ன, வியப்பு யா.வை. விகாரரரும் யா.ச. காரரும் இவ்வைபவமாலையைப்பற்றி தத்தம் நூல்களில் பல இடங்களில் கண்டித்தும் அந்நூலாசிரியர் அறிவுக்கு மாசும் மறுவுந் தோன்ற தத்தம் நூல்களில் எழுதியும் இருக்கிறார்களே. ஆகையால் அம்மாலைகளை எப்படி உண்மைக்குறுயானவை என்று சொல்ல முடியும் என்னின், இந்த யா.வை.வி. காரரும் யா.ச. காரரும் ஆராய்ச்சி முறை புரியாராய் தம்மாராச்சியைச் செய்து கொண்ட அதனாலே அம்மாலை நூல்களின் உண்மை முடிபுகளை அவை சொன்னபடியே விளங்காமல் பிறழ்வாக விளங்கிக்கொண்டு அவ்விளக்கத்தினன் அறிவையே துணைகொண்டு இம்மாலை நூல்கள்தான் பிழை என்று அவர்களுக்குத் தோன்றவே. அவர்கள் இம்மாலை நூல்களைக் கண்டித்தார் என்க. அங்ஙனம் கண்டிப்பவர் தம்மிற்றான் பிழை இருக்கு எமது அப்பிழை காரணமாகத்தான் நான் கண்டிக்கிறேன் என்று புரியராய் கண்டித்தார் என்க. இன்னும் எங்ஙனமெனின், கண் பிழைப்பட்ட ஒருவன் ஒரு பண்டத்தைப் பார்க்கும்போது அப்பண்டத்தின் உண்மைக் காட்சி அவன் கண்ணுக்கு விகாரமாகத் தோன்றவே அவன் பண்டம்தான் பிழைத்தது என்று எழுதியவாறாம் என்க.

அங்ஙனமாயின் யா.வை.வி@ யா.ச. காரர் மேல்தான் பிழை, ஆம் ஆம் அவரே பிழைத்தனர். அப்பிழைகளை நூல் முடிவிலே தெரிந்துகொள்ளவரும். அவற்றை யாம் யாவரும் உணரும் வண்ணம் விளக்குவோம். அதுவரையும் இந்நூல் வழியே செல்லுக. நிற்க.

இவ் வைபவமாலை யார் ஆதாரமாகக் கொண்;ட நூல்களிலே இப்பொழுது இருப்பவை கைலாயமாலையும், வையா பாடலும் இல்லாதவை. (இவை சில நூற்றாண்டுகளாகவே இல்லை.) பரராசகேகரனுலாவும், இராசமுறையும் ஆகையால் இருக்கிற கைலாயமாலையையும், வையாபாடலையும் நாம் வாசித்துணர்ந்துகொண்டு வைபவமாலையைப் பார்ப்போமானால் வைபவமாலை சில இடங்களிலே கொஞ்சம்கூட விவரித்துச் சொல்லுகின்றமை புலப்படும். அவை பரராசசேகரனுலா, இராசமுறை என்பவனவற்றுள் அந்நூலாசிரியர் கண்டிருக்கவேண்டும் என்று முடிவுசெய்து கொள்ள வேண்டும். நிற்க அவ்விரிவுகளை இந்நூலின் உட்களங்களிலே பார்க்க.


4. கைலாயமாலை நூலமைப்பு
கைலாய மாலை என்னும் இந்நூலமைப்பு அதி விசித்திரமானது அது ஆதிச்சிங்கையாரியனால் அவன்றன் நல்லூர் இராச்சியம் பின்வரும் அரச சந்ததியினரும் மக்கள் சந்ததியினரும் அறிந்துகொள்ளச் செய்து வைத்த பொன்னேடு. அரசன் அதனைப் பாண்டி மழவன் புவனேகவாகு கெங்காதரக் குருக்கள் என்பவர்களாகிய பேரறிஞர்களது உதவியையும் ஒத்துழைப்பையும் பெற்று முத்துராசக்கவிராசரைக்கொண்டு பாடுவித்து நிறைவேற்றி முடித்தான். இது யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்துச் சரித்திரத்துக்குயிர் ஆன முதல் நூல், இஃதில்லையேல் யாழ்ப்பாணச் சரித்திரம் தமிழ் அரசர் காலம் முழுதும் இருள் நிறைந்ததாய்விடும். யாழ்ப்பாண வைபவமாலையுரைக்கும் வாய்மைக்குத் துணை நிற்கும் முதல்நூல், இஃதொன்றேயொன்றுதான். இயபொழுது கிடைக்கப் பெறுவனவற்றுள் தமிழ் அரசர் காலத்துச் சரித்திரத்துக்குச் சிறப்பான விரிவைக் கொடுப்பது. பரராசசேகரன் உலா, இராசமுறை, வையாபாடல் என்பனவும் இத்தமிழ் அரசர் கால நூல்களே. இவைகள் இக் கைலாயமாலையோடும் வைபவமாலைக்கு முதல் நூல்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் பரராசசேகரன் உலா, இராமுறையும் இப்பொழுது கிடைக்கப்பெறவில்லை.

கைலாயமலை என்னும் பெயர் கேட்ட துணையானே அந்நூல் கைலாயத்தில் எழுந்தருளியுள்ள ஆண்டவன் மீது பாடப்பட்ட ஒரு தோத்திரப்பாமாலை என்றுதான் பலரும் எண்ணும்படி இருக்கும். அன்றியும் அப்படியுமல்லாது கைலாய நாதரது வரலாறு சொல்லும் நூலொன்று எண்ணும்படியுந் தோன்றும். இந்நூலோ அவ்விரண்டின் வகையுமல்லாது யாழ்ப்பாணத்தரசரின் பண்டைய சரித்திர நூலாக அமைந்திருக்கின்றது.

இந் நூலின் உண்மை நிலை இன்று வரை தெரியப்படவில்லை. அன்றி இந்நூல் வரை தெரியப்படவில்லை. நூல் எழுதிய யா.வை.வி. காரரும், யா.ச. காரரும் விளக்கப் பிசகினாலே இந் நூலைப் புறக்கணித்தும், குறை சொல்லியும் தத்தம் நூல்களை எழுதலாயினர். இவர்கள் சுத்த தங்கத்தின் மாற்றை உரைத்தளந்து கொள்ள இயலாத பொற்கொல்லருக் கொப்பானார்கள். இவர்கள் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முந்தியே இருந்து, இந்நூலைப் புறக்கணித்து விட்டதாலே அன்றி அதற்கு மாறாகத் தம் நூலை எழுதி வெளியிட்டதாலே அவர்களுக்குப் பின் வந்தாரெல்லாம் அவர்களைப் பின்பற்றி அவர்கள் போன வழியே தாமும் போய் இந்நூலைப் புறக்கணித்து வந்தனர். இப்பின்வந்தோர் யாவரேனும் தன் தனி அறிவினையோ, ஆற்றலையோ கொண்டாராய்ந்து இந்நூலைத் தம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள அறிந்திலராயினார். மேற்படி நூலார் இதற்கு மாறாகவே தம் நூலாகளை எழுதலானார். இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் என்ன இதையேன் பிறர்தரந் தேர்ந்து கொள்ளாமல் விட்டனர். அது சரியா பிழையா என்பதைக் கொஞ்சம் இங்கே கவனிப்போம்.

இந்நூலின் அமைப்பையும் அதன் உள்ளடக்கிய விஷயங்களையும் அக்காலச் சூழ்நிலை சந்தர்ப்பங்களையும் நோக்கும்போது நம் சமூகம் பின்வருமாறு தோன்றுகிறது.

மன்னன் நகரிவலம்வந்து நானிலம் போற்ற, புகலுமணி மாளிகையிற் போந்து ஓங்க நனிவீற்றிருக்கிறான். அரசன் அவையிலே முடிதொட்டுக் கொடுக்கும் பரம்பரைப், பாண்டி மழவன் என்னும் பிரபு இருக்கிறார். மந்திரி புவனேகவாகு இருக்கிறார். முடிசூட்டிவைத்த கெங்காதரக்குருக்கள் இருக்கின்றார். இன்னும் குடியேறி வந்தார் பல்லோர் இங்கே இருக்கின்றார்கள் அவர்கள் முன்னிலையிலே மன்னன் தான் கண்ட கனவின் காட்சியை விம்மலும் பொருமலுமாக எடுத்துச் சொல்லுகிறான். தான் மதுரையில் இருந்தபோது சொக்கநாதரை வழிபட்டு வந்ததையும், இங்கே அவரை வழிபட இயலாமல் விசாரமாக வாழ்ந்து வந்ததையும், இங்கே ஒரு சிவன்கோயில் கட்டி அக் கடவுளுக:குச் சொக்கலிங்கம் என்று பெயர்சூட்ட எண்ணியிருந்ததையும் அப்பால் அச்சொக்க நாதர் உமாதேவியாரையும் சர்வாங்கபூஷணியாய்க் கூட்டிக்கொண்டு தாம் சர்வாங்கபூஷணனாய் வந்து மன்னா என்னை மறந்தனையோ என்பெயர் கைலாயநாதன் என்று சொல்லித் தன்னை ஒழித்து நின்று ஆட்கொண்டதையும் மன்னன் தீயிடை இட்ட மெழுகென நெக்குநெக்காக உருகிக்கொண்டு அவ்வாறு அவை முன் மொழிந்தவனாய் அப்பால் இனிமேல் நான் என்ன செய்யவேண்டும் என்ன செய்யத்தக்கது சொல்லுங்கள் என்று கேட்டான்.

அப்போது புவனேகவாகு என்னும் மந்திரி எழுந்து அரசே மதுரையில் நீங்கள் வழிபட்ட சொக்கலிங்கப் பெருமானே உங்களை ஒழித்து நின்றாட்கொண்டுள்ளான். அவன் அந்தச் சிவபெருமான் தன் பெயர் கைலாயநாதன் என்று சொல்லி இருப்பதால் அக்கைலாய நாதருக்கு ஆலயம் ஒன்று சமைப்பதுதான் செய்யத் தக்கது என்றான். பாண்டி மழவன் கெங்காதரக் குருக்களும் அவ்வாறே சொன்னார்கள். அரசனும் ஆம் அவ்வாறுதான் செய்யத்தக்கதென்று எண்ணுகிறேன் என்று சொன்னான். மறுநாள் கோயில் கட்டும் வேலை ஆரம்பமாயிற்று. அப்பால் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நிறைவேறி முடிந்தது. அப்பாலும் சில நாள்கள் சென்றன. அப்பால் அரசன் நல்லூர் இராச்சியத்தைச் சேர்ந்த பல தேசங்கள் மக்கள் குடியேறி வாழ வாய்ப்புள்ள நிலங்களாக இருப்பதும் குடிமக்கள் தென் இந்தியாவில் இருப்பதைம் உணர்ந்து மந்திரி பிரதானிகளோடு யோசனை செய்து தென் நாட்டுத் தமிழ் மன்னர்க்கு ஓலை போக்கியும் குடியேற்றம் செய்யத் திட்டம் இட்டான். குடியேற்றம் நாட்டு வளர்ச்சிக்கும் அரசன் உயர்ச்சிக்கும் அவசியம் என்று எண்ணினான். குடியேற்றம் பல பிரச்சினைகள் தலைதூக்கும் விஷயமாகவும் அது இருந்தது. குடியேற்றப்படும் ஒவ்வொரு தலைவனைப் பற்றியும் அவன் எங்கிருந்து இங்கே அழைக்கப்பட்டான். இங்கே எங்கே குடியமர்த்தப்பட்டான் என்பன வாய விஷயங்கள் ஆட்சிக்கு வரும் அரசர் பரம்பரை முக்கியமாக அறிய வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. மேலும் புவனேகவாகு சொல்வார். அரசே பாண்டி மழவரும், நீங்கள் நானுமாக யோசித்துத் தென் இந்திய தமிழ்ப் பிரதேசங்களில் விசாரணைசெய்து மக்களைத் தெரிந்தெடுத்து வருவித்து இங்கேயும் அவரவர்க்கு ஏற்ற இடங்களில் குடியேற்றினோமே அது பின்வருபவர் எவர்க்கும் தெரியாது. அது உங்களுக்கும், எங்களுக்கும் தான் தெரியும். அவைகளை நீங்கள் எழுதிவைத்தாலன்றி வேறொருவருக்கும் தெரியாது. ஆகையால் அரசாங்கம் பதிவிலும் பதிந்து வெளியே பொது மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்றான் அரசனும் ஆம் என்றான். அப்பாலும் சில நாட்கள் கழிந்தன.

மனித வாழ்வு ‘நிச்சயம் அற்றது’ உங்கள் காலத்தின் பின்னும் உங்கள் பரம்பரையினர் இந் நல்லூர் இராச்சிய மன்னராக வரப்போகிறார்கள். இந்நாட்டில் நீங்கள் குடியேற்றிய மக்களும், இந்நாட்டு மக்களும் எதிர்காலத்தில் வாழப்போகிறார்கள். இவர்களுக்கு இவ்விராய்ச்சிய வரலாறு தெரியப்படவேண்டும். ஆகையால் அவைகளை ஏட்டில் எழுதி வைக்கவேண்டும் என்றார்கள். ஆம், அரசே அவ்வாறு செய்ய வேண்டியது அவசியம்தான் என்று ஆங்கிருந்து பாண்டிய மழவனும் கெங்காரக் குருக்களும் சொன்னார்கள். அரசனும் அவைகளை முக்கியமானவைகளை அரசாங்கப் பதிவேட்டில் பதிந்துள்ளேன் என்றான் அப்பாலும் பாண்டி மழவன் எழுந்து அரசே, கைலாயநாதன் உங்களை ஒழித்து நின்றாட்கொண்ட சங்கதியை நீங்கள் இந்த இராச்சிய மக்கள் எல்லார்க்கும் தெரியப்படுத்தினால் தான் அவ்வாண்டவனுக்கு நன்றிக்கடன் செய்தவராவீர்கள் அது பிறர்க்கும் அவ்வாண்டவன் மீது பக்திபெருகும். அரசனும் ஆம் அவ்வாறு செய்தாற்றான் ஆண்டவன் பழி என்னை அணுகாது நீங்கிவிடும் என்றான்.

இக் கைலாயநாதன் தன்னை ஆட்சிகொண்டதும் தான் அவர்க்குக் கோயில் கட்டினதுமான இச் செய்திகள் என் வருங்கால இராசபரம்பரையும், இந்நாட்டு மக்கள் பரம்பரையும் அறிய வேண்டும். ஆகையால் அதனை, அச் செய்தியை நூலாக எழுதி வெளியிட எண்ணினான். அப்படிச் செய்தாற்றான் கைலாயநாதனுக்கு நான் நன்றிக் கடன் செய்தவனாவேன். என் தாகமும் நிற்கும் என்று எண்ணியவனாய் அமைச்சர் அவையைக் கூட்டி யோசித்தான். அவர்கள் எல்லோரும் ஒரே முகமாக அக் கருத்தை ஆமோதித்தார்கள். சரி அப்படியானால் அச் சங்கதிகள் எல்லாம் திரட்டி நூலாக எழுதக் கூடியவர் யார் அவரைத் தேடிச் சபைக்குக் கொண்டுவர வேண்டுமே. என் சமூகத்துக்குக் கொண்டு வரவேண்டுமே என்கின்றான் மன்னன், அப்பொழுது அவையினரில் பாண்டி மழவன் எழுந்து அரசே, சிங்களக் கலகங்களால் நாடு சீர்கெட்டிருக்கிறது. செந்தமிழ் வளர்ச்சி குன்றி இருக்கிறது. இப்பொழுது இச் சம்பவங்களைப் பாடக் கூடிய சிறந்த புலவர்கள் இந்நாட்டில் இல்லை. சோழநாடு முதலிய தமிழ் நாடுகளில் தான் யாரும் சிறந்த புலவரைத் தேடி ஆராய்ந்து வரவழைத்து அவரைக் கொண்டுதான் எழுதுவது நல்லதென்று சொன்னார். அப்பால் சிங்கையாரியனும் அவர்கள் கூற்றை ஆமோதித்துக் கொண்டவனாய் பல தமிழ்நாடுகளிலும் விசாரணைசெய்து இறுதியில் சோழ மன்னரின் பழைய தலைநகராகிய உரையூரிலே சோழ இராசாங்கப் புலவராய செந்தியப்பர் மகன் முத்து இராசக் கவிராசர் என்றொரு பெரும்புலவர் இருப்பதாகக் கேள்விப்பட்டான். அவரைத்தன் சபைக்கு அழைக்கமன்னன் விரும்பினான். உடனே ஒரு தூதுவனை அழைத்து சோழ மன்னனுக்கு ஒரு திருமுகம் எழுதி அவன் கையிற்கொடுத்து இதைச் சோழமன்னன் கையிற்கொடுத்து வாவென்று அனுப்பினான். தூதுவன் மறுநாளே வெளிப்பட்டு சோழ நாட்டுக்குப் போய் சோழ அரசன் கையில் ஓலையைக் கொடுத்தான் சோழ மன்னன் அதனை வாசித்துப் பார்த்தான். “உறையூரிலே, தலைநகரிலே வசிக்கும் செந்தியப்பர் மகன் முத்து இராசக் கவிஞரை தன் சபைக்கு அனுப்பிவைக்கும்படி எழுதப்பட்டிருந்தது.

மறுநாள் சோழமன்னன் தன் அரண்மனைத் தூதுவது ஒருவரை அழைத்து உறையூர் சோழரின் பழைய தலைப்பட்டணம் காவிரி நதிக்கரையில் உள்ளது. நீவிர் உறையூர் சென்று செந்தியப்பர் மகன் முத்துராசக் கவிராசரிடம் ஈழச்சிங்கையாரிய மன்னன் எனக்குச் செய்த வேண்டுகோளையும் அவ்வேண்டுகோளின்படி புலவரை ஈழச்சிங்கை ஆரிய மன்னன் சமஸ்தானத்துக்குச் செல்ல நாளை அதிகாலை புறப்பட்டுப் பிரயாணத்தை மேற்கொள்ளும்படியும் நான் சொன்னதாகச் சொல்லிவா என்றனுப்பினான். தூதுவனும் அவ்வாறே அப்புலவரிடம் சொன்னான்.

புலவர் அம்மன்னன் கட்டளையை ஒப்புக்கொண்டவராய் தாம் மறுநாளே ஈழநாட்டுச் சிங்கையாரிய மன்னனிடம் செல்ல இருப்பதாகவும் இச்செய்தியைச் சோழ இராசாவுக்கறிவிக்கும்படியும் சொல்லியனுப்பினார். தூதுவன் தான் புலவரைச் சந்தித்த விவரங்களையெல்லாம் சோழ மன்னனிடம் எடுத்துச் சொன்னான். சோழன் அங்கே தங்கி இருந்த சிங்கை மன்னன் தூதுவனிடம் புலவர் வருகையைத் தெரிவித்து ஈழத்துக்கு வழியனுப்புp வைத்தான். ஈழத்தூதுவனும் சிங்கை மன்னனிடம் வந்து அங்கே நடந்தவைகளையெல்லாம் சாங்கோபாங்கமாக எடுத்துச் சொன்னான். ஈழத் தூதுவனும் சிங்கை மன்னனிடம் வந்து அங்கே நடந்தவைகளையெல்லாம் விபரமாமக எடுத்துச் சொல்லிப் புலவர் வருகையைத் தெரிவித்தான்.

புலவர் சில நாட்களால் நல்லூர் சிங்கை மன்னன் சமஸ்தானத்துக்கு வந்து சேர்ந்தார். புலவருக்கு நல்ல வரவேங்பு நடந்தது. அப்பால் நூல் ஆக்கல் ஆரம்பமாயிற்று. மன்னன் மேற்படி அவையைக் கூட்டினான். புலவர் தாம் பாடவேண்டிய வரலாறுகளைத் தம்மிடம் ஒப்படைக்கும்படியும் தான் பாடித் தருவதாகவும் சொன்னார். அங்கே நூலாக்கும் சர்ச்சை தலைதூக்கியது. நூலின் பெயரென்ன, நூலில் சேர்க்கப்படும் விஷயங்களெவை என்பதில் கொஞ்சம் கொஞ்சம் கருத்து வேற்றுமைகள் நிலவின.

கைலாயநாதன் மேம்படு பொருளாக இருப்பதாலும் அவன் தன்னை ஆட்கொண்ட தெய்வமாக இருப்பதாலும், அவன் கனவில் தோன்றிய நிகழ்ச்சியே ஆகக்கடை நிகழ்ச்சியாக இருப்பதாலும், கைலாயம் சிறந்த மங்களப் பெயராக விருப்பதாலும் பொருள் நோக்கத்திலும் அது உயர்ந்ததாக இருப்பதாலும், கைலாயநாதன் பெயரோடே புத்தகம் விளங்கினால்தான் அவர் பெயர் என்றும் நிலைபெறவும், அக்கனவு என்றும் நிலைபெறவும், நாம் நன்றிக்குறிப்புச் செய்து விட்டேன் என்று என்மனம் சாந்தியடையவும் இக்கால வருங்கால நாடும் என் நன்றிகுறிப்பையும் தெய்வபக்தியையும் மதிக்கவும் ஆண்டவனும் என் நன்றியை நினைக்கவும்கூடும் கைலாயநாதர் வரலாற்று மாலை என்றே பெயரிடுக என்று மன்னன் சொன்னான்.

ஆம் அரசே! நீங்கள் சொல்பவை அனைத்தும் உண்மைதான் அவைகளைசுருக்கி அப்பொருளிலே கைலாயமாலை என்றே பெயர்வைத்து விடுவோம் என்று புலவர் சொன்னார். எல்லாரும் ஒரே முகமாக ஆமோதித்தார்கள். சரி அப்பால் பாடும் வரலாற்றை ஒழுங்கு படுத்தித் தாருங்கள் என்று புலவர் வேண்டினார். புவனேகவாதி எழுந்து அரசே, நல்லூர் வரலாறு மாத்திரம் பாடினால் நூல் பூரணமானதல்ல. அது இப்போ நிகழ்ந்த இடைநிகழ்ச்சி இதற்குமுற்பட நிகழ்ந்த இந்நாட்டு நிகழ்ச்சிகளையும் சேர்த்துப்பாடினால் தான் நூல் பூரணமடையும். நல்லூர் வரலாற்றுப்பற்றி நாங்கள் நேரடியாகச் சொல்லுகிறோம். அது எங்கால நிகழ்ச்சி இதற்கு முற்பட நிகழ்ந்த மாருதப் பிரவாக வல்லி வரலாறு அவரின் சொந்தக்காரனாகிய மன்னனுக்குத் தெரியும் யாழ் பாடியின் யாழ்ப்பாண வரலாறு பாண்டி மழவர் சொல்வார். எனவே நல்லூர் வரலாறு அதனோடு முற்படத் தொடர்புபட்ட செங்கடகநகர் வரலாறும், செங்கடக நகர் வரலாற்றோடு தொடர்புபட்ட கதிரைமலை வரலாறுமே. கதிரைமலைத் தலைநகர்க்கு முன்னும் யாழ்ப்பாணத்தில் மன்னர் ஆட்சியும் மக்களுமிருத்திருக்கிறார்கள். ஆயினும், கதிரைமலைத் தலைநகர் கொண்ட உக்கிரசிங்கனில் இருந்துதான் சொல்லக்கூடிய சான்றுகள் இங்குள்ளன. ஆகையால் இந்நூல் உக்கிரசிங்கன் வரலாறு தொடங்கிக் கைலாயநாதர் குடமுழுக்குவரை சொல்லவேண்டும் என்றார்கள். அரசன் அவர்கள் நாட்டபிமானத்தையும் புத்தி சாதுரியத்தையுமறிந்து சந்தோஷப்பட்டான். உங்கள் விருப்பம் அதுவானால் அவ்வாறு செய்க. ஆயின், கைலாயமாலை என்னும் தலைப்பெயர் மாறக்கூடாது என்றான் நூல் யாப்பு ஆரம்பமாயிற்று. நூலுக்கு வேண்டிய ஆதாரச் சுவடிகளையும் காணபரம்பரைக் கதைகளையும் புவனேகபாகு பாண்டிமழவனும் அங்கிருந்த முதியோர்களும் கொடுத்தார்கள் புலவர் அவைகளை ஆராய்ந்து அடைவுபடுத்திக் குறித்துக்கொண்டனர் நூல் யாப்பும் ஆரம்பமாகிப் பலவாரங்கள் சென்றன. அப்பால் ஒருநாள் நூல் நிறைவெய்தியது என்று புலவர் அரசனுக்குத் தெரிவித்தார்.

அரசன் அவையைக் கூட்டினான், அவையிலே புலவர் பிள்ளையாரை வணக்கம்செய்து கலிவெண்பா யாப்பு (310) முன்னூற்றிப்பத்திலே தன் பாடலை வாசித்தரங்கேற்றினார்.

“எந்தைபிரான்…….. நல்லூர்க் கையிலையில் நாடிவந்து
மேவுமணி யாலயம்புக்கு
ஆதிபரனங்கே யமார்ந்துறைந்து – நீதியுறு
மன்னவரும் சீரும் மனிதர்களும் வாழ்ந்திருக்க
யுன்னியருள் செய்தானுகந்து”

என்று கைலைநாதன் அருளோடு மங்கலமாக நூலை முடித்தார்.

அபாரம் அபாரம் என்று எல்லாரும் வியந்தார்கள். அரசன் கைலாயநாதனுக்கு தான்செய்யவேண்டிய நன்றிக் கடன் நிறைவேறிவிட்டதேயென்று மிகவும் சந்தோஷப்பட்டான். மழவர் யாழ்ப்பாண தமிழ் அரசர் வரலாற்று நூல் ஒன்று எழுதப்பட்டாயிற்று என்று சந்தோஷப்பட்டார். கைலாயநாதசுவாமி வரலாற்றுமாலை பாடுவிக்க எடுத்துக்கொண்ட பிரயத்தினம். அம்மாலையோடு நல்லூர் இராச்சிய வரலாறும் அதற்கு முற்படவுள்ள யாழ்ப்பாண வரலாறும் பாடி முடித்தவாறாயிற்று. புலவர் வாசிக்கக்கேட்டவர்கள் எல்லாரும் அமுதுண்டு களித்தவர் போலக் களித்தார்கள் ஒவ்வொருபகுதியும் தித்திப்பாக இருந்தது முத்துராசன் கவிராசமகுடம்தான் என்று எல்லாரும் வியந்தார்கள்.

ஆயினும் பாண்டி மழவர் சிற்சில இடங்களில் ஆட்சேபனையைக் கிளப்பிவிட்டார். கவியைபற்றியுமல்ல. சுவையைப்பற்றியுமற்ற சிற்சில சரித்திராம்சங்களைப்பற்றி, 1 சிங்கையாரியமன்னன் தலைநகர்கட்டிய அல்லது கைலாயநாதர் கோயில் கட்டியகாலம் இந்நூலில் குறிக்கப்பட்டிருக்கா? அமைச்சர் புவனேகவாகு தலைநகர்கட்டுவித்தாரே, அவர் கட்டுவித்தமை குறிக்கப்பட்டிருக்கா? இவை இல்லையே. புலவர்க்கிவ் விஷயத்தைச் சொல்லி வைக்கவில்லையே என்றார் புவனேகவாகு. நூல் வாசித்து அரங்கேறிவிட்டதே. அல்லாமலும், சிங்கையாரிய மன்னர் வரலாறு, தலைநகர் வரலாறு, கோவில் வரலாறு, குடியேற்ற வரலாறு தானே என்னைப் பாடச்சொன்னீர்கள், குறிப்புந்தந்தீர்கள் என்றார் புலவர்.

ஆம், அப்படியானால் இச் செய்தியைப் பாடி, அந் நூலோடு மேலதிகமாகச் சேருங்கள் என்றான் அரசன். அக்கருத்தை எல்லாரும் வரவேற்றார்கள். உடனே புலவர் அறுசீராசிரிய விருத்தத்தில்.

“இலகிய சகாப்த மெண்ணூற் றெழுபதா மாண்டதெல்லை
அவர்பொலி மாலை மார்ப னமைச்சனா புவனே கவாகு
நலமிகு யாழ்ப் பாணத்து நகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே”

என்று அறுசீராசிரிய விருத்தத்தால் பாடி முடித்தார். எல்லோரும் சபாஷ், சபாஷ் என்றார்கள். கவிராசர் சிறப்பும், மதிப்பும் பன்மடங்கு உயர்வாயிற்று.

“ஆயிரமுகத்தான் அகன்றதாயினும் பாயிரமில்லது பனுவலன்றே” என்றாராகலின் கவிராசர் யாத்த கைலாயமாலைக்கு மதிப்புரை அளிக்க வேண்டுமே என்றார் பாண்டி மழவன். மதிப்புரை அளிப்பவர் சிறந்த கல்விமானாக இருப்பதோடு, சிறந்த அந்தஸ்தும் உள்ளவராகவன்றோ அவர் இருத்தல் வேண்டும். அத்தகையாரை யாம் எங்ஙனம் பெறுகுவோம் என்று கவலைகொண்டார் பாண்டி மழவன். மழவரை மன்னன் விழித்து அமைச்சர் புவனேகவாகு இங்கேயிருக்கிறாரே அவர் புலமையை நீவிர் அறியீர் போலும் என்று உரைத்துக்கொண்டே அமைச்சரை மதிப்புரை வழங்கும்படி மன்னன் கேட்டுக்கொண்டான். அமைச்சர் புவனேகவாகு உடனே ஒரு நேரிசை வெண்பாவில்,

“கற்றோர் புகழக் கயிலாய மாலைத்னை
நற்றமிழி னாற்றொடுத்து நாட்டினான் - சுற்றுறையூர்ச்
செந்தியப்பன் தந்தசிறுவன் முத்து ராசனென
வந்தகவி ராசமகு டம்”

என்று மதிப்புரை வழங்கினார். புலவர் பெயர் முத்துராசர், அவர் தந்தையார் பெயர் செந்தியப்பன். (தந்த ஸ்ரீ மகனாகப் பெற்றுத் தந்த) உறையூரில் இருந்த யாழ்ப்பாணம் கவிபாட வந்ததைச்சுட்டி வந்த கவிராச மகுடம் என்றார் வந்தகவிராசன்தந்த சிறுவனாம் என்று துணிக. இவை கைலாயமாலை நூற்கிடக்கையைக் கண்டு யாம் ஊகம் கொண்டு உரைத்தவைகளாம். எனவே, இக்கைலாயமாலை நல்லூர்த் தலைநகரைக் கட்டிய, கைலாயநாதர் கோவிலைக் கட்டிய ஆதிச்சிங்கையாரியன் காலத்தில் செய்யப்பட்டதென்பதும், அவன் காலம் அதிற்; சொல்லப்பட்ட “இலக்கிய சகாப்தம் எண்ணூற்றெழுபதென்பதால் (இங்கே சொல்லப்பட்ட சகாப்தம் சாலிவாகன சகாப்தம் அதாவது சாலிவாகனன் என்னும் அரசன் பிறந்த ஆண்டு முதலாக எண்ணிக் கணக்கிட்ட வருடம் இது கிறிஸ்து சகாப்தம் அதாவது கி.பி. 948ம் ஆண்டாகும். என்பதும் காண்க. (கிறிஸ்த்து சாலிவாகனனிலும் 78 ஆண்டு முந்திப் பிறந்தவர். ஆகையால் சாலி வாகன சகாப்தத்தோடு 78 ஐக் கூட்ட கிறிஸ்துசகாப்த வருடம் வரும் அது) கிறிஸ்த்து வருடம் கி.பி. 948 ஆகும்.

கைலாயநாதன் தன்னை ஒழித்து நின்றாட்கொண்டதற்கு அவன் செய்யக்கூடிய நன்றிக்கடன், அதை மக்களுக:குச் சொல்வது தான் வேறொன்றும் அவனால் செய்யமுடியாது. அவன் கைலாயமாலை பாடா விட்டால் யாழ்ப்பாணச் சரித்திரம் இல்லை.

அச்சிங்கையாரிய ஒரு மன்னரையே அதுபாடியிருக்கன்றிப்பின்னுள்ள எந்த ஒரு மன்னனைப் பற்றிய ஒருகுறிப்பும் அதில் இல்லை அது அவ்வொரு மன்னனைப் பற்றியே பாடியது. பிந்திப்பாடியிருந்தால் அதாவது தலைநகரும் கைலாய நாதர் கோட்டமும், கந்தசுவாமி கேட்டமும், கட்டின காலத்துப்பாடாமல், குடியேற்றம் நடைபெற்ற காலத்துப் பாடாமல் அவ்வாதிச்சிங்கையாரிய மன்னனின், மகனோ பேரனோ மூன்றாம் நான்காம் பேரனோ அரசாட்சி பண்ணிய காலத்தே அவர்களில் ஒருவன் பாடுவித்திருப்பானானால் அவன் பெயர் சிறப்புப் பாயிரத்தோடு இல்லை. அத்தகைய ஒரு இயைபு இந்நூலில் இல்லை. அப்படியாகப் பின்னுள்ள குறிப்பொன்றும் இல்லை. இது ஆதிச்சிங்கையாரியனையும் அவன்தலை நகர் கட்டிய கோயில் கட்டிய வரலாறும் மாத்திரம்தானே அதில் சொல்லி இருக்கு. அன்றியும் என்னையெனின் தன்னை ஆட்கொண்ட கைலாய நாதர்க்குத் தான் நன்றிக்கடனாகவோ நேர்த்திக்கடனாகவோ செலுத்தும் வகையிலே இதனைப் பாடினான் என்பது குறிப்பெச்சம் அப்படிக் கருத்துள்ளவன் தன் நேர்த்திக்கடனைத் தான் முடிப்பானல்லது பிறர்க்கு விட்டுவைக்கானென்க.

இவ்வாராய்ச்சியால் கலிங்கமாகன் அல்ல சிங்கை ஆரியன்தான் நல்லூரில் தலைநகர் அமைத்தான் என்று உறுதியாகிறது. கைலாய நாதர் மேலே தோத்திரப்பாடலாக வராமல் யாழ்ப்பாண வரலாற்றுப் பாடல் வந்ததற்குக் காரணம் இதுவே.

இந்நூற் கிடக்கையைக் கொண்டு நாம் ஊகித்துரைத்த இவ்வுண்மையை நீங்கள் நம்பத்தயக்கமா அப்படியானால் இன்னும் அபிதான சிந்தாமணிக்காரர் சொல்வதைக் கேட்போம் அதுவருமாறு முத்துராசர் இவர்சோழ மண்டலத்துள்ள உறையூரார் இவர் சிங்கையாரியச் சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்து நல்லூரில் தங்கி அரசியல் முதலியன செய்த சரிதங்களையடக்கிக் கலிவெண்பாவில் கைலாயமாலை பாடிய புலவர் சைவசமயத்தவர் தந்தை பெயர் செந்தியப்பர்” அபிதான சிந்தாமணி (பக்கம் 1332)

இனிமேல் நம்பிக்கொள்க இந்த அருமருந்தன்ன யாழ்ப்பாண சரித்திர உண்மை கொண்ட இந்நூலைப் பிறர் இன்றுவரை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டால் யா.வை.வி காரர் யா.ச ஏன்ஜெண்ட் யாவ்னாக்காரர் இந்நூலைப் போற்றித் தம்நூல்களைச் செய்துகொள்ளாமல் இக்கைலாயமாலயைத் தூற்றிக் கட்டித்தம் நூல்களை எழுதார் இந்நூலுக்கு மாறுபாடு கொண்ட முடிவுகளெல்லாம் பொய்மையாக முடியும் அப்படி எழுதியவர் உண்மைகளைச் சொல்லாத குற்றவாளிகளாவர்.

இந் நூலில் காணும் ஒருதனி வாய்மை என்னென்றால் கைலாய மாலை என்னும் அத்தலைப்பெயர் கைலாயக்கடவுள் மேலே பாடப்பட்ட ஒரு தோத்திரப் பரமாலையாகவும் இருக்காமல் அல்லது அக்கோயிலை, கொண்டசுவாமியைப் பற்றிய வரலாறுகளைப் பற்றி மாத்திரம் அமையாமல் அக்கோவிலே கடவுள் வரலாற்றில் வைத்து அக்கோயில் கட்டிய காலத்துக்கு முற்படவுள்ள வரலாறுகளையெல்லாம் சொல்லியிட்டமை. அது வேண்டுமென்று நினைத்துச் செய்த செய்கை அவை அனைத்தும் உண்மை என்க. பின்னுள்ளவரராகிய நல்லூர் நாட்டவர்க்கு அவற்றை அறிவிக்க வேண்டுமென்று அவர்கள் ஆசை கொண்டெழுதிச் சேர்க்கப்பட்டவைகள் என்க. கைலாயமாலை நூல்வரலாறு இன்றுவரை வெளியாகவில்ழல. அது அந் நல்லூர் இராச்சியத்துக்காக ஆக்கப்பட்டநூல் என்க. இத் தனிச்செய்யுளைப் பற்றி இன்னும் பார்ப்போம்.

இது கைலாயமாலை காலத்தன்றிப் பிற்காலத்தா அன்றிக் கைலாயமாலை நூலாசிரியாலன்றிப்பிறர் ஒருவராற் பாடிச் சேர்க்கப்பட்டதா அன்றி பிறவொரு புவனேகவாகுவைப் பாடியதாவென அறிதல் வேண்டும். சம்பிரதாய பூர்வமாக ஒருவர் ஒரு கோவில் கட்டிப்பின் கும்பாபிடேகம் செய்யப்பின் அக்கோவிற் கடவுளைப்பின்னொருவர் பாட அப்பாடலைப் பல்லோர் மத்தியில் வாசிக்கஅவர்கள் குறை குற்றம், நயம் சிறப்பு என்பனவாய உண்டில்லாதவை பற்றி ஆசங்கிக்க வினாவப் பாடியவர் உத்தரம்சொல்ல, அப்பால் நூலுக்கு மதிப்புரை வழங்கல் என்பனவாய் நிகழ்ச்சிகள்தான் நிகழ்வது வழக்கம் அவ்வாறு தான் இந்நூலும் நிறைவேறியது என்போம். அஃதின்றி இந்நூலில் ஒரு பாடல் - இத்தனிப் பாடல் பின்னும் சேர்க்கப்பட்டது என்பதாகச் சொல்லல் விதண்டவாதம். அப்படி இங்கே வரவேண்டிய சந்தர்ப்பமும் இல்லை. அப்படித்தான் நிகழ்ந்த வரலாறுமில்லை. ஏன் சேர்த்தார்? எப்பொழுது சேர்ந்தார்? யார் சேர்த்தார், என்ன சந்தர்ப்பம், அப்படிச் சேர்க்க வேண்டி வந்தது என்பவைகளை அறியாமலே அன்றி எடுத்துக்காட்டாமலே வாளா, அது பிற்காலத்ததென்பது, அங்ஙனம் சொல்வாருடைய மெல்லறிவையெ புலப்படுத்தும் பேச்சாம். நிற்க, நலமிகு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து, நல்லைக் குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே என்பதில் நலமிகும் யாழ்ப்பாணத்து நல்லை நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்டுக் கோயிலும் புரிவித்தானே என்பதாம். நகரிகட்டவும், கோயில் கட்டவும் நல்லை இடமாய் இருந்ததென்பதே ஆண்டுப் போந்த பொருளாம். சோழ மன்னனின் உறையூர் சமஸ்தானத்துப் புலவர் பாடினார் என்பதில் இருந்து இம்மாலை இராசாங்கப் படைப்பு என்பதை நாம் நன்கு அறியவேண்டும். அதால ஆக்குவித்தேர் இராசாவாக இருக்கவேண்டும் என்க.

குடியேற்றுவது மிகவும் கஷ்டமான வேலை தென்னிந்தியவூர்களெல்லாம் தெரியவேண்டும். பின் அந்நாட்டில் குடியேறக்கூடிய தலைவர்களைத் தெரியவேண்டும். அவர்களுக்கு விஷயத்தைச் சொல்லி விரும்பவைக்க வேண்டும். அவர்கள் குணாதிசயங்களைத் தெரியவேண்டும். அவர்களை இங்கே எந்தெந்த இடங்களில் எவரைக் குடியேற்றுவோம் என்று தெரியவேண்டும். அவர்களுக்கு இங்கே இடம் செப்பம் செய்யவேண்டும். இக்குடியேற்றத்தைப் பாண்டியமழவன், மன்னன், புவனேகவாகு மூன்றுபேரும் சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள் இது இராசபரம்பரையும் நல்லூர் குடிமக்களும் அறிய வேண்டும் என்று அவர்களே பாடுவித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் பின்னவர் எவரும் பாடுவிக்க அவர்களுக்கு அவ்விபரம் தெரியாது அதுவுமன்றிக் குடியேற்றம் பாடுவிப்பதும் ஒரு கஷ்டமானவேலை புலவர்க்கு இவ்விபரங்களைச் சொல்லவேண்டும்.


5. தமிழ் அரசர்கால வரலாறு
இன்றுள்ள நிலை
இக்கால வரலாற்றைச் சொல்லும் நூல்கள் எல்லாம் ஒரே முடிப்பினைக் கொண்டனவாகவில்லை. முடிபுகளை வௌ;வேறாகச் சொல்லுகின்றன. அந்நூல்கள் இரண்டு அணியிலே பிரிந்து சொல்லுகின்றன. ஒரு அணி கைலாயமாலை வைபவமாலைக் கூற்றுக்களும் அவற்றின் கூற்றுக்களை நம்பி நூல் எழுதப்பட்ட நூல்களுமாம். மற்றோர் அணி சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் செ. இ. எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் யுnஉநைவெ துயககயெ என்னும் நூல்களும் அவற்றின் நூற்கருத்துக்களை நம்பித் தம் நூல்களில் எழுதிக்கொண்ட பேர்களின் நூல்களுமாகும். இந்நூலார் அனேக இடங்களில் அம்மாலை நூல்களின் கருத்துக்களுக்கு நேர்மாறாகத் தம் நூல்களின் கருத்துக்களை எழுதிக் கொண்டனர். இவ்வகையில் முன்னோடியாக சுவாமி ஞானப்பிரகாசர் திகழ்கின்றார் அவர் பல இடங்களிலே அந் நூல்களை எள்ளியும் புறக்கணித்தும் தம் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்நாட்டு ஆதார நூல்களைப் புறக்கணித்து நூல் எழுதியபடியால் அவர்கள் நூல்கள் ஆதாரமில்லாத நூல்களாம். அவர்கள் ஆராய்ச்சி போக்கு அறிவாராய்ச்சிக்கு நிலைநிற்கக் கூடியதாகவோ ஆராய்ச்சி முறையைப் பின்பற்றியதாகவோ இல்லை. ஒருவர் தாம் நூலெமுத முன்னர் பிறர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தால் முதற்கண் அக் கருத்தை ஆராய்ந்து அது பிழை என்றால் பிழை என்றும் சரி யென்றால் சரியென்றும் ஒப்புக்கொண்டு அந்நூலின் மேற்கொண்ட பகுதியை எழுதல் வேண்டும் இவர் தம் கருத்துக்கு மாறான கருத்துக்களை எக்காரணங் கொண்டோ மறுக்காமல் விட்டிட்டுத் தம் முடிவை மாத்திரம் சொல்லுபவராயினார் இன்னோரன்ன காரணங்களால் வௌ;வேறு எதிர்க்கருத்துக்கள் கொண்ட சரித்திரக் குறிப்புகள் எழலாயின. வாசகர்கள் அவற்றில் எது பொய் எது மெய்யென்று அறியுமாற்றல் இலராய் அங்ஙனம் கற்றக்கண் அவாவிழந்து விடுகின்றனர் இதுவே தான் இன்றுள்ள தமிழரசர் காலச் சரித்திரத்தின் நிலை இந்த யாழ்ப்பாண மண்ணிலே தமிழரசர் காலத்திலே உண்மையாக நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைத் தேர்ந்து கொண்டு அதுபற்றி எழுந்துள்ள பல்வேறு வகையான முடிபுகளையும் ஆராய்ந்து அவற்றுள் ஏனையவற்றை ஒழித்துக்கட்டி உண்மை முடிபு இதுதான் என்று வாசகர்க்கு எடுத்துக் காட்ட முனைவதே இந்நூலின் நோக்கம் என்க. அந்த வகையிலே அவ்வாறு விலக்கப்பட்டவற்றில் உள்ளனவாய போலியும் புரைபாடுகளும் எடுத்துக் காட்டப்படும். ஒருவாசகர்க்கு உள்ளபடியா நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஐயந்திரிபின்றி விளங்க வைக்க வேண்டுமென்பதே நோக்கமாகக் கொண்டது இந்நூலென்க. அது எந்தளவில் சித்திக்கின்றதென்பது நூலிலேதான் காணவேண்டும். இந்த யாழ்;பாண மண்ணிலே, தமிழ் அரசர் காலத்திலே, ஒரு சரித்திரம் முளைத்த ஒழுங்கின்படி முன்னிருந்து பின்னோக்கி தமிழரசர் அரசாட்சி முடியும் வரை இச்சரித்திரம் சொல்லப்படுகின்றது. தமிழரசர் காலமதைப் பற்றிய சிற்சில குறிப்புக்களை எழுதிய பல்லோர் அபிப்பிராய வேறுபாடுகளைக் கொண்டதாகச் சிக்கல்கொண்டதாகவே தம் நூல்களை எழுதி இருக்கிறார்கள். அவ்வகையாக எழுதப்பட்டதாலே பொது மக்கள் அவற்றை அறியவோ அபிமானிக்கவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள். பெரும்பகுதி இக்காலச் சரித்திரம் இருட்டாகவே இருக்கிறது. இக்காலச் சரித்திரத்தைப் பிற அறிஞர்கள் தெளிவாகவும் வரையறையாகவும் எழுதி வெளியிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். நூல்களின் கருத்து வேறுபாடுகள் நேருக்குநேர் எதிராக அமையுமானால் அவற்றுள் ஒன்றுதானே மெய் அல்லது சரி, மற்றது பொய் அல்லது பிழை. இப்பொழுது இந்த இரண்டு நூல்களும் வாசகர் மத்தியில் புழக்கத்தில் இருக்கின்றன. எனவே பிழையானவைகளையும் மக்கள் நம்பிப்படிக்கிறார்கள் என்னல் வேண்டும். யாழ்ப்பாணச் சரித்திரம், தமிழரசர் காலம் யாழ்ப்பாணத் தமிழரன்றி உலகத் தமிழரும் அறியவேண்டிய சம்பவங்களைக்கொண்டது.


6. (க) கதிரைமலை இராச்சியமும் காலமும்
ஒரு தலைநகரைத் தலைநகராகக்கொண்டு ஒரு மன்னன் தன்னாணைக்குட்பட்ட நாட்டினை ஆட்சி புரிந்தான் என்றால் அந்நாடு அந்நகரின் இராச்சியத்தைச் சேர்ந்தது. அம் மன்னன் அந்தலைநகர் இராச்சியத்து மன்னன் அவன் ஆண்டகாலம். அத்தலைநகர் இராச்சியக் காலம். எனவே ஒரு மன்னன் அவன் அரசிருந்த தலைநகர் அவன் அரசிருந்தகாலம் அவன் அரசாட்சி பண்ணிய நாடு அவன் அரசியற் பரிபாலனம் பற்றிய செய்தி என்றின்னவும் பிறவுமான சரித்திர விஷயங்கள் அத்தலை நகர் தொடர்பிலே அதிகரித்து வருகின்றன. ஈண்டுப் பேசப்புகுவது கதிரைமலைத் தலைநகரும் அதனுட் தொடர்பு பெற்ற விஷயங்களுமாதலாலே அவை எல்லாமடங்கு இவ்வதிகாரத்துக்குக் கதிரைமலை இராச்சியமும் காலமும் எனயாமே பெயர் தந்து பேசப்புகுகின்றோம் மேல் வரும் இராச்சியங்களுக்கும் விளக்கம் இஃதே.

இக்கதிரைமலை இராச்சியமாவது. இதன் முன்விளக்கத்துக்காக வைபவமாலையிற் சொல்லப்பட்டவைகளை ஈண்டைக்கு வேண்டப்படும் அளவுக்கு சுருக்கமாகத் தருவோம்.

யாழ்ப்பாணத்தில் பண்டைநாட்களில் இருந்து மறைந்து போன தலைநகரங்களுள் ஒன்று இக்கதிரைமலை நகரம், இந்தியாவின் தென்பகுதியும் இலங்கையின் வடபகுதியும் அண்மித்து இருக்கின்ற இயற்கை வாய்ப்பதனால் அவ்விரண்டு நாட்டுவரலாறுகளும் கலந்து ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. அதாவது தென்னிந்தியாவில் உள்ள சோழ பாண்டிய சேர வரலாறுகளும் இவ்விலங்கையின் உள்ள வடபகுதியில் உள்ள யாழ்ப்பாண இராச்சிய வரலாறும் ஒன்றோடொன்று சரித்திரத் தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன என்பதே. என்னை யாழ்ப்பாணவரலாறே ஒரு சோழ இராச குமாரியில் இருந்துதான் ஆரம்பித்து உருவாகின்றது இங்கே அவ்வரலாறுகளைக் கண்டு கொள்ளச் செல்வோமாக.


யாழ்ப்பாண வைபவமாலை சொல்லும் விபரங்களைக் காண்போம்.
வங்க தேசத்து சத்திரிய மரபிற்பிறந்து இலாட தேசத்தை அரசாண்ட சிங்க வாகுவின் குமாரன் விஜயன் என்பவன் மகா துஷ்டனாக இருந்ததினால் அவனைப் பிதாவாகிய சிங்கவாகு துரத்திவிட…… அவன் காசிக்குப்போய் அங்கே இருந்தான்.

அவ்விடத்தில் விஜயகுமாரனுக்கு நீ இலங்கை நாட்டின் மத்தியிலுள்ள கதிரைமலையிற் போயிரு அந்தநாடு உனக்குடையது” எனச் சொற்பனத்தில் உத்தரவு கிடைத்ததினால் அவன் நீலகண்டாசிரியர் என்னும் குருவையழைக்க அவர் தமது பத்தினியாகிய அகிலாண்ட வல்லியம்மாளையும், புத்திர புத்திரிகளையும், மருமக்களையும் கூட்டிக் கொண்டுவந்து தனது பரிவாரங்களுடன் கதிரைமலையிற் சேர்ந்தான்.

அக் காலத்தில் இலங்கையின் குடிசனங்கள் யாருமில்லாததனால் விஜயராசன் குடிகளை அழைத்து குடியேற்றக் கருதிப் பல முயற்சிகளைச் செய்து பார்த்தான்…… குடிகளை வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தினால் விஜயராசன் சமய வழிபாட்டைக் குறித்துச் சனங்களுக்கு இஷ்டம் கொடுத்திருந்தும் தன் சமயாசாரலொழுக்கத்தை தவறாமற் காத்துக் கொண்டான். அரசாட்சியை ஆரம்பிக்கு முன்னமே அவன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலுதிக்கிலும் நாலு சிவாலயங்களை எழுப்பிக் கொண்டான்……

வடதிசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை என்னும் பதியிலே, திருத்தம்பலேசுவரன், திருத்தம்பலேசுவரி கோயில்களையும் அவைகளின் சமீபத்திலே கதிரையாண்டவர் கோவிலையும் கட்டுவித்து அவ்வாலயங்கட்குப் பூசனை நடாத்தும்படி நீலகண்டாசாரியனின் மூன்றாங் குமாரன் வாமதேவாசிரியர் என்னும் காசியிற் பிராமணனையும் அவன் பத்தினியாகிய விசாலாட்சி அம்மாளையும் அழைப்பித்து அக்கிராகாரம் முதலிய வசதிகளையுங் கொடுத்து இருத்திரவத்தான். அக்கோவில் அவ்விடத்தில் தோன்றிய காரணத்தால் அந்தக் கிராமம் கோவிற் கடவை எனப் பெயர் பெற்றது. “முற்காலத்திலே நகுலமுனியென்னும் ஓர் இருடி அங்குள்ள மலைச்சாரலிலே சில காலந்தங்கியிருந்து அங்குள்ள கீரிமலைத் தீர்த்தமாடி வந்தபொழுது தன் முகத்துக்கிருந்த அங்கவீனம் நீங்கிப் போன்று கண்டு அத்தல விசேடத்தையும் தீர்த்த மகிமையுங் குறித்து வியப்புற்று அவ்விடமே தனக்குத் தவம் செய்தற் கேற்ற இடமென்று அம்மலை முழைஞ்சிலெ வாசஞ் செய்து கொண்டிருந்தார். அம்முனிவனுக்குக் கீரிமுகம் மாறிய காரணத்தால் அம்மலைக்குக் கீரிமலை என்பார்கள். விஜயராசன் அவ்விடத்திற் சிவாலயங்கட்டுவித்தபின் நகுல முனிவர் அவ்வாலயங்களிற்றங்கியிருந்து வழிபாடு பண்ணி வந்தார். அதனால் திருத்தம்பலேசுவரர் கோவிலை நகுலேசுவரர் கோவிலென்றும் திருத்தம்பலேசுவரியம்மன் கோவிலை நகுலாம்பிகையம்மன் கோலிலென்றுப் பெயரிட்டு வழங்கி வந்தார்கள் விஜயராசன் திருப்பணி நிறைவேற்றி முடிந்தபின் பிரயாணப்பட்டுத் தன்னிராச்சியம் முழுவதையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு கதிரை மலையைச் சேர்ந்தான். (யா.வை.மா.பக். 1-8)

அப்பால் விஜயன் தம்மனா என்னுமிடத்தை இராசதானியாக்கித் தன் மனைவியையும் இருபிள்ளைகளையும் தள்ளிவிட்டுப் பாண்டி நாட்டுப் பெண்ணெருத்தியை விவாகம் பண்ணிச் சிலவருஷ காலம் அரசாண்டு புத்திரசந்தானமின்றி இறக்க, அவன் மந்திரி இராச்சியத்தைத் தளம்ப விடாமல் ஒரு வருடம் காப்பாற்றி, பின்பு விஜயராசன் சகோதரன் குமாரனாகிய பாண்டு வசு என்பவனை அழைத்து வந்து அரசனாக்கினான்.

இவன் குலத்தில் அரசர் அதன்பின் அனேகத் தலை முறையாக, இவ்விலங்கையை ஆண்டு வந்தார்கள் (யா.வை.மா பக் 8)

உக்கிரசிங்கன்
இவன் விஜயராசனின் சகோதரன் பாண்டுவசு என்பவன் மரபைச் சேர்ந்தவன், வைபவமாலை இவனை “சாவிவாகன சகாப்தம் 717ல் (கி.பி. 795) விஜயராசனின் சகோதரன் மரபிற் பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையில் இருந்து வெகு திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சிலதலைமுறையாய் இழந்துபோன இவ்விலங்கை அரசாட்சியில் அரைவாசி வரைக்கும் பிடித்துக் கதிரைமலையில் இருந்து அரசாண்டு வந்தான்… தென்னாடுகளை வேற்றரசன் ஆண்டுவந்தான்…… இவன் நகுலேசர் கோயிலைத் தரிசித்துக் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி, முற்காலத்திலே சோழராசன் தான் தீர்க்கமாட வந்திறங்கியிருக்கும் காலத்திலே மாளிகை கட்டுவித்திருந்த வளவர் கோன் பள்ளமென்னும் இடத்திலே பாளயமிட்டிருந்தான். (யா.வை.மா பக் 13-14)

இங்ஙனம் உக்கிரசிங்கன் வந்திருப்பதை அறிந்த தொண்டை நாட்டை அரசாண்ட தொண்டமான் என்னுமரசன் கேள்விப்பட்டு பரிவாரங்களுடன் கீரிமலைச்சாரலில் வந்திறங்கி இவ்வுக்கிரசிங்கனைச் சந்தித்து இந்த நாட்டில் விளையும் உப்பைத் தனக்கு வருடந்தோறும் விலைக்குத் தரும்படியும் அவ்வுப்பு விளையும் இடங்களுக்குச் சமீபமாகத் தம் மரக்கலங்களைக் கொண்டு போய் உப்பேற்றவும், மாரி காலங்களில் அம்மரக்கலங்களை ஒதுக்கி விட்டு அம் மரக்கலமோட்டிகள் தங்கவும் வசதியாக இருக்கும் பொருட்டு வடகடலில் இருந்து ஓர் ஆறு வெட்டுவித்துக் கொள்ளவும் உத்தரவு கேட்டான். உக்கிரசிங்க மகாராசன் உத்தரவு கொடுக்கத் தொண்டமான் அங்கிருந்த சிற்றாற்றை மரக்கலங்கள் ஓடத்தக்க, ஆழமும் விலாசமும் உள்ளதாகவும் ஒதுக்கிடமுள்ளதாகவும் வெட்டுவித்துத் தன்னூருக்கு மீண்டான். அதுமுதல் இதுவரைக்கும் அவ்வாறு தொண்டமானாறு என்று அழைக்கப்படுகின்றது.

அப்பால் உக்கிரசிங்க மன்னன் கதிரைமலைக்குத் திரும்பினான் வன்னியர் கள் வந்து தங்கள் வன்னிநாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். அரசன் தன் இராச்சியமெங்கும் தன்னானையே செல்லவும் தனக்கு வரவேண்டிய திறையைக் கோணேசர் கோயிலுக்குக் கொடுக்கவும் உடன்பாடு பண்ணுவித்துக் கொண்டு கதிரைமலைக்குச் சேர்ந்தான். (யா.வை.மா.பக். 13-15)


7. மாருதப்பிரவல்லி
மாருதப்பிரவல்லி, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கட்டியமை இக்கோவிலின் புரதான வரலாறு யாழ்ப்பாண ஆதார நூல்களாகிய வைபவமாலை, கைலாயமாலையில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சாலிவாகன சகாப்தம் 717ல் (கி.பி. 795) விஜயராசன் சகோதரன் மரபிற்பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையில் இருந்து வெகுதிரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சிலதலைமுறையாய் இழந்துபோன இவ்விலஙிகை அரசாட்சியில் அரைவாசி வரைக்கும் பிடித்துக் கதிரைமலையிலிருந்து அரசாண்டு வந்தான். (வை. பக்.13)

“இவன் காலத்திலே சோழதேசாதிபதியாகிய திசையுக்கிர சோழன் மகள் மாருதப்பிரவல்லியென்பவள் தனக்கிருந்த குன்ம வியாதியால் மெலிந்தவளாய் வியாதியை வைத்தியர்கள் ஒருவரும் சுகமாக்க முடியாததினால் இனித்தீர்த்த யாத்திரையாகுதல் செய்து பார்த்தால் சுகம் வரக்கூடும் என்றெண்ணிக் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து புறப்பட்டு அங்கும் இங்கும் போய்த் தீர்த்தமாடி வருகையில் சாந்தலிங்கம் என்னும் ஒரு சன்னியாசி கண்டு உன்வியாதி பண்டிதர் ஒருவராலும் குணமாக்கத்தக்கதல்ல. நீ. இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம்தரத்தக்கது. இலங்கையின் வடமுனையிலே கீரிமலை என்றொரு மலையுண்டு. அது சமுத்திரதீரத்துள்ளது அங்கே உவர்ச்சல் மத்தியில் சுத்ததீர்த்தமும் மயைருவிதீர்த்தங்களிலும் முக்கிய தீர்த்தமாயிருக்கின்றது. அதிலே நீ போய் நீராடித் தங்கியிருந்தாற் சுகமடைவாய் என்று சொல்ல அச்சொற்படி மாருதப்பிரவல்லி புறப்பட்டுத் தாதிமாரும் தோழிமாரும் சேனாவீரரும் சூழ்ந்துவரக் கீரி மலைச்சாரலில் வந்திறங்கிக் குமாரத்திபள்ளம் என்னும் இடத்திற் பாளயம் போட்டிருந்து நகுலமுனிவரைக் கண்டு சாட்டாங்கமாக வணங்கி அவரால் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு அத்தல விசேடத்தையும் தீர்த்த மகிமையையும் அத்தீர்த்தத்திலாடித் தனக்குக் கீரிமுகம் மாறின செய்தியையும் அம்முனிவர் சொல்லக் கேட்டு மகாசந்தோஷத்துடன் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனம் செய்து வந்தாள். சில காலத்தில் அவளுக்கிருந்த குன்மவலியுந் தீர்ந்து குதிரைமுகமும் மாறியது மாறவே மாருதப்பிரவல்லியின் யௌவன சொருபத்தை;க கண்டவர்கள் ஆச்சரியங் கொள்ளாமல் இருந்ததில்லை.
(வை.மாலை.பக்.15-17)

உக்கிர சிங்கன் மாருதப்பிரவல்லியை விவாகம் செய்ய நினைத்தல்
அக்காலத்திலே கதிரை மலையில் இருந்த உக்கிரசிங்க மகாராசன் நகுலேசர் கோவிலைத் தரிசிக்க மூன்றாந்தரம் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி வளவர் கோன்பள்ளத்தில் பாளயம் போட்டிருந்தான் அவன் மாருதப்பிரவல்லியை நகுலேசர் சந்நிதானத்தயலே கண்டு அவள் பேரழகினால் மயங்கி மிகுந்த ஆச்சரியங் கொண்டு தான் அவளை விவாகம் செய்யவேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டான்.
(யா.வை.மா.பக்.18)

மாருதப்பிரவல்லி மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலைக் கட்டுதல்
மாருதப்பிரவல்லி தனக்குக் குதிரைமுகம் நீங்கின காரணத்தாற் கோவிற்கடவை என்னுங் குறிச்சிக்கு மாவிட்டபுரம் என்னும் பெயர் சூட்டி அவ்விடத்திலே கந்தசுவாமி கோயில் கட்டுவிக்க ஆரம்பித்து அதற்கு வேண்டிய சகல வஸ்துக்களும் பிராமணரும் வரும்படி பண்ணவேண்டுமென்று பிதாவாகிய திசையுக்கிர சோழனுக்குத் திருமுகம் அனுப்பினாள். அப்பொழுது திசையுக்கிரசோழன் சகல ஆயத்தங்களும் பண்ணிக்கொண்டு இலங்கையிலேயுள்ள கீரிமலை நாட்டுக்கனுப்புவதற்குத் தில்லை மூவாயிரவரில் ஒருவரைத் தன்னிடத்துக்கு அனுப்பி வைக்கும்படி சிவாலயத் தலைவனுக்குக் கட்டளை அனுப்பினான். அப்பொழுது சிவாலயத் தலைவன் பிராமணர் தோணி ஏறுவதும் இலங்கையிற் குடி இருப்பதும் மாகா தோஷமாக இருக்க அரசன் இப்படிக் கட்டளையனுப்பி இருக்கிறானே நான் இதற்கு என்ன செய்யலாம் என்று பயந்து தில்லைச்சிவாலயத்திலே மூன்று நாட் பட்டினி கிடந்தான். அப்பொழுது கனவிலே “கீரிமலைச் சாரலானது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தாலும் சிவாலய மகத்துவத்தினாலும் மகாதிவ்வியதலமாகவேயிருக்கின்றது. காசியிற் பிராமணரும் அங்கேயிருக்கிறார்கள். பிராமணர் தங்கள் நியமநிட்டை வழுவாமற் செய்வதற்கு மரக்கலங்களில் இராத்தங்காமல் ஏறலாம். நகுல முனிவர் அத்தல விசேடத்தை நோக்கி அவ்விடத்தில் இருந்து தவம் பண்ணும் போதே அத்தல விசேடத்தைக் குறித்து யோசிக்க வேண்டியதென்ன யாதொரு யோசனையுமின்றி யனுப்பலாம்” என்று உத்தரவு கிடைத்தது. (யா.வை.மா.பக். 19-20)

பெரியமனத்துள்ளார் வருகை
அப்பொழுது சிவாலயத் தலைவன் பெரிய மனத்துளார் எனுந் தீட்சதரை சோழராசனிடம் அனுப்பி வைக்கச் சோழராசன் சகல தளபாடங்களையும் கந்தசுவாமி வள்ளியம்மன், தெய்வ நாயகி அம்மன் விக்கிரகங்களையும் பெரிய மனத்துள்ளார் கையில் ஒப்புவித்து அனுப்பி வைத்தான். தீட்சதர் அவைகளையும் கொண்டு கசாத்துறை (காங்கேயன்துறை) என்னும் துறையில் வந்திறங்கினார். கந்தசுவாமி விக்கிரகம் வந்திறங்கின காரணத்தால் அந்தந்துறைக்குக் காங்கேசன்துறை எனப் பெயராயிற்று. (யா.வை.மா.பக்.20-22)

மாவிட்டபுரம் கந்தசுவாமி காயிலின் பெருமை
மாருதப்பிரவல்லி என்னும் சோழ இராசக்குமாரத்தியால் இவ்வாலயம் கட்டப்பட்டதும் கந்தசுவாமி விக்கிரகம் முதலான விக்கிரகங்களெல்லாம் தந்தையாகிய சோழ இராசனால் அனுப்பிவைக்கப்பெற்றும் பெரியமனத்துள்ளார் என்னும் சிதம்பர தீட்சகரால் சாஸ்திரமுறைப்படி பிரதிஷ்டை செய்யப்பெற்றதும் அவரால் துவசாரோகணம் செய்து திருவிழாச்செய்யப்பெற்றதும் இக்கோயிலின் தனிப்பெருமைக்குரிய செய்திகளாம். அன்றியும் இவ்விலங்கையிலே முதன்முல் துவசாரோகணம் செய்து திருவிழாச் செய்யப்பெற்ற புண்ணிய தலம் இம் மாவிட்ட புரம் கந்தசுவாமி கோயில்தான் என்பது வைபவ மாலையைக் கொண்டறியக் கிடக்கின்றது.

மாருதப்பிரவல்லியின் மண நிகழ்ச்சி
ஒரு நாளிரவில் மாருதப்பிரவல்லி தேவாலயணத்திருப்பணியைப் பற்றிய ஆலோசனையுடன் சப்பிரமஞ்சத்திற் சாய்ந்து விழிப்பாய் இருக்கும் சமயத்திலே அர்த்த சாமவேளையில் உக்கிரசிங்கமகாராசன் பாளயங்களையும் அரணிப்பான சேனைகளையும் கடந்து அவளிருந்த பாளயத்துட் புகுந்து அவளை எடுத்துத் தன் பாளயத்துக்குக் கொண்டு பொய் வைத்துக் கொண்டான். பொழுது விடிந்தபின் மாருதப்பிரவல்லியின் தாமிமாரும் தோழிமாரும் காவற் சேனைகளும் அவளைக் காணாததினால் மனங்கலங்கித் தேடிப்போய் உக்கிரசிங்கமகாராசன் பாளயத்தில் இருந்த செய்தியறிந்து அவனிடத்தில் சென்று நாங்கள் என்னசெய்யலாம் என்று கேட்க அவள் என் பட்டத்துத் தேவியாயினாள். நீங்கள் போய் இந்தசுப சோபனச் செய்தியைப் பிதாவுக்கறிவியுங்கள். என்று சொல்லி வழிச்செலவுக்குப் பொருளுங் கொடுத்து அனுப்பிவிட்டான். அதன்பின் உக்கிரசிங்கன் கதிரைமலைக்குப் போக யோசித்த போது மாருதப்பிரவல்லி கந்தசுவாமி கோயிற் திருப்பணி நிறைவேற்றி முதலாம் உற்சவச் சிறப்புக் கண்டல்லாமல் அவ்விடத்தை விட்டுப் போகப்பிரியமில்லை என்றதனால் அப்பிரயாணத்தை நிறுத்தித் திருப்பணியை நிறைவேற்றி ஆனி உத்தரத்தன்று துவஜாரோகணந் தொடங்கி உற்சவத்தை நிறைவேற்றிக் கொண்டு கதிரைமலையிற் சென்று பணிவாகச் சடங்கைளும் நிறைவேற்றிச் சகல சௌகரியங்களையும் அனுபவித்திருந்தாள்.
(யா.வை.மா.பக்.21-22)


அரசகுமாரி தன்கண்காணிப்பில் கட்டுவித்தும் கும்பாபிஷேகம் செய்து வைத்தமை பற்றி நகுலகிரிப் புராணத்தில் பின்வருமாறு விபரமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

பாடல்கள்
1. நீள்பெருங் கோயிலும் நிகரில் கோபுரஞ
சூழ்தரு நெடுமதில் சுடர்தன் காண்புறத்
தாழ்வகன் றிடுமறு கோடுந் தந்துகன்
நாளினின் கந்தவேள் தன்னை நயப்புடன்


2. செப்பரும் கும்பதா பனங்கள் செய்திடா
தொப்பிலா மறைமுறை யொளிரு நல்லருன்
வைப்பினா வாகன பதிட்டைதன்னைமுன்
தப்பிலார்க் குமரவேள் தனக்குச் செய்தனள்

உக்கிரசிங்கராசனுக்கும் மாருதப்பிரவல்லிக்கும் கதிரைமலையிற் சோழ அரச பரம்பரை மரபிற்கமைவாக வெகு உற்சாகத்தோடும் விமரிசையாகவும் திருமணம் நடந்தேறியது. சிலகாலஞ் சென்றபின் மாருதப்பிரவல்லி தலயாத்திரை செய்து வரும்போது கோணேசகிரிக்குச் சென்று தீர்த்தமாடிக் கோணேசரரையும் தரிசித்து அங்குள்ள பூசகருக்குப் பட்டாடை முதலயபரிசுகளையும் வழங்கி அவர்களது ஆசிகளைப் பெற்றாள் இப்படியே சென்ற சென்ற இடங்களெல்லாம் தான தர்மங்கள் செய்தும் மீண்டும் நகுலகிரிக்கு வந்து நெடுக்காலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமியாரை வணங்கி நல்லருள் பெற்றுக்கொண்டு கதிரை மலைக்கே புறப்பட்டாள்.



8. கைலாய மாலையில் மாருதப்பிரவல்லி
வரலாறு
இம்மாருதப் பிரவாகவல்லி வரலாறு கைலாயமாலையிற் சொல்லப் பட்டிருக்கிறது. அது வருமாறு
“உதய குல ராச னுதய மதி வாசன் கண்ணி
சிதைவின் மனு ராச வம்சதீரன் - துதையளிகன்
பாடு மல ராத்திபுனை பார்த்திவன் றன் சீர்த்தி முற்றும்
தேடுந் தனிக் கவிகைச் செம்பியர் கோ – னீடு கரைப்
பொன்னுத் துறைவன் புலிக் கொடியன் பூவின் மன்னர்
மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி – கன்னிமின்னார்
தேடுங் கடலருவித் தீர்த்தசுத்த நீரகத்து
ளாடிப் பிணி தணிப்ப தானினைந்து – சேடியர்தஞ்
சேவைகளுங் காவலுறு சேனையுமாய் வந்திறங்கிப்
பாவை யுறு தீர்த்தம் படிந்த தற்பி – னேர்வை பெறு
கங்குலுற வெங்குமிகு காவ லரண்பரப்பிச்
சங்கையுறு கூடாரந் தானமைத்து – மங்கை
விரிந்தசப்ர மஞ்சமெத்தை மெல்லணையின் மீதே
பொருந்துதுயி லாயிருக்கும் போது” – (கண்ணி கை.மா. 4-16)

அப்பால் உக்கிரசிங்கன் வரலாறு ஷெ நூலில்
“…………. சூர்ப்பகையை
மாற்றுங் குகன் குழகன் வாய்ந்தவடி – யார்துயரை
யாற்றுங் குமர னருளாலே – போற்றுதவர்
வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கல முகத்
தாய்ந்த நகராகத் தடலேறு – சாய்ந்ர் கங்குல்
போவதன்முன் னேகியந்த மோர் வேந்தன் மாமகடன்
காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே – ஆவலுடன்
கொண்டேகித் தன்பழைய கோலமலை மாமுழைஞ்சில்
வண்டார் குழலை மணம் புணர்ந்து – உண்டான
பூவிலனு போகம் பொருந்திப் புலோ மசையுங்
காவலகும் போலக் கலந்திடுநாள்” கண்ணி 12-17


சொல்லப்பட்டது. இந்நூல் வைபவமாலையின் முதநூலாதலின் வைபவமாலையார் வேறும் நூல்களிலும் இவர்கள் வரலாற்றைக் கண்டு விரித்தெழுதியிருத்தல் நிச்சயமே. நிற்க,


9. உக்கிரசிங்கனின் தலை நகர் மாற்றம்
இது நிற்க, கதிரைமலையிலிருந்த உக்கிரசிங்கராசன் சில காலத்தின் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்தில் மன்மதன் போன்ற ரூபமும் சர்வராசலட்சணங்களும் உடையவனாய்ச் சிங்கத்தின் வாலையொத்த வாலுடனே ஒரு குமாரனும் அவனுடனொரு பெண்ணும் பிறந்தார்கள். அவ்விருவருக்கும் உக்கிரசிங்கராசன் நரசிங்கராசனென்றும் சண்பகாவதி என்றும் பெயரிட்டான். அவன் அவர்களுக்கு விவாகம் நிறைவேற்றி நரசிங்கராசன் என்னும் பெயர் படைத்த வாலசிங்கனுக்கு முடிசூட்டி அரசாள வைத்து மரணமடைந்தான். வாலசிங்க மகாராசன் செயதுங்க வரராசசிங்க மென்னும் பட்டத்துடன் முடிசூட்டப் பெற்று அரசாட்சியை ஒப்புக்கொண்டான்” (வை.மா.பக்.22023 கு. சபாநாதன் பதிப்பு)

இவ்வளவில் கதிரைமலை இராட்சியம் முடிந்து இனிஇதனை அடுத்துச் செங்கடக நகர் இராச்சியம் ஆரம்பமாகிறது. உக்கிரசிரங்கனால் மாற்றப்பட்டதும் சில காலம் உக்கிரசிங்கனால் ஆட்சி செய்யப்பட்டதும் பின்னர் அவன் மகனுக்கு முடிசூட்டப்பெற்று அவன் அரசாட்சி பண்ணியதும் அச் செங்கடகநகர்தான் அது எங்குள்ளது என்பது அடுத்த அதிகாரத்தில் காண்போம்.


10. இடப் பெயர்கள்

கீரிமலை, நகுலேசுவரம், மாவிட்டபுரம் என்னும் இடப்பெயர்கள்:
1. கீரிமலை:- முற்காலத்திலே நகுலமுனி என்னும் ஓர் இருடி அங்குள்ள மலைச்சாரலிலே சிலகாலந் தங்கி இருந்து தீர்த்தமாடிவந்த பொழுது தன் முகத்துக்கிருந்த அங்கவீனம் நீங்கிப் போனதுகண்டு அத்தல விசேடத்தையும், தீர்த்த மகிமையையும் குறித்து வியப்புற்று அவ்விடமே தனக்குத் தவம் செய்தற்கேற்ற இடமென்று அம் மலைமுழைஞ்சிலே வாசம்செய்து கொண்டிருந்தார். அம் முனிவனுக்குக் கீரிமுகம் மாறிய காரணத்தால் அம்மலைக்குக் கீரிமலை என்பார்கள். நகுலம் ஸ்ரீ கீரி (கா.வை.மா)

2. நகுலேஸ்வரம்:- நகுலமுனிவர் வந்து தங்கி அக்கீரிமலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம்செய்து வர அக்கீரமுகம் மாறி அழகான மனித முகம் ஆகப் பெற்றவர் என்பது சிதம் ஆகும். ஆகையால் அவர் தரிசனம்செய்த மூர்த்தி எழுந்தருளிய இடம்தான் நகுலேஸ்வரம். மூர்த்தி – நகுலேஸ்வரர்.

மேலும், இதன் விவரங்களை வேறு இடத்துக் காண்போம். மேலே காட்டப்பட்ட பெயர்களல்லாமல் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பிரதம குருக்களான து. ஷண்முகநாதக் குருக்கள் “குதிரை முகமாக விகாரமடைந்திருந்த இளவரசியின் முகம் மாறப் பெற்ற காரணத்தால் இவ்விடத்திற்குத் “துரகானன விமோசனபுரி எனப் பெயரிடப்பட்டது. அக் காலத்திலிருந்தே இன்றும் இங்கு இக்கோவிலில் அனுஷ்டிக்கப்படும் பூசை வழிபாடுகளைக் கொண்ட பத்ததியொன்றில் இவ்விடம் “துரகானன விமோசனபுரே” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கீழ்வரும் சுலோகங்களாலறியலாம்.

“ஸ்ரீமத் காவேரி யாஹ தஷிணதீரே
ஸமுத்திரஸ்ய பஸ்சிமதடே பாஸ்கர ஷேத்ரேதுர
கானன விமோசனபுரே அஸ்யதேவ தேவஸ்ய
மஹாவல்லி கஜவல்லி ஸமேத ஸ்ரீ சுப்பிரமண்ய
பரமேஸ்வரஸ்ய….”

துரகானன விமோசனபுரே என வடமொழியில் வழங்கப்பட்ட இவ்விடம் அதே பொருள்பட மா-விட்ட-புரம் எனத் தமிழில் வழங்கலாயிற்று. (மாவிட்ட – புரத்திருத வரலர். பக் 17) துரகம், மா, என்பன குதிரை என்னும் பொருளாய். நிற்க,

றோமன் கத்தோலிக்க பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் தம் நூலில் 12ம் பக்கத்தில் மாவிட்டபுரம், கீரிமலை என்று தலைப்பிட்டுப் பொருள் உரக்கின்றார். அவர் கூற்றாவது “மாவிட்டபுரமென யாழ்ப்பாணச் சரித்திராசிரியர்கள் தமிழடைவு கொடுத்தெழுதிய பெயர் பரவை வகை;கிலுள்ளபடி மாவிட்டபுரம் என்றிருத்தலே பொருத்தமானது. ….. சிங்களத்தில் மாவட்டம் என்பது மஹாவட்ட அதாவது பெரிய ஆலமரம் எனப் பொருள்தந்து நிற்கும், மா என்பது மாவத்தை முதலிய சிங்கள இடப்பெயர்களிலும் வருவது வட்ட என்னும் சிங்களச் சொல். பகுதி…… புரம் என்பது தமிழிற்போலச் சிங்களத்திலும் தற்சமமாய் வழங்குகின்ற நகர் என்னும் பொருளுள்ள சமஸ்கிருதச் சொல்லாகும்;. மாவிட்டபுரத்தையொட்டி வையாபாடல் ஆசிரியர் முதலானோரும் குதிரைமுகம்விட்ட கதையைச் சிருட்டித்தும் பேசினார்” என்பதே.

கீரிமலை என்னும் இடப்பெயர் சிங்கள உற்பத்தி உடையதாதல் வெளிப்படும். கீரி என்பது கீரி என்னும் சிங்களச் சொல்லின் பகுதி இனிக் கீரிமலை இருபெயரொட்டாகலாம் இக் கருத்துரைக்கு என்ன முடிவு. இதன் பெறுமதி இதைச் சொன்னவர்க்குக் கூட விளங்கி இருக்காது. விளங்கினால் அவர் சொல்லி இருக்கமாட்டார். ஒரு மனிதன் தன் வாழ்க்கை எல்லையில் 100 வருடம் வரை வாழ்ந்தான் என்றால் அவன் அந்த 100 வருட எல்லைக்குள்ளே ஒரு சம்பவத்தை நான் கண்டேன் என்று சொல்லலாம். அவன் தன் வாழ்நாளில் சில பழங்கதைகளைச் செவிவாயால் தகப்பன் சொன்னது, பேரன் சொன்னது நான் கேட்டேன் என்னலாம். அதுதான் கர்ண பரம்பரை கதை காது வழியால் கேட்டுவந்த கதை. அக்கதைக்கும் ஒரு 50 ஆண்டுகள் அவன் தன் வாழ்நாள் எல்லைக்கு முற்பட்ட கதையைத் தெரிந்திருந்தான் எனலாம். ஆகையால் ஒருவன் 150 வருடங்களுக்கு முற்பட்ட சங்கதியைச் சொல்ல எப்படி இயலும். வைபவமாலை இக் கீரிமலை மாவிட்டபுரம் என்னும் சொற்கள் அவ்வத் தலைவர்கள் வாழ்ந்து தொடர்புபட்ட காரணங்களால் வந்த காரணப் பெயர் என்று சொல்லுகிறது. இவர்கள் அதங்கு அகராதிச் சொற்பொருள் விரிக்கிறார்கள் தம் வாயாலே. மாருதப்பிரவாகல்லி காலம் கி.பி. 795 வரை, இவர்காலம் 20ஆம் நூற்றாண்டு. எனவே, 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காரணப் பெயர்க்கு இவர் தம் வாயாதாரமாகச் சொன்னால் அவை மறுக்கப்படுமா. இவாகள் ஒரு ஆதாரம் காட்டியும் மறுக்கவில்லை. இவர்கள் மறுப்புக்கு ஆதாரம் காட்ட இவர்களால் இயலாது. என்னை யெனின் ஆதார நூல்கள் கூற்றுக்குமாறாக இன்னொரு ஆதாரம் எடுக்கவும் இயலாது. நிற்க,

ஆதார நூல்களைப் பற்றி இவர்களுக்குக் குண்டலான விளக்கக் குறைவே இவர்கள் இவ்வாறுரைக்கக் காரணம் என்க இவ்வைபவமாலை யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலச் சரித்திரத்துக்கு உயிர் இவ்வைபவமாலை இல்லையேல் யாழ்ப்பாணத் தமிழ் அரசர் கால அரசர் அட்டவணையே இல்லை. இன்னும் இவ்விளக்கம் என்ளையெனின் ஒரு நாட்டின் ஒரு காலத்தில் வாழ்ந்த அறிவாளிகளிற் சிலர் அந்நாட்டில் பின்வரும் சந்ததியினர்க்கு அன்றி பின்வரும் நாட்டவர்க்குத் தாம் அறிந்துள்ளவைகளை அறிவிக்க வேண்டும் என்று சொல்லி வைப்பதும் உண்டு அதுவருங்காலத்தவன் ஆசையைத் தீர்க்க அவர்கள் மாட்டெழுந்த ஆசை. அதாவது பின் வருங்காலத்தவனுக்கு அவர் இட்ட அறிவுப்பிச்சை. அப்படி முன்னுள்ளவர்கள் சொல்லி வைக்கா விட்டால் ஒருவன் தன் நாட்டு முன்சரித்திரத்தை அறிய மாட்டான். உதாரணமாக யாழ்ப்பாணப் பட்டினத்திலே ஒரு நூல் நிலையமிருக்கு அந் நூல் நிலையத்தின் அடிப்பக்கத்திலே இந்நூல் நிலையம் 1946ம் ஆண்டில் யுஜாம் சபாபதியால் அத்திவாரம் இடப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படியே யாழ்ப்பாணம் ஆகப்பத்திரிக் கட்டிடத்திலே இக் கட்டிடம் உள்நாட்டு மந்திரி யு. மகாதேவாவால் அத்திவாரம் இடப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கு ஏன் இப்படி அந்நூல் நிலையக்காரர் எழுதினார்கள் அகப்பத்திரிக்காரர் எழுதிhர்கள் வருங்காலத்தவன் அன்றிப்பிறருக்கு அந்நூல்நிலையம் எப்போ கட்டப்பட்டது என்றோ அவ்வாசுப்பத்திரி எப்போ கட்டப்பட்டதென்றோ அறிய ஆசை ஏற்படும். தாகம் ஏற்படும். அந்த ஆசை அந்தத் தாகத்தைத் தீர்க்க உதவப்படும் பொருட்டு முன் கூட்டியே அறிந்து எழுதி இருக்கிறார்கள். அது அவர்கள் பின்னவனுக்கிட்ட சரித்திரப்பிச்சை அவ்வாறேதான் வைபவமாலைக்காரரும் கீரிமலை மாவிட்டபுரப் பெயர்களின் வரலாற்றைச் சொன்னார் என்றறிந்து கொள்ள வேண்டும் அங்கனமாயின் என்னை பிறர் வைபவமாலையிலே குறை சொல்லுகிறார்கள் என்னின் நன்று சொன்னாய். தம்பிழையான ஆராய்ச்சியைச் செய்து பிழையான முடிபைப் பெற்றுக்கொண்டவர்கள்தான் அப்பிழைக்கு வைபவமாலை இடங்கொடுக்காமையாலே வைபவமாலையைக் குறை கூறுகிறார்கள் அவர் தம்பிழையைத் தாம் உணர்ந்து கொள்ள இயலாதவர்கள் என்க. வைபவமாலையில் ஒரு அணுவும் பிடுங்கி கொள்ள இயலாது. இந்நூலில் அவ்வுண்மை விசித்திரமாகப் பின்னால் விளக்கப்படுகின்றது. எனவே வைபவமாலைக் கூற்றுக்களை நாம் அறிந்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அந்நூலை எழுதித் தந்த மகாபுருடனை – அறிவுபகாரியை நாம்போற்றவேண்டும் அந்நூல் இல்லையேல் யாழ்ப்பாணச் சரித்திரமுமில்லை. யாழ்ப்பாணத் தமிழரசர் பட்டியலும் இல்லை. ஞானப்பிரகாசர் அல்ல எந்த மேதாவிகளும் ஆதாரநூல்கள் சொல்வதைக் கேட்டு அவற்றின் வழியே ஒரு அணுவும் பிசகாது தம்நூலை எழுதினால்தான் நாட்டு மக்களுக்கு உண்;மைய உணர்த்த முடியும் அல்லாத நூல்களை அவர்கள் நம்பிப் போனால் அவைகள் பொய்யான முடிபுகளுக்குக் கொண்டு போய்விடும். நம்முடைய எழுத்துக்கள் முதல்நூலுக்கு எந்த வழியாலும் இடராய் இருத்தல் கூடாது. அப்படியானால் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழிக்கு ஆளாகவேண்டி வரும் நிற்க ஞானப்பிரகாசர் இப்போ அச்சொற்களுக்குப் புதுப்பொருள் கண்டால் முன்னர் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் இல்லாமல் போய்விடுமா? இவர்க்குத்தானும் தான் இவ்வாறு சொல்வது பிழை என்று அவர் புத்திக்கெட்டி இருக்காது. நிற்க, இவர்கள் கூற்றுப் பொய்ப்படுவதையும், வைபவமாலைக் கூற்று மெய்ப்படுவதையும் இந்நூலில் ஞானப்பிரகாசரும் நூலாய்வும் என்ற பக்தியுள் விளக்குவாம். வைபவமாலை கைலாயமாலையில் ஓர் அணுவும் யாராலும் பிடுங்க இயலாது. மாறுபட்டவர் எல்லாரும் வீழ்வர் நிற்க. உத்தேசம் கி.பி. 795ம் ஆண்டு வரை இப்பெயர்களின் காலம் எனலாம்.

யாழ்ப்பாணத்திலே தமிழரசர் அரசாட்சிக் காலத்திலே அரசு புரிந்த அரசர் அனைவரும் சைவசமயத்தவர், குடிமக்களும் சைவர். அக்காலத்திலே அனேகம் சைவக் கோவில்கள் பிரதிட்டை செய்யப்பட்டன. அனேக கோவில் சுவாமிகள் ஆச்சரியப்படத்தக்க அருள்களை புரிந்திருக்கின்றனர். அவைகளை எல்லாம் நடுநிலைமை விலகாது கண்ட உண்மைகளைக் கண்டபடி எழுதுவல்ல ஆசிரியரைக் கொண்டே எழுதுவிக்க வேண்டும். போர்த்தர் தம் அரசாட்சிக் காலத்திலே சைவ சமயத்தவர்களுக்கு இழைத்த தீங்குகள் அனந்தம், கூலிக்கு ஆட்களை நியமித்து அவர்களைக்கொண்டு சைவ சமயத்தவர்களை அஞ்ஞானிகள் என்று பிரசாரம் பண்ணுவித்தார்கள். அவர்கள் சைவ மக்களைப் பார்த்து உங்கள் சுவாமி மூக்கிருந்தால் மணக்குமா, கண்ணிருந்தால் காணுமா, காதிருந்தால் கேட்குமமா என்றெல்லாம் பிரசாரம் பண்ணுவித்தார்கள். அப்படிப் பிரசாரம்செய்யும் போதகன்மார் பட்டியலைச் சேர்ந்தவர்தான் சுவாமி ஞானபிரகாசர். அவர் கீரிமலை, மாவிட்டபுரம் என்னும் சொற்களின் வரலாற்றுப் பெயர்களை அறிய அவர்க்குச் சந்தர்ப்பம் கிட்டியிருக்காது. “மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய் வழி பட்டார்க்கு வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பிராபரமே” என்று தாயுமான சுவாமிகள் பாடின பாட்டின் உண்மை தத்துவம் அவர்குப் புரியாது, அல்லதும் சமயக் கடவுளின் அருள்புரி பரத்துவத்தைப் பற்றிப் புரிந்திருந்தால் அவர் மேற்படி சொற்களுக்கு அவ்வாறு பொருள்செய்து ஒவ்வொரு சைவசமயத்தவன் உள்ளத்தையும் புண்படுத்த முற்படார், நிற்க இவர் இவ்வாறு வைபவமாலைக் கூற்றுகளுக்கு எதிர்க் கூற்றுக்களைச் சொல்வாரானால் பொது மக்களுக்கு யார் கூற்றுச்சரி, யார் கூற்றுப்பிழை என்று பிரித்தறிய முடியாது. அவர்களுக்கு வைபவமாலை சொல்லும் உண்மை மனசு புகாது. மனதிற் பதியாது விட்டுவிடும். ஆகையால் சைவசமயத்தர் வைபவமாலைக் கூற்றையே ஏற்று உண்மை வரலாற்றை உணர்வாராக. அன்றியும் கீரிமலை, நகுலேஸ்வரம் மாவிட்டபுரம் என்னும் பெயர்கள் அவ்வவ் வினைமுற்றலைவர்களால் தொடர்புபட்டுக் காரணப் பெயர்களாக அழைக்கப்பட்டு வருதலை வைபவமாலையார் தங்கால எல்லைக்கு முற்கூட்டியே நிகழ்ந்துவரும் நிகழ்ச்சியென்றும் துணிந்து கொண்டமையாலே தான் தம் நூலில் அவ்வாறு குறிப்பிட்டார் என்றும் அப்பெயர்களுக்கு சொற்பொருள் விரிப்பது அதளை மறுக்கும் ஆற்றல் கொண்டதல்ல என்றும், ஒருவர் உரைக்கும் இன்ன கருத்துக்கள் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு ஆய்வுப் பொருளிடைச் சொல்லாதென்றும் அதுவும் தம்வாய் ஆதாரம் தானெனில் அது எள்ளப் படுந்தகையதென்றும் உணர்ந்து கொள்க. அக்காலத்துக்கு ஒருவர்க்காதாரம் மறுக்க க்கிடைக்காதென்க. எனவே வைபவமாலைக் கூற்றை மெய்யென நம்பிப் பயனடைவோமாக.


11. பெரிய மனத்துள்ளார் விவாகம்
தில்லையிற் பெண் தில்லைஎல்லை கடவாததால் பெரியமனத்துள்ளார் விவாகமில்லாதவராய் வந்திருந்தார். அவர் சாம்பசிவ ஐயரின் மகள் வாலாம்பிகையை விவாகம்செய்து அப் பெண்ணுக்குத் தில்லைநாயக வல்லி என்று பெயரை மாற்றிக் கந்தசுவாமி கோயிற்றென்புறத்திலுள்ள அக்கிரகாரத்தில் வாசஞ்செய்து தன் பணிவிடையை நிறைவேற்றி வந்தார். பிராமணக் குடும்பங்கள் இரண்டும் ஒரு குடும்பமாகி இரு திறத்துக் கோவில்களுக்கும் ஒருவரே விசாரணைத் தலைவரானார். இது நிற்க, (வை.மா.ப.22)


12 மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின்
பிற்கால வரலாறு
யாழ்பாடி இறந்தபின் யாழ்ப்பாண நாடு ஸ்திரமான ஆட்சி இன்றித் தளப்பம் அடைந்தது. பரந்து வாழ்ந்த குடிமக்கள் யாவரும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலையே தஞ்சமென்று வாழ்ந்து வரலாயினர். இலங்கையில் மிகப் பழமையானதும், தமிழரசர் பரம்பரையால் தோற்றுவித்ததுமானதும் மகிமையான தமிழ்க் குடியேற்றங்களை உருவாக்க ஏதுவானதுமான இம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் 15ம் நூற்றாண்டு வரை எதுவித குறைவுமின்றி வளர்ந்தது. கிறிஸ்தவர், பறங்கியர்கால அழிவுகளின் பின்னர் 17ம் நூற்றாண்டளவில் மீண்டும் புத்துயிர் பெற்றபோது பழமைபோலக் கோயில் நிர்மாணிக்கப்பெற்று மூர்த்திகள் பிரதிட்டை செய்யப்பெற்று, கொடியேற்றம் என்ற கிரியையுடன் கூடிய இருபத்தைந்து தினங்களுக்கான மகோற்சவத்தை ஆரம்பித்தும், மாசி மகத் தீர்த்தம், ஆடி அமாவாசைத் தீர்த்தம் ஆகியவற்றை முறைப்படி ஆரம்பித்தும் அதன்மூலம் சைவமக்களை உயர்நிலைக்கு உயர்த்தி வளர்க்க வேண்டிய பிரயத்தனங்களையும் அவ்வக்கால ஆதீன கர்த்தாக்கள் இக்கோயிலை மையமாக வைத்துச்செய்து வந்தனர்.

ஈழத்திலே அரசபரம்பரையினரால் கட்டப்பட்டதும், ஆதரிக்கப்பட்டதும், சைவத்தமிழர்களது பெருக்கத்துக்கிடமானதுமான இவ்வாலயத்திற்கான முதன் முதலாகத் துவசாரோகணமாகித் தொடர்ச்சியான 25 தினங்களுக்கு மகோற்சவம் நடைபெற்றது முதன்முதலாகச் சாஸ்திரவிதிக்கமைய சிற்பத்தேர் செய்வித்து ஐந்து தேர்களோடிய ஸ்தலம் மாவிட்டபுரம்தான். ஆடி, அமாவாசை மாசிமகம் ஆகிய காலத்தீர்த்தங்களை ஆகமமரபு பிறழாது ஆரம்பித்து வைத்த பெருமை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலைத்தான் சாரும். கலைஞர்களுக்கு அவர்தம் துறையில் ஊக்குவிக்கும் நோக்கமாகப் பரிசுகளும் விருதுகளும் பட்டங்களும் கொடுக்கும் வழக்கத்தை இவ்வாலயந்தான் ஈழத்தில் ஆரம்பித்திருந்தது.

கதாப்பிரசங்கம், பூஞ்சப்பறம் பூமாலைகளால் சாத்துப்படி அலங்காரம் இலட்சிதீபம் ஆதியாந்துறைகளை முதன்முதலாகப் புகுத்தியதும் இவ்வாலயந்தான் மூன்று திரு வீதிகளையும் நந்தவனவாசலில் தலவிருட்சமானகளஞ்சிமானவிருட்சத்தையும் இவ்வாலயங்கொண்டிருக்கிறது. ஈழத்தில் முதன்முதலாக இராஜகோபுரம் அமைத்த பெருமைமாவிட்ட புரத்தையே சாரும் இன்னும் இக்கோபுரமே இலங்கையில் அதியுயரத்தைக் கொண்டுள்ளது. ஈழத்தில் எங்குமே காணப்பெறாத முற்றும் வெள்ளியாற் செய்த அழகுமிகு கொடிதம்பம் இங்கே தான் உண்டு. இங்கு இடம்பெறும் பூசைகள் உற்சவாதிகள் கர்மானுஷ்டானங்கள் இன்றும் எவ்வித திருத்தம் இடைச் செருகல் இல்லாது முன்னோர்கள் வகுத்தவழி மூலம் இடம்பெற்று வருகின்றன.

ஈடிணையற்ற திருவருட்செல்வங்களைத் தன்பால் ஈர்த்துவைத்து மழை நீர்போல்யாவருக்கும் பயன்தரக்கூடியதான மகிமைகளைக்கொண்ட இத் திவ்விய தலத்திற்கு ஈழநாடு மட்டுமல்ல உலக மக்களே இவ்வாலய திவ்விய தரிசனத்துக்கு வந்து போவதோடு அதன் வரலாற்றுச் சிறப்பினை ஆராயவும் முற்படுகின்றனர். இன்று மாவிட்டபுர ஆலயம் கருங்கற் திருப்பணிகளாலும், அழகுமிகு மண்டபங்களாலும் சித்திரவாகனங்காளலும் உயர்ந்து வளருகின்றது. நித்திய நைமித்தியங்கள் யாவும் பழமையான மரபைப் பின்பற்றி எதுவிததவறுமில்லாது சிதம்பரம் தில்லைமூவாயிரர் தீட்சிதர் தில்லைவாழ் அந்தணர் பரம்பரையினர் நடத்தி வருகின்றனர். இங்கே நடைபெறும் உற்சவங்களுள் ஆனி ஆடி மாத மகோதற்சவங்கள் ஐப்பசி ஸ்கந்தசட்டி தைமாத இலட்சார்ச்சனை ஆகியவை மிகமிகத் தெய்வீகமானவை. இதைவிட விஜயதசமியன்று மாவைமுருகப் பெருமான் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளி வியாக்கிராசுரவதம் செய்வது ஒரு சிறந்த உற்சவம் மிக உயர்ந்த இராச கோபுரத்தைக் கொண்டு சீரும்சிறப்புமாய் வளர்ந்துவரும் மாவிட்டபுரஸ்தலம் இன்று சகலதுறைகளிலும் பிரகாசித்து வருவதை காணப்பெறலாம். இம்மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலாதீனத்தை முன்நின்று நடாத்தும் இன்றைய ஆதீனகர்த்தா மஹாராஜஸ்ரீ சு.து. ஷண்முகநாதக் குருக்களாவர். இவர் தீட்சிதர் பெரியமனத்துள்ளார் வழித்தோன்றலாகவும் தீட்சிதர் சபாபதி ஐயர் அவர்களது பரம்பரையின் ஏழாவது வாரிசுவாகவும் விளங்குகிறார். யாவரிடத்தும் அன்பும் பாசமும் கொண்டு தன்னலமற்ற சேவைகளைச் செய்து மாவை முருகப்பெருமானது “அடிமை” என்றசீரிய தொண்டனாக இவர் வாழ்வதை யாவருமறிவர். வேதாகம அறிவும், சைவசமய நூல்களின் அறிவும் தமிழறிவும் ஒருங்கே பெற்றவர். தாய்நாட்டபிமானம் உடையவர். யாவர்க்கும் மாவை முருகன் திருவருள் பாலிப்பாராக.

13. (உ) செங்கடக நகர் இராச்சியம்
செங்கடக நகரைத் தலைநகர் கொண்டு ஆட்சி புரிந்த அந்நாட்டையும், அங்ஙனம் ஆட்சி புரந்த மன்னனையும் அத்தலைநகரையும் அதன் காலத்தையும், அவன் இராச்சிய பரிபாலனத்தையும் பேச வந்த இந்த அதிகாரத்துக்கு செங்கடக நகர் என்று மகுடம் சூட்டி அந்நகரோடு தொடர்புபட்டவை அனைத்தையும் பேச எடுத்துக்கொண்டோம். மேல்வரும் இராச்சியங்களுக்கும் இவ்வாறே விளக்கம் என்க.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னொரு காலத்திருந்த இச் செங்கடக நகர் இன்று வரை இந் நூலாலன்றி பிறரால் அறியப்படவில்லை. சொல்லவும்படவில்லை. அந்நகர் இருந்த காலம்@ அது இருந்த இடம் அந்நகரத்து அரசர் அந்நகரில் நிகழ்ந்த வரலாறு இவ்வளவும் அறியப்படவில்லை. இப்பொழுது யாமே ஆராய்பது அந்நகர் பற்றிய முழுவரலாற்றையும் விளக்குகின்றோம். வைபவமாலை கைலாயமாலை அந்நகர் அரசர்களையும் நிகழ்ச்சிகளையும் சொல்லி இருக்கின்றன. அத் தலைநகரம் இந்த யாழ்குடா நாட்டில் எங்கே இருந்ததென்பது அது இந்நூலின் கண்டுபிடிப்பாகப் புதுதாக வெளியாகிறது.


வாலசிங்கன் அரசாட்சி
வைபவமாலையில் “உக்கிரசிங்கராசன் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்தில்” மன்மதன் போன்ற ரூபமும் சர்வராசலட்சணங்களும் உடையனாய்ச் சிங்கத்தை யொத்த வல்லமையுடன் ஒரு குமாரன் பிறந்தான் அவனுக்கு நரசிங்கராசன் என்று பெயரிட்டார்கள். நரசிங்கராசன் என்ற பெயர் படைத்த வாலசிங்கனுக்கு முடிசூட்டி அரசாளவைத்து மரணமடைந்தான். வாலசிங்க மகாராசன் செயதுங்கவராசசிங்கமென்னும் பட்டத்துடன் முடிசூட்டப்பெற்று அரசாட்சியை ஒப்புக்கொண்டான்.” (வை.மா.பக்.23.கு.ச.பதிப்பு)

இவனைப் பற்றியும், இவன் பிறப்புப் பற்றியும், கைலாயமாலை விரிவாகச் சொல்கிறது. இவ்வாலசிங்கன்தான் செங்கடக நகர்மன்னன். உக்கிரசிங்கன் மகன். இது கதிரைமலையில் இருந்த உக்கிரசிங்கனால் அதன்பின்னர் ஆட்சி புரிந்த தலைநகர் “இதுநிற்க, கதிரைமலையில் இருந்த உக்கிரசிங்கராசன் சிலகாலத்தின்பின் செங்கடகநகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வரும் காலத்தில் (வை.ப.மா.பக்.22) எனச் செங்கடகநகர் சொல்லியுண்மை காண்க.

செங்கடகநகர் எங்குள்ளது ஏன் உக்கிரசிங்கன் மாருதப்பிரவாக வல்லியைத் திருமணம்செய்து கொண்டபின் செங்கடநகர்க்கு மாற்றினான் என்பதை நாம்யூகித்துக் காண்போம். அங்ஙனம் காணமுன்னர் அக்காணும் விளக்கத்தை எளிதாக்கும் பொருட்டாக இந்நகர் பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைக் கொஞ்சம் தொகுத்துத் தருவாம்.

வைபவமாலை. செங்கடநகர்க்கு உக்கிரசிங்கன் தலைநகரை மாற்றினான் என்பதுபிழை. அந்நூலார் அறியாமலே சொன்னார். அவன் மாற்றியஇடம் சிங்கைநகரம் என்று பிறர்சொல்வதும், இந்நூலில் அப்பிறர் சிங்கைநகர் என்று சொல்வதுதான் பிழை அப்பிறர்தான் அறியாமல் சொன்னார். அவ்வைபவமாலைதான் சொல்வது சரியென்று சொல்லப்படுவதையும் மிக நுட்ப ஒட்பமாகக் கவனித்தல் வேண்டும்.

ஒரு சரித்திர புருடனுடைய நிகழ்ச்சி அவன் வாழ்ந்த காலம் அக்கால சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்பவே உருவாகிறது. இஃதொரு இயற்கை விதி. இதனை ஓட்டியே உக்கிரசிங்கன் சரித நிகழ்ச்சிகளையும் நாம் யூகித்தல் வேண்டும். இவ்வூகத்தை முதலில் காண்போம்.

கதிரைமலையில் வாழ்வு கொண்டிருந்த உக்கிரசிங்க மன்னன் வாழ்வுத் திட்டங்கள் திருமண நிகழ்ச்சியின்பின் கொஞ்சம் மாற்றங்கொள்ளவேண்டி வந்தனவாதல் வேண்டும். அவன் சோழப் பேரரசன் குமாரத்தியை விவாகம்செய்து கொண்டதால் அவளுக்கேற்ற பாதுகாப்பு அமைந்த அரண்மனை அமைத்தல் அவசியமாயிருந்தது. அன்றியும் தெற்கேயுள்ள சிங்களத் தாக்கங்கள் நிகழவல்ல கதிரைமலையில் இருந்தும் அவளைப் பாதுகாப்பதும் அவனுக்குக் கஷ்டமானதாயிருக்க வேண்டும். அவள் ஒரு அழகுசுந்தரியென்பதும் ஒரு இராசகுமாரத்தி என்பதும் அவன் நாடெங்குமன்றி பிற நாட்டகத்தும் எட்டியிருக்க வேண்டிய ஒரு செய்தியாயிருந்தது.

ஆகையால் அவன் தன் தலைநகரைச்சிங்களவர் உட்பட்ட பிறர் தாக்கங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு தற்பாதுகாப்பான இடத்துக்குத் தன் தலைநகர் மாற்றியமைக்க எண்ணமிட்டான். மாருதப்பிரவாகவல்லியின் தூண்டுதலே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மாருதப்புரவீகவல்லி இந்நிலைபரத்தை தந்தைக்கறிவித்தாள் தந்தையும் அவ்யோசனையை வரவேற்றான். அவன் காவிரிப்பூம் பட்டினத்துக்கு மிக அணித்தாக இலங்கையின் வடகடற்கரையிலே அந்தலை நகரை அமைக்க வேண்டும் என்று புத்தி சொன்னான். மூவரும் ஒரு மனப்பாட்டார்கள் இலங்கையின் வடகடற்கரையிலே காவிரிப்பூம்பட்டினத்துக்கு மிக அணிதாகவுள்ளது பருத்தித்துறைக் கடற்கரை தான் எனவே தான் காவிரிப்பூம்பட்டினத்துக்கு நேர் தெற்கே பருத்தித்துறை கடற்கரையிலே சோழன் உதவியோடு ஒரு தலைநகரமைமத்தார்கள். சோழக் கப்பல்கள் சுலபமாக வரவும் போகவும் பாதுகாக்கக்கூடிய இடமாக. அது இருந்தது. அத்தலைநகர் மாருதப்புரவீகவல்லியின் தூண்டுதலாலும் அவன் பாதுகாப்புக்காகவும் அது கட்டப்பட்டதாதலாலோ அந்நகர்க்கு வல்லிபட்டணம் (பட்டணம் - புரம் இரண்டும் ஒரு பொருளே) அதாவது வல்லிபுரம் என்று பெயரிட்டார்கள் அன்று தொடக்கம் அத்தலைநகர் இட்டபகுதி வல்லிபுரம் என்று பெயர் பெறுவதாயிற்று. சோழனுடைய பாதுகாப்புப் பெறவும் அச்சோழ நாட்டோடு போக்கு வரவு செய்யவும் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் அது வாய்ப்பானதானமாயிற்று. உக்கிரசிங்கனும் மனைவியும் எவ்வகையான அச்சமுமின்றி இலங்கையின் வடபகுதியை அரசு புரிய அது வாய்ப்பானதானமாற்று. சோழர் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்திற்கு நேரே தெற்கே பருத்தித்துறைக் கரையில் இருந்தது தான் இச்செங்கடக நகரம் என்க.

அது கடல் அருகுப்பட்டணமாக இருந்தது. சோழ நாட்டுக் கப்பல்கள் மூலம் படைகள் எளிதாக வரக்கூடிய பாதுகாக்கக்கூடிய இடமாக இருந்தது. பிற மரக்கலங்கள் தங்கள் வியாபாரம் நோக்கமாகவும் அங்கே வந்து தங்குவன ஆயின. அந்நகர் தோன்றி அப்பெயரும் தோன்றி தொழாயிரம் 900 ஆண்டுவரை பின்னால் வைபவமாலை எழுதப்பட்டது. அதிலே கடகநகர் “செங்” என்னும் அடைபெற்றுச் செங்கடகநகர் என்று குறிக்கப்படலாயிற்று.

இன்னும் ஊகிக்கக் கிடப்பது வல்லியைச் சோழமன்னன் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனம்செய்து குன்ம வியாதியும் தீர்ந்து குதிரை முகமும் மாறித் தம்மிடம் வந்தால் தன்குலச் சோழ மன்னர்க்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணிக் கீரிமலைக்குத் தீர்த்தமாடச் சிவாலய தரிசனம் செய்யவிட்டிருக்கவேண்டும். அவன் அங்கே போய் நோய் நீங்கப்பெற்று யௌவன சொரூபியானதும் தற்செயலாக அவளைச் சந்திக்கநேர்ந்த உக்கிரசிங்கன் அவளைக்கண்டு மயங்கிய காதலால் காவல்கடந்தவனைக் கைப்பிடித்து விட்டான். இதனை அறிந்த ஏவலாளர்கள் சோழராசக்கறிவித்ததும் அவனுள்ளம் தூக்கிவாரிப் போடப்பட்டிருக்க வேண்டும். ஒருவன் கைப்பிடித்த வல்லியைத் திரும்பக்கொண்டுவந்து தன்னாட்டில் மணம் முடிப்பதும் இயலாது. வல்லியும் விரும்பி வாராள். உக்கிரசிங்கன் மகளைக் கவர்ந்துவிட்டானே என்று கோபித்துப் போர்பொருதவும் இயலாது. மகளின்வாழ்க்கை கெட்டுவிடும். தீர்த்தமாடப் போன பெண் உக்கிரசிங்கனைத் தானாக வரித்தவளுமல்லன், அவனாசைக் கிணங்காமல் எதிர்நின்று போராட அவளாலும் அங்கே இயலாது. எனவே அவள் மேலும் குற்றமில்லை. என்ற அளவிலே ஏவலாளர் இத்திருமணச் செய்தியைச் சொல்லக்கேட்டும் சோழன் ஒன்றும் பேசாதிருந்துவிட்டான் என்று வைபவமாலை சொல்லுகிறது. வல்லி கந்தசுவாமி கோயிலைக் கட்டவேண்டும் என்று திருமுகமனுப்பினதும் பிள்ளைபாசவசப்பட்டு அக்கோயில் கட்டவேண்டிய எல்லாவுதவிகளையும் செய்தவன், அப்பாலட அவள் ஒரு சிற்றரசனைக் கட்டித் தன்னுயிர்க்கும் தன் கணவன் உயிர்க்கும் அபாயம் நேரக்கூடிய கதிரை மலையில் அவர்கள் வாழ்க்கை நடத்த அவன் விரும்பவில்லைப் போலும். சோழப்படை எந்த பொழுதிலும் போகக்கூடியதாகவும், வரவு செய்யக் கூடிய வாய்ப்பான சோழ தலைநகர்க்குச் சமீபமான இலங்கையின் வடபகுதியை உக்கிரசிங்கன் ஆட்சி செய்யத்தக்க இடம் ஒன்றுக்கு அவன் தலைநகரை மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணினான் போலும். எனவே, சோழ மன்னன் உக்கிரசிங்கன் ஷெ வல்லி இம்மூவரும் ஒருமித்து இலங்கையின் வடகரையில் அத்தலைநகரைக் கட்டி வல்லிபுரம் என்று அவன் பெயரையே அதற்கு இட்டார்கள். என்க. இல்லையேல் இம்மணல் வெளியிலே யாரும் பகல் 10 மணிக்கு மேல் நிற்க முடியாத வெயில் சூடுள்ள ஒரு இடத்திலே ஒன்றரை மைல்வரை நீளம் ஏற்ற அகலமுமாக உள்ள இடிந்து உடைந்துசிதைந்த சின்னங்கள் பரவிக்கிடக்கக் கூடிய கோட்டையை ஒருவன் ஏன் கட்டினான். எனவே, இன்ன அவசிய தேவை நோக்கித்தான் அம்மூவரும் ஒருமைபட்டுத் தான் அத் தலைநகரை அங்கே அமைத்தார்கள் என்க.

இன்னும் என்னையெனின் உக்கிரசிங்கன் தலைநகரை மாற்றினான் என வைபவமாலை சொல்வதாலும் அங்ஙனம் மாற்றப்பட்ட தலைநகர்க்கு வல்லிபுரம் என்றே பெயர் இருப்பதாலும், அங்ஙனம் மாற்றப்பட்ட தானம் சோழநாட்டை நோக்கி மிக ஒட்ட அண்மித்திருப்பதாலும், இவர்கள் மூவரும் முன்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்கட்டித் துவஜாரோகனம் வரை நிறைவேற ஒத்துழைத்தமையாலும் இவ்வுண்மை துணியப்படும்.

அதாவது உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லியைத் திருமணம் செய்தபின் அவளின் பாதுகாப்பின் பொருட்டாகவே தலைநகரை மாற்றியிட்டான் என்றும் அங்ஙனம் மாற்றக்கூடியநகரம் இவனுடைய இடமாயிருத்தல் வேண்டும் என்றும் அவ்வல்லிபுரம் இவன் நாட்டின் வடகரையாய் வல்லியின் தந்தையணின் சோழநாட்டுக் கனித்தாய் அச்சோழநாட்டுக் கப்பற் படைகளால் அரண்செய்யக்கூடியதாய் இருப்பதும் அறிக. ஒரு தலைநகரை நீக்குவதும், இன்னொரு தலைநகரை அமைப்பதும், பெரும் பிரயத்தனமும், பெரும் பொருட் செலவுங் கொண்ட ஒரு கருமமென்க. அதற்கவசியம் உண்டானமை துணியப்பட்டவாறு கண்டுகொள்க. அன்றியும், சோழ இராசகுமாரத்தியைக் கட்டிக் கொண்ட உக்கிரசிங்கன் சோழ நாட்டோடும் தொடர்புகொண்டவன் ஆனான். அத்தொடர்பு அவனுக்கு வாய்ப்பாக இருந்தது. சோழநாடு அண்டைநாடு, தன் நாட்டிலும் பெரியநாடு வல்லமை கொண்ட நாடு. பல வளங்களும் கொண்ட நாடு. விசேடமாகத் தன் மனைவியின் நாடு, அந்நாட்டுக்கும் தனக்கு முண்டான தொடர்பை தனக்கும் தனது நாட்டின் முன்னேற்றத்துக்கும் சாதகமாக்க அவன் எண்ணியிருக்க வேண்டும். அச்சோழ நாட்டுக்கும். தன் கதிரைமலைக்கும் இடைப்பட்டதும், அச்சோழ நாட்டுக்குச் சுலபமாகப் போக்குவரவு புரியவும், வர்த்தகம் புரியவும், தன் நாட்டை ஆட்சிபண்ணவும் பொருத்தமான இடம் வல்லிபுரமே எனக்கண்டு அதனையே இராசதானியாகவும், துறைமுகமாகவும் அமைத்துக்கொண்டான் என்க. அது அப்பொழுதைக்கு அவசியமாயிற்று. வல்லிபுரத்துள்ள பழைய பட்டினம் இருந்த இடத்தையும், கதிரைமலை, காவிரிப்பூம் பட்டினம் இருந்த இடங்களையும் நோக்குவார்க்கு இவ்வுண்மை தௌ;ளிதிற் புலனாகும். அக்காலச் சோழர் தலைநகர்க்குக்குறுக்காகவும், நேராகவும் போக்குவரவு புரியக்கூடிய இடம் வல்லிபுரமே பொருத்தமாயிருத்தல் காண்க.

செங்கடக நகர் என்பது கண்டியைக் குறிக்கும். செங்கடகல என்பதன் “ல” கெட்டவடிமல்ல, அது வேறு அதற்கும் உக்கிரசிங்கனுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்க. சிங்களத்தில் கல என்பது கல்லைக் குறிக்கும் என்பர். எனவே வைபவமாலை உக்கிரசிங்கன் செங்கடகநகர்க்குத் தலைநகரை மாற்pனான் என்ற கூற்றுச் சரியென்றும் அங்ஙனம் மாற்றியிட்ட இடம் வல்லிபுரம் தானென்றும் கண்டு கொள்க.

கடகம் என்னும் சொல்லின் பொருள்களைக் கீழே காண்போம் செந்தமிழ் அகராதியில்.

கடகம்:- கைவளை, ஒருதலைநகரம், கர்ற்கடகராசி என்பனவும் பிறவும் பொருளாகச் சொல்லப்பட்டது. இதில்h செங்கடகம் சொல்லப்படவில்லை. ஆனந்தவிகடன் அகராதி பக்கம் 640ல் கடகம் ஓர் இராசதானி, உருள், கங்கணம் கைவளை வட்டம் என்பனவும் பிறவும் சொல்லப்பட்டது செங்கடகம் என்றசொல் சொல்லப்படவில்லை. ஜுபிலி தமிழ்ப்பேரகராதி பக். 237லும் செங்கடகம் என்ற சொல்ப்படவில்லை வீரமாமுனிவர் செய்தசதுர அகராதி (பக். 640ல்) கடகம் என்பதற்குக் கங்கணம், கைவளை என்பன பொருளாகச் சொல்லப்பட்டன. செங்கடகம் இல்லை அபிதான சிந்தாமனியிலும், செங்கடகம் என்ற பெயரில்லை. மதுரைத் தமிழ் பேரகராதியிலும் கடகம் என்பதற்கு ஓர் இராசதானி, கங்கணம், கற்கடகம், வட்ட வடிவம் என்பன பொருளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. செங்கடகம் சொல்லப்படவில்லை. தமிழ் வெக்ஸிகன் வால்யூம் 2லும், கடகம் என்பதற்கு மேலே காட்டிய பொருள்களேயன்றி செங்கடகம் சொல்லப்படவில்லை. ஆகையால் காலிங்கனை விஜயகாலிங்கன் என்றாற் போலும், கூழங்கையனை விஜயகூழங்கையன் என்றாற் போலும். கடகநகரை செங்கடக நகரியெனச் சொல்லப்பட்டிருக்கும். அவ்வாறே பண்டை ஏடுகளில் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அறிந்துகொண்ட வெபவமாலைகாரர் அவ்வாறே தம்மேட்டில் குறித்திருக்க வேண்டும் இறுதியான முடிபு இதுவே நிற்க அக்கோட்டை கடற்கரையையடுத்தே கட்டப்பட்டதாலே வட்டவடிவமான கோட்டையாகவே கட்டப்படிருக்கவேண்டும் கடலுக்கும் காற்றுக்கும் ஏன் மக்கள் தாக்கத்துக்கும், பாதுகாப்பாக அவ்வாறே கட்டி ஒரு வாயிலேவிட்டிருக்கவேண்டும் பலதடவை அங்கு சென்று அக்கட்டிடப் பொருள்களையும் அத்திவாரத்தையும் பார்வையிட்டோம் மதில்சுவர் 4 முளர்வரை அகலமுள்ளதாகவும் காட்டுக் கற்களை உள்ளே போட்டுக் கட்டப்பட்;டதாகவும் இருக்கு. அங்கும் இங்கும் பரந்து கிடக்கும் சாந்துத் தகடுகள் மிகவும் பலங்கொண்டன. சிரமப்பட்டும் உடைக்க முடியாதவை.


செங்கடக நகர் என்பதன் பொருள் இவ்வாறும் கொள்ளலாம்
செம்மை – கடகம் என்னும் இரு சொற்களில் நிலைமொழியில் உள்ள ஈறு கெட்டு வருமொழிக்கிணங்க ம், ங், எழுத்தாகத் திரிந்து செங்கடகம் என வருவதாயிற்று. கடகம்தான் தலைநகரின் பெயர் அது வளைவு கொண்ட கோட்டையை கொண்டதாய் இருத்தல் வேண்டும். அடை அதனைச் சிறப்பித்துச் சொல்ல வந்த இயற்கை அடை செங்கடக நகர் கடற்கரையின் கண்ணே அமைக்கப்பட்டதாதலாலே புயல்காற்று கடல்பெருக்கம், இவைகளாகிய இயற்கை ஏதுக்களால் தாக்குறாவண்ணம் அதனை அமைத்தோர் வளைவுகொண்ட கோட்டையாக அமைத்திட்டார் போலும் என ஊகிக்கலாம். ஆனால் மேற்படி அகராதிகளில் கடகம் இராசதானியென்று குறிக்கப்பட்டிருப்பதால் அவ் இராசதானியின் நலனைச் சிறப்பை நோக்கிச் செங்கடக நகர் என்ற பெயர் வழங்கி இருக்கவேண்டும் அவ்வறிவின் வழியே வைபவமாலையார் செங்கடக நகர் என்று குறித்தார் என்க. அஃது இயற்கை அடையே. இந் நகர்க்காலம் 795வரை உக்கிரசிங்கன் மாருதப்பிரவாக வல்லியைச் சந்தித்ததால் அப்பால் கதிரைமலையில் அவன் அரசாட்சி. 20 ஆண்டு போனால் செங்கடகநகர்க்கு கி.பி.815 ஆகும். அதாவது செங்கடக நகர்க்கு அவன் 815-820ம் ஆண்டு வரை வந்திருக்கலாம்.


14. (ங) யாழ்பாடியின்
யாழ்ப்பாண ராச்சியம்
இவ் யாழ்ப்பாண வரலாறு முதலில் கதிரைமலை இராச்சியம் அதன் பின்னர் செங்கடக நகர் இராச்சியம் அதன் பின்னர் யாழ்பாடியின் யாழ்ப்பாண இராச்சியம் தோன்றியன காலஒழுங்கின்படி மூன்றாவதாக நின்ற அவ்விராச்சியத்தைப்பற்றி ஈங்கு காண்பாம்.

உக்கிரசிங்கன் காலம் (சாலிவாகன சகாப்தம் 717) கிறிஸ்து ஆண்டு 795 என்று வைபவமாலை சொல்லுவதாலும் அவன் கட்டிய செங்கடக நகரத்தில் அவன் முதிர் வயது வரையும் ஆட்சி செய்தான் என்பதால் அக்காலம் கி.பி. 850ம் ஆண்டு வரை ஆகலாம். இப்பால் செங்கடகநகர் உக்கிரசிங்கனால் வாலசிங்கனாகிய மகனுக்குக் கொடுக்கப்பட்டது என்பதால் மகனாட்சி 9ம் நூற்றாண்டின் இறுதி வரைக்குப் போகலாம். மகனின் பின் உருவான யாழ்ப்பாணனின் யாழ்ப்பாண இராச்சியமும் அரசின்றி இருந்த காலமும் கி.பி. 948வரையும் (சாலிவாகன சகாப்தம் 870) என்க. என்னையெனில் 948ல் சிங்கை ஆரியன் ஆட்சி ஆரம்பம். ஆகையால் யாழ்ப்பாண இராச்சியம் உத்தேசம் கி.பி. 900 – 945 என்க.

அந்நகரிலிருந்த வாலசிங்கனைத்தான் யாழ்ப்பாணன் பாடியிருக்கிறான் என்பதை ஷெ வைபவமாலையாலன்றி அவன் பாடிய தனிப்பாடல்களை கொண்டும் யாம்முன் விளக்கியிட்டாம். வடக்கந்தலையில் உள்ள ஒருவன் தான் நாடு கொடுக்க நினைத்தால் தனக்குத் தெற்கே தன் உபயோகத்திற்குண்டாயிருந்த நாட்டுப்புறத்தைத் தாண்டித் தானே கொடுத்திருக்க வேண்டும். எனவே வடபகுதியில் ஆட்சிபுரிந்த அரசன் பரிசு கொடுத்தது அவ் வடபகுதியில் இன்னொரு இடமன்றி வடபகுதிக்கு வெளியேயுள்ளதல்ல “அக்காலத்திலே சோழநாட்டிலிருந்து இரண்டு கண்ணுங்குருடனாகிய யாழ்ப்பாணன் செங்கடகநகரிலிருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்கமகாராசன் பேரிற்பிரபந்தம் பாடிக்கொண்டுபோய் யாழ் வாசித்துப் பாடினான். அதைக்கேட்டு மகா சந்தோசமாய் அவனுக்குப்பரிசிலாக இலங்கையின் வடதிசையில் உள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டைக் கொடுத்தான்” என வாலசிங்கன் வடதிசைக்கு வெளியே ஆட்சிபுரிந்துள்ளவன் போலவும், அவன் யாழ்பாடிக்கு இவ்வடதிசையிலுள்ள (அதாவது யாழ்ப்பாண குடாநாட்டை) நாட்டைக் கொடுத்தான் போலவும் விளக்கம் தரக்கூடியதாக பிறர் வசனம் கோத்துள்ளார். சொந்த விளக்கத்தை உபயோகிக்காமல் மூல ஏடுகளிலோ, முத்து நூல்களிலோ கண்டவகையாகக் குறிக்கின்றார் போலும். இங்கே உண்மை விளக்கம் தவறிச் சிக்கலை உண்டாக்கிக்கொள்ளற்க. வாலசிங்கனுக்கு வெளியே நாடிருந்தாலன்றோ அங்கே கவிஞன் போகமுடியும். கவிஞனுக்கும் அவன் இந்நாட்டைக் கொடுக்கமுடியும். இந்நாட்டிலிருந்தவன் கவிஞனுக்கு எப்படி முழுநாட்டையும் கொடுக்க முடியும். அப்பால் அவன் நாட்டைத் துறந்தானோ? இல்லையே. கவிஞன் அவனிடம் வந்ததும் மெய். அவன் பரிசுகொடுத்ததும் மெய். அதுவட திசையில் உள்ளதும் மெய். அதற்குப்பெயர் மணற்றிடல் என்பதும் மெய் ஆனால் அது வடதிசையிலுள்ள ஒரு இடம் என்றறிக. நிற்க, கவிஞன் வடதிசையில் உள்ள ஒரு காட்டைப்பெற்றான். அது மணற்றிடலும் காடுகளும் உடையதாயிருந்தது. கவிஞன் தன்னினத்தவரைத் தன்னாட்டவரைக் கொண்டுவந்து குடியேற்றிக் காட்டைத்திருத்தி வளமுள்ள நாடாக்கினான் யாழ்ப்பாணம் என்று பெயரிட்டான். வைபவமாலை சொல்லுவதாவது.

“யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு இவ்விடத்தில் வந்திருந்து வடதிசையில் சில தமிழ்க்குடிகளை அழைப்பித்துக்குடியேற்றி இவ்விடம் இருந்த சிங்களவரையும் அவர்களையும் ஆண்டு முதிவயதுள்ளவனாய் இருந்து இறந்துபோனான். (யா.வை.மா.பக்.24)

இனிக் கைலாயமாலையிற் சொல்லப்பட்ட பகுதியைத்தருவாம் வாலசிங்கனிடம் பாணன் பரிசில் பற்றிச் சொல்லப்படுவதாவது.

“நங்கோ ணிரமான் நடத்தியுல காண்டதுபோல்
செங்கோ வரசு செலுத்துநாள் - மங்காத
பாவலர்கள் வேந்தன் பகரு, மியாழ்ப் பாணன்
காவலன்றன் மீது கவிதை சொல்லி – நாவலர்முன்
ஆனகவி யாழி னமைவறவா சித்திடலும்
மானபரன் சிந்றை மகிழ்வாகிச் - சோனைக்
கருமுகி ணேருங் கரன்பரிசி பொக
வரு நகர மொன்றை வழங்கத் - தருநகரை
மன்றுமுதல் யாழ்ப்பாண மான பெரும்பெயராய்
நின்ற பதியி னெடுங்காலம் வென்றிப்
புவிராசன் போலப் புகழினு – னாண்ட
கவிராசன் காலங் கழிய” (கை.மா.க.39-45)

(மாணபரன் மானத்தை ஆபரணமாகவுடைய வாலசிங்கன் கருமுகில் நேருங்கரன் - கருக்கொண்ட முகிலையொத்தகையையுடையவன்)

கைலாயமாலையில் “வருநகரமொன்றை வழங்க” என்றிருக்க வைபவமாலையில் “மணற்றிடல்” என்னும் இந் நாட்டைக் கொடுத்தான்” என்றிருப்பதென்ன? கொடுக்கப்பட்டது நாடா, நகரமா, காடா, காட்டைப்பரிசில் கொடுக்க அவன் அதைப்பின் நாடாக்கி, நகரமாக்கி, வாழ்ந்து கழித்தபின் இப்பாடல் பாடப்பட்டதாலே கொடுத்தவனைச் சங்கைப்படுத்தி வருநகரமென்று சொல்லப்பட்டிருக்கு வாலசிங்கனிடம் தானிருந்த நகரத்தைவிட அப்பொழுது வேறு நகரமில்லைக் கொடுக்க. வைபவமாலை வேறுநூல்களையும் ஆதாரமாகக் கொண்டெழுதப்பட்டதாலே அது நாடென்று சொல்லுவதையாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். கவிஞன் தான் பெற்ற பின் சோழநாட்டிலிருந்தும் குடிஜனங்களைக் கொண்டுவந்து குடியேற்றியிருக்கின்றன. எனவே வைபவமாலை சொல்வதுபோல நாடுதான். நாடென்றால் உண்மை நிலைபரத்தில் அதுகாடும் சேர்ந்ததுதான். பரிசிலுக்கு வந்தவனுக்குநாடு கொடுப்பதாயிருந்தால் கொடுக்க மன்ன் இவன்பால் எத்துணைப் பெரிய அன்பும் மதிப்பும் வைத்திருக்க வேண்டும். அப்படியே இவன் அவனுக்குப்பிரபந்தம் பாடுவதாயிருந்தால் எத்துணைப் பெரிய அன்பு வைத்திருக்கவேண்டும்.

உக்கிரசிங்கன் கதிரைமலையில் இருந்து மாற்றியிட்ட தலைநகரம் செங்கடக நகரம் அது வல்லிபுரக் கரையில் உள்ள ஒரு கடற்கரை நகரமென்பது உக்கிரசிங்கன் மகன் வாலசிங்கனை யாழ்பாடிய பாடல்களால் அறியலாம்.

1. “நரைகோட்டினங்கன்று நல்வளநாடு நயந்தனிப்பான்
விரையூட்டும் தார்புய வெற்பீழ வீமமன்னனென்றே விரும்பிக்
கரையோட்டமாக மரக்கலம் போட்டுனைக் காணவந்தால்
திரைபோட்டிருந்தனையோ வாலசிங்க சிகாமணியே
என்று கரையோட்டமாக மரக்கலம் போட்டுனைக்கா
ணவந்தேன் என்று சொல்லி இருப்பதாலும்.

2. வாழுமிலங்கைக்கோ மானில்லை மானில்லை
ஏழு மராமரமோ ஈங்கில்லை – ஆழி
அலையடைத்த வெற்புயத் தாதித்h நின்கைச்
சிலையேந்திய வாறேது செப்பு” என்று

அலையடைத்த நகரத்திலிருந்தவன் என்று புலப்படப் பாடி இருப்பது கொண்டும் அறியலாம்.

அண்டைநாட்டுத் தொடர்பும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த அபிமானமும்தான் இதற்குக் காரணம் முன்பின் அறியாத – தொடர்பில்லாதவனைப் பாடி இவ்வளவு பெரிய பரிசில் பெற்றிருக்க முடியாது. புறநானூற்றிலே புலவர்க்குப் பரிசில் கொடுத்த பல கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் கண்ணிரண்டும் தெரியாத ஒரு குருடனைப் பொருள்பண்ணி இப்பெரிய பரிசிலைக் கொடுத்தகதை இம் மன்னனுடன்தான் பேசப்படுகின்றது. மன்னனும் இக் கொடையினாலே அழியாப்பெரும் புகழ் எய்தினான் புலவம் நிலப்பிரபுவாக முடிசூடா மன்னனாக வாழ்ந்து பெரும்புகழ் அடைந்தான். அதாவது அவனது நிலப்பிரபுத்துவதிகரமே அவன் காலத்தில் யாழ்ப்பாண நாடெங்கணும் பரவலாயிற்று. புவிராசர் போற்றும் புகழுடனான கவிராசன் என்று புகழப்பட்டான் பாதர்குவிறோசு இக்கருத்தை ஆதரிக்கிறார் – நிற்க.

“வாலசிங்கன் (ஜயதுன்கன் மறுபெயர்) தான் அரசுபுரிந்த இலங்கையின் வடக்குக் கரையிலே அரசு புரிந்து வந்தான். அக்காலத்திலே அவன் நாட்டின் தென் அந்தத்திலே பண்ணைக்கடலை அடுத்த பிரதேசத்திலே யாழ்ப்பாணன் தன்நிலப்பிரபுத்துவ அதிகாரத்தோடு வாழ்ந்தான்.

“கி.பி. 823 தொடக்கம் 843 வரை இலங்கையிலரசாண்ட முதலாம்சேனன் காலத்தில் சின்னமனூர் தாமிரசாசனத்திற் கூறப்பட்டவனும் இராசஜிம்மனுக்குப் பின் மதுரையை ஆண்டவனுமான வரகுணன் என்னும் பாண்டியன் இலங்கைக்கு படை எடுத்து வந்து ஜெயதுங்கனை வென்று தன்னாட்சிக்குள்ளாக்கி… சென்றான்” யா.ச.செ.இ.பக்.30) (தென்னிந்திய சாசனங்கள் 2ம் வால்யூம் 3ம் பகுதி 76ம் சாசனம்)

“வரகுணனாந் ஜெயதுங்கரசன் கொல்லப்பட்டமையாற் போலும் அவனுக்குப்பின் வந்த அவன் சந்ததியார்கள் பெயர்கள் …….” (யா.ச.செ.இ) என்பனவற்றால் இவ்வாலசிங்கன் என்னும் ஜெயதுங்கன் போரில் மடிந்துள்ளான் என்றோ அன்றியும் பிறகாரணத்தாலோ அவன் ஆட்சி நீடித்துச் செல்லவில்லை என்று தோன்றுகிறது. அப்பொழுது செங்கடநகரியில் அவன் ஆட்சி நின்றுவிட்டது என்க.

தெற்கன கண் இருந்த யாழ்ப்பாணனின் அதிகாரமே செங்கடகநகர் நாட்டினுக்கும் பரவுவதாயிற்று. அதாவது அவனின் நிலப்புத்துவ அதிகாரமே அவன் காலத்திலே யாழ்ப்பாணக் குடாநாடெங்கணும் செல்வதாயிற்று. முடிசூடா மன்னனாக இராச்சியபரிபாலனம் செய்தான். “புவிராசர் போற்றும் புகளுடனாண்ட கவிராசன் காலங்கழிய என்றார் கைலாயமாலையார். அக்காரணத்தால் அவன் இருந்த நகர் யாழ்ப்பாணநகர் எனவும் அவன் ஆட்சிசெய்தநாடு யாழ்ப்பாணநாடு – யாழ்ப்பாணக்குடாநாடென்றும் பெயர் பெறுவதாயிற்று. யாழ்ப்பாணன் ஆட்சிசெய்தநாடு யாழ்ப்பாணநாடென்க.

வடதிசையிலுள்ள மணற்றி என்றும் இந்நாட்டைக் கொடுத்தான் என்றும் யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு இவ்விடத்திலிருந்து வாழ்ந்தான் என்றும் சொல்லி இருப்பதால் யாழ்ப்பாணனுக்கு யாழ்ப்பாணகுடாநாடு முழுதுந்தான் பரிசிலாகக் கொடுக்கப்பட்டதென்று புரைபாடாக விளங்கலாயினர். அவன் காலத்திலே அவ்வடபகுதியில் வேறு இராச்சியங்களில்லை கொடுக்கப்பட்டதோர் பிரதேசம் உண்டு அவன் ஆட்சிசெய்தது யாழ்ப்பாணநாடு முழுவதும் அவன் தன் காலத்தும் அதன் பின்னரும் அது யாழ்ப்பாணக்குடா நாடென்று பெயராயிற்று.

பிறர் இந்நிலையிலே செங்கடகலெ என்னும் பெயர் கண்டியைக் குறிப்பது என்று தெரிந்திருந்தார்கள். கதிரைமலையில் இருந்த உக்கிரசிங்கன் மாற்றியிட்டதாக வைபவமாலையால் சொல்லப்பட்ட செங்கடகநகர் என்னும் பெயர் செங்கடகலெ நகரின் மரூஉ அல்லவென்றும் அது பிறிதொரு நகரின் பெயரென்றும் புரிந்து கொள்ள இவர்களால் முடியவில்லை. இவர்கள் “செங்கடகலெ” நகரைத் தான் இவ்வைபவமாலை சொல்லுகின்றது. கதிரைமலையில் உள்ள உக்கிரசிங்கன் செங்கடகலெ (கண்டி)க்குத் தன் தலைநகரை மாற்றியிருக்க முடியாதே. அன்றிக் கண்டிப் பகுதியும் அவன் ஆட்சிக்கில்லையே. எனவே வைபவமாலைக்காரர் இந்தச் சத்தத்தைக் கேட்டுத்தான் தன் புத்தகத்திலே செங்கடக என்று எழுதிப்போட்டார். நாம்தான் அறியாமல் இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளாமல். அதனால் சரியாக எழுதிய வைபவமாலையைப் பிழையாக எழுதியதாக விளங்கிக்கொண்டு இச் செங்கடகநகர் வட இலங்கையில் இல்லாததொன்று. ஆகையால் இதனை நீக்கவேண்டும். அத்துடன் இந்நகரில் நடந்ததாகச் சொல்லப்பட்ட யாழ்ப்பாடியின் கதை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும் பிறர் எண்ணினர். இந்நிலையில் கதிரைமலை கந்தரோடையிலும், நல்லூர் நகர் நல்லூரிலும் இருந்த நகரங்கள் என்ற விளக்கம் இருந்ததோடு, வல்லிபுரக் கரையில் அழிந்த ஒரு தலைநகர்க் காட்சியையும் கண்டிருந்தனர். சிங்கைநகர் எங்கிருந்ததென்ற விசாரிப்பும் இருந்து வந்தது. இவர் தம்முள் ஏ.ஜா. காரருக்கு ஏதோ அகஸ்மாத்தாகக் கொந்தகமத்துச் சாசனம் கிடைத்தது. அதில் சிங்கை நகரைப் பற்றிய பேச்சு இருந்தது. அதில் அது பொங்கொலி நீர்ச்சிங்கை நகரம் என்றும் பேசப்பட்டிருந்தது. அவர் தம் விளக்கத்தின்படி நியாயங்களைச் சொல்லி வல்லிபுரத்தின் கரையின் கண்ணதே சிங்கை நகர் என்று முடிபுபண்ணி எழுதினார். எழுதியதை அப்படியே எடுத்துத்தம்மோடு சமகால ஆராய்ச்சியாளர் யா.வை.வி.காரர் அவர்களிடம் கொடுத்தார். அவரும் இச்சங்கதிகளைத் தம் புத்தகத்திலும் சொல்லி அம்மதம் எனக்கும் சமமதம் என்று எழுதிக்கொண்டார். இருவரும் கூட்டாக நல்லூர்த் தலைநகரின் மறுபெயரான, அப்பெயரை. அதன் வரலாற்றை வல்லிபுரத்தில் வைத்து எழுதிவிட்டனர். அத்துடன் யாழ்ப்பாணச்சரித்திர ஆதார நூல்களையும் அளப்பிக்குளப்பிச் சிக்கலையும் ஆக்கிவிட்டனர்.

இவ்வுண்மையை அறிந்து கொள்ளாமல் யாழ்பாடி கண்டி அரசனைப்படி யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்றான் என்றும் அனுராதபுரத்திலுள்ள அரசனைபாடி அவ் யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்றான் என்றும் வேறு பிறர்கூறுவர் அந்நகர்கள் கடற்கரை அருகில் உள்ளவைகள் அல்லவென்றும் அவ்வரசர்களைப்பாடவேண்டிய இயைபும் தொடர்பும் அவனுக்கில்லை யென்றும் ஆகையால் அக்கூற்றுக்கள் பொருந்தாவென்றும் ஓர்க. எனவே வல்லிபுரத்தில் செங்கடகநகரைக் கண்டு கொள்க.

இன்னும்சில ஐயமறுப்பாம் என்னை? வல்லிபுரத்திலே சிங்கை நகர் இருந்தாலும் அங்கே வாலசிங்கன் இருந்தாலும் அப்பாணன் தான் கடல்தாண்டிவந்த பாடலை – அம்மன்னன் சிலையேந்தியபாடலைப் பாடியிருப்பான்தானே நீவிர் செங்கடக நகர் என்று செப்புவதேன் என்னின் இவ்வினாசசன முதலியனவாக யாம் மேலேகாட்டிய நியாயக் கோட்பாடுகளை விளங்காமல் எழுந்ததாம். அன்றியும் அவர் சுட்டும்ட சிங்கைநகர் (யா.ச.காரர் யா.வை.வி.காரர்) கலிங்க மாகனால் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக வன்றோ சொல்லுகின்றனர். எனவே 8ம் நூற்றாண்டில் இருந்த உக்கிரசிங்கன் அவன் காலத்துக்கு 5 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய நகர்க்கு எப்படி மாற்றமுடியும். அவனே அச்செங்கடநகரைக் கட்டினான் என்னும் போது அவன் காலத்துண்டான தலைநகர்க்கன்றோ அவனால் மாற்றமுடியும். எனவே அது செங்கடகநகரமென்க. நிற்க.

நன்று இன்னும் பாணன் கண்டி அரசனையோ அநுராதபுர அரசனையோ பாடவில்லை என்பது நன்குதெரிக்குதும். வாலசிங்கன் சோழ இராசகுமாரத்தி மகன். பாணன் சோழ நாட்டவன் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கறிந்திருக்கிறார்கள். பாணன் இவனைப் பாடிப் பரிசில் பெற நெடுநாளாக காத்திருக்கிறான். அதற்காக அவன் மேல் ஒரு பிரபந்தம் பாடிக்கொண்டு வந்திருக்கிறான். அதற்காக அவன் மேல் ஒரு பிரபந்தம் பாடிக்கொண்டு வந்திருக்கிறான். அரசன் பாணன் பெரும் புலவன் என்பதோடு ஞானதிருஷ்டியாகப் பாடக்கூடியவன் இதை அரசன் அறிந்திருக்கிறான் புலவர் செங்கடக நகரிக்கு வருகை தருவதை அறிந்த அரசன் புலவனது ஞானதிருட்டியைச் சோதிப்பான் ஒரு திரைச்சீலையை இடுவித்து அதன் நடுவண் அமர்ந்திருந்தான் புலவர் தம் கண்டசுத்திப் பாடலாக நரை கோட்டினங்கன்று நல்வளநாடு நயந்தனிப்பான், விரையூட்டும் தார்ப்புய வெற்பீழ மன்னனென்றே விரும்பி, கரையோட்டமாக மரக்கலம்போட்டுனைக் காண வந்தால், திரைபோட்டிருந்தனையோ வாலசிங்க சிகாமணியே” என்று பாடினார். இப்பாடலால் அந்தகனாக இருந்தும் திரைபோட்டிருந்ததைத் தெரிந்து கொண்டதும் அவ்வரசன் இருந்தநகர் கரையோட்டமாக மரக்கலம் போட்டுக் காணக்கூடியதாகவுள்ள இடமாய் அது செங்கடக நகருக்குப் பொருத்தமாக இருப்பதை உணர்க. அப்பால் அரசன் அடுத்த செங்கையாக அம்பையும் வில்லையும் தாங்கி இருந்ததாகவும் அதனையும் புலவர் வாழுமிலங்கைக்கோமானில்லை. மாரீசனாகிய மானில்லை ஏழு மராமரமில்லை ஏன் வில்லையும் அம்பையும் தாங்கினாய் என்று கேட்டதோடு ஆழிஅலை அடைத்த வெற்புயத்து ஆதித்தா என்றதால் அரசன் இருந்தது கடற்கரை பட்டினமும், அவன் சூரியகுலத்தரசன் என்பதும் வலியுறுகின்றது. அப்பாணன் செங்கடகநகரில் பாடிப் பரிசு பெற்றான் என்பது உறுதியாகிறது. புலவர் நரைகோட்டிளங்கன்று நல்வளநாடு நயந்தனிப்பாய் என்று வந்தேன் என்பதாலும் அரசன் புலவரை பூர்வபுண்ணிய வசத்தினாலே கச்சியிலே தன் நெஞ்சை ஏடாகக் கற்றான் முத்தமிழையும் என்பதாலும் இவர்கள் தம்முள் அன்பினர் என்று தெரிகிறது ஆகையாற்றான் அவன் பிரதபந்தம்பாடிக்கொண்டுவந்தான். புலவனைக் குடியேற்றினால் நாடுபெருமை அடைவதோடு சோழநாட்டு மக்களைக் குடியேற்றவும் அவன் உதவி கிடைக்கும்மென்று அவன் எண்ணியிருக்கலாம்.

வாலசிங்கன் பாணனுக்குப் பரிசிலாகக் கொடுக்கப்பட்டவர் இலங்கையின் வடகீழ்ப்பாகத்திலே வல்லிபுரம் இருக்கிறது. அதுவே செங்கடகநகரி இருந்த இடம் அங்கே வந்து தன்னைப்பாடிய கவிஞனுக்கு அவன் கொடுக்கக் கூடியதாக இருந்த இடம் அச்செங்கடகநகரிக்கும் கதிரைமலை இருந்த சுன்னாகத்துக்கும் ஒரு கோடிழுத்தால் அதற்கு வடக்கேயுள்ள பகுதியும் அதற்கு அண்மையில் உள்ளதென்பதியும் அவன் புழக்கத்தில் உள்ளவையாகலாம். ஆகையால் அவைகளுக்குத் தெற்கே பண்ணைக்கருடக்கு வடக்கே அந்நிலம் அவன் கொடுக்கக் கூடியநிலமாக அமைந்ததாகலாம். அதுமணலும் காடுமாயிருந்தமணற்றிப்பிரதேசமாக இருந்ததாக வைபவமாலை சொல்லியுள்ளது. இது நமக்கும் பொருத்தமே.

இவன் ஆட்சிக்காலத்திலே கதிரைமலையிலும் வீழ்ந்து செங்கடகநகரியும் வீழ்ந்துவிடப்பட்டதால் நிலப்பிரபுவாக இருந்த இவன் முடிசூடாமன்னனாகி விட்டான் பிறர்தம் ஆராய்ச்சித் திறத்தால் தமிழ் நாட்டில் இருந்த செங்கடகநகர் யாழ்பாடியின் யாழ்ப்பாணநகர் என்பவைகளைக்காணாது விட்டனர். அதாவது அவர்கள் சொல்ல இயலாது விட்டு விட்டனர். யாழ்ப்பாணன் வாங்கியது மணற்றியை அவன் இறக்கும்போது அந்நிலம் யாழ்ப்பாணம் என்னும் பெயர் பெற்றது அவன் ஆட்சியினால்தான் இப்பெயர் ஏற்பட்டது.


15. (ச) நல்லூர் இராச்சியம்
நல்லூர்த்தலைநகர்க் காலம்
கி.பி.948 – கி:பி. 1620
நல்லூர் நகர்கட்டிய காலம் இலக்கிய சகாப்தம் 870 என்ற கி.பி. 948 (10ம் நூற்றாண்டு) என்று சொல்லி இருக்கவும் என்னை பிறர் 13ம் நூற்றாண்டென்று சொல்லுகிறார்களே இஃதுதொரு வியப்பாக இருக்கே யார் இக்கருத்தை முதன் முதலில் வெளியிட்டவர் இவ்வுண்மையை இங்கே காண்போம்.

பாண்டிமழவன் ஜெயசிங்கையாரியனைச் சந்தித்து “பெருகு புகழ் யாழ்ப்பாணப் பேரரசு செய்ய வருகுதி என்று வணங்கினதும் அவ்வாறே அவனும் வந்து மதித்த வளங்கொள் வயல்செறி நல்லூரில் கதித்தமனை செய்ததும் இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபதாம் ஆண்டதெல்லை நலமிகு யாழ்ப்பாண நகரி கட்டியதும் ஐயமின்றி வெளியான செய்தியல்லவா? இம்முடிபை மறுத்து வேறேதும் புதை பொருளாகவோ சிலாசனமாகவோ அன்றிவேறேதும் வழியாகவோ சான்றுக்கள் பெறப்பட்டனவா இல்லையே. இங்கே இலக்கிய சகாப்தம் எண்ணூற்றெழுபது சாலிவாகன சகாப்தம் 870 என்று சொல்லப்படுகின்றது அது கிறிஸ்தாப்தம் (870+78) அதாவது கி.பி. 948

இத்தலைநகர் 13ம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதென்றும் அதுகலிங்கமாகனைப் பாடியதென்றும் கலிங்கமாகனும் சிங்கையாரி ஒருவர் என்றும் பிறர் புரைபாடாக மொழிகின்றனர்.

கைலாயமாலை கி.பி. (948ம் ஆண்டில் 10ம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றது. கலிங்கமாகன் கி.பி.13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். கலிங்கமாகனை அந்நூலால் எப்படிப் பாடமுடியும் அவன் பிறக்க 300 ஆண்டுகளுக்கு முன்னல்லவோ அந்நூல் பாடப்பட்டது. இம்மாகன் சிங்கையாரியன் என்றால் ஏன் ஆதாரம் காட்டி நிரூபிக்கவில்லை. இவன் பாடப்படும் பொழுது சக்கரவர்த்திப் பட்டத்தையும் கீர்த்திப் பிரதாபத்தையும் இழந்து தானே யாழ்ப்பாணம் வந்ததாக இப்பிறர் மேலே சொற்றனர். அப்படி இழந்த ஒருவனை அவை உள்ள ஒருவனாக முத்து இராசர் பாடமாட்டாரே. வைபவமாலையார் விஜய கூழங்கையன் என்றது பாண்டி மழவனால் வரவழைக்கப்பட்ட சிங்கை யாரியனை. அவர் கைலாயமாலையாலும் பிறநூல்களாலும் அவனைப் பற்றி. அறிந்துள்ளார் அவர் ஒரு இடத்திலும் மாகனை விஜயகாலிங்கன் என்று சொல்லவில்லை. ஆதார நூல்களைக் கொண்டெழுதப்பட்ட வைபவமாலைக் கூற்றுக்கு இவர் சொல்லும் வாயாதாரம் ஈடாகா. கைலாயமாலை பாடப்படும்போது கலிங்கமாகன் பிறந்திருக்கவில்லை. கைலாயமாலை 10ம் நூற்றாண்டிலும் வைபவமாலை 18ம் நூற்றாண்டிலும் இயற்றப் பெற்றவை. எல்லாவற்றுக்குமுன் மாகன் யாழ்ப்பாம் வந்ததற்குச் சான்று வேண்டுமே. வந்ததும் அப்பொழுது ஜெயவாகு அரசிருந்ததும் அவனை இவன் வென்றதும் பின்னர் இவன் அரசாட்சி பண்ணினதும் இரகசியமான செயல்களா ஒன்றுக்கும் சான்று காட்டவில்லையே எனவே வரவில்லை என்றபடி ஊகம் ஊகிப்பார் அளவோடு மட்டும்தான் விலைபோகவல்லது என்க. இக் கட்டத்தில் யா.வை.வி.காரர் பக். 54-66ல் கூறியவற்றைக் காண்க. சுருக்கமாகச் சொல்லலாம். “கைலாயமாலையானது சிங்கையாரியன். ஜெயசிங்கயாரியன் என நிச்சயமன்றி மங்குணமாய்க் கூறியதை வைபவமாலை திருத்தி விஜயகூழங்கை ஆரியன் என்றமை ஜெயசிங்க காலிங்கனைச் சொல்லுதற்கே போலும் “காலிங்க சக்கரவர்த்தியென ஓர்வேளை கைச்சரவைகளில் கண்டதை கூளங்கைச் சக்கரவர்த்தியென அறியாதோர் மயங்கினருமாகலாம். காலிங்க என்றிருப்பது கூளங்கை என வருவது மிகச் சுலபமேயாகும். காலிங்கச் சக்கரவர்த்தியே யாழ்ப்பாண…… நாட்டின் முதலாம் ஆரிய சக்கரவர்த்தி எனக் கொள்ளுதல் எவ்வாற்றாலும் பொருத்தம் உடையது” யா.வை.வி. பக். 54-66.

கையொன்று கூளையாக இருந்தமையாற்றாதான் கூளங்கையன் என்றழைக்கப்பட்டான் என வைபவமாலை சொன்னவாற்றையோர்க.

காலிங்க என்பதைத்தான் கூளங்கையன் எனத்தடுமாற்ற வயப்பட்டு எழுதிவிட்டார் என்றபேச்சு நன்புத்தியின் பாற்பட்டதல்ல, ஒற்றுமை வேற்றுமைக்குக்காலம் இடம்வரலாற்று விசேடங்கள் தான் முக்கியம். அவை இக்காலிங்கனுக்கு வராவே. கைலாயமாலையாற் சொல்லப்பட்டவன் இடத்தால் யாழ்ப்பாண நாடோடு தொடர்புபட்டவன். மாகன் யாழ்ப்பாணநாட்டோடு தொடர்பு பட்டுள்ள ஒருவன் என்பதற்கு ஒருசான்றும் இவர்கள் ஒருவராலும் காட்டப்படவில்லை.

ஒருவர் தம்காலத்துக்கு 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சரித்திரப் பொருள்பற்றிய பேச்சுக்கு வாயாதாரம் செல்லாதென்றோம். இவர்களிருவரும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்களாற் பேசப்படுவோர் இவர்களுக்கு 600 ஆண்டுகள் முற்பட வாழ்ந்தவர்கள் எங்ஙனம் இவ்வாறு ஆதாரம் இல்லாமற் பேசமுடியும். இருவரும் அம் மாலைகளுக்கு எதிராகப் போகிறார்கள். எதிர் முடிபுகள் பொய்ப்படும். நிற்க. நல்லூர்தலைநகர் கட்டிய காலம் அவ்விரு மாலை ஆதாரநூல்களாலும் கி.பி.10ம் நூற்றாண்டென்று சொல்ல இவர்கள் எச்சான்றைக் காட்டி 13ம் நூற்றாண்டென்று சொன்னார்கள் என்பதை மேலே விசாரிப்போம்.

யா.வை.வி. காரர் பக் 54-66ல் சொல்வதாவது “காலஎல்லை, இனிக்காலிங்கச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணச்சிங்கை ஆரிய அரசை அடியிட்டகாலத்தை ஆராய்வாம் அக்காவமானது மாகன் பொலனறுவையை அகன்று வந்த ஆண்டை (கி.பி.1242ம் ஆண்டு) அடுத்ததேயாம் என்பது தேற்றம் - மேலும் யா.வை.வி.காரர் கூறுபவை வருமாறு “கைலாயமாலையோடு பதிப்பித்திருக்கின்ற தனிக்கவியொன்றிற் சுட்டிய யாழ்ப்பாணநகரியென்பது சிங்கைநகாயின் புவனேகவாகும் காலகதியிற் புகுந்த வழுவாயி; அக்கவிகூறும் ஆண்டும் கணக்கு காலிங்கச்சக்கரவர்த்தி சிங்கைநகரைக்கட்டிய ஆண்டாகலாக் அக்கவி பின்வருமாறு.

“இலக்கிய சகாப்தமெற்ண்ணூ றெழுபதா மாண்ட தெல்லை
அவர்பொலி மாலை மார்ப னாம்புவ னேக வாகு
நலம்மிகும் யாழ்ப்பா ணத்து நகரிகட் டுவித்து நல்லை
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே”

புவனேகவாகு உள்ளபடி சப்புமால் குமரையா என்பதும் அக்காலம் 15ம் நூற்றாண்டென்பது மேல்வரும் அதிகாரம் ஒன்றனுள் தெரிவிக்கப்படும். ஆதலால் இத்துணைமயக்கங்கொண்டெழுந்த இக் கவிகாலிங்கச் சக்கரவர்த்தியின் நாட்களுக்கு சமீபகாலத்தன்று என்பது மலையிலக்கு இதை மயில்வாகனப் புலவர் தமது வைபவமாலையில் வசனரூபமாகப் புகுத்தியிருக்கின்றார் ஆதலால் இது அவர்காலத்துக்கு முற்பட்டதேயாம் அவர்கள் காலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு மட்டும் முந்தியதாகக் கூடிய கைலாயமாலை இயற்றப்பட்ட காலத்தில் கவிவழங்கியதாயின் புவனேகவாகுவை முதலாம் சிங்கையாரியனின் பேரமைச்சனாகக் காட்டிய கைலாய மாலையுடையார் அவன் நல்லூர்க் கந்தவேட்குக் கோயில் புரிவித்தமையும் தமது நூலுட் புகுத்தாது விடார் ஆகையால் சுட்டிய தனிக்கவி முத்திராசக் கவிராசருக்கும் மயில்வாகனப் புலவருக்கும் இடைப்பட்ட காலத்திற்றான் எழுந்ததென முடியும். இனிக்கவியிற் காட்டிய பெயர்கள் பிழையாயினும் ஆண்டுக் கணக்கு விசேஷ ஞாபகத்துக்குரிய ஓர் சம்பவத்தைப்பற்றியதாதலால் கர்ண பாரம் பரியமாய் அறியப்பட்ட உண்மையாகலாம் அங்ஙனமாயின் அவ்வாண்டுயாது. (யா.வை.வி.பக்.66-67)

இங்கே இவர்பேசும் பேச்சுக்கள் இந்நூலில் கைலாயமாலைநூல் அமைப்பு. இலகியசகாப்தம் எண்ணூற்றெழுபது என்னும் தலைப்புக்களை வாசிக்க நீங்கிவிடும். ஆனால் இப்பேச்சுக்கள் கூட்டாகுத்தையாகவும் பொருள்வரையறை இல்லாமலும் ஆராய்ச்சி வரம்பு முறைகளை மீறியும் போகின்றது. யாழ்ப்பாண நகரி என்பது இவர் கூறும் வல்லிபுரத்துச் சிங்கைநகரையல்ல. நல்லூர்நகரை அமைச்சர் புவனேகவாகுதான் அந்நகரைக் கட்டினவர். ஆண்டுக்கணக்கு அமைசர் நல்லூர்நகரைக்கட்டிய ஆண்டு, செண்பகப்பெருமாள் அரசன் கட்டவில்லை. கட்டினவனுக்கு அரசன் என்ற சொல் அடையாகச் சொல்லவில்லை. அரசன் உயர்பதவி அதைச்சுட்டாமல் அரசனாய் இருந்தால் எந்தப்புலவனும் பாடாமல் விடான். இக்கவி மயக்கம் கொண்டெழவில்லை இக்கவி வைபவமாலைக்கு எட்டு நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக்கவியிற் கூறிய பெயர்கள் எல்லாம் சரி.

கைலாயமாலை இருவகையாப்பால் செய்யப்பட்டிருக்கு கலிவெண்பாட்டால் அரசனை முன்னுக்கும் விருத்தத்தால் அமைச்சனையும் ஆண்டையும் பின் பாடி இருக்கு. அக்கவி வெண்பாவாற் சொல்லப்பட்ட பொருள்களோடு சொல்லப்படாமல் எஞ்சிநின்ற பொருள்களையும் எஞ்சி நின்றகுறிப்புக்களையும் தான் இவ்விருத்தத்துள் வைத்துச் சொல்லப்பட்டதென்பது விளங்குதல் வேண்டும். வெண்பாவில் அத்தலைநகர் கட்டின ஆண்டு சொல்லப்படவில்லை. இதில் இலகிய சகாப்த மெண்ணூற்றெழுபதாம் ஆண்டதெல்லை” என்று சொல்லப்பட்டுள்ளது. கைலாயமாலை நூலின் அகத்திலே, அச்சிங்கையாரியன் தலைநகர் அமைத்துக் கோயில்கட்டி மந்திரியை நல்லூரிற் குடியேற்றியது முதலாக எல்லாக் குடியேற்றங்களையும் சொல்லுகின்றது.

இராசமந்திரி போரமைச்சன் என அப்புவனேகவாகு சொல்லப்பட்டுள்ளார். அரசனுக்கு மந்திரி என்றவகையினாலே அரசனுக்குமந்திரி புத்தி சொல்ல அப்பால் அரசனும் மந்திரியும் சேர்ந்தே அத்தலை நகரைக்கட்டியிருப்பார்கள் என்பது விளக்காமலே விளங்கக்கிடப்பது. எனவே அரசன் கட்டினான் என்றேனும் அமைச்சன் கட்டினான் என்றேனும் அரசனும் அமைச்சனும் கட்டினான் என்றேனும் வருங்கூற்றுகளில் யாதா மொன்றைச் சொல்லினும் அது உண்மைக்கேற்புடையதே. ஈண்டு அரசனது முதன்மைத்தலைமை கருதியும் இத்தலைநகர் வரலாற்றுப் புருடன் அவனானமை கருதியும் கைலாயநாதன் அவனது கனவிலேயே தோன்றி நம்பெயர் கைலாயநாதன் என்று சொன்னமையாலும் இக்கைலாயமாலை அவனையே தலைநகர் அமைத்தான் என்று சிறப்பித்துப் பாடியது. இஃதில்வாறாக இவனது அமைச்சனாகிய புவனேகவாகு தனது தனித்தொடர்போடு நல்லூர்க்கந்தசுவாமி கோயிலைக் கட்டினான். எனவே மன்னனைச்சுட்டி மாலையுள்ளும் மந்திரியைச்சுட்டி தனிச்செய்யுளம் தோன்றின. அம்மந்திரியே சிங்கை நகரியையும் கட்டுவித்தர். ஆதலின் ஆண்டும் அச்சிங்கை நகர் சட்டின ஆண்டே ஆதலின் அத்தனிச்செய்யுள் இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபதிலே, மந்திரியாம் புவனேகவாகு யாழ்ப்பாண நகரியை முன்னர் கட்டுவித்து முடித்து அப்பால் நல்லூர்க் கந்த சுவாமி கோயிலைக் கட்டினான் என்று பாடியது. அம்மாலையைப் பாடுவித்தோர் அம்மாலையினுள்ளே மன்னனையும் அவனோடு மந்திரியையும் பாடவிரும்பாமலேதான் இவ்வாறு தனியே பாடினார் என்க.

அஃது அன்னாரது நூலமைப்பேதான், சட்டநாதர் கோவில் திரு. முத்துச்சாமிப்பிள்ளை. அவர்களோடு அக்கோவில் வரலாறு பற்றி அளவளாவியபோது சட்டநாதர்சிவன் கோவில் இராசாகட்டினது என்றும் நல்லூர்கந்தசுவாமி கோயிலை மந்திரி கட்டினது என்றும் இவ்வூருக்குள்ளெ கர்ணபரம்பரைக் கதையுண்டென்றும் சொன்னார். எனவே வல்லிபுரத்தில் கலிங்கமாகன் தலைநகர்கட்டவில்லை. செண்பகப்பெருமான் நல்லூரில் தலைநகர் முதன்முதலாகக் கட்டவில்லை. யாழ்ப்பாண மன்னனின் கொட்டத்தை அடக்கக் கோட்டை அரசனால் ஏவப்பட்டுப் படை எடுத்தான். எனவும் அவன் கனகசூரியன் இருந்தலைநகருக்குப்படை எடுத்தான் எனவும் அறிக. அக்கனகசூரியன் இருந்ததலைநகரத்தை யார் கட்டினான் அது தான் (ஆதிச்சிங்கை யாரியனும்) அமைச்சர் புவனேகபாகு கட்டிய வைபவமாலை சொன்ன கி.பி.948ல் கட்டப்பட்ட தலைநகரம். என்க.


நல்லூர்த் தலைநகர்க் காலம்
வைபவமாலை பக் 26ல் அத்தலைநகரைகட்டிய ஆதிச்சிங்கை யாரிய மன்னன் கீழ்த்திசைக்குக் காப்பாக வெயில் உவந்தபிள்ளை யார்கோவிலையும். மேற்றிசைக்கு வீரமாகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதர்கோவிலையும், தையல்நாயகியம்மன் கோவில் சாலைவிநாயகர் கோவிலையும், கட்டுவித்துத் திலகதியார் என்னும் புத்திரியுடனே கிருகப்பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தான் என்று சொல்லுகின்றது. சிலபிரதிகளில் வடக்கே தலங்காவற்பிள்ளையார் கோவிலையும், தெற்றிசைக்குக் கைலைவிநாயகர் கோவிலையும் கட்டுவித்தான் என்றுரைக்கின்றன. ஆசையால் இக்கோவில்களை நாற் பக்கமும் வௌpயே விட்டு இக்கோவில்களின் உட்பக்க அருகாக ஒரு கோடிழுத்தால் அதுதான் அரண்மனை இருந்த களம் ஆகும். இதற்குள்ளேதான் சங்கிலியன் தோப்பு யமுனுஏரி வருகின்றன. இது அகநகர் எல்லை. புறநகர் எல்லையெளியே ஆனைப்பந்தி அடியார்க்கு நல்லார்க்குளம், ஆரியகுளம், (பழக்கப்படாத ஆனைகளைக் கோட்டைகட்டிய) ஆனைக்கோட்டை என்பனவற்றைச் சேர்ந்த நிலங்கள் என்பன இவ்வகநகர் எல்லைக்குள்ளேதான் இராசபரம்பரையினர் பெயருள்ள நிலங்கள் குளங்கள் அனேகம் இருக்கின்றன. என்னை இக்கோவில்கள் பண்டைக் காலத்தனவா அன்று, அக்கோவில்கட்டப்பட்டதானம் பண்டைக்காலத்தன. அப்பழைய கோவில்கட்டிடமும் அதற்குள்ளே இருக்கும் விக்கிரகங்களும் பெரும்பாலும் இப்போஇல்லை எனலாம். அவை போர்த்தர்காலம் தொடக்கமாக அழிபட்டும் போயின. அந்த அழிந்த இடங்களிலே அவை பண்டைக்கால அரசர் கோவில் இருந்த இடங்களெனவெண்ணிப் பின் வாழ்ந்துவந்த குடிமக்கள் அக்கோவில்களைக் கட்டி விக்கிரகங்களையும் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார். அக்கோவில்பிளம்பு (உருவம்) இப்பொழுது நமக்கு எல்லையைக் காட்டுகின்றன என்று தேர்க.

அங்ஙனம் அந்நகரிலே ஆதிச்சிங்கையாரியன் அரசுக்கு வந்தானாக வயசு முதிர்வில் அவன் தன் மகன் குலசேகரசிங்கையாரியனுக்கு முடிசூட்டினானாக. இப்படியே மைந்த் வழிமைந்தனாக இந்த இராசபரம்பரை கி.பி. 948ம் ஆண்டு தொடங்கி கி.பி.1450 வரையும் அதே தலைநகரிலே சீரும் சிறப்ணபும் பேரும் புகழும் பெருக செகராசசேகரன் பரராசசேகரன் என்னும் சிங்காசனப் பட்டத்தையும் பெற்று அரசு புரிந்து வந்தார்களாக அவர்கள் இலங்கை எங்கணும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யாழ்ப்பாணத் தமிழ் அரசனென்று சுட்டிப் பேசப்பட்டு வந்தார்கள். 9ஆவது அரசன் செயவீரசிங்யாரியன் காலத்திலே இலங்கை முழுவதையும் அவன் ஆட்சி புரிந்தான் என்றும் சொல்லுகிறார்கள். அவ்வளவுக:கு அவாகள் செல்வாக்ணுகுப் பரவியிருந்தது. இவ்வரசபரம்பரை மன்னன் ஒருவன் 11ம் நூற்றாண்டில் சிதம்பரத்துக்குப் போய்ப் பரராசசேகரன் மடங்கட்டி சூரியமூர்த்தித்தம்பிரானை நியமித்துச் செப்புப்பட்டயம் எழுதிக் கொடுத்துச் சிதம்பர தானம் வழங்கினான். 12ம் நூற்றாண்டில் உள்ள இப்பரம்பரை மன்னன் காலத்திலே புகழேந்திப் புலவர் இந்த அகநகரெல்லைக்குள்ளே காலடி கெர்டு நடந்துவந்துதான் இங்கே இருந்த அரண்மனை மன்னனிடம் ஆனையும் நிதிக்குவையும் வாங்கினார். இப் 12ம் நூற்றாண்டில் (முன்னர் 14ம் நூற்றாண்டென்று வெளியானது) தான் இவ்வரண்மனைச் சேனாபதி பொப்பண்ண காங்கேயர்கோன் சிவப்பதிகாரத்துக்குரை செய்வித்தார். செய்த அடியார்க்கு நல்லார்க்கு அரண்மனையும் குளமும் வெட்டிக் கொடுக்கப்பட்டன அவைமுறையே அடியார்க்கு நல்லார் வரம்பு, எனவும் அடியார்க்கு நல்லார் குளம் எனவும் பெயர்கள் பெற்றன. அந் நகரிலே இருந்த மன்னனாலேதான் பரராசசேகரம் என்னும் வைத்திய நூலும் செகாரசேகரமாலை என்னும் சோதிட நூலும் இயற்றப்பெற்றன. அவை 13ம் நூற்றாண்டு வரையில் இந்த எல்லைக்குள்ளே இருக்கும் வடிவில் அமைந்த யமுனா ஏரியில் இராசகுல ஆடவர் ஒருபக்கமாகவும் மகளிர் ஒரு பக்கமாகவும் நீராடினார்கள்.

பூஞ்சோலை மத்தியிலே அவ்வேரியின் வண்டிப் பக்கம் அதாவது இப்பொழுது அக்குளத்தின் வடபக்கம் இருக்கிறது அது வரவர ஆழமாகப் போகிறது. இந்நிலத்துக்குக் கிழக்கே அரைமைல் வரை தூரத்துக்கப்பால் கோட்டை வாசல் என்னும் தோம்புப் பெயர் கொண்ட நிலம் இருக்கிறது. அங்கே 50க்கு மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. நான் அவ்வீடுகளில் போய் அவ்வீட்டுக்காரரிடம் உறுதிகளை வாங்கி வாசித்துப் பார்த்தேன். அவைகள் எல்லாவற்றிலும் தோம்புப் பெயர் ‘கோட்டை’ வாசல் என்று எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைக்கொண்டு அக்கோட்டை அரைமைலுக்குக் குறையாத அகலம் கொண்டதாக இருக்கக்கூடும் என்ணறு ஊகிக்கக் கிடக்கிறது. எனவே கோட்டைக்குக் கிழக்கு வாசல் என்று தெரிகிறது. இவ்வாசல்தான் ஆனைப்படை முதலானவை போக்குவரவு செய்ததாக வேண்டும். இப்பொழுது மேற்கே இருக்கும் வாசல் அந்தரங்க – அல்லது ஆபத்து வாசல் எனலாம். தோற்றோடிய கனகசூரியனும் மக்களும் திரும்ப வந்து நுழைந்த வாசல் அதுவாகவும் இருக்கலாம். (அது இப்போ முத்திரைச்சந்தைக்கு வடக்கே யாழ். பருத்தித்துறை றோட்டில் நல்லூர்pல் இருக்கிறது) சுட்ட செங்கட்டிகளாலும் இறுகிய சுண்ணாம்புக் கலவையாலுமானது. அது உடைந்து போகாமல் பிற்காலத்தில் சீமென்ற்பூசப்பட்டிருக்கின்றது. இலங்கையின் வடபகுதி தட்டைநிலமாக இருந்தால் அப்பகுதித் தமிழ் மன்னர் தலைநகரை மாற்றி அமைக்கக்கூடிய மலைநாடுமில்லை. அவர்கள் மைந்தன் வழிமைந்தனாக தன் தந்தை ஆட்சி பண்ணிய கோட்டையிலே தாமும் இருந்து ஆட்சி புரிந்தார்கள். தம்மைந்தர்க்குச் சோழ இராசபரம்பரைப் பெயரையே இட்டுவந்தார்கள். அத்துடன் சிங்கை என்னும் தலைநகர்ப் பெயரும் மேலாம் சாதிக்காரன் என்ற பொருளில் வரும் ஆரியன் என்ற பெயரையும் சேர்த்து குலசேகரசிங்கை ஆரியன் என்றாற் போலும் பெயர் வைத்து வந்தார்கள் மார்பில் முப்புரிநூல் அணிந்தார்கள். இராமேசுவரப் பிராமணக் குடும்பத்தில் பெண் எடுத்தார்கள் இவர்கள் குலம் ஆரியச் சக்கரவர்த்திகுலம் என அழைக்கப்பட்டது.

இப்படியே கி.பி. 948 தொடங்கி கி.பி 1450 வரை தம் மூதாதையர் தலைநகரை மாற்றாமல் ஒருவர் பின்னோருவராய் ஒரே கோட்டையிலே ஆட்சி பண்ணினார்கள். ஆகலாம் அக்கால எல்லைக்குள்ளே தலைநகர் மாற்றக்கூடிய போர் ஒன்றும் நடக்கவில்லை சலனமில்லாமல் இராச்சியம் நடந்தேறிவந்தது. பின்னர் இத்தலைநகர்க்கு செண்பகபெருமான் படை எடுத்தான் கி.பி. 1450வரை தோல்விகண்ட அரசன் ஓடிவிட்டான். அந்த இடத்தில் செண்பகப்பெருமாள் ஆட்சிபண்ணினான். அவன் கொழும்புகோட்டை இராச்சியத்தை கைப்பற்றுவான் இந்த நல்லூர் இராச்சிய ஆட்சிக்கு விஜயவாகு என்னும் பிரதிநிதியை நியமித்துச் சென்றான். இவன் ஆட்சியை – வகையை வைபவமாலையார் “விஜயவாகு என்னும்சிங்களவன் தானே அரசனெனத் தலைப்பட்டுத் தமிழ்க் குடிமக்களை யொடுக்கிக் தமிழரையுடை நடை பாவனைகள் எல்லாம் தங்களைப் போலாக வேண்டுமென்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணுவித்து அதற்கமையாதவர்களைத் தண்டித்தும் பதினேழு வருடம் அரசாண்டான் (யா.வை.மா.பக். 45-46)

இவனோ இவனை இவ்வாறு ஆட்சிசெய்யப்பணித்த செண்பகப் பெருமாளோ சைவசமய நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைக் கட்ட மாட்டார் என்றுதுணிக. அப்பால் வைபவமாலை சொல்வதாவது கனகசூரியசிங்கையாரியன் தன் பிள்ளைகளாய பரராசசேகரனையும் செகராசசேகரனையும் திருக்கோவலூர் இராச குடும்பத்தவர் பாற் கல்வி பயில வைத்து தன்மனைவியுடனே காசிபரியந்தம் யாத்திரை பண்ணி மீண்டான் பின் திருக்கோவலூர் போய்ப் பிள்ளைகளைக் கண்டான். பிள்ளைகளிருவரும் சத்துருக்களைச் செயிக்கவும் இழந்த தந்தையின் இராச்சியத்தை மீட்டுக் கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங்களைக்கண்டு மிகுந்த ஆச்சரியங்கொண்டு அவர்களை முத்தமிட்டு அங்குள்ள இராசகுடும்பத்தார்க்குக் காட்டவேண்டிய நன்றிகள் எல்லாம் காண்பித்து பிள்ளைகளையுந் தேவியையும் கூட்டிக்கொண்டு மரைக்குப் போய்ச்சேர்ந்தான். சேர்ந்த பொழுது பாண்டி நாட்டைப் பகுதிகளாய் ஆண்டசிற்றரசர்கள் பலரும் சேனையையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட அவன் சகல ஆயத்தங்களுடனேயும் யாழ்ப்பாணம் (நல்லூர்) வந்து சேர்ந்து கோட்டையின் மேற்கு வாசல்வழியாக நுழைந்தான். (அவ்வாசல் இப்பொழுதிருக்கும்வாசலாகவும் இருக்கலாம்) விஜயவாகு காத்திராத வேயிளைற் சேனைவர்க்கத்துடன் இவன் நுழைந்தபோதிலும் அவன் சடுதியிற் சேனைகளைக்கூட்டி அஞ்சாநெஞ்சத்தனாய் நின்று பெருஞ்சமர் பண்ணினான். செகராச சேகரன் ஒரு அரணிதில் சண்டை செய்துகொண்டுநிற்க, பரராச சேகரன் விஜயவாகுவின் துணிவையும் அவன் செய்யும் வீரத்தையும் கண்டு வாட்படைபுடனே விஜயவாகுவின் போர்முனைமேற்சிங்கம்பாய்ந்தாற்போல் பாய்ந்து சேனைகளையும் விஜயவாகுவையும் தன் வாளுக்கிரையாக்கினான். அதைக்கண்டு செகராசசேகரனுடன் எதிர்ந்த போர் முனைமுறிந்து கெட்டுச்சிதறிப் போயிற்று. பரராசசேகரன் பிதாவை அரசாட்சியில் வைத்துத் தான் தேசவிசாரணை செய்ய முயன்றான். (யா.வை.மா.பக்.45-48)

இவ்வாறு சரித்திரமானால் எந்த இடத்தில் கனகசூரியன் தோற்றானோ அந்தக் கோட்டையை – அதேகளத்தை அவன் மீளவென்று கொண்டான். அவனின் பின்னர் அவன் மகன் சங்கிலி அரசுக்குவந்தான் அவன் இறுதியில் அரசாட்சி பண்ணும்போது கி-பி.1620 வரை போர்த்தர் படை எடுத்தனர். சங்கிலி இக்களத்தில் இருந்த காரணத்தால் அது அவன் காலத்தில் சங்கிலிதோப்பென்று அழைக்கப்பட்டது. போர்த்தர் சங்கிலியை வென்று கொள்ள போர்த்தரின்கீழ் அவன் பரம்பரை கி-பி. 1658 வரையும் இக்களத்தில் இருந்தரசு பண்ணியது. ஒல்லாந்தர் அரசுக்கு வந்தபோது அவ்வந்நிலங்களுக்குப் பெயர் பதிந்தார்கள் சங்கிலி பெயரால் அழைக்கப்பட்ட நிலத்தைச் சங்கிலிதோப்பென்று பதிந்தார்கள் இவன் சகோதரன் பண்டாரத்தின் மாளிகை இருந்த இடம் பண்டாரமாளிகை என்றெழுதப்பட்டது. எனவே சங்கிலித்தோப்பு பண்டாரமாளிகை என்பனவாக அழைக்கப்பட்ட நிலம் அவர்கள் மாத்திரந்தான் இருந்த நிலம் அல்ல. அவர்கள் முன்னோர் பன்னிருவரும் இருந்த நிலம். எனவே ஆதி அரசன் சிங்கையாரியன் தலைநகர் அமைத்த இடமும் இதுவே என்க. என்னை? இப்பரம்பரை எவரேனும் தலைநகரை மாற்றியமைத்த சங்கதியில்லை எனவே நல்லூர்த்தலை நகரம் கி.பி. 948-1658 வரையும் அதன் காலம் 710 ஆண்டுவரை இருந்ததென்க.

16. பாண்டிமழவன் அழைத்துவந்த
சோழ இராசகுமாரன்
இவ்வாதிச் சிங்கையாரியனைச் சிலர் பாண்டியன் என்கின்றனர். சிலர் சோழன் என்கின்றனர். சிலர் ஒன்றினையும் துணிய இயலாதிருக்கின்றனர். யாம் ஈண்டு நிச்சயிப்பாம். அவ்வாரியன் தன் மகனுக்கு தன் இராச்சியத்தை முடிசூட்டி வைத்துச் சிவபதம் சார்ந்தான் என்று வைபவமாலை சொல்லி இருக்கேயல்லவா. அவன்பெயர் குலசேகரசிங்கையாரியன் என்று அந்நூலால் சொல்லப்பட்டிருக்கல்லவா. இப்பெயரை அவனுக்கிட்டவன் அவன் தந்தையல்லவா அவன் தன் குலத்தவர் அனுசரித்து வந்த பெயரைத்தானே தன் மைந்தனுக்கு இட்டிருப்பான். எனவே இம் மைந்தன் பெயரைக் கொண்டும் அவன் தந்தை இக்குலத்தவன் என்றும் நிச்சயமாக அறிந்துவிடலாம். அதன் கூற்றுவருமாறு.

“சிங்கள கலகத்துக்கு எடுபடாமல் காலம் விட்டுவந்த பொன் பற்றியூர் வேளாளன் பாண்டிமழவன் என்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ்விடத்திலே சோழ நாட்டிலிருந்து வந்து இராச உத்தியோகத்துக்கு ஏற்ற கல்விகற்றுக் கொண்டிருந்த திசையுக்கிரசோழன் மகனாகிய சிங்ககேதுவுக்கு மருமகனான சிங்கையாரியன் என்னும் சூரியவம்சத்து இராசகுமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலைபரத்தை அறிவித்து இவ் யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்ய வரவேண்டுமென்று கேட்க சிங்கையாரிய அரசன் மறுத்துப் பேசாமல் பாண்டி மழவன் கேள்விக்குடன்பட்டு (கல்வியறிவிலும் புத்திவிவேகத்திலும் எவர்களும் வியந்து கொள்ளத்தக்க உத்தண்டவீரசிகாமணியாகிய புவனேகவாகு என்னும் மந்திரியையும் காசிநகரத்திலிருந்துவந்த வேதிய குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரென்னுங் குருவையுங் கொண்டு தனது பரிவாரங்களுடன் பிரயாணப்பட்டு பாண்டியராசன் வழிவிட்டனுப்பி வைக்க யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லூர்ப் பகுதியிலே … கிருகப்பிரவேசஞ் செய்திருந்தான் - (யா.வை.மா. பக். 25-26) வந்து தலைநகர் அமைத்தான் என்று சொல்லியுள்ளது.

எனவே சோழ அரசன் பாண்டிய நாட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்தவன். ஆனால் பாண்டியஅரசனல்ல. ஆதிச்சிங்கையாரியவன் பாண்டியனா சோழனா என்பது அவன் தன்மைந்தனுக்கிட்ட பெயர் கொண்டறியலாம். மைந்தனுக்கு குலசேகரசிங்கையாரியன் என்று பெயர் வைத்திருக்கிறான். இதைக்கொண்டு ஆதிச்சிங்கையாரியன் சோழகுலத்தவன் என்று தெரிகிறது. இது சோழகுலத்துப் பெயரைத் தழுவியது அந்த முதல்பெயர்களைக் கொண்டவைகளாகத் தான் இன்றும் இவன் குலப்பின்னவர்கள், குலோத்துங்கள, விக்கிரமன், கனகசூரியன் எனத்தங்கள் பெயரை வைத்துக்கொண்டார்கள். இவ்வுண்மையை சோழர் சரித்திரத்திலறிந்து கொள்க.

இனிப்பாண்டியர் பெயர்களை. சு. அரிசுரமையர் (தலைமைத்தமிழ் பண்டிதர் தீர்த்தபதிக்கலாசாலை அப்பாசமுத்திரம்) எழுதிய பாண்டிய ராசவம்ச சரித்திரம் எனும் நூலில் காண்பாம்.

பாண்டியன் வடிவம்பலம் நின்றவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துஞ்சிய பெருவழுதி, பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன், எனவே பாண்டியன், வழுதி, மாறன், செழியன் என்னும் பெயர்களில் ஏதாவதொன்றும் அச்சிங்கையாரிய குலத்தவர் பெயரோடு தொடரவில்லை. ஆகையால் ஆதிச்சிங்கையாரியன் பாண்டியன்அல்ல. அவனைச் சோழகுலத்தவன் பாண்டிய நாட்டிலே இராசவுத்தி கோக்கல்விகற்றுக் கொண்டிருந்தவன் என வரையறையாகச் சொன்ன வைபவமாலையை நாம் வியக்கின்றோம். இன்னும் கேட்க.

வைபவமாலையார், பாண்டிமழவன் போய்க்கேட்ட இராசகுமாரனை விபரிக்குமிடத்து அவன் சோழநாட்டிலிருந்து வந்து மதுரையிலே இராசவுத்தியோகத்துக்கேற்ற கல்வி கற்றுக்கொண்டிருந்தவன் எனவும், சோழன் மகனாகிய சிங்ககேதுவுக்கு மருமகனான சிங்கையாரியன் என்று சொல்லியிருக்கிறார் அல்லவா எனவே அவன் சோழன் என்று துணிக. அப்பாலும் ஐயம்கிளம்பு மேல சூரியவம்சத்து இராசகுமாரனைக்கண்டு என்று சொல்லி இருக்கிறாரே. உலகவழக்கிலும் நூல்வழக்கிலும் சோழரைச் சூரியகுலம் என்றும், பாண்டியரைச் சந்திர குலமென்றும் சொல்லும் வழக்கம் இருக்கு. அவ்வகையிலே அவனைச் சோழனென்றே துணிந்து கொள்க. அங்ஙனம் சரியாயினும் அவன் பாண்டிநாட்டு மதுரையில் உள்ள சொக்கநாதரை வழிபட்ட செய்தி இக்கோட்பாட்டுக்கூறுவிளைக்காதோ வெனின் இல்லையே இவ்வரசரான “ஜெயசிங்கையாரியனாம் செய்யகுலராசன், நயந்து புவியாண்டிருக்குநாளில், வியந்த மதுரைநகர்ச் சொக்கர் மலர்ப்பாதம் போற்றி, இதயத்திரவு பகலெய்தி விதனமுறும், அக்கவின் கோயிலமைத்துப் பிரதிட்டை செய்து, சொக்கலிங்கமென்று பெயர் சூட்டிமென்ன. மிக்க, மனநினைவின் மன்னன் மதித்து மஞ்ச மீதிற், புனைதுயிலாய் மேவீயிடும்போது (கை.மா.கண்.10-15)

இப்பகுதிக்குரை செய்தவர் உரையாவது “இவ்வாறு ஆகவேண்டிவை எல்லாம் (சிங்கையாரியன்) அமைத்து முடித்து இரவும் பகலும் மதுரை சொக்கநாதர் திருப்பாதங்களையே சிந்தித்து அரசாண்டு வருகையில் யாழ்ப்பாணத்திலே (நல்லூரிலே) சொக்கநாதர் கோயிலமைக்க விரும்பி அவ்வாறே செய்வதென ஒருநாள் தீர்மானித்தான். (கை.மாலை.பக். 28) இவன் முன்இராசவுத்தியோகத்துக்கேற்ற கல்வி கற்க மதுரைக்குப் போயிருக்கிறான் அங்கே 10-15 வருட காலம் தங்கி அக்கல்வியைக் கற்கும் காலத்திலே மதுரைச் சொக்கரை வழிபட்டிருக்கிறான். அவன் பின்னர் யாழ்ப்பாணத்து நல்லூருக்கு வந்து அச்சொக்க நாதர்க்கு ஒரு கோயில்கட்டி வழிபட எண்ணி இருக்கிறான் (அச்சந்தர்ப்பத்திலேதான் கைலாயநாதன் உமாதேவி சகிதம் போய்க் காட்சி கொடுத்து என்னை மறந்தனையோ என்றுகேட்டார் என்க) இன்னுமொன்று அரசர் பெயர் வைப்பது சிந்தித்துச்செய்யப்படும் விஷயம். பாண்டியன் சோழஇனத்தார் பெயரையோ – சோழன் பாண்டிய இனத்தவர் வைக்கும் பெயரையோ வையான் எனவே சிங்கையாரியன் சோழனை என்க.


17. பிறர்கண்டசிங்கைநகர்
சு.ஞா காரர் கூறுவதாவது (யா.வை.வி.பக் 67-68)
“ஆதி ஆரியச்சக்கரவர்த்தி கட்டிய யாழ்ப்பாண நகரியாது? அது நல்லூராதல் கூடுமா கூடர்தென்பர் ஸ்ரீ இராசநாயக முதலியார். இவ்வியுற் பத்திமானின் அனுமானப்படி பருத்தித்துறைக் கணித்தாய் மணல் மேடுகள் பொருந்தி இருக்கின்ற வல்லிபுரமே பூர்வகாலச்சிங்கை நகராம். நல்லூர் புவனேகவாகுவெனப்பிற்படக் கோட்டை இராச்சியம் வகித்த செண்பகப்பெருமாள் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டுவித்ததாம். இம்மதம் எனக்கும் சம்மதம். வல்லிபுர மணற்கும்பிகளுள் காற்றுக்காலங்களில் அகப்படும் பழம்பொருட்கள் அங்குசிலவிடங்களில் குவிந்துகிடக்கின்ற பூர்வகாலக்கலவோடுகள் கீச்சுக்கிட்டம் ஆதியனவும் அங்கிருந்து கரைமார்க்கமாகப் பொன பெருவீதியின் அடையாளங்களும் ஒருநாள் அது விஸ்தாரநகராய் விளக்கியதெனக்கரதல ஆமலகமாய்க் காட்டும் “அப்பால் ஆரியச்சக்கரவர்த்திகள் தம் செல்வாக்கு நிரம்பிய நாட்களில் பெருங்கப்பற் படையுள்ளோராய்ப் பிரக்கியாதி பெற்றுள்ளமையால் அம்மரக்கலத்திரள் ஆழியிற். சுலபமாய்ச் சென்று திரும்பதற்கனுகூலமான துறைமுகம் உள்ளோராய் இருந்தமை அவசியம். கேகாலைப்பகுதியில் உள்ளகோத்தகமத்திற்கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டும் அன்னோரை பொங்கொலி நீர்ச்சிங்கை நகர் ஆரியர் என்று சூகிக்கிறது. பெருங்கடற் சமீபமும் சிறந்த துறைமுகம் பொலிவும் கொண்டது வல்லிபுரமே. ஆங்கு நற்றுறையுண்டோ என இராசநாயகமுதலியார் கொண்ட ஐயுறவு எம்மால் இனிது தீர்க்கப்படாது”

இச்செ. இ. காரர் சு.ஞா காரர் இருபேரும் செண்பகப்பெருமாள் தான் நல்லூர்த்தலைநகரைக் கட்டினான் எனவும் கலிங்கமாகன் வல்லிபுரத்தில் சிங்கைநகரைக் கட்டினான் எனவும் ஒரே முகமாகச் சொல்லுகின்றனர். அவர்கள் சொல்லுமாற்றை முன்னும் பின்னும் நோக்கியறியலாம். நல்லூர்த்தலைநகர் செண்பகப்பெருமாள் கட்டவில்லை என்றும் ஆயின் வல்லிபுரத்திலே சிங்கைநகர் இல்லை என்பதும், அது கட்டிய ஆண்டை அவர்கள் பிழையாகச் சொல்லுகின்றார் என்றும், கலிங்கமகானுக்கும் யாழ்ப்பாணத்தொடர்பில்லை என்றும் விளங்கிக்கொள்க.

சு.ஞா. சொல்லுவதாவது
நல்லைக் கோயிலைப் புரிவித்த புவனேகவாகு உள்ளபடி சப்புமால்குமாரயா எனும் செண்பகப்பெருமாளேயாம் என்பதும், அக்காலம் பதினைந்தாம் நூற்றாண்டாகும்மென்பதும் மேலவரும் அதிகாரமொன்றனுன் தெளிவிக்கப்படும். ஆதலால் இத்துணை மயக்கங்கொண்டெழுந்த இக்கவி காலிங்கச் சக்கரவர்த்தியின் நாட்களுக்குச் சமீபகாலத்தன்று என்பதுமலையிலக்கு, இதைமயில் வாகனப்புலவர் தமது வைபவமாலையில் வசனரூபமாகப் புகுத்தியிருக்கின்றார் ஆதலால் இது அவர் காலத்துக்கு முற்பட்டதெயாம். அவர்காலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு மட்டும் முந்தியதாகக்கூடிய இக்கவி கைலாய மாலை இயற்றப்பட்ட காலத்தில் வழங்கியதாயின், புவனேகவாகுவை முதலாம் சிங்கையாரியனின் போரமைச்சனாகக் காட்டிய கைலாய மாலையுடையார் அவன் நல்லூர்க் கந்த வேட்குக் கோயில் புரிவித்தமையையும் தமது நூலில் புகுத்தாது விடார். ஆதலால் கட்டிய தனிக்கவி முத்துஇராசக் கவிராயருக்கும் மயில்வாகனப் புலவர்க்கும் இடைப்பட்ட காலத்திற்றான் எழுந்ததென முடியும். இனிக்கவியில் காட்டியபெயர்கள் பிழையாயினும் ஆண்டுக் கணக்கு விசேடஞாபகத்துக்குரிய ஓர் சம்பவத்தைப் பற்றியதாலால் கர்ண பாரம்பரியமாய் அறியப்பட்ட உண்மையாண்டாகலாம். அங்ஙனமாயின் அவ்வாண்டுயாது எண்ணூற்றெழுபது என்பது 878 அன்று 1000ம் ஆகிய எண்ணும் 170 உம் சேர்ந்த காணக்காகுமெனத் தோன்றும். எண் என்பதை ஆயிரம் என்னும் பேரெண் எனக் கொள்வது எவ்வாறெனில் இத்தனிக்கவி வேறொரு கவியை அனுசரித்துச் செய்யப்பட்டது. அக்கவியில் எண் என்பது பேரெண்ணையே குறிக்கு மென்பர். அதுவும் பின்வருவது.

எண்ணிய சகாப்த மென்ணூற் றேழின் மேற்சடை யன்வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்ன
பண்ணிய இராம காதை பங்குனி அந்த நாளில்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே.

இக்கவியிற் சொல்லிய எண்ணூற்றேழு எண் ஸ்ரீ 1000+187 எனநின்று சகாப்தம், 1107ஆகு மென்றும் அது கிறிஸ்தாப்தம் 1185 ஐக் குறிக்கும் என்றும் இது பிற ஏதுக்களைக் கொண்டு நிச்சயித்த காலத்துக்கு பொருத்தமுடையதென்றும் கற்றோர் கழறுவர். (செந்தமிழ் 111-பக் 178-81) ஆகவே நம் யாழ்ப்பாணத்தனிக்கவி கூறும் ஆண்டு 1000+170ஸ்ரீ1170 என வந்து கிறிஸ்தாப்தம்1248க்குச் சரியாகும் இவ்வாண்டு காலிங்கச் சக்கரவத்தி புலத்தி நகரைவிட்டகன்ற ஆண்டுக்கு (1242) ஆறாண்டு மட்டும் பிற்பட்டது. மாகன் வடதிசை நோக்கிய ஆறாண்டின் பின் யாழ்ப்பாண நகர் நிர்மாணித்து முடிவெய்தியது என்பது மிகப் பொருத்தமடைந்து (யா.வை.வி. 66-67)

இங்கே சுருக்கமாக இவர்கள் கூறியவற்றுக்கு விடையிறுப்பாம் முத்துஇராசர் அரசனை நூலுள்ளும் அமைச்சனை வெளியே தனிப்பாடலாலும் பாடி இருக்கிறார். இரண்டும் கைலாயமாலைதான் அது முத்துராசா கவியமைப்பு. இவர் அச்சுட்டிய தனிக்கவியைப் பற்றி முற்றிலும் விளங்கவில்லை. எண்ணூற்றெழுபது என்னும் எண்ணுக்கு அதாவது அத்தொகைக்கு வேறு தொகையைப் பொருள் கற்பிக்கிறார்.

ஒருவெள்ளிபாடலோடு இலக்கியசகாப்தம் என்னும் செய்யுளை ஒப்பிடுகிறார். அது கூடாது. வெள்ளிபாடல் என்று இவர்க்கு விளங்கவில்லை. வெள்ளிபாடலாவது என்னை? இராமாயணம், பாரதம் அனைய காவியங்களிலே அவ்வக் காவியங்களைப்பாடிய புலவர் பாடலல்லாமல் வேறும்சில பாடல்களும் இப்பொழுது காணப்படுகின்றன. அவைகள் அப்பாடல்களைப் பிரதிபண்ணி வந்தவர்கள் அவ்வப்பாடல்களின் போக்கை அனுசரித்துப் பாடியிட்டவைகள் என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் அவைகள் பாடியவர்களின்வெள்ளறிவை எளிதிற் புலப்படுத்துகின்றன. அத்தகைய வெள்ளிபாடலில் ஒன்றுதான் சு.ஞா.காரர் காட்டும் “எண்ணிய சகாப்தமெண்ணூற்றேழின் அரங்கேற்றினானே” என்றபாடல் அதனைப்பற்றிநன்கு விளங்கவேண்டும் அமைச்சர் புவனேகவாகு இலகிய சகாப்தம் 870ல் (அதாவது எட்டு நூற்றாண்டும் 70ம் சேர்ந்த ஆண்டில்) நல்லூர்த்தலை நகரையும் கந்தசுவாமி கோயிலையும் கட்டியிருக்கிறான் என்று கைலாய மாலையில். சொல்லப்பட்டிருக்கு இதனால் அமைச்சரின் அரசனான சிங்கையாரியனும் இந்த எண்ணூற்றெழுபதாம் ஆண்டில் உள்ளவன் தான் நிற்க.

வண. க.ஞா. கலிங்கமாகன் கி.பி 1248 ஆண்டு யாழ்ப்பாணத்து (எங்கேனும்) இத்தலைநகரைக் கட்டினான் என்ற தன்பிழையான கோட்பாட்டைச் சொல்வான் கருதி இந்தப்பாட்டில் வந்த எண்ணூற்றெழுபதுக்கு 1170 தான் பொருள் என்றும் இப் பாடல் கம்பர் காலத்தைப் பற்றி நிச்சயிக்கவல்ல “எண்ணிய சகாப்தம் எண்ணூற்றேழின் மேல்சடைநன் வாழ்வு” என்றபாட்டைப் பின்பற்றிப் பாடியிருக்கென்றும் இங்கே 870க்கு ஃ 107 என்றும் அது கி.பி. 12ம் நூற்றாண்டு ஆதலால் கம்பன் காலத்துக்குச் சரியென்றும் கூறி அந்த எண்ணூற்றெழுபதை 1170 என்று பொருள்பண்ணி அது கி.பி. (1170+78) 1248 ஆகும் அது கலிங்கமாகன் யாழ்ப்பாணம் வந்த ஆண்டை நிச்சயிக்கக்கூடியது என்கிறார். இவ்விடத்திலே இப்பாடல்களுக்குப் பிற அறிஞர்கள் பொருள்பண்ணிய வகையை அறிதல் அவசியம்.

செந்தமிழ்ப் பத்திராசிரியர் ரா. இராகவஐயங்கார் செந்தமிழ் தொகுதி 3ம் பக்கம் 177-181ல் கூறுவதாவது “எண்ணியசகாப்த மெண்ணூற்றேழின் மேல்சடையன்வாழ்வு அரங்கேற்றினானே” என்பதனால் கம்பர் இராமாயணம் அரங்கேற்றிய காலம் 807என்று கூறுவதால் சகாப்hம் 807 என்பது கி.பி. 885 ஆகும். அது விக்கிரமன் காலத்துக்கு நெடுந்தூரமானது. அங்ஙனமாயின் அது விக்கிரமன் காலத்துக்கு நெடுந்தூரமானது. அங்ஙனமாயின் அது ஒட்டக்கூத்தர் காலமுமன்று கூத்தர்காலமுமன்றாயின் சங்கரன் காலமுமன்று. சங்கரன் காலமுமன்றாயின் சடையன் சேதிராயன் காலமுமன்று. சடையன் சேதிராயன் காலமுமன்றாயின் கம்பர் காலமுமன்று. ஓரங்கல் உருத்திரன் காலமும் இஃதன்றால் கூறவேண்டா இங்ஙனமே கம்பர் காலத்தவராகத் தெரியப்பட்ட வேறுபவர் காலங்களுக்கும் கி.பி. 885 பொருந்தாதலின் அது கம்பர் காலத்துக்குப் பொருந்தாதென்பது ஒருதலை. மேற்காட்டிய பிரமாணங்களாங் தெளியப்பட்ட கம்பர்காலத்தோடு பொருந்த வைத்து நோக்கின் ஷெ செய்யுள் பாடம் பிழைத்த தென்றேனும் வேறோர் பொருளடையதென்றேனும் கருதப்படும்” என்பது. அப்பால் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் கூறுவதாவது “எண்ணிய சகாப்hம்” இச்செய்யுள் இராமாயணப் பிரதிகளில் காணப்படும் ஒரு தனியன். இங்கே சகாதம் எண்ணூற்ழெற என் வருதலால் கி.பி.885ல் கம்பர் தனது காவியத்தை இயற்றினார் என்று வெளியாகிறர்… இம் முடிபு ஆராய்ச்சியால் நன்கு தெரியப்பட்ட சிலகால வரையறைக்குப் பொருத்தமின்றிச் சரித்திர மடிபுகளைப் புரட்டிவிடுகின்றது. இதனால் சோழ அரசர் பெருமையுற்று விளங்கியதற்கு முற்பட்ட காலத்தில் இவர் வாழ்ந்தனர் என்று துணிய நேரிடும். இவைகள் முற்றும் அசம்பாவிதமாம். வைணவசமய சரித்திரத்துக்கும் தமிழ் இலக்கிய சரித்திரத்துக்கும் தமிழ் நாட்டுச் சரித்திரத்துக்கும் இச் செய்யுள் முரண்பாடாக உள்ளது. இக் காலணங்களால் இத்தனியன் சான்றாகக் கொள்ளத்தக்கதன்று. செந்தமிழ் 43ந் தொகுதி 1945ம்-46ம் ஆண்டு கன்.97-98.

இங்கே காட்டிய அறிஞர்கள் எண்ணூற்றேழை 1107 என்று பொருள் பண்ணவில்லை அப்பாடல் நாம் சொன்னவாறுபோல் அவர்களும் சான்றாகக் கொள்ளத்தக்கதல்ல பாடம் பிழைத்த பாடல் என்கிறார்கள் இந்த 870ஐ 1170 என்று பொருள் பண்ணினால்தானே கலிங்கமாகனுக்குப் போகும். அப்படிப் பொருள் பண்ணக்கூடாது. அது பிழை என்றால் கலிங்கமாகனுமில்லை. அவன் வரவுமில்லை. 870தான் பொருள் என்றால் அது சிங்கையாரியனைக் குறிக்கும். அன்றியும் ‘எண்ணூற்றெழுபது என்றது 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிங்கையாரியனைப் பற்றியபாடல். ஆதாரநூல்களாகிய வைபவமாலை கைலாயமாலையில் கலிங்கமாகனைப்பற்றி ஒரு சொல்லுமில்லை எப்படிப்பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிங்கையாரியனும் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிங்கமாகனும் ஒரே புருடனாக இருக்க முடியும்.

ஆகையால் அப்பாடலை அனுசரித்து இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபதுக்குப் பொருள்பண்ணக் கூடாது. அன்றியும் அப்பாடலில் 870 என்ற ஒரு தொகையும் 1170 என்ற மற்றொரு தொகையும் பொருள்பண்ணப்படுகிறதா? அதுபிழை, முத்துஇராசர் போன்ற பெரும்புலவர்கள் வரையறையாகத்தான் சொல்லுவார்கள். ஒரு எண்ணுக்கு ஒன்றுதான் தொகை. அல்லது விலைஎன்க.

இந்த 870 எந்தக்காலத்திலும் எந்தநாட்டிலும் எவ்வௌர்க்கும் அதன் விலை 870 தான் 1170 ஐக்குறிக்கவேண்டுமேல் புலவர் அதனை உணர்த்தும் சொற்பெய்தே பாடியிருப்பர். அப்பெரும்புலவர் இந்த எண்ணூற்றெழுபதை கைலாயமாலை நூற்தலைவனான சிங்கையாரியனைப்பாடியிருக்கிறாரே யொழியக் கலிங்கமகனையல்ல. கலிங்கமாகன் காலம் 13ம் நூற்றாண்டு சிங்கையாரியன் முத்துராசர்காலம் 300 ஆண்டுகளுக்கு முற்படவுள்ள 10ம் நூற்றாண்டு அப்படிக் கலிங்கமாகனைப்பற்றி ஒரு அணுஅளவு செய்தியும் முத்துராசருக்குத் தெரியாதே. நிற்க. இவர்பொருள்பண்ணிய 1170 இல்லையாகவே அதான் கலிஙய்க மாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகக் கொண்ட ஆண்டு. அது இல்லையாகவே கலிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை. அவன் வரவில்லையாகவே வல்லிபுரத்தில் சிங்கைநகரில்லை. சிங்கைநகர் வல்லிபுரத்தில் கட்டியதற்கும் சான்றில்லை. வல்லிபுரத்தில் சிங்கைநகரில்லையானால் கனகசூரியனும் மக்களும் அங்கிருந்து நல்லூரிற்கு வந்து குடியேறவில்லை. நிற்க, கிறிஸ்தாப்தம் 1248 மாகன் புலந்தி நகரை விட்டுவந்த ஆறாண்டுக்கு மாத்திரம்தான் பிற்பட்டது. அதில் குற்ற குற்றமில்லை என்கிறார் அரை மணித்தியாலயத்துக்கிடையேயும் ஒருவன் சரித்திரம் மாறலாம். 2ம் பராக்கிரமவாவால் கலைக்கப்பட்டு புலத்தி நகரைவிட்டகன்றான் மாகன் என்றால் அதாவது அவன் வென்றது 1215ல் ஆட்சி 21 ஆண்டு ஆகவே மாகன் 1236ல் விலகியிருக்கவேண்டும். இப்பிறர் மாகனை 1248ல் தான் யாழ்ப்பாணத்தோடு தொடர்பு படுத்துகிறார். இந்தப்பன்னிரண்டாண்டு முடியும்வரை மாகன் வரலாறென்ன என்று இவர்கள் காட்டவில்லை. பொலன்னறுவையை விட்டு அகன்ற மாகன் யாழ்ப்பாணத்துக்குத் தான்வரவேண்டுமா? அவன் வேறெங்கேனும் போயிருக்க மாட்டானா அல்லது இறந்திருக்க மாட்டானா? அவன் யாழ்ப்பாணம் வந்ததற்கு என்னசான்று. ஒன்றும் இவர்கள் அதன் சார்பாகக் காட்டப்படவில்லையே. மாகன்தான் யாழ்ப்பாணத்தலைநகரைக் கட்டினான் என்று சொல்ல ஆசையுள்ள வேல் சிங்கையாரியன் கட்டினான் என்று சொல்லும் மாலைக்கூற்றுக்களை பிறமுடிபுசுட்டும் நற்சான்றுகொண்டு மறுக்க. அப்பால் கலிங்கமாகன் கட்டியதாக அத்தாட்சிப்படுத்தும் சான்றைக் கொண்டு அக்கூற்றை நிறுவுக. இரண்டு சான்றுமில்லையேல் நிரூபணமாகாது. ஊகச்சான்றொன்று பேசுவதுபிழை. காட்டுயானை நாட்டுக்குள்ளே வந்ததை அத்தாட்சிப்படுத்திப் போட்டு அதுபடுத்த இடம் போனபாதை, முறிந்த மரங்கள் என்பனவற்றின்மேலே யூகம் செய்து கொள்க. யானை காட்டுக்குள்ளே நுழைந்ததற்கத்தாட்சி இல்லையேல் அனைத்தையும் விட்டொழிக. மாகன் யாழ்ப்பாணம் வரவில்லை என்க. எனவே அம்மாலை நூல்களுக்கு மாறாக இச் .செ.இ.காரர் சு.ஞா காரர் சொன்னடி நல்லூரைச் செண்பகப்பெருமாள் கட்டவில்லை என்றும் வல்லிபுரத்தில் சிங்கைநகரில்லை என்றும் தெரிந்துகொள்க.

18. சிங்கை ஆரியகுல மன்னரும்
நாம ஆவலியும்
யா. வைபவ மாலையில் (ப.32-34) சிங்கை ஆரியமகாராசா அல்லும் பகலும் கைலாய நாதர் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு நல்லூர்க் கயிலையில் நெடுங்கால மிருந்தரசாண்டபின் தன்குமாரனாகிய குலசேகரசிங்கையாரியனுக்கு முடிசூட்டி வைத்துச் சிவபதஞ்சார்ந்தான்.. இவர் சிங்கையாரியனை முதல் அரசனாக வைத்து அட்டவணை தந்துள்ளார். தானியேல் யோன் அவர்களும் இச்சிங்கையாரியனையே முதல் அரசனாக வைத்துத் தன்நூலை (யா.ச. பக்கம் 1.18-21) எழுதியுள்ளார். ஆனால் யா:வை. லிகாரர்கலிங்க மாகனை (காலிங்கனை) முதல் அரசனாக வைத்து இச்சிங்கை ஆரியர் அரசர் அட்டவணையை (பக் 80) எழுதியுள்ளார். செ.இ.யா.சகாரரும் (ஷபக் 46-52) இக்கலிங்கமாகனையே முதல் அரசனாக வைத்து இவ்வட்டவணையை எழுதியுள்ளார். இவர் யு து (பக்.370) நூலிலும் அவ்வாறே கலிங்கமாகனை முதல் அரசனாக லைத்து அட்டவணையை எழுதியுள்ளார். இங்கே எமது முக்கிய கேள்வி. அவ்வரசர் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள சிங்கை ஆரிய அரசர்கள் கலிங்கமாகன் பரம்பரையா? சிங்கையாரியன் பரம்பரையில் வந்தவர்களா? என்பதே. அவர்கள் சிங்கையாரிய மன்னர் பரம்பரையே. அவர்கள் பெயரிலே அவ்வுண்மை அமைந்திருக்கே அஃதென்னை? வந்த ஆரியன் இங்கே சிங்கைஆரியன் ஆகிவிட்டான். அவன் பெற்றபிள்ளை அவன் மகன் என்பது போதரகுலசேகரன் என்னும் அவனுக்கிட்ட இடுகுறியும் சேர்த்து குலசேகர சிங்கையாரியன் என்று பெயர் பெறுகின்றான். அஃதாவது தந்தை தானே மைந்தர்க்கும் பெயர் வைப்பது வழக்கம். அதன்படி அவன் தன்மைந்தனுக்குக் குலசேகரசிங்கையாரியன் என்று பெயர் வைத்தான். என்க.

இப்பெயரீட்டுமுறை இவர்தம் பின்வரும் ஏனையோர்க்கும் ஒக்கும் இப்பரம்பரைப் பெயர் அமைப்பைக் கொண்டே இவன் முன்னவன் சிங்கையாரியன் என்று தேர்ந்துகொள்ளலாம். அங்கனே இப்பெயர்கள் சிங்கையாரியன் பரம்பரையினர் பெயரென்று தேர்ந்து கொள்ளலாம். இங்கே மேற்கட்டிய நூலார் அக்கைலாயமாலை நூல்களுக்கு மாறாகக் கலிங்கமாகனின் பெயருக்குக்கீழே இப் பரம்பரையினர் பெயரையும் அட்டவணைப்படுத்திப் போராட்டர்கள். அஃது பிழையே. ஆகையால் அக்கலிங்கமாகன் பெயரை நீக்கிச் சிங்கை ஆரியனையே குல முதல்வனாக வைத்து அப்பெயர் அட்டவணையைத் திருந்தியவடிவில் இங்கே தருகிறோம்.

1. சிங்கைஆரியன் (விஜயகூளங்கைச்சக்கரவர்த்தி)
2. குலசேகரசிங்கையாரியன்
3. குலோத்துங்கசிங்கை ஆரியன்
4. விக்கிரமசிங்கையாரியன்
5. வரோதயசிங்கையாரியன்
6. மார்த்தாண்ட சிங்கைஆரியன்
7. குணபூஷண சிங்கையாரியன்
8. வீரோதய சிங்கையாரியன்
9. ஜெயவீர சிங்கையாரியன்
10. குணவீர சிங்கையாரியன்
11. கனக சூரிய சிங்கையாரியன் கி-பி 1440 – 1450
(இதன்பின்னர் செண்பகப்பெருமாள் படைவரவு)
(யா.வை.வி.பக். 74-80)

சிலர் கைலாயமாலை வைபவமாலை நூல்களுக்குமாறாகவும், முன் நாள்களில் நடந்துமுடிந்த உண்மைக்கு மாறாகவும் சிங்கையாரியன் காலமான கி.பி. 948ல் இருந்து அரசர் ஆட்சிக்காலத்தைக் கணக்குப்பண்ணாமல் கலிங்கமாக் காலமான 1170ல் இருந்து கணக்குப் பண்ணியும் ஒவ்வொருவர் ஆட்சிக்காலத்தையும் குறைத்து எழுதி இருக்கிறார்கள். இங்கே செண்பகப்பெருமாள் படைவரவு வரைக்குமுள்ள அரசர் அட்டவணைதான் காட்டியுள்ளோம். இங்கே ஆதிச் சிங்கையாரியனையும் அவன்மேற் சொன்ன 948ஐயும் எடுத்துக்கொண்டு கணக்குப்பார்த்தால் (அக்கணக்கில் பூரணமாக ஆட்சிநிறை வேறமுந்திக் கனகசூரியன் ஆட்சி நின்றுவிட்டதால் அவனை விட்டிட்டு) மொத்தம் 948-1440ம் ஆண்டுவரை 492 ஆண்டுவரை 10 அரசர் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. இதனைப் பத்துப்பேருக்குப் பங்கிட்டால் ஒருவருக்குச் சராசரி 49.2 ஆகிறது இது ஒருவன் ஆட்சிசெய்யும் கணக்குக்குக் கூடவாகிறது. இது ஒருவர் கணக்கிற்கதிகம் என்னையெனில் இராச்சியவேலை மறுவேலை போவன்று இராசகுமாரனுக்குப்படிப்பும் வேண்டும். போர்ப்பயிற்சி முதலியனவும் வேண்டும். ஆகையால் அவன் முடிசூடப்படும் வயது முதலியனவும் வேண்டும். ஆகையால் அவன் முடிசூடப்படும் வயது 30 வரை ஆக இருக்கவேண்டும். அப்பால் அவன்தன் இராச்சிய பாரத்தை மகனுக்கு முடிசூட்டி ஒப்படைக்கும் காலம் 60ம் வயசுவரை ஆகவேண்டும். எனவே ஒருவர் ஆட்சிக்கு நாம் கணக்குப்போடும் தொகை 30 ஆக முடிகிறது. இம்முடி சூட்டும் மரபோ வழக்கமோ முந்தையோர் முறையைப்பின்பற்றி மைந்தன் வழி மைந்தனாக நிகழுமாதலால் அவ்வகையிலும் இது சரியே.

அம்முப்பதின்படி இந்த 492 ஆண்டுகளுக்கும் 492ஐ 30ல் வகுக்கப் 16 பேர் வரை இக்கணக்கில் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறாhகள். மேலே அட்டவணையில் 10 பேர்தான் தந்திருக்கிறார்கள் 6பேர் மன்னர்கள் வரை இல்லை. ஆனால் 35 வருட ஆட்சி ஒரு மன்னனுக்கு போடலாம் என்பாரும் உண்டு. அவர்கணக்குப்படி பார்த்தால் 492ஐ 35ஆல் வகுக்க 14 சொச்சம் வருகிறது. ஆகையால் இக்கணக்கின்படி 14பேர் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் இங்கே 30 படி 6 பேர் இல்லை. 35பேர்படி 4 பேர் இல்லை. ஆகை மேற்படி அரசர் இங்கே கண்ட கணக்கின்படி 4, அல்லது 5 அல்லது 6 பேர் இல்லை.

இஃதென்னை இவ்வளவு வரையறவாகச் சொல்லுகின்றீர் என்பீரேல் இஃதுள்ளங்கை, நெல்லிக்கனி, எவ்வாறெனின் 948 என்னுந் தொடக்க ஆண்டு கைலாய மாலையால் உறுதிப்படுத்தப்பட்டது. 1440 என்னும் இறுதி ஆண்டு மகாவம்சம் குயிற்றூது. என்னும் சிங்கள நூல்களாலும் வைபவமாலையின் ஆமோதிப்பாலும் பெறப்பட்டது. இன்னும் இஃதுறுறியாமாறு எங்ஙனமெனின் காட்டுதும்.

கி.பி. 1302 வரை வாழ்ந்தவனாகக் கருதப்படும் வரோதயன் ஆதிவிஜய கூழ்கையனின் பின்வந்த அவனது 5ஆவது தலைமுறையினன் எனவே வரோதயன் உட்பட விஜயகூளங்கையன் தொடங்கி வரோதயன், விக்கிரமன், குலோத்துங்கன், குலசேகரன், விஜயகூழங்கையன் என ஐவர் பேசப்பட அந்நூல் செகராச - கேகரமாலை சிறப்புரைகாரர் வேந்தனும் கோவுமாக இவன் முன்னவர் 11 பேரைச் சொல்லியுள்ளனர். இஃதென்னை? அப்பாயிரகாரர் வரோதயன் சிறப்பைப் பாடுவான் புகுந்து அவன் முன்னோர் சிறப்பையும் அவனுக்குப் பாடி அணி செய்வான் செய்தனர். எனவே பெயர் அறிந்தார் ஐவர் பெயர் அறியாதோர் அறுவராக இவ்வறுவரையும் பிறர் இதுவரை எடுத்துக் காட்டவில்லை. இவ்வறுவரும் விஜயகூழங்கைக்குப் பின்னவரும் வரோதயனுக்கு முன்னவராவார். எனவே இனிமேல் விஜயகூழங்கைக்குப் பின்னும் வரோதயனும் முன்னும் உள்ள நாம 6 பேரைச்சேர்த்துச் சிங்கை ஆரியர் அரசனுடன் ஆவலியைக் கூட்டிக் கொள்க. அவ்வறுவர் பெயரும் பாயிரத்தில் சொல்லப்பட்ட வேந்தன். கோவென்று பொதுப் பெயர்களால் தெரியப்படுகிறதன்றி அவர்கள் சிறப்புப் பெயர் சொல்லப்படவில்லை.

ஆதிச்சிங்கை ஆரியன் தொடக்கம் சங்கிலி குமரன் இறுதியாக இருபதின்மாவரை ஆட்சிபுரிந்திருக்கின்றனர். ஆதிச்சிங்கையாரியன் தொடக்கம் கனக சூரியன் முதல் ஆட்சிபுரிந்த காலம்வரை நாடோ நகரோ எந்த மாற்றான் படை எடுப்புக்கும் இலக்காகாமல் இராச்சிய பரிபாலனம் போயிருக்கு இப்பிரிவு 1ம் பிரிவு அப்பால் சிங்களப் படை எடுப்புத் தொடக்கம் போர்த்தர்படை எடுப்பு வரையும் உள்ள காலம் இரண்டாம் பிரிவு. போர்த்தர் படை எடுப்புத் தொடங்கிகடைசி அரசன் வரையுமுள்ள காலம் 3ம் பிரிவென்றுங்கொள்க.

முன்னர் காட்டப்பட்ட தமிழ் அரசர் 1-ம் பிரிவினர்
இரண்டாம் பிரிவில் அமைப்பவர்கள்
தான் செண்பகப்பெருமாள் ஆட்சியின்பின் அரசாண்டவர்கள். அவர்கள்
கனகசூரியன் கி.பி. 1467
பரராசசேகரன் 1478
சங்கிலி கி.பி. 1519
3ம் பிரிவிலே போத்துக்கேயர் மேலாட்சியிலே அமைவோர்
புவிராசபண்டாரம்
காசி நயினார்
பெரியபிள்ளை
2ம் புவிராச பண்டாரம்
எதிர் மன்ன சிங்கம்
அரசகேசரி
சங்கிலி குமரன் (யு. து பக் 370-374)
இவர்கள் 1658 வரையும் சுதந்திரமாக ஆட்சி பண்ணினர். அப்பால் போர்த்துக்கேயர் ஆட்சியின் கி.பி. 1658 வரையும் நிகழ்ந்தது.

சோழ குமாரன் ஆதிச்சிங்கையாரியன் தான் கி.பி. 948ல் அத்தலைநகரைக் கட்டினான் என்று நாம் சொல்லுகிறோம் இல்லைக் கலிங்க மாகன்தான் 13ம் நூற்றாண்டில் அத்தலைநகரைக் கட்டினான் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இது பிழை என்று விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் சொல்லும்படி சிங்கை ஆரியரின் 300 ஆண்டு சரித்திரம் இல்லை. 300 ஆண்டு முற்பட்ட பெருமையும் இல்லை. இது மட்டுமல்ல கலிங்கமாகன் வந்ததற்கொ வாழ்ந்ததற்கோ தலைநகர்கட்டியதற்கோ செங்கோல் செலுத்தியதற்கோ எந்தச் சிறுவகையான ஒரு துப்பும் துலங்கவில்லை. ஆகையால் அவனல்ல இம்முதல்வன். வைபவமாலை கைலாயமாலை இவனைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

முன்னவன் சிங்கையாரியன் என்னும் பெயரை உடையோனாய் இருந்ததாலேதான் அவன் பின்னவர் எல்லாம் அவ்விடுகுறிப்பெயருடன் சிங்கையாரியன் பெயரையும் சேர்த்து (குலசேகர சிங்கையாரியன் என்றாற் போலும் அழைக்கப்படலாயினர். (முன்னவன் மாகனாயின் அம்மாகன் பெயரையும் சேர்த்துக் குலசேகரமாகன் என்றாற் போலும் அழைக்கப்பட்டிருப்பர். அன்றோ! மாகன்பெயர் அப் பரம்பரையிற் என்றோறொடரவில்லையே.)


19. சிங்கைஆரியனும் (விஜயகூழங்கைச்சக்கரவர்த்தி)
கலிங்கமாகனும் வேறுவேறு புருடர்கள்
யா.வை.வி காரரும் யா.ச. காரரும் பெரும்பிழையை விட்டுச் சிக்கலை விளைவிக்கிறார்கள். இவர்கள் கைலாயமாலை வைபவமாலையிற் சொல்லப்பட்ட சிங்கையாரியனும், பொலநறுவையை வென்று பின்னர் 2ம் பராக்கிரமபாகுவால் கி.பி. 1236ம் ஆண்டு வரை துரத்தப்பட்ட கலிங்கமாகனும் ஒரேபுருடன் என்கிறார்கள். யாம் அவர்கள் இரண்டு வேறுபுருடர்கள் என்கிறோம். முதற்கண் தம் கோட்பாட்டுக்காக அவர்கள் எழுதிய கூற்றுக்களைத்தருவாம்.

1. “யாழ்ப்பாண வைபவமாலையில் விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியென்று சொல்லப்படுபவன் அக்கலிங்கமாகனே. ஒருதேசம் முழுவதையும் தன்கீழ் அடிப்படுத்தி ஆளும் திறமைபூண்டாலொழியச் சக்கரவர்த்தியெனும் புகழ்ப்பட்டம் அரசரடையமாட்டார். பாண்டி மழவனாற் கொண்டு வரப்பட்டு முடிசூட்டப்பட்ட கூழங்கையன் இலங்கைமுழுவதையும் வென்று அப்பட்டத்தை ஏற்குந் திறமை தன் காலத்திலேயே பெற்றர் என்பது நம்பும்தரத்தன்று விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியே அவன் நாமம் என்பதற்கு இஃதோர் சான்று ஆகையால் அவன் கூழங்கைச் சக்கரவர்த்தியன்று………. இவனை முதல்யாழ்ப்பாணத்தரசனென மயில்வாகனப்புலவர் எழுதிவைத்த புரட்டுக்கதை” (யா.ச.பக் 49-51)

2. “இருபத்தேழாண்டாய் (1215-1242) இலங்கை முழுவதிலும் தனிச் செங்கோல் செலுத்திய இவ்வாரிய அரசன் (கலிங்க ஆரியனல்ல) சக்கரவர்த்தி என்னும் பெயர் தாங்கியதும் இயல்பே. கலிங்க ஆரியசக்கரவர்த்தி புலத்தி நகரை ஒரு யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த கலையில்….. அங்கு உள் நாட்டுக் கலகம் விளைத்திருந்தமையும் மாகன் களரியிற்றோன்ற அக்கலகம் நீங்கி யாழ்ப்பாணத் தனியரசு அன்னோனால் உறுதியாய் நாட்டப்பட்டமையும் சாலும். இங்ஙனமேமதுரைக்குப் பாண்டிய மழவன் பரிந்து சென்றமையும் அங்கிருந்து செல்வம் துரைச் செழியசேகரன் புதல்வனான சிங்கையாரியன் பெருகுபுகழ் யாழ்ப்பாணப் பேரரசு செய்ய வந்தமையும் மனோராச்சியத்தின் பாற்படுகின்றன. ஜெயவாகுமாண்டபின் மாகன் யாழ்ப்பாண அரசிருக்கையை இனிதாய் நாட்டினான் என்பதுதான் உண்மைப் பகுதி எஞ்சிநிக்கின்றது. கைலாயமாலையானது சிங்கையாரின் செயசிங்கையார்யன் என கூறியதை வைபவமாலை திருத்தி விஜயகூளங்கை ஆரியன் என்றது காலிங்கச் சக்கரவர்த்தியென ஓர் வேனை கைச்சரவையிற்கண்டதை கூளங்கைச் சக்கரவர்த்தியென் அறியாதோர் மயங்கினருமாகலாம். (இது இராசநாயக முதலியாரது சாயான ஊகம்) உள்ளபடி பழைய தமிழ்லிபியில்.

காலிங்க என்றிருப்பது “கூளங்கை, என வருவது மிகச் சுலபமேயாகும். காலிங்கச் சக்கரவர்த்தியே யாழ்ப்பாண அரசு உறுதியாய் நிலை நாட்டப்பெற்ற காலத்தில் கிரித்தீபம் போல் விளங்கிய புகழாழனாதலால் அவன்தான் நம்நாட்டின் முதலாம் ஆரியச்சக்கரவர்த்தியெனக் கொள்ளும் எவ்வாற்றானும் பொருத்தமுடைத்து” (யா.வை.வி. 65-66)

3. இன்னும் இவர் “கலிங்கமாகனுக்கு ஜெயசிங்கையாரியன் என்னும்பெயர் இருந்ததுபோலும். இவனையே வைபாமாலையார் விஜய கூளங்கைச் சக்கரவர்த்தி என்றார் என்க. காலிங்க ஆரியச்சக்கரவர்த்தி புலத்திநகரை யொருவி யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காலையில்…… யாழ்ப்பாணத்தில் தனியரசு அன்னோனால் உறுதியாய் நாட்டப்பட்டமையும் சாலும்” (ஷபக். 65)

4. இன்னும் யா.ச. காரர் கி.பி. 1236ல் தம்பத்தேனியாவை ஆண்ட இரண்டாம் பராக்கிரமபாகுவால் கலிங்கமாகன் பொலநறுவையினின்றும் துரத்தப்பட்டான் என்று மகாவம்சம் கூறும் (யா.ச பக் 51)

கைலாயமாலை தமிழரசனால் செய்விக்கப்பட்டது. வைபவமாலை ஒல்லாந்த அரசனால் செய்விக்கப்பட்டது. இரண்டாம் சிறந்த புலவர்களால் எழுதப்பட்டவை முந்து நூல்களின் முறைப்படி எண்ணிப்புலம் தொகுக்கப்பட்டவை. அவை இன்று யாழ்ப்பாணச்சரித்திரங்களுக்கு ஆதாரமாய் இருப்பவை. அவை கூற்றுள் ஒன்றனில் மனுப்புக் கூறப்புகுங்கால் அவற்றினும். வலியசான்றை எடுத்துக்காட்டி யல்லது கூறக்கூடாது. அன்றியும் அவைகள் எழுதப்படுதற்குபகாரப்பட்ட ஆதார நூல்கள் இப்பொழுது தமக்ககப்படவில்லை என்றும் ஷெ ஆராச்சிக்காரர் தம் வாயால் சொல்லிய இடங்களை மேலே காட்டினோம் அப்படி இருந்தும் அந்நூல்களின் முடிபுகளுக்கு மாறுபாடாக இவர்கள் உரைக்கின்றனர். நிற்க.

இம்மாறுபாட்டுக்கு இவர்கள் ஏதாவதொரு ஆதாரத்தை எடுத்துக்காட்டி இருக்கவில்லை. இவைகூறிய அனைத்தும் தம் வாயாதாரமும் தம்மூகவதாரமும்தான். அம்மாலைநூல்களிலே கலிங்க மாகனைப்பற்றி ஏதாவதொரு சொல்லோ சொல்லியிருக்கா இல்லையே. நிற்க. காலிங்க கூளங்கையானதல்ல கையொன்று கூழையாயிருந்த தனாலேதான் கூழங்கைச்சக்கரவர்த்தியென்று சொல்லப்பட்ட தென்று சொல்லி இருந்தும் (வை.மா.பக் 30)

சாலிங்ககூளங்கை என்றானது என்று சொல்வது முறையானதல்ல. சிங்கையாரியனுக்கு சக்கரவர்த்திப்பட்டம் சொல்லி இருப்பதால் அவன் மாசுனல்ல. அப்பட்டம் பலநாடுகளை வென்றதால் ஏற்பட்ட பட்டப்பெயரல்ல. அது இடுகுறிப்பெயர் ‘மழவராயன் முடி தூக்கிக் கொடுக்க கங்காதரஐயரால் விதிப்படி மகுடமும் சிங்கை யாரிய சக்கரவர்த்தி என்றபட்டமும் சூட்டப்பட்டான்.’ (ஆமு. யா.ச பக் 17)

ஊகம் அவர் முன் பெற்றுள்ள அறிவுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு வகையாகத் தோன்றுவது அது ஆதார நூல்களை மறுத்துரைக்கும் வகைக்குச் செல்லாது ஒருவன் தன் வாழ்நாளின் முற்பட்ட 100 ஆண்டுகளுக்கு (தன்காலம், தன்கர்ண பரம்பரைக் காலம்) முற்பட்டகாலங்களில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஆதாரம் காட்டியே சொல்ல வேண்டும். சக்கரவர்த்தி இங்கே குடும்பப் பெயர். இவர்கள், கலிங்க மாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்து தலைநகர் அமைத்தால் என்று சொல்லுவது இரண்டாம் பராக்கிரமபாகுவால் துரத்தப்பட்டபிறகல்லவா. அப்பொழுது அவன் சக்கரவர்த்தியாக இருந்தானா, ஒண்டியாகவல்லவோ இருந்தான். அவனைச் சக்கரவர்த்தியென்று கைலயமாலைக்காரரோ வைபவமாலைக்காரரோ சொல்லியிருக்கமாட்டார். அவன் தலைநகர் அமைத்தால் அவன்பெயரெடிணைத்தே அச்செய்தியைச் சொல்லி இருப்பார்கள் வைபவமாலையார்க்குப் பாயிரம் பாடினவர் அந்நான்கு நூல்களையும் தேர்ந்து செப்பினான் என்றல்லவா சொல்லியிருக்கிறார். அவர்புரட்சிக் கதையை எழுதியா ஒல்லாந்த மன்னனுக்குக் கூறினார். நிற்க, பெயர் ஒற்றுமை எழுத்தொற்றுமை கொண்டா ஒரு சரித்திர புளிடனை நிச்சயம் செய்வது. பிறப்பால் அவன் பெற்றடைந்த வரலாறு முழுதும் ஒப்புநோக்க வேண்டும். அங்ஙனம் இருவருக்கிடையில் ஒற்றுமை காணவேண்டின், காலம் இடம் வரலாற்று விசேடம் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். சிங்கையாரியன் விஜய கூழங்கையன் பாண்டி மழவன் வேண்டுகோளுக்கு வந்தவன். சோழ நாட்டவன் சூரியகுலத்தவன் ஆரிய இனத்தவன். தமிழ் நாட்டரசர்க்கு திருமுகமனும்பிச் சோழநாட்டில் இருந்தும் குடிமக்களை வருவித்து யாழ்ப்பாணத்தில் குடி ஏற்றினவன். பத்தாம் நூற்றாண்டுக் காலத்தவன். இவன் நல்லூரில் தலைநகர் கட்டிய வரலாறு வை.யா பாடல், இராசமுறை. பரராசசேகரன் உலா என்பவைகளை ஆதாரமாகக் கொண்டெழுதப்பட்ட வைபவமாலையாலும் கைலாயமாலையாலும் சொல்லப்பட்டது. கி.பி.948ம் ஆண்டு வரை உள்ளவன் கலிங்கமாகனே சிங்கையாரியனுக்கு 270 ஆண்டுவரை பிற்பட்டவன் பொலன்னறுவையில் 1230வரை அரசிருந்தவன் அவன் கலிங்கநாட்டவன் கலிங்க நாட்டில் இருந்து பொலன்னறுவைக்கு படை எடுத்தவன். அங்கிருந்து 2ம் பராக்கிரமபாகுவால் கலைக்கப்பட்டவன். சிங்கையாரியன் நல்லூரில் தலைநகர் அமைத்த வரலாறு. வைபவமாலையாலும் கைலாயமாலையாலும் சொல்லப்பட்டது.

கலிங்கமாகன் நல்லூரில் தலைநகர் அமைத்தமை ஒருகுறிப்பாலும் சொல்லப்படவில்லை. இவன் வடஇந்திய கலிங்க நாட்டைச் சேர்ந்தவன். பதின்மூன்றாம் நூற்றாண்டவன். இவன் இலங்கைக்குப் படை எடுத்து வந்து பொலன்னறுவையை வென்று அங்கே அரசியற்றியவன். பிராமணனல்லாதவன் கொடுங்கோலன் இவர்கள் இருவர்களும் வேறுவேறு இடத்தால், காலத்தால், வரலாற்றால் வேறுபட்டவர்கள். வைபவ மாலையால் பலநூல்துணை கொண்டெழுதப்பட்ட விஜயகூழங்கையன் வரலாற்றை தம்மூகம் ஒள்றுமே வன்றுணையெனக் கொண்டு சொல்லும் இவ்வாராய்ச்சிக்காரரின் துணிவு பெருவியப்பே. மறுத்துரைக்கும் இந்த ஊகமும் ஒரேகாலத்து வாழ்ந்த ஒத்தவரலாறுள்ள இருவர் மேல் வைத்துயூகிப்பதாயினும் ஒரு படைமதிப்புண்டு. அங்ஙனம் இல்லார் மாட்டுஇவ்ஊகம் சொல்லாதென்க.

கலிங்கமாகன் 13ம் நூற்றாண்டு படைஎடுத்து வருகாலை பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பிக்கப்பட்ட சிங்கைநகர் இராச்சியம் 13ம் நூற்றாண்டில் பிரபலம்வாய்ந்த சிங்கையாரியமன்னரால் ஆளப்பட்டிருக்கவேண்டும். அதன் வலுமையால் அதனை ஜெயிக்கமுடியாது என்று கண்டமாகன் தன்படையெடுப்பைப் பொலன்னறுவைக் கெடுத்திருக்கவேண்டும். ஆகையால்தான் அவன் பொலன்னறுவையை வென்று அங்கே ஆட்சிபுரிந்தான்.

அன்றியும் இம்மாகன் சரிதம் மறைவு படவில்லையே. தெளிவாக இருக்கே. அவன் பொலன்னறுவைக்கும் படை எடுத்தது அறியப்பட்டதானால் அவன் வடபகுதிக்குப்படை எடுத்ததும் ஆங்கு தலைநகர் அமைத்து அரசு புரிந்ததும் உண்டானால் என் அச்செய்தி மறையப்பட்டிருக்க வேண்டும். ஏன் அம்மகாவம்சம் சொல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் என்னையெனின் வைபவமாலையார் அத்தலைநகர் அமைத்தவளை “திசையுக்கிர சோழன் மகனாகிய சிங்ககேதுவுக்கு மருமகனாகிய சிங்கையாரியன் என்னும் சூரிய வம்சத்து இராசகுமாரன்” என்றும் இவனுக்கு கையொன்று கூழையாய் இருந்ததால் இவனைக் கூழங்கையாரியன் என்றும் விசய கூழங்கைச் சக்கரவர்த்தியென்றும் வரைவாகக் கூறிஇருக்கிறார். இத்துணை வரையறைவுக்குள்ளே ‘காலிங்கன்தான் கூளங்கை’ ஆயது என்று யாரும் சொல்லவில்லையே.

“காலிங்க” கூழங்கையனானதை தள்ளிவைத்துவிட்டு மேலும் கைலாயமாலை வைபவமாலையைத் தொடர்ந்து செல்வோமாக.

வைபவமாலைக்காரர் அப்பிறர் சொல்லும் மாதிரிப் புரட்டுக் கதையொன்றும் பேசவில்லை. பின்வருமாறு தம்முதனூலான கைலாய மாலை சொன்னதையே சொன்னார்.


கைலாயமாலையில்
செல்வ மதுரைச் செழியசேகரன்
மல்க வியன்கவாய் வந்தபிரான்
………………………………….
தென்னன் நிகரான் செகராச சேகரன்
தென்னிலங்கை மன்னவாம் சிங்கையயாரிய தன்னிழையில்
பாண்டிமழவன் பரிந்து சென்று வேண்டிப்
பெருபுகழ் யாழ்ப்பாப் பேரரசு செய்ய
வருகுதி என்று வணங்க என்று சொல்லப்பட்டுள்ளமை
காண்க. (இதுசிக்குநீக்கம்)


சிங்கையாரியனும் கலிங்கமாகனுக்கு உள்ள ஒற்றுமை
வேற்றுமை அட்டவணை
சிங்கையாரியன் கலிங்கமாகன்
1. சிங்கையாரியன் விஜய கூளங்கை சக்கரவர்த்தி 1. கலிங்கமாகன் காலிங்கமாகன்
விஜயகாலிங்கமாகன்

2. சோழகுலத்தவன் மதுரையில் கல்விபயின்றவன் 2. இவன் குhம் தெரியவில்லை.

3. சோழநாட்டில் பிறந்தவன் 3. கலிங்கநாட்டில் பிறந்தவன்

4. இவன் பெற்றார் சோழர் 4. இவன் பெற்றார் கலிங்கர்

5. பாண்டியமழவனால் அழைக்கப்பட்டவன் 5. இவன் தானே பொலன்னறுவைக்குப் படை
எடுத்தவன்.

6. இவன் நல்லூரில் தலைநகர் அமைத்தவன் 6. இவன் வரவில்லை.

7. இவன் இந்தியாவின் தென் பகுதியில் உள்ளவன். 7. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில்
உள்ளவன்.

8. இவன் கி.பி. 948ல் வாழ்ந்தவன். 8. இவன் கி.பி. 1215-1236 வரை
பொலன்னறுவையில் வாழ்ந்தவன்

9. இவன் சக்கரவர்த்தி என்னும் குடும்பப்பெயரைப் 9. இவன் 1236ம்ஆண்டின் பின் ஒண்டியானவன்
பெற்றவன்

10. இவன் மதுரையில் இருந்து அழைத்து 10. இவன் பொலன்னறுவையில் இருந்து
வரப்பட்டவன். கலைக்கப்பட்டவன்.

11. இவன் கையொன்று கூனையானவன் 11. அக்கைக் கூனை இல்லாதவன்


இவை உள்ளிட்ட வேற்றுமை அம்சங்களுள்ள ஒற்றுமை அம்சம் ஒரு அணுவும் இல்லாத சிங்கை ஆரியனையும் கலிங்கமாகனையும் ஒரே புருடர்கள்தாம் என்று சொல்ல எந்தக் குருடரும் முன்வரார். எனவே சிங்கையாரியன் வேறு கலிங்கமாம் வேறாய் உள்ள இரு புருடர்கள் என்க. இவ்விடத்தில் ஒரு பெருஞ்சிக்கல் வெட்டப்பட்டது. இப்பிறர் சிங்கையாரின் காலத்தோடொத்த காலவரையறை கொடுத்து அவனின் (மாகனின்) யாழ்ப்பாணத் தொடர்பை அத்தாட்சிப் படுத்துவிட்டு அப்பால் அவன் வேற்றுமைத் தொடர்பைச் சொல்லாமையாலே அவர் பேச்செல்லாம் தள்ளிவிட வேண்டியவைகளாக்கின்றன.

அன்றியும் இன்னும் ஓர்க. அவன் பெயர் சிங்கையாரிச்சக்கரவர்த்தி, விஜய கூழங்கைச் சக்கரவர்த்தி என்பதில். வரும் அச்சக்கரவர்த்திப் பெயர் அரசனாகி முடிவிக்கப்படும் போதே வைக்கப்பட்ட பெயர். கலிங்கமாகன் வடக்கே (வரவில்லை) வந்தான் என்று வைத்தபோதும், நாடு நகரங்களை இழந்து தலைமை இழந்து ஒண்டியாக வந்தவனைச் சக்கரவர்த்தி என்று சொல்லுவார்களா? கைலாயமாலை அவனை அப்படிப் பாடுமா? அவன் ஜெயவாகுவைவென்றான் என்பதற்கோ ஜெயவாகு இருந்தான் என்பதற்கோ ஆதாரம் ஒன்றும் இல்லை. சிங்கையாரியானுக்குப் பின்வந்த அரசரெல்லார்க்கும் சிங்கை ஆரியன் என்னும் பெயரே தொடர்ந்து குலசேகராசிங்கை ஆரியன் என்பது முதலாகப் பெயர் வந்திருக்கேயன்றி குலசேகரமாகன் என்பதாக வரவில்லையே. எனவே அவ் ஆதி அரசன் விஜய கூளங்கையன் (சிங்கை ஆரியனே என்க).

ஒரே ஒரு விடை. மாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்தான் என்று அத்தாட்சிப்படுத்தும் வரை இவர்தம் கோட்பாடு செல்லாது. அத்தாட்சிப் படுத்த இயலாது. ஆகையால் அவன்வரவில்லை என்பதே முடிபு. வந்தான் என்பதை அத்தாட்சிப் படுத்திய பின்பன்றோ இவர்கள் இந்நியாயங்களைச் சொல்லவேண்டும். நிற்க. இவ்வளவு தூரமாய் யாம் பிறர் கருத்தைத் தொடர்ந்து பேசிவந்தது இளையோர்க்காக இப்பிறர். கலிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததை அத்தாட்சிப்படுத்திய பின்னரும் அவன் வந்து இங்குள்ளாரை வென்றோ வெல்லாமலோ இராச்சியத் தொடர்புகளில் ஈடுபட்ட வரலாற்றை அத்தாட்சிப் படுத்திய பின்னருமன்றோ கைலாயமாலை அவனைப் பாடியது என்றோ வைபவமாலை அவளைச் சுட்டியதன்றோ சொல்லலாம். என்னையெனில் அந்நூல்கள் யாழ்ப்பாணத்துள்ளான் ஒரு புருடன் மேல் அல்லவா சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே அவன் தொடர்பை யாழ்ப்பாணத்தில் வைத்துகாட்டாதவழி. இவர்களின் இக்கூற்றுக்கள் அனைத்துமே செல்லாச் சரக்காகிவிடும். என்னையெனில் மாகன் பொலன்னறுவையினின்றும் துரத்தப்பட்டபின் வழியில் இறந்திருந்தால் வேறும் வகையாக அவன் தொலைந்திருந்தாலும் அவன் மேலே சரித்திரம் எழுதியதாகவல்லவா முடியும். நிற்க, சிங்கையாரியனும் கலிங்கமாகனும் வேறு வேறு புருடர்கள் என்பதை முன் தந்த அட்டவணையால் காண்க.

இவை இங்ஙனமாக, கலிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததற்கும் சான்றில்லை, தலைநகர் அமைத்ததற்கும் சான்றில்லை அமைத்த இடம் காலம் என்றவைகளுக்கும் சான்றில்லை. எனவே வரவில்லை. அங்ஙனம் வராத மாகன் மேலே யாழ்ப்பாணத்துக்கு வந்து நல்லூரில் தலைநகர் அமைத்தவனாகக் கைலாயமாலையாலும் வைபவமாலையாலும் சொல்லப்படும் விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியின் சரிதங்களை ஏற்றி இப்பிறர் எழுதியிட்டனர். அங்ஙனம் எழுதியதோடு விஜயகூழங்கையன் (சிங்கையாரியன்) என்று அந்நூல்கள் சொல்வது இக்கலிங்க மாகனைத்தான் என்றும் தவறாகச் சொல்லியிட்டார் என்க. அத்தவறினால் சிங்கை ஆரியன் காலத்தைச் சொன்ன ‘சகாப்தம் எண்ணூற்றெழுபது’ என்பதை 948ம் ஆண்டு என்று எண்ணாமல் 1248 என்று கலிங்க மாகன் காலத்துக்கு ஏற்க தவறாகவும் பொருள் பண்ணி விட்டனர் இவர்கள் இல்லாத மாகனை இருந்ததாகப் பேசியும் இருந்த சிங்கை ஆரியளைஇல்லை என்று பேசியும் தம்சரித்திரத்தைப் படைத்தனர் என்றறிக.

ஆதிச்சிங்கையாரியனைக்குறித்துக் கைலாயமாலையிற் சொல்லப்பட்ட “எண்ணூற்றெழுபதை எடுத்துக்கொண்டு அதை 1170 ஆகப்பொருள் பண்ணி அத்தோடு 78ஐக்கூட்டி 1248 என்று கண்டு அது கலிங்கமாகன் பொலன்னறுவையைவிட்டு நீக்கிய காலத்துக்கு உத்தேசமாக ஏற்புடைத்து என்றுகண்டு அங்ஙனம் கண்ட மாத்திரையானே யாழ்ப்பாணத்தில் தலைநகர் அமைத்த புருடனையும் அவன் தலைநகர் அமைத்த காலத்தையும் கண்டுவிட்டதாகச் சொல்லுகின்றனர். என்னமுறை தவறிப்போகும் ஆராய்ச்சிப்போக்கு. ஏதாவதொரு சான்றை எடுத்துக்காட்டிச் சொல்லாமல் பிற ஒரு புருடனுக்கு (சிங்கையாரியனுக்குச்) சொன்ன ஆண்டை எடுத்துக் கொண்டல்லவா தாம் கண்டமாகன் ஆண்டைக்கண்டு விட்டதாகச் சொல்லுகின்றனர்.

அது மாகனைச் சுட்டவிலலை சிங்கையாரியனைச் சுட்டித்தர் எழுந்ததென்று நாம் வரையறை செய்யவே அவர் சொல்லும் மாகனைக் காட்டவல்ல ஒரு ஆண்டு குறித்த ஏதாவதொரு சான்றும் இல்லையாயிற்று. அம்மாலையார் எண்ணூற்றெழுபதைத்தான் (800+70) தெரிப்பான் வேண்டித்தான் அவ்வாறு சொற்றார் என்று நிலைநிறுத்தவே மாகனுமில்லை. அவனைச்சுட்டி இவர் சொன்னஆண்டுமில்லை. அவன்கட்டிய தலைநகருமில்லையாயிற்று. இந்த ஆராச்சிவழியில் போய்த்தான் சிங்கையாரியர் தலைநகரத்தோற்றம் பதின்மூன்றாம் நூற்றாண்டென்று கண்டனர் எனவே அக்காட்சி பிழை என்பதைத் தேர்ந்து கொள்க.


20. காலிங்க - கூழங்கை
“காலிங்க என்னும் பதம் கூழங்கையென மாறியது என்று பிறர் சொல்லுகிறார்கள். “கி.பி. 1215ல் கலிங்க விஜயபாகு அல்லது கலிங்கமாகன் என்னும் அரசன் …… இவனே சிங்கை நகர் ஆரிய அரசர்களுக்குள் முதலாவதாக சக்கரவர்த்திப் பட்டமும் கீர்த்திப் பிரதாபமும் பெற்றவனான படியால் விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியெனப் பெயர் பூண்டான். இதனை அவன் பெயர் விஜயகூழங்கைச் சக்கரவர்த்தியெனவும் பாண்டிமழவனால் மதுரையில் இருந்து மொண்டு வரப்பட்ட சோழவரச குமாரனெனவும் அவனால் நல்லூரிலே முடிசூட்டப் பெற்றவன் எனவும் வைபவமாலை கூறும். ‘காலிங்க’
என்னும் பதத்தை மயில்வாகனப் புலவரோ அன்றிப் பின் வந்தவர்களோ எக்காரணத்தாலோ கூழங்கையென மாற்றி விட்டார்கள்.” (யா.ச.பக்.48-59)

“காலிங்க என்றிருப்பது கூளங்கை என வருவது மிகச் சுலபமேயாகும். காலிங்கச்சக்கரவர்த்தியே யாழ்ப்பாண அரசு உறுதியாய் நிலைநாட்டப்பெற்ற காலத்தில் கிரித்தீபம் போல் விளங்கிய புகழாளனதலால் அவன்தான் நம்நாட்டின் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி எனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருத்த முடைத்து” (யா.வை.வி.பக். 65-66)

இவர்கள் இருவரும் ஆராச்சி வரம்பு முறைகளைப் பின்பற்றாமல் இலகியசகாப்தம் எண்ணூற்றெழுபதுக்கு 1170 என்று பொருள்பண்ணிக்கொண்டு அது கலிங்கமாகன் காலத்துக்குச் சரியென்றும் அவனைத்தான் வைபவமாலையார் சொல்லுகிறார் என்றும் சொல்லுகிறார்கள். கையொன்று கூழையானதால் கூழங்கையனென்று பெயர் பெற்றான் என்று அம்மாலையார் சொல்லி இருப்பதை இவர்கள் நோக்கவில்லை கலிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை என்று முன்னர் நிரூபித்துள்ளோம். அப்படியானால் இல்லாத காலிங்கனை வைபவமாலையார் அறியமாட்டார். அவர் கைலாயமாலையாலும் பிறஏதுக்களாலும் அறிந்தபடியே சிங்கையாரியனைப்பற்றிச் சொன்னார் என்றவாறு. இந்த யா. ச. காரர்க்கும் யா.வை. காரர்க்கும் யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்துக்குயிராய் இருக்கும் கைலாயமாலையைப்பற்றி விளங்கவில்லை. விளங்கினால் அதைவிலக்கியிட்டு அதன்மேல் குறை கூறியிட்டும் தம் நூல்களை எழுதார். அதனை ஆதாரம் காட்டி மறுக்கவும் இயலார். வைபவமாலையையும் விளங்குதல் செய்யார். அவைகளுக்கு மாறுபாடாகத்தம் நூல்களை எழுதித் தம்நூல்களைச் சொல்லாக்காசாக்கி விட்டனர். அவைகளை விளக்கி விளக்கம் கொடுக்காதது அவர்கள்மேலே குறையாம். அவைகள் பிழை என்றால் ஆதாரங்கள் காட்டி மறுத்திருக்க வேண்டுமே. வாயாலே குறைபேசினால் அவைமறுப்பாகுமா.


21. மாகன் காலத்துக்கு முன்னரே
நல்லூரில் தலைநகர் அமைந்திருந்தது
நாற்பெருந்தலைவர்களாகிய பாண்டி மழவன், அமைச்சா புவனேகவாகு, சிங்கையாரியமன்னன், முத்துராசக்கவிராசர் என்பவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கைலாயமாலை நல்லூர்த்தலைநகர் கி.பி. 948ல் இலகியசகாப்தம் எண்ணூற்றெழுபதில் அமைக்கப்பட்டதென்று சொல்லியுள்ளது. மாகன் இலங்கைக்குப் படைஎடுத்துப் பொலன்னறுவையை வென்று அரசாட்சி செய்தகாலம் கி.பி. 1215 தொடக்கம் 1236 முடியவுள்ளகாலமாகும். மாகன்படை எடுத்து இலங்கைக்கு வந்தபோது வடபகுதியில் பலம் பொருந்திய இராச்சியம் இருந்தபடியால்தான் பொலன்னறுவைக்குப் படைஎடுத்தான். இல்லையேல் அவன் வடபகுதிக்கே படைஎடுத்திருப்பான் வடபகுதி அவன் படை எடுப்பின் வழியில் அல்லவா அமைந்திருந்தது. அன்றியும் இவ்வுண்மையை இந்நூலில் வரும் பரராசசேகரன் சிதம்பரப் பட்டயம் புகழேந்தியார் சரித்திரத்திலும் அறியலாம்.

பிறரும் சொல்வதாது “புகழேந்திப்புலவர் பாடிய பாக்களி விருந்துபன்னிரண்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இச்சிங்கை நகர் அரசர் சிங்கையாரிய அரசர் எனவும் பரராசசேகரன், செகராச சேகரன் என்னும் பட்டப்பெயர்களையும் விடைக்கொடி சேதுலாஞ்சனை முதலிய வரச்சின்னங்களையு முடையவர்களாயிருந்தார்கள் என அறியலாம்” (செ.இ.யா.ச.பக் 47-48)

முதலாம் பரக்கிரமவாகு இலங்கைச் சக்கரவர்த்தியாய் வருமுன் (அதாவது கி.பி. 1154க்கு முன்) இலங்கையிலே கொடிய பஞ்சம் உண்டாகச் சோழதேசத்திலே இரண்டாம் இராச இராச சோழன் சபையில் இராமாயணம் பாடி அரங்கேற்றிய கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரை ஆதரித்துப்புகழ் பெற்ற சடையப்பவள்ளல் ஆயிரம் கப்பல்களில் நெல்லனுப்பிப்பஞ்சத்தைத் தீர்த்ததற்கு உவந்து சிங்கைக் கரசனாகிய பரராகசேகரன் என்னும் நன்றிபாராட்டிப்பல கவிகளைப் பாடிச் சடையப்ப வள்ளலுக்கனுப்பினானெச் சோழமண்டலசதகங்கூறும் (செ.இ.யா.ச. 48)

ஒரு நாட்டுக்குப் படைஎடுக்குமெவனும் அந்நாட்டிற்குப் படைஎடுக்குமுன் அந்நாட்டின் அரசியலையும் அரசனையும் அவன் படைவலி துணைலிவகளையும் நன்கு ஒற்றர் உளவாளிகள் மூலம் ஆராய்ந்து தனக்கு வெற்றி நிச்சயம் ஆகும் என்று நம்பிக்கை கொண்டபின்தான் அந்நாட்டுக்குப் படை எடுப்பான். தன்வலியும் மாற்றான் வலியும்துணை வலியும் தூக்கிச்செயல்” என்பது பெரியோர் வாக்கு. இவ்வுண்மை மாகனுக்குத் தெரியாமற் போகுமா? கலிங்க நாட்டிலிருந்து வருமவனுக்கு வழியில் அண்மையாக இருந்த இலங்கையின் வடகரையில் இருந்த நல்லூர் நகர்க்குப் படை எடுக்காமல் இன்னும் அனேக மைல் தூரத்திலே தெற்கேயுள்ள பொலன்னறுவைக்கு ஏன் படை எடுத்தான் என்பது யோசிக்கத்தந்தது. சிங்கையரசன் சோழபரம் பரையாகவோ தமிழனாகவோ இருந்தாலும் மாகன் அங்கு படைஎடுக்காதிருக்கலாம். எனவே பன்னிரண்டாம் நூற்றாண்டின் முன்பகுதியிலேயே நல்லூர்ச் சிங்கைநகர் இராச்சிய ஆட்சியைப் புரிந்து கொண்டு சிங்கை நகர் மன்னர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். என்று முடிபு செய்து கொள்க. நல்லூர் நகர் என்றும் சிங்கை நகர் என்றும் பெயர்கள். ஒரு நகரின் இரு பெயர்கள் என்பது பின்னர் விளங்குவாம்.

மாகன் படைஎடுப்பு 1215 என்றால் தலைநகர்த் தோற்றம் 948 என்றால் மாகன்காலத்துக்கு 1215-948ஸ்ரீ267 வருடங்களுக்கு முன்னரே நல்லூரில் தலைநகர் கட்டப்பட்டதென்பதை அறிக. (அப்படியானால் மாகன் நல்லூர்த் தலைநகரைக் கட்டினான் என்பது பிழையல்லவா?) அங்ஙனமாயின் மாகன் வல்லிபுரத்திலே சிங்கைநகரைக் கட்டினான் என்பது சரிதானே என்னின் அங்கே சிங்கைநகரில்லையே. எனவே அதுவும் பிழையாச்சு. கனகசூரியனும் மக்களும் வல்லிபுரத்துச் சிங்கை நகரிலிருந்து திரும்ப நல்லூருக்குவந்து குடியேறினார்கள் என்பதும் பிழை. செண்பகப் பெருமாள் நல்லூர்நகரைக் கட்டினான் என்னலாமோ எனின் அதுவும் பிழையே. அவன் படை எடுப்புக்கு முந்தியே அங்கே தலைநகர் இருக்கே இருந்தபடியால்தானே அவன் அங்கே படை எடுத்தான்.


22. வல்லிபுரத்துள்ள தலைநகர்
சிங்கைநகரல்ல
இஃதென்ன! யா.ச. சாரரும் யா.வை. விகாரரும் ஒருமுகமாக வல்லிபுரத்துள்ளது சிங்கை நகர் என்றல்லவா சொல்லுகின்றனர். என்னின் ஆம் அவர் அறியாமற்றான் சொன்னார். அவ்வுண்மை தெரிக்குவாம். வைபவமாலையார் உக்கிரசிங்கன் செங்கடகநகரிக் தன்தலை நகரைமாற்றியிட்டான். என்றது பிழை என்றும் செங்கடக என்பது செங்கடகல என்பதன் நாமந்தான் என்றும் அச்செங்கடகல என்பது கண்டியென்றும், கண்டி அப்பொழுது உக்கிரசிங்கன் ஆட்சியிலில்லை ஆனமையால் வைபவமாலையார் அவ்வாறு சொன்னது. பிழை என்றும் உண்மையில் அது சிங்கை நகரம் என்றும் முன்னர் இப்பிறர் சொல்லியுள்ளார். ஆகையால் அத்துணிபினை நோக்குவாம்.

அங்ஙனம் நோக்கும் வகையில் அந்நகர் பற்றிபிறர் சொன்ன கருத்துக்களை முதலில் ஒப்படைக்கின்றோம். வல்லிபுரத்தில்தான் சிங்கை நகர் உண்டாயிருந்தது என்று முன்னர் வெளியான சிலநூல்களி; குறிப்புக்களைத்தான் பின்னர்தோன்றிய நூல்களும் அனுவதித்துரைத்திருக்கின்றன.


சிங்கை நகரும் சிலாசாசனமும்
இக்கருத்தை முதன் முதலாகத் தாங்கி வெளியான நூல்கள் “ஏன்ஜென்ட் யாவ்னா” யுNஊநுNவு துயுகுகுNயு “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் இவைமுறையே ஆங்கில தமிழ்நூல்களாகும். இவைஇரண்டும் இராசநாயக முதலியாரால் எழுதப்பட்டவைகள் இக்கருத்தை ஆமோதித்த பொறுப்பு வண. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களைச் சார்ந்ததே. இனி அவர்கள் கூறிய அச்சரித்திரக்கூற்றுக்களையும் இங்கே காட்டுவாம். திரு. முதலியார் அவர்கள் ஏன்ஜென்யாவ்னா என்னும் ஆங்கிலநூல் 364ம் பக்கத்தும், யாழ்ப்பாண சரித்திரம் என்னும் தமிழ்நூலில் 68ம் பக்கத்தும் கேகாலைப்பிரிவில் உள்ள கொத்தகமத்துச்சாசனம் என்றொரு சாசனத்தை எடுத்துக் காட்டி அச்சிங்கை நகரை இன்ன இடத்தினது என்று துணிபு செய்கின்றார்.


‘சேது’ “கங்கணம்வேற் கண்ணினையாற் காட்டினாம் காமர்வளைப்
பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் – பொங்கொலிநீர்ச்
சிங்கைநகராரியனைச் சேரா வணுரேசர்
தங்கள்மடமாதர்கள் தாம்” என்பது (யு. து. P. 364)

இந்நூலில் இவர்கள் மேலும் சொல்லும் இப்பகுதியின் தமிழாக்கமாவது. “சிங்கைநகர் அல்லது சிங்கபுரம் யாழ்ப்பாணத்தின் கிழக்குக் கரையிலே வல்லிபுரத்திலே கட்டப்பட்டதென்பத மிகத்தெளிவு. ஆரியச்சக்கர்த்திகளுக்குப் பிறகுதான் அதுபிரபல்யம் அடைந்தது. உக்கிரசிங்கன் தன் தலைதகரைக் கதிரைமலையில் இருந்து சிங்கைநகர்க்கு மாற்றினான். சிலவிற்பனர்கள் நல்லூர்தான் அச்சிங்கைநகர் என்று சொல்லத் தெண்டிக்கிறார்கள். ஆனால் கொத்தகமத்துச் சாசனத்தால் அச்சிங்கைநகர் அலையெறிந்து சப்திக்கும் ஆழியின் அருகேஅமைந்துள்ள ஒருபட்டினம் என்று அறியலாம். நல்லூர் ஒருவாவிக்கரையிற் கூடவில்லை. உக்கிரசிங்கன் கதிரைமலையில் இருந்து தன் தலைநகரைச் சிங்கைநகர்க்கு மாற்றியுள்ளான். ஆதலால் அது நல்லூரின் வேறானதொன்றென்பது நிச்சயம். அது யாழ்ப்பாணத்தின் கிழக்குக்கரையில் உள்ள ஒரு துறைமுகமுகமாகவும் ஒருவேளை இருந்திருக்கலாம். (யு.து.P. 310, 311) என்பது. அன்றியுமிவர்கள் அந்நகர் சிங்கைநகர் யாழ்ப்பாணத்தின் இராசதானியாய் வந்தபின் சிங்கைநகர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. இப்பெருநகர் அழிந்து மணலால் மூடப்பட்டிருக்கு மிடத்தைப் பருத்தித்துறைக்குத் தெற்கே வல்லிபுரக் கோயிலுக்கண்மையில் இன்றுங் காணலாம். (யா.ச.பக். 10) என்றுங் கூறியுள்ளார். வணசுவாமி ஞானப்பிரகாசர் அவர்களும், முதலியார் சிங்கை நகரைப்பற்றிக் கூறிய கூற்றை அப்படியே ஒப்புக்கொண்டவர்களாய் இவ்வுயிற்பத்திமானின் (திரு. முதலியாரின்) அனுபானப்படி பருத்தித்தறைக் கணித்தாய் மணல் மேடுகள் பொருந்தியிருக்கின்ற வல்லிபுரமே பூர்வகாலச் சிங்கை நகராம் இம்மதம் எனக்குச் சம்மதம் என்கிறார்.

வல்லிபுரத்திலே புரதான தலைநகரம் ஒன்று அழிந்துபட்டுள்ள தென்னுமுண்மை அவ்விடத்தைச் சென்று பார்ப்பாக்கு இன்றும் புலனாகும். ஆயின் அதுசிங்கைநகரமா! அல்லது வேறொரு நகரமா என்பதுதான் அறியவேண்டி நிற்பது. துறைமுகமாகவிருந்தால், இயற்கை யொதுங்குகுடாவுள்ளதாக விருந்தால் கரையருகிலேயிருந்தால். அன்றியும் பழைய நகரத்து அழிபொருட்கள் இருந்தால் அவை சிங்கைநகரை மாத்திரம்தான் குறிப்பிடும் அந்நகரின் சிறப்பி லட்சணங்களா? அல்லது பிற ஒருதுறைமுகநகரையும் குறிக்கவல்ல பொது இலட்சணங்களா? என்றும் அறிதல் வேண்டும். அன்றியும் அச்சாசனம் சிங்கைநகரை ஒருதுணைமுகநகர் என்று குறிப்பிடவில்லையே. நிற்க.

வல்லிபுரத்திலே சிங்கைநகர் உண்டாயிருந்த தென்பார்க்கு உண்மையில் சிங்கைநகர் எப்படிப் பட்டது என்ன இலட்சணங்களை உடையதென்பது விளங்கவில்லை என்பது பின்னர் நிச்சயமாய்த் தெளிவாகிவிடும். இவ்வாராய்ச்சிக்காரர் அச்சாசனத்தை வல்லிபுரத்துடன் சார்த்திக் காணும் காட்சியிலே வல்லிபுரத்திலே சிங்கைநகர் இருப்பதாக அவர்க்கு நிரூபணமாகின்றது. அவற்றின் உண்மைநிலை வெளியாக எல்லாச் சிக்கல்களும் நீங்கிவிடும் ஈண்டு இவ்வுண்மையை விளக்குவாம்.

இச்சாசனத்தாலும் வல்லிபுரத்தில் இவர்கள் எடுத்துக்காட்டிய புராதான கட்டிடம், தானம் என்பனவற்றாலும் வல்லிபுரத்தில் சிங்கைநகர் நிரூபணமாமாறு எவ்வாறு? சிங்கைநகரை வல்லிபுரத்தில் நிரூபிக்கு மாற்றல் மூன்று சான்றுகளாலும் உண்டாதல் வேண்டுமே. அi ஒவ்வொன்றாகவோ எல்லாம் சேர்ந்தோ அந்நிரூபணத்தைக் கொடுக்க வேண்டுமே. அவை ஒன்றிலேயும் அத்தகைய ஆற்றல் இல்லையே. இச்சாசனத்தில் பொங்கொலி நீர்ச்சிங்கைநகர் ஆரியரைச் சேராத அநுராசர் தங்கள் மடமாதர்கள் கங்கணம் வேற் கண்ணிணையாற் காட்டினார். காமர்வளைப் பங்தயக் கையாற்றிலதம் பாரித்தார் என்ற அளவிலே அந்நிரூபணத்தில் என்னபகுதி அல்லது என்னகுறிப்புப்பெறப்பட்டது.

இச் சொற்றொடர்களுக்கும் வல்லிபுரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு சம்பந்தமுமில்லையெ. அக்கூற்றுக்களால் அல்லது. சொற்றொடரால் சிங்கை நகர் எங்கேயுண்டாயிருந்ததென்று விசாரித்துக்கொண்டு வந்தார்க்கு அது இன்ன இடத்தில் இருந்தது என்றதில் ஏதாவது இடக்குறிப்பு அற்பசொற்ப மேனும் பெறப்படுகிறதா? ஏதாவதொரு இடமும் அதில் சுட்டப்படவில்லையே. சிங்கையாரியர் வென்றியை அன்றி வல்லமையைச் சிறப்பித்துச் சொல்லும் வகையிலே அவர்களைச் சேர்ந்து வாழாத அதுராசர் மனைவிமார்கள் கங்கணம் வேற் கண்ணினையாற் காட்டினார்கள். (கங்கணம். கண்ணீர்) கண்ணினையாற் கண்ணீர் சோர்ந்து அழுதார்கள். காமர் வளையலணிந்த பங்கய (தாமரை)க் கையால் திலதம் (எள்ளு) இறைத்தார்கள் என்கின்றது. (அதாவது கணவனை இழந்து கைமைக்கடன் செய்தார்கள் என்று சொல்லும் வகையிலே சிங்கையாரியரது வெற்றியைச் சிறப்பித்துக் கூறுகின்றது) அதுசிங்கைநகரைச் சுட்டிக்பேசவந்ததன்று சிங்கைநகராரியரைச் சுட்டிப்பேசவந்தது. இலங்கையில் உள்ள எந்த இடத்துக்கும் அது பொது. சிங்கையாரியர் முன்னர் எந்தஇடத்தில் வாழ்ந்தார்களோ அந்த இடத்து அவர்கள் மேற்செல்லும் யோக்கியமும் தகுதிப்பாடும்தர் அதற்குள்ளது. சிங்கைநகர் விசேடமாக எந்தஒரு இடத்தில் உண்டாயிருந்தது. என்ற விசாரணைக்கு விடையிறுக்க வல்லனவாயுள்ளகுறித்த அம்சங்களைக் கொண்டு வரவில்லை. எனவே அதனைக்கொண்டு சிங்கைநகர் எங்கே எவ்விடத்தில் உண்டாயிருந்தது என்னும் நகர் விசாரணைக்குப் போகப்படாது@ அதாவது வல்லிபுரப்பெயர் இதில் விதந்து சொல்லப்படவில்லை. இன்னும் என்னையெனின் வல்லிபுரக்கரைச்சிங்கை நகர். வல்லிபுரக்கரைச்சிங்கைநகராரியர் என்று இச்சாசனம் சொல்லியிருக்கவில்லை. எனவே வல்லிபுரத்தானத்துடன் இச்சாசனத்தைக் கூட்டிவைத்துச் சிங்கைநகரை அறியக்கூடிய இயைபும் தொடர்பும் இதற்கில்லை. அற்றன்று வல்லிபுரம் ஒருகடற்கரைத் தானத்தன்றோ, பொங்கொலி நீர் அலையெறிந்து சப்திக்கும் ஆழிக்கரையைக்குறித்து வந்ததன்றோ அவ்வாறாயின் ஏன் அது வல்லிபுரக்கரையைக் குறிக்காது எனவினவலும் எழுமோவெனின்! இலங்கைக்கடற்கரை யெங்கணும் பொங்கொலி நீர்க்கரைதானே! அதாவது அலையெறிந்து சப்திக்கும் ஆழிக்கரை தானே எனவே அச்சிங்கைநகர் வல்லிபுரம் தவிர்ந்த இலங்கைக் கடற்கரையின் ஏதாவதொரு கடற்கரையிலிருந்தாலும் அதைக்குறிக்கும் அச்சாசனம் அவ்வாறுதானே எழ வல்லதாம்.

அன்றியும் இங்கே பொங்கொலி நீர் என்பது நிச்சயமாகக் கடற்கரையைக் குறித்து வந்ததென்று சொல்லுதலும் இயலாதே. என்னையெனின் சாசனத்தைப் பாடிய அவ்வெண்பாக்காரர் அவ்வெண்பாவை “வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே” என்றாற்போல் ஏதாவதொரு கருத்திற்குறிப்புடைப் பொருளாகவும் சொல்லியிருத்தல் கூடுமன்றே. அன்றேல் அச்சாசனக்காரர் நிச்சயமாகக் கடற்கரையைத்தான் கருதிக்கொண்டாராயின் அவ்வாறு ஊர்த்துவான் ஒலி என்பதை நீக்கி அலையென்பதைச் சேர்த்து பொங்கலை யென்றும் சொல்லியிருக்கலாமே. அன்றியும் அச்சாசனகாரர். கடல், கரை, துறை என்றாற்போன்ற சொற்களுள் ஏதாவதொன்றனையுங் கூடச் சேர்த்துச் சொல்லாமல் விட்டாரன்றோ திருச்சீரலைவாய், அலைவாய், அடைகரை என்னும் கடற்கரையைக்குறித்துப் பிற இடங்களில் வந்த தொடர்களையும் இங்கு நோக்கத்தக்கது. எனவே அச்சாசனம் வல்லிபுரக்கடற்கரையைத்தான் குறித்து வந்ததென்று கொள்ள – அதைச்சுட்டி மாத்திரந்தான் வந்ததென்று சொல்ல அற்பமேனும் அதற்குச் சிறப்பான இயைபு இல்லை.

எனவே சாசனத்துக்கும் வல்லிபுரத்துக்கும் தொடர்பில்லையாம். அங்ஙனம் தொடர்பில்லையாகவே சாசனத்தை இவ்வல்லிபுர நிரூபணத்திலிருந்தும் நீக்கிவிடுதல்வேண்டும். அவர்களின் இந் நிரூபணத்தில் சாசனம் நீக்கிக்கொள்ள எஞ்சி நிற்பது வல்லிபுரத்தானமும் அப்பழங்கட்டிடமுமே அவற்றையும் இங்கே கண்டுகொள்வோம்.

இந்நிரூபணகாரர் அசாசனத்தை வல்லிபுரத்தின்மேலே அதனுள்ளும் ஆண்டுள்ள பூர்வகாலக் கட்டிடத்தின் மேலே வைத்து சிங்கைநகரை நிரூபிக்க முனைகின்றனர். எனவே அக்கட்டிடத்தைத்தான் அவர்கள் பூர்வகாலச்சிங்கைநகர்க் கட்டிடமென்று கருதிக் கொண்டார்கள் என்று தெரிகிறது. அன்றியும் அதை அவர்கள் சுட்டிப்பேசியுமிருக்கிறார்கள். அவ்வாறாயின் அவர்கண்ட ஆண்டுக்கணக்கின்படி அச்சிங்கையாரிய மன்னர்கள் கி.பி. 1248 தொடங்கி கி.பி. 1450 வரை 13ம் 14ம் 15ம் நூற்றாண்டுக் காலம் மூன்று நூற்றாண்டைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்தவர் ஆகின்றாரன்றே! அவ்வாறாயின் என்னை! இவர்கள் அச்சிங்கையாரியர் வாழ்க்கைக்குறிப்பை யோபதிவையோ சுவட்டையோ. ஆங்கேயுள்ளனவென்று எடுத்துக்காட்டாதவாறு சங்கிலியன் இருந்தவளவு சங்கிலித்தோப்பு ஆரியன்பெயரால் கட்டப்பட்ட குளம் ஆரியகுளம், பண்டாரம் பெயரினால் கட்டப்பட்ட குளம் பண்டாரக்குளம் அடியார்க்கு நல்லார் இருந்தநிலம் அடியார்க்கு நல்லார்வரம்பு. “சிங்கையாரியசமுகா” (கட்டியத்தில்) என்றாற்போலும் ஒருவாழ்க்கைப்பதிவுகூட அவர்கள் காட்டியிருக்கவில்லையே. அங்கே நடந்த ஒருபோர் வரலாறோ யாதுமோ அவர்கள் அவ்வல்லிபுரத்தில் காட்டியிருக்கவில்லையே – அன்றி அவர்களது ஏதாவது சரித்திரக் குறிப்பும் அவர்கள் அங்கே காட்டியிருக்கவில்லையே அச்சிங்கையாரியர் ஒருவரது ஒரு வாழ்க்கைச்சுவடுகூட அங்கே இல்லை யானால் வல்லிபுரத்திலே சிங்கையாரியர் வாழ்ந்திருக்கவில்லை என்பதுதான் முடிபு. வல்லிபுரத்திலே சிங்கையாரியர் வாழ்ந்தகுறிப்புக் காட்டப்படவில்லையேல் சிங்கை ஆண்டுள்ளது என்னும் நிரூபணத்தில் வல்லிபுரம் இடனாயிருத்தல் இல்லை. வல்லிபுரத்தின் பழங்கட்டிடத்தின் மேல் சாசனத்தை வைத்துச்சிங்கைநகரை நிரூபிக்கமுடியுமேல் பொங்கொலி நீர் அடைகொள்ளக்கூடிய ஒரு கடற்கரையைப்பார்த்து அங்கேயுள்ள பழங்கட்டிடத்தைப் பார்த்து இச்சாசனம் அவ்விடத்தைத்தான் குறித்து வந்ததென்று சாசனத்தை அதனுடன் சாரவைத்து அவ்விடத்திலேயும் ஒரு சிங்கைநகர் எடுக்கலாமன்றே எனவினாவுவார்க்கு இறுக்குமாறென்னை? அவ்வாறாயின் இலங்கையின் கடற்கரையைச் சார்ந்து பலப்பல இடங்களில் பலப்பல எடுக்கலாம் என்பது துணிவாகிவிடுமே. எனவே சாசம் வல்லிபுரத்தைச் சொல்லவில்லை. வல்லிபுரத்தானம் கட்டிடம் முதலியன சிங்கையாரியர் வாழ்ந்தகுறிப்பைச் சொல்லவில்லை. அக்கட்டிடமும் அது சிங்கை நகர்கட்டிடம் என்று (புலப்படுத்தவில்லை) எனவே வல்லிபுரத்தில் சிங்கைநகர் இல்லை என்பதே நிரூபணமாயிற்று. வல்லிபுரத்துள்ள நகரை வைபவமாலை தன்நூலில் சொல்லியுள்ளது. அது சொன்ன செங்கடகநகர் அதுதான் அவ்விடத்ததுதான். அதனை இவ்வாராட்சிக்காரர் புரிந்துகொள்ளாமல் வைபவமாலையே தவறாகச் சொல்லிவிட்டதாகக் கருதி வைபவமாலையைக் கண்டித்து அந்நகர் கண்டியில் உள்ளது. என்று சொல்லிவிட்டு உக்கிரசிங்கன் மாற்றிய மைத்ததொரு தலைநகரமானால் அது நிச்சயமாகச் சிங்கை நகர் என்றும் கருதிவிட்டர். சிங்கைநகர் கதிரைமலையில் இருந்து உக்கிரசிங்கன் மாற்றியமைத்தவொருதலைநகரமானால் அது நிச்சயமாகச் சிங்கைநகராக இருக்க முடியாதென்பது எம் கருத்து. என்னையெனில் சரித்திர நிகழ்ச்சியில் காலம் முக்கியம்.

உக்கிரசிங்கன் கதிரைமலையில் தலைநகர்கொண்டதும் அப்பால் அவன் இன்னொரு தலைநகர்க்கு மாற்றிக்கொண்டதும் ஒருவன் செய்துகொண்ட இருசெயல்கள் எனவே அவன் ஒருவன்தான் காலத்திலேயே அவை நிகழ்ந்தவைகள் உக்கிரசிங்கன் காலம் 8ம் நூற்றாண்டு (யா.வை.மா.பக் 3) சிங்கைநகர்க்கலாம். ஏன்ஜென் யாவ்hக் காரரதும், யாழ்ப்பாணவைபவ விமர்சனக்காரரதும் கருத்துப்படி (யா.வை.விமர் பக்.74-80) 13ம் நூற்றாண்டின் மத்தியபகுதி வரை கொண்டகாலம். எனவே 8ம் நூற்றாண்டில் உள்ள ஒருவன் 8ம் 9ம் நூற்றாண்டைத்தாண்டி 13ம் நூற்றாண்டுவரையும் வாழ்ந்து அக்காலத்திலே உண்டாயிருந்த இவர் சொல்லும் சிங்கைநகர்க்கு மாற்றியிருக்க முடியுமோ முடியாதே. அப்பொழுது இருக்கக்கூடிய நகர் அவன் காலத்ததான செங்கடகநகர் அன்றோ! சிங்கைநகர் அப்பொழுது அங்கே தோன்றவில்லையே எனவே அவன் மாற்றியமைத்த நகர் சிங்கைநகர் என்று இவர்கள் சொல்வது காலத்தவறு கொண்ட தாயும் இருக்கிறது. அன்றியும் அவர்சொன்ன சிங்கைநகர் ஆங்கில்லை என்பது மேலே கண்டுகொண்டாம் அன்றே.

வல்லிபுரத்தில் சிங்கைநகர் நிரூபணமாக வேண்டுமேல் அங்கு காணப்பட்ட பூர்வகட்டிடத்திலே சிங்கையாரியர் வாழ்ந்தமைக்குச் சான்றுக்கள் காட்டப்பட்டிருக்க வேண்டும். அக்கட்டிடம் சிங்கையாரியர் காலத்தைச்கொண்டதாயுமிருக்க வேண்டும். அச்சாசனத்திலே ல்லிபுரமும் அதன்கடற்கரையும் சுட்டிச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அக் கட்டிடத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் சிங்காரியர் காலத்திலுபயோகிக்கப்பட்ட பொருள்களாயிருக்க வேண்டும் அவ்வக்காலத்தில் உண்டான சிற்ப அறிவு நாகரீகம் என்பனவற்றுக்கேற்கத்தான் கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவ்வாறுண்டேல் வல்லிபுரத்தில் சிங்கைநகர் நிரூபணமாம். இவ்வாறு மற்றுந் தலைநகரங்களின் உண்மைகளும் வெளியாக வைபவமாலை கைலாய மாலையின் மாற்றுயர்ந்துவிடும். யாழ்ப்பாணச் சரித்திரச்சிக்கலுந் தீர்ந்து விடும்) நிற்க.

இவ்வாராய்ச்சிக்காரர் தம் தவறு தம்கருத்துப்பிழை என்பவைகளை தாமே விளங்கிக்கொள்ளாமல் சரியாகச் சொன்ன வைபவமாலையைக் கண்டித்தது மகாபெரும் தவறு. இவர்களின் இவ்வாய்வுக் காட்சியால் செங்கடகநகர் வரலாறு மறைந்தது. சிங்கைநகர்வரலாறு பிறழ்ந்தது. நல்லூர் வரலாறும் பிறழ்ந்தது யாழ்ப்பாணச்சரித்திரச்சிக்கல் ஆரம்பமானது. இங்கே இன்னும்சில நுட்பமான விளக்கத்துக்குப் போவாம். உக்கிரசிங்கன் கதிரைமலையை நீங்கி வல்லிபுரத்துள்ள தலைநகர்க்குத் தான் மாற்றினான் என்பதை நாமும் ஒப்புக்கொள்ளுகிறொம் அவர்களும் ஒப்புக்கொள்ளுகிறார்கள் அந்தவகையிலே மாற்றப்பட்டகளம் ஒன்று அக்களத்தில் அமைந்த தலைநகரும் இரண்டாக விருக்கவில்லை ஒன்றேயொன்று. அத்தலைநகரை அதாவது இப்பொழுது அங்கே அழிந்துள்ளதாகக் காட்சி தரும் அத்தலைநகரை நாம் செங்கடகநகரியென்று சொல்ல அவர்கள் சிங்கைநகர் என்கிறார்கள். உக்கிரசிங்கன் காலம் வைபவமாலை கி.பி. 795 என்று சொன்னதை அவர்கள் ஒப்புக்கொண்டு காலத்தை மறுத்து ஒருஆதாரமும் காட்டாமல் தாமே தம்நூலிலே வேறிடங்களிலே சிங்கைநகர் கலிங்கமாகனால் கட்டப்பட்டது. அது கி.பி. 1248ல் வல்லிபுரத்தில் கட்டப்பட்டதென்று எழுதிவைத்துவிட்டு உக்கிரசிங்கன் அச்சிங்கைநகர்க்குத்தான் மாற்றினான். என்று சொல்லுகிறார்கள். இங்கே எட்டாம் நூற்றாண்டில் உள்ள உக்கிரசிங்கன் எப்படி அவன்காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுக்குப்பின் உண்டானதலைநகர்க்கு மாற்றமுடியும். முடியாதே என்றும் விளங்கிற்றிலர் இப்பிழையான ஏதுக்களால் வல்லிபுரத்தில் சிங்கைநகரைக் காணமுடியாது. காணவேண்டுமேல் நல்ல ஏதக்கள் அகப்படவேண்டும் நல்ல உண்மையை உணர்த்தும் ஏதுக்கள் அகப்படா ஏன் அகப்படாது. சிங்கைநகர் அங்கே இருக்கும். அது இன்னொரு இடத்திலிருக்கே. அவ்விடத்தையும் பின்னர்க் காண்பாம். போலிச்சான்றுக்களைக்காட்டி சிங்கைநகர் வல்லிபுரத்துள்ளதென்று இவர்கள் எழுதியிட்டமை பெரும் தவறாம் என்க.

இந்த யா.ச. காரர், யா.வை.வி.காரர் யாரேனும் வல்லிபுரத்தில் கலிங்கமாகன் சிங்கைநகர் கட்டியவரலாறு செண்பகப்பெருமாள் அவ்வல்லிபுரத்துக்குப் படைஎடுத்த வரலாறு. அங்கே சிங்கையாரியர் எவரினதும் ஏதாவதுதொரு வாழ்க்கை குறிப்பு, பின்னர் அச்சிங்கையாரியர் நல்லூருக்கு வந்து குடியேறிய வரலாறு ஏதாவது ஒன்றுக்கும் ஒரு ஆதாரமும் காட்டவில்லை. அத்தலைநகரிலே பதினொரு சிங்கை ஆரியர் 200 ஆண்டுவரை வாழ்ந்திருப்பாரேயானால் ஏதாவதொருகுறிப்பும் இல்லாதிருக்கப்போமோ. எனவே சிங்கைநகர் அங்கில்லாமையாலேதான் மேற்சொன்ன குறிப்புக்களை அவர்களால் காட்டமுடியவில்லை. அச்சரித்திர நிகழ்ச்சிகளும் அங்கேஇல்லை என்றே துணிக. எனவே ஈண்டும் சிங்கைநகர் வல்லிபுரத்தில் இல்லை என்றே துணிக சாசனத்திலே காலம் இடம் புருடன் சொல்லப்படவில்லை அது சிங்கையாரியரைப்பற்றிச் சொல்லியிருக்கேயொழிய சிங்கைநகர் இருந்தஇடம் சொல்லப்படவில்லை.

வல்லிபுரம் சொல்லப்படாதிருக்க அச்சாசனத்தை வல்லிபுரத்துடன் இணைத்து நோக்கியது முதலாவதுதவறு. வல்லிபுரத்தானமும் அதன் பூர்வகட்டிடங்களும் அங்கே சிங்கையாரியர் வாழ்ந்தகுறிப்பை மெய்ப்பியாதிருக்க அதனைச்சாசனத்துடன் கூட்டி நிரூபணத்துக்கெடுத்துக்கொண்டது. இரண்டாவது தவறு. வல்லிபுரத்திலேதான் சிங்கை நகர் உண்டென்று தம்நூல்களில் எழிதியிட்டது. மூன்றாவது தவறு. தம்கருத்துப்பிழை என்பதைத்தாமே விளங்கிக்கொள்ளாமல் சரியாகச் சொன்ன வைபவமாலையைக் கண்டித்தது நாலாவது தவறு. இவை வல்லிபுரத்தில் சிங்கைநகர் உண்டென்று சொல்லும் கோட்பாட்டுக்கு வரும் தவறுகளாம் என்றறிக.


23. பரராசசேகரன் திருப்பணி கூறும் சிதம்பரப் பட்டயம்
இப்பட்டயம் மாகன் காலத்துக்கு முன்னரே யாழ்ப்பாணத்து நல்லூர்த் தலைநகரம் அமைந்திருந்ததென்பதற்கு ஒரு உறுதியான சான்றாக அமைந்துள்ளது. இப்பட்டயத்தையான் பேராதனைப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு. செ.குணசிங்கம் வெளியிட்ட கல்வியங்காட்டுச் செய்பேடுகள் என்ற நூலிலும், கலாநிதி சி. பத்மநாதன் வெளியிட்ட வன்னியர் என்றநூலிலும் பார்த்ததுமன்றி கல்வியங்காட்டுக்குப் போய் இப்பட்டயத்தை வைத்திருக்கும் சிவக்கொழுந்துவிடமும் அதனைவாங்கிப் பார்வையிட்டேன் குறித்துக்கொண்டேன். அப்பட்டயத்தை வன்னியர் என்ற நூலின் செப்போட்டின் திருத்திவாசகப்படி அவ்வவ்வரி இலக்கங்களுடன் கீழே தருவாம்.

1. ஸ்வஸ்தீஸ்ரீமத் மஹாமண்டலேசுரன்.

5. மஹாராயர் பிருதுவிராஜ்யம் பண்ணியகுளாநின்ற சாலிவா.

6. கனசகாப்தம் தொளாயிரத்து நாற்பத்துநாலின்மேல் செவ்வா

7. நின்றசுபகிருது வருஷம் தைமாதம் குருவாரமும் சுவாதி நட்சத்

8. திரமும்பறுவமும் கூடினசுபதினத்தில் யாழ்ப்பாணம் இராச்சியம்

9. பண்ணியிருந்த பரராசசேகர மகாராசா அவர்கள் சிதம்ப

10. ரத்துக்கு வந்து சிதம்பரேசுர தரிசனம் பண்ணி, சபாப

11. திக்குக் குண்டலமும் பதக்கமும் சாத்தி தில்லை மூவாயிரவருக்கும் கு

12. ண்டலம் போட்டுச் சுவாமிக்கு என்றும் கட்டளை நடக்கும்படி

இப்பட்டயம்பற்றிக் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் “சாலிவாகன சகாப்தம் தொளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டிற் பரராசசேகரன் சிதம்பரத்துக்குப் போனான் என்று பட்டயம் கூறுகின்றது. சகவருடம் 944இல் (கி.பி. 1022) வடஇலங்கையில் ஒருதமிழரசு ஏற்பட்டிருக்கவில்லை. எனவே… இப்பட்டயம் பரராச சேகரன் ஆணைப்படி எழுதப்பட்டிருப்பின் பட்டயத்தை எழுதினவரின் அவதானக் குறைவினாலும் அறியாமையாலும் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம். எனவே பட்டயத்தில் ஆண்டு பிழையா எழுதப்பட்டுள்ளதென்பது தெளிவாகின்றது. இப்பட்டத்திலுள்ளவை மூலசாசனத்திலிருந்து பெயர்த்தெழுதப்பட்டிருத்தலுங் கூடும். அவ்வாறாகில் மூலத்தைப் பார்த்துப் பட்டையத்தை எழுதியவர் ஆண்டினைப் பிழையாக எழுதிஇருத்தல் வேண்டும்” (வன்னியர் பக்.67) என்றும் கூறுகின்றார். இக்கொள்கைகள் நமக்கு உடன்பாடில்லை. வட இலங்கைப் பரராசசேகர மன்னவனின் மூதாதை யருள முன்னவனாகிய சிங்கையாரியன் ஆரம்பத்தில் தலைநகரை கி.பி. 948ல் அமைத்தான். அதனைக் கைலாயமாலை சாலிவாகன சகாப்தக்கணக்கில் “இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபது” என்று சொல்லுகிறது.

கிறீஸ்து ஆண்டுகளுக்கு 870 ஓடு 78 ஐக் கூட்டம் 948 சரியே. ஆகையால் இப்பட்டயம் எழுதினவனாகிய பரராசசேகரன் (1022-948-74) ஆரம்ப சிங்கையாரியின் பின்னவனாகிய இரண்டாவது அல்லது மூன்றாவது பாட்டனாகிய பரராசசேகரனாதல்வேண்டும் இவன் சங்கிலிக்கு முன் அரசிருந்த பரராசசேகரனல்ல அவனுக்குப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த பரராசசேகரன் ஆவான். பரராசசேகரன் என்பது சிங்காசனப் பட்டப்பெயர் அன்றோ! எனவே இப்பட்டயத்தில் உள்ள ஆண்டுபிழை அல்ல. சரியே என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. பட்டயத்தை எழுதினவரின் அவதானக்குறைவாலும் அறியாமையாலும் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம்” என்றும் சொல்வதற்கில்லை. என்னையெனின் இந்தப்பட்டயம் எழுதினது பரநிருபகிங்கப்படை யாண்டவர் என்று எழுதப்பட்டிருப்பதால் அவர் அரசனின் உயர்தர உத்தியோகத்தவராக இருப்பதால் அவர் அவதானங்குறைந்தவராகவோ அறியாமையுடையோராகவோ இருக்கமுடியாது. அன்றியும் சிதம்பரதர்மத்துக்குக் கொடுத்து இந்தக் கட்டளை என்றும் தர்மம்விசாரிக்கும் படிக்கு இராசவாசலுக்கு மந்திரிமாராகவும் இராசவம்சமாக இருக்கிறவர்கள் தில்லியூர்ச்சேனாபதியார், சிங்கையூர்ப்படை ஆண்டவர், தில்லியூர்க்குலத்துங்கர், பரநிருபசிங்க, குலநிருவாங்கப் படையாராய்ச்சியாமிவர்கள் வம்சத்திலே நாலுபேரும் சம்மதித்து நங்களினத்துக்குள்ளே ஒருதரைக் காலி வேட்டித்தம்பிரானாகவைத்து இராசாக்கள் தம்பிரானார் திருச்சிற்றம்பலம் என்றவருக்குப் பட்டமும் கட்டிவைத்து என்றென்றைக்கும் இத்தர்மம் விசாரித்துக்கொள்ளும் படிக்கு இந்த நாலுபேரையும் பரராசசேகர மகாராசா இதம்படி கட்டளைபண்ணித் தர்மம் நடக்கும்படிக்கு கல்லும்காவேரியும் புல்லும் பூமியுமுள்ளமட்டுக்கும் இவர்களே இது விசாரித்துக் கொள்ளும் படிக்கு கட்டளைபண்ணி எழுதிப்போட்டது. இப்படிக்கு பரராசசேகர மகாராசா என்றும் இருக்கிறது அன்றியும் இப்படி இப்பட்டயத்தில் வேறோர் இடத்தில் “இப்படிச் சம்மதித்து இந்தப் பட்டயம் எழுதனைது பரராசசேகர மகாராசா அவர்கள் தில்லியூர்ச்சேனாபதியார் சிங்கையூர்ப்படை ஆண்டவர் தில்லியூர்க்குலத்துங்கர், பரநிருபசிங்க குலநிருவாகப் படையாராய்ச்சியார் என்று சொல்லப்பட்டிருப்பதால் எழுதியவர் ஒருவர் அல்ல அரசாங்கத்தைச் சேர்ந்தபலர் சேர்ந்திருப்பதாலும் அரசனுமோ சேர்ந்திருப்பதாலும் அறிவுக்குறைவுக்கோ அவதானக் குறைவுக்கோ அங்கே இடமில்லை. நிற்க.

இப்பட்டய தர்மத்தை சிதம்பரக் கோயில்காராகிய தில்லை மூவாயிரவரும் வாசித்திருப்பார் என்பதும், தில்லை மூவாயிரவருக்குக் குண்டலம் போட்டதாக அப்பட்டயத்தில் குறிப்பிட்டிருப்பதால் அது மேலும் நிச்சயமே. அன்றியும் அங்கே அரசனின் மடம் இருப்பதாலும் அரசனின் வழிபாட்டுத் தொடர்பு பின்னும் இருந்து வரும் ஆதலாலும் அரசனின் கந்தோர்ப் பதிவேட்டில் அப்பட்டய வரலாறு பதியப்பட்டிருக்குமாதலாலும் அதிற்குறிக்கப்பட்ட ஆண்டு எவ்வாற்றானும் பிழைபட்டிருக்காது.

இப்பட்டய ஆண்டைப்பிழை என்று கருதுபவர்கள் பரராசசேகரனின் மூதாதையரின் முதல்வனை பதினாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய சேனாதிபதியான ஆரியச்சக்கரவர்த்தி யென்றும் அவனே தலைநகர் அமைத்தான் என்றும் கருதுகின்றனர். அக்கருத்து ஊகமேயொழிய எவ்வகையான உருப்படியான ஆதாரங்களும் இல்லை வேறுசிலர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிங்கமாகாN அவ்வட இலங்கைத் தலைநகரை அமைத்தான் என்றும் கருதுகின்றனர். அப்படிக்கருதுபவர்கள் எண்ணூற்றெழுபதை (870) ஆயிரத்து நூற்றெழுபது (1170) என்று பிழையாகப் பொருள்பண்ணி மாகன்காலத்தோடு இயைக்கின்றனர். அவன்வட இலங்கைக்கு வரவில்லை. என்பதை மேலே காட்டினார்.

இவர்கள் விளக்கம் போனவாறு என்னையெனின் இப்பட்டயம் எழுதின பரராசசேகரனின் குல முதல்வன் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தானே தலைநகர் அமைத்தான். அப்படியானால் அவன் வழித்தோன்றல் எப்படி பதின்னொராம் நூற்றாண்டில் (கி.பி.1012ல்) இருக்கமுடியும் என்பதே. யாம் சொல்வது அவ்வாறன்று அக்குலமுதல்வனான சிங்கையாரியன் கைலாயமாலைபடி கி.பி. பத்தாம்நூற்றாண்டிலே (948ல்) தலைநகர் அமைத்தர். அவன் வழித்தோன்றல் பரராச சேகரன் பதினொராம் (கி.பி. 1022ல்) நூற்றாண்டில் இப்பட்டயம் எழுதினான் என்பதே. ஆகையால் கைலாயமாலையிற் சொல்லப்பட்ட ஆண்டும்சரி. பட்டயத்தில் சொல்லப்பட்ட ஆண்டும்சரி. பிறர்தலைநகர் அமைத்ததாகச் சொல்லும் பேர்வழிகளும் ஆண்டுகளும்தான் பிழை. அவை தள்ளத்தக்கவைகள் என்பதே. எனவே பட்டைய ஆண்டைக்கொண்டு கைலாயமாலை ஆண்டும். கைலாயமாலை ஆண்டைக்கொண்டு பட்டய ஆண்டும் உண்மை என்பதை அவை இரண்டும் சேர்ந்து ஒன்றினை ஒன்று உறுதிப்படுத்துகின்றன. எனவே பட்டயத்தில் சொல்லப்பட்ட கி.பி. 1022ம் ஆண்டுகள்சரி என்பதே. நிற்க இப்பட்டயம் மூலபட்டயம் அல்ல அதனைப்பார்த்து எழுதப்பட்ட பட்டயமாக இருத்தலும்கூடும். அவ்வாறாயின் அதனைப்பார்த்து எழுதியவரே அவ்வாண்டைப்பிழையாக எழுதிஇருத்தல் கூடாதோ. எனின் அங்ஙனமும் இல்லையே அவ்விபரம் இப்பட்டயத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லையே. அன்றியும் மூலபட்யம் எனவேறொன்றுவேறெங்கேனும் புலப்பட்டிருக்கவில்லையே. இப்பட்டய அமைப்பு இது ஒரு மூலபட்டயமாகவே தெரிகின்றது. ஆகையால் அதிற்குறிப்பிட்ட ஆண்டு எவ்வாற்றானும் சரியென்பதே. மேலே இலகியசகாப்தம் எண்ணூற்றெழுபதை (870ஐ) ஆயிரத்து நூற்றெழுபது என்று பிழையாகப் பொருள் கண்ட பிறர் விளக்கத்தைப் பின்பற்றியவர் மாட்டுத்தான் இப்பட்டய ஆண்டும் பிழையென்று கருத்து கருத்தெழதாம் என்க. நிற்க.

இப் பட்டையம் ஒருவலிய சான்று இப்பட்டயம் எழுதியது ஒருவரா பிழைவிட? இப்பட்;டயம் எழுதும்போது அரசனும் அறிவாற்றல் படைத்த அவனது உயர் அதிகாரிகளும் இருந்தனர் அவர்கள் மட்டுமா இப்பட்டயத்தில் தொடர்புபடுத்திப் பேசப்படும் தில்லைமூவாயிரவர் எனப்படும் அந்தணர் குழுவும் இருந்தது. இவர்கள் எல்லாரும் அப்பட்டயத்தை ஆர்வமாகப் படித்திருப்பார்களல்லவா? ஐயமே இல்லை. அன்றியும் அரசனது இக்கோவில் விவகாரங்களைக் கவனிக்க அங்கே ஒரு மடபரிபாலனம் இருக்கல்லவா எனவே அப்பட்டயத்தில் பிழை இருக்காது. இருந்தாலும் அக்கணமே அப்பிழையை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பும் திருத்தக்கூடிய வாய்ப்பும் அவ்வரசனுக்கிருந்திருக்கல்லவா அன்றியும் அவன் இராச்சிய பரிபாலனத் தொடர்பில் இம்மடம் இருந்திருக்கிறதல்லவா? அவன் அரண்மனைக் கந்தோர் பதிவேட்டிலும் இவ் ஆண்டு பதியப்பட்டிருக்குமல்லவா? அன்றியும் இப்பட்டயம் எழுதிய மன்னனோ இவன் பரம்பரையினரோ அக்கோட்டத்துடன் வழிபாட்டின் தொடர்பிலும் பரிபாலன தொடர்பிலும் பின்னும் வந்திருப்பர் அல்லவா எனவே எக்காரணம் கொண்டும் அவ் ஆண்டிலே பிழை ஏற்பட இடம் இல்லை என்க. எனவே அப்பட்டய ஆண்டும் சரி என்க. என்னே. ஆச்சரியம் இப்பிறர் எல்லாரும் இப்பெரிய இடத்துக்குறிப்பை பிழை என்கிறார்களே என்றெண்ணின் விஷயம் சரியாய்ப் புலனாகிறது. இன்னும் என்னென்ன இதன் முன்னுள்ள நூல்களிலே யாழ்ப்பாண இராச்சியம் (சிங்கைநகரோ, நல்லூரோ, யாழ்ப்பாண நகரோ) பதின் மூன்றாம் நூற்றாண்டில் அல்லவா ஆரம்பமானது என்று சொல்லி இருக்கிறார்கள். அவ்வகையைக் கொண்டுதான் இப்பட்டய ஆண்டை பிழை என்கிறார்கள். ஆகையால் பட்டயத்தில் பிழை இல்லை. இவாகள் கணக்கிட்ட வழியில்தான் பிழை. அதைத் தான் திரும்பவிளங்குக. அது பிழை. எனவே பட்டயமும் சரி. சிங்கையாரியன் தலைநகர் வைத்த ஆண்டும் சரி என்க. அன்றியும்.

இப் பட்டயம் எழுதின மன்னன் எழுதின அன்றோடேயே இச்சிதம்பரதரிசனத்தை விட்டிருப்பானா அன்றியும் அவனுக்கு விபூதி முதலிய பிரசாதங்கள் வந்து கொண்டிருக்கும் தொடர்பிருக்குமே. தூதுவர் தொடர்பிருக்குமே. மடத்தை பரிபாலனம் செய்யும் அரசன் ஆஞ்ஞைத் தொடர்பிருக்குமே. எழுதிக் கொடுத்த ஆண்டு பிழை என்றால் திருத்தும்படி மடத்துக்குப் பொறுப்பான தம்பிரான் உடனே ஓலை அனுப்புவாரே. ஆண்டு தோறும் அவ்வரச பரம்பரையினர் அக்கோயிலுக்கு யாத்திரை பண்ணியிருப்பார்களே. எவ்வாற்றானும் கொண்டு நோக்கினும் பட்டய ஆண்டும் சரியே தலைநகர் போட்ட ஆண்டும் சரியே.


24. குயிற்றூதில் காணப்படும் குறிப்புகள்
தலைநகர் ஆராய்ச்சியால் பற்பல கூற்றுக்களால் தடுமாறி நின்றார்க்கு இக்குயிற்றூது ஒரு நிச்சயித்துக்கு வர உதவுவதாயிற்று. அதாவது.

கோட்டைச் சிங்கள அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகுவின் ஏவலின் வண்ணம் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் இராய்ச்சியத்துக்குப் படை எடுப்பான் வந்து அப்பொழுது கி.பி. 1450ம் ஆண்டில் நல்லூரில் தலைநகர் கொண்டரசியற்றி நின்ற கனகசூரிய சிங்கையாரிய மன்னனுடன் பொருதி அவன்றன் தலைநகரை வென்று அவனை ஒட்டெடுக்கப்படச் செய்த செய்தி சொல்லப்பட்டது.

படை எடுக்கப்பட்ட அவ்வாரிய அரசன் ஆறாம் பராக்கிரம வாகு காலத்தவன் என்பதால் அவன் கனகசூரியன் என வண.சு. ஞா. (யா.வை.வி பக்.105) உரைகின்றார். எனவே, அவன் படை எடுப்புக் காலத்திலே நல்லூர்த்தலைநகரிலே கனகசூரியன் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கிறான் என்றறிக. இஃதிங்ஙனமாக “நல்லூர்பிற்படக் கோட்டை இராச்சியம் வகித்த செண்பகப் பெருமாள் 15ம் நூற்றாண்டில் கட்டுவித்ததாம் இம்மதம் எனக்கும் சம்மதம். என சு.ஞா. அவர்கள் பிறிதோர்pடத்தில் மொழியக்காரணம் என்னை? அக்குயியிற் ‘றூதிற்’ கொண்டிருக்கும் உண்மை உள்@ரச்சரியாக இங்ஙனம் மொழிவார்க்குப் புலப்படவில்லை என்பததான் எம்கருத்து. என்னையெனின் செண்பகப்பெருமாள் அந்கர்க்குள் நுழைந்தமை முந்தியதா? அன் அந்நகரைவென்று அந்நகர் அதிகாரத்தைத்தான் அடைந்து திரும்பக்கட்டியமை முந்தியதா? அந்நகர் அரசனை வென்ற பின்னன்றோ அங்ஙனம் கட்டுதல் கைகூடும். (இவன் கட்டினானோ கட்டவில்லையோ என்பது பிறிதொரு ஆராய்ச்சி) எனவே செண்பகப் பெருமாள் படை எடுத்துவந்த அப்பொழுதே ஒரு தலைநகரம் இருந்திருக்கிறதே அதிலேதான் கனகசூரியன் அரசியற்றிக்கொண்டிருந்திருக்கிறான் அத்தலைநகரம் தான்யாது?

செண்பகப்பெருமாளின் படைஎடுப்பின் குறிப்புக்களில் “அதுகரை புரண்டு சேனாவெள்ளம் இராசதானியின் மேல் எழுந்துவருவதை யறிந்தசெகராசசேகரன்” தடுத்தான் நீலத்துரங்கத்திவர்ந்து செண்பகப் பெருமாள்பட்டணத்தை முற்றுகையிடத் தீர்மானித்தான் “என்பது வலன்றைன் குறிப்புக்களாலும், தெரிகிறது செண்பகப் பெருமாள் யாப்பா (நெ) பட்டினத்தில் நுழைந்து அதன்வீதிகளை இரத்தவெள்ளம் ஓடும் ஆறுகளாக்கினான்” “அரசனும் குடும்பமும் ஒழித்தோடிவிட பல பிரதானிகளைச் சிறைசெய்து வெற்றிவாகை சூடித் திகழ்ந்தான்”… செண்பகப் பெருமாள் ஷெ பட்டினத்தைக் கைப்பற்றினான்” யாப்பாப்பட்டினத்தைத் தன்னரணாக்கி, செண்பகப் பெருமாள் கைக்கொண்டு ஆண்ட நகர் விசாலித்ததெருக்களும் உப்பரிகை பொருந்திய வீடுகளும் மாளிகைகளும் உளதாகக்குறிக்கப்பட்டுள்ளது. என்பனவாகச் சொல்லப்படும் இக்குறிப்புக்களால் இவன்படை எடுப்பிற்கு முந்தியே ஒரு தலைநகரம் அங்கே இருந்தமை ஐயமின்றித் துணியப்படும் அன்றியும்” செண்பகப்பெருமாள் யாப்பாப் பட்டினத்துள் நுழைந்து அதன் வீதிகளை இரத்த வெள்ளம் ஓடும் ஆறுகளாக்கினான். அரசனும் குடும்பமும் மொழிம்தோடிவிடப் பல பிரதானிகளைச்சிறை செய்து வெற்றிவாகை சூடித்திகழ்ந்தான். (யா. வை. வி. பக் 105) என்பவற்றாலும், அக்குயிற்றூதுக்காரரே ஆரியச்சக்கரவர்த்தியைத் துரத்திவிட்டு யாப்பாப்பட்டினத்தை (நல்லூரை) தன்னரணாக்கி வாழ்கின்ற நாநாசுகீர்த்தி பொருந்திய சப்புமல் (செண்பகப்பூ) ராசேந்திரனுக்கு என்று அக்குயிற்றூதில் சொல்லியிருக்கல்லவா இதுகொண்டும் அறிக.

அந்நகர்தான் யாது. கனகசூரியன் அங்கிருக்கக் காரணம் என்னை? அக்கனக சூரியன்தான் யாவன். அவனேதான் இருந்த தலைநகரைக் கட்டினானா? அன்றேல் அவன் மூதாதையர் பரம்பரையாய் ஆட்சி செய்து வந்த தலைநகரில் இருந்தாட்சி செய்தானா? என்னும் விசாரணைகள் ஈண்டெழுப்பப் படுகின்றன. இவன் செண்பகப்பெருமாளுக்கு முற்பட இருத்தலால் அச்சிங்கயாரிய அரசரின் ஆவலியை வைபவமாலை சொல்லிய வண்ணமே அவர்களும் ஏற்றுக்கொண்டதாலும் அவ்விருசாரர் கொள்கைப் படியும் இவன் அச்சிங்கை யாரிய மன்னனுடைய கடைசி அரசன். அவன் புதிதாக ஒரு தலை நகரைக் கட்டிய செய்தி யாராலும் சொல்லப்படவில்லை. அவன்முன்னோனாய ஆதிச்சிங்கை ஆரியன் கட்டிய தலைநகரிலேதான் பரம்பரை பரம்பரையாய் ஆட்சிசெய்து வந்த பதினோராவது சிங்கையாரியன் என்பதை அவ்விருசாராரும் ஒப்புகின்றனர். ஆயின் வைபவமாலையோ அவ்வாதித் தலைநகரை நல்லூரொடுபடுத்திச்சொல்ல அதாவது நல்லூரில் கட்டப்பட்டதென்று சொல்ல அப்பிறர் அத்தலைநகர் கட்டிய வரலாறுரையராய் அது வல்லிபுரத்தின் கண்ணது என்கின்றனர். விஷயம் சரியாய்த்தான் புரிந்துவிட்டது. புரிவிக்கவும் முடிந்துவிட்டது தலைநகர்ன நிச்சயமும் நிகழத்தான் போகின்றது. முன்னர்ச்சாசன ஆராய்ச்சியாலும் வல்லிபுர ஆராய்ச்சியிலும் வல்லிபுரத்தில் சிங்கையாரியர் வாழ்ந்திருக்கவில்ஐ எனக் கண்டாம். ஈங்கு அக்குயிற்றூது நல்லூருக்கு அதாவது நல்லூரிலுள்ள செண்பகப் பெருமாளுக்கு அனுப்பியிட்டதையுங் கண்டாம்.

எனவே அக்குயிற்றூதனுப்பப்பட்ட இடம் இக்கனகன் இருக்கப் பெற்றதான ஆதிச் சிங்கைநகர்தான். இன்னும் என்னையெனின் அக்குயிற்றூதாசிரியர். அக்குயிலைத் தெய்வேந்திர நகரத்திலிருந்து நல்லூருக்கு விடுப்பவராய் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட இடங்களைத் தாண்டிப் போகும் மார்க்கத்தை விளங்கப்படுத்தும் வகையில் வழிஉள்ள சாவகச்சேரியையும்…………………… தாண்டி அப்பால் நல்லூருக்குச் செல்லும்படி சொல்லுகிறார். அத்தலை நகர். முன்தொட்டே அன்றியும் அப்பொழுதும் வல்லிபுரத்தில் இருந்திருக்குமேயானால் நல்லூரில் இருந்து வடகிழக்காய் இருபத்தைந்து மைல் வரை தொலைவிலுள்ள வல்லிபுரத்துக்கே அக்குயிலைத்தூதாகப் போக்கியிருப்பார் என்பதும் அவ்வகையில் நல்லூருக்கும் வல்லிபுரத்துக்கும் இடைப்பட்ட இடங்களைச் சுட்டிப் பேசி இருப்பார் என்பதும் முக்கியமாக நல்லூர் பருத்தித்துறை வல்லிபுரம் என்பனவாகுதல் அவரால் அப்போது பேசப்பட்டு அக்குயிலுக்கு மார்க்கம் உரைக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்குமென்பதும், அவர் நல்லூர்க்கு ஆற்றுப் படுத்தி இருக்கமாட்டார் என்பதும் நிச்சயத்தின் மேலும் நிச்சயமாயிற்று. என்க.

பிறரால் வல்லிபுரத்தினொடு படுத்திப்பேசப்பட்ட சிங்கையாரியர் வேறு. வைபவமாலையாரால் கனகசூரியனுக்கு முற்பட்டுள்வராகப் பேசப்பட்ட சிங்கையாரியர் வேறாமோ. எனின் அற்றன்று அவர்கள் வல்லிபுரத்தொடுபடுத்திச் சொல்லியிட்டதும் வைபவமாலை. யார் சொல்லியிட்ட இச்சிங்கைய ஆரியரையே சுட்டித்தான். இவர் கள்றிப்பிறகொரு சிங்கையாரிய பரம்பரையுமில்லை. எனவே அச்சாசனம் சொன்னது இந்நல்லூர்ச் சிங்கையாரியரையே என்றுதுணிக அதுவே துணிபாயி; அவ்வல்லிபுரத்தில் சிங்கைநகருமில்லை சிங்கை யாரியருமில்லை என்பது மேலுந்துணிபாதல் காண்க. “பாதர்” குவைறோஸ் கூறும் சிங்கைநகர் மதிலும் இந்நல்லூர்ச் சிங்கைநகரத்தின் மதிலாம் என்க.

சிங்கையாரியர் ஒன்றேயொரு பரம்பரையாகவும், அவர் இருந்த தலைநகர் ஒன்றேயொன்றாயிருக்கவும் வைபவமாலையார் அத்தலைநகர் நல்லூர் என்றுசொல்ல அப்பிறர் (ஷெ பிறர்) சிங்கைநகர் என்று
சுட்டியமைதான் என்னையெனின் அது அன்னார் அம்மாலையாரின் உள்ளக்கருத்தையோ வரலாற்றின் உண்மையையோ ஓர்ந்துகொள்ளாமே நல்லூர்வேறு சிங்கைநகர்வேறு என்று பிறழ விளங்கிக்கொண்டதும் வைபவமாலையார் அறியாமலே செப்பினார் என அவர் அறிவுடமைக்கும் அறியாமை கற்பித்துக்கொண்டு தாம் தமது அறிவின் மதுகையாலே வல்லிபுரத்திலே சிங்கைநகரை அதிகமர்த்தாகக்கண்டு விட்டோம். சிங்கைஆரியரும் அந்நகரிற்றான் உறைந்தார் எனதம்திரிபுணர்வை மெய்யுணர்வென்று கருதிக் கொண்டமைதான் காரணம் என்க. அந்நகர்கட்டிடத்திலே இவர்தாமும் சிக்குப்பட்டு யாழ்ப்பாணச் சரித்திரத்திலும் ஒருபெருஞ் சிக்கலை உண்டாக்கி விட்டனர். என்க. அச்சிக்கல் ஈண்டெடுக்கப்பட்டது.

ஊரின்பெயர் நல்லூர் அந்நகரின் பெயர் சிங்கை என்பது அந்நகர்க்கு நல்லூர் ஊரால் தொடர்புபட்டது. சிங்கைபெயரால் தொடர்புபட்டது. நல்லூர் என்னும் ஊரிலே சிங்கை என்னும் பெயரையுடை ‘கோட்டையை – தலைநகரைக் கட்டினான் என்க. உயரப்புலத்திலே நம்பி இலக்குமிவாசத்தைக் கட்டிhன் என்பது போல உயரப்புலம் காணிப்பெயர் இலக்குமிவாஈம் விட்டின்பெயர் நல்லூர் என்னும் ஊரிலே கட்டப்பட்ட அத்தலைநகரின் புறநகர் மதிலிலே கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையிலே) சிங்கை நகர் என்று எழுமப்பட்டிருந்தால் நல்லூரில் கட்டப்பட்ட நகரின் பெயர் சிங்கை நகர் என்று விளங்கவில்லையா?” ஈண்டுசிக்கலும் நீங்கியது ஐயம் தெளிந்தது உண்மையும் தெரிந்தது. இனி இன்னும் நுட்பமான பகுதிகட்குப் போவோம். கனகசூரியன் இருந்த நகரத்தைத்தானே செண்பகப்பெருமாள் கைப்பற்றினாள் செண்பகப்பெருமாள் இருந்த அதேநகரைத்தானே திரும்பக் கனகசூரியன் கைப்பற்றினான். கனகசூரியன்மகன்தானே பரராசசேகரன். அவனும் அத்தலைநகரில் இருந்து தானே அரசாண்டான் பரராசசேகரனின் மூன்றாவது மனைவியி; “வைப்புப்பெண்ணாகிய மங்கத்தம்மாள் சங்கிலியென்னும் ஒருவனைப் பெற்றாள். (யா.வை.மா.பக். 49)

அவன் மகன் தானே சங்கிலி மன்னன். அவனும் அத்தலைநகரிலிந்து தானே அரசியற்றிhன். எனவே போர்த்தர் வரும்போது சங்கிலி நல்லூரில் இருந்தானல்லவா. எனவே போர்த்தர் படை எடுத்த நகரம் சிங்கை நகரமல்லவா? போத்தர் படை எணடுத்தது நல்லூருக்கல்லவா? யாம் “கோட்டை வாசல்” என்னும் பெயருடைய பெரிய நிலப்பரப்பினை ஆராய்ந்து (கோட்டை வாசல் இருந்து மறைந்த பின்னர் அவ்வாசல் இருந்த இடம் தோம்பில் கோட்டைவாசல் என்று குறிப்பு எழுதபட்டிருக்கிறது) அது நாயன்மார்கட்டுச் சந்திக்கண்மையில் இருப்பதால் நல்லூர்க் கோட்டை வாசல் என்று நிரூபணம் செய்தோம். நல்லூர் ஊர்ப்பெயரென்றும் அவ்வூரில் கட்டப்பட்ட நகர்க்குச் சிங்கைநகர் என்றும் மேலே வலியுறுவதால் சிங்கைநகர் வாசலும் அதுவேதான் என்க.

போர்த்தர் 1590ல் சங்கிலியன் மீது படை எடுத்து வந்தபோது கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையில் சிங்கைநகர் என்னுமதில் இருந்திருக்கிறதென்பதை சு.ஞா. அவர்கள் சொல்லியுள்ளமையும், மேலேகாட்டினோமல்லவா – மேற்படிவாசல் கொழும்புத் துறைக்கும் நல்லூருக்குமிடையிலல்லவா இருக்கிறது. எனவே நல்லூரிலே சிங்கைநகர் உண்டென்பதை அத்தூது நூலும் மெய்ப்பிக்கிறது என்க. எனவே செண்பகப் பெருமாள் வரமுந்தியே நல்லூரில் தலைநகரம் இருந்திருக்கிறது என்க.


25. புகழேந்திப்புலவர் வரவு
விக்கிரமசோழன் இரண்டாம் குமாரகுலோத்துங்கன் என்னுஞ் சோழவரசர் காலத்திலே (கி.பி.1118-1146) அவன் அரண்மனைப்புலவராகிய புகழேந்திப்புலவர் கதிர்காம யாத்திரையின் பொருட்டு இலங்கைக்குவந்த ஞான்று சிங்கைநகர் அரசனைக்கண்டு அவனைப்பாடி யானையும் நிதியும் பரிசிலாகப்பெற்றுச் சென்றார். பெற்ற இபம் புலவர் வீட்டு வாசலிலே கட்டப்பட்டிருப்பதை அறிந்தசோழனும் பாண்டியனும் அதனைப்பெறும் வண்ணம் புலவரிடம் போனகாலத்து

“புலவர் பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்கும்
காவலர் நிற்கும்படி வைத்தவா கண்டி யொன்பதிலும்
மேவலர் மார்பினுந் திண்டோளினுஞ்செம்பொன் மேருவினும்
சே-வெழுதும் பெருமான் சிங்கையாரிய சேகரனே

எனத்தமக்குப் பரிசில்தந்த அரசன் பெருமைதோன்ற முன்னிலையாக வைத்துப் புகழ்ந்தும் அவ்வரசன் இறந்ததைக் கேள்விப்பட்டபோது

அ. ஆ. வீதியோ சுடல்வா ரியர் கோமான்
எ. ஏ. வலரா லிறந்தநாள் - ஒ ஓ
தருக்கண்ணிலுங் குளிர்ந்த தண்ணளிதந் தாண்ட
திருக்கண்லுஞ்சுடுமோ தீ

எனக்கவன்று தனக்கு அளிசெய்த கண்ணைப் புகழ்ந்து பாடினர் புகழேந்திப்புலவர் பாடியபாக்களில் இருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுத்தொடக்கத்திலேயே இச்சிங்கை நகரரசர் சிங்கையாரிய அரசர் பரராசசேகரன் செகராசசேகரன் என்னும் பட்டப்பெயர்களையும் விடைக்கொடி சேதுவாஞ்சனை முதலிய வரசசின்னங்களையுமுடையவர்களாயிருந்தார்களெனவறியலாம். (செ.இ.யா.ச. பக் 47-48) எனவே! மேலே சிங்கையாரிய குடும்பத்தினர் சிதம்பரதானம் பண்ணியது 11ம் நூற்றாண்டு நிகழ்ச்சி. புகழேந்திப்புலவரை யாதரித்தது அக்குடும்பத்தவரின் 12ம் நூற்றாண்டு நிகழ்ச்சி. இவைகள் கலிங்கமாகன் வரமுந்தி நிகழ்ந்தநிகழ்ச்சி. அப்படி இருக்கக்கலிங்கமாகன்தான் தலைநகர் கட்டினான் என்பது பிழையல்லவா? நிற்க.

இன்னும் தெனிவான விளக்கம் என்னையெனின் பிறர் 870 என்ற அந்த எண்ணைத்தான் வியாக்கியான் வேறுபாட்டால் 1170 ஆக்கிக் கலிங்கமாகனுக்குக் கொண்டு போகிறார். அப்படி 1170 ஆக்கிவழி பிழை என்று சொல்லவே அந்தப்பிழையான எண்ணுமில்லை. அந்த எண்ணிலே ஆண்டிலே வந்தகலிங்கமாகனுமில்லை என்க.

கலிங்கமாகனின் யாழ்ப்பாணவரவைக் காட்ட இவர்களால் இயலாது போகவே கைலாயமாலை சிங்கை ஆரியனுக்குக் கொடுத்த – பாடிய 948ஐ அன்றோ ஆராய்ச்சி நாணயம் தப்பிவேறு வியாக்கிணத்தால் 1248 என்று கண்டார்கள். அவ்வியாக்கியானம் பிழை என்றால் இருப்பது 948 என்க. 1245 தொடங்கி 1236 முடிய ஆட்சிசெய்த கலிங்கமாகன் 12 ஆண்டுவரை வெளியில் வாழ்ந்து 1248ம் ஆண்டு தான் யாழ்ப்பாணம் வந்தான் எனின். இந்த 12 ஆண்டும் அவன் எங்கிருந்தான் அப்பேச்சும் அவன் வரவில் உள்ள பொய்மையைக் காண்பிக்கின்றதே. கலிங்கமாகன் யாழ்ப்பாணம் வந்ததை அத்தாட்சிப் படுத்தாதவழி அவன்மேற் பாலிக்கும் அவ்வூகமும் செல்லாதென்க. நிற்க.

வைபவமாலை அமைச்சர் புவனேகவாகு நல்லூர்தலைநகரையுங் கட்டிக்கந்தசுவாமி கோயிலையுங்கட்டினான் என்ற கூற்றை இப்பிறர் சான்றுகாட்டி மறுக்கவுமில்லை. அப்பால்தாம் செண்பகப்பெருமாள் தர் கட்டியதைச் சான்றுகாட்டி நிறுவவுமில்லை.


26. வல்லிபுரத்தில் உள்ள தலைநகர் செங்கடகநகர்
ஆனைகிடந்த இடத்திலே ஒரு அடிச்சுவடுகூட இல்லையா 280 ஆண்டுவரை அங்கே சிங்கை ஆரியர் வாழ்ந்தால் ஒரு சிங்கை ஆரியன் வாழ்ந்த ஒரு குறிப்பும் இல்லாதிருக்குமா? அப்படி ஒரு குறிப்பும் காட்டவில்லையாயின் சிங்கைநகர் அங்கே உண்டென்று நிரூபணப்படாது. என்ளை அங்கே பண்டைக்காலத்திலே ஒரு தலைநகர் இருந்ததென்று மட்டிடக்கூடிய அளவு பழங்கட்டிடச் சிதைவுகள், கீச்சுக் கிட்டம் கலவோடு என்பனவும் பழம் அத்திவாரம் போன அடையாளங்களும் இல்லையாலோ எனின் அவை இருக்கின்றன. அவை செங்கடகநகர் இருந்த அடையாளங்கள். ஆராய்ந்து அறியும் திறப்பாடின்மையாலே கழுதையைக் குதிரையென்று மட்டிட்டுக் கொண்ட கழுதைவாறாய்மட்டிட்டு விட்டனர். அந்தலைநகர் கி-பி. 795 வரை உக்கிரசிங்கனால் மாற்றியமைக்கப்டப்ட ஒன்று. கலிங்கமாகன் காலமும் 13ம் நூற்றாண்டு உக்கிரசிங்கன் காலமும் 8ம் நூற்றாண்டு. வல்லிபுரத்திலே கலிங்கமாகன் தலைநகர் இட்டதற்கோ, இட்ட ஆண்டுக்கோ இவர்கள் யார்க்கண்ணும் சான்றில்லையே. நிற்க, கொத்த கமத்திலே கண்டெடுக்கப்பட்ட சாசனம் வல்லிபுரத்திலே சிங்கைநகர் இருந்ததென்பதை அத்தாட்சிப் படுத்தவில்லையா என்னின் இல்லையே அதனைச் சிங்கை நகரும் சிலாசனமும் என்பதில் காண்க.

மேலே முன்னர்ச் சொல்லிவந்த இச் சு. ஞா. காரர் செ. இ. காரர் ஆராய்ச்சி முடிபு நமக்குக் கொஞ்சம் கவலையைக் கொடுப்பதாக இருக்கிறது. அனேக இடங்களில் அம்மாலை நூல்களுக்கு மாறுபாடான முடிபுகளை இவர்கள் கூறுகின்றனர். செண்பகப்பெருமாள் நல்லூரில் முதன் முதலாகத் தலைநகர் அமைக்கவில்லை. யாழ்ப்பாண அரசனின் அதிகாரத்தையடக்கவே படை எடுத்தான் இவர்கள் கூற்றுப்படியே ஒரு நூலிலும் சொல்லவுமில்லை. அவன் தன் இராச்சியப் பொறுப்பை தன்பிரதிநிதி விஜயவாகுவிடம் கொடுத்துக்கோட்டை இராச்சியத்துக்கு முடிசூடப் போகக் கனகசூரியனும் மக்களும் விஜயபாகுவைக் கொன்று இராச்சியத்தைப் பிடித்துக் கொண்டார்கள். (யா.வை.மா. பக்.47)


27. செண்பகப் பெருமாள் படை எடுத்த தலைநகர் நல்லூர்
செண்பகப் பெருமாள் கோட்டைக்குப் போனபின்தான் புவனேகவாகுக்குப் பட்டம் பெற்றது. அவன் கோட்டைப் புவனேகவாகு ஆனபின் நல்லூரில் அவனுக்கு அரச தொடர்பில்லை. எனவே புவனேகவாகு பெயர்த் தொடர்பு அவனுக்கு நல்லூரில் இல்லை. என்க. நிற்க,

செண்பகப் பெருமாள் படை எடுத்ததும் மெய் கனக சூரியன் தோற்றோடியதும் மெய். ஆனால் அத்தலைநகரைச் செண்பகப் பெருமாள்தான் முதன் முதலாகக் கட்டினான் என்பதுதான் பொய். அவன் ஓட இவன் இருந்தான். அப்பால் கோட்டை இரா சியத்துக்குப் போவான் இவன் விஜயபாகுவை இங்காட்சியில் வைத்துச் சென்றான் கனகசூரியனும் பிள்ளைகளும் விஜயவாகுவைக் கொன்று அரசானார்கள் என்பதே முடிபு கனக சூரியன் முன்னர் அத்தலைநகரில் இருந்திருக்கிறானே அக் கனகசூரியன் சிங்கையாரியகுல மன்னவருள் பதினோராவது அரசனன்றே அங்ஙனமாயின் அவன் முன்னவராய அரசர் பதின்மரும் எத்தலைநகரில் இருந்து ஆட்சி புரிந்தார்கள். அவர்கள் கருத்துப்படி முன்னர்ச் சொல்லிப் போந்த மாகன் கி.பி. 1248 ஆண்டு வல்லிபுரத்தில் தலைநகரமமைத்தான் அங்கிருந்து சிங்கையாரிய மன்னர் பரம்பரை வாழ்ந்து வரலாயினர் எனப் பிறர் உரைகின்றனர். அன்றியும் அக்காலத்தில் செண்பகப் பெருமாள் கோட்டை இராச்சியத்தைக் கவர்வான் வேண்டி நல்லூர் இராச்சியாத்தை விட்டிட்டுப் போகக் கனகசூரியனும் மக்களும் அங்கே வந்து குடியேறினார்கள் என்கிறார்கள். (கை.மா. ஆராய்ச்சி முன்னுரை பக் 6.செ.இ)

அப்படியாயின் அச்சிங்கையாரியர் கனகசூரியனுக்கு முன்னுள்ளோர் கி.பி. 1248 தொடங்கி கி.பி. 1450 வரையும் அங்கே வாழ்ந்திருக்க வேண்டுமன்றே 202 ஆண்டுவரை (1248-1450) அவர்கள் அங்கே வாழ்ந்ததற்கு ஒரு ஆதாரமும் இப்பிறர் காட்டவில்லை. நாம் முயன்று பார்த்தும் அவர்கள் அங்கே வாழ்ந்த குறிப்பொன்றும் கிடைக்கவில்லை. அது உக்கிரசிங்கன் கதிரைமலையை நீக்கிவிட்டமைந்த செங்கடக நகரியாயிருப்பதுதான் காரணம் என்க.

கைலாயமாலை பத்தாம் நூற்றாண்டிலும் வைபவமாலை 18ம் நூற்றாண்டிலும் தோன்றிய நூல்கள். அந்நூல்களிலே அமைச்சர் புவனேகவாகுதான் நலமிகு யாழ்ப்பாண (நல்லை) நகரிகட்டினான் என்று சொல்லப்பட்டிருக்கே 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பிறர் அந்நூல்கள் கூற்றைப்பிழை என்பதைத் தம் கைக்கண் உள்ள பிற முடிபு சுட்டும் நற்சான்றுக்களால் மறுத்த பின்னர்தான் வேறொன்று சொல்லக்கடவர். அவர்க்குப் பிறிது சுட்டும் சான்று கிடைக்காவிட்டால் அவ்விருமாலைகளும் சொல்வதிற்றான் உண்மை இருக்கென்று துணிந்தவராய் அவைகளை ஒப்புக்கொண்டு அப்பாலே தம்நூலின் ஏனைய பகுதிகளைச் செய்யக்கடவர். இவரோ தற்காலத்துக்கு முன்னுள்ள இவைகள் எடுத்துக் காட்டாது விட்டமை அவரது தோல்வித்தானத்தையும் அவர்கள் ஆராய்ச்சி வரம்பும் முறையும் பின்பற்றாதவர் என்று விளங்கிக்கிடக்கிறது.


28. நல்லூர் இராசபரம்பரை
தலைநகர் வரலாற்றில் கனகசூரிய சிங்கையாரியன் கி.பி. 1450ம் ஆண்டளவில் அரசுபுரிந்தானாக. அக்காலையில் கோட்டை அரசனாகிய செண்பகப்பெருமாள் படைஎடுத்துவந்து அவனை வென்று கொண்டானாக, தோல்வி கெர்ட கனகசூரியன் இந்தியாவுக்கோடிப்போக செண்பகப்பெருமாள் அந்நகரில் இருந்தரசு புரியும் நாளில் கோட்டை இராச்சியத்தைப் பெற்று அவன்முடிசூடும் நோக்கமாக அந்நல்லூரில் விஜயவாகு என்பவனை நியமித்து அரசாட்சி செய்யும்படி வைத்துச் சென்றானாக அப்பால் தோற்றோடிப்போன கனகசூரியனும் பிள்ளைகளும் 1467ம் ஆண்டில் நல்லூருக்குப்படை எடுத்து வந்து விஜயவாகுவைக்கொன்று அத்தலைநகரில் ஆட்சிபுரிந்தார்களென்றும் கண்டாம். இனிமேல் கனகசூரியனுக்கு முன்னும் பின்னும் அத்தலைநகர் வரலாறு அறிதல் வேண்டும் ஈண்டு அவனுக்கு முன்னுள்ள வரலாற்றை அறிவாம். கனகசூரியன் இருந்து தலைநகரம் யாது அது அவனுக்குத் தந்தையசல் முடிசூட்டப்பட்டது இப்படியே தந்தை ஆள்வதும் மகனுக்குமுடிசூட்டுவதுமான ஆதி அரசன் சிங்கைஆரியன் வரைதந்தை முன்தந்தையாக கி.பி. 948ம் வரை போயிருக்கு எனவே ஆதிச்சிங்கை ஆரியனில் இருந்து கனகசூரியன் வரை அட்டவணைப் படுத்தினால்.

1. ஆதிச்சிங்கையாரியன் கி.பி. - 948

2. குலசேகரசிங்கையாரியன்

3. குலோத்துங்க சிங்கையாரியன்

4. விக்கிரம சிங்கையாரியன்

5. வரோதய சிங்கையாரியன்

6. மார்த்தாண்டசிங்கையாரியன்

7. குணபூஷணசிங்கையாரியன்

8. விரோதயசிஙகையாரியன்

9. சயவீரசிங்கையாரியன்

10. குணவீரசிங்கையாரியன்

11. கனகசூரியசிங்கையாரியன் கி-பி. 1440 – 1450


இவ்வளவு அரசர்களும் நல்லூரிலே செண்பகப்பெருமாள் படை எடுப்புவரையும் அரசாண்ட அரசர்கள் பிறர் கலிங்க மாகனையே முதல் அரசனாக வைத்து அவன் பரம்பரைதான் குலசேகரன் முதலான அரசர்கள் என்று அட்டவணைப்படுத்தியிருக்கிறார்கள் இந்நூலிலிலே ஆதிச்சிங்கை ஆரியன் பாண்டிமழவன் கூட்டிவந்த சோழ இராச குமாரன்தான் முதல் அரசன் என்று நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

11ஆவது அரசன் கனகசூரியன் கி.பி. 1440ம் ஆண்டில் அரசை ஆரம்பித்தான். ஆனால் 948 தொடங்கி 1440 வரையும் 10 அரசர் ஆண்டார்கள். ஆகையால் அவர்கள் ஆட்சிக்காலமும் 948 தொடங்கி 1440 வரையும் 492 ஆண்டுகளாகும். அதனை 10ஆலே பிரித்தால் ஒருவனுக்கு 49 ஆண்டுவரை ஆகிறது செகராசசேகரமாலை ஆராய்ச்சியால் 4 மன்னர்கள் பெயர்கள் வெளியாகவில்லை என்று அறியப்படலால் அதனை 14ஆல் பிரித்தால் 35 ஆண்டுகள் ஆகின்றன. இது ஒருவரின் ஆட்சிக்காலச் சராசரிக் கணக்காகும். இக்கணக்கே சரி. நிற்க பிறர் சிங்கை ஆரியன் பரம்பரையைக் கலிங்கமாகன் பரம்பரையாகப் பிழையாக எழுதிவிட்டார்கள் அதனாலேயே ஆட்சிக்காலத்தை 300 ஆண்டுகள் பின்னுக்கு வைக்கிறார்கள். இங்கே சிலகை ஆரியன் பரம்பரையாகக் காட்டப்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சிக்காலமும் முன்னர்த் தனித்தனியாக வெளியாகவில்லை.

செண்பகப் பெருமாள் (சிங்கள அரசன்) கி-பி. 1450-1467
பரராச சேகரன் கி-பி. 1467-1519
சங்கிலி கி-பி. 1519-1561
இவ்வளவு அரசரும் போர்த்துக்கேயர் படை எடுப்புக்கு முன் சுதந்திரமாய் வாழ்ந்த அரசர்கள்.

இவ்வட்டவணை. (யா.வை.வி.பக். 109 – 110)

காசிநயினார்
பெரியபிள்ளை
புவிராசபண்டாரம்
எதிர்மன்னசிங்கம் 1591 – 1616
சங்கிலி குமரன் கி.பி 1616 – 1620

என்னை இச். செ. இ. காரர் சு. ஞா க்காரர்கலிங்கமாகன் ஒருவனை வந்ததாகப்பாவனைபண்ணி அவன் மேலே யாழ்ப்பாணத்தலை நகரைவைத்துத் தலைநகர்காலத்தை 300 ஆண்டுகள் குறைத்து விட்டிட்டார்களே. கி.பி. 10ம் நூற்றாண்டாரம்ப தலைநகரை பதின்மூன்றாம் நூற்றாண்டாக்கிவிட்டார்களே. நிற்க. கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் வெளியீட்ட வன்னியர் என்னும் நூலினை யாம் பார்க்க நேர்ந்தது. அதிலே யாழ்ப்பாணத்து நல்லூரில் ஆட்சி செய்த பரராசசேகரமகாராசா சிதம்பரத்துக்குப் போய் மடம் ஒன்று கட்டி அதில் சூரியமூர்த்தித்தம்பிரானை நியமித்து சிதம்பர நடேசருக்குப்பலவகைத் தான தருமங்களைச் செய்திருக்கிறான் அத்தரும சாதனங்களைப் பண்ணிய காலமும் ஷெ நூல் பக். 70 – 77 வரையில் விளங்கப்படுகின்றது. அக்காலமும் செப்பேட்டில் உள்ளபடியும் திருந்திய வாசகப்படியும் சாலிவாகன சகாப்தம் தொழாயிரத்து நாற்பத்துநாலு (944)ம் ஆண்டின் மேற் செல்லாநின்ற சுபசிருது வருடம் தைமாதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது கொண்டும் நல்லூர்த் தலைநகர் ஆரம்பம் கி-பி 948சரி என்று தோன்றுகிறது. என்னையெனில் அது கிறிஸ்தாப்தம் 944+78ஸ்ரீ1022 ஆகிறது. அப்படியானால் அது நல்லூர்த்தலை நகரம் கட்டிய 1022-948ஸ்ரீ74 ஆண்டுகளுக்குப்பின் ஆனபடியால் அத்தானம் செய்தவர்கள் ஆதிச்சிங்கையாரியனின் 3ஆவது பாட்டனாகலாம்.


29. தலைநகர் ஒன்று பெயர்கள் மூன்று
ஆதிச் சிங்கையாரியகுல மன்னர் பரம்பரை பரம்பரையாக போர்த்தர் படை எடுப்பில் தோல்விகாணும் வரைக்கும் அதாவது கி.பி. 1620 வரைக்கும் அதன் பின்னர் அரைநூற்றாண்டுக் காலமும் வரை அப்போர்த்தரின் கீழ் சிற்றரசர்களாகவும் இருந்து ஆட்சி புரிந்ததலைநகரம் ஒன்று. அத்தலைநகருள்ளும் அவர் இருந்து ஆட்சி புரிந்த களமும் ஒன்று. அதாவது அவர்கள் நல்லூரை விட்டு வேறோர் இடத்திலோ அன்றி நல்லூரில் வௌ;வேறிடங்களிலோ தலைநகர் அமைத்து ஆட்சி புரியவில்லை. ஒரே ஒரு இடத்தில்தான் இருந்து ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அந்த ஒரே ஒரு இடந்தான் நல்லூர். அங்கே தலைநகர் அவர்கள் அமைத்தது கி-பி. 948ல் போர்த்தர் அதிகாரம் முடிந்தது கி.பி. 1658 வரை. எனவே சிங்கை ஆரியர் குலத்தவர் ஆட்சி நல்லூரிலே (948-1658) உத்தேசம் 710 ஆண்டுவரை. இக்கால எல்லையிலே அத்தலைநகர்க்கு அதுபெற்ற வரலாறு காரணமாகவும், வௌ;வேறு சார்பு காரணமாகவும் அந்நல்லூர் நகர்க்கு. நல்லூர் நகர் என்றும் சிங்கை நகர் என்றும், யாழ்ப்பாணநகர் என்றும் பெயர்கள் வந்திருக்கின்றன.

இவைகளில் சிங்கைநகர் என்னும் பெயரை எடுத்துக் கொண்டு அது ஒரு தனி நகரமென்றும் உக்கிரசிங்கனும் மாருதப்பிரவாகவல்லியும் மாற்றியமைத்தவல்லி புரச்செங்கடக நகர்ப்பழங்கட்டிடத்தை வேற்றுமை தெரியாமல்மட்டிட்டுக் கொண்டு அதுதான் சிங்கை நகரமென்று எழுதி யா.வை.வி. காரரும், யா.ச.காரரும், யு.து காரரும் (கழுதையைக் குதிரையென்று விளக்கம் செய்து விட்டதுபோல்) விளக்கம் செய்துவிட்டனர். அவர்களைப் பின்பற்றி வேறும் பல நூலாரும் எழுதி அவ்வாறு விளக்கம் செய்துவிட்டனர். இன்று வரையும் இவ் விளக்கம்தான் இந்நாட்டிலே இருக்கின்றது.

யாழ்ப்பாணத்து நல்லூரிலே இச்சிங்கை ஆரியகுலத்தினர் வாழ்ந்த ஒரு களமே கண்டுபிடிக்கப்பட்டதன்றி நல்லூர்த் தலைநகர்க்களமென்ன ஒன்றும், சிங்கைநகர்க்களமெய இன்னொன்றும், யாழ்ப்பாண நகர்க்களமென வோறொன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. நல்லூர்ப் பெயர் அத்தலைநகர்க்கு ஊரால் வந்தது. சிங்கைப் பேர் இடுகுறியால் வந்தது நல்லூர் யாழ்ப்பாண நாட்டில் உள்ள காரணத்தினாலே அத்தொடர்பிலே யாழ்ப்பாணப் பெயர் வந்து. இன்னும்அம்முப்பெயர்களைப் பற்றி அறிவாம். செகராசசேகரன் ஆணைப்படி பண்டிதராசால் இயற்றப்பெற்ற தட்சணகைலாய புராணத்தில் இவனைப்பற்றிக் கூறுமடத்து.

“அந்நாட்டரசன் ஆரியயகோமான்……
சிங்கையாதிபன் சேதுகாவ் சிங்கையாதீபன்” இது சிங்கைநகர்
அரசனென்றவாறு “செகராசசேகரம் சிங்கைதங்கும்” (செ.சே.மா.செ 135)
“சேவணிதுவசன் சிஙகையெங்கோமான் செகராசசேரகன்”, (ஷ்.செ. 75)
“செயம் பெறுசிங்கைநாடன் செகராசசேகரன்றான்” (ஷெ நூல் அங்காதி பாதம்)

இவ்வாறு நல்லூரில் இருந்தரசாண்ட ஆரியஅரசர்க்குச் சிங்கைஆரிய என்று பெயர் வருகிறது. அன்றியும் நல்லூரில் பிறந்த முதலாம் மன்னனுக்கு “குலசேகரசிங்கையாரியன்” என்று பெயர். இதிலே குலசேகரன் இடுகுறிப்பெயர். சிங்கை நகர்ப்பெயர் ஆரியர் குலப்பெயர் இவ்வான்றால் நல்ல}ரில் இருந்த சிங்கைஆரியர் அனைவரும் சிங்கை நகரத்தரசர்களேயென்றறிக.

சிங்கைநகர் நல்லூரிலுள்ளது – நல்லூர் யாழ்;பாணத்துள்ளது இத் தொடர்புகளாலே. ஒரு களத்திலுள்ள தலைநகர்க்கு மூன்று பெயர் வந்திருக்கின்றது என்க.

“நலமிகு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக் குலவியந்த
வேட்குக் கோயிலும் புரிவித்தானே”

இடஒற்றுமையாக கைலாய மாலையாய் நல்லூர்நகர் யாழ்ப்பாண நகரி என்று சொல்லப்பட்டது. “திருமருவு யாழ்ப்பாண நாட்டை ஆண்ட சிங்கையாரியர்குலம்” இதிலே நல்லூரில் சிங்கை நகரிலிருந்தரசாண்ட சிங்கையாரியரை யாழ்ப்பாண நாட்டை ஆண்ட சிங்கையாரியர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பரராசசேகரன் திருப்பணிகூறும் பட்டயத்திலே “யாழ்ப்பாணம் இராச்சியம் பண்ணிஇருந்த பரராசசேகரமகாராசா அவர்கள் சிதம்பரத்துக்கு வந்து சிதம்பரேசர் தரிசனம்பண்ணி (வன்னியர். பக். 73)

சிதம்பரத்திலே தானம் செய்தவன் பரராசசேகரன் அப்பரராசசேகரன் சிங்கை நகரரசன். அன்றியும் நல்லூர் அரசன் அல்லவா? அவன் யாழ்ப்பாண அரசன் என்று அப்பட்டயத்திலே எழுதிக் கொடுத்திருக்கிறான் அல்லவா? ஆகையால் ஒரு களத்திலுள்ள தலைநகர்க்கு மூன்று பெயர்கள் வந்தமை காண்க. அக்களமே ஆதிச்சிங்கை ஆரிய்ன தலைநகர் அமைத்ததும் அத்தலைநகரே கனகசூரியன்வரை ஆட்சிபுரிந்ததும் செண்பகப்பெருமாள் வென்றதும் வென்று மீண்டும் பின்னர் கனகசூரியன் மீண்டும் ஆட்சி புரிந்ததும். சங்கிலி குமரன்வரை ஆட்சிபுரிந்ததும் இறுதியில் போர்த்துக்கீசர் வென்ற தலைநகர் இருந்தகளமும் இதுஎன்க. இனிமேல் அக்களம் இருந்த இடங்களைக் காண்பாம்.

பழையகோட்டை அமைந்த நிலங்கள்தான் சங்கிலித்தோப்பு இது சங்கிலியன் தலைநகர் மாத்திரம் இருந்ததல்ல. அவன் முன்னோர் தலைநகரமும் அதில்தான் இருந்தது. இறுதியில் சங்கிலியன் இருந்தான் அது நிலமானபின்னர் கி.பி. 1631 வரை தோம்பெழுதப்படும்போது சங்கிலியன் பேரில் பதியப்பட்டது. அவ்வாறே பண்டாரமாளிகையும்.

யமுனாரி கி.பி. 948 வரை வெட்டப்பட்டது. அது இப்பொழுதும் இருக்கிறது. அது 1000 வருடங்களுக்கு முற்பட்டது. கோட்டைவாசல் தோம்பு இவைகளுக்குக்கிழக்கே நாயன்மார்க்கட்டுப் பக்கமாக இருக்கிறது. முத்திரைச்சந்தை இவைகளுக்கருகே இருக்கிறது, பண்டாரக்குளமும் அருகே இருக்கிறது. வைபவமாலை வடக்கே சட்டநாதர் கோயில் தெற்கே கைலாயபிள்ளையார் (முன் கைலாயநாதர்) கோவில் மேற்கே வீரமாகாளி அம்மன் கோவில் ஆகியவையும் கிழக்கே வெயிலுகந்தபிள்ளையார் கோயிலும் எல்லைகளாக பாதுகாப்பாகக் கட்டப்பட்டன. (பழைய உருவம் காலத்தில் இடிபட்டபோதும் மக்கள் அவ்விடங்களில் பழைய கோயில் இருந்தன என எண்ணிக்கட்டிவந்திருக்கின்றர்) ஆகையால் இவ் எல்லைக்குட்பட்டது அகநகராகலாம், ஆரியகுளம், அடியார்க்கு நல்லார் குளம் நாயன் மார்க்கட்டுக்களம் அடியார்க்கு நல்லார்வரம்பு, இராசாதோட்டம் என்பன புறநகர்த்தானத்தில் உள்ளவைகளாகும். இன்னும் இவைகலைச்சூழ்ந்து அரசர் தொடர்பில் உள்ளநிலத் தோம்புகள் இருக்கின்றன. சங்கிலியன் சிலை இப்போழுதிருப்பதும் இத்தானத்திலேயே இவை அனைத்தும் சேர்ந்தவைகளே அத்தலைநகர்க்களம். அத்தலைநகரைத்தான் சிங்கைநகரம் என்றும் நல்லூர்நகரம் என்றும் யாழ்ப்பாணநகரம் என்றும் பெயர்கள் சுட்டினார் என்க. சிங்கைப்பரராகசேகரன் சிங்கைச்செகராசசேகரனுட்படச் சிங்கையாரியகுலமன்னவர் அனைவரும் இதிலிருந்து அரசு புரிந்தவர்களே – ஆயின் யாழ்பாடியின் யாழ்ப்பாணப்பட்டணம் வேறு. அதுவேறோர்களத்தில் அமைந்தது அது சிங்கையாரியர்க்கு முற்பட்டது கி – பி. 948க்கும் முற்பட்டது.

குவிறோஸ் போர்த்தர்படை கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையின் சிங்கைநகர் என்னும் பெயர் எழுதப்பட்ட மதிலைத் தாண்டி வந்ததென்பதால் அந்நகர் சிங்கைநகர் என்னும் பெயரைக் கொண்டதாயும் இருந்தது. அத்தலைநகர் (கோட்டை) கிழக்கு வாசலைக் கொண்டதாகவும் இருந்ததென்றுந் தெரிகிறது. இந்தலைநகர்தான் ஆதிச் சிங்கையாரியனால் கட்டப்பட்டதும், அவன் தொடக்கம் கனகசூரியனின் முதலாந்தடவை ஆட்சி வரை ஒரே தொடர்பாக ஆட்சி செய்யப்பட்டதென்றும் தெரிகிறது. இத்தலைநகர் 10ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பெற்றதால் 11ம் நூற்றாண்டில் கி-பி. 1022ல் சிதம்பரத்தில் மடங்கட்டிய தர்மவள்ளல் இருந்ததும். 12ம் நூற்றாண்டில் புகழேந்திப் புலவரின் வரவை உபசரித்து அவருக்கு ஆனை பரிசளித்தவன் இருந்ததும் கி.பி. 1302 வரை செகராசசேகரமாலை செய்யப்பட்டதும், செய்த அம்மன்னன் இருந்ததும் கி.பி. 1450வரை செண்பகப்பெருமாள் படை எடுத்ததும், கனகசூரியன் தோற்றதும் வென்றதும் திரும்ப 1620ல் போர்த்தர் படை எடுத்ததும் என்க. நல்லூர்த் தலைநகரின் மறுபெயர் சிங்கைநகரானதால் நல்லூர் உண்டான போதே சிங்கைநகர் உண்டானதால் நல்லூரில் இருந்த சிங்கைநகர் வல்லிபுரத்துக்குப் போனதெப்படி. நல்லூர் நகர் ஒன்றும் சிங்கைநகர் ஒன்றும் யாழ்ப்பாணநகர் ஒன்றுதாக மூன்று நகர்கள் இருந்தன. என்றரல் ஆகாதோ என்னின்? ஆகாதே. மூன்றுகளங்கள் அத்தலைநகர் கட்டிய புருடர்கள் அந்த அரச பரம்பரை அவர் அரச பரிபாலனம் செய்த இடம் காலமும் அடங்கிய வரலாறு இவைகளில் யாதா மொன்றும் கேட்கப்படவில்லையே. அறியப்படவில்லையே. இடுகுறிப் பெயரால் சிங்கை என்றும் அதுவே இருந்த ஊரின் தொடர்பால் நல்லூர் என்றும், அவை தாமே இருந்த தேசத்தின் தொடர்பால் யாழ்ப்பாணமென்றும் அவ்வொரு களத்திருந்த அந்நகரையே சுட்டி சொல்லுவார் ஒவ்வோர் சந்தர்ப்பம் நோக்கிச் சொன்னார் என்க. சிங்கைஆரியர் வல்லிபுரத்தில் இருக்கவுமில்லை. அவர்க் அங்கிருந்து நல்லூருக்கு வரவுமில்லை. அவர்கள் கி.பி. 948 தொடக்கம் கி-பி. 1620 வரை பின்னர்ச் சிற்றரசாக கி.பி. 1620 வரை அந்நல்லூரில் இருந்துதான் ஆட்சி புரிந்தார்கள்.

30. நல்லூரில் தலைநகர் இருந்த
களம் ஒன்று குலமும் ஒன்று
யாழ்;ப்பாணத் தமிழ்அரசர் என்று சிறப்பித்துப் பேசப்படும் அச்சிங்கை ஆரிய குல மன்னரால் 672 ஆண்டுகள் வரை ஆட்சிசெய்யப்பட்டதும் பிரசித்தி பெற்ற சங்கிலி மன்னால் இறுதியில் ஆட்சிசெய்யப்பட்டதும், ஆகிய தலைநகர் இச்சிங்கை நகராம் என்க. இதனை அறிய இந்நூலின் முன்முடிபுகளை எல்லாம் மீண்டும் படித்து ஆராய்து கொள்க.

சிங்கையாரியகுல மன்னர் தலைநகரம் நல்லூரில்தான் அமைந்தது என்று வாதிடுவார் தம்மை நோக்கிமுன்னர் நல்லூரில் இருந்து ஆராய்ந்து சென்று அத்தலைநகரை நல்லூரில் கண்டோம் அத்தலைநகர் சிங்கைநகர் என்று வாதிடுவாரை நோக்கிச் சிங்கைநகரில் இருந்து ஆராய்ந்து அத்;தலைநகர் நல்லூரில்தான் அமைந்தது என்பதையுங் கண்டோம். அத்தலைநகர் இரண்டும் இரண்டு வௌ;வேறானதல்ல சிங்iகாரியமன்னன் ஒருவனாலே இலகியசகாப்தம் எண்ணூற்றெழுபதில் நல்லூரில் ஒரேகளத்திலே, ஒரே இடத்திலே கட்டப்பட்ட ஒருதலைநகர்தான் என்றும் அதுதான் நல்லூரில் கட்டப்பட்ட சிங்கைநகர் என்று முடித்துக்கொள்க.

யமுனா ஏரியே யமுனா ஏரியே
உன்றன் பெருமை யாவரோ உணர்வர்
மன்னிய நல்லூர் மாமுடி மன்னர்
தம்மின் வரலாற்றுச் சான்றாய் ஒளிர்குவை
முன்னவன் சிங்கையாரிய முதல்வோன்
மன்னவன் தலைநகர் வைப்பிடம் காட்டுவை
அழியாமல் இன்னும் பல்லூழியாக
கழிய நின்றும் கட்டுரை பகர்குவை
அசைக்கவோ, ஆட்டவோ துறக்கவோ ஆற்றா
மிடுக்கா யிருந்த இடத்தினும் விலகலை.

யமுனா ஏரிபற்றி வைபவமாலையார் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர். சிங்கையாரிய மகாராசன் நல்லூர்ப் பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக்கருதி சோதிடர் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம் போட்டு நாலுமதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் பூங்காவையும், பூங்காவனநடுவிலே ஸ்நானமண்டபமும், முப்புடைக் கூபமுமுண்டாக்கி அக்கூபத்தில் யமுனாநதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு” (யா.வை.மா.பக். 26) என்பதில் உள்ள முப்புடைக் கூபத்தில் யமுனாநதித் தீர்த்தம் கலந்துவிட்ட ஏரிதான் இப்பொழுதுமுள்ள யமுனாரி என்றறிக. இது ஆதியிலே சிங்கையாரியன் தலைநகர் அமைத்த வரலாற்றோடு தொடர்பு கொண்டது. இது கி.பி. 948ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இதன் காலமும் இலகியசகாப்தமெண்ணூற்றெழுபதே மாண்டதெல்லை” என்பர். இது பல சரித்திர நிகழ்ச்சிகளைக் கண்டது. கி.பி. 1450ம் ஆண்டுவரை செண்பகப்பெருமாள் நல்லூருக்குப் படைஎடுத்தபோதும் இதனை அழித்துக்கொள்ள முடியவில்லை. போர்த்தர் கி.பி. 1620வரை நல்லூருக்குப் படை எடுத்த போதும். நல்லூரை வெற்றிகொண்டு அதன் கோட்டைகள் அரண்மனைகளை இடித்து அக்கற்களைக் கைவரிசையாகவும் தலைச்சுமையாகவும் எடுப்பித்துப் பண்ணையிற்றுறையிலே கோட்டைகளைக் கட்டினார்கள். அவர்களாலும் அழித்துக் கொள்ள முடியவில்லை.

இந்த யமுனாரியைபற்றிய யா.ச.காரர் யா.வை.வி. காரர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இன்றுவரை யமுனா ஏரி பற்றி அவ்வைபவமாலையிற் சொல்லப்பட்ட அக்கூற்றை யாரும் மறுத்ததுமில்லை. அன்றி யாதுமொரு குடிமக்கள் ஒருவர் மீதும் அதன் சரித்திரம் சொல்லப்பட்டிருக்கவில்லை.

தலைநகரமிருத்த களம் (விளக்கம் 2)
நல்லூர்த் தமிழரசர் அரண்மனை சங்கிலித் தோப்பில் இருந்தது. (சங்கிலியன் வீதி, சங்கிலியன்சிலை, யமுனா ஏரி, வாயில் முகப்பு, பண்டாரக்களம், பண்டார மாளிகை, கைலாயம் என்பனவும் பிறவும் அங்கே வாழ்த்த தமிழரசர் தொடர்பிலுள்ள சின்னங்களே. சங்கிலி அத்தமிழரசனின் இறுதி அரசனானபடியால் அவனுமழிந்து, அவன் கோட்டையுமழிந்து பட்டபின்னர் அவன் இருந்த நிலம் சங்கிதோப்பென்று அழைக்கப்பட்டது. அதிலே சங்கிலிமன்னனும் உறவினரும் அவன் முன்னோரும் அரசிருந்தார்கள். என்னையெனின் அரசர் அரண்மனை குடிமக்கள் வீடுபோலல்ல ஒருவர் பின்னொருவராக அரசுபுரியும் ஒரு குலத்தவர் அவ்வொரு அரண்மனையிலேயே ஆட்சி புரிந்தார் என்க. எனவே இவன் பாட்டன் கனகசூரியன் திரும்ப வந்து வென்றதும் அவனின் முன்னர் செண்பகப்பெருமான் தோற்றதும் வென்றதும் அதன் முன்னர்க் கனகசூரியன் அரசு புர்pந்ததும் அவன் மூதாதையனான பதினோராவது பாட்டன் சிங்கை ஆரியன் சிங்கை நகரைக் கட்டியதும் இவ்விடமே மதித்த வனங்கொள். “வயல் செறி நல்லூர்” என்று சுட்டியதும் இவ்விடத்தைத்தான். ஆதித் தலைநகரோடு சம்பந்தப்பட்ட யமுனாஏரி இங்கேதான் இருக்கிறது. அவ்வாதி அரசன் எடுத்த கைலாயநாதர் இருந்த கோயில் இதைச் சேர்ந்துதான் இருக்கிறது. கிழக்கேயுள்ள கோட்டை வாசல் தோம்பில் சுட்டும் கோட்டைவாசல் இதன்கண் அமைந்துள்ள கோட்டைக்கேற்ற வாசலாகத்தான் அமைந்திருக்கிறது. அது கிழக்கு வாசல். “கொங்கெல்ட் ஒவ் சிலோனில்” குவிறோசால் சொல்லப்பட்ட சிங்கைநகர் மதில் இதைச் சூழ்ந்துதான் போகிறது. இவ்விடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது. கைலாயமாலையில் அமைச்சர் புவனேகவாகு கட்டியதாகச் சொல்லப்பட்ட “நலமிகு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து” எ;னபது இந்நகரையும் கட்டியதைத்தான் அவன் குலவிய கந்தவேட்டுக்கோயிலும் புரிவித்தானே” என்பதில் சொல்லப்பட்ட கந்தசுவாமி கோவில் இங்கேதான் இருக்கிறது. இச்சங்கிலியன் முன்னவனாகியவனாய் இத்தலைநகர்க்களத்திலே அரசு புரிந்த அரசன் ஒருவன் தன் தலைநகர்க்குக் காப்பாக வடக்கே சட்டநாதர்கோயில் தலங்காவற் பிள்ளையார் கோவிலையும் தெற்கே கைலாயபிள்ளையார் கோயிலையும் கிழக்கே வெயிலுகந்தப்பிள்ளையார் கோவிலையும் மேற்கே வீரமாகாளியம்மன் கோவிலையும் கட்டினான் எ ன்று வைபவமாலையிற் சொல்லப்பட்ட அந்நான்கு கோட்டங்களுக்கும் இடையில்தான் இக்களம் அமைந்திருக்கின்றது. அக்கோட்டங்கள் இப்பொழுதும் இருக்கின்றன. அவை போர்த்தரால் அழிக்கப்பட்டபோதும் பின்னுள்ள மக்கள் அவ்வவ்விடங்களில் கோயிலைக்கட்டி வைத்திருக்கிறார்கள். இக்களத்திலேதான் சங்கிலிக்குப் பின்னுள்ளவர்களும் கி.பி. 1620 வரை வாழ்ந்திருக்கிறார்கள். 16ம் 17ம் நூற்றாண்டில் போத்தர் நல்லூருக்குப் படை எடுத்ததும் நல்லூரில் இக்களம் இருக்கப்போய்த்தான் அக்களத்தை நோக்கிப் படை வந்திருக்கின்றது.

இக்களத்தில் இருந்த அரசக்கள் தங்களை சிங்கைநகரத்தரசர்கள் எனக்குறிப்பிடலாலும் இந்நகரிலிருந்த அரசர் சிங்கைப் பரராசசேகரன் சிங்கை சொகரசசேகரன் என்று பெயர் வைத்ததுக்கொண்டதனாலும் போர்த்தர்படை வந்தது சிங்கைநகர்க்கே என்று தெரிகிறது. இவர்கள் வாழையடி வாழையாக வந்த ஒரேகுலத்தவராக இருந்ததும் அறியலாம். என்க. எனவே கி.பி. 948 தொடங்கி கி.பி 1620ம் ஆண்டுவரை இவர்கள் ஒருதலைநகரில் வாழ்ந்த ஒரேகுலத்தினர் இவர்கள் நல்லூரில் இருந்ததுண்மைதான் ஆனால் களம்வேறொன்றாயிருத்தல் கூடாதோ எனின் வேறொருகளம் அறியப்படவில்லையே.

அவ்வரண்மனையின் மேற்குவாசல் கோபுரம் மாத்திரம் இன்னும் அழியாமல் இருக்கின்றது. (ஆ.மு.யா.ச.பக். 70)

இக்கோபுரத்தை நாம் பன்முறை பாத்திருந்ததுமன்றி யாம் எழுதிய அடியார்க்கு நல்லார் நூலின் முகப்பட்டையில் பதித்தும் இருக்கிறோம். நல்லூர்க்கோட்டையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தோற்றமும் ஒரேகாலத்ததாலும், அவை இரண்டும் ஒரேசரித்திர புருடர்களாலே அமைக்கப்பட்டுள்ளனவாதாலும் அவை ஒன்றனுக்கொன்று எதிர்முகமாக அமைக்கப்பட்டிருக்காதென்று கொள்க. இத்தலைநகர் இருந்த களத்தை உத்தேசமாகக் குறிப்போமானால் மத்தியக் களத்தில் யமுனாரி சங்கிலியன்தோப்பு சங்கிலியன் சிலை முத்திரைச்சந்தை என்பன அமைந்திருக்கின்றன. நல்லூர் வீரமாகாளி அம்மன்கோவிலில் இருந்தும் கைலாயபிள்ளையார் கோவிலில் இருந்தும் கிழக்கெ வெயிலுகந்தப்பிள்ளையார் கோயில் இருந்தும் வடக்கே சட் நாதர்கோயில் இருந்தும் முத்திரச்சந்தையில் வந்து முடியும் றோட்டுக்கள் எல்லாம் தலைநகர் இருந்த களத்தின் மேலாலேதான் வருகின்றன.

ஒரு காணிக்கை மக்கள் என்னபெயரிட்டு வழங்கி வந்தார்களோ அப்பெயரை ஒல்லாந்தர் தங்காலத்தில் பதிந்திருக்கிறார்கள் என்றும், போர்த்தர் பின்னவர் ஒல்லாந்தர் ஆதலால் போர்த்தர் காலத்திலேயும் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்திருக்கிறது என்றும் போர்த்தர்தான் தமிழரசர் கோட்டையை இடித்தவர்கள் ஆதலால் அவர்கள் இடிக்கும் போதே அக்கோட்டை இருந்த இடம் அதுவென்றும் தேர்ந்துகொள்க.

அப்பால் சிங்கையாரியகுலம் பல கோட்டைகளை வௌ;வேறு இடங்களில் கட்டி ஆட்சிசெய்யவில்லை ஆதிச்சிங்கையாரியன் தொடக்கம் (கி.பி. 948 இறுதிச்சங்கிலியன் காலமும் கி.பி. 1620 வரை ஒரே சிலைநகரிலே ஒரேகளத்திலே ஒரே கோட்டையிலேதான் ஆட்சிபுரிந்தார்கள். அந்நகர் தனக்கிருந்த தொடர்பு சம்பந்தமாக நல்லூர் நகரென்றும் சிங்கைநகர் என்றும் யாழ்ப்பாணநகர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுண்மை முன்னும் பின்னும் காணலாம்.


31. நல்லூரும் சிங்கைநகரும்
சிங்கையாரியன் வந்து நல்லூரில் தலைநகரைக்கட்டி அதற்குச் சிங்கைநகர் என்று பெயர்வைத்து அரியாசனம் ஏறி இருக்கின்றான். வந்த இராசகுமாரன் அரசனானபின் பெற்றபெயர் சிங்கையாரியன் அவன் அரசனானதும் சிங்கையாரியன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டான். கைலாயமாலை அவனைச்சிங்கையாரியன் என்று பாடியது அவன் அரியாசம் ஏறியபின் பாடப்பட்டபடியால் என்க.

என்னையெனின் அவனுக்குப்பின் அரசாசனம் ஏறிய அவன் மகனுக்குக் குலசேகரசிங்கையாரியன் என்று பெயர். இங்கே குலசேகரன் இடுகுறிப்பெயர். சிங்கை நகர்ப்பெயர். ஆரியர் சாதிப்பெயர். சிங்கை யாரியகுல இராசபரம்பரை நல்லூரில் இருந்துதான் தோன்றியிருக்கிறது. இந்நுட்பம் உணராமல் பொலன்னறுவையை விட்டு எங்கேயோ தொலைவுண்ட கலிங்கமாகன் யாழ்ப்பாணம் வந்தான் என்றும், அவனே வல்லிபுரத்தில் சிங்கைநகரைக்கட்டினான் என்றும் புரைபாடாக மொழிந்தனர் பிறர்

+ஆ.மு.யா.ச. 17ம் பக்கத்தில் “இராசகுமாரன்” பாண்டி மழவன் முடிதூக்கிக்கொடுக்க கங்காதரஐயரால் விதிப்படி மகுடமும் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி என்றும் பட்டமும் சூட்டப்பட்டான் என்றுரைத்திருப்பது இவ்வுண்மையை மேலும் நிச்சயப்படுத்துகிறது.

1. வல்லிபுரத்தில் சிங்கைநகர் கட்டிய வரலாறில்லை.

2. வல்லிபுரத்தில் சிங்கையாரியர் யாவரேனும் வாழ்ந்த குறிப்புக்களில்லை.

3. சிங்கை ஆரியர் யாரேனும் வல்லிபுரத்தலைநகரை விட்டு நல்லூருக்கு தலைநகரைமாற்றி அமைத்த செய்தியும் இல்லை.

4. செண்பகப்பெருமாளும் கனகசூரிய சிங்கையாரியனும் வல்லிபுரத்தில் பொருதிய வரலாறுமில்லை.

5. கனகசூரியன் தோற்றோடிய நகரம் ஓர் இடத்தில் இருந்ததுவென்றது வேறோர் இடத்தில் இருந்தது என்றும் சொல்லப்படவில்லை. இங்ஙனம் இல்லாதவைகளை உண்டென்று நிச்சயிக்க யா.ச. காரர் யா.வை. விகாரர் ஒரு ஆதாரமும் காட்டவில்லை. அன்றியும் அவர்கள் கருத்துப்படி அவர் சொல்லும் சிங்கைநகரம் 1450க்கு முற்பட்டதனால் (1450 – 949) 500 ஆண்டு வரை இருந்த அத்தலைநகரம் சிங்கையாரியரின் வாழ்வின் உள்ள ஒரு குறிப்பையும் கொடுக்காமையோடு துறைமுகம் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு குறிப்புங் கொடுக்கவில்லை.

மேற்படி நூலினர் கைலாயமாலை வைபவமாலைகளால் சொல்லப்பட்ட உண்மைகளை உணர்ந்து கொள்ளாமையாலே, அன்றியும் ஒருபகுதியைப் பிழையாகவும் உணர்ந்து கொண்டமையாலே வல்லிபுரத்திலே அதாவது வல்லிபட்டணமாகிய செங்கடக நகரிலே கி-பி. 1450க்கு முற்பட்ட நல்லூர் வரலாற்றை எழுதி அதனைச் சிங்கைநகர் வரலாறு என்று பெயர்வைத்துக்கொண்டார் என்க. எனவே, செங்கடக நகரைத் தெரியாமல் விட்டார். சிங்கை நகரையும் தெரியாமல் விட்டார். இவ்வுண்மையைமேன் மேலும் காண்பாம்.

வல்லிபுரத்திலே சிங்கை நகரைக் கண்டவர்கள் ஆதிச் சிங்கையாரியன் தொடங்கி இறுதிக் காலத்தில் நல்லூரில் ஆட்சி பண்ணிய பிரபல மன்னனான சங்கிலி மன்னன் வரையுமன்றி அவன் பிற்சந்ததியாரராய்ப் போர்ந்தர் காலத்தில் சிற்றரசர்களாய் இருந்தாருங் கூடச்சிங்கையாரிய குல அரசர்தாமென்றும் அறிக.

செண்பகப்பெருமாள் படை எடுத்த இடம் நல்லூரா அல்லது இவர் சொல்லும் வல்லிபுரத்திலுள்ள சிங்கை நகரமா அது நல்லூரே.

1. செண்பகப்பெருமாள் தமிழ்ப்படைகளைக் கொன்று இரத்தாறு ஓடச்செய்த இடம் நல்லூர் என்பதாலும் (யா.ச.பக். 310)

2. செண்பகப்பெருமாள் நல்லூரை வென்று ஆட்சிபுரிந்த காலையில் கோகில சந்தேகம் அல்லது குயிற்றூது என்னும் தூது நூலினை பாடியவர் நல்லூரை வெற்றிகொண்டு நானாகீர்த்தி பொருந்த வாழுகின்ற சம்புமால் குமாரேந்திரனுக்கு (செண்பகப்பெருமாளுக்கு) எனப்பாடி இருக்கும் வகையில் அந்நல்லூர் சொல்லப்படுவதாலும் செண்பகப்பெருமாள் படைஎடுத்துப் போர் பொருந்திய இடம் நல்லூரே.

3. செண்பகப்பெருமாள் பொருந்தியது கனகசூரியனுடன் என்று சொல்லப்படுவதால் கனகசூரியன் நல்லூரில் ஆட்சிசெய்யும் போதுதான் செண்பகப்பெருமாள் அங்குபடை எடுத்தான்.


நல்லூரும் சிங்கை நகரும் பகுதி 21
வைபவ மாலையார் “பொன்பற்றியுயூர் வேளாளன்பாண்டிமழவன் என்றும் பிரபு மதுரைக்குப்போய் சிங்கையாரியன் என்னும் சூரியவமிசத்து இராச குமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலைபரத்தை அறிவித்து இவ் யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்ய வரவேண்டுமென்று கேட்க, சிங்கையாரிய இராசன் மறுத்துப் பேசாமல் பாண்டி மழவ் கேள்விக்குடன்பட்டு புவனேகவாகு வென்னும் மந்திரியையும் கூட்டிக்கொண்டு வந்து யாழ்ப்பாத்தில் வந்திறங்கி நல்லூர்ப் பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன்முகூர்த்தத்தில் அத்திவாரம்போட்டு அனைத்தும் கட்டுவித்து ……………… திலகவதியார் என்னும் பத்தினியுடனே கிருகப் பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தான்.” (யா.வை. மாலை. பக். 26-27)

எனவே நல்லூரிலே சிங்கை ஆரியன் கிருகப் பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தான் என்க. அவ்வாறிருப்ப, இந்நல்லூர் அரசனாகிய இவன் பரம்பரையில் பின்வந்த செகராசசேகரனைத் தட்சணகைலாய புராணகாரர்.

“அந்நாட்டரசன் ஆரியர்கோமான் சிங்கையாதீபன்” என்றும் இந் நல்லூரிலிருந்த செகராச மன்னர் இயற்றுவித்த செகராசசேகர மாலையில் அவ்வியற்றறுவித்தோனைக் குறிக்கும் இடங்களில் “செகராசசேகரன் சிங்கைமேவு மாரியர் கோன்” (செ.சே.மா.செ. 36)

“சிங்கையெங்கோமான்” (செ.சே.மா.செ. 86)
இங்கேயும் சிங்கைநகர் அவ்வரசர் இடத்தொடுபடுத்திச் சொல்லப்படுவது காண்க. இச்செகராசசேகரன் கி-பி 948 வரை ஆரம்ப தலைநகரமைத்த கூளங்கை மன்னனின் பின் அவன் பரம்பரையில் வந்த கி-பி. 1302 – 1325 வரை அரசாண்ட மன்னன் அல்லவா?

சிங்கைப் பரராசசேகரன்
சிங்கைச்செகராச சேகரன் என்னும் இவ்விருவரும் நல்லூரில் இறுதிக்காலத்திருந்த அரசர்களல்லவா?

இங்கே மேற்கட்டிப் போந்தவைகளால் சிங்கை என்பது ஒரு இடப் பெயரென்று ஐயமற விளங்குகின்றது. அவ்வாறாயின் அது நல்லூர்கண்டையில் உள்ளதா? அல்லது நல்லூரைத் தன்னகம் கொண்;ட பெரியவூரா? நாடா அவ்வாறு சொல்லவும் எவ்வாறான குறிப்பும் கிடைக்கவில்லையே பின் என்னை?

சிங்கை என்பது தலைநகர்க்கு வைக்கும் ஒரு பழம்பெயர் “வாழ்சிங்கையுங் கொங்கு மண்டலமே” எனக் கொங்குமண்டல சதகத்திலும் குறிக்கப்பட்டிருக்கின்றது.

ஆரியர் என்பதன் பொருள் பூசிக்கத் தக்கவர். மேலோர் பிராமணர், ஆரிய மொழியுணர்ந்தோர் என்பனவன்றோ? ஆனால் நல்லுரரசர்கள் சோழகுலத்தவர், பூணூல் தரித்தவர் இராமேசுவரப் பிராமணருடன் பின் விவாகம் செய்தவர்.

எனவே சிங்கை ஆரியர் என்றால் சிங்கை நகரத்தை ஆளும் மேலாஞ்சாதி அரசர் என்பது பொருள் ஆகையால் நல்லூரில் தலைநகர் கட்டிக்கிருகப்பிரவேசம் செய்த அரசர். தாங்கட்டிய அந்நகர்க்குச் சிங்கைநகரம் என்னுபொபவர் வைத்துள்ளனர் என்று தெரிகின்றது. அவ்வாட்சிப்பீடமெறி வழி வழி அரசுபுரிவோர்க்கெல்லாம் சிங்கை ஆரியனன்று சிங்காசனப்பட்டப்பெயர் வருகின்றது.

“இவ்வாரியச் சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து அரசு புரிந்தமையின் சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்டனர்.

எனவே சிங்கை என்னும் பெயர் ஒரு நகரத்தின் பெயர்தான் என்று தேர்ந்துகொள்க. நல்லூர் அந்நகர் கட்டிய ஊரின் பெயர்சிங்கை ஆரியகுல மன்னரனைவரும் நல்லூரில் கட்டப்பட்ட அவ்வொரு தலைநகரிலிருந்துதான் ஆட்சிசெய்தார்கள் என்றும் சொன்னோம் இங்கே அத்தலை நகரின் பெயர் சிங்கை என்றும் சொன்னோம். இவற்றை யாங்கண்ணும் மறவற்க்.

பிறர்சிங்கை நகர் பிறிதோரிடத்தில் இருந்த தென்றும் நல்லூர் நகர் நல்லூரிலிருந்ததென்றும் அச் சிங்கை நகரப்பரம்பரையினர், பின்னர் பழைய தலைநகரம் பழாய்ப்போனபடியால் நல்லூரில் வந்து குடியேறினர் என்றும் சொல்லியுள்ளார். ஏன் அப்பழைய தலைநகரம் பாழாய்ப் போனது என்றும் சொல்லவில்லை. நிற்க.

என்னை பிறரும் நல்லூர் நகரம் என்றொன்றும் சிங்கை நகரம் என்றொன்றும் இருந்ததாகத்தானே சொல்லுகிறார்கள். நீவிர் சொல்லும் புதுமைதான் என்னை என்னின். அப்பிறர் வௌ;வேறு இரண்டிடத்தில் இரண்டு தலைநகரங்கள் இருந்தன என்னுரைக்கின்றனர். அவற்றுள் ஒன்று நல்லூரின் உள்ள நல்லூர் நகரம் மற்றது வல்லிபுரத்தில் சிங்கைநகரம் என்கிறார்கள் யாம் சொல்வதாவது. நகரம் ஒன்று. களமுமொன்று கட்டிக் குறிப்பிடும் பெயர்கள்தான் இரண்டு. ஒன்று அந்நகரம் இருந்த நல்லூர் என்னும் ஊர்ப்பெயராலே சுட்டுகிறோம் ஒன்று அந்நகர்க்கு அரசர்வைத்த சிங்கை என்னும் பெயராலே சுட்டுகிறோம். என்பதே.

அதாவது நல்லூரில் கட்டப் பட்டநகர்க்குச் சிங்கைநகரம் என்பது அரசர் வைத்த பெயர் என்க. நல்லூர் அந்நகர் இருந்த ஊர்ப் பெயர், சிங்கை நகர்ப் பெயர். சிங்கை என்பது முதலில் அரசர் வைத்த பெயர். சிங்கை நகர் சிங்கை என்னும் பெயருடைய நகரம் என்றும், நல்லூர்நகர் நல்லூர் என்னும் ஊரிற் கட்டப்பட்ட நகர் என்றும் பொருள் கொள்க.

கைலாயமாலை அவ்வாதி ஆரியன் எங்கே தலைநகரைக் கட்டினான் என்பதை விளக்குவான். “மதித்த வளங் கொள்வயல் செறி நல்லூரில்” என்று சொல்லி இருக்கு. ஊர்ப்பெயரால் சொல்லப்பட்டிருக்கு. வைபவமாலையார் “யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லூர்ப்பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக்கருதி” … என்பது முதலாக அவ்வாறு நல்லூரில் தலைநகர் கட்டினான் என்கின்றனர். இவர் சிங்கை நகர் நல்லூரில் மறைந்த (கி.பி. 1958) ஒரு நூற்றாண்டின் பின் தம்நூலை எழுதியுள்ளார். அப்பொழுது சிங்கை நகர் மறைந்து நல்லூர் நிலமாய் விட்டது. எனவே தலைநகர் கட்ட முந்தியும் அவ்விடம் நல்லூர், தலைநகர் மறைந்தபின்னும் அவ்விடம் நல்லூர் என்க.

அரசர் அவைக்களத்தில் இருந்து பாடினோரும், அவைக்களத்துத்தோன்றிய நூல்களாற் பாடினோரும் அந்நகரைச் சிங்கை என்னும் நகர்ப் பெயரால் சுட்டினர். ஆயின் கைலாயமாலைக்காரர் வைபவமாலைக்காரர். அக்கட்டியதலை நகர்க்குச் சிங்கை என்று பெயர் வைக்கப்பட்டது. என்று விளக்கம் சொல்லவில்லை. அவர்கள் இவ்வாறு பிரித்து நோக்கவில்லைப் போலும். அவர்கள் கட்டப்பட்ட இடத்தின்மேலேயே அவ்விடவரலாற்றை வைத்து மொழிந்தனர்.

கனகசூரியனும் மக்களும் வந்து குடியேறியது செண்பகப் பெருமாள் இருந்த இடத்தில். கனகசூரியன் முன்னிருந்ததும் பொருதிய இடமுமொன்று அவன் போர் புரிந்த இடம். சிங்கை நகரம். எனவே அவன் முன்னோர் பதின்மரும் இருந்தரசு. செய்தவிடமும் அது விஜயகூழங்கை கிருகப்பிரவேசம் செய்த இடமும் அது. அவன் கட்டிய தலைநகரல்லவா எனவே விஜயகூழங்கை அத்திவாரம் போட்டதலை நகரம் சிங்கைநகரம் எனவே.

1. அத்திவாரம் போடப்பட்டது
2. கனக சூரியன் வரை இருந்தது
3. செண்பகப் பெருமாள் பொருதியது.
4. கனகசூரியன் திரும்பப் பிடித்தது.
5. சிங்கைப்பரராச செகராசசேகரங்கள் இருந்தது.
6. எனவே சங்கிலி இருந்ததும் அச் சிங்கைநகரம்
7. எனவே போர்தர் போரில் வென்றபின் மறைந்த சங்கிலி இருந்த தலைநகரம்தான் பின்னர் அழிந்து நிலமாக இருப்பது சங்கிலித்தோப்பு என்று நாமமிட்டுப் பின்னர் வழங்கிவரும் நிலம்.

எனவே ஒரே இடத்தில் ஒரேகளத்தில் இருந்த தலைநகர்க்கு நல்லூர் நகரென்றும் சிங்கை நகர் என்னும் இருபெயர்கள் பேசப்பட்டுவிட்டன.

எனவே வல்லிபுரத்தில் சிங்கை நகரை வைத்து நூல் எழுதியது பிழை இவ்வளவில் கைலாயமாலை வைபவமாலைக் கூற்றுக்கள் உண்மையா இல்லையா.


சிங்கைநகர்ச் சுவர்
“பறங்கிக்காரர் கி.பி. 1590ல் கொழும்புத்துறையிலிறங்கி நல்லூரைச் சருவிய காலையில் சிங்கைநகர் என்னுப் பெயரோடு ஓர்பெலத்த அரிணருந்ததென பாதர் குவேறோஸ் கூறுகின்றமை” (ஊழஙெரளைவய P. 367) (யா.வை.வி.பக்;.68) “யாழ்ப்பாணத்தில் போர்த்தரின் இரண்டாம் படை ஏற்றம் கி.பி. 1591ல் நடந்தது என்பர். சு.ஞா. புவிராசனின் அபசெயம் என்பதில் வண. சு.ஞா அவகள் மேலும் சொல்லுவதாவர் “28ந் திகதி அதிகாலை பறங்கியர் தம்சமய நிஷ்டைகளை முடித்துக் கொண்டு குருமார் ஆசி சொல்ல எழுந்து நல்லூரை நோக்கி நடத்தலும் வழியில் (யாழ்ப்பாணத்துப் பூர்வதலைநகரின் ஞாபகார்த்தமாய்ப் போலும்) சிங்கை நகர் எனப்பெயர் தரித்த முள்வேளி அரணில் தமிழர் சத்துருபடையை வீரா வசத்தோடு தாங்கிச் சமராடினர். குண்டு, அம்பு, தீக்கூண்டு கற்களின்திரள் கார்மேகம்போல் நெருங்கிப் பறங்கியர்மேல் வருஷித்துக் கொண்டிருந்தது” (யா.வை.வி.பக். 141)

இங்கே பழைய தலைநகரோடு ஒரு அரண் இருக்கவில்லை. அது ஞாபகத்துக்காகவும் கட்டப்படவுமில்லை. அதுதான் பூர்வகாலச்சிங்கை நகர்க் கோட்டையென்றறிக.

ஆதிஅரசன் தலைநகர்களம் இக்கோயில்களுக்குள்ளேதான் இருந்திருக்கு அதில் ஒருவர் பின் ஒருவராக அரசாண்டார்கள் இவர்கள் யாரேனும் வேறு எங்கும் போகவுமில்லை எங்கிருந்துவரவுமில்லை தலைநகரை எவரேனும் வேறிடத்துக்கும் மாற்றியும் அமைக்கவில்லை. கனகசூரிய மீளக்கைப்பற்றி அச்சிங்காசனத்தில் ஏறிக் கொண்டான். அவன் பரம்பரையிலே சங்கிலி இருந்தான் அப்பொழுது போர்த்தர்படை வந்தபோது மதிலிலே சிங்கைநகர் என்று எழுதப்பட்டிருந்தது அதிலே தமிழ்ப்படையின்பெரும் போர் நிகழ்ந்தது. பீரங்கித்தாக்கல்களுக்கு மதில் நிலைநிற்க முடியவில்லை. போர்த்தர் வென்றனர் சிங்கை ஆரியர் பரம்பரை அவர்கள்கீழ்ச்சிற்றரசராய் இருந்தனர். போர்த்தர்பறங்கித் தெருவிலும் கோட்டையிலும் இருந்தனர். இக்களத்திலே ஆதிச்சிங்கை ஆரியன் ஆட்சி கி.பி. 948, ஆரம்பம் செண்பகப்பெருமாள்படை 1450ல் வந்தது போர்த்தர் வென்றது 1620, சிங்கைஆரியர் சிற்றரசு நடந்தது கி.பி. 1620ல் தொடங்கி 1658ல் போர்த்தர் ஆட்சிமுடிந்தது. கி.பி. 1965 அப்பால் ஒல்லாந்தர்காலம்.


32. சிங்கைநகர்
சிங்கையாரிய மன்னர் தலைநகரமொன்று. களமுமொன்று, குலமுமொன்று ஆகக்கொண்டு பார்க்க அது நல்லூரிலிருந்ததனால் அது சிங்கையாரிய மன்னர் அரசாண்ட தலைநகரம்தான் என்று முன்னர் கண்டோம் ஆகையால் அது சிங்கைநகரம். இன்னும் என்னையெனில் கி.பி. 1450 ஆண்டு வரை சிங்கைஆரிய அரசர்களில் பதினோராவது அரசனாகித் துணியப்பட்டுள்ள கனகசூரியவரசன்பால் செண்பகப் பெருமாள் படை எடுக்கும்வரை அரசாண்ட தலைநகரம் யாது ஆதிச்சிங்கை ஆரியன் அடியிட்ட தலைநகரா? அல்லது வேறொன்றா? அது அவ்வாதி ஆரியன் அடி இட்ட அவ்வாதித் தலைநகரேதான். எவ்வாறெனின் கனகசூரியன் அரசாட்சிக் காலத்திலே தான் அந்நிய சிங்களவானா செண்பகப் பெருமாள் படை எடுத்தானே அன்றி அவன் முன்னர் யாரேனும் அத்தலைநகர்க்குப் படைஎடுத்தது கிடையாது. அச்சூரியன் வரை அவன் முன்னோர் எல்லாம் தம் நகர்க்கு யாது படை எடுப்போ அச்சம் கலவரமோ இன்றிசமாதானமாக அரசாண்டு வந்தனர். அப்படிப்படை எடுத்த செய்தி எந்த நூல்குறிப்பிலும் பேசப்படவில்லை. எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தலைநகரை மாற்றியடைக்கவுமில்லை. எனவே கனகசூரியன் செண்பகப் பெருமாள் வரும்பொழுது இருந்த தலைநகரம் கூளங்கையாரியன் கட்டிய அச்சிங்கை நகரேயே. எனவே செண்பகப் பெருமாள் படைஎடுத்ததும் அவன் கி.பி. 1467ம் ஆண்டு வரை அரசாண்டு கொண்டிருந்ததும் அச்சிங்கை நகரிலேயே (என்னையெனின் செண்பகப் பெருமாள் வென்றதும் கனகசூரியன் தோல்வியடைந்தோடினதும்) அவ்வொரு இடம் செண்பகப் பெருமாள். கோட்டையில் ஆறாம் பராக்கிரமபாகு காலமாகிவிட அவன் கோட்டை இராச்சியம் வகிக்கப்போக அவன் பிரதிநிதியாக இருந்த விஜயபாகு அரசாட்சியில் இருக்கத் திரும்பக் கனக சூரியன் வந்து அவனுட் போராடி அவ்விடத்தைக் கைப்பெற்றிக் கொண்டானதலால் அவன் திரும்பக் கைப்பற்றிய இடமும் சிங்கை நகராம் என்க.


33. சிங்கை நகரும் சிலாசனமும்
“ஏன் ஜென்ற் யாவ்னா நூலாசிரியரும் (ஏ.ஜா.பக். 46 – 80) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் எழுதிய இன்னொருவரும் தன் நூலில் (யா.வை.வி.பக்.106) ஒரு சாசனத்தை அதாவது இரு பேரும் ஒரே சாசனத்தை எடுத்துக் காட்டி இச் சிங்கை நகர் வல்லிபுரத்தில் இருந்ததென்று நிச்சயம் செய்கிறார்கள். இச் சாசனமாவது.

கங்கணம் வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர் வளைப்
பங்கயக் கையாற் றிலதம் பாரித்தார் – பொங்கொலி நீர்ச்
சிங்கை நகராரியனைச் சேரா வனுராசர்
தங்கள் மடமாதர்கள் தாம் என்பது
ஏன் ஜென் ஜாவ்னாக்காரர் கி.பி. 1210ம் ஆண்டு தொடங்கி,

கி.பி. 1440ஆம் ஆண்டு வரை 230 ஆண்டுகள் வல்லிபுரத்தில் இச்சிஙகை நகர் இருந்ததாகச் சொல்லுயிருக்கிறாரே! (யு.து.P. 370) யாழ்ப்பாண வைபவ விமர்சனகாரர் வல்லிபுரத்தில் இச் சிங்கை நகர் கி.பி. 1242ஆம் ஆண்டு தொடங்கி, கி.பி. 1450ஆம் ஆண்டு வரை 208 ஆண்டுகள் இருந்ததாகச் சொல்லியிருக்கிறாரே! (யா.வை.வி.பக். 80) அப்படி 200 ஆண்டுகளுக்கு மேலாக ஓர் இடத்தில் இருந்த ஒரு தலை நகரை அது இருந்த இடம் இன்னது தான் என்று நிச்சயம் செய்ய எண்ணியபொழுது இச் சாஸனத்தைப் பார்த்தா நிச்சயித்திருக்க வேண்டும்? ஏன் இவர்க்ள இவ் வல்லிபுரத்தைப் போய்ப் பார்த்து அங்கேயுள்ள சிங்கை நகர அடையாளங்களையோ! வேறும் சின்னங்களையோ கண்டு அவைகைள எடுத்துக் காட்டி அச் சிங்கை நகர் இவ்வல்லிபுரத்தில்தான் இருந்திருக்கிறது என்று ஏன் நிச்சயம் செய்திருக்கக்கூடாது? இவர்கள் ஒரு முகமாக 200 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இடத்தில் இருந்ததாக நிச்சயம் செய்யும் ஒரு தலை நகரை, இவர்கள் கூற்றுப்படி பதினொரு தலைமுறை மன்னர்கள் இருந்தரசு புரிந்த ஒரு தலை நகரை, இட நிச்சயம் செய்வதன்கண் இச் சாஸனத்தையா எடுத்துக் காட்டவேண்டும்? அந்த இடத்தில் அம் மன்னருள் ஒருவர் வாழ்ந்த ஒரு சுவட்டை – ஒரு அடையாளத்தை எடுத்துக் காட்டினாற்போதுமே. இவர்கள் அச் சாசனத்தை வலிய சான்றாகக் கொண்டு வல்லிபுரத்தில் சிங்கை நகர் இருந்தது என்று முடிவுபண்ணிவிட்டார்கள். அன்றியும் வல்லிபுரத்தில் சிஙகை நகர் உண்டென்பதை அதன் புரதான அம்சங்களைக்கொண்டோ அவற்றை எடுத்துக் காட்டியோ நிச்சயம் செய்யவில்லை என்பதும் கவனிக்குக.

இச்சாசனத்தின் பொருள் வரையறவாய்த் தெளிவாய் வெளிப்படையாய் இல்லாத தாரதன்மியத்தை விளங்கினவர்கள் இச்சாசத்தை மாத்திரம் சாட்சியாக வைத்து வல்லிபுரத்தில் சிங்கை நகர் உண்டென்று நிச்சயம் பண்ணத் துணியார். துணிவதும் தப்பு நிற்க.

சிங்கை நகர் மன்னரைச் சிங்கையாரியர் என்பார்கள் இவ்வாராய்ச்சிக்காரர் பதினொரு மன்னர்கள் அங்கு வாழ்ந்ததையும் அப்பரம்பரை இருநூற்றுச் சொச்ச ஆண்டுகள் அவ்விடத்தில் வாழ்ந்ததையும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அப்படி ஒப்புக்கொள்ளுபவர்கள் ஏன் அம்மன்னர் வாழ்வோடு சம்பந்தப்பட்ட ஏதாவதொரு தொல்பொருளை எடுத்துக்காட்டிச் சாசனத்தால் தாம் கண்ட கோட்பாட்டை உறுதிப்படுத்hமல் விட்டவாறு! ஒரு முடிபை ஒரு ஆராய்ச்சியாளர் நிலை நாட்டும்பொழுது அம்முடிவை வலியுறுத்தும் பிற சான்றுக்களையும் எடுத்துக்காட்டுதல் அவசியமானது என்பதை இவ்வாராச்சிக்காரர் புரியாமலில்லை. அவர்கள் வாய்க்கூற்றாலேயே இவ்வுண்மையறியலாம்.

“பண்டை நாள் ஒரு சாதியார் ஒரு தானத்தில் வசித்துப் போயினர் என்னும் செய்திக்கு வேறு சாசன சாட்சியங்களில்லாமற் போகலாம். சாட்சியங்களிருப்பினும் அவை மயக்கமுள்ளவைகளாகலாம். அன்னோர் அத்தானத்துக்கிட்டு வழங்கிய பெயர்மட்டும் நிலைப்பதுண்டாயின் அதுவோ அவர்கள் ஒருநாள் அங்கு குடியிருந்தமைக்கு என்று மழியாத சந்தேக விபரீதமில்லாச் சாட்சியங்களாகும். இவ்வாறே யாழ்ப்பாணத்துத் தானம் பெயர்களுட் பெரும்பாலானவை” (யா.வை.வி.பக்.29) ஆகையால் இச் சாசனத்தைக் கண்ட துணையானே தாமே நேரடியாக வல்லிபுரத்துக்குச் சென்று ஆங்குள்ள தொல் பொருள் ஆய்வுப் பொருட்களை ஆராய்ந்து கண்டு அக்காட்சியாற் பெறப்பட்ட முடிவாக அச்சிங்கை நகரை வல்லிபுரததில் நிச்சயம் செய்துரைப்பின் சாலவும் பொருத்தமாம். அதனை யார்தான் மறுப்பர். சாசனமாம் அப் பிறர் கூற்றைத் துணைக் கொண்டு மாத்திரம் வல்லிபுரத்தில் சிங்கை நகரை நிச்சயம் செய்வது இவர்கள் ஆய்வின் நெகிழ்ச்சியைக் காட்டியவாறாம். நிற்க. அச் சாசனத்தில் வல்லிபுரம் சொல்லப்படவில்லையே. நம் கொள்கை வல்லிபுரத்தில் சிங்கை நகர் இல்லை என்பதுதான்.

வல்லிபுரத்தில் சிங்கையாரியர் வாழ்ந்ததான குறிப்புக்கள் யாதொன்றும் அகப்படாமை கொண்டு வல்லிபுரத்தில் சிங்கைநகர் இல்லை என்ற முடிபுக்கு அவர்கள் வரவில்லை. சிங்கநகரைப்பற்றி அவர்களுக்குண்டாயிருந்த ஞான சூனியத்தாலே சிங்கை நகர் அங்கே இல்லாவிட்டால் அது இருந்ததாக அத்தாட்சிப் படுத்தும் சான்றுக்கள் அங்கே கிடைக்காதன்றோ, எனவே அதனாலேதான் அவர்கள் சாசனம் ஒன்றைக் கொண்டு சிங்கை நகரை அங்கே நிச்சயம் செய்திருக்கிறார்கள். வல்லிபுரத்தில் சிங்கை நகரிருந்திருந்தால் அந் நகர் மன்னரின் வாழ்வுத் தொடர்புகள் காரணமாக அவர்கள் பெயரால் நிலங்கள் குளங்கள் கோயில்கள் இன்னும் வேறு பொருள்கள் வேறும் சுவடுகள் பிற ஐதீகங்கள் என்பன போன்ற பலவற்றுள் இவ்வுண்மை தெரிந்துகொள்ளக்கூடிய குறிப்புக்களிப்பொழுதும் அங்கேயிருக்க வேண்டுமே அவைகள் ஒன்றும் அங்கேயில்லையே யாம் முன்னர் வல்லிபுரத்துக்குச் சென்று அந்நகர் இருந்த இடங்கள் எல்லாம் சுற்றிப் பார்த்து மீண்டுள்ளோம் அந்நகர் இருந்த அதாவது அங்கே சிங்கையாரியர் வாழ்ந்த சுவடு ஒன்று கூட நாம் அறிய முடியவில்லை நிற்க.

ஒரு விஷ சர்ப்பம் தோன்றி மறைவர் போன்றதல்ல ஓர்pடத்தில் ஒரு நகர் தோன்றி மறைவர். அந்நகர் அங்கே கட்டப்பட்டால் அங்ஙனம் கட்டிய வரலாறெங்கே? அழிந்து பட்டால் அழிந்து பட்ட வரலாறெங்கே? அந்நகர மன்னர் பிற நாட்டு மன்னரோடு பொருந்திய போர் வரலாறெங்கே? எங்கே அவர் காலச்சம்பவங்கள்? எங்கே அவர்கள் குடும்ப வரலாறுகள் பிற குறிப்புக்கள்? இவர்பின்னவர் நல்லூரில் வாழ்ந்தால் இவர்கள் தலைநகர் நல்லூருக்கு மாற்றிய வரலாறெங்கே? இன்னோரன்ன பல வினாக்களை எழுப்பலாம். இவையொன்றுக்குக்கூட அவர்கள் தூலாதாரம் காட்டவில்லை. அங்ஙனம் காட்டவும் முடியாது சிங்கையாரியரின் வல்லிபுரச் சம்பந்தம் பற்றிக் கைலாயமாலை, வைபவமாலை ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

34 “இலகிய சகாப்தம்
எண்ணூற்றெழுபது”
“இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபதாம் ஆண்டதெல்லை
அவர் பொலி மாலை மார்பனாம் புவனேக வாகு
நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே”
இது, கைலாய மாலையில் உள்ள பாடல் இது. ஆதிச் சிங்கை ஆரிய மன்னனின் ஏவலின்படி அமைச்சர் புவனேகவாகு யாழ்ப்பாண நல்லூர்த் தலைநகர் கட்டிய செய்தியைச் சொல்வது. அதில் உள்ள இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபது என்பதற்கு எட்டு நூறும் 70உம் கொண்ட தொகையென்று பொருள்கொள்ளாமல் பிறர் வேறு தொகையாகப் பொருள் காண்கிறார்கள். யா.வை.வி. காரர் சொல்லும் பொருளாவது “எண்ணூற்றெழுபது 870 அன்று ஆயிரம் ஆகிய (பேர்) எண்ணும் 170 உம் சேர்ந்த கணக்காமெனத் தோன்றும் எண் என்பதை ஆயிரம் என்னும் பேரெண்ணெனக் கொள்வது எவ்வாறெனில் இத் தனிக்கவி வேறோரு கவியை அனுசரித்துச் செய்யப்பட்டது அக்கவியில் எண் என்பது பேரெண்ணையே குறிக்கும் என்பர் அது வருமாறு.

“எண்ணிய சகாப்தம் எண்ணூற்றேழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராமகாதை பங்குனி உத்ர நாளில்
கண்ணிய அரங்கிர் முன்னே கவியரங் கேற்றினானே

இக் கவியிற் சொல்லிய எண்ணூற்றேழு எண் 1000 + 107 என நின்று சகாப்தம் 1107 ஆகுமென்றும் அது கிழீஸ்தாப்தம் 1185ஐக்குறிக்கும் என்றும் இது பிற ஏதுக்களைக்கொண்டு நிச்சயித்த கம்பர் காலத்துக்குப் பொருத்தமுடையதென்றும் கற்றோர் கழறுவர். ஆகவே நம் யாழ்பாணத் தனிக் கவி கூறும் ஆண்டு 1000 + 170 என வந்து கிறீஸ்தாப்தம் 1248க்குச் சரியாகும். இவ்வாண்டு காலிங்கச் சக்கரவர்த்தி புலத்தி நகரை விட்டகன்ற ஆண்டுக்கு (1242) ஆறாண்டு மட்டும் பிற்பட்டது. இக் காலந்தான் யாழ்ப்பாண நகர் நிர்மாணித்து முடிவெய்தியது என்பது மிகப் பொருத்தமுடைத்து” (யா.வை.வி.பக். 67) இது மகா தப்பிதமான முடிபு. யாழ்ப்பாண நகரி எதுவென்பதை அதாவது நல்லூர் நகரா, சிங்கை நகரா, யாழ்ப்பாணப் பெயர் உள்ள நகரா அல்லது யாழ்ப்பாணத்தே கட்டப்பட்ட நகரா) இலக்கிய சகாப்தம் 870 என்பர் கம்பர் காலத்துக்கு 200 ஆண்டு வரை முற்பட்ட பாட்டு, 10ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த சிங்கையாரியனையும் அவன் மந்திரியையும் பாடியது அப்பொழுது கம்பர் பிறக்கவில்லை. அவர் பாடல் பெறவுமில்லை. இன்னும் என்னையெனின் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணன் இறந்து போகக்கொஞ்சக் காலமும் தளப்பம் நாட்டைய அதனைச் சகிக்கலாற்றாக பாண்டி மழவன் சிங்கையாரியனை அழைத்துவந்து அரசியற்றினான் என்பதாலும் அது பத்தாம் நூற்றாண்டென்பது நிச்சயமாயிற்று. கம்பர் காலத்துக்குப் பிற்பட இப்பாடல் எழுந்தால்தான் அதை அனுசரித்து இப்பாடல் எழுந்ததென்னலாம். நிற்க.

பொலன்னறுவையினை விட்டு ஓட்டங் கொண்ட மாகன் யாழ்ப்பாணம் வந்தான் என்பதற்கொரு ஆதாரமுமில்லை. அவன் தலைநகர் அங்கே அமைத்த ஆதாரமுமில்லை. எனவே அவன் அங்கே வாழ்ந்த குறிப்பும் கிடைக்கவில்லை. அவன் வரவில்லை என்பதே முடிபு. பொலன்னறுவையில் இறந்தானா? வழியில் இறந்தானா? அரச வாழ்க்கை ஆபத்தானது. அப்படியானால் இப்பாடல் அப்பொழுது வந்துள்ள - இருந்துள்ள ஒருவன் மேலேதான் பாடப்பட்டதென்க. நிற்க.

இப்பிறர் இக்கைலாயமலையில், பாண்டி மழவன் போன்றும், அவன் அழைப்பை ஏற்று சிங்கையாரியன் வந்ததும் நிகழா நிகழ்ச்சி என்கின்றனர். அவ்வகையிலே இக்கைலாய மாலை தள்ளத்தக்க நூலென்கின்றனர். அங்ஙனமாயின் அது சொல்லும் இப்பாடலைச் சான்றுக்கு எடுத்துக் காட்டக் கூடாதே. நிற்க.

கலிங்க மாகன் வந்ததைக் குறிக்க. ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. சிங்கையாரியன் வந்ததைக் குறிக்கும் இந்த ஆண்டைத்தான் எடுத்துக் காட்டி அம்மாகன் வந்ததாக நிச்சயம் செய்தார் எனின் உண்மையில் வந்தவன் சிஙகையாரியன் என்றும் மாகன் அங்ஙனம் வரவில்லை என்றும் நிச்சயம் என்றும் கண்டு கொள்க. இப்பொழுது 13ம் நூற்றாண்டென்று நிச்சயம் பண்ணப் பொருள் தந்து நிற்பது ஒரு சிலாசனத்தால் அல்ல, ஒரு புதைபொருளால் அல்ல, வேறும் ஏதுஞ்சான்றுக்களால் அல்ல 870 ஓடு 300ஐக் கூட்டி 1170 என்று பொருள் பண்ணிக் கண்ட வகையால் என்க. நிற்க. அப்பாடல் இவர்கள் ஒருவர் இருவர்க்காகப் பாடப் பட்டதல்ல அக்கவிராயர் தாம் அறிந்து கொண்ட உலகத்திலே புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிற எண்மதிப்பைப் பின்பற்றித்தான் பாடி இருப்பர். அவர் ஈண்டுச் சொல்லக் கருதியது எட்டு நூறையும் எழுபதையும் கொண்ட 870 ஐத்தான் பொருள் பண்ணுவது புலவர் உள்ளக் கருத்துக்கொத்தாம்.

அங்கே வெளிப்படையாக என்ன விலையோ அதுதான்விலை. 1170ஐ அவர் கருதி இருப்பாரானால் அதற்குரிய சொற்கள் போட்டுப் பாடி இருப்பர் கவிஞர் யாவரேனும் தம் உள்க் கத்து வாசகர் உள்ளத்திலே கருகல் இன்றித் தெளிவாக விளங்க வேண்டிய வழிவகைகளைப் பின்பற்றி அதற்குரிய சொற்கள் போட்டுப்பாதுவதுதான் வழக்கம். அங்ஙனமாயின் என்னை முன்னர் கம்பர் காலத்தைச் சுட்டிப்பாடிய எண்ணிய சகாப்தம் 807 என்னுங் கவி கம்பர் காத்துக்கும் பொருள் கொடுக்கவில்லையோவெனின் இல்லை அதுவும் பிழை. அவ்வழியைப் பின்பற்றி 1170 என்று கண்ட இதுவும் பிழை. ஒரு பிழையை எடுத்துக்காட்டி அவ்வழியைப் பின்பற்றி இதுவும் பாடினேன் என்றால் இதுவும் பிழைதானே என்பது சொல்லாமல் போதரும். இவ்வுண்மையை இன்னும் துணிவாம் (செந்தமிழ் 3ம் தொகுதி பக்கம் 177 – 181) ரா. ராகவ ஐயங்கார் சொல்வதாவது “முதலாம் பிரஸ்தாப உருத்திரனுடைய ஆட்சியின் இறுதிக்காலமுமாகிய கி.பி. 1197லும் கம்பர் இருந்து அவனால் அடைப்பை கட்டும் சிறப்பைப் பெற்றனர் என்பது விரோதமில்லையாம். இதனால் கம்பருக்கு அடைப்பை கட்டினவன் முதலாம் உருத்திரன் எனவும் அவன் அவருக்கது புரிந்த காலமும் கி.பி. 1162க்கும் 1197க்கும் இடைப்பட்டதாகும் எனவும் கொள்ளத்தகும். இதனாற் கம்பருடைய காலத்துக்கு இறுதியெல்லை முதலாம் உருத்திரனுடைய அரசாட்சியின் இறுதிக் காலமேயென்றுணர்ந்து கொள்க……. கி.பி. 1162க்குப் பிற்பட்ட காலமும் இராச ராசன் காலமாதலால் கம்பர் ஓரங்கல் உருத்திரன் பாற் சென்று சிறப்பெய்தியதும் அவன் காலத்தேயாதல் ஒருதலையாம். இதனால் கம்பரை முனிந்தவனும்கொற்றவனுமாகிய சோழன் இராசராசனே என்பதுய்த்துணரப்படும். கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியதும் இவ்விராசராசன் காலமேயாகும். கூத்தர் தக்கயாகப் பரணி பாடியதும் இக்காலமேயாகும்….. இனி, எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின் மேல் சடையன் வாழ்வு…… பண்ணிய இராமகதை. அரங்கேற்றினானே” என்பதனாற் கம்பர் இராமாயணம் அரங்கேற்றியகாலம் சகாப்தம் எண்ணூற்ழெற என்று கூறுவதால் கம்பர் காலமும் மேற்காட்டிய காலத்துக்கு 300 வருடம் முற்பட்டதன்றோவெனின் கூறுவேன் சகாப்தம் 807 என்பணத கி.பி. 885 ஆகும். அது விக்கிரமன் காலத்துக்கு நெடுந்தூரமானது. அங்ஙனமாயின் அது ஒட்டக்கூத்தர் காலமுமன்று. கூத்தர் காலமன்றாயின் சங்கரன் கங்கரன் காலமுமன்று. சங்கரன் காலமன்றாயின் சடையன் சேதிராயன் காலமுமன்று. சேதிராயன் காலமுமன்றாயின் கம்பர் காலமுமன்றாம். ஓரங்கலுருத்திரன் காலமும் இஃதன்றாதல் கூறவேண்டாம். இங்ஙனம் கம்பர் காலத்தவராகத் தெரியப்பட்ட வேறுபலர் காலங்களுக்கு கி.பி. 885 பொருந்தாகவின் அது கம்பருக்கும் பொருந்தாதென்பது ஒரு தலை மேற்காட்டிய பிரபல பிரமாணங்களாற்றெரிபுப்பட்ட கம்பர் காலத்தோடு பொருந்தவைத்து நோக்கின் இந்த “எண்ணிய சகாப்தம் என்ற செய்யுள் சிறிது பாடம் பிழைத்ததென்றேனும் வேறோர் பொருளுடையதென்றேனும் கருதப்படும்” இத்துடன் இன்னொரு பெரியார் கூற்றையுந்தருவாம்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் எல். வையாபுரிப்பிள்ளையவர்கள் சொல்வர் (செந்தமிழ் 45-46ம் ஆண்டு 43ந் தொகுதி பக். 97-98)

கம்பர் காலமும்:- “கம்பர் பெருங்கவிஞர் என்பதை ஒத்துக்கொள்கின்றனர். இத்தகைய பெருங்கவிஞர் வாழ்ந்த காலங்கூட இன்னும் ஐயமற அறியப்படாதது. வியப்பல்லவா ஆராய்ந்து துணியவேண்டிய அவசியத்தை ஒரு செய்யுள் நின்று மறைத்து அறிஞர்களை மயக்கிவிட்டது. அச் செய்யுள் இராமாயணப் பிரதிகளில் காணும் ஒரு தனிய் ஆகும் அது வருமாறு.

“எண்ணிய சகாப்தம் எண்ணூற்றேழின் மேல் சடையன் வாழ்வு
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே”

இங்கே சகாப்தம் எண்ணூற்றேழு என வருதலால் கி.பி. 885ல் கம்பர் தன் காளியத்தை இயற்றினார் என்று வெளியாகிறது இத்தனை தெளிவான சான்றிருக்கும்போது காலமும்பற்றிய ஆராய்ச்சி எதற்கு எனவினவலாம். ஆனால் இம் முடிபு ஆராய்ச்சியால் நன்கு தெரியப்பட்ட கால வரையறைகளுக்குப் பொருத்தமின்றிச் சரித்திர முடிபுகளையே புரட்டிவிடுகின்றது. இதனால் இராமானு இராமாநுஞர் இறுதியாகிய ஆசார்ய பரம்பரைக்கு முற்பட்டவர் கம்பர் என்றும் கொள்ளப்படும் சோழ அரசர்கள் பெருமையுற்று விளங்கியதற்கு முற்பட்ட காலத்தில் இவர் வாழ்ந்தார் என்று துணிய நேரிடும். இவைகள் முற்றும் அசம்பாவிதமாம். வைணவ சமயசரித்திரத்திற்கும், தமிழ் இலக்கியசரித்திரத்திற்கும், தமிழ்நாட்டுச் சரித்திரத்திற்கும் இச்செய்யுள் முரண்பாடாகவுள்ளது. இக்காரணங்களால் இத் தனியன் சான்றாகக் கொள்ளத்தக்கதன்று என்பது எனவே எண்ணிய சகாத்தம் எண்ணூற்ழெற என்னும் செய்யுளைச் சாட்சியாக வைத்து” இலகிய சகாத்தம் எண்ணூற்றெழுபதுக்குப் பொருள் காண்பது பிழை. எனவே சரியான பொருள் உலகியல் நெறிப்படி 870 தானென்க. அன்றியும் இன்னொன்று கலிங்க மாகன் 13ம் ஆண்டில் தலைநகர் கட்டியதற்கு ஒரு சான்றுமில்லை 870 ஐத்தான் பிழையாகப் பொருள்பணி 1170 என்று சொல்லுவதைக் கண்டோம். அது பிழை என்று கண்டிடவே 1170உம் இல்லை. அவன் தலைநகர் கட்டியதும் இல்லை. பின்னே அது முன்சுட்டியது சிங்கையாரியனை எனவே தலை நகர் கட்டியது சிங்கையாரியன் என்றும் அவன் கி.பி. 948வரை வாழ்ந்தான் என்றும் முடிபு பண்ணுக. உள்ளபடியான சான்றுக்களின் பின்னே போய் அவை கொடுக்கும் முடிபுகளைப் பெற்றுக்கொள்ளாமல் அச்சான்றுகளைத் தம் விரும்பத்துக்குத் திருத்துவது ஆராய்ச்சிமுறை ஆராய்ச்சி வரம்பைக் கடந்தசெயலாம் என்க. இன்னும் சொல்வோம்.

இந்நூல் (கைலாயமாலை) செய சிங்கையாரியனாம் செய்யகுலராசனையும் அவன் தலை தகர் கட்டிய ஆண்டையும் சொல்லி இருக்க, என்னை, கலிங்கமாகனைப் பாடி இருக்கென்று சொல்லுகிறார்களேயெனின்? அங்ஙனமாயின் கலிங்க மாகன் பெயர், அவன் பொல்லனறுவையை வெற்றி கொண்டமை, அவன் அங்கே அரசு புரிந்தமை, அவன் காலம், என்பன இருந்தால்தான் அவனைப் பாடியது என்னலாம். எனவே அப்பாடலில் உள்ள ஆண்டுக் கணக்கு 870 தான் சரியென்க.


35. அமைச்சர் புவனேகபாகு
இவர் ஆதிச் சிங்கையாரிய மகாராசாவின் மந்திரி, கி.பி. 948ல் அச் சிங்கையாரியன் தலைநகர் கட்டியபோது உடன் இருந்தவர். அத்தலைநகர் கட்டிய வேலையில் ஈடுபட்டவர் வைபவ மாலையில் சிங்கையாரியன் “கல்வியறிவிலும் புத்தி விவேகத்திலும் எவர்க்கும் வியந்து கொள்ளத்தக்க உத்தண்ட வீரசிகாமணியாகிய புவனேகவாகு என்னும் மந்திரியையும் கூட்டிக்கொண்டுவந்து (யா.வை.மா.பக். 25-26) நல்லூரில் தலைநகரமைத்தான் என்று சொல்லுகின்றது.

“சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கையேற்று நடத்தி வருகையில் புறமதில் வேலையையும் கந்த சுவாமி கோயிற்றிருப்பணியையும் சாலி வாகன சகாப்தம் எண்ணூற்றெழுபதாம் வருஷத்திலே புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றி முடித்தான்” (யா.i.பா.பக். 32) கைலாயமாலையும் இவனைப் பற்றி மிக அழகாகச் சொல்லுகின்றது.

“புண்டரிக மார்பன் புகலுமது ராபுரியோன்
எண்டிசையு மேற்று மிராச மந்திரி – கொண்டதொரு
வேதக் கொடியோன் விருதுபல பெற்றதுரை
கீபை; பிரபுடிகன் கிருபையுள்ளான் - தீதற்ற
புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள்ளான்
புவியோர்

வந்திறைஞ்சு பாத மகிமையுள்ளான் - முந்தரிபாற்
றோன்றி யகிலாண்ட கோடியெல்லாம் தோற்றமுது
ஈன்றோன் குலத்திலெழுகுலத்தோன் - சான்றோன்
புவனேக வாகு வென்னும் போரமைச்சன் றன்னே
நலமேவு நல்லூரில் நண்ணுவித்து”
(கை.மா. கண்ணி 148-155)
இவைகள் அமைச்சர் புவனேகவாகுவின் நிரந்தரத் தொடர்புகளைக் காட்டும் நல்லூர்க் குறிப்புகளாம் என்க.

மேலும் வைபவமாலை சொல்லுவதாவது “சிங்கையாரிய மகாராசனும் புவனேகவாகு என்னும் மந்திரியும் கீரிமலைக்குப்போய்த் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனம் செய்துகொண்டு அவ்வாலய விசாரணையை அரசாட்சி விசாரணைக்குள்ளாக்கிக் கொண்டு கந்தசுவாமி கோவிலில் வந்து பெரிய மனத்துள்ளாரின் குமாரர்சிதம்பர தீட்சிதரின் மகன் சின்னமனத்துள்ளார் விருந்திட உண்டு இளைப்பாறினார்கள். அவ்விருந்து மகாவுசிதமாக இருந்ததினால் புவனேகவாகு அவ்விருந்திற் பரிமாறிய ஒவ்வொரு பதார்த்தத்திற்குமொவ்வொரு பாட்டுச் சொன்னான் அவற்றுள் சில வருமாறு”

1. “இன்னமுத விண்டு வி(ண்) ணோர்க் கீந்தசெய லன்னதுவாம்
மன்னவனும் தொக்க வரூதினியு(ம்) – நன்னரு(ண்)ண
அன்னமளித் திந்நாளிலாதரவு தந்துநின்ற
சின்ன மனத்தான் செயல்”

2. “சின்ன மனத்தான் செயும் விருந்திற் சாற்றுரூசி
அன்னதனை விண்ணேரறிந்திருந்தால் - முன்னலைவாய்
வெற்பதனைக் காவியுய்த்து வேலைகடைத் தேயுலைதல்
அற்பமெனத் தள்ளுவதே யாம்”

இப்படியே பாட்டுக்களும் சொல்லிக் கொண்டு தேவாலயத்தைப் பற்றிய ஒழுங்குகளும் பண்ணிக் கொண்டு திரும்பினான் (யா.வை.மா.பக். 32- 33)

வைபவமாலை இவ்வமைச்சர்தான் நல்லூர்க் கந்தசாமி கோயிலைக் கட்டினான் என்று சொல்ல, அப்படி இல்லை என்று வேறு பிறர் மறுக்கிறார்கள். அவன் பாடிய அப்பாடல்களைத்தவறான ஆராய்வினால் அத்தமிழ் அறியாத சிங்கள புத்தமன்னனான செண்பகப்பெருமாள்தான் பாடினான் என்று பிறர் புரைபாடாக மொழிகின்றனர். அமைச்சர் புவனேகவாகு பத்தாம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்தார். இந்நிகழ்ச்சிகள் நிகழ்ந்து ஐந்நூறு ஆண்டுகள் பின்னரன்றோ அப்பெருமாள் பிறந்தான். அவன் காலம் 15ம் நூற்றாண்டு அவனால் அப்படி இவ்வெண்பா யாப்புக்கள் பாடமுடியும் எப்படிச் சைவசமயத்துள் வழங்கும் பழங்கதைகளைச் சேர்க்க முடியும் இவ்வமைச்சர்தான் முத்துராசக்கவிராசர்க்கு அந்த மதிப்புரை வெண்பாவைக் கொடுத்திருக்கக் கூடுமென்பது நம்மூகம். இப்பாட்டின் அமைப்புக்கள் அம்மதிப்புரைப் பாடலை ஒத்திருக்கின்றன. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டிய புவனேகவாகு.

“இலகிய சகாத்த மெண்ணூற் றெழுபதா மாண்டதெல்லை
அவர்பொலி மாலை மார்பனால் புவனேக வாகு
நலமிகு யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே” என்றும்

கைலாய மாலைப் பாவினால் குறிக்கப்படுகின்றான். இலகிய சகாத்தம் எண்ணூற்றெழுபதாம் ஆண்டு கி.பி. 948ம் ஆண்டாகும் அவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து நல்லூர் நகரியைக் கட்டுவித்ததும் நல்லூரில் உள்ள கந்தவேளுக்குக் கோயில் கடடுவித்ததும் இப்புவனேகபாகுவின் வேலை சிலர் சிங்களச் செண்பகப் பெருமாளுக்குப் புவனேகவாகு என்ற பெயருண்டென்றும் அவன் இக்கோயிலைக்கட்டினான் என்றும் சொல்கின்றனர். அவனின் நல்லூர்க்காலமும் கி.பி. 1450 – 1467 ஆகையால் இப்பாட்டு அவனைக் குறிக்கக் காலமும் பொருந்தாது. அன்றியும் ஸ்ரீசங்கபோதி என்ற பெயரோ அரசனுக்குரிய அடையோ இதில் இல்லை.

அன்றியும் “சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கையேற்று நடத்தி வருகையில் புறமதில் வேலையையும் கந்த சுவாமி கோயிற்றிருப்பணியையும் சாலிவாகனசகாப்தம் எண்ணூற்றெழுபதாம் வருஷத்திலே புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றி முடித்தான்” என்று வைபவமாலையும் சொல்கின்றது. (யா.வை.ம. பக். 31 – 32)

செண்பகப் பெருமாள் காலத்திலே நல்லூரிடீல ஆட்சி கொடுங்கோலாய் நடந்தது. தமிழரை ஒரைநடைபாவனையில் தங்களைப் போலவாக்க வேண்டுமென்று பலவந்தம் பண்ணியும் அதற்கமையாதவர்களைத் தண்டித்தும் வந்தார்கள் என்றும் வைபவமாலை சொல்லுகின்றது. செண்பக பெருமாள் கீரிமலைக்குப் போய்த்தீர்த்தமாடுவதும், அப்பால் சிவாலயத்துக்கும் கந்தவேன் ஆலயத்துக்கும் போய்ச்சுவாமி தரிசனம் செய்வதும், சின்ன மனத்தார் விருந்திடுவதும் அவ்விருந்தைப்பாராட்டித் தமிழ் வெண்பாப் பாட்டுக்கள் பாடுவதும் அசம்பாவிதமான காரியங்களாகும். சாலிவாகனச்சகாப்தம் 717 வரையில் வசித்த பெரிய மனத்தாரின் மூன்றாவது பேரன் சின்னமனத்தார் காலமும் சாலிவாகனசகாப்தம் 870ல் வசித்த அமைச்சர் புவனேகவாகு காலமும் ஒன்று. அன்றியும் நல்லூர்க்கந்தசுவாமி கோயிற் கட்டிடத்திலே அக்கோயிலைக் கட்டியவன் “சூரிய குலவம் சோத்பவன்” என்று சொல்லப்படுகிறது. அதாவது சூரிய குலத்துதித்தவன் என்றும் சொல்லப்படுவதால் அது செண்பகப் பெருமாளைக் குறிக்காது. அமைச்சர் புவனேகவாகுவையே குறிக்குமென்க. ஆகவே இப்புவனேகவாகுதான்.

1. நல்லூர்க் கட்டியத்தில் சூரியகுலவம்சோத்பவன் என்று சொல்லப்பட்டவர்.

2. சின்னமனத்தான் விருந்தைப் பாடியவர்

3. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவா.

4. நல்லூர்த் தலைநகர் கட்டியவா

5. கைலாயமாலைநூலுக்கு மதிப்புரை அளித்தவர் ஆவர்.


36. சிங்கை நகர்
சிங்கை நகர் இருந்த இடத்தை எழுத்தோடு காட்டுவாம்
ஆராய்ச்சிக் காரால் இன்றுவரையும் அறுதியிட்டுரைக்க அதாவது ஐயம் நீங்கி உறுதியாக உரைக்க இயலாததாயுள்ள ஊகம் ஒன்றானே உரைக்கப்பட்டு வந்த சிங்கை நகரை யாம் கையும் மெய்யுமாக அது இருந்த களத்தோடும் எழுத்தோடும் காட்டுவோம். வண-சு. ஞாவாக்காக உரைக்கப்படுவது “சிங்கை நகர் வல்லிபுரத்தில் இருந்ததெனக் கொள்ளுதல் அமைவுடத்தாயின் பறங்கிக்காரர் 1590இல் கொழும்புத்துறையில் இறங்கி நல்லூரைச் சருவியகாலையில் சிங்கை நகர் என்னும் பெயரோடு ஓர்பெலத்த அரண் இருந்ததென பாதர் குவிறோஸ் கூறுகின்றமை (ஊழஙெரளைவய p. 367) எவ்வாறென ஓர் ஆசங்கை நிகழும். பூர்வசிங்கை நகர் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்கும் இடையிலாமெனக் கொள்ள வேறு சான்றின்மையால் அச்சிங்கை நகர் அழிந்துபட்டு நல்லூர் தலைநகராயின பின் அப்பழைய நகர்ப் பெயரோடு ஓர் அரண் இங்கு விளங்கியதெனக் கொள்ளலாம் என்க” என்கிறார். (யா.வை.வி. பக். 68) சரி இவ்வரணுக்குச் சிங்கை நகர் என்றுயார் எழுதினார் எப்பொழுது எழுதப்பட்டது.

அமைச்சர் புவனேகவாகுவால் தலைநகர் கட்டிய போது எழுதப்பட்டது. அஃது எங்ஙனம் தெரியுமாறு எனின் தலைநகர் கட்டி முடிந்த பின்னர் முடிசூடப்படுவது வழக்கம். அந்தச் சோழ இராசகுமாரன் நல்லூரில் நகரை அமைச்சரைக் கொண்டு கட்டியபின் முடிசூடப்படும்பொழுது முடி சூடப்படும் அரசனுக்கு சிங்கையாரியச் சக்கரவர்த்தி என்று கங்காதரக்குருக்கள் முடிசூட்டி இருக்கிறார் அந்த முடியைப் பாண்டிமழவன் எடுத்துக் கொடுத்திருக்கிறான் (அவன் முடி தொட்டுக் கொடுக்கும்பரம்பரையைச் சேர்ந்தவன்) இங்கே விளங்கக்கிடப்பது நல்லூர் ஆரியச் சக்கரவர்த்தி என்று சொல்லாமல் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி என்பதால் நல்லூரில் கட்டப்பட்டதலை நகர்க்குச் சிங்கை என்பது பெயர் என்பது விளங்குகிறது.

முதற் சிங்கை யாரியன் தொடக்கம் 11 ஆவது அரசன் கனகசூரியன் வரை ஒரே கோட்டையில் அன்றி ஒரே அரண்மனையிலோ அன்றி ஒரே சிங்காசனத்திலோ இருந்துதான் அவ்வரசர் அரசு புரிந்திருக்கிறார்கள். ஏனெனில் அவ்வளவு காலமும் ஒரு போரோ, படையெடுப்போ அங்கே இல்லை. ஆகையால் தலைநகர் மாற்றமில்லை@ அப்பால் கி.பி. 1450 ஆண்டளவில் கனகசூரியன் காலத்தில் தான்செண்பகப் பெருமாள் படை எடுத்திருக்கிறான் நல்லூர்க்கு அப்பொழுது செண்பகப்பெருமாள் வெல்லக் கனகசூரியன் நகரை விட்டோடி விட்டான். திரும்பக் கனகசூரியன் வந்து அவ்விடத்தில் அரசு செய்த விஜயவாகுவை அதாவது செண்பகப்பெருமாளின் பிரதிநிதியை வென்று அரசனாகிவிட்டான். அதன் பின்னர் கனக சூரியன் மக்கள் அத்தலைநகரில் இருந்து ஆட்சி செய்தார்கள். அவர்கள் சிங்கை நகரத்தரசர்கள் என்பதற்காகச் சிங்கைப் பரராசசேகரன் சிங்கைச் செகராசசேகரன் என்று பெயர் வைத்துக்கொண்டார்கள். எனவே இவர்காலம் வரைக்கும் தலைநகரோ தலைநகர் இருந்த களமோ இம்மாறவில்லை. நல்லூரிலே சிங்கைநகர் பெயரோடிருந்திருக்கிறது. கி.பி. 1590இல் சங்கிலி அரசாட்சியின்போது போர்த்துக்கேயப்படை யாழ்ப்பாணத்துக்கு வரும்போது கோவைத்தேசாதிபதி அப்படையின் போர் வரலாற்றைத் தனக்கெழுதி அறிவிக்கும்படி குவிறோஸ் பாதிரியாரையும் உடன் அனுப்பி இருந்தார்.

போர்த்தர் வரும்போது இருந்த மதிலில் சிங்கை நகர் என்றெழுதப்பட்டிருந்தது. எப்போ, யார் எழுதினார். ஒரு மன்னன் தலைநகர் கட்டிமுடிந்த பின்தான் முடி சூடுகிறது. அதற்கு முன்னர் தான் நகர்க்குப் பெயர் வைக்கின்றது முடிசூடும்போதே தலைநகர் கட்டிமுடிந்தது. அத்தலைநகரைக் கட்டினது யார் “இலகிய சகாப்தம் 870ம் ஆண்டதெல்லை அலர் பொலிமாலைபனாம். புவனேகவாகு நலமிகு யாழ்ப்பாண நகரிகட்டி” என்பதால் (கை.மா.த.செ) புவனேகவாகுதான் கட்டி எழுதிவிட்டிருக்கவேண்டும். அதுதானா போர்த்தர் வரும்போது இருந்தது. ஆம், அத்தலைநகரிலிருந்துதான் இச்சிங்கை ஆரிய மன்னர் வாளையடிவாளையாய் அரசாண்டு வந்துள்ளனர். போர்த்தரோடு பொருந்திய சங்கிலி மன்னனும் அதில்தான் இருந்தான். இப்பரம்பரை எக்காரணம் கொண்டும் தலைநகரை இடம் மாற்றியமைக்கவில்லை. அங்ஙனமாயின் போர்த்தர் கி.பி. 1590இல் சந்தித்தது. இதில் மதிலைத்தான். அஃதெங்ஙனம் போர்த்தர் சந்தித்தது இம்மதிலின் தென்பக்கமதிலை. அப்பக்கமதில் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையில் தான் போயிருக்கும்.

கோட்டைவாசல் கிழக்குப்பக்கம் கி.பி. 1450வரை செண்பகப் பெருமான் படை எடுத்தாள். எனணவே அவன் படை எடுப்பின் 140 வருடம்வரை பின்னும் கி.பி. 1590 வரை அம்மதில் இருந்திருக்கு. அஃதெப்படிச் செண்பகப்பெருமாள் இடித்தான் தலைநகரை என்று பிறர் சொல்லுகிறார்களே என்னின் அவர்கள் சொல்வது வாயாதாரம் தான். புத்தியாதாரங் கூட இல்லை சான்றாதாரம் இல்லை. ஆகவே நல்லூரில் சிங்;கை நகர் என்றெழுதப்பட்டிருப்பது வேறோர் இடத்திலிருந்த சிங்கை நகர் ஞாபகத்துக்காக வல்ல அவ்விடத்திலிருந்த உண்மைச் சிங்கநகரை விளக்கவே என்றறிக.


37. யாழ்ப்பாண வைபவமாலையும்
யாழ்ப்பாண வைபவவிமர்சனமும்
யா – வைபவ மாலை 18ம் நூற்றாண்டில் வெளியாகியது. யா. வைபவ விமர்சனம் இருபதாம் நூற்றாண்டில் கி.பி. 1928ல் இயற்றப்பெற்றது. இந்த வை. வி. காரருக்கு இந்த வைபவ மாலையில் சொல்லப்பட்ட சரித்திரங்கள் முடிபுகள் நன்கு தெரிவித்திருக்க வேண்டும். அன்றியும் அந்நூற் கூற்றுக்களைத் தம் நூல்களில் சுட்டியும் பேசியுள்ளனர் அங்ஙன மாகையால் அந்நூல் முடிவுகள் இவர்க்கு நன்கு தெரிந்திருக்கும் என்பது நிச்சயம். ஆகால் இந்த வை. விகாரர் அநேக இடங்களில் அவ் வைபவ மாலை முடிபுகளுக்கு எதிர்முடிபுகளைக் கூறுகிறார். அங்ஙனம் கூறுமிவர் அந்நூலின் ஒரு முடிபு தமக்குடன் பாடின்மைகண்டால் அதற்காதாரம் காட்டி மறுத்துத் தமது இப்புது முடிபு கொள்ளக் காரணமாய் இருந்த ஆதாரத்தை எடுத்துக் காட்டித் தம்மூடிவை நிறுத்துதல் வேண்டும் இவர் மறுப்பதற்கும் ஆதாரம் காட்டவில்லை. நிறுத்தும் புது முடிவுகளுக்கும் ஆதாரம் காட்டவில்லை. தாம் விரும்பியவாறு மனம் வந்த வண்ணமே சொல்லிக்கொண்டு போகிறார். அவையெல்லாம் முன்னர் நடந்து முடிந்த சரிதமாக அதாவது மெய்ச்சரிதமாக இருக்குமோ? நாம் நடு நின்று அவ்வுண்மைகளை கண்டு கொள்ள வேண்டும். அவ்விரு நூல்களிலுமுள்ள சரிதக் கூற்றுக்களை இங்கே காண்பாம்.


யா.வை. மாலை யா.வை. விமர்சனம்
1. சோழ இராசகுமாரன் நல்லூருக்கு வந்தான் 1. கலிங்கமாகன் வல்லிபுரத்துக்கு வந்தான்.

2. இவன் 948ல் நல்லூருக்கு வந்தான் 2. இவன் 1248 வல்லிபுரத்துக்கு வந்தான்.

3. இவன் நல்லூரில் சிங்கை நகரை அமைத்தான் 3. இவன் வல்லிபுரத்தில் சிங்கைநகரை
அமைத்தான்

4.இவனுக்கு கையொன்று கூளையாயிருந்ததால் 4. இல்லை, காலிங்க என்ற பெயரைத்தான்
கூளங்கையன் என்று பெயர். கூளங்கையென்று சொல்லுகின்றனர்.

5. கைலாயமாலையின் “நலமிகு யாழ்ப்பாண நகரி 5. இவர் நகரிகட்டுவித்து என்பது காலிங்க
கட்டுவித்து நல்லைக்குலவிய கந்தவேட்குக்கோயிலும் ராசன் சிங்கை நகரைக் கட்டியதையும்,
புரிவித்தானே” என்பது அமைச்சர் புவனேகவாகுவைப் செண்பகப்பெருமாள் நல்லூர் நகரைக் கட்டி
பற்றியது என்று வைபவ மாலை சொல்லுகிறது. –யதையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயில்
கட்டியதையும் சுட்டிவந்ததாகக் கூறுகிறார்

6. கீரிமலை நகுலமுனிவர் தொடர்பால் வந்த பெயர் 6. கிரியும், கிகீரியும், மலையும் சேர்ந்ததால்
வந்த பெயர்

7. மாவிட்டபுரம் குதிரை முகம் நீங்கியதால் வந்த 7. பெரிய ஆலமரம் நின்ற காரணத்தினால்
பெயர் வந்த பெயர்

8. சின்னமனத்தார் செய்தவிருந்தை அமைச்சர் 8. செண்பகப் பெருமாள் தான் அவ்விருந்தைப்
பாராட்டிப் பாடினார். பாராட்டிப்பாடினார்.

இவ்வாறு வைபவமாலையில் சொல்லப்பட்ட புருடர்கள் அவர்கள் சம்பவங்களுக்கு அன்றியும் வேறும் சம்பவங்களுக்கு நேர்மாறாகவே இவ்வைபவ விமர்சனக்காரர் சொல்லுகிறார். வைபவமாலை 18ம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றது யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 20ம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றது இரண்டு கூற்றுக்களும் மெய்யாக இருக்காது. அதாது ஒரு கூற்றை உண்மையானால் அதற்கு நேர்மாறாகச் சொல்லும் கூற்றில் உண்மை இருக்காது. அதனை மறுக்கவும் சான்று கிடைக்காது. வைபவமாலை உலாந்தேக மன்னன் கேட்க வையாபாடல் கைலாயமாலை பரராசசேகரன் உலா இராசமுறை என்பனவற்றில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளை அறிந்து அவற்றில் உள்ளபடியே இந்நூலை எழுதினார் என்று அதன்பாயிரகாரர் சாட்சி பகர்கின்றார். வைபவ விமர்சனக்காரர் இந்நூல் முடிபுகளுக்கு மாறுபாடாகக் கூறுகிறார்.

ஒரு சான்றுகளை ஆதாரங்காட்டி இக்கூற்றுக்களை மறுக்கவுமில்லை ஏதாவதொரு ஆதாரங்காட்டித் தம் கூற்றை நிறுவவும் இல்லை. வைபவமாலைக் கூற்றுக்கள் உண்மையானால் இவருக்கு மறுக்கவோ நிறுவவோ சான்று கிடைக்காது. இவ்வளவிலே யா.வை.வி. காரர் யாழ்ப்பாண வைபவமாலைக்கு மாறுபாடாக ஒரு நூலை இல்லாத புருடர்களையும் நிகழாத நிகழ்ச்சிகளுங் கொண்டவைகளாகப் படைத்திருக்கின்றார் என்றுதான் நமக்குத் தோன்றுகின்றர். உண்மைச் சொர்க்கம் வேறாய் இருக்க விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்காக ஒரு சொர்க்கத்தைப் படைத்ததைப்போல இந்நூலின் போக்கு இருக்கிறது. தமக்கு முன்னர் சொல்லப்பட்ட அந்நூலின் கூற்றை இவர் மறுக்கவும் சான்று காட்டவில்லை நிறுவவும் சான்று காட்டவில்லை ஆதலான் என்க. இவரின் நூற்படைப்பால் பயில்வார் வைபவமாலையில் நம்பிக்கைகொள்ள இடர் விளைகிறது. இவ்வைபவ விமர்சனக்காரரின் முடிபுகளை, பிழைகளை இந்நூலின் வௌ;வேறு இடங்களில் காணலாம். பின்நூல் எழுதுபவர் முன்னோர் உரைத்ததற்கு மாறகச் சான்றில்லாமல் ஏன் எழுதவேண்டும். அம்முன்னோர் உரையைச் சான்றும் காட்டி மறுத்ததன்றோ புது முடிபைச்சொல்ல வேண்டும், சான்றில்லாதவற்றை உண்மை உள்ள கூற்றென்று நம்புவதெப்படி? வைபவமாலையில் சொல்லப்பட்ட அனைத்துப் பொருளுக்கும் இவர் மறுப்புக் கொடுப்பதாலும் ஒன்றுக்கும் ஆதாரம் காட்டாமல் சொல்வதாலும் இவர் உண்மைகளை அத்தாட்சிப் படுத்தாமல் சொல்வதாலும் இவர் கூற்றுக்கள் உண்மைக்குறுதியானவை என்று எம்மால் நம்ப முடியாமல் இருக்கிறது.

38. கோட்டை அரசன் செண்பகப்பெருமாளின்
வரலாறும் யாழ்ப்பாணத் தொடர்பும்
இவன் ஆறாம் பராக்கிரம பாகுவின் வளர்ப்புப் புத்திரன், இவனை யாழ்ப்பாண இராச்சியத்தைச் செயித்து வருமாறு அப்பராக்கிரமபாகு அனுப்பி வைத்தான். செண்பகப் பெருமாள் படைஎடுப்பு கி.பி. 1450ல் நல்லூரில் கனகசூரியன் ஆட்சி செய்யும் போது நடந்தது. இப்படை எடுப்பில் கனகசூரியன் தோல்வி பெற்று இரவிலே மனைவி மக்களைக் கூட்டிக்கொண்டு வடதேசத்துக்கோடிப் போய்விட்டான். இவ்விடத்தில் யாழ் வைபவமாலை சொல்வதாவது “விஜயவாகு என்னும் சிங்களவன் தானேயரசனெனத்தலைப்பட்டு தமிழ்க்குடிகளையொடுக்கித் தமிழரையுடை நடை பாவையிலெல்லாம் தங்களைப் போலாக வேண்டும் என்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணுவித்து அதற்கமையாதவர்களைத் தண்டித்தும் பதினேழு வருடம் அரசாண்டால்” “கனகசூரிய சிங்கையாரிய் தன் பிள்ளைகளாகிய பரராசசேகரனையும் செகராசசேகரனையும் திருக்கோவலூரில் இராசகுடும்பத்தார்பால் கல்வி பயில வைத்துக் காசிபரியந்தம் யாத்திரை பண்ணி திரும்பத் திருக்கோவிலூருக்குப்போய் அங்கே தன்பிள்ளைகள் வளர்ந்தவர்களாய்ப் போர்ச்சாமர்த்தியத்திலும் கல்விப் பயிற்சியிலும் சரீர வழகிலும் அதிகப்பட்டவர்களாய் இருக்கக் கண்டு அளவில்லாத சந்தோஷவானானான். பிதாவைக் கண்டபோதே பிள்ளைகளின் முகம் சூரியனைக் கண்ட தாமரைப் புட்பங்கள் போலாயின. பிள்ளைகள் இருவரும் சத்துருவைச் செயிக்கவும் இராச்சியத்தை மீட்டுக் கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங் கண்டுமிகுந்த ஆச்சரியங் கொண்டு அவர்களை முத்தமிட்டு அங்குள்ள இராச குடும்பத்தார்க்குத் தான் காட்ட வேண்டிய நன்றியறிதல் எல்லாம் காண்பித்து பிள்ளைகளையும் தேவியையுங் கூட்டிக்கொண்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே சேர்ந்த பொழுதுபாண்டி நாட்டைப் பகுதிகளாக ஆண்ட சிற்றரசர்கள் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட அவன் சகல ஆயுதங்களுடனேயும் யாழ்;ப்பாணம் வந்து சேர்ந்து மேற்கு வாசல் வழியாக நுழைந்தான்.

விசயவாகு காத்திராh வேளையிற் சேனைவர்க்கத்துடன் கனகசூரிய சிங்கையாரியன் நுழைந்த போதிலும் அவன் சடுதியிற் சேனைகளைக் கூட்டி அஞ்சா நெஞ்சனாய் நின்று பெருஞ்சண்டை பண்ணினான். செகராசசேகரன் ஓர் அரண் மேற்சண்டை செய்து நிற்கப் பரராசசேகரன் விஜயவாகுவின் துணிவையும் அவன் செய்யும் விரத்தையுங் கண்டு வாட்படையுடனே விசயவாகுவின் போர்முனையிற் சிங்கம் பாய்ந்தாற்கோல் பாய்ந்து சேனைகளையும் விசயவாகுவையும் தன் வாளுக்கிரையாக்கினான். அதைக்கண்டு செகராசசேகரனுடன் எதிர்த்த போர்முனை முறிந்து கெட்டுச் சிதறிப் போயிற்று. பரராச சேகரன் பிதாவை அரசாட்சியில் வைத்துத் தான்தேச விசாரணை செய்ய முயன்றான். பிதாவாகிய கனகசூரியன் பரராசசேகரனை முடிசூட்டிச் சிங்காசனத்தில் வைத்துத்தான் இளைப்பாறியிருந்து சிலகாலத்தின் பின் இறந் போனான். யா.வை.மா.பக் 44 – 48

இவை நிற்க, செண்பகப் பெருமாளைப் பற்றி பிறர் கூறுவதாவது “செண்பகப் பெருமாள் தலைநகருட் புகுந்து மதங் கொண்ட களிறெனக் கண்டாரைக் கொன்று அந்நகர் ஆவணங்களிலெல்லாம் இரத்த வெள்ளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி நகரில் விளங்கிய மாடமாளிகைகளெல்லாம் இடித்துத் தரைமட்டம் ஆக்கினான். பின் அனேகவதிகாரிகளைச் சிறைப்படுத்தி அவர்களுடன் ஜெயவர்தன கோட்டைக்கு மீண்டான்” பராக்கிரமபாகு களிப்பால் ஆரியவேட்டை ஆடும் பெருமான் எனப் புகழ்ந்து யாழ்ப்பாணத்தையே அரசு புரியுமாறு அனுப்பினான்.

செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலைநகரம் பாழாய் விட்டமையால் நல்லூரில் கி.பி. 1450ல் ஒரு புது நகரமெடுப்பித்துச் சிறீ சங்க போதி புவனேகபாகு என்றும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக வரசு செய்து வந்தான் இவன் யாழ்ப்பாணத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரானந்தத்தை விளைவித்தது. இவ்வெற்றியைப் புகழ்ந்து கோகில சந்தேசவென்னும் குயிற்றூதுப் பிரபந்தம் ஒன்று தங்காலைக் கணித்தான மூல்கிரிகல வென்னும் விகாரையில் இருந்த பெரும் புகழ்படைத்த சிங்களப் புலவர் ஒருவராற் பாடப்பட்டது”
(செ.இ.யா.பக்.ச. 74 – 75)

செண்பகப் பெருமாள் கோட்டை இராச்சியத்துக்கு அரசனான பிறகுதான் ஸ்ரீசங்கபோதி புவனேகவாகு என அழைக்கப்பட்டான். ஆiகால் நல்லூரில் உண்டான கட்டியத்தில் அப்பெயர் வரக்காரணம் இல்லை. சப்புமால், செண்பகப்பெருமாள், இராசகுமரேந்திரன் என்ற பெயர்கள் வந்திருக்கவேண்டும். அவை வரவில்லை கட்டியத்தில் ஸ்ரீசங்கபோதிப் பெயர் வருதலால் அவன் கோட்டைக்கரசனான பிறகு கட்டினான் என்போமானால் இங்கே அவனுக்கு நாடுமில்லை ஆட்சியுமில்லை. இங்கே கனகசூரியன் ஆட்சிக்கு வந்துவிட்டான். ஆகையால் செண்பகப்பெருமாள் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டவில்லை என்பதுதான் எம்முடிபு செண்பகப் பெருமாள் ஆட்சியைப் பற்றி வைபவமாலை குறிப்பிடும் பொழுது “விஜயவாகு (செண்பகப்பெருமாளின் இராசப் பிரதிநிதி) வென்னுஞ் சிங்களவன் தானேயரசனெனத் தலைப்பட்டுத் தமிழ்க் குடிகளையொடுக்கித் தமிழரையுடை நடைபாவனைகளால் தங்களைப் போலாக வேண்டுமென்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணுவித்து அதற்கமைய யாதவர்களைத் தண்டித்துப் பதினேழுவருடம் அரசாண்டால்”
(யா.வை.மா.பக். 45 – 46)

இந்த வகையிலே அரசாண்டவன் கந்தசுவாமி கோயில் கட்டுவானா? அல்லாமலும் புத்தசமயப் பட்டமான சிறீசங்கபோதிப் பட்டம் பெற்ற அரசன் கட்டுவானா? நிச்சயமாக அவன் கட்டமாட்டான். நிற்க. இவ்வுண்மையை நிறுவயெரிதும் வைரமான சான்று அக்கட்டியத்திலே கீழ் அடியிலேசொல்லப்படுவது. அதாவது: சூரிய குல வம்சோத்பவ…… புவனேகவாகு” எனச் சொல்லப்பட்டிருப்பது, இது அமைச்சர் புவனேகவாகுவையே வரைந்து குறிக்கும் எனவே அக்கோயில் கட்டியவன் அமைச்சர் புவனேகவாகுவையே வரைந்து குறிக்கும் எனவே அக்கோயில் கட்டியவன் அமைச்சர் புவனேகவாகுவென்க அன்றியும் செண்பகப்பெருமாள் சூரியகுல வம்சத்தவனா? இல்லையே. இவை நிற்க.

நல்லூரில் செண்பகப்பெருமாள் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தலைநகர் கட்டப்பட்டு வன்மையுள்ள அரசரால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. அந்நகர் அரசின் வல்லமையை அடக்கத்தான் கோட்டை அரசன் இவனை அனுப்பி இருக்கிறான். அங்ஙனமாயின் இலகிய சகாப்தம் என்னும் பாட்டிலே நலமிகு யாழ்ப்பாண நகரி கட்டுவித்து என்பது இவனைச் சுட்டாதோ எனின் சுட்டாது. இவன் படை எடுத்தது கி.பி. 1450ல் அது பாடப்பட்டது. கி.பி. 948ல் அதாவது 500 ஆண்டுகளுக்குமுன். அப்படியானால் அப்பாட்டு இவனைச் சுட்டுவதெப்படி? நன்று இவன் அத்தலை நகரை இடித்துப் போட்டுக்கட்டியதை சுட்டாதோ எனின் அப்படியும் இல்லையே. கட்டியதென்று சொல்லப்பட்டதேயொழிய இடித்துக் கட்டியது திருத்திக் கட்டியதென்று சொல்லப்படவில்லை. அன்றியும் இது இராச விஷயம் கோட்டை அரசன் சொல்லாததை இவன் செய்யான். ஆனால் இவன் இங்கே இடிக்கவில்லை என்றுதான் தெரிகிறது. அஃ;தெங்ஙனமெனின் இவன் படை எடுத்த தலைநகருக்குச் சிங்கை நகர் என்று பெயர். அப்பெயரை அந்நல்லூர் அரசன் அந்நகர் மதிலில் எழுதி இருக்கிறான். இவன் படை எடுத்தபின் 140ம் வருடத்துக்குப்பிறகு போர்த்துக்கேயப் படை நல்லூருக்கு வந்திருக்கிறது. அந்தப்படை சிங்கைநகர் என்றும் எழுத்துப்பட்ட மதிலைத்தாண்டிப் போனதாக அப்படையோடுடன் வந்த பாதர் குவிறோஸ் எழுதி இருக்கிறார் ஆகையால் செண்பகப்பெருமாள் இடிக்கவில்லை. இடிக்கிறவன் முதலில் மதிலைத்தான் இடிப்பான் நிற்க.

உட்கோட்டையையும் இடிபடவில்லை என்னையெனில் இவன் படை எடுப்பில் தோல்வி கண்டோடிய கனகசூரியன் “இந்திய சிற்றரசர் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட அவன் சகல ஆயுதங்களுடனேயும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து மேற்குவாசல் வழியாக நுழைந்தான்” (யா.வை.மா.பக். 67) என்பதால் கனகசூரியன் முன்னர் இருந்த கோட்டை அப்படியே இருந்திருக்கு அதை அறிந்து தான் கனகசூரியன் அவ்வழியாகக் காத்திராத வேளையில் நுழைந்திருக்கின்றான். முன்செண்பகப்பெருமாள் இடித்துக்கட்டினால் அக்கனகசூரியனுக்கு வாசல் தெரியாது நிற்க@ கோட்டையும் நல்லூரும் இயற்கையில் வௌ;வேறு தேசங்கள். அங்கில்லாத பொருள் இங்கே கிடைக்கும். ஆகையால் அப்பெருமாள் இடியான். அப்பெருமாளுக்கு அரசன் ஓடினது வலு வாய்ப்பு. அப்படியே இருந்து ஆட்சியைச் சுலபமாக கைப்பற்றி ஆட்சி செய்தான் என்றறிக. இடித்தால் ஆட்சி செய்ய இயலாதே. நிற்க:

செண்பகப்பெருமாள் நல்லூர்த் தலைநகர் கட்டினதற்கோ கந்தசுவாமி கோயிலைக் கட்டியதற்கோ பிறர் ஒருவரும் ஒரு ஆதாரமும் காட்டவில்லை. அவர்கள் கைலாயமாலையில் வரும் அமைச்சர் புவனேகவாகுவைச் சுட்டி 948ம் ஆண்டு வரையில் பாடப்பட்ட பாடலில் புவனேகவாகு பெயர் வர அதிலே நலமிகு யாழ்ப்பாணநகரி கட்டுவித்து நல்லைக்குலவிய கந்தவேட்கு கோயிலும் புரிவித்தானே” என்றது. செண்பகப்பெருமாளைப் பாடினதாகக் காட்டுகிறார்கள். செண்பகப்பெருமாள் ஐஞ்ஞாறு ஆண்டு வரை பின்னுள்ளவன் அன்றியும் அப்பாடல் ஆசிரியர் முத்துஇராசக்கவிராமர்க்கும் செண்பகப் பெருமாளுக்கும் இவ்வாறு பாடும் தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம்வராதே. இது வைபவமாலை நூலுக்கு எதிராகப் படைத்த படைப்புகளுட் சிலவாகும். அன்றியும் கைலாயமாலை செண்பகப்பெருமாளுக்குப் பின்னுள்ள தமிழரசன் காலத்திலே பாடப்பட்டிருக்காது ஏனென்றால் சோழர் உறையூர்த் தலைநகரம் அப்பொழுது இல்லை அது அழிந்துவிட்டது. இங்கே பாயிரகாரர் உறையூர் முத்து ராசக்கவியரசர் பாடியதென்று சொல்லி இருப்பதானால் என்க. அன்றியும் கைலாயமாலையிற் சொல்லப்பட்ட குடியேற்றம் பற்றிமேற்படி புலவர்க்குப் பாடும்படி குறிப்புகளைக் கொடுக்க இவர்கள் அறியார் அது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட நிகழ்ந்த சம்பவம் அன்றியும் அக்கோயில் கட்டிய காலத்திலேயன்றிப் பின்னவர் காலத்திலே அப்படி ஒரு சந்தர்ப்பம் வரவில்லை. அன்றியும் மாருதப்பிரவல்லி கதை சிங்கையாரியனுக்கும் யாழ்ப்பாண வரலாறு பாண்டியமழவனுக்கும் தான் தெரியும் பின்னுள்ளவர்க்குத் தெரியாதே.

39. நல்லூர்த் தலைநகர் இருந்த களம்
யாம் இத்தலைநகர் களம் இருந்த இடம். விசாரணையில் ஈடுபட்டு அவ்விடம் சென்று ஆராய்ந்து பார்த்த காலை, யமுனா ஏரிசங்கிலித் தோப்பு சேர்ந்து இருக்கும் அக்களத்துக்கு அரை மைல் வரை கிழக்கே நாயன்மார்கட்டு என்னும் பிரதேசத்தில் கொழும்புத்துறைகும் நல்லூர்க்கும் இடையில் பன்னூற்றுக் கணக்கானோர் வீடுகட்டி குடிகொண்டு வாழும் ஒரு பிரதேசம் “கோட்டை வாசல்” எ;னும் தோம்புப் பெயர் உள்ளதாய் இருப்பதைக் கண்டேன்@ அங்குள்ள பற்பல வீடுகளுள்ளும் நாம் பார்க்க வேண்டிய தானங்களில் உள்ள வீடுகளுக்குப் போய் அவற்றின் சொந்தக்காரரைக் கண்டு யான் நல்லூர்த் தமிழ் அரசர்காலச் சரித்திரம் எழுத முயற்சிக்கிறேன். அதற்காக உங்கள் வீட்டுறுதியின் தோம்புப் பெயரைப் பார்த்தறிய விரும்புகிறேன். அவ்வுறுதிகளைத் தாருங்கள் என்று கேட்டேன். அவர்கள் அப்பெயர்கள் “ கோட்டை வாசல்” என்று அழைக்கப்படுகின்றன என்று சொல்லி அவைகளை என்னிடம் தந்தார்கள். நானும் வாசித்துப் பார்த்துக் கோட்டை வாசல் என்றிருக்க கண்டேன். மகிழ்ந்தே;. எனவே தமிழ் அரசரின் கோட்டையின் வாசல் கிழக்கு நோக்கியதென்றும் தேர்ந்தேன். எனவே பிற ஆராய்ச்சிக்காரர் நல்லூர் நகர்க்குத்தான் சிங்கைநகர் என்றும் இன்னொரு பெயர் இருப்பதைத் தேர்ந்து கொள்ளாமல் அச்சாதனத்தால் அது இன்னொரு இடத்தில் உள்ள நகரமென்று விளங்கிக்கொண்டு அவ்விளக்கத்தால் வல்லிபுரத்துச் செங்கடக நகர் மேலே சிங்கைநகரை நிச்சயம்பண்ணி உண்மையைச் சரிதத்தை மாறுபட எழுதியிட்டனர் என்க.

இக்களம் வடக்கே சட்டநாதர் கோயிலுக்கும் தெற்கே கைலாய பிள்ளையார் கோயிலுக்கும் மேற்கே வீரகாளியம்மன் கோயிலுக்கும் இடைப்பட்டதாக முத்திரைச் சந்தையை உள்ளடக்கியதாகச் சங்கிலியன் தோப்பு யமுனா ஏரிகளையும் சேர்ந்ர் கிழக்கு வாசல் கொண்டதாக கி.பி. 948 தொடங்கி கி.பி. 1658வரை அரசு இருந்த தென்க. இவ்வொருகளத்தில் உள்ள கோட்டையில்தான் சிங்கையாரியர் முழுப்பேரும் ஆட்சி செய்தார்கள். நல்லூர்க் கந்தசுவாமிகோயில் இக்களத்தின் மத்தியைச் சேர்ந்ததாக மேற்கேயிருக்கிறது எனலாம்.

இந்நகர்க்குப் போர்த்தர் வரும்போது சிங்கைநகர் என்னும் பெயர் அழைக்கப்பட்டிருக்கு இராசாதோட்டம் ஆரியகுளம் புறநகர்ப் பக்கமாயமைந்தவைகளாம். இச்சிங்கையாரிய பரம்பரையில் சங்கிலி கடைசிக்காலத்தில் இருந்த பிரசித்தி பெற்ற மன்னன். அவன் இருந்த நிலம் சங்கிலித் தோப்பென்று பெயர் பெற்றது. அந்நிலத்திலே அக்களத்திலேதான் முன்னர் கனகசூரியனின் கோட்டை அரண்மனை என்பன இருந்துள்ளன. அதுதான் கனகசூரியன் செண்பகப் பெருமாளிடம் தோற்ற இடமும் பின்னர் அவனிடம் அவன் பிரதிநிதியிடமோ வென்ற இடமும் கனகசூரியனுக்கு முன்னர் எக்காலத்திலும் தலைநகரில் படை எடுப்பு நடக்கவுமில்லை. தலைநகர் இருந்த களம் மாற்றம் அடையவும் இல்லை. ஆகவே கி.பி. 1440 தொடங்கி அக்காலத்தின் முக்கான கி.பி. 948வரை ஆதிச் சிங்கை ஆரியன் வரையும் தலைநகர்க் களம் ஒரே இடத்தில்தான் இருந்திருக்கிறது. அதுதான் இறுதியில் நல்லூரில் சங்கிலித் தோப்பாகவும் அதைச் சார்ந்த நிலங்களுமாயது. ஆகவே சங்கிலித் தோப்பு நல்லூரில் இருக்கிறது. அது சிங்கைநகர் மதிலுக்குள்ளே இருக்கிறது. ஆகவே நல்லூர் நகர்க்களந்தான் சிங்கைநகர் களமாக நிரூபணமாவதாக வருவதையுமறிக.


40. பிறர்கருத்து
கைலாயமாலையில் வெளியான தனிப்பாடலில்
“இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபதாமாண்டதெல்லை
அவர் பொலிமாலை மார்பனாம் புவனேகவாகு
நலமிகு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்கு கோயிலும் புரிவித்தானே

என்ற பாட்டால் அமைச்சர் புவனேகவாகு சிங்கைநகரியைக் கட்டியதையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டயதையும் வரையறையாகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அன்றியும் அமைச்சராகிய ஒரு புருடன் மேலே அவ்விரண்டு செயலும் சொல்லப்பட்டிருக்கிறது. வண. சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாண நகரி என்பது சிங்கை நகராயின். புவனேகவாகு என்பது காலகதியிற் புகுந்த வழுவாயின் அக்கவி கூறும் ஆண்டுக் கணக்குகாலிங்கச் சக்கரவர்த்தி சிங்கை நகரைக் கட்டிய ஆண்டாகலாம்” என்றும் கூறினார் (யா.வை.வி.பக். 66)

அப்பால் (ஷெ நூல் பக் 106ல்) செண்பகப் செண்பகப்பெருமாளே புவனேகவாகுவாயினமையால் இரு பேருடையவனான இவனைத்தான் நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக்குலவிய கந்தவேட்கும் கோயிலும் புரிவித்தானே” எனப்பட்டது போலும் என்று முறையே 13ம் நூற்றாண்டில் கலிங்கமாகன் மேலும் 15ம் நூற்றாண்டில் உள்ள செண்பகப்பெருமாள் மேலும் தடுமாறிப்பொருள் பண்ணுவது காண்க. அதாவது பத்தாம் நூற்றாண்டில் உள்ள ஒரு புருடன் மேலே சொல்லப்பட்ட பாடலை 13ம் 15ம் நூற்றாண்டில் உள்ள இரு வேறு புருடர் மேலே பொருள் பண்ணுவதைக் கவனிக்குக இக்கூற்றுக்களால் இவர்கள் பொருள் வரையறையில்லாமல் தெளியாமல் சொல்வனவற்றை நோக்குக.

வண. சு. ஞா. தம் நூலை 1928ம் ஆண்டு வரையில் எழுதினார். இவர்க்குப் பின் 1933ல் செ.இ.யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதினார் அவரும் வல்லிபுரத்தில் சிங்கைநகர் உண்டாயிருந்த செய்தியைத் தன்நூலில் (செ.இ.யாச.பக்.10லும் 29லும்) குறிப்பிட்டதோடு “செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத் தலைநகருள் புகுந்து சுண்டாரைக் கொன்றும் மாடமாளிகையை இடித்துத் தரை மட்டமாக்கினான் என்றும் (ஷெ நூல் பக். 74) இவன் நல்லூரிலே 1450ல் ஒரு புது நகர் எடுப்பித்து சிறீ சங்கபோதி புவனேகவாகுவென 17 வருடம் ஆட்சி செய்தான் என்றும் (ஷெ நூல் பக். 75) இவனே கந்தசுவாமி கோயிலைக் கூடக்கட்டினான் என்றும் சொல்லியுள்ளார். இவர்கள் தமக்கு முன்னர் வைபவமாலை. கைலாயமாலை அமைச்சர் புவனேகவாகுதான் நல்லூர் தலை நகரையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையும் கட்டி இருக்கிறான் என்று சொல்லி இருப்பதை ஆதாரம் காட்டி மறுக்கவும் இல்லை. தம்புதுக் கோட்பாட்டுக்கு ஆதாரம் காட்டி மறுக்கவும் இல்லை. தம்புதுக் கோட்பாட்டுக்கு ஆதாரம் காட்டி நிறுவவும் இல்லை தம் தனம் போனவண்ணமே சொல்லி இருக்கின்றனர். ஆகையால் இவர் கூற்றுக்களை கடந்த உண்மையைச் சம்பவங்களென்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இரண்டு புவனேகவாகுகள் ஒரு கந்தசுவாமி கோயில் கட்டினவர்களல்ல ஒரு புவனேகவாகுகள் ஒரு கந்தசுவாமி கோயில் கட்டினவர்களல்ல ஒரு புவனேகவாகுதான் கட்டினது குலசபாநாதன் அவர்கள் நல்லூர்கந்தசுவாமி என்னும் நூலில் (பக். 23ல்) யாழ்ப்பாண வைபவம் என்னும் நூலில் தமிழ் அரசனின் வாசல்ஸ்தானமாகிய நல்லூரிலே 870 வருடத்தில் சிங்கையாரிய மகாராசனின் மந்திரியாகிய புவனேகவாகுவினாற் கட்டப்பட்டுப் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட கந்த சுவாமி கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் காட்டுகிறார். அன்றிம் அவர் யாழ்ப்பாணம் கச்சேரியில் சைவசமயக் கோயில்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் பழைய இடாப்பு ஒன்று உண்டு. என்றும் அதனைத் தாம் பார்வையிட்டபோது கோயிற்குறிப்பு வரலாறு என்பதன் கீழ்.

கந்தசுவாமி கோயில் குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது இது தமிழ் அரசன் ஆரியச்சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகவாகுலால் 884ம் ஆண்டளவில் கட்டப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார். (ஷெ நூல் பக். 24) அன்றியும் அவர் துவைனம் அவர்கள் எழுதிய யாழ்ப்பாணப் பகுதி இந்து ஆலயங்களின் அட்டவணைப் புத்தகம் பார்க்க நேர்ந்ததாகவும் அதில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் குருக்கள் வளவு என்னும் காணியில் கட்டப்பெற்றுள்ளது. தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சர் புவானகவாகரினால் கி.பி. 884 வரை கட்டப்பெற்றது. என்ற குறிப்புக்களைக் கண்டதாகவுங் கூறுகிறார் (ஷெ நூல் பக்: 25)

இங்கே இவர்கள் காட்டிய குறிப்புக்கள் அனைத்தும் கைலாயமாலைத் தனிப்பாடலில் இலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபதாமாண்டதெல்லை. புவனேகவாகு நல்லைககுலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே” என்று கூறப்பட்ட புவனேகவாகு அமைச்சர் புவனேகவாகுதான் என்ற துணிவதற்கு மேலும் வலுவைக் கொடுக்கின்றன. என்பது கவனிக்குக. இவை இங்ஙனமாக திரு. செங்கை யாழியான் அவர்கள் ஈழநாடு இதழிலே கந்தவேள் கோட்டம் என்ற தலைப்பிலே அனேக கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அவற்றுள் 27–10–85 இதழிலே ஆரியச்சக்கரவர்த்தி என்றும், சிங்கை ஆரியன் என்றும் வழங்கப்படப்போகின்ற இவன் மந்திரியாகப் புவனேகவாகு என்பவர் இருந்தார். அவர் நல்லூரில் மந்திரிமாளிகைக்கருகில் தென்கிழக்கே அமைந்திருந்த குருக்கள் வளவு என்ற இடத்தில் (இன்றைய நல்லூர்க் கந்hன் ஆலயம் அமைந்துள்ள இடம்) கந்த வேளுக்குச் சிறிதொரு ஆலயம் அமைப்பித்திருந்தார். முதலலாயம். இது இவரின் இக்கூற்று நாம் மேலே காட்டிய கூற்றுக்களுக்கொத்தாம். நம்கூற்று அமைச்சர் புவனேகவாகுவே நல்லூர்த் தலைநகரையும் கந்தசுவாமி கோயிலையும் கட்டினான் என்பதே.


41. நல்லூர் நகர் வீழ்ச்சி
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் நூலில் சொல்லப்பட்டபடி சங்கிலி ஏழாம் செகராசசேகரன் கி.பி. 1519 – 1561 வரை ஆட்சி பண்ணினான். போர்த்துக்கேயர் கி.பி. 1505 ஆண்டளவில் வியாபாரிகளாய் வியாபார நோக்கமாக வத்து இலங்கையினுட் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாண இராச்சியத்தோடு சம்பந்தம் பூண்டு ஈற்றில் அதனை ஜெயித்து அப்பிக் கொண்டார்கள். போர்த்துக்கேயர் அவனைக் கொலை பாதகன் கொடுங்கோலன் என்று சங்கிலியை எழுதி வைத்துள்ளனர். 1542ம் வருஷம் அர்ச் சவேரியார் என்னும் குரு. மன்னார் வாசிகள் ஏழுநூறு பேருக்கு அவர்க்ள சத்திய வேதத்தில் சேரவிரும்பிய படியால் அவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுத்தார் அந்த ஞானஸ்நானம் பெற்றவர்களைச் சங்கிலி மன்னன் முன்போல் தங்குலப தெய்வத்தைத் தொழும்படி ஆக்ஞாபித்தான். அவர்கள் சத்திய வேதத்தை விடுவதில்லை என்று சொன்னார்கள் அனைவரையும் அரசன் வாளுக்கிரையாக்கினான். இது 1544ம் ஆண்டுக் கடைசியில் நடந்தது என்பர். (யா.வை.வி.பக். 113-17)

அன்றியும் அத்தூலில் பறங்கிப் படை எழுச்சி 1560 ஆண்டு நடந்து விவார சங்கிலி தன் பிரசைகளில் கிறஸ்தவரானோர்களை வருத்தியதோடு யாழ்ப்பாணத் துறைகளையடையும் அன்னியக் கப்பல்களைச் சூறையாடிக்கொண்டு வந்தமை பறங்கியரின் பழைய கோபத்தை வளர்த்துக் கொண்டு வந்தது. கொன்ஸ் தந்தீனுபிறகன்சா என்னும் போர்த்துக்கேயரது இந்தியப் பிரதி ராசாவின் தலைமையில் அவன் 92 மரக்கலன்கள் படையுடன் 1560ம் ஆண்டு செப்ரம்பர்மாதம் 7ந் திகதி கோவையைவிட்டுப் புறப்பட்டான். கொச்சியில் இன்னும் 7போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட்டன. கப்பற் படையானது யாழ்ப்பாணத்தில் வந்து ஒக்டோபர் மாதம் 20ந் திகதி நங்கூரம் போட்டது. பிறகன்சா கரைகளைப்பார்வையிட்டு இரண்டு நாட்களாகப் பாரியாலோசனை பண்ணியபின் பண்ணையிற்றுறைபில் இறங்கினான். சங்கிலி அரசன் பெலம் முழுவதும் கொழும்புத் துறையில் இருந்தது. அத்துறையில்தான் பறங்கியர் கரை பிடிப்பார்கள் என அவன் காத்திருந்தான். பறங்கியர் 2 நாட்களின் பின் சிறுத்தீவில் இறங்கி அதிகாலையில் தங்கள் சமய நிட்டைகளை முடித்துக்கொண்டு பின் நேரம் 3 மணியளவில் பண்ணைத் துறையை நோக்கி வந்தனர். அரசன் சேனை 2000 பேர் வரை சேது என்று பொறிக்கப்பட்ட கேடயங்களுடன் வந்ததும் பறங்கிகள் சொரிந்த குண்டு மாரிக்காற்றாது பின்னிடவே சத்துருக்கள் எதிரிடையின்றி இறங்கிக் கொண்டனர். (யா.வை.வி.பக்.124)


நல்லூர்ப் பிரவேசம்
பறங்கிப் படை 1200பேர் மாத்திரம் கொண்டதாயிருந்தும் அணிவகுப்பில் சிறந்து விளங்கியது. முன்னணியில் ஒரு குரு கிறிஸ்துவின் கொடியைச் சுமந்து செல்ல பிறகன்சா பின்னணியில் வந்தான். கிறிஸ்துவின் கொடியை வணங்கிக்கொண்டு “சந்தியாகூ” என்று போர்ச் சத்திட்டுக் கொண்டு படை பட்டணத்தை நோக்கி நடந்தது. பட்டத்துக் குமாரனும் படைகளுடன் வந்தெதிர்த்துப் பின்வாங்கினான். அப்பாலும் பறங்கிப் படைகள் நெருங்கி வரவே கோட்டைப் புரிசையின் முன் தமிழர் இரண்டு அணியாக நின்று எதிர்த்தனர். இரு படையினர்க்கும் போர் மூண்டது.

அச்சமையத்தில் பறங்கியர் குண்டுமாரி பொழிந்து ஓர் வாயிலை உடைத்துவிட்டு பட்டணத்தில் சரிந்தனர். அங்கு அதன் முக்கிய தெருவில் இறங்குதலும் ஓலைகளின் கீழ் மறைத்து வைத்திருந்த பல பீரங்கிகள் வெடித்துக் குண்டு சொரியலே பறங்கியர் மீண்டும் வீராவேசமாய்ப் போர்புரிந்து தமிழர் படையின்மேல் வீழ்ந்து பலரைக் கொன்றனர். தமிழரும் பிறகன்சாவின் குதிரையை வெட்டி வீழ்த்தியும் விடுகளிலும் தோட்டங்களிலும் இருந்து சரமாரி சொரிந்தும் எதிரிபடையை வருத்தினர். பறங்கியர் தம்முயர்தரமான படைப் பழக்கத்தின் உதவியால் தமிழர் படைகளையெல்லாம் ஒதுக்கி ஒரு பக்கத் தெருவழியால் ஓடச் செய்தனர். (யா.வை.வி.பக்.127)


அரசன் நழுவி விடல்
நல்லூர்க் கோட்டை புற நீங்கலாக பட்டணம் போர்த்துக்கேயர் கைப்படவே போர்வீரர் அங்குமிங்குமாகச் சூறையாடத் தலைப்பட்டனர், சூறையாடப்பட்ட பொருட்களுடன் வீதிராசா பொருளான புத்தசி;னமுமொன்று அந்த யுத்தத்தில் மறியற்காரராகப் பிடிக்கப்பட்ட இராச குடும்பத்தினரைப் போர்தர் பதவிக்கேற்ற மரியாதையாக நடத்தினர். பிறகன்சா அன்றிரவு கோட்டைக்கயலே தங்கி மறுநாள் கோட்டையைப் பிடிக்க எண்ணினான். நல்லூர்க் கோட்டையில் இருந்து போர் தொடுப்பான் அரசரென போர்தர் எண்ணினார். ஆயின் அர்த்த சாமத்தில் அவன் திரவியங்கள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு அரண்மளைக்கு நெருப்பு வைத்து விட்டுக் கோப்பாய்க் கோட்டைக்கு ஓட்டம் பிடித்தான். போர்த்துக்கேயர் நல்லூர்க்கோட்டையைக் கைப்பற்றிக்கொண்டு நகரவாசிகளுக்குப் பறை அறிவித்து நல்லூரில் வந்து குடியேறச் செய்தனர் அப்பால் பிறகன்சா கோப்பாய்க் கோட்டைக்குப் போனான். அதுவும் வெறுமையாயிருந்தது அரசன் பறங்கியர் படைதன்னைத் தொடர்ந்து வருவதையறிந்து காடுகளுக்குள் கரந்துறைவானாயினான். பின்னர் பிறரின் தூண்டுதலால் அரசன் போர்த்துக்கேயரோடு சமாதானம் செய்ய உடன்பட்டான். பிறகன்சாவும் ஒப்புக்கொண்டான் இரு பகுதியார்க்கும் 6 அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அரசன் நடக்கவில்லை. இரு பகுதியாரும் பகைமை பூண்டனர். (யா.வை.வி.பக். 124-130)

அப்பால் காக்கைவன்னியன் செய்த துரோகத்தினால் சங்கிலி போர்த்தரால் சிறைபிடிக்கப்பட்டான். அவர்கள் காளிகோயில் சன்னதியில் அவனைச் சிரச்சேதம் செய்து கொன்றார். மனைவி தீயில் குதித்து இறந்தாள் என்றும் திரு. ஆ.மு. (யா.ச.பக். 70) சொல்லுகிறார்.

போர்த்துக்கேயரின் மேலாட்சி 1561 தொடங்கி 1590 வரையும் நடந்தது.

காசிநயினார் பெரியபிள்ளை புவிராசபண்டாரம் என்போர் அவ்வாட்சியில் அரசியற்றினார். (யா.வை.வி.பக். 132-139)

இவர்களுக்குப்பின் எதிர்மன்னசிங்கம் சங்கிலி குமரன் அரசாண்டனர்.


யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரின் இரண்டாம் படை ஏற்றம்.
(யா.வை.வி.பக். 140
1591ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ந் திகதி பூத்தாடு என்னும் போர்த்துக்கேய தலைவனின் கீழ்படை கொழும்புத் துறையில் இறங்கியது. அப்பொழுது அரசனாயிருந்த புவிராசசிங்கமும் போரும் காயத்தமானான். 28ந் திகதி பறங்கியர் படை நல்லூரை நோக்கி நடந்ததும். வழியில் சிங்கைநகர் என்னும் அரணில் தமிழர் படைபோர்த்தரை எதிர்த்துக் கடும்போர் புரிந்தது. தமிழர் சேனைத்தலைவனாகக் காக்கு என்பவன் போர் புரிந்தான். போர்த்தர் “சந்தியாகஉ” எனப் போர்ச் சத்தமிட்டுக் கொண்டு தமிழர் சேனையுட் புகுந்தனர். அப்பால் போர்த்தர் படை நல்லூரில் இரு கோயிலுக்கிடையில் (அவை வீரமாகாளியம்மன்கோயில் கந்தசுவாமிகோயில் என்பன போலும்) போர் புரிந்தது.

இப்போரில் அகப்பட்ட எதிர்மன்னசிங்ககுமாரன் என்னும் இராசகுமாரனைச் சீமான் பிஞ்ஞன் என்னும் போர்த்தர் போர்வீரன் காப்பாற்றினான். பூத்தாடும் அவ்விராச குமாரனை உபசரித்தும் காப்பாற்றினான். அப்பால் எதிர்மன்னசிங்ககுமாரனைப் போர்த்தர் திறையரசனாக்கினார்கள். அவன் 1591 – 1616 வரையும் அரசாண்டான். அப்பால் சங்கிலி குமாரனின் ஆட்சி 1616 – 1620 வரையும் நடந்து இவன் ஆட்சியிலே இராசபரம்பரையினர் பலருக்குத் தீமைகள் நிகழ்ந்தன. இவன் போர்த்துக்கேய மேலிடத்துக்குப் பிடிக்காமல் நடந்தான் இவன் தன்மனைவியோடும் கோவைக்கனுப்பப்பட்டான். இவனும் மனைவியும் சத்தியவேதத்திற் சேர விரும்பினர். கோவையின் அதிமேற்றிராணியார் ஞானப்பிதாவாய் நிற்க இராசமரியாதையோடும் ஞானதீட்சை கொடுக்கப்பட்டது. சங்கிலிக்குத் தொன்பிலிப்பென்றும் மனைவிக்குத் தொன்னாகத்தரினா என்றும் பெயராயிற்று.

பின்னர் கோவையிலே இவனுக்குத் தீர்மானிக்கப்பட்ட மரணத்தீர்ப்பு நிறைவேறும் தினம் வரவே சங்கிலி அத் தீர்ப்பை மனச் சாந்தியோடும் ஏற்போனாயினான். அலுப்பந்தியின் முற்றவெளிக்கவனை இட்டுக் கொண்டு போகும்போது பிரான்சீஸ் சபைச் சன்னியாசிகள் பலர் உடன் சென்றனர். கொலைக்களம் முழுதும் துக்கத்துக்குக்கடையாளமாகக் கறுப்புத் துகிலால் போர்த்திருந்தது அதன் நடுவில் ஒரு கம்பளம் விரித்துச் சிவப்புப் பட்டுத்தலையணை போடப்பட்டிருந்தது குற்றத்துக்காகக் கொல்லப்படும்போதும் கொல்லப்படுவோனின் இராசகுலத்துக்கேற்ற மரியாதையைச் செய்யப்போர்த்துக்கேயர் தவறினாரில்லை. அப்பால் சிரம் கொய்யுமுன் வழக்கம் போலக் கைகளைக் கட்டச் சங்கிலி சம்மதியாமல் யான் என் பாபத்துக்கே மரிக்கின்றேன்னாதினால் என் மனமொப்பிக் கொண்டேன் என்றனன் பின் யேக என்னும் திருநாமத்தையுச்சரித்துக் கொண்டிருக்கையிலே யாழ்ப்பாணத்தைக் கடைசியாய் ஆண்ட எம் அரசன் சிரம் விழுந்தது. சங்கிலி ஒரே ஒரு தயவைக் கேட்டிருந்தான். தன் தேகத்திற்கு பிரான்சீஸ் சபையாரின் உடுப்புக்கட்டி சேமம் செய்ய வேண்டுமென்பது. அவ்வாறே சந்நியாசிகள் மரித்த சரீரத்துக்குத் தம் சபையின் அங்கிகளை அணிவித்து இராசவைபவங்களோடு ஊர் வலம் செய்து தங்கள் சவக்காலையில் பிரேத சேமம் செய்தனர். (யா.வை.வி.பக்.160)

சங்கிலியின் மனைவி மனம் திரும்பினோருக்குரிய ஓர் மடத்தில் உட்பட்டு அங்கு பழம் கிறிஸ்தவரும் காணும்படியான உத்தம கிறிஸ்த சீவியமுள்ளவளாய் விளங்கினாள். (ஷெபக். 160)

இச்சங்கிலி அரசன்தான் சிங்கை ஆரிய அரசனின் கடைசி அரசன் இவனுடன் தமிழரசர் அரசாட்சி முடிவெய்தியது.

யாழ்ப்பாணத்தை பல நூற்றாண்டாக அரசு செய்த சந்ததியாரின் இறுதியரசன் கைதியாகவே போர்த்துக்கேய சேனாதிபதி பிலிப்டே ஒலிவேறா கி.பி. 1620ல் தேசாதிபதியானாள் இவன் ஆட்சி ஆரம்பம் வரையும் இருந்த தமிழர் நல்லூர் இராச்சியம் முடிவெய்தியது (ஷெ.பக். 160)


42. யாழ்ப்பாணம் என்னும் பெயர்
இப்பெயர் பற்றி

முதலில் வண. சு. ஞானப்பிரகாசர் அவர்கள் கூறியகூற்றுக்கு வருவோம்
யாழ்ப்பாண அரசர் காலத்தில் வடவிலங்கைத் தலைநகரி தமிழ் நூல்களில் யாழ்ப்பாணமென்றழைக்கப் பட்டதாகத் தோன்றவில்லை. அந்நூல்களிலெல்லாம் சிங்கைநகரையே பெரும்பான்மையும் நல்லூரைச் சிறுபான்மையும் குறிக்கின்றன. யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ம் நூற்றாண்டுச் சிங்கள நூல்களிற்றான் முதன் முதற் காணப்படும். செல்லுகினி சந்தெசய, கோகில சந்தெசய எனும் இரு நூல்களிலும் அது யாப்பாப் பட்டுன எனப் பெயரிடப் படுகின்றது. இதனால் யாழ்ப்பாணப் பெயர் யாப்பா-நெ எனும் சிங்களப் பெயரீட்டினின்று உண்டான தென்பர் ஆராய்ச்சி வல்லோர். இதுவே எம்மதமுமாம். யாப்பா (யகபத்) எனும் சொற்பகுதி நல்ல என்னும் பொருளுள்ள ஓர் மொழியாம். நெ என்னும் பகுதி ஊர் எனப் பொருள் படும். ஆகவே யாப்-பா-நெ நல்லூர் எனும் தமிழ்ப் பெயர்க்குச் சரியான சிங்களமாம் (இது ஸ்ரீ.எ.எம்.குணசேகர முதலியார் முதற்கண் எடுத்துக் காட்டியது. இடப் பெயர் வரலாறு 130ம் பக்) எனவே யாப்பா-நெ, யாப்பாப் பட்டுண என்பவையிரண்டும் நல்லூர் – நல்லூர்ப் பட்டணம் எனும் தமிழ்ப் பெயர்களையே காட்டி நிற்கும், யாப்பாநெ எனும் பெயர் யாழ்ப்பாணம் என மருவி வழங்கிய நாட்களிலே நம்புலவர்கள் யாழ்ப்பாணன் கதையை உருப்படுத்தி வைக்க அன்னோரைப் பின்பற்றிய மயில் வாகனப் புலவர் காலவரையறையிகந்து கவிவீரராகவரென்னும் சமீப காலத்து யாழ்ப்பாணனை பழைய காலத்துக் கற்பனையிலுள்ள யாழ்ப்பாணனுடன் சேர்த்து வைபவமாலையிற் புகுத்தி விடுகின்றவரானார்.”

இதுகாறுங் கூறியவற்றால் யாழ்பாடியின் வரலாறு சமூலமகா நிஷேதிக்கப்பட வேண்டும் என்பது தெளிவு. (யா.வை.வி.பக். 18-19)

யாழ்பாடியின் வரலாறு செங்கடக நகரியிலிருந்து ஆரம்பமான வரலாறு வைபவமாலை. சொன்ன செங்கடகநகரி வடவிலங்கையில் வண. சு.ஞா. அவர்களால் அறியப்படாத ஒன்று இன்னும் வண. சு.ஞா. அவர்கள் மற்றுமோரிடத்தில் ஓர் சிங்கள நூல் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது கேட்டுச் சிங்களவர் ஆனந்த நிருத்தமாடிய காலத்தில் இயற்றப்பட்டது. அதனைச் செண்பகப் பெருமாளுக்கே தேவேந்திர நகரிலிருந்து வந்த ஒரு தூதாக” கோகில சந்தேசயமெனப் பெயர் கொடுத்து அந்நகரத்து இறுகல் குலபிரவேணியின் அதிகம்படினான். அதில் … யாப்பா பட்டுண… திறகொட்ட அதாவது ஆரியச் சக்கரவர்த்தியைத் துரத்திவிட்டு யாப்பா பட்டினத்தை (நல்லூரைத் த்னரணாக்கி வாழ்கின்ற நானாககீர்த்தி பொருந்திய சப்புமல் (செண்பகப்பூ) ராசகுமாரேந்திரனுக்கு அக்குயிற்றூதையனுப்பியதாக காட்டப்பட்டிருக்கிறது” (யா.வை.வி.ப 105 – 106)

இவர் கருத்துப்படி நல்ல என்னும் தமிழ்ச் சொல்லின் பொருள் குறித்த “யாப்பா” என்னும் சிங்களச் சொல்லும் ஊர் என்னும் தமிழ்ச் சொல்லின் பொருள் குறித்த ‘நெ’ என்னும் சிங்களச் சொல்லும் அதாவது கல்லூரி என்னும் தமிழ்ப் பெயரின் சிங்கள மொழி பெயர்பாகிய “யாப்பா நெ” என்பது காலகதியில் யாழ்ப்பாணமாக மருவி வழங்க வைபவமாலையார் அப்பெயரைக் கொண்டு கற்பனையிலே ஒரு கலிவீரராகவனைக் கண்டு அவனை வைபவமாலையில் சேர்த்து எழுதியிருக்கிறார் என்பதே.

இங்கே நாம் அறியவேண்டியது (யாப்பாநெ) தான் யாழ்ப்பாணமானதா உள்ளபடி யாழ்பாணன் வசித்த காரணத்தால்தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததா என்பதே கி.பி. 9ம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணன் வசித்திருக்கிறான். செண்பகப் பெருமான் 15ம் நூற்றாண்டில் வாழ்தவன் எனவே ஆறுநூற்றாண்டுக்கு முன்னரே யாழ்ப்பாணன் வசித்ததாலே யாழ்ப்பாணப் பெயர் வந்துவிட்டது. கைலாயமாலை கி.பி. 948ல் இயற்றப்பட்டது. அதிலே.

“பாவலர்கள் வேந்தன் பகரு மியாழ்ப் பாணன்
காவலன் றன்மீது கவிதை சொல்லி – நாவலர்முன்
ஆனகவி யாழினமைவுற வாசித்திடலும்
மானபரன் சிந்தை மகிழ்வாகிச் - சோனைக்
கருமுகில் நேருங் கரன் பரிசிலாக
வருநகரமொன்றை வழங்க – தருநகர
மன்றுமுதல் யாழ்ப்பாண மான பெரும் பெயராய்
நின்றபதி யினெடுங்காலமும் - வென்றிப்
புவிராசன் போலப் புகழுடனாண்ட
கவிராசன் காலங்கழிய” (கண். 40 – 45)

எனவே செண்பகப் பெருமாள் காலத்துக்குப் பின் யாழ்பாணனின் யாழ்ப்பாணப் பெயர் வந்தாற்றான் யாப்பாநெயில் இருந்து வந்ததெனலாம்.

“மதித்த வளங்கொள்வயல் செறி நல்லூரில்” எனக்கைலாயமாலையிற் சொல்லப்படுவதால் ஊருக்கு நல்லூர் என்ற பெயரும் தேசத்துக்கு யாழ்ப்பாணம் என்னும் பெயரும் இக் குயிற்றூதுக்கு முன்னரே இருப்பதால் இக்குற்றூதாலே தான் இப்பெயர் வந்ததென்பது பிழை.

“யாப்பாநெ” என்ற சிங்களச் சொல் மாழ்ப்பாணம் என வரவில்லை. அதனை வைபவமாலை யார்மயங்கிக் கூறவும் இல்லை. கைலாயமாலை, வைபவமாலைக்காதாரமான நூல் அக்கைலாயமாலையிற் சொல்லப்பட்டதையே அவர் சொன்னார் என்பதே.

அன்றியும் நல்லூரில் உள்ள தமிழ் மக்கள் தம் நாட்டு நல்லூர் என்ணுனும் சொல்லைவிட்டு ‘யாப்பாநெ’ என்னும் சிங்களச் சொல்லை சொன்னார்கள் என்றும் அதுவே காலகதியில் யாழ்ப்பாணம் எனும் பெயர் ஆனதென்பதும் அசம்பாவிதமே எனவே இந்த ஆறு நூற்றாண்டுக்கால எல்லையிலே யாழ்ப்பாணமென்னும் பெயர் சிங்கள நாட்டிலும் பரவி இருக்கவேண்டும் அதனை அறிந்துதான் அக்கோகில சந்தேசகாரர் தம் நூலிலே யாப்பா பட்டுன என்றும் குறித்தார் என்று தோன்றுகிறது. அஃது எங்ஙனமெனில் யாழ்ப்பாணம் என்பதில் கூள்ள “ழ்” என்னும் மெய் எழுத்து தமிழுக்கே சிறப்பெழுத்து அந்த எழுத்து சிங்களத்தில் இல்லை. ஆகையால் சிங்கள மக்கள் அதனை அழித்து யாப்பாணம் என்று சொல்ல வேண்டும். அதைத்தான் அவர்கள் ‘யாப்பாநெ’ என்று சொல்லைத்தான் அவ்வாறு சொன்னார் என்க. செண்பகப் பெருமாள் ஒரு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற ஒரு சிங்கள மன்னன் அம்மன்னனைக் குறித்துப் பாடிய அவனுக்கனுப்பிய பாட்டிலே இந்த யாப்பாப் பட்டுன என்னும் சொல் உபயோகிக்கப்பட்டதானால் அச்சொல் சூழ உள்ள தமிழ் நாட்டு மக்களின் புழக்கத்துக்குப் போவதெப்படி ஒரு நாட்டின் பெயரை அந்நாட்டின் வெளிநாட்டார். வேறுமொழியாளர் மொழிபெயர்த்தா வழங்குகிறார்கள்.. இல்லையே மொழிபெயர்த்தால் பெயர் மாறிப்போமே. அன்றியும் இப்பொழுது சிங்களவர் யாப்பாநெ, யாப்பினே என்று சொல்லுவது இந்த யாழ்;பபாணம் என்ற பெயரைத்தானே அவ்வாறுதான் பண்டுள்ள சிங்களவரும் யாழ்ப்பாணம் என்ற பெயரைத்தான் யாப்பாநெ யாப்பாப் பட்டுன என்று சொன்னார் என்க.


43. இந்நூலில் புதிதாக வெளியாகும்
உண்மைகளுள் அனேகம்

யாழ்ப்பாணச் சரித்திரம் தமிழரசர் காலத்தில் இந்நூலாலேயே முதன்முதலாக வெளியாகும் உண்மைகளுள் அனேகம்
1. வல்லிபுரத்தில் சிங்கை நகரில்லை.

2. அங்கிருப்பது செங்கடக நகர்

3. சிங்கை நகர் நல்லூரில் கட்டப்பட்டது.

4. அந்நகர்க்கு வைத்த இடு குறிப்பெயர் சிங்கை.

5. சிங்கையாரியச் சக்கரவர்த்தியில் உள்ள சக்கரவர்த்திப் பட்டப்பெயர் பல தேசங்களை வென்றதனால் ஏற்பட்ட பட்டப்பெயரல்ல முதலரசனுக்கு முடிசூட்டும் பொழுது அம்முடியைச் சூட்டிய கெங்காதரக் குருக்களால் கொடுக்கப்பட்ட உயர்வு நவிற்சி ஆசீர்வாதப் பட்டபெயர் இராசாவை உயர்த்திச் சக்கரவர்த்தி என்று சொன்னவாறு.

6. கலிங்கமாகனுக்கு யாழ்ப்பாணத்தில் தொடர்பில்லை.

7. கலிங்க மாகனும் சிங்கையாரியனும் வேறு வேறு புகுடர்கள்

8. சிங்கையாரிய மன்னர் பரம்பரையைக் கலிங்க மாகன் பரம்பரையாகப் பிறர் அட்டவணைப் படுத்தியது பிழை.

9. கலிங்க மாகன் வல்லிபுரத்தில் சிங்கைநகர் கட்டவில்லை.

10. செண்யகப் பெருமாள் நல்லூர்த் தலைநகரைக் கட்டவில்லை.

11. நல்லூரில் ஸ்ரீ சங்கபோதிபுவனேகவாகுப் பட்டத்தை அவன் பெறவில்லை.

12. சின்னமனத்தார் விருந்தைப் பாராட்டிச் செண்பகப்பெருமாள் பாடவில்லை.

13. சிலகிய சகாப்தம் எண்ணூற்றெழுபது எட்டு நூறும் எழுபதும் கொண்ட தொகையாகும் அது 1170அல்ல அது பிழையான பொருள்.

14. கி.பி. 948 தொடங்கி கி.பி. 1620ம் ஆண்டு வரை நல்லூர் தலைநகரம் இருந்தது அத்தலை நகர் இருந்த களம் ஒன்றேயொன்றுதான்.

15. ஒரு களத்தில் உள்ள தலை நகர்க்கு மூன்று பெயர்கள்.

16. யாழ்ப்பாணத்தில் தமிழரசர் 8ம் நூற்றாண்டில் ஆரம்பமானது

17. நல்லூர்த்தலை நகம் 10ம் நூற்றாண்டில் ஆரம்பமானது. 13ம் நூற்றாண்டென்பது பிழை.

18. சின்ன மனத்தார் அமைச்சர் புவனேக வாகுக்கே விருந்திட்டார்.

19. கைலாயமாலை நல்லூர் இராச்சிய மக்களுக்காகவே பாடப்பட்டது.

20. உக்கிரசிங்கன் தலைநகரைச் சிங்கை நகர்க்கு மாற்றவில்லை செங்கடக நகர்க்கே மாற்றினான்.

21. கைலாயமாலை கலிங்க மாகனைப் பாடவில்லை.

22. ‘காலிங்க’ என்னும் சொல்லில் உள்ள கா, ல எழுத்துக்களின் விளக்கப் பிசகால் வைபவமாலை யார்கூளங்கையென்று சொல்லவில்லை. அப்படி சொல்லுவது கையொன்று கூழையானதால் என்றும் சொல்லியுள்ளார். அன்றியும் கூளங்கையன் காலமும் காலமும் 10ம் நூற்றாண்டு காலிங்கன் 13ம் நூற்றாண்டு ஆகையால் காலிங்க மாகனைப் பற்றிய ஒரு சொல்லும் ஒரு குறிப்பும் கைலாயமாலையிற் பாடப்பெறவில்லை. அவன் கைலாயமாலை பாடிய மூன்று நூற்றாண்டின் பின் யிறந்தவன். இவை அரிய ஆராய்ச்சி முடிபுகள்.

23. செண்பகப் பெருமாள் கனக சூரியனை எந்த இடத்தில் வென்றானோ அந்த இடத்திலே அவன் பிரதி நிதி தோன்றான் கனகசூரியன் வென்றான்.

24. ஆகையால் ஆதிச்சிங்கை ஆரியன் இட்ட நல்லூர்த் தலைநகர்க் களத்தில்தான் கனகசூரியனின் காலமுன் பரம்பரையும் பின் பரம்பரையும் இருந்தது.

25. சிங்கையாரிய பரம்பரையினர் ஆட்சி ஆரம்ப அரசன் தொடங்கிச் சங்கிலி குமரன் வரையும் ஒரே இடத்தில் நல்லூரில்தான் இருந்தது. எனவே அத்தலைநகரம் கி.பி. 948தொடங்கி 17ம் நூற்றாண்டு முற்பகுதி வரை இருந்தது.

26. சிங்கையாரிய பரம்பரையினர் ஆதிச் சிங்கையாரியன் தொடக்கம் இறுதியரசனான சங்கிலிகுமரன் ஆட்சி முடிபுவரை நல்லூரில் ஒரே தலைநகர்க் களத்தில் இருந்துதான் ஆட்சி புரிந்தார்கள்.

27. சிங்கை ஆரிய பரம்பரை மன்னர் நல்லூரில்தான் தோன்றினர். அவாகள் யாரும் வல்லி புரத்துக்குப் போய் ஆட்சி செய்யவில்லை. அவர்கள் அங்கிருந்து நல்லூருக்கு வரவுமில்லை.

28. சிங்கையாரிய பரம்பரை முதல் மன்னன் சிங்கையாரியனேயன்றிக் கலிங்க மாகனல்ல.

29. சிங்கையாரியன் வந்த ஆண்டு எண்ணூற்றெழுபதைத்தான் 1170 என்றுபொருள் கண்டு கலிங்க மாகன் வந்த ஆண்டென்று பிறர் நிச்சயித்தனர். அப்பொருள் பிழை எனவே வந்தவன் 870ஐ உடையவன்தான். அவன் சிங்கை ஆரியன்.

30. நல்லூர் ஊரால்வருபெயர், சிங்கை இடுகுறியால் வருபெயர் யாழ்ப்பாணம் தேசத்தால் வருபெயர்.


44. யா.வை. விகாரரும் யாசகாரரும்
உரைத்த பிழைகளிலனேகமானவை
1. வல்லிபுரத்திலே சிங்கை நகரைக் கண்டமை

2. கலிங்கமாகன்தான் சிங்கைநகரைக் கட்டினான். என்றமை.

3. கலிங்கமாகன் வருகை யாழ்ப்பாணத்தில் நிகாழாதிருக்க நிகழ்ந்தது என்றமை.

4. இலகிய சகாப்hம் எண்ணூற்றெழுபது என்பதற்கு 870 என்று பொருள் காணாமை 1170 என்னும் பொருள் கண்டமை.

5. நல்லூரில் சிங்கைநகரைக் கண்டுகொள்ள இயலாதிருந்தமை.

6. செங்கடக நகரைக் காணதிருந்தமை.

7. இடமும் காலமும் காட்டாத சாசனத்தை வல்லிபுரத்தினைக் குறித்ததாக எண்ணியமை.

8. யாழ்ப்பாணச் சரித்திரத்தின் உயிர்க்குயிராக விளங்கும் கைலாயமாலையின் உண்மையைத் தெரிந்து கொள்ள இயலாமை.

9. செங்கடக நகரின் பழங்கட்டிடத்தினை சிங்கைநகர் என்ற நிச்சயித்தமை, கனகசூரியனும் மக்களும் வல்லிபுரத்துச் சிங்கைநகரியில் இருந்து நல்லூருக்கு வந்து குடியேறினர் என்றமை.

10. ஆதியில் கட்டிய சிங்கைநகர் மதில் போர்த்தர்படை எடுத்தபோதிருக்கவும் அதை அறியாமல் செண்பகப் பெருமாள் அந் நல்லூர்நகரை அழித்தான் என்றமை.

11. திரும்ப அவனே கட்டினான் என்றமை.

12. கனகசூரியனும் மக்களும் வல்லிபுரத்தில் சிங்கைநகர் பாழாய்ப் போனபடியால் திரும்ப நல்லூரில் வந்து குடியேறினார்கள் என்றமை.

13. கைலாயமாலையிற் பாடப்பட்ட சிங்கையாரியனும் கலிங்கமாகனும் ஒன்றென்றமை.

14. யா. பாடி வரலாற்றை நீக்கச் சொன்னமை.

15. மாருதப்பிரவாகவல்லி வரலாறு கற்பனை என்றமை.

16. சிங்கை ஆரியர் பரம்பரையை ஆதிச்சிங்கை ஆரியன் கீழ் அட்டவணைப்படுத்தாமல் கலிங்கமாகன் கீழ் நாம ஆவலியில் அட்டவணைப் படுத்தியமை.

17. மாவிட்டபுரக் கந்தசுவாமி கோயில் அச்சகர் சின்னமனத்தார் விருந்தைப் பாராட்டி அமைச்சர் புவனேகவாகு பாடிய பாட்டைச் செண்பகப் பெருமாள் பாடினான் என்றமை.

18. கோட்டைச் சிம்மாசனத்துக்குப் போன பின் அவ்வரசன் பெறும் ஸ்ரீ சங்கபோதி என்னும் பட்டப்பெயரை. இங்கே நல்லூரில் ஆளும்போதே செண்பகப் பெருமாள் பெற்றுக்கொண்டு அரசாண்டான் அன்றமை.

19. அமைச்சர் புவனேகவாகு கட்டிய நல்லூர் கந்தசுவாமிகோவிலை புத்த சமயத்தவனான செண்பகப் பெருமாள் கட்டினான் என்றமை.

20. நல்லூரிலே போர்த்தர் படை சிங்கைநகர் மதிலைத் தாண்டிப் போனதென்று ‘பாதர் குவிறோஸ்’ சொல்ல அது அப்பெயருடைய அரண் என்று அதையறியாமற் பிழையாகச் சமாதானம் சொன்னமை.

21. கலிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததைச் சான்று காட்டாமல் அவன் மேல் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதியமை.

22. யாழ்ப்பாணன் வரலாற்றை நீக்கச் சொன்னமை.

23. சிங்கையாரியன் பாண்டிமழவனால் அழைக்கப்பட்டு வந்ததை இல்லை என்றமை.

24. மாருதப்பிரவாகவல்லி கதையைக் கற்பனை என்றமை.

25. சிங்கையாரியனும் கலிங்கமாகனும் ஒருவரே என்றமை.

26. வல்லிபுரத்தில் உள்ள செங்கடக நகரையறியாது அதனைச் சிங்கைநகர் என்றமை வல்லிபுரம் - வல்லிபட்டணம்.

27. காலிங்க என்ற பதத்தைத்தான் கூளங்கையென்று வைபவமாலை யார் சொன்னார் என்றமை.

28. நல்லூர் நகரை செண்பகப்பெருமாள் கட்டினான் என்றமை.

29. யா. வைபவமாலை கைலாயமாலையாம் ஆதாரநூல்களின் நேர் முடிபுகளுக்கு நேர்மாறாகத் தத்தம் நூல்களை வெளியீட்டமை.

30 சிங்கையாரின் அரசர் பரம்பரையைக் கலிங்கமாகன் கீழ் அட்டவணைப்படுத்தி அவன் பரம்பரையாகக் காட்டியமை.

31. யாழ்ப்பாணம் என்னும் பெயர் யாப்பாநெ என்ற சிங்களச் சொல்லில் இருந்துதான் வந்ததென்றமை.

32. சிங்கையாரியனால் நல்லூரில் கி.பி. 948ல் அமைந்த சிங்கை நகரைக் கலிங்கமாகனால் கட்டப்பட்டதென்றால் அது வல்லிபுரத்தில் கட்டப்பட்டதென்றால் 1248ல் கட்டபட்டதென்றால் மும்மடிப்பிழை, இவ்வாறே இவர்கள் கூற்றிலே பலமடிப் பிழைகளும் வேறு பிழைகளும் வருகின்றன. அவைகளை வாசகர்தாம் படித்து அறிந்து கொள்ளவேண்டும்.

33. சிங்கையாரியர் 3 தலைநகர் கட்டிய வரலாறில்லை. அவர்களுடைய 3 தலைநகர்க் களமும் இல்லை. அவர்களுடைய தலைநகர் களம் ஒன்றே ஒன்றுதான் அறியப்பட்டிருக்கிறது.


45. முதற்குறிப்புக்களும் விளக்கமும்
1. சு.ஞா. காரர் சுவாமி ஞானப்பிரகாசர்

2. செ. இ. காரர் செ. இராசநாயக முதலியார்

3. யா. ச. யாழ்ப்பாணச் சரித்திரம்

4. யு.து. யுnஉநவெ துயககயெ

5. யா. வை. வி. யாழ்பாண வைபவ விமர்சனம்

6. யா. வை. மா. யாழ்ப்பாண வைபவமாலை

7. யா. வை. பா யாழ்ப்பாண வை. யா. பாடல்

8. கை. மா. கைலாயமாலை

9. கை. மா. கண். கைலாயமாலைக் கண்ணிகள்

10. செ.சே.மா. செகராச சேகரமாலை

11. த.பா.தி. தனிப்பாடற்திரட்டு


46. இந்நூலின் ஆதார நூல்கள்
1. செகராச சேகரமாலை

2. யாழ்ப்பாண வைபவமாலை

3. கைலாயமாலை

4. வைபவமாலை

5. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்

6. யாழ்ப்பாணச் சரித்திரம் - செ.இ

7. யுNஊநுNவு துயுகுகுNயு செ.இ

8. யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

9. யாழ்ப்பாணச்சரித்திரம் முதலாம்பாகம் டானியேல்யோன்

10. யாழ்ப்பாணக் குடியேற்றம் முதலாம் பாகம் சிவானந்தன்

11. வன்னியர் கலாநிதி சி. பத்மநாதன்
கள்ளியங்காட்டுச் செப்பேடு கலாநிதி செ. குணசிங்கம்

12. கள்ளியங்காட்டுச் செப்பேடு ஓதுவார் சிவக்கொழுந்து தந்தவை

13. வுhந முiபெனழஅ ழக துயககயெ ளு. Pயவாஅயயெவாயn.

14. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் கலாநிதி கா. இந்திரபாலா

15. ஊழஙெரநளவ ழக ஊநலடழn பாதர் குவைறோஸ்

16. கோட்டைவாசல் தோம்புகள்

17. குயிற்றூது இன்னும் வேறும்பல நூல்கள்

18. நல்லூர்க் கந்தசுவாமி குலசபாநாதன்

19. கந்தவேள்கோட்டம் செங்கையாழியான்


அறிஞர். பொ. ஜெகந்நாதன் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வேலணையில் பிறந்தார். திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார்@ பல நூறு கவிதைகளை யாத்துள்ளார். புலவரின் இலக்கியப் பணிகளில் தலையாயது அவர் ஆக்கிய ‘அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சி’ நூலாகும். இந்நூல் 1914இல் சென்னையில் வெளியாகியது. எஸ். சோமசுந்தரபாரதியார். பிரம்மஸ்ரீ சி. கணேசையர், சு. நடேசபிள்ளை முதலான அறிஞர்கள் அந்நூலைப் பாராட்டியுள்ளனர்.

இவ்வரலாற்றுக் குறிப்புகள் இவ்வாராய்ச்சிப் புலவர் மதிவலியும் ஆய்திறனும் உடையவர் என்பதை வலியுறுத்தப் போதியவாம்.
- அறிஞர் சோமசுந்தரபாரதியார்.

‘இந்நூலில் அவர்களுடைய பொறுமையான ஆராய்ச்சி வன்மையும் நுண்மதியும் நன்கு தெரிகின்றது.
- பிரம்மஸ்ரீ. சி. கணேசையர்.

‘இந்நூல்’ புதுவது கிளக்கும்’ ஓர் அரிய ஆராய்ச்சி நூலாகும்’
- திரு. க. நடேசபிள்ளை.

புலவர் பொ. ஜெகந்நாதனின் இராண்டாவது ஆராய்ச்சி நூலாக ‘யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும் வெளிவருகின்றது.

‘பொ. ஜெகந்நாதன் அவர்களின் ‘யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்’ என்ற நூல் காலத்தின் தேவைக்குகேற்ப எழுந்த தொன்றாகும். இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சிறப்பினைப் பற்றிய சிந்தனைகளைப் பொதுமக்களிடையே ஏற்படுத்தவல்ல தொன்றாகும். யாழ்ப்பாண வரலாற்றில் அவர் கொண்டுள்ள ஆர்வமும் ஈடுபாடும் பாராட்டிற்குரியனவாகும்.’
- பேராசிரியர்.சு. வித்தியானந்தன்

‘எண்பதாவது வயதை அண்மித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் வரலாற்றாய்விலே இவர் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்படுகிறார். வரலாற்றுண்மைகளைத் தேடுவதிலும், தமக்கு உண்மைகளாகப் படுவனவற்றை வலியுறுத்துவதிலும் இவருடைய கடும் முயற்சி போற்றத் தகுந்தது.’
- பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை