கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இலங்கைச் சோனகர் இன வரலாறு எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு திறனாய்வு  
 

ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ்

 

திரு. இராமநாதனது
“இலங்கைச் சோனகர் இன வரலாறு”
எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு
திறனாய்வு

மூலம்
ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ்
‘முஸ்லிம் காடியன்’ பதிப்பாசிரியர்

மொழிபெயர்ப்பு
எம். ஸீ. எம். ஸாஹிர்

மூலநூல்
கொழும்பு சோனகர் சங்கத்தின் ஆதரவில் முதன்முதல்
1907 இல் பதிப்பிக்கப்பட்டது.

சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்

ஆச்சிட்டோர்
தடயமண்ட் பிரிண்டர்ஸ்
41 சென் மைகல் வீதி
கொழும்பு 3.

ஐ. எல். ஏம். அப்துல் அஸீஸ்@ தலைவர், சோனகர் சங்கம், 1900
நம்பிக்கைப் பொறுப்பாளர், மரதானைப் பள்ளிவாசல்.

சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனால் இலங்கையில்
கண்டெடுக்கப்பட்ட கூபிக் கல்வெட்டின் அதே
மாதிரி உருவப்படிவம்.

“அரச ஆசிய கழக நிலைய அறிக்கை”
தொகுதி 1 இலுள்ள பதிவுத் தகட்டிலிருந்து.

முன்னுரை

இலங்கைச் சோனகர் எனும் பெயரால் அழைக்கப்படும் இலங்கை வாழ் முகம்மதியப் பெருங்குடி மக்களின் வரலாற்றையும் ஆரம்பத்தையும் பற்றிச் சிலர் தம்முள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களைக் களைந்தெறிவதே இச்சிறு நூலின் நோக்கமாகும். இப் பெருங்குடி மக்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்ல என ஐயத்திரிபற எவரும் அறிந்திருப்பினும் இவ்வினத்தவரின் சரியான வரலாறு இல்லாதிருப்பதன் காரணமாக அவர்களின் ஆரம்பம், அவர்கள் இத்தீவில் குடியேறிய காலம் என்பன பற்றிப் பிழையான கருத்துக்கள் வேரூன்றியுள்ளன. இலங்கைச் சோனகரின் மூதாதையர் இஸ்லாத்தைத் தழுவிய தமிழர் என எள்ளவவேனும் ஆதாரமற்ற வகையில் சில பொறுப்பற்ற எழுத்தாளர்கள் எடுத்தோதுவது மிகமிக வேதனைக்குரியது. அவர்கள் தாம் தயக்கமின்றிக் கூறும் விடயத்தை எடுத்தாய்வதில் எதுவிதகரிசனையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.

பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர் இத்தீவில் குடியேறிய அறபு வர்த்தகர்களின் வழித்தோன்றல்களே யாம் என இலங்கைச் சோனகர் வாழையடி வாழையாக நம்புகின்றனர். என்னறிவுக் கெட்டிய அளவில் அவர்களது இனத்தின் ஆரம்பம் பற்றியோ இங்கு அவர்களது ஆரம்பக் குடியேற்றம் பற்றியோ அறியத் தரும் தஸ்தாவேஜுகள் அவர்கள் மத்தியில் இல்லை. போர்த்துக்கேயரதும் டச்சுக்காரரதும் தொல்லைகளால் அவர்கள் பட்ட இடரின் காரணமாக அவர்களிடையே கல்வியறிவு குன்றி வந்ததே இந்தக் குறைக்குக் காரணமாகும். அன்னவரின் ஆட்சியின் போது தங்கள் வணிக வளத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும் சோனகர் இழந்ததோடு, ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் இருந்த உன்னத நிலையிலிருந்தும் அவர்கள் பின்தள்ளப்பட்டனர். எனினும் நம்பத் தகுந்த ஐரோப்பிய எழுத்தாளர்களில் எழுத்தோவியங்களிலிருந்து நாம் விளக்கங்கள் தேடும் போது இலங்கையின் முதல் பிரதம நீதியரசரும் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆள்சபைத் தலைவருமான சேர் அலெக்சாந்தர் ஜோன்ஸ்டன் என்பாரின் கருத்துரை நம் முன் நிற்கின்றது. இத்தீவில் குடியேறிய முதல் முகம்மதியர் ஹாஷிம் சந்ததியினரான அறபிகளே எனவும் எட்டாம் நூற்றாண்டில் அவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து வந்தார்கள் எனவும் அன்னவரின் பரம்பரையினர் மத்தியில் வழக்கிலிருக்கும் மரபு வரலாறொன்று கூறுகின்றது என அவர் எடுத்துரைக்கின்றார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அவரால் பதியப்பட்ட அந்த மரபு வரலாறானது நம்பகமான எழுத்தாளர்களால் பதியப்பட்ட அதற்கு முன்னைய பதிவுகளும் அவற்றில் ஏதாவது இப்போது நிலைத்திருக்குமாயின் ஐயத்துக்கிடமின்றி இருக்கத்தான் செய்யும். எனினும் அவ்வித பதிவுகள் இப்போது காணக்கிடைக்கவில்லை. மேற்போந்த மரபு வரலாறு அறபிகள் இந்நாட்டில் குடியேறியது எட்டாம் நூற்றாண்டெனக் கூறினும் அவர்கள் அதற்கு முன்னரும் பன்னெடுங்காலமாக இத்தீவுக்கு வந்துபோகலாயினர். அவ்விதம் குடியேறியஅறபிகளில் சிலர் தம்முடன் தம் அறபு மனைவியரை அழைத்து வந்தனர். ஏனையோர் தமிழ்ப் பெண்களை மதம் மாற்றி மனைவியராகக் கொண்டனர். ஏனெனில், அப்போது மலபாரிகள் என அழைக்கப்பட்ட தமிழர்களுடனேயே அறபிகள் தொடர்புகொண்டவர்களாக இருந்தனர். தமது நாட்டுடன் கொண்ட சமூக தொடர்பு முற்றாக அற்றுப்போனமையால் இங்கு குடியேறிய அறபிகள் தம்மைப் புதிய சூழலுக்குகேற்ப மாற்றிக் கொள்ளலாயினர். தற்போதைய இந்திய பார்ஸிகளின் பாரசீக மூதாதையர் தங்களை எவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டார்களோ அவ்விதமே அறபிகளும் தாங்கள் எவரிடை குடியமர்ந்தார்கலோ அந்த மக்களின் (தமிழர்) மொழி, பழக்கவழக்கம், ஒழுக்கம் என்பனவற்றைப் படிப்படியாக மேற்கொள்ளலாயினர். எனவே இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையானது சோனகர், தமிழரெனும் தவறான முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

இலங்கை வாழ் சோனகர் இனத்தில் தமிழர் எனவும் மதத்தில் முகம்மதியர் எனவும் 1885 இல் இலங்கைச் சட்டவாக்க சபையிலும் 1888 இல் அரச ஆசிய கழகம் (இலங்கைக் கிளை) முன்னிலையிலும் திரு. இராமநாதன் பகிரங்கமாக எடுத்துரைத்தார். அங்கு அவர், “இலங்கை வரலாற்றாசிரியர்களில் மிகவும் சிறந்தவர்க”ளாக விளங்கிய சேர் அலெக்சாந்தர் ஜொன்ஸ்டன், சேர் எமெர்ஸன் டெனன்ட் ஆகியோரின் சொற்களிலும் பார்க்க வலன்ரைனின் சொற்களில் அதிக நம்பிக்கை கொள்கிறார் என்பது தெட்டத் தெளிவாகின்றது. இனத்தில் தமிழராக இருப்பதில் எதுவித தாழ்வும் இல்லாவிடினும் சோனகர், அவர்களின் ஆரம்பம் பற்றி அறவே ஏற்காத, உண்மையிலே அவர்களின் உறுதியான நம்பிக்கை அதற்கு முற்றிலும் மாறாக உள்ள ஒரு கருத்தை அவர்களுக்குக் கற்பித்துக் கூற அவர் விடாப்பிடியாக முயல்வது அவர்களின் உள்ளத்தைப் புண்படுத்துவதாக, அன்றேல், எரிச்சலை ஏற்படுத்து வதாக இருக்கும். அவருடைய குறிப்புக்களை ஆராய வேண்டியதும் அவருடைய மேற்கோள்களை அலசிப் பார்க்க வேண்டியதும் அத்தியாவசியமாகின்றது. முன்கூறப்பட்ட கழகத்தின் முன்னிலையில் அவர் வாசித்த ஆராய்ச்சிக் கட்டுரையில், இலங்கைச் சோனகரின் மூதாதையர் தமிழ் முகம் மதியர் என்றும் அவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் இத்தீவிலே குடியேறினார்கள் என்றும் தாம் கொண்ட முடிபுக்குக் காரணங்கள் காட்டியுள்ளார். அவரது வாதத்தின் வழுவை நிரூபிக்கும் சான்றுகள் பின்வரும் பக்கங்களில் தரப்பட்டுள்ளன. அங்கு அவரது வாதத்தின் முடிபுகளிலுள்ள பிழைகளையும் நான் எடுத்துக் காட்டியுள்ளேன்.

இக் கைங்கரியத்தை அதிசிறந்த முறையில் நிறைவேற்ற நான் அருகதையுடையவன் அல்லன் என்பதை அறிந்திருப்பினும் என் சமூகத்தின் மீது கொண்ட அன்பும், அதன் ஆரம்பத்தையும் இலங்கையில் அச்சமூகத்தினர் குடியேறிய காலத்தையும் பற்றிய தவறான அபிப்பிராயத்தையும் என்னால் இயன்றவரை அகற்றும் அவாவும் இச்சிறு நூலை எழுதும்படி என்னைத் தூண்டியது.
ஐ. எல். எம். ஏ. ஏ
கொழும்பு,
மே. 22. 1907.

1. முஸ்லிம்களை “முகம்மதியர்” என அழைக்கும் வழக்கம் அன்று முஸ்லிமல்லாதாரிடை விரவிக் கிடந்தது. எனவே சட்ட ஏடுகளிலும் மாற்றார் எழுதிய நூல்களிலும் அச்சொல் கையாளப்பட்டது. எனவேதான் இந்நூலின் ஆசிரியரும் அச்சொல்லைக் கையாண்டுள்ளார் போலும். இஸ்லாம் மதத்தை அதன் திருநபி (ஸல்) அவர்களின் பேரால் “முஹம்மதீயம்” என்றோ, முஸ்லிம்களை “முகம்மதியர்” என்றோ குறிப்பிடுவது கிஞ்சித்தும் பொருத்தமற்றதுமன்றி முற்றுந் தவறானதுமாகும். ஆள்ளாஹ{வால் கொடுக்கப்பட்ட பெயர் இஸ்லாம். அதே போன்று அதனைப் பின்பற்றுபவர்க்குக் கொடுக்கப்பட்ட பெயர் முஸ்லிம். (மொழிபெயர்ப்பாளன்).


எமதுரை

பலரதும் வேண்டுகோளுக்கிணங்க இச்சிறு நூல் தமிழில் வெளிவருகின்றது. பல்லாண்டுகளாக உணரப்பட்டு வந்த ஒரு தேவையைக் காலங்கடந்தாயினும் பூர்த்திசெய்யக் கிடைத்தது பற்றிப் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இலங்கைச் சோனகர் இனத்தில் அறபிகளின் சந்ததியினர் என வரலாற்றின் அடிப்படையில் அமைந்த சான்றுகள் நிரூபிக்கின்றன என்பதை இந்நூலை வாசிப்பதன் மூலம் வாசகர்கள் அறிந்து கொள்ளலாம். அவ் அறபிகள் இற்றைக்கு இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் காணப்பட்டார்கள் என்பதைத் தற்போதைய சரித்திரச் சான்றுகள் நிருபிக்கின்றன.

இலங்கைச் சோனகர் மற்ற இனங்களினின்று வேறுபட்ட தனித்துவம் உடையோர் என்பதை எடுத்துக்காட்டும் நோக்கமாகவே இந்நூலை வெளியிடுகிறோம். பிரச்சினைகளைக் கிளறுவதற்காகவல்ல.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இவ்வெளியீட்டை இதழில் மலரும் புன்னகையோடு இருகரங் கொண்டு வரவேற்பர் என்பது எமது நம்பிக்கை. இந்நூல் காழ்ப்புணர்ச்சியை ஊட்டும் எனக் கொள்ளாது விழிப்புணர்ச்சியை ஊட்டும் எனக் கொள்வர் எனவும் உறுதியாக நம்புகிறோம்.

இந்நூலைத் தமிழ்ப்படுத்தித் தந்த இலங்கைத் தேசிய அரசுப் பேரவை அறிக்கையாளர் எம். ஸீ. எம். ஸாஹிர் அவர்களுக்கும் எம் நன்றி. இந்நூலை ஊன்றிப் படித்து, சில மேலதிக குறிப்புக்களையும் அவர் சேர்த்துள்ளார். அவை எமக்கு மேலும் பல விளக்கங்களைத் தருவனவாக அமைந்துள்ளன.
சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்
பிரிஸ்டல் வீதி,
கொழும்பு – 1

திரு. இராமநாதனது
“இலங்கைச் சோனகர் இன வரலாறு”
எனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான ஒரு
திறனாய்வு

நான் தலைவராக இருக்கும் பேறுபெற்ற சோனக சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் சில ஆண்டுகளுக்கு முன் “இலங்கைச் சோனகர்” எனும் தலைப்பில் உரையாற்றும் பேறு எனக்குக்கிட்டியது. எனது உரையின் இறுதியில் எனது சமூகத்தின் வரலாற்றை எழுதும்படி சிலர் வேண்டுகோள் விடுத்தனர். எனினும் சில அலுவல்களில் முழு நேரமும் சம்பந்தப்பட்டிருந்தபடியால் இது விடயத்தில் அதிக கவனம் செலுத்தும் நிலையில் நான் அப்பொழுது இருக்கவில்லை. இப்போது எனக்கு அதிக ஒய்விருந்தாலும், இவ்விடயம் பற்றி மேலும் எனது சிந்தனையைச் செலுத்தியதன் பேரில் எனது சமூகத்தின் ஆரம்பம், பழக்கவழக்கம், ஒழுக்கம், வர்த்தகம் என்பன பற்றி விளக்கி ஒரு முழுமையான வரலாற்றை எழுதுவதை எதிர்காலத்தின் கரங்களில் ஒப்படைக்க முடிவு செய்தேன். இப்பொழுது 1888 ஏப்ரில்; 26 ஆந் திகதி அரச ஆசிய கழகத்தின் (இலங்கைக் கிளை) முன்னிலையில் திரு. (அப்போதைய கௌரவ) பீ. இராமநாதன், “இலங்கைச் சோனகர் இன வரலாறு” எனும் தலைப்பில் வாசித்த ஆராய்ச்சிக் கட்டுரைக்குத் திறனாய்வொன்றை எழுதுவதோடு திருப்தியடைய எண்ணினேன்.

திரு. இராமநாதனைக் குற்றங் காண்பதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர் கீர்த்தி பெற்ற, பார்புகழ் பண்பாளர்@ சுடர்விட்டுப் பிரகாசிக்கும் திறமை வாய்ந்த சட்ட வல்லுனர். இலங்கையில் சில காலம் மாட்சிமைதங்கிய மன்னரின் வழக்குரைஞர் அதிபராக பொறுப்புவாய்ந்த ஒரு பதவியில் இருந்து தமக்குப் பெருமையீட்டிக் கொண்டதோடு பொதுவாக இலங்கைக்கும் பெருமையீட்டித் தந்தவர். அத்துடன் அதி அறிவாற்றல் நிறைந்தவர். பொதுபணிகளில் ஆர்வங் கொண்டவர். ஆனால் இலங்கைச் சோனகரின் இனவரலாற்றை நிறுவ எடுத்துக்கொண்ட முயற்சியில் அவர் எதிர்ச்சார்பான எண்ணத்துக்கு ஆளாயிருக்கிறார் என்று சந்தேகிக்க இடமிருப்பதால் அவருடைய முடிபுகளுக்கு முற்றிலும் முரண்பட்ட உண்மைகளைப் பொதுமக்கள் முன் வைப்பது நியாயமன்றி வேறில்லை.

1885 ஆம் ஆண்டுதான் திரு. இராமநாதன் சட்டவாக்க சபையில் முகம்மதிய விவாகப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின்மீது உரையாற்றும் போது இலங்கைச் சோனகர் இனத்தில் தமிழர், மதத்தில் முகம்மதியர் என்னும் தமது பெரிய கண்டுபிடிப்பை முதன்முதலாகப் பிரஸ்தாபித்தார். அத்துடன் இலங்கை அரசாங்கம் முகம்மதியர்களை முன்னைய கட்டளைச் சட்டத்தில் அவர்களின் இனத்தைத் தீர்மானிக்கப் போதிய அத்தாட்சிகள் இல்லாதிருப்பது போன்று, “சோனகர் அல்லது முகம்மதியர்” என்றும் மீண்டும் “சோனகரும் முகம்மதியரும்” என்றும் குறிப்பிடுவது ஒரு கேலிக்கூத்தாகும் என்றும் அவர் சுருக்கமாக மொழிந்தார். மேலும், சோனகர் என்னும் அவர்களது பெயர் ‘ஸ{ன்னி’ என்னும் பதத்தின் ஒரு சிதைவு மாத்திரமே என்றும் எடுத்துரைத்தார். அவர் சட்டவாக்க சபையில் கூறியவை ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்ததும் தம்மால் ஆரம்பிக்கப்பட்ட ‘முஸ்லிம் நேசன்’ என்னும் தமிழ்ப் பத்திரிகையைப் பதிப்பித்துக் கொண்டிருந்த காலஞ்சென்ற அறிஞர் சித்திலெப்பை அவர்கள், திரு. இராமநாதனது அறிக்கையை அப்பத்திரிகை மூலம் கண்டித்தார். அவரது வாதத்தின் தவறை நிரூபிக்கவும், இலங்கைச் சோனகர் பிரதானமாக பன்னூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் குடியேறிய அறபுக் குடியேற்றவாசிகளின் வழித் தோன்றல்களே என்பதை நிறுவவும் சரித்திரச் சான்றுகளையும் மரபுவழி ஆதாரங்களையும் எடுத்துக்காட்டித் தொடர்ந்தும் பல கட்டுரைகளை எழுதினார். அத்துடன் சோனகரைத் தமிழ் இனம் எனச் சொல்வதற்கு இராமநாதன் அவர்களுக்கு ஒரு குறிகோளும் இருந்தது என எண்ணப்பட்டது. இல்லை நம்பப்பட்டது. அதாவது சட்டவாக்க சபைக்குச் சோனக உறுப்பினர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற செய்தி அடிபட்டதால், சோனகர் ஒரு தனிப்பட்ட இனம் அல்ல எனக்காட்டி, அதனால் அவ்வித ஒரு நடவடிக்கைக்கு அவசியமில்லை என ஆலோசனை கூறி அரசாங்கத்தின் கருத்தை மாற்றுவது அவரது நோக்கமாக இருந்தது என்பதாகும். அறிஞர் சித்திலெப்பையின் மறுமொழிக்கு ஓர் எதிருரையைத் திரு. இராமநாதன் பத்திரிகைகளுக்கு அனுப்புவார் எனப் பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்குப் பதிலாக அவர் சோனகரைத் தமிழர் எனத் தடம் பொறிக்கும் முயற்சியில் பிறிதொரு வழியில் மும்முரமாக ஈடுபட உறுதிபூண்டார். அதன் விளைவுதான் அவரது இந்த ஆய்வுக் கட்டுரையாகும். அதிலே இலங்கைச் சோனகரின் இனவரலாறு பற்றி அவர் காய்தல் உவத்தலின்றி ஆராயவில்லை என்பதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன. அதற்குப் பதிலாகச் சோனகர், திமிழர்கள் தாம் எனத் தாம் முன்னர் உரைத்ததையே உறுதிப்படுத்தும் பெருமுயற்சியில் அவர் அதிக சிரமம் எடுத்துக் கொள்கிறார்.

திரு. இராமநாதன் அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில் அடக்கிய விடயத்தை எதிர்ச்சார்பான உள்ளத்தோடு அணுகியிருக்கிறார் என்பது நான் மேலே கூறியவற்றிலிருந்து வாசகர்கள் அறிந்திருப்பர். அவ்வாறில்லையெனின், இவ்விடயத்தில் எனது ஊகம் பிழையானதெனின், “இலங்கைச் சோனகரின் இன வரலாற்றை” எழுதிய அவர் அந்த ஆராய்ச்சிக் கட்டுரையிலே தொடர்ச்சியாகக் கையாண்ட பக்கச் சார்புக்கு விளக்கம் கண்டு பிடிப்பது மிகமிகக் கடினமாகும். ஏனெனில், சோனகரின் மூதாதையர் அறபிகள் என நிரூபிக்கக் கூடிய வகையில் இலங்கை வரலாற்றிலே பரவலாகக் கிடக்கும் எண்ணற்ற சான்றுகளை அவர் நுட்பமாகப் புறக்கணிப்பதோடு, அவரது வாதத்தை ஆதரிப்பனபோல் விளங்கும் வலுவற்ற தர்க்கங்களையும் ஆதாரங்களையும் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ள சட்ட அறிஞர் ஒருவருக்குள்ள திறமையுடன் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். அவர் தாம் துணிந்து கூறும் கருத்துக்கு ஆதாரமாக இலங்கையைப் பற்றி எழுதியுள்ள புகழ்மிக்க வரலாற்றாசிரியர் எவரையாவது மேற்கோள் காட்டவில்லை. அதற்குப் பதிலாக ஒரு பக்கத்தில், கொள்ளை வெறியர்களை டச்சுக்காரர்களில் ஒருவராம் வலன்ரைனையும் மறுபக்கத்தில் ஜோன் டி மரிக் னொல்லி, ரெவரண்ட் கோடினர், ரெவரண்ட் பிதா கோபட், திரு. சீ. பிறிட்டோ என்பாரையும் மற்றும் சிலரையும் உதவிக்கழைக்கிறார். சோனகர் பால் டச்சுக்காரர் கொண்ட பகைமையும் அன்னவர் அவர்களுக்கிழைத்த தொல்லையும் உலகமறிந்தவை. அவரது நோக்கத்துக்கு மாத்திரம் உதவும் என்றிருந்தால் எந்தத் துரும்பையும் பற்றிப் பிடிக்கும் அவரது ஆர்வம் எவ்வளவு அளவு கடந்ததெனில், இப்னு பதூதா தம் பிரயாண விருத்தாங்களில் பேருவலையைப் பற்றிக் குறிப்பிடத் தவறியது சோனகர் அச்சிற்றூரில் 1344 இல் குடியேறியிருக்கவில்லை என்பதை நிரூபிக்க அவருக்குப் போதுமான அத்தாட்சியாக அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக இருக்கும் உறுதியான அத்தாட்சிகளுக்கு முற்றிலும் முரணான முறையில் அதனை அவர் கையாள்கிறார். மேற்படி ஆராய்ச்சிக் கட்டுரையின் ஆரம்ப பந்தி பின்வருமாறு அமைகின்றது.

“எங்கள் ஐரோப்பிய குடியேற்றவாசிகள் மத்தியில் ‘முஅர்ஸ்’ எனும் பெயரால் வழங்கும் எங்கள் சமுதாயத்தின் ஒரு பிரிவினது எண்ணிக்கை கடந்த குடிசன மதிப்பின்படி ஏறக்குறைய 1,85,000 பேராகும். அவர்கள் அனைவரும் முகம்மதியர்கள், சிங்களப் பகுதிகளில் அவர்கள் பொட்டணி வியாபாரிகள். சின்னக் கடைக்காரர் போன்றவர்களாக எல்லாவிதமான சிறிய வியாபாரங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். ஏழைவகுப்பார் அனேகமாகப் படகோட்டிகளாகவும் மீனவர்களாகவும் கூலியாட்களாகவும் உள்ளனர். தமிழ் மாகாணங்களில் அவர்கள் விவசாயத்திலும் மீன்பிடித்தொழிலிலும் ஈடுபடுகின்றனர். உடலமைப்பிலும் உருவத்திலும் அவர்கள் தமிழர்களை மிகவும் ஒத்திருக்கின்றனர். முற்றுமே சிங்களப் பிரதேசங்களிலும் அவர்கள் பேசும் மொழி தமிழாகவே இருக்கின்றது. இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் நான் அந்தச் சமுதாயத்தினது இனம் பற்றி ஆராய நாடுகிறேன்.

சோனகர்களைச் சிறு வியாபாரிகள், பொட்டணி வியாபாரிகள் சின்னக் கடைக்காரர், படகோட்டிகள், மீனவர், விவசாயிகள், கூலியாட்கள் எனக் குறிப்பிடுவது போதுமானது எனத் திரு இராமநாதன் கருதுகிறார். ஆனால், அவர் அதைவிடச் சிறிது நேர்மையாக தமது சிந்தனையைச் செலுத்தியிருந்தால் அவர்கள் மொத்த வியாபாரிகள், பெருங் கடைக்காரர்கள், தோட்டச் சொந்தக்காரர்கள், செல்வம் படைத்த நிலச் சுவாந்தார்கள் என்றும் செல்வத்தைப் பொறுத்தமட்டில் இத்தீவின் சுதேச இனங்களில் அவர்கள் சிங்களவர்களுக்கு மட்டும் அடுத்தாண்மையாக உள்ளனர் என்றும் கூறியிருப்பார் என நினைக்கிறேன். சோனகரின் செல்வாக்கையும் தராதரத்தையும் பொறுத்தவரையில் திரு. இராமநாதன் அவர்களுக்கு நியாயம் வழங்கவில்லை. டெனண்ட் கூறுகிறார்.

“இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கையில் போர்த்துக்கேயரின் தோற்றம் சோனகரின் தொழில் முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிகோலியது மாத்;திரமன்றி சுதேச இளவரசர்களின் சுதந்திரத்தை நசுக்கவும் உதவியது. சோனகர் அனுபவி;த்த வாய்ப்புகள் மலபாரிகள் அனுபவித்த வாய்ப்புக்களை ஏற்கெனவே மிகைத்திருந்ததைப் பார்க்குமிடத்தும் சிங்களத் தலைவர்கள் மீது அவர்கள் தீவிரமாக அடைந்துவந்த ஆதிக்கத்தை நோக்குமிடத்தும் இலங்கைத்தீவில் ஒரு கிறிஸ்தவ அரசின் இவ் உரிய நேரத் தோற்றம் ஏற்பட்டிராவிடின் இலங்கை பிரித்தானிய முடியின் உடைமையாவதை விட்டு தற்போது யாராவது ஒர் அரேபிய வெற்றிவீரனின் கீழ் ஒரு முகம்மதிய முடியாட்சிக்குட்பட்டிருக்கும் என்பது பகுத்தறிக்கு அப்பாற்பட்ட ஓர் ஊகமாக இருக்க முடியாது”

சோனகரின் தொழில் முயற்சி போர்த்துக்கேயரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் சந்தேகமின்றி சோனகர் பின்தங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களது நிலைமை திரு. இராமநாதன் எடுத்துக் காட்டுவது போல் அவ்வளவு தாழ்வானதாக இல்லை. மேலே கூறப்பட்ட விவரத்தை அவர் தீட்டியபொழுது “கரையோரச் சோனக”ரைப் பற்றி எண்ணியுள்ளார் போலும். தமிழரது போன்ற சோனகரது உடலமைப்புத் தோற்றம் பற்றியும் முற்றாகவே சிங்களப் பிரதேசங்களிலும் அவர்கள் எவ்வாறு தமிழைப் பேசக் கற்றுக் கொண்டார்கள் என்பது பற்றியும் நான் எனது விளக்கத்தைப் பின்னர் தருவேன். திரு. இராமநாதன் கூறுகிறார்.

“பதினைந்தாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கீழ்த்திசைக் கடல்களில் கடலோடிகளாக விளங்கியபோது முகம்மதியரை இந்தியாவினதும் இலங்கையினதும் மேற்குக் கரையோரங்களில் கண்ணுற்று, அவர்களுக்கு ‘மொரொஸ்’ எனும் பெயரை வழங்கினர். ஆங்கிலத்தில் அது ‘முஅர்ஸ்’ ஆயிற்று”

அவர் மேலும் கூறுகிறார்:

“இலங்கையிலுள்ள இனம் ஒன்று ‘முஅர்ஸ்’ என்னும் வார்த்தையால் அழைக்கப்படுவதற்குக் குடிசன மதிப்பை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட பதிவாளர் அதிபரும் ஏனைய ஆணையாளர்களும் மூல பொறுப்பாளிகளல்லர். நான் கூறியது போன்று எங்கள் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர் அந்தச் சமுதாயத்தினரும் அந்த வார்த்தையைப் பாவித்ததற்குக் காரணம் அந்தப் பெயர் அந்தச் சமுதாயத்தினர் மத்தியிலோ அல்லது அவர்களின் அயலவர்கள் மத்தியிலோ வழக்கிலிருந்தது என்பதனாலல்ல@ வட ஆபிரிக்காவில் வாழ்ந்த ‘முஅர்ஸ்’ களுடையது போன்று அவர்களது மதமும் முகம்மதியமாக இருந்ததுதான் அதற்குக் காரணமாகும். போர்த்துக்கேயரின் பின்னர் வந்த அரசியல் வெற்றியாளர்கள் நான் டச்சுக்காரர்களைக் குறிப்பிடுகிறேன். அந்த வார்த்தையை ஏற்று அதனை ஒரு வகுப்பாரைக் குறிப்பிட உறுதியற்ற முறையில் உபயோகித்தனர். அந்த வகுப்பாரின் மொழி, சமூகப் பண்புகள் என்பனவற்றை இலங்கையிலோ, இந்தியாவிலோ வாழும் இனங்களோடு முழுமையாகவோ ஒப்பீட்டடிப்படையிலோ அவர்கள் அனேக ஆண்டுகளாகப் புரிந்து கொள்ள வில்லை. எனினும், அவர்களது ஆட்சியின் இறுதியாண்டுகளில், இலங்கைச் சோனகர் பிரதானமாக தமிழ் முகம்மதியர் என ஏற்றுக் கொண்டனர். (வலஸ்ரைன் அத். 15. பக். 214 பார்க்க) ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு உத்தியோகபூர்வ தஸ்தாவேஜுகளில் இடம் பெறுவதற்கு முன்னரும் உத்தியோகபூர்வமாக வழக்கில் வருவதற்கு முன்னரும் ஆங்கிலேயர் இங்கு வரத் தொடங்கினர். அவர்கள் இங்கு வந்ததும் இனவரலாறு சம்பந்தமான பிரச்சினைகளில் காலம் கடத்துவதை விட்டு நாட்டின் லோகாயதத் தேவைகளையும் ஒழுக்கநெறித் தேவைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டிய பாரிய கைங்கரியம் அவர்கள் முன் இருப்பதைக் கண்டனர்”

போர்த்துக்கேயர், தாங்கள் இந்தியாவினதும் இலங்கையினதும் மேற்குக் கரையோரங்களில் சந்தித்த முகம்மதியர்களுக்கு ‘முஅர்ஸ்’ என்ற பெயரை வழங்கினார்கள் என்று திரு. இராமநாதன் கூறுவது பிழையானதாகும். உண்மை யாதெனில், அவர்கள் அந்த வார்த்தையை அறபிகளுக்கும் அவர்களுடைய வழித் தோன்றல்களுக்குமே உபயோகித்தனர். டெனண்ட் கூறுகிறார்:

“இந்தப் புனைப்பெயர் (முஅர்) ஸ்பானியர்களிடமிருந்து போர்த்துக்கேயர் கடன் வாங்கியதாகும். போர்த்துக்கேயர் நன்னம்பிக்கைமுனை ஒரமாக அமைந்த கடற் பாதையைக் கண்டுபிடித்ததன் பின்னர் அறபிகளுக்கும் அவர்களுடைய வழித்தோன்றல் களுக்கும் இந்தப் பெயரைக் கண்டபடி உபயோகித்தனர். பதினாறாம் நூற்றாண்டில் ஆசிய, ஆபிரிக்கக் கரையோரங்களிலுள்ள எல்லாத் துறைமுகங்களிலும் அவர்கள் வர்த்தகர்களாகப் பலம் பெற்று விளங்கியதைப் போர்த்துக்கேயர் கண்டனர். அத்துடன் கீழ்த்திசை வர்த்தகத்தில் தங்களின் அதிக பலம் வாய்ந்த போட்டியாளர் அவர்கள் தாம் எனக் கருதவும் போர்த்துக்கேயருக்குக் காரணம் இருந்தது”

போர்த்துக்கேயர் இலங்கைக்குவர முன்னரே இந்தியாவை அடைந்திருந்தனர். இந்தியாவின் மேற்குக் கரையோரங்களில் அவர்கள் முகம்மதியரைச் சந்தித்தனர். எனினும், திரு. இராமநாதன் கருதுவதுபோல, ‘முஅர்’ எனும் வார்த்தையைப் போர்த்துக்கேயர் அவர்களுக்குக் கண்டவாறு பிரயோகிக்கவில்லை. ஏனெனில், பம்பாய், கோவா முதலிய பிரதேசங்களில் ‘முஅர்ஸ்’, ‘மொரொஸ்’ களைப் பற்றி நாம் கேள்விப்படவில்லை. அந்தக் கண்டத்தின் தென்மேற்குக் கரையோரங்களில் கண்ட முகம்மதியர்களுக்கே அந்த வார்த்தையை அவர்கள் உபயோகித்தனர். அந்த மக்கள் தங்கள் மத்தியிலும் தங்கள் அயலவர்கள் மத்தியிலும், “சோனகர்” என அழைக்கப்பட்டனர். அத்துடன், அவர்கள் அறபிகளின் சந்ததியினர் என நம்புவதற்குப் போர்த்துக்கேயருக்குக் காரணமும் இருந்தது. போர்த்துக்கேயர் தங்கள் இலங்கை வெற்றிக்குப் பிறகு, சிறப்பியல்புகளிலும் மதத்திலும் ஸ்பெயினில் வாழ்ந்த அறபிகளை ஒத்திருந்த ஒரு வகுப்பினரை இங்கு கண்டனர் என்றும் அவர்களைப் போர்த்துக்கேயர் ‘மொரொஸ்’ அல்லது ‘முஅர்ஸ்’ என அழைத்தனர் என்றும் ஒர் எழுத்தாளர் எங்களுக்கு அறியத் தருகின்றார். போர்த்துக்கேயர் இங்கு வந்தபொழுது சோனகர் எனும் பெயர் எனது சமுகத்தின் மத்தியிலோ, அயலவர்கள் மத்தியிலோ வழக்கில் இருக்கவில்லையென்று திரு. இராமநாதன் கூறும் பொழுது அவர் முழு உண்மையையும் உரைக்கவில்லை. ஏனெனில், இப்போது போலவே அப்போதும் அச் சமூகத்தனர் அவர்கள் மத்தியில் சோனகர் என்றும் அவர்கள் அயலவர்களான தமிழர்களதும் சிங்களவர்களதும் மத்தியில் முறையே “சோனகர்” என்றும் “யொன்” என்றும் அழைக்கப்பட்டனர். இந்த இரு வார்த்தைகளும் இத்தீவுக்கு வந்த முதல் ஐரோப்பிய இனத்தால் வழங்கப்பட்ட ஐரோப்பிய வழிச் சொல்லான ‘முஅர்’ (அறபி) எனும் வார்த்தையின் சம வார்த்தைகளாகும், அரேபியா, பாளி மொழியில் ‘யொன்ன’ எனவும் தமிழ் மொழியில் ‘சோனகம்’ எனவும் அறியப்படும். அதனை நான் பின்னர் எடுத்துக்காட்டுவேன். எனவே எங்கள் மூதாதையரான அறபுக் குடியேற்றவாசிகளுக்குச் சிங்களவரும் தமிழரும் அவரவர் மொழியில் வழங்கிய பெயர்களைப் பிரயோகித்தனர். எனவே குறிப்பிட்ட இப் பெயர்களுக்கிடையில் உள்ள பூரண கருத்தொருமிப்பை வாசகர் உள்ளத்தில் பதியச் செய்ய விரும்புகின்றேன். ஏனெனில், அது வெறுமனே தற்செயலாக ஏற்பட்ட ஒன்றல்ல@ ஆராய்ந்தறியப்பட்ட ஒரு முடிபாகும். எனவே, போர்த்துக்கேயர் தாங்கள் இத்தீவுக்கு வருகை தருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த மற்றும் ஈர் இனங்களின் வாயிலாக எனது சமூகத்தைக் குறிக்க ‘முஅர்’ எனும் வார்த்தையை உபயோகித்தனர் என்பதை நடுநிலைமை வகிக்கும் திறனாய்வாளர் எவரும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வர். எனது சமுகத்தைக் குறிக்க ‘முஅர்’ எனும் சமூகத்தின் ஆரம்பம் பற்றியும் வரலாறு பற்றியும் ஆராய்ந்தறிவதில் டச்சுக்காரர்கள் தங்களுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த போர்த்துக்கேயரை விடவும் சிறந்த அல்லது கூடிய வாய்ப்புடையவர்களாக இருக்கவில்லை. வலன்ரைனால் பதியப்பட்டிருக்கும் டச்சுக்காரர்களின் கூற்றுக்கள் பொருத்தக்கேடானவையும் அறவே ஆதாரமற்றவையுமாகும். அது திட்டமிட்டுப் புனையப்பட்ட, பகைமையுள்ளங் கொண்ட வரலாறு என்னும் முத்திரையைத் தன்மேல் பதித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். டச்சுக்காரர், சோனகரைத் துன்புறுத்திய வெறியாளர் என்பது வரலாறு கண்ட உண்மை. அவர்கள் சோனகரைப் படுகொலை செய்தனர். இடத்துக்கிடம் துரத்தியடித்தனர்@ அவர்களது மதத்தைத் தாக்கினர். குடியுரிமையை மறுத்தனர். கொழும்புக் கோட்டையிலும் புறக்கோட்டையிலும் நிலம் வாங்குவதைத் தடை செய்தனர். இன்னும் எத்தனையோ விதத்தில் இன்னல் விளைத்தனர். திரு. இராமநாதனே அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

“முகம்மதியக் குடியேறிகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவதற்குப் பிடிவாதமாக மறுத்ததால் ஒல்லாந்தர்களின் துன்புறுத்தல்களுக்கு இலக்கானார்கள். அவர்கள் முகம்மதியர்கள் மீது எல்லாவிதமான வரிகளையும் தகைமையிழப்புக்களையும் சுமத்தினார்கள்”

எனவே, அவ்விதம் நடந்து கொண்ட டச்சுக்காரர்கள், “சோனகர், மதத்தில் மாத்திரந்தான் முஸ்லிமீன் என்றும் பிறப்பில் அவர்கள் முன்னொரு காலத்தில் பாஸராவையும் செங்கடலையும் சேர்ந்த அறபிகளின் சமூக உறவால் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்ட ஓர் இழிந்த, வெறுத்தொதுக்கப்பட்ட மலபார்ச் சாதியின் சந்ததியினர் என்றும் அவர்கள் இந்தியக் கரையோரங்களுக்குக் கடலோடிகளாக அடிக்கடி வந்துபோய்ப் பின்னர் அங்கு கடற்கொள்ளைக்காரர்களாகத் தாக்குதல் நடத்துபவர்களாக ஆனார்கள் என்றும் அவர்கள் இலங்கையில் முதன்முதல் காலடி எடுத்து வைத்தது போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்ததற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக அமையவில்லை” என்றும் உறுதிப்படுத்தி, உரிமையிழக்கச் செய்த எனதுசமூகத்தை அவமதிப்புக்குள்ளாக்கும் அவர்களது துணிச்சலில் எதுவித விந்தையுமில்லை. திரு. இராமநாதன் போன்ற பண்பாற்றலும் பகுத்தறியுந் திறனும் கொண்ட ஒருவர் அவர்களின் கட்டுக்கதைக்கு மதிப்புக் கொடுப்பது அழகா எனக் கேட்கின்றேன். அத்துடன் டச்சுக்காரர்களின் வார்த்தைகள் வெறுமனே ஓர் ‘ஊகம்’ என டெனண்ட் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். அந்த டச்சுக் காரர்களின் ஆதரவாளர்களது பட்டியலில் ஒருவராக இருப்பது பயனுடையது என அவர் நினைப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றல்லவா? திரு. இராமநாதன், சோனகரைத் தமிழ் முகம் மதியர் எனக் கூற முன்வந்தாலும் எங்கள் மூதாதையர் “வெறுத்தொகுக்கப்பட்ட மலபாரிகள்” என்றும் கடற்கொள்ளைக்காரர்களாக விளங்கியவர்கள் என்றும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முந்திய நூற்றாண்டிலே தான் அவர்கள் இங்கு வந்தார்கள் என்றும் அவர் ஏற்றுக்கொள்ள முன்வருவாரா? டச்சுக்கார வரலாற்றாசிரியரின் கட்டுக்கதையை டச்சு நிர்வாகஸ்தர்களே நம்பவில்லை. அதனை நிரூபிக்க ஏதாவதோர் அற்ப அத்தாட்சி இருந்தாலும் சோனகரின் நண்பர்களாகவன்றிப் பகைவர்களாக விளங்கிய டச்சு நிர்வாகஸ்தர்கள் அதனை மகிழ்ச்சியுடன் தூக்கிப் பிடித்திருப்பார்கள். அத்துடன் அதனை உத்தியோகபூர்வ தஸ்தாவேஜுகளிற் பதியவும் செய்திருப்பார்கள். அதுமாத்திரமன்றி, ஏனையோர் அதனை மறுத்துரைக்க எந்த வாய்ப்பையும் விட்டுவைக்காமல், அது ஆதாரபூர்வமான உண்மையென்று கூறி, அவர்களின் அரசியல் பின்றோன்றல்களுக்கும் அதனை உடைமையாக்கிவிட்டுப் போயிருப்பார்கள். ஆங்கிலேயரின் வருகை காரணமாக அவர்களுக்கு அதனைச் செய்யக் காலம் போதவில்லையெனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமே யன்றி வேறில்லை.

தெய்வச் செயலால் தங்களது ஆட்சிக்குட்பட்ட இலங்கையிலே வாழும் இனங்களின் வரலாறு பற்றி உசாவ ஒரு நூற்றாண்டு காலமாக ஆங்கிலேயருக்கும் ஒய்வு கிடைக்கவில்லையெனக் கூறுவதும் அதேபோன்ற சிறுபிள்ளைத்தனமேயாகும். உண்மை அதற்கு மாறாக உள்ளது. அதாவது, சோனகரின் ஆரம்பத்தையும் வரலாற்றையும், ஆங்கிலேயர் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிந்தார்கள் என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. இலங்கையின் முதலாவது நீதியரசரான சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் என்பார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அவரது காலத்திய பிரபல்யமான சோனகர்களிடம் அவர்களது இனத்தின் ஆரம்பம் பற்றியும் வரலாறு பற்றியும் விசாரித்தார். மரபு வரலாற்றின்படி (பின்னிணைப்பு ‘அ’) இலங்கையில் முதன்முதல் குடியேறிய முகம்மதியர்கள் எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் அரேபியாவிலிருந்து வெளியேறிய ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த அறபிகளே என்று அவர்கள்; அறிவித்தனர். அந்தத் தகவலை அவர் இங்கிலாந்தின் அப்போதைய அரசனான மூன்றாம் ஜோஜுக்கு அனுப்பிய அறிக்கையொன்றில் உள்ளடக்கினார். சேர் அலெக்சாந்தர் ஜொன்ஸ்டனால் கொடுக்கப்பட்ட விளக்கத்தைப் பழுதுபடுத்தும் வகையில் திரு. இராமநாதன் சில தர்க்கங்களை எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால். அத் தர்க்கங்களின் பொருத்தக்கேடுகளை நான் பின்னர் எடுத்தாள்வேன். சோ அலெக்சாந்தருக்கு இந்தத் தகவல்களைக் கொடுத்தவர்கள் தங்கள் கூறியதைப் பொருட்படுத்தாத அறிவாற்றல் அற்றவர்கள் அல்லர். தாம் உபதலைவராக இருந்த பெரிய பிரித்தானியாவினதும் அயல்லாந்தினதும் அரச ஆசிய கழகத்தின் செயலாளரும் அனுப்பிய கடிதத்தில் தாம் கலந்தாலோசித்த முகம்மதியர்களைப் பற்றி சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் பின்வருமாறு கூறுகிறார்.

“நான் பிரதம நீதியரசராகவும் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆள்சபைத் தலைவராகவும் இருந்தபோது மேற்கொண்ட வௌ;வேறான நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர்கள் மாற்றமில்லாத வகையில்; ஒரு குழுவாக நடந்துகொண்ட முறை, அவர்களின் பண்பொழுக்கம் பற்றியும் அறிவுத்திறன் பற்றியும் ஒரு சிறந்த நல்லெண்ணத்தைத் தந்தது. 1806 இல் நான் அவர்களின் தலைவர்களையும் மத அறிஞர்களையும் அழைத்து, இலங்கைக் குடிகளின் ஏனைய ஒவ்வொரு வகுப்பாருக்;கும் நான் செய்தது போல, அவர்களுக்கெதிரான பழக்கவழக்கங்கள் மீது நிலைநாட்டப்பட்ட பிரத்தியேக சட்டக்கோவை யொன்றை அவர்களது உபயோகத்துக்காகத் தொகுப்பதற்கு அவர்களது உதவியை நாடிய பொழுது. அவர்களின் அனுபவங்களைக் கொண்டு எனக்கு மிக விரிவானதும் சிறந்ததுமான தகவல்கள் கிடைத்தன” (பின்னிணைப்பு ‘அ’)

இலங்கைக் குடியேற்ற நாட்டுச் செயலாளராக ஒருமுறை இருந்தவரும் கௌரவ அருணாசலம் அவர்களால் அவரது 1901 ஆம் வருடத்திய குடிசன மதிப்பு அறிக்கையில் “இலங்கை வரலாற்றாசிரியர்களில் மிகவும் சிறந்தவர்” என வர்ணிக்கப்பட்டவருமான சேர் ஜேம்ஸ் எமெர்சன் டெனண்ட், கே. சீ. எஸ்., எல், எல். டீ. என்பார் மேலே எடுத்துக்காட்டப்பட்ட டச்சுக்காரரின் கொள்கை பற்றியும் இலங்கைச் சோனகரின் ஆரம்பம், அவர்களின் முதல் இலங்கை வருகை மீதான ஊகங்கள் பற்றியும் அறிந்திருந்தார். இத்தீவு சம்பந்தப்பட்ட எல்லா விடயங்கள் பற்றியும் போதிய, நம்பிக்கையான தகவல்கள் அடங்கிய அவரது நூல்தான் ஆங்கில மொழியிலுள்ள இலங்கை சம்பந்தமான அவ்வித நூல்களில் நல்ல தரத்திலுள்ளது. எனவே, அவரைப் போன்ற ஆழ்ந்த புலமை வாய்ந்த வரலாற்றாசிரியர் ஒருவர் செய்வதைப் போன்று அவரும் அவை எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து, தாம் ஏற்றுக்கொண்ட முடிவைப் பின்வருமாறு தெரிவிக்கிறார்.

“எவ்வாறாயினும், உண்மை யாதெனில் இந்த ஊகங்களில் குறிப்பிடப்பட்ட ஆரம்ப காலத்துக்குப் பன்னெடுங் காலத்துக்கு முன்னரே இலங்கையில் அறபிகள் இருந்தார்கள். முஹம்மது நபி அவர்கள் பிறப்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் இங்கு வர்த்தகர்களாக அறியப்பட்டிருந்தனர். அவர்களது தொழிலில் அவர்கள் எவ்வளவு ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்களென்றால் இந்திய சாகரத்தில் அவர்கள் வர்த்தகத்தை நடாத்திக் கொண்டிருந்த அதே சமயம் அக்ஷியத்தில் நடந்த மரணத்தை விளைவிக்கும் கடற்சண்டையிலும் மார்க் அந்தோனியின் கப்பல்களுக்குப் படைகளைக் கொடுத்துதவிக் கொண்டிருந்தனர். பெரிப்லஸின் நூலாசிரியர், அவர்களை இலங்கையின் முதலாம் கிறிஸ்தவ நூற்றாண்டளவிற் கண்டார். கொஸ்மொஸ் - இன்டிகோ – புரூட்டஸ், அவர்களை ஆறாம் நூற்றாண்டளவிற் கண்டார். எட்டாம் நூற்றாண்டில் சீனாவில் அவர்களது எண்ணிக்கை எவ்வளவு பெருகியிருந்ததென்றால் கன்ரனில் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறபிகள் வர்த்தகத்தில் கிழக்கில் இணையற்ற எஜமானர்களாக விளங்கினர். ஏற்றுமதிப்பொருட்களை உற்பத்தி செய்த எல்லா நாடுகளிலும் அவர்கள் தங்கள் வர்த்தக ஸ்தாபனங்களை நிறுவினர். அவர்களுடைய கப்பல்கள் ஸொபாலாவிலிருந்து பாப்-அல்-மந்திப் வரையிலும் ஏடினிலிருந்து சுமாத்ரா வரையிலுமுள்ள எல்லாத்துறை முகங்களுக்கும் சென்றன. தற்போது இலங்கைக் கரையோரங்களில்வதியும் ‘முஅர்ஸ்’ இந்தச் சுறுசுறுப்பான துணிச்சல் மிகுந்த வீரர்களின் வழித்தோன்றல்களாவர். அவர்கள் கலப்பற்ற அறபிகள் அல்லாவிட்டாலும் திருநபி அவர்களின் மதத்தைச் தழுவிய சுதேச இனங்களுடன் கலப்பு மனம் செய்து கொண்ட அறபு மூதாதையரின் வழித்தோன்றல்களாவர். மரக்கல மினின்ஸ{ அல்லது கடலோடிகள் என்னும் சிங்களப் புனைபெயர் அவர்களின் ஆரம்பத்தையும் தொழிலையும் விளக்குகின்றது. ஆனால் மத்திய காலத்தில் ஆசியாவின் வர்த்தக மத்திய நிலையமாக இலங்கை விளங்கியபோது, குடிபெயர்ந்துவந்தோராகிய இந்த வர்த்தகர்கள் இத்தீவின் எல்லா விளை பொருட்களினதும் வர்த்தகர்களாக ஆகிவிட்டதோடு வெளிநாடுகளின் சரக்குகளைப் பண்டமாற்றுக்காகத் கையாளும் தரகர்களாகவும் ஆகிவிட்டனர். எந்தக் காலத்திலும் எந்தத் துறையிலும் அவர்கள் பொருட்களை ஆக்குபவர்களாகவோ, அவற்றை உற்பத்தி செய்பவர்களாகவோ இருக்கவில்லை. அவர்களது தனித்திறமை வர்த்தகம் மாத்திரமாகவே இருந்தது. அவர்களது கர்சனை, மற்றவர்களின் கைத்தொழிலின் மூலமும் திறமையின் மூலமும் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட வற்றை வாங்குவதிலும் விற்பதிலும் மாத்திரமே இருந்தது. அவர்கள் ஆபரண வணிகராவர்@ மாணிக்கக்கல் விற்பன்னராவர்@ முத்துக்களைச் சேகரிப்போராவர். உட்பிரதேசக் கிராமங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் வசித்த மனநிறைவும் உசாசீனமும் கொண்ட சிங்களவர் தங்கள் வாழ்க்கையை வயல்களில் கழித்தனர். அவர்கள் தங்கள் பன்சாலை வைபவங்களிலும் விழாக்களிலும் மனத்திருப்தியைத் தேடினர். ஆனால், அதே நேரத்தில் சுறுசுறுப்பும் ஆர்வமுங் கொண்ட கரையோர முகம்மதியர்கள் துறைமுகங்களில் பண்டகசாலைகளைக் கட்டியெழுப்பினர். தங்கள் கப்பல்களால் துறைமுகங்களை நிரப்பினர். தீவின் செல்வத்தையும் இன்பப் பொருட்களையும் - அதன் மாணிக்கக் கற்கள், சாயந்தரும் மரங்கள், வாசனைத் திரவியங்கள், யானைத் தந்தங்கள் என்பனவற்றை – சீனாவுக்கும் பாரசீகக் குடாநாடுகளுக்கும் அனுப்புவதற்காகச் சேகரித்தனர்”

1. ஸல்லள்ளாஹ{ அலைஹி ஸல்லம்.
2. “மரக்கல மினிஸ்ஸ{‘ என்பது “மார்க்கர் மினிஸ்ஸ{“ என்பதன் சிதைவுபோலத் தோன்றுகிறது. அதுதான் மூல வார்த்தையெனக் கருதுகிறேன். ஏனெனில், பிரபல்யமான சோனகரை மலபாரிகள் ‘மார்க்கர்’ என்றே அழைத்தனர். அதிலிருந்துதான் இப்போதைய ‘மரிக்கார்’ எனும் சொல் பிறந்தது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வர்த்தகத்திலீடுபட்டிருந்;த அறபு வர்த்தகர்கள் மத்தியில் பிரதானமானவர்கள் கப்பற் சொந்தக்காரர்களாகவும் தளபதிகளாகவும் இருந்தனர். அவர்கள் அவற்றில் இடைவிடாது பிராயாணம் செய்ததால் ‘மர்கபி’ (மர்க்கப் கப்பல் என்பதிலிருந்து) என அவர்களுக்குள்ளே மற்றவர்களினின்று பிரித்துக் காட்டப்படுவதற்காக அழைக்கப்பட்டனர். ‘ஸாஹிபி’ என்பதை ‘ஸாஹி’ எனச் சுருக்கியது போல, ‘மார்கபி’ எனும் சொல் ‘மார்க்க’ என அறபிகளால் சுருக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் தற்காலங்களிலும் அறபிகள் இலங்கையில் வாழும் தங்கள் மதத்தோழரை அழைக்கும்போது “மர்க்க” எனும் வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கின்றனர். 16ஆம் நூற்றாண்டில் ‘மர்க்க’ அல்லது ‘மார்க்க’ என்பது பிரசித்தி பெற்ற எல்லாச் சோனகர்களின் பெயர்களின் இறுதியிலும் சேர்க்கப்பட்ட ஒரு கௌரவக் குறிப்பாகும். ஏனெனில், போர்த்துக்கேயரை எதிர்க்க கமொரினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மலபார்ப் படையின தளபதியான மூரிஷ் வீரர், அலழ இப்றாஹிம் மார்க்கவாக இருந்தார். (ரைபீரோவினது சீலோ வரலாறு) காலம் போகப் போக தமிழர் ‘மார்க்க’ என்பதை ‘மார்க்கன்’ என்று ஒருமைப்படுத்தியும் ‘மார்க்கர்’ என்று பன்மைப்படுத்தியும் வழங்கினர். ‘மார்க்கர்’ என்பது ‘மரிக்கார்’ என மேலும் மாறியது. சோனக நிலச்சுவாந்தர்களிடம் இப்போதும் இருக்கும் உயில்களில் மரிக்கான் (மரிக்கார் அல்ல) என்னும் சொல் இருக்கின்றது. எனினும் அந்த வார்த்தை மேலும் வழக்கிலில்லை. தென்னிந்திய முகம்மதியர் அந்தச் சொல்லை இன்றும் ‘மரிக்கா’ என்றே பாவிக்கின்றனர்.

1901 ஆம் ஆண்டின் இலங்கைச் குடிசன மதிப்பை எடுக்கும் படி அரசாங்கத்தால் பணிக்கப்பட்ட தற்போதைய பதிவாளர் அதிபரான கௌரவ அருணாசலம் அவரது குடிசன மதிப்பு அறிக்கையில் சோனகரைப் பற்றிப் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். 3ஆம் அத்தியாயம் 27ஆம் பந்தியில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இந்துசமுத்திரத்தின் இணையற்ற எஜமானர்களாக அறபிகள் விளங்கியதால் பத்தாம் நூற்றாண்டளவிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இத்தீவின் வர்த்தகம் படிப்படியாக அவர்கள் கைக்கு மாறியது. அவர்களின் வர்த்தகம் மிகுந்த பெறுமதி வாய்ந்ததாக இருந்தது. பழங்காலந் தொட்டு இத்தீவு புகழ்பெற்று விளங்கிய முத்து, மாணிக்கம், வாசனைத்திரவியங்கள், யானை முதலியவற்றை மட்டும் அவர்களது வர்த்தகம் உள்ளடக்கியிருக்கவில்லை. யூப்பிரட்டீஸ{க்கும் அப்பாலுள்ள நாடுகளிலிருந்து அறபிகள் கொண்டு வந்த சரக்குகளைப் பண்டமாற்றுச் செய்து கொள்ளும் பொருட்டு சீனர்களால் இங்கு கொண்டுவரப்பட்ட கிழக்கு தெற்கு ஆசியாவின் பண்டங்களையும் அது உள்ளடக்கியிருந்தது”

அது அத்தியாயம் 31ஆம் பந்தியில் அவர் மேலும் கூறுகிறார்.

“அறபிகள் அல்லது போர்த்துக்கேயரால் அழைக்கப்பட்டபடி ‘முஅர்ஸ்’ (ஸ்பெயின் தீபகற்பத்தை ஆண்ட ‘முஅர்ஸ்’ களின் அதே மதத்தை இவர்களும் பின்பற்றியதால் போர்த்துக்கேயர் இவர்களை அவ்வாறு அறிமுகப்படுத்தினர்) வர்த்தகத்திலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் சீக்கிரமே அகற்றப்பட்டனர். அவர்களின் பெயரும் அவர்களிடம் இயற்கையாகவே அமைந்த வியாபார நுணுக்கமும் மட்டுமே அவர்களின் வழித்தோன்றல்களான இலங்கைச் சோனகர்களுக்குக் கிடைத்தன”

மேலும் 10 ஆம் அத்தியாயம் 34ஆம் பந்தியில் அவரே கூறுகிறார்:

“பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரை அறபிகளே கீழைக் கடல்களினதும் வாத்தகத்தினதும் இணையற்ற எஜமானர்களாக விளங்கினர். அத்துடன் போர்த்துக்கேயரால் அகற்றப்படும்வரை அவர்கள் இலங்கையில் மிகுந்த செல்வாக்கைப் பிரயோகித்தனர். இந்தக் காலப் பகுதியில் அவர்கள் இந்தியாவினதும் இலங்கையினதும் கரையோரங்களில் குடியேறினர். அத்துடன் அங்கு வசித்த சுதேசிகளை விசேஷமாகத் தமிழர்களை அதிகம் கலப்புமணஞ் செய்தனர்.

இப்போதைய நோக்கத்துக்குத் தொடர்போ தேவையோ இல்லாவிட்டாலும், கூட இலங்கைச் சோனகரைப் பற்றி கௌரவ அருணாசலம் இறுதியாகக் கூறியதும், எங்களைப் பொறுத்தவரையில் நாம் வருந்தவேண்டியதுமான குறிப்பை இங்கு என்னால் எடுத்துக்காட்டாமல் இருக்க முடியாது. 10 ஆம் அத்தியாயம் 35ஆம் பந்தியில் அவர் கூறுகிறார்:

“சோனகர் எந்தவகையிலும் புத்திக்கூர்மையில் குறைந்தவர்கள் அல்லாவிட்டாலும் கல்வியில், விசேஷமாக மேல்நாட்டுப் பானியிலான கல்வியில் அவர்கள் கொஞ்சமேனும் அக்கறை காட்டுவதில்லை. இந்தக் காலகட்டத்தில் அறபி பாஷாவினதும் நாடுகடத்தப்பட்ட அவருடைய மற்றும் எகிப்திய நண்பர்களினதும் இலங்கை வருகை, சோனக சமுதாயத்தைத் தட்டியெழுப்புவதில் பயனை ஏற்படுத்தியது. ஆனால் அது பெரும்பாலும் ஐரோப்பிய துருக்கியரின் உடையை மேற்கொள்ளல் போன்று வெளித்தோற்றத்திலேயே ஏற்பட்டது. மத்திய காலத்தை மடைமை இருள் கவ்விக் கொண்டிருந்தபோது ஐரோப்பாவினதும் ஆசியாவினதும் பெரும்பாலான பகுதிகளி லெல்லாம் கல்வியறிவினதும் நாகரிகத்தினதும் ஒளிவிளக்கு மங்காது நேர்த்தியாக எரிந்து கொண்டிருக்கச் செய்தவர்கள் இஸ்லாத்தின் வழிநடந்தவர்கள். அந்த இஸ்லாத்தினின்று பெற்ற அரும்பெரும் மரபுரிமைக்கு அருகதையுள்ளவர்களாக சோனகர்கள், தங்களை ஆக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். அல்லது அதனை உணர்கிறார்கள் என்பதற்கான எதுவித அறிகுறியும் இதுவரை தென்படவில்லை”

இலங்கை வாழ் என்னுடைய மதத்தோழர்கள் கௌரவ அருணாசலம் அவர்களின் இந்த வார்த்தைகளை உள்ளத்தில் பதியவைத்து, தங்கள் அரும்பெரும் மரபுரிமைக்கு அருகதையுள்ளவர்களாக எதிர்காலத்தில் தங்களை ஆக்கிக் கொள்ள எத்தனிப்பார்களென நம்புகிறேன். அதே பெரியார் சோனகரின் ஆரம்பம் பற்றி மேலும் அதே போன்ற ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது இலங்கைச் சட்டவாக்க சபை மன்றத்தில் மேன்மை தங்கிய தேசாதிபதியினால் தலைமைதாங்கப்பட்ட புத்தி;க்கூர்மை வாய்ந்த ஒரு கூட்டத்தினர் முன்னிலையில் இலங்கையின் வரலாறு பற்றிச் சமீபத்தில் அவர் ஓர் உரை நிகழ்த்திய போது சோனகர், அறபிகளின் வழித்தோன்றல்கள் எனக் கூறியிருக்கிறார். ஆங்கில அரசாங்கத்தின் உயர்தர உத்தியோகத்தர்களால் உத்தியோகபூர்வ முறையிலும் தனிப்பட்ட முறையிலும் செய்யப்பட்ட இந்தப் பிரகடனங்கள், சோனகரின் ஆரம்பம் பற்றியும் அவர்களின் வரலாறு பற்றியும் ஆங்கிலேயர் விசாரித்தாராய்ந்து உண்மையைக் கண்டறிந்தனர் என்பதை ஐயந்திரிபற எடுத்துக்காட்டுகின்றன. எனவே, திரு. இராமநாதன் கூறுவதுபோல, ஆங்கிலேயருக்கு “இனவரலாற்றுப் பிரச்சினைகளில் தலையிட ஓய்விருக்கவில்லை” எனக் கூறுவது பிழையானதாகும்.

1881 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் குடிசன மதிப்பு அறிக்கையில் இனத்தைப் பற்றிய புள்ளிவிபரம் கொடுக்கப்படாது அதற்குப் பகரமாக எடுத்தாளப்பட்டுள்ளது என்று திரு. இராமநாதன் கூறுகிறார். “தேசியப் பண்புக்கு நம்பிக்கையான விளக்கம் ஒன்று இருக்குமாயின் அது மொழியாகத்தான் இருக்கும்@ பண்டைக்காலங்களில் விசேஷமாக மொழியென்றாலும் மக்கள் என்றாலும் அது ஒன்றையே குறிப்பதாக இருந்தது@ எங்களைப் பொறுத்தவரையிலும் எங்கள் உண்மையான மூதாதையர் யாரெனில் எவர்களது மொழியை நாம் பேசுகிறோமோ அவர்களாவர்@ அவர்கள் தாம் எங்கள் எண்ணங்களின் தந்தையர், எங்கள் நம்பிக்கையினதும் அச்சத்தினதும் தாய்மார் என்று பேராசிரியர் மக்ஸ் முல்லர் கூறுவதை அவர் எடுத்துக் காட்டுகிறார். அத்துடன், “எத்தனையோ ஆக்கிரமிப்புப் புயல்கள் சென்னை ஆள்புலத்தின்மீது வீசியபோதும் அங்கிருந்த குடிமக்களின் இனப்பண்பு அவ் ஆக்கிரமிப்புக்களின் அத்தனை தாக்கங்களின் கீழும் மொழிகாரணமாக நிலைகுலையாது நின்றது என்பது மொழி நிரூபிக்கும் அசைக்கமுடியாத அத்தாட்சியாகும் என்று சேர் வில்லியம் ஹண்டர் சுருக்கமாகக் கூறுவதையும் எடுத்துக்காட்டி திரு. இராமநாதன் பின்வருமாறு கூறுகிறார்.

“ஆகவே இனத்தை அறிந்து கொள்வதற்கு நாம் மொழியை உரைகல்லாக எடுத்தால், தமிழ் மொழியைத் தங்கள் பேச்சு மொழியாகக் கொண்ட இலங்கைச் சோனகர், தமிழர்கள் என்றே கொள்ளல் வேண்டும்”

மீண்டும் அவர் தமது ஆராய்ச்சிக் கட்டுரையின் இறுதிப் பந்தியில் கூறுகிறார்@

“நான் முன்னர் கூறியதுபோல, முற்றிலும் சிங்களப் பிரதேசங்களிகலும் கூட சோனகரது பேச்சுமொழி தமிழாகவே இருக்கிறது. கரையோரச் சிங்களவர்களுக்கும் கண்டிச் சிங்களவர்களுக்கு மிடையிலும் தமிழர்களிடையே பிராமண அல்லது வேளாள குலத்துக்கும் பறையர் குலத்துக்குமிடையிலும் கோட்பாடு, பழக்கவழக்கம், முகச்சாயல் என்பனவற்றிலே எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றன? இருந்தும் அந்தந்த மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தால் அவர்கள் முறையே சிங்களவர் தமிழர் எனக் கருதப்படவில்லையா? கீழைத்தேச நாடுகளில் மொழியானது இனத்தின் அதிமுக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அது மதம், பிரிவு, உடல்வேறுபாடு ஆகியவற்றையெல்லாம் மிஞ்சிவிடுகின்றது. இல்லாவிட்டால் ஒவ்வொரு குலமும் தனித்தனி இனம் என்றாகிவிடும். கலாநிதி பிரீமனின் வாதமான ‘ஒரே மொழி பேசும் சமுதாயமானது ஒரே இரத்தக்கலப்புடைய சமுதாயமாகும் என்பது மறுதலை நிரூபிக்கப்படாத துணிபு மாத்திரமன்று@ நடைமுறையிற் பார்க்கும்பொழுது அது ஒரே இரத்தக்கலப்புடைய சமுதாயம் போன்றதே என்பதற்கான ஒரு சான்றுமாகும்’ என்பது இலங்கைச் சோனகரதும் விஷயத்திலும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கோட்பாடு, பழக்கவழக்கம், முகச்சாயல் என்பனவற்றில் கரையோரச் சிங்களவர்களுக்கும் கண்டிச் சிங்களவர்களுக்குமிடையிலும் தமிழர்களிடையே உயர் குலத்துக்கும் தாழ் குலத்துக்குமிடையிலும் முரண்பாடுகள் இருப்பினும் அவர்கள் முறையே தங்கள் தாய்மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் பேசுவதால் சிங்களவர் என்றும் தமிழர் என்றும் அறியப்படுவதன் காரணமாக சோனகரால் பேசப்படும் மொழியும் அவர்களது இனத்துக்கு ஒரு விளக்கமாக அமைகின்றது. ஆனால், சோனகர் விஷயத்தில் அவர் சிந்திக்க வேண்டியது ஒன்றுளது. அதாவது, சிங்களவரும் தமிழரும் தத்தம் மொழியைப் பேசுவது போன்று சோனகரும் தமிழைத் தங்கள் சொந்தத் தேசிய மொழியாகக் கருதிப் பேசுகிறார்களா. அல்லது கடன் வாங்கப்பட்ட ஒரு மொழியாகப் பேசுகிறார்களா என்பதாகும். அத்துடன் ஓர் இனம் இன்னோரினத்தின் மொழியைக் கடன் வாங்கிப் பின்னர் தனது சொந்த மொழியை மறந்து, கடன்வாங்கிய மொழியைத் தொடர்ந்து உபயோகிக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றதா என்பதுமாகும். வேளாள, பறையர் குலத்தமிழர்களிடையேயும் கண்டிய, கரையோரச் சிங்களவர்களிடையேயும் தங்களுக்கு வெளிப்பரம்பரைத் தொடர்பு இருக்கின்ற தென்று உரிமை கொண்டாடும் எந்த ஒரு வகுப்பினரும் இல்லை. எனவே, எதுவித தயக்கமுமின்றி அவர்கள் விஷயத்தில் மொழியை உரைகல்லாகப் பாவிக்க முடியும். ஆனால் சோனகரோ பல ஆண்டுகளாகவல்ல, பல நூற்றாண்டுகளாகவே அவ்வித உரிமை கொண்டாடுகிறார்களாதலால் அவர்கள் விஷயத்தில் அதே உரைகல்லை உபயோகிக்க முன்னர் சிறிது தாமதித்து ஆலோசிக்க வேண்டி இருக்கிறது. அவர்களின் மூதாதையர் அரேபியாவிலிருந்து வர்த்தக நோக்கமாக வந்து இலங்கையின் கரையோரங்களில் குடியேறினார்கள். இத்தீவு அவர்களைப் பலவிதத்தில் ஈர்த்தது. இது அவர்களின் ஆதிபிதா ஆதம் இருந்த இடம். தாம் செய்த அடிபணியாமை என்னும்; பாபத்துக்கு இறைவனிடம் மன்னிப்கோரிய பொழுது இருந்த இடம். அவர்களது பாதம் பதிந்த மலை உள்ளது. அதன் காரணமாக முஸ்லிம்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே அந்த மலையைத் தரிசித்து வந்துள்ளனர். அங்கு அறபு வர்த்தகர்கள் மட்டுமன்றி பாரசீக, சீன முதலாம் ஏனைய வர்த்தகர்களும் குழுமினர். இந்நாடு நறுமணங் கமழும் மருந்துச் சரக்குகள், மாணிக்கக் கற்கள், முத்துக்கள், சங்குகள், கறுவா முதலியவற்றை உற்பத்தி செய்தது. இந்தப் பொருட்களுக்கு எகிப்திலும் பாரசீகக் குடாநாட்டைச் சேர்ந்த பிரதேசங்களிலும் மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் அதிக கிராக்கி இருந்தது. அந்நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தகம் அதிகமாக அறபிகளின் கையிலேயே இருந்தது. அவர்களின் சொந்த நாடான அரேபியாவிலோ அப்போ நிலைமை அவர்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. உமையாக்கள் ஆட்சிபீடத்தில் அமரத் தொடங்கியதும் ஹாஷிமின்களுக்குக் கஷ்டகாலம் ஏற்படத் தொடங்கியது. மரபு வரலாற்றின்படி இலங்கைச் சோனகரின் பெரும்பாலான மூதாதையர் ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். போருக்கு விருப்பமற்றவர்களும் சாவதானமான வர்த்தகத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர்களுமான ஹாஷிமின்களில் சிலரும் அனேகமாக ஏனைய சில கோத்திரங்களும், உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாத தங்கள் சொந்த நாட்டில் இடைவிடாது உருவான அரசியல் நாடக அரங்கிலிருந்து இயற்கையாகவே ஒதுங்கிக் கொண்டு வெளிநாடுகளில் அடைக்கலம் தேடினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையினால் சிலர் உண்மையாகவே விரட்டப்பட்டனர். அவ்வித ஓர் ஆபத்தான வேளையில் அவர்களது அடைக்கலத்துக்கு, நீண்ட காலமாக அவர்களின் வர்த்தக நிலைக்களனாக விளங்கிய இலங்கையைவிட வேறு எந்த நாடுதான் அவர்களுக்கு விருப்பமுள்ளதாக இருந்திருக்க முடியும்? அவர்கள் இங்கு குடியேறிய பொழுது சிங்களவர்கள் மத்தியில் குடியேறவில்லை@ தமிழர்கள் மத்தியில் தான் குடியேறினார்கள். இந்நாடு சிங்கள இனத்தின் நாடாக இருந்ததால் ஒரு சிலருக்கு இது விந்தையாகத் தோன்றலாம். ஆனால் அதனை வரலாறு விளக்குகின்றது. அறபிகள் வர்த்தகர்களாக இருந்தனர். எனவே, இந்நாட்டின் வர்த்தகர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது இயற்கையே. எங்கள் சிங்கள அன்பர்கள் வர்த்தகர்களாக இருக்கவில்லை. அவர்கள் வர்த்தகத்தை வெறுத்து கமத்தொழிலிலும் ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டனர். டெனண்ட் பின்வருமாறு கூறுகிறார்.

“ஆகவே, இத்தீவின் உட்பிரதேசங்கள் பற்றிக் குறைவான தகவலுக்கான குறிப்பிடத்தக்க காரணத்தை விளக்குவதற்கு தென்பிரதேச சிங்களவர்களுக்கு வர்த்தகத்தின் பழங்காலத்திலிருந்தே இருந்துவந்த ஆர்வமின்மையும் கரையோரங்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த புதியவர்களுடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்வதினின்றும் தப்பித்துக் கொள்வதற்கு அவர்கள் கொண்ட விருப்பமும் உதவுகின்றன. இது எட்டாம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குமிடையிலான அரேபிய, பாரசீக எழுத்தோவியங்களிலிருந்து தெளிவாகின்றது.

“முற்றுமே சிங்களப் பிரதேசங்கள்” எனக் கருதப்பட்ட காலி, பேருவலை, வெலிகாமம் ஆகியவை இத்தீவின் தென்பாகத்திலேயே உள்ளன. மேலே கூறப்பட்ட விவரத்தின் பிரகாரம் தென்பாக சிங்களவர் வர்த்தகத்தில் ஆர்வமற்றவர்களாக மட்டும் இருக்கவில்லை@ புதியவர்களுடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் அவர்கள் விரும்பினர். எனவே அறபிகளுக்குச் சிங்களவர்களுடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற நம்பிக்கையான முடிவுக்கு நாம் வரலாம். அப்படியானால், தென்பகுதிகளில் இந்த அதிதிகளை வரவேற்று அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்ட மக்கள் யாவர் என்று கேட்கலாம். அவர்கள் தாம் நான் முன்னர் கூறியதுபோல, அப்போது மலபாரிகள் என அழைக்கப்பட்ட தமிழர்களாவர். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து பல தடவை இலங்கையின் மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் துறைமுகப் பிரதேசங்களிலும் உட்பிரதேசங்களிலும் அதிகமாகக் காணப்பட்டனர். அவர்கள் ஆதிக்கத்தையும் அவர்கள் அடைந்த உச்ச நிலையையும் எடுத்துக் காட்டுவதற்கு நான் டெனண்டின் “இலங்கை” எனும் நூலிலிருந்து மேற்கோள் காட்டினாற் போதுமானது.

“ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரையிலான ஏறக்குறைய நானூறு ஆண்டுகளாக சிங்கள வரலாறுகளில் சுதேச மன்னர்களின் அரசியல் திறனுக்கு ஒதுக்கப்பட்டதைவிட மிகவும் பிரதான ஒரு பகுதி மலபாரிகளின் வீரச் செயல்களுக்கும் சாகசச் செயல்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. பிரதம அமைச்சரின் காரியாலயம் உட்பட அவர்கள் எல்லாக் காரியாலயங்களிலும் நிரம்பி வழிந்தனர். அரச பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் தகைமையை அவர்களே முடிவு செய்தனர். இறுதியாக, அவர்களின் எண்ணிக்கை நாட்டிலே எவ்வளவு பெருகியதென்றால், வலிமை குன்றிய மன்னர்கள் அவர்களை அனுராஜ புரத்திலிருந்து அப்புறப்படுத்துவது சாத்தியமில்லை எனக் கண்டனர்”

“கி. பி. 1023 இல் சோழியர்கள் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அரசனைச் சிறைப்பிடித்த இந்தியாவின் கரைக்கு எடுத்துச் சென்று (அவன் அந்த நிலையில் அங்கு மாண்டான்) பொலொன்னறுவையில் ஒரு மலபார் அரச பிரதிநிதியை ஆட்சிபீடத்தில் அமர்த்தினர். அவன் ஒரு வெளிநாட்டுப் படையின் உதவியுடன் தனக்கு உரிமையற்ற பதவியைக் காப்பாற்றி இத்தீவை ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தன்னாட்சிக்குள் வைத்திருந்தான் ராஜரத்னகாரி கூறுவதுபோல, “பத்தொன்பது அரசர்களின் எண்பத்தாறு வருடகால ஆட்சி பூராவும் மலபாரிகள் இத்தீவின் எல்லாக் கிராமங்களிலும் தாங்கள் படிப்படியாகப் பரவும்வரை சிங்களவருடன் அடிக்கடி தொடர்ந்து போர் தொடுப்பவர்களாக இருந்தனர்.”

எங்கள் மூதாதையர் இங்கு குடியேறும் போது மலபாரிகள் இத்தீவின் எல்லாப் பகுதிகளிலும் முழுச் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர் என்பது மேலே கூறப்பட்ட பந்திகள் விளக்குகின்றன. அத்துடன் அவர்களே அறபிகளை வரவேற்றனர் என்பது சரித்திரச் சான்றுகளிலிருந்தும் சோனகரிடையேயுள்ள மரபு வரலாற்றிலிருந்தும் உறுதிப்படுகின்றது. புகழ்வாய்ந்த அரேபியக் கடலோடியான சிந்த்பாத், இலங்கையை அடைந்தபொழுது மலபாரிகளே அவரை முதன்முதலாக வரவேற்றனர் என்பது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. டெனண்ட் கூறுகிறார்.

“வரலாற்றிலே இன்னோர் அராபியக் கடலோடியைச் சுட்டிக்காட்டக் கூடிய இடம் இதுவேயாகும். அவருடைய கடற்பிரயாணங்கள் உலகப் பிரசித்தி பெற்றவைகளாக விளங்கின. அத்துடன் புராதன, அல்லது நவீன வரலாற்றாசிரியர்கள் எவரையும் விட செரந்தீபின் பெயரையும் புதுமையையும் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்துவதில் அவர் பங்கு கொண்டிருக்கிறார். சிந்த்பாதின் கதைகளிலிருந்து ஒர் அனுமானம் இங்கு தெளிவாகின்றது. அதாவது, இலங்கையின் கரையோரப் பகுதிகள் பற்றி அறபிகள் அறிந்திருந்த அதே நேரத்தில் அதன் உட்பிரதேசங்கள் பற்றி அவர்கள் ஆராய்ந்தறிந் திருக்கவில்லை. அவை மர்மங்களால் எவ்வளவு சூழப்பட்டிருந்தனவென்றால், அவற்றின் புதுமைகள் பற்றிய எந்தக் கட்டுக் கதையும், அது எவ்வளவு தான் நிகழ முடியாத ஒன்றாயினும், நிச்சயமாகவே உண்மையென்று நம்பும் படி இருந்தது. எனவே, கரையோரத்தைப் பற்றியும் அதன் குடிமக்கள் பற்றியும் சிந்த்பாத் கூறுபவை வர்ணனைக்கு அப்பாற்பட்டவை. அதாவது அவரது முதலாவது வருகையின் போது அவரை வரவேற்ற உள்ðர் வாசிகள் மலபாரிகளாவர். அவர்களில் ஒருவர் அறபு மொழி கற்றவராக இருந்தார். அவர்கள் அப்போது தங்கள் நெற்காணிகளுக்கு ஒரு குளத்திலிருந்து நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தனர்.

அறபிகளுக்கும் மலபாரிகளுக்கும் இடையே இருந்த நெருங்கிய தொடர்பு பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்? அதாவது, மலபாரிகள் அறபிகளின் மொழியைக் கற்றிருக்கவும் அறபிகள் இங்கு வருகை தந்தபோது அவர்களுக்கு நேசக்கரங்காட்டி வரவேற்ற உள்ðர்க் குடிகளில் முதலாவதாக அவர்கள் இருந்திருக்கவும் காரணமென்ன? ஆகவே, அறபிகளும் அதே போல தாங்கள் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்த மலபாரிகளின் மொழியைக் கற்றனர் என்பதையும் அவர்கள் மத்தியில் அறபிகள் குடியமர்ந்த பின் தங்கள் சொந்த நாட்டுடனான சமூகத் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் அந்த மொழியையே தொடர்ந்து பேசினார்கள் என்பதையும் அதன் காரணமாகவே அவர்களின் வழித்தோன்றல்களும் அவர்களின் தந்தையர் மலபார் நண்பர்களிடமிருந்தும் மலபார் மனைவியரிடமிருந்தும் கடன் வாங்கிய மொழியைப் பேசுவதில் நிலைத்துவிட்டார்கள் என்பதையும் நம்புவதில் என்ன கஷ்டம் இருக்கிறது? அவ்வாறு தான் இலங்கைச் சோனகர் தமிழைப் பேசவேண்டி ஏற்பட்டது.

அவர்கள் தங்கள் மூதாதையரின் மொழியை விட்டுவிட்டு எவர் மத்தியில் குடியமர்ந்தார்களோ அவர்களின் மொழியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டியேற்பட்டது என்பதை எடுத்துக்காட்டியதன் பின் இந்தத் தலைமுறையில் உள்ள வேறு ஏதாவது ஒரினத்தின் வரலாற்றில் அதற்குச் சமமான வேறேதாவது ஒரு நிகழ்ச்சி இருக்கின்றதா என்பதை ஆராய நான் இப்பொழுது முற்படுவேன். பேராசிரியர் மக்ஸ் முல்லரின் சொற்கள் ஒரு பரந்த அடிப்படையில் கருத்துக் கொள்ளப்படல் வேண்டும். அத்துடன் அவற்றைச் சிறிதும் மாற்றமில்லாத வகையில் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. “தேசிய இனம்” எனும் சொல் மிகவும் பரந்த ஒரு கருத்தைக் கொண்டது. “ஒரே நாட்டில் வாழும் மக்கட்டொகுதி” அல்லது “ஓர் அரசனின் அல்லது அரசாங்கத்தின் கீழ் ஐக்கியமாக உள்ள ஒரு மக்கட்டொகுதி” என்பதை அது குறிக்கும். மக்கள், “பொது மொழியாலும் பண்பாலும் தீர்மானிக்கப்பட வேண்டியவர்களேயன்றி அரசியல் ஓரவஞ்சத்தால் அல்லது பிரிவால் தீர்மானிக்கப்பட வேண்டியவர்களல்லர்” என்றும் கூறப்படலாம். இங்கு கருதப்பட்டது யாதெனில், ஒரு மக்கட் டொகுதியின் தேசியப் பண்பைத் தீர்மானிக்க ஒரு பொது மொழி தேவைப்படுகின்றது என்பதாகும். எனவே ஒரு பொது மொழியின்றி இலங்கையருக்குத் தேசியப் பண்பு இல்லையென்று சொல்லப்படலாம். பெரியபிரித்தானியாவின் மக்கள் ஆங்கிலேயர், வெல்ஸ் மக்கள், ஐரிஷ் மக்கள், ஸ்கொட்லாந்தர்கள், யூதர்கள் ஆகியோரை உள்ளடக்கியவர்களாவர். அவர்களிடையே அரசியற் பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒருபொது மொழியைப் பேசுவதால் ஒரு தேசிய இனம் எனத் தீர்மானிக்கப்படுகின்றனர். அவ்வித ஒரு தேசிய இனத்தில் வௌ;வேறான பரம்பரைக்குப் பாத்தியதை கோரும் வௌ;வேறான இனங்கள், அல்லது வகுப்புக்கள் இருக்கமுடியாது என்னும் முடிவுக்கு இது எங்களைக் கொண்டுவந்து விடாது. மேலே கூறப்பட்ட தத்துவத்தின்படி, ஒரு நாட்டிலே வௌ;வேறான சமுதாயங்க ளிடையே சோனகர் வாழ நேரிட்டால், அச்சமுதாயத்தினர் அனைவரும் தமிழைப் பொது மொழியாகப் பேசுவார்களென்றால், சோனகரும் அவரது அயலவர்களுடன் இனவாரியாகத் தமிழர் எனத் தீர்மானிக்கப்படலாம். ஆனால், பல்வகை இனங்களை அங்கீகரிக்கும் ஒரு நாட்டில் அவர்களின் பரம்பரையைக் கருத்திற் கொள்ளும் ஒரு நாட்டில், தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடமே இல்லாத ஒரு நாட்டில் மேற்படி பேராசிரியரின் தத்துவத்தைப் பிரயோகிப்பது சரியாகாது. “எங்கள் உண்மையான மூதாதையர் யாரெனில், எவரது மொழியை நாம் பேசுகிறோமோ அவர்களாவர்” எனும் அவரின் வார்த்தைகள் திரு. இராமநாதன் கொண்ட கருத்தையே தெரிவிக்கின்றன என்று நாம் ஏற்றுக் கொள்வதாயிருந்தால் அவரது “எங்கள்” எனும் சொல் உலகின் எல்லா இனங்களையும் உள்ளடக்குவதாக இருந்தால், இந்தக் குறிப்பிட்ட விடயத்தில் பேராசிரியர் தவறிவிட்டார் என்று எங்கள் அனுபவம் எங்களுக்குக் காட்டுகின்றது என்பதை நான் எதுவித தயக்கமுமின்றிக் கூறமுடியும். ஏனெனில், இந்தியாவின் குடிமக்களில் ஒரு பிரதான பிரிவான சமுதாயமொன்றைப் பற்றி நாம் அறிவோம். அந்தச் சமுதாயத்தினர் தங்கள் உண்மையான மூதாதையரின் மொழியைப் பேசுவதில்லை. அவர்கள் எந்த மக்களின் மத்தியில் குடியமர்ந்தார்களோ அவர்களது மொழியையே பேசுகின்றனர். நான் பார்ஸிகளைப் பற்றியே குறிப்பிடுகின்றேன். பாரசீகம் இஸ்லாத்தின் செல்வாக்கின் கீழ்க் கொண்டுவரப்பட்ட பொழுது சில காரணங்களுக்காகப் பாரசீகர்களில் ஒரு குழுவினர் அந்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தனர். தெற்கு நோக்கி அவர்கள் கடல் மார்க்கமாகப் பிரயாணஞ் செய்து இந்தியாவின் கரையோரப் பகுதியொன்றில் இறங்க விரும்பினர். அது இப்பொழுது பம்பாய் ஆள்புலம் என அழைக்கப்படுகின்றது. ஆனால், ஹிந்துவாயிருந்த அப்பிரதேசத்தின் அப்போதைய ஆட்சியாளன் அவர்கள் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை அங்கு இறங்க அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அந்த நிபந்தனைகளின் பிரகாரம் அவர்கள் சில வகைகளில் ஹிந்து சட்டதிட்டங்களை அனுசரிக்க வேண்டி ஏற்பட்டது. அவர்கள் அந்த நாட்டில் குடியேறிய நாள்தொட்டு அவர்களது சொந்த நாட்டுடன் அவர்களுக்குச் சமூகத் தொடர்பு இருக்கவில்லை. அவர்களில் மனைவியற்றவர்கள் ஹிந்துப்; பெண்களை மணந்தனர். அத்துடன் அனைவரும் அந்தப் பிரதேசத்தின் மொழியைப் பேசத் தொடங்கினர்@ ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களையும் ஏற்று நடந்தனர். அவர்களின் வழித்தோன்றல்களே இந்தியாவின் இப்போதைய பார்ஸிகள். அவர்களின் பேச்சுமொழி குஜராத்தியாகும். பாரசீக மொழி அதற்கு மேலும் அவர்களது மொழியாக இருக்கவில்லை. அப்படியாயின் அவர்கள் பாரசீக வழித்தோன்றல்கள் அல்ல என்று தீர்மானிக்க முடியுமா? திரு. இராமநாதன் தமது ஆய்வுக் கட்டுரையை அரச ஆசிய கழகத்தின் முன்னிலையில் வாசித்தபொழுது அக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த காலஞ்சென்ற திரு. ஜோஜ் வோல், உடனே அவரது கவனத்துக்குப் பார்ஸிகளின் விஷயத்தைக் கொண்டு வந்தார். அச்சந்தர்ப்பத்தில் ஆற்றிய உரையில் திரு. வோல் பின்வருமாறு கூறினார்:

“(மக்ஸ் முல்லரின்) அந்த விளக்கத்தை எதுவித சிறு மாற்றமுமின்றி அதன் சாதாரண கருத்துடன் நாம் ஏற்றுக் கொள்வோமாயின் பார்ஸிகளை நாம் இந்தியர்களென்றுதான் கருத வேண்டுமே தவிர ஒரு தனியான இனம் எனக் கொள்ள முடியாது என்பது போல் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் உறைவிடத்தை எந்த மக்கள் மத்தியில் ஆக்கிக் கொண்டார்களோ அவர்களது மொழியைத்தான் பேசுகிறார்கள்...... அவர்களின் குறிப்பிடத்தக்க ஒதுக்க நிலையையும் அவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளையும் நோக்குமிடத்து நான் ஒன்றை நினைக்க வேண்டியுள்ளது. அதாவது அவர்கள் எந்த மக்களின் அன்பாதரவைப் பெற்றார்களோ, எந்த மக்களின் நாட்டைத் தங்கள் தாயகமாகக் கொண்டார்களோ அந்த மக்களது மொழியைப் பேசுவதனால் அதனை அவர்களது இனத்தைத் தீர்மானிக்க ஒரு முடிவான ஆதாரமாகக் கொள்ள முடியாது”

பார்ஸிகளின் விஷயமும் சோனகரின் விஷயமும் ஒரேமாதிரியானவை. பார்ஸிகள் தங்கள் மூதாதையரது மொழியைக் கைவிட்டு ஹிந்துக்களது மொழியைப் பேசுகின்றனர். எனினும் இனத்தில் அவர்கள் ஹிந்து என்றும் மதத்தில் அவர்கள் ஸொராஸ்தியர் என்றும் அவர்களை அழைப்பது சரியானதென்று கூற இதுவரை எவராவது முன்வரவில்லை. எனவே, இலங்கைச் சோனகரது மொழி தமிழாக இருப்பதனால் அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது அறிவீனமேயன்றி வேறல்ல. சோனகரையும் பார்ஸிகளையும் போன்று இப்போது இலங்கையில் காணப்படும் டச்சுக்காரர்களும் அவர்களின் உண்மையான மூதாதையரது மொழியைப் பேசுவதில்லை. ஒரே மொழி பேசும் சமுதாயம் நடைமுறையில் ஒரே இரத்தமோடும் சமுதாயத்தைப் போன்றதேயன்று திரு. இராமநாதன் மேற்கோள் காட்டிய கலாநிதி பிரீமனின் குறிப்பு பற்றி நான் எதுவும் கூறாமல், அரச தாவர பூந்தோட்டத்தின் அதிகாரியாக இருந்த காலஞ்சென்ற கலாநிதி இராமநாதன் வாசித்த கட்டுரையைத் திறனாய்வு செய்து பேசிய போது கூறியவற்றை இங்கு எடுத்துக் காட்டுவதே போதுமானது. அது பின்வருமாறு:

“இலங்கைச் சோனகர் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்களின் ஆரம்பம், மொழி, பழக்கவழக்கம் என்பன பற்றி திரு. இராமநாதன் வாசித்த சுவையான ஆய்வுக் கட்டுரையைக் கேட்டோம். அவர்கள் சோனகரா, தமிழரா என்பதை இந்தப் பலதரப்பட்ட சிறப்பியல்புகள் எந்த விதத்திலும் எடுத்துக்காட்டத்தான் வேண்டும் என்பதில்லை என அவர் சரியாகக் கூறினார். ஆனால், தலைவர் அவர்களே! இவைகளில் எதுவும் ஓர் இனத்தைப் பற்றித் தீர்மானிக்க எங்களுக்கு உதவமாட்டாது. ஒரு விஷயம் மட்டுந்தான் ஒர் இனத்தை உருவாக்கும். அது இரத்தமேயன்றி வேறெதுவுமன்று. ஒரு சமுதாயம் இரத்தத்தால் உருவாகுமேயன்றி வேறெதனாலும் உருவாக முடியாது. எனவே, இலங்கைச் சோனகரது ஆரம்பம் பற்றித் தீர்மானிப்பதில் அந்தத் திசையில் தான் நமது ஆராய்ச்சியைச் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்...... எங்களுக்குத் தேவை கூர்ந்த ஆராய்ச்சி@ விரிவான கூர்ந்த ஆராய்ச்சி. மண்டையோடுகள் மீது மட்டுமல்ல@ பொதுவாக ஒர் இனத்தின் மானிட வரலாற்றின் மீதான கூர்ந்த ஆராய்ச்சி. உயிரின ஆராய்ச்சியாளன் எனும் முறையில் நான் ஒன்றை நினைக்காமல் இருக்க முடியாது. அதாவது, திரு. இராமநாதன் அவ்வளவு சிரமத்துடன் நடத்திய மொழி ஆராய்ச்சியையும் சரித்திர ஆராய்ச்சியையும் விட நாம் அவ்வாறான ஒர் கூர்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடமுடியுமானால், இலங்கைச் சோனகரது ஆரம்பம் பற்றிச் சிறப்பாகத் தீர்மானிக்க முடியும்.”

ஆகவே, ஓர் இனத்தினது ஆரம்பம் பற்றித் தீர்மானிக்கத் தேவைப்படும் மிகவும் அத்தியாவசியமான அத்தாட்சி இரத்தமேயன்றி மொழியோ, வரலாறோ அல்ல என்பதை அந்த விடயம் சம்பந்தமாக ஆதாரபூர்வமாகப் பேசத் தகுதிவாய்ந்த சிறந்த உயிரின ஆராய்ச்சியாளர் ஒருவர் எமக்கு அறியத் தருகிறார். திரு. இராமநாதன் நிறுவ முற்பட்ட தத்துவத்துக்கு உதவியளிக்கும் வகையில் இலங்கைச் சோனகரது இரத்தம் பற்றி நுண்ணாராய்ச்சிகள் நடாத்தப்பட்டனவா? அவற்றின் பெறுபேறுகள் பெறப்பட்டனவா? இல்லையென்றே கூறுவேன்.

மொழி பற்றி திரு. இராமநாதனது வாதத்தை முறியடிக்க நான் இதைவிட முயல வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். காரணம், அவருக்கே அதிற் சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவதை நாம் காண்கிறோம்:

“ஆனால் ஒர் இனத்தை அறிய மொழி மாத்திரம் அரைகுறையான ஆதாரத்தையே தருகின்றதென்று பேராசிரியர் டேய்லரைப் போன்று சில இன ஆராய்ச்சியாளர் உறுதிப்படுத்துகின்றனர். ஆதலால், இலங்கைச் சோனகரது வரலாறு (இதுவரை கண்டறிந்த அளவுக்கு) நான் கொண்ட முடிபை எவ்வளவுக்கு ஆதரிக்கின்றதோ அவ்வளவுக்கு அவர்களின் சமூக பழக்க வழக்கங்களும் உடலமைப்புக்களும் ஆதரிக்கின்றன என்பதை நான் இன்னும் சிறிது ஆழத்துக்கு ஊடுருவிச் சென்று நிரூபிக்கிறேன்”

அவர் அவரது முயற்சியில் வெற்றிபெற்றுள்ளாரா என நாம் இப்பொழுது நோக்குவோம்.

இலங்கைச் சோனகருக்கும் ‘கரையோரச் சோனக’ருக்குமிடையே ஓர் உறவை ஏற்படுத்தவும் பின்னவர் தமிழினத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டவர்கள் என்று காட்டவும் இந்திய முகம்மதியர்களது வரலாற்றின் மீதான சில நூல்களை அவர் மிகுந்த சிரமத்துடன் படித்து, விளக்கமான குறிப்புரையொன்றையும் எழுதியிருக்கிறார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரையை வாசிப்பவர்கள், அவர் தாம் கருதியவாறு விஷயத்தை விளக்க எடுத்துக் கொண்ட சிரமத்தைச் சந்தேகமின்றி மெச்சுவார்கள். ஆனால், அதே நேரத்தில் இலங்கைச் சோனகரது வரலாற்றை இந்திய முகம்மதியர்களது வரலாற்றைக் கொண்டு மட்டுந்தான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு இலங்கைச் சரித்திரம் இலங்கைச் சோனகரது வரலாறு பற்றி மௌனம் சாதிக்கின்றதா என்று அவர்கள் தங்களை நிச்சயம் கேட்டுக்கொள்வார்கள். காயலிலிருந்தோ அல்லது இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலுமிருந்தோ வந்த தமிழ் முகம்மதியர்களின் குடியேற்றம் ஒன்று இலங்கையின் ஆரம்ப சோனகக் குடியிருப்பை உருவாக்கியது என்பதைக் காட்ட இந்திய வரலாற்றிலிருந்து அவர் ஏதாவது கண்டுபிடித்தாரா என்று அறிந்து கொள்ள நான் திரு. இராமநாதனது ஆராய்ச்சிக் கட்டுரையின் அந்தப் பகுதியை ஊன்றிப் படித்தேன். ஆனால், அவர் இந்திய வரலாற்றிலிருந்து அப்படி எதுவுமே மேற்கோள் காட்டவில்லை. “தென்னிந்தியாவின் பலதரப்பட்ட குலங்களைச் சேர்ந்த பெருந்தொகையான தமிழர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டனர்” என்றும், “நாகபட்டனம், நாகூர், அதிராம்பட்டணம், கீழக்கரை ஆகியவை அதிசீக்கிரமே மதமாற்ற மத்திய நிலையங்களாக மாறின” என்றும் அவர் கூறினாலும் அதனை நிரூபிக்க அவர் தக்க மேற்கோள்கள் காட்டவில்லை. அவரது ஆய்வுக் கட்டுரையின் அந்தப் பகுதியிலிருந்து கருத்துத் தெரிவிக்கப்பட வேண்டிய சில பந்திகளை நான் இங்கு எடுத்துக் காட்டுகிறேன். அவர் கூறுகிறார்:

(1) “1881 ஆம் ஆண்டுக்குரிய குடிசன மதிப்பில் “சோனகர்” எனப் புள்ளிவிபரம் காட்டப்பட்டவர்கள் தீவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றனர்... (நான் ஏற்கெனவே கூறியவை போல) எண்ணிக்கையில் ஏறக்குறைய 1,85,000 பேரைக் கொண்ட இச் சமுதாயமானது எங்கள் சட்ட நீதிமன்றங்களில் ‘இலங்கைச் சோனக மனிதர்’ என்றும் ‘கரையோரச் சோனக மனிதர்’ என்றும் பொதுவாக அறியப்படுபவர்களை உள்ளடக்கும்”

(2) “எனவே தீவிலுள்ள 1,85,000 சோனகரையும் ‘இலங்கைச் சோனகர்’ என்றும் ‘கரையோரச் சோனகர்’ என்றும் ஏறக்குறைய சரிசமமாகப் பிரிக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம். தென்னிந்தியாவிலுள்ள ஆங்கிலேயர், முகம்மதியர்களை – அவர்களிலிருந்து வந்தவர்கள்தாம் எங்கள் சம்மன்காரர்கள் - ‘லெப்பைகள்’ அல்லது ‘லப்பேய்கள்’, என்று அழைக்கின்றனர். ஏனெனில், அனேகமாக ‘லெப்பை’ எனும் சொல் அவர்களுடைய பெயர்களின் பொது முடிபாக இருப்பதனாலாகும். ‘லெப்பைகள்’, தங்களைச் ‘சோனகர்’ என அழைக்கின்றனர். தமிழர்களாலும் அவர்கள் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர்...... மலபார் முகம்மதியர்கள் ஏறக்குறைய எல்லோருமே ‘மாப்பிள்ளை’களாக இருக்கும் அதேவேளையில் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய பிரதேசங்களிலுள்ள முகம்மதியர்கள் ஏறக்குறைய எல்லோருமே ‘லப்பேய்’களாக இருக்கின்றனர். பூரண இலக்கத்தில் அவர்களுடைய எண்ணிக்கை வருமாறு: 19,35,000 முகம் மதியர்களில் 5,15,000 பேர் (தமிழ் மொழி பேசும்) மாப்பிள்ளைகளாவர், ஏனையோர் (பெரும்பாலும் ஹிந்துஸ்தானி மொழி பேசும்) செய்குமார், ஸய்யிதுமார், பதன்கள், மொகலாயர்கள் ஆவர்”

(3) “முஸல்மான் மார்க்கம் மேற்குப் பஞ்சாப்பில் பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் கிழக்குப் பஞ்சாப்பில் பதினேழாம் நூற்றாண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது..... தென்னிந்தியாவில் மாப்பிள்ளைகளது இஸ்லாமிய வரலாறும் அதே மாதிரியான, ஆனால் அதற்கு முந்திய ஒன்றாகும். இந்தியாவின் பேரரசத் திணையேட்டில் வெளியிடப்பட்டிருப்பதன் பிரகாரம் அவர்கள் மத்தியிலுள்ள மரபு வரலாறு யாதெனில். கி. பி. 844 இல் அரேபிய கப்பல் அல்லது ‘பகளா’ ஒன்று பேய்பூர், கடலுண்டி ஆறுகளின் மூலம் உருவான சாலியத் தீவில் நொறுங்கியது என்றும் வர்த்தகத்தை வளர்க்கும் கொள்கையை உடைய அப்பிரதேச ஹிந்து ஆட்சியாளன், காப்பாற்றப்பட்ட பதின்மூன்று அறபிகளையும் அன்புடன் வரவேற்று அவர்களுக்கு நிலமும் வழங்கினான் என்றும் அதன்பின்னர் ஏனைய முகம்மதியர்களும் சுறுசுறுப்பு வாய்ந்த சமயத் தூதுக்குழுவினர் சிலருடன் அங்கு வந்து சேர்ந்தனர் என்றும் கூறுவதாகும். அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி மாப்பிள்ளைகளும் பலதரப்பட்ட குலங்களிலிருந்து இஸ்லாத்துக்கு மதம்மாறிய மலையாளிகளாவர்”

(4) “சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய தூத்துக்குடிக்கு ஏறக்குறைய இருபத்தைந்து மைல்களுக்குக் கீழே தமிழ்நாட்டின் தென்கிழக்குக் கடலோரத்தில் முகம் மதியர்களால் நிரம்பிவழியும் ஒரு நகரம் முக்கியத்துவம் பெற்று விளங்கியதைக் காண்கிறோம். அதன் பெயர் காயல் பட்டணம் ஆகும்;. அது எமக்குத் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், அது லெப்பைகளின் பிரதான நகரமாக மட்டும் அமையவில்லை@ அங்குள்ள - இலங்கையிலுமுள்ள – மரபு வரலாறு யாதெனில், அங்கிருந்து ஒரு குடியேற்றம் களுத்துறைக் கருகாமையிலுள்ள பேருவலையில் குடியமர்ந்தது என்பதாகும். அந்தக் குடியேற்றந்தான் இத்தீவின்மிக ஆரம்ப இஸ்;லாமிய நிலைக்களனாகும். அன்றேல் ஆரம்ப நிலைக்களன்களில் ஒன்றாகும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். கடலிற் செல்வதை விட்டுவிட்டதன் காரணமாக இன்னொரு பட்டணத்தை உருவாக்க வேண்டியேற்பட்டது. அது காயல் என்னும் அதே பெயரையே கொண்டிருக்கிறது. பழைய நகரத்தை நினைவுகூருமுகமாக அதற்குக் “காயல்பட்டணம்” என்ற பெயர் வழங்கப்பட்டது என்றும் அதன் ஆரம்பப் பெயர் “சோனகர் பட்டணம்” என்றும் அதன் குடிமக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்று கலாநிதி சொட்வெல் கூறுகிறார். நான் கூறியது போல, சோனகர் என்பது தமிழர்களால் மாப்பிள்ளைகள், லெப்பைகள், முஅர்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பெயராகும். அந்தப் பெயர் இந்தச் சமுதாயத்தினர்களால் தங்களைத் தமிழ் இந்தியாவின் ஏனைய மதத்தினரிடமிருந்து பிரித்துக் காட்டிக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டது..... மலையாள முகம்மதியர்களுக்குக் கள்ளிக்கோட்டையும் குயிலனும் போன்று தமிழ் முகம்மதியர்களினது வரலாற்றின் நடுநாயகமாக காயல் விளங்குகின்றது என எனக்குத் தோன்றுகின்றது. காயலில் வழங்கும் மரபு வரலாறு யாதெனில், கெய்ரோவிலிருந்து சில மதத் தூதுவர்கள் அல்லது போதகர்கள் அங்கு வந்து இறங்கி, ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதனைத் தங்கள் கேந்திர ஸ்தானமாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதாகும். உண்மையில் ‘காயல்’ அல்லது ‘காஇல்’ என்பது ‘காஹிரா’ என்னும் சரியான பெயர் கொண்ட கெய்ரோவின் இன்னொரு பெயர் வடிவமேயாகும் எனச் சொல்லப்படுகின்றது.

(5) “பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளான சேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்து குமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர் தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்று அறியப்பட்டனர்@ அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம் மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப் பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூக வழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”

(6) “இந்து சமுத்திரத்தில் பிரயாணம் செய்த ஆபிரிக்கர் அரேபியர், பாரசீகர் ஆகியோரில் அதிகப்படியானோர் இந்தக் கரைகளைத் தங்கள் புதிய வதிவிடங்களாக ஆக்கிக் கொண்டனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களின் பழைய வதிவிடங்களில் சனப்பெருக்கத்தின் தாக்கம் அவர்களால் மும்முரமாக உணரப்பட்டது போல் அல்லது அவர்கள் தங்கள் மீது தாங்களாகவே விதித்துக் கொண்ட நாடு கடத்தலின் நன்மையானது தங்கள் நாட்டையும் குடும்பத்தையும் முன்னைய சகவாசத்தையும் விட்டுவருவதால் ஏற்படும் துயரத்தை மிஞ்சிவிட்டது போல் தோன்றுகிறது என்றும் கருதுவதில்தான் தவறு இருக்கின்றது. எனவே, உண்மை யாதெனில் இந்த வர்த்தகர்களின் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் தங்களைக் குடியமர்த்திக் கொண்டனர் போல் தெரிகின்றது”

(7) “இலங்கைச் சோனகரது வரலாறானது நான் இப்பொழுது சுருக்கமாகக் குறிப்பிட்ட சோழியர்களது (லெப்பைகள், கரையோரச் சோனகர்கள்) வரலாற்றினின்றும் வேறுபட்டதா எனும் பிரச்சினையை நாம் இப்போது ஆராயக்கூடிய நிலையில் இருக்கி;ன்றோம். அரச ஆசிய கழகத்தின் நிலைய அறிக்கையில் ஜொன்ஸ்டன் என்பார் “இலங்கையில் குடியேறிய முதல் முகம்மதியர்கள், அவர்களின் வழித்தோன்றல்களிடையே வழக்கிலுள்ள மரபு வரலாற்றின் படி எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கலீபா அப்த் - அல் மெலெக் பின் மர்வானின் கொடுங்கோன்மை காரணமாக அரேபியாவிலிருந்து துரத்தப்பட்ட ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த அறபிகளின் ஒரு பிரிவினராவர்@ அவர்கள் யூப்பிரட்டீஸிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொங்கனிலும் இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதிகளிலும் இலங்கைத் தீவிலும் மலாக்காவிலும் குடியேறினர்@ அவர்களில் இலங்கைக்கு வந்த பிரிவினர் பெரியதான எட்டுக் குடியிருப்புக்களைத் தீவின் வடகிழக்கு, வடக்கு, மேற்குக் கரைகளில் ஆக்கிக் கொண்டனர்@ அவை அமைந்த இடங்களாவன: திருகோணமலை, யாழ்ப்பாணம், மாந்தோட்டையும் மன்னாரும், குதிரைமலை, புத்தளம், கொழும்பு, பாபரீன், காலி முனை” என்று கூறுகிறார். அந்தப் பழங்காலத்தில் பகளாக்கள் அணிவகுப்பொன்று, ஒன்றாக, கொந்தளிப்பான இந்து சமுத்திரத்தில் இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பிரயாணம் செய்து மேலே குறிப்பிடப்பட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலமைந்த பல்வேறு துறைமுகங்களை (அங்கெல்லாம் இந்தத் துரதிர்ஷ்டசாலிகளை வரவேற்க அவர்களின் துணையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தது போல்) வந்தடைந்தது என்று எண்ணிப் பார்ப்பதில் கஷ்டம் இருக்கின்றது. ஆனால், இன்னொரு பெரிய கஷ்டம் இருந்து கொண்டிருக்கின்றது. அதாவது நாடு கடத்தப்பட்;ட அறபிகள் தங்கள் மனைவியர்க ளுடனும் பெண்பிள்ளைகளுடனும் வந்தார்களா, இல்லையா என்பதாகும். அவ்வாறு அவர்கள் அன்னவர்களுடன் வந்து முற்றாகவே சிங்களப் பிரதேசங்களான களுத்துறை, காலி போன்ற இடங்களில் குடியேறியிருந்தால் ஏன் அவர்கள் அறபு மொழியையும் சிங்கள மொழியையும் விட்டுத் தமிழ் மொழியை மேற்கொண்டனர்? அவ்வாறின்றி அவர்கள் தங்கள் மனைவியருடன் வராமல் சிங்களப் பெண்ணை மணந்தார்களென்றால் எவ்வாறு அவர்களிடையே தமிழ்மொழி பிழைத்துக் கொண்டது? இந்த மொத்தமான அறபுக் குடியேற்றம் பற்றிய கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. அது அதிக வர்ணனை கொண்டதும் விளக்கமுடியாததுமாகும். ஆனால், இந்த மரபு வரலாற்றின் மிகப் பெரும் பொருத்தக்கேடு இன்னும் எஞ்சியுள்ளது. அப்துல் மானியின் மகனான ஹாஷிம், அப்துல் முத்தலியின் தந்தையாவார். அவர் அப்துள்ளாஹ்வின் தந்தையும் திருத்தூதர் முஹம்மது நபி அவர்களின் பாட்டனாருமாவார். ஹாஷிமின் நினைவை முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் கண்ணியப்படுத்துகிறார்கள் என்றால் திரு கீன்; என்பவர் தமது கீழைத்தேச வாழ்க்கை வரலாற்று அகராதியில் குறிப்பிடுவதுபோல, அவர்களிடையே முஹம்மது நபியவர்களின் குடும்பத்தினர் ஹாஷிமின்கள் என அழைக்கப்படுகின்றனர். அதன் பெறுபேறாக, இலங்கைச் சோனகர் எல்லோரும் ஸய்யிதுகளல்லர். அவ்வாறு அவர்கள் பிரகடனப்படுத்தவுமில்லை. அவர்கள் சாபை உட்பிரிவைச் சேர்ந்த ஸ{ன்னிகள் மாத்திரமே”

(8) “எவ்வாறாயினும் இலங்கையில் ஒரு மரபு வரலாறு உள்ளது. அதனைக் காசிச்சிட்டி குறிப்பிடுகிறார். (ஆண்டுகளைப் பொறுத்தவரையிலன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் அது பொருத்தமில்லாமலில்லை) அதாவது, இலங்கைச் சோனகரின் மூதாதையர் ஒன்பதாம் நூற்றாண்டில் காயல்பட்டணத்தில் தங்களது முதலாவது குடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர் என்பதும் அதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு, அதவாது ஹிஜ்ரி 402ம் ஆண்டான கி. பி. 1024இல்அந்த நகரிலிருந்து குடிபெயர்ந்து பாபரீனில் (பேருவலை) குடியேறினர் என்பதுமாகும். பேருவலை காயலின் ஒரு குடியேற்றம் எனத் தென்னிந்தியாவில் நடப்பிலுள்ள நம்பிக்கை பற்றி நான் ஏற்கெனவே கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்”.

(9) “மகாவம்சம், சோனகர் (யொன்னு, மரக்கலயோ) பற்றி எதுவிதத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால் 1505 இல் அவர்களில் ஒரு பெருந்தொகையானோர் காயல்பட்டணத்திலிருந்து வருகை தந்து சிலாபத்தில் பலாத்காரமாகக் குடியேற முற்பட்டார்களென்றும் தர்மபராக்கிரமபாகுவால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள் என்றும் ராஜாவலிய பதிந்துவைத்துள்ளது. அதைவிட முந்திய குறிப்பொன்;று ‘பரெவி சந்தேசய’ (புறா விடு தூது) வில் இருக்கின்றது. அது தொட்டகமுவே ராஹ{ல ஸ்தவிரவால் புனையப்பட்ட ஒரு காவியமாகும். தேவந்துறை (தெவுந்தர) தேவாலயத்தில் எழுந்தருளியிருக்கும் விஷ்ணு கடவுளுக்கு அனுப்பப்பட்ட தூதை அது விவரிக்கின்றது. அரசன் பாதுகாக்கப்படல் வேண்டும். ஆசிர்வாதிக்கப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளை ஏந்தி ஸ்ரீ பராக்கிரமபாகு (1410 – 61) அப்போது ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த ஜயவர்த்தன கோட்டே (கொழும்புக்கருகாமையிலிருக்கும் தற்போதைய கோட்டே) யிலிருந்து பல கிராமங்களைக் கடந்து தேவந்துறைக்குப் பறந்து செல்ல வேண்டுமென்று அந்தப் புறா ஏவப்படுகின்றது. செல்லும் வழியிலுள்ள ஒரு கிராமம் பேருவலையாகும். அது கொடிய பண்பாடற்ற ‘பம்புரோ’க்களின் (அதாவது, மிலேச்சர்கள் - காட்டுமிராண்டிகள்) உறைவிடம் என வர்ணிக்கப்படுகின்றது. இருகல் குலதிலக்க சாமி என்பவரால் அதே ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட ‘கோக்கில சந்தேசய’ (குயில் விடு தூது) என்னும் இன்னொரு காவிய நூலானது பேருவலையை அதே பாஷையில் சுட்டிக் காட்டுகின்றது. சிங்கள இலக்கியத்திலுள்ள இதற்கு முந்திய குறிப்புக்களைப் பெற்றுக்கொள்ள எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், அவ்வித நூல் எதுவும் இருக்கும் என்பது சந்தேகமே. எவ்வாறாயினும், அந்நியர் மூலமாகக் கிடைத்த சில தகவல்கள் எம்மிடம் இருக்கின்றன. 1350 இல் ஜோன் டி மரிக்னொல்லியின் கப்பல் இலங்கைத் துறையில் ‘பெரிவிலி’ஸில் சேதமடைந்தது. ‘பெரிவிலிஸ்’ என்பது பேருவலையென ஊகிக்கப்படுகின்றது. மரிக்னொல்லி கூறுகிறார். ‘இங்கே பேடியான கோயா ஜான் என்னும் கொடியோன் ஒருவன் சட்டப்படியான அரசனை எதிர்க்கும் திறம் பெற்றிருந்தான். அவன் ஒரு வெறுக்கப்பட்ட ஸரஸனாவான்’ அதாவது முகம்மதியனாவான். அவனது ஐசுவரியத்தின் காரணமாக நாட்டின் இந்தப் பகுதியைத் தன்னுடையதாக்கிக் கொண்டிருந்தான் என்றும் கூறப்படுகின்றது. டி. மரிக்னொல்லி என்பவர் பாப்பரசருக்காகத் தமது நாட்டுக்கு எடுத்துக் சென்ற பெறுமதி வாய்ந்த நன்கொடைகளை இவன் கொள்ளையடித்தான். இப்னு பதூதா இத்தீவுக்கு அதற்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் (1344) வந்தார். காலியிலிருந்து கொழும்புக்கான அவருடைய வழிப்பாதையில் பேருவலை நேரடியாக இருந்தும் அவர் பேருவலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. காலியைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் அது ஒரு சிறிய பட்டணம் எனக் கூறுகிறார். கொழும்பைப் பற்றிக் குறிப்பிடுகையில் அது ஐந்நூறு அபிசீனியர்களைத் தன் கையின் கீழ் வைத்திருந்த கடற்கொள்ளைக்காரன் ஒருவனின் இருப்பிடம் எனக் கூறுகிறார். பத்தள (புத்தள)வைப் பற்றிக் குறிப்பிடுகையில் அது தமிழ் மன்னனான ஆரியச் சக்கரவர்த்தியின் தலைநகரம் எனக் குறிப்பிடுகிறார் சமயப் பற்றுள்ள யாத்திரிகரான அவர் கூறுவதைபோல, அந்த அரசன் “முறை திறம்பியவர்களில் ஒருவனும் நீதியற்றவர்களில் ஒருவனுமாவான்” எனினும் அவனுடைய விருந்தோம்பும் தன்மையை அவர் அதிகம் மெச்சுகிறார்”

இலங்கைச் சோனகரின் ஆரம்பம் தமிழர்களே என்பதை நிரூபிக்க திரு. இராமநாதன் சரித்திர ஆராதரத்தோடு சமர்ப்பித்த சான்றுகளை மேலே குறிப்பிட்ட பந்திகள் உள்ளடக்கி யிருக்கின்றன. அவற்றை அவர் பின்வருமாறு முடிக்கிறார்:

“இந்தப் பந்திகளை வைத்துப் பார்க்கும்போதும், பேருவலையில் குடியேறியிருக்கக் காணப்பட்ட குடியேற்றவாசிகள் “காட்டுமிராண்டிகள்” என்பதைத் தவிர அவர்கள் பற்றி வேறு எதையும் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிங்களவர் அறிந்திருக்கவில்லை என்னும் சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போதும் பேருவலையை முகம்மதியர்கள் 1344ல் நன்கு அறிந்திருக்கவில்லை என்ற நம்பிக்கையான முடிவுக்கு நாம் வரலாம். அத்துடன் ஆரம்ப முகம்மதியக் குடியேற்ற வாசிகளை வரவேற்றதாகப் பொதுவாக நம்பப்படும் காலி, புத்தளம் ஆகிய சிற்றூர்களும் அந்தக் காலப்பகுதியில் அவ்வித குடியேற்றங்களைக் கொண்டிருக்கவில்லையென்ற நம்பிக்கையான முடிவுக்கும் வரலாம்...... அத்துடன், தங்கள் குடியேற்றங்களில் எல்லாம் முதலாவது குடியேற்றம் என இலங்கை முகம்மதியர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் பேருவலைக் குடியேற்றமானது பதினான்காம் நூற்றாண்டுக்கு முன், அதாவது கி. பி. 1350 இற்கு முன் நடைபெறவில்லை என்ற நம்பிக்கையான முடிவுக்கும் வரலாம். இந்தக் குடியேற்றமானது காயல்பட்டணத்தின் ஒரு கிளையேயென்றும் அங்கிருந்து குடிபெயர்ந்தவர்கள் முரட்டுத்தனமான, எதற்கும் ஆயத்தமான, துணிவுள்ள, மதம் மாறிய தமிழர்களை அதிகமாக உள்ளடக்கியிருந்தனர் என்றும் அவர்கள் பழிபாவத்துக்கஞ்சாத துணிச்சல் பொருந்திய வீரர்களிடையே பொதுவாகக் காணப்படும் முறைகளைக் கொண்டு தங்களைச் சௌகரியமானவர்களாக ஆக்கிக் கொள்ளத் தீர்மானம் பூண்டவர்களாக இருந்தனர் என்றுமான நம்பிக்கையான முடிவுக்கும் வரலாம்”


மேற்படி காவியத்தில் ‘பபுரு’ எனும் சொல்லே கையாளப்பட்டுள்ளது. ‘பபுரு’ என்பதற்கு ‘பம்புரு’ எனும் சொல்லையும் சம அர்த்தமுடையதாக ‘கிரா சந்தேசய’ (கிளி விடு தூது) எனும் காவிய நூல் உரையாசிரியர் கொள்கிறார். அது ‘பெர்பர’ தேசத்து மக்களைக் குறிப்பதாகவே அக்காவியங்கள் கூறுகின்றன. மிலேச்சர்கள் அல்லது காட்டுமிராண்டிகள் என்பதைக் குறிப்பதற்கல்ல. பண்டிதர் ஸோரத தேரரின் சிங்கள அகராதிம் ‘பபுரு’ ‘பம்புரு’ ஆகிய இரு சொற்களும் பெர்பர தேசத்து மக்களைக் குறிப்பதாகக் கூறுகின்றது. ரெவரண்ட் சாள்ஸ் காட்டரின் சிங்கள – ஆங்கில அகராதி ‘பம்புரு’ என்றால் ‘சுருண்ட குட்டையான தலைமயிரையுடைய மக்கள்’ எனக் குறிப்பிடுகின்றது. ‘எகிப்தின் மேற்கு, தெற்குப் பகுதிகளின் பூர்வீகக் குடிகளைக் குறிக்கும் அறபுப் பெயர் ‘பேபர்’ என்றும் ஆபிரிக்காவின் வடகரைப் பாலைவனப் பிரதேச மக்களைக் குறிக்க அது இப்போது கையாளப்படுகின்றது’ என்றும் சோட்டர் ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி குறிப்பிடுகின்றது. பெர்பர தேசத்துமக்கள் அக்காலத்தில் பேருவலையில் குடியேறியிருந்தார்கள் என்பதை இக்கவிதையிலிருந்து நாம் அனுமானிக்கலாம். அவர்களது நடத்தை பற்றிக் கூறும் மேற்படி காவிய நூலாசிரியர், “போதைப பொருட்களை அருந்திக் கையில் தடியெடுத்து வீதிகளில் திரிந்து அவமே காலங்கழிக்கும் மூர்க்கமான பபுருக் கூட்டம்” எனக் கூறுகிறார். திரு. இராமநாதன் குறிப்பிடும் “கோக்கில சந்தேசய” (குயில் விடு தூது) வில் அதே பாஷையில் பேருவலையைக் குறிப்பிடும் கவிதை எதையும் நான் காணமுடியவில்லை. அதற்கு மாறாக அக்காவியம் பேருவலையைப் பற்றிக் குறிப்பிடும் போது, “விதம் விதமான அழகு நிரம்பிய வியாபார ஸ்தலங்களைக் கொண்ட பேருவலை” எனக் கூறுகின்றது. ஆனால், அதே காலப் பகுதியைச் சேர்ந்த ‘கிரா சந்தேசய’ எனும் காவிய நூல் ‘பரெவிசந்தேசய’ வில் கூறப்பட்ட கருத்தை ஒத்த வார்த்தைகளால் பேருவலையில் வாழ்ந்த ‘பபுரு’ மக்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அதன் நூலாசிரியர் தமது அக்காவியத்தில் ‘பரெவி சந்தேச’ வின் நூலாசிரியரை வர்ணிப்பதே பிரதான நோக்கமாகக் கொள்கிறார். எனவே அவரும் ‘பரெவி சந்தேய’வின் நூலாசிரியரைப் பின்பற்றி, பேருவலையில் வாழ்ந்த ‘பபுரு’ மக்கள் பற்றி அதேமாதிரியான கருத்தைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், சோனகரைக் குறிப்பிட ‘பபுரு’ எனும் சொல் கையாளப்படவில்லை என்பதை அதே காவியத்தில் அதற்கு முன் வரும் கவிதையை நோக்குவோர்க்கு நன்கு புலனாகும். பேருவலையில் வாழ்ந்த சோனக மகளிரை அக்கவிதை அதிகம் வர்ணிக்கின்றது. இங்கு கையாளப்படும் சொல் ‘யொன்’ என்பதாகும். ‘பபுரு’ அன்று. ‘தங்கக் காதணிகளை அணிந்த சோனக ஸ்திரீகள் வாழும், தங்கம் இரத்தினங்களால் நிரம்பி வழியும் வியாபார ஸ்தலங்களையும் கொடிகள் பறக்கும் இல்லங்களையும் கொண்ட பேருவலையில் மன மகிழ்வுடன் பிரவேசிப்பாயாக’ என்ற அக்கவிதை கூறுகிறது. எனவே முந்திய கவிதையில் சோனகப் பெண்கள் பற்றியும் அதற்கடுத்த கவிதையில் ‘பபுரு’ மக்கள் பெர்பர தேசத்து மக்கள் பற்றியும் இக்காவியம் குறிப்பிடுவதைக் கொண்டு அங்கு சோனகரும் வாழ்ந்தனர். ‘பபுரு’ மக்களும் வாழ்ந்தனர் எனக் கொள்ளல் வேண்டும். இன்னும் கோக்கில சந்தேசய சோனக மகளிரைப் பற்றிக் குறிப்பிடும் போது “பொன்னிறமான இளமை ததும்பும் மேனியுடைய அழகிய சோனக மகளிர், சரஸ்வதி (இந்துக்களின் கலைக்கடவுள்) போன்று கிளிகளைக் கையில் எடுத்து இன்மொழி கற்றுக் கொடுக்கின்றனர்” எனக் கூறுகின்றது. இங்கும் ‘யொன்’ எனும் சொல்லே கையாளப்பட்டுள்ளது. அதற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யாக்கப்பட்ட ‘திஸர சந்தேசய’ (அன்னம் விடு தூது) எனும் காவிய நூல் பேருவலையைப் பற்றிக் குறிப்பிடும்போது “தேவ மகளிரை ஒத்த, அழகான, சிறந்த பெண்களையும் வணிகர்களையும் கொண்ட எல்லா சௌபாக்கியங்களும் நிரம்பிய பேருவலை” எனக்கூறுகின்றது. இவையெல்லாம் அக்காலப் பகுதியில் இத்தீவில் வாழ்ந்த சோனகரின் சிறந்த நிலையையும் குறிப்பாக பேருவலையானது சிறந்த வணிகர்களைக் கொண்ட செல்வம் கொழிக்கும் கிராமமாக விளங்கியது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. எனவே பேருவலையில் வாழ்ந்த சோனகரை மேற்படி காவிய நூலாசிரியர்கள் ‘மிலேச்சர்கள், காட்டுமிராண்டிகள்’ என வர்ணித்தனர் என்பது கற்பனையேயன்றி வேறல்ல. அங்கு வாழ்ந்த சோனகர் வேறு, ‘பபுரு’ மக்கள் வேறு என்பதை இக்காவிய நூல்கள் அவர்களை வௌ;வேறாகக் குறிப்பிடுவது கொண்டே அனுமானிக்கலாம். பிற்காலத்தில் இந்த ‘பபுரு’ அல்லது ‘பேபர்’ மக்கள் இங்கு வாழ்ந்த சோனகருடன் இரண்டறக் கலந்துவிட்டனர் என்றே கொள்ளல் வேண்டும். (மொழிபெயர்ப்பாளன்)


நாம் இப்போது திரு. இராமநாதன் மேலே குறிப்பிட்ட முடிபுகள் சரியானவையா எனப் பார்ப்போம். மேற்போந்த பந்திகளை நான் ஒவ்வொன்றாக எடுத்தாள்வேன்:

(1) அவரால் “கரையோரச் சோனகர்” எனக் குறிப்பிடப்பட்ட மக்கள் இலங்கையிலே அவர்கள் மத்தியிலும், அத்துடன் இலங்கைச் சோனகர்களினதும் தமிழர்களினதும் மத்தியிலும் “சம்மன்காரர்” என்றே எப்பொழுதும் அழைக்கப்படுகின்றனர். அவர்களது சொந்த நாட்டிலேயே அவர்கள் “சோனகர்” எனும் பெயரால் அழைக்கப்படாமலிருக்கும் பொழுது அந்த வார்த்தை அவர்களுக்கு இலங்கையில் எப்படிப் பிரயோகிக்கப்பட்டது என்பது எனக்குப் புரியவில்லை. அங்கே அவர்கள் “லெப்பைகள்” என அழைக்கப்படுகிறார்கள் என்று திரு. இராமநாதனே கூறுகிறார். தென்னிந்தியாவில் அவர்கள் “லெப்பைகள்” இலங்கையில் அவர்கள் “சம்மன்காரர்கள்” அவர்கள் இங்கு சோனகர் என அழைக்கப்படுவதில்லை. ஆனால், அவர்களும் தமிழர்களும் இலங்கைச் சோனகரைச் “சோனகர்” என்றே அழைக்கின்றனர். சிங்களவர் அவர்களை “யொன்னு” என்றும் அழைப்பதில்லை. ஆனால், இலங்கைச் சோனகரைச் சிங்களவர் அந்தப் பெயர் கொண்டு அழைக்கின்றனர். “கரையோரச் சோனகரை” அவர்கள் “ஹம்பன்காரயா” என்றே அழைக்கின்றனர். இலங்கைச் சோனகரினதும் கரையோரச் சோனகரினதும் பெயர்கள் எவ்வாறு வித்தியாசப்படுகின்றனவோ அவ்வாறே அவர்களது வரலாறும் வித்தியாசப்படுகின்றது. நான் இதனைப் பின்னர் விவரிப்பேன். இது சம்பந்தமாக நான் ஒன்று குறிப்பிட வேண்டும். எதிர்காலத்தில் இலங்கைக் குடிசன மதிப்பு அறிக்கைகளில் இலங்கைச் சோனகரினதும் “கரையோரச் சோனகரினதும்” எண்ணிக்கைகளைக் காட்டும் போது முறையே “சோனகர்” எனும் பெயரின் கீழும் “சம்மன்காரர்” அல்லது “லெப்பைகள்” எனும் பெயரின் கீழும் காட்டினால் நன்றாக இருக்கும்.

(2) 1881 இல் இலங்கையில் காணப்பட்ட 1,85,000 சோனகர்களை இலங்கைச் சோனகராகவும் “கரையோரச் சோனக”ராகவும் சமமாகப் பிரிக்கலாம் என திரு. இராமநாதன் கூறுகிறார். அவரது கணக்கீடு சாதாரணமாகச் சரியானதே என்று கருதுகிறேன். அப்படியாயின் அந்த ஆண்டில் 92,500 இலங்கைச் சோனகரும் அதே தொகையான “கரையோரச் சோனக”ரும் இருந்திருக்கின்றனர். பின்னவர்கள், அவர்கள் விட்டுவந்த பக்கத்து மாநிலத்தினது தென்கரையுடன் தொடர்ந்தும் சமூகத் தொடர்பு வைத்திருந்தனர். அத்துடன் அங்கிருந்து வந்த புதியவர்களின் காரணமாக அவர்களின் எண்ணிக்கை சென்று போன இருபத்தைந்து வருடங்களில் பெருமளவு கூடியிருக்க வேண்டும். இலங்கைச் சோனகரோ இலங்கையிலேயே வாழ்கின்றனர். அது அவர்களது நிரந்தர உறைவிடம். புள்ளிவிபரங்கள் இல்லாததால் அவர்களது சரியான எண்ணிக்கையை அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. எனினும் 1901 ஆம் ஆண்டுக்கான குடிசன மதிப்பு அறிக்கையானது இலங்கையிலுள்ள சோனகரது எண்ணிக்கையை 2,28,034 எனக் குறிப்பிடுகின்றது. திரு. இராமநாதனை அனுசரித்து மேற்படி தொகையை இலங்கைச் சோனகருக்கும் “கரையோரச் சோனக” ருக்குமிடையில் பிரித்தால் முன்னையவரின் எண்ணிக்கை மாத்திரம் பூரண இலக்கத்தில் 1,14,000 ஆகின்றது. அதாவது, இருபது வருடங்களில் 21,500 பேர் கூடியுள்ளனர். ஆனால் மேலே குறிப்பிட்ட 2,28,034 பேரில் பாதிக்குமேல் “கரையோரச் சோனகர்” என நினைக்கின்றேன். ஏனெனில், சமீப காலத்திலிருந்து அவர்கள் சாதாரண அளவில் பெருந்தொகையினராக இங்கு வந்துள்ளனர். இதனை நாம் தென்னிந்தியாவின் பெருந்தொகையான தமிழ்பேசும் முகம்மதியர்களின் சனத்தொகையுடன் தொடர்பு படுத்தி மதப்பிடவேண்டி இருக்கின்றது. அவர்களது எண்ணிக்கையைப் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் 5,15,000 எனத் திரு. இராமநாதன் தருகின்றார். அது தொடுத்து அத்தொகை பெருமளவில் கூடியிருக்க வேண்டும். தென்னிந்திய முகம்மதியர்களில் ஒரளவினர் அறபிகளின் வர்த்தகர்களினதும் சமயத் தூதுவர்களினதும் வழித்தோன்றல்களாவர். ஒரளவினர் இஸ்லாத்துக்கு மதம் மாறிய தமிழர்களின் சந்ததியினராவர். தென்னிந்தியாவில் தமிழர்களை அறபு சமயத் தூதுவர்கள் மதம் மாறச் செய்து கொண்டிருந்தனர் என்று கூறலாமெனினும் இலங்கையைப் பொறுத்தவரையில் அஃது அவ்வாறில்லை. இலங்கையானது அறபு சமயத் தூதுவர்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அத்துடன் இங்கு எந்தக் காலத்திலாயினும் தமிழர்களையும் சிங்களவர்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றும் எற்பாடொன்று இருந்ததாக அறியப்படவுமில்லை. திரு. இராமநாதனே எடுத்துக்காட்டியது போன்று, ஏறக்குறைய நூறு ஐரோப்பிய சமயத் தூதுவர்கள் இலங்கையில் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காக உழைத்து, மூன்று நூற்றாண்டுகளில் 2,50,000 பேர் வரை மதம் மாறச் செய்துள்ளதை நாம் கவனிக்கும்போது இத்தீவில் முகம்மதியர்கள் வாழ்ந்து வந்திருக்கும் கடந்த பன்னிரண்டு நூற்றாண்டுகளில் - அதனை நான் பின்னர் விவரிப்பேன் - அவ்வித ஏற்பாடொன்று இருந்து திட்டமிடப்பட்ட மதமாற்றம் இங்கு நடைபெற்றிருந்தால் எத்துணையினரை மதம் மாறச் செய்திருக்கலாம்? ஆனால், இங்கு இருப்பவர்கள் ஏறக்குறைய 1,14,000 இலங்கைச் சோனகர்களே. எனவே, இந்தச் சூழ்நிலையில் நாம் கொள்ளக்கூடிய ஒரே முடிவு என்ன வென்றால், அவர்கள் பிரதானமாக, பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இத்தீவில் குடியேறிய அறபிகளின் வழித்தோன்றல்களேயாவர் என்பதாகும். அத்துடன் அவர்களின் இப்போதைய வழித்தோன்றல்களது எண்ணிக்கையை நோக்கும்போது அவர்களது எண்ணிக்கை பெரிதாக இருந்திருக்கத்தான் வேண்டுமென்பதில்லை. அத்துடன் இருபது வருடங்களில் அந்த எண்ணிக்கை ஏறக்குறைய 21,000 பேரால்தான் அதிகரித்தது என்பதைக் கருத்திற் கொள்ளும்பொழுது ஆரம்ப குடியேறிகளது எண்ணிக்கை நூற்றுக்கு மேற்பட்டிருக்க முடியாது என்ற நம்பிக்கையான முடிவுக்கு நாம் வரலாம். இந்தக் கருத்துக்கு நான் மீண்டும்; வருவேன். இலங்கைச் சோனகரின் மூதாதையர் காயலில் இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்களென்றும் அவர்கள் பேருவலைக்கு வந்தார்கள் என்றும் திரு. இராமநாதன் உறுதிகொள்வது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதன்று. ஏனெனில், காயல்பட்டணம் உருவாவதற்கு முன்னர், அல்லது இன்னும் சரியாகச் சொல்லப் போனால் அது குடியேற்றங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிலைக்கு வர முன்னர், இலங்கையில் சோனகர் இருந்திருக்கிறார்கள். அதனை நான் பின்னர் எடுத்துக் காட்டுவேன். தென்னிந்தியாவின் “லெப்பைகள்” தங்களைச் “சோனகர்” என்று அழைப்பதில்லை. தமிழர்களும் அவர்களை அவ்வாறு அழைப்பதில்லை. அறபிகள் காயலுக்குச் சென்று தமிழர்களுடன் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக் கொண்டிருந்தபோது தமிழர்கள் அவர்களையும் அவர்களுடைய வழித்தோன்றல்களையும் “சோனகர்” என அழைத்தார்கள் என்பது உண்மையாகும். அது அரேபியாவின் மக்களைக் குறிக்க தமிழ் நிகண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்லாகும். ஆனால், தென்னிந்திய முகம்மதியர் தற்போது தங்களை ‘லெப்பைமார்” அல்லது “முகம்மதியர்” என்றே அழைத்துக் கொள்கின்றனர். தமிழர்களும் அவர்களை அவ்வாறே அழைக்கின்றனர்.

(3) இஸ்லாத்தின் ஆதிக்கம் தெற்கின் மூலம் முதலாவதாக இந்தியாவில் நுழைந்தது ஒன்பதாம் நூற்றாண்டிலாகும். பி;ன்னர் வடக்கின்மூலம் பதினோராம் நூற்றாண்டில் நுழைந்தது. அங்கு இஸ்லாத்தின் கொடியானது தெற்கின் மூலம் வர்த்தகர்களாலும் வடக்கின் மூலம் போர்வீரர்களாலும் எடுத்துச் செல்லப்பட்டது. அரேபியாவிற் பிறந்த தீர்க்கதரிசி (அவர்கள் மீது அள்ளாஹ{வின் ஆசீர்வாதமும் சாந்தியும் உண்டாவதாக) யின் மதம் அவசியமான சூழ்நிலைகளுக்கேற்ப சமாதான முறைகளாலும் உயர் வீரப் பண்பு முறைகளாலும் அங்கு வேரூன்றச் செய்யப்பட்டதன்றி வெறும் வன்முறைகளால் அல்ல என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது. இந்தியத் திணையேட்டில் வெளியிடப்பட்டதும் மாப்பிள்ளைகளின் மத்தியில் வழக்கில் இருப்பதுமான மரபு வரலாறானது இலங்கைச் சோனகர் மத்தியில் வழக்கிலிருக்கும், சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனால் எடுத்துக் கூறப்பட்ட மரவு வரலாற்றுக்குச் சில விளக்கங்களைத் தருகின்றது. தங்கள் நாட்டில் ஆரம்பத்தில் குடியேறிய முகம்மதியர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் மலபார்க் கரையோரத்தில் சேதமடைந்த கப்பலிலிருந்த அறபிகள் என மாப்பிள்ளைகள் நம்புகின்றனர். அதே போன்று. இலங்கைச் சோனகரும் தங்கள் மூதாதையருடன் அரேபியாவிலிருந்து பயணம் ஆரம்பித்த சில அறபிகள் மலபார்க் கரையில் குடியேறினார்கள் என்று இலங்கைச் சோனகர்கள் மரபு வழியாக தொடர்ந்து நம்பி வருவது இங்கு மிக முக்கியமாகும். உண்மையிலே இரண்டுமரபு வரலாறுகளும் ஆண்டைத் தவிர ஒன்றையொன்று உறுதிப்படுத்துகின்றன. இலங்கை மரபு வரலாறு அந்தக் காலப் பகுதியை எட்டாம் நூற்றாண்டெனக் குறிப்பிடுகின்றது. இம்மரபு வரலாறுகளிலுள்ள ஒருமைப்பாட்டைத் திரு. இராமநாதன் விளக்க முனைகையில், இலங்கை மரபு வரலாறானது “மாப்பிள்ளைகள் மத்தியில் வழக்கிலிருக்கும் மரபு வரலாற்றைக் கண்மூடித்தனமாக மிகைப்படுத்திக் கூறிய ஒன்றாக இருக்கலாம்’ எனக் கூறுகின்றார். அவ்வாறு கூறுவது மிகவும் எளிது@ ஆனால் அதனை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவது அவ்வளவு எளிதன்று. ‘இலங்கைச் சோனகரது மரபு வரலாற்றைச் சேர் எமெர்சன் டெனண்ட் நம்ப மறுக்கிறார்’ என அவர் மேலும் கூறுகிறார். சேர் எமெர்சன் டெனண்ட் எது பற்றி எண்ணினார் என்றால், மரபு வரலாற்றிலே குறிப்பிடப்பட்ட காலத்துக்கு எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் சோனகர் இருந்திருக்கின்றனர் என்பதாகும். அத்துடன் நான் முன்னர் எடுத்துக்காட்டியது போல, இலங்கைச் சோனகர் அறபு மூதாதையரின் வழிவந்தவர்கள் என்பதை அவர் ஐயந்திரிபுற உறுதிப்படுத்தியுள்ளார்.

(4) காயலில் வழக்கிலுள்ள ஒரு மரபு வரலாற்றின்படி ஒன்பதாம் நூற்றாண்டில் எகிப்தின் கெய்ரோ நகரிலிருந்து சில அறபு சமயத் தூதுவர்கள் வந்து தென்னிந்தியாவில் காயல்பட்டணத்தை நிறுவினர் என்றும் அது முன்னர் சோனகர் பட்டணம் என்று அழைக்கப்பட்டதென்றும் தமிழ் முகம்மதியர்களின் நடுநாயகமாக அது விளங்குகின்றது என்றும் திரு. இராமநாதன் கூறுகிறார். அத்துடன் அங்கும் இலங்கையிலும் வழக்கிலுள்ள ஒரு மரபு வரலாற்றின்படி அந்த இடத்திலிருந்து ஒரு குடியேற்றம் பேருவலையில் குடியேறியது என்றும் அவர் கூறுகிறார். உடனடியாக இங்கு தான் ஒன்று கூறவேண்டி இருக்கின்றது. அதாவது இலங்கைச் சோனகரின் மூதாதையர் காயலிலிருந்து வந்து பேருவலையிற் குடியேறினார்கள் என்று கூறும் மரபு வரலாறு இலங்கையில் வழக்கிலில்லை. காயலிலும் அவ்வித ஒரு மரபு வரலாறு இருப்பதாக நான் ஒருபோதும் கேள்விப்படவில்லை. திரு. இராமநாதனுக்கு இந்தத் தகவலைக் கூறியவர் அவர் அனேகமாக ஒரு “கரையோரச் சோனக”ராக இருக்கலாம். அவரை வழிதவறச் செய்திருக்கிறார்போல் தெரிகிறது. காயலிலிருந்து ஒரு குடியேற்றம் பேருவலையில் குடியேறியது என நான் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அது எதனை நிரூபிக்கின்றது? இலங்கைச் சோனகரின் மூதாதையர் தமிழர் என்பதை நிரூபிக்கின்றதா? அந்தக் குடியேற்றத்தின் காலம் பதினான்காம் நூற்றாண்டென திரு. இராமநாதன் கூறுகிறார். ஆனால் இலங்கையிலே சோனகர் அதற்கு முன்பும் இருந்தனர் என்பதை நான் இப்போது நிரூபிக்கின்றேன். அறபு வர்த்தகர்களும் சமயத் தூதுவர்களும் காயலிற் குடியேறினார்கள் என்று அவர் ஏற்றுக் கொள்கிறார். அவ்வாறாயின் அந்த நகரத்தில் அவர்களதும் அவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களதும் வழித்தோன்றல்கள் இருக்கின்றனர். பதினான்காம் நூற்றாண்டில் காயலிலிருந்து வந்து பேருவலையிற் குடியேறிய முகம்மதியர்கள் முற்றாக, அல்லது பிரதானமாக நிச்சயம் தமிழர்களே என்று திரு. இராமநாதன் துணிந்து பறைசாற்றினாலும் அவர்கள் பரம்பரையில் தமிழர்களேயன்றி அறபிகள் அல்லர் என்பதை நிரூபிக்க எதுவித சான்றும் இல்லையென நான் வலியுறுத்திக் கூறுகிறேன். “ஆரம்பத்தில் காயலில் குடியேறியதாகச் சொல்லப்படும் கெய்ரோவின் மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகமானோராக இருந்திருக்க முடியாது” என்று அவர் கூறுகிறார். ஏன்? அவர்களது சரியான, அல்லது கிட்டத்தட்டவுள்ள எண்ணிக்கை என்ன? அதனை அறிந்து கொள்ளாமல் அதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அல்லது அதற்கும் மேலாகக் காலம் கடந்த பின்னர் உள்ள அவர்களிள் வழித்தோன்றல்களது எண்ணிக்கை பற்றி எவ்வாறு அனுமானிக்க முடியும்? அந்த நகருக்கு வெளிநாட்டவரின் வருகைக்குப் பிறகான ஒரு நூற்றாண்டு காலத்தில் அந்த வெளிநாட்டாரின் எண்ணிக்கையானது மதம் மாறியவர்களின் எண்ணிக்கையில் ஐந்து வீதமாகவாவது இருந்திருக்கும் என்று நினைப்பதுகூட சிலவேளை ஒரு மிகைப்பட்ட நினைப்பாக இருக்கலாம்” என்று அவர் மேலும் கூறுகிறார். இது ஒன்றுக்குமே உதவாத ஒர் ஊகமே அன்றி வேறல்ல. அந்த வெளிநாட்டவர்கள் அங்கு தனியாக இருக்கவில்லை. அங்குள்ள சுதேசிகளுடன் அவர்கள் கலப்புமணம் செய்து கொண்டனர். அவர்களால் மதம் மாற்றப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரித்தபோது அவர்களுடைய சந்ததியினரும் பெருகினர். பேருவலையில் குடியேறிய “கரையோரச் சோனகர்” அல்லது சம்மன்காரர் – அவர்கள் பரம்பரையில் அறபிகளாயினும் தமிழர்களாயினும் - பதினான்காம் நூற்றாண்டுக்குமுந்திய காலப் பகுதியிலிருந்தே இத்தீவிலிருந்த இலங்கைச் சோனகரின் ஆதிபிதாக்களாக இருந்திருக்க முடியாது. ஆனால், அவர்கள் இப்போது இலங்கையில் இருக்கும் அல்லது இல்லாமலிருக்கும் வேறு சில சம்மன்காரர்களின் ஆதிபிதாக்களாக இருந்திருக்கலாம். கெய்ரோ அல்லது இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அல்மிஸ்ருல் - காஹிரா (வெற்றி நகரம்) எகிப்தில் பாத்திமீய கலீபாவான அல் முயிஸ்லித்தீனில்லாஹ்வினது ஆட்சிக் காலத்தில் அவருடைய படைத்தளபதி ஜௌஹர் என்பவரால் கி. பி. 965 ஆம் ஆண்டான ஹிஜ்ரி 359 இல் நிறுவப்பட்டது. எனவே பத்தாம் நூற்றாண்டுக்கு மிகவும் பிந்திய ஒரு காலம் வரை காயல் நகரை உருவாக்க அந்த இடத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு ஒரு குடியேற்றம் குடிபெயர்ந்து வந்திருக்க முடியாது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் காயல், வளம் கொழிக்கும் ஒரு நிலையில் இருந்ததை மார்க்கோபோலே கண்டார். அவருடைய சொற்களை திரு. இராமநாதன் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த நகரத்தின் முக்கியத்துவம் எத்துணையெனில் அது “அருகிலிருந்த பிரதேசங்களிலிலிருந்து ஒரு பெருந்திரளான மக்கள் கூட்டத்தை”த் தன்பால் ஈர்த்தது. அத்துடன் அந்நகரில் பெரும் வர்த்தகம் நடைபெற்றது. அந்நகரம் அவ்வாறு ஒரு வளமான நிலையில் இருந்தபோது அங்கிருந்;து ஒரு குடியேற்றம் வெளிநாடுகளில் குடியேறச் சென்றிருக்க முடியாது. எனவே, காயலிலிருந்து பேருவலைக்கு வந்த, திரு. இராமநாதன் குறிப்பிட்ட குடியேற்றமானது முந்திய காயலிலிருந்து வந்திருக்க முடியாது. ஆனால் கலாநிதி கொடவெல் என்பவரால் குறிப்பிடப்பட்ட அதே பெயரைக் கொண்ட இரண்டாவது நகரத்திலிருந்துதான் வந்திருக்க முடியும். ஆனால் அதுவும் இன்னொரு நூற்றாண்டு கழியும்வரை ஏற்பட்டிருக்க முடியாது. எனவே, இந்த பேருவலைக் குடியேற்றம் “ஏற்பட்டது பதினான்காம் நூற்றாண்டைவிட முற்பட்ட காலத்திலல்ல” என்று கூறும் திரு. இராமநாதனது கணக்கீடு சரியானதே. இலங்கைச் சோனகர் தமிழ் முகம்மதியர்களே என்னும் திரு. இராமநாதனது தத்துவமானது, அவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் காயலிலிருந்து பேருவலைக்கு வந்த “கரையோரச் சோனக”ரின் வழிவந்தவர்கள் என்ற ஊகத்திலேயே நிலைநாட்டப்பட்டுள்ளது. அவர்களைப் பரம்பரையில் தமிழர் என அவர் காரணமின்றி அழைக்கிறார். பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்னரேயே சோனகர் தங்களை இலங்கையில் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள் என்ற சரித்திர உண்மையின் காரணமாக அவரது இந்த ஊகம் தவிடுபொடியாகும் போது அவரால் கட்டியெழுப்பப்பட்ட முழுக் கட்டுமானமும் உடைந்து சிதறிவிடுகின்றது. இப்போது நாம் டெனண்டின் “இலங்கை” எனும் நூலிலிருந்தும் அரச ஆசிய கழகத்தின் நிலைய அறிக்கையிலிருந்தும் எடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகளைக் கவனிப்போம்.

“பிலினியில் ஒரு தெளிவற்ற வாக்கியம் உள்ளது. எமது கிறிஸ்தவ சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டுக்கு முன்னர் அறபிகள் இலங்கையில் குடியேறியிருந்தனர் என்பதை அது அனுமானிப்பது போல் தோன்றுகிறது.”

“இந்தியாவைக் கிரேக்கர் அறிய முன்னரே அதனை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தவர்களும் ஹிப்பலஸ் பருவக்காற்றை நம்ப முனையுமுன்னரே அனேகமாக அதனைப் பயன் படுத்திக் கொண்டிருந்தவர்களுமான அறபிகள், நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் கம்பேயிலும் சூரத்திலும் மங்கðர், கள்ளிக்கோட்டை, கோலம் உட்பட ஏனைய மலபார் துறைமுகங்களிலும் தங்களை வணிகர்களாக ஸ்திரப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கை அரசானது எல்லா மதப் பிரிவுகள் மீதுமான சகிப்புத் தன்மைக்கும் அகதிகளை ஆதரித்து வரவேற்கும் பண்புக்கும் தனிச்சிறப்புப் பெற்றிருந்தது.”

“அது பக்தாத் கலீபாவின் அரண்மனையில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெல்தோரியால் கூறப்பட்ட ஒரு புதுமையான சம்பவமாகும். அதாவது, இலங்கையிற் காலஞ்சென்ற வர்த்தகர்களின் குடும்பங்களை இரண்டாவது தலுபியதிஸ்ஸ மன்னன் (கி. பி. 700) தைகிரிஸ் பள்ளத்தாக்கிலுள்ள அவர்களுடைய இல்லங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்த போது அந்த முகம்மதிய வர்த்தகர்களின் பெண்மக்கள் சிலர் மீது இந்தியக் கடற்கொள்ளைக்காரர்கள் புரிந்த மானக்கேடானது, கொள்கை வெறியரும் ஈராக்கின் ஆட்சியாளருமான ஹஜ்ஜாஜ், இந்துநதிப் பள்ளத்தாக்கை அடிபணியச் செய்யும் பொருட்டு முதலாவது முஸ்லிம் படையெடுப்பை அனுப்புவதற்குக் காரணமாக அமைந்தது”

“முன்னர் அங்கே (கொழும்பில்) முகம்மதிய மையவாடியில் கூபி எழுத்துக்களாலான பழங்காலப் பொறிப்பொன்று அடங்கிய கல்லொன்று இருந்தது. அதனை ஒருவராலும் விளக்க முடியவில்லை. ஆனால் அது பத்தாம் நூற்றாண்டில் இலங்கை வந்த தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு மனிதரின் நற்குணங்களைப் பதிந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. கி. பி. 1787ஆம் ஆண்டளவில் டச்சு உத்தியோகத்தர்களில் ஒருவர் அந்தக் கல்லை அவர் வீடு கட்டிக் கொண்டிருந்த இடத்துக்கு எடுத்துச் சென்று, ‘அது இப்போது இருக்கும் இடமான அவரது வாசலுக்குச் செல்லும் படிகளில் ஒன்றாக வைத்துவிட்டார்’ இது அலக்சாந்தர் ஜொன்ஸ்டனால் கொடுக்கப்பட்ட விவரக் குறிப்பாகும். அவர் 1827 இல் அந்தக் கல்வெட்டின் ஒரு பிரதியை லண்டனிலுள்ள அரச ஆசிய கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அது ‘கார்மதிக்’ எழுத்துக்களால் பொறிக்கப்பட்டதென்றும் அது கி. பி. 848 இல் காலஞ்சென்ற அறபி ஒருவரை நினைவுகூர்வதற்கானதென்றும் கில்டெமிஸ்டர் என்பவர் கருத்துத் தெரிவிக்கிறார். அந்தக் கல்வெட்டின் லீ என்பவரது மொழிபெயர்ப்பொன்று அரச ஆசிய கழக அறிக்கை தொ. 1, பக் 545 இல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து காலஞ்சென்றவர் காலித் இப்னு பகாயா என்றும் அவர் ஹிஜ்ரி 317 இல் ஏனைய சலுகைகளுடன் மதத்துக்குப் பாதுகாப்புப் பெற்றுத் தந்ததன் மூலம் புகழ்பெற்றார் என்றும் தெரிகிறது”

“இலங்கையின் எல்லா வகுப்பினரதும் சகிப்புத்தன்மை பற்றிய அபூஸய்தின் கூற்றுக்களை இத்ரீஸி என்பவர் அவரது பன்னிரண்டாவது நூற்றாண்டில் எழுதிய புவியியல் நூலில் உறுதிப்படுத்துகிறார். அத்துடன் பதினாறு உத்தியோகத்தர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசனது சபையில் நான்கு பௌத்தர்களும் நான்கு முஸல்மான்களும் நான்கு கிறிஸ்தவர்களும் நான்கு யூதர்களும் இருந்தனர் என்னும் உண்மையால் அதனை விளக்குகிறார்”

“அராபிய புவியியல் அறிஞர்களில் மிக ஆரம்ப அறிஞர்களான அல்பதனியும் மஸ்ஊதியும் ஒன்பதாம் நூற்றாண்டில் அபூ ஸய்தின் சமகாலத்தவராவர். அவர்கள் இருவரில் ஒருவராதல் “வுhந வறழ ஆயாழஅநவயளெ” - இரு முகம்மதியர் - இல் உள்ள விருத்தாந்தங்களில் இலங்கையைப் பற்றிக் கொடுக்கப்பட்ட விவரங்களை விட ஏதும் கூடுதலாகச் சொல்லவில்லை”

“அரேபிய, அல்லது பாரசீக வரலாற்றாசிரியர்கள் எவரிலும் இலங்கையைப்பற்றிக் குறிப்பிட்டவர்களில் மிக முந்தியவர் அநேகமாக கி.பி. 838 இல் பிறந்த தாபரி என்பவராவர். ஆனால், அவர் அவரின் கருத்துக்களை, ‘முழு உலகமும் அதை விட உயர்ந்த மலையைக் கொண்டிருக்கவில்லை’ என்ற அளவுக்கு பாவா ஆதம் மலையைப் பற்றி மிகைப்பட விவரித்துக் கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார்”

“ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டுகளில் இத்தீவானது பிரசித்தி பெற்றிருந்த வர்த்தகம் பற்றி சிந்த்பாத்தின் பின்வரும் கூற்றுக்கள் மூலம் அனுமானிக்கப்படுகின்றது. அதாவது, அவரது அடுத்த கடற்பிரயாணத்தின் போது கலிபாவிடமிருந்து செரந்தீபின் அரசனுக்குக் கடிதமொன்றையும் வெகுமதிகளையும் அவர் எடுத்துக் கொண்டு பஸராலில் கப்பலேறினார் என்றும் அவருடன் ‘அனேக வணிகர்களும் இருந்தனர்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்”

“இலங்கையில் குடியேறிய முகம்மதிய வர்த்தகர்கள் பதினோராம் நூற்றாண்டின் மிக ஆரம்ப காலத்திலேயே அதிக செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றிருந்தனர் எனினும் அத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி வரையும் அதன் துறைமுகங்களில் அவர்கள் அதிக விசாலமானதும் அதிக வருவாயைத் தரக்கூடியதுமான வர்த்தகத்தைத் தம்வசம் கொண்டிருந்தனர் எனினும், பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளின் போதுதான் அவர்கள் அத்தீவில் வர்த்தக வளத்திலும் அரசியற் செல்வாக்கிலும் அதி உச்ச கட்டத்தை அடைந்திருந்தனர்”

“இவ் வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களில் இறுதியாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் கஸ்வினியாவர். அவர் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பக்தாத்தில் வாழ்ந்தவர். அத்துடன் அவரது பல்வேறுபட்ட தன்மையுடைய எழுத்தோவியங்கள் காரணமாக கிழக்கின் பிலினி என அவர் அழைக்கப்பட்டார். இந்தியாவைப் பற்றி புவியியல் விவரங்களில் அவர் இலங்கையையும் உள்ளடக்குகிறார். ஆனால் இறந்த அரசரின் மனைவியரை அவர்கள் கணவன்மாருடைய அதே சிதையில் வைத்து எரித்தல் போன்ற அரண்மனையினதும் மக்களினதும் வழக்கங்களைப் பற்றிய விவரங்களை அவர் குறிப்பிடும்பொழுது அவர் பெற்ற அந்தத் தகவல்கள் பிராமண மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டனவேயன்றி பௌத்த மக்கள் மத்தியில் இருந்தல்ல என்பது தெளிவாகின்றது. சுதேச காலவரிசை வரலாற்றிலே காட்டப்பட்டிருப்பது போன்று மரபார்மாக என்பவன் அரசனாக இருந்த காலப்பகுதியிலே இலங்கை மக்கள் இருந்த உண்மையான நிலையை இது உறுதிப்படுத்துகின்றது. அவன் கலிங்கத்திலிருந்து இத்தீவின் மீது 1219 இல் படையெடுத்து வந்த பௌத்த மதத்தை நிலைகுலையச் செய்து அதன் நினைவுச் சின்னங்களையும் பன்சாலைகளையும் அவமதிப்புக்குள்ளாக்கியதோடு தலை நகரத்தின் பெரிய கட்டடங்களையும் அறிவுக் களஞ்சியங்களையும் அழித்தொழித்தான்”

“பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையின் சிங்கள குடிமக்கள் நுண்ணிய புடவை நெய்யும் கலையைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அது அப்போது இந்தியத் தீபகற்பத்தில் அறியப்பட்ட ஒரு கலையாக இருந்தது. எனவே, அந்தக் கலையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டு இந்தியாவிலிருந்து சில நெசவாளர்களை அழைத்துவரும் எந்தக் குடிமகனுக்கும் சுதேச அரசர்கள் பெரும் சன்மானங்களை வழங்க முன்வந்தனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த பேருவலையில்வாழ்ந்த சோனக மனிதர் ஒருவர் அந்த சன்மானத்தால் உந்தப்பட்டு இந்தியாவிலிருந்து நெசவாளர் எண்மரை அழைத்து வந்தார். அப்போதைய அரசன் அவர்களை அதிக அன்புடன் வரவேற்று, உயர் குடிப் பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்தான். அவர்களுக்கு வீடுகளையும் காணிகளையும் வழங்கினான். அவனது மாளிகையின் சுற்றுப்புறத்தில் தொழில் நிலையமொன்றை ஏற்படுத்திக் கொடுத்தான். அவர்களுடைய தலைவருக்கு ஏனைய கண்ணியங்களுடன் தங்கச் சங்கிலி அணிதல், பல்லக்கில் பவனி வரல், வெளியில் தோன்றும் போதெல்லாம் தம் தலைமேல் குடையையும் தாளிப்பனை ஓலையையும் மற்றவர் கொண்டு பிடித்துச் செல்லல் போன்ற சிறப்புரிமைகளையும் வழங்கினான். இரண்டு நூற்றாண்டுகளிடையே இந்த மக்களுடைய சந்ததியினரின் பெருக்கமும் சக்தியும் கண்டிய அரசின் பொறாமையைத் தூண்டின. எனவே, தனது அதிகாரத்துக்கெதிராகப் புரிந்ததாகச் சொல்லப்பட்ட சில குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்கள் உள்ðர்ப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கறுவா நன்கு வளரும் பிரதேசமான தென்மேற்குக் கரையோரத்தில் குடியேறவும் எதுவித ஊதியமுமின்றி வருடாந்தம் அரசாங்கத்துக்குத் தேவைப்படும் கறுவா அனைத்தையும் பட்டை கழற்றிப் பதப்படுத்திக் கொடுக்கவும் அரசனால் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

“பெரி;ப்லஸின் ஆசிரியர், அவர்களை (அறபிகளை) இலங்கையில் முதலாம் கிறிஸ்தவ நூற்றாண்டளவிலும் கொஸ்மஸ் -இண்டிகோ – புðட்டஸ் என்பவர் ஆறாம் நூற்றாண்டிலும் கண்டனர்” என என்னால் முன்னர் எடுத்துக்காட்டப்பட்ட சேர் எமெர்சன் டெனண்டின் வார்த்தைகளுடன் மேற்போந்த பந்திகள், இத்தீவுக்கு அறபிகள் கிறிஸ்தவ சகாப்தத்தின் முதலாம் நூற்றாண்டுக்குப் பிந்தாத ஒரு காலத்தில் வந்தனர் என்பதையும் நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இந்தியக் கரைகளிலும், அகதிகளை அன்பாதரவுடன் வரவேற்பதில் அப்போது புகழ்பெற்றிருந்த இலங்கையிலும் தங்களை வர்த்தகர்களாக ஸ்திரப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர் என்பதையும் காட்டுகின்றன. இத்தீவில் தங்கள் குடும்பங்களுடன் குடியேறியிருந்த அவர்களில் அனேகர் ஏழாம் நுற்றாண்டின் இறுதியில் அனேகமாகத் தங்கள் குடும்பங்களுக்குப் பராமரிப்பு எதுவும் வைக்காத நிலையில் இறந்து போயினர் அதன் பின் இந்தக் குடும்பங்களிற் சில, இலங்கையில் இருப்பதை நீடிக்கச் சற்றே விரும்பவில்லை யாதலால் தங்களைத் தங்கள் நாட்டுக்கு அனுப்பிவைக்கும்படி அரசனை வேண்டிக் கொண்டனர் போல் தெரிகிறது. எனவே கி.பி. 700 இல் இங்கு ஆட்சிபுரிந்த சிங்கள மன்னன் அவர்களைத் தைகிரிஸ் பள்ளத்தாக்கில் உள்ள அவர்களுடைய இல்லங்களுக்கு அனுப்பும் அளவுக்குக் கழிவிரக்கம் கொண்டான் என்பதை நாம் அறிகிறோம். பத்தாம் நூற்றாண்டின் போது அந்த அறபிகளின் வதிவுக்காலம் இந்நாட்டில் எவ்வளவு நீடித்திருந்த தென்றால், அவர்கள் தங்கள் மதத்தையும் அசட்டை செய்தனர். எனவே தங்களுக்கு மதபோதனை புரியவும் மதத்துக்குப் “பாதுகாப்பு” பெற்றுத் தரவும் காலித் இப்னு பகாயா எனும் பெயரிய மதப் பண்பாளர் ஒருவரை வெளிநாட்டிலிருந்து வரவழைக்கும் அவசியத்தை அவர்கள் உணரலாயினர். அவர், அவர்கள் மத்தியில் காலஞ்சென்றதும் அவர்களது அனுதாபம் எவ்வளவு ஆழ்ந்ததாக இருந்ததெனின் அவரது அடக்கஸ்தலத்தின் மீது அறபு எழுத்துக்கள் பொறித்த ஒரு நடுகல்லை நாட்டினர். அது லீ என்பவரின் மொழிபெயர்ப்புடன் “ஆரச ஆசிய கழகத்தின் நிலைய அறிக்கை”, தொ. 1, பக், 545 இல் தரப்பட்டுள்ளது. (பின்னிணைப்பு “ஆ”) அந்தக் கல்வெட்டு பற்றி சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் கூறுவதாவது:-

“ஏற்கெனவே கூறியதுபோல, 1806 இல் நான் இலங்கை முகம்மதியக் குடிகளின் பலவிதமான பழக்க வழக்கங்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களது ஆரம்பக் குடியேற்றம் பற்றிய வரலாறு, அத்தீவில் அவர்களது முன்னைய வர்த்தக வளம், பதினோராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் பக்தாத் கலிபாவுடன் அவர்களுக்கிருந்த நெருங்கிய உறவும் இடைவிடாத தொடர்பும் ஆகியவை பற்றி ஏதாவது விளக்கங்களைத் தரக்கூடிய பழக்கவழக்கங்கள் மீதே விசேஷமாக எனது ஆராய்ச்சியைத் செலுத்தினேன். அதிலே எனக்கு உதவிய எல்லா முகம்மதிய மத அறிஞர்களும் வணிகர்களும் கடலோடிகளும் இத்துடன் இணைக்கப்பட்டடிருக்கும் அதே உருவ மாதிரியைக்கொண்ட ‘கூபிக்’ கல்வெட்டொன்றை எனது கவணத்துக்குக் கொண்டுவந்து, அதுவே பக்தாத் கலீபாவுக்கும் இலங்கை முகம்மதியர்களுக்கும் முன்னைய நாட்களில் தொடர்ந்திருந்த சமூகத் தொடர்புகளைக் குறிப்பிட்டுக் காட்டும் இத்தீவிலுள்ள மிகப்பழமையான பதிவுச் சான்று என்றும் எடுத்துக் காட்டினர்”

இலங்கையை ஆட்சிபுரிந்த இனத்தவரிடையே பன்னிரண்டாம் நூற்றாண்டில் அறபிகள் எவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்தனரென்றால், அவர்களுக்கு அரசனது சபையிலே ஆசனங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து அரேபிய நூலாசிரியர்கள் எழுதிய நூல்களில் இலங்கையைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றன. அத்துடன் இத்தீவில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சிகள், அக்காலப்பகுதியில் பக்தாதில் சிறந்து விளங்கிய சரித்திராசிரியர்களின் எழுத்தோவியங்களில் சரியாகப் பதியப்பட்டுள்ளன. இத்தீவில் குடியேறிய முகம்மதியர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்ட பக்தாதின் சலீபா இலங்கை அரசனுக்குக் கடிதமும் வெகுமதிகளும் அனுப்பினார். அந்த முகம்மதியர்கள் பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் இத்தீவில் வர்த்தக வளத்திலும் அரசியற் செல்வாக்கிலும் அதி உச்ச கட்டத்தை அடைந்திருந்தனர். பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்னரே அவ்வறபிகள் அல்லது போர்த்துக்கேயர் அவர்களை அழைத்தது போல் “முஅர்ஸ்” இலங்கையில் இருந்தனர் எனும் எனது கூற்றுக்கு ஆதாரமாக இறுதியானதும், ஆனால் முக்கியத்துவத்தில் கொஞ்சமும் குறையாததுமான அத்தாட்சியானது மேலே எடுத்துக் காட்டப்பட்ட கடைசிப் பந்தியால் பெறப்படுகின்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சிங்கள அரசனுக்குச் சிறந்த சேவைகளை நல்கக்கூடிய அளவுக்குச் சோனகர் இத்தீவில் தங்களை ஆணித்தரமாக ஸ்திரப்படுத்திக் கொண்டனர் என்பதை அப்பந்தி எதுவித சந்தேகத்துக்கு மிடமின்றி நிரூபிக்கின்றது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த பேருவலையில் வாழ்ந்த சோனக மனிதர் ஒருவர் (சிங்கள அரசனால் வாக்களிக்கப்பட்ட) சன்மானத்தால் உந்தப்பட்டு இந்தியாவிலிருந்து நெசவாளர் எண்மரை அழைத்து வந்தார்” என சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் கூறுகிறார். அவரது காலத்தில் வாழ்ந்த அந்த சோனக மனிதருடைய சந்ததியினரை அவர்கண்டார். அவர்களில் மருத்துவத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மருத்துவப் பகுதியின் சுதேச அத்தியட்சகராக அவர் நியமித்தார். அதனை நான் பின்னர் குறிப்பிடுவேன். எனவே, பதினான்காம் நூற்றாண்டுக்கு மிக முன்னரே சோனகர் இலங்கையில் குடியேறியிருந்தனர் என்ற சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையானது. இலங்கைச் சோனகரின் ஆதிபிதாக்கள் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து காயலிலிருந்து வந்து பேருவலையில் குடியேறிய தமிழ் முகம் மதியர்களே என்று கூறும் திரு. இராமநாதனது ஊகத்திலெழுந்த தத்துவத்தைத் தவிடுபொடியாக்குகின்றது. “சோனகர்” எனும் பெயர், திரு. இராமநாதன் கூறுவது போல, தமிழர்களால் “மாப்பிள்ளை”களுக்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை. அந்தப் பெயர் காயல்பட்டணத்தில் வாழ்ந்த முகம்மதியர்களுக்கு அவர்களின் வரலாற்றின் ஆரம்ப பகுதியில் வழங்கப்பட்டது. அந்த உண்மையானது அந்த நகரை உருவாக்கிய அறபிகளையும் அவர்களுடைய வழித்தோன்றல்களையும் குறிக்கவே அந்தப் பெயர் உபயோகிக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றது. காயல் பட்டணம், “சோனகர் பட்டணம்” என அழைக்கப்பட்டதற்குக் காரணம் அந்நகர் அறபி (சோனகர்) களால் உருவாக்கப்பட்ட தனாலாகும்.

(5) சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மக்களைக் குறிக்கின்றது என்னும் திரு. இராமநாதனது கூற்றை நான் முற்றாக ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், சோழியரின் பெரும்பான்மையினர் தமிழரானபடியால் உறிந்துஸ்தானி முகம்மதியர் தென் பகுதியைச் சேர்ந்த தம் மதத்தினர் ஒருவரைச் ‘சோழிய” என்று குறிப்பிடுகிறார் என அவர் கூறுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. சோழியரில், அதாவது சோழ தேசத்தாரில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என்பதில் சந்தேகமில்லை “சோழியர்” எனும் சொல் முகம்மதியர்களை மட்டும் கருதியது. அல்லது அவர்களுக்கு மட்டும் உபயோகிக்கப்பட்டது என்பதைக் காட்ட எதுவித சான்றுமே இல்லை. அது சோழதேசத்து மக்களுக்கு – தமிழர்களுக்கும் முகம்மதியர்களுக்கும் இந்தியாவின் ஏனைய பிரதேச மக்களால் உபயோகிக்கப்பட்ட சொல்லாகும். அது ஒரு தமிழ்ச் சொல்லே அன்றி உறிந்துஸ்தானிச் சொல் அன்று. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கில அகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப் பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும் போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் சோழிய முகம்மதியர்கள் சந்ததியில் அறபிகள் அல்லர் என்று குறிப்பிடுவதற்கு அந்தச் சொல்லில் எதுவித சான்றும் இல்லை. தென்னிந்திய முகம்மதியர் தம்வட பிரதேச மதத் தோழர் ஒருவரை “ஹிந்துஸ்தானி” என்று குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம் அவர் சந்ததியில் ஒரு உறிந்து என்பதனாலல்ல@ ஏனெனில், அவர் ஹிந்துஸ்தானைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். அதேபோன்று, ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத் தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர் காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.

(6) “இந்து சமுத்திரத்தில் பிரயாணம் செய்த ஆபிரிக்கர், அரேபியர், பாரசீகர் ஆகியோரில் அதிகப்படியானோர் இந்தக் கரைகளைத் தங்கள் புதிய வதிவிடங்களாக ஆக்கிக் கொண்டனர் என்றும் அதற்குக் காரணம் அவர்களின் பழைய வதிவிடங்களில் சனப் பெருக்கத்தின் தாக்கம் அவர்களால் மும்முரமாக உணரப்பட்டதுபோல், அல்லது அவர்கள் தங்கள் மீது தாங்களாகவே விதித்துக் கொண்ட நாடுகடத்தலின் நன்மையானது தங்கள் நாட்டையும் குடும்பத்தையும் முன்னைய சகவாசத்தையும் விட்டு வருவதால் ஏற்படும் துயரத்தை மிஞ்சி விட்டது போல் தோன்றுகிறது என்றும் கருதுவதில்தான் தவறு இருக்கின்றது” என்று திரு. இராமநாதன் கூறும் பொழுது அவர் அவருடைய எதிர்தரப்பாளரைத் தவறாகப் புரிந்து கொள்கிறார். அத்துடன் குறிப்பிட்ட அந்தக் காலப் பகுதியில் அரேபியாவின் உள்நாட்டு நிலையைப் பற்றிய அவரது அறியாமையை அவர் வெளிக்காட்டிக் கொள்கிறார். இத்தீவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குறைந்தது பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியேறிய தங்கள் மூதாதையர் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தனர் என்று இலங்கைச் சோனகர் எவ்விதத்திலும் கருதவில்லை. அத்துடன் தற்போதைய அவர்களின் வழித்தோன்றல்களின் எண்ணிக்கையைக் கவனிக்கும்பொழுது அது அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லையென நான் முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன் இன்னும் 1901 இல் 1,14,000 இலங்கைச் சோனகர்களும் 1881 இல் 92,000 இலங்கைச்சோனகர்களும் இருந்தனர் என்பதையும் நான் முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன். 1827 இல் இலங்கையில் ஏறக்குறைய 70,000 முகம்மதியர்கள் இருந்தனர் என சேர் அலக்சாந்தனர் ஜொன்ஸ்டன் கூறுகிறார். ஆனால், அவர்களில் “கரையோரச் சோனகர்” எத்தனைபேர் எனக் கூறப்படவில்லை. போர்த்துக்கேய, டச்சு ஆடம்சிக் காலங்களில் “கரையோரச் சோனக”ரின் வருகைப் பெருக்கம் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்களில் கொஞ்சப் பேர் தாம் “கரையோரச் சோனகர்” களாக இருந்தனர் என நாம் எடுத்துக் கொள்வோம். பன்னிரண்டாம் அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அறிமுகம் செய்த வைக்கப்பட்ட ஏழு (அல்லது எட்டு) நெசவாளர்களின் சந்ததியினரான 24,000 அல்லது 25,000 சாலியர்கள் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் இலங்கையில் இருந்தனர் என அதே ஆசிரியர் எமக்கு அறியத்தருகிறார். அறுநூறு அல்லது எழுநூறு வருடங்களில் ஏழு அல்லது எட்டு நெசவாளர்களின் சந்ததியினரது எண்ணிக்கை ஏறக்குறைய 25,000 பேர்களாக இருந்ததென்றால் ஆயிரத்து நூறு ஆண்டுகளில் 70,000 பேர் அல்லது ஆயிரத்து இருநூறு ஆண்டுகளில் 1,14,000 பேர் பெருகுவதற்குக் காரணமாயிருந்த ஆரம்ப அறபுக் குடியேறிகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்திருக்கும் என்பதை வாசகர்கள் எண்ணிப் பார்ப்பதில் கஷ்டமிருக்காது. அவர்களது எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாக இருந்திருக்க முடியாது என்றுநான் முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்.

திரு. இராமநாதன் அரேபியர்களுடன் தொடர்புபடுத்திக் குறிப்பிடும் ஆபிரிக்கர், பாரசீகர் பற்றி நான் ஒன்று கூறவேண்டும். அதாவது அன்னவர்களின் வழித்தோன்றல்களுக்கு உரிமை கொண்டாடும் எந்த ஒரு சமுதாயமாவது இத்தீவில் இல்லை. எனவே, அரேபியர்களைப் போன்று அவர்களும் இங்கு புதிய இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்களென்றோ, இந்நாட்டு மக்களுடன் கலப்பு மணம் செய்து கொண்டார்களென்றோ ஊகிப்பதற்கு எதுவித அவசியமுமில்லை.

எங்கள் ஆதிபிதாக்கள் தங்கள் மீது தாங்களாகவே விதித்துக் கொண்ட நாடுகடத்தலின் நன்மைகளையும் தங்கள் நாட்டிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் முன்னைய சகவாசத்திலிருந்தும் பிரிந்து வரவேண்டி ஏற்பட்ட சூழ்நிலைகளையும் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு அவர்கள் இலங்கைக்குக் குடிபெயர்ந்ததாகச் சொல்லப்படும் காலப் பகுதியைப் பற்றிக் குறிப்பிடும் ளூழசவ ர்ளைவழசல ழக ளுயசயஉநளெ (ஸரஸன்களின் சுருக்கவரலாறு) எனும் நூலிலிருந்து பின்வரும் வரிகளை மேற்கோள் காட்டுவதைவிட என்னால் அதற்கு மேலும் திறமையாக எதுவும் செய்யமுடியாது.

“மர்வானின் மறைவுக்குப் பின் அப்துல் மாலிக் அக்கோத்திரத்தின் பெரும்பான்னைமயினரால் தங்கள் ஆட்சியாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அப்துல் மாலிக் சரியான ஒர் “உமையா” சுறுசுறுப்பும் சதியாலோசனையும் பழிபாவங்களுக்கஞ்சாமையும் கொண்ட அவர் வியக்கத்தக்க திறமையுடன் தம் முழுக் கவனத்தையும் தமது பதவியினை ஸ்திரப்படுத்திக் கொள்வதிலே செலவழித்தார். அவர் அவ்வாறு செய்து கொண்டிருந்த போது முக்தார் தம்மை ஈராக்கில் பலம்வாய்ந்தவராக ஆக்கிக் கொண்டு அங்கிருந்த வண்ணம் ஹ{ஸைன் அவர்களைப் படுகொலை செய்தவர்களை வேட்டையாடத் தொடங்கினார். அவர்கள் விடாப்பிடியாகப் பின் தொடரப்பட்டு பூச்சி புழுக்களைப் போல் கொல்லப்பட்டனர். அப்துல் மாலிக்கால் ‘கசாப்புக்கார’னது தலைமையில் அனுப்பப்பட்ட படை அழித்தொழிக்கப்பட்டது. அவனும் கொல்லப்பட்டு அவனது தலை முக்தாரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. தங்கள் ஆயுதம் ஏந்திய நோக்கம் நிறைவேறிவிடவே பழிவாங்குவோர் பல பிரிவுகளாகப் பிரியத்தொடங்கினர். எனவே, அப்துள்ளாஹ்வின் சகோதரரும் ஈராக்கின் பகர ஆட்சியாளருமான முஸாப், அவர்களை ஒருவர்பின் ஒருவராக அடிபணியச் செய்தார். முக்தாருடனான போர் நீடித்த ஒன்றாகவும் இரத்தக் களரியை ஏற்படுத்தியதாகவும் இருந்தது. ஆனால், இறுதியாக ‘பழிவாங்கியவர்’ கொல்லப்பட்டார். அவருடைய சார்பாளர்கள் வாளுக்கிரையாக்கப்பட்டனர். எனவே முஸாப் களத்தின் சம்பூரண தலைவராகிவிட்டார். ஸ}பைரின் மகனுடைய அதிகாரம் இப்போது ஈராக்கிலும் மொஸொபத்தேமியாவிலும் எதிர்ப்பற்ற ஒன்றாகிவி;ட்டது. குரசானும் அவரது ஆட்சிக்குள் இருந்தது. ஆனால் அவரது உறுதியற்ற அடித்தளத்தில் தங்கியிருந்தது. ஈராக்கியவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களாக இருந்தனர். எனவே, சில சன்மானங்களுக்காக அப்துல் மாலிக்குடன் அவர்கள் அவரைத் தங்கள் ஆட்சியாளராக ஏற்றுக் கொள்ள இரகசியமான உடன்பாடுகளைச் செய்து கொண்டனர். இவ்வேளையில் காரிஜிகள் தங்கள் பாலைவன அரண்களிலிருந்து வெளிப்பட்டு சல்தியாவினதும் தென் பாரசீகத்தினதும் அப்பாவிக் குடிமக்கள் மீது அட்டூழியங்களையும் கொள்ளையிடு தலையும் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் நடந்த இடைவிடாத போர் அப்துள்ளாஹ்வின் படைகளைச் சக்தியிழக்கச் செய்தது. இந்த இரக்கமற்ற வெறியாளர் தங்கள் மத உத்வேகத்தினால் உந்தப்பட்டு பழிவாங்கும் பொருட்டு வெறுக்கத்தக்க கொடுமைகளைச் சீரான சமூகத்தின் மீது புரிந்தனர்”

“அப்துல் மாலிக் வாளைத் தாராளமாகப் பாவித்துச் சில வருடங்களில் சிரியாவிலிருந்த தம்முடைய பகைவர்களை ஒழத்துவிட்;டார். ஸயீதின் மகனான அம்ரு, புரட்சியொன்றை ஏற்படுத்த எத்தனித்தார். அவர் அரச மாளிகைக்குச் சாகசமாக அழைத்து வரப்பட்டு அப்துல் மாலிக்கின் சொந்தக் கரங்களால் கொல்லப்பட்டார். அப்துல் மாலிக், டம்ஸ்கஸில் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டதும் தமது கவனத்தை மொஸொபதேமியாவின் மீதும் சல்தியா மீதும் திருப்பினார். அப்பிரதேசங்கள் அப்துள்ளாஹ் பின் ஸ{பைர் சார்பாக முஸாப் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. ஈராக்கியரின் கட்சிமாறல் அப்துல் மாலிக்கைக் கூபாவின் மீது படையெடுத்துச் செல்லத் தூண்டியது. முஸாபுரம் அவரது மகன் யஹ்யாவும் அல் அஸ்தாரின மகனான அவரது வீரத்தளபதி இப்ராஹீமும் யுத்தத்தில் வாளுக்கிரையாயினர். எனவே, ஈராக் மீண்டும் உமையாக்கள் ஆட்சியின் கீழ்வந்தது. முஸாபை நசுக்கியதன் பின் அப்துல் மாலிக் தம் படைகளை அப்துள்ளாஹ்வுக்கு எதிராக ஏவினார். யூஸ{பின் மகனான ஹஜ்ஜாஜின் தலைமையின் கீழ் பலம் பொருந்திய படையொன்று ஹிஜாஸை நோக்கி அணிவகுத்துச் சென்றது. மதீனா அதிக சிரமமின்றி கைப்பற்றப்பட்டது. புண்ணிய நகரைச் சுற்றியிருந்த குன்றுகளில் பொருத்தப்பட்டிருந்த அடித்துத் தாக்கும் பொறிகளிலிருந்து எறியப்பட்ட ஏவுகணைகள் எல்லா இடங்களிலும் பெரும் அழிவையும் சிதைவையும் ஏற்படுத்தின. ஆனால் அப்துள்ளாஹ்வோ தாம் அடிக்கடி செய்த திடீர்த்தாக்குதல்களினால் சிரியர்களை நெருங்கிவிடாது அதிக நாள் வைத்திருந்தார். எனவே, முற்றுகையாவது வழியடைப்பாக மாறியது. பஞ்சத்தின் கொடுமையால் வாடிய குடிமக்கள் பெருந்தொகையினராக அவ்விடத்தை விட்டகன்றனர். இறுதியாக அப்துள்ளாஹ்விடம் சில பாதுகாப்பாளரே இருந்தனர். எனவே தமது இறுதித் திடீர்த் தாக்குதலை நடத்த முன்னர் அப்துள்ளாஹ், அபூபக்கர் அவர்களின் மகளாரும் தமது தயாருமான அஸ்மா அவர்களிடம் சென்று, வெறுக்கத்தக்க உமையாக்களின் அடிமைத்தளைக்குத் தாம் அடிபணிய வேண்டுமா, அல்லது போர்புரிந்து இன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டுமா என்று அறிவுரை கோரினார். அந்த வயது முதிர்ந்த மாதுசிரோண்மணி ஓர் அறபுத் தாயின் வீராவேசத்துடன், “நீ உனது குறிக்கோள் நேர்மையானது என்று நம்பினால் இறுதிவரை போராடுவது உனது கடமையாகும். ஆனால் உனது கட்சி பிழையானது எனக் கருதினால் நீ அடிபணிய வேண்டும்” என்று மொழிந்தார். தமது மரணத்துக்குப் பின் தமது உடலைப் பகைவர் இழிவுபடுத்துவரே என அவர் கூறியதற்கு, “ஆன்மாவானது அதனது படைத்தோனை அடைந்ததன் பின் உடலுக்கு எது நடந்தால் என்ன” என்ற விடையால் அந்தத் தாய் அவரது அச்சத்தை அகற்றினார். தாயிடம் விடைபெற்ற தனயர் அந்தத் தாயின் நெற்றியில் மெல்லென முத்தமிட்டார். பின்னர் ஏந்திய வாளுடன் வீறிட்டுப் பாய்ந்தார். மனதில் ஒர் உறுதி. விடுதலை அல்லது வீர மரணம். உமையாக்கள் பல கோணங்களிலும் துரத்தியடிக்கப் பட்டனர். ஆனால், பகைவரின் எண்ணிக்கை மிகுதியின் காரணமாக அஞ்சா நெஞ்சம் கொண்ட அந்தப் போர்வீரர் வீரமரணமடைந்தார். வீரனொருவனின் மரணம் பொதுவாக வீரம் நிரம்பிய பகைவர்களால் மதிக்கப்படுகிறது. ஆனால், சிரியர்களிடம் அந்த வீரப் பெருந்தன்மை இருக்கவில்லை. “இறந்தோர்க்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்” எனும் நபிகளாரின் கட்டளையை அவர்கள் புறக்கணித்தனர். தம்முடைய மகனது உடலை அடக்கம் செய்வதற்காகத் தம்மிடம் தருமாறு வேண்டிக்கொண்ட அப்துள்ளாஹ்வின் தாயாரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. அந்த வேளையில் நிலவிய முரட்டுத்தன்மை வாய்ந்த மனக் கிளர்ச்சியின் காரணமாக அவர்கள் அவரது பூதவுடலை ஒரு தூக்குமரத்தில் அறைந்து வைத்தனர். அப்துள்ளாஹ்வினதும் அவருடைய தலைவர்கள் இருவரினதும் தலைகள் மதீனாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுப் பின்னர் டம்ஸ்கஸ{க்கு அனுப்பப்பட்டன”

“ஒரு காலத்தில் ஹிஜாஸின் ஆட்சியாளராக இருந்த ஹஜ்ஜாஜ் ஈராக், ஸஜிஸ்தான், கர்மான் காபூலையும் திரன் ஸொக்ஸியாவின் பகுதிகளையும் உள்ளடக்கிய குராசான் ஆகிய பிரதேசங்களின் அப்துல் மாலிக்கின் ஆட்சிப் பிரதிநிதியாக இருந்தார். அப்போது மேற்கு அரேபியா, இஸ்மாயிலின் மகனான ஹிஷாம் எனும் ஒரு பிரத்தியேக ஆட்சியாளரின் கீழ் இருந்தது. எகிப்து. அப்துல் மாலிக்கின் சகோதரரான அப்துல் அஸீஸால் ஆட்சி செய்யப்பட்டது ஹஜ்ஜாஜின் பொறுக்கமுடியாததும் மூர்க்கத்தனமா னதுமான கொடுமை, எத்தனையோ சீற்றம் மிக்க கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது. அவற்றிலே அல் அஷாஸின் மகனான அப்துர் ரஹ்மானின் தலைமையில் நடந்த கிளர்ச்சி கிட்டத்தட்ட அப்துல் மாலிக்கைப் பதவியிழக்கும் நிலைக்குக் கொண்டு வந்தது. எனினும், எண்ணிக்கையும் அவரது விடாமுயற்சியும் எல்லா எதிர்ப்புக்களையும் வலுவிழக்கச் செய்தன. கிளர்ச்சிக்காரர் தூரப் பகுதிகளில் தஞ்சம் புகும் அளவுக்குத் துரத்தியடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஹிஜாஸின் ஆட்சியாளரான ஹஜ்ஜாஜ், மதீனாவின் குடிமக்களைக் கொடிய முறையில் துன்புறுத்தினார். அத்துடன் நபிகளாரின் அப்போது உயிர்வாழ்ந்து கொண்டிருந்த தோழர்களை மோசமாக நடாத்தினார். ஒரு சமயம் அவர் மதீனா நகரைத் தரை மட்டமாக்க எண்ணினார். ஈராக்கில் அவரது நீண்ட ஆட்சிக் காலத்தில் அவர் கிட்டத்தட்;ட 1,50,000 பேரைக் கொன்றார். அவர்களில் அனேகம்பேர் பொய்க்குற்றத்தின் பேரில் கொல்லப்பட்டனர். அவர்களிற் சிலர் அறபு இனத்தவரில் மிகச் சிறந்தவர்களாவர். அவரது மரணத்தின் போது ஆண்களும் பெண்களுமாக 50,000 பேர் அவரது சிறையில் சிதைவுற்ற வண்ணமும் கொடுங்கோலனைச் சபித்த வண்ணமும் இருக்கக் காணப்பட்டனர். இந்த மொத்தமான படுகொலைக்குக் காரணம், எம். ஸெடிலொட் கருத்துத் தெரிவிப்பது போல, ஸரஸனிய இனத்தை, அதன் மிக உயர்வானதும் மிகத் திறமையுமுடைய தலைவர்களை அகற்றுவதன் மூலம் வலுவிழக்கச் செய்வதாகும்.”

இலங்கைச் சோனகரின் மூதாதையர் அரேபியாவை விட்டு எந்தச் சூழ்நிலையில் வந்தார்கள் என்பதை மேற்குறிப்பிட்ட பந்திகள் வாசகர்களுக்கு எடுத்துக் காட்டும். அவர்கள் அனேகமாக ஹாஷிமின்களாக இருந்தனர். அந்தக் கோத்திரத்தைத்தான் உமையாக்கள் எங்கும் வேட்டையாடினர். அவர்கள் அப்துல்மாலிக்கினதும் அவரது தளபதியான ஹஜ்ஜாஜினதும் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிவந்தனர். அவர்கள் வர்த்தகர்களாகவும் போரில் மனமில்லாதவர்களாகவும் இருந்தனர். எனவே, அவர்கள் தங்கள் நாட்டிலிருந்த குழப்ப நிலை காரணமாகவும் அங்குஅவர்களதும் அவர்களின் சொத்துக்களதும் பாதுகாப்பற்ற தனகமை காரணமாகவும் அங்கிருந்து தப்பியோடினர். அவர்கள் தங்கள் மீது தாங்களாகவே விதித்துக் கொண்ட “நாடுகடத்த”லானது இழப்பிலிருந்தும் தொந்தரவிலிருந்தும் அவர்களுக்கு எவ்வளவு விடுதலை வழங்கியதோ சந்தேகமின்றி அவ்வளவு சாதகமாகவும் அமைந்தது.

“எனவே, உண்மை யாதெனில் இந்த வர்த்தகர்களின் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் தங்களைக் குடியமர்த்திக் கொண்டனர்” எனும் திரு. இராமநாதனின் சொற்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்பதில்;லை எனக் கூறும் என்னுடைய வாதத்தை அது அந்தஅளவுக்கு ஆணித்தரமாக ஆதரிக்கின்றது. இங்கு குடியேறியவர்களின் சரியான அல்லது கிட்டத்தட்டவுள்ள எண்ணிக்கை எவ்வளவு என்றுஅவர் எங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால், அந்த எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவானது என்றுஅவர் சொல்ல முற்படுவாரா? அறுநூறு ஆண்டுகளில் ஏழு, அல்லது எட்டு நெசவாளர்களிலிருந்து 25,000 சாலியர்கள் தோன்றினார்கள் என்ற உண்மையை நாம் நோக்கும்போது பதின்மூன்றாம் நூற்றாண்டில் இத்தீவில் குடியேறிய இருபத்தைந்து அறபிகள், சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனின் காலத்தில் காணப்பட்ட 70,000 சோனகரை உற்பத்திப் பெருக்கம் செய்திருப்பர் என்பதை அவர் மறக்கக்கூடாது. மரபு வரலாறு யாதெனில், எங்கள் மூதாதையர் இங்கு எட்டாம் நூற்றாண்டில் குடியேறினார்கள் என்பதாகும்.

(7) கரையோரச் சோனகருடையதைவிட இலங்கைச் சோனகரது வரலாறு வேறுபட்டதாகும் என்பதை நான் முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன். இலங்கைச் சோனகரது ஆரம்பம் பற்றியும் அவர்களது ஆரம்பக் குடியேற்றம் பற்றியும் சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனால் பதிவு செய்யப்பட்ட மரபு வரலாற்றை எடுத்துக்காட்டியதன் பின் திரு. இராமநாதன் அதனைத் தவறென நிரூபிக்க முற்படுகிறார். அதன் உண்மையை 1881இல் திரு. இராமநாதனை விட சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனுக்கு அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தது. அந்த மரபு வரலாற்றை ஏற்றுக்கொள்வதற்கு முடியாமல் இருப்பதற்கு அவர் கூறும் தர்க்கங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பகால வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இலங்கைத் தீவை அறபிகள் கிறிஸ்தவ சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில் அறிந்திருந்தனர். அது தொடக்கம் அவர்கள் வர்த்தக நோக்கத்துக்காக இங்கு அடிக்கடி வந்து போகலாயினர். அத்துடன் சில சமயங்களில் இத்தீவை அவர்கள் கிழக்கில் தங்களது வர்த்தகத்தின் மத்திய நிலையமாக ஆக்கிக்கொண்டனர். எனவே, அத்தகைய மக்கள் தங்கள் சொந்த நாட்டில் தங்களைத் தொந்தரவுகள் சூழ்ந்து கொண்டபோது அங்கிருந்து குடிபெயர நினைத்தார்கள் என்றும் ஆகவே ‘பகளா’க்களில் அல்லது கப்பல்களில் ஏறி இலங்கைக்கு வந்து தாங்கள் பல நூற்றாண்டுகளாக வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக அறிமுகமான ஒரு வகுப்பாரிடையே குடியேறினார்கள் என்றும் கருதுவதில் என்ன கஷ்டம் இருக்கின்றது? கஷ்டம் இருப்பது திரு. இராமநாதனின் கற்பனையில் மட்டுமே. முற்கூறிய மரபு வரலாற்றில் குறிப்பிடப்பட்டவாறு அறபிகள் இலங்கைக்குக் குடிபெயர்ந்து வந்தார்கள் என்பது சாத்தியமானதும் நிகழக்கூடியதுமாகும் என்பது நடுநிலைமை வகிக்கும் வரலாற்று மாணவனொருவனுக்குத் தெட்டத்தெளிவாக வேண்டும். முன்கூறியது போல அந்த அறபிகளிற் சிலர் தங்கள் குடும்பங்களுடன் வந்தனர். ஏனையோர் தனியாக வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் பாபரீனிலும் காலியிலும் மரபு வரலாற்றிற் குறிப்பிடப்பட்ட ஏனைய இடங்களிலும் சிங்களவர்கள் மத்தியிலன்றி மலபாரிகள் மத்தியிலே குடியேறினார்கள். நான் முன்னர் எடுத்துக்காட்டியதுபோல, மலபாரிகள் தாம் புதியவர்களை வரவேற்றவர்கள். சிங்களவர்களோ வெனில் அவர்களுடன் சமூகத் தொடர்பு கொள்வதிலிருந்து தப்பவே விரும்பினர். களுத்துறை, காலி, பேருவலை என்பன ஒருகாலத்தில் முற்றாகவே சிங்களப் பிரதேசங்களாக இருந்திருக்கலாம். ஆனால், நமது கவனத்துக்குள்ளாயிருக்கும் காலப் பகுதியில் அவை, முன்னர் எடுத்துக் காட்டியதுபோல, மலபாரிகளின் செல்வாக்கின் கீழேயே இருந்தன. அவர்கள் அறபிகளுடனும் ஏனைய புதியவர்களுடனும் தென்பகுதியிலுள்ள எல்லாத் துறைமுகப் பிரதேசங்களிலும் காணப்பட்டனர். அங்கு சிங்களவர் இருக்கவில்லை. “நாடு கடத்தப்பட்ட அறபிகள்” – திரு. இராமநாதன், அவர்களை அவ்வாறுதான் அழைக்கிறார் – அவர் நினைப்பது போன்று சிங்களப் பெண்களை மனைவியராகக் கொள்ளவில்லை. அவர்களின் வழித்தோன்றல்களது மத்தியில் வழக்கிலிருக்கும் மரபு வரலாற்றினால் உறுதிப்படுத்தப்படுவது போல, அவர்கள் தமிழ்ப் பெண்களையே மனைவியராகக் கொண்டனர். இவ்வாறுதான் அவரால் குறிப்பிடப்பட்ட “முற்றாகவே சிங்களப் பிரதேசங்களிலும்” சோனகரிடையே தமிழ் மொழி பிழைத்துக் கொண்டது. இலங்கைச் சோனகர் தங்களை ஹாஷிமீய அறபிகளின் வழித்தோன்றல்கள் என்று அழைக்கும் அதேநேரத்தில் “ஸய்யிதுகள்” என்று தங்களைக் கருதவில்லை என்பது இம்மரபு வரலாற்றினது ‘மிகப் பெரும் பொருத்தக்கேடு” என்று அவர் நினைக்கிறார். அவர்கள் ஹாஷிமின்களாயின் ஸய்யிதுகளாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார். இவ்வளவு பரந்த அறிவுள்ள ஒரு மனிதர், எல்லா ஹாஷிமின்களும் ஸய்யிதுகள் தாம் எனும் இந்தப் பிழையான கருத்தை ஏற்க எப்படி முன்வந்தார் என்பதை நான் இன்னும் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பிழையான கருத்தை அவர் கொண்டிராவிட்டால் மேற்படி மரபு வரலாற்றை அவர் இவ்வளவு மும்முரமாக எதிர்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். ஸய்யிதுகள் யாரெனில், இமாம் ஹ{ஸைன் (ரளி) அவர்களதும் இமாம் ஹஸன் (ரளி) அவர்களதும் சந்ததியினராவர். அவர்கள் இருவரும் பெருமானார் முஹம்மது நபி (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்களின் திருமகளாம் பாத்திமா (ரளி) அவர்களின் புத்திரர்களாவர். ஸய்யிதுகள் சந்தேகமின்றி ஹாஷிமின்கள்தாம். ஆனால், ஹாஷிம் அவர்களின் மற்ற வழித்தோன்றல்களுடன் ஒப்பிடும் பொழுது அவர்கள் ஒரு சிறு தொகையினரே. இதை இன்னும் விளக்கமாகக் கூறினால், ஸய்யிதுகள் எல்லோரும் ஹாஷிமின்கள் ஆனால் ஹாஷிமின்கள் எல்லோரும் ஸய்யிதுகள் அல்ல. ஸய்யிதுகள் ஹாஷிமின்களின் ஒரு பகுதியினரே. குறிப்பிட்ட மரபு வரலாற்றிலே சொல்லப்பட்ட அறபுக் குடியேறிகளின் வழித்தோன்றல்களான இலங்கைச் சோனகர்கள் எல்லோரும் ஹாஷிமின்களாவர். ஆனால், அவர்களில் பாத்திமா (ரளி) அவர்களின் வழிவந்தவர்கள் மாத்திரமே ஸய்யிதுகள். அரேபிய வரலாற்றிலே சாதாரண அறிவுள்ள எவரும் இது விஷயத்தை எளிதில் விளங்கிக் கொள்வர். திரு. இராமநாதன் இந்த விஷயத்தில் அதிர்ச்சியூட்டத்தக்க அளவுக்குத் தவறியிருக்கின்றபொழுது, வரலாறு எழுதப்படாதவர்களான இலங்கைச் சோனகரது ஆரம்பத்தைச் சரியாக நிறுவ அவருக்கு முடியாமல் போனதில் எதுவித விந்தையுமில்லை. பிழை விடுவது மனித இயல்பு. ஆனால், அவர் விட்ட பிழைக்குக் காரணம் அவர் அவரது ஆராய்ச்சிக் கட்டுரையைத் தொடங்குவதற்கு முன்னர் நிதானமாக, கவனமாக ஆராய்ச்சியில் இறங்காததுதான் என்பதை விளங்கிக் கொள்ளல் வேண்டும். இந்த மரபு வரலாற்றுக்கு எதிரான அவரது வாதத்தின் அவரது வார்த்தைகளிற் கூறுவதானால் “மிகப் பெரும் பொருத்தக்கேட்டு”க்குக் காரணம் இந்தத்தீவில் எல்லோராலும் பொதுவாக அறியப்பட்ட ‘ஸய்யிது’ எனும் ஒர் எளிய வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை அவர் பிழையாக விளங்கிக் கொண்டதாகும்.

(8) திரு. இராமநாதன் குறிப்பிடும் இலங்கைத்திணையேடு பக்கம் 254இல் இலங்கைச் சோனகர் தங்கள் முதலாவது குடியிருப்பைக் காயல் பட்டணத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் அமைத்துக் கொண்டனர் என்றும் ஹிஜ்ரி 402 ஆம் ஆண்டில் அங்கிருந்து ஒரு குடியேற்றம் குடிபெயர்ந்து பேருவலையில் குடியேறியது என்றும் திரு. காசிச்சிட்டி கூறவில்லை. அவர் அந்த ஏட்டிலே, ஒரு மரபு வரலாற்றின்படி இலங்கைச் சோனகர் “ஹாஷிம் வழ வந்த ஓர் அறபுக் கோத்திரத்தின் வழித்தோன்றல்கள் என்றும் அந்தக் கோத்திரத்தினர், அவர்களின் தீர்க்கதரிகி முகம்மது நபி அவர்கள் அப+ ஜஹீலின் ஆதரவாளர்களுடன் நடத்திய யுத்தம் ஒன்றில் நடந்து கொண்ட அற்பத்தனமான நடத்தையின் காரணமாக தீர்க்கதரிசி அவர்களால் தண்டனையின் பேரில் அரேபியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள்” என்றும் “அவர்கள் அதன் பின் காஇல் பட்டணத்தில் (வுhந Pநசipடரள ழக வாந நுசலவாசநயn ளுநய - இரீத்ரியன் கடற்பிரயாண விருத்தாந்தம் - எனும் நூலில் குறிப்பிடப்பட்ட கொல்கிஸ்) ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்” என்றும் “அங்கிருந்து படிப்படியாக இத்தீவை நோக்கிக் குடிபெயர்ந்ததோடு ஹிந்துஸ்தான் தீபகற்பத்தின் கரைகளினூடே இராமேசுவரம் வரையும் நகர்ந்தார்கள்” என்றும் கூறுகிறார். திரு. காசிச்சிட்டி இங்கு ஆண்டுகளைத் தரவில்லை. அவரால் பதியப்பட்ட மரபு வரலாறானது. இலங்கைச் சோனகரின் மூதாதையர் ஹாஷிமின் சந்ததியினர் என்று சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனால் பதியப்பட்ட மரபு வரலாற்றை உறுதிப்படுத்துகின்றது. ஆனால், மற்ற விஷயங்களில் அது நகைப்பையே தருகின்றது. ஒன்றில், திரு. காசிச்சிட்டி தமக்கு இதனைக் கூறியவர்களைப் பிழையாக விளங்கியிருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய கூற்றுக்களைத் தவறாக விவரித்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர் கூறும் இந்த விருத்தாந்தத்தின் பொருத்தக்கேட்டுக்குக் காரணம் கூறுவது கஷ்டம். பத்று யுத்தத்தில்தான் தங்கள் திருநபி (ஸல்) அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் அபூஜஹலையும் அவனுடைய ஆதரவாளர்களையும் எதிர்த்துப் போரிட்டு அவர்களை முற்றும் முறியடித்து அவர்களுடைய தலைவனையும் கொன்றனர். யுத்தமானது எண்ணிக்கையில் குறைந்த முஸ்லிம்களுக்குப் பூரண வெற்றியாக முடிந்தது. யுத்த களத்தில் அவர்களுடைய நடத்தை போற்றத்தக்கதாக இருந்தது. அந்த யுத்தத்தில் எந்த முஸ்லிமாவது அற்பத்தனமான நடத்தைக்காகக் குற்றங் காணப்படவில்லை. அத்துடன் தவறான நடத்தைக்காக எவராவது திருநபி (ஸல்) அவர்களால் நாடுகடத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. இவை வரலாறு கண்ட மறுக்க முடியாத உண்மைகளாகும். திருநபி (ஸல்) அவர்கள் அபூ ஸஹலுடனும் அவனுடைய சகாக்களுடனும் போரிட நேர்ந்தபோது அரேபியாவிலிருந்து மக்களை வெளியேற்றக்கூடியதாக அந்நாட்டின் தலைவராக இருக்கவில்லை. உண்மையாதெனில், மதீனாவையும் அதன் சுற்றுப் புறங்களையும் தவிர அரேபியா முழுவதுமே அப்பொழுது திருநபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவே இருந்தது. அவர்கள் கூட தங்கள் எதிரிகளின் கொடுமையை விட்டும் மதீனாவில் தஞ்சம் புகுந்திருந்தனர். எனவே, காசிச்சிட்டியினால் குறிப்பிடப்பட்ட கதையை வெறும் முட்டாள் தனமானது என்று தள்ளவேண்டி இருக்கின்றது. தங்கள் ஆதிபிதாக்கள் திருநபி (ஸல்) அவர்களின் காலத்தில், அவர்களுக்குத் தெரிய, அரேபியாவை விட்டு வெளியேறினார்கள் என்று அவருக்கு இதனை அறிவித்தவர்கள் உண்மையாகவே கூறியிருந்தால், அவர்கள் தங்கள் நாட்டை விட்டு நிரந்தரமாகவே வெளியேறிய சூழ்நிலைகளை நாம் காரணத்தோடு ஊகிக்க முடியும். திருநபி (ஸல்) அவர்களின் தூதின் ஆரம்ப காலத்தில் மக்காச் சிலை வணங்கிகளின் அதிக கொடுமைகளுக்கு முஸ்லிம்கள் ஆளானார்கள். எனவே. திருநபி (ஸல்) அவர்களின் வேண்டுகோளின் பேரிலேயே அவர்கள் முதல் அபீசினியாவுக்கும் அடுத்ததாக மதீனாவுக்கும் பாதுகாப்புத் தேடி ஒடவேண்டி ஏற்பட்டது. செங்கடலைக் கடந்து அபீசினியாவுக்குத் தப்பியோடும் போது வர்த்தக நோக்கமாகக் கிழக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பலில் ஏறி அவர்களிற் சிலர் இங்கே வந்திருக்கலாம். திருநபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரேபியாவிலிருந்து ஹாஷிமீய அறபிகள் பலாத்காரத்தின் பேரில் இலங்கைக்குக் குடிபெயர்ந்து வந்தனர் எனும் கூற்றுக்குப் பகுத்தறிவு ரீதியில் தரக்கூடிய விளக்கம் இதுமாத்திரமே. காயல் பட்டணம் பத்தாம் நூற்றாண்டுக்குமிகப் பிந்திய காலம் வரை உருவாகியிருக்க முடியாது என்பதை நான் மேலே விளக்கியுள்ளேன். எனவே, திரு. காசிச்சிட்டி கருதுவது போல திருநபி (ஸல்) வாழ்ந்த காலத்தில். அதாவது ஏழாவது நூற்றாண்டில். அரேபியாவிலிருந்து வெளியேறிய அறபிகள் காயல் பட்டணத்தில் ஒரு குடியேற்றத்தை உருவாக்கியிருக்க முடியாது. ஆனால், நேராகவே இலங்கைக்கு வந்திருக்க முடியும். பதினோராம் நூற்றாண்டில், (1024) காயலிலிருந்து சோனகர் குடியேற்றம் ஒன்று பேருவலைக்கு வந்தது எனும் கூற்று காசிக்கிட்டியினது இலங்கைத் திணையேட்டிற் காணப்படவில்லையென நான் முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன். அது பற்றிய ஒரு விவரம் டெனண்டினது “இலங்கை” எனும் நூலில் பதியப்பட்டுள்ளது. ஆனால் அதன் நூலாசிரியர் அதனை ஒரு கட்டுக்கதை யென்றே குறிப்பிடுகிறார்.

(9) சோனகர் பற்றி மகாவம்சம் எதுவும் கூறவில்லை என்பதனாலும் அவர்களில் அனேகர் என ராஜாவலிய பதிந்து வைத்திருக்கின்றது என்பதனாலும் பறெவி சந்தேசயவிலும் கோக்கில சந்தேசயவிலும் பேருவலை (1410 – 61) யானது கொடிய, பண்பாடற்ற “பப்புரோக்க”ளின் (மிலேச்சர்களின்) வதிலிடம் என வர்ணிக்கப்பட்டிருப்பதாலும் 1344 இல் இத்தீவுக்கு வருகை தந்த இப்னு பதூதா அவருடைய குறிப்புக்களில் பேருவலையைப் பற்றிக் குறிப்பிடாதிருப்பதாலும் 1344 இல் அந்த இடத்தை முகம்மதியர்கள் அறிந்திருக்கவில்லையென்றும் அதனால் அந்தக் காலப்பகுதியில் அவர்கள் இத்தீவில் இருக்கவில்லை என்றும் திரு. இராமநாதன் முடிவுகட்டியுள்ளார். அவர் சேர் அலச்சாந்தர் ஜொன்ஸ்டனின் சொற்களைவிட பறெவி சந்தேசயவையும் கோக்கில சந்தேசயவையும் இப்னு பதூதாவால் குறிப்பிடப்பட்ட விருத்தாத்தங்களையும் அதிகம் நம்புவது மிகவும் விந்தையாக உள்ளது. சோனகர் பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் பேருவலையில் இருந்தனர் என்றும் அவர்கள் அப்பொழுது “பப்புரோக்க” ளாகவோ மிலேச்சர்களாகவோ அன்றி நாகரிகம் படைத்த குடிகளாக விளங்கினர் என்றும் சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனின் சொற்கள் எதுவித சந்தேகத்துக்குமிடமின்றி எடுத்துக் காட்டுகின்றன. அரச ஆகிய கழகத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் பின்வரும் பந்திகள் இடம் பெறுகின்றன. அக் கடிதம் பின்னிணைப்பு “அ” வில் தரப்பட்டுள்ளது.

“கறுவா பொதுவாக இலங்கையின் தென்மேற்குக் கடலோரப் பிரதேச மாகாணங்களிலும் அதன் உட்பிரதேசங்களிலும் வளர்கிறது. கடலோர மாகாணங்களில் கறுவா பயிரிடுவதையும் பதனிடுவதையும் தனிப்பட்ட சாதியினரே செய்கின்றனர். அவர்களது எண்ணிக்கை 24,000 க்கும் 25,000க்கும் இடைப்பட்டதாகும். அவர்கள் பாபரீன் பட்டினத்தைச் சேர்ந்த முகம்மதிய வணிகர் ஒருவரால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நெசவாளர் எழுவரின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படுகின்றது”

“அப்பொழுது பேருவலையில் வாழந்தபெரும் முகம்மதிய வணிகர் ஒருவருக்கும் அவருடைய எக்காலத்துக்குமான பரம்பரையினருக்கும் என அறுநூறு, அல்லது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் சிங்கள அரசர்களில் ஒருவன் வழங்கிய மிகப் புதுமையானதும் மிகத் தொன்மையானதுமான செம்பாலான பட்டயம் ஒன்றின் நகலொன்று என்னிடம் உளது. எதிர்க்கரையான இந்தியாவிலிருந்து புடவை நெய்வோரை முதன்முதலாக அந்த வணிகர் இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக அது குறிப்பிட்ட சில சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கின்றது. அந்த நெசவாளர்கள் தாம் இலங்கையில் எந்தக் காலத்திலாயினும் குடியேற்றப்பட்ட நெசவாளர்கள் ஆவர். இந்தப் பட்டயத்தின் காரணமாக அந்த வணிகரின் நேரடிச் சந்ததியினர். அந் நாட்டின் சிங்கள அரசால் அவர்களின் மூதாதையர்களுக்கு வழங்கப்பட்ட அந்தச் சிறப்புரிமைகளின் ஒரு பகுதியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ் இப்போதும் அனுபவிக்கின்றனர். அவை இலங்கையின் போர்த்துக்கேய, டச்;சு, ஆங்கிலேய அரசாங்;கங்களால் அடுத்தடுத்த உறுதிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்தக் குடும்பத்தின் தலைவர் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1806 இல் மருத்துவத் திணைக்களத்தின் சுதேச அத்தியட்சகராக என்னால் நியமிக்கப்பட்டார். தீவிலுள்ள சுதேச வைத்தியர்களில் மிக்க அறிவுள்ளவர்களில் ஒருவர் என நாட்டின் குடிமக்களால் அவர்கள் கருதப்பட்டதோடு, சுதேச மருத்துவ நூல்களில் மிகச் சிறந்த ஒரு தொகுதியைத் தம்வசம் கொண்டவராகவும் விளங்கினார். அவைகளில் அனேகம் அவருடைய குடும்பத்தில் எழுநூறு, எண்ணூறு ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலமாக இருந்து வந்திருக்கின்றன. அந்தக் காலப்பகுதி முழுவதிலும் அவருடைய குடும்பத்தில் குறைந்தது ஒருவராதல் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள வேண்டியது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இலங்கையில் முகம்மதிய சுதேச வைத்தியர்களால் மருத்துவ நோக்கங்களுக்காக மிகப் பழங்காலந்தொட்டு பாவிக்கப்பட்ட அத்தீவின் எல்லா மூலிகைகளைப் பற்றியும் மிகவும் விவரமான ஓர் அறிக்கையை இவர் எனக்குச் சமர்ப்பித்தார். 1810 இல் மாட்சிமை தங்கிய மன்னரின் அரசாங்கம் எனது ஆலோசனையின் பேரில் இலங்கையில் ஒர் அரச தாவரத் தோட்டத்தை அமைப்பதற்கான பெருநோக்கங்களில், இந்த மூலிகைகளையும் உணவுக்காகவோ, வர்த்தக நோக்கத்துக்காகவோ உபயோகிக்கக் கூடிய மற்றும் எல்லாச் செடியினங்களையும் மரக்கறி வகைகளையும் பயிரிடுவதும் விருத்தி செய்வதும் ஒன்றாக அமைந்திருந்தது”

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாபரீனில் (பேருவலை) முகம்மதியர்கள் செல்வாக்குள்ளவர்களாகவும் கௌரவிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் என்பதையும். சிங்கள மக்களால் அவர்கள் “பப்புரோ”க்கள் அல்லது மிலேச்சர்கள் என்று கருதப்படுவதற்குப் பதிலாக அரசாங்கத்துக்கு அவர்கள் அளித்த நற்பயன்தரக்கூடிய சேவைகள் காரணமாக இலங்கையின் சிங்கள அரசன் அவர்களைக் கௌரவித்தான் என்பதையும் மேலே உள்ள பந்திகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. 1827 ஆம் ஆண்டுக்கு அறுநூறு, அல்லது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள அரசன் செம்புச் சன்னதின் மூலம் பாபரீனில் வாழ்ந்த ஒருபெரும் முகம்மதிய வணிகருக்குக் குறிப்பிட்ட சில சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் வழங்கினான் என்னும் உண்மையை சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் அத்தாட்சிப்படுத்துகிறார். அந்தச் சன்னதின் ஒரு பிரதியை அவர் கண்டதாகவும் கூறுகிறார். அந்த வணிகரின் சந்ததியினர் அவரது (சேர் அலக்சாந்தரது) காலத்தில் பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ்அந்தச் சிறப்புரிமைகளின் ஒரு பகுதியை அனுபவித்துக் கொண்டிருந்தனர் என்றும் அவர் கூறுகிறார். இலங்கையில் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆள்சபைத் தலைவராகவும் பிரதம நீதியரசராகவும் விளங்கிய சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனுடைய சொற்களின் உண்மை நிலையை எவராவது சந்தேகிக்க முன்வருவாரா? மேற்குறிப்பிட்ட கூற்றுக்கு முற்றிலும் முரணான வகையில் சோனகர் பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் (1350) பேருவலையில் குடியேறவில்லை என்றும் அவ்வாறு குடியேறியதன் பின்னும் சிங்களவர் அவர்களைக் கொடிய, பண்பாற்ற காட்டுமிராண்டிகள் என்றே அறிந்திருந்தனர் என்றும் திரு. இராமநாதன் உறுதியாகக்கூற முற்பட்ட பொழுது அவர் உண்மையைக் கூறினாரா? ராஜாவலியில் நாம்நம்பிக்கை கொள்ள முடியாது. ஏனெனில், பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கைச் சோனகரது வருகை பற்றி அது குறிப்பிடவில்லை. அதே வேளையில் அவர்கள் பதினான்காம் நூற்றாண்டில் வந்தார்களென திரு. இராமநாதனே ஏற்றுக் கொள்கிறார். அதேபோன்று சோனகரது வருகை பற்றி மகாவம்சம் மௌனம் சாதிப்பதும் இங்கு அவசியமற்றதாகும். சிங்களக் காலவரிசை வரலாறானது இத்தீவின் வரலாற்றிலே நடந்த எத்தனையோ முக்கியமான சம்பவங்களைப் பதியவில்லை. இப்னுது பதூதா தமது இலங்கைப்பிரயாண விவரங்களிலே தீவின் முகம்மதியக் குடிகளைப் பற்றிக் குறிப்பிடுவது அவர்களுடன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களைக் குறிப்பிட வேண்டிய இடங்களில் மாத்திரமேயாகும். எனவே, அவர் பேருவலையில் வாழ்ந்த முஸ்லிம்கள் பற்றி ஒன்றும் கூறாததற்குக் காரணம் அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முக்கியமான எதுவும் அவருக்கு இருக்கவில்லையென்பதனாலாகும் என அனுமானிக்க முடியும். அது எவ்வாறிருப்பினும், அவர் பேருவலையைப் பற்றிக் குறிப்பிடத் தவறியதானது அவரது வருகையின் போது (1344) அங்குமுகம்மதியக் குடியிருப்பொன்று இருக்கவில்லை என்பதற்கு முடிவான அத்தாட்சியாகும் என்று கொள்வது விவேகமற்றதும் நேர்மையற்றதுமாகும். அது தவிர, இப்னு பதூதா கூறியவற்றிலிருந்து அவர் காலியிலிருந்து கொழும்புக்குத் தரை மார்க்கமாகவா அல்லது கடல் மார்க்கமாகவா பிரயாணம் செய்தார் என்பதும் அவ்வாறுஅவர் தரை மார்க்கமாகப் பிரயாணம் செய்தார் என்றால் அந்த வழி இப்போதைய வழியா, அல்லது வேறு வழியா என்பதும் தெளிவாக இல்லை. இந்தக் காரணங்களைப் பரிசீலனை செய்யாது திரு. இராமநாதன் சில அவசர முடிவுகளுக்கு வந்துள்ளார். அம் முடிவுகள் மேலே தரப்பட்ட காரணங்களைக் கொண்டு பிழையானவையாகும்.

இலங்கைச் சோனகர், இனத்தில் தமிழர் என நிரூபிக்க அவர் எடுத்துக் காட்டிய அவர்களின் மொழி, வரலாறு, சமூக வழக்கங்கள், உடலமைப்பு எனும் நான்கு அம்சங்களில் நான் முதலிரண்டையும் முடித்துவிட்டேன். இப்போது சோனகரின் சமூக வழக்கங்கள் பற்றியும் உடலமைப்பு பற்றியும் அவர் கூறியிருப்பவை பற்றிப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

அவர்களுடைய சமூக வழக்கங்கள் பற்றி அவர் கூறுவதாவது:-

“ஆனால் இந்த அம்சங்கள் பற்றி நான் விவரமாகப் பேச நினைக்கவில்லை. ஏனெனில். அவை இத்தீவில் வாழும் எங்களில் அனேகருக்கு மிகத் தெளிவானவை என்ற காரணமோ, அல்லது இந்த ஆராய்ச்சிக் கட்டுரையானது நான் அதற்காக ஒதுக்கிய வரையறையை மிகவும் மிஞ்சிவிட்டது என்ற காரணமோ மட்டுமல்ல@ கடந்த ஜனவரியில் இலங்கைச் சோனகரின் விவாக வழக்கங்கள் பற்றி திரு. பாவாவினது ஆராய்ச்சிக் கட்டுரை வாசிக்கப்பட்ட பொழுது திருநபி அவர்களின் சட்டப் பிரகாரம் ஒரு விவாகத்தின் தேவைகள் என்ன என்பதையும் ஆனால், சோனகரால் கையாளப்படும் சடங்குகளும் வழக்கங்களும் எவ்வளவு வித்தியாசமானவையாக இருக்கின்றன. என்பதையும் அந்தவழக்கங்களில் எத்தனை அதாவது ஸ்த்ரீதனம் (மஹரைவிட) ஆலாத்தி எடுத்தல், தாலி கட்டல், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட தாயினும் மணமகன் நகைகள் அணிதல், மணமகனால் கொடுக்கப்பட்ட கூறைச் சீலையை மணமகள் அணிதல், பாற்சோறு உண்ணல் போன்றவை யெல்லாம் - தமிழர்களிடமிருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதையும் நான் சுட்டிக் காட்டினேன் என்பதனாலுமாகும். அத்துடன் நான் ஏனைய வழக்கங்கள் பற்றியும், அதாவது பர்தாமுறை (பெண்கள் அந்நியர் பார்வையில் படாத கண்டிப்பான நிலை) இல்லாமை, வீதிகளிலும் மற்றும் பொதுவிடங்களிலும் தொழாமை போன்றவை பற்றியும் நான் கருத்துத் தெரிவித்தேன். இந்த இரு வழக்கங்களும் (பர்தாவும் இவ்வாறு தொழலும்) தமிழர்களுக்கு அந்நியமானவை. ஆனால் அவை எகிப்தியர்களுக்கும் அறபிகளில் அனேக கோத்திரங்களுக்கும் மிகவும் நெருங்கியவை”.

இலங்கைச் சோனகரின் சமூக வழக்கங்களில் சிலவற்றுக்கும் தமிழர்களின் அவ்வழக்கங்களுக்கும் என்னஒற்றுமை இருக்கின்றது என்பதை அறிய திரு. இராமநாதன் செலவழித்த சக்திகள் அத்தனையும் வீணாகியுள்ளன. காரணம், அவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டுச் சிரமமடைய அவருக்கு எதுவித தேவையுமே இல்லை. ஏனெனில், தங்கள் மூதாதையர்கள் மத்தியில் தமிழ்ப் பெண்களை மணந்த அனேகர் இருந்தனர் என்றும் அம் மனைவியரின் மொழி. பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் காலப்போக்கில் அவர்களுடைய வழித்தோன்றல்கள் கைக்கொண்டனர் என்றும் சோனகரே எப்பொழுதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவில் பார்ஸிகள் என்ன செய்தார்களோ அதனையே இலங்கையில்; சோனகர் செய்துள்ளனர். அத்துடன் பிள்ளைகள் தங்கள் தந்தையர்களைவிடத் தாய்மார்களின் எண்ணங்களையும் பழக்கங்களையும் போற்றி வளர்ப்பதும் கைக்கொள்வதும் மிகவும் இயற்கையானது என்பது இப்போது வாசகர்களுக்குத் தெளிவாகியிருக்க வேண்டும். ஸ்த்ரீ தனம், ஆலாத்தி, தாலிகட்டல் என்பன போன்ற வழக்கங்கள் இலங்கைச் சோனகரிடம் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்கு எனது விளக்கம் யாதெனில், அவை அவர்களால் தமிழர்களிடமிருந்து கடன் வாங்கப்பட்டன என்பதாகும். ஏனெனில், அவர்களின் தாய்மார் பெரும்பாலும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் அவர்களின் தந்தையர் அந்த இனத்தவரின் மத்தியில் குடியமர்ந்தவர்களாகவும் இருந்தனர். தமிழர்களிடமிருந்து இந்த வழக்கங்களைச் சோனகர் கடன் வாங்கினர் என்னும் உண்மையான அவர்கள் பரம்பரையிலும் இனத்திலும் தமிழர்கள் என்பதை எந்த அளவுக்கேனும் நிருபிக்கின்றதா? இந்தக் கேள்விக்கு நாம் சார்பாக விடையளிப்பது அறிவீனமேயன்றி வேறல்ல. ஏனெனில், தாங்கள் எவரிடையே குடியமர்ந்தார்களோ அந்த மக்களின் பழக்கவழக்கங்களை மேற்கொண்ட எத்தனையோ இனங்களின் உதாரணங்கள் நம்முன் நிற்கின்றன. இங்கிலாந்திலுள்ள யூதர்களின் சமூக வழக்கங்களில் அனேகமானவை ஆங்கில மக்களின் சமூக வழக்கங்கள் போன்றே இருக்கின்றன. எனவே இக்காரணங் கொண்டு அவர்கள் ஆங்கிலோ – சக்ஸன் என்று பிரித்துக் கூற முடியுமா? வெயிலில் நடமாடும் ஏழை முகம்மதியப் பெண்களின் காட்சியானது இலங்கைச் சோனகரிடையே பர்தாமுறை மறைந்து விட்டது என்றுதிரு. இராமநாதனை நம்பச் செய்துவிட்டது போல் தோன்றுகிறது. உண்மை யாதெனில் சோனகப் பெண்கள் - இவ்வாறு கூறும் பொழுது வறுமை காரணமாகச் சட்டத்தைக் கௌரவிக்க முடியாமல் இருப்பவர்களை நான் குறிப்பிடவில்லை – அரேபியாவிலும் எகிப்திலும் உள்ள தங்கள் சோதரிகளைப் போன்று கண்டிப்பாக அந்நியர் பார்வையில் படாநிலையை அனுஷ்டிக்கின்றனர். பள்ளிவாசல்கள் உள்ளஇடங்களில் வீதிகளில் தொழுவது அரேபியர்களினதும் எகிப்தியர்களினதும் சிறப்பியல்புகள் அல்ல.

சோனகர் உடலமைப்புக்கள் பற்றி திரு. இராமநாதன் பின்வருமாறு கருத்துத் தெரிவி;க்கிறார்.

இவைகளில் கலாநிதி ரைலரின் கூற்றுப்படி நன்கு கவனிக்கப்பட்ட இன அடையாளங்களாவன, தோலின் நிறம், மயிரின் அமைப்பும் ஒழுங்கும், முகத்தின் உருவ அமைப்பு, உயரம். மண்டையோட்டின் ஒரேமாதிரியான தன்மை என்பனவாம். இந்த எல்லா அம்சங்களிலும் எனது கருத்துப்படி சராசரி தமிழனுக்கும் சராசரி சோனகனுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இல்லை. சோனகன் ஒரு தமிழன் போன்று உடையணிந்தால் அவன் ஒரு தமிழன் என்று இலகுவாகவே கருதப்படுவான். அதுபோன்றுதான் ஒரு தமிழனும், மண்டையோட்டு அளவுசம்பந்தமாக நான் ஒன்று குறிப்பிட வேண்டும். 1884 இல் நான் வழக்குரைஞனாக ஆஜரான ‘செட்டித்தெரு கொலை வழக்கு’ என அறியப்பட்ட ஒரு பிரபல்யமான கொலை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட மண்டையோடு ஒரு தமிழனுடையதா, அன்றா எனும் பிரச்சினை பற்றி நான், நாட்டையும் அதன் மக்களையும் பற்றி விசாலமான அனுபவமுடைய முக்கியமான மூன்று அறுவைச் சிகிச்சை மருத்துவர்களது ஆலோசனையைப் பெறவேண்டி இருந்தது. அந்த மண்டையோடு ஒரு தமிழனது மண்டையோடு போன்றே ஒரு சோனக மனிதனது, அல்லது ஒரு சிங்களவனது மண்டையோடாகவும் இருக்க முடியும் என்பதில் அவர்கள் எல்லோரும் ஏகோபித்த கருத்துக் கொண்டவர்களாக இருந்தனர். எங்கள் சமுதாயத்தின் மூன்று பிரிவினரின் மண்டையோடுகளைப் பிரித்தறிவது அவ்வளவு சிரமமாக இருக்கின்றது”.

இங்கும் அவரது வாதம் உறுதியற்றது. சில சந்தர்ப்பங்களில் தோலின் நிறம், மயிரின் அமைப்பும் ஒழுங்கும், முகத்தின் உருவ அமைப்பு முதலியனவற்றில் தமிழர்களுக்கும் சோனகர்களுக்கு மிடையே ஒருமைப்பாடு இருக்கின்றதென்பது உண்மைதான். ஆனால், அந்தச் சோனகர்களில் தாய்வழியாக தமிழ் இரத்தக்கலப்பு இருக்கின்றது எனும் உண்மையால் அந்தவிஷயம் தெளிவாக விளக்கப்படுகின்றது. அறபிகளும் உருவத்தில் எல்லோரும் ஒத்தவர்களல்லர். சிலர் ஐரோப்பியரை ஒத்திருக்கின்றனர். சிலர் ஆபிரிக்கரை ஒத்திருக்கின்றனர். சோனகர்களில் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் ஐரோப்பியரைப் போன்று உடையணிந்தால் ஐரோப்பியர்கள் என்றே கருதப்படுவர். கொழும்புக் கச்சேரியில் முதலியாராக இருந்த காலஞ்சென்ற ஜனாப் சீ. எல். சம்ஸ{தீன் என்பவர் ஒர் இலங்கை வாசி என்று சேர் வில்லியம் கிரசரியும் அல்டேலியின் ஸ்டான்லி பிரபுவும் சிறிது சிரமத்துடன் தான் நம்பினர் என்பதை நான் சிறந்த ஆதாரத்துடன் அறிந்துள்ளேன். உருவத்தில் ஒர் அறபியை, அல்லது ஐரோப்பியனை அவர் அவ்வளவுக்கு ஒத்திருந்தார். அவ்வித தோற்றத்தை அவர் மாத்திரம் கொண்டிருக்கவில்லை. தற்பொழுது கூட சோனகரிடையே தோற்றத்தில் அறபிகளை வியக்கத்தக்க அளவுக்கு ஒத்திருக்கும் எத்தனையோ பேர்களை நாம் காண முடியும். சமூக வழக்கங்களில் போன்று உடலமைப்பிலும் சில சோனகர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே உள்ள ஒருமைப்பாடானது இரத்தக் கலப்பில் சோனகர் முற்றிலும் தமிழர் என்பதை முடிவாக நிரூபிக்க மாட்டாது. செட்டித்தெருக் கொலை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட மண்டையோட்டைப் பரிசோதித்த சிறந்த வைத்தியர்களின் கருத்து யாதெனில், அது ஒரு தமிழனது மண்டையோடு போன்றே ஒரு சோனக மனிதனது, அல்லது ஒரு சிங்களவனது மண்டையோடாகவும் இருக்க முடியும் என்பது இங்கு முக்கியமானது. ஏனெனில். தமிர்களுக்கும் சோனகர்களுக்கு மிடையேயுள்ள உடல் தோற்ற ஒருமைப்பாடு மண்டையோடைப் பொறுத்த வரையில் முற்றுப்பெறவில்லை என்பதை அது நிறுவுகின்றது. அத்தோடு மண்டையோடுகளின் ஒருமைப்பாட்டிலிருந்து சிங்களவரும் தமிழரும் ஒரினத்தைச் சேர்ந்தவர்கள் என்றுதீர்மானிக்க முடியுமா என்னும் கேள்வியையும் அது எழுப்புகின்றது. இந்த விஷயம் சம்பந்தமாக மேலே எடுத்தாளப்பட்ட கலாநிதி ட்ரைமனின் வார்த்தைகளை நான் வாசகர்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மண்டையோட்டினால் பெறப்படும் அத்தாட்சியானது ஒர் இனத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிக்கப் போதுமானதன்று என்பதை அவர் ஆணித்தரமாக அறிவிக்கிறார்.

இலங்கைச் சோனகர் தமிழரின் வழித்தோன்றல்கள் என்பதை நிரூபிக்க அவர்களின் மொழி. வரலாறு, சமூக வழக்கங்கள். உடலமைப்பு எனும் அம்சங்கள் சம்பந்தமாக திரு. இராமநாதன் எடுத்துரைத்த வாதங்களின் அர்த்தமற்ற தன்மையை நான் எடுத்துக் காட்டினேன். அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் முடிவுப் பகுதியை எடுத்தாராய்வதற்கு முன்னர் “சோனகர்” அல்லது “ஸோனகர்” எனும் பெயர் பற்றி அவர் கொண்ட கருத்தைப் பரிசீலிக்க நான் இப்பொழுது முற்படுவேன். அவர் கூறுகிறார்:

“சிங்களவர் அவர்களை ‘யொன்னு’ என்றும் தமிழர் அவர்களைச் ‘சோனகர்’ என்றும் அழைக்கின்றனர். சமஸ்கிருத மொழியில் அரேபயா, ‘யவனம்’ என்றும் பாளி மொழியில் ‘யொன்ன’ என்றும் தமிழ் மொழியில் ‘சோனகம்’ அல்லது ‘ஸோனகம்’ என்றும் விளங்குவதால் சோனகரது ஆரம்பம் அரேபியாவிலிருந்துதான் என்பதற்கு ‘யொன்னு’ அல்லது ‘சோனகர்’ என்னும் இந்தப் பெயரே அத்தாட்சியாக உள்ளது என சோனகரிடையே அறபிகளின் மொழி, பெயர், ஆரம்பம் என்பனவற்றை (கிப்பனால் வர்ணிக்கப்பட்ட பழங்கால மௌரியர் போன்று) மேற்கொள்ளும் சிலர் கருதுகின்றனர். ‘லவன’ எனும் சமஸ்கிருதச் சொல்லிருந்து ‘லோன’ (பாளி மொழியில் உப்பு) என்பது பெறப்பட்டது. என்னும் ஒப்புவமையிலிருந்து நோக்கும் போது ‘யவன’ விலிருந்து ‘யொன்ன’ என்பது தோன்றியது என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், நெடில் எழுத்தான ‘ஒ’ வுடன் கூடிய சோனகர் என்பதைச் சமஸ்கிருத் மொழியிலிருந்து தெளிவாகக் கண்டுபிடிக்க முடியாது என்று வாதாடப்படலாம். ரெவரண்ட் பிதா கோபெட் என்பவர் எனக்கு எடுத்துக்காட்டியது போல அதன் மிக நேரடியான வரவானது ‘சூன’ என்பது ஹிந்துஸ்தானி மொழி மூலம் மிக இலகுவாக ‘சோன’ என ஆகியிருக்க முடியும். ஹிந்துஸ்தானி மொழியானது நெடில் எழுத்தான ‘ஊ’ வை ‘ஒ’வுக்கு அடிக்கடி மாற்றும் தன்மையுடையது. இஃது இவ்வாறிருப்பின் சோனகர் (அதிலே ‘கர்’ என்பது தமிழ் பன்மை நிலையைக் குறிக்கின்றது) என்பது ‘போர் ஆர்வமுள்ள மக்கள்’ என்றுபொருள்படும். பிதா பெஸ்சி, தமது தமிழ் அகராதியில், அந்தப் பெயரானது ‘சோழ நகர மக்கள்’ என்பதன் சிதைவாகும் எனக் கூறுகிறார். சோனகரில் பெரும் பிரிவினர் ‘சாபஈ’ உட்பிரிவைச் சேர்ந்த ‘ஸ{ன்னி’கள் ஆதலால் ‘ஸ{ன்னி’ என்பதிலிருந்து அந்தப் பெயர் பெறப்பட்டதாக திரு. சீ. பிறிட்டோ நினைக்கிறார்”

அரேபியா, சமஸ்கிருத மொழியில் ‘யவன’ என்றும் பாளி மொழியில் ‘யொன்ன’ என்றும் தமிழ் மொழியில் ‘ஸோனகம்’ என்றும் ‘யவன’ விலிருந்து ‘யொன்ன’ என்பது பெறப்பட்டதென்றும் திரு. இராமநாதன் ஏற்றுக்கொண்டது அதி முக்கியத்துவம் வாய்ந்தது எவ்வளவுக்கென்றால், ‘ஸோனகம்’ என்பது அரேபியா என்றும் ‘ஸோனகர்’ என்பது அரேபியர் என்றும் நிரூபிக்க என் சார்பில் சான்றுகள் சமர்ப்பிப்பதை அது அவசியமற்றதாக்கி விட்டது. ஆனால் தாம் ஏற்றுக் கொண்டதில் சிறிது மாற்றம் செய்வதற்காக ‘சோனகர்’ எனும் வார்த்தை பற்றி அவர் சில கருத்துரைகள் பகர்ந்துள்ளார். அவற்றை உண்மையிலே வாசகர்கள் சரியான தராதரத்துடன் கிணக்க வேண்டி உள்ளது ஏனெனில். அந்த நிலைமாற்றம் மட்டும் இல்லாவிட்டால் அவரது ஒப்புக் கொள்ளலானது தெட்டத்தெளிவான சுய கண்டனமாகும். ‘நெடில் எழுத்தான ‘ஒ’ உடன் கூடிய சோனகர் என்பதைச் சமஸ்கிருத மொழியிலிருந்து தெளிவாகப் பெற்றுக் கொள்ள முடியாது’ என்னும் அவரது கூற்றுக்குக் காரணம் எதனையும் அவர் எடுத்துக் காட்டவில்லை. அது அவருடைய ஒரு கருத்து மாத்திரமே. அது ரெவரண்ட் கோபெட் அவர்களினதும் திரு. பிறிட்டோவினதும் கருத்தைப் போன்று ஒன்றுக்கும் உதவாதது என்று நான் வருத்தத்துடன் கூறுகிறேன். ‘ஸோனகர்’ அல்லது ‘சோனகர்’ எனும் வார்த்தை அறபு – தமிழ் வார்த்தைகளாலான ஒரு கூட்டு வார்த்தையன்று@ அல்லது ஹிந்தஸ்தானி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டதுமன்று. மேற்படி சொல் தமிழ் என்றும் தமிழ் நிகண்டில் அதற்கு ஒர் இடமும் கருத்தும் இருக்கின்றன என்று தெளிவாக அறிந்த பின்னரும் இவர்கள் எப்படி இருட்டில் தடுமாறுகிறார்கள். எப்படி ஊகங்களுக்கு இடங்கொடுக்கின்றார்கள் என்பதைக் கவனிக்கும் பொழுது வேதனையாக இருக்கின்றது. திரு. ரொட்லர் தமது ஆங்கில – அகராதியில் (1834) ஹிந்து புவியியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஐம்பத்தாறு நாடுகளில் ஸோனகமும் ஒன்று என்றும் அது அரேபியாவாகும் என்றும் விவரிக்கிறார். இந்த விளக்கத்துக்குப் பிறகு ரெவரண்ட் கோபட் அவர்களினதோ திரு. பிறிட்டோவினதோ கருத்துக்களை நான் பொருட்படுத்தப் போவதில்லை. மேற்படி வார்த்தை ‘சூன’ ‘ஸ{ன்னி’ என்பனவற்றிலிருந்து பெறப்பட்டது என்னும் அவர்களின் கூற்றுக்கள் பொருத்தக் கோடானவையாகும் மேற்படி பெயர் “சோழ நகர மக்கள்” என்பதன் சிதைவு என்னும் ஊகம் பற்றி நான் எனது விளக்கத்தை முன்னர் கொடுத்துள்ளேன். ‘யவன’எனும் வார்த்தை இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் இருந்த போர் ஆர்வங் கொண்ட இனங்களுக்கு முதன் முதலாக உபயோகிக்கப்பட்டதென்றும் பின்னர் அது அயோனியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் உபயோகிக்கப்பட்டதென்றும் இறுதியாக அறபிகளுக்கு உபயோகிக்கப்பட்டதென்றும் காட்டும் பொருட்டு அந்த வார்த்தையின் வரலாற்றைத் தேடிப் பிடித்ததன்பின் திரு. இராமநாதன் பின்வருமாறு முடிக்கிறார்.

“யவனர் எனும் பெயரை இறுதியாகப் பெற்றவர்கள் அறபிகளும் ஏனைய முஸ்லிம்களுமாவர். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பனினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவிலிருந்த முகம்மதியர்கள், ‘மிலேச்சர்கள்’ அல்லது ‘காட்டுமிராண்டிகள்’ என அறியப்பட்டனர். அது அந்தக்காலப் பகுதியில் இலங்கையில் வாழ்ந்த அன்னவர்களைச் சிங்களவர் ‘பம்புரோ’ என்று அறிந்திருந்தது போலாகும். பிற்காலத்தில் சிங்களவர் அவர்களை ‘யொன்னு’ என்று அறிந்திருந்தனர். அதேசமயம் தமிழர் ‘சோனகர்’ எனும் வார்த்தையை உபயோகிக்கப் பழகிக் கொண்டனர்.”

இந்தியர்களிடமிருந்து யவனர் எனும் பெயரை இறுதியாகப் பெற்றவர்கள் அறபிகளும் ஏனைய முஸ்லிம்களும் ஆவர் என்பதை நான் தர்க்கத்துக்காக ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். இலங்கைச் சோனகர் அறபு வழித்தோன்றல்கள் அல்ல என்பதை அது காட்டுகின்றதா? அறபிகள் சிந்துவைத் தற்காலிகமாகக் கைப்பற்றிய காலமான எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் யவனர்களின் வரலாறு என்னவாக இருந்தாலும் அந்தக் காலப் பகுதி முதல்சமஸ்கிருத மொழியில் அறபிகள், யவனர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். பாளி வார்த்தையான ‘யொன்ன’ என்பது ‘யவன’ விலிருந்தே பெறப்பட்டதென்று திரு. இராமநாதன் ஏற்றுக்கொள்கிறார். இலங்கைச் சோனகரைக் குறிக்கப் பாளி வார்த்தையை உபயோகிக்கும் சிங்களவர் அந்த வார்த்தையைக் ‘கரையோரச் சோனக’ ரைக் குறிக்க உபயோகிப்பதில்லை. அவர்களைச் சிங்களவர் ‘ஹம்பன்காரயா’ என்றே அழைக்கின்றனர். இந்தியாவில் ‘யவன’ எனும் சொல் அறவிகளுக்கும் ஏனைய முஸல்மான்களுக்கும் பிரயோகிக்கப்பட்டதாயினும் ‘யொன்னு’ அல்லது ‘யொன்’ எனும் சொல் இலங்கையில் சிங்களவர்களால் அவ்வளவு தாறுமாறாகப் பிரயோகிக்கப்படவில்லை. கொழும்பில் கரையோரச் சோனகர் வாழும் பகுதியான ஹம்பன்வெல்ல (பாங்க்ஷல்) வும் இலங்கைச் சோனகர் வாழும் பகுதியான யொன் வீதிய (சோனகத்தெரு) வும் இதற்குச் சான்று பகர்கின்றன. யவனர்களைப் போன்று சோனகர்களுக்குப் பல்வேறுபட்ட வரலாறு இருந்ததாக நாம் அறியவில்லை. அத்துடன சோனகர் என்பது அரேபியாவின் மக்களை மட்டுமே கருதுகின்றது என்பதை திரு. ரொட்லரின் விளக்கம் உறுதிப்படுத்துகின்றது.

ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் முகம்மதியர்கள் ‘மிலேச்சர்கள்’ பம்புரோக்கள் எனும் வார்த்தைகளால் அறியப்பட்டனர் என்று திரு. இராமநாதன் கூறுகிறார். ‘மிலேச்சர்கள்’ எனும் புனைபெயருக்கு இழிந்த கருத்து எப்போதும் கொள்ளப்படுவதில்லையென்று நான் குறிப்பிட வேண்டும். ஏனெனில் ஹிந்துகள் இப்பொழுதும் கிறிஸ்தவ மதத்தை ‘மிலேச்ச மதம்’ என்று அழைப்பதை நாம் கேள்வியுறுகிறோம். எனவே கிறிஸ்தவ மதம் காட்டுமிராண்டிகளின் மதம் என்னும் கருத்தை இந்த வார்த்தைகள் தருகின்றன என்று நாம் கொள்ள வேண்டுமா? இந்தியாவுக்குக் கிறிஸ்தவ மதத்தை அறிமுகம் செய்துவைத்த ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகளா? அவர்கள் விவேகத்திலும் நாகரிகத்திலும் ஹிந்துக்களைவிடக் கீழ்த்தரமானவர்களா? ஆகவே, ‘மிலேச்சர்’ எனும் வார்த்தை வெளிநாட்டவரைக் குறிக்க உபயோகிக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது. எனவே, இந்தியாவுக்கு வருகைதந்த ஆரம்ப அறபிகள் இந்தியர்களால் நன்கு அறியப்படும் வரை மிலேச்சர், அதாவது வெளிநாட்டவர் (காட்டுமிராண்டிகள் அல்ல) எனக் கருதப்பட்டனர். ‘பம்புரோக்கள்’ எனும் வார்த்தையும் அதேமாதிரியான ஒர்உட்கருத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பேருவலையில் அரசுக்குப் போற்றத்தக்க சேவைகள் புரிந்து அதற்காகச் சிறந்த முறையில் சன்மானமும் பெற்று ஒரு நாகரிக நிலையில் வாழ்ந்த சோனகரை நாகரிகமற்ற காட்டு மிராண்டிகள் எனக்கருதுவது முட்டாள்தனமாகும். திரு. இராமநாதன் மேற்கோள்காட்டிய அந்தக் காவியங்களின் நூலாசிரியர்கள் உண்மையிலே சோனகர் கொடிய காட்டுமிராண்டிகள் எனக் கருதியிருந்தால் அந்தக் காலப் பகுதியில் பேருவலையில் வாழ்ந்த சோனகரது உண்மை நிலை பற்றி அவர்கள்; மிகவும் வருந்தத்தக்க முறையில் அறியாதவர்களாக இருந்திருக்கின்றனர். இறுதியாகத் திரு. இராமநாதன் பின்வருமாறு முடிக்கிறார்:

“1.85,000 பேரில் எண்ணிக்கையில் ஏறக்குறைய 92,500 பேர்களான இலங்கைச் சோனகரின் இனம் சம்பந்தப்பட்ட வரையில் அவர்களும் தமிழர்களே என்ற முடிவுக்கு வர எமக்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. நான் கருதுவது அவர்களில் மிக அதிகப்படியானோரையாகும் - எனினும், உண்மையில் நாம் இங்கும் அங்குமாக ஒர் அறபியின் அல்லது ஏனைய வெளிநாட்டுப் பரம்பரையின் சின்னத்தைத் தாங்கிய சில குடும்பங்களைத் தற்செயலாகக் காணத்தான் செய்கிறோம். அவர்கள் அந்தச் சமுதாயத்தில் ஐந்து வீதமானோர் அல்லது 92,500 பேரில் 5,000 பேர் என்று சொல்லலாம்”

தமது ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிவராமல் கெட்டித்தனமாக அடக்கிவைத்திருந்தாலும் தாம் மறக்க முடியாத இப்போது காணப்படும் அத்தாட்சிகளைக் கொண்டு இலங்கைச் சோனகரின்மிக அதிகப்படியானோர் மாத்திரமே தமிழர் எனவும் தமி;ழ்ச் சின்னத்தைத் தாங்கியிராத சில குடும்பங்களை இங்குமங்குமாக அவர் தற்செயலாகக் கண்டிக்கிறார் என்றும் தமது ஆராய்ச்சிக் கட்டுரையின் முடிவுப் பகுதியில் திரு. இராமநாதனே ஏற்றுக் கொள்ள வற்புறுத்தப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானது. அவரது கணக்கீட்டின்படி 1881 இல் காணப்பட்ட 92,500 இலங்கைச் சோனகர்களில் 5,000 பேர் அறபு அல்லது ஏனைய வெளிநாட்டுப் பரம்பரையினர் ஆவர். சோனகரின் மொழி, வரலாறு, சமூக வழக்கங்கள் என்பனவற்றிலிருந்து பெறப்பட்ட அத்தாட்சிகளைக் கொண்டு பெருமுயற்சியின் பின்னர் அவர் பெற்ற முடிபைஇவை பொய்யாக்கியுள்ளன. எஞ்சிய 87,500 சோனகர்களைப் போன்று அவர்களும் தங்கள் சொந்த மொழியாகத் தமிழையே பேசினர். அவருடைய கருத்துப்படி அவர்கள் பதின்னான்காம் நூற்றாண்டில் காயலிலிருந்து குடிபெயர்ந்து வந்து பேருவலையில் குடியமர்ந்தவர்களின் வழத்தோன்றல்களாயிருந்தனர். அத்துடன் அவர்கள் தமிழர்களிடமிருந்து தங்கள் சமூக வழக்கங்களிற் சிலவற்றைக் கடன்வாங்கினர். இருந்தும் அறபு, அல்லது ஏனைய வெளிநாட்டுப் பரம்பரையின் சின்னத்தை அவர்கள் தங்கியிருந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் தமிழர்களென்று தீர்மானிக்கப்படவில்லை. திரு. இராமநாதன் 92,500 சோனகர்களில் ஒவ்வொரு வரையும் தனித்தனி கண்டாரா? அல்லது அவர்களில் சிலரையா? அத்துடன், 92,500 பேர்களில் 5,000 பேர் தமிழ்ச் சின்னத்தை தாங்கியிருக்கவில்லை யென்று அனுபவத்தின் மூலம் அவர்அறிந்தாரா, அல்லது அது வெறும் அனுபவத்தின் மூலம் அவர் அறிந்தாரா அல்லது அது வெறும் ஊகம் மாத்திரமா? அது ஆதாரமற்ற வெறும் ஊகம் மாத்திரமே என்று நான் நம்புகிறேன். தமிழரின் வழித்தோன்றல் அல்லாத சோனகரை ஏறக்குறைய ஐயாயிரத்துக்குக் கட்டுப்படுத்த அவருக்கு எதுவித காரணமுமில்லை. சோனகரது முகச்சாயலை உற்று நோக்குவதன் மூலம் அவர்களின் பரம்பரையைக் கண்டுபிடிக்கும் அதே நோக்கத்தோடு அவர் இத்தீவு முழுவதும் பயணம் செய்திருந்தாலன்றி அந்த விஷயத்தில் அவரது கண்டுபிடிப்பில் நம்பிக்கை கொள்ள முடியாமல் இருக்கின்றது அவ்வித ஒரு நோக்கத்துக்காக அவர் இத்தீவு முழுவதும் பயணம் செய்தார் என்றோ, அல்லது முகச்சாயலை உற்று நோக்குவதன் மூலம் ஒருமக்கள் தொகுதியின் இனத்தைக் கண்டுபிடிக்கும் கலையில் அவர் தேர்ந்தவராயிருந்தார் என்றோ நாம் அறியவுமில்லை. ஆகவே, தமிழரின் வழித்தோன்றல்களல்லாத இலங்கைச் சோனகரது எண்ணிக்கை இவ்வளவு என்றுஅவர் கொண்ட வரையறையை நாம் தயக்கமின்றி நிராகரிக்க முடியும் என நினைக்கிறேன். திரு. இராமநாதனது கருத்துப்படி இலங்கைச் சோனகர் எல்லோரும் பரம்பரையில் தமிழர்களல்ல, அவர்களில் ஒரு பகுதியினர் மாத்திரமே தமிழர்கள் என்பதை இப்பொழுது வாசகர்கள் அறிந்து கொள்வர். இலங்கைச் சோனகர்களிடையே அறபிகளும் இருக்கின்றனர் என்பதில் தமக்குச் சந்தேகமில்லை என்றும் தமது நோக்கம் அவர்களது விகிதாசாரத்தை ஆராய்வதும் அதனைத் தீர்மானிப்பதுமே என்றும் தமது ஆராய்ச்சிக் கட்டுரையின் தொடக்கத்தில் அவர் அரச ஆசிய கழக இலங்கைக் கிளை முன்னிலையில் கூறியிருந்தால் அவர் தமது நிலையை நன்கு விளக்கியிருப்பார். அத்தோடு அவர் அவ்வாறு செய்திருந்தால் அவருடைய பேச்சுக்குக் காதுகொடுத்த அந்தக் கண்ணியமிக்க கழகத்தின் உறுப்பினர்கள், அந்த விகிதாசாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள அவருக்கிருந்த வாய்ப்பும் அவருக்குக் கிடைத்த தகவலும் என்ன, அவர்கள் முன் அவரால் வைக்கப்பட்ட சான்றுகளின் மூலம் அந்த விஷயம் சம்பந்தமாக அவர் கொண்ட முடிபு நிருபிக்கப்பட்டுள்ளதா என்பனவற்றை அறிந்து கொள்வதில் தங்களது எண்ணத்தைச் செலுத்தியிருப்பர். ஆனால் அவர் அந்த விஷயத்தைத் தெளிவாக்கவும் இல்லை@ அவர்கள் அதுபற்றி விளக்கம் கோரவுமில்லை. நான் முன்னர் எடுத்துக்காட்டியது போல, அந்த விஷயத்தில் அவரது முடிபானது எவ்வளவுக்கு முற்றுமே பயனற்றதோ அவ்வளவுக்கு எந்த உறுதியான ஆதாரத்தின்மீது அமையவுமில்லை அவர் சந்தித்த சோனகர்களில் சிலர் அறபிகளை ஒத்திருந்தனர் என்பதும் ஏனையோர் அவ்வாறிருக்கவில்லை யென்பதும் உண்மையா யிருக்கலாம். ஆனால் முன்னவர் இரத்தத் தொடர்பில் கலப்பற்ற அறபிகளாகவும் அதேவேளையில் பின்னவர் தமிழ்த் தாய்மார்கள் என்பதை அவர் விளக்கிக் கொள்ளவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.

இறுதியாக, 1881இல் இத்தீவில் காணப்பட்ட 1,85,000 சோனகர்களை இலங்கைச் சோனகர்களுக்கும் கiயோரச் Nசுhனகர்களுக்குமிடையில் சரிசமமாகப் பிரிக்கலாம்; என்று திரு. இராமநாதன் கூறும்பொழுது நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும். ஆனால் இலங்கைச் சோனகர் காயல் பட்டணத்திலிருந்து வந்தார்களென்றும் அவர்களுக்குக் ‘கரையோரச் சோனக’ரது வரலாற்றினின்றும் வேறுபட்ட ஒரு வரலாறு இல்லையென்றும் கூறும் அவரது தத்துவத்தை நிரூபிக்க அவர் தவறிவிட்டார் என்பதை நான் மேலே காட்டியுள்ளேன். மேலும் நான் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டியுள்ளேன்: பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் காயல்பட்டணமானது முகம்மதிய – தமிழ், அல்லது அறபு-க் குடியேற்றம் ஒன்றை இலங்கைக்கு அனுப்பும் நிலையில் இருக்கவில்லை@ அவரது கூற்றுப்படி அந்தக் காலப் பகுதியில்தான் சோனகரின் முதலாவது குடியேற்றம் காயலிலிருந்து குடிபெயர்ந்து வந்து பேருவலையில் குடியேறியது. கிறிஸ்தவ சகாப்தத்தின் முதலாம் நூற்றாண்டில் சோனகர் இத்தீவில் முதன்முதலாகக் காணப்பட்டனர். அத்துடன பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் பேருவலையில் அவர்கள் தங்களை முற்றாக ஸ்திரப்படுத்திக் கொண்டனர். அந்தக் காலப்பகுதியில் அரசுக்கு அவர்கள் நல்கிய சேவைகள் சிங்கள அரசனால் மதிக்கப்பட்டன. அவன் அவர்களுக்குச் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் வழங்கினான். பிற்காலங்களில் அவற்றை இந்நாட்டை வெற்றிக்கொண்ட ஐரோப்பியர்கள் முற்றாகவோ, பகுதியாகவோ உறுதிப்படுத்தினர். பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் இத்தீவில் குடியேறிய முகம்மதியர் காயல்பட்டணத்திலிருந்து வந்த சோனகரின் வழித்தோன்றல்களாக இருந்திருக்க முடியாது. அத்துடன் காயலிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள், பரம்பரையில் அறபிகளாகவோ, தமிழர்களாகவோ இருந்தனர்@ ஆனால், அவர்கள் தமிழர்கள் என்பது திரு. இராமநாதனது ஊகம் மாத்திரமே தவிர நிலைநாட்டப்பட்ட உண்மையல்ல.

எட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த அறபிகளது குடியேற்றம் ஒன்று இத்தீவின் வௌ;வேறு இடங்களில் குடியமர்ந்தது என்னும் சேர் அலெக்சாந்தர் ஜொன்ஸ்டனால் பதியப்பட்ட மரபு வரலாற்றில் நம்பிக்கை இழக்கச் செய்ய திரு. இராமநாதன் எடுத்துக்காட்டிய தர்க்கங்களின் முற்றுமே பயனற்ற தன்மையையும் நான் எடுத்துக்காட்டியுள்ளேன். திரு. காசிச்சிட்டியால் எடுத்துக் கூறப்பட்ட மரபு வரலாறு சம்பந்தமாக நான் கூறும் பொழுது, ஆசீர்வதிக்கப்பட்ட திரு நபி முகம்மது (ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்) அவர்களின் ஆயுட்காலத்தில் (ஏழாம் நூற்றாண்டு) அரேபியாவிலிருந்து குடி பெயர்ந்தவர்களென அந்த மரபு வரலாற்றிலே குறிப்பிடப்படும் ஹாஷிமீய அறபிகள் காயல்பட்டணத்தில் ஒரு குடியேற்றத்தை ஸ்தாபித்திருக்க முடியாது என்றும். ஏனெனில் அந்தப் பட்டணம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன் உருவாகியிருக்கவில்லை என்றும் எடுத்துக்காட்டியுள்ளேன். இலங்கைச் சோனகரின் சமூக வழக்கங்களிற் சில தமிழர்களிடமிருந்து கடன்வாங்கப்பட்டிருப்பதாலும் சோனகர்களிலும் தமிழர்களிலும் சிலர் உடலமைப்பில் ஒருவரையொருவர் ஒத்திருப்பதாலும் இலங்கைச் சோனகர் தமிழர்களாவர் என திரு. இராமநாதன் கொண்ட முடிபு பிழையானது என்பதையும் நான் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டியுள்ளேன். சோனகர்களால் பேசப்படும் மொழியிலிருந்து அவர் கொண்ட அனுமானமும் அதேபோன்று பிழையானது. ஒரு மக்கள் தொகுதி தங்கள் மூதாதையரின் மொழியைக் கைவிட்டு தாங்கள் குடியமர்ந்த நாட்டில் வாழும் குடிமக்களின் மொழியை மேற்கொள்வது இயற்கைக்கு முரணானதோ, அல்லது வழக்கத்துக்கு மாறானதோ அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டியுள்ளேன். சோனகர் எவ்வாறு அறபு மொழியைக் கைவிட்டுத்தமிழ் மொழியை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது என்பது பற்றியும் நான் விளக்கியுள்ளேன். முற்றுமே சிங்களப் பிரதேசங்கள் எனக் கருதப்பட்ட இலங்கையின் சில மாவட்டங்கள், அங்குசோனகர் குடியேறிய காலப் பகுதியில் மலபாரிகளின் கட்டுப்பாட்டின் கீழும் செல்வாக்கின் கீழும் இருந்தன என்பதும் அவர்கள் அவற்றை அடிப்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளன. அவர்களுடனேயே சோனகர் தொடர்பு வைத்திருந்தனர். அதனால் அந்த மாவட்டங்களிலும் தமிழ் மொழி அவர்கள் மேற்கொண்ட மொழியாக ஆகியது. சுருக்கமாகச் சொல்லப் போனால் இலங்கைச் சோனகரால் பேசப்படும் மொழியோ, அல்லது அவர்களின் வரலாறு, சமூக வழக்கங்கள், உடலமைப்புக்கள் என்பனவோ இனவரலாற்றின் அடிப்படையில் அவர்கள் தமிழர்கள் என்று தனியாக, அல்லது கூட்டாக நிரூபிக்கவில்லை என்பதை நான் முடிவாக எடுத்துக் காட்டியுள்ளேன்.

இன்னும் ஒரு வார்த்தை. 1881இல் காணப்பட்ட 92,500 இலங்கைச் சோனகர்களில் ஒரு சிறு தொகையினர் இஸ்லாத்தைத் தழுவிய தமிழர். சிங்களவர் ஆகியோரின் வழித்தோன்றல்களாவர். எவ்வாறயினும் நான் முன்னர் எடுத்துக் கூறியது போல, அவர்களது மதமாற்றம் ஒரு மதமாற்றத் தூதுக் குழுவின் செல்வாக்கினால் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் அனேகமாக செல்வம் படைத்த சோனகர்களின் வேலையாட்களாவர். அவர்கள் தங்கள் அறபிகளின் பரம்பரையினர் என உரிமை கோரவில்லையாயினும் அவர்கள் தங்கள் எஜமானர்களின் நடையுடை பாவனைகளை மேற்கொண்டதானது அவர்களையும் அவர்களின் எஜமானர்கள் அறியப்பட்ட பெயரைக் கொண்டு அழைப்பதற்கு வழிகோலியது. அந்த மதம் மாறியவர்களிடையே ஈடேற்றம் தேடித் தங்கள் சொந்த விருப்பப்படி இஸ்லாத்தைத் தழுவிய சிங்களவர்களும் தமிழர்களும் இருந்தனர். அவர்களது எண்ணிக்கை அதிகமில்லை.

பின்னிணைப்புக்கள்

பின்னிணைப்பு “அ”

பெரிய பிரித்தானியாவினதும் அயர்லாந்தினதும் அரச ஆசிய கழக நிலைய அறிக்கை
தொகுதி 1, பக்கம் 537

கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சம்பந்தமாக சேர் அலெக்சாந்தர் ஜொன்ஸ்டன், நைட், வீ. பீ. ஆர். ஏ. எஸ் அவர்கள் செயலாளருக்கு அனுப்பிய கடிதம்
(1827 பெப்ரவரி 3 ஆந் தேதி வாசிக்கப்பட்டது)

ஐய,

இலங்கைத் தீவின் கிழக்குப் பக்கமான திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கல்வெட்டொன்றின் அதே உருவ மாதிரிப் படிவத்தைச் சிறிது காலத்துக்கு முன் உங்களுக்கு அனுப்பிவைப்பதில் நான் பெருமதிப்படைந்தேன். இப்பொழுது இத்தீவின் மேற்குப் பக்கமான கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றின் அதே உருவ மாதிரிப் படிவத்தை உங்களுக்கு அனுப்பி வைப்பதில் பெருமதிப்படைகிறேன்.

இரண்டாவது கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இத்தீவின் மிகவும் அனுகூலமான பகுதிகளில் தீர்வையில்லாத துறைமுகங்களை நிறுவுவதன் மூலமும் அரசாங்கத்துக்குப் பயனில்லாதவையும் இலங்கையில் முகம்மதிய வர்த்தகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒவ்வாதவையுமான அனேக வரிகளை ஒழிப்பதன் மூலமும் இலங்கையை, அது பண்டைய காலத்தில் இருந்ததைப் போன்று நவீன காலத்திலும் இந்தியாவிலே அவர்களது வர்த்தகத்தின் பெரும் மத்திய களமாக ஆக்குவதற்காக மலபார், கொரமந்தல், மலாக்காக் கரைகளிலுள்ள முகம் மதியத் தனவந்தர்களைத் தூண்டுவதன் மூலமும் அதே மாகாணங்களை அவற்றின் பண்டைய வணிக வள நிலைக்குக் கொண்டு வருவதற்காக நான் 1806 இல் அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்த திட்டத்தோடு அது சம்பந்தப்பட்டிருப்பதனாலாகும்.

பின்னையது அதேபோன்ற ஒரு கடினமான ஆராய்ச்சியின் பெறுபேறாகும். இலங்கையையும் மலபார், கொரமந்தல், மலாக்காக் கரைகளையும் கிழக்கத்திய தீவுகளையும் சேர்ந்த முகம்மதிய மத அறிஞர்களிலும் வணிகர்களிலும் மிகவும் கற்றுத் தேர்ந்தவர்களதும் அறிவொளி பெற்றவர்களதும் உதவியுடன் இந்தியாவினதும் இலங்கையினதும் கரைகளிலே முகம்மதியர்களின் பண்டைய வாணிப நிறுவனங்களின் வரலாறு பற்றி ஆராய நான் அந்த ஆராய்ச்சியைத் தொடக்கி வைத்தேன்.

நான் கலந்தாலோசித்த வௌ;வேறான தேசிய இனத்தையும் இயல்பையுங் கொண்ட மக்களிலிருந்து பெற்ற பின்னைய விளக்கமானது, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இலங்கையிலே முகம்மதிய வணிகர்களால் வர்த்தகம் கொண்டு நடாத்தப்பட்ட முறை சம்பந்தமாகப் புதுமையான தகவலைத் தந்ததாலும், அந்தத் தகவலானது அந்த இருகாலப் பகுதிக்குமிடையே இந்தியாவின் வர்த்தக வரலாற்றிலே உள்ள ஆழ்ந்த அகன்ற பிளவின் ஒரு பகுதியை நிரப்புவதற்கு உதவலாம் என்பதாலும் இத்துடன் வரும் கல்வெட்டைக் கண்டுபிடிக்க எனக்கு வழிகோலிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை நான் உங்களுக்கு விவரிக்கிறேன். அதேவேளையில், முகம்மதியர் தங்களை இத்தீவிலே ஸ்திரப்படுத்திக் கொண்ட ஆரம்ப காலத்திலிருந்து தற்போதைய காலம் வரையிலான அவர்களது நிலையையும் இலங்கையில் அவர்களது வர்த்தகத்தையும் பற்றிய ஒரு சுருக்கமான விவரத்தை அரச ஆசிய கழகத்துக்குச் சமர்ப்பிக்க இப்பொழுதுள்ள இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இலங்கையில் குடியேறிய முதல் முகம்மதியர்கள் அவர்களின் வழித்தோன்றல்களிடையே வழக்கிலுள்ள மரபு வரலாற்றின்படி எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் கலீபா அப்த் - அல்மெலெக் பின் மர்வானின் கொடுங்கோன்மை காரணமாக அரேபியாவிலிருந்து துரத்தப்பட்ட ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த அறபிகளின் ஒரு பிரிவினராவர். அவர்கள் யூப்பிரட்டீஸிலிருந்து தெற்கு நோக்கி வந்து கொங்கனிலும் இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதிகளிலும் இலங்கைத் தீவிலும் மலாக்காவிலும் குடியேறினர் அவர்களில் இலங்கைக்கு வந்த பிரிவினர் பெரியதான எட்டுக் குடியிருப்புக்களை தீவின் வடகிழக்கு வடக்கு, மேற்குக் கரைகளில் ஆக்கிக் கொண்டனர். அவையாவன: திருகோணமலையில் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் ஒன்றும் மாந்தோட்டையிலும் மன்னாரிலும் ஒன்றும் குதிரைமலையில் ஒன்றும் புத்தளத்தில் ஒன்றும் கொழும்பில் ஒன்றும் பாபரீனில் ஒன்றும் காலிமுனையில் ஒன்றுமாகும். இலங்கையின் வடமேற்பாகத்திலுள்ள மாந்தோட்டையிலும் மன்னாரிலும் அமைந்த குடியேற்றப் பிரதேசமானது இந்தியத் தீபகற்பத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அது அமைந்திருந்த இடம் காரணமாகவும் ஆதாமின் பாலத்தினூடாக அமைந்த இரண்டு வழிகள் காரணமாகவும் மதுரையினதும் இலங்கையினதும் கரைகளில் சங்கு, முத்துக் குளிப்பின் காரணமாகவும், முன்னர் இந்தியாவின் பண்டைய ஹிந்து பாரசீக வர்த்தகர்களுக்கு எல்லா வர்த்தகத்தினதும் பெரும் மத்திய ஸ்தானமாக விளங்கியது போல் முகம்மதியர்களுக்கும் இயற்கையாகவே அவர்கள் ஒரு பக்கத்தில் எகிப்து, அரேபியா, பாரசீகம், மலபார்க் கரைகள் என்பவற்றுடனும் மறுபக்கத்தில் கொரமந்தல் கரைகள், வங்காள விரிகுடாவின் கீழ்த்திசைக் கரைகள், மலாக்கா, சுமாத்ரா, ஜாவா மொலுக்காத் தீவுகள், சீனா என்பவற்றுடனும் கொண்டு நடத்திய எல்லா வர்த்தகத்தினதும் பெரும் மத்திய ஸ்தானமாக விளங்கியது. தங்கள் கடற் பிரயாணத்தின்போது கற்றாழை, கராம்பு, சாதிக்காய், சந்தன மரம் என்பனவற்றைச் சேகரித்துச் சென்ற சீனப்பட்டு வியாபாரிகள் அரேபியா, பாரசீகக் குடா நாடுகள் என்பனவற்றின் குடிமக்களுடன் தங்குதடையற்றதும் பயன்தருவதுமான வியாபாரத்தை அவரவர் நாடுகளிலிருந்து சமதூரத்தில் அமைந்த இலங்கையின் மேற்குறிப்பிட்ட பாகத்தில் கொண்டு நடாத்தினர். உண்மையிலே அந்த இடம் தான் கிழக்கிலிருந்து வந்த எல்லாச் சரக்குகளையும் மேற்கில் இருந்து வந்த சரக்;குக்களுக்காகப் பண்டமாற்றுச் செய்யும் இடமாக இருந்தது. இலங்கையில் குடியேறிய முகம்மதிய வர்த்தகர்கள் பதினோராம் நூற்றாண்டின் மிக ஆரம்ப காலத்திலேயே அதிக செல்வத்தையும் செல்வாக்கையும் பெற்றிருந்தனர் எனினும் அத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி வரையும் அதன் துறைமுகங்களில் அவர்கள் அதிக விசாலமானதும் அதிக வருவாய் தரக்கூடியதுமான வர்த்தகத்தைத் தம்வசம் கொண்டிருந்தனர் எனினும் பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளின் போதுதான் அவர்கள் அத்தீவில் வர்த்தக வளத்திலும் அரசியல் செல்வாக்கிலும் அதி உச்சகட்டத்தை அடைந்திருந்தனர். அந்தக் காலப் பகுதியில் மன்னாரையும் மாந்தோட்டையையும் சேர்ந்த முகம்மதியப்பெரும் வணிகர்கள், பலவிதமான வர்த்தகப் பொருட்களை உற்பத்தி செய்த பிரதேசங்களின் சுற்றுப் புறங்களில் அமைந்த வௌ;வெறு துறைமுகப் பிரதேசங்களில் வதிந்த தங்களின் கீழுள்ள துணையாட்களிடமிருந்து இந்த வர்த்த மத்திய நிலையத்தில் அமைந்த மிகப் பெரிய பண்டகசாலைகளுக்குத் தீவின் அதிகம் பெறுமதி வாய்ந்த விளைபொருட்களைப் பெற்றனர். திருகோணமலையிலிருந்த தங்கள் துணையாட்கள் மூலம் அவர்கள் அரிசியும் கருநீலச் சாயமும் பெற்றனர். யாழ்ப்பாணத்திலிருந்தவர்களிடமிருந்து சாயவேர், அல்லது சிவப்புச் சாயம், கரும்பனை மரம், சங்கு என்பனவற்றையும் குதிரைமலையிலிருந்தவர்களிடமிருந்து முத்துக்களையும் புத்தளத்திலிருந்தவர்களிடமிருந்து வெற்றிலையுடன் தின்பதற்காகப் பாக்கையும் தட்டுமுட்டுச் சாமான்களுக்காகக் கருங்காலி, முதிரை, கருமுதிரை மரங்களையும் சாயமூட்டுவதற்காக சப்பங்கி மரத்தையும் கொழும்பிலிருந்தவர்களிடமிருந்து கறுவாவையும் டு மாணிக்கக் கற்களையும் பாபரீனிலிருந்தவர்களிடமிருந்து தேங்காய் எண்ணெய், தும்பு என்பவற்றையும் காலிமுனையிலிருந்தவர்களிடமிருந்து தந்தத்தையும் யானையையும் பெற்றனர்.

ஆதாமின் பாலம் எனும் பெயரால் அறியப்படுவதும் இந்தியத் தீபகற்பத்தின் தென்பகுதியிலிருந்து இலங்கைத் தீவு வரை பரந்திருப்பதுமான மணல் திட்டை எந்த அளவினதான கப்பலும் கடந்து செல்லக்கூடியதான இரண்டே இரண்டு கடற்பாதைகளையும் மன்னார்த் தீவுக்கருகில் தங்கள் சொந்தச் செலவால் பேணப்பட்ட போர்க்கருவிகளைக் கொண்ட கப்பல்கள் மூலம் அவர்கள் அடக்கியாண்டனர். நாட்டிலே அவர்களால் புழங்கப்பட்ட செல்வத்தின் மூலம் அடுத்திருந்த மாகாணங்களின் குடிமக்கள் தங்கள் குளங்களை அல்;லது நீர்த்தேக்கங்களை நீரின் பொருட்டுத் தொடர்ந்து பழுதுபார்த்துக் கொள்ளவும் தங்கள் நெல்வயல்களைத் தொடர்ந்து விளைத்துக் கொள்ளவும் முடிந்தது. அவர்களது வாணிப வளம் ஓங்கியிருந்த நாட்களிலே மாந்தோட்டையிலிருந்து சில மைல்களுக்குள்ளிருப்பதும் இப்போது பெரிதும் பழுதடைந்தும் முழுக்க உபயோகமற்று மிருப்பதுமான ராட்சதக் குளம் என அழைக்கப்படும் பெரிய குளம் அல்லது செயற்கை ஏரியானது பூரணமாகத் திருத்தப்பட்டும் அதிகம் உபயோகமுள்ளதாகவும் இருந்தது. இப்பொழுது அனேகமாகப் பாலைவனமாகக் கிடக்கும் அடுத்திருக்கும் மூன்று மாகாணங்களான மூஸாலை, மாந்தோட்டை, நானாட்டான் என்பன அப்போது மிக்க சன நெருக்கடி நிறைந்தனவாயும் மிக்க விளைச்சல் உள்ளனவாயும் இருந்தன. இந்தியத் தீபகற்பத்தின் தென்பகுதியில் இருந்த அவர்களின் வௌ;வேறு ஸ்தாபனங்கள் மூலம் அவர்கள் அங்கிருந்து அறுநூறு அல்லது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு முதலாவது நெசவாளர் குழுவொன்றை அறிமுகப்படுத்தி வைத்தனர். அத்தீவில் எப்பொழுதாயினும் குடியேற்றப்பட்ட நெசவாளர் குழு அதுவேயாகும். சு

ஒருபுறத்தில் பாரசீகக் குடா, பஸரா ஆகியவற்றினூடாக பக்தாதுடனும் சிலாபத்தின் கீழிருந்த எல்லா நாடுகளுடனும் மறுபுறத்தில் அரேபியக் குடா, எகிப்து ஆகியவற்றினூடாக மத்தியதரைக்கடல், ஸ்பெயின் கரைகளின் ஒரமாக அமைந்திருந்த எல்லா முகம்மதிய வல்லரசுகளுடனும் அவர்கள் வைத்திருந்த சமூகத் தொடர்பின் மூலம் அந்நாடுகளிலிருந்து அவர்கள் இலங்கைக்கு முகம்மதியச் சட்டங்கள் ளு பற்றிய அறபு மொழியிலான மூல நூல்களையும் வைத்தியம், விஞ்ஞானம், இலக்கியம் ஆகிய துறைகளிலான மிகவும் பெறுமதி வாய்ந்த கிரேக்க, ரோமன் நூல்களின் அறபு மொழிபெயர்ப்புக்களையும் அறிமுகம் செய்து வைத்தனர். வு இலங்கை மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கின் மூலம் அந்த மன்னர்களிடம் அவர்களுக்கிருந்த செல்வாக்கின் மூலம் அந்த மன்னர்களிடமிருந்து அவர்கள் முக்கியமான சிறப்புரிமையைப் பெற்றனர். அதாவது தங்கள் வர்த்தகம் நடத்தும் பல்வேறு துறைமுகங்களில் ஒரு முகம்மதிய வணிகரோ, அல்லது கடலோடியோ, அல்லது கப்பலோ சம்பந்தப்பட்ட வாணிப அல்லது கடலாண்மை வழக்குகள் எல்லாவற்றையும் தாமதமோ, செலவோ இன்றி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய முகம்மதிய மத அறிஞர்களையும் வணிகரையும் கடலோடிகளையும் உள்ளடக்கிய ஒர் உயர் முறை மன்றால் அதே துறைமுகத்தில் விசாரணை செய்யவேண்டும் என்பதாகும். அத்துடன் அது ஆசிய முகம்மதியர் மத்தியில் எங்கும் வழக்கிலிருந்த கடலாண்மைச் சட்டக்கோவைக் கேற்ப ஒழுகவும் கடமைப்பட்டிருந்தது. ரு.

பதினைந்தாம் நூற்றாண்டு முடிவுற்றதும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதன்முதல் வருகை தந்தபோது அப்போதும் தீவின் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகம் அனைத்தையும் முகம் மதிய வர்த்தகர்கள் தங்கள் ஏகபோக உரிமையாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அத்துடன் நாட்டிலே அவர்களுக்கிருந்த வாணிப, அரசியல் ஆதிக்கம் காரணமாக தாங்கள் எதிர்த்து நிற்க வேண்டிய மிகவும் பலம் வாய்ந்த போட்டியாளராக அவர்கள் இருப்பதையும் கண்டனர். பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கைத் தீவிலிருந்த முகம்மதியர்களின் வர்த்தகமும் செல்வமும் படிப்படியாக, ஆனால்; இடைவிடாமல் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காரணம், ஒரளவுக்கு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் முகம்மதியர்களின் வர்த்தகமும் செல்வாக்கும் பொதுவாக வீழ்ச்சியடைந்ததாகும். ஆனால் அதற்கான விசேஷ காரணம், முறையே இலங்கையின் போர்த்துக்கேய, டச்சு, ஆங்கிலேய அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முறைகளும் கடந்த மூன்று நூற்றாண்டுகளாகக் கப்பல் தொழில் நுண்கலையில் அடைந்துள்ள பெரும் முன்னேற்றமுமாகும்.

இத்தீவில் இப்போது முகம்மதியர்களது சனத்தொகை ஏறக்குறைய 70,000 பேரைக் கொண்டுள்ளது. அவர்கள் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் பரந்துள்ளனர். முகம்மதிய வர்த்தகர்களின் நிறுவனங்கள் தற்பொழுதும் புத்தளம், கொழும்பு, பாபரீன், காலிமுனை ஆகிய இடங்களில் இருக்கின்றன. அங்கிருந்து அவர்கள் மலபார், கொரமந்தல் கரைகளுடன் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை நடாத்துகின்றனர். அவர்களில் அனேகர் சிறிய மூலதனங்களைக் கொண்டுள்ளனர். அதன் மூலம் நாட்டின் சில்லறை வியாபாரத்திலும் ஒரு பெரிய பங்கை அவர்கள் நடாத்துவதோடு வௌ;வேறு இறைவரி முகவர்கள் மூலம் வருடாந்தம் வாடகைக்கு விடப்படும் தீர்வை அறவிடப்படும் சேவைகளை அவர்கள் அரசாங்கத்திடம் தவணைக் குத்தகைக்கு எடுக்கின்றனர். அவர்கள் சாபிஈ உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களது மதக் கட்டளை நூலானது குர்ஆனின் சுருக்க நூலாகும். அது “உம்தா” என்று அழைக்கப்படுகின்றது. அது பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அளவில் இலங்கைக்கு வருகை தந்த ஒர் அறிஞரால் அறபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் முகம்மதியச்சட்ட விரிவுரை அமலி என அழைக்கப்படுகின்றது. அது முழுதும் அறபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கம் தூய அறபியிலும் அதன் குறிப்புக்கள் நவீன அறபியிலும் உள்ளன. அவர்களின் விவாச, சொத்துரிமைச் சட்டங்கள், அவர்களின் மூதாதையர் அரேபியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த காலப் பகுதியில் பக்தாத் கலீபாவின் கீழிருந்த அரேபியர்களிடையே வழக்கிலிருந்த விவாக, சொத்துரிமைச் சட்டங்களின் புதிய அமைப்பாகும். அவர்களின் கடலாண்மைச் சட்டங்களும் வர்த்தகச் சட்டங்களும் இந்தியாவின் ஹிந்து கடலாண்மை வர்த்தகர்களிடையேயும் மலாக்காவினதும் கிழக்கத்திய தீவுகளினதும் மலாய்க் கடலாண்மை வர்த்தகர்களிடையேயும் வழக்கிலிருக்கும் கடலாண்மைச் சட்டங்களையும் வர்த்தகச் சட்டங்களையும் மிகவும் ஒத்திருக்கின்றன.

நான் பிரதம நீதியரசராகவும் மாட்சிமை தங்கிய மன்னரின் ஆள்சபைத் தலைவராகவும் இருந்தபோது மேற்கொண்ட வௌ;வேறான நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர்கள் மாற்றமில்லாத வகையில் ஒரு குழுவாக நடந்து கொண்ட முறை, அவர்களின் பண்பொழுக்கம் பற்றியும் அறிவுத் திறன் பற்றியும் ஒரு சிறந்த நல்லெண்ணத்தைத் தந்தது. 1806 இல் நான் அவர்களின் தலைவர்களையும் மத அறிஞர்களையும் அழைத்து, இலங்கைக் குடிகளின் ஏனைய ஒவ்வொரு வகுப்பாருக்கும் நான் செய்தது போல அவர்களுக்குரித்தான பழக்க வழக்கங்கள் மீது நிலைநாட்டப்பட்ட பிரத்தியேகச் சட்டக்கோவை ஒன்றை அவர்களது உபயோகத்துக்காகத் தொகுப்பதற்கு அவர்களது உதவியை நாடியபொழுது, அவர்களின் அனுபவங்களைக் கொண்டு எனக்கு மிக விரிவானதும் சிறந்ததுமான தகவல்கள் கிடைத்தன. அவர்களின் சகாக்களுடைய கல்வித் தரத்தை முன்னேற்றுவதற்கான சிறந்த முறை பற்றி 1807 இல்நான் அவர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்கள் அச்சமயத்தில் என்னுடன் ஒத்துழைக்க அவாவுள்ளவர்களாக மட்டும் இருக்கவில்லை. அவர்களிடையே இருந்த தனிப்பட்ட சமூக நிலைக்கு என் எண்ணப்படி ஏற்றவாறான விஞ்ஞான, அறிவுத்துறைகளை முகம்மதிய மதத்தைச் சேர்ந்த எல்லாப் பிள்ளைகளுக்கும் போதிக்க தீவின் எல்லாப் பகுதிகளிலும் பரந்த மனப்பான்மையுடைய ஸ்தாபனங்களைத் தங்கள் சொந்தச் செலவில் வைத்திருக்க அவர்கள் விரும்பினர் இங்கிலாந்தின் அரச முத்திரையின் கீழ்மாட்சிமை தங்கிய மன்னரது 1810 ஆம் ஆண்டில் உரிமைப் பத்திரத்தின் மூலம் அவர்களுக்கு நான் பெற்று உத்தரவாதமாக்கிக் கொடுத்த ஜுரிகளாகப் பணிபுரியும் சிறப்புரிமையினதும் ஏனை சிறப்புரிமைகளினதும் தன்மைகள் பற்றி விவரிப்பதற்காக 1811 இல் நான் அவர்களை பகிரங்கமாகக் கூட்டினேன். அப்பொழுது, மக்களின் உணர்ச்சிகள் எதற்கும் முரணாகாமலும் மக்களின் தப்பெண்ணங்களுக்கு ஆளாகாமலும் நீதியின் உண்மையான தீர்ப்பை அடைவதற்கும் ஜுரி முறையை அவர்களின் வகுப்பினர்களிடையே புகழ்பெறச் செய்வதற்குமான வழிமுறைகள் சம்பந்தமாக அவர்களிடமிருந்து எனக்கு மிகவும் உபயோகமான ஆலோசனைகள் கிடைத்தன. இலங்கையின் மற்றெல்லாக் குலத்தினரும் நிறைவேற்றிய அதே தீர்மானத்தை எனது திட்டப்படி 1815 இல் அவர்களும் நிறைவேற்றிய பொழுது, அதாவது 1816 ஒகஸ்ட் 12ஆந் தேதிக்குப் பின்னர் தங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும் எல்லாப் பிள்ளைகளும் சுதந்திரமானவர்கள் என்று பிரகடனம் செய்தபொழுது, முக்கியமான அந்த நடவடிக்கையின் முன்னேற்றத்துக்காகச் சொல்லில் மட்டுமன்றிச் செயலிலும் செய்து காட்டிய அவர்களின் மன உணர்ச்சிகளினதும் கருத்துக்களினதும் மனிதத் தன்மையையும் பரந்த நோக்கத்தையும் என்னால் மெச்சாமல் இருக்க முடியாது.

ஏற்கனவே கூறியதுபோல, 1806 இல் நான் இலங்கையின் முகம்மதியக் குடிகளின் பலவிதமான பழக்க வழக்கங்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களது ஆரம்பக் குடியேற்றம் பற்றிய வரலாறு, அத்தீவில் அவர்களது முன்னைய வர்த்தக வளம், பதினோராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் பக்தாத் கலீபாவுடன் அவர்களுக்கிருந்த நெருங்கிய உறவும் இடைவிடாத தொடர்பும் ஆகியவை பற்றி ஏதாவது விளக்கங்களைத் தரக்கூடிய பழக்க வழக்கங்கள் மீதே விசேஷமாக எனது ஆராய்ச்சியைச் செலுத்தினேன். அதிலே எனக்கு உதவிய எல்லா முகம்மதிய மத அறிஞர்களும் வணிகர்களும் கடலோடிகளும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் அதே உருவ மாதிரியைக் கொண்ட கூபிக் கல்வெட்டொன்றை எனது கவனத்துக்குக் கொண்டுவந்து, அதுவே பக்தாத் கலீபாவுக்கும் இலங்கை முகம்மதியர்களுக்கும் முன்னைய நாட்களில் தொடர்ந்திருந்து வந்த சமூகத் தொடர்புகளைக் குறிப்பிட்டுக் காட்டும் இத்தீவிலுள்ள மிகப் பழமையான பதிவுச்சான்று என்றும் எடுத்துக் காட்டினர்.

இந்தக் கல்வெட்டு பற்றி இலங்கையில் வழக்கிலிருக்கும் மரபு வரலாறு பின்வருமாறு: இத்தீவிலுள்ள முகம்மதியக் கல்வெட்டுக்களில் அது மிகத் தொன்மையானது எனக் கருதப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பக்தாதின் கலீபாவானவர் அப்போது கொழும்பில் தங்களை வர்த்தகர்களாக ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்த முகம்மதியர்கள், தங்களின் சரியான மதக் கோட்பாடுகளை அறியாதவர்களாகவும் அவற்றிலே கவனக் குறைவுள்ளவர்களாகவும் இருப்பதைக் கேள்விப்பட்டு அறிவு படைத்தவரும் பக்திமானுமாகிய மத அறிஞர் ஒருவரை பக்தாதிலிருந்து கொழும்புக்கு அனுப்பிவைத்தார். அவர்களின் மதத்தின் தன்மை பற்றி விளக்குவதன் மூலமும் முகம்மதிய வழிபாட்டினை அதன் உண்மையான கருத்துடன் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதற்காக வருங்காலத்தில் உறுதிசெய்யக் கூடியவாறு கொழும்பில் ஸ்தாபனங்களை நிறுவி, அங்கு பள்ளிவாசலொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமும் அங்குள்ள முகம்மதியர்களைச் சீர்திருத்த கலீபாவால் அவருக்கு அறிவுரையும் பகரப்பட்டது.

அறிவாற்றல் படைத்த பக்திமானாகிய அவர் கொழும்பில் ஒரு மிக விசாலமான பள்ளிவாசலைக் கட்டியெழுப்பியதன் பின்னரும் தமது தூதின் நோக்கத்தை நிறைவேற்றியதன் பின்னரும் காலஞ்சென்றார். அவரது சீருடல் அவர் கட்டியெழுப்பிய பள்ளிவாசலுக்கருகில் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறப்புக்குப் பின் கலீபாவானவர் பக்தாகிலிருந்து சில அறிவாளிகளை அவரது கல்லறை நடுகல்லில் இந்தச் சிலையெழுத்துக்களைப் பொறிக்கும் ஒரே நோக்கத்துக்காக அனுப்பிவைத்தார். இந்த நடுகல் அவரது கல்லறை மீது ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளாக நிலைத்து நின்றது. ஆனால் ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளாக நிலைத்து நின்றது. ஆனால், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன் டச்சு திஸாவ (கொழும்பின் கலக்டர்) அதனை மற்றும் சில கற்களுடன் கொழும்பு மூரிஷ் மையவாடியிலிருந்து, தான் வீடு கட்டிக்கொண்டிருந்த இடத்துக்கு அகற்றி எடுத்துச் சென்று அது இப்போது இருக்கும் இடமான அவருடைய வீட்டுக்குச் செல்லும் படிகளில் ஒன்றாக வைத்துவிட்டார். கேம்பிரிஜில் அறபு மொழிப் பேராசிரியரான ரெவரண்ட் சாமு வெல், லீ. ஏ. எம். என்பவர் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்துள்ளார். ஹிப்ரு, அறபு மற்றும் கீழைத்தேய மொழிகளில் அவருக்குள்ள ஆழ்ந்த அறிவுக்காக அவர் ஐரோப்பா முழுவதிலும் அதிகம் புகழப்படுகிறார்.
இங்ஙனம்,
(ஒப்பம்) அலக்சாந்தர் ஜொன்ஸ்டன்
அரச ஆசிய கழகத்தின் செயலாளருக்கு.

மேலே சொல்லப்பட்ட குறிப்புக்கள்.

(டு) கறுவா பொதுவாக இலங்கையின் தென்மேற்குக் கடலோரப் பிரதேச மாகாணங்களிலும் அதன் உட்பிரதேசங்களிலும் வளர்கிறது. கடலோர மாகாணங்களில் கறுவா பயிரிடுவதையும் பதனிடுவதையும் ஒரு தனிப்பட்ட சாதியினரே செய்கின்றனர். அவர்களது எண்ணிக்கை 24 ஆயிரத்துக்கும் 25 ஆயிரத்துக்கும் இடைப்பட்டதாகும்;. அவர்கள் பாபரீன் பட்டினத்தைச் சேர்ந்த முகம்மதிய வணிகர் ஒருவரால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நெசவாளர் எழுவரின் வழித்தோன்றல்கள் எனக் கூறப்படுகின்றது.

(சு) அப்பொழுது பேருவலையில் வாழ்ந்த பெரும் முகம்மதிய வணிகர் ஒருவருக்கும் அவருடைய எக்காலத்துக்குமான பரம்பரையினருக்கும் என அறுநூறு அல்லது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் சிங்கள அரசர்களில் ஒருவன் வழங்கிய மிகப் புதுமையானதும் மிகத் தொன்மையானதுமான செம்பாலான பட்டயம் ஒன்றின் நகலொன்று என்னிடம் உள்ளது. எதிர்க்கரையான இந்தியாவிலிருந்து புடவை நெய்வோரை முதன் முதலாக அந்த வணிகர் இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக அந்த வணிகர் இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காக அது குறிப்பிட்ட சில சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் அவர்களுக்கு அளிக்கின்றது. அந்த நெசவாளர்களே இலங்கையில் எந்தக் காலத்திலாயினும் குடியேற்றப்பட்ட நெசவாளர்களாவர். இந்தப் பட்டயத்தின் காரணமாக அந்த வணிகரின் நேரடிச் சந்ததியினர். அந்நாட்டின் சிங்கள அரசால் அவர்களின் மூதாதையர் களுக்கு வழங்கப்பட்ட அந்தச் சிறப்புரிமைகளின் ஒரு பகுதியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ் இப்போதும் அனுபவிக்கின்றனர். அவை இலங்கையின் போர்த்துக்கேய, டச்சு, ஆங்கிலேய அரசாங்கங்களால் உறுதிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இந்தக் குடும்பத்தின் தலைவர் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1806 இல் மருத்துவத் திணைக்களத்தின் சுதேச அத்தியட்சகராக என்னால் நியமிக்கப்பட்டார். தீவிலுள்ள சுதேச வைத்தியர்களில் மிக்க அறிவுள்ளவர்களில் ஒருவர் என நாட்டின் குடிமக்களால் அவர் கருதப்பட்டதோடு, சுதேச மருத்துவ நூல்களில் மிகச் சிறந்த ஒரு தொகுதியைத் தம்வசம் கொண்டவராகவும் விளங்கினார். அவைகளில் அனேகம் அவருடைய குடும்பத்தில் எழுநூறு, எண்ணூறு ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலமாக இருந்து வந்திருக்கின்றன. அந்தக் காலப் பகுதி முழுவதிலும் அவருடைய குடும்பத்தில் குறைந்தது ஒருவராதல் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள வேண்டியது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இலங்கையில் முகம்மதிய சுதேச வைத்தியர்களால் மருத்துவ நோக்கங்களுக்காக மிகப் பழங்காலந் தொட்டு பாவிக்கப்பட்ட அத்தீவின் எல்லா மூலிகைகளைப் பற்றியும் மிகவும் விவரமான ஒர் அறிக்கையை அவர் எனக்குச் சமர்ப்பித்தார். 1810 இல் மாட்சிமை தங்கிய மன்னரின் அரசாங்கம் எனது ஆலோசனையின் பேரில் இலங்கையில் ஒர் அரச தாவரத் தோட்டத்தை அமைப்பதற்கான பெருநோக்கங்களில். இந்த மூலிகைகளையும் உணவுக்காகவோ வர்த்தக நோக்கங்களுக்காகவோ உபயோகிக்கக்கூடிய தீவின் மற்றும் எல்லாச் செடியினங்களையும் மரக்கறி வகைகளையும் பயிரிடுவதும் விருத்தி செய்வதும் ஒன்றாக அமைந்திருந்தது.

(ளு) இலங்கை முகம்மதியர்கள் மத்தியில் உள்ள விவாக, சொத்துரிமைச் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை நான் ஆராயும் பொழுது, அதுபோன்ற வழக்குகளில் பக்தாதினதும் கொரொடோவாவினதும் காழிகளால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் அடங்கிய, அவர்கள் தம்வசம் வைத்திருந்த குறிப்புக்களை எனது வழிகாட்டலுக்காக அடிக்கடி என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அந்தத் தீர்ப்புக்கள் இலங்கை முகம்மதியர்கள் மத்தியில் எழுநூறு அல்லது எண்ணூறு ஆண்டுகளாக சட்டமாகக் கணிக்கப்பட்டு வந்துள்ளன.

(வு) அவர்கள் இலங்கைக்கு அறிமுகப்படுத்திய மருத்துவம் பற்றிய பிரதான நூல்களில் ஒன்று அவிசின்னா வின் நூலாகும். அரிஸ்ரோட்டல், பிளாற்றோ, ஊக்லிட், கலென், டொலமி ஆகியோரின் நூல்களின் அறபு மொழிபெயர்ப்புக்களையும் அவர்கள் இங்கு அறிமுகப்படுத்தினர். நான் இலங்கையில் இருந்த பொழுது அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளை முகம்மதிய மத அறிஞர்களும் வணிகர்களும் என்னிடம் கொண்டு வந்தனர். அந்த நூல்கள் ஆரம்பத்தில் தங்கள் மூதாதையரால் பக்தாதிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன என்றும் அவை இலங்கையில் அவர்களின் அந்தந்தக் குடும்பங்களிடம் சில நூறு ஆண்டுகளாக இருந்தனவென்றும் ஆனால், பின்னர் அவர்கள் அவற்றைத் தங்கள் கஷ்ட காலங்களில் இலங்கைக்கும் கிழக்கத்திய தீவுகளுக்குமிடையே வர்த்தகத்திலீடுபட்டிருந்த சில வணிகர்களுக்குக் கணிசமான தொகைக்கு விற்றனர் என்றும் அவர்கள் கூறினர். நான் குறிப்பிட்ட அந்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளைக் கொண்ட மூன்று மிகப் பெரிய தொகுதிகளை இலங்கைத் தீவில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன் காலஞ்சென்ற ஆசியாவிலே அதிக புகழ்வாய்ந்த முகம்மதிய மத அறிஞர் ஒருவர் எனக்கு அன்பளிப்புச் செய்தார். இந்த மூன்று முகம்மதியக் குடிகளின் வரலாறு, மதம், பழக்க வழக்கம், இலக்கியம் என்பன தொடர்பான சிங்களம் பாளி, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஐந்நூற்றுக்கும் அறுநூற்றுக்கும் இடைப்பட்ட நான் பெருந்தொகை செலவிட்டுச் சேகரித்த புத்தகங்களும் நான் இங்கிலாந்துக்குப் பிரயாணம் செய்த “லேடி ஜேன் டண்டாஸ் ஈஸ்ட் இண்டியமன்” எனும் கப்பலில் 1809 இல் காணாமற் போய்விட்டன.

(ரு) அத்தீவின் “வைஸ் அட்மிரல்டி” நீதிமன்றத்தில் நான் நீதிபதியாக இருந்தபொழுது இலங்கைக்கு அடிக்கடி வந்துபோகும் ஹிந்து, முகம்மதிய கடலோடிகள் மத்தியிலும் வர்த்தகர்கள் மத்தியிலும் வழக்கிலிருக்கும் கடலாண்மைச் சட்டங்களும் வழக்கங்களும் பற்றிய ஒரு பூரண தொகுப்பைச் சேர்த்தேன். அவற்றை நான்கு தலையங்கங்களின் கீழ் பகுக்கலாம். முதலாவது, மலபார் கொரமந்தல் கரைகளுக்கும் இலங்கைத் தீவுக்குமிடையே சிறிய நாவாய்களில் வர்த்தகம் நடாத்தும் ஹிந்து கடலோடிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மத்தியில் வழக்கிலிருப்பவை. இரண்டாவது மலபார், கொரமந்தல் கரைகளுக்கும் இலங்கைத் தீவுக்குமிடையே சிறிய நாவாய்களில் வர்த்தகம் நடாத்தும் அறபுப் பரம்பரையில் வந்த முகம்மதியக் கடலோடிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மத்தியில் வழக்கிலிருப்பவை. மூன்றாவது, ஆபிரிக்காவின் கிழக்குக் கரைகள், அரேபியா, பாரசீகக் குடா ஆகியவற்றுக்கும் இலங்கைத் தீவுக்குமிடையே மிகவும் பெரிய நாவாய்களில் வர்த்தகம் நடாத்தும் அறபுக் கடலோடிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மத்தியில் வழக்கிலிருப்பவை. நான்காவது, மலாக்காக்கரை, கிழக்கத்திய தீவுகள் என்பனவற்றுக்கும் இலங்கைத் தீவுக்குமிடையே வர்த்தகம் நடாத்தும் மலாய்க் கடலோடிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் மத்தியில் வழக்கிலிருப்பவை.

முதற் குறிப்பிட்டவை ஹிந்து மதக் கோட்பாடுகளாலும் ஹிந்துச் சட்டத்தாலும் ஒரளவுக்கு திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவதும் மூன்றாவதும் நான்காவதும் முகம்மதிய மதக் கோட்பாடுகளாலும் முகம்மதியச் சட்டத்தாலும் பெருமளவுக்குத் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

பின்னிணைப்பு “ஆ”

அயர்லாந்தினதும் பெரிய பிரித்தானியாவினதும் அரச ஆசிய கழக நிலைய அறிக்கை

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கூபிக் கல்வெட்டு
(பிறிதோரிடத்தில் தரப்பட்டுள்ளது)
கேம்பிரிஜ் பல்கலைக்கழக அறபு மொழிப் பேராசிரியர் ரெவரண்ட்
சமுவேல் லீ, ஏ. எம். அவர்களது மொழிபெயர்ப்புடன்
சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டன் வீ. பீ. ஆர். ஏ. எஸ்.
அவர்களால் அறிவிக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு

அருளாளனும் அன்புடையோனுமாகிய அள்ளாஹ்வின் திரு நாமத்தால், அள்ளாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது நபி அவர்கள் அவனுடைய திருத்தூதராவர். அவர்கள் மீது அள்ளாஹ்வின் ஆசீர்வாதமும் சாந்தியும் உண்டாவதாக. இறைவ! உன் அடியான் மகனான அடியான் காலித் இப்னு பகாயா (தகாயா அல்லது நகாயா) வை மன்னிப்பாயாக. அவர் மீது கருணை புரிவாயாக. அவரின் பாபங்களைப் பராமுகமாக மன்னித்துவிடுவாயாக. அவர் உலகை நீத்துவிட்டார். அவர் உன்னையே நம்பியிருந்தார். ஆனால் நீ அவரினின்றும் தேவையற்றவன். அவர் உன்னை அடைந்துவிட்டார். நீயே அவரது அதி சிறந்த புகலிடமாகும். இறைவ! அவரின் பாபங்களை மன்னித்தருள். அவரின் நன்மை நிலைக்குமாக. அவருக்கு அவரது இறுதிப் பாக்கியத்தை அளிப்பாயாக. அதனால் அவர் நியாயம் பெறட்டும். அவரை நீ பாதுகாப்பாயாக. அவர் மீது அருளையும் பாதுகாப்பையும் அதிகரிப்பாயாக. இறைவன் எங்கள் மாநபியை மகோன்னதப படுத்துவானாக. அவர்கள் எங்களுக்கு உண்மையைத் தெளிவாகக்காட்டித் தந்தார்கள். ஏனெனில் அவர்கள் ஸ்திரமான வார்த்தையைக் கொண்டு நல்வழிப்படுத்தினார்கள்@ .................................................. ஆமின், சர்வ உலகங்களினதும் நாயகனே! 337 ஆம் ஆண்டு றஜப் மாதத்தில் ஐந்து இரவுகள் கழிந்த (அதாவது றஜப் பிறை 5) வாரத்தின் இரண்டாவது நாளில் எழுதப்பட்டது. அவர் 317 ஆம் ஆண்டு மார்க்கத்துக்காகப் பாதுகாப்பையும் ஏனைய வசதிகளையும் முடிவாக்கித் தந்த இடத்திலாகும். அள்ளாஹ் அவனுடைய நபியான முகம்மது (ஸல்) அவர்கள் மீது ஆசீர்வாதமும் கருணையும் சொரிவானாக.

சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட கூபிக் (பழங்கால அறபு எழுத்து முறை) கல்வெட்டின் நவீன அறபு எழுத்து வடிவம். கூபிக் கல்வெட்டின்அதே உருவ மாதிரிப் படிவம் பிறிதோரிடத்தில் தரப்பட்டுள்ளது.

புகைப்படம் டீ
ஹிஜ்ரி 4-7 ஆம் நூற்றாண்டுகளின் போது பாவனையிலிருந்த கிழக்கத்திய கூபிக் எழுத்துக்கள் இந்தக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இது 1920 ஆம் ஆண்டளவில் வடமாகாணத்தைச் சேர்ந்த மன்னார் மாவட்டத்திலுள்ள புளியந்தீவிலிருந்து கொழும்பு நூதன சாலையிலுள்ள கல்அறைக் கூடத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

‘அல்(ஃ)கம்து லில்லாஹ்’ ‘பிஸ்மில்லாஹிர் ரஃமானிர் ர(ஃ)கீம்’, லா இலாஹ இல்லள்ளாஹ{ வஃதஹ{லா சரீக்க லஹ{, மு(ஃ)கம்மதுர் ரஸ{லுள்ளாஹி அலைஹி வ அலா ஆலிஹி வஸல்லம்’ என்னும் பொறிப்புக்களை அது கொண்டுள்ளது.

புகைப்படம் ஊ
வெண் சலவைக் கல்லாலான இந்தக் கல்லறை நடுகல் கடந்த உலக மகாயுத்த காலத்தில் (1939 – 45) திருகோணமலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. இது காழி அபீப் அப்துள்ளாஹ் எனும் ஒருவரின் கல்லறை மீதிருந்தது. அதன் எழுத்து வனப்புக் கலையும் சிறந்த அலங்காரமும் ஹிஸ்பானோ – அறபு (அறபு வண்ணச் சித்திர வேலை) மாதிரியே உள்ளன.

புகைப்படம் னு
கிழக்கத்திய கூபிக் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல். ஆனால் அனேகமாக இது ஹிஜ்ரி 7 ஆம் நூற்றாண்டைவிடப் பிந்திய ஒரு காலத்தனதாகும். இந்தக் கல் மிக மோசமாக உருக்குலைக்கப்பட்டுள்ளது. இது ஒர் அரைக்கும் கல்லாக அல்லது அதுபோன்ற ஒரு நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது போல் தெரிகிறது. தேய்த்து உருவரைப்படி எடுப்பதன் மூலம் சில சமயம் இதனை விளக்கக்கூடியதாக இருக்கும். எனினும் ‘அல்(ஃ)கம்துலில்லாஹ்’ போன்ற சில சொற்கள் தெளிவாகத் தெரிகின்றன.

புகைப்படம் நு
அனுராதபுரம் - புத்தளம் பாதைக்குச் சில மைல்களுக்கப்பால் அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலக் கல்லறை நடுகல்லொன்றின் உருவம். மொரோக்கோவுக்கே உரித்தான அறபு வனப்பெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அனேகமாகக் கி.பி. 9 ஆம் அல்லது 10 ஆம் நூற்றாண்டளவிலான காலப் பகுதியைச் சேர்ந்தது. (நன்றி – புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களம்)

பிற்சேர்க்கைகள்

புகைப்படம் யு
சேர் அலக்சாந்தர் ஜொன்ஸ்டனால் விவரிக்கப்பட்ட அழகிய கிழக்கத்திய கூபிக் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள கல்லறை நடுகல்.

புகைப்படம் கு
ஹெம்மாதகம, மதுல்போவ ஜாமிஉல் ஹஸனாத் பள்ளிவாசலோடுள்ள மையவாடியில் கண்டெடுக்கப்பட்ட கல்லறை நடுகல். அறபு எழுத்திலும் இலக்கியத்திலும் “ஹிஜ்ரி 135” என எழுதப்பட்டுள்ளது. எனினும் ‘3’ எனும் இலக்கத்தின் கீழே புள்ளி போன்ற ஓர் அடையாளம் உள்ளது. அது அத்தேதியை 1305 என மாற்றி விடும். அறபு எழுத்தும் நவீன காலத்தைச் சேர்ந்ததே.

புகைப்படம் பு
இந்தக் கல்லறை 1976 மே மாதம் மதுல்போவலில் கண்டெடுக்கப்பட்டது. அறபு இலக்கத்தில் “3.3.133’ என எழுதப்பட்டுள்ளது. அதாவது, ஹிஜ்ரி 133, 3ஆம் மாதம் 3 ஆம் நாள் (3, றபீஉல் அவ்வல் ஹி. 133) இதுவும் புகைப்படம் ‘கு’ இல் உள்ள கல்லின் காலத்தைச் சேர்ந்ததுபோல் தெரிகிறது.

சமீபத்திய கண்டுபிடிப்புக்கள்.

இந் நூற்றாண்டிலே ஸ்ரீலங்காவின் வௌ;வேறு பகுதிகளில் அறபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அது எமது தாயகமாம் இத்தீவிலே “முஅர்ஸ்” அல்லது சோனகர் பழங்காலந் தொட்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு மேலதிக அத்தாட்சிகளைத் தருகின்றது. சோனகரின் இளந் தலைமுறைகள் இன்னும் மேலதிக கவனம் செலுத்தினால் - சிறப்பாகப் பழைய மையவாடிகள் அமைந்துள்ள இடங்களில் கவனம் செலுத்தினால் - அறபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பழங்காலக் கல்லறை நடுகற்களை மேலும் அகழ்ந்தெடுக்கலாம்.

ஸ்ரீலங்காவில் கண்டெடுக்கப்பட்ட அறபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மிக ஆரம்பகாலக் கல்லறை நடுகல்லானது. கொழும்பு “முகம்மதிய’ மையவாடியில் கண்டெடுக்கப்பட்ட காலித் இப்னு பகாயா என்பவரின் ஞாபகார்த்தமாக ஹிஜ்ரி 337 றஜப் 5 இல் நிறுவப்பட்ட நடுகல்லாகும். இது கூபிக் (பழங்கால அறபு எழுத்து முறை) எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இக் கல்லை கி. பி. 1787 ஆம் ஆண்டளவில் டச்சு உத்தியோகத்தர் ஒருவர் தாம் அப்போது கட்டிக் கொண்டிருந்த வீட்டின் வாசற்படிக்கு வைப்பதற்காக எடுத்துச் சென்றார். இக்கல் பற்றிய விளக்கம் ஒன்றை இலங்கைப் பிரதம நீதியரசராக இருந்த சேர் அலெக்சாந்தர் ஜொன்ஸ்டன் என்பார் கி.பி. 1827 இல் பெரிய பிரித்தானியாவினதும் அயர்லாந்தினதும் அரச ஆசிய கழகத்தின் (றோயல் ஏசியாட்டிக் சொஸயட்டி) முன்னிலையில் வாசித்த ஆய்வுக் கட்டுரையில் கொடுத்துள்ளார்.

ஸ்ரீலங்காவிலே அறபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மிகவும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கள் வருமாறு:

(டீ) புகைப்படம் “டீ” இல்காட்டப்பட்டுள்ள அறபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்லானது, வடமாகாணத்தைச் சேர்ந்த மன்னார் மாவட்டத்திலுள்ள புளியந்தீவிலிருந்து 1920 ஆம் ஆண்டளவி;ல் கொழும்பிலுள்ள இலங்கைத் தேசிய நூதன சாலையின் கல் அறைக் கூடத்துக்குக் கெண்டுவரப்பட்டது. ஜெர்மன் சமஷ்டிக் குடியரசின் தூதரகத்தின் பத்திரிகை, கலாசார உத்தியோகத்தராக இருக்கும் ஜெர்மானிய முஸ்லிமான கலாநிதி எம். ஏ. எச். ஹொபோம் அவர்களின் கருத்துப்படி மேற்படி கல்லானது ஹிஜ்ரி 5 – 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் வழக்கிலிருந்த கிழக்கத்திய கூபிக் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அக் கல்லில் பின்வரும் பொறிப்புக்கள் காணப்படுகின்றன.

“அல்(ஃ)கம்து லில்லாஹ்
பிஸ்மில்லாஹிர் ரஃமானிர் ர(ஃ)கீம்
லா இலாஹ இல்லள்ளாஹ{ வஃதஹ{ லா சரீக்க லஹ{
மு(ஃ)கம்மதுர் ரஸ{லுள்ளாஹி ஸல்லள்ளாஹ{ அலைஹி வஸல்லம்
குல்லு நப்ஸ{ன் ணு ஸா இ (க்) கத்துல் மௌத்”

(ஊ) புகைப்படம் “ஊ” இல் காணப்படும் வெண்கலவைக் கல்லாலான கல்லறை நடுகல்லானது, இலங்கைப் பல்கலைக்கழக அறபுப் பேராசிரியர் கலாநிதி எஸ். ஏ. இமாம் அவர்களின் கருத்துப்படி அதன் வில் வளைவின் அடிப்பாக மேல் வரிசையில் இலை, பூ, உரு அமைப்பில் அமைந்த மிகவும் சிறந்த ஓர் அலங்காரத்தைக் கொண்டதாகும். அது பரிசுத்த குர்ஆனின் 27-30 27-31 ஆம் வாக்கியங்களைக் கொண்டுள்ளது. எழுத்து வனப்புக் கலை ஹிஸ்பானோ – அறபு (அறபு வண்ணச் சித்திர வேலை) மாதிரியே உள்ளது.

மேற்படி கல்லறை நடுகல், இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் (1939 – 45) திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கியுள்ள ஒஸ்டன்பேக் ‘பொயின்ட்’ 1 க்கும் நிக்கல்ஸன்கோ எனும் இடத்திலுள்ள சப்பல் ஹில்லுக்கும் மத்தியில் ஓரிடத்தில் நீர்க்குழாய் அமைப்பதற்காகத் தோண்டும் போது வேலையாட்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டது. இந்த இடம் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமாக இருந்திருக்கலாம்;.

கலாநிதி ஹொபோம் அவர்களின் கருத்துப்படி தியாகியான மதிப்புக்குரிய காழி அவர்களின் பெயர் அபீப் அப்துள்ளாஹ் இப்னு அப்துர் ரஃமான் இப்னு முகம்மத் இப்னு யூஸ{ப் அல் அலவி என்பது போல் தெரிகிறது. தேதி: ஸபர் மாதம் 19 ஆம் பிறை, சனிக்கிழமை ஹிஜ்ரி அறுநூறு....... ஆம் வருடமாகும். அதாவது அறுநூறும் மேலும் சில வருடங்களுமாகும்@ சரியாக அறுநூறன்று.

கலாநிதி ஹொபோம் அவர்கள்அவரது அனுபவத்தைக் கொண்டு, மேற்படி கல்லிலுள்ள பொறிப்பு, ஹிஜ்ரி 5 – 7 ஆம் நூற்றாண்டுக்கிடையில் கீழ்த்திசை இஸ்லாமிய வரலாற்று ஆரம்ப காலத்தில் உபயோகிக்கப்பட்ட நஸ்கி, அல்லது ரேஹானியில் எழுதப்பட்டுள்ளது எனக் கருதுகிறார். இதே போன்ற எத்தனையோ கல்லறை நடுகற்கள் கிழக்கு ஆபிரிக்கக் கரைகளில் காணப்படுகின்றன. இக் கற்களில் அனேகம் பாரசீகக் குடாப் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப் பட்டவையாகும்.

அறபு எழுத்துக்கள் கொண்ட இன்னொரு கல்லறை நடுகல், லெப்டினன்ட் கொமாண்டர் சோமசிரி தேவேந்திரவால் நிக்கல்ஸன் கோவில் கண்டெடுக்கப்பட்டது. அக்கல் பல்வகையான கனிமப் பொருட்களாலானது போல் தெரிகிறது. அது கிட்டத்தட்ட ஒரு சதுர வடிவானது. நீளம் 19 அங். அகலம் 10 அங். தடிப்பு 2 ¼ அங். அங்கே அறபு எழுத்துக்கள் மேலெழுந்து தெரியக் கூடிய வகையில் செதுக்கப்பட்டுள்ளன. ஆறு குறுக்கு வரிகளையும் ஏழாவது வரியில் அழியாப் பகுதியையும் விளங்கிக் கொள்ளலாம். இரு தூண்கள் அவற்றைத் தாங்கிக் கொண்டிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளன. அவையும் பொறிப்புக்களைக் கொண்டுள்ளன. இது “அலி ஹலபியின் மகனான அமீர் பத்ருத்தீன் ஹ{ஷைனின் மகளான கண்ணியமும் பக்தியும் மிக்க கற்புடையச் செல்வியின் கல்லறையாகும்@ அவர் ஹிஜ்ரி 729 துல் கஅதா 17, திங்கட்கிழமை உலகைவிட்டும் பிரிந்தார்” (மேலும் விளக்கத்துக்காக அரச ஆசிய சமுகம் (றோயல் ஏசியாட்டிக் சொஸயட்டி) இலங்கைக் கிளையின் பத்திரிகை. புதிய தொடர், தொகுதி ஓஐஏ பக்கங்கள் 28 – 35 பார்க்க)

(னு) புகைப்படம் “னு” இல் காட்டப்பட்டுள்ள கல்லானது கலாநிதி ஹொபோம் அவர்களின் கருத்துப்படி, புகைப்படம் “டீ” இல் காணப்படுவதைப் போன்ற கிழக்கத்திய கூபிக் எழுத்துக்களாலான பொறிப்பைக் கொண்டுள்ளது. ஆனால், இது அனேகமாக அதற்குப் பிந்திய காலத்தினதாகும். இக் கல் மிகவும் மோசமாக உருக்குலைக்கப்பட்டுள்ளது. அது ஓர் அரைக்கும் கல்லாகவோ, அதுபோன்ற ஒரு நோக்கத்துக்காகவோ பாவிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அதிலுள்ள பொறிப்புக்கள் மிகவும் தேய்ந்து போயிருப்பதால், அதிலே எழுதப்பட்டுள்ளதைப் பூரமாக அறிவதற்குச் சில காலம் எடுக்கலாம். அதுவும் தேய்த்து உருவரைப்படி எடுப்பதன் மூலமே விளக்க முடியுமானதாக இருக்கும். எனினும், “அல்(ஃ)கம்து லில்லாஹ்” போன்ற சில சொற்கள் தெளிவாக விளங்குகின்றன.

(நு) புகைப்படம் “நு” இல் காட்டப்பட்டுள்ள பழங்காலக் கல்லறை நடுகல்லின் இவ்வுருவம் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஆதரவுடன் பெறப்பட்டது. இது அனுராதபுரம் - புத்தளம் பாதைக்குச் சில மைல்களுக்கப்பால் அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டது. கலாநிதி எஸ். ஏ. இமாம் அவர்களின் கருத்துப்படி இது மொரொக்கோவுக்கே உரித்தான அறபு வனப்பெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அனேகமாக கி.பி. 9ஆம் அல்லது 10 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியைச் சேர்ந்தது.

(கு) புகைப்படம் “கு” இல் உள்ள கல்லறை நடுகல், மதுல் போவ ஜாமிஉல் ஹஸனாத் ஜும்ஆப் பள்ளிவாசலோடுள்ள பழங்கால மையவாடியைப் புதிய ‘ஹெளல்” ஒன்று கட்டுவதற்காகத் தோண்டும்போது 1976 மார்ச் 4ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. மேற்படி மையவாடி நான்கு அடிக்கும் மேலான ஒரு மண்மேடுபோல் இருந்தது. மேற்படி கல்லறை நடுகல்லில் அறபு எழுத்திலும் இலக்கத்திலும் “ஹிஜ்ரி 135” என எழுதப்பட்டுள்ளது. எனினும் “3” எனும் இலக்கத்துக்குக் கீழ் புள்ளி போன்ற ஒர் அடையாளம் உள்ளது. அது அத் தேதியை “1305” என மாற்றிவிடும் கலாநிதி ஹொபோம் அவர்களின் கருத்துப்படி இதில் பொறிக்கப்பட்டுள்ள அறபு எழுத்தும் நவீன காலத்தைச் சேர்ந்ததே.

(பு) புகைப்படம் “பு” இல் உள்ள கல்லறை நடுகல்லும் 1976 மே மாதம் 9 ஆந் தேதி மதுல்போவவில் அகழ் வேலைகள் நடைபெறும்போது. நடுகல் “கு” காணப்பட்ட இடத்தருகே கண்டெடுக்கப்பட்டது. அகழ் வேலை நடைபெறும்போது அது இரண்டாக உடைக்கப்பட்டுவிட்டது. அதிலே அறபு இலக்கங்களில் 3-3-133 ஆம் வருடம் 3ஆம் மாதம் 3 ஆம் நாள் (3, ரபீஉல் அவ்வல் ஹி. 133) 1976 மே 4 ஆம் தேதி மூன்றாவது கருங்கற் பாளம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிலே “இப்னு மீரான், ஹிஜ்ரி 1274” என அறபு எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இக் கற்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரே காலத்தைச் சேர்ந்தவை போல் தெரிகிறது. இந்த மூன்று கல்லறை நடுகற்களையும் ஹெம்மாத்தகம, மதுல்போவ, ஜாமிஉல் ஹஸனாத் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினரான பின் வருவோர் அன்பளிப்புச் செய்தனர்.

1. மௌலவி வை. எம். ரசீத் (தலைவர்) 2. எம். ஏ. வாஹித் (உப தலைவர்) 3. மௌலவி ஏ. எஸ். முகம்மத் (பொருளாளர்) எம். என். எம். மன்ஸ{ர், ஆசிரியர் (இணைச் செயலாளர்). 5. மௌலவி எம். எல். முஸ்தபா (இணைச் செயலாளர்), 6. ஏ. எஸ். உமர் (முகாமையாளர், அல் குர்ஆன் மத்ரஸா), 7. எம். எச். எம். நிஸார், ஆசிரியர், (கணக்குப் பரிசோதகர்).