கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  எயிட்ஸ்  
 

எம்.கே. முருகானந்தன்

 

எயிட்ஸ்

டொக்டர்
எம்.கே. முருகானந்தன்
M.B.B.S (CEY)

யதார்த்தா
பருத்தித்துறை

++++++++++++++++++++++++++++

Title : AIDS
Author : Dr. M.K. Muruganandan ©
M.B.B.S. (Cey)
First Edition : January 1989
Publisher : Yathartha
Uthayan Book Depot
Point Pedro
Cover design &
Illustrations : Ramani
No.of Copies : 1000
No. of pages : 36+6
Printers : : Kalalaya
Nelliady
Price : Rs. 10/-

++++++++++++++++++++++++++++

அணிந்துரை

இலங்கை வாழ் தமிழர்கள் குறிப்பாக வடபகுதியினர் கல்வியால் சிறந்தவர்கள். ஆயினும் வைத்திய சம்பந்தமான நூல்கள் இங்கு வெளிவருவது அருமை, பலரின் ஆங்கில அறிவு அந்நூல்களை காலத்தின் தேவையாக்காதிருந்திருக்கலாம். ஆயினும் சுயமொழிக் கல்வியில் உயர் கல்வி கற்கும் வசதி இருந்தும்கூட எம்மவரிடையே வைத்திய விஞ்ஞான நூல்கள் வெளிவராமை மிகவும் வருத்தத்துக்குரியது. தேவையான தொழில் நுட்ப அறிவிருந்தும் அதைப் பொது மக்களுக்கு எளிய தமிழில் கூறாமை எமது குறை என்றே கொள்ள வேண்டும்.

கடந்த நாலைந்து ஆண்டுகளாக இக்குறை படிப்படியாக நீங்கி வருகிறது என்றே கூறவேண்டும். பொதுசனரஞ்சக வாரப்பத்திரிகைகளில் வாரந்தோறும் வைத்திய கலசம், நோயற்ற வாழ்வு போன்ற சுகாதாரக் குறிப்புகள் கிரமமாக இடம் பெறுவதில் இருந்தே இந்த ஆரோக்கியமான போக்கை உணரக்கூடியதாக இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் மருத்துவத்துறையையே கதிகலங்க வைத்த பெருமை எயிட்ஸ் நோய்க்கு உண்டு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அருந்தவத்தை மதவியலாளரும், ஒழுக்கவியலாளரும் மனித சமுதாய மேம்பாட்டின் அடிக்கல்லாகக் காட்ட முயன்றபோது எள்ளி நகையாடியோர் கூட பீதி காரணமாகவேனும் ஏற்க வைத்த பெருமை இந்நோய்க்கு உண்டு. அது பற்றிய தகவல்கள் பல வாரந்தோறும் புதிது புதிதாக வருகின்றன. கூடிய வரையில் அவற்றை எளிய தமிழில் அனைவருக்கும் அளிக்கும் பணியில் வைத்திய கலாநிதி முருகானந்தனின் இந்நூல் முன்னோடி என்றே கூறவேண்டும்.

ஒரு வைத்தியன் என்ற முறையிலும் மருத்துவத்துறையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியன் என்ற முறையிலும் இந் நூலின் மொழி எளிமையும் கருத்துக்களின் திட்டமான தன்மையும் மிகப்பிந்திய ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய தன்மையும் என்னை மிகவும் கவர்ந்தன. எயிட்சைப்பற்றி இவ்வளவு ஆரவாரம் என்ன? பத்துக்கும் குறைந்த நோயாளிகளைப் பலிகொண்ட ஒரு நோயைப் பற்றி பொதுமக்களுக்கு என ஒரு நூல் அவசியம் தானா என்பன மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது சரியான ஐயங்களின் வெளிப்பாடு என்று சிலர் கூறப்படும். அதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

நான் மருத்துவ மாணவனாக இருந்தபோது போதைவஸ்துகளின் பாவனை பற்றியும் இத்தகைய கேள்விகளே எழுப்பப்பட்டன. அப்பாவனை இந்நாட்டில் வேரூன்றாது என ஆருடம் கூறியவர் பலர். போதை வஸ்த்துக்களின் பாவனை பற்றி மிக ஆழமாக உணர்ந்து சமுதாயத்துக்கு அதன் கெடுதிகளைப்பரப்ப வேண்டிய அவசியத்தை உணர்த்த எனது மன நல வைத்தியத்துறைப் பேராசிரியர் ஒருவர் முயன்ற போது அவரது முயற்சிகள் பலரால் எள்ளப்பட்டன. எமது சமுதாய தூய்மையில் அவர் கொண்ட ஐயம் வேலி செய்யப்பட்டது. அதன் பலனை நாம் அனைவரும் அறிவோம். இன்று வடபகுதியில் மட்டும் இரண்டாயிரம் போதை வஸ்து பாவனையாளர் உண்டு. எயிட்ஸ் நோயும் அப்படி ஒரு ஊடுருவலை நடத்தவிடாது தடுப்பதில் இந்நூல் ஒரு பெரிய இடம் வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

டொக்டர் எஸ். ஆனந்தராஜா
M.D.(Cey), MRCP (UK),
DCH (Cey)

யாழ் போதனா வைத்தியாசலை,
யாழ்ப்பாணம்.

++++++++++++++++++++++++++++


நன்றி

இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் படித்து வேண்டிய ஆலோசனைகளைக் கூறிய நண்பர்கள் திரு. இரா. சந்திரசேகரன், திரு.ப. இரகுவரன், சிறந்த முறையில் துரிதமாகத் தட்டெழுத்துப் பிரதி செய்த நண்பர் திரு. கி. பவானந்தன், விளக்கப் படங்களையும், அட்டைப் படத்தையும் கலையழகோடு வரைந்த ஓவியர் ரமணி, தனது கடுமையான வேலைப்பளுவிற்கு இடையிலும் ஆழமான அணிந்துரை எழுதிய பொதுவைத்திய நிபுணர் எஸ். ஆனந்தராஜா, நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அட்டைப்பட ‘புளக்’கைத் தயாரித்து இலவசமாகத் தந்த கொழும்பு ஸ்ரூடியோ அதிபர், புத்தகத் தயாரிப்பில் என்னோடு சேர்ந்து அயராது உழைத்த உதயன் புத்தக நிலைய அதிபர் திரு.மு. குலசிங்கம், நூலைச் சிறந்த முறையில் அச்சிட ஆர்வத்துடன் உழைத்த கலாலய திரு.தி. சிறிதரன், ஏனைய ஊழியர்கள் ஆகியோருக்கும், இக்கட்டுரையின் முக்கிய பகுதிகளை வீரகேசரி வார வெளியீட்டில் வெளியிட்ட வீரகேசரி நிறுவனம், அதன் பொதுமுகாமையாளர் திரு. சி. பாலச்சந்திரன் ஆகியோருக்கும், இறுதியாக இந்நூலை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் ஊக்குவித்து, உறுதுணையாக நின்ற என் மனைவிக்கும் எனது மனமார்ந்த நன்றி.

எம்.கே.முருகானந்தன்
ஆங்கில வைத்தியசாலை,
பருத்தித்துறை.

++++++++++++++++++++++++++++

“புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மொத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை -
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட - லாமோ!
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!

- பாரதியார்

++++++++++++++++++++++++++++

அறிமுகம்

எயிட்ஸ் - அது நாகரிகம் முற்றிய மேற்கத்தைய நாடுகளுக்கான நோய். எம்மை அணுகாது என்று பலரும் அலட்சியமாக பேசினார்கள்; ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த நெறியைத் தழுவிய தமிழர்களுக்கு இது ஏற்படாது என்று பாரம்பரியப் பெருமை பேசி நம்பிக்கை அடைந்தார்கள் வேறு சிலர்.

ஆனால் எல்லோரது நம்பிக்கைகளையும் பொய்ப்பித்துக் கொண்டு சாத்தான் எமது வாசற் கதவையும் தட்டத் தொடங்கிவிட்டான்.

யாழ்ப்பாணத்தில் முதலாவது எயிட்ஸ் நோயாளி என்ற பத்திரிகைச் செய்திகள் மக்களை விழிப்படையச் செய்தன.

அந்நோயாளியின் மரணம்- இது மரணம் நிச்சயிக்கப்பட்ட நோய் என்ற நம்பிக்கையை, நிச்சயப்படுத்தி, மக்களைக் கிலிகொள்ளவும் செய்து விட்டது.

எனவே, ஒவ்வொருவரும் தமக்கு இந்நோய் தொற்றுவதிலிருந்து காப்பாற்றுவதற்காகவும், இந்நோய் பற்றிய பொய் வதந்திகளால் பரவும் வீண் பயங்களுக்கு ஆளாகாமல் தப்பவும், எயிட்ஸ் பற்றிய சில அடிப்படை உண்மைகளை அறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

எயிட்ஸ்
நோய் பரவும் வேகம்

எயிட்ஸ் பற்றி நீங்கள் அறிவதுடன் நின்றுவிடாது மற்றவர்களுக்கும் நீங்கள் அறிந்த உண்மைத் தகவல்களைப் பரப்பவும் தவறாதீர்கள். இந்நோய் பற்றிய உணர்வு சமூகத்தில் பெருமளவு பரவுமேயாயின். எயிட்ஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு பின் மரணமானவர்தான் ஈழத்தமிழரின் முதலாவது எயிட்ஸ் நோயாளி. முழு இலங்கையையும் எடுத்துக் கொண்டால் இலங்கையின் எட்டாவது எயிட்ஸ் நோயாளி இவர்.

இதைத் தவிர இந்தியாவில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமிலிருந்த நான்கு பெண்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியதற்கான ஆதாரம் இரத்தப் பரிசோதனைகள் மூலம் காணப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் அடையாளம் காணப்படாமலேயே இலங்கைக்குத் திரும்பி விட்டதாகவும் காணப்படாமலேயே இலங்கைக்குத் திரும்பி விட்டதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. இச்செய்தி உண்மையாக இருந்து, அதே நேரத்தில் அவர்கள் இனங்காணப்படாவிட்டால், எயிட்ஸ் நோயை எமது பகுதியில் அவர்கள் பெருமளவில் பரப்பக்கூடும்.

நோய் பரவும் வேகம்

1981ம் ஆண்டுதான் உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி அமெரிக்காவில் (U.S.A.) கண்டுபிடிக்கப்பட்டார். எட்டு ஆண்டுகள் மட்டும் முடிந்த இந்நேரத்தில் எயிட்ஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. உலக சுகாதார ஸ்தாபன (W.H.O.) அண்மைய அறிக்கையின்படி, 119, 818 நோயாளர்கள் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதம் 30ம் திகதி வரை பதிவாகியுள்ளார்கள். இது ஆவணி மாதத்தில் இருந்தை விட 7,964 அதிகமானதாகும்.

எயிட்ஸ்
எயிட்ஸ் என்றால்?

ஆனால் எல்லா எயிட்ஸ் நோயாளிகளையும் கண்டுபிடித்திருக்க முடியாது என்பதாலும், பல பதிவாகியிராது தப்பி இருக்கக்கூடும் என்பதாலும் உண்மையான எயிட்ஸ் நோயாளரின் தொகை 250,000 முதல் 300,000 வரை இருக்கக் கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில்தான் மிக அதிக எண்ணிக்கையான 73,394 பேர் பதிவாகியுள்ளனர். மலாவி (Malawi) தான் சேனியா, கெனியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் எயிட்ஸ் வேகமாகப் பரவி வருகிறது. எல்லாமாக 142 நாடுகளில் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாகப்பதிவாகியுள்ளது.

கிருமி தொற்றிய எல்லோருக்குமே, நோய்க்கான அறிகுறிகள் இருக்காது. கிருமி தொற்றியும், நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களை ‘நோய்காவிகள்’ (Carriers) என்று சொல்லுவார்கள். இந்த நோய் காவிகளின் தொகை 50 லட்சம் முதல் 100 லட்சம் (5-10 Milion) வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நோயைக் குணப்படுத்த மருந்துகளோ, அது பரவுவதைத் தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளோ இல்லாத காரணத்தால் இது இன்னமும் வேகமாகப் பரவலாம் என அஞ்சப்படுகிறது.

எயிட்ஸ் என்றால் என்ன?

எயிட்ஸ் என்பது ஒரு தொற்றுநோய். இது ஒரு வகை வைரஸ் (Virus) கிருமியால் உண்டாகிறது. இதை ஒரு தனி நோய் என்பதை விட பல நோய்க் குணங்குறிகளின் தொகுப்பு (syndrome) என்று சொல்லலாம்.

எயிட்ஸ் என்பது AIDS என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி ஒலிபெயர்ப்பு ஆகும். AIDS என்பது Acquired Immune Deficiency என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து ஏற்படுத்திய சொல்லாகும். இதனை ‘தேடிப்பெற்ற நிர்பீடனக் குறைபாட்டு நோய்த்தொகுதி’ என்று விஞ்ஞானத் தமிழில் கூறலாம்.

நோய்க்கிருமி

எயிட்ஸ் நோய் HIV வைரஸினால் உண்டாகிறது. எச்.ஐ.வீ (HIV) என்பது Human Immunodeficiency Virus என்பதின் சுருக்கமாகும். இதனை ‘மனித நிர்பீடனக் குறைபாட்டு வைரஸ், என்று விஞ்ஞானத் தமிழில் கூறமுடியும். ஆயினும் சொற்சிக்கனத்திற்காகவும், இலகுவான உச்சரிப்பிற்காகவும் HIV வைரஸ் என்றே கூறலாம்.

மனித உடலுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி (நிர்பீடனத் தொகுதி - Immune System) இருக்கிறது. இதனால்தான் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கவும், தொற்றிய கிருமிகளை அழித்து நோயிலிருந்து குணமடையவும் மனித உடலுக்கு முடிகிறது.

HIV வைரசோ மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகளையே தாக்கி அவற்றை அழித்து விடுகிறது. இதனால் மனிதஉடல் HIV வைரசுக்கு மாத்திரமன்றி, ஏனைய நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் போராடும் சக்தியை இழந்துவிடுகிறது.

HIV வைரஸ் தொற்றுவதால் ஏற்படக்கூடிய குணங்குறிகளும், தொற்றுகின்ற ஏனைய நோய்களின் குணங்குறிகளும் ஒன்றாகவோ, தொடர்ச்சியாகவோ நோயாளிக்குத் தோன்றலாம். இதனால்தான் எயிட்சை பல நோய்க்குணங் குறிகளின் தொகுப்பு என ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம்.

கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியை இழப்பதாலேயே, பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாவது மாத்திரமின்றி, எயிட்ஸ் நோயாளி இறுதியில் நிச்சயம் இறக் நேரிடுகிறது.

ஏனைய வைரஸ் நோய்கள்

தடிமன் காய்ச்சல், சின்னமுத்து, ஜேர்மன் சின்னமுத்து கொப்புளிப்பான் (சின்னம்மை) பெரியம்மை, கூவைக்கட்டு, போலியோ, செய்கண்மாரி (ஈரல் அழற்சி - Heratitis), நீர் வெறுப்பு நோய் (விசர்நாய்க்கடி - Hydrophobia), ஹெர்பீஸ் (Herpes), சில வகை வயிற்றோட்டம் போன்றவை வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சில தொற்று நோய்கள் ஆகும்.

வைரஸ் நோய்களைக் குணப்படுத்தக்கூடிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இதனால் இவற்றை வைத்தியர்களால் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது.

ஆனால் வைரசோ அன்றி ஏனைய கிருமிகளோ (உ-ம் பக்றீரியா. பங்கசு) தொற்றியவுடன் மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி விழிப்படைந்து போராடுகிறது. அக்கிருமிகளை அழிக்கக்கூடிய ‘பிறபொருள் எதிரிகளை’ (Antibodies) உடல் உற்பத்தி செய்கிறது.

இப் பிறபொருள் எதிரிகளே நோய்க் கிருமிகளுடன் போராடி கிருமிகளை அழித்து நோயைக் குணமாக்குகின்றன. முன்பு கூறிய வைரஸ் நோய்களில் பெரும்பாலானவை மருந்துகளின்றி தாமே குணமாவது இக்காரணத்தால்தான்.

எயிட்ஸ் நோய்க்கு எதிராகவும் சில பிறபொருள் எதிரிகள் உடலில் உற்பத்தியாகிறபோதும், அவை HIV வைரஸ் பெருகுவதைத் தடுக்கக்கூடியதாக இல்லை. இதனால் எயிட்ஸ் கிருமி இரத்தத்தின் மூலம் உடலின் பல்வேறு பாகங்களுக்கும் பரவுகிறது.

எயிட்ஸ் நோயைக் கண்டுபிடிப்பதற்கான இரத்தப் பரிசோதனைகள் HIV வைரசிற்கு எதிரான பிறபொருள் எதிரிகளை அடையாளம் காண்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

பெரும்பாலான வைரஸ் நோய்கள் தாமே குணமாகி விடலாம் என்றாலும் எயிட்சும், விசர்நாய்க்கடி நோயும் விதிவிலக்கு. இவ்விரு நோய்களும் தோன்றினால் மரணம் நிச்சயம். விசர்நாய்க்கடி நோயில், வைரஸ் மூளையையும் நரபுத் தொகுதிகளையும் தாக்குவதால் மரணம் ஏற்படுகிறது ஆனால் எயிட்ஸ், நோய் எதிர்ப்புச் சக்தியை அழிப்பதால் மரணம் நேர்கிறது.

வைரஸ் என்றால்…?

வைரஸ் என்பதை நோயை உண்டாக்கக்கூடிய மிக சிறிய நுண்ணுயிர் என்று சொல்லலாம். பக்றீரியா (Bacteria), பங்கசு (Fungus) போன்ற நுண்ணுயிர்களைச் சாதாரண நுணுக்குக்காட்டி (Microscope) மூலம் பார்க்கலாம். சாதாரண நுணுக்குக்காட்டி மூலம் காணமுடியாத அளவிற்கு வைரஸ் மிகச்சிறியது. இதனை மிகவும் சக்தி வாய்நத இலத்திரன் நுணுக்குக்காட்டி (Electron Microscope) மூலமே பார்க்கமுடியும்.

வைரஸ் கிருமிகள் விருத்தியடைந்து, பெருகுவதற்கு உயிருள்ள கலம் (Cell) தேவை. அது பெருகும் போது, தான் தங்கியிருக்கும் கலத்தை அழிக்கக்கூடும்; அல்லது செயற்திறனைப் பாதிக்கக்கூடும்.

எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மனித உடலின் நிர்ப்பீடனத் தொகுதியையே தாக்குவதை அறிவீர்கள். நிர்பீடனத்தொகுதியில் உள்ள ரீஹெல்பர் கலங்ளையே (T-helper Cell) முக்கியமாகத் தாக்குகிறது.

HIV வைரஸ் தானிருக்கும் கலத்தில் பெருகிப். பின் அதை அழித்து வெளியேறுகிறது. வெளியேறிய வைரசுகள் மேலும் பல கலங்களைத் தாக்கி அழித்துப் பெருகுகின்றன. இவ்வாறு நோயாளியின் நிர்பீடனத் தொகுதி பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

எயிட்ஸின் வரலாறு

எயிட்ஸ் நோய் 1981ம் ஆண்டிலேயே அறியப்பட்ட போதிலும், அதை உண்டாக்கும் வைரஸ் கிருமி 1983ம் ஆண்டிலேயே இனங்காணப்பட்டது. பிரான்ஸ் தேசத்தில் உள்ள பாஸ்டர் விஞ்ஞானக் கூடத்திலேயே (Institute Pasteur) முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இது டுயுஏ வைரஸ் (Lymphadenopathy associated Virus) என்று சொல்லப்பட்டது.

1984ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள தேசிய புற்று நோய் நிறுவனம் இக்கிருமிதான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகிறது என்பதை உறுதிபப்டுத்தியது. அப்பொழுது இதற்கு ர்வுடுஏ ஐஐஐ வைரஸ் (Human T-Iymphotrophic Virus type III) என்று பெயரிடப்பட்டது.

யுசுஏ வைரஸ் (AIDS - related Virus) என்று சில தருணங்களில் கூறப்பட்டது.

1986 ம் ஆண்டில் தான் இப்பொழுது உபயோகிக்கப்படும் HIV வைரஸ் என்ற பெயர் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

HIV வைரசின் இரண்டு உப பிரிவுகள் இருப்பதாக இப்பொழுது நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் மேற்கத்தைய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. HIV ஐ என்று அழைக்கப்படுகிறது. பின்பு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய உபபிரிவை HIV II என அழைக்கிறார்கள்.

நோய் காவிகள்

எயிட்ஸ் கிருமித் தொற்றுக்கு ஆளாகி, அதனைத் தனது உடலில் சுமக்கிற எவருமே, அதனை ஏனையவர்களுக்கும் பரப்பலாம். இவர்களே நோய் காவிகள் எனப்படுவார்கள்.

பெரும்பாலான நோய்காவிகள் தமக்கு அந்நோய் இருப்பதை அறிய மாட்டார்கள் ஏனெனில் வைரஸ் தொற்றினாலும் நோய்க்கான அறிகுறிகள் தோன்ற மிக நீண்ட காலம் எடுக்கலாம்.

ஒரு சிலருக்கு சில மாதங்களிலிலேயே நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகிறது வேறு சிலருக்கு ஒரு சில வருடங்கள் செல்லக்கூடும்.

வேறு பலர், கிருமித் தொற்றுக்காளான (Infection) போதும், 5 வருடங்கள் வரை கூட நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இன்றி சுகதேகிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கிருமி தொற்றிய பலர். பல வருடங்களுக்குப் பின்னர் எயிட்ஸ் நோய் உண்டாகும் ஆபத்திலிருந்து முற்றுமுழுதாகத் தப்பி விட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது

நீண்ட காலத்திற்கு நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல், கிருமிகளைச் சுமப்பவர்களே மிகவம் ஆபத்தானவர்கள். இந்த நோய்க்காவிகள் தம்மை அறியாமலே பலருக்குக் கிருமியை பரப்பக்கூடும்.

நோய்க்கான அறிகுறிகள் இல்லாத நோய்க்காவிகளை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் ஆனால் கிருமி தொற்றிய 6 முதல் 12 வாரங்களின் பின்னரே இரத்தப் பரிசோதனைகள் நிச்சயமான முடிவைக் கொடுக்கும். அதற்கிடையில் அவர் பலருக்கு கிருமியைப் பரப்பியிருக்கக்கூடும்.

நோய் எவற்றால் பரவுகிறது?

இந்நோயின் வைரஸ் கிருமிகள். நோயுற்ற மனிதரின் உடற் திரவங்களில் (Body Fluids) காணப்படுகின்றன. இரத்தம், இந்திரியம். எச்சில், சிறுநீர், கண்ணீர், பெண்பாலுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம் (Vaginal Secretions) தாய்ப் பால், போன்றவற்றில் காணப்படுகிறது, ஆனால் நோயைப் பரப்புவதில் இரத்தமும், இந்திரியமும் பெண்பாலுறுப்பில் இருந்து சுரக்கும் திரவமுமே முக்கியமானவை.

நோயுற்ற ஒருவரின் இரத்தம். (மாதவிடாய் இரத்தம் அடங்கலாக) இந்திரியம் அல்லது பெண் பாலுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம் ஆகியவற்றில் ஒன்று, சாதாரண மனிதனின் இரத்தம் அல்லது மென்சவ்வுடன் (Mucous Membrane) தொடர்புபடும் போதேகிருமி தொற்றுகிறது. வாய், மலவாசல், பாலுறுப்பு ஆகியவற்றில் உள்ள மிக மென்மையான தோலே மென்சவ்வு எனப்படுகிறது.

இந்த வைரஸ் மிகவும் வீரியமானது அல்ல முற்கூறிய திரவங்களில் வைரசின் செறிவு மிக இருந்தால்தான் தொற்றும். அல்லது தொற்றுவதற்கான சந்தர்ப்பத்தைப் பலமுறை கொடுத்தாலும் தொற்றலாம்.

எயிட்ஸ் எப்படி, எப்பொழுது தொற்றும்?

எயிட்சை உண்டாக்கும் HIV வைரஸ் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே தொற்றுகிறது. காற்றினாலோ, நீரினாலோ உணவாலோ பரவாது.

1. பாலுறவு : எயிட்ஸ் நோய் முக்கியமாக ஒரு பாலியல் நோயே. பெரும்பாலும் உடலுறவின் போதே ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றுகிறது. பெண்ணிலிருந்து ஆணுக்கோ, அல்லது ஆணிலிருந்து பெண்ணுக்கோ, தொற்றலாம். ஆணிலிருந்து பெண்ணிற்குத் தொற்றுவதே அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பெண்ணிலிருந்து ஆணுக்குத் தொற்றாது என்பது இதன் அர்த்தமல்ல.

உடலுறவு ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையேதான் இருக்கவேண்டும் என்பதல்ல. இயற்கைக்கு ஒவ்வாத தன்னினப் பாலுறவு (Homosexual Intercourse) எயிட்சைப் பரப்புவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தன்னினப் பாலுறவில் ஈடுபடும் ஆண்களையே இந்நோய் பெரும்பாலும் பீடிக்கிறது. அதிலும் முறைகேடான மலவாசலூடான உடலுறவு இந்நோயை மிக இலகுவில் பரப்புகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆபிரிக்க நாடுகளில் ஆண், பெண் இருபாலரிடமும் இந்நோய் கிட்டத்தட்ட ஒரே அளவு காணப்படுகிறது. இது ஆண், பெண் பாலுறவினாலும் இந்நோய் பரவுகிறது என்பதை நிச்சயமாக்குகிறது.

II) இரத்தம் ஏற்றல் (Blood transfusion):
எயிட்ஸ் நோயாளியோ, அல்லது நோய் காவியோ இரத்ததானம் செய்தால், அந்த இரத்தத்தைப் பெறுபவருக்கும் HIV வைரஸ் நிச்சயம் தொற்றும். ஹீமோபீலியா (haemophilia) என்ற நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு மேல்நாடுகளில் எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இரத்தம் அல்லது இரத்தத்தின் ஒரு பகுதியான காரணி VIII (Factor VIII) அடிக்கடி ஏற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு எயிட்ஸ் நோய்க்கிருமி இரத்தத்தினாலேயே தொற்றியிருக்கும் என்பது வெளிப்படை.

இரத்ததானம் செய்பவர்களுக்கு இந்நோய் இல்லை என்பதை நிச்சயப்படுத்துவது அவசியம். இதன் முதற்படியாக இரத்ததானம் செய்ய முன்வருபவர்களிடம் “உங்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதற்கான சந்தர்ப்பம் சிறு அளவிலேனும் இருந்தாற் கூட இரத்ததானம் செய்வதைத் தவிருங்கள்” என அறிவுறுத்தப்படுகிறது. இதனால் அத்தகையோர் மூலம் நோய் பரவுவதை ஓரளவேனும் தடுக்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் தானம் செய்யப்படும் இரத்தங்கள் யாவுமே. இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு எயிட்ஸ் கிரமி தொற்றுதலுக்கு ஆளாகாமல் இருப்பது நிச்சயப்படுத்தப்படுகிறது. இதனால் இரத்தம் ஏற்றுதல் மூலம் எயிட்ஸ் பரவுவது அங்கு பெருமளவில் குறைந்திருக்கிறது.

எமது நாட்டில் ஒவ்வொரு இரதத்தானத்தின் போதும் எயிட்ஸ் இரத்தப் பரிசோதனை செய்வது இன்றைய நிலையில் சாத்தியமானதில்லை. இரத்தப் பரிசோதனைக் கருவிகள் இலகுவில் கிடைக்காமையும், பொருளாதார நிலையுமே இதற்கான காரணங்களாகும்.

இதனால் இரத்தம் ஏற்றுவதால் நன்மைக்குப் பதில் தீமையே விளையக்கூடியதான நிலைமை சில சந்தர்ப்பங்களில் நேரலாம். இதைத் தடுப்பதற்கு இரத்ததானம் செய்பவர் மாத்திரமன்றி, இரத்தம் பெறுபவரின் உறவினர்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

உங்கள் உறவினர் ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை ‘விலைக்கு வாங்கி விடலாம்’ எனத் தீர்மானிக்காதீர்கள். அறியாத ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கிய இரத்தம் எயிட்ஸ் நோயையும் கொண்டு வரலாம். எனவே நீங்களோ, நம்பிக்கைக்கு உரிய உறவினர் ஒருவரோ இரத்ததானம் செய்யுங்கள், இதன் மூலம் எயிட்ஸ் நோய் தொற்றுவதைத் தவிர்க்கலாம்.

III) கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளைப் பயன்படுத்தல்;
எயிட்ஸ் நோயாளிக்கு ஏற்றிய ஊசியையும் கண்ணாடிக் குழலையும் (Needle & Syringe) கிருமி நீக்கம் (Sterilisation) செய்யாமல் இன்னொருவருக்கு ஏற்றினால் அவருக்கும் இந் நோய் தொற்றலாம். இவ்வுபகரணங்களை உபயோகிக்கும் போது அதில் இரத்தம் சிறிதளவேனும் படவே செய்யும். இதன் காரணமாகவே வைரஸ் தொற்றுகிறது.

கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் மூலம் பரவலாம்.

தகுந்த மருத்துவக் கல்வியைப் பெற்ற, தனக்குள்ள சமூகப்பொறுப்பை உணர்ந்த எந்த வைத்தியனோ, தாதியோ ஏனைய சுகாதார உதவியாளர்களோ கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை நோயாளிகளுக்கு ஒருபோதும் ஏற்ற மாட்டார்கள்.

தமது சட்டைப் பையினுள் ஊசியை அழுக்குடன் சுமந்து சென்று பலருக்கு அதை ஏற்றும் பொறுப்பற்றவர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். இத்தகையவர்களிடமிருந்து தப்புவது உங்களது பொறுப்பாகும்.

எனவே உங்களுக்கு ஊசி ஏற்றப்பட வேண்டிய அவசியம் நேர்ந்தால், அவற்றை கிருமி நீக்கம் செய்து உபயோகிக்கும் நம்பிக்கையான, பொறுப்பு வாய்ந்த மருத்துவ நிலையங்களிலேயே. ஏற்றிக்கொள்ளுங்கள். பொரளாதார வசதியுள்ளவர்கள், ஒரு முறை மட்டும் உபயோகித்துவிட்டு எறியக்கூடிய பிளாஸ்டிக் ஊசிகளைப் பயன்படுத்தலாம்.

போதை மருந்துகளை ஊசி மூலம் தங்களிடையே ஏற்றும் போதைவஸ்து அடிமைகளிடமும் எயிட்ஸ் நோய் பெருமளவு காணப்படுகிறது. கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகளை உபயோகிப்பதே இதற்குக் காரணம்.

ஒருவகைச் செய்கண்மாரியைப் பரப்பும் வைரஸ் கிருமியும் (Hepatitis B) இவ்விதம் ஊசிகள் மூலம் பரவலாம்.

ஐஏ) தாயிலிருந்து குழந்தைக்கு:
எயிட்ஸ் நோயாளி அல்லது நோய்காவி கர்ப்பமுற்றால், பிறக்கப்போகும் குழந்தைக்கும் இந்நோய் தொற்றும்

இது இரண்டு வழிகளில் நேரலாம் தாயில் இருக்கும் கிருமி கர்ப்பப்பையில் வளரும் குழந்தைக்குத் தொற்றலாம் அல்லது குழந்தை பிறக்கும் போது தாயின் பிறப்பு வழியிலிருந்து தொற்றலாம்.

அத்துடன் கிருமி தொற்றியும் நோய்க்கான அறிகுறிகள் தோன்றாமல் பெண் கர்ப்பமடைந்தால், அவ் அறிகுறிகள் தோன்றுவது துரிதடையும்.

எனவே, தான் ஒரு எயிட்ஸ் நோயாளி என்றோ நோய்காவி என்றோ உணர்ந்த பெண், கர்ப்பமடைவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

நோயின் அறிகுறிகள்

HIV வைரஸ் தொற்றிய ஒருவருக்கு எயிட்ஸ் நோய் உடனடியாக ஏற்படுவதில்லை. வைரஸ் தொற்றியதால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை ஐந்து முக்கிய நிலைகளாகப் பிரித்து நோக்கப்படுகிறது. ஆனால் இந்த நிலைகள் யாவுமே ஒரே நோயாளியில் தோன்றும் என்றோ, இதேவரிசையில் தோன்றும் என்றோ கூறமுடியாது.

1) ஆரம்ப அறிகுறிகள் (Acute Phase): கிருமி தொற்றிய ஒரு சில வாரங்களுக்குள் ஆரம்ப அறிகுறிகள் தோன்றலாம். இவை மிகவும் சாதாரணமானவை; ஏனைய பல நோய்களிலும் இவ் அறிகுறிகள் தோன்றக்கூடுமாகையால், அவற்றை நோயாளிகள் மாத்திரமன்றி வைத்தியர்களும் கூட அலட்சியம் செய்து விடக்கூடும்.

உடல் உழைவு, பசியின்மை, தலையிடி. தொண்டை நோ. தசைகளில் உழைவு, மூட்டுக்களில் நோ, வயிற்றோட்டம், காய்ச்சல், இரவு வியர்சை. இருமல் போன்ற ஏதாவது சாதாரண அறிகுறிகள் தோன்றும். சிலவேளைகளில் நெறிகளும் தோன்றகூடும்.

மருந்துகள் இல்லாவிடில் கூட இவ் அறிகுறிகள் 2-3 வாரங்களுக்குள் மறைந்துவிடும்.

II) அறிகுறிகளற்ற காலம் (Latency Phase); இக்காலத்தில் முன்னைய அறிகுறிகள் மறைந்து நோயாளி சுகதேகிபோல் இருப்பார். இந்நிலை சில வாரங்கள் முதல் ஒரு சில வாரங்கள் முதல் ஒரு சில வருடங்கள் வரை நீடிக்கக்கூடும்.

III) தொடர்ந்திருக்கும் நெறிகள் (நிணநீர்ச் சுரப்பி வீக்கம்)

(Persistant Generalised Lymphadenopathy)

ஏனைய நோய்களில் உண்டாகும் நெறிகள் போல் HIV வைரஸினால் உண்டாகும் நெறிகள் விரைவில் மறைந்து விடுவதில்லை. தொடர்ந்து இருக்கும்; அத்துடன் உடலின் பல பகுதிகளில் தோன்றும். பொதுவாக கழுத்து, அக்குள், அரைப்பகுதி, (Inguinal region) போன்ற இடங்களில் தோன்றலாம்.

ஒரு செ.மீட்டருக்கும் பெரிதான, இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களில் தோன்றி, மூன்று மாதத்திற்கு மேலும் மறையாத நெறிகள் இருந்தால், அந்நோயாளிக்கு HIV வைரஸ் தொற்றியிருப்பதாக நம்பலாம். இதனை இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயிப்படுத்தலாம்.

இத்தகைய நெறிகள் பல வருடங்களுக்கு மறையாது இருந்தாலும், எயிட்ஸ் நோய்க்கான ஏனைய அறிகுறிகள் பலருக்குத் தோன்றாதிருக்கலாம். சிலருக்குமாத்திரம் எயிட்ஸ் நோய்க்கான ஏனைய அறிகுறிகள் தோன்றும்.

IV) எயிட்சைச் சார்ந்த குணங்கள் (AIDS - Related Complex)

எயிட்ஸ் நோய்க்கு ஏற்படும் பெரும்பாலான அறிகுறிகள் இந்நிலையில் தோன்றும். ஆனால் எயிட்ஸ் நோயில் இருப்பது போல கடுமையாக இருக்காது அத்துடன் எயிட்ஸ் நோய்க்கே உரித்தான சில புற்றுநோய்ளும், நீயூமோனியாவும் இந்நிலையில் தோன்றாது.

ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் வயிற்றோட்டம், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், தனது எடையில் 10% கூடுதலாக இழத்தல் போன்ற முக்கிய அறிகுறிகள் தோன்றலாம். அத்துடன் வாயில் பங்கசு தொற்று நோய்கள், நெறிகள். சொறிவு, பசியின்மை, சோர்வு, வயிற்று வாதை போன்ற ஏனைய அறிகுறிகளும் தோன்றும்.

இவ் அறிகுறிகளில் பல ஒருவருக்கு இருந்தால் எயிட்ஸ் நோய் ஆரம்பமாகிவிட்டதைப் பெரும்பாலும் நிச்சயிக்கலாம்.

V) எயிட்ஸ் HIV வைரஸ் தொற்றியதால் ஏற்படும் மிகக் கடுமையான நிலைதான் எயிட்ஸ்

சாதாரண மனிதர்களில் ஒருபோதும் தோன்றாத ஒரு வகைப் புற்றுநோய் ‘கப்போஸீஸ் சார்க்கோமா’ (Kaposi’s Sarcoms) தடிப்புகளாக ஆரம்பத்தில் தோன்றினாலும், பின் மெல்லிய கத்தரிப்பூ நிறக் கட்டிகளாக வளரும்; சொறிவை ஏற்படுத்தாது.

தோலில் மாத்திரமன்றி, வாய், தொண்டை போன்ற இடங்களிலும் தோன்றலாம். சிலவேளை சுவாசப் பையையும் தாக்கலாம்.

எயிட்ஸ் நோயாளியின் தோலி நிறமாற்றமடைந்த கப்போஸீஸ் சார்க்கோமா - புற்றுநோய்

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் அந்தந்த தருணத்திற்குக் காத்திருந்த சில கடுமையான தொற்று நோய்கள் இவர்களுக்கு ஏற்படலாம். ஒருவகை நியூமோனியா. சயரோகம், கடுமையான வயிற்றோட்டம் ஆகிய இதில் அங்கும்.

வரண்ட இருமல், இளைப்பு, நெஞ்சுநோ ஆகியன அறிகுறிகளுடன் ஒருவகை அரிதான நியூமோனியா (Pneumocystis Carinii Pncumonia) ஏற்படலாம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள எயிட்ஸ் நோயாளர்களிடையே இந்த நியூமோனியா அதிகம் காணப்படுகிறது.

ஆனால் ஆபிரிக்க நாட்டில் உள்ள எயிட்ஸ் நோயாளர்களிடையே சயரோகமும் (Tuberculosis) நீண்ட நாள் தொடரும் கடுமையான வயிற்றோட்டமுமே பொதுவாகக் காணப்படுகிறது.

எயிட்ஸ் நோயாளரின் மூன்றில் ஒரு பகுதியினரை ஒருவகைப் புத்தி சுவாதீனம் (AIDS dementia) தாக்கலாம். மாறாட்டம், திடீரென ஏற்படும் மறதி. சிந்தனைத் தெளிவின்மை, உணர்வின்றிச் சிறுநீர் கழிதல் போன்றவையே இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

இதைத்தவிர எயிட்சைச் சார்ந்த குணங்கள் என்ற நிலையில் இருக்கும் ஏனைய அறிகுறிகளும் எயிட்ஸ் நோயாளிகளுக்கும் இருக்கும். ஆனால் அவை மிகக் கடுமையாக இவர்களுக்கு இருக்கும்.

எயிட்ஸ் என நிச்சயப்படுத்துவது எப்படி?

மேலே கூறியவற்றில் கப்போஸீஸ் சார்க்கோமா, நியூமோசிஸ்டிஸ்கார்னி நியூமோனியா ஆகியவை எயிட்ஸ் நோயாளிகளிலேயெ உண்டாகின்றன.

ஏனையவை சாதாரண மனிதர்களிலும் உண்டாகலாம். எனவே அத்தகைய அறிகுறிகளில் ஏதாவது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ இருந்தால் எயிட்ஸ்தான் எனப்பயப்படாதீர்கள். இவற்றில் பல அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் மட்டுமே எயிட்ஸ் என்று சந்தேகிக்க இடமுண்டு.

எயிட்ஸ்தான் என நிச்சயப்படுத்தக் கீழே தரும் முக்கிய அறிகுறிகளில் இரண்டும், சாதாரண அறிகுறிகளில் ஒன்றும் காட்டாயம் இருக்கவேண்டும்.

முக்கிய அறிகுறிகள் :

• தனது எடையில் 10% க்கு மேல் திடீரென இழத்தல்
• ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் வயிற்றோட்டம்
• ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் காய்ச்சல்

சாதாரண அறிகுறிகள் :

• ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான இருமல்
• உடல் பூராகவும் ஏற்படும் சொறியுடன் கூடிய சரும நோய்
• மீண்டும் மீண்டும் தோன்றும் ஒருவகை வைரஸ் நோய் (Recurrent herpes Zooster)
• உடல் பூராகப் பரவும் ஒருவகை வைரஸ் நோய் (chronic, Generalised herpes simples))
• வாயிலும் தொண்டையிலும் ஏற்படும் பங்கசு நோய்
• பல இடங்களில் தோன்றி மறையாதிருக்கும் நெறிகள்
• மறதி
• சிந்தனைத் திறனை இழத்தல்

இரத்தப் பரிசோதனைகள்

இரத்தப் பரிசோதனைகள் மூலம் HIV வைரஸ் தொற்றியிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்தலாம் எனவே முன்பு கூறிய அறிகுறிகளை உடையவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து, அதன் மூலம் HIV வைரஸ் தொற்றியிருப்பது தெரியவந்தால், அவருக்கு எயிட்ஸ் நோய்தான் என நிச்சயப்படுத்தலாம்.

நோயுற்றவரின் கணவன் அல்லது மனைவிக்கும், ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கும், அவருடன் தொடர்பு கொண்ட ஏனையவர்கள் இருந்தால் அவர்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியமாகிறது.

தனக்கு HIV வைரஸ் தொற்றியிருக்கக் கூடும் எனச் சந்தேகப்படும் எவரும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரத்தம் ஏற்றுமுன் இரத்தத்திலும் HIV வைரஸ் இருக்கிறதா என அறிவது அவசியம்.

இரத்தப் பரிசோதனைகள் மூலம் எயிட்ஸ் நோயாளியை மாத்திரமன்றி, நோய் காவிகளையும் கண்டுபிடிக்க முடியுமாதலால் இது மிகவும் பிரயோசனமானது.

கிருமி தொற்றி 6-12 வாரங்களில் பின்னரே இவை நிச்சயமான முடிவைக் கொடுக்கும்.

இரண்டு முக்கிய வகையான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

I) எலிஸா பரிசோதனை (ELISA- Enzyme Linked Immunobsorbent Assay)

நோயுற்றவரின் இரத்தத்தில் உள்ள HIV வைரசுக்கு எதிரான பிறபொருள் எதிரியை (Antibody) அடையாளம் காண்பதிலேயே இது தங்கியுள்ளது. கண்ணால் காணக்கூடிய நிறவேறுபாடகளை உணர்வதன் மூலமே இப் பரிசோதனையின் முடிவுகளை அறிய வேண்டும்.

எனவே இப்பரிசோதனையை சொற்ப பயிற்சி உள்ள மருந்து ஆய்வுகூட ஆய்வாளர்கள் சுலபமாகச் செய்யலாம்.

ஆயினும் இப்பரிசோதனை சில தருணங்களில் தவறான முடிவுகளையும் கொடுக்கலாம். எனவே இப்பரிசோதனை முடிவு HIV வைரஸ் தொற்று இருப்பதாகக் காட்டினால் மற்றைய பரிசோதனை செய்து உறுதி செய்யவேண்டும்.

II) வெஸ்டர்ன் புலட் (Western Blot) மிகவும் நம்பிக்கையான முடிவைக் கொடுக்கும். எனவே எலிஸா பரிசோதனை முடிவை உறுதி செய்ய இது உதவும். இது HIV வைரசின் பல பாவங்களுக்கு எதிரான பல பிறபொருள் எதிரிகளை அடையாளம் காணுவதை அடிப்படையாகக் கொண்டது.

இந்தப் பரிசோதனை மிகவும் சிக்கலானதும் அதிக பொருட்செலவையும் ஏற்படுத்துவதுமானது. மிகவும் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களே இதைச் செய்ய முடியும்.

யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளிக்கும் இந்த இரத்தப் பரிசோதனையே (கொழும்பில்) செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டதை இவ்விடத்தில் நினைவு கூறலாம்.

எயிட்ஸ் பற்றிய தவறான கருத்துக்கள்

எயிட்ஸ் ஒரு புதிய நோய். எட்டு வருடச் சரித்திரத்தையே கொண்டுள்ளது. எனவே இந்நோய் பற்றிய பூரணமான விபரங்கள் மருத்துவ உலகிற்கு இன்னமும் கிடைக்கவில்லை.

ஆனால் மிகவும் ஆழமாகவும், நுணுக்கமாகவும் ஆராயப்பட்ட, ஆராயப்படுகிற நோய் இதுதான். எனவே பல புதிய புதிய தகவல்கள் தினமும் வெளியாகின்றன.

இது ஒரு கொல்லும் வியாதி ஆதலால் இந்நோய் பற்றிய பயமும், அருவருப்பும். சந்தேகமும் மக்களிடையே இருக்கிறது. இது இந்நோய் பற்றியும், இது பரவும் விதங்கள் பற்றியும் பல தவறான பயங்கர வாந்திகள் பரவுவதற்குக் காரணமாகிவிட்டது.

எனவே அவற்றை நிவர்த்திப்பது அவசியமாகிறது.

• எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் காற்றினாலோ, நீரினாலோ, உணவினாலோ பரவாது
• நோயுற்றவருடன் ஒரே வீட்டில் வசிப்பதாலோ, தொட்டுப் பழகுவதாலோ, அருகில் இருப்பதாலோ பரவாது.
• அவர் உபயோகித்த உடையை அணிவதாலோ, உணவுக் கலசங்களை உபயோகிப்பதாலோ, மலசலகூட இருக்கையை (Toilet Seat) பாவிப்பதாலோ பரவாது.
• கை கொடுப்பதால் தொற்றாது.
• ஒரே பாடசாலையில் படிப்பதாலோ, ஒரே ஆபிஸில் வேலை செய்வதாலோ தொற்றாது.
• இரத்தத்தை உறிஞ்சும் நுளம்பினால் பரவாது. இலையான் கரப்பொத்தான். கொசு போன்ற ஏனைய பூச்சிகளாலும் பரவாது.
• நுளம்பினாலோ ஏனைய பூச்சிகளாலோ எயிட்ஸ் பரவாது
• வேறு எவருடனும் பாலுறவு வைக்காத ஒருவருடன் (கணவன்/மனைவி) உடலுறவு வைப்பவருக்குத் தொற்றாது.
• இரத்ததானம் செய்தாலும் தொற்றாது
• பாலூட்டுவதால் குழந்தைக்குத் தொற்றுவதற்கான ஆதாரம் இல்லை.
• பாலூட்டுவதால் குழந்தைக்குத் தொற்றாது
• நோயுற்றவருக்கு வாயில் முத்தமிடுவதாலும் தொற்றாது. ஆனால் வாயில் புண்களோ, காயங்களோ, முரசு கரைதலோ இருந்தால் தொற்றலாம்.

உங்களுக்கு நோய் தொற்றுவதைத் தடுங்கள்

ஒருவனுக்கு ஒருத்தி

இந்திரியத்தாலும், பெண் பாலுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தினாலும், இரத்தத்தினாலுமே எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் பரவுவதை அறிவீர்கள். எனவே,

• ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்வான நம்பிக்கையான நெறியையே கடைப்பிடியுங்கள்.
• உங்களுக்கு அல்லது பாலியல் பங்காளிக்கு (கணவன்/ மனைவி இந்நோய் தொற்றியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் இருந்தால் உடலுறவின் போது கட்டாயம் கருத்தடை உறைகளை (Condom) உபயோகியுங்கள் இது ஏனைய பாலியல் நோய்கள் தொற்றுவதையும் தடுக்கும்.
• கருத்தடை உறைகளைப் பாவிப்பது உபயோகமானது
• பலருடன் உடலுறவு வைக்கும் எவருடனும் ஒருபோதும் உடலுறவு வைக்காதீர்கள். விபசாரிகளுடனும் (ஆண்/பெண்) அவர்களுடன் செல்பவர்களுடனும் உடலுறவு ஒருபோதும் வைக்கவேண்டாம்.
• கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசிகளையே உபயோகப்படுத்தும் நம்பிக்கையான வைத்தியசாலையிலேயே உங்களுக்கு அவசியம் போடவேண்டிய ஊசிகளைப் போடுவியுங்கள்.
• இரத்தம் ஏற்ற வேண்டிய அவசியம் நேர்ந்தாலும் உங்களுக்கு நன்கு அறிமுகமான, நம்பிக்கையான நபரின் இரத்தத்தையே பெறவேண்டும்.

எவரை எயிட்ஸ் நோய் தாக்கும்?

எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.

ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

• கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
• பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும்.
• பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
• விபசாரிகளுக்கு (ஆண்/பெண்)
• கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளிகளுக்கு,
• போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவர்களுக்கு,
• அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளிக்கு.

எனவே இத்தகையவர்களில் ஒருவர் ஆகாமல் இருக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

எயிட்ஸ் கிருமி
தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால்?
ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை அவதானித்திருக்கலாம்.

இந்தச் சூழ்நிலையில் உடனடியாகச் செய்ய வேண்டியவை எவை?

• உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M.O.H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.
• தனக்கு வெளியிடப்பட்ட ஒருவரது இரகசியங்களை, மற்றவர்களுக்குப் பரப்பாது இரகசியம் காப்பது வைத்தியர்களின் தொழில் தார்மீகமாகும். எனவே எதையுமே மறைக்காமல் சொல்லலாம். வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
• யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள், யாழ் போதனா வைத்தியசாலையின் 33ம் இலக்க அறைக்குச் சென்றால், வேண்டிய உதவி கிடைக்கும் என யாழ் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் என் கனகசபை பத்திரிகைகள் மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
• மீண்டும் கிருமி தொற்றுவதற்கு ஏதுவான செய்கைகளில் ஈடுபடாதீர்கள்,
• உங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,
- உடலுறவில் ஈடுபடாதீர்கள்
- உடலுறவு வைத்தால், கருத்தடை உறைகளை (Condoms) கட்டாயம் உபயோகியுங்கள்,
- உங்கள் உடற் திரவங்களால் அழுக்கடைந்த உங்கள் ஆடைகளை நீங்களே துவையுங்கள்
- இரத்ததானம் செய்ய முற்படாதீர்கள்

• வேறு எந்த நோய்கள் உங்களுக்கு உண்டானாலும் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள். அப்பொழுது உங்களுக்கு நோய் தொற்றியிருக்கும் விஷயத்தை மறக்காமல் சொல்லுங்கள்.
• சமுதாயப் பொறுப்புள்ள ஒருவனாக நடந்து கொள்ளுங்கள்.

எயிட்ஸ் நோயாளியைப் பராமரிப்பது எப்படி?

மனிதன் ஒரு சமுதாய மிருகம். அவனால் தனித்து இயங்க முடியாது. அவனுக்கு மற்றவர்களின் உதவி எப்பொழுதுமே தேவைப்படுகிறது. உதவி என்பது சரீர உதவியோ, பொருளாதார உதவியோ மாத்திரமல்ல.

மனித உறவுகளும், புரிந்துணர்வுகளும், ஆதரவும், நட்பும், சினேகம் புன்னகையும், ஆதரவான வார்த்தைகளும், அன்பான ஸ்பரிசமுமே மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.

எயிட்ஸ் அவர்களுக்கு நோய் என்ன என்பது தெரிந்தபின், மரணத்தை எதிர் நோக்கிய அதி பயங்கர நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பயம். மனப்பதற்றம், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகலாம்.

உறவினர்களும், சுகாதார உதவியாளர்களும் இவற்றை எதிர்பார்த்து. அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும்.

எயிட்ஸ் கிருமி நோயாளியின் தோலினாலோ சுவாசத்தினாலோ மற்றவர்களுக்குத் தொற்றாது என்பது தெரிந்ததுதானே. எனவே அவர்கள் நாடும் உடல், உள நெருக்கத்தை அவர்களுக்கு அளிக்கத் தயங்காதீர்கள்.

அத்துடன் அவர்கள் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மற்றவர்களுடன் அளவளாவவும் விரும்பக்கூடும். எனவே அவரைத் தனிமையில் வாடவிடாது, அவருடைய கருத்துக்களைக் கேட்கவும், அவருடன் உரையாடவும் போதிய நேரத்தை ஒதுக்குங்கள்.

அவர் வீட்டில் தனித்திருக்கவோ, சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கவோ தேவையில்லை என்பதை உணர்த்துங்கள், வீட்டின் நாளாந்த வாழ்க்கையிலும், நடவடிக்கைகளிலும் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும், இயங்கவும், ஊக்கம் அளியுங்கள். அவரது சமூகத் தொடர்புகளையும் வேலைகளையும் இடைநிறுத்தாது, தொடர வழி செய்யுங்கள்.

சிலவேளை நோயாளி ஒரு மதகுருவுடன் உரையாட விரும்பக்கூடும். அப்படியாயின் அதற்கும் வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

கடுமையான காய்ச்சல், வயிற்றோட்டம், மார்புச்சளி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் எயிட்ஸ் நோயாளிகளை வைத்தியசாலையில் வைத்தே பராமரிக்க வேண்டியிருக்கும்.

நோயின் கடுமை குறைந்த பின்னும், ஏனைய நேரங்களிலும் அவரை வீட்டில் வைத்தே பராமரிக்கலாம். பொதுவாக வீட்டில் இருப்பதே நல்லது. ஏனெனில் குடும்ப அங்கத்தவர்களால்தான் அவரது தேவைகளையும். எண்ணங்களையும் இலகுவில் புரிந்து கொண்டு வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்யக் கூடியதாக இருக்கும்.

வைத்தியசாலையில் அவரை வைத்திருக்கும்போது அவரைத் தனிமையான இடத்தில் வைத்துச் சிகிச்சை செய்யவேண்டியதில்லை. அவரிலிருந்து நோய் மற்றவர்களுக்குத் தொற்றலாம் என்ற காரணத்திற்காக அவரை ஒரு போதும் தனிமைப்படுத்த வேண்டியதில்லை.

ஆனால் சில தருணங்களில் மற்றவர்களின் நோய்கள் அவருக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்காக, அவரைத் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் நேரலாம்.

நோயாளியின் இரத்தம், மலசலம், இந்திரியம், பெண்பாலுறுப்பு நீர் போன்றவற்றால் அழுக்கடைந்த உடைகளில் எயிட்ஸ் வைரஸ் கிருமி இருக்கக்கூடுமாதலால், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். அவற்றைக் குளோரின் கலந்த நீரில் (Chlorine Solution) கழவலாம் அல்லது கொதி நீரில் அவிக்கவேண்டும்.

சுகாதார சேவையாளர்கள் கவனிக்க வேண்டியவை

நோயுற்றவரி;ன் இரத்தத்திலும், இந்திரியம், பெண் பாலுறுப்பு சுரப்பு நீர் போன்ற எல்லா உடற் திரவங்களிலும் (Body Fluids) சீழ் போன்றவற்றிலும் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமி இருக்கக்கூடும். நோயாளியின் இரத்தம் ஆரோக்கியமான தோலில் பட்டால் தொற்றாது. ஆனால் காயமுற்ற, தோல், வாய், மூக்கு, கண், பாலுறுப்பு, மலவாசல் ஆகியவற்றில் தெறித்துப்பட்டால் தொற்றலாம்.

ஒருவகை செங்கண்மாரியை (Hepatitis B) பரப்பும் வைரசும் இம்மாதிரியாக இரத்தத்தின் மூலம் பரவும் தன்மையுடையது.

எனவே அத்தகைய உடற்திரவங்களைக் கையாளவேண்டிய நிலையில் இருக்கும் சுகாதார சேவையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஆனால் சுகாதார சேவையாளர்களுக்கு, தமது தொழில் காரணமாக எயிட்ஸ் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.

எப்படியிருப்பினும் அவர்கள், தமக்கு இந்நோய் தொற்றாதிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம். எயிட்ஸ் நோயாளிகளைக் கையாளும்போது மாத்திரமின்றி. வேறெந்த நோயாளியையும் கையாளும் போதும் இவற்றை அவதானிக்க வேண்டும்.

கை கழுவுதல்:

நோயாளியின் இரத்தத்தினாலோ அல்லது ஏனைய உடற் திரவங்களாலோ கை அல்லது வேறு எந்தப்பாகமோ அசுத்தமடைந்தால், அவற்றைச் சோப்பும் நீரும் கொண்டு சுத்தமாகக் கழுவுங்கள்.

கையுறைகள் (gloves) அணிந்திருந்தாலும், அவற்றைக் கழற்றிய பின்னரும் கைகளைச் சோப்பும், நீரும் கொண்டு கழுவுவது அவசியம்.

ஊசி ஏற்றுதல் :

ஊசி மூலம் மருந்தை ஏற்றுவதற்குப் பதிலாக வாயினூடாக மருந்தைக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் ஊசி ஏற்றுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஊசி ஏற்றுவது மிக அவசியமாயின், ஒவ்வொரு நோயாளிக்கும் ஊசி ஏற்று முன்னரும், ஏற்றிய பின்னரும் ஊசியையும், கண்ணாடிக் குழல்களையும் கிருமி நீக்கம் செய்வது அவசியம்.

கையுறை அணிதல் :

இரத்தம் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட்டு வேலைசெய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறைகளை அணிவது அவசியம். அடுத்த நோயாளியிடம் செல்லும் போது முன்பு பாவித்த கையுறையைக் கழற்றிவிட்டுப் புதிய கையுறையை அணியவேண்டம். அல்லது அதே உறையைக் கழுவிக் கிருமிநீக்கம் செய்தபின் உபயோகிக்கவும்.

கையுறை கிடைக்காவிட்டால், கைகளை இரத்தம் படாதிருக்க தடித்த துவாய் அல்லது தடித்த கோஸ் சல்லடைத் துணி- (Gaze) துண்டை உபயோகிக்கலாம்.

காயம்படுவதைத் தடுத்தல்

காயங்களைத் தைக்க ஊசிகளை (Needle) உபயோகிக்கும் போது, சத்திர சிகிச்சைக் கத்திகளை (Blades) உபயோகிக்கும் போதும் அவற்றால் உங்கள் கையோ, விரலோ காயமடைவதைத் தவிர்க்க மேலதிக கவனம் எடுக்க வேண்டும். இல்லையேல் அக்காயத்தின் ஊடாக நோயாளியின் இரத்தத்தில் இருக்கும் கிருமி உங்களுக்குத் தொற்றக்கூடும்.

கையில் காயம்:

கையில் காயம் உள்ள சுகாதார சேவையாளர்கள், நோயாளியின் இரத்தம், சீழ் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறை அணிவது மிகவும் அவசியம். இதனால் தனக்கு நோய் தொற்றுவதைத் தவிர்க்கலாம்.

கிருமித் தொற்றுள்ள பண்புகளையும் (Infected Wounds) சீழ்வடியும் புண்களையும் உடைய சுகாதார சேவையாளர்கள், அவை குணமடையும் வரை நோயாளிகளைப் பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் உங்கள் உடலில் உள்ள கிருமிகள், நோயாளிக்குத் தொற்றி, அவரது நிலையை மேலும் மோசமாக்கலாம்.

மேற்கூறிய அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால், சுகாதார சேவையாளர்கள் தமக்கு மாத்திரமன்றி, நோயாளிக்கும் நல்லது பாதுகாப்பை அளிக்கமுடியும்.

எயிட்ஸ் நோய்க்கு மருந்து:

எயிட்ஸ் நோய் வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்றும் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதையும் ஏற்கனவே கண்டோம்.

HIV வைரஸ் உடலில் பெருகுவதற்கு ரிவேர்ஸ் ரான்ஸ் கிரிப்டேஸ் (Reverse Transcriptase) ) என்ற நொதியம் (Enzyme) தேவை. இதன் செயலைத் தடுப்பதன் மூலம் இந்நோய் பெருகுவதைத் தற்காலிகமாகத் தடுக்கலாம். சிடோவிடின் (Zidovudine) என்ற மருந்து இதற்காகப் பரிசோதனை நிலையில் உபயோகிக்கப்படுகிறது.

HIV வைரஸ் மனித உடலில் உள்ள கலங்களைச் சேர்வதற்கு, சிலவகை மனிதக் கலங்களில் உள்ள CD4 என்ற வகைப் புரதம் தேவை. இப்பொழுது இந்த CD4 என்ற புரதத்தைச் செயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே CD4 புரதத்தை மருந்தாக உபயோகிப்பதன் மூலம் இவ் வைரஸ் கிருமிகள் மனிதக்கலங்களில் சேர்வதைத் தடுக்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

வேறு பல மருந்துகளும் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன. ஆனால் எதுவும் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்தக் கூடியதாக இல்லை.

மருந்து ஆராய்ச்சிகளில் நம்பிக்கை கொண்டு காத்திருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை.

தடுப்பு மருந்து (Vaccine) :

வைரஸ் கிருமிகளால் உண்டாகும் பல நோய்கள் தொற்றாமல் தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் பாவனையில் உள்ளன. பெரியம்மை, சின்னமுத்து, கூகைக்கட்டு. நீர் வெறுப்பு நோய் (விசர் நாய்க்கடி நோய்) போலியோ, ஹெப்பரைரிஸ் பீ (Hepatitis B) வகைச் செங்கண்மாரி போன்ற நோய்கள் தொற்றாமல் தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் பாவனையில் உள்ளன.

தடுப்பு மருந்துகளில் வெற்றிக்கு பெரியம்மை ஒழிப்பு நல்லதோர் உதாரணமாகும். இதற்கான தடுப்பு மருந்தை பெரிய அளவில், உலகம் முழுவதும் ஒழுங்காகப் பல வருடங்கள் கொடுத்ததால், இந்நோய்உலகத்தலிருந்தே ஒழிக்கப்பட்டுவிட்டது.

இந்த வெற்றியின் அடிப்படையிலேயே எயிட்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பயிற்சி உலகின் பல முனைகளிலும் நடைபெறுகினறது.

எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு மரணமான பிரபல ஹொலிவூட்நடிகர் ரொக் ஹட்சன் இந்நோய் பற்றிய ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்குமாக 2 1/2 லட்சம் அமெரிக்க டொலரை அளித்தது இந்நேரத்தில் நினைவுபடுத்தத்தக்கது.

எயிட்ஸ் வைரஸ் தனது சில உயிரியல் இயல்புகளை அடிக்கடி மாற்றக்கூடியது. (Biological Hetrogeneity) இவ் இயல்புகளை அடிப்படையாக வைத்தே தடுப்பு மருந்துகள் தாயரிக்கப்படும்.

எயிட்ஸ் நோய் வைரஸ் (HIV) இந்த உயிரியல் அடிக்கடி மாற்றுவதால் தடுப்பு மருந்து தயாரிப்பது சிக்கலாகியுள்ளது. ஏனெனில் மாற்றமுறும் ஒவ்வொரு இயல்புக்கும் தடுப்பு மருந்து தயாரிக்கமுடியாது.

எனினும் எல்லா HIV வைரஸ் உப பிரிவுகளுக்கும் பொதுவான ஓரிரு உயிரியல் இயல்பு இருக்கக்கூடும். இதைக் கண்டு பிடிப்பதற்காக HIV வைரஸின் உயிரியல் இயல்புகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகினற்ன.

இவற்றின் பயனாக எதிர்காலத்தில் இந்நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கக்கூடும். இதற்குப் பல வருடங்கள் எடுக்கலாம்.

அதுவரைக்கும் எயிட்ஸ் நோய்க்கு எதிரான எமதுபார்வை. நோய் பரவுவதைத் தடுக்கும் (Preventive) முயற்சிகளிலேயெ முற்றுமுழுதாகத் தங்கியுள்ளது.


இப்புத்தகத்தை எழுத உதவியவை

1. AIDS Action 0 November, 1987 - Ahrtag
-March, 1988 London
- June, 1988
2. WHO Reports.
3. What is AIDS - Christian Medical Commission, Switzerland.
4. UPDAIE - 15 July, 1987
5. JAMA June, 1988
6. News Report From The Island Uthayan & Murasoli.

+++++++++++++++++++++++++

இந்நூலாசிரியரின் ஏனைய நூல்கள்:
1) சிறுவர்களின் கண்களைக் காக்க வாரீர்
2) தாயாகப் போகும் உங்களுக்கு...

வெளிவர இருப்பவை:
1) ஒரு டொக்டரின் டயறியில் இருந்து...
2) வைத்திய கலசம்

+++++++++++++++++++++++++

நூலாசிரியர் பற்றி…

• ஈழத்து இலக்கியத் துறையில் தன் எழுத்துக்களால் முத்திரை பதித்தவர் டாக்டர் எம்.கே. முருகானந்தநன். இலக்கிய அன்பர்களுக்கு நன்கு அறிமுகமான இவருக்கு அறிவு ஜீவிகள் மத்தியில் நல்ல பெயருண்டு.
-தினகரன் வாரமஞ்சரி

• வாசகர்களுக்கு மிகவும் பிரயோசனமானதும், அறிந்து கொள்வதற்கு அத்தியாவசியமானதுமான ஓர் விடயத்தை ஆராய்ச்சி செய்து தமிழில் நூலாகா வெளியிடும் தங்களின் முயற்சியை மிகவும் பாராட்டுகிறோம்.
-சி பாலச்சந்திரன் வீரகேசரி

• வெறும் சுவைஞர் மாத்திரமல்ல. மிக நுட்பமான கவனிப்புத் தன்மை மிக்கவர். இவர் படைப்பாளிக்குத் தேவையான ஆற்றலும், திறமையும் கைவரப் பெற்றவர்.
-டொமினிக் ஜீவா மல்லிகை

**********