கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  வித்துவசிரோமணி மறைத்திரு சி. கணேசையர்  
 

மகாஜனக் கல்லூரி தமிழ் மன்றம

 

வித்துவசிரோமணி
மறைத்திரு சி. கணேசையர்









தமிழ் மன்றம்
கல்வித்துறைச் செய்திட்டக் குழு,
மகாஜனக் கல்லூரி,
தெல்லிப்ழை
1977

+++++++++++++++++++++++

நன்றியுரை

தெல்லியூர் மகாஜனக்கல்லூரித் தமிழ்மன்றம் “தமிழ் பேணும் திருநாள்” என்ற ஒரு திட்டக் கோட்பாட்டை உளங் கொண்டு இவ்வாண்டு செயற்பட்டு வருகின்றது. இச்செயல் நிகழ்வின் முதற்கட்டம்@ வலி - வடக்கில் தமிழறிவுத் தொண்டு புரிந்து, செந்தமிழ்ச் செவ்வியைக் காத்து மறைந்த தமிழறிஞர்களின் திருவுருவப் படத்தைத்திறந்து வைத்தும், அவர்களின் தொண்டாம் கல்வி வாழ்க்கையைச் சுருக்கமாக எழுதி வெளியிடுவதுமான முனைப்பில் அமைகின்றது. இதில் முதற்கண் திரு. தி. த கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ் பேணும் திருநாள் மன்றத்தில் நடந்தேறியது. இம்முறையில் இப்போது வித்துவ சிரோமணி, பிரமசிறீ. சி. கணேசையர் அவர்களது தமிழ்பேணும் திருநாள் கொண்டாடத் திருவருள் பாலித்துளது. தமிழ்மன்றத்தார் மேற் கொண்ட இம்முயற்சிக்கு, எமது பழைய மாணவர்கள் மூலம் ஐயர் அவர்களின் மேல் பேரன்பு பூண்ட வருத்தலைவிழான், கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஆகிய கிராமங்களில் வாழும் பெரியோர்கள் உதவியளித்தனர். இவ்வுதவியாளர்களில் பண்டிதர், திரு. இ. நமசிவாயம், திரு. க. சின்னப்பு, ஆசிரியர் திரு. சி. நாகலிங்கம், திரு. வ. இராஜதுரை, திரு. க. த. பாலசுப்பிரமணியம் என்போர்களைக் குறிப்பிடவேண்டியவராவர்.

கணேசையர் அவர்களின் தமிழ் பேணுந் திருநாளைக் கொண்டாடும் பணியில் தே. உ. க சான்றிதழ் வகுப்பிற் பயிலும் கல்வித்துறைச் செய்திட்ட மாணவரும் ஈடுபட்டுழைக்க முன்வந்தது மகிழ்ச்சிக்குரியது. ஐயா அவர்களின் நூல்களைத் தொகுத்துக் கண்காட்சியொன்றினையும் அவர்கள் நடத்த முன்வந்தனர். இந்த இளைய மாணவர் சமுதாயத்தின் ஆர்வம் பாராட்டற்குரியது. செய்திட்டத்தில் அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

1978ஆம் ஆண்டு ஐயா அவர்களின் பிறந்த நூற்றாண்டு நாள் வருகின்றது. அவ்வேளையிற் சிறப்பாக ஐயரவர்கள் செந்தமிழ் முதலாம் பத்திரிகைகளில் எழுதிய இலக்கணம், இலக்கியம் பற்றிய கட்டுரையும் கண்டனங்களையும் ஒரு சேரத் தொகுத்து ஒரு நூலாக அமைத்து வெளியிடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகின்றோம். இவ்வாறு செய்தலே ஐயரவர்களின் தமிழைப் பேணும் முறையாகும். இதற்கு நம் மன்றத்தாரும் கல்வித்துறைச் செய்திட்ட மாணவரும் உதவுதல் செய்வர். இவ்வாறு தமிழ் பேணிய தமிழறிஞர்களை அவர்கள் வாழ்ந்த கிராம மக்களும், அயற்கிராம மக்களும் அன்புசெய்து புதியதாக எழுகின்ற தமிழ் வாழ்வுக்கு உரனும் ஊட்டமும் அளிக்க வேண்டும் என்ற தமிழ்த் தாயின் சார்பாக மகாஜனத் தமிழ்மன்றத்தாரும் தெல்லிப்பழையின் கல்வி அபிவிருத்திச் செய்திட்ட மாணவரும் வேண்டுகின்றனர்.

இன்னும், ஐயா அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைக்க முன்வந்த இலங்கைக் கல்வி அமைச்சின் தமிழ்ப்பிரிவுக் கல்விப் பணிப்பாளர் திரு. கி. லüமணஐயர் அவர்களுக்கும், ஐயாவின் சரிதைச் சுருக்கத்தை வெளியிட்டு வைத்த மன்றக் காப்பாளரும், மகாஜனக்கல்லூரித் தலைவருமாகிய திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும், சிறப்புச் சொற்பொழிவாற்ற இசைந்து வந்த ஐயா அவர்களின் அணுக்க மாணவராகிய பண்டிதர் திரு. இ. நமசிவாயம் அவர்களுக்கும் தமிழ் மன்றத்தார் நன்றி கூறுகின்றனர். ஐயா அவர்களின் அபிமான மாணவராகிய இவர்கள் இச் சரிதையைக் குறுகிய காலத்தில் முழுமையுற எழுதித் தந்தார்கள். இவர்கள் என்றும் எமது நன்றிக்குரியவராவர்.

இங்ஙனம்
நா. சிவபாதசுந்தரனார்
பொறுப்பாசிரியர்

தமிழ் மன்றம்
மகாஜனக் கல்லூரி
தெல்லிப்பழை
1977-04-04

+++++++++++++++++++++++


சிவமயம்

வித்துவ சிரோமணி
பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள்
சரித்திரச் சுருக்கம்

முன்னுரை:

செந்தமிழ் வழங்கும் நிலமாகிய யாழ்ப்பாணம் அத்தமிழின் தாயகமாகிய தென்னிந்தியாவோடு பண்டைக்காலத்திலிருந்தே தமிழ், சமயம் என்பவற்றில் தொடர்புடையதாக இருந்துவருகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சைவத்தமிழ் அறிஞர்கள் தென்னிந்தியா சென்றும், தென்னிந்தியாவிலிருந்து அத்தகையோர் யாழ்ப்பாணம் வந்தும் சைவப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து வருகின்றனர். தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கிய கூழங்கைத் தம்பிரான் என்னும் பேரறிஞரின் மாணவர் பரம்பரையில் வந்தவர்களிற் பலர் தென்னிந்தியா சென்று சைவப் பணியும், தமிழ்ப்பணியும் செய்திருக்கின்றனர். அவர்களின் மாணவர் பரம்பரையில் வந்தவர்களிற் பலர் தென்னிந்தியாவில் இன்றும் உள. நல்லைநகர் ஆறுமுகநாவலர், வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலம்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, தி. தி. கனகசுந்தரம்பிள்ளை, சபாபதிநாவலர், அம்பலவாணநாவலர், மகாவித்துவான் நா. கதிரைவேற்பிள்ளை, உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, சுவாமிநாத பண்டிதர் முதலாகப் பலர் தென்னிந்தியா சென்று பணிபுரிந்து புகழ்நிறுவினார்கள். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் முதலாகப் பலர் யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே தமது வித்துவத் திறமையால் தமிழ் நாடெங்கும் புகழ்பரப்பினார்கள். அவர்கள் வரிசையில பிற்காலத்தில் வைத்து மதிக்கப்படுபவர் வித்துவ சிரோமணி பிரமசிறீ. சி. கணேசையர் அவர்கள்.

தோற்றம்

புன்னாலைக்கட்டுவன் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய அருச்சக பரம்பரையில் வந்தவர் சின்னையர் என்னும் அந்தணப் பெரியார். அவர் விநாயகப் பெருமானிடத்து மிகுந்த பத்தி பூண்டவர். தாம் பூசிக்கும் படிக லிங்கத்துக்குப் பூசனை புரிந்தன்றி உணவு கொள்ளாத நியமம் பூண்டவர். அவ்விலிங்கத்தை நாள் தோறும் நூற்றெட்டுத் தரம் வீழ்ந்து வணங்கி எழும் வழக்கம் உள்ளவர். இவ்வீடுபாட்டால் பொருட்செல்வப் பேறு குறைந்தவர். அவர் அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவரை விவாகஞ் செய்து நால்வர் பெண்மக்களுக்குத் தந்தையாயினர். அதனாலேற்பட்ட வறுமையாலும் ஆண்பிள்ளை இல்லை என்ற குறையினாலும் அவருக்குண்டான கவலை அவரது கடவுள் பத்தியை வளர்ப்பதாயிற்று. ஆண்பிள்ளை வேண்டி விநாயகப் பெருமானை நோக்கித் தவம் புரிந்தனர். அதன் பயனாக ஆங்கில வருடம் 1878ல் நிகழ்ந்த ஈசுர வருடம் பஞ்குனி மாதம் பதினைந்தாம் நாள் செவ்வாய்க்கிழமை பிற்பகல்; ஒருமணி இருபது நிமிஷமளவில் பூராடம் மூன்றாங்காலில் அவருக்கு ஓராண்மகவு பிறந்தது. விநாயகப்பெருமான் அருளாற் பிறந்தமையால் அம்மகவுக்குக் கணேசையர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்மகவே பிற்காலத்தில் வித்துவ சிரோமணி எனச் சிறப்பிக்கப்பட்ட பிரமசிறீ கணேசையர் ஆகும்.

கல்வி பயிலல்:

அக்காலத்தில் சின்னையர் அவர்களின் தமயனாராகிய கதிர்காமையர் வடமொழி தென்மொழிகளிற் பாண்டித்தியம் பெற்றவராய் விநாயகர் ஆலய மருங்கில் ஒரு பாடசாலை தாபித்து அதில் கற்பித்து வந்தார்கள். அப்பாடசாலையே இப்போது அரசினர் பாடசாலையாக விளங்குவது. ஐந்து வயதில் ஐயரவர்கள் அப்பாடசாலையில் வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றார்கள். எட்டாம் வகுப்பு முடிய அப்பாடசாலையிற் கற்றார்கள். அங்கு நீதி நூல்கள் அந்தாதிகள், பிள்ளைத் தமிழ்கள், இலக்கணம், நிகண்டு, புராண நூல்கள், சரித்திரம், சமயம், கணிதம் என்பனவற்றில் பயிற்சி பெற்றார்கள். அக்காலத்தில் எட்டாம் வகுப்புச் சித்தி எய்தினால் மாணவ ஆசரியனாகப் பயிற்சி பெற்று ஆசிரியனாகக் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு இருந்தது. வறுமை நிலையிலிருந்த பெற்றார்கள் ஐயர் அவர்கள் ஆசிரியனாகக் கடமைசெய்தலை விரும்பி அதனை எதிர் நோக்கி இருந்தனர். எட்டாம் வகுப்பைப் பரிசோதிக்க வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலம்பிள்ளை அவர்கள் நல்லை. ஆறுமுக நாவலர் அவர்களின் மருகர். நன்மாணாக்கர், புராணேதிகாசங்களுக்குப் பொருள் சொல்வதில் தமிழ் நாட்டில் ஒப்பாரும் மிக்காருமில்லாதவர். அவர்கள் பரீட்சிக்கும்போது ஐயர் அவர்களிடம் “திகழ்தசக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்ற கந்தபுராணக் காப்புச் செய்யுளின் பகுதிக்குப் பொருள் சொல்லுமாறு கேட்டனர். ஐயர் அவர்கள் தாம் முன்னே கற்றுக்கொண்டபடி விளங்காநின்ற பத்து திருக்கரங்களையும் செவ்விய ஐந்து திருமுகங்களையும் உடைய சிவபிரான்” எனலும், வித்துவ சிரோமணி இடைமறித்து உடைமைப் பொருளுக்கன்றி உண்மைப் பொருளுக்கு ஐ உருபை விரிக்கக் கூடாது என்ற இலக்கண நுட்பத்தை எடுத்துக் காட்டி” விளங்காநின்ற பத்துக்கரங்களும், செவ்விய ஐந்து திருமுகங்களும் உள்ள சிவபிரான்” என்று உரைத்தல் வேண்டும் என்றனர். அவருடைய மதிநுட்பத்தைக் கண்ட ஐயருக்கு அவரிடம் பாடங்கேட்க வேண்டுமென்ற ஆசையுண்டாயிற்று. அதனால் மாணவ ஆசிரியப் பயிற்சி பெறவேண்டு மென்ற பெற்றாரின் ஆசையை அவரால் நிறைவேற்ற முடியாது போயிற்று. கல்வியின் மேல் மகன் கொண்ட ஆர்வத்தையறிந்த பெற்றார் தம்மாசையை விட்டு வித்துவ சிரோமணியிடம் படித்தற்கேற்ற ஒழுங்குகளைச் செய்தனர்.

முதிர்கல்வி கற்றல்:

வண்ணார்பண்ணைச் சிவன்கோவிற் பிரகாரத்தில் வசித்த தமது தமக்கையாரின் வீட்டில் தங்கி ஐயர் அவர்கள் அவ்வூரில் வித்துவ சிரோமணியால் நடாத்தப்பட்ட திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்விகற்று வந்தனர். ஐயர் அவர்களின் மதிநுட்பத்தையும் கல்வியின் மேலுள்ள ஆசையையும் கண்ட வித்துவ சிரோமணிக்கு ஐயர் அவர்களின் மேல் அன்பு வளர்வதாயிற்று. உயர்ந்த இலக்கண இலக்கியங்களைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றதோடமையாது, புராணேதிகாசங்களுக்குப் பொருளுரைத்தற் பொருட்டும் வித்துவசிரோமணி சென்றவிடமெல்லாம் தாமும் சென்று அவர்கூறும் அரிய பொருள்களையும், கவிநயங்களையும் குறித்துக் கொள்ளுவார் ஐயர் அவர்கள். தந்தையாருக்கு ஆலயத்தில் உதவிசெய்தற் பொருட்டு, புன்னாலைக்கட்டுவனில் தாம் தங்கவேண்டிய காலங்களிற்கூட ஐயர் அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு நடந்துசென்று திரும்புவதில் தமக்கேற்படும் கஷ்டத்தை நோக்கினாரல்லர். வித்துவ சிரோமணி சென்றவிடமெல்லாம் சென்று, கல்வியே கருத்தாகக் கற்றுவந்தார்கள். வித்துவசிரோமணி சிவனடி எய்தியதும் ஐயர் அவர்கள் கல்விக்குக் களைகண்காணாது திகைத்தார்கள். தம் விருப்பினை நிறைவேற்ற வல்லவர் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களே எனத் தேறி அவரிடம் கற்கக் தொடங்கினார்கள்.

சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் வடமொழி தென்மொழிகளில் நிரம்பிய பாண்டித்தியம் உள்ளவர். இலக்கண ஆராய்ச்சி மிக்கவர். சொற்பொருள் விளக்கம் மிக்கவர். தருக்கம் வல்லவர். பொய்ப்பொருளைக் களைந்து மெய்ப்பொருளை நாட்டும் திறனுள்ளவர். அதனால் கண்டனப் புலியாக விளங்கியவர். புலவரின் தொடர்பால் ஐயர் அவர்களுக்கு வடமொழியறிவும் தருக்க அறிவும் மிகுவன ஆயின. ஆராய்ச்சித்திறன் உறுவதாயிற்று. புலவர் சிவனடியெய்தும் வரை ஐயர் அவர்கள் அவரின் தொடர்பை விட்டாரல்லர். புலவரின் தூண்டுதலால் அவரின் உதவியுடன் ஐயர் அவர்கள் பத்திரிகைகளுக்கு விஷயதானஞ் செய்யவும் ஆராய்ச்சிகள் செய்யவும், கண்டனங்கள் வரையவும், நூல்களுக்கு உரை செய்யவும் தொடங்கினார்கள். அதனால் ஐயர் அவர்களின் புலமை தமிழுலகிற்குப் புலனாகத் தொடங்கியது. புலவர் செய்த நன்றியை ஐயர் அவர்கள் எக்காலத்தும் மறந்திலர்.

தொழிற்றிறன்:

குமாரசுவாமிப்புலவர் வாழ்ந்த காலத்திலேயே ஐயர் அவர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்து விட்டார்கள். இடைக் காலத்தில் மூன்றாந்தர ஆசிரிய தராதரப் பத்திரமும் பெற்றிருந்தாராதலின் பாடசாலைகளில் தலைமையாசிரியராகக் கடமையாற்றும் தகுதி இருந்தது. வண்ணார்பண்ணை. வயாவிளான், தையிட்டி, நயினாதீவு, சுன்னாகம் பிராசீன பாடசாலை, கீரிமலை, வருத்தலை விளான் ஆகிய இடங்களில் படிப்பித்திருக்கிறார்கள். அவர்களிடம் படித்து வித்துவான் - பண்டிதர் - புலவர் என்ற பட்டங்களோடு விளங்குபவர் பலப்பலர். உயர்ந்த இலக்கண இலக்கியங்களை நீண்ட காலமாகத் திரும்பத் திரும்பக் கற்பித்து வந்ததால் அந்நூல்களில் நிரம்பிய ஆட்சிபெற்றிருந்ததே ஐயர் அவர்களின் ஆராய்ச்சிச் சிறப்புக்குக் காரணமாயிற்று.

இல்லற வாழ்வு:

ஐயர் அவர்கள் தமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய உருவும் திருவும் நிறைந்த அன்னலட்சுமி அம்மையைத் திருமணஞ் செய்தவர். அம்மையாரும் வடமொழி தென்மொழி அறிவுடையவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். இல்லற வாழ்க்கையின் பயனாக அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைத்திலது. மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு அன்னலட்சுமி கூப மெனப் பெயரிட்டு வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனைத் தருமசாதனம் பண்ணியிருக்கிறார்கள். அவ்வாலயத்துக்கு முன்னே பல பேர், பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்ணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் அவர்கள் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீரூற்றிலது ஐயர் அவர்கள்.

“ஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே
கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை - நாட்டிடுவாய்
மாமருதி வீசா மதமா முகத்தோனே
காமுறுவேற் குள்ளம் கனிந்து”

என்று பாடியும் பணிந்தும் விநாயகப் பெருமான் திருவடிகளை நம்பி, தம்பணியைத் தொடர்ந்து செய்து நீரூறக்கண்டு மகிழ்ந்தனர். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உளது. ஏனைய சொத்துக்களையும் ஐயர் அவர்கள் தம்மினத்தில் உரிமையாளருக்குக் கையளித்து பொருட்பற்றினும் நீங்கி உள்ளத் துறவியாய், மருதடி விநாயகர் ஆலய மருங்கில் ஓர் ஆச்சிரமம் அமைத்து அதில் வதிந்து, தமிழாராய்ச்சி செய்து கொண்டும், விநாயகரை வழிபட்டுக் கொண்டும் வாழ்ந்தார்கள். தேகவியோகமெய்தியதும் இவ் வாச்சிரமத்தின் கண்ணேயாம்.

துறவற வாழ்வு: பொது

துறவு வாழ்க்கை மேற்கொண்ட ஆரம்பகாலத்தில் ஐயர் அவர்கள் தமிழ்ப்பற்றைத் துறந்தாரல்லர். புலவரிடம் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் ஆற்றிய தமிழ்ப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டு வந்த செந்தமிழ் என்ற சீரிய பத்திரிகையில் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன. அவை ஐயர் அவர்களின் பரந்த நூலறிவையும், நுண்மதியையும் வெளிப்படுத்திப் பெரும்புகழ் ஈந்தன. அக்காலத்தில் தென்னிந்தியாவில் பெரும் புலவர்களாக விளங்கிய சேது சமஸ்தானம் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், நாராயணையங்கார் என்பவர்களை ஐயர் அவர்களிடத்தில் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் அதி தீவிர விவேகமும் நுண்மாண் நுழைபுலமும் பெற்று, பண்டைய நூலாசிரியர் உரையாசிரியர்களின் கருத்துக்களை மறுத்து, தம்மை மறுப்பார் கருத்துக்களையெல்லாம் வலிகெடுத்து நவீன உரை கூறும் திறம்படைத்து, தொல்காப்பியத்தின் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத்துக்கும் ‘சண்முக விருத்தி” என்னும் பெயரில் புத்தூரை கண்ட சோழவந்தான் வித்துவான் அரசன் சண்முகனாருக்கும் ஐயர் அவர்களுக்கும் ஆகு பெயரும் அன்மொழித் தொகையும் என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு தோன்றிற்று. அரசன் சண்முகனார் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் வேறு என்றும் ஐயர் அவர்கள் அவையிரண்டும் ஒன்றென்றும் வாதிட்டனர். அவர்களது வாதங்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில் தொடர்ந்து பிரசுரமாயின. அவை பேரறிஞர்களின் கருத்தைக் கவர்ந்தன. ஈற்றில் ஐயர் அவர்களின் கருத்தே தக்கதென்பது அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அவ்வாத முடிவு ஐயர் அவர்களுக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது. சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் அங்ஙனமே புகழை மிகுவித்தது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் எழுதிய கட்டுரைகளும் அறிஞர்க்கு விருந்தாயின.

சிறப்பு:

இங்ஙனம் அறிஞர்களின் மதிப்பைப் பெற்ற ஐயர் அவர்கள், ஆராய்ச்சிகளும், கண்டனங்களும் எழுதுவதில் மாத்திரமன்றி, இலக்கியங்களுக்கு உரைகாண்டலிலும், இனிய வசன இலக்கியங்களை ஆக்குவதிலும், செய்யுள் யாத்தலிலும் வல்லவராய்த் திகழ்ந்தனர். கம்பருக்கு நிகராகக் காவியஞ் செய்வேன் என்று புகுந்து கற்றுத் தெளிந்தவர்க்கும் உரைகாண்டற் கரியதாக யாழ்ப்பாணத்து அரசகேசரி என்ற பெரும் புலவர் ஆக்கிய இரகுவம்சம் என்னும் நூலுக்கு ஐயர் அவர்கள் ஆக்கிய உரை அவர்களின் பரந்த இலக்கிய அறிவையும், நுணுகிய இலக்கண அறிவையும், செய்யுட்சுவையுணர்வையும் புலப்படுத்தும் அவ்வுரை ஒப்ப, திட்ப, நுட்பம் பொருந்தியதெனப் போற்றப்பட்டது. இன்னும் அகநானூற்றின் முதல் நூறு செய்யுள்களுக்கும், நாணிக் கண்புதைத்தல் என்ற ஒருதுறைக் கோவைக்கும் சிறந்த உரை கண்டிருக்கின்றார்கள். குசேலர் சரித்திரம், குமாரசுவாமிப்புலவர் வரலாறு, ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரித்திரம் என்னும் வசன நூல்களும் செய்திருக்கிறார்கள். அவ்வசன நூல்களின்கண் அமைந்த வசனங்களை நோக்குவோர் இலகுவும் தெளிவும் பொருந்திய அவ்வசனங்கள் இறுகிய நடையில் கண்டனங்களும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதிய ஐயர் அவர்களின் வசனங்கள் தானே என்று ஐயுறுவர். வருத்தலைவிளான் மருதடிவிநாயகர் பிரபந்தம் ஐயர் அவர்களாற் பாடப்பட்டது. அதன்கண் பலவகைச் செய்யுள்கள் அமைந்திருக்கின்றன. அவை ஐயர் அவர்களின் செய்யுள் ஆக்கும் திறனைக் காட்டுவன. இன்னும் பல ஆலயங்களுக்கு ஊஞ்சற் பாக்களும், நூல்கள் வெளியீடுகளுக்கு வாழ்த்துக் கவிகளும் பாடியிருக்கின்றனர்.

இன்று வரை எமக்குக் கிடைத்த பழந்தமிழ் நூல்களிற் மிகத் தொன்மையானது தொல்காப்பியமென்னும் இலக்கண நூல். அது தமிழர்களின் நாகரிக வழக்க ஒழுங்குகளை ஆராய்வார்க்கு உறுதுணை பயக்கவல்லதோர் சீரிய நூல். அந்நூல் ஆக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன. அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. ஏட்டு வடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக் காலம் பெயர்த்தெழுதப்பட்டமையானும், விளங்குதற்கரியனவாயிருந்தமையானும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்குப் பெரிதும் துன்பம் தந்தன. அவற்றைச் செம்மை செய்து பாதுகாக்க வேண்டுமென ஐயர் அவர்களுக்கு ஒரு பெருவிருப்பமுண்டாயிற்று. அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்து வந்ததினால் ஐயர் அவர்களுக்குக் அவ்விருப்பத்தினை நிறைவேற்றுவதில் பெருஞ் சிரமம் ஏற்படவில்லை. ஏட்டுப் பிரதிகள் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதிவந்தனர். தாங்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டனர். அவற்றின் பதிப்பாசிரியர் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களாகும். அந்நூலுரைகளைக் கற்பித்தலில் கஷ்டமுற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஏனைய அறிஞர்களும், மாணவர்களும் அவற்றை மிக்க விருப்பத்தோடும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர். தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு ஐயர் அவர்களின் குறிப்புக்கள் மரக்கலம் போல உதவுவன. ஐயர் அவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதத்தக்கது இத்தொண்டேயாகும்.



துறவுப் பயன்:

பண்டிதர் என்றும் வித்துவான் என்றும் மகா வித்துவான் என்றும் அறிஞர்களாற் சிறப்பிக்கப்பெற்ற ஐயர் அவர்களின் ஆற்றலையும் அவர்களின் தொண்டுச் சிறப்பையும் கற்றோரேயன்றி மற்றோர் பெரிதும் அறி;ந்திலர். பல பெரியோர் சேர்ந்து ஐயர் அவர்களின் அறுபதாண்டுப் பூர்த்தி விழா நிகழ்த்தி அவர்களுக்குப் பொற்கிழி அளித்த காலத்திருந்தே மற்றோரும் அவர்களின் பெருமையை அறிந்தனர். ஈழகேசரிப் பத்திராதிபர் நா. பொன்னையா, பண்டிதமணி. சி. கணபதிப்பிள்ளை, கலைப் புலவர். க. நவரத்தினம், அதிபர். ச. அம்பிகைபாகன் முதலாய பெரியோர்களின் இடைவிடாத முயற்சியால் இவ்விழா எடுக்கப்பட்டது. இது நிகழ்ந்தது வெகுதானிய ஆண்டு புரட்டாதி மாதம் 22ம் நாள் (8-10-38) ஆகும். விழா நிகழ்ந்த இடம் வைத்தீஸ்வர வித்தியாலயம். அறிஞர் பலரும் பிரபுக்களும் பெருந்திரளாகக் கூடிப் பலவகையான சிறப்புக்களோடு ஐயர் அவர்களைச் சிவன்கோவிலிருந்து ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அக்காலத்தில் அரசாங்க சபைத் தலைவராக விளங்கிய கௌரவ சேர். வை. துரைசுவாமி அவர்களைத் தலைவராகக் கொண்டு, பிற்காலத்தில் மந்திரியாக விளங்கிய கௌரவ. சு. நடேசபிள்ளை, விபுலானந்தஅடிகள். வண. சுவாமி ஞானப்பிரகாசர், பண்டிதர் ம. வே. மகாலிங்கசிவம், வியாகரண மகோபாத்தியாயர் பிரமசிறீ. வை. இராமசுவாமி சர்மா, பகுதி வத்தியாதரிசி முகாந்திரம், எஸ். கந்தையா முதலாய பெரியோர்கள் வீற்றிருந்த அலங்காரமிக்க மேடையில் ஐயர் அவர்கள் நடுநாயகமாக இருத்தப்பட்டனர். அறிஞர் பலரும் ஐயர் அவர்களின் ஆற்றலையும் தொண்டையும் குணநலன்களையும் வியந்து பேசி 2000 ரூபாய் கொண்ட பொற்கிழி ஒன்றையும் பரிசாக வழங்கினர். இதுபோன்றதொரு கௌரவ விழா யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்பும், பின் இன்றுவரையும் நிகழ்ந்ததில்லை.

1951ம் ஆண்டு சித்திரை மாதத்திலும் ஐயர் அவர்களுக்கு ஒரு பெருங் கௌரவம் அளிக்கப்பட்டது. சென்னைத் தமிழ்வளர்ச்சிக் கழகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்த தமிழ் விழாவில் நான்காவது விழா யாழ்ப்பாணத்துப் பரமேஸ்வரக்கல்லூரி முன்றிலில் 29-5-51 தொடங்கி 1-5-51 முடியவுள்ள மூன்று நாள்களிலும் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. தென்னிந்தியாவிற் பல இடங்களிலிருந்தும் இலங்கையில் பல பாகங்களிலிருந்தும் புலவர் பெருமக்கள் ஒன்றுகூடி அவ்விழாவை நடாத்தினர். அவ்விழாவில் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், சொல்லின் செல்வர் சு. P. சேதுப்பிள்ளை, சுதேச மித்திரன் பத்திராதிபர் ஊ. சு ஸ்ரீநிவாசன். கௌரவ மந்திரி சு. நடேசபிள்ளை, விஞ்ஞான நிபுணர் டாக்டர் மு. ளு கிருஷ்ணன், கு. சு. ளு. ஆகியோரும் தலைமை தாங்கியும் சொற்பெருக்காற்றியும் பங்கு கொண்டனர். விழா இறுதி நாளன்று ஐயர் அவர்களை வலிந்தழைத்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர். தமிழகத்துச் சான்றோர் பலரும் கூடியிருந்த பேரவையில் உலகப் புகழ்பெற்ற பௌதிக விஞ்ஞான மேதை டாக்டர் மு. ளு கிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி ஐயர் அவர்களைக் கௌரவித்தார்கள். இக்கௌரவம் மற்றெப் புலவருக்கும் கிட்டாத கௌரவமாகும்.

பகுதி வித்தியாதரிசியாகச் சேவையாற்றிக் காலஞ்சென்ற யா. தி. சதாசிவ ஐயர் அவர்களின் பெருமுயற்சியால் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பண்டித, பாலபண்டித பிரவேச பண்டித பரீட்சைகளுக்குத் தோன்றுவோருக்கு உதவியாகத் தாபிக்கபட்ட பிராசீன பாடசாலையிலேயே ஐயர் அவர்கள் பல ஆண்டு காலம்கல்வி கற்பித்தவர்கள். மதுரைத் தமிழ்ச்சங்கத்தாராலும், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கத்தாராலும் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்த பரீட்சைகளில் பரீட்சகராகத் தொண்டாற்றி வந்தார்கள். ஆரிய திராவிடபாஷாபிவிருத்திச் சங்கத்தின் இருபத்தொன்பதாவது ஆண்டுநிறைவு விழா நந்தன வருடம் கார்த்திகை மாதம் 16ம் நாள் (1-12-52) கொண்டாடப்பட்டது. அவ்விழாவில், முன்னும்பின்னும் நிகழ்த்தப்படாத பட்டமளிப்பு வைபவமொன்றும் நிகழ்ந்தது. அவ்வைபவத்தில் கணேசையர் அவர்கள் வித்துவ சிரோமணி என்னும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டார்கள். இன்றுவரை அச்சங்கத்தால் வித்துவசிரோமணி எனப் பட்டம் அளிக்கப்பட்டவர் பிறிதொருவருமிலர்.

விழுமிய வாழ்வு

இங்ஙனம் பலவித சிறப்புக்களையும் பெற்று வித்துவசிரோமணியாக விளங்கிரேனும் ஐயர் அவர்கள் ஒருபோதும் தற்பெருமை கொண்டதில்லை. சாதாரண ஒரு அந்தணர் போலவே பொதுமக்களோடு பழகிவந்தனர். நல்லநாள் அறிதல், மழை வருதல் வராமையறிதல், வீடு - கிணறுகளுக்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல், ஐயந்தீர்த்தல் என்பவற்றுக்காக ஐயர் அவர்களோடு பொதுமக்கள் பெரிதும் பழகிவந்தனர். அவரது தூயதோற்றமும் - நல்லொழுக்கமும் மக்களை அவர்பால் மதிப்புக் கொள்ளச் செய்தன. அவர்கள் தேகவியோகம் எய்தியபோது பொதுமக்கள் காட்டிய துக்கம் ஐயர் அவர்களிடத்து அம்மக்கள் கொண்ட பெருமதிப்பைக் காட்டியது.

பிற்காலத்தில் ஐயர் அவர்கள் வருத்தலை விளானில் சனி, ஞாயிறு வாரங்களில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள். இந்நாளிற் பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்களாக விளங்குபவரிற் பலர் ஐயர் அவர்களிடத்திற் பாடங்கேட்டவர்களே ஆவர். ஆசிரிய கலாசாலைகள், பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஏனைய கல்விமான்களும் இடையிடை ஐயர் அவர்களைச் சந்தித்துத் தமக்கேற்றப்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொண்டதுண்டு. நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தனர். மாணவர் சித்திரப் பாவையின் அத்தக அடங்கி இருந்து பாடங்கேட்டலே நல்லது என்ற கருத்துள்ளவர் ஐயர் அவர்கள். பிராக்குப்பார்த்தல், சிரித்தல், வீண்;கதை பேசல், தொடர்பில்லாத வினாக்களை வினவல், சோர்ந்திருத்தல் முதலான குற்றங்களை மாணவர் புரியின் மிகக் கோபிப்பார்கள். சிறிது அசைந்தாலும் அஃதென்ன என்று கேட்பார்கள். அதனால் எறும்பு கடித்தாற்கூட மாணவர் அசையாதிருந்து பாடங் கேட்பர். தமக்கு எறும்பு கடித்தாலும் அதனை மெல்ல எடுத்துத் தன்பாட்டிலே போக விட்டுவிடுவார்கள். அதனைக் காணுகின்ற மாணவர்கள் தாமும் அங்ஙனமே செய்வர். இலக்கண நுட்பங்களைச் சிரமப்படாது விளக்கிக் காட்டுவார்கள். சங்க இலக்கியங்கள் கற்பிக்கும் போது அப்புலவர்களின் புலமையை வியந்து மெய்ம்மறந்து புகழுவார்கள். பல நூற்பயிற்சியும், நுண்ணறிவும் கொண்ட ஐயர் அவர்களிடம் பாடம் கேட்பது பெரும் பேறெனவே மாணவர் கருதுவர். மாணவரிடம் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்க மாட்டார்கள். சிலபோது தமக்குத் தேவை ஏற்படின் பொருள் வசதியுள்ள மாணவர்கள் சிலரிடம் கடனாகப் பணம் வாங்கி அதனை மறந்துபோகாது அப்பணத்திலும் பெறுமதி கூடிய நூல்களை அவர்களுக்கு வழங்கிவிடுவார்கள். கல்வி வன்மையால் புகழ் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுவார்கள் “உன்னுகின்றனை உனைமணோர் பெரியனென்றுணருமா செய” எனவரும் பாடலை எடுத்துக்காடடி இறைவனை வணங்கு அவன் உன்னை உலகத்தவர் பெரியன் என்று சொல்லுமாறு செய்வன் என்பார்கள். அவர்கள் கற்பியாது விட்டாலும் அவர்கள் முன்னிலையில் இருப்பதே பெருங்கல்வியைத் தரும். ஆசிரிய இலக்கணம் யாவும் நிறைந்த அவர்களின் மாணவர்கள் பலரிடம் அவர்களின் அடக்க குணம் பொருந்தி இருத்தலை இன்றும் நாம் காணலாம்.

நிறைவாழ்வு:

துறவுநிலை ஏற்பட்ட ஆரம்பகாலத்தில் தமிழ்ப்பற்று நீங்காத ஐயர் அவர்களுக்குப் பிற்காலத்தில் அப்பற்றும் நீங்குவதாயிற்று. முன் பொருட்பற்று நீங்கியிருந்தார் என்பது மனைவியிறந்தபின் தமது சொத்துக்களை இனத்தவருள் உரிமையாளர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு, மருதடி ஆலய மருங்கில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்தார் என்பதனாற் காட்டப்பட்டது. மேலும் பொற்கிழி வழங்கப்பட்டபோது அப்பணத்தை ஆயாக்கடவைச் சித்திவிநாயகர் ஆலயம், வருத்தலைவிளான் மருதடி விநாயகர் அலயம் என்பவற்றின் திருப்பணிக்காகச் செலவுசெய்தார் என்பது பலரறிந்தது. தமக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடையைப் போர்க்கப்பட்ட அந்நேரத்தன்றிப் பின் ஒருபோதும் அணிந்திலர். தம்மினத்தவர் ஒருவருக்கே வழங்கிவிட்டனர். தேவைக்கு மிஞ்சிப் பணம் வைத்திருந்தறியார். ஊரிலும், பிற ஊர்களிலும் ஐயர் அவர்களுக்குப் பொருள் வழங்கப் பலர் இருந்தனர். அவர்கள் பணம் வழங்க முற்படும்போது இருக்கட்டும் தேவையானபோது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன் என்பார்கள். தேவைக்கு அவர் கேட்டுப் பெற்றதும் உண்டு. பணங்கருதிப் படிப்பித்தார் அல்லர் என்பதும் முன்காட்டப்பட்டது. சிவபூசை செய்தன்றி உணவு கொள்ளாத ஐயர் அவர்கள் ஓய்வு நேரங்களிலெல்லாம் மருதடி விநாயகர் ஆலயத்தைப் பிரதட்சணம் செய்து வணங்குவார்கள். விநாயகன் முன்னிலையில் தியானத்தில் இருப்பார்கள். நடுச்சாமத்திலும் ஐயர் அவர்கள் தியானத்தில் இருப்பதைக் கண்டவர் எம்மூரிற் பலர். தொல்காப்பிய உரைக் குறிப்புக்கள் எழுதுங் காலத்திலும் பிற ஆராய்ச்சிகள் செய்யுங் காலத்திலும் ஏற்பட்ட தடைகள் பற்றி எங்களோடும் கலந்து பேசுவார்கள். சிறு தடையேனும் அதற்கு முடிவுகாணாது அமையமாட்டார்கள். சில நாள்களில் அதிகாலையே எங்களைச் சந்தித்து நேற்றைய சிக்கலை விநாயகன் இராத்திரித் தீர்த்து வைத்துவிட்டான் என்பார்கள். அவ்வளவுக்கு அவர்களிடம் விநாயகனிடத்து நம்பிக்கை இருந்தது. மருதடி விநாயகர் பிரபந்தத்தை ஆறுதலாக நோக்குவோர்க்கு ஐயர் அவர்களின் உள்ளம் எங்கே நின்றதென்பது விளங்காமற் போகாது. மருதடி விநாயகர் பிரபந்தத்தின் உட்பிரிவாகிய மருதடி விநாகர் அந்தாதியில்,

“அறியாமை நீக்குறுங் கல்வியென் றெண்ணி அலைவுற்றயான்
சிறியார்கள் செய்த மணற்சோ றதுவெனத் தேர்ந்துகொண்டேன்
செறியா மலர்சேர் மருதடித் தேவநின் சேவடியே
அறியாமை தன்னை அகற்றுவ தென்ப தறிந்தபின்னே”

என ஐயர் அவர்கள் பாடியது அவர்களது சொந்த அனுபவத்திற் கண்ட உண்மையினையே என்பதை அறிந்தார் அறிவர். பொன்னாடை போர்த்தல், பொற்கிழி வழங்கல், பட்டம் அளித்தல் என்பவைகளுக்கு ஐயர் அவர்களை ஒருப்படுத்தி அழைத்துச் செல்வதில் தாங்கள் பட்ட கஷ்டங்களை அவற்றி லீடுபட்ட பெரியார்கள் வாயிலாகப் பிறரும் அறிவர். அக்காலத்தில் அதிகாரம் படைத்த உத்தியோகத்தில் இருந்த பெரியார் ஒருவர் ஐயர் அவர்களுக்கு மாதம் மாதம் சன்மானமாகப் பணம் வழங்க ஒழுங்குகள் செய்துவிட்டு ஐயர் அவர்களின் சம்மதத்தைப் பெறுவதற்குத் தாம் நேரே சென்று பேச அஞ்சி, பிற பெரியோர்களை விட்டுப் பேசுவித்ததை நாங்கள் அறிவோம். இங்ஙனம் எப்பற்றுமற்று அறக்கனிந்த கனியாக விளங்கிய ஐயர் அவர்கள் தமது எண்பத்தொன்றாவது வயதில் ஆங்கில வருடம் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தெட்டுக்குச் சரியான விளம்பி வருடம் ஐப்பசி மாதம் இருபத்துமூன்றாம் நாள் (8-11-58) சனிக்கிழமை காலை ஆறுமணியளவில் தமது ஆச்சிரமத்தில் சட்டென உடலை விட்டு எம்பெருமான் திருவடிநீழல் சென்றெய்தினர். நட்சத்திரம் @ உத்தரம். திதி: அபரத்து துவாதசி.

முடிவுரை

பெரும்பொருளும் புகழும் பூசனையும் பெறத்தக்க ஆற்றல் தகுதிகள் இருந்தும் அவைதம்மைத் தேடிவந்தும் அவற்றை விரும்பாது இறைவன் திருவருட்பேறொன்றே கருதி வாழ்ந்த ஐயர் அவர்களைத் தமிழுலகம் தமிழ்முனிவர் எனப் போற்றுகின்றது. அவர்களது நிழற்படமும் அது தக்கதெனப் பறைசாற்றுகின்றது. ஐயர் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஏனையோருக்கு வழிகாட்டுவதாக.

ஆக்கம்:
பண்டிதர். இ. நமசிவாயம்


சங்கக் கபிலனே சான்ற கணேசையர்

செந்தமிழ் நூல்கற்றார் சொல்லுமந் நூற்பொருள்
தந்த வழமுறையிற் றான்வாழ்ந்தார் - முந்துதமிழ்ச்
சங்கக் கபிலனே சான்ற கணேசையர்க்குப்
பங்கமிலொப் பாவான் பகர்.

ஏடுகள் ஒப்புமையும் ஏத்திடும் ஒண்குறிப்பும்
நாடுறத்தொல் காப்பியம் நாட்டிலே - பீடுபெறப்
பாடுற்ற பண்பால் பகருங் கணேசையர்
தேடுற்ற பல்புகழைத் தேர்.

தொன்மைத்தொல் காப்பியநூல் தேறுங் குறிப்புரை
நன்மையாம் நற்றமிழ் ஆக்கத்தில் - உன்னுமையர்
நின்றசீர்ச் சிந்தனையால் செந்தமிழ்த் தெய்வமும்
மன்னியதே மாநிலத்தின் மேல்.

ஈழத்தின் வித்துவம் ஏத்துங் கொடிவழியை
ஆழமாய் ஆய்வோர்க் கமைநூலாய் - ஈழப்
புலவோர் சரிதை புகன்றவொரு பேற்றால்
நலத்ததே நம்நாட்டுச் சீர்.

தண்ணார் இரகுவம்சக் காப்பியச் செய்யுளுக்கே
கண்ணார் கருத்துரையைக் காணவே - நண்ணுமையர்
கற்றுளங் கொண்டார் கருதும் உரைத்தமிழாற்
பெற்றார் பெரும்புலமைப் பேறு.

செந்தமிழ்த் திங்களிதழ் சேர்ந்திலங்குங் கட்டுரையால்
செந்தமிழ் நாட்டுச் செழும்புலவோர் - சிந்தைகூர்
அந்தணர்க்கு வித்துவசி ரோமணியாம் ஆய்விருதைத்
தந்தளித்துத் தாம்மகிழ்ந்தார் தாழ்ந்து.

பொற்கிழியும் மெய்ப்பட்டும் போன்ற புகழ்ப்பொருள்கள்
கற்பகமா யாக்கியநின் காட்சிதான் - நற்சங்கத்
தொல்புலவோர் தோற்றமாய்த் தோன்றிட வைத்ததே
மல்குகவே கல்விப் பயன்

யோகவன சாத்திரிகள் ஏகமகள் இல்லிருத்தி
மோகமறும் பாங்கில் அறங்கனிய - வேகமதாய்ச்
செந்தமிழ்ச் செல்வச் செழும்பணியில் தோய்ந்தெழுந்தார்
அந்தணக்க ணேசைய ராம்.

தன்மனையாள் மாண்ட தனிமனத்தின் தன்மையால்
நன்னிலமும் நன்னீர்க் கிணறுமாய் - அன்பவன்
சிந்தை நினைபொருளாய்ச் சேருகவே தும்பிமுகன்
வந்தனைக் கென்ற மிகுந்து.

செந்தமிழ் அந்தணனாய்ச் சேருங் கணேசையர்
வந்தனைசெய் தெய்வக் கணேசரக்குச் - சொந்தமதாய்க்
கல்லிய நீள்கிணற்றில் நீரூற்று நேர்ந்ததுவே
சொல்லுக்கவிப் பத்திமையின் போது.

பரம்பொருட் பக்தியிலே பற்றுகின்ற மெய்ந்நூல்
உரம்பெறும் வண்ணம் உளங்கொள் - தரம்பெறா
நின்றிழிந்த வாழ்நாளை நீள நினைந்தழுதார்
மன்றிலுறும் முக்கண்ணன் முன்.

ஆக்கம்:
புலவர் நா. சிவபாதசுந்தரனார்.

--