கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  முன்னீடு  
 

எஸ்.பொன்னுத்துரை

 

முன்னீடு

இரசிகமணி கதைகள் பற்றிய
ஒரு கண்ணோட்டம்


எஸ்.பொன்னுத்துரை

இலக்கிய நோக்கு:
முதல் நூல்

விற்பனை உரிமை:

இளம்பிறை,
231, ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு-13.


முதற் பதிப்பு: நவம்பர், 1967

விலை சதம்: 40

இலக்கிய நோக்கு: நூல் ஒன்று


MUNNEEDU
(A brief Critical analsis of Rasikamani’s Stories)

Written by:
S. PONNUTHURAI

Published on: First November 1967.

By:
M.A. Rahman,
231, Wolfendhal Street,
Colombo -13.


பதிப்புரை

இரசிகமணி கனக-செந்திநாதன் அவர்களின் ஐம்பது ஆண்டு நிறைவு விழா அண்மையிற் கொண்டாடப்பட்டது. அவ்விழாவிலேயே அவருடைய நூலொன்றை அரசு வெளியீடுவின் சார்பாக வெளியிட வேண்டுமென்று ஆர்வமிருந்தும், பல காரணங்களினால் இயலாது போயிற்று. என் விருப்பம் அடுத்த ஆண்டிலாவது பூர்த்தியாக எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக. இருப்பினும். நிறைவ விழா நினைவாக ஒரு சிறு நூலாவது வெளியிடல் வேண்டுமென்ற பிறிதொரு எண்ணத்தின் விளைவே இச் சிறு நூல் இரசிகமணி ஒரு கதாசிரியருமாவர். அவருடைய கதைகளடங்கிய ‘வெண் சங்கு’ வெளியாகியுள்ளது. அக்கதைகளை நன்கு அறிமுகப்படுத்தி, கதாசிரியர் இரசிகமணியை உரிய முறையிலே தமிழ் வாசகர்கள் மத்தியிலே நிறுத்தும் வகையில் ஒரு முன்னீட்டினை அந்நூலுக்கு எஸ்.பொன்னுத்துறை அவர்கள் வழங்கியுள்ளார். இஃது இரசிகமணியை நேர்த்தியாகத் தரிசிக்க உதவும் சாளரமாக அமையும் என்பது என் நம்பிக்கையாகும்.

எஸ்.பொ.வைத் தமிழுகம் நன்கறியும். ஈழத் தமிழிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தமது கை வண்ணத்தையும் தனித்துவத்தையும் நிலைநாட்டியவா. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அத்துடன் அதுவேயாக ஐக்கியப்படுவது அவர் சுபாவம். எனவேதான், முன்னீடு வழங்குவதைக் கூட ஒரு தனித்துவ இலக்கியக் கலையாக இயற்றி வருகின்றார். சடங்கு, யோகம், மேடை, வீடு ஆகிய தமது கதைகளுக்கும். சதுரங்கம் போன்ற இலக்கிய பரிசொதனை முயற்சிகளுக்கும் அவர் வழங்கியுள்ள முன்னீடுகள் ஒரு வகைத்து. அவை அவருடைய சுயம்புவான தரிசனம். விளம்பர-வியாபர நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட தத்துவ அலசல், ஈழத்தில் வெளியாகியுள்ள வேறு எழுத்தாளர் பலருடைய நூல்களுக்கும் அவர் முன்னீடுகள் வழங்கியுள்ளார். இவை பிறிதொரு வகைத்து. நூல்களை நன்றாக வாசித்து, நூலாசாரியர்களுடைய மனோதர்மத்தை நேர்த்தியாகத் தரிசித்து, தன்னுடைய தளத்தில் மட்டுமே இருந்து நூல்களின் தரத்தை எடை போடாமல், நூலாசிரியரின் தளத்தில் அந்த நூலின் பெறுபேறென்ன என்ற விசாரணையின் நிறை அறுவடையான முன்னீடுகளை அமைத்துக் கொடுக்கிறார். காப்பியச் சொற்பொழிவுகளுக்கு அறிமுகமாக அவர் எழுதியுள்ள கட்டுரையை வாசிக்கும் பொழுது. பழந்தமிழிலக்கியத்தில் மட்டுமே திளைப்புள்ள பண்டிதராக அவர் தோன்றுகின்றார். காணிக்கை, குறும்பா ஆகிய கவிதைத் தொகுதிகளுக்கு வழங்கியுள்ள முன்னீடுகளில் அவர் கவிதையின் புதுத் தொனிப் பொருள் குறித்தும், புது உருவங் குறித்தும், வரைவிலக்கணம் வகுத்துக் கொடுத்துள்ளார். காலத்தின் குரல்கள், மரபு, யாழ்ப்பாணக் கதைகள், வெண் சங்கு ஆகிய கதைத் தொகுதிகளுக்கு, அந்தந்தத் தொகுதிகளை எந்தெந்த முறையில் வாசகன் அணுகி வாசித்தால் அவற்றின் நிறை அறுவடைகளைப் பெறலாம் என ஆற்றுப்படுத்தும் வகையில் முன்னீடுகள் வழங்கியுள்ளார். அவர் வழங்கும் முன்னீடுகள் எவ்வகைத்தாக அமைந்தாலும், அவருக்கு இலக்கியத்திலுள்ள அழுங்கப் பிடியான பக்தியையும், எழுத்தை எவ்வாறு புத்தி பூர்வமாக புனிதப் பணியாகப் வரித்துள்ளார் என்ற நேர்மையையும் அவை புலப்படுத்தத் தவறுவதில்லை. துணிவு, திண்மை, வன்மை, கூர்மை, சிந்தனைச் செழுமை ஆகிய அவர் எழுத்து நடையின் உயிர். அவருடைய எழுத்து நடை ஈழத் தமிழிலக்கியத்தின் ஒரு சகாப்தமாக நிலைத்தது என்பதை அவருடைய இலக்கிய விரோதிகள் கூட ஒப்புக் கொண்ட உண்மையாகும். இந்த அற்புத விந்தையைச் சாதனையாக்கிய அவர். இலக்கிய நன்முயற்சிகளின் நாற்றாகவும் அறவடையாகவும் விளங்கும் அவர், முன்னீடு எழுதுவதைக் கூட தனித்த இலக்கியத் துறையாக வகுத்து மேன்மைப் படுத்தியுள்ளார் அவருடைய முன்னீடுகள் எல்லாவற்றையும் ஒரே நூலாகத் தொகுத்து வெளியிடல் வேண்டுமென்றஎன் ஆசையின் முன்னோடியாகவும் இம் முன்னீட்டை வெளியிடுகின்றேன். வணக்கம்.

எம். ஏ. ரஹ்மான்
இளம்பிறை,

231, ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு – 13.
1.11.1967.



இரசிகமணி
கனக செந்திநாதன் அவர்களின்
ஐம்பது ஆண்டு நிறைவு விழா நினைவாக



முன்னீடு

சிறு கதைத் தொகுதிக்கு முன்னுரையுஞ் சேர்த்துக் கொள்ளுதல் சம்பிரதாயமான காரியமாக நிலைத்துவிட்டது. அப்படி ஒரு முன்னுரை எழுதுபவர் அந்தத் துறையிலே தமக்குள்ள புலமையை, அன்றேல் புலமை இன்மையை ஓரளவிற்கு விண்டு காட்டி, தமது நூலின் சில பக்கங்களை தமது சுய வித்துவ ‘அளப்ப’லுக்கும் ஒதுக்கித் தந்து விட்டாரே என்ற மனச்சாட்சியின் முள் உறுத்த, கதாசிரியரைப் பற்றி நான்கு வரிகளும், கதைகளைப்பற்றி இரண்டு வரிகளும் எழுதும் ‘திருக்கூத்’தாகவே இக்ரகங்கரியம் ஈழத்தில் நிலைபெற்று வருகின்றது. இந்த முன்னீடு அத்தகைய வாய்பாட்டில் அமைய மாட்டாது@ அரைத்த மாவையே அரைக்கும் விவகாரத்தில் எனக்கு ஈடுபாடும் கிடையாது.

‘வெண் சங்கு’ சிறு கதைத் தொகுதியை அனுப்பி வைத்து, அதற்கு ஒரு முன்னீடு நல்கும் வண்ணம் எழுதிய கடிதத்தில் இரசிகமணி கனக செந்திநாதன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“…இவ்வாண்டில் எனக்கு ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் நினைவாக என் நூல்கள் மூன்று இவ்வாண்டில் வெளிவருமென நினைக்கின்றேன். அவற்றுள் இச்சிறுகதைத் தொகுதியும் ஒன்று. இதற்குத் தக்கார் ஒருவரிடம் முன்னுரை பெறல் வேண்டுமென நினைத்த பொழுது உங்கள் நினைவே மேலோங்கி வந்தது…. என்னுடைய இலக்கிய வாழ்க்கையில் அண்மைக் கால ஐந்து ஆண்டுகளும் முக்கியமானவை, அந்த முக்கியத்துவத்தில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. அந்த உரிமையினால் முன்னுரை கேட்கவில்லை. உங்களுடைய சிறுகதைத் தொகுதியான வீக்கு நான் முன்னுரை எழுதினேன். நன்றிக் கடனுக்காக என் நூலைப் பற்றி நான்கு வார்த்தைகள் புழுகுதல் நின்கடன்’ என்ற வகையிலும் நான் முன்னுரை கேட்கவில்லை. ஈழத்து இலக்கிய முயற்சிகளில் முக்கியமாகச் சிறு கதைத் துறையில் தங்களுடைய வெற்றியை மதிப்பவன் நான். அந்த மதிப்பின் காரணமாகத்தான் இத்தொகுதிக்கு நீங்கள முன்னுரை எழுத வேண்டுமென்று கேட்கிறேன். சிறுகதை பற்றி உங்களுடைய பார்வையும் என்னுடைய பார்வையும் வேறுபட்டவை. என்றாலும், என்னுடைய சிறு கதைகளைப் பற்றி தங்களுடைய அபிப்பிராயங்களை முன்னுரையாக எழுதி உதவவும்….”

இவ்வாறு நெஞ்சிலே கரவு எதுவுமின்றி, தம் மனதிற் படுபனவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசவும் எழுதவும் வல்ல பெற்றியரே இரசிகமணி. அவர் எதிலும் பழைமையையும். பழைமையின் தூய்மை நிலையையும் பாதுகாக்க முந்துபவர். இதில் விசேடமென்ன வென்றால், பழைமையின் தூய்மை நிலையைப் பாதுகாக்கும் பயணமே இரசிகமணியின் புதுமை அனுபவமாகவும் பொலிவுற்று மிளிர்வது தான். பழைய எழுத்து அனுபவத்திற்கும், புதிய எழுத்து முயற்சிகளுக்கும் நேர்த்தியான பாலமாக அவர் விளங்குகின்றார். கவிதைகளைப் பற்றி அவர் மேடைகளிலே ஆற்றும் ஒவ்வோர் இரசனைப் பிரசங்கமும் ஒவ்வொரு நூலாக வெளிவரத்தக்க தரத்தைச் சார்ந்தது. கவிஞனின் சொந்த வாழ்க்கை சார்ந்த கட்சி – சேர்ந்த வட்டாரம் ஆகியவற்றை மனதிற் கொள்ளாது, அவனுடைய ஆக்கத்திற்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து. அதிலே படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் சுவைப்புத் தோன்றுமாறு உண்மையான இரசனையை வளர்த்து, ஈழந்தந்த ஒரேயொரு இரசிகமணியாக அவர் உயர்ந்து நிற்கின்றார். ‘இரசனையின் மூலம் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தலாம். அதுவே பயனாக அமைந்து விடாது. இன்னொரு வழியிற் சொல்வதானால், பயனை பற்றிஅடக்கமாகக் கூறுவார். உண்மைதான். வீணையின் தந்திகளை மீட்டி அதன் கானத்திலே இன்பம் அனுபவிக்கச் செய்வதைப் போல்வது இரசனை. ‘இரசனையிலே திளைத்தவர்களால் ஆழமான விமர்சனஞ் செய்ய இயலாது’ என்று சிலர் எழுந்த மேனியாகக் கூறி வருகிறார்கள். இந்தப் பொறப்பற்ற கூற்றினைப் பொய்ப் பித்தவரும் இரசிகமணி அவர்களேயாவர். பல அரிய நூல்களை வாசித்தும், சேகரித்தும் ‘நடமாடும் வாசிகசாலை’ என்று அவர் ஈழத்து மக்களாற் கொண்டாடப்படுகின்றார். இந்தப் பழுத்த அனுபவத்தின் தளத்திலே நின்று. பண்பான முறையில் இலக்கிய விமர்சனஞ் செய்கின்றார். விமர்சனம் என்று வந்து விட்டால் ஓர் இலக்கியப் படைப்புத் தோன்றிய காலம், அந்தக் காலத்திற்குரிய அரசியல் - பொருளாதார- சமுதாயப் பகைப் புலம் ஆகியன பற்றியும் முழுமையாக விசாரணை செய்பவர்.

இப்படைப்புடன் ஒத்த சாயலுடைய வேறு இலக்கியப் படைப்புக்களைச் சுட்டிக் காட்டி, அவற்றிலிருந்து இப்படைப்பு எவ்வகையில் மாறுபட்டிருக்கிறது. உயர்ந்திருக்கிறது, சோலை போயிருக்கிறது என்பவற்றை விளக்கும் பொழுது அவருடைய தர்க்கத் திறமையும் ஞாபக சக்தியும் நம்மைத் திகைக் வைக்கின்றன. மேனாட்டு விமர்சகர் சிலர் காட்டும் போலி மதிப்பீடுகளை உரைகல்லாகக் கொள்ளாமல், தமிழ் மரபு ஒன்றினையே இவர் விமர்சன உரை கல்லாகக் கொண்டுள்ளார். அத்துடன். எந்த இடத்திலும் செந்திநாதன் என்ற சுயத்தின் முக்கியத்துவத்தைப் புகுத்தாது பாதுகாத்துக் கொள்ளுதல் இவர் விமர்சனத்திலுள்ள பிறிதொரு சிறப்பம்சமாகும். இவருடைய விமர்சனப் பார்வைக்கும் என்னுடைய விமர்சனப் பார்வைக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் விமர்சனப் பார்வையே சரியென்பது என் கட்சி@ என் தர்மம். இருப்பினும், அவருடைய விமர்சனப்பார்வை தமிழிற் காலூன்றித் தூய்மை சார்ந்து துலங்குவதினால் அதனை மதிப்பதும் என் சுபாவம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் காலாத்திற்குப் பிற்பட்ட காலத் தமிழிலக்கிய வரலாற்றிலே இரசிக மணிக்குப் பழுத்த புலமை இருக்கின்றது. இதன் சான்றாக அவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற இலக்கிய வரலாற்று நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல்தான் இற்றைவரை இத்துறையில் வெளிவந்த நூல்களுள் அதிகார பூர்வமான நூலாக உயர்ந்து நிற்கின்றது.

இத்தகைய ஓர் இரசிகமணியினதும், விமர்சகரினதும் சிறுகதைகளை மதிப்பீடு செய்யும் பொழுது, பிறிதொரு சிரமங் குறுக்கிடுகிறது. புதிய கதைக் கரு, நூதனமான தொனிப் பொருள், நவமான உத்தி, புரட்சிகரமான உருவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவங் கொடுத்து எழுதுபவன் நான். என் தளம் வேறு@ இரசிகமணியின் தளம் வேறு. எனவே. அவருடைய தளமான பழைமைக் கதைக் கரு என்ற தளத்திற்கு தாவி, இக்கதைகளைப் பல முறைகள் வாசித்தேன், அப்பொழுது என் எண்ணத்திலே எற்பட்ட உணர்ச்சிகளை வாசகர்களுடன் நேர்மையாகப் பங்கிட்டுக் கொள்ளுதல் வேண்டுமென்ற அக்கறையும் என் உள்ளத்திற் கனிந்தது.

எப்படிப் பழைமையின் தூய்மை நிலையைப் பாதுகாக்கும் பயணமே இரசிகமணியின் புதுமை அனுபவமாகவும் பொலிவுறுகின்றதோ, அப்படியே அவருடைய இரசனை-விமர்சனப் பயணமே சிருஷ்டி வெளிப்பார்வைக்கு இது முரண்பட்ட கூற்றாகப் படலாம். இருப்பினும், இத்தொகுதியில் இடம் பெறும் அத்தனை கதைகளையும் ஊன்றிப் படிப்பவர்கள் இவை அனைத்திலும் அவர் கற்பித்திருக்கும் யாழ்ப்பாணக் கலாசாரத்தைப் பற்றிய விமர்சன விசாரணை என்ற பொற்சரடு ஒன்று இணைந்து செல்வதைக் கண்டின்புறலாம். இந்தத் தனித்துவத்தை இன்றைய ஈழத்தின் எழுத்தாளர் வேறு எவரிடமுந் தரிசிக்க முடியாது.

தனித்தவத்திற்குத் தனித்துவமான விளக்கம் ஒன்றுந் தேவை. ஈழத்திலுள்ள சிறு கதை எழுத்தாளர் சிலர் ஏதோ ஒரு கதையைச் ‘சரிக்கட்டி’ விட்டு அக்கதை தனித்துவமானது எனச் சுய முதுகு தட்டி மகிழ்கிறார்கள். ‘மணவாசனை’த் தனித்துவம். யதார்த்தத் தனித்தவம், சோஷலிஸ யதார்த்தத் தனித்துவம், கொச்சைத் தமழ்த் தனித்துவம், ‘விளங்குதில்லை’த் தனித்துவம் என இத்தனித்துவங்களின் தனித்துவமும் பல தனித்துவம் பற்றிய பூரண பிடிமானம் இல்லாததினாலேற்பட்ட அவலம். காலஞ் சென்ற நாதஸ்வரச் சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையிடங் கலையின் தனித்துவம் கண்டு வியந்தார்கள். அவர் புதிய இராகங்களைக் கற்பித்து வாசித்ததினால் இந்தத் தனித்துவம் ஏற்பட்டு விடவில்லை. பழைய இராகங்களை, மரபு நிலை பிறழாது, ஆனாலுந் தனக்கே உரிய சுத்தமான பாணியில் வாசித்தினால் இத்தனித்துவம் முற்றி விளைந்தது. இத்தகைய தனித்துவம் இலக்கியத்திற்கும் பொருந்தும். கதா சம்பவ விந்தும், தொனிப் பொருளும் பழையனவாக இருக்கலாம். அவற்றைப் பரிவர்த்தனை செய்ய உபயோகிக்கப்படும் சொற்கள் எல்லோருக்கும் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால், இவற்றை நேர்த்தியாக இசைக்கும் கலைப்பணியிலே தான் தனித்துவம் குதிருகின்றது. தேர்ந்த எழுத்தாளன் இத்தனித்துவத்தைப் புத்தி பூர்வமாகவும், சலியாத முயற்சியினாலும் வனைந்தெடுக்கின்றான். அத்தகையதொரு தனித்துவத்தை, ‘வெண்சங்கு’ என்னும் இச் சிறுகதைத் தொகுதியிலே அனுபவித்து இன்புற முடிகின்றது.

ஈழத்து இலக்கிய உலகில் ‘மண்வாசனை’ என்ற கோஷம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சிலரால் முன் வைக்கப்பட்டது. பிராந்தியங்களிற் பயிலப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற்றைக் கோவை செய்தால், அஃது இயல்பாகவே ‘மண்வாசைன’ இலக்கியமாகிவிடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து, அத்தகைய கதைகளை எழுதிச் சலித்தவர்களும் நம் மத்தியில் வாழ்கின்றார்கள். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித்தான கலாசாரத்திலே பிறக்கும் கதைக் கருவை, அந்த மண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப் பொருளைப் பிரசவிக்கும் வண்ணம் கலவி நெறியிற் பொருத்துவதே ‘மண்வாசனை’ இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும். இந்த உண்மையின் மூல விக்கிரகத்தைத் தரிசித்தே இரசிகமணி எழுதுகின்றார் என்பதற்கு இத்தொகுதியில் இடம் பெறும் பல கதைகள் தக்க சான்றுகாளக அமைந்துள்ளன.

புராணபடனமும் பிட்டவித்துக் கொடுக்கும் திருவிழாவும்@ சன்னதிக் கோவிலுக்கு எடுக்கும் ஆட்டக் காவடியம், அங்கு நடை பெறும் அன்னதானமும்@ சரமகவி பாடுதலும், கொட்டகைக் கூத்தும்@- இவை அனைத்தும் யாழ்ப்பாண வாழ்க்கையின் தனித்தவச் சடங்குகள். இவற்றை யாழ்ப்பாண மண்ணிலே பிறந்து, அதன் கலாசாரம் ‘கிடுகு’ வேலிகளால் அமைத்துக் கொடுத்துள்ள கட்டுப்பாடுகளையும், அதனால் ஏற்படும் அவசங்களையும், அந்த அவசங்களிலேயே ஏற்படும் சுருதி பேதங்களையும் கூர்ந்து அனுபவித்து. கால ஓட்டத்திலே அவை அடையும் மாற்றங்களை அவதானிக்கும் அதே வேளையில். பழையனவற்றை அசை மீட்டிப் பார்க்க வல்ல ஒருவனாலே தான், இக்கதைத் தொகுதியிற் காணப்படும் கதைக் கருக்களை நேர்த்தியான சிறுகதைகளாக்கித் தர முடியும். இக்கலைப் பணியினைச் செவ்வையாக இயற்ற ஓர் இரசிகமணியினாற்றான் முடியும் என்ற எண்ணத்தின் நிறைவே இச்சிறு கதைத் தொகுதியை வாசித்து முடிந்ததும் ஏற்படுகின்றது இருப்பினும், இக்கதைகள் யாழ்ப்பாண கலாசாரத்தைப் பற்றிய இரசிகமணியினுடைய பார்வை மட்டுந்தான். ஒரு பக்கத்தின் முழுமைக் காட்சி. இக்காட்சியைச் சித்தரிப்பதற்கு அவர் தமது சுய எழுத்து நடையை மாற்றவுமில்லை. ‘தத்தல் நடை’, ‘மணிப் பிரவாள நடை’, ‘பிராந்திய நடை’, ‘ஊமைக்குழல் நடை’ என்ற விவகாரங்களுக்கே அவருடைய எழுத்தில் இடமில்லை. கதைகளின் பழைய சான்ற உள்ளடக்கத்திற்கு ஏற்ப, பழைமை சான்ற நடையையே கையாளுகின்றார். பழைமையின் பண்பினைக் காக்கும் பாணியில், பிராந்தியச் சொற்களை மிகவும் ஒறுப்பாகக் கையாளுகின்றார். இந்தப் பொதுவான எழுத்துப் பண்பிற்குப் புற நடையாக ‘தொந்தம்’, ‘தரிசனம்’ ஆகிய இரு கதைகள் எகிறி நிற்கின்றன. இந்தப் புறநடை கூடப் பொதுப் பண்பினை நிலை நாட்டவே உதவுகின்றது.

பழைமையையும் தூய்மையையும் பாதுகாத்துப் புதியன புனைதல் வேண்டும் என்ற இரசிகமணியின் உள்ளக் கிடக்கை ‘வெண் சங்கு’ என்ற மகுடமே அச்சாவாக வெளிப்படுத்துகின்றது. மாதங்களில் மிகவும் புனிதமானது மார்கழி மாதம் என்பது நமது மரபு. அந்த மாதத்தில் வரும் திருவெம்பாவைக் காலத்தில், குளிரும் வைகறை இருளில், யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் ‘கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் எழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்’ என்ற திருவாசகப் பாடலோடு வெண்சங்கும் ஊதப்படும் ஓசை நம் செவிகளிலே விழுந்ததும் நம் மெய் சிலிர்க்கின்றது. அப்படித் தான் இந்த வெண்சங்கின் ஓசைக்குத் தனித்துவமான மகத்துவம் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது.

இனி, இத்தொகுதியிலே இடம் பெறுங் கதைகளின் குணநலன்களைப் பார்ப்போம்.

முகப்புக் கதையான பிட்டு, தலைப்பிற்கு ஏற்ப, திருவெம்பாவை காலத்தில் வாசிக்கப்படும் திருவாதபூரடிகள் புராணத்தோடு ஆரம்பமாகின்றது. யாழ்ப்பாணக் கலாசாரம் புராண கலாசாரம் என்று கூறுவர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் அதனைக் கந்தபுராண கலாசாரமென வலியுறுத்துவார். பண்டிதமணியின் நல் மாணாக்காரன இரசிகமணி புராண படனத்திற்கு இங்கு சிறுகதை அமைப்பில் உயிரூட்டியுள்ளார். இந்தக் கதையிலே வரும் பொன்னம்மாக் கிழவி மறக்க முடியாத பாத்திரமாகும். அவள் செம்மனச் செல்வியின் யாழ்ப்பாண ‘அவதாரம்’! “நேற்று இரண்டு மூன்று பேர்தான் கேட்டார்கள். இன்று பத்துப் பதினைந்து பெரியவர்களும், பதினெட்டு இருபது குழந்தைகளும் இருக்கிறார்கள்…” (பக் : 19) என்று கூறுமிடத்தில், ‘மறைந்து கொண்டு வரும் புராணப’; படிப்பு இன்னும் எத்தனை காலத்திற்கு இருக்கப் போகிறது?’ எனக் கேட்காமற் கேட்கிறார். அவருடைய கருத்துப்படி யாழ்ப்பாணமும் அதன் வாசிப்பும் அருகி வருகின்றது என்ற மன அவசத்திலே போலும், புராணபடனக் காட்சியை மிக விரிவாக எழுதியுள்ளார். இலங்கை வானொலி நிலையத்தார் 1965 ஆம் ஆண்டில் சிறுகதைப் போட்டி ஒன்று நடாத்தினர். அப்போட்டியிலே தெரிவு செய்யப்பட்ட கதைகளுள் முதலாவது ஒலிபரப்பான பெருமை பிட்டு என்ற கதைக்கு உண்டு. வானொலி நேயர்களை மனதிற் கொண்டுதான் அதிகமான பாடல்கள் இக்கதையிற் சேர்க்கப் பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. செம்மனச் செல்வி சிவபெருமானுக்குப் பிட்டவித்துக் கொடுத்த புராணக்கதை@ பொன்னம்மாக் கிழவி வெள்ளையனுக்குப் பிட்டவித்துக் கொடுத்த பழைய நிகழ்ச்சி@ இன்று அவள் குழந்தைக்குப் பிட்டவித்துக் கொடுக்கும் சம்பவம்@- இம் மூன்று இழைகளையும் பிரிகள் சிலிம்பாமல் ஒரே முழுமையான கதையாக முறுக்கியுள்ளார். செம்மனச்செல்வி சிவபெருமானுக்குப் பிட்டவித்துக் கொடுத்துவிட்டு, ‘அந்திவா அளிப்பன் நின் கூலி’ என்றாள். ஆனால் பொன்னம்மாக் கிழவி, “காசை ஆரடா கேட்டா?... நீ என்றால் வேலை செய்தாய், நானோ பிட்டுத் தந்தேன். காசைப் பத்தி இரண்டு பேருமே பேசக் கூடாது.” (பக்:25) என்று வெள்ளையனுக்குக் கூறுகிறாள். இந்த அன்பு தொழிலாளி – முதலாளி பிரச்சினைகளுக்கு அப்பால், கிராமத்தின் செழுமையிலே வளர்ந்தோங்கி நிற்கின்றது! இந்த அன்புப் பிணைப்பினால் இவ்விரு பாத்திரங்களும் புராணீகப் பாத்திரங்களுக்குச் சமதையான தெய்வீகம் பெறுகின்றன.

‘கலைகளெல்லாம் கடவுளுக்காகச் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்’ என்ற ஒரு கொள்கைக்கும், ‘சலைகள் பொதுமக்களின் இரசனைக்குத்தான்’ என்ற பிறிதொரு கொள்கைக்கு மிடையில் நடைபெறும் மோதலை சமர்ப்பணம் என்ற கதையிலே காண முடிகின்றது. முன்னைய கொள்கையை மனமார ஆதரிக்கும் ஆசிரியர், பின்னையதைப் பிரசாரத் தொனி மீற எதிர்க்கவுமில்லை. இக்கருத்துக்களைப் பாத்திரங்களின் இயல்புகளோடு இணைத்துவிட்டு, இரசிகமணி ஒதுங்கி நிற்கிறார். காவடித் தாளத்திற்கு ஏற்றதாக அவர் சேர்த்துள்ள பாடல்கள் அவருடைய இரசனை வளத்திற்குச் சான்று. “ஏராஞ் சலாபமும்…” என்று தொடங்கும் பொழுது, மௌனமாக வாசித்துக் கொண்டிருக்கும் நமக்கு வாய் விட்டுப் பாடவேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது. ஆயிரம் கட்டுரைகளால் நிலைநாட்;டப் பட வேண்டிய தாளக் காவடிக் கலையின் மகத்துவத்தை ஒரு கதை மூலஞ் சித்தரித்து, இரசிகமணி வெற்றியும் பெறுகின்றார்.

“அறத்தாற்றின் இல்வாழ்க்கையாற்றின் புறத்தாற்றில் போய்ப் பெறுவதெவன்.” என்பது வள்ளுவர் வாக்கு. குடும்ப பாரத்தைக் கண்டு பயந்து துறவு தேடி ஓடுபவனை வள்ளுவர் நிறுத்தி, ‘போய்ப் பெறுவது எவன்?;’ என்று கேட்கிறார். இந்தக் கருத்தைத் தொனிப் பொருளாகக் கொண்டது தொந்தம். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்ற குறளின் கருத்தும் அந்தச் சுருதியிலே தொற்றிக் கொள்ளுகிறது.

“அறத்தாற்றின் இல்வாழ்க்கையாற்றின் புறத்தாற்றில் போய்ப் பெறுவததெவன்.” என்பது வள்ளுவர் வாக்கு. குடும் பாரத்தைக் கண்டு பயந்து துறவு தேடி ஓடுபவனை வள்ளுவர் நிறுத்தி, ‘போய்ப் பெறுவது எவன்?’ என்று கேட்கிறார். இந்தக் கருத்தைத் தொனிப் பொருளாகக் கொண்டது தொந்தம். ‘ஊழிற் பெருவலியாவுள’ என்ற குறளின் கருத்தும் அந்தச் சுருதியிலே தொற்றிக் கொள்ளுகிறது.

இக் கதையின் பிரகரணம் ‘உலகமளாவியது’. முற்றிலும் வேறுபட்ட, உவமைகள் விரவிய நடையைத் ‘தொந்த’த்திலே காம்பீர்யமுடன் கையாளுகிறார். ‘குலைநெரி தேங்கா’யாகக் கஷ்டப்பட்ட சாம்பசிவம் துறவியாகிச் சாரங்கனாக வாழ்ந்து, மீண்டும் உலகத்திற்குள் பிரவேசிக்கும் பொழுது, அவனுக்கு அகப்படும் பெண் குழந்தையோடு ஆச்சிரமத்திற்குத் திரும்புகின்றான். தான் தூக்கி வந்திருக்காவிட்டால் குழந்தை இறந்திருக்கும் என்பது சாரங்கனின் விளக்கம். “….குழந்தை சாவதும் பிழைப்பதும் உன் கையிலா இருக்கிறது? அப்படியானால் அந்தத் தாயைப் பிழைக்க வைத்திருப்பாயே நீ இந்தக் குழந்தையைத் தூக்கி வராதிருந்தால், அந்த வழியால் வரும் ஒரு செல்வச் சீமானின் கண்ணிற் பட்டு இராச போகத்தை இது அனுபவித்திருக்குமல்லவா?” குருநாதரின் வினாக்களைக் கேட்டுச் சாரங்கன் அதிர்ச்சியுற்றான். சாத்திரங்களில் படித்தும் விளங்காத எத்தனையோ விடங்களின் பொருள் அப்பொழு தான் புலப்படுவது போல் இருந்தது.” (பக்:54) இந்த அதிர்ச்சிக்கு விடைபோல மேதை டால்ஸ்டாயின் ஒரு செருப்புக் கட்டியின் கதை அமைந்திருக்கிறது. நல்லார்வம் என்பது என்ன? தர்மம் என்றால் என்ன? -இவை போன்ற பல பிரச்சினைகளை இக்கதை உள்ளடக்கியுள்ளது. பிரச்சினைக் கதைகளைத் தமிழ் நாட்டிலேதான் எழுதுகிறார்கள் என்று மன மயக்கத்தில் உள்ளவர்களை, இக்கதை எழுப்பும் பிரச்சினையின் பதிரைக் கட்டவிழ்த்துப் பார்க்கும்படி சிபார்சு செய்கின்றேன்.

இத்தொகுதியிலே இடம்பெறும் மிகச் சிறிய கதையான தரிசனம் ஆழமான கருத்தொன்றினைப் பரிவர்த்தனை செய்கின்றது. ‘உள்ளக்கோயில்’ என்ற நல்லிலக்கியத்திற்கும், ‘பருவமங்கையின் படுகொலை’ என்ற போலியிலக்கியத்ததுக்குமிடையிற் போர். எது காலத்தை வெல்லவல்லது? பூசலார் கட்டிய உள்ளக் கோவிலா, காடவர்கோன் கட்டிய சிற்பக்கோவிலா மேன்மை மிக்கது என்றெழுந்த மோதல்! இதனைத் தீர்க்க நடராசப் பெருமானே கனவிலே தோன்ற வேண்டியவரானார். தரமறிந்து தமிழ்த் தொண்டியற்றும் பதிப்பாளருக்கும், நூற்பிரசுரத்தை வணிகமாக்கிக் கொண்ட பிறிதொருவனுக்கும் போட்டி! போட்டியைத் தீர்த்துவைக்கின்றார் சிவப்பிரகாசனார். போலிக்கும் உண்மைக்கும் நடக்கும் சத்திய யுத்தம் என்ற பிரகரண ஒலியே மேலோங்கி நிற்க வேண்டுமென்ற அவாவிலே, இக்கதையில் உருவாகக் கதை அமைப்பும் புகுந்து கொள்ள இரசிகமணி அனுமதிக்கின்றார். அத்துடன், அவர் ‘பதினெட்டுப் பாடல்களினாற் சேக்கிழார்…’ எனத் தொடங்கி, ‘….. எனப் பல கோணங்களிலே, பல விமர்சகர்கள் உள்ளக் கோவிலின் சிறப்பை மக்கள் முன் வைத்தார்கள்’ (பக்:59-61) என்ற பந்தியை எழுதும் பொழுது இரசிகமணி இரசிகமணியேயாகி விட்டார். “பழைமையிற் காலூன்றிப் புதுமையைச் செய்து பார்த்தேன். புதுமை விரும்பிகள் புராணக் குப்பை என்கிறார்கள். வைதீகங்கள் ‘சேக்கிழார் பாடிய தெய்வ மாக்கதையைப் பாட இவனுக்கு அருகை உண்டா’ என்று கேட்கிறார்கள். “(பக் : 58) என்ற இடத்திலே, இரண்டு வேறுபட்ட சக்திகள் எவ்வாறு ஈழத்துக் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தடை கற்களாக இருக்கின்றன எனச் சுட்டிக்காட்டும் வகை அற்புதம். இந்தக் கதையை வாசிக்கும் பொழுது சிவப்பிரகாசனார் என்ற பாத்திரத்தில் இரசிகமணி அவர்களுடைய உள்ளத்தையும், மனோதைரியத்தையும் என்னால் தரிசிக்க முடிந்தது.

தரிசனத்தில் இலக்கியப் போலியை நம்முன் நிறுத்திய இரசிகமணி. சமுதாயத்தில் வெள்ளை வேட்டிக்காரராக வாழும் போலிகளை இனங்கண்டு அலை ஓய்ந்ததுவில் அறிமுகப்படுத்துகின்றார். சிவசுந்தரம் பிள்ளையின் எரியும் உள்ளத்திற்கு, வேலைக்காரச் சொக்கன் நாசூக்காக எண்ணெய் ஊற்றும் பகுதிகள் கலைத்துவமாக அமைந்துள்ளன. இக்கதையில் இரசிகமணியின் நகைச் சுவையும் இலேசாகப் புரையோடிக் கிடக்கிறது. சிவசுந்தரத்தின் உள்ளத்தில் அலை ஓய்ந்ததோ என்னவோ, போலியான இயந்திர வாழ்க்கைக்குள் கிராமங்களின் புனித பண்புகள் நசுக்கப்படுகின்றன என்று அங்கலாய்க்கும் இரசிகமணியின் உள்ளத்தின் அலைகள் ஓயவேயில்லை.

கூத்து என்னுங் கதை நனவோடை உத்தி முறையில் எழுதப்பட்டிருக்கிறது. பழைய கதை ஒன்றை புதிய உத்தியிலே எழுதுவதிற் கணிசமான வெற்றியும் பெற்றுள்ளார். கொட்டகைக் கூத்தின் ஆசாரம் முழுவதையும் இக்கதை விரிவாக அறிமுகப்படுத்துகின்றது. கலை ஆர்வம் பாராட்டத்தக்கதேயாயினும், வாழ்க்கையின் செழுமைக்குத் தேவையான முயற்சியை அந்த ஆர்வம் விழுங்கி விடக்கூடாது என்பது இரசிகமணியின் கருத்தாகும். இதனை அடுத்த கதையான செம்மண்ணிலும் வலியுறுத்துகின்றார். உழுதுண்டு வாழும் கமக்காரனைக் கனம் பண்ணும் இரசிகமணியின் பண்பு இக்கதைகளிலே துலங்குகின்றது. செம்மண் என்னும் படுதாவிலே பசுபதிக் கிழவன் என்ற அற்புத ஓவியத்தைத் தீட்டியுள்ளார். இக்கதை ‘ஈழநாட்டின் இன்றைய சிறுகதைகள்’ என ‘ஒப்சேவர்’ பத்திரிகை அறிமுகப்படுத்திய கதைகளுள் ஒன்றாக ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “எனக்கு அது (பூவக்கல்லி என்னும் செம்மண் நிலத்துண்டு: எஸ்.பொ.) என் பிள்ளையளிலும் பெரிசடா. அது என்னரை உயிரடா. என்னரை சாம்பலைக்கூட அதுக்குள்ளைதான் புதைக்க வேணும்” (பக் 95) என்று பசுபதிக் கிழவன் வேலுவிடம் கூறுகின்றான். இந்தக் கதை பத்திரிகையிலே பிரசுரமான காலத்தில், ‘இந்தப் பகுதி யதார்த்தத்திற்கு முரணானது@ ரசக்குறைவானது’ என்று சில ‘முற்போக்கு’ விமர்சகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை நான் அறிவேன். இரசிகமணியின் சிந்தனைச் செழுமையையும், பிறந்த இடமான செம்மண் மீது அழுங்குப்பிடியான பற்றுதலையும் அறிவதற்கு அந்த விமர்சகாகளுக்குப் பல்லாண்டு காலம் எடுத்தது. ‘செம்மண்’ பிரசுரமாகிப் பல்லாண்டு காலத்திற்குப் பின்னரே பாரதரத்தினம் ஜவஹர்லால் நேரு காலமானார். அவர் தமது சாம்பல் வயல் வெளிகளிலே தூவப்பட வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். நேருவின் விருப்பத்தை முற்கூட்டியே தன் பாத்திரமான பசுபதிக் கிழவனிடம் புகுத்தி தன் மேதைமையை இரசிகமணி நிலைநாட்டியுள்ளார். வெறுந் தொழிலாளர் பிரச்சினைகளைப் பிரசாரஞ் செய்வதிலும் பார்க்க, மனிதத்தன்மை – மனித முயற்சி முதலியவற்றிற்கு உரிய மதிப்புக் கொடுத்து எழுதப்படுவது தான் ‘மக்கள் இலக்கியம்’ என்ற புதிய விளக்கம் ஒன்று கூத்து, செம்மண் ஆகிய கதைகளிலே படர்ந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

கண் திறந்தது போன்ற கதையை இரசிகமணியைப் போன்று வேறு எழுத்தாளர் எவராலும் எழுத முடியாது என்பது என் கெட்டியான அபிப்பிராயமாகும். காலை எட்டு மணியளவில் தொடங்கி மத்தியானம் இரண்டு மணிக்குள் கதையை முடிக்கும் அழகே தனி, அந்தியேட்டிக் காட்சியை மிக நுட்பமாக வர்ணித்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டுடிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்திய ‘புலவர்’களை இக்கதையில் நேர்த்தியாக நையாண்டி செய்கிறார். பழைய சரமகவி ஒன்றை வைத்துப் பெயர் மாற்றஞ் செய்யத் தெரிந்ததுதான் இவர்களுடைய வித்துவம். ஆசிரியத் தொழில் பார்க்கும் இரசிக மணி, ஆசிரியர் வர்க்கத்தின் அவலங்களையும் இக்கதையிலே சித்தரித்துள்ளார்.

ஒரு பிடி சோறு ஈழத்துச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது@ பின்னர் ருஷிய மொழியில் வெளி வந்த இலங்கைச் சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றது. இப்பொழுது இந்தக் கதையை வாசிக்கும் பொழுது, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் நான்காம் பால பாடத்தில் எழுதிய பகுதி ஒன்று என் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப் பகுதி வருமாறு@

“தொழில் செய்து சீவனஞ் செய்யச் சக்தியில்லாதவர்களாகிய குருடர் முடவர் சிறு குழந்தைகள் வியாதியாளர்கள் வயோதிகர்கள் என்னும் இவர்களுக்கும், ஆபத்துக்காலத்தில் வந்த அதிதிகளுக்கும் கஞ்சியாயினும் காய்ச்சி வார்ப்பியாது, அவர்களைத் துர்வார்த்தைகளினாலே வைதும், கழுத்தைப் பிடித்துத் தள்ளியும், அடித்தும் ஓட்டிவிடும் வன்கண்ணர்கள் சிலர், தொழில் செய்து சீவனஞ் செய்ய வல்லவர்களாகியும், சரீர புஷ்டியுடையவர்களாகியும் வியபிசாரம் பொய்ச்சான்று சொல்லல் சூது முதலிய பாதங்களிலே காலம் போக்குபவர்களாயும் உள்ள சோம்பேறிகளுக்கு முகமலர்ச்சி காட்டிக் கும்பிட்டு. இன்சொற்சொல்லி, நெய், வடை, பாயசம், தயிர் முதலியவற்றோடு அன்னங் கொடுத்துப் பணமுங் கொடுக்கின்றார்கள்.

ஆறுமுகநாவலர் வழி வந்த தமிழ் மரபில் நின்று. போலிச் சமயாசாரங்களைச் சாடுகிறார். ஏழ்மை நிலையிலும் தன்மான உணர்ச்சி மரிப்பது கிடையாது@ அந்த உணர்ச்சியிலே தான் மானுஷிகம் வாழ்கின்றது. அதனை இந்தக் கதையிலே காட்டுகிறார்.

இக்கதைத் தொகுதியின் மகுடக்கதை வெண்சங்கு. என்னை மிகவும் கவர்ந்த கதையும் இதுவே தான். எனவே, அந்தக் கதையின் சிறப்பினை அறியும் அலுவலை வாசகரின் சுய விசாரணைக்கு விட்டுவிடுகின்றேன்.

இரசிகமணியின் வசன நடைக்கும், என் வசன நடைக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டென்பதைத் தமிழ் அன்பர்கள் அறிவார்கள். அவருடைய வசன நடை பற்றிய என் விமர்சனத்தைப் புத்தி பூர்வமானகத் தவிர்த்துள்ளேன். இருப்பினும், அவருடைய வசன நடைபற்றி ‘தீபம்’ ஆசிரியர் நா. பார்த்தசாரதி 1963 ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரையின் பகுதியை வாசகர் அறிந்து கொள்வது நல்லது. அது வருமாறு:

“கனக. செந்திநாதன் அலட்சியமாகவும் - இணையில்லாத தைரியத்துடனும் ஒரு கதையை எடுப்பாகத் தொடங்கும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய அந்த யுரனயஉவைல போற்றத் தகுந்த முரட்டுத் தனத்தை நான் மிகவும் இரசித்துப் படிப்பேன். புதுமைப்பித்தன், அழகிரிசாமி, இரகுநாதன், ஜெயகாந்தன் போன்ற தமிழகத்து எழுத்தாளர்களிடம் இந்த யுரனயஉவைல எப்படி இலக்கியத்துக்கு வலுவளிக்கிறதோ, அநுகுணமாக இருக்கிறதோ அப்படியே கனக. செந்திநாதனிடமும் வாய்த்திருக்கிறது. ‘ஒரு பிடி சோறு’ என்ற தமது சிறந்த கதையை அவர் தொடங்குகிற அழகைப் பாருங்கள்:

‘யாழ்ப்பாண மாதா மலடி என்று பெயர் கேளாமல் - சத்திர சிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டடைமானாறு. கடலிலேயிருந்து வெட்டப்பட்ட அந்த உப்புக்கழிக்கு ‘ஆறு’ என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்தக் கழிக்கரையிலே முருகப் பெருமான் இருக்க எண்ணங் கொண்டது’ என்று ஆசிரியர் கதையைத் தொடங்குகிறார். ஆசிரியர் தொண்டைமான் ஆற்றைப்பற்றி வருணிக்கும் இடத்தில் ஆசிரியருடைய குத்தலும் - குறும்புத்தனமும் - நகைச் சுவையும் - துணிவும் மிக நன்றாக வாய்த்திருக்கின்றன.”

இரசிகமணி கனக- செந்திநாதன் இத்தொகுதியின் மூலம் ஈழத்துச் சிறுகதை முயற்சிகளில் மரபு நிலையில் ஒலிக்கும் இனிய நாதத்தை – வரவேற்கத் தகுந்த நாதத்தை – சேர்க்கிறார். ஈழத்தில் இதுவரை வெளிவந்துள்ள நாற்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளுள் நம் நாட்டின் நல் முயற்சிகளைப் பிரதிபலிக்கும் ஐந்து சிறந்த சிறுகதைத் தொகுதிகளைத் தெரிவு செய்வதனால், அவற்றுள் ‘வெண் சங்கு’ம் நிச்சயமாக ஓர் இடத்தைப் பெறும்.

எஸ்.பொன்னுத்துரை

மட்டக்களப்பு,
20.10.1967.