கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  மு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம்  
 

* சுந்தர ராமசாமி
* பொன்னம்பலம்

 

மு. தளையசிங்கம் - ஒரு அறிமுகம்


* சுந்தர ராமசாமி
* பொன்னம்பலம்


சமுதாயம் பிரசுராலயம்
கோவை - 15

--------------------------------------------------------------------

நண்பர்களுக்கு

அமரர் மு. தளைய சிங்கம் இலங்கை எழுத்தாளர். 1956 துவங்கி, அவர் மறைஇந்த 1973 வரை எழுதியிருகிறார். அவர் எழுதிய சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் தமிழ் மொழி கண்ட முதல் தரமான இலக்கியப் படைப்புகள். சுயமான ஆனால் புதிய சிந்தனைகள்.

இருந்தும், படிப்பதையே வாழ்க்கையின் முழுப் பயனாகக் கருதி, முடிவில்லாமல் படித்துக் கொண்டிருந்த எனக்கே இப்படி ஒரு எழுத்தாளர் இருந்தார் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது வியப்பானதுதான்.

தளைய சிங்கம் தம்முடைய ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை ஒன்று காலங் கடந்து, ஒரு பிரபலமில்லாத பத்திரிகையில் பிரசுரமாகி, அதை இன்னொரு பிரபலமில்லாத பத்திரிகையில் மறுபிரசுரமான போது என் கண்ணில் பட்டது. அப்போது அது எழுதி 14 ஆண்டுகள் முடிந்து விட்டன.

நமது முன்னணி எழுத்தாளர் கி. ராஜநாராயணன், "யார் கையிலோ 'போர்ப்பறை' இருந்ததை வாங்கி அவசர வெட்டில் ஒரு பார்வை பார்த்தது. கொஞ்சம் கண் நுழைஞ்சதுமே அடே என்று மனசில் தைக்கும்படி இருந்தது. படிக்க ஆரம்பித்ததுமே சிறந்த ஒரு சுயம்பான சிந்தனையாளர் அவர் என்பது தெரிந்து விடும்" என்று தளைய சிங்கம் அவருக்கு அறிமுகமான விதத்தைக் கூறுகிறார். எனக்கும் அப்படிப்பட்ட அனுபவமாகத்தான் இருந்தது. இன்னும் ஒருபடி மேலே, உலுக்கல், பெரும் மனக்கிளர்ச்சி என்ற அளவில் இருந்தது.

உண்மையின் முழுமையான தரிசனத்திற்காக, தணியாத தாகத்துடன் இருந்த உள்ளத்திற்கு தளைய சிங்கம் பெரிய ஆறுதலாக விளங்குகிறார்.

கண்டும் காணாமலும், தொட்டும் தொடாமலும் யாத்திரை செய்த ஒரு ஆத்மாவற்கே தளையசிங்கம் உடனே நிறைவு தருவார். மற்றவர்களுக்கு ஒரு குழப்பமாகப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

மனித குலத்துக்கு உயர்ந்த ஞான தரிசனம் காட்டும் பாரதத்தின் புராதன செல்வங்களான வேதங்களும், உபநிஷத்துக்களும் இன்று மறைந்து கிடக்கின்றன. அவை நம் சநாதன வாதிகளிடம் சிறை பட்டுக் கிடக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக டாக்டர் ராம் மனோகர் லோகியா சலித்துக் கொண்ட நம் அறிவுச் சோம்பல் நம்மை அப்பெரும் செல்வத்திற்கு தகுதியற்ற வாரிசுகளாக்கி விட்டிருக்கின்றன.

இந்நிலையில் அமரர் தளையசிங்கத்தின் சத்தியத்தைக் காணும் அறிவு சார்ந்த எழுத்துக்கள் குழப்பங்களாக சிலருக்கு படுவதில் வியப்பில்லை.

தனி மனிதன், சமுதாயம் - மனித குலம் சாபல்யம் அடைய சர்வோதயமே ராஜபாட்டை. புதுயுகத்தின் முன்னோடி காந்திஜியே. இந்த உண்மைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது தளையசிங்கத்தின் எழுத்துக்கள். ஒரு புதுயுக சகாப்தத்திற்கு கட்டியம் கூறும் தளையசிங்கத்தின் இலக்கியம். சிந்தனைகள் இனி ஒளி விட்டுப் பிரகாசிக்கும் என்று நம்புகிறோம்.

தளைய சிங்கத்தின் மேன்மையை, அவரின் முக்கியத்துவம் வாய்ந்த தனிச் சிறப்பை நமது முன்னணி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தளையசிங்கத்தின் சகோதரர் திரு. மு. பொன்னம்பலம் இன்னொரு கோணத்தில் தளைய சிங்கத்தின் பின்னணியை தமக்கு எடுத்துக் காட்டுகிறார்.

இந்த பிரசுரத்தில் இடம் பெறும் இருவரின் கட்டுரைகளும் தளையசிங்கத்தை அறிமுகம் செய்கிறது.

இந்த அறிமுகத்திற்குப் பின் தளைய சிங்கத்தின் நூல்கள் தமிழ் மக்களின் அதிக கவனத்தைப் பெறும் என்றும் அது ஒரு புதிய காலாச்சார எழுச்சியை நம்மிடையே ஏற்படுத்தும் என்று திடமாக நம்புகிறோம்.

சி. கோவிந்தன்
பதிப்பாளன்
தமிழ் புத்தாண்டு
1985

---------------------------------------------------------------------

சுந்தர ராமசாமி:-

தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்

மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. 'புதுயுகம் பிறக்கிறது' -பதினோறு சிறு கதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965. 'போர்ப்பறை' -கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதற் பதிப்பு 1970. 'மெய்யுள்' கட்டுரைகள், -சம்பாஷணைகள், கவிதைகள, நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974 இல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும். கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. 'ஒரு தனி வீடு', 'யாத்திரை', 'கல்கி புராணம்' ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. 'ஒளியை நோக்கி' என்ற நாவல் குறையாக நிற்கிறது. 'குருசஷ்த்திரம்', 'எதிரிகள்', 'ஓமாக்கினி' ஆகிய முயற்சிகளும் உள்ளன. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி-சில அவசரக் குறிப்புகள்' என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள்; செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடர் கட்டுரைகளாக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக உருவம் பெறவில்லை. 'மல்லிகை', 'பூரணி', 'சத்தியம்' ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப் பட்டுள்ள எழுத்துக்களும் புத்தக வடிவம் பெறவில்லை.

வாழ்க்கைக் குறிப்பு:-
தளையசிங்கம் 1935 இல் பிறந்தார். 1957ல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது 'சுதந்திரம்' என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான 'தியாகம்' வெளிவந்தது. முதல் நாவலான 'ஒரு தனி வீடு' 1960ல் எழுதப்பட்டது. இரத்தின புரியில் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானார். விமர்சனத்தில் தீவிர ஆர்வம்கொண்டார். 'விமர்சன விக்கிரகங்கள்' கட்டுரைத் தொடர் 'தினகர' னில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண்டினது குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1963ல் இவர் எழுதிய 'ஏழாண்டு' இலக்கிய வளர்ச்சி " சில அவசரக் குறிப்புகள்' தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்படத் தக்கது. 1966ல் இவர் தனது குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தி யாலயத்திற்கு மாறிற்று. புங்குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஆத்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் 'சத்தியம்' பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 1972ல் 'மெய்யுள்' என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மறைந்தார்.

நான் என் கட்டுரையை தமிழக வாசகர்களின் வசதியைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்து எழுதியிருக்கிறேன். முதற் பகுதி தளையசிங்கத்தின் கருத்துலகம் பற்றி, அதிகமும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றி எனது எதிர்வினைகள்.

I

தளைய சிங்கம் தனது கலைப் பார்வையை, 'பிரபஞ்சயதார்த்தம்' என்று அழைக்கிறார். 'பிரபஞ்ச யதார்த்தம் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப் பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒரு பகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்து கொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

உலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிறான். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குகளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட்களில் விழுந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சோம்பல், வன்முறை இவ்வாறான எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வௌ;வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள், போராட்டங்கள். இந்த வெளிப்பாடுகளில் பிரச்சனையின் ஆழத்தை உணர முடிகிறதா? முடியவில்லை. விஞ்ஞானம் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிருக்கிறான். உலகெங்கும் வௌ;வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பிலும் அங்கு அதிருப்திமிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்? மெய்யான வளர்ச்சி எது? கட்சிகள் அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா? சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மலருமா? இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப் படுகின்றனவா? பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. அது தான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவுளை ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளலாம். பௌத்தர்களை கடவுளை மறுப்பினும், கடவுளை ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக் கொள்வர். நிர்வாண நிலைதான் திருப்தியை அளிக்கக் கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்திகள் தொடரும்.

சத்திய எழுச்சி என்றால் என்ன?

சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம் உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தனர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை நிக்கமற நிறையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்சனைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டுவிட்டால் கலைஞர்களிடம் அதிக அளவில் தட்டுப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிறைவேறுவதற்கு முன் சிறு கூட்டங்கள் இணைந்து பெருங் கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும்.

மெய்யான மதத்திற்கும், மெய்யான விஞ்ஞானத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட, மற்றொன்று புற உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்றொன்று ஆராச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும், பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்தற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது? மனிதத் தன்மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையிலும், உலக சர்வாதிகாரத்திற்கு கனவுகள் கண்டு கொண்டிருப்பது வரையிலும், சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.

முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்றால், முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய செல்ல முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான hPதியாக உணர்ந்த மார்க்சீயவாதிகள், முமுமையை நோக்கி சமுதாயத்தை துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப் படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்.

இன்று நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டும் தான். வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளை விளக்கிக் கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணயிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்தவமாக அமைகிறது. மற்றச் சிந்தனைகளால் முழுச் சமூகத்தையும் அரசியல், பொருளாதாரம். கலை போன்ற பிற துறைகளையும் ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும், வலுவாகவும் செலுத்த வேண்டும் என்றால் ஒன்று அவன் மார்க்சிய வாதியாக இருக்க வேண்டும். அல்லது மார்க்சீயத்தை வெல்லும் மற்றொரு பார்வையைத் தேடிக்கண்டுபிடிப்பவனாக இருக்கவேண்டும். மார்க்சியத்தை இன்னும் யாரும் முழுமையா வென்று விடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவுமில்லை. மார்க்சீயம் தோற்கும் இடத்தில் கூட, அது கொண்டு வந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப் பார்வை வேண்டும்.

மார்க்சீயத்தின் மறு பக்கத்தையும் பார்ப்போம். சரித்திரத்தின் புதிய தேவையை மார்க்சீயம் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சரித்திர வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் தத்துவப் பார்வை வளர வேண்டுமென்றால், அந்த தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படும் சில அம்சங்களை தகர்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் மார்க்சியவாதிகள் இதனை உணர முடியாதவர்களாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை மறுப்பவர்கள் மார்க்சியத்தின் நியாயமான நன்மைகளை ஒப்புக் கொள்ள மறுப்பதுபோல், இந்த மார்க்சியவாகளும் தங்களது இறுக்கமான தத்துவத்தையும் மீறிக்கொண்டு புதுப் பார்வைக்குரிய கால கட்டம் வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். சத்தியத்தின் ஒரு கால கட்ட சரித்திர வளர்ச்சிக்கு எவ்வளவுதான் ஒரு தத்துவப் பார்வை உதவினாலும், அக்கால கட்டத்தில் எவ்வளவுதான் அப்பார்வை பூரணமாக இருந்தாலும், பரி பூரணமான சத்தியத்தின் முழுப்போக்கையும் அது அடைந்து விடப் போவதில்லை. எல்லாத தத்துவங்களும், தத்துவங்களையும் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் அந்தந்தக் கால வெளிக்காட்டல்களை அல்லது தர்ம வளர்ச்சியை படம் பிடிக்க முயலும் தற்காலிகப் பார்வை அழுத்தங்களேதான். எனவே அந்தந்தக் காலத் தத்துவப் பார்வைகளை அந்தந்தக் காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் போதுகூட, அதே தத்துவங்களையும் மீறி சத்தியத்தில் தன்னை நிறுத்திக் கொள்பவன் தான் சார்புநிலையில் தர்ம வளர்ச்சிக்கு ஏற்றவாறு சரியாக மாறக் கூடியவனாகவும் இருக்கிறான்.

வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடமை சோஷலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வரவும் இயலாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு அகத்தே காணும் வேறுபாடுகளையும், முழுச் சமூகத்தையும் தாண்டினால் தான் உண்மையான சோஷலிசமும் உண்மையான ஞான எழுச்சியும், அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் காணமுடியும். இனிவரும் காலத்தில் கலைத்துறைகள் மட்டுமே பரவசத்தையும், மன அமைதியையும், தெளிவையும், நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இருக்கப் போவதில்லை. இனிமேல் எல்லாத் தொழில்களுமே கiலாகவும் யோகமாகவும் தொழுகையாகவுமிருக்குமாறு செய்யவேண்டும். ஃப்பிராயிடு கூறிய மனச் சிக்கல்களும் மார்க்ஸ் கூறிய மனப்பிறழ்வும் நீங்கிய முழுiமான மனிதனை உருவாக்க வேண்டும். இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சகல துறைகளையும் ஒன்றோ டொன்று தொடர்பு படுத்தி அவற்றை முழுமை அடையச் செய்வதற்கும் சகல துறைகளையும் திட்டமிட்டு சம வேகத்தில் புதுமையை நோக்கி வளர்ப்பதற்கும் அரசியல் அதிகாரமே நேரிடையான வழியைக் காட்டுகிறது. ஜனநாயக அமைப்பு சமூக மாற்றத்திற்குப் பூரணமாக உதவாத அமைப் பாகவே இருக்கிறது. சமூகத்தின் சகல துறைகளும் பிரிவுற்று, குறியற்றுத் தாமத நடை போட, தடுமாற்றங்களும் சிதறல்களும் தோன்றுகின்றன. மத்தியிலிருந்து அதிகாரம் குவிக்கப்படும் பொதுவுடமை அமைப்பிலோ பொருள் உற்பத்தி நிச்சய பலன்களை தரும்போதும், ஜனநாயக மனஉணர்வுகள் பலியாகி, அதிருப்தி மிஞ்சுகிறது. சமய ஞானம் மறுக்கப்படுவதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலம் வரையிலும் பிற்போக்கு வாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என்பதற்காக சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. முற்போக்கை விரும்புகிறவர்கள் தங்களது லட்சியத்திற்காக இதைப் புரட்சிகரமாகப் பயன்படுத்தலாம். மார்க்சியவாதிகள் இதை இன்னும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரண பொதுவுடமையை ஏற்றுக்கொள்வதால் மட்டும் சர்வாதி காரத்தின் இறுக்கம் தளர்ந்து, சுதந்திர மலர்ச்சி வந்து விடும் என்று சொல்வதற்கில்லை. ஓரளவுக்காவது மத்தியில் அதிகாரம் திரட்டப்படாமல் முழுமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியாது. ஆனால் அது தேவைக்கு அதிகமான சர்வாதிகாரமாக, தனிப்பட்டவர்களின் குறைகளையும் தீர்க்கதரிசனமின்மையையும் மறைக்கும் சர்வாதிகாரமாக மாறாமல் இருப்பதற்கு சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணத்துவம் மட்டும் வழி தரப்போவதில்லை. நடைமுறைப்படுத்துபவர்களின் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்தும் இது இருக்கும். அதனால் தான் கலைஞர்களும் எழுத்தாளர்களும்-அந்த விரிவை வெளிப்படுத்தும் பக்குவத்தை வளர்க்க கூடியவர்களாக இருப்பதால்- அரசியலில் அதிகமாக பங்கு பற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன் அக அழத்தை கண்டு பிடிக்காதவரைக்கும் முழுமையின் பூரணத்துவம் பெறப் போவதில்லை. ஆகவே சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இன்றைய எழுத்தாளர்கள்தான் முன்வரவேண்டும்.

சமய ஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவரும் தனது அகத்திலேயே அந்த ஞானத்தை எழுப்ப வேண்டும். வர்க்க வேறுபாடுகளும் குண வேறுபாடுகளும் அங்குதான் புதைந்து கிடக்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டையாகவும் பிறப்பு பிறப்பாய் வரும் இயல்புகளின் மறைவிடங்களாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி அங்கு புரட்சியை கொண்டு சென்று முழுமையின் மலர்ச்சியை ஏற்படுத்தாத வரைக்கும் புறச் சூழலில் மட்டும் புரட்சியை நடத்தி பூரண இலக்கியத்தையும் சரி, முழுமையான வாழ்க்கையையும் சரி கொண்டு வரமுடியாது. எழுத்தாளர்கள் இனியேனும் இதை உணர வேண்டும். இவ்வாறு இலக்கியத்தில் ஆரம்பமாகும் இந்த ஞான அலை-பிரபஞ்ச யதார்த்தம்-முழுச் சமூகத்திலும் 'பரவுவதே சர்வோதயம்.'

இன்றைய சமூகத்தில் காணப்படும் கலைஞர்களை-படைப்பாளிகளை-நான்கு வகையிகறாகப் பிரிக்கலாம்:

1. மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகள்
2. மார்க்சியத்தை மறுத்து அதை வெல்லக் கூடிய திட்ட வட்டமான தத்துவப் பார்வை ஏதும் இன்றி-தங்கள் உள்ளுணர்வுகளின் உந்தல்களுக்கு கலையுருவம் கொடுப்பவர்கள்.
3. கட்டுப் பெட்டிகளும், போலிகளும்.
4. வியாபாரிகள்.

மார்க்சியத்தை மறுப்பவர்களில் சிலர் உள்ளுணர்வுகளின் மூலம் ஆழமான கலையுருவத்தைத் தேடி போயிருக்கின்றனர். புதுமைப்பித்தன், மௌனி, சி. சு. செல்லப்பா போன்றவர்களுக்குத் திட்டவட்டமான பார்வை ஏதும் இல்லாததால் தர்ம வளர்ச்சிக்காத் தீவிரமாகப் போராட முடியவில்லை. இவர்கள் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களை விடவும் சிறப்பாக ஏழுதியிருக்கிறார்கள் என்றால் அச்சித்தாந்தத்தை இவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் பார்வை விரிவுக்கு ஏற்பகலைத் திறமையும் அவர்களுக்கு இல்லை என்றே அர்த்தமாகிறது. நம் பின்னணியில் திறமை மிகுந்த கலைஞர்கள் பெரும்பாலும் மார்க்சியத்தால் கவரப்படுவதில்லை. இந்தியப் பண்பாட்டின் ஆழம் அதிகம். மார்க்சியத்தை விடவும் அதிகம். அதனால் இந்திய பண்பாட்டையே சார்ந்து நின்று திறமை மிகுந்த கலைஞர்கள் அதன் பழந்தோற்றத்துடனேயே திருப்தியடைந்து விடுகின்றனர்.

கட்டுப்பெட்டிகளுக்கு உதாரணமாக பண்டிதமணி கணபதிப் பிள்ளை முதல் மு.வ. வரைப் பலரைச் சொல்லலாம். இன்று வரையிலும் சமூகம் கண்டுபிடித்த உண்மைகளை கட்டிக்காத்து வருகின்றனர். என்ற அளவுக்குத் தான் சமூகம் இவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு இவர்கள் அவசியமானவர்களே. போலிகளுக்கு உதாரணமாக அகிலன் முதல் நா. பார்த்தசாரதி வரை இருக்கின்றனர். போலிகளிலும் ஒத்தோட மறுப்பவர்கள் அண்ணா. மு. கருணாநிதி போன்றவர்கள். கட்டுப் பெட்டிகளும் போலிகளும் மலிந்த ஒரு சமூகத்தில் இவர்கள் புரட்சிவாதிகளாகத் தெரிவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் காட்டும் வளர்ச்சி வெறும் மாயைதான்.

பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்திற்குரிய இலக்கிய வார்ப்புகள் எப்படி இருக்கும்?

இவை அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும் என்பதை இப்போதே நிச்சயமாகக் சொல்லி விடலாம். ஐரோப்பிய அறிவு வாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவியங்களாக இருப்பதுபோல் அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன்கள் சார்ந்த அறிவும் யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தியவற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும் குறிப்பாக, பிரதேச, சமூக, பொருளாதார நிலைகளுக்குரிய உணர்வுகளும் அதிகமாக இருக்கின்றன. இனிவரும் படைப்புகளில் மீண்டும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனால் அறிவு வாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வுகளும் கூடவே நிற்கும். இதனை பிரபஞ்ச யதார்த்தம் என்று கூறலாம். விஞ்ஞானமும் ஆத்ம ஞானமும் கலந்த பேரறிவு இது.

பிறக்கப் போகும் இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் புதிய தளத்துக்குரிய உருவ உள்ளடக்கத்தைப் பெறும். இதுதான் மெய்யுள். இது ஒரு புதிய இலக்கிய உருவம். இது ஒரு பூரண உருவாகவும் இருப்பதினால் சிறுகதை. நாவல், கட்டுரை என்ற பாகுகாடுகளை உடைத்தும், கடந்தும் செல்லும் ஒரு உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தியாசங்களை இது ஏற்காது. இதுகால வரையிலுமுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. 'மெய்யுள்' கற்பனைக் கோலங்களைத் துறந்து அவற்றின் தளங்களையும் தகர்த்துக்கொண்டு நித்திய சந்தியத்தை நோக்கிய நேரடி அனுபவ hPதியான ஊடுருவல்களுக்குரிய இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும் உள்ளடக்கமும் மெய்யாகவே இருக்கும். அதனால் இது இதுகால வரையுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை இலக்கியமாகவும் இருக்கும். அதேபோல் தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் இருக்கும். சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்.

இன்றைய இலக்கியத்தைப் பார்க்கும்போது ஞான அலையின் உந்துதல்களை பெரிய அளவில் உணர்ந்து செயல்பட்டவர் பாரதி. புதுமைப்பித்தன் கதைகள் நடைமுறையிலுள்ள ஆத்மீக வீழ்ச்சியை கேலி செய்யும் முயற்சிகள்தான். புதுயுக ஞான அலைகளின் ஆரம்பம் இவரிடம் இல்லை. மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் இந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடை இடையே அதைத் திருகி சாகடித்து கொன்று விடுகின்றனர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த நின்றுவிடப் போவதில்லை. அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர்வாதிகாரம் இதே நேர்மாறானது. புதுமைப்பித்தனிடம் காணப்படும் கேலி உணர்ச்சியும், இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதிகாரத்திற்குப் பின்னால் பெருமளவு மறைந்து கிடக்கின்றன. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப் போகும் வீரத்திற்கும் செயல் வேகத்திற்கும் முன்னால் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் மார்க்சியத்தின் இயலாமையும் தாழ்வு உணர்ச்சிகளும் தெரிய வரும். முற்போக்கு மார்க்சிய எழுத்தாளர்கள் புதுயுக ஞான அலையைப் பிழையாகப் புரிந்து கொண்டவர்கள் தான். பாரதிக்குப் பின் இப்புதிய அலையின் பிறப்பு பிரக்ஞை பூர்வமான அளவுக்கு வளர்ந்திருப்பது ஜெயகாந்தனின் 'பிரம்மோபதேசம்', 'விழுதுகள்', 'பிரளயம்' என்ற கதைகளிலும், மு. பொன்னம்பலத்தின் 'அது'என்ற கவிதைத் தொகுதியிலும்தான். ஜெயகாந்தனிடம் இது திரண்டு பெருத்த சக்தியாக உருவெடுத்து வருகிறது.

II

மு. தளையசிங்கம் பெருமளவுக்கு தன்னில் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சனைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும்-வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர். உடல்கள் இருபதாம் நூற்றாண்டில் கிடந்து உழல, பிரக்ஞை முந்திய நூற்றாண்டு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ கூறுபட்டுக்கிடக்க, பிரச்சனைகளுக்கு எதிர் வினையாக வாய்க்கு வரும் சொற்களை உதிர்க்கும் நம் 'சிந்தனையாளர்'களின் மத்தியில் விதி விலக்காக வந்து சேர்ந்தவர் தளையசிங்கம். இருபதாம் நூற்றாண்டின் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது இவருடைய சிந்தனைகள் கருக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சிக்கு ஏகதேசமாக ஐம்பது ஆண்டுகள் பிந்திய காலப்பகுதி இது. தான் பிறந்து வளர்ந்த மண்ணையும், கலாசாரத்தையும் சார்ந்தும், கடல் தாண்டிய தேசங்களைச் சார்ந்தும், இவ்வுலகின் முழுமை சார்ந்தும், பிரபஞ்சம் சார்ந்தும் அவர் சிந்திக்க முற்பட்டார். இப்பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, சுய வாழ்வின் அனுபவ ஆய்வுகளுக்கு மேலாக உலகத் தளத்தைச் சார்ந்த-கிழக்கிலும் மேற்கிலுமான-படைப்பகளையும் அறிவுகளையும் திரட்டி தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தத்துவம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் விசேஷ ஈடுபாடும், விஞ்ஞானத்தில் ஆர்வமும் இவர் கொண்டிருப்பதை இவரது எழுத்து நமக்குக் காட்டுகிறது. பிரச்சனைகளுக்கு விடைகள் தேடிச்செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது இலக்கியம் அகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் செல்வதை உணர முடிகிறது. பிரச்சனைகள், அவற்றைப் புரிந்து கொள்வதற்கான தயாரிப்பு, 'விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள்', உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களை தெளிவாகக் கூறல். இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப்போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா? இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி, மற்றொருவர் புதுமைப்பித்தன். பாரதி தாழ்ந்து போனமைக்கு துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்றார். புதுமைப்பித்தன் தாழ்ந்து போனதை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்த வரிசையில் மூன்றாவதாக வருபவர் தளையசிங்கம். பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால் பாரதியின் சிந்தனையை, இவர் தம் காலத்துக்கு கொண்டு வந்து, இடைக்கால சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து இடை வெளிகளை அடைத்து முழுமைப்படுத்த முயன்றார். என்றே சொல்லலாம்.

அணுகுமுறையில் தளையசிங்கத்தின் மேலான குணமென்ன?

பிரச்னைகளை ஏக காலத்தில் பலர் எதிர்கொள்ளும்போது பொதுவான சிந்தனைகள் தோன்றுகின்றன. இச்சிந்தனைகள் இணைந்து தளங்கள் உருவாகின்றன. தத்துவம், சமயம், கட்சி, நிறுவனங்கள், சபைகள் ஆகியவற்றின் பொதுப் பெயராக தளம் என்று வைத்துக் கொள்வோம். தளங்களின் தோற்ற நியாயங்கள் என்ன? பிரச்னைகள் ஆராயப்படுகின்றன. விடைகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வுக்கான நடைமுறைகள் அமுலாகின்றன. இவ்வளவு நிலைகளும் உண்மை என்றால் சிந்தனையாளன் தன் முழு ஆற்றலையும் பிரச்னைகளை முன்னிறுத்திச் சிந்திப்பதிலும் அதற்கான விடைகளை கண்டுபிடிப்பதிலுமே கரைத்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகளின் தீர்வுகளுக்கு அவனை நகர்த்தும் உண்மைகளை; அவை எந்தத் தளத்தைச் சார்ந்த உண்மை என்றாலும் சரி; எடுத்து தன்னில் இணைத்துக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாஅ விதியாக அவனிடம் தொழிற்படவேண்டும். இவ்வாறான ஒரு விதிக்கு அவன் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும்போது பிற தளங்களை விமர்சித்து ஒதுக்குவதில் மட்டுமல்ல, தன்னிடம் விட்டுப்போன உண்மைகளின் துணுக்குகளேனும் பிறதளங்களில் ஒதுங்கி நிற்கின்றனவா என்பதை அவன் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவனாகவும் இருக்கின்றான். முன் விதிகளையும், அனுமானங்களையும், தத்துவ முடிவுகளையுமே தாண்டி பிரச்னைகளின் புதுமுகங்களோடு வரும் வாழ்வின் முன் அவன் தன்னை இன்றைய மனிதனாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவன் நிரந்தரம் சேர்த்துக் கொள்ள வேண்டியவனாகவும் இருக்கிறான். முழு உண்மையும் இன்னும் எவரிடத்திலும் குத்தகை போய்விடவில்லை என்பதிலும், எவரிடத்து நின்றும் அதன் கீற்று எந்த நிமிஷமும் வெளிப்படலாம் என்பதிலும், அவன் விழிப்புணர்வுள்ளவனாக இருக்கவேண்டும். இப்புதிய உண்மைகளை ஏற்கவோ, பயன்படுத்தவோ, அவன் இணைத்துக் கொண்டிருக்கும் தளத்தோடு கொண்டுள்ள இறுக்கமான உறவுகளோ, முன்விதிகளோ தடையாக இருக்கக் கூடாது. புதிய உண்மைகளை ஏற்பதன் மூலம் தன் தளத்தின் உருவம் சிதைந்துபோகும் எனவும், அச்சிதைவு அத்தளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது துணுக்கு முகத்தைச் சிதைத்து விடும் எனவும் அஞ்சக் கூடியவன் தனது முகத்தை தக்க வைத்துக் கொள்ள தளத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறானே அன்றி பிரச்னைகளுக்குத் தீர்வு காண தன்னைத் தூண்டுபவன் அல்லன். பிரச்னைகளின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டு, விடைகள் தேடிய முயற்சியில் தளங்களில் வந்து ஒதுங்கியவன், தளங்களைக் காப்பாற்றும் முயற்சியில் சீரழிந்து சிறுத்துப் போவதை இன்று உலகெங்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பின்னணியில் தளங்களைவிட உண்மை முக்கியம் என்று சிந்திக்கத் தலைப்பட்ட தளையசிங்கம் மிக முக்கியமானவர்.

மேற்கு - கிழக்கு என்றோ, நேற்று - இன்று என்றோ, தனது மதம் - பிற மதங்கள் என்றோ, தன் கலாச்சாரம் - பிற கலாச்சாரங்கள் என்றோ, ஆத்மீகம் - பௌதீகம் என்றோ பாகுபாடுகளில் தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் இவற்றிலிருந்து விடுதலை பெற்று மனத்தயக்கங்கள் இன்றியும், விருப்பு வெறுப்புக்கள் இன்றியும், சிந்தனை உலகில் மேற்கொண்டிருக்கும் பயணத்தை இவர் எழுத்துக்கள் காட்டுகின்றன.

தளையசிங்கத்தின் சிந்தனையின் மையம் என்ன? அந்த மையத்தில் நாம் காண வேண்டிய சிறப்பு என்ன?

பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு மனித ராசியை நகர்த்துவதற்கு இன்று வரையிலும் நம்மை வந்து எட்டியிருக்கும் தத்துவங்களின் போதாமையை இவர் ஆராய்கிறார். மனிதனின் மிக முக்கியமான ஒரு கூறு அவன் தன் சுயநல வட்டங்களிலிருந்து எப்போதும் வெளியே சாடி தனது வீச்சைப் பெருக்கியும் அகலப்படுத்தியும் வைத்துக் கொள்கிறான் என்பதாகும். இம் முனைப்பு நபருக்கு ஏற்ப ஆண்டை வீடு வரையிலுமோ பிரபஞ்சத்தின் எல்லை வரையிலுமோ விரிகிறது. மனித வளர்ச்சிக்கு இந்த அம்சம் ஆற்றியுள்ள பங்கு மிகப் பெரியது. தனக்கும், பிற ஜீவராசிகளுக்கும் இயற்கைக்கும், பொருளுக்கும் பொதுவான ஏதோ ஒன்று இருப்பதான உணர்வு வெளிப்படுவதின் உருவங்களே சுயத்தைத் தாண்டி நிகழும் யாத்திரைகள். இதை வசதிக்காக பிரபஞ்ச உணர்வு என்று சொல்லலாம். இப்பிரபஞ்ச உணர்வின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உந்தல் எப்போதும் மனிதனை ஆட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வுணர்வு மனிதனுக்கு இருப்பது வரையிலும் பௌதீகத் தேவைகளின் நிறைவேற்றங்களை அவன் தனது பயணத்தின் இறுதி இலட்சியமாக நிறைவேறிய பின்பும் பரிணாமம் தொடரும். அதன் போக்கு இன்றைய நம் அனுமானத்திற்கும் அப்பாற்பட்டது என்றாலும்.

இன்று உலகெங்கும் வியாபித்திருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றாலப்பிரச்னைகளின் முழுமையை ஆராய்ந்து அறியும் ஆற்றல் நாம் பெற வேண்டும். இந்த ஆற்றல் இன்று நமக்கு இல்லை. சார்ந்து நிற்கும் தளங்ளின் கருவியாகப் பயன்படுவது நின்று, தளங்களைக் கருவியாகப் பயன்படுத்தும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள இன்று நமக்குத் தெரியவில்லை. முதலில் இச் சுதந்திர நிலை உருவாக வேண்டும். பிரச்னைகளின் முகங்களை தத்துவம் அவதானிக்கும்போது காலம் நின்றுகொண்டு இருப்பதில்லை. நகரும் காலங்கள் தத்துவம் அவதானிக்காத புதுப்பிரச்னைகளை எப்போதும் கொண்டு வருகின்றன. இவற்றையும் சேர்த்துச் சிந்திப்பதற்கு தத்துவ அறிவும் தத்துவத்திலிருந்து பெறும் விடுதலையும் தேவையாகின்றன. தத்துவ அறிவு புதுமையைச் சார்ந்தது எனில் தத்துவத்திலிருந்து பெறும் விடுதலை படைப்பு மனத்தைச் சார்ந்தது. படைப்பு மனமற்ற புலமை இன்றையப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்பதான பாவனையில் நேற்றையச் சரித்திரத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறது. படைப்பு வைபவங்களோ அவை எத்தளத்தைச் சார்ந்து இருப்பினும், பிரச்னைகளின் முதல் பதிவுகளை நிகழ்த்துவதற்குக் காரணம் அவை நேற்றையச் சுமையிலிருந்து விடுதலை பெற்று நிற்பதாகும்.

அடுத்து மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட தடை. இன்று மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறியவில்லை. மனத்தைப் பற்றிய பௌதிக சித்தாந்தங்களின் செல்வாக்கில் இதை அறிந்து கொள்வதற்கான முயற்சிகளும் பிதள்ளப்பட்டு விட்டன. புற உலகுக்கும் மன ம் தவிர்க்க முடியாத இணைப்புகள் உள்ளன. ஒன்றில் நிகழும் மாற்றம் மற்றொன்றைப் பாதிக்கக் கூடியன. இருப்பினும், மனத்தைப் புது உலகின் தவிர்க்க முடியாத தொகுப்பாக மட்டும் கருதுவதில் விடுதல்கள் உள்ளன. இந்த விடுதல்கள் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி நிச்சயமான ஆராய்ச்சிகளிலிருந்து கூட நிச்சய பலன்களைப் பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. மனத்தின் மிகச்சுருக்கமான பகுதியோடு கொண்டிருக்கும் தொடர்பையே 'நான்' என எண்ணி இயங்குகிறான் மனிதன். மனதின் சிறு பகுதிக்கும் சுதந்திர இயக்கம் இல்லை. மனதின் மறைந்து நிற்கும் பெரும்பகுதி சிறு பகுதியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய அறிவுகள் மேற்கிலும் கிழக்கிலும், ஒன்றில் சுய ஆய்வு மூலமோ, அல்லது புறப் பரீட்சைகளின் மூலமோ தொகுக்கப்பட்டு உண்மைகள் வெளியாகிவிட்டன. மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்தி அதிகாரத்திற்கான உந்தல் எனவும், பாலுணர்ச்சி எனவும், மன உணர்வுகள் எனவும் ஆராய்ச்சி விரிந்து கொண்டு போகிறது. ஆகவே, மனிதன் தன் மனத்தை முழுமையாக அறியாமல், அதன் விருப்பு வெறுப்புகளைத் தாண்டிச் செல்ல முடியாது. இவ்விருப்பு வெறுப்புகளை அறியாத நிலையில் அவனுக்கும் உண்மைக்குமான தொடர்புகள் மங்கலாகவோ மறைந்தோ அல்லது மாறாட்டமாகவோதான் இருக்க முடியும். புற உலகத்தின் விளைவாக மட்டுமே மனத்தைப் பார்ப்பதும், புற உலகு மாறும்போது மனத் தொகுப்பு அதற்கேற்ப இயற்கையான மாற்றம் கொள்ளும் என முடிவு கட்டுவதும் முழுமையான உண்மை அல்ல என்பது இன்று தெளிவாகிவிட்டது. மேலே கூறிய இடைவெளிகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முற்பட்டமையே தளையசிங்கத்தின் மிக முக்கியமான மையம் என நாம் கொள்ள வேண்டும்.

பரிணாமத்தின் அடுத்த கட்டமான சத்திய எழுச்சிக்கு மனிதராசியை நகர்த்த புற உலகையும், அக உலகையும், பொருளையும் மனத்தையும், சமயத்தையும் விஞ்ஞானம் உள்ளிட்டப் பிற அறிவுத் துறைகளையும், அனைத்திலும் அழுகிப் போன பகுதிகளை கழித்து, ஜீவனுள்ள பகுதிகளைச் சேர்த்து புதுக்கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் அணைத்தபடி திரவத் தன்மையுடன் இயங்கும் சில சிந்தனைகளை வடிக்க அவர் முயல்கிறார். இவை அவரது எழுத்துக்களில் மூன்று பகுதிகளாகப் பிரிகின்றன:

1. இன்றைய அதிருப்தி நிலை பற்றிய விவரிப்பு
2. இன்று வரை வந்துள்ள தத்துவங்களின் குறைகளும் போதாமைகளும்
3. சமயத்தின் ஜீவனைப் புதுப்பித்தல்.
4. புதுப்பித்த சமய நோக்கின் ஜீவனையும் அறிவுத் துறைகளையும் இணைத்தல்.

தளையசிங்கத்தின் கவனம் பெருமளவு மார்க்சியவாதிகளுடன் சம்பாஷணைகள் நிகழ்த்துவதிலேயே இருக்கிறது. உண்மையைத் தேடும் மனத்தின் பக்குவம் நிறைந்த சம்பாஷணைகள் இவை. இந்தச் சம்பாஷணைகள் பொதுவுடமைப் புரட்சிக்குப் பிந்திய அரை நூற்றாண்டுச் சரித்திரத்தை நுட்பமாக எத்ரிர்கொண்டதின் விளைவுகளாகும். லட்சியவாதிகளையும் புது உலகம் மலரக் கனாக் கண்டவர்களையும் பார்த்து சரித்திரம் மிகக் கொடுமையாகச் சிரித்த காலப் பகுதி இது. தளையசிங்கத்தை எதிர் கொள்ள வரும் மார்க்சியவாதிகள், இக்காலச் சரித்திரம் அளித்த ஏமாற்றங்களையும், கொடுமைகளையும், தளையசிங்கம் தன் மூளையின் பின்பகுதியில் சுமக்கிறார் என்பதை உணர வேண்டும். இக்காலப் பகுதியின் ஊனங்களை ஏற்றுக் கொள்ளும் மனங்களே தளையசிங்கத்துடன் மறு சம்பாஷணைகள் நிகழ்த்த முடியும். இக்காலப்பகுதி அளித்த ஏமாற்றங்களையும் கொடுமைகளையும், விவரித்துப் பேச தளையசிங்கம் மறுத்திருப்பது கட்சி - எதிர்க்கட்சியாடும் கொண்டாட்டம் அல்ல அவருடைய உந்தல் என்பதும், சரித்திரத்திலிருந்து படிப்பினைகள் கற்று மேற்கொண்டு சிந்தித்து புதிய சரித்திரத்தை உருவாக்கும் தர்மத்திலேயே தன்னை அவர் பிணைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வரும். இக்காலச் சரித்திரத்தின் ஏமாற்றங்கள் ஒருவன் மனத்தில் உறையும் போது தத்துவங்கள் தன்னளவில் வலுவற்றவை என்பதும் அதோடு உறவுகொள்ளும் மனிதனின் நற்பண்புகளுக்கு ஏற்றவாறுதான் அவை பயன்படுகின்றன என்பதும் அழுத்தம் பெற்றுவிடுகிறது. சீரழிந்த மனிதன் பெரும் தாதுவங்களை தான் ஸ்பரிசித்த மாத்திரத்தில் சீரழித்து நாற அடித்ததையும், பொது புத்தியும் எளிய உண்மையுணர்வும் மட்டுமே கொண்டவன் இவற்றிலிருந்து கூட சிறு மலர்களைப் பூக்க வைத்துக் காண்பிப்பதையும் இன்று எல்லாத் துறைகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தத்துவம் எவ்வளௌ முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனிதப்பண்பு என்றாகிவிட்டது. தத்துவம் ஏட்டிலிருந்து மண்ணிலிறங்க வேண்டிய நற்பண்பை தத்துவம் அளிக்க இயலவில்லை என்றும் ஆகிவிட்டது. எளிய நற்பண்புகளிலிருந்து அகமலர்ச்சி என்ற தளத்திற்கு விரியும்போது தத்துவத்திலிருந்தும் புற உலகத்திலிருந்தும் அவன் சுவீகரித்துக் கொள்ளும் உண்மைகளும் அதன் ஆற்றலும் மிக அதிகமாகவே இருக்கும். இந்த வளர்ச்சியை அடைந்து மனிதராசி முழுமையும் அதன் பயனைப் பெறவேண்டும் என்பதே தளையசிங்கத்தின் குறிக்கோள்.

தளையசிங்கத்தின் சிந்தனைகள் எந்த அளவுக்கு நிறைவேற்ற சாத்தியம் கொண்டவை?

இன்று இவரது சிந்தனைகள் 'உட்டோப்பியா' என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியவை. 'மண் வாடையற்ற கனவு' என்ற அர்த்தத்தில் நான் இதைப் பயன்படுத்தவில்லை. மு. வ. வின் கி. பி. 2000 மோ அல்லது வ. ரா. வின் 'கோதைத் தீவு' வரிசையிலோ போகக்கூடிய கற்பனைச் சிறகடிப்புகள் அல்ல தளையசிங்கத்தின் சிந்தனைகள். தம் காலத்திய உலகு பற்றிய பிரக்ஞையுடன் அறிவு வாதங்களுக்கும் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இந்த உட்டோப்பியாவை முன்வைத்திருக்கிறார் தளையசிங்கம். எந்தக் கோட்பாடுமே அது வாழ்வில் அமுலாவதற்கு முன் அதன் நடைமுறை சாத்தியமற்ற பகுதிகளை சிலிர்த்துக் கொண்டு நிற்கும். நாம் விழுந்து கிடக்கும் பள்ளமோ சிறு லட்சியங்களைக் கூட அமல்படுத்த இயலாது என்ற மனச்சோர்வைத் தருவதாக இருக்கிறது. ஞானிகள் பெற்ற சத்திய எழுச்சியை முழு மனித குலமும் பெற வேண்டும் என்ற லட்சியம், செல்லவேண்டிய பாதைகள் பற்றிய விபரிப்போ குறிப்போ அற்ற நிலையில் கனவாக நிற்கிறது. எங்கு ஆரம்பித்து என்னென்ன செய்து எவ்வழி சென்றால் லட்சிய நிறைவேற்றம் பெற முடியும் என்ற திகைப்பு ஏற்படுகிறது. கருத்துகளை மனித மனங்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகங்கள் முற்றாக அழுகிப்போய் விட்ட நிலையில் எவற்றை நம்பி இயக்கத்தை ஆரம்பிப்பது? இந்த நடைமுறைப் பிரச்னைகளை தளையசிங்கம் எதிர் கொண்டதாகத் தெரியவில்லை. ஆத்மார்த்தமான மனங்கள் பிரக்ஞையின் தீவிரத்தை உணரும்போது ஏதோ ஒரு மையத்திலிருந்து இயக்கம் ஆரம்பம் கொண்டு அதன் பார்வை விகாசத்தினால் பற்றிப் படரும் என அவர் கருதியிருக்கக் கூடும். அவரது வாழ்க்கக் குறிப்பும் அவர் பின்பற்றிய நடைமுறை இதுதான் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

பிரபஞ்ச உணர்வுகள் ஞானிகளுக்கு அடுத்தாற்போல் படைப்பாளிகளிடமே வெளியாகும் என அவர் கருதியதால் இலக்கியம் பற்றிய தன் எண்ணங்களையும் வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் காலத்தில், உள்ளுணர்வுகள், அறிவுவாதம் இவற்றின் பலத்தை ஆதாரமாகக் கொண்டு பிரத்தியட்ச உலகம் சாராத கற்பனைகளை ஒதுக்கி நடைமுறை வாழ்வு உண்மையின் தளத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்கிறார். இவ்வாறு தனது புதிய இலக்கியக் கோட்பாட்டை தளையசிங்கம் வரையறுக்கும்போது இன்று வரையிலும் வந்து சேர்ந்துள்ள இலக்கியம் இவ்வுண்மைகளை பின்பற்றி இயங்காதது மூலம் உலகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் 'மெய்யுள்' சார்ந்த வழியிலேயே இயங்கியிருந்தால் பெரும் ஆக்கங்கள் ஏற்பட்டிருக்கும் என்று இவர் நம்புகிறார். இந்நிலை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

இலக்கியத்துக்கு வாழ்க்கைதான் அடிப்படையாக இருக்கிறது. பயணங்கள் வாழ்வின் தளத்திலிருந்து தான் மேற்கொள்ளப்படுகின்றன. கலைஞரின் ஆற்றலுக்கு ஏற்ப, உள்ளுணர்வுகளுக்கும் புற அறிவுக்கும் ஏற்ப யாத்திரை விரிவடைகிறது. சுய அனுபவத்திலிருந்து சுய அனுபவத்தின் தெளிவற்ற கோலத்திலிருந்து; முன்னுக்குப் பின் முரணான கோலத்திலிருந்து, முழுமையற்ற கோலத்திலிருந்து உண்மைகளைத் தேடித் தொகுத்து வாழ்க்கை பற்றிய தன்பார்வையை முன் வைத்துச் செல்லும் யாத்திரை இது. இவ்வாறான தொகுப்புக்கு கற்பனையின் தீண்டல் தவிர்க்க முடியாதது. இவ்வாறு நிகழவில்லை என்பதில்தான் படைப்புக் கற்பனையே தவிர 'நிகழ்ந்ததில் நான் கண்டது இதுதான்' என்று ஆசிரியரின் கூற்றில் இது தான் அவனது அனுபவ உண்மை. புற உலகம் அதன் தெளிவற்ற நிலையில் தறிகெட்ட கற்பனையாகவும், படைப்பு உலகம் அதன் - தெளிவற்ற - நிலையில் கலைஞனின் உண்மையாகவும் பார்வையால் கூடும் ஒருமை உணர்ச்சியில் உண்மையாகவும் நிற்கிறது. படைப்பு, சரித்திரம் அல்லதான். ஆனால் சரித்திரம் எப்போதும் இலக்கியப் படைப்புக்களில்தான் மனிதத்தன்மை பெறுகிறது. ஒரு தேசத்தைப் பற்றிய புரிதலில் சரித்திரம் தராத ஒரு பரிமாணத்தை இலக்கியம் எப்போதும் தந்து கொண்டிருப்பது இதனால் தான். இதெல்லாம் பெரிய இலக்கியங்கள் சார்ந்து பேசப்பட வேண்டியவை. அதாவது இலக்கியம் சார்ந்து பேசப்பட வேண்டியவை. இலக்கியம் போன்றவை சார்ந்து பேசப்பட வேண்டியவை அல்ல.

இலக்கியம் சார்ந்து பேசப்படும் போது உண்மையின் தொகுப்புக்கு கற்பனையைச் சார்ந்து நின்ற கலைஞர்களை 'மெய்யுள்' முன்னால் வைத்து பின் தள்ளுவது சாத்தியமற்றதாகவே இருக்கிறது. 'மெய்யுள்' வரையறுக்கும் கருத்தோட்டம் இலக்கியத்தைப் போலி செய்யும் எழுத்துக்களுக்கு முன்னால்தான் வலுப்படக்கூடியது. இங்கு கற்பனை இலக்கிய நோக்கத்திற்கு நேர் எதிரான நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெய்யான கலைஞன் வாழ்வின் சத்தியத்தைத் தொகுத்து மயக்கத்தை அகற்றும்போது, போலி வாழ்வின் தெளிவற்ற நிலையைப் பயன்படுத்தி அவற்றின் கனவைக் கலந்து மயக்கங்களை உருவாக்குகிறான். இப்போலிகள் தங்கள் கீழான தொழிலை உதறி அன்றாட வாழ்வைச் சார்ந்த பொருள் பொதிந்த நிகழ்வுகளைத் தேர்ந்து அவற்றை உண்மையின் தளத்தில் வைத்து ஆராய முற்படுவார்கள் என்றால் அவை சமூக ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியதாக இருக்கும். நாம் படித்துப் பார்க்கக்கூடியதாகவும் இவை இருந்துவிடக்கூடும். தளையசிங்கமே எழுதிக் காட்டியுள்ள 'கலைஞனின் தாகம்' என்ற நாவல் எப்படி சாதாரண உலக நிகழ்வும், கற்பனை தவிர்த்து, உண்மையின் தளத்திற்கு நகர்த்தப்பட்டு விருப்பு வெறுப்பற்ற மனங்களின் ஆராய்வுக்கு உட்படும்போது முகத்திரைகள் வரிசையாகக் கிழிபட, கண்டுபிடிப்புகள் வெளிப்படுவதிலுள்ள 'உயர்நிலைப் பரபரப்பு' ஏற்படுத்தச் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் இதுபோன்ற முயற்சிகள் பெரிய குரல்கள் சாதித்துள்ள கற்பனை சார்ந்த படைப்பின் முன்னால் பி தங்கியே நிற்கும். ஏனெனில் மெய்யுளில் ஆராய்வு இருக்கின்ற அளவு புனர்ப் படைப்பு இல்லை. புனர்ப்படைப்பு கற்பனையின் துணை இழந்து நிகழ்த்தக் கூடியதும் அல்ல.

இனி உருவ உள்ளடக்கங்கள் பற்றி, உள்ளடக்கமே உருவத்தை தீர்மானிக்கிறது என்ற சரியான நிலையிலிருந்து தன் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு போகிறார் தளையசிங்கம். சோவியத்தில் புரட்சிக்குப்பின் புதிய உருவங்கள் ஏற்படாததால் அங்கு புதிய உள்ளடக்கமும் ஏற்படவில்லை என்ற முடிவுக்கு வந்து கலையில் புதிய உள்ளடக்கத்தையும் அதனால் புதிய உருவத்தையும் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்த்தாது என்றும், சிந்தனையில் ஏற்படும் புரட்சியே இலக்கியத்திலும் புரட்சி ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார். இவர் ஒரு விமர்சகனாகச் செயல்படுவதில் முழு முனைப்புக் கொண்டவரல்லர். இலக்கிய விமர்சனத்தில் ஆரம்பித்து தத்துவவாதியாக உருக்கொள்ளும் திசையே இவருடைய போக்கு. இலக்கிய படைப்புக்கள் பற்றிய இவரது முடிவுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள முடியாத படியே இருக்கின்றன. இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

படைப்பின் உள்ளடக்கத்தை அலசி ஆராயும் முடிவுகள் சிந்தனை உலகைச் சர்ந்த விஷயம். இலக்கிய விமர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது, உள்ளடக்கத்தைப் பார்ப்பதாகுமே தவிர, படைப்பைப் பார்ப்பது ஆகாது. உள்ளடக்க ஆராய்ச்சியில் படைப்பு கீழ்நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுதி புதிய வடிவம் எடுத்து விடுகிறது. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் இதன் கூறுகளைப் பிரிக்க முடியாது. இம் முழுமையை மறந்து படைப்பின் உள்ளடக்கத்தை மட்டும் கருதி ஒரு படைப்பை உள்ளடக்கத்தில் கொள்ளும் கருத்து வேற்றுமையினால் கருத்தொருமை கொண்ட மற்றொரு படைப்பை முன் படைப்புக்கு மேலாக வைப்பதும் விமர்சனத் தளத்தில் மிக தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். சத்திய எழுச்சியின் தோற்றத்தை ஜெயகாந்தன் வெளிப்படுத்துகிறார் என்ற முடிவில் நின்று, நிதர்சனத்தின் அவலத்தை முன் வைத்த 'புதுமைப்பித்தனை' முன்னவரிற் பின்னே தள்ளுவது ஒரு உதாரணம். சத்தியத்தின் தளத்தில் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத கலை உறவையும் தனது விருப்பங்களை புற உலகில் படியவைத்து கதைகளை 'உருவாக்கும்' ஜெயகாந்தனுக்குமுள்ள வேற்றுமை அறியாமல் போனது உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்து படைப்பை மதிப்பிட்டதில் பெற்ற கோணலாகும்.

ஒரு விவாதத்திற்கான குறிப்புகளாக இந்த எண்ணங்களை முன் வைத்திருக்கிறேன்.

(1982-ஆம் ஆண்டு கோவை, 'இலக்கு' மகாநாட்டில் படித்தது.

----------------------------------------------------------------------

மு. பொன்னம்பலம்:-

மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்

இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்?

இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யும் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறார்? வாழ்க்கையில் நடை பெறுகின்றனவா? என்று கேட்கும் புதுச் சூழல் இன்று.

உனது வாழ்க்கையை எப்படிக் காண்கிறாய்?

உனது வாழ்;க்கையைப் பொது வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற பார்வை வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வையின் வலு புதுக் கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறது.

அந்தப் புது முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறுகின்றன. வாழ்க்கையே கலை: வாழ்க்கையே பேர் இலக்கியம். இதை ஆற்றுப்படுத்தகிறது இன்றைய மெய்முதல்வாதப் பெருந் தத்துவம்.

இந்த மெய் முதல் வாதப் போக்கின் பிரகடனமாகவே திரு மு. தளையசிங்கள் அவர்களின் இம் மெய்யுள் தொகுப்பு வெளிவருகிறது.

இது அவரின் மூன்றாவது நூல்.

முதலாவது 1965 இல் வெளியான ' புதுயுகம் பிறக்கிறது.

இரண்டாவது 1970 இல் வெளியான 'போர்ப்பறை'. 'மெய்யுள்' 1974 இல் வெளியாகிறது,

இம் மூன்றுமே நூல்களுக்கிடையே உள்ள முக்கியத்துவம் சுவையானது.

மூன்றுமே மெய்யை - சத்தியத்தை - அழுத்திய நூல்கள் தான்.

ஆனால், அழுத்தம் பெற்ற விதங்கள் ஒவ்வொன்றிலும் வேறாகியும், தொடர்புபட்டும் ஒரு தத்துவ முழுமையாகிப் பரிணமிக்கின்றன.

தன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளொதுங்கிய போக்கு 'புதுயுகம் பிறக்கிறதின்' கடைசிக் கதையான 'வெளி' க்குரியதென்றால், சகலத்தையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு 'போர்பறை' நூலுக்குரித்தாகிறது.

'மெய்யுளோ' சகலதின் இயக்கங்களையும், அவற்றின் இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்தி காட்டுகிறது. 'போர்ப்பறை' விரித்த தத்துவத்தின் பிரயோகப்படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.

இந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்ங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.

குணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப 'நான்' நடத்தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ- அசுர, தர்ம-அதர்ம, நல்ல-தீய, தொழிலாளி-முதலாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங்களின் தோன்றுகின்றன.

குணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக்குள் இருக்குமு; முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும் தொழிலாளிகளையும் பொதுவுடமை வாதிகள் அறியப் போவதில்லை.
அதனால் தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமாகத் தேங்குவதற்கும், தொழிலாளர் சர்வாதிகாரம் சோஸலிசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் பொதுவுடைமை வாதிகள் அறியவதில்லை.

பொதுவுடைமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.

'மெய்யுளின்' வருகை பொதுவுடைமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதே வேளையில், அதன் தேக்கத்துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க இயக்கவியல் வரையறைகளையும் தகர்த்துவிடுகிறது.

இதன் மூலம் பொதுவுடைமைப் போக்கே விடுதலை பெறுகிறது.

விடுதலை பெறும் பொதுவுடைமைப் போக்கு, பூரண சர்வோதய எழுச்சிக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக மெய்முதல்வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

மு. த. தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஆத்மீகத் தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுக்கப்பட்ட தினத்தையும் அடிக்கடி நினைவுகூருவார்.

தீட்சை கொடுத்தவர் இருபதாம் நூற்றாண்டின் பேரவதாரமான பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி.

தீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினம். கூடவே இந்தியா விடுதலை பெற்ற தினமுமாகும். (1966-யுரபரளவ 15)

இந்திய விடுதலைப் போராட்டம் சாதாரண தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஞானிகளால் முன்னின்று நடத்தப்பட்ட அப்போராட்டம், "உலகின் ஆன்மீக விடுதலைக்காக இந்தியா நடத்திய முதல் புரட்சி" என்றே அரவிந்தர் அதைக் குறக்கிறார்.

காந்தியின வருகைக்கு முன், இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அரவிந்தருக்குச் சிறையில் விவேகானந்தர் தோன்றி 'பேர்மனம்' பற்றி விளக்குகிறார்.

வெளியே சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருக்க, அதன் ஆன்மீக கொள்ளை விளக்கம் அரவிந்தருக்கு உள்ளே நடைபெறுகிறது.

உடல், உயிர், மனம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய மனித பரிணாமம் பேர்மனம் ஆகிற அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதை அரவிந்தர் சிறையை விட்டு விடுதலை பெற்று வெளியே வந்து பிரகடனப் படுத்துகிறார்.

அந்தப் பேர்மன வளர்ச்சியின் பரவலான எழுச்சிக்குச் சர்வமத ஞானமே அடிப்படை என்பதன் வலியுறுத்தலே நந்தகோபாலகிகரி என்ற பேர் அவதாரமாகும். விலேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண அவதாரம் அருட்டிவிட்டுச் சென்ற சர்வமத ஐக்கியத்தின் முற்றிய தொடர்ச்சி.

'சர்வ மதங்களும் சமமானவையல்ல, எல்லாம் ஒன்றே' என்ற ஞானம், சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசாரம் ஆணவத் தடைகளை அறுப்பதோடு, அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளை நிலை நாட்டவும் சகல மக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப்படுத்தவும் அது தானாகவே தூண்டுகிறது.

இத்தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதி கண்ட கிருதயுகம். பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் சீடன். அரவிந்தரோடு உறவாடியவன்.

இந்த ஆன்மீகச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு. தளையசிங்கம் திகழ்கிறார்.

அவர் நூலின் முக்கியத்துவத்தையும், இதன் அடிப்படையிலேயே நோக்கவேண்டும்.
அரவிந்தர் மனதின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி பற்றியும் பேர்மன உச்சங்கள், அதன் கீழ் இடைத்தர உட்சுழிவுகள் பற்றியும் எழுதியுள்ள அளவுக்கு, இன்றைய இடைப்பட்ட நிலையில் பேர்மனதை நோக்கி மனித குலத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய சமூக, பொருளாதார, அரசியல் தத்துவ இயக்கவியல் பற்றி எழுதுவதைத் தன் பணியாகக் கொள்ளவில்லை.

அந்தப் பணிக்குரிய தத்துவ வார்ப்பாகவே து. த. வின் 'போர்ப்பறையும்', 'மெய்யுளும்' வெளிக்காட்டப் படுகின்றன.

அதனால்தான் மு. த. வின் பூரண சர்வோதயக் கோட்பாட்டை இன்றைய நியோமார்க்ஸிய, எக்லெட்டிச போக்கு களோடு ஒப்பிடும் சில மார்க்ஸிய வாதிகளின் அர்த்தமற்ற பார்வை சிரிப்புக்கிடமானதாக அமைகிறது.

மத ஸ்தாபனங்களை மத உண்மைகளாக மாறாட்டம் செய்து புறூடன், ஹெகல் என்று பலரின் சிந்தனைகளைத் தனது மாறாட்ட அறியாமைக்கேற்றவாறு ஒத்திசைவித்த மார்க்ஸின் தத்துவம் ஒருவேளை எக்லெட்டிசத்துக்குக் கிட்டே வந்தாலும் 'உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இனிப் பேர்மனமாக வளரப் போகிறது' என்ற போஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை அப்படி நினைப்பது தத்துவம் பற்றிய அறியாமையேயாகும்.

சகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோதய மாற்றத்துக்க ஆற்றுப்படுத்துவதே மெய் முதல் வாதம்.

அந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில் கலை, இலக்கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய்யுள் உருவம் அப்புரட்சியைத் தொடக்கி வைக்கிறது.

அப்புரட்சி எழுத்தில் மடடும் உன்னத இலட்சியங்களையும், கலைப்பரவசத்தையும் 'படைத்து' விட்டு வாழ்க்கையில் அவற்றுக்கு முற்றும் மாறாக வாழும் இன்றைய கலை இலக்கிய கர்த்தாக்களின் போக்கைத் தகர்த்துவிடுகிறது.

இத்தகர்ப்பு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட்சியங்களின் கூடாராமாக, வாழ்க்கையின் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.

இதன்மூலம் கதை, கட்டுரை, கவிதை என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.

இந்த விடுதலை சகலரையும் கலைஞர் ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கியமாக்கிறது.

இந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே 'கலைஞனின் தாகம்' மெய்யுள் அமைகிறது.

இத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம் இன்றைய இலக்கியத்தை எழிக்கும் இலக்கியமாகவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும அதேவேளையில் வாழ்க்கையையே கலையாகக் காணவைக்கும் சாதனமாகவும் அச்சாதனையின் மூலம் கலை இலக்கியத்தின் உச்சதரிசன வெளிக்காட்டலாகவும் அமைகிறது.

அதனாற்றான் மெய்யுள் உருவம் பழைய இலக்கிய உருவங்களின் உடைப்பாகவும், அதே வேளை அவற்றின் கலப்பாகவும், அவைக்கும் அப்பாற்பட்ட மெய்-றியலிச (மெய்- சுநயடளைஅ)இ பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்.

இம் மெய்யுள் தொகுப்பிற் காணப்படும் 'மெய்யும் உள்ளும் மெய்', 'பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்' ஆகிய இரண்டும் மெய்யுள்களைத் தவிர மற்றவை எல்லாம் 1972 இன் கடைசிக் காலங்களில் எழுதப் பட்ட
வையாகும். 'மெய்யுள் உள்ளும் மெய்' 72 ஜூன் 'மல்லிகை' யில் வெளிவந்தது. 'பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 71 'சத்தியம்' இதழில் வெளிவந்தது., வர்க்கவியலும் குணவியலும், என்பது கலை, தொழுகை, சத்தியம்' என்ற தலைப்பில் சிறு நூலாக எழுதப்படவிருந்த மெய்யுளின் ஆரம்பக் குறிப்பே, 'கலைஞனின் தாகத்தின்' கடைசிப்பகுதி (அதாவது யு-2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரியரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவேற்றப்படாததால் அதற்கு ஆசிரியர் போட்டிருந் குறிப்புகளோடேயே அது நிறைவு பெறுகிறது.
மு. த. வின் மெய்யுள்களில் காணப்படும் நல்லசிவம் ஒரு கற்பனை பாத்திரமல்ல. அவரது வெளி மனதுக்கு அகத்தின் ஆன்மீக உந்துதல் தூதனுப்பிய தூய உள்ளுணர்வே நல்லசிவம். அரவிந்தரின் வார்த்தையில் சொல்வ தானால் அந்த உள்ளுணர்வை "ழுஎநச ஆiனெ" என்று அழைக்கலாம்.

அதனால், நல்லசிவம் ஆத்மீக உண்மைக் கெதிரான எந்தச் சிறுமைகளை, தடைகளையும், மாயைகளையும் உடைக்கும் நித்திய இயக்கமாகவே திகழ்கிறான்.

அந்த நல்லசிவத்தின் குரல் உங்களுக்குள்ளேயும் கேட்கிற காலம் தொடங்கிவிட்டது. இதோ அவன் உங்களுக் குள்ளே குரல் எழுப்புகிறான்

சத்தியச் செங்காவலர் வருகிறார்.

தயார்ப்படுங்கள், தயார்ப்படுங்கள் !

உங்கள் கட்டுக்களைக் கலைக்கத் தயார்ப்படுங்கள்!

காலங்காலமாய் கலை இலக்கியம்மென்றும், கட்டுரையென்றும், கட்டுக்கதை, கவிதை என்றும் எழுதியும் அவை உங்கள்-

சுயநலக் கட்டுக்களை அறுக்கவில்லை.

தூக்கத்தைப் போக்கவில்லை.

கனவுகளைக் கலைக்கவில்லை.

மாறாகக் கட்டுக்;களோடு இன்னொரு கட்டு

கலை இலக்கியன் கட்டு!

இவற்றைக் கலைக்கச் செங்காவலர் வருகிறார்.

எழுதியபடியும் சொன்னபடியும் வாழாத நீங்கள் சத்தியத்துக்கெதிரான திரிபுவாதிகள்.

'நான்' ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்.

உங்களை விசாரிக்கக் கலை இலக்கியச் செங்காவலர் வருகிறார்.

அவர் நடத்தும் ஆத்ம கலாசாரப் புரட்சியில் உங்கள் கலை இலக்கியக் கறுப்புச் சந்தைத்தனம் கலைபடப் போகிறது. அந்தக் கலைப்புத்தான் இனிவரும் இலக்கியம். கலையை அழிக்கும் கi. இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.

தயார்ப்படுங்கள் ! தயார்ப்படுங்கள் !!

(மெய்யுள் என்ற தளைய சிங்கத்தின் நூலுக்கு 1974-ல் எழுதப்பட்ட முகவுரை)

--------------------------------------------------------------------

தளைய சிங்கத்தின் நூல்கள்

சமுதாயம் பிரசுலாய வெளியீடுகள்

* ஒரு தனி வீடு
* புதுயுகம் பிறக்கிறது

அச்சில் (ஜூலை 85)

போர்ப்பறை
மெய்யுள்
கலைஞனின் தாகம்
கல்கி புராணம்
யாத்திரை

கிரியா வெளியீடுகள்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி
முற்போக்கு இலக்கியம்

-----------
பாரிஜாதம் அச்சகம், கோவை - 15

-----------------------------------------------------------------