கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கைலாயமாலை  
 

முத்துராச கவிராசர்

 

கைலாயமாலை

முத்துராச கவிராசர்

--------------------------------------------

முத்துராச கவிராசரின்
கைலாயமாலை

உரையாசியர்:
இராஜராஜேசுவரி கணேசலிங்கம்
பீ. ஏ. (சிறப்பு). எம். லிற்

பதிப்பாசிரியர்:
மயிலங்கூடலூர் பி. நடராசன்


வெளியீடு:
செட்டியார் அச்சகம்,
காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

-----------------------------------------------------------------

KAILAYAMALAI
By poet Muthuraja

- A Legend in Tamil

Commentary & Synopsis:
Mrs. R. Ganeshalingam, B.A.(Hons) m.

Translation in English:
Navalarkoddam A. Mootootambypillay

Editor:
Mailangoodaloor P. Nadarajah

Publisher:
Chettiar Press,
K. K. S. Road,
Jaffna.


சுழிபுரம்
வள்ளியம்மை முத்துவே
அவர்கள் நினைவுக்குச்
சமர்ப்பணம்.

முதற்பதிப்பு:
1983-02-26

விலை: ரூபா 5/=

--------------------------------------------------------

பதிப்புரை

ஈழத் தமிழரின் வரலாற்றைக் கூறும் ஈழத்துத் தமிழ் வரலாற்று நூல்கள் சிலவே. அவற்றுள்ளும் கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை என்பனவே இன்று எமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளன. எனினும் வைபவ மாலையே பெரிதும் பயின்று பல பதிப்புக்கலைக் கண்டது. சூல சபாநாதன் 1949,1953 ஆம் ஆண்டுகளில் இரு பதிப்புக்களை வெளியிட்டார். கலாநிதி க. செ. நடராசா வையாபாடலை 1980 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

முத்துராச கவிராசா இயற்றிய கைலாயமாலையை முதன் முதலாக 1906 ஆம் ஆண்டு நாவலர் மருகர். த. கைலாசபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் யாத்த கைலாசப் பிள்ளையார் ஊஞ்சலும் இதனுடன் இணைத்து வெளி யிடப்பட்டது.

பின்னர் கதிரைமலைப்பள்ளு, தண்டிகைக் கனகராமல் பள்ளு முதலிய ஈழத்து இலக்கியங்களை வெளியிட்ட தெல்லிப்பழை, சட்டத் தரணி வ. குமாரசுவாமி பீ. ஏ. அவர்கள் இந்நூலை வெளிவிட முயன்று வந்தார். அவர்கள் நூல் தொடர்பான ஆராய்ச்சிக் குறிப்புக்களை எழுதுவதில் ஈடுபட்டிருந்தபோது அமரரானார். வ. குமாரசுவாமி அவர்களது நூல்களைத் தமிழகத்தில் வெளியிட்ட திருமயிலை, கே. வே. ஜம்புலிங்கம்பிள்ளை அவர்களுடைய வேண்டு கோட்படி குமாரசுவாமி அவர்களது புதல்வர் கு வன்னிய சிங்கம் அவர்கள் (கோப்பாய்த்தொகுதி முன்னான் பா. உ) கைலாயமாலைக்குக் குறிப்புரை, ஆராய்ச்சியுரை என்பவற்றை எழுதுவித்தார். குறிப்புரையைக் குமாரசுவாமி அவர்களின் மகளும் B. A. (Hons.), M. Litt. பட்டதாரியுமான திருமதி இராஜராஜேசுவரி கணேசலிங்கம் எழுதினார். வரலாற்று அறிஞராகன செ. இராசநாயக முதலியார் ஆராய்ச்சியுரையை எழுதினார். இவற்றோடு தமிழறிஞர்நாவலர் கோட்டம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் 1917 இல்? வெளியிட்ட பதிப்பிற்கு எழுதிய ஆங்கிலப் பொழிப்புரையையும் சேர்த்து திருமயிலை, கே. வே. ஜம்புலிங்கபிள்ளை அவர்கள் கைலாயமாலையை 1939 ஆம் ஆண்டு சென்னை, சாந்தி அச்சுக் கூடத்தில் வெளியிட்டார்கள்.

ஜம்புலிங்கம்பிள்ளை அவர்கள் பதிப்பின் பிரதிகள் இன்று அருகி, கைலாயமாலை கிடைப்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில் இப்புதிய பதிப்பு வெளிவருவது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது. இந் நூல் தமிழ் மாணவருக்கும் வரலாற்று ஆய்வாளருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பயன் தரவல்லது. தமிழ் கூறும் நல்லுலகம் இதனை உவந்தேற்கும் என்பது உறுதி. இந் நூலக்குத் தாம் எழுதிய குறிப்புரையையும் பொழிப்புரையையும் இப் பதிப்பிற் சேர்த்துக்கொள்ள இசைவளித்த திருமதி இராஜராஜேசுவரி கணேசலிங்கம் அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றி. நல்லூர் த. கைலாயசபிள்ளை அவர்கள் பதிப்பித்த நூற் பிரதியை அறிஞரும் சைவப்புலவரும் நூலாசிரியருமான க. சி. குலரத்தினம் அவர்களும் தென்மயிலை, ஜம்புலிங்கம்பிள்ளை அவர்கள் பதிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகர் சி. முருகவேள் அவர்களும் படியெடுப்பதற்கும் ஒப்புநோக்குவதற்கும் தந்துதவினார்கள்.

இந் நூலைப் பதிப்பிப்பதற்கு வேண்டிய ஆலோசனைகளை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சமஸ்கிருதத் துறைத் தலைவர் வி. சிவசாமி அவர்களும் இந்து நாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் அவர்களும் பலாலி ஆசிரியர் கழக விரிவுரையாளர் க. சொக்கலிங்கம் அவர்களும் வழங்கினார்கள் இந் நூலில் வெளியாரும் ஆய்வுரையைப் படித்து வேண்டிய திருத்தங்களை யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பொ. இரகுபதி எம். ஏ. அவர்கள் எடுத்துரைத்தார்கள். செல்வி திருமகள் பரநிருபசிங்கம் இந் நூல் முழுவதையும் கையெழுத்துப் படியாக ஆக்கித் தந்ததோடு அச்சுப்படிகளைத் திருத்துவதிலும் துணைசெய்தார். இவர்கள் அனைவரும் செய்த உதவிகளுக்கு எமது நன்றி உரித்தாகிறது. தரமான விஞ்ஞான நூல்களை வெளிட்டுவரும் செட்டியார் அச்சகத்தினர் இந்நூலை வெளியிட முன்வந்தனர். இந்நூலை அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ள செட்டியார் அச்சகத்தினர்க்கு. சிறப்பாக அச்சகப் பங்காளர் திரு. இ. சங்கர் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி கூறும்.

பதிப்பாசிரியர்

'திருப்பெருந்துறை'
102, செம்மணி வீதி,
நாயன்மார்கட்டு,
யாழ்ப்பாணம்.
1981-02-26

-------------------------------------------------------

கைலாயமாலைக்குப்
புதிய ஒளி

ஈழத்துத் தமிழ் வரலாற்று நூல்கள்

ஈழத்துத் தமிழரின் வரலாற்றைக் கூறும் நூல்களில் கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய மூன்றும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் வைபயாபாடல் காலத்தால் முந்தியதென்பர் சிலர். எனினும், இன்றைய வடித்தில் அது கைலாயமாலையை விடக் காலத்தால் முந்தியதல்ல. கதிரைமலைப் பள்ளைப் போலவே வையாபாடலும் வன்னி நாட்டிற் பெரிதும் பயின்றுவந்துள்ளது. எனவே, கதிரைமலைப் பள்ளு (கதிரையப்பர் பள்ளு-முள்ளியவளை அரியகுட்டிப்பிள்ளை தொகுப்பு.) அடங்காப்பற்றில் அடைந்த புறவேற்றுமைத் திரிபுகள் போல வையாபாடலும் 'வாய் மொழி' நிலையில் பல மாற்றங்களை அடைந்துள்ளது. கைலாயமாலையும் வையாபாடலும் முறையே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நிகழ்ந்த குடியேற்றங்களை முதன்மையாகக் கூறுவதால் ஒரு நூலின் இரு பகுதிகளாகக் கொள்ளத் தக்கன. யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாண வரலாற்றைக் கால வரன்முறைப்படுத்திக் கூறும் நூலாகும். வைபவமாலையிலும் பல இடைச் செருகல்கள் உள என்பர்.

கைலாயமாலை ஆசிரியர்

ஈழத்துத் தமிழர் வரலாற்றைக் கற்பனைப் புனைவுகளின்றிக் கைலாயமாலை கூறுகிறது. இந்நூலை உறையூர்ச் செந்தியப்பன் மகன் முத்துராசன் எழுதியதாக நூலின் பின்னிணைப்பு வெண்பா கூறுகிறது. இவர் வரலாற்றாள ரெனினும் ஆற்றல் வாய்ந்த கவிஞராகவே மேலோங்கி நிற்கிறார். நூல் கலிவெண்பா யாப்பினால் ஆனது: காப்பு நீங்கலாக 310 கண்ணிகளைக் கொண்டது. மெய்க்கீர்த்தி மாலை, உலா என்ற நூல்வகைகளின் பாடு பொருளும் யாப்பும் இணைந்த கலவையாக நூல் அமைந்துள்ளது.

நூலெழுந்த காலம்

முத்துராச கவிராசரின் காலத்தை உறுதியாகக் கூறக் கூடிய அகச்சான்று எதுவுமில்லை. யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில்வாகனப் புலவர் கைலாயமாலையை முதல் நூலாகக் கொண்டாரென வைபவ மா லையின் சிறப்புப் பாயிரம் கூறுவதால் இது கி. பி. 1736க்கு முன்னர் எழுதப்பட்டது என இதன் மேல் எல்லையை வரலாற்றறிஞர் கொள்வர் முதலியார் இராசநாயகம் (கைலாயமாலை, ஆராய்ச்சி முன்னுரை, பக். ஐஏ, 1939)
"1604 க்கும் 1619 க்கும் இடைப்பட்ட காலத்தில்
(நல்லூர்க் கைலாசநாதர்) கோவிலுங் கட்டி,
நூலம் எழுதப்பட்டதெனக் கொள்ள வேண்டும்"
என்பர். ஈழத்தறிஞர் பலரும் முதலியாரின் இக் கருத்தை ஒப்புக் கொள்கின்றனர். எனினும், தமிழக அறிஞரான கே. சேசாத்திரி (இராமேஸ்வரம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், பக் 186,க ) 1975 கைலாயமாலையின் காலம் 15 ஆம் நூற்றாண்டென்பர். முதலியார் இராசநாயகம் கி. பி. 1604 க்குப் பின் கோவில் கட்டப்பட்டதென்பதற்கு. சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பி (கை. மா. கண்ணி 234) என்ற தொடர் ஆதாரமென்பர். இதில் வரும் சேதுபதி "இராமநாதபுரத்து மன்னராகிய சேதுபதி என்றே கொள்ளக் கிடக்கிறது. உடையான் சேதுபதியெனப் பெயர் பூண்ட சடையக்கதேவரே முதல் இராமநாத புரத்துக்குத் தலைவராக மதுரை நாயக்கரசனாகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கி. பி. 1604 இல் நியமிக்கப்பட்டனர். அச் சேதுபதியென்னும் பெயர் இந்நூல கத்துக் குறிக்கப்பட்டதென்பது தெளிவு" (கை. மா. பக். III) என்பர்.

ஆனால், சேசாத்திரி (~. சிறப்பு மலர் பக். 186 g.) பரராசசேகரன் கி. பி. 1414இல் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலைக் கட்டுவதற்குத் திருகோணமயிலிருந்து வெட்டிச் சீராக்கப்பட்ட கற்களை அனுப்பியதாகக்கூறி, சேதுபதிக்கும் 15 ஆம் நூற்றாண்டுக் குரிய யாழ்ப்பாண அரசர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை விளக்குவார். கலாநிதி யேம்சு டேர்சஸ் (Indian Antiquary Vol. XII) கி. பி. 1434 இல் வாழ்ந்த உடையார் சேதுபதி பற்றிக் கூறுவார். சேதுபதிகள் பாண்டி மறவர்கள். அவர்கள் சேதுபதி என்ற விருதைத் தொடர்ந்தும் கொண்டிருந்தார்கள் என ஆய்வாளர் கூறுவர். (Rev. James Tracy, The Madras Journal of Literature and Science). எனவே, இராசநாயகம் அவர்கள் காட்டிய ஆதாரங்கள் வலுவிழக்கின்றன. "நல்லூர் கைலாச நாதர் கோவில் முதலாம் சிங்கையாரியன் காலத்தில் (கி. பி. 1260) கட்டப்பட்டது என்பதை மறுக்க எவ்வித ஆதாரமுமில்லை" என்பார் சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna, P. 194; 1978). எனினும், நூலெழுந்த காலத்தை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. வையாபாலிலும் (16 ஆம் நூ. ஆ.?) 'சேதுபதி' (செய். 38) வருவது நோக்கத்தக்கது.

நூல் நுவல் பொருள்

செகராசன் என்னும் சிங்கையாரியன் வரலாறும் நல்லூhக் கைலாசநாதர் ஆலயம் உருவான நிகழ்வும் நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. 47 ஆம் கண்ணியிலிருந்து 212 ஆம் கண்ணி வரை சிங்கையாரியன் வரலாறும் 213 ஆம் கண்ணியிலிருந்து நூல் முடிவுரை (310 ஆம் கண்ணி வரை) கைலாசநாதர் கோவில் அமைப்பும் குடழு குக்கும் கூறப்படுகின்றன. இதற்கு முன்னோடியாகக் கதிரைமலை அரசன் சோழன் மகளொருத்தியை மணந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற நிகழ்ச்சியும் அவர்களுக்கு மணம் முடித்ததும்

வரசிங்க ராயன் மகாராச ராசன்
நரசிங்க ராசனெனு நாமத் துரைசிங்கம்

கதிரைமலையில் அரசாண்டிருந்த போது யாழ்ப்பாணன் கவிபாடி யாழில் அமைவுற வாசித்து, யாழ்ப்பாண நகரைப் பரிசாகப் பெற்றதும் யாழ்ப்பாடி யாழ்ப்பாணத்திலிருந்து ஆட்சி புரிந்து மறைந்ததும் கூறப்படுகின்றன (கண்ணிகள் 1 -46) பின்னர் யாழ்ப்பாணம் அரசனின்;றித் தளம்பச் சிங்கையாரியன் யாழ்ப்பாணம் வந்து பாண்டிமழவன் முடிசூட்ட யாழ்ப்பாணப் பேரரசனாகிறான். வாலசிங்கன் பெயரோ மாருதப்புரவீகவல்லி பெயரோ இவர்களது பிள்ளைகள் இருவரும் ஒருவரையொருவர் மணந்ததோ, பாதி விலங்கு - பாதி மனித உருவோடு பிறந்ததோ இந்நூலிற் கூறப்படவில்லை. இங்கு வரும் வருணனையோடு மயில்வாகனப்புலவர் மகாவம்சத்துள்ள விசயன் கதையையும் பிற செவிவழிக் கதைகளையும் இணைத்து ஒரு புதிய வரலாற்றை அகில இலங்கை அடிப்படையில் புனைந்துள்ளார். என்றே தோன்றுகிறது. இவற்றைக் கைலாய மாலை மீதேற்ற எவ்வித ஆதாரமும் நூலகத்தில்லை.

முறைப்படி முடிசூடி நகரமைத்த சிங்கையாரியன் தனது ஆட்சியில் மேற்கொண்ட ஆட்சிமுறை ஏற்பாடுகள் நூலகத்தே கூறப்படுகின்றன. நல்லூh (புவநேகபாகு). திருநெல்வேலி (பாண்டி மழவன், செண்பக மழவன் முதலியோர்), மயிலிட்டி (நரசிங்கதேவன்), தெல்லிப்பழை (செண்பகமாப்பாணன், சந்திரசேகர மாப்பாணன், கனகராயன்), இணுவில் (பேராயிரவன்), பச்சிலைப்பள்ளி (நீலகண்டன் முதலியோர்), புலோலி (கனகமழவன் முதலியோர்). தொல்புரம் (கூபகாரேந்திரன், நரங்குதேவன்), கோவிலாக்கண்டி (தேவராசேந்திரன்), இருபாலை (மண்ணாடு கொண்ட முதலி), தென்பற்று, நெடுந்தீவு (தனிநாயகன்), வெளிநாடு (பல்லவன், பார்த்திவர் இருவர்) ஆகிய பிரிவுகளுக்கான தலைவர்களை நியமித்தமை முதலிற் கூறப்படுகின்றது. இவை நெடுங்காலம் தொடர்ந்து நிகழ்ந்த குடியேற்றங்களின் ஒன்றிணைந்த நினைவுத் தொகுப்பா என்பது ஆராயத் தக்கது. அடுத்ததாகத் தலையாரிகளையும் சேவர்களையும் சிங்கையாரியன் நியமித்தமை கூறப்படுகிறது. மேற்பற்று (வல்லிய மாதாக்கன்), வடபற்று (இமையாண மாதாக்கன்), கீழ்ப்பற்று (செண்பகமாப்பாணன்), தென்பற்று (வெற்றி மாதாக்கன்) ஆகிய பெரும் பிரிவுகளுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். வீரசிங்கனென்னும் படை வீரன் சேனைத் தலைவனாக நியமிக்கப்பட்டான். பிரிவுத் தலைவர்கள், பற்றுத் தலைவர்கள், படைத் தலைவர்கள் ஆகியோரை நட்சத்திரங்களாகவும், அரசனைத் திங்களாகவும் முத்துராசர் உவமிக்கிறார்.

புவநேகவாகு
இப்பகுதியில் புவநேகவாகுவைப் பற்றி நூலாசிரியர் கூறிய கருத்து மயில்வாகனப்புலவர் முதலியோரால் திரி புபடுத்தப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.
புவநேகவாகுவென்னும் போராமைச்சன் தன்னை
நலமேவு நல்லூரில் நண்ணுவித்து
என்றே கவிராசர் கூறுகிறார். ஏனையோருக்கு அரசன், பிரபு, வெள்ளாமரசன் முதலிய அடைகள் கொடுத்தது போலப் புவநேகவாகுவுக்குப் போரமைச்சன், இராசமந்திரி என்ற அடை கொடுக்கிறார். அரசன் அவனை அமைச்சனாக்கினான் என்று கவிராசர் எங்கும் கூறவில்லை. ஆனால், மயில்வாகனப் புலவர் புவநேகவாகு பற்றி ஒரு தொடர்கதையை உருவாக்குகிறார்:
"சிங்கையாரியராசன் மறுத்துப் பேசாமல் பாண்டி மழவன் கேள்விக்கு உடன்பட்டு,..... உத்தண்ட வீர சிகாமணி யாகிய புவனேகவாகு என்னும் மந்திரியையும்.........."
(யாழ்ப்பாண வைபவமாலை (1953) பக். 25)
"இங்ஙன மிருக்கையில், ஒரு நாள் புவனேகவாகுவுடன் ஆலோசித்துச் சிங்கையாரியன்....."
(மேற்படி பக். 27)

"சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைத் கையேற்று நடத்தி வருகையில் புறமதில் வேலையையுங் கந்தசுவாமி கோவிற் றிருப்பணியையுஞ் சாலிவாகன சகாத்தம் 870 ஆம் வருஷத்திலே புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றி முடித்தான்."
(மேற்படி பக். 31, 32)
மயில்வாகனப் புலவரின் இக் கூற்றுக்கு.
இலகிய சகாத்தம் எண்ணூற் றெழுபதா மாண்ட தெல்லை
அலர்பொலி மாலை மார்ப னாம்புவ னேக வாகு
நலமிகும் யாழ்ப்பா ணத்து நகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே

என்ற தனிப்பாடலே ஆதாரம் போலும்

இவ்வாறு மயில்வாகனப் புலவர் புவனேகவாகு மந்திரியின் கதையை மேலும் வளர்த்துச் செல்கிறார் (பார்க்க: மேற்படி பக். 32, 33) வரலாற்றுணர்வு மிக்க கவிராசர் கூற்றைக் காவியப் போக்குடன் மயில்வாகனப் புலவர் வளர்த்துச் செல்வதால் ஏற்பட்ட முரண்பாடுகள் எண்ணிலடங்கா.

கைலாயநாதர் கோயில்

பூபாலர் வேந்தன் புதிய நகராதிபதி ஆகிய சிங்கை ஆரியன் புவிதிருத்தி ஆண்ட வரலாற்றைக் கூறி முடித்த கவிராசர் தொடர்ந்து நல்லூர்க் கைலாயநாதர் கோயிலமைப்பையும் குட முழுக்கையும் இறைவன் எழுந்தருளியதையும் கூறுகிறார். இப்பகுதி சைவசமய, இந்து நாகரிக ஆய்வாளர்களுக்கான சிறந்த தகவற் சுரங்கமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் 266 ஆம் கண்ணி முதல் 287 ஆம் கண்ணி வரை கைலாய நாதரின் போற்றியாக அமைந்துள்ளது. இது நூலாசியரது சமய அறிவை விளக்குகிறது.

நூலின் சிறப்பு

கைலாயமாலையை நுணுகி ஆராய்பவர்கள் அதனை யாழ்ப்பாண அரசர்களின் தோற்றுவாயைக் கூறும் புராண மரபுப் புனைவு என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் யாழ்ப்பாணத்தில் வலிமிக்க 'பேரரசு' தோன்றிய காலம் வரையுமுள்ள வரலாற்றைக் குறியீட்டு முறையில் விளக்குகின்ற வரலாற்று நூலாகும். ஈழத்தில் தமிழரின் தொன்மையையும் கதிரைமலை, சிங்கைநகர், யாழ்ப்பாணம், நல்லூர் முதலிய பகுதிகளில் நிலவிய தமிழரசுகளின் சங்கமத்தையும்- ஒன்று கூடலையும்-கயிலாயமாலை குறியீட்டு முறையில் விளக்குகிறது என்றே கொள்ளவேண்டும். இங்கு எந்தத் தனி அரசனின் பெயரும் கூறப்படவில்லை. பலஇனக் குழுக்களின் வரலாறே குறியீட்டு முறையிற் கூறப்படுவது போலத் தோன்றுகிறது. இது விரிவாக ஆராயத்தக்கதாகும்.

சில சிக்கல்கள்

"யாழ்ப்பாண அரசின் வரலாற்றை ஆராய முற்பட்டவர்கள் கைலாயமாலையைத் தக்கவாறு புரிந்து திறமையுடன் பயன்படுத்தவில்லை"

எனக் கலாநிதி சி பத்மநாதன் 'ஈழத்து தமிழ் வரலாற்று நூல்கள்' 1972,பக் 1) கூறுகிறார். இக்கூற்று முழுவதும் உண்மையே. தமிழ் வரலாற்று மூலாதாரங்களைச் சரியாகப் பயன்படுத்தாதற்குப் பல காரணங்கள் உள்ளன. iகாயமாலையை யாழ்ப்பாண வைபவ மாலை தரும் ஒளியில் புரிந்துகொள்ளுதல், மகாம்சப் புனைவுகளுடனும் அதிலுள்ள காலம் நிர்ணயிக்கப்படாத வரலாறுகளுடனும் தொடர்புறுத்திப் பொருள் கொள்ளுதல், கி. பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன் யாழ்ப்பாண அரசு இருந்தது என்பதை நிறுவச் சான்றுகளைப் பெறமுடியாதிருத்தல், இயக்கரும் நாகரும் மனிதரல்லர் என்ற எடுகோள், நல்லூர்க் கந்தசுவாமி கோவிற் கட்டியத்துக்கு அளவுக்கு மீறிய முதன்மை அளித்தல் இவை போன்ற பல காரணங்கள் ஈழத் தமிழர் வரலாற்றில் இருள் படியச் செய்திருந்தன. இன்று நிகழும் அகழ்வாய்வுகள், தொல்லெழுத்தியல் ஆய்வுகள், மானிடவியல் ஆய்வுகள் என்பன ஈழத் தமிழர் வரலாற்றில் ஒளியைப் பாய்ச்சுகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், பென்சில் வேனியப் பல்கலைக் கழகம், பேராதனைப் பல்கலைக் கழகம், சிக்காகோப் பல்கலைக் கழகம், காவாட் பல்கலைக் கழகம் என்பவற்றிலுள்ள வரலாற்றறிஞர்கள் ஈழத் தமிழர் வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சி வருகிறார்கள். இது நம்பிக்கையூட்டும் திருப்புமுனை என்பதில் ஐயமில்லை.

மீண்டும் புவநேகபாகு:

நல்லூரில் 'நண்ணிய' புவநேகபாகு, யாழ்ப்பாணத்தை வென்று அடக்கிய 'சப்புமால் குமராய' என்ற செண்பகப் பெருமாள் என்ற ஸ்ரீ சங்கபோதி புவநேகபாகு ஆகிய இருவரையும் ஒருவரொனக் கொண்டதும் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கட்டியத்துக்கு வரலாற்று முதன்மை தந்ததும் ஈழத் தமிழர் வரலாற்றில் சங்கிலித் தொடரான குழப்பங்களை ஏற்படுத்தின. கைலாயமாலை கூறும் புவநேகபாகு மதுரையிலிருந்து வந்த ஒரு சாதாரண 'குடிபதி'யே. அவன் அமைச்சனல்ல என்று கொள்வதே சரியெனப்படுகிறது வையா பாடலிற் கூறப்படும் செய்திகளும் இதனை உறுதிசெய்யப் பயன்படும். நல்லவாகு, வச்சிரவாகு வாகுதேவன், வாகுநாதன், வாகுசிங்கபூபதி முதலியோர் வன்னியிற் குடியேறியதாக வையாபாடல் கூறுகிறது. எனவே, 'வாகு' என்ற பெயர் 'புவநேகபாகு' உட்படக் குடியேறியோர் அனைவருக்கும் பொதுவான பெயர்க்கூறு ஆகும். பாண்டிய மன்னான குலசேகரனும் 'புவநேகவீர' என்ற விருது பெற்றவன் என்பது இங்கு நினைவு கூரற்பாலது. எனவே, இவனைச் சிங்கள அரசனென்று கொள்ளவேண்டி யதில்லை. சகல லோகச் சக்கரவர்த்தியான ராச நாராயண சம்புவராயன் (1344) வெளியிட்ட திருவொற்றியூர்க் கல்வெட்டு,

புவநேகபாகு தேவனென்ற கலியுக வீரபத்திர
தேவரின் முகவரான முதலியார் சாரங்கதேவர்

பற்றிக் கூறுகிறது. (பார்க்க: T. N. Subramaniam, Fresh Light From A Thiruvottiyur Inscription, கல்வெட்டுக் கருத்தரங்கு, 1966, பக். 1966-199). இப் புவநேகபாகு நானாதேசியரென்ற திசையாயிரத் தைஞ்ஞாற்றுவர் குழுவில் சக்திவாய்ந்த தலைவனென்று தெரிகிறது. இவனைத் திரு. சுப்பிரமணியம் 4 ஆம் புவநேகபாகு என இனங்காண முயன்றுள்ளார். அம்முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை, கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை பதிப்பித்துள்ள சமயத்தார் கல்வெட்டுக்கள் (Ceylon Tamil Inscriptions, Part I, பக். 46-57) இந்த ஆய்வில் துணi செய்யும். இச் சான்றுகளைக் கொண்டு நோக்கும்போது 'புவநேகபாகு' என்ற பெயர் சிங்கள அரசர்க்கு மட்டும் உரியபெயர் எனக் கொள்ளமுடியாது. எனவே, பல புவநேகவாகுகளையும் ஒன்றிணைத்து நோக்கவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

நல்லூர்க் கந்தசுவாமிகோவிற் கட்டியம்

சோடச மகாதான சூர்யவம்சோத்பவ
ஸ்ரீமத் சங்கபோதி புவநேகபாகு
சிவகோத்திரோத்பவ இரகுநாத மாப்பாண

எனக் கூறுவதாக அறிஞர் எடுத்துக்காட்டியுள்ளனர். (சி. பத்மநாதன். 1978, பக். 282) எனவே, இக்கட்டியம் ஒல்லாந்தர் காலத்தில் கோவிலைப் புதுக்கிய இரகுநாத மாப்பாண முதலியார் காலத்துக்குரியது எனக் கொள்ளலாம். அது சரியெனில், அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த மயில்வாகனப்புலவர் தாக்கமும் இதில் இருந்திருக்க முடியும். இவன் ஆறாம் புவநேகபாகு என்று கொள்வது வரலாற்றுக்குப் பொருந்தாது. ஏனெனில், கேரளனான சண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டுக் கோட்டைக்குச் சென்று பௌத்த மத காவனான பின்பே ஸ்ரீ சங்கபோதி புவநேகபாகு ஆனான். ஆகவே. புவநேகபாகு என்று கட்டியம் கூறுவதிலுள்ள முரண்பாடு மேலும் ஆராயப்பட வேண்டியதே.

கன்ன(ர) தேவன்

யாழ்ப்பாண அரசனான பரராசனின் உயிர்த்தோழன் கன்னதேவர் என்ற தொண்டை மண்டல அரசன் என வையாடல் (89,90) கூறுகிறது இவனைக் கிருஷ்ண தேவராயர் (1509-1530) என ஈழத்து வரலாற்றறிஞர் கொள்வர். (கலாநிதி க. செ. நடராசா, வையாபாடல், 1980. பக். 55) ஆனால். தேவராயரின் திருப்புத்தூர். பிரான்;மலை மங்கை நாதேசுவரர் கோயிற் கல்வெட்டு (1518) இவனை,

ஈள வன்னியர் மீசுர கண்டன்
ஏழு நாளையில் ஈழந்திறை கொண்ட பெருமாள்

எனக் கூறுகிறது (சாசனமாலை, 1960, பக். 57). எனவே, இவன் யாழ்ப்பாண அரசனின் நண்பனாக இருந்திருக்க முடியுமா என்பது விசாரிக்கத்தக்கது. புதுச்சேரி, பாகூர் கல்வெட்டு ஒன்று கன்னர தேவன் (கி. பி. 962) பற்றிக் கூறுகிறது. சோழ நாட்டை ஆண்ட அரிஞ்சயன் (கி. பி. 956-957) வடக்கு நோக்கிச் சென்றபோது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி ஆண்ட இராட்டிர கூட மன்னனான கன்னர தேவனும் எதிர்த்துப் போரிட்டான் எனவும் சுந்தரச் சோழன் (பராந்தகன் 11 957-970) கன்னர தேவனை வென்றான் எனவும் தமிழக வரலாறு (ரெ. சேஷாசலம். 1962 பக். 129) கூறுகிறது. இக் கன்ன(ர) தேவன் காலத்தில் அல்லது வேறொரு கன்னரதேவன் காலத்தில் தொண்டை மண்டலத்திலிருந்து வன்னியர்கள் குடிபெயர்ந்ததையே iவா பாட் நினைவு கூர்கிறதா என்பது ஆராயத்தக்கது.

மேற் கூறப்பட்ட செய்தி, கி. பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரிய (கலி 3925) சிங்கையாரியனின் நாயன் மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலயக் கல்வெட்டுச் செய்தி, கி. பி. இல் பரராசசேகரன் சிதம்பரத்தில் ஆற்றிய திருப்பணி பற்றிய செய்தி (சி. பத்மநாதன், இரு தமிழ்ச் செப்பேடுகள், சிந்தனை 3:ஐ 1970 பக். 52-57)இ என்பன 1260க்கு முன் யாழ்ப்பாணத்தில் தமிழரசு இருந்தமைக் கான சான்றுகளாகத் தோன்றுகின்றன. இவை கி. பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்பே யாழ்ப்பா ணத்தில் அரசு தோன்றியது என்ற எடுகோளால் நிராகரிக்கப்பட்ட ஈழத் தமிழ் வரலாற்று ஆவணங்களாகும். இவை மேலும் ஆராயத்தக்கன.

மீளாய்வு

பேராசிரியர் இந்திரபாலா (1972). கலாநிதி சி. பத்மநாதன் (1978) ஆகிய இருவரும் கி. பி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட யாழ்ப்பாண அரசர்கள் வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து நூல்களை வெளியிட்டுள்ளார்கள் பொன்பரிப்பிலும் யாழ்ப்பாணத்திலும் அநுராதபுரம் கெடிகோயிலும் திருக்கேதீச்சரத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆழமும் அகலமும் மிக்க அகழ்வாய்வுகள் பல புதிய செய்திகளை வெளியிட்டுள்ளன. இவை ஈழத் தமிழர்வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சும் என இவர்கள் நம்புகிறார்கள். ஐராவதம் மகாதேவன் முதலியோர் தமிழகத்தில் மேற்கொண்ட தொல்லெழுத்தியல் ஆய்வுகள் ஈழத்துக் குகைச் சாசனங்களுக்குப் புதிய விளக்கங் ளைத்தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஈழத்தில் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட மேலாய்வுகள் இங்கும் பெருங்கற் பண்பாடு நிலவியது என்ற கருத்தை உருவாக்கின. பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தினர் கந்தரோடையில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் தென்னிந்தியாவில் நிலவியதை ஒத்த பெருங்கற் பண்பாடு யாழ்ப்பாணத்திலும் இரந்தமைக்குரிய நம்பிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சார்ந்த பேராசிரியர் கா. இந்திரபாலா, கலாநிதி சி. க. சிற்றம் பலம், பொ. இரகுபதி எம். ஏ. ஆகியோர் யாழ்ப்பாணத்தில் பெருங்கற் பண்பாடு நிலவியதைப் பரந்து பட்ட ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியதுடன் அதன் வரலாற்றுத் தொடர்ச்சி பற்றியும் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனைக்கோட்டையிலும் காரைநகரிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற் பண்பாட்டுப் புதைகுழிகளான தாழிக்காடுகள் இங்கு இப்பண்பாடு நிலைத்திருந்ததை உறுதிசெய்கின்றன.

கந்தரோடையில் நிகழ்ந்த அகழ்வாய்வு மூலம் பெறப்பட்ட பொருள்கள் காபன்-14 ஆய்வுமுறைக் காலக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இக்காலக் கணிப்புக்கள் கந்தரோடையிற் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தை கி. மு. 500க்கும் பழமையானதாகக் கொண்டு செல்ல உதவுகின்றன. சில கணிப்புகள் மேலும் உறுதிசெய்யப் பட்டால் இக்காலம் கி. மு. 700க்கு முன்பு கூடக் கொண்டு செல்லப்படலாம். இலங்கையில் தமிழர் நிலப்பரப்புக்கான இடையீடற்ற தொடர்ச்சியான வரலாற்றை உருவாக்கும் நாள் நெருங்கி வருகிறது. எனவே, சங்க இலக்கியப் புலவரான மதுரை ஈழத்துப் பூதன் தேவனாரும் கி. மு. முதலாம் நூற்றாண்டுக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படும் திருப்பரங்குன்றக் கல்வெட்டுக் குறிக்கும் எருகாட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலையனும் வரலாற்று ஆதாரமற்ற உதிரிகளல்லர். இலங்கையின் தொடர்ச்சியான தமிழ் மரபொன்றின் பிரதிநிதிகளே என இன்று துணிந்து கூறக் கூடியதாக உள்ளது. புதிய ஆய்வுச் சிந்தனைகளின் ஒளியில் கைலாயமாலையும் புதிய விளக்கங்களைப் பெறும் என நம்பலாம்.


----------------------------------------------------------------------------



கைலாயமாலை

காப்பு
வெண்பா

திங்களொடு கங்கையணி செஞ்சடையர் மங்கையொரு
பங்கர் கயிலாய மாலைக்குத் -துங்கச்
சயிலமிசைப் பாரதத்தைத் தானெழுதும் அங்கைச்
சயிலமுகத் தோன்துணைய தரம்.

துங்கச் சயிலமிசை-பெருமை பொருந்திய (மேரு) மலைமேல்.
சயில முகத்தோன்-யானை முகத்தையுடைய விநாயகப் பெருமான்.
சயிலம்-மலை. மலை போன்ற யானைக்கு ஆகுபெயர்.

நூல்
கலிவெண்பா
பீடிகை

சீர்மேவு மேருகிரித் தென்திசையோர் சம்புமரம்
பேர் மேவ நின்ற பெருமையினால்-ஏர்மேவு

நாவலந்தீ வென்னுமொரு நாமமுற அத்தீவிற்
காவல் மருவுநவ கண்டிகளாய்-மேவதனுள்

நானா வளங்கெழுசீர் நற்பரத கண்டத்துள்
வானோர் புகழீழ மண்டலத்தில்- மேல்நாள்




குறிப்பு: எண்கள் கண்ணிகளைக் குறிக்கும்

1. மேருகிரித் தென்திசை-மேருமலைக்குத் தெற்கே.

2. நவகண்டிகள்-ஒன்பது கண்டங்கள். புராணங்களிற் கூறப்படும் ஒன்பது பிரிவுகள் அவையாவன: பரதகண்டம், கிம்புரு;கண்டம்அரிகண்டம்,கேதுமாலகண்டம்,பத்திராசுவகண்டம், இளாவிருகண்டம், இரமியகண்டம், இரணியகண்டம், குருகண்டம்

3. மேல் நாள்- முற்காலத்தில்

மாருதப்புரவீகவல்லி வரலாறு
மாருதப்புரவீக வல்லியின் தந்தையான சோழன் பிரபாவம்

உதபகுல ராசன் உதயமதி வாசன்
சிதைவின்மனு ராசவம்ச தீரன்-துதையளிகள்

பாடுமலர் ஆத்திபுனை பார்த்திவன்தன் சீர்த்திமுற்றும் தேடுந் தனிக்கவிதைச் செம்பியர்கோன்- நீடுகரைப்
4. உதயகுல ராசன்-சூரிய குலத்து அரசன். உதய மதி வாசன்- அறிவுக்கு இருப்பிடமானவன். சிதைவில்-கெடுதல் இல்லாத. துதை அளிகள் பாடும்-நெருங்கி வண்டுகள் பாடுகின்ற

5. ஆத்திமாலை சோழர் குடிக்கு உரியது. தனிக் கவிகைச் செம்பியர் கோன் - தனி நிழற்றும் வெண்கொற்றக் குடையை உடைய சோழராசன். நீடுகரை-உயர்ந்த கரை. கரிகாலன் காவிரிக்கு இருமருங்கும் உயர்ந்த கரை கட்டினான் என்பது பழைய நூல்கள் குறிப்பிடும் வரலாறு.

மாருதப் புரவீகவல்லி கீரிமலைக்கு வந்து தீர்த்தமாடிக்
குதிரைமுகம் நீங்கப்பெற்றுப் பாடிவீடமைத்துத் தங்குதல்.

பொன்னித் துறைவன் புலிக்கொடியன் பூவில்மன்னர்
மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி-கன்னிமின்னார்

தேடுங் கடலருவித் தீர்த்தசுத்த நீரகத்துள்
ஆடிப் பிணிதணிப்பத் தானினைந்து-சேடியர்தஞ்

சேவைகளுங் காவலுறு சேனையுமாய் வந்திறங்கிப்
பாவையுறு தீர்த்தம் படிந்ததற்பின்-ஏர்வைபெறு

கங்குலுற எங்குமிகு காவ லரண்பரப்பிச்
சங்கையுறு கூடாரந் தானமைத்து-மங்கை

விரிந்தசப்ர மஞ்சமெத்தை மெல்லணையின் மீதே
பொருந்துதுயி லாயிருக்கும் போது-வரிந்தசிலை

6. பொன்னித் துறைவன்- காவிரி நதிக்கு உரிமையுடைய சோழன். பூவில்-பூமியில். கன்னி மின்னார் சோழன் மகளொருத்தியென இயைக்க

7. தேடும் என்பது-கனாவிற் சிவபிரான் கூறியபடி அவ்விடத்தைத் தேடுகின்ற சேடியர்- தோழியர்.

8. சேவை-மணிவிடை, பாவையுறு தீர்த்தம்-அரசகுமாரி விரும்பிய தீர்த்தம்

9. கங்குல் உற-இரவாக காவல் அரண்-காவலாகிய பாதுகாப்பு. சங்கை உறு கூடாரம்-பாடிவீடு.

10. சப்ர மஞ்சம்-சிங்காரக் கட்டில்.







வாலசிங்கன் குலதெய்வமான குமரன் பிரபாவம்
வேடர்குல மாதுபுணர் வேலா யுதகரன்செங்
காடன் புதல்வன் கதிர்காமன்-ஏடவிழுந்

தார்க்கடம்பன் பேர்முருகன் தாமோ தரன்மருகன்
சீர்க்குரவன் தேவர் திரட்கொருவன்- சூர்ப்பகையை

10-11 சிலைவேடர்குலமாது-வில்லையுடையவேடர்குலப் பெண்ணாணவள்ளி எழுந்தருளியிருக்கும் சிவபிரானது குமாரன்.

12. தாமோதரன ஸ்ரீ தாம 10 உதரன்-கயிற்றினால் கட்டப்பட்ட வயிற்றினையுடையவன், சீர்க்குரவன்-சிறப்புமிக்க குருநாதன் தேவர் திரட்கு ஒருவன்-தேவர் கூட்டத்துக்கு ஒப்பற்ற தலைவன்.
வாலசிங்கன் மாருதப்புரவீகவல்லியைக்
கைப்பற்றி மணம்புரிதல்

மாற்றுங் குகன்குழகன் வாய்ந்தஅடி யார் துயரை
ஆற்றுங் குமரன் அருளாலே-போற்றுதவர்

வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத்
தாய்ந்த நராகத்(து) அடலேறு-சாய்ந்துகங்குல்

பேரவதன்முன் ஏகியந்தப் போர்வேந்தன் மாமகள்தன்;
காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே-ஆவலுடன்

கொண்டேகித் தன்பழைய கோலமலை மாமுழைஞ்சில்
வண்டார் குழலை மணம்புணர்ந்(து)-உண்டான

பூவிலநு போகம் பொருந்திப் புலோமசையுங்
காவலனும் போலக் கலந்திடுநாள்-தாவில்மணப்

13. குகன்-தியானிப்பவரது இருதயமாகியகுகையிலே வசிப்பவன் குழகன்-இளமை பொருந்தியவன்.

13-14 போற்று தவர் வாய்ந்த-முருகப்பிரானை வணங்கும் தபோதனர் வாழும்.

14. மடங்கல் முகத்து ஆய்ந்த நர ஆகத்து அடல் ஏறு-சிங்க முகத்தையும் (வல்லவர்கள்) ஆராய்ந்து கூறிய (சாமுத்திரிகா ல~ணங்கள் அனைத்தும் பொருந்திய) மனித தேகத்தையும் உடையவனும் போரில் ஆண்சிங்கம் போன்றவனுமான வாலசிங்க மகாராசன்.

14-15 கங்குல் சாய்ந்து போவதன்முன்-இரவு கழியுமுன்.

16. கோல மலை மா முழைஞ்சு- அழகிய மலைக்குகை.

17. பூவில் அநுபோகம் பொருந்தி-பூமியில் இல்லற இன்பத்தை அநுபவித்து புலோமசை-புலோமன் புதல்வியான இந்திராணி. காவலன்-அரசரில் தலைவனான தேவேந்திரன்.

17-18 தா இல் மணப் பூமான்-குற்றமற்ற வாசனை பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் மகால~;மி புவிமான்-பூமிதேவி. நாமான்-யாவர். நாவிலும் எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி

19. உன்னி-(சகல கலைகளும் இப்பொழுது அவதரிக்கப்போகும் அரசனால் ஆதரிக்கப்பட்டு அபிவிருத்தி அடையப்போவதை நினைத்து. ஆசி உரைத்து-ஆசீர்வாதம் செய்து.

வாலசிங்கன் மகனான நரசிங்கன் அவதாரத்தால்
உளவாகும் நன்மைகள்.

பூமான் மதிக்கப் புவிமான் மகிழ்ச்சியுறக்
கோமான் மனுவின் குலம்விளங்க-நாமானும்

உன்னிமிகும் ஆசி உரைத்துத் திருத்தமிகு
தன்னிதய சந்தோஷந் தான்பெருக-மன்னுபுவி

மாந்தர்சுக மேவ மனுநீதி யுண்டாக
வேந்தர்கள்தம் நெஞ்சம் மிகநடுங்கப்-பூந்தவிசின்

வேதன்கை நோகவரும் மேலோன் விழிதுயிலப்
போதன்மணி மேனி புளகரும்பச் சோதிபெறு

தேவா லயங்கள் செயும்பூ சனைசிறக்க
மேவுஆலை வில்லி விருதுகட்ட-நாவார்

மறையோர்கள் வேள்விமல்க மாதவங்க ளோங்கக்
குறையாது நன்மாரி கொள்ள-நிறைவாகச்

20-21 பூந்தவிசின் வேதன் கை நோக-தாமரைப் பூ ஆசனத்தில் வீற்றிருக்கும் பிரமானது கைநோக-அவதரிக்கப் போகும் அரசனது பரிபாலனத்தில் சகல உயிர் வர்க்கங்களும் பெருகிச் செழிக்குமாதலால் பிரமனுக்குச் சிருஷ்டிவேலை அதிகமாகிக்கை நோகும் என்பது குறிப்பு இத்துணை அழகும் சிறப்பும் வாய்ந்த செல்வனைச் சிருட்டிப்பது கஷ்ட சாத்தியமாகையால் கைநோகவருத்திச் சிருட்டித்தான் பிரமன் எனலுமாம்.

21. வரும் மேலோன் விழிதுயில-பிரமனுக்கு மேலாக அடுத்துக் கூறப்படும் விஷ்ணு கவலையின்றி நித்திரை செய்ய. அவதரிக்கப் போகும் அரசன் உலகம் முழுவதும் காக்கும் பாரத்தைத் தான் மேற்கொள்ளுதலின், காவற் கடவுளான விஷ்ணு நிம்மதியாக நித்திரை செய்யலாம் என்பது குறிப்பு

21. போதன் மணி மேனி புளகரும்ப -(சிறந்த சிவபக்தன் ஒருவன் அவதரித்தலால்) ஞானவடிவினாரான சிவபிரானது அழகிய திருமேனி புளகாங்கிதம் கொள்ள. மணிமேனி-செம்மணி நிறத் திருமேனி.

22. மேவு ஆலை வில்லி விருதுகட்ட-பொருந்திய கருப்பு வில்லை உடைய மன்தன் விருதுக்கொடி பிடிக்க.பேரழகன் ஒருவன் அவதரிப்பதால் இனி எத்தகைய மனவுறுதி வாய்ந்த பெண்ணையும் என் பாணங்களால் நிலைகுலையச் செய்துவிடுவேன் என்று மன்மதன் விருதுகூறலானான்.

22-23 நாவார் மறையோர்கள் வேள்ளி மல்க-வேதம் ஒதும் நாவையுடைய பிராமணர் செய்யும் யாகங்கள் செழிக்க.

நரசிங்கராசனும் அவன் தங்கையும் அவதரித்தல்

செந்நெல் விளையச் செகம்செழிக்கச் செல்வமுற
மன்னன் மகள்தன மணிவயிற்றில்-மன்னு

கருவாய்ந்(து) அயனமைத்த கட்டளைகள் திட்ட
உருவாய்ந்து பத்துமதி யொத்துத்-திருவாய்ந்த

திங்கள் முகத்தழகுஞ் செய்யவடி வாலழகும்
துங்கமுறும உச்சிச் சுழியழகும்-பொங்குமணிக்

கண்ணழகும் மூக்கழகுங் காதழகுங் கையழகும்
மண்ணில நராபோல் வடிவழகும்-நண்ணி

வரசிங்க ராயன் மகாராச ராசன்
நரசிங்க ராசனெனும் நாமத்-துரைசிங்கம்

வந்துபிறந் திந்தவள மண்டலமெல் லாம்மதிக்க
இந்துவென வேவளரும் ஏல்வையினிற்-பிந்தியொரு
பெண்பிறந்தாள் அந்தவெழிற் பெண்ணையுமுன்
அண்ணலையுங்
கண்போல் வளர்த்துக் கவின்பெறலும்-நண்பாகத் 30
25. அயன் அமைத்த கட்டளைகள் திட்ட உருவாய்ந்து-பிரமன்
விதித்த விதிகளின்படி ஒழுங்காக உருவம் அமைந்து.
பத்து மதி ஒத்து-பத்து மாதம் நிரம்பி.

26. செய்ய வடி வால்-அழகிய நீண்ட வால். துங்கமுறும் உச்சிச் கழி
யழகும்-பெருமை பொருந்திய (சிங்கத்) தலையில் உள்ள சுழியின்
அழகும். பொங்கு மணிக் கண்- பெரிய அழகிய கண்.

27. மண்ணில் நராபோல் வடிவழகும்-பூமியில் வாழும் மனிதர்
வடிவின் அழகும்.

28. வரசிங்கராயன்-மேலான சிங்க (முகமுடைய) ராசன்.
நரசிங்கராயன்-அவதரித்த குமாரனது நாமம்.
துரைசிங்கம்-அரசருள்ளே ஆண் சிங்கம் போன்றவன். ள

29. இந்த வளமண்டலம்-இந்தச் செழிப்புப் பொருந்திய ஈழமண்டலம். இந்து-சந்திரன் ஏல்வை சமயம்.

30. முன் அண்ணல்-அவளுக்கு மன்பிறந்த பெருமையிற் சிறந்த நரசிங்க ராசன்:

30. கவின்-(இளமைக்குரிய) அழகு.

நரசிங்க ராசன் விவாகமும் பட்டாபிஷேகமும்

தந்தையர்க்குந் தாயருக்குஞ் சாற்றுமணம் ஆற்றுவித்த
கந்தனுமை மைந்தன் கருணையினால்-வந்த

இருவருக்கும் நன்முகூர்த்த மிட்டுமகிழ் பூப்பத்
தருவிருக்கு மாலைவடஞ் சாத்தித்-திருவிருக்குஞ்

செய்யமணஞ் செய்து திறல்வேந்தர் போற்றிநிற்பத்
துய்யநவ ரத்னமுடி சூட்டியபின்-பையரவின்

32. தரு இருக்கும்-மரத்திலே (பூத்து) இருக்கின்ற. மாலை, வடம் என்பன
பூமாலை விசேடங்கள். திரு இருக்கும்-மங்களகரமான்
தமையன் தங்கையை மணந்ததாகக் கூறப்பட்டிருப்பதும் அதனை
வேற்றரசர் புகழ்ந்தார்களென்பதும் ஆராய்தற்குரியன.

நரசிங்க மகாராசன் ஆட்சி வைபவம்

உச்சியினின் றாடும் ஒருவனின் ஆகுமென்ன
மெச்சுக்ர வாளகிரி வெற்புமட்டும்-உச்சிதஞ்சேர்

தன்னாணை செல்லத் தரியலர்கள் தாள்வணங்கப்
பொன்னாட் டரசன் புகழ்குறையப்-பன்னாட்

;டரசர் திறையளப்ப அந்தணர்கள் வாழ்த்த
முரசதிரப் பேரி முழங்க-வரிசையுடன்

சங்கமெழுந் தார்ப்பத் தமனியப்பொற் காளாஞ்சி
மங்கையர்க ளேந்தி மருங்கி(ல்)நிற்ப-எங்குமிகு

கட்டியங்க ளார்ப்பக் கனஅரி யாசனத்தில்
இட்டமெத்தை மீதில் இனிதிருந்து-திட்டமுடன்

நங்கோ னிராமன் நடத்தியுல காண்டதுபோற்
செங்கோ லரசு செலுத்தும்நாள்-மங்காத

33-34 பையரவின் உச்சியில் நின்று ஆடும் ஒருவன் இவன் ஆகும்
என-(காளி.ங்கள் என்னும்) பாம்பின் தலையில் நின்று நடனம்
செய்கின்ற விஷ்ணுவே இவன் என்று கண்டோர் நினைக்கும்
படியாக, சக்கரவானகிரி-உலகத்தை மதில்போலச் சுற்றி
யிருப்பதாகப் புராணங்களிற் கூறப்படும் மலை. உச்சிதம்-
மேன்மை.

35. தரியலர்கள்-பகைவர்.

36. முரசு-அட்டமங்கலத்தொன்று. வெற்றி முரசென்பதும் இதுவே.
இராசசின்னத்து மொன்று பேரியென்பது பறைப் பொது. பேரி
பொதுப்பறையும் முரசு சிறப்புப் பறையுமாகும்.

37. தமனியப் பொற்காளாஞ்சி-பொன்னாலாகிய அழகிய காளாஞ்சி.

38. கனக அரி ஆசனம்-பொற் சிங்காசனம்.

யாழ்பபாணன் நரசிங்கராயனைப் பாடிப் பரிசுபெற்று
யாழ்ப்பாண நகரை ஆண்டு காலஞ்சென்ற வரலாறு

பாவலர்கள் வேந்தன் பகருமி யாழ்ப்பாணன்
காவலன்தன் மீது கவிதைசொல்லி- நாவலர்முன்

ஆனகவி யாமின் அமைவுறவா சித்திலும்
மானபரன் சிந்தை மகிழ்வாகிச்-சோனைக்

கருமுகில் நேருங் கரன்பரிசி லாக
வருநகர மொன்றை வழங்கத்-தருநகரம்

அன்றுமுதல் யாழ்ப்பாணம் ஆன பெரும்பெயராய்
நின்ற பதியில் நெடுங்காலம்-வென்றிப்

புவிராசன் போலப் புகழினுட னாண்ட
கவிராசன் காலங் கழிய-அவிர்கிரண

41. யாழின் அமைவுற-யாழிலேபொருந்த. மானபரன்-மானத்தைத்
(ஆபரணமாகத்) தாங்கியவன்.

41-42 சோனைக் கருமுகில் நேரும் கரன்- தாரையாக மழைசொந்
யும் கருமுகிலை யொத்த கையை (கொடையை) உடையவன்.
தரும் நகரம்-(அவ்வாறு) கொடுக்கப்பட்ட பட்டினம்.

44. கவிராசன்-கவிக்கு அரசனான புலவன். காலங்கழிய-ஆயுட்
காலம் முடிந்து இறக்க.

யாழ்ப்பாணம் அரசனின்றித் தடுமாறல்

சந்திரனில் லாதவெழிற் றாரகைபோல் வானரசாள்
இந்திரனில் லாத இமையவர்போல்-விந்தை

கரைசேரிம் மாநகர்கோர் காவலரண் செய்யுந்
தரையரச னின்றித் தளம்ப-விரைசேருந்

45. விந்தை-வெற்றிக்கு அதிதேவதையான துர்க்கை.

46. விரைசேரும் - வாசனை பொருந்திய.

செகராசசிங்கையாரியன் பிரதாபம்

தாமமணி மார்பன் தபனகுல ராசன்
சேமநிதி யாளன்திறற் பணியால்-நாமநன்னீர்

மேவரச ராதிபதி வேலினரை நேர்விறல்கொள்
மேவலவர் ஆவிகவர் வீரபரன்- பாவின்மொழி

மாதர்மடல் மீதெழுது மாமதன ரூபன்மதி
ஆதரவு நீதி அருட்குரிசில்-தீதகலும்

மாகதர்கள் கோசலர்ம லாடர்கரு நாடர்மிகு
கேகயர்கள் மாளவர்கள் சேரளர்கள்-வாகைபெறு

சோனகர்வி ராடர்துளு வாதியர்கள் சூரமிகு
சீனரொடு சாவகர்கள் சேதியர்கள்-ஆனவெகு

சேனைபுடை சூழவய மாவின்மிசை சேனையின
மானமுடன் மேவுமகா ராசதுரை-வானகத்தில்

தூண்டிடினும் தீயினிடைத் தூண்டிடினும் நீரினிடைத்
தூண்டிடினும் செல்லுந் துரகத்தான் நீண்ட

உரகன்முடி நோவ உரசரண நாட்டுங்
கரடதட கும்பக் களிற்றான்-முரண்இரவி

இட்டதனி யாழி யிரதமிணை யல்ல வெனும்
வட்டமுறு மாழி மணித்தேரோன்-முட்டருதாள்

கஞ்சன் படைகள் களம்வரினுங் காதமெதிர்
பஞ்செனநீ றாக்கும் பதாதியான் செஞ்சுடரோன்

ஓங்கு கிரண உலகஅர சைச்செயித்துத்
தாங்கிநிழல் செய்யுந் தனிக்குடையான்-நீங்காமல்

அண்டர் உலகம்நிமிர்ந் தாடும் பரிசுடைத்தாய்க்
கொண்டவிடை காட்டுங் கொடியினான்-ஒண்டிறல்சேர்

கொண்டல்க ளோர் ஏழும் குரைகடல்ஏ ழுங்குமுறி
மண்டுவபோல் ஆர்ப்பரிக்கும் வாத்தியத்தான்-புண்டரி
கத்(து)
இந்திரைமுன் எண்மர் இலக்குமியர் தம்பதியாச்
சந்ததம்நின் றாடுஞ் சமுகத்தான்-சந்த்ரதரன்

47. தாமம்-மாலை, தபனகுலம்-சூரியகுலம், சேம நிதியாளன்
திரட்டிப் பாதுகாத்த செல்வத்தை யுடையவன் (சோழன்)
திறற் பாணியால்-வலிமை பொருந்திய கட்டளையால்.

நாமநன்னீர் மேவரசர் ஆதிபதி-அச்சம் தரும் கடல் (சூழ்ந்த உலகின்) அரசர்க்குத் தலைவனாக இருப்பவன், சோழனால் நியமிக்கப்பெற்று அச் சோழனுக்கு அடங்கிய சிற்றரசர்களையெல்லாம் அடக்கி ஆளும் அதிகாரி செகராசசிங்கையாரிடயன் என்றவாறு.

48. வேலினரை நேர் விறல்கொள் வீரபரன், மேவலர் ஆவிகவர் வீரபரன் எனக் கூட்டுக, வேலினர்- வேலாயுதத்தைத் தாங்கிய கந்தசுவாமி(யைப் போன்ற). மேவலர் ஆவிகவர் விரபரன்-பகைவரது உயிர் கவரும் வீரந் தாங்கியவன். பா இன்மொழி மாதர்-பண் போலும் இனிய சொல்லையுடைய பெண்கள்.

49. மடல் மீது எழுதும்-மடலூர்தற் பொருட்டுக் கிழியில் எழுதும் மாமதன் ரூபன்-சிறந்த மன்மத வடிவத்தை உடையவன். ஒரு இளைஞன் தான் காதலித்த பெண்ணை அடைய முயன்றும் அது கைகூடாவிடில், அவள் உருவைக் கிழியின் எழுதிக் கையிற் பிடித்துக்கொண்டு, எருக்க மாலைசூடி, உடல் முழுவதும் நீறுபூசி கருக்குப் பதித்த செய்கைக் குதிரை மீதேறி, பனைமடற் கருக்குத்தன் உடலெல்லாம் கீற, உதிரம் பாய, தன் கையிற் பிடித்த கிழி தான் உயிர்விடத் துணிந்த காரணத்தை உலகிற் காட்ட. மௌனத்தோடு தன் காதலி வாழும் ஊர் வீதியில் உலாவருவான். இக் கொடுமை கண்டு ஊராரும் உற்றாரும் இவன் செயலைத் தடுத்து அப்பெண்ணை இவனுக்கு மணமுடித்து வைப்பின். தன்மனோரதம் ஈடேறப்பெற்று வாழ்வன். இன்றேல் மடல் ஊர்ந்தே உயிர்விடுவன். இம் மடலூர்தல் அகயீபொருட்டுறைகளில் ஒன்று பெண்கள் மடல் ஊர்தல் சம்பிரதாயம் அன்று, காதலிக்கப்பட்டவன் மானிடனாகாது, தெய்வமாய வழி மட்டுமே பெண்கட்கு மடலூர்தல் கூறப்படும். செகராசன் பொருட்டுப் பெண்கள் மடலூர்தல் கூறுதலின் ஆசிரியர் அவனைத் தெய்மாகக் கொண்டாடாது போனாலும், பெண்கள் மடலூருதற்குத் தானும் விரும்பும் அழகுடையனென்பதைக் குறிப்பிட்டார்.

மதி ஆதரவு நீதி அருட்குரிசில்-புத்திநுட்பமும் சேர்ந்தோரைத் தாக்கும் இயல்பும் நீதியும் இரக்கமும் வாய்ந்த சிறந்த ஆண்மகன், தீது அகலும்-தீமை இல்லாத.

50-51 மாகதர்கள் சேதியர்கள்-செகராசன் சேனையிலுள்ள பல்வேறு தேசத்து வீரர்கள், மாகதர்-மகத தேசத்தார். கோசலம்-கோசல தேசத்தார். மலாடர்-மலாடு எனப்படும் மலையாள (சேர) தேசத்தார்.

துளுவாதியர்-துளுவர் முதலானோர் சூரமிகு சீனர்-வீரம் மிகுந்த சீனர். சாவகர்-சாவக நாட்டினர், இது இக்;காலத்தில் யாவா எனப்படும்.

52. வய மாவின் மிசை- வெற்றி மிகுந்த குதிரை மேல். சேனை இனம்மான முடன் மேவும்-சேனைக் கட்டங்கள் வரிசைகள் விருதுகளுடன் பொருந்திய. வானகத்தில் தூண்டிடினும்-ஆகாயத்திற் செலுத்தினாலும்.

53. துரகதத்தான்-குதிரையையுடையவன். நீண்ட உரகன் முடிநோவ-நீண்ட உருவமுடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் உச்சி (பூமியைத் தாங்கியிருப்பதால் யானை அழுத்தி மிதிக்க அமுங்கி) நோவெடுக்க.

54. உரசரணம் நாட்டும்-வலிய கால்களை எடுத்து வைக்கும்; கரட தடகும்பக் களிற்றான் - மதம் சொரிகின்ற பெரிய மத்தகத்தையுடைய யானையை உடையவன்.

55-56 சூரியனது தேரும் செகராசன் தேர்க்கு ஒப்பாகாது என்பது கருத்து. முள் தருதான் கஞ்சன்-முள்ளுடைய தண்டில் மலர்ந்த தாமரையிலிருக்கும் பிரமன்.
கஞ்சன் படைகள்-பிரமாஸ்திரங்கள். களம்-போர் செய்யும் இடம். காதம் எதிர் பஞ்சு-காத தூரத்திற்கு அப்பாலே தீ முன் பஞ்சு போல் (அக்கினியில் அகப்பட்ட பஞ்சு)

56-57 செஞ்சுடரோன்... தனிக்குடையான் - சிவந்த ஒளியையுடைய சூரியனது மிகுந்த கிரணங்களின் ஆட்சி, வெப்பத்தை அடக்கித் (தான் வெம்மையைத்) தாங்கி நிழலைக் கொடுக்கின்ற ஒப்பற்ற வெண்கொற்றக் குடை உடையவன்.

58. அண்டருலகம் நிமிர்ந்து-தேவலோகம் வரை உஉயர்ந்து, விடை காட்டும் கொடி-இடபக்கொடி. இதுவே யாழ்ப்பாணத்து அரசர்க்குரிய கொடியாயிற்று.

59-60 புண்டரிகத்து இந்திரை முன் எண்மர் இலக்குமியர்-தாமறை மலரில் வீற்றிருக்கும் தனலஷ்மி கொண்டு. நின்று ஆடும் சமுகத்தான்-நின்று தாண்டவமாடும் சந்நிதானமாக வியங்குபவன். சந்த்ரதரன்-சந்திரனைத் தரித்த சிவன்.

செகராசசிங்கன் கேசாதிபாத வருணனை

நம்பன் பரசுதரன் நாதன் கயிலாயன்
செம்பதுமத் தாள்வணங்குஞ் சென்னியான்-அம்பொனிற்செய்

வென்றிதரும் பட்டமுடன் வெண்திருநீ றுந்துலங்க
ஒன்ற அணிந்தநுத லோடையான்-துன்றியறை

விஞ்சுபடி யோர்கள் மெலிவுகுறை பார்த்தருள்செய்
கஞ்சமலர் அஞ்சுமிரு கண்ணினான்-சஞ்சரிக்கத்

தேனுலவு பூமணமுஞ் சேர்சந் தனம்பனிநீர்
நானமண முங்கமழும் நாசியான்-வானுவகுங்

காசினியும் பாதலமுங் காவல் செயவரினும்
வாசகந்தப் பாதசத்ய வாய்மையான்-தேசுபெற

அப்புலவுஞ் செஞ்சடிலத்(து) அண்ணல் பெருமைகளைச்
செப்பமுடன் கேட்குந் திருச்செவியான்-எப்பொழுதுங்

காதலொடு காண்போர் கலிபசிதுக் கந்தணிக்குஞ்
சீதபுண்ட hPகத் திருமுகத்தான்-மீதுயர்ந்த

அட்டகிரி அற்பமென அம்புவியைத் தாங்குதற்குத்
திட்டமுடன் வாய்ந்த திறற்புயத்தான்-கட்டழகன்

கேசவன்தன் மார்பிற் கிளர்சலசை நேசமுடன்
வாசமுறச் சேரும் மருமத்தான்-ஓசைப்

பனகமுடி மீதுவளர் பாரரசர் தங்கள்
கனகமுடி ஓங்குகழற் காலான்-தனதனிகர்

மாதனத்தான் மாதிறத்தான் மாதுரத்தான் மால்நிறத்தான்
ஆதரத்தான் ஆழிவைத்தான் ஆர்வனத்தான்-வேதன்
அத்தான்
போலும் எழிலுடையான் பூவுடையான் பூணுடையான்
மேலும் வயமுடையான் வீறுடையான்-கோலநகர்ச்

செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை

தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்-தன்னுழையிற்

61. நம்பன்-நமது பெருமான் (சிவன்). பரசு தரன்-மழுவைத் தாங்
கிய சிவன்.

62. நுதல் ஓடையான்-நெற்றிப் பட்டத்தையுடையவன். துன்றி
உறை-(குடி) நெருங்கி வாழும்.

63. விஞ்சு படியோர்கள்-(தொகை) மிகுந்த உலகின் ஜனங்களது,
சஞ்சரிகம்-வண்டு(கள் மொய்க்கும்)

நானம்-கஸ்துரி. நாசி-மூக்கு.

64-65 வானுலகும்........வாய்மையான்-மூவுலக ஆட்சியையே ஒரு பொய்க்குப் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் சொன்ன சொல்தவறாத சத்திய விரதன்.
69 கேசவன்-திருமால். சலகை-இலக்குமி. மருமம்-மார்பு.

70 ஓசைப் பனகமுடி மீதுவளர் பார்-ஆரவாரம் பொருந்திய பாம்பின் தலையில்; இருக்கின்ற பூமி. பன்னகம்- பாம்பும். அது பனகமெனக் குறுகிற்று. தனதன் நிகர்-குபேரனுக்கு ஒப்பான.

71. மா தனத்தான்-பெரிய செல்வமுடையவன். மா திறத்தான்- மிகுந்த சாமர்த்தியசாலி, மா துரத்தான்- இனிமை உடையவன். மால்நிறத்தான் ஆதரத்தான்-மேகநிறம் உடைய விஷ்ணுவின் அருள் பெற்றவன்.

71. ஆழிவைத்தான்-ஆஞ்ஞாசக்கரம் செலுத்துபவன். ஆர்வனத்தான்- (சோழனால் நியமிக்கப் பெற்று ஏணைய சிற்றரசரை அடக்கியாளும் அதிகாரத்துடன், சோழன் பிரதிநிதியாதலால் சோழனுக்கு உரிய) ஆத்திமாலை (சூடும் உரிமையும் பெற்று அதை) மிகுதியாக (காடுபோல) அணிந்தவன்.
71-72 வேதன் அத்தான் போலும் எழில் உடையவன்-பிரமானது மைந்துனனான சுப்பிரமணிய சுவாமிபோல் அழகு உடையவன். பூ உடையான்-பூமிச்செல்வம் உடையான். பூ உடையயான-அழகிய உடையணிந்தவன் எனலுமாம். பூண் உடையான்-ஆபரணங்கள் உடையவன்.

72. வயம்-வெற்றி, வீற்றி-பெருமிதம், கோல நகர்-அழகிய பட்டினம், செழிய சேகரன்-பாண்டியன்

74. தன்னுழையில்-தன்னிடத்தில். மன்னவர் விஷ்ணு அம்சம் பெற்றவராதலின் செகராசனை 'மால்' என்றார்.

பாண்டிமழவன் செகராசசிங்கையாரியனிடம்
யாழ்ப்பாணத்தரசை ஏற்க வேண்டுதல்
பாண்டி மழவன் பிரதாபம்

பொன்பற்றி யூரனண்டர் போரில் அழல்சூரன்
மின்பற்று காலின் விலங்குதன்னை-அன்புற்று

வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில்
திட்டமுடன் வந்து செனனித்தோன்-மட்டுவுஞ்
செங்குவளைத் தார்மார்பன் செல்வரா யன்பயந்த
துங்கமலை யுச்சிச் சுடர்விளக்குக்-கங்கைகுலம்

கொண்டாடுங் கொண்டல் குடிமைகளோர் ஐவரையுந்
தொண்டாக வேகொணர்ந்த சூழிச்சியுள்ளான்-மண்டு விடை

தூண்டும்ஏ ராளன் சுகிர்தன் சுபவசனன்
பாண்டி மழவன் பரிந்துசென்று-வேண்டிப்

பெருகுபுகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய
வருகுதிநீ யென்று வணங்கத்-திருவரசு

75. பொன்பற்றியூரன்-பொன்பற்றி யூரைப் பிறப்பிடமாக உடையவன். அண்டர் போரில் அழல் சூரன்-பகைவர் போரில் கோபங் கொள்ளும் வீரன். உக்கிரகுமார பாண்டியன் மேகங்களைப் பற்றி விலங்கிட்டுச் சிறையிட, வேளாளர் விடுவித்தனர் எனும் கதையைத் தழுவியது திருவிளையாடற் புராணம்-இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் காண்க.

76. மட்டு உலவும்-தேன் பாய்கின்ற. செல்வராயன் - பாண்டி மழவன் தந்தை.

78. குடிமைகள் ஐவர்-வண்ணான், நாவிதன், குயவன், பாணன், பறையன்.

80. திரு அரசு - வ~;மீகரமான ராஜ்யம்.

செகராசன் யாழ்ப்பாண அரசை
ஏற்றுக்கொள்ள இயைதல்.

மாறற்குச் செம்பொன் மகுடமணிந் தோனின்வழி
காரணிவ னானபெருங் காரணத்தாற்-பேறுதரச்

சாற்று மிவன்மொழியைத் தன்மனத்தோர்ந்(து) எண்ணிமறு
மாற்றமுரை யாதுநல்ல வாய்மைசொல்லித்-தோற்றமிகு

பாண்டவர்கள் தங்கள் பழையநக ரைத்துறந்து
மீண்(டு)இந் திரப்பிரத்த மேவியபோல்-நீண்டவனும்

நீடுவட மதுரை நீத்துமக ராலயவாய்
நாடுந் திருத்துவரை நண்ணியபோற்-சூடுமலர்க்

கொன்றைச் சடையோன் குளிர்சுவர்க்கம் விட்டிறங்கிச்
சென்றுதிரு வாரூரிற் சேர்ந்ததுபோல்-துன்றுபுகழ்த்

81. மாறற்கு.....வழிகாரன் - பாண்டியனுக்கு முடி தொட்டுக் கொடுக்கும் வேளாளனது வம்சத்தவன் இந்தப் பாண்டி மழவன். பேறு தரச்சாற்றும்-இராஜ்ய செல்வம் தருவதாகச் சொல்லும்.

83. நீண்டவன்-திரிவிக்கிரமனான திருமாலின் அம்சமான கிருஷ்ணன்.

84. மகராலயவாய்-கடலிலே. துவரை-துவாரகை.

85. கொன்றைச் சடையோன்-சிவன்
கொன்றை........ சேர்ந்தது போல்-இந்திரன் பூசித்த வந்த விடங்கப் பெருமானை முசுகுந்தன் அவனிடமிருந்து பெற்றுப் பூமிக்குக் கொணர்ந்து திருவாரூரிற் பிரதிஷ்டை செய்த வரலாறு இங்குக் குறிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண ராசதானியாகிய நல்லூரின் வளம்

தென்மதுரை விட்டுத் திருநகர்யாழ்ப் பாணத்து
மன்னரசு செய்ய மனமகிழ்ந்து-மின்னொளிசேர்

வெங்கதிரைக் கண்டு விரிந்துகளி கொண்டலர்ந்த
செங்கமலங் கூம்பத் திசையிருண்டு-கங்குல்வரச்

சங்கினங்கள் ஈன்ற தரளத்தைச் சந்தரனெனப்
பொங்குங் குமுதம் பொதியவிழிப்பப்- பொங்கருறு

பூவின் மூசநிறை யும்புனலில் வாழ்கயல்கண்
மேவியவளர் பூக மிடறுடைப்பத் -தாவும்

87. வெங்கதிர்-சூரியன். கூம்ப-சுருங்க. சூரியனைக் கண்டு அலர்ந்த தாமரை, திசை இருண்டு இரவு வரச் சுருங்கலாயிற்று. கங்குல் இரவு.

88. சங்குக் கூட்டங்கள் ஈன்ற முத்தின் ஒளியை நிலவொளியென்று குமுதம் அலர்ந்தது. பொங்கர்-சோலை.

89. பூவில் அளிமூச-பூவில் வண்டுகள் hPங்காரம் செய்ய, புனலில் வாழ் கயல்கள்-நீரில் வாழும் கயல் மீன்கள். பூகமிடறு உடைப்பத் தாவும்-கமுகின் கழுத்தைக் கீறப்பாயும். கயல் மீன் குதித்துக் கழுகின் கழுத்திலுள்ள மடலைக் கீறப் பாளை விரியும் என்க.

நல்லூர் நகர நிர்மாணம்
மதித்த வளங்கொள் வயல் செறிதல் லூரிற்
கதித்தமனை செய்யக் கருதி - விதித்ததொரு

நல்ல முகூர்த்தமிட்டு நாலுமதி லுந்திருத்திச்
சொல்லுஞ் சுவரியற்றித் தூண்நிரைத்து - நல்ல

பருமுத் தரம்பரப்பிப் பல்கணியும் நாட்டித்
திருமச்சு மேல்வீடு சேர்த்துக் - கருமச்

94. பல்கணி-சாளரம்: மச்சு-மேனிலைப் பாவு பலகை. கருமச் சிகரம்-வேலைப்பாடுள்ள கோபுரம்.

கொலு மண்டப வர்ணனை

சிகரந் திருத்தித் திருவாயி லாற்றி
மிகுசித்ர மெல்லாம் விளக்கி - நிகரற்ற

சுற்றுநவ ரத்னவகை சுற்றியழுத் தித்திருத்திப்
பத்திசெறி சிங்கா சனம்பதித்து - ஒத்தபந்தற்

கோலவி தானமிட்டுக் கொத்துமுத்தின் குச்சணிந்து
நாலுதிக்கும் சித்ரமடம் நாட்டுவித்துச்-சாலும்

93. மிகுசித்ர மெல்லாம் விளக்கி-நல்ல நுட்பமான விநோத வேலைங் பாடுகளெல்லாம் காட்டி.
95. பந்தற் கோல விதானம் - நிழல் தரும் அழகிய மேற்கட்டி. கொத்து முத்தின் குச்சணிந்து-கூட்டமாகிய மந்துக் குச்சுளால் அலங்கரித்து. சித்ரமடம்-அழகிய மண்டபம்.

பட்டாபிஷேகத்துக்கு நகர் அலங்கரித்தல்

அணிவீதி தோறும் வளர்கமுகு வாழை
அணியணியா யங்கே அமைத்துத் - துணிவுபெறுந்

தோரணங்க ளிட்டுச் சுதாகலச கும்பநிகர்
பூரண கும்பம் பொருந்தவைத்துக் - காரணமாய்

97. சுதாகலச கும்பம்-அமுதம் நிறைந்த கும்பம்.

மன்னன் கோலங்கொள்ளுதல்

எல்லா எழிலும் இயற்றி நிறைந்தபின்பு
நல்லோர் அருள்முகூர்த்தம் நண்ணுமென்று-சொல்லிடலும்

மன்னவனுஞ் சீதநதி மஞ்சனமா டிச்செறிந்து
சென்னியின்நீ ராற்றிச் சிகைதிருத்தித்-துன்னுமெழிற்

பொன்னினங்கி சாத்திப் புகழ்கனகப் பட்டுடுத்து
மன்னுதிரு நீறுவடி வாயணிந்து-உண்ணுமொளி

உத்தாP கஞ்சாத்தி உயர்ந்தசெம்பொற் பாகைதன்னைச்
சித்திரம் தாகச் சிரத்தணிந்தே-ஒத்த

கடுக்கனிட்டுக் கைகளுக்குக் கங்கணமுஞ் சாத்தி
அடுக்கயிரல் ஆழி யணிந்து-தொடுத்தமைத்த

கண்டசரத் தோடுவரு காய்கதிரோன் தன்கிரணம்
மூண்ட பதக்கம் உரத்தணிந்து-கொண்டுடையிற்

சுற்றியரை ஞாண்பொருத்தித் தோள்வலயஞ் சோதிமணி
வெற்றிக் கழல்பதத்தின் மீதணிந்து-மற்றுஞ்

98. முகூர்த்தம் நண்ணும்-சுபமுகூர்த்தம் கிட்டுகிறது.

99. சீதநதி மஞ்சனமாடி-குளிர்ந்த புண்ணிய நதி நீரில் ஸ்நானம் செய்து. சென்னியின் நீராற்றி-தலையீரம் புலர்த்தி.

100. பொன்னின் அங்கி-பொற்சரிகைச் சட்டை. உண்ணும் ஒளி உத்தாPகம்-ஒளியைப் பருகி (மீண்டும் வெளிவீசும்) உத்தரியம்.

101. செம்பொற் பாகை-பீதாம்பரத்தாலாய தலைப்பாகை.

102. ஆழி-மோதிரம்.

103. கண்டசரம்-கழுத்தில் அணியும் பொற்சரம். காய்கதிரோன் தன் கிரணம் உண்ட பதக்கம்-சூரிய கிரணங்களைப் பருகியிருந்து ஒளிரும் பதக்கம். உரத்து அணிந்து-மார்பில் தரித்து.
முடிசூட்டு வைபவம்
சகலா பரணமிட்டுத் தந்திமுகற் போற்றிப்
புகழ்பூ சனைகள் புரிந்து - அகலாது

சிங்கார மாக்கித் திருத்தியழ காயமைத்த
சிங்கா சனத்திற் சிறந்திருப்பச்-சங்கார்ப்பத்

தண்ணுமைசல் லாரி தடாரி திமில்முரசு
நண்ணு முருடு நகுபேரி-எண்ணுகின்ற

மத்தளங்கைத் தாள மணிக்கா களஞ்சுரிகை
தித்திமுதல் வாத்தியங்கள் சேர்ந்ததிர-வித்வசனர்

தம்புருவேய் வீணை சரமண் டலந்தொனித்துச்
சம்பிரம சங்கீதந்; தாமிசைப்ப-விம்பச்

சசிநேர் குடைநிழற்றச் சாமரைகள் வீச
நிசியோட்டு தீவர்த்தி நீட்டச்-சுசியான

பன்னீர் சிவிறப் பரிமளமெங் குங்கமழ
நன்னீர்மை யாலத்தி நாட்டமிடச்-சொன்னீர்மை

ஆசிமறை யோர்புகல ஆரவமுண் டாக்கியிடக்
காசின்மணித் தீபங் கவின்நிரைப்பப்-பேசுபுகழ்ப்

பாண்டி மழவன் பழையவழி யின்வழியே
பூண்டநுதற் பட்டம் புனைந்தருள்-வாண்டிருந்து

பூதானம் பொற்றானம் போற்றுகன்னி காதானம்
மாதானம் அன்னம் அருள்தானம்-கோதானம்

யாவும் மகிழ்ந்துகொடுத் தாரெழிலி;சேர் பேரொளிகள்
தாவுமணி மண்டபத்திற் சார்ந்திருந்து-மேவுமருள்

தேன்போல் மொழிபாகர்ச் சிந்தைசெய்து வந்தனையாய்
ஆன்பால் பழமும் அருந்தியின்-தான்பாரப்

பொற்கலத்தில் இட்டபசும் புத்தமுதம் என்னநின்ற
நற்கறிபால் சீனி நறுநெய்யும்-அற்புதமாய்

ஆனரச மாக்கதலி ஆர்வருக்கைத் தீங்கனிநல்
தேன்மிகுத்த திவ்யமுள தீஞ்சுவையோ(டு) - ஆன(து)

அருந்திப் பசியாறி அஞ்சுசுத்தி செய்து
திருந்துமணிப் பந்தரின்கீழச் சென்று - பொருந்தியசீர்

107. தண்ணுமை, சல்லாரி, தடாரி, திமில், முரசு என்பன வாத்திய வகைகள்.
முருடு, பேரி, மத்தளம், கைத்தாளம், காகளம், சுரிகை, தித்தி என்பனவும் வாத்திய விசேடங்கள்.

108. வித்வசனர்-(சங்கீத) விற்பன்னர்.
109. வேய்-புல்லாங்குழல்,
தம்புரு, வேய், விணை, சரமண்டலம் என்பன இன்னிசைக் கருவிகள். சம்பிரமம் - பெருஞ் சிறப்பும் நிறைவும், விம்பச் சசிநேர்குடை- சந்திரனது பிரதிவிம்பம் போன்ற வெண்கொற்றக்குடை

110. நிசி ஓட்டு தீவர்த்தி-இருளைத் துரத்தும் தீப்பந்தங்கள்.

111. நன்னீர்மை ஆலத்தி நாட்டமிட - நல்ல மங்களத் தன்மையுடைய ஆலத்தி தோன்ற.

112. புகலா - சொல்லி ஆரவம் உண்டாக்கியிட-ஆரவாரஞ் செய்ய.

113. நுதற்பட்டம்-இங்கே நெற்றியில் பொருந்தத் தலையில் அணியும் கிhPடம்.
பாண்டி மழவன்........ புனைந்தருள - பாண்டிய மன்னாக்கு முடிதொட்டுக் கொடுக்கும் வேளாளர் மரபினனான பாண்டி மழவன் செழியசேகர பாண்டியன் புதல்வனான செகராச சேகரனுக்குப் பழையவழியின்படியே பட்டம் புனையும் உரிமையுடையனானினான்.
"மாறற்குச் செம்பொன் மகுட மணிந்தோனின் வழிகாரன் இவன்" என்றார் முன்னும்-கண்ணி18. ஆண்டு இருந்து-அங்கே (முடிசூட்டு மண்டபத்திலேதானே) இருந்து.

114. பூதானம்-பூமியைத்தானம் செய்தல். பொற்றானம்-பொன்னைத்தானம் செய்தல், கன்னிகா தானம் - கன்னிகையை தானம் செய்தல். ஆதானம்-பசுவர்க்கத்தைச் சேர்ந்த எருமை முதலியவற்றைத் தானஞ் செய்தல். அன்னம் அருள் தானம்-உணவு தானம் செய்தல், கோதானம்-பசுவைத் தானஞ் செய்தல்.

116. தேன்மேல்....... செய்து-தேன்போல் இனிய சொல்லையுடை உமாதேவி பாகரான சிவபிரானைத் தியானித்து, ஆன்பால்-பசுப்பால்.

117. புத்தமுதம்-புதிய அமிர்தம். ஆன ரச மா (கனி)ஸ்ரீ இனிய சிறந்த மாம்பழம். கதலி (கனி)-வாழைப்பழம். ஆர் வருக்கைத் தீங்கனி-இனியசுவை நிறைந்த பலாப்பழம்.

118. (மேற்கூறிய முக்கனியும்) தேன் மிகுந்த திவ்யமூள தீஞ்சுளையோடு கூடியவற்றை அருந்தி,

119. ஐந்து சுத்தி - கால்கள்2, கைகள்2, வாய்1.

செகராசசேகரன் பவனி

மேல்அம் பரத்தரசன் மேவும்அயி ராவதத்தின்
கோலம் பொருந்துமத குஞ்சரத்தை - ஞாலம்

புகழக் கொணர்ந்தமைத்த பூஷணங்க ளெல்லாந்
திகழச் சமைத்துத் திருத்தி - மகிழ்வுபெறச்

சீமான் செயவீரன் சித்தசன்நே ரொத்தமன்னன்
கோமா னெனுஞ்சிங்கை யாரியர்கோ - னாமான்மெய்த்

துங்கக் களிற்றில் துலங்கமகிழ்ந் தேறுதலும்
மங்கலஞ்சேர் பல்லியங்கள் மற்றதிர - அங்குமுறு

தந்திரமோர் நான்குஞ் சகலவிர துஞ்சூழ
இந்த்ரபத வீதியென ஏற்றமிஞ்ச - மைந்துபொலி

வங்கங் குலுங்க மலாடங் கிடுகிடென்னக்
கொங்கங் கலங்கிக் குடிவாங்க - வங்கம்

பயந்துநெரிந் தேங்கிப் பதைபதைக்க யானை
நயந்தபதம் வாங்கி நடந்து - வியந்ததெரு

வீதியினில் ஏகநகர் மேவுசனர் யாவர்களும்
நீதிமன்னர் யாரும் நெறிக்கொண்டே - ஆதிதொட்டு

இந்நாள் வரைக்கும்நம்பால் எய்துதுயர் எங்காசசோ
மன்னான உனைக்கண்ட மாத்திரத்தே - இன்னேதான்

ஈடேறி னோம்மிகவும் இன்பமுற்றோம் எவ்வறுமை
காடேறி யோடக் கரைகண்டோம் - தோடேறு

மாலையணி மார்பா வயவீமா வாளபிமா
மாலைநிகர் மன்னான வருகவென்பார் - வேலையென்னக்

கோத்தபெருஞ் சேனைக் குலவேந்தா எம்முகத்தைப்
பார்த்தருளாய் எங்கே பராக்கென்பார் - கீர்த்தியுடன்

முட்டுவார் போல முடுகுவார் நாலுதிக்குங்
கிட்டுவார் நல்வசனங் கேட்டிடுவார் - சட்டமுடன்

பாடுவார் வாசப் பரிமளங்கள் வீசுவார்
ஆடுவார் ஆர்களிகொண் டார்த்தெழுவார் - சூடுமதிக்

கங்காள நாதன் கறைக்கண்டன் மாதுமையோர்
பங்காளன் தன்திருக்கண் பார்வையினால் - மங்காமல்

ஆண்டிலொரு நூறும் அழியாமை இப்பதியை
ஆண்டுமிக வாழ்வாய் அரசவென - ஈண்டி

மலர்மாரி தூவி வருவார்கள் யாரும்
பலகாலும் பாதம் பணிய - நலமான

120. மேல் அம்பரத்து அரசன்மேவும் அயிராவதத்தின் கோலம் பொருந்தும் மதகுஞ்சரம்-தேவலோகத்து அரசனான இந்திரன் ஏறும் ஐராவதம்போல் அழகுவாய்ந்த மதங்கொண்ட பட்டத்து யானை-

122. சித்தசன் நேரொத்த மன்னன்-மன்மதனுக்குச் சரிசமானமான அழகுடைய அரசன்

123. பல் இயங்கள்-பலவித வாத்தியங்கள். அங்கம் உறு-உறுப்புக்கள் குறையாத.

124. தந்திரம் ஓர் நான்கு-நால்வகைச் சேனை. கச,ரத,துரக, பதாதிகள். இந்தரபத வீதி-தேவேந்திரனது பவனி. மைந்து பொலி-வீரம் மிகுந்த.

125-126. வங்கம், மலாடம் கொங்கம் முதலான தேசங்கள் அஞ்சி நடுங்க யானை கால் தூக்கி வைத்து என்பது இக்கண்ணிகளிற் போந்த பொருள்.

127. நகர்....நெறிக் கொண்டே-நகர மாந்தரும் சிற்றரசரும் அரசன் பவனி சேவித்து உடன் செல்பவராய்

129. தோடேறு இதழ் பொருந்திய.
130. வயவீமா-வலிமையில் வீமனை ஒத்தவனே. வாள் அபிமா-வாள் வித்தையில் அர்ச்சுனன் புதல்வன் அபிமன்யுவை ஒத்தவனே. மாலை நிகர் மன்னா-விஷ்ணுவை ஒத்த அரசனே.

131. வேலையெனக் கோத்த பெருஞ்சேனை-கடல்போலத் தொடர்ந்து வரும் பெரிய சேனை (யையுடைய). எங்கே பராக்கு- வேறெங்கேயோ எதையோ பாக்கின்றாயே!

132. கீர்த்தியுடன் முட்டுவார் போல முடுகுவார்-அரசன் புகழ் கூறிக் கொண்டே வெகு சமீபத்தில் விரைந்து வருவார்கள். (சிலர்) நல்வசனம் கேட்டிடுவார்0அரசன் கூறும் அருள் மொழிகளைக் கேட்டு மகிழ்வார் (சிலர்). சட்டம் -ஒழுங்கு

133. ஆர்களி-நிறைந்த சந்தோசம். ஆர்த்து-ஆரவாரஞ் செய்து.

அரசன் பவனிகாணப் பெண்கள் ஓடிவருதல்

மங்கையர் சூழ் மன்னன் வரவறிந்து வாய்ந்தகுடக்
கொங்கை குலுங்கக் சூழல்சரியச்-செங்கைவளை

ஆர்ப்பச் சிலம்புகொஞ்சு அம்புலியைப் போல்வதனம்
வேர் க்கவிரைந் தோடிமணி வீதிவந்து-பார்க்கிலிவன்

பவனி காண வந்த பெண்கள் பலவாறு கூறுதல்;

விண்ணவனோ ஆதி விரிஞ்சனோ செங்கமலக்
கண்ணானோ பேரளகைக் காவலனோ-மண்ணரசாள்

வேந்தர்களின் முன்னாம் விசயனோ வீடுமனோ
ஆய்ந்த ரகுகுலஞ்சேர் ஆரியனோ-போந்தவன்றன்

சந்தமணி மார்பழுந்தச் சாரா திருந்தனமேல்
இந்தமுலை யென்னோ வெழுந்ததென்பர்-மந்திரமாய்

நாமொருதூ தேவி நயந்தியவனை மேவியின்பக்
காமரசம் உண்போம் கலக்கமென்பார்-பூமியில்யாம்

கொண்டவிர கந்தீரக் கொங்கையினில் இங்கிவன்கை
முண்டகந்தொட் டால்அதுவே மோட்சமென்பார்-வண்டு

செறிந்ததொடை யான்இவனைக் சேராமல் யாமும்
இறந்ததினால் என்னபய னென்பார்-நிறந்திகழ

இப்பிறப்பில் இங்கிவனைச் சேராமல் யாமிறந்தால்
எப்பிறப்பில் துய்பபோம்இவ் வின்பமென்பார்-இப்படியே

பேதையர்முன் னாய்எழில்சேர் பேரிளம்பெண் ஈறாகக்
காதலிடை மூழ்கிவிடக் காவலனும் - போத

நகரி வலம்வந்து நானிலமும் போற்றப்
புகலுமணி மாளிகையிற் போந்த-இகலரிமாத்

140. ரகு குலஞ்சேர் ஆரியனோ? -ரகுகுல திலகனான ஸ்ரீராமனோ?
141. மந்திரமாய் - இரகசியமாய்

142. கலங்கம் - கலங்க மாட்டோம்.

143. கை முண்டகம் - கையாகிய தாமரை.

144. தொடை - மாலை

145. துய்ப்போம் - அநுபவிப்போம்.

146. எழில் - அழகு.
பேதை.........பேரிளம் பெண் ஈறாக - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, பேரிளம் பெண் என்னும் ஏழபருவப் பெண்களும் (இவை விலைமாதர் வீதியில் நிகழ்ச்சியாகக் கொள்க. உலா இலக்கணம் அதுவே) போத-திருப்தியாக-நன்றாக.

147. நானிலமும் போற்ற - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நாலுவகை நிலத்து மக்களும் துதிக்க. இகல் அரிமாவலிய சிங்கம்.

148. தண்ணிளி-குளிர்ந்த கிருபை. மெய்ந்நலன்-தேக காந்தி-அழகு. அங்கு உன்னி-அப்போது ஆகவேண்டியவைகளை ஆலோசித்து.

148. தேம் கமழும்-தேன்வாசம் வீசும்.

புவனேகவாகு என்னும் பிராமண மந்திரியை
நல்லூரிற் குடியிருத்துதல்

தாங்குமணி ஆசனத்தில் தண்ணிளியும் மெய்ந்நலனும்
ஒங்கநனி வீற்றிருந்தங்(கு) உன்னித் - தேங்கமழும்

புண்டரிக மார்பன் புகலுமது ராபுரியோன்
எண்டிசையும் ஏத்தும் இராசமந்தரி - கொண்டதொரு

வேதக் கொடியன் விருதுபல பெற்றதுரை
கீதப் பிரவுடிகன் கிர்பையுள்ளான - தீதற்ற

புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள்
ளான் புவியோர்
வந்திறைஞ்சும் பாத மகிமையுள்ளான் - முந்(து) அரிபால்

தோன்றி அகிலாண்ட கோடியெல்லாந் தோற்றமுற
ஈன்றோன் குலத்தில் எழுகுலத்தான் - சான்றோன்

149. புண்டரிக மார்பன் - தாமரை மாலை அணிந்தவன். தாமரைமாலை பிராமணர்க் குரியது.

150. வேதக் கொடியன்-வேதக் கொடியும் பிராமணர்க்கு உரியது: விருது-வெற்றிச் சின்னம்: கீதப்பிரவுடிகன்-புகழும் பிரபுத்துவமும் உடையவன். கிர்பை உள்ளான்-இரக்கம் உடையவன்

151. புந்தி - (சூட்சும) புத்தி

151-152. அரிபாற் றோன்றி........ ஈன்றோன் - பிரமா.

வேளாண் தலைவர்களை அங்காங்குக் குடியிருத்துதல்
அரசனுக்கு முடிசூட்டும் உரிமை பெற்ற
பாண்டிமழவன் பிரதாபம்

புவனேக வாகுவென்னும் போரமைச்சன் தன்னை
நவமேவு நல்லூரில் நண்ணுவித்துச் - சிவநேச

ஆகத்தான் தோன்றும் அனிசத்தான் அன்னமருள்
தாகத்தான் விஞ்சுந் தருமத்தான்-சோகந்தீர்

புவியோர் என்ற சொல் த. கைலாசபிள்ளை, செ. வெ. ஐம்புலிங்
கம்பிள்ளை பதிப்புக்களில் இல்லை. ஆ.சதாசிவம் பதிப்பில் (ஈழத்துத்
தமிழ்க் கவிதைக் களஞ்சியம்) உள்ளது.

பாகீ ரதிகுலத்தான் பைம்பொன்மே ழித்துவசன்
பாகாரும் வேங்கைப் பருப்பதத்தான் -வாகாருங்

கார்காத்து விட்டதென்னக் காமுறுபொன் பற்றியென்னும்
ஊர்காத்து விட்டுவந்த உச்சிதவான் - பேர்சாற்றில்

வாசவன்நேர் பாண்டி மழவனையுந் தம்பியையும்
நேசமுறு மைத்துனமை நேர்ந்ததுரை - பேசுபுகழ்ச்

153. சிவநேச ஆகத்தான்-சிவனிடத்தே அன்பு கொண்ட இதயமுடையவன.

154. தோன்றும் அனுஷத்தான்-அனுஷ ந~த்திரத்திற் பிறந்தவன். அன்னம் அருள் தாகத்தான்-பசித்து வந்தோர்க்கு அன்னம் அளிக்கும் பெருவிருப்பு உடையவன். விஞ்சுந் தருமத்தான்- மிகுந்த தருமவான்.

155. பாகாரும் வேங்கைப் பருப்பதத்தான்-கரும்பு வளரும் வேங்கை மலைப் பிரதேசத்துக்கு உரிமை பூண்டவன்.

பாண்டி மழவனையும் அவன் தம்பியையும் அவர்கள் மைத்துனன் செண்பக மழவனையும் அவன் தம்பியையும் திருநெல்வேலியிற் குடியிருத்திமை கூறினார்.

நரசிங்கதேவன் பிரதாபம்

சண்பகப்பேர் வாய்ந்த திறன்மழவ னோடும்அவன்
நண்புபெறு தம்பியையும் நானிலத்திற்-பண்புசெறி

தக்க பலவளமுஞ் சார்ந்துகல்வி நாகரிகம்
மிக்கதிரு நெல்வேலி மேவுவித்துத்-தக்கவர்கள்

எல்லாரு மேத்தும் இரவிகுல மன்னவனார்
சொல்லும் பெயர்புனைந்த சுத்தபர-நல்லபுகழ்

சூழுங்கங் காகுலத்துத் துய்யதுளு வக்கூட்டம்
வாழும் படிக்குவந்த மாசின்மணி-ஏழுகடல்

சுற்றுபுவி முற்றுந் துதிக்குஞ் சுகபோசன்
கற்றவருக் கீயுங் கனகதரு-வெற்றிதரு
காவிமலர் மார்பன் கருதும்வெள் ளாமரசன்
மேவுகலை ஞான வினோததுரை-காவிரியூhச்

செய்ய நரசிங்க தேவனைநற் சீர்வளங்கள்
வைகுமயி லிட்டிதனில் வாழவைத்து-வையகத்து

160 இரவிகுலம் மன்னவனார் சொல்லும் பெயர்- இராமாவதாரம் மெடுத்த விஷ்ணுவின் திருநாமங்களில் ஒன்றான "நரசிங்கம் என்னும் பெயர்.

161 கங்கா குலத்துத்.......மாசில்மணி-கங்கா குல வேளாளரில் துளுவ வேளாளர் மரபில் வந்த இரத்தினம் போன்றவன்.

162 போசன்-கலைஞர்களை ஆதரிப்பதில் போசராசளை ஒத்தவன். கனக தரு - கற்பக விருட்சம்

163 காவிரியூர் - நரசிங்க தேவன் பிறப்பிடம்.

164 செய்ய.......வாழ வைத்து - நரசிங்க தேவனை மயிலிட்டியிற் குடியிருத்தியமை கூறினார்.

செண்பகமாப் பாணன் பிரதாபம்

முத்தமிழ்சேர் சித்தன் முகசீ தளவசனன்
சித்தச ரூபன்மன் திருச்சமுகன் - மெத்தியசீர்

வாலிநகர் வாசன் மருள்செறிவெள் ளாமரசன்
கோலமிகு மேழிக் கொடியாளன் - மூலமிகு

செண்பகமாப் பாணனையுஞ் சேர்ந்தகுலத் தில்வந்த
தண்குவளைத் தார்ச்சந்த்ர சேகரனாம் - பண்புடைய

165 முக சீதள வசனன் - 'சீதனம்' என்பதைத் தாப்பிசையாக 'முகம்' 'வசனம்' இரண்;டனும் கூட்டுக. குளிர்ந்த அருள் நிறைந்த முகத்தையும் இனிய வசனத்தையும் உடையவன். மன் திருச் சமுகன்- அரச சபையில் வீற்றிருக்கும் பெருமை உடையவன்.

166 வாலி நகர்-செண்ப மாப்பாணனது செனனநகர். மூலம் மிகு-வம்சப் பெருமையுடைய.

167 செண்பக மாப்பாணனையும்-மாப்பாண பூபனையும் செண்பக மாப்பாணனையும் அவன் குலத்திலே தோன்றியவனும் குளிர்ந்த குவளை மாலை அணிந்தவனுமான சந்திரசேகர மாப்பாணனையும்.

கனகராயன் பிரதாபம்

மாப்பாண பூபனையும் மாசில்புகழ்க் காயல்நகர்ப்
பூப்பாணன் என்னவந்த பொன்வசியன் - கோப்பான

சீரகத்தார் மார்பன் செறிகனக ராயனையும்
பாரகத்துள் மேன்மை பலவுடைத்தாய் - நீரகத்தாய்த்

168 காயல் நகர்-கனகராஜன் பதி.
பூப்பாணன்-புஷ்ப பாணங்களையுடைய மன்மதன். பொன் வசியன்-தனலைவசிய குலத்தவன். கோப்பான சீரகத் தார்- கோக்கப்பட்ட சீரக மாலை தனவைசியர்க் குரியது

166-170 செண்பகமாப் பாணனையும் கனகராயனையும் தெல்லிப் பழையிற் குடியிருத்தியமை கூறினார்.
பேராயிரவன் பிரதாபம்.

தொல்லுலகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந்
தெல்லிப் பழையில் திகழவைத்து - நல்விருதாய்க்

கோட்டுமே ழத்துவசன் கோவற் பதிவாசன்
சூட்டு மலர்க்காவித் தொடைவாசன் - நாட்டமுறும்

ஆதிக்க வேளாளன் ஆயுங் கலையனைத்துஞ்
சாதிக்க ரூப சவுந்தரியன் - ஆதித்தன்

ஓரா யிரங்கதிரோ(டு) ஒத்தவொளிப் பொற்பணியோன்
பேரா யிரவனெனும் பேரரசைச் - சீராருங்

கன்னல் செறிவாழை கமுகுபுடை சூழ்கழனி
துன்னும் இணுவில் துலங்கவைத்துப்-பொன்னுலகிற்

170 நல் விருதாய்க் கோட்டும் மேழித்துவசன்-நல்ல வெற்றிச் சின்னமாக எழுதப்பட்ட கலப்பை பொருந்திய கொடியை உடையவன்.

172 ஆதிக்கம்-தலைமை. ஆயும் கலை அனைத்தும் சாதித்த (வன்)- ஆராய்ந்த கலைகள் யாவும் கற்றுத் துறைபோகியவன். ஆதித்தன் ஓராயிரம்.......பொற்பணியோன்-சூரியன் ஆயிரங் கதிர்கள் வீசும் ஒளிக்கும் சமமாக ஒளிவீசும் பொன்னாபரணம் அணிந்தவன்.

173 கன்னல்-கரும்பு. புடைசூழ்-பக்கத்தே சூழ்ந்த, கழனி-வயல்

நீலகண்டன் பிரதாபம்

கற்பகநேர் கைத்தலத்தான் கச்சூர் வளம்பதியான்
மற்பொலியுந் தோட்குவளை மாலையினான்-பொற்பார்

நதிகுலவெள் ளாமரசன் நானிலத்தின் மேன்மை
அதிகபுகழ் பெற்ற அழ காளன்-நிதிபதிபோல்

மன்னன்நிக ரான்மன்னன் மாமுத் திரைகள்பெற்ற
தன்னிகரில் லாதவிறல் தாட்டிகவான்-இந்நிலத்தில்

ஆலமுண்ட கண்டன் அடியைமற வாதவள்ளல்
நீலகண்ட லென்னும் நிருபனையும்-மேலுமவன்

தம்பியரோர் நால்வரையுந் தான்பச் சிலைப்பளியில்
உம்பர்தரு வென்ன உகந்துவைத்துச்-செம்பதும்

175 கற்பக நேர் கைத்தலத்தான் - கற்பகத்தை ஒப்பக் கொடுக்கும் கையை உடையவன். கச்சூர் - நீல கண்டன் முன் வாழ்ந்த இடம். மற்பொலியும்.......மாலையினான் - வலிமை மிகுந்த தோளில் குவளை மாலை அணிந்தவன். பொற்புஆர் - அழகு பொருந்திய.

176 நதிகுலம் - கங்கை குலம், நிதிபதி - செல்வத்துக்கு அதிபதியான குபேரன்.

177 மன்னன் நிகரான் - அரசனை ஒத்தவன். மன்னவன் மா முத்திரைகள் பெற்ற - அரசன் கொடுத்த விருதுப் பத்திரங்கள் பெற்ற விறல் தாட்டிகவான்-வீரமும் பலமும் உடையவன்.
178 ஆலம் உண்ட கண்டன் - சிவன். நிருபன் - அரசன்.

179 உம்பர் தரு - தேவ விருட்சம் - கற்பகம் நீலகண்ணடனையும் தம்பியர் நால்வரையும் பச்சிலைப் பள்ளியில் குடியிருத்தியமை கூறுகின்றார்.

கனகமழவன் பிரதாபம்

மாதுவள ருஞ்சிகரி மாநகர்வெள் ளாமரசன்
சாதுரியன் காவிமலர்த் தாரழகன் - ஓதுமொழி

உண்மையுள்ளான் மேலும் யுகப்புள்ளான் ஊக்கமுள்ளான்
வண்மையுள்ளான் மேலும் வளமையுள்ளான் - திண்மைபெறு

மாரன் கனக மழவனைப்பின் நால்வருடன்
சேரும் புலோலி திகழவைத்துப் - பேரளகைக்

180 செம்பதும் மாது வளரும் சிகரி - தாமரையில் வாழும் மகாவ~மி வாசம் செய்யும் சிகரி; சிகரி-கனகமழவன் செனனவூர். கனகமழவனையும் வேறு நால்வரையும் புலோலியிற் குடியிருத்தியமை கூறினார்.

கூபகாரேந்திரன் பிரதாபம்

காவலன்நேர் செல்வன்மலர்க் காவியணி யும்புயத்தான்
பாவலருக் கின்பப் பசுமேகம் - பூவில்வரு

கங்கா குலத்துங்கன் கவின்பெறுமே ழிக்கொடியோன்
மங்காமல் வைத்த மணிவிளக்குச் - சிங்கார

கூபகநா டாளன் குணராசன் நற்சமுகன்
கூபகா ரேந்த்ரக் குரிசிலையுஞ் - சோபமுற

நண்;ணக் குலத்தின் நரங்குதே வப்பெயர்சேர்
புண்ய மகிபால பூபனையும் - மண்ணினிடைப்

பல்புரத்தின் நல்வளமு மொவ்வாப் பலவளஞ்சேர்
தொல்புரத்தின் மேன்மை துலங்கவைத்து - வில்லில்

182 பேரளகைக் காவலன் நேர் செல்வன்-பெரிய அளகாபுரிக்கு அரசனான குபேரனைஒத்த செல்வமுடையவன்.

185 கூபக நாடாளன் - கூபக நாட்டுத் தலைவன். குரிசில்-பெருமையிற் சிறந்தவன்;. சோபம்-சோபிதம் - பெருமை.

186 நண்ணக் குலத்தில் வந்த - அந்தக்குடியிற் பிறந்த.

187 பல் புரத்தின் நல் வளமும் ஒவ்வா - பல நகர்களின் நல்ல செல்வமும் ஒருங்கு சேர்ந்தாலும் ஒப்பாக மாட்டாத, கூபகாரேந்திரனையும் அவன் ஞாதியான நரங்குதேவனையும் தொல்புரத்திற் குடியிருத்தியமை கூறினார்.
தேவராசேந்திரன் பிரதாபம்

விசயன்போர் வீமனுயர் வீறுகொடைக் கன்னன்
இசையிற் பொறையில் இயல்தருமன் - வசையற்ற
புல்லூர்த் தலைவன் புகழ்செறிவெள் ளாமரசன்
எல்லோர்க்கும் மேலாம் இரத்னமுடிச் - செல்வமுறு

தேவரா சேந்த்ரனெனுஞ் செம்மல்தனை - இந் நிலத்திற்
கோவிலாக் கண்டி குறித்துவைத்து - நாவிரியும்

188 இசை-புகழ். பொறை-பொறுமை. இயல் - சான்றாண்மை. வசை அற்ற-குற்றம் இல்லாத.

189 புல்லூர் - தேவராசேந்திரன் பதி. இரத்தினமுடிச் செல்வம் இரத்தினமுடி தரித்தற் கொத்த செல்வம்.

190 செம்மல் - பெருமையிற் சிறந்தவன்;. தேவராசேந்திரனைக் கோவிலாக் கண்டியிற் குடியிருத்தியமை கூறினார்.

மண்ணாடு கொண்ட முதலி பிரதாபம்

சீர்த்தியுறு செம்மல் செழுந்தொண்டை நாட்டரசன்
கோத்தமணப் பூந்தார்க் குவளையினான் - ஆர்த்தகவிக்

கம்ப னுரைத்த கவியோ ரெழுபதுக்குஞ்
செம்பொன்(ன்)அபி சேகஞ் செயுங்குலத்தான் - பைம்புயல்நேர்

மண்ணாடு கொண்ட முதலியயெனும் மன்னவனை
உள்நாட் டிருபாலை ஊரில்வைத்து - விண்ணாட்(டு)

191 நா விரியும் சீர்த்தி - நாவினால் சொல்லுந்தோறும் பெருகுகின்ற புகழ். ஆர்த்த கவிக்கம்பன் உரைத்த.....குலத்தான் - கம்பர் ஏரெழுபது பாடி அரங்கேற்றியபோது அவருக்குக் கனகாபிஷேகம் செய்த வேளாளன் குலத்திலே பிறந்தவன்.

193 உள்நாட்டு - நடுவூரிலே. மண்ணாடு கொண்ட முதலியை இருபாலையிற் குடியிருத்தியமை கூறினார்.

தனிநாயக முதலி பிரதாபம்

இறைவனிகர் செல்வன் எழில்செறிசே யூரன்
நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும்

பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன்
நீங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய்

இனியொருவர் ஒவ்வா இருகுலமுந் துய்யன்
தனிநா யகனெனும்போர் தாங்கு - முனியவனை

மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென்
பற்று நெடுந்தீவு பரிக்கவைத்துச் - சுற்றுபுகழ்

194 எழில்செறி சேயூரன் - அழகு நிறைந்த சேயூரைப் பிறப்பிடமாக உடையவன். நிறை - நடுவு நிலைமை. நறை கமழும் - தேன் வாசம் வீசும்.

196 இருகுலமும் துய்யன் - தந்தை குலம், தாய் குலம்; ஆகிய இரு மரபும் குற்றமற்றவன்

197 பரிக்க - தாங்க - காப்பாற்ற. இருமரபுந் துய்ய தனிநாயக முதலியைத் தென்பற்றிலுள்ள நெடுந்தீவிற் குடியிருத்தியது கூறினார்.
பல்லவன் பிரதாபம்

வில்லவன்தன் வஞ்சி நகருறைவெள் ளாமரசன்
பல்லவனோ டிரண்டு பார்த்திவரை - நல்விளைவு

தாவுங் களனிகளுஞ் சாற்றும் பலவளமும்
மேவுவெளி நாட்டில் விளங்கவைத்துப் - பூவில்

198 வில்லவன்-சேரன். வஞ்சிநகர் - சேர ராஜதானி - பல்லவனது பதி. பார்த்திவர் - அரசர் - தலைவர்

198-199 பல்லவனையும் வேறிருவரையும் வெளிநாட்டித் குடியிருத்தியமை கூறினார்.

நகர்காவலர், சேனைத்தலைவர் முதலியோரை நியமித்தல்

தலையாரி சேவகரில் தக்கவர்கள் தம்மை
நிலையாக நாட்ட நினைத்துச் - சிலைதரித்த

வல்லியமா தாக்கனென்னு மரசூர வீரினைச்
சொல்லியமேற் பற்றுத் துலங்கவைத்து - நல்ல

இமையாண மாதாக்க னென்னும் இகலோனை
அமைவாம் வடபற்றி லாக்கி - இமயமறி

செண்பகமா தாக்கனெனுஞ் சீர்விறலோன் தன்னையிரு
கண்போலக் கீழ்ப்பற்றைக் காக்கவைத்து - ஒண்பயிலும்

வெற்றிமா தாக்கனெனும் வெய்யதிற லோனைமிக
உற்றிடுதென் பற்றி லுகந்துவைத்துச் - செற்றவரை

வென்ற படைவீர சிங்கனெனும் வீரியனைத்
தன்திருச்சே னைக்குத் தலைமைசெய்து - துன்றிவரும்

200 நாட்ட - நியமிக்க. கிலை - வில்.

201 மாசூர வீரியன் - மிகுந்த தீரம் பொருந்திய வீரன். வல்லிய மாதாக்கனை மேற்பற்றுக் காக்க நியமித்தமை கூறினார்.

202 இகல்-வலிமை. இமையாண மாதாக்கனை வடபற்றுக் காக்க வைத்தமை கூறினார்.

203 இமயம் அறி - இமயம் வரை புகழ் பரவப் பெற்ற. செண்பக மாதாக்கனைக் கீழ்ப்பற்றுக் காக்க ஏற்படுத்தியமை கூறினார். ஒண் பயிலும் - புகழ் மிகுந்த.

204 வெற்றி மாதாக்கனைத் தென்பற்றுக் காக்க நியமித்தமை கூறினார்.

205 படைவீர சிங்கனைப் படைத்தலைவனாகப் பணித்தமை கூறினார்.

சேனைகட்கு இடம் வகுத்தல்

ஆனை குதிரை யமரு மிடங்கடல்போற்
சேனை மனிதர் செறியிடமோ(டு) - ஆனவெல்லாம்
206 கடல்போற் சேனை மனிதர் செறி இடம் - கடல் போற் பெரிய சேனையிலுள்ள யானை வீரர், குதிரை வீரர், தேர் வீரர் காலாட்கள் ஆகியோர் நெருங்கி வாழும் இடங்கள். ஆன எல்லாம் - இன்னும் சேனைக்கு வேண்டிய ஆனைப்பந்தி, குதிரைப்பந்தி முதலியன.

செகராசன் புகழ்

அங்கங்கே சேர்வித் தருள்தார காகணத்துள்
திங்க ளிருந்தரசு செய்வதுபோல் - துங்கமுறு

பூபாலர் வேந்தன் புதியநக ராதிபதி
சாபாலங் காரந் தருராமன் - மாபா

ரதமாற்று மாயவன்போ லெய்துபகை மாற்றும்
மிதமாய்ந்த வீரர் விநோதன் - பதுமமலர்ப்

புங்கவனைப் போலப் புவிதிருத்தி யாண்டுவைத்த
சங்கச் சமூகத் தமிழாழன் - பொங்குந்

தரைராசன் அம்புவியைத் தாங்குமகா ராசன்
துரைராசன் தூயபுவி ராசன் - வரமார்

207 தாரகா கணத்துள் திங்கள் - ந~த்திரங்கட்கிடையே சந்திரன்.

208 சாப அலங்காரம் தரு ராமன் - வில்லை ஆபரணமாகத் தரித்த இராமனை ஒத்தவன்

209 மாபாரதம் ஆற்றும் மாயவன் போல் - மகா பாரத யுத்தத்தை நடத்தி முடித்த கிருஷ்ணன் போல். எய்து பகை மாற்றும் விதம் ஆய்ந்த வீரர் வினோதன் - ஏற்பட்ட பகையை அழிக்கும் விதங்களை ஆராய்ந்தறிந்தவன்: மேலும் வீரச் செயல்களை வினோதமாகச் செய்பவன்.

210 புங்கவனைப் போலப் புவி திருத்தி ஆண்டு வைத்த சங்கச் சமுகத் தமிழாளன் - யகரம் உடம்படு மெய்யாதலால். ஆண்டு அவ்விடத்தில் (யாழ்ப்பாணத்தில்) எனவும், வைத்த - தன்னால் நிறுவப்பட்ட எனவும். சங்கம் எனவும், சமுகம் புலவர் கூட்டம் எனவும், தமிழாளன்-(பூமியை ஆளுந்திறமை போல்) தமிழ்க் கலைகளைப் பரிபாலிக்கும் அறிவுடையவன் எனவும் பொருள் பட்டு, தேவாரசனைப் போல் பூமியைத் திருத்தி வளம் படுத்திக் தனது இராஜதானியாகிய யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கத்திலுள்ள புலவர் கூட்டத்திலிருந்த தமிழறிஞன் எனக் கொள்க.

அரசன் சொக்கநாதர் கோவில் அமைத்துப்
பிரதிஷ்டை செய்ய உத்தேசித்தல்

செயசிங்க ஆரியனாம் செய்யகுல ராசன்
நயந்துபுவி ஆண்டிருக்கு நாளில் - வியந்த

மதுரைநகர்ச் சொக்கர் மலர்ப்பாதம் போற்றி
இதயத் திரவுபக லெய்தி - விதனமுறும்

அக்கவின்சேர் கோவி லமைத்துப்ர திட்டைசெய்து
சொக்கலிங்க மென்றுபெயர் சூட்டுமென்ன - மிக்க

213 விதனம் உறும்.......அமைத்து - (சொக்கநாத சுவாமி கோவிலில் வழிபாடு செய்தவதற்கில்லையே என்னும்) கவலைக்கு விஷயமான அச்சொக்கநாதர் கோவிலை (நல்லூரிலே) அமைத்து.

214 சூட்டும் என்ன - சூட்டுவோம் என்று.

அரசனுக்குக் கியலாயநாத சுவாமி
கனவில் தோன்றி அருளுதல்

மனநினைவின் மன்னன் மதித்துமஞ்ச மீதிற்
புனைதுயிலாய் மேவியிடும் போது - புனிதமிகு

மாயனுக்கும் வேதனுக்கும் மாமறைக்கும் எட்டாத
தூயபெரு ஞானச் சுடர்ப்பிழம்பு - காய்கதிரோ(டு)

ஒத்ததிரு மேனி உருவமொழித் துப்புவியில்
வைத்த மனிதர் வடிவாகிச் - சித்ரமிகு

காதிற் கடுக்கனிட்டுக் கைக்கங் கணமணிந்து
சோதித் திருவலயந் தோளிலிட்டுப் - பாதத்தில்

வீரக் கழலணிந்து மிக்கசெம்பொற் பட்டுடுத்துச்
சாரு மகுடந் தலையிலிட்டுப் - பாரச்

சகல பணியுமிட்டுத் தன்மனையென் றோர்பெண்
புகலுஞ் சருவாங்க பூஷணியாய் - மிகவெழில்சேர்

வம்பார் குழுலியொடு மல்குகன வின்கண்நின்று
நம்பேர் கயிலாய நாதனென்ன - நம்பி

விழித்தெழுந்து மன்னன் விடையேறு நாதன்
ஒளித்துநின்(று)ஆட் கொண்டானென்(று) உன்னிக்-களித்துமனப்

பூரணம தாகிப் புனிதா லயமியற்றக்
காரணமாய் நன்முகூர்த்தங் காட்டுவித்து - ஆரணத்திற்

216 காய் கதிரோடு ஒத்த - வெயில் வீசும் சூரியனை ஒத்த

219 சாரும் மகுடம் - பொருந்திய முடி.

220 சருவாங்க பூஷணி - சகல உறுப்புகளிலும் ஆபரணம் அணிந்தவள்

221 வம்பார் குழலி - வாசனை பொருந்திய கூந்தலை உடையவள் (உமாதேவி)

223 பூரணம் - நிறைவு. புனித ஆலயம் - பரிசுத்தமான கோவில்

அரசன் ஆலயம் ஆதிய அமைத்தல்

சொன்னமுறை தப்பாமற் சுற்றிச் சுவரியற்றி
மன்னுசபை மூன்றும் வகுத்தமைத்து - உன்னி

அதிசயிப்ப ஈசனுறை ஆலயமாற் றிப்பார்ப்
பதிகோவில் பாங்கருறப் பண்ணி - விதியாற்

பரிவார தேவர் பதியாக சாலை
உரிதாம் இடங்களில் டாக்கி - அரிதான

உக்ராண வீடு(ம்)அமைத் தோதுதிரு மஞ்சனத்து
மிக்கதிரு வாலியுடன் வெட்டுவித்து - முக்யமுறு

மாமறையோர் வாழு மணிஆல யங்கள்செய்து
ஓமமுறை செய்யுமிடம் உண்டாக்கிச் - சாமநிதம்

ஓதுவிக்கும் ஆலயம்செய் துண்டுபசி தீர்த்துவைக
ஒதனத்தா னப்பதியும் உண்டாக்கிச் - சோதியுறை

தேரோடும் வீதி திருத்திமட மும்சமைத்துக்
காரோடும் பொங்கர்களும் காரணித்துச் - சீரான

செம்பதும ஓடைகளும் செய்யமணி மேடைகளும்
உம்பர்பதி என்னமகிழ்ந்(து) உண்டாக்கி - அம்புவியுட்

223 வேதத்திற் கோயில் அமைப்புக் கூறவில்லை. ஆகமத்திற் கூறப்பட்டுள்ளது. இனம் பற்றி உபசரித்துக் கூறினார்.

224 சபை மூன்று - மூலத்தானம், நிருத்தமண்டபம், மகாமண்டபம்

225 ஆலயம் ஆற்றி - ஆலயம் உண்டாக்கி.

225 பார்ப்பதி கோவில் பாங்கர் உறப் பண்ணி - உமாதேவி கோவிலும் பக்கத்தில் அமைத்து.

226 பரிவார தேவர் பதி யாக சாலை உரிதாம் இடங்களில் உண்டாக்கி - பரிவார தேவர்கட்குக் கோயிலும் யாகசாலையும் உரிய இடங்களில் அமைத்து.

227 உக்கிராண வீடு - பண்டசாலை
ஓது திரு மஞ்சனத்து..........வெட்;டுவித்து - சொல்லப்படும் திரு மஞ்சனக் குளமும் வெட்டுவித்து. முக்கியம் உறு - பிரதானமான.

228 சாமும் நிதம் ஓதுவிக்கும் ஆலயம் - சாம வேதத்தைத் தினமும் அத்தியயனம் செய்யும் மண்டபம்.

229 ஓதனத் தானப் பதி - அன்னதானமடம். சோதி உறை - ஒலி வடிவினரான சிவன் எழுந்தருளிய.

230 கார் ஓடும் பொங்கர் - மேகம் தவழும் சோலை. காரணித்து - உண்டாக்கி.

231 செம்பதும ஓடை - செந்தாமரைக் குளம்

பிரதிஷ்டை வைபவம்

கேதாரந் தன்னிற் கிளர்மதன்அர்ச் சித்துவைத்த
ஆதார லிங்கம் அழைத்தருளி - மீதாக

வந்தபிர திட்டை மகிழ்வோடு செய்தருள
அந்தணருள் ஆய்ந்திங்கு அனுப்புமெனச் - செந்திருவார்
சேதுபதிக்குச் செழும்பா சுரமனுப்பி
ஆதிமறை யோர்கள்புகழ் ஆசிரியன் - வேதமுணர்

கங்கா தரனெனும்பேர்க் காசிநக ரோனைஇனி(து)
இங்கே யவனனுப்ப எய்தியபின் - செங்கனிவாய்ச்

சீதை கொழுநன் திகழ்ராம நாதனைஅப்
போதுபிர திட்டை புரிந்ததுபோல் - ஓதுவன்னச்

சந்தனக்கால் நாட்டிச் சலாகைநிரைத் துப்பரவிச்
சுந்தரப்பொற் பந்தல் துலங்கவிட்டு - அந்தரத்தில்

ஆடுகொடி கட்டி அதுமுதலாய் செய்தமைத்து
நீடு விதானம் நிறைவேற்றிக் - கோடிவன்னக்

கச்சால் அலங்கரித்துக் கற்றைமுத்தின் குச்சணிந்து
பச்சைகறுப் புச்சிவப்புப் பத்தியிட்டு - இச்சையுடன்

துப்புக் குவைபிணித்துச் சுத்திதனக் கொத்திசைத்துக்
குப்பைக் கனகக் குசைபரப்பி - ஒப்பமுறப்

பாக்குக் குலைகதலிப் பைங்குலைதா ழங்குலையுந்
தூக்கியணிந் தெங்குந் துலங்கவிட்டு - வீக்குஞ்

சிலைபோல் வலயமிட்டுச் சித்திரங்க ளாகக்
கலையாற் குடம்பரப்பிக் கட்டி - நிலையான

கன்னலொடு பச்சைக் கமுகுகத லித்தொகைகள்
துன்னுமணி வீதியிட்டுத் தோரணித்துப் - பொன்நகர்போற்

சோடித்த தன்பின்எயில் சூழ்ந்தமணி ஆலயத்தை
நாடுற்ற சந்தனத்தி னால்மெழுகி - நீடுமொளி

மாணிக்கம் நீலக் வைடூ ரியம்வயிரம்
ஆணித் தரளத்(து) அமைத்தழுத்திப் - பாணித்துப்

பத்துத் திசையும் பரந்துதயங் குங்கிரண
சித்ரமுறு சிங்கா சனம்திருத்தி - வைத்தபின்பு

மாசின்மறை யோர்குரவன் மஞ்சனமா டித்திரும்பிப்
பேசுரட்சா பந்தனமும் பேணியிட்டு - ஓசைவிடை

கோட்டித் திசைகளெட்டுங் கொண்டசுத்த தண்டிலத்தை
போட்டுக் கமலதளம் போற்பரப்பி - நாட்டமிட்டுப்

பஞ்சவன்னந் தூவியிட்டுப் பச்சைக் குசைபரப்பி
விஞ்சுபொற் கும்பகல மீதுவைத்து - அஞ்சலியாய்க்

கோலமலர் தூவிக் குளிர்ந்த செம்பொற் பட்டுடுத்திப்
பாலிகைகள் சுற்றிப் பரப்பிவைத்து - மூலபரன்

ஆகமத்தால் அவ்வகை ஆகஅமைத் துச்சந்த்ர
சேகரனை ஆகமத்திற் சேர்த்துவைத்துப் - பாகமுற

முப்பத் திரண்டறமும் முற்றவளர்த் திட்டவருட்
செப்புற்ற சொர்க்கச் சிவையைவைத்தே - ஒப்பற்ற

ஆபரண வாசி அழகுறுபொற் பட்டுடைகள்
சோபனம தாகத் துலங்கணிந்து - தூபமிட்டுச்

சாதிகர வீரமொடு சண்பகஞ்செங் காந்தள்பிச்சி
சீத வனசம் திருக்கடுக்கை - ஆதியவாம்

மாமலர்கள் வாரி மலர்ப்பதத்தின் மீச்சொரிந்து
தாமவட மும்துலங்கச் சாத்தியிட்டுத் - தூய்மையுறு

சம்பா அடிசில் சகலவித மாச்சமைத்து
விம்பவட மேருவென்ன வேகுவித்துச் - சம்பிரமாய்

மாங்கனியோ(டு) ஆரும் வருக்கைக் கனிகதலித்
தீங்கனியும் மந்தரம்போற் சேர்த்துவைத்துப் - பாங்கரினிற்

பச்சிளநீர் நெய்தேன் பலகாரம் பால்முதலா
உச்சிதம தாக உவந்துவைத்து - வச்ரமணி

அள்ளி அழுத்தி அழகுறுகா ளாஞ்சிதனில்
வெள்ளிலையும் பாகும் விளங்கவைத்துத் - தௌ;ளியசீர்த்

தாமத் தரளத் தவளக் குடைநிழற்றக்
காமருறும் ஆலவட்டங் கைப்பிடிக்கச் - சேமமடற்

சல்லரி பொற்பேரி தவில்முரசு தண்ணுமைமற்
றெல்லா முரசு மெழுந்தொலிப்பச் - சொல்லரிய

மங்களங்க ளார்ப்ப வனிதையர்பல் லாண்டிசைப்பப்
பொங்குங் கவரி புடையிரட்டப் - பங்கமுடன்

நாடகத்தின் மாதர் நடிக்கத் தொனியெழும்பச்
சோடசபூ சாவிதங்கள் தோற்றமிட்டு - ஆடு

மயில்போல் உமாபதிக்கு வாய்த்த திருநாமங்
கயிலாய நாதனெனக் காட்டி - வெயிலிமைக்குஞ்

செக்கர்த் திருவுருவிற் சீரபிடேகம் புரிய
அக்கினியின் ஓமகன்மம் ஆற்றியபின் - பக்கமுறு

கும்பமுறு மஞ்சனத்தைக் கொண்டமலர்க் கையினெடுத்(து)
அம்பொன்மணி மேனியினில் ஆக்குதலும் - உம்பருக்குந்
கைலாயநாதன் புகழ்

தூயமுனி வோர்க்கும் துறவியர்க்கும் எட்டாத
மாயமல கன்மற்ற மாசில்பரன் - வாய்மையிடில்

வாக்கு மனவிகற்ப மாமறைக்கும் எட்டாமற்
போக்குவரத் தில்லாப் புனிதபரன் - நோக்கியிடிற்

புண்டரிகத் தோற்கும் புருடோத் தமற்குமெட்டா
அண்டரண்டம் எங்கும்நிறை ஆதிபரன் - கொண்டமைந்த

ஒத்த அருவுருவாய் ஒப்புவமை ஒன்றுமில்லாச்
சுத்தசித்த சந்தான சூட்சபரன் - சித்தமுற

ஆதிநாடு ஈறும் அடிமுடியும் நாடரிதாய்ச்
சோதிமய மாகிநின்ற சுத்தபரன் - நீதியினிற்

சேருந் திரிபுரமும் தீப்படுத்தச் சிந்தைசெய்து
மேருச் சிலைவளைத்த வீரபரன் - பாரமுறும்

ஓங்காரத் துள்ளொளியாய் உற்றதொகை அட்சரத்து
நீங்காம லேநிறைந்த நித்தபரன் - வாங்காது

புக்க இருவனையாய்ப் போதமுமாய் உட்பொருளாய்த்
துக்கசுகம் இல்லாத தூயபரன் - அக்கினியாய்

மண்ணாய்ப் பரந்துலவு மாருதமாய் வார்புனலாய்;
விண்ணாகி நின்ற விமலபரன் - எண்ணுகின்ற

ஒன்றாய்ப் பலவாய் உள்ளதுமாய் இல்லதுமாய்
நன்றுதீ தற்றிருக்கும் ஞானபரன் - அன்றியுமே

தோன்றுபதி னாலுலகில் தோற்றுமுயிர் வர்க்கமெலாம்
ஈன்றவளை வாமத் திருத்துபரன் - ஊன்றுமனப்

பத்தியுள் ளோர்கட்குப் பரவரிய சாயுச்ய
முத்திகொடுக் குங்கருணை மூர்த்தபரன் - சித்தசன்முன்

கூறுமலர் அம்புதொடக் கோலநுதல் தீவிழியால்
நீறுபட அன்றெரித்த நித்தபரன் - பூருவத்தில்

தந்தி முகவனையும் தம்பிமுரு கேசனையும்
மைந்தரெனத் தந்தருளும் மாயபரன் - சுந்தரன்தன்

தூதாய்ப் பரவையெனுந் தோகையிடத் தேஇரவின்
மீதே நடந்த விமலபரன் - பாதமலர்

சன்றச்சிலம்பு கொஞ்சக் கங்கைஉட லம்பதற
மன்றுள்நட மாடும் வரதபரன் - என்றுமுள
போதசிவ ஞான புராணமய மாய்முதிய
வேதவடி வாகி விளங்குபரன் - ஓதுமுறை

கைதொழுவோர் தங்கள் கருத்தொருமை - ஓர்ந்துருகு
மெய்யுருவாய் நின்று விளங்குபரன் - வையகத்திற்

சிந்தித்(து) ஒருகால் சிவாவென் றுரைக்கி(ல்) அதற்(கு)
அந்தரமாய் நின்றங்(கு) அருள்செய்பரன் - மந்தரத்தைப்

பாற்கடலி லேகடையப் பண்பொடெழுந்(து) அண்டரஞ்ச
ஆர்க்குமுழு நஞ்சையுண்ட வாதிபரன் - போர்க்கெழுந்த

மத்தகெசம் உட்கி மறுகிவரத் தோலையுரித்(து)
உத்தரிய மாக உவந்தபரன் - அத்தனார்

இறைவன் எழுந்தருளல்

இந்தவித மெல்லாம் இதயத் துணர்ந்தருளி
நந்தி திருமூகத்தில் நாட்டமிட்டு - நந்தமிர்தச்

சித்திரகை லாசமொடு தென்கயிலை இவ்விரண்டு
நித்தமுளம் ஓர்ந்துறையும் நேயபத்தி - அத்துடனே

முக்கைலை யாகநல்லை மூதூரின் நன்றமைந்த(து)
அக்கைலை மீதின் அமர்ந்துறைய - இக்கணமே

உன்கணமும் நீயும் உளமகிழ்ச்சி யோடெழுந்தெம்
முன்பு வருகென்று மொழிவழங்கிப் - பொன்புரையும்

மிக்கதிரு மேனியிடை வெண்ணீ றணிதுலங்க
அக்கமணி மாலை யழகெறிப்பக் - கொக்கிறகும்

திங்கட் பருதி செறிந்து துலக்கமுறக்
கங்கை மறுகிக் கரைபுரளக் - கங்குலினுஞ்

சங்கக் குழைதலங்கச் சர்ப்பா பரணமின்னத்
துங்கக் கடுக்கைத் தொடைதுலங்க - வெங்கயத்தின்

போர்வை தயங்கப் புலியின் அதள்வயங்கக்
கோவை தலைமாலைக் கோப்பிலங்கப் - பேர்வதிந்த

அத்தியுடல் மத்தம் அழகெறிப்ப ஐயிரண்டு
கைத்தலத்தின் ஒன்றிற் கனல்துலங்க ஒத்திருக்கும்

ஒன்பது கைத்தலத்தும் ஓங்குமணி சூலபயம்
மின்பொலியும் வச்சிரம்வாள் வெங்கயிறு - அன்புபெறும்

அங்குசம்வெம் போகி அரிமான் இவைதயங்கப்
பங்குடையான் மேனி பளபளென்ன - அங்கண்ன்ஊர்
மால்விடையின் மீது மகிழ்வொடுவந் தேறுதலும்
நாலுமறை யுங்குமிறி நாவிசைப்பக் - கோலமலர்ப்

பங்கயனும் மாலும்இரு பக்கமணி யாகவரப்
புங்கவர்க ளெல்லோரும் பூச்சொரிய - மங்குலுறை

தேவன் சிவசிவென்னச் சித்தர்வித்தி யாதரர்கள்
கூவியரன் நாமமெல்லாங் கூறிவர - மேவியயுறு

தும்புருவும் நாரதனும் தூயமணி யாழிசைப்பக்
கிம்புருடா கின்னரர்கள் கீர்த்திசொல்லி - அம்பருறை

மாமுனிகள் அட்ட வசுக்கள்சப் தரிஷிகள்
ஆமுறையில் யாரும் அரகரென்னச் - சேமமுள்ள

அட்டதிக்குப் பாலகர்கள் ஆரும்அரு காகவந்து
கட்டியங்கள் கூறிக் களித்துவரத் - திட்டமுடன்

நந்திகணஞ் சூழ்ந்துவர நாகர்பதி மேவுபல
துந்துபி கள்ஆர்த்துத் தொனியெழுப்ப - எந்தைபிரான்

எல்லாரும் போற்ற எழிலினுட னேயமைத்த
நல்லூர்க் கயிலைதனில் நாடிவந்து - சொல்லரிய

கர்ப்பூர தீபங் கனகமடல் மீதெடுப்பச்
சிற்பரன் ஈதெல்லாஞ் சிறந்(து)உவந்து - பொற்பினொடு

செப்புமலங் காரமிட்ட தேரில் எழுந்தருளி
அப்பரிசே யாரும் அணிந்துவர - ஒப்பரிய

வீதிவல மாகவந்து மேவுமணி ஆலயம்புக்(கு)
ஆதிபர னங்கே யமர்ந்துறைந்து - நீதியுறு

மன்னவருஞ் சீரும் மனிதர்களும் வாழ்ந்திருக்க
உன்னியருள் செய்தான் உகந்து.

232 கேதாரம்....அழைத்தருளி - திருக்கேதாரத்திலே மன்மதனாற் பூசிக்கப்பட்ட
ஆதார லிங்கத்தை அழைப்பித்து,

236 வன்னம் - அழகு.

237 சந்தனக்கால் - சந்தன மரத்தால் பந்தற்கால்

238 கோடி வன்னக் கச்சு - புதிய அழகிய வஸ்திரம்

239 பத்தி - வரிசை

240 துப்புக் குவை - பவளச் சரங்களைக் கூட்டமாக்கி. பிணித்து - கட்டி
சங்க நிதி போல் பொற் குவியல் வைத்து தருப்பைப் புல்லைப் பரப்பி.

241 வீக்கும் சிலை - வளைத்த வில்.
242 வலயம் - பாத்தி, அந்தணர் கும்பம் வைத்து ஆகுதி செய்யும் இடம். சித்திரங்களாக - விசித்திரமாக. கலையால் குடம் பரப்பிக் கட்டி - சீலையால் கும்பத்தைச் சுற்றிக் கட்டி.

243 தோரணித்து - தோரணங்கள் கட்டி.

244 எயில் சூழ்ந்த - மதில் சூழ்ந்த.

247 மறையோர் குரவன் - பிராமண ஆசிரியன் - கங்காதரக் குருக்கள். ரட்சா பந்தனம் பேணியிட்டு - காப்புத் தரித்து. ஓசை விடை கோட்டி - சிறந்த இடப உருவை எழுதி.

248 தண்டிலம் - ஓமாக்கினி தாபிக்கும் பொருட்டுச் சதுரமாக மணல் பரப்பிய இடம். கமல தளம் - தாமரை இதழ்

249 பஞ்ச அன்னம் - ஐந்து வகைத் தானியம். பச்சைக் குசை- பசிய தருப்பை. விஞ்சு-பெருமை மிகுந்த பொற் கும்பகலம்-பொற் குடமாகிய பாத்திரம். அஞ்சலி-கைகூப்பி வணங்குதல்

250 பாலிகைகள் - முளைப் பாலிகை. மூலபரன் ஆகமத்தால் - சிவபிரான் அருளிய ஆகம விதிப்படி.

251 சந்திரசேகரனை - சந்திரனைச் சென்னியிற் சூடிய சிவனை. ஆகமத்தில் சேர்த்து வைத்து - ஆகம மந்திரங்களால் ஆவாகனஞ் செய்து. பாகம் உற - பக்கத்திலே.

252 முப்பத்திரண்டு.....வளர்த்திட்ட அருள் - சாஞ்சீபுரத்திலே காமா~p என்னுந் திருநாமத்தோடு முப்பத்திரண்டு அறங்களையும் நிறைவுபெற வளர்த்த கருணை (வாய்ந்த). செப்பு உற்ற சொர்க்கம் சிவை - பொற் செப்பை ஒத்த தனங்களையுடைய உமை.

253 ஆபரண வாசி - அணிகல வகைகள்

254 சாதி-சிறு செண்பகப்பூ. கரவீரம் - அலரிப்பூ. சீத வனசம்-குளிர்ச்சி பொருந்திய தாமரைப்பூ. திருக்கடுக்கை - திருக் கொன்றை.

255 தாமம், வடம் - மாலை விசேடங்கள்

256 சம்பா அடிசில் - சம்பாச் சோறு. சகல விதமாச் சமைத்து - சித்திரான்ன வகை எத்தனை உண்டோ அத்தனை விதமும் அமைத்து. வடமேரு விம்பம் எனவே குவித்து - வடக்கே உள்ள மேரு மலையின் பிரதிவடிவம் எனும்படி குவித்து

257 வருக்கைக் கனி - பலாப்பழம். மந்தரமலை. பாங்கரினில் - பக்கத்தில்

259 வெள்ளிலையும் பாகும் - வெற்றிலையும் பாக்கும்

260 தரளத் தாமத் தவளக் குடை - முத்து மாலை தூக்கிய வெண் கொற்றக் குடை

261 சல்வரி, பேரி, தவில், முரசு, தண்ணுமை - வாத்திய விசேடங்கள்.

262 பங்கம் - வளைவு. பங்கமுடன் - அங்கத்தை வளைத்து.

263 சோடச பூசா விதங்கள் - பூஜா உபசாரங்கள் பதினாறு. அவை யாவன: தூபம், தீபம், நைவேத்தியம், தாம்பூலம், சந்தனம், புஷ்பம், கர்ப்பூரம், ஜலம், எண்ணெய், கண்ணாடி, குடை, விசிறி, ஆலவட்டம், கொடி, வஸ்திரம் என்பவை.

264 ஆடும் மயில்போல் உமாபதி - ஆடுகின்ற மயில் போலுஞ் சாயலையுடைய உமையின் நாயகன். வெயில் இமைக்கும் - ஒளி வீசுகின்ற
265 செக்கர்த் திருவுரு - சிவந்த திருமேனி. ஓம கன்மம் - ஓமக் கிரியை

266 கும்பத்தில் வைத்த திருமஞ்சன நீரை எடுத்து அழகிய பொன் போலும் திருமேனியில் அபிஷேகம் செய்த அளவிலே

268 போக்கு வரத்து - இறப்புப் பிறப்பு

270 சுத்த சித்த சத்து - மலமற்றதும் அறிவு வடிவானதும் ஆகிய உண்மைப் பொருள்.

273 தொகை அட்சரத்து - கூட்டமாகிய எழுத்துகள் ஒவ்வொன்றிலும்.

274 இருவினையாய் - நல்வினை தீவினையாகி. போதமுமாய் ஞானமும் ஆகி.

282 பாத மலர் கன்ற - தாமரை போன்ற பாதம் சிவக்க

283 ஓது முறை - வேத ஆகமங்களிற் கூறிய விதிப் படியே.

284 கைதொழுவோர்.........ஓர்ந்து - வணங்குகின்ற அன்பர்கட்குப் பிறிது சிந்தனை இல்லாமையைப் பரிசோதித்துத் தீருவுளத்திற் கொண்டு. குருமெய்யுருவாய் நின்று விளங்கு பரன் - உண்மை ஞானத்தைப் போதிக்கும் குருவடிவாய் வந்து ஆட்கொள்ளும் சிவன்

284 அந்தரமாய் நின்று - மறைவாக நின்று

287 மத்த கெசம் - மதயானை வடிவினனான கயாசுரன் அத்தனார் சகல உயிர் கட்கும் பரம பிதாவான சிவன்

288 இந்த வித மெல்லாம் இதயத்து உணர்ந்து அருளி - நல்லூர்க் கைலாய நாத சுவாமி கோவிற் பிரதிஷ்டையில் நிகழ்ந்தவைகளை யெல்லாம் திருவுளத்திற் கொண்டு.

293 திங்கட் பருதி - சந்திர மண்டலம், ஒளி எனினுமாம்.

295 கோவை-கோக்கங் பட்ட, கோப்பு-பெருமை, பேர் வதிந்த-புகழ் பெற்ற

296 அத்தி-ஆத்தி (மாலை), குறுக்கல். மத்தம்-ஊமத்த மாலை. ஐயிரண்டு கைத்தலம்-பத்துத் திருக்கைகள். கனல்-நெருப்பு

297-298 ஓங்கும் மணி, சூலம், அபயம், வச்சிரம், வாள், கயிறு, அங்குசம், பாம்பு, மான் ஆகிய இவை முறையே மற்ற ஒன்பது திருக்கைகளிலும் விளங்க. மின் பொலியும் வச்சிரம்-ஒளி மிகுந்த வச்சிராயுதம்

298 வெம்போகி-கொடிய பாம்பு அரிமான்-அழகிய மான். பங்கு, உடையாள்-பாகத்தில் இருக்கும் உமாதேவி அங்கணன்-அழகிய கிருபையுடைய சிவன்

300 மங்குல் உறை தேவன் - மேகத்தை வாகனமாக உடைய இந்திரன்

302 அம்பர்-அவ்விடம்-மேல் உலகம்

303 பொருந்திய முறைப்படி யாவரும் 'அரகர' என்று கோஷிக்க. சேமம் - காவல்

304 ஆரும் - யாவரும். அருகாக - சமீபத்தில்

305 நந்தி கணம் - நந்தி கணத்தவர். நாகர் பதி - தேவலோகம்
307 கனக மடல்-பொன்னாலாய கர்ப்பூரமடல்
சிற்பரன்-ஞான வடிவினரான சிவன்
சிறந்து உவந்து - சிறப்பான மகிழ்வுடன் ஏற்று.

308 அம்பரிகே-முன் 292-305 கண்ணிகளில் சொல்லிய முறையே அணிந்து வர-வரிசையாக வர.

310 மன்னவரும்-செகராச சிங்கையாரியனும் அவன் வம்சத்தாரும்.

நூலாசிரியர்
நேரிசை வெண்பா

கற்றோர் புகழக் கயிலாய மாலைதன்னை
நற்றமிழி னாற்றொடுத்து நாட்டினான் - சுற்றுறையூர்ச்
செந்தியப்பன் தந்தசிறு வன்முத்து ராசனென
வந்தகவி ராசமகு டம்.

கைலாய மாலையிற்
கூறப்பட்ட வரலாறு

பண்டிதை, திருமதி
இராஜராஜேசுவரி கணேசலிங்கம்
பீ.ஏ.(சிற்ப்பு), எம்.லிற்.

பூவுலகத்திலே, மேருமலைக்குத் தெற்கே, நாவலந்தீவிலே பரத கண்டத்திலே, சோழ மண்டலத்திலே சோழராசன் மகளாக உதித்த மாருதப்புரவீகவல்லி தனக்கு உளதாய குதிரை முகம் என்னுங் கொடிய நோயை நீக்க வேண்டி ஈழ மண்டலத்திலே கீரிமலைக் கடலருவியில் தீர்த்தமாட விரும்பி அங்குச் சென்று நீராடி நோய் நீங்கப் பெற்றுச் சூரியாஸ்தனமாதலும் அங்கே தானே கூடாரம் அமைத்துக் காவலும் நியமித்துத் தோழியருடன் துயில்வாளாயினள்.

கதிர்காமத்துக் கந்தவேளருளால் கதிரமலையை இராசதானியாகக் கொண்டு ஈழ மண்டலத்தை அந் நாளில் அரசாண்டு வந்தவனும் சிங்க முகமும் மனித உடலும் உடையவனுமான வாலசிங்க மகாராசன் பொழுது புலரமுன் மாருதப் புரிவீகவல்லி தங்கியிருந்த இடத்தை அடைந்து காவல்களை யெல்லாம் கடந்து அவளைத் தன் உறைவிடத்துக்குக் கொண்டுபோய் மணம் புரிந்து கொண்டான். இவர்கள் இருவரும் இந்திரனும் இந்தி ராணியும் போல இன்புற்று வாழும் நாளில் நன்னிமித்தங்கள் பல தோன்ற நன்னாளில் மாருதப்புவீகவல்லி ஓர் மைந்தனைப் பெற்றாள். சிங்க வாலும் மனித உருவும் உடையாவனாய்த் தோன்றிய அப்புதல்வனுக்கு நரசிங்கன் என நாமமிட்டு வளர்த்தனர். பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிள்ளைகள் இரு வரையும் இருகண் போல் வளர்த்து மனப்பருவம் வந்ததும் இருவருக்கும் விமரிசையாக விவாகஞ் செய்து நரசிங்கனுக்குப் பட்டாபிhஷகமும் செய்து வைத்தனர்.

நரசிங்கனும் செங்கோல் செலுத்தி நாடாண்டு வருகையில் கவியரசனான யாழ்ப்பாடி அரசன் மீது கவிபாடி வந்து, சபையில் கவியை யாழிலிட்டு வாசித்துப்பாட அரசன் மகிழ்ந்து ஓர் ஊரைப் பரிசிலாக அளித்தான். யாழ்ப்பாடி தான் பரிசாகப் பெற்ற ஊருக்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு நெடுங்காலம் அவ்வூரை ஆண்டான். யாழ்ப்பாடி காலஞ்சென்ற பின் யாழ்ப்பாணம் அரசனின்றி அலமரலாயிற்று. இது கண்டு பொன்பற்றியூரில் கார்காத்த வேளாளர் குலத்திலே செல்வராயன் மகனாகத் தோன்றிக் குடிமைகளுடன் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறியிருந்த பாண்டி மழவன் யாழ்ப்பாணத்துக்கு ஓர் அரசனைத் தேடிக் கொண்டுவர இந்தியாவிற்குச் சென்றான். அங்கே மதுரைச் செழியசேகர பாண்டியனது தவத்தால் அவன் மகனாக அவதரித்து, சோழ சக்கரவர்த்தியால் சோழ சக்கராதி பத்தியத்தை நிர்வகிக்கும் உயர்ந்த உத்தியோகத்தில் நியமிக்கப்பட்டிருந்த செகராசன் என்னும் சிங்கையாரியன் அரசவ~;ணங்கள் அனைத்தும் அமைந்தவனாயிருத்தலைக் கேள்வி யுற்றுப் பாண்டிமழவன் அவனிடம் சென்று யாழ்ப்பாணத்து அரசை ஏற்கும்படி அவனை வேண்டினான். பாண்டிய மன்னர்க்கு முடிதொட்டுக் கொடுக்கும் பரம்பரையிளனான பாண்டிமழவன் வேண்டுகோளைச் சிங்கையாரியன் ஏற்று யாழ்ப்பாணத்துக்கு வந்து நல்லூரை இராசதானியாகத் தேர்ந்தெடுத்து நகரி நிர்மாணித்து பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் சேகரித்து நனமுகூர்த்தத்தில் மங்கள வாத்தியம் முழங்க மறையவர் ஆசிகூறச் சகல சம்பிரமங்களுடனும் பட்டாபிஷேகம் பெற்று, பாண்டிமழவன் முடிதொட்டுக் கொடுக்க முடியும் சூட்டப்பெற்றான். பின் அரசன் பலவகைத்தானங்களும் செய்து சிவபிரானை வழிபட்;டு அறுசுவை உண்டி அருந்தி மகிழ்ந்து பட்டத்து யானை மேலேறிப் பவனி வரக்கண்டு நகர மக்கள் பலவாறு புகழ்ந்து வாழ்ந்து வரலாயினர். நங்கையர் அவன் அழகைக் கண்டு மயங்கிப் பலவாறு வியக்கலாயினர் இவ்வாறு நகரத்தார் அனைவர்க்கும் கண்களிப்புண்டாகக் காவலன் ஊர்வலம் வந்து அரண்மலையை அடைந்து சிங்காசனத்திருந்து இராச்சிய விஷங்களைக் கவனிக்கலாயினன்.

மதுரையை ஜன்மஸ்தானமாக வுடையவனும், பிராமண குலத்தவனும் வேதக் கொடி யுடையவனும் தாமரை மாலையணிந்தவனும் பல விருதுகள் பெற்றவனும் பெருந் தகைமை, அருள், விவேகம், காம்பீரியம் ஆகிய நற்குணங்கள் அமைந்த சான்றோனுமான புவனேகபாகு என்பவனைத் தன் மந்திரியாக்கி நல்லூரிற் குடியிருத்தினான். சிவநேசச் செல்வனும் அன்னதானம் முதலாய தருங்கள் செய்வதில் அளவில்லாத விருப்ப முடையவனும் மேழிக்கொடி உடையவனும் வேங்கை மலைத் தலைவனும் கார்காத்த வேளாளர் குலத்த வனுமான பொன்பற்றியூர்ப் பாண்டி மழவனையும் அவன் தம்பியையும் இவ் விருவர்க்கும் மைத்துனனான செண்பக மழவனையும் அவன் தம்பியையும் செல்வம், கல்வி, நாகரிகம் யாவற்றிலும் சிறந்த திருநெல்வேலியிற் குடியேற்றினான்.

துளுவ வேளாளனும் கீர்த்திமானும் கலைஞரை ஆதரிப்பவனும் அருங்கலை வினோதனும் குவளை மாலை அணிந்தவனுமான காவிரியூர் நரசிங்கதேவனை வளம் மிகுந்த மயிலிட்டியில் வாழவைத்தான். முத்தமிழ் வித்தகனும் மலர் முகமும் இன்சொல்லும் அழகும் உடையவனும் அரச சபைக்குரிய கம்பீரமுடையவனும் மேழிக் கொடியாளனுமான வாலிநகர் வேளாளன் செண்பக மாப்பாணனையும் அவன் ஞாதியும் குவளை மாலை யணிந்தவனுமான சந்தரசேகர மாப்பாணனையும் காயல் நகர்ப் பொன் வைசியனும் ரூபவானும் சீரகமாலை அணிந்தவனுமான கனகராயனையும் நீர்வளமுடைய தெல்லிப்பழையிற் குடியிருத்தினான்.

மேழிக் கொடியினனும் குவளை மாலையுடையவனும் வேளாண் தலைவனும் சிறந்த கலைஞனும் சௌந்தரியவானும், பொன்னாபரணங்கள் அணிந்தவனுமான பேராயிரவனைச் சோலைவளம் மிகுந்த இணு விலிற் குடியேற்றினான் பெருங் கொடையாளனும், குவளை மாலை யணிந்தவனும் பெருஞ் செல்வனும் பராக்கிரமசாலியும் சிவபத்தனுமான கச்சூர் வேளாளன் நீலகண்டனையும், அவன் தம்பியர் நால்வரையும் பச்சிலைப்பள்ளியிற் குடியிருத்தினான். சாதுரியவானும், குவளை மாலை அணிந்தவனும் சத்திய சந்தனும் கல்விமானும் கொடையாளனும் செல்வனும் ரூபவானும் சிகரிநகர் வேளாளனுமான கனகமழவனையும் வேறு நால்வரையும் புலோலியிற் குடியிருத்தினான்.

பெருஞ்செல்வனும் குவளை மாலை யணிந்தவனும் கவிஞரை ஆதரிப்பவனும் மேழிக் கொடியாளனுமான கூபக நாட்டு வேளாளன் கூபகாரேந்தினையும் அவன் ஞாதியான நரங்கு தேவனையும் வளம் மிகுந்த தொல்புரத்தில் இருத்தினான். வில்லில் விசயனையும் போரில் வீமனையும் கொடையிற் கன்னனையும் புகழிலும் பொறையிலும் தருமனையும் ஒத்த புல்லூர் வேளாளன் தேவராசேந்திரனைக் கோவிலாக் கண்டியில் இருத்தினான். கீர்த்திமானும், தொண்டை மண்டலத்து வேளாளனும் குவளை மாலையாளனும், கம்பர் பாடிய ஏரெழுபது கொண்டு ஒவ்வோர் பாட்டுக்கும் கனகாபிஷேகம் செய்த வேளாளர் குலத்தில் வந்தவனுமான மண்ணொடு கொண்ட முதலியை இருபாலையிற் குடியிருத்தனான்

பெருஞ் செல்வனும் மனவுறுதி, பொறுமை, நீதி ஆகியவற்றை உடையவனும் குவளை மாலை உடையவனும் கீர்த்திமானும். செய்யூர் வேளாளமான இருகுலமுந் துய்ய தனிநாயக முதலியைத் தென்பற்றையும் நெடுந்தீ வையும் பாதுகாக்க நியமித்தான். வஞ்சிநகர் வேளாளன் பல்லவனையும் மற்றும் இருவரையும் வயல் வளம் நிறைந்த வெளிநாட்டிலிருத்தினான். பின் தலையாரி, சேவர்களை நியமிக்கத் தொடங்கி வல்லிய மாதாக்கனை மேற் பற்றுக்குக் காவலாக வைத்தான் இமையாண மாதாக்கனை வட பற்றுக்கும் செண்பக மாதாக்கனைக் கீழ்ப்பற்றுக்கும் வெற்றி மாதாக்கனை மேற் பற்றுக்கும் காவலாக வைத்தான். படை வீரசிங்கனைச் சேனாதிபதியாக நியமித்தான். ஆனைப்பந்தி, குதிரைலாயம், படைவீரர் தங்குமிடம் ஆகியவெல்லாம் அடைவே அமைப்பித்தான்.
இவ்வாறு ஆகவேண்டியவெல்லாம் அமைத்து முடித்து, இரவும் பகலும் மதுரைச் சொக்கநாதர் திருப்பதங்களையே சிந்தித்து அரசாண்டு வருகையில், யாழ்ப்பாணத்திலே சொக்கநாதர் கோவிலமைக்க விரும்பி அவ்வாறு செய்வதென ஒருநாள் தீர்மானித்தான். அன்றிரவு அரசன் துயில்கையில். பிரம விஷ்ணு களுக்கும் வேதங்களுக்கும் எட்டாத ஸ்ரீ கயிலாயநாதப் பெருமான். சர்வாங்க பூஷிதரான மானுட வடிவநதாங்கிச் சர்வாங்க பூஷணியான தேவியுடன் அரசன் சொர்ப்பனத்திற் காட்சியளித்து, "நம்பெயர் கைலாயநாதன். நம்மை மறந்தாயோ?" என்றருளி மறைந்தனர். துயிலுணர்ந்து திருவருளைப் போற்றித் திருக்கோவிலமைக்க முகூர்த்தம் தேர்ந்து, வேத விதிப்படி மதில் அமைத்து, மூன்று பிரகாரங்களும் வகுத்து.

ஈசனுக்கு ஆலயம் அமைத்துப் பக்கத்திற் பார்வதியம்மைக்கும் திருக்கோயில் அமைத்து, பரிவார தேவர் கோவில்கள், யாகசாலை ஆகியவும் உரிய இடங்களிலமைத்து, உக்கிராணசாலையும் உண்டாக்கி, திருமஞ்சனக் குளமும் திருத்தி, அந்தணர் வாழும் மாளிகைகளும் அமைத்து வேதாத்தியயன சாலை, அன்னதான மடம். தேரோடும் வீதி, மடங்கள், நந்தனவனங்கள், தாமரைக் குளங்கள், சந்நிரகாந்த மேடைகள் ஆகியனவும் அமைத்து, திருக்கேதாரத்திலிருந்து மன்மதனால் அருச்சிக்கப்பட்ட சிவலிங்கம் அழைப்பித்து, பிரதிஷ்டை செய்ய ஒரு நல்ல சைவாசாரியரை அனுப்பிவைக்குமாறு சேதுபதிக்குத் திரமுகமும் அனுப்பினான் செகராச சிங்கையாரின். சேதுபதி காசி நகரத்தவரும் வேத பாரகருமான கங்காதரக் குருக்களை அனுப்ப, அவரும் வந்துசேர்ந்தார். பிரதிஷ்டைக்குப் பந்தல் இட்டு, மேற்கட்டி கட்டி, அலங்கரித்து, முறைப்படி கிரியைகள் யாவுஞ் செய்து, சந்திரசேகரப் பெருமானுக்கும் உமையம்மைக்கும் பீதாம்பர ஆபரணாதி அலங்காரங்கள் யாவும் செய்து. சோட சோபசாரங்களும் அளித்து, கயிலாயநாதர் எனச் சிவபிரானுக்கு நாமகரணமும் செய்து, ஓமம் முதலிய கிரியைகளும் முடித்து, மங்கல கும்பத்தில் திருமஞ்சன நீரை எடுத்து எம்பெருமானது திரு மேனியிற் சொரிந்த வளவிலே, திருக்கயிலாய மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கயிலாயநாதர் இவை களையெல்லாம் திருவுளத்திற் கொண்டருளி திருநந்தி தேவரை நோக்கி "இதுவரை இந்தக் கயிலாயமலையும் தென்கயிலை எனப்படும், திருக்காளத்தி மலையுமாகிய இரண்டிடத்தும் பெருவிருப்போடு உறைந்தோம். இன்று மூன்றாவது கைலையாகிய நல்லூரிலே கைலாசநாத சுவாமி கோவில் ஒன்று அமைந்தது. மற்றக் கயிலைகளிற் போலவே அங்கும் மாறாமகிழ்வுடன் அமர்ந்தருள வேண்டும். இக்கணமே அங்குச் செல்வதற்கு உன் கணங்களும் நீயும் புறப்படுவாயாக" என்று திருவாய்மலர்ந்தருளினார். நந்திதேவரும் உடனே புறப்பட்ட, எம்பெருமான் பாhவதி சமேதராய்த் தேவர், சித்தர், வித்யாதார் முதலியவர்கள் போற்றக் கணநாதர் புடை சூழ எழுந்தருளி நல்லூர்க் கயிலையை நாடி வந்து அங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தமது திவ்ய மங்கள விக்கிரகத்தில் சாந்நித்தியமாய்க் கர்ப்பூர தீபாராதனை யாதிகளையெல்லாம் உவந்தேற்றுக் கொண்டபின் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதிவலம் வந்து மீண்டும் திருக்கோவிலில் புகுந்து அரசரும் குடிகளும் சிறப்புடன் வாழுமாறு அவ் வாலயத்தில் எழுந்தருளினார்.

--------------------------------------

KAILAYAMALAI
A TRANSLATION
Navalarkoddam A. Mootootambypilly

INVOCATION

May God Ganesha, the elehant-headed who worte the Mahabharata on the lofty Himalayas, be a help to the Kailaua Malai (wreath to put0 on Him who wears on his matted lock of hair the Moon and the Ganges and whose half is his consort!

TEXT
In Jambudwipa which derives its name from a jambu tree which stands to the south of Mern, and in one of its nine divisions which is called Baratakanda of great fertility and in the country called IIamandala of celestial fame, there is by the side of the sea a sacred spring.

Once on a time, long long ago, there ruled a king of the solar dynasty, of appearance like the rising Moon, and a descendant of Manu, whose garland was of Recemosa and whose umbrella was matchless and of great fame. He belonged to the chola family, was the lord of the country by the side of the Kaviri; he had a fing with the emblem of a tiger and was known by the name of Jagaraja Raja Cholan. One of his daughters, a virgin of lightning beauty. Having resolved to bathe in the sacred spring in order to be cured of her diseare. started with her attendants and servants along with her body-guards, came down to the spring and bathed. When night approached, she pitched a tent, had it guatded on all sides and went to sleep on a fine couch. Then the lion-faced King of Kadiramalai, a devotee of Kartikeya, son of Chenkada, the protector of the Devas, suddenly entered the camp, took her away to his old cave and married her there. Both lived in the palace in great bliss, and were an happy as Indra and his consort.

In due course the princess gave birth to a beautiful son, who was afterwards called Narasinga Raja and was brought up with great care. A few years after, she brought forth a female child. Both the children were brought up with great fondness and care. The prince - when he came of age-was married to his sister and was crowned with immense pomp, to the great joy of the people, in that they expected from him a more prosperous and peaceful rule. His power was so great that his rule extended over a vast ares. He subbued all the neighbouring kings and ruled with as much independence as Rama.

One day a flute-player (Yalpana) went to his court and played on his flute so charmingly that the king was greatly pleased and he made a gift of the tract of land which is henceforth called Yalpanam (Jaffna), meaning the flute-player's land. The flute-player. having received the land, rule over it for a long time. After his death, there was a short interregnum. Seeing that the country was suffering without a king, Pandi Malava. son of Selvataja of Ponpattiyur who belongs to a high Vellala family, which held the hereditary right of handing over the crown to the officiating priest on the occasion of the coronation ceremonies of the kings of Madura, went to the prince Singai Ariyan, the son of Pandiya Sekara, then ruling over Madura and beggrd of him that he might become the king of Jaffna. To whioh, the prince readily consentde and went over to Jaffna with his retinue and founded the town of Nallur.

There he constructed a beautiful palace where he was crowned with great pomp and festivity to the great joy of the countrymen and the royal insignia were handed over to him by Pandi Malava. Free gifts of landa and goild were made to Brahmans and others. The poor were sumptuously fed and all over the country ther was endless mirth and joy. The royal elephant was decorated and the king was taken on it in procession through the streets. The people in the streets paid their respects with due homage, greeted, praised and prayed for the king's long life and prosperity.
The king after ascending the throne appointed as his Primo Minister, Buvaneka Vaku, a learned Brahman of a high family in Madura, and made him reside at Nallur. He made Pandi Malava of Ponpattiyur, formerly of Venkatagiri, a man of Gengakula a man who had a plough flag, a man of great generosity and liberality, who was fully disposed to feed the poor and rich alike, to reside as Tirunelveli with his brother and brother-in-law. Chempaka Malava. Next came in Narasinga Deva of the Tuluva clan of the Vellala division; a man of Gengakula and a nobleman of worldwide fame. who freely patronised the learn, and used to wear a garland of waterlilies, was a great lover of learning, whose native place was Kaviriyur. He was made to resider at Mayiliddi.

Then came another leading Vellala who had a plough flag whose native place was Valinagar. He had the appearance of cupid; he was well versed in all the three branches of Tamil and his name was Chenpala Mappana. He and a relation of his called Chandrasekar Mappana and another called Kanakaraya. a Vellan Chetty by caste who used to wear a garland of cummin, were made to reside at Tellippalai, a place of great. fertility and of never-failing water-supply and of unique distinction. The next was the Vellala of Kovalur who had a plough flag and a garland of water-lilies, He was a man of great influence, learning and charming appearance, and his name was Perayiraua He was made to reside at Inuvil, a village abounding with sugarcane, plantain and arecanut trees and with paddy fields.

The next was a Vellala of Kachehur, whose hands were liberal as the Kalpa tree. He had a garland of water-lilies, he was a man of great wealth and of handsome appearance. He was of incomparanle valour, and of great devotion to Siva, and his name was Nilakanda. He and his four brother were made to reside at Pachilatpalli. The next was the Vellala of Sikari, a man of great intelligence who had a garland of water-lilies. He was famous for truthfulness, learning, civility, industry and was full of resource. He had a commanding appearance, and his name was Kanaka Malava. He with his four brothers was made to reside at Puloli.

The next was the Vellala of Kupakam. He was as wealthy as Kubera, he had a garland of water-lilies, he was a patron of the learned, he had a plong fiag and his name was Kupakarendra. He and Narangufeva a relation of his, famous for charitable deds, were made to rsside at Tholpuram, a town without an equal. The next was the Vellala of Pullur, an Arjuna in archery a Bhima in warfare, a Karna in liberality, a Dharma in fame and forbearance, whose name, was Devarajendra. He had corwn of gold set with precious stones, He was asked to reside at Koyilakkandi.

The next was the Vellala of the family of him who shed over kamban a shower of gold for the work of Erezhupatu, whose country was Tondainade, who had a widespread name, who used to wear a lotus garland and whose name was Maanadukanda Mudali. He was made to reside at Irupalai. The next was the Vellala of Seyur, who was as wealthy as Indra, and who never deviated from the path of visture. whose garland was of water lilies. Whose fame was great and whose paternal and maternal lines were matchless and pure and whose name was Taninayaga. He was made a ehief of Neduntiva. The next was the Vellala of Vanchi, whose name was pallava. He with two other chiefs, was placed at Velinadu.

The kind having appinted these, thought of appinting headmen and other servants and accordingly appointed Valliamatakan, a man of great valour and power, to be the headman of the Western division; Imaiyana to be the headman of the Northern division; Chenpaka Matakan, a powerful man whose name was known even as far as the Himalayas, to be the headman of the Eastern division; Vetti Matakan, a man of great power, to be the headman of the Southern division; Virasingan who fought several battles and an experienced soldier, to be the commander-in-chief of his army.

His army consisting of elephants, cavalry and infantry was made into several divisions and posted in different quarters. The king all such arrangments and ruled in peace the country of Yalpanam. He directed his attention towards agriculture an academy.
The king had long cherisher in his mind an idea to build a temple at Nallur for his beloved Sokkalingam, the form of Siva in which he is worshipped at Madura, and this was working day night in his mind. One day, God Siva, who cannot be seen even by Brahma, Vishnu or the Vedas, and who is but an absolute flame of wisdom, assumed a human body and appeared to him in a dream wearing beautiful earrings, bracelets, an upper epaulet, anklets, a golden dress and a crown, accompanied by his consort beautifully dressed. God Siva addressed the king and said that his name was Kailayanara. The king awoke and believing that it was siva who enslaved him under that disguise, felt happier than ever.

The next morning he sought an auspicious day to commence the work and on the fixed hour started the work and duly completed the temple. As enjoined in the shastras, he constructed beautiful encircling walls, three divine courts, a shrine of admirable for Siva, a shrine to Parvati With side apartments for minor deities, a sacrificial nall, a store house and a tank for the divine bath. After completing the temple, he built mansions for priests, a chamber for offering incense and camphor, a hall for chanting Sama Veda and a free feeding-house. and constructed a road for the car He then prepared a flower-garden and beautiful parks all around, acounding with high trees and with tanks shining with water-lilies and lotuses and with artistic terraces so that the spot looked like a celestial city. In the meantime, he ordered out from ketaram a Lingam which was originally worshipped by Manmata, the God of love. He had also applied by a letter to the Raja of Ramnad (Setupati) to select and send a Brahman as an officiating priest, and the Raja of Ramaad sent a Benares Brahman of high repure and of attainment in Vedic knowledge, whose name was Gangadara.

On his arrival, the king fixed an auspicious hour for the dedication. The temple within and outside was tastefully decorated with booths constructed on sandal posts and ceiled with variegated cloths of artistic designs in different colours and finished with fringes. of cloths of artistic designs in different colours and finished with fringes of cloth, and flower garland and with tassels of pears at regular intervals. The booths were adorned with number less fiags and the fronts with bunches of plantains, arecanuts and screwpine fruits. The streets were decorated on both sides with plantain, arec and sugarcane trees and with cord hanging with garlands. The floor of the temple was smeared with fragrant sandal paste and there a throne of great splendour set with rubies, blue sapphires, cat-eyes, diamonds and pearls was placed. The Brahman priest, having bathed, and wearing an amulet on his right wrist, drew a figure of a bull on the floor and over it heaped rice brought from all the eight quarters and spread it in the shape of a lotus. Over it were spread powders of five colours and then a layer of sacred Kusa grass Upon the grass a gold pot was placed. the Priests then showered flowers over the pot and worshipped with joined hands. Then he encircled the pot with a silk and spread round prouts of corn. Afterwards chanting Mantras he set there the images of Siva and Ums and dressed them with silk and adorned them with beautiful jewels he burnt fragrant incense and offered flowers one by one chanting Vedic mantras and heaped at the divine flowers of lotus, jasmine and of many other kinds. He offered several kinds of rice preparations in heaps like hills, with piles of mangoes, jack, plantains and other sweet fruits. Besides these, he made offerings of young cocoanuts, honey, ghee, juice, milk and curds. finally betel and nuts in beautiful trays, At last, the priest took the golden pot filled with holy water and poured over the images consecrated them in the midst of great roar of musical trumpets, and drums of various kinds and praises, songs and hymns and called Siva by the name of Kailayanata and invoked Him at the image.

And God Siva who is not visible even to Davas, holy sages and to those who renounced the world who cannot be perceived by the mental faculty, who cannot be described by words and oven by Vedas, who has no beginning nor end, who is all pervading though invisible even to the great Brahma and Vishnu, who is without comparison and never changing, who is nought else but pure and self evident truth, who is without a form and whose begining, end middle, whose crown and foot cannot be imagined, who is an effulgence of conciousness, who as a deed of justice the Meru as his bow and burnt the three forts, who whinin the mystieal letter 'AUM' who forms the soul of all the letter, who forms the dual deeds, the intelligence and self of every thing, who is still not affcted by happiness or sorrow, whose manifestations are fire, earth, air, water and space, who is one and all, who is existence and non-existence, who sees good and bad alike, who is the God of wisdom who has as, His lovelier half the Mother who gave birth to all the fourteen worlds and the animate and inanimate kingdoms thereof, who so kindly and graciously confers endless bliss on those who are devoted to Him, who with his third eye on the forehend burnt the God of Love, who has been so gracious to give us His sons the Elephant faced God and his brother Karrikeya, who is so indulgent to his devotee as in the case of Sundara to run as a messenger, who dances on the stage of the creative hall with his sounding anklets to sound and the Ganges on his head inspiring fear whose forms are puranas and Vedas and who takes such forms as imagined by his devotees, who so graciously grants the prayers of those who once utter the syllable of Siva, who swallowed the deadly poison which arose from the sea of milk when the Davas were churning it for nectar and there by protected them from being overwhelmed by the poison. who flayed and wore the skin of the terrible elephant which came out to destroy the world. He received in to his gracious heart the humble, pious the earnest prayer of the priest, and was graciously pleased to take Nallur as his third Kailasa and one of his favourite abodes and aceordingly came down with his divine following to dwell in the image and to grant his devotees their wishes.

The Author

It was I, Muturaja, the crown of poets, and the son of Sentiappan of Uraiyur who composed and laid down Kailaya Malai in high Tamil to the approval of the learned.

-----------------------------------------


செகராசசிங்கையாரியன் நியமித்த ஊர்த் தலைவர்கள்

தலைவர் பெயர் குடிபெயர்ந்த குடிபுகுந்த விருதுகள்|தொழில்| கொடி மாலை
ஊர் ஊர் குலம்
(தமிழ்நாடு) (யாழ்ப்பாணம்)
கனகமழவன்
கனகமழவன் தம்பி சிகிரிமா நகர் புலோலி வெள்ளாமரசன் - -

கனகராயன் காயல்நகர் தெல்லிப்பழை பொன்வசியன் - சீரகமலர்

கூபகாரேந்திரன் கூபகநாடு தொல்புரம் காவலன் நேர் மேழிக்கொடி -
செல்வன் காவலன் குலம்

சந்திரசேகர வாலிநகர் தெல்லிப்பழை வெள்ளாமரசன் மேழிக்கொடி குவளைமலர்
மாப்பாணன

செண்பகமழவன்
செண்பகமழவன் தம்பி பொன்பற்றி திருநெல்வேலி பாகீரதி குலம் மேழிக்கொடி -

செண்பக மாப்பாணன் வாலிநகர் தெல்லிப்பழை வெள்ளாமரசன் மேழிக்கொடி -

தனிநாயகன் சேயூர் தென்பற்று, வெள்ளாமரசன் - காவிமலர்
நெடுந்தீவு இருகுலமும்
துய்யன்

தேவாரசேந்திரன் புல்லூர் கோவிலாக் வெள்ளாமரசன் - -
கண்டி ஊர்த்தலைவன் - -

நரங்குதேவா கூபகநாடு தொல்புரம் கங்கா குலம் மேழிக்கொடி -


















தலைவர் பெயர் குடிபெயர்ந்த குடிபுகுந்த விருதுகள்|தொழில்| கொடி மாலை
ஊர் ஊர் குலம்
(தமிழ்நாடு) (யாழ்ப்பாணம்)

நரசிங்கதேவன் காவிரியூர் மயிலிட்டி வெள்ளாமரசன் காவிமலர்
கங்கா குலம் -
துளுவக் கூட்டம்

நீலகண்டன் கச்சூர் பச்சிலைப்பள்ளி வெள்ளாமரசன்
நீலகண்டன் தம்பியர் நதி (கங்கா) குலம் - குவளைமலர்
மன்னன் விருதுகள்
பல்லவன்
பார்த்திவர் இருவர் வஞ்சிநகர் வெளிநாடு வெள்ளாமரசன் - -

பாண்டிமழவன் பாகீரதி குலம் மேழிக்கொடி
பாண்டிமழவன் தம்பி பொன்பற்றி திருநெல்வேலி ஊர்காத்தோன் குவளைமலர்
வேளாளன்

புவநேகபாகு மதுராபுரி நல்லூர் போரமைச்சன் வேதக்கொடி
இராசமந்திரி தாமரைமலர்
பிராமணன்

பேராயிரவன் கோவற்பதி இணுவில் வேளாளன் மேழிக்கொடி காவிமலர்

மண்ணாடு கொண்ட தொண்டைநாடு இருபாலை தொண்டை குவளைமலர்
முதலி நாட்டரசன்


செகராசசிங்கையாரின் நியமித்த பற்றுத் தலைவர்கள்
வடபற்று-இமையாண மாதாக்கன் கீழ்ப்பற்று-செண்பக மாதாக்கன்
மேற்பற்று-வல்லிய மாதாக்கன் தென்பற்று-வெற்றி மாதாக்கன்
செகராசசிங்கையாரியனின் சேனைத் தலைவன்
வீரசிங்கன்


கைலாயமாலையிலுள்ள இடப்பெயர்கள்

இணுவில் - 27
இருபாலை - 30
ஈழமண்டலம் - 2
உறையூர் - 44
கச்சூர் - 28
கதிரைமலை - 4
காசிநகர் - 36
காயல்நகர் - 27
காவிரியூர் - 25
கீழ்ப்பற்று - 31
கூபகநாடு - 29
கொங்கம் - 20
கோவற்பதி - 27
கோவிலாக்கண்டி - 30
சக்கரவாளகிரி - 7
சிகரிமாநகர் - 28
சேயூர் - 30
திருநெல்வேலி - 25
தெல்லிப்பழை - 27
தென்பற்று - 30,31
தென்மதுரை - 15
தென்னிலங்கை - 13
தொண்டைநாடு - 30
தொல்புரம் - 29
நல்லூர் - 16,24,39,44
நாவலந்தீவு - 2
நெடுந்தீவு - 30
பச்சிலைப்பள்ளி - 28
பரதகண்டம் - 2
புல்லூர் - 29
புலோலி - 29
பொன்பற்றி - 14,25
மதுராபுரி - 24
மதுரை - 13,33
மயிலிட்டி - 26
மலாடம் - 20
மேற்பற்று - 31
யாழ்ப்பாணம் - 8,14,16
வங்கம் - 20
வஞ்சிநகர் - 31
வடபற்று - 31
வாலிநகர் - 29
வெளிநாடு - 31

கைலாயமாலையிலுள்ள நாட்டின(கு)ப் பெயர்கள்

இரவிகுலம் - 25
கங்கை(கா)குலம் - 14,25,29
கருநாடர் - 9
கேகயர் - 9
கேரளர் - 9
கோசலர் - 9
சாவகர் - 9
சீனர் - 9
சேதியர் - 9
சோனகர் - 9
தபனகுலம் - 9
துளுவர் - 9,25
நதிகுலம் - 28
பாகீரதிகுலம் - 25
மலாடர் - 9
மாகதர் - 9
மாளவர் - 9
விராடர் - 9

கைலாயமாலையிலுள்ள மக்கட் பெயர்கள்

இமையாண மாதாக்கன் - 31
இராமன் - 7
கங்காதரன் - 36
கம்பன் - 30
கனகமழவன் - 29
கனகமழவன் தம்பியர் - 29
கனகராயன் - 27
கூபகாரேந்திரன் - 29
சந்திரசேகரமாப்பாணன் - 26
சிங்கையாரியர்கோ - 20
சிங்கையாரியன் - 31
செகராசன் - 13
செந்தியப்பன் - 44
செண்பகமழவன் - 25
செண்பகமழவன் தம்பி - 25
செண்பகமாதாக்கன் - 31
செண்பகமாப்பாணன் - 26
செயசிங்கவாரியன் - 33
செயவீரன் - 20
செல்வராசன் - 14
செழியசேகரன் - 13
சேதுபதி - 36
சோழன் மகள் - 3
தனிநாயகன் - 30
தேவராசேந்திரன் - 30
நரங்குதேவன் - 26
நரசிங்கதேவன் - 26
நரசிங்கராசன் - 6
நராகத்தடலேறு - 4
நீலகண்டன் - 28
நீலகண்டன் தம்பியர் - 28
பல்லவன் - 31
பாண்டவர்கள் - 15
பாண்டிமழவன் - 14,18,25
பாண்டிமழவன் தம்பி - 25
பார்த்திவர் இருவர் - 31
புவநேகவாகு - 24
பேராயிரவன் - 27
மண்ணாடுகொண்டமுதலி - 30
முத்துராசன் - 44
யாழ்ப்பாணன் - 8
வல்லியமாதாக்கன் - 31
வீரசிங்கன் - 31
வெற்றிமாதாக்கன் - 31