கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  முற்போக்கு இலக்கியம்  
 

மு. தளையசிங்கம்

 

முற்போக்கு இலக்கியம்

மு. தளையசிங்கம்

--------------------------------------------------

முற்போக்கு இலக்கிய என்ற தலைப்பில் 'கலைச் செல்வி (இலங்கை இதழ்) நடத்திய கருத்தரங்கத் தொடரில் கலந்துகொண்டு மு.தளையசிங்கம் எழுதிய கட்டுரை இது.

டிசம்பர் 62, ஜனவரி 63, பிப்ரவரி 63 ஆகிய மூன்று இதழ்களில் இக்கட்டுரை'யில் வெளிவந்திருக்கிறது. புத்தக வடிவில் வெளியிடும்போது சில திருத்தங்களைச் செய்வது அவசியம் என்றாலும், ஆசிரியர் மறைந்துவிட்டதனால் இவற்றைச் செய்ய முடியவில்லை. ஆகையால், பத்திரிகையில் வெளியான வடிவத்திலேயே இப்போதும் வெளியாகிறது.

---------------------------------------------------

முற்போக்கு இலக்கியம்

விளம்பரங்களும் கூட்டுகளும் முதலாளித்துவ அமைப்புக்குத்தான் அதிகம் பொருத்தமானவை. Cadyl கலந்த சோப், Soly-x கலந்த மை என்ற வரும் விளம்பரங்கள் எல்லாம் விற்பனையையே நோக்கமாகக் கொண்டவை. Cartelமளும் Trust களும் அதே நோக்கத்தைக் கொண்ட கூட்டுகள் தான். தொழிற்சங்கமும் அதே அமைப்புக்குச் சொந்தமான ஒன்றுதான்-விற்பனையைவிட வாங்குவதுதான், அதாவது தன் உரிமைகளைப் பேரம்பேசி கொள்முதல் செய்வதுதான் அதன் ஆரம்ப நோக்கமாய் இருந்தாலும் அதிகாரத்தைப் பெற்ற பின் அதுவும் தன் கொள்கைகளை விற்கத் தொடங்கி விடும்- அதிக அதிகாரத்துடன், சர்வாதிகாரத்துடன்! விளம்பரங்கள் சரக்கின் பொய்யையும் போலித்தன்மையையும் மறைக்கின்றன. கூட்டுகள் சில சமயம் தனிப்பட்ட தயாரிப்பாளர்களின் பலவீனத்தையும் சில சமயம் சர்வாதிகாரத்தையும் மறைக்கின்றன. இரண்டும் ஒரே அமைப்பின் இரு தோற்றங்கள். அதே அமைப்பு இலக்கியத்துக்குள் பிரவேசித்துவிட்டதை உணர்த்தும் சின்னங்கள்தான் ரஷ்யாவில் சோஷலிஸ யதார்த்தம்.), இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், இந்தக் கட்டுரையின் தலைப்பான முற்போக்கு இலக்கியமும்.

முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?

எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழியே பிடிக்க வில்லை. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது. மனிதனின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள்தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம் பிற்போக்கும் இலக்கியம் என்று பிரிக்க முடியுமானால் முற்போக்கு இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம் அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போகலாமே! எனவே இலக்கியம் என்றாலே முற்போக்கு இலக்கியம்தான் என்பது கருத்து. இலக்கியம் என்றால் முற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்றால் இலக்கியம் - அது தான் நான் நினைப்பது. தரமற்றவற்றை இலக்கியத்துக்கு உயர்த்திப் பின்பு அவற்றை வேறுபடுத்த முயலும்போதுதான் முற்போக்கு இலக்கியம் என்ற பெயர் எழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தரமற்ற இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் தரமற்ற தன்மையை மறைப்பதற்காக, தாங்களாகவே ஒதுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடும் வேறு தரமற்ற படைப்புகள் உயர்ந்தவை என்று காட்ட முயலும் ஒரு நிலை. உருவத்துக்க முக்கியம் கொடுக்காமல் (கொடுக்க முடியாததால்), உள்ளடக்கத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கம் சில எழுத்தாளர்களும் இந்தப் பணிக்கு மிகவும் உதவுகிறார்கள். அதனால்தான் 'முற்போக்கு இலக்கியம்' என்ற இந்தத் தலைப்பும் குறையை மறைக்க முயலும் ஒரு வகை விளம்பரம் என்று ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டேன்.

அப்படியென்றால் முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி, இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியாக மாறிவிடுகிறது. இலக்கியம் என்றால் என்ன? அதைப்பற்றி ஆயிரக்கணக்கானோர் எழுதிவிட்டனர். இனியும் எழுதுவது வாசகர்களின் அறிவை அவமதிக்கும் அனாவசியமாகும். அத்துடன் rigid ஆன constitution எதிலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். இலக்கியத்துக்கு உருவமும் வேண்டும், உள்ளடக்கமும் வேண்டும். இலக்கியத்தின் இரு கால்கள் அவை. ஆனால், அந்த உருவமும் உள்ளடக்கமும் ஒவ்வொரு தனிப்பட்ட எழுத்தாளனின் சக்திக்கேற்ப விரியக் கூடியவை. புதுமைப்பித்தன் தம் சிறுகதைகளின் உள்ளடக்கத்துக்கு மட்டும் ஓர் உச்சத்தைக் கொடுக்கவில்லை. அவருடைய எழுத்தின் சத்தியாலும் நடையின் கவர்ச்சியாலும், கலைமிகுந்த கவர்ச்சியாலும், உருவத்துக்குமே ஓர் புது உச்சத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் என் எண்ணம். ஆனால், உருவமும் உள்ளடக்கமும் அவனவனின் சக்திக்கும் திறமைக்கும் என்றாலும் ஒவ்வொரு எழுத்தாளனும் எதிர்நோக்க வேண்டிய சில பொதுப்பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவை அவனது சூழலாலும் கால கட்டத்தாலும் அதே சமயம் மனித வர்க்கத்துக்கே சொந்தமான, எல்லாக் காலகட்டத்துக்குமே செல்லுபடியான, பொது மனிதத் தன்மையாலும் நிர்ணயிக்கப்பட்டு எழுகின்றன. அந்தப் பொதுப் பிரச்சினைகளை தன் சக்திக்கும் அறிவுக்கும் ஏற்ப ஓர் எழுத்தாளன் அணுகும்போது அவனுடைய தனித்தன்மையைக் காட்டும் உருவமும் உள்ளடக்கமும் கொண்ட இலக்கியங்கள் வெளிவருகின்றன. நான் ஓர் எழுத்தாளன். என் தனித்தன்மையை விளக்கம் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்ட இலக்கியத்தைத் தெரிய வேண்டுமானால், இலக்கியத்துக்கு நான் கொடுக்கும் வரைவு இலக்கணத்தைப் புரிய வேண்டுமானால், இனி நான் வெளியிடும் படைப்புகளைத்தான் படிக்க வேண்டும். ஆனால், என்னை இன்று எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் இருக்கின்றன. அவற்றைத்தான் மற்ற எழுத்தாளர்களும் எதிர்நோக்குகிறார்கள். எதிர்நோக்கும்போது அவரவர் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்பத்தான் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றை என் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ப நான் எப்படிப் புரிந்துகொள்கின்றேன் என்பதைக் காட்டுவதுதான் இக்கட்டுரை. அதன் மூலம் வரைவு இலக்கணம் கொடுப்பதை விட இலக்கியத்தைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அதிகமாகத் தெளிவு படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன்.

என்னை எதிர்நோக்கும் பொதுப் பிரச்சினைகளும் உண்மைகளும் பல ரகமானவை.

எல்லாவற்றுக்கும் முதலில் இதை எழுதப் போகும் எனக்கு ஓர் தடை ஏற்படுகிறது. நான் இப்போ சொல்லப்போவது இலங்கையை மையமாக வைத்தா அல்லது உலகத்தையே மையமாக வைத்தா?

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதால் ஏற்படும் ஒரு தவிர்க்க முடியாத நிலை அது. உலகத்தை மறந்து இலங்கையை நினைக்க முடிவதில்லை. இலங்கையை மறந்து உலகத்தை நினைக்க முடிவதில்லை. அளவை மீறாத தேசியத்தை அடிப்படையாக வைத்து வளர்ந்துகொண்டிருக்கும் ஒர் சர்வ தேசியப் போக்கு இக்கால அரசியல் நிலை. அது சரிவந்துவிட்டால் பழைய குறுகிய மனப்போக்கு, கொள்கைகள், சட்டதிட்டங்கள் என்பவை உடைபட்டுப் போகும். தளர்ச்சியும் , அதனால் ஏற்படும் பரந்த முற்போக்கும் சுதந்திரமும் கிடைக்கும். அது பிழைத்துவிட்டால் பழைய தேசிய எல்லைகளுக்குள் உட்பட்ட அடிமைத்தனத்துக்குப் பதிலாக சர்வதேசிய அளவில் விரியும் அடிமைத்தனமோ அல்லது அழிவோ நம்மை மூழ்கடித்துவிடும். இந்தியாவின் வடக்கு எல்லையில் இப்போது நான் இதை எழுதும் நேரத்தில் (ஒக்டோபர் மாதம் முப்பத்தியொன்று) முன்னதின் (அடிமைத் தனத்தின்) ஆபத்து பயமுறுத்திக் கொண்டு முன்னேறுகிறது. இங்கே உள்ள கொம்யூனிஸ்ட் கட்சி அதைப் பற்றி அவ்வளவு ஒன்றும் சொல்லாமல் இருப்பது ஐந்தாம் படைப் பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. (பின்பு ஒர் அறிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்திய-சீன எல்லைப் போர் ஒர் சிறிய விசயம் என்றும், அதை விட்டுவிட்டுக் கியூபாப் பிரச்சினையைப்பற்றிக் கவலைப்பட வேண்டும் என்றும் உபதேசம் செய்யும் பாணியில். சீனப் பொதுவுடமை அரசாங்கம் இந்தியா மீதும் நேரு மீதும் வசை மாரி பொழிந்தும், ஏகாதிபத்தியவாதிகள் என்று பிரசாரம் செய்தும் கியூபா சார்பில் பெரும் பிரம்மாண்டமான ஊர்வலங்கள் நடத்தியும் உள்நாட்டு மக்களை ஏமாற்றுவது இங்கே கவனிக்கத்தக்கது. இந்தப் பொதுவுடமை வாதிகளிடம் ஒரு தவறாத consistency இருக்கிறது. ரஷ்யாவில் குலாக்குகளை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிப் பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக்கொண்டு ஜெர்மன் யூதர்களைப்பற்றிய பேசினர் ஒரு காலத்தில். பின்னர் ஹங்கேரியை மறைத்துக் கொண்டு சுயஸைப்பற்றிக் கத்தினார்கள். இப்போது சீனாவை மறைத்துக்கொண்டு கியூபாவைக் காட்ட முயல்கின்றனர். இப்படித் திரித்துக் கூறும் ஒரு கட்சியின் கீழிருந்து இலக்கியம் எழுதும் நிலையை ஒருக்கால் நினைத்துப் பாருங்கள். சீனாவில் ஒரு எழுத்தாளன் இப்போ எப்படித் தன்னை ஒரு சரியான உலகநிலையில் நிறுத்திச் சிந்திக்க முடியும்? சோஷலிஸ யதார்த்தம் என்பதும், ஒரு பக்கத்தை மறைத்துக்கொண்டு ஒரு பக்கத்தைக் காட்டும் வித்தைதான். அத்துடன் இந்தோ-சீன யூத்தம் வேறு ஒரு உண்மையையும் காட்டுகிறது. இந்தியா, பொருளாதார வளர்ச்சியோடு ஆன்மீக வளர்ச்சிக்கும் ஓர் உதாரணமாக நிற்கிறது. சீனா, வெளும் லோகாயத வளர்ச்சியை மட்டும்தான் குறிக்கிறது. லோகாய வளர்ச்சி மனிதனை எந்த வகையிலும் வளர்க்காமல் பழைய கொலோனியவாதியாகவேட்டியிருக்கிறது. அது ஒரு புதிய ideologyன் தேவையைக் குறிக்கிறது. Spanish Civil Warல் பொதுவுடமைவாதிகளுக்காக நின்ற உலக அறிவாளி வர்க்கம் இந்த இந்தோசீன யுத்தத்தில் அவர்களுக்கெதிராக நிற்கிறதென்றால் அது ஒரு புதிய சகாப்தத்தில் பிறப்பைத்தான் குறிக்கிறது. அமெரிக்காவின் முற்றிய முதலாளித்துவ வளர்ச்சி கியூபா சம்பந்தமாகக் கடைப்பிடிக்கும் பாஸ’ஸக் கொள்கை, பின்னதின் (அழிவின்) ஆபத்துக்குக் கருக் கூட்டுகிறது. சரிவருமா, பிழைக்குமா என்ற பயங்கரப் பிரச்சினை கலந்த ஒரு தேசீய-சர்வதேசியப் போக்கு இன்றைய போக்கு இன்றைய போக்கு. அப்படி ஒரு போக்கைக் கொண்ட சரித்திரக் காலகட்டத்தில் காலை ஊன்றிக்கொண்டு எழுதும் எழுத்தாளன் அந்தப் போக்கைப் புறக்கணித்து நினைக்க முடியாது.

நான் இப்போ சொல்லப் போவது இலங்கையை மையமாக வைத்தா? உலகத்தை மையமாக வைத்தா? அப்படி ஒரு கேள்வி, நான் எழுதப் போவது அரசியலைப் பற்றி அல்ல, இலக்கியத்தைப்பற்றித்தான் என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டால் கூடத் தொடர்ந்து தடையாய் நிற்கிறது. காரணம் இக்கால எழுத்தாளனுக்கு, அவன் இலங்கையில் இருந்தால் என்ன, ரிம்புக்ட்டுவில் இருந்தால் 'என்ன - அதுதான் சூழல். குறிஞ்சி, முல்லை என்று வளர்ந்த நம் இலக்கியம் இன்று சர்வதேசம், உலகம் என்ற நிலைக்கு வளரவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. பொன்னுத்துரையைப்பற்றி நினைக்கும் நான். அதேசமயம் ரஷ்யாவைப்பற்றியும் சோஸலிஸ யதார்த்ததைப்பற்றியும் நினைக்கின்றேன். அது இன்றைய தவிர்க்க முடியாத நிலை என்றாலும் மற்றவர்களைப் பற்றி நினைக்கும்போது தன்னை மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்துவிட்டால் தனித்தன்மை என்பது ஏற்படுவதற்கு வழி இருக்காது. தனித்தன்மை இடையில் வேறு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தனித்தன்மை-அது மிக முக்கியம். மற்றவர்களைப் பார்க்கும்போது என் முன்னே எழும் பொதுப் பிரச்சினைகளை அணுகும்போது என்னை நான் இழந்துவிட விரும்புவதில்லை. என்னை நான் மறந்துவிடக் கூடாது. விளம்பரங்களும் கூட்டுகளும் எனக்குப் பிடிக்காதவை. என் திறமை, அதில் எனக்குள்ள நம்பிக்கை, அத்துடன் அவை எல்லாவற்றையும் விட நான் போற்றிக் காப்பாற்ற விரும்பும் என் தனித்தன்மை என்பவற்றுக்கு விளம்பரங்களும் கூட்டுகளும் நேர் எதிரானவை. நான், தனித்தன்மையில் அதிகப் பற்றுள்ளவன். கட்சியின் கட்டுப்பாடுகளும் சமூபத்தின் சட்ட திட்டங்களுக்கும் எப்போதும் தலைசாய்க்க விரும்பாதவன் தி.மு.க அமைப்புக்குள் இயங்க வேண்டிய நிலை கம்பனுக்கு எற்பட்டிருந்தால் அப்படி ஒரு காப்பியத்தை அவனால் பாடியிருக்க முடியாது. கொம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட திட்டங்களுக்குள் ஜெயகாந்தனும், நம் முற்போக்க எழுத்தாளர் சங்கத்தின் பிற்போக்கு நோக்கங்களுக்குள் எஸ். பொன்னுத்துரையும் எழ முடியாமல் வீழ்ந்திருந்தால் இன்று அவர்கள் எழுதும் தரமான கதைகளை அவர்களால் எழுத முடிந்திருக்காது. ஒவ்வொரு எழுத்தாளனும் நான் வைத்திருக்க விரும்பும் அதே தனித்தன்மையை வைத்திருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் வகுப்பவர்கள் கட்சியோடும் அரசாங்கத்தோடும் செத்துப் போகட்டும். இலக்கியத்துக்குள் வர வேண்டாம். ஒவ்வொரு எழுத்தாளனம் ஒர் மேதாவி. தனக்கேற்ற சட்ட திட்டங்களை அவன் தானே அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தனித்தன்மை காப்பாற்றப்படும். அந்தத் தனித்தன்மை அவனது இலக்கியங்களில் பிரதிபலிக்கப்படும். அத நிலை தான் ஒரு நாட்டின் இலக்கியத்துக்கும். ஒவ்வொரு நாட்டின் இலக்கியமும் உலக இலக்கியத்தோடு அடிப்படைத் தன்மையில், தரத்தில் ஒத்திருந்தாலும் தன் நாட்டு இலக்கியத்தின் தனித்தன்மை விளங்குவதாகவும் இருக்க வேண்டும். எனவே, உலகத்தையும் சர்வதேசியத்தையும் நினைக்கும்போது இலங்கையையும் மறந்துவிடக் கூடாது. அதி தேசியம் எப்படிக் கூடாதோ அப்படி அதி சர்வதேசியமும் கூடாது. (ஆனால் இலங்கையில் பிரதேசம் என்ற பெயரில் இரண்டுங்கெட்ட ஒரு மருட்சி ஏற்பட்டிருக்கிறது. அதைப் பின்பு விளக்க வேண்டும். அது தனித் தன்மைக்குக் குழி வெட்டிவிடும். எனவே, உலகப்போக்கை நினைவில் வைத்துக்கொண்டு எழுதும்போது இலங்கையையும் மறந்துவிடக் கூடாது. இக்கால நிலை தேசிய-சர்வதேசிய நிலையேதான். ஒன்று முற்றாக மறைந்து மற்றது முற்றாகத் திரிந்து வளர்ந்துவிட்ட Orwellலின் '1984'ன் நிலையோ அல்லது Huxleyன் 'A.F.774'ன் நிலையோ (Brave New World) இன்னும் (எப்படித்தான் பயமுறுத்தினாலும்இ வரப் போவதாக) நல்ல காலம் வரவில்லை.

எனக்கு இலங்கையைப்பற்றி நினைக்கும்போது முதலில் நினைவுக்கு வருவது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிலையேதான். ஒருவேளை இக்கட்டுரையின் தலைப்பைப் பார்த்துவிட்டு நம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கருதுவதைத்தான் அது குறிப்பிடுகிறதா என்று கூட சிலர் நினைக்கக்கூடும். ஏன், அதைச் சார்ந்த எழுத்தாளர்கள் இலங்கையில் தாங்கள்தான் ஏதோ முற்போக்கு இலக்கியம் படைக்கிறார்கள் என்று பிரசாரம் செய்வதைப் பார்க்கும்போது இப்படி ஒரு கட்டுரைக்கு- அதன் தலைப்புக்காவது - ஏற்கனவே இவர்கள் patent right வாங்கி விட்டவர்கள் போலக்கூடத் தெரியும். எனவே, இங்க அவர்களைப்பற்றியும் ஒன்றிரண்டு சொல்லுவது அவசியமாகிறது. முற்போக்குச் சங்கத்திலுள்ள இரண்டொரு தனிப்பட்ட எழுத்தாளர்கள் ஓரளவுக்குப் பறுவாய் இல்லை என்று சொல்லக் கூடியதாக எழுதுபவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அது சங்கத்தின் தன்மையை உயர்த்துவதாகவோ அதிலுள்ளவர்களின் பொதுக் கொள்கைகளையும் அபிலாஷைகளையும் சிறப்பிப்பதாகவோ இல்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நான் இங்கு சொல்ல நினைப்பவற்றை வைத்துப் பார்க்கும்போது வெறும் பிற்போக்குச் சங்கமாகவே தெரியும். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற கூட்டும், முற்போக்கு என்ற விளம்பரமும் நான் முன்பு சொன்ன தனிப்பட்ட எழுத்தாளர்களின் பலவீனத்தையும், எழுதப்படும் சரக்கின் போலித் தன்மையையும், குறுகிய நோக்கையும் மறைக்கும் சாதனங்களே. இலக்கிய வளர்ச்சி தனிப்பட்ட எழுத்தாளர்களின் திறமையிலும் தனித்தன்மையிலும்தான் தங்கியிருக்கிறது. கட்சிரீதியாகவோ தொழிற்சங்க முறைப்படியோ சாதித்துவிடக்கூடிய பொருளாதார விஷயங்களல்ல இலக்கிய சிருஷ்டிகள். அதோடு கட்சிரீதியில் விற்பனை செய்யப்படும் கொள்கைகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவக்கூடினாலும் இலக்கிய வளர்ச்சியைக் கைப்பற்ற உதவா. முற்போக்குத் எழுத்தாளர் சங்கத்தின் தோல்வியும் குறுகிய பிற்போக்குத் தன்மையும் எனவே தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. அத்தனை பேர்கள் கூடி எழுதியும் அத்தனை பேர்கள் கூடிச் சங்கம் நடத்தியும் இலங்கையில் அவர்கள் ஒரு தனிமனிதன் சாதித்ததை விட அதிகமாகவோ புதிதாகவோ சாதித்து விடவில்லை. தன் கதைத் தொகுதியான 'தோணி'க்கு வ.அ. இராசரத்தினம் எழுதிய முன்னுரையின் சில வசனங்கள் இங்கே மிகவும் பொருந்தும்.

"- இத்தொகுதியைப் படிப்பவர்கள் பூதந்தேவனார் தொட்டு வளர்ந்து வரும் ஈழத்து இலக்கிய மரபிற்குக் குறிப்பிட்ட ஓர் காலகட்டத்தில் விமர்சகர்கள் ஏதேதோ பெயர் சூட்டி ஆரவாரிக்கிறார்கள் என்று எண்ணினால் அதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்"-

பரிசுகள் வெல்வது வேறு விஷயம். அவற்றால் இலக்கிய வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொட்டு விட்டோம் என்ற அர்த்தமில்லை. செ.கணேசலிங்கம், ஜெயகாந்தனின் கதை ஒன்றைக் கட்சிக்கொளையில் வைத்து ஆராய்ந்து குறைகள் கண்டதும் அந்த எழுத்தாளரின் புதிய கதை ஒன்றைப்பற்றி வேறு ஒரு முற்போக்கு எழுத்தாளர் கொள்கை காரணமாய் குறைபட்டுக் கொண்டார் என்று 'தேனருவி'யில் வந்த செய்தியும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிற்போக்குத் தன்மையை விளக்கப் போதுமானவை. மணிக்கொடிக் குழு, எழுத்துக்குழு என்பவை இலக்கிய முயற்சிகள், சோதனைகள் இலக்கியத்தைப் புதிய உச்சத்துக்கு உயர்த்தத் தனிப்பட்ட எழுத்தாளர்களின் கொள்கைகளை, தனித்தன்மையை வரையறுக்காது நடத்தும் கூட்டு முயற்சிகளை, தனிப்பட்ட எழுத்தாளர்களின் சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் மிக குறுகிய அளவில் வரையறுத்து, இலக்கியத்தைக் கட்சிக் கொள்கைகளுக்குப் பாவியாமல் அதை ஒரு சாதனமாகக் கையாண்டு, இரண்டாந்தர இடத்துக்கு அதை இறக்கும் அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட இலக்கியச் சங்கங்களின் முயற்சிகளோடு மாறாட்டம் செய்துவிடக் கூடாது. அவை வேறு, இவை வேறு. பின்னதைச் சேர்ந்தது நம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம். மனித உணர்ச்சிகள், தன்மைகள் எல்லாம் மார்க்ஸ’ஸத்தை விட விசாலமானது என்பதை அது உணராது. அதனால் ஜெயகாந்தனின் கதைகளை அப்படி ஓர் அளவுகோல் கொண்டு ஆராய முயல்கிறது. 'இலக்கியம் வழிகாட்டும் தெருப்பலகைகள் அல்ல' என்று எஸ். பொன்னுத்துரை கூறியதாக ஞாபகம். அது உண்மை. ஆனாம் நம் முற்போக்கு எழுத்தாளர்கள் அப்படி ஒரு நினைவில் தான் ஒரு பலகையைப் போட்டுக்கொண்டு நிற்கிறார்கள்- "முன்றோக்கு இலக்கியம்." பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை, அவர்கள் நிற்கும் பாதை பழையதாகி விட்டதென்பது. பஸ் அந்தப் பக்கம் இப்போ போவதில்லை. அது புதிய திசையில் புதிய பாதையில் ஓடுகிறது. அதைப் புரியாமல் அவர்கள் கத்துகிறார்கள். கூட்டுக்கும் விளம்பரத்துக்கும், அதாவது, அதன் பீத்தல்களுக்கும் சொந்தமான குறை அது. காலத்தின் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அவை புரிந்துகொள்வதில்லை. அதனால்தான் காலத்தைத் தங்களோடேயே சதா நிற்க வேண்டுமென்று அவை கத்துகின்றன. அதனால்தான் பெரும்பாலும் கட்சிப் பெட்டிக்குள் வளரும் எழுத்தாளன் வாடி வெளிறிச் செத்துவிடுகிறான். காலத்தின் போக்கை உணர்ந்து வேண்டிய திசையில் விரும்பிய மாதிரி வேரை ஓட விட்டு சூரியனின் ஒளியை முற்றாகப் பயன்படுத்திப் பெரும் விருச்சிகமாக வளர அவனால் முடியவில்லை.

எனவே, இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஒரே formula கலை மக்களுக்காக - நானும் கை தூக்குகிறேன். ஆனால், மக்கள் என்பதைக் கட்சியாக மாற்றுவதை நான் அடியோடு எதிர்க்கிறேன். கட்சி என்பது மக்களாக விரிய வேண்டும். ஆனால் அது இன்றைய அரசியல் கட்சிகளால் முடியாது. வேறு எந்தக் கட்சிகளாலும் முடியாதது. காரணம் மனிதத் தண்மைகள், எண்ணங்கள், மன எழுச்சிகள் என்பவற்றை ஒரு formulaவைக் கொண்டு அளக்க முடியாது. அவை விசாலமானவை. மிகச் சிக்கலானவை. ஒவ்வொரு கட்சியும் அந்தச் சிக்கலான பரந்த அளவில் ஒரு சிறு பின்னந்தான். ஒரு பின்னம். அது, முதலாளித்துவ ஜனநாயகத்திலும் சரி தொழிலாளித்துவ சர்வாதிகாரத்திலும் சரி ஒன்றேதான்.

எனக்குப் பொதுமக்களைப் பிடிக்காது என்பதல்ல அர்த்தம். பொதுமக்களைப்பற்றிய என் அபிப்பிராயம் வேறு என்பதுதான் உண்மை. மக்களைத் தனித்துக் கோடுகள் தெரியாத நீர்த்திரளாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு மக்கள் திரள் தத்துவம், கட்சியும் சர்வாதிகாரியும் வெட்டும் வாய்க்காலைத் தவிர வேறு வழியில் மக்களை ஒட விடுவதில்லை. மக்களில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்றால் ஒவ்வொரு மனிதனிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்பதுதான் அர்த்தம். ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு நீர்த்துளியல்ல மற்றவர்களோடு கலந்து சேர்ந்து தன்தனித் தன்மையை இழந்து ஒட்டத்தையும் வேகத்தையும் ஏற்படுத்தாவிட்டால் காய்ந்து ஆவியாய்ச் செத்துவிடுவதற்கு! ஒவ்வொரு துளியும் ஓர் ஒட்டத்தை ஏற்படுத்தக் கூடியது! முழு ஓட்டத்தையுமே மாற்றக் கூடியது! அந்த அதிசயத்துளி, தனிமனிதன்! எனவே, நான் பொதுத் தன்மையை, பொது முன்னேற்றத்தை விரும்புகிறேன் என்றால் அது தனித்தன்மையும் தனி முன்னேற்றத்தை விரும்புகிறேன் என்றால் அது தனித்தன்மையும் தனி முன்னேற்றமும் வளர்வதினால் ஏற்படும் பொது முன்னேற்றமே. மற்றவர்களின் தனித்தன்மையை விழுங்கி அடக்கி வளரும் ஒரு தனித்தன்மை எப்படி சர்வாதிகாரமாகி விடுமோ அப்படி ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் விழுங்கி வளரும் பொதுத் தன்மையும் சர்வாதிகாரமாகி விடுகிறது. கட்சி இலக்கியம் கூடாது என்று கருதுவது அதனால்தான். மக்களின் பரந்த வாழ்க்கைக்குக் கட்சி தன்னிடமிருக்கும் ஒரு முழத்துணியில் இலக்கியம் தைக்கிறது. அதனால், அந்த ஒரு முழத் துணிக்கேற்ப வாழ்கையையே வெட்டி ஒதுக்கிவிடுகிறது. அதற்குப் பின் இலக்கியம் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பின்னத்தின் பிரதிபலிப்பாகவே ஆகிவிடுகிறது. அதோடு இலக்கியப்போக்கில் ஒருமைப்பாடு யந்திரப் பிடியாக விழுந்துவிடுகிறது. அதன்பின் ஒரு ஸ்தம்பிதம். அதற்குப் பின் இலக்கியம் மக்களுக்காகத் தான் படைக்கப்பட்டாலும் அது முற்போக்கு இலக்கியமாகப் பின்தங்கிவிட்ட பிற்போக்கு இலக்கியமாக அதாவது இலக்கியமற்றதாக மாறிவிடுகிறது. அதற்குப் பின் கட்சியின் பிரசாரம் எல்லாம் வெறும் விளம்பரமாகிவிடுகிறது. கட்சியின் பிற்போக்குத் தன்மையையும் குறுகிய நோக்கையும் மறைக்கும் விளம்பரம். நம் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுடைய நிலையும் அதே நிலைதான்.


2

முதற் பகுதியில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளனிடம் முக்கியமாக இருக்க வேண்டிய தனித்தன்மையைப் பற்றிக் கூறினேன். அந்தத் தனித்தன்மை, திட்டவட்டமான கொள்கைகளைக் கடைபிடிக்கும் ஒரு கட்சிக்குள் நழையும்போது எப்படி இல்லாமல் போய்விடுகிறதென்பதையும் விளக்க முயன்றேன். அவற்றைத் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக புதிய முறையில் சுருக்கமாக இப்படிச் சொல்லிக்கொள்ளலாம். உலகத்தில் மனிதன் அறிய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அறிந்த தொகை மிக மிக அற்பம். அறியாதவை மிக மிகப் பிரமாண்டமான அளவில் அதிகம். பிரபஞ்சத்தின் காரணத்தையோ நோக்கத்தையோ, மனிதனின் காரணத்தையோ முற்றாக எவரும் இன்னும் அறியவில்லை. அறிந்துவிட்டதாக கூறுபவை எல்லாம் அரைகுறை முடிவுகள்தான். கடவுளைச் சாட்சியாக வைத்த பைபிளாக இருந்தாலும் சரி, பொருளாதாரத்தைச் சாட்சியாக வைத்த மூலதனமாக இருந்தாலும் சரி, மனோஇயலைச் சாட்சியாக வைத்த லிபிடோவாக இருந்தாலும் சரி, விஞ்ஞானத்தைச் சாட்சியாக வைத்த றிலற்றிவிட்டி தியரியாக இருந்தாலும் சரி. எல்லாம் அரைகுறை முடிவுகள்தான். மனிதனின் பெரும் வளர்ச்சிக்கு உதவும், மனிதன் கடவுளாகும் ஒரு எதிர்கால நிலைக்கு உதவும் சில படிகள்தான். எதுவும் தனித்தனியே தன்னோடு பூரணம் பெற்றுவிடும் முழு முடிவு அல்ல. யேசு, மார்க்ஸ், ப்ரொயிட், ஐன்ஸ்டீன் - எவரும் முற்றாகச் சரியுமல்ல. முற்றாகப் பிழையுமல்ல. மனிதன் கடவுளாகும் கோட்டைக்குச் செல்லும் படிகள்தான் அவர்கள். யேசு அதற்கு அண்மையில் இருக்கலாம். மார்க்ஸ், படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் இருப்பதால் கோட்டைக்கு மிகவும் அப்பால் இருக்கலாம்.* ஆனால், அவர்களேதான் கோட்டை அல்ல. அல்லது அவர்களோடு கோட்டை வந்துவிடவும் இல்லை. கோட்டையின் தூரம் பெரியது. அதனால் இன்னும் நாம் போவதற்கு எவ்வளவோ தூரம் இருக்கிறது. அத்துடன் இனிவரும் படிகளையும் வழிகளையும் கண்டுபிடிப்பவன் அல்லது அப்படி ஒரு திசையை உணர்த்துபவன் அந்த எழுத்தாளனாகவே இருக்கக்கூடும். அவனுக்கிருக்கும் அறிவும், உள்ளுணர்வும், கற்பனையும் அந்த நம்பிக்கையை அவனுக்குக் கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கை வளர்வதற்கு அவனிடம் தனித்தன்மை இருக்க வேண்டும்; கட்சியில் சேருவதால் அந்தத் தனித்தன்மை கெட்டுவிடுகிறது. கட்சி ஏதாவது ஒரு படிக்கட்டில் கூடாரம் அடித்துக் கொண்டு குந்திவிடுகிறது. அதை மீறி வர முயல்பவர்களுக்கு அங்கு இடமில்லை. அதைப் பொருத்தவரையில் யேசு அல்லது மார்க்ஸோடு மனித வளர்ச்சி முற்றுப் பெற்றுவிடுகிறது. எல்லாவற்றையும் பைபிளிலேயே பார்க்கலாம் என்று சொல்லும் ஜெஹோவாவின் சாட்சிகளும் எல்லாவற்றையும் மார்க்ஸ’டமே கேட்கலாம் என்று நினைக்கும் சோஸலிஸ்ட் யதார்த்தவாதிகளும் அப்படி ஒரு நிலையில்தான் நிற்கிறார்கள். இவர்களுடைய கூடாரங்களையும் கூப்பாடுகளையும் பார்க்கும்போது இன்றைய முதலாளித்துவ அமைப்பபில் நடக்கும் வர்த்தகக் கூட்டு களும் விளம்பரங்களும்தான் நினைவுக்கு வருகின்றன. Solv-x கலந்த மை! Cadyl கலந்த சோப்! தங்களின் சொந்தக் குறைகளை விளம்பரத்துக்குள் மறைத்து மற்றவர்களின் அறியாமையை முதலாக வைத்து நடத்தும் வெறும் விற்பனை. அப்படி ஒரு கூடாரத்துக்குள் எந்த ஒரு சுயமரியாதையுள்ள எழுத்தாளனும் அதிக நாட்கள் இருக்க முடியாது. அவ்வளவும் எழுத்தாளர்களிடம் இருக்க வேண்டிய தனித்தன்மையைப்பற்றி முன்பு நான் சொன்னதின் சுருக்கம். என்னைப் பெருத்தவரையில் அந்தத் தனித்தன்மைக்கு அழுத்தம் அதிகம். இன்றைய சர்வதேச நிலையைப்பற்றிப் பின்பு சொல்லும்போது அதன் சூன்யத்தினால் எற்படும் கிடங்கில் நாமும் விழாமல் இருப்பதற்கு அதைத் தெரிந்திருப்பது அவசியம்.

_______________________________________________________________________________________

* அப்படிச் சொல்வதன் மூலம் நம் முன்னேற்றம் ஓரே தொடராக ஏறிக்கொண்டு போகவில்லை என்பதையே குறிக்கிறேன். ஏறுவதும் இறங்குவதுமான போக்குதான் மனிதவர்க்கத்தின் முன்னேற்றப் போக்காய் இருக்கிறது. சாண் ஏற முழஞ் சறுக்குவது, முழம் ஏறச் சாண் சறுக்குவதுமான ஒரு நிலை.


இலக்கியம் என்றால் இதுதான் என்று திட்டவட்டமாக ஒரு வரைவிலக்கணம் கொடுக்கலாம், நான் ஓர் எழுத்தாளன், என்னை என்னென்ன உண்மைகளும் பிரச்சினைகளும் இன்று எதிர்நோக்குகின்றன, அவற்றை நான் எவ்வாறு விளங்கிக்கொள்கிறேன், அந்த விளக்கத்தின் மூலம் நான் எப்படி எழுதப் போகிறேன் என்று புரிய வைப்பதன்மூலம் இன்றைய இலக்கியத்தைப்பற்றியும் தெரிய வைக்கலாம் என்ற நோக்கத்தோடேயே நான் இதை எழுதுகிறேன் என்று முன்பு கூறினேன். அதைத் திரும்பவும் நினைவூட்டிக்கொள்வது நல்லது. ஏனெனில், எழுத்தாளனாகிய என்னை எதிர்நோக்கும் அடுத்த விசயத்துக்கு அதன் மூலம் சீக்கிரமாகவே இறங்கிவிடலாம்.

அடுத்தது பாலுணர்ச்சி. அது பிரச்சினையல்ல, உண்மை. என்னைப் பெருத்தவரையில் பிரச்சினையால் இருந்த காலம் போய்விட்டது. அதைப்பற்றித் தெரியாமல் இருக்கும் போதும், அதை மறைத்துக்கொண்டு அதற்கு ஒரு தீர்வுகாண முடியாமல் இருக்கும் வரைக்குந்தான் அது ஒரு பிரச்சினை. ஆனால் அது ஓர் பிரச்சினை அல்ல. முறுக்க முடியாத உண்மை. காலாதி காலமெல்லாம் மனிதனோடு சேர்ந்து வாழும் ஓர் உண்மை. அதன் முக்கிய தத்துவம் என்றும் இருக்கவே செய்யும். ஒருவேளை எச்.ஜி. வெல்ஸ’ன் செவ்வாய்க்கிரகப் பேர்வழிகளைப் போல் உடலின் செலவில் மூளையை வளர்த்த நிலைக்கு நம் மனிதர்களும் வந்துவிட்டால் அதன் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடலாம். அப்படி ஒரு போக்கைத்தான் இன்றைய ஒரு பக்கம் திருகப்பட்ட "அறிவு -முன்னேற்றம்" குறிக்கிறது. ஆனால் எல்லாவகையாலும் சமமான முன்னேற்றத்தில் பாலுணர்வின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒப்புக்கொள்வதன் மூலம்தான் உண்மையான முன்னேற்றத்தை நாம் அடையவும் முடியும். இங்கே தத்துவப் பாஷையை விட்டு அனுபவப் பாஷையில் என் அபிப்பிராயமாக இதைச் சொல்வது நல்லம். இந்த முழுக்கட்டுரையையும் அப்படி ஒரு ரீதியில் தான் நான் எழுதுகிறேன்-மற்றவர்களின் தனித்தன்மைக்கு இடங்கொடுக்கும் விதமாக. ஆனால் பாலுணர்வைப்பற்றிச் சொல்லும்போது அந்த அனுபவப் பாஷையின் தேவை அதிகமாகிறது. பாலுணர்வு நம் சமுதாயத்தில் போர்த்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள். பாவாடை தெருவைக் கூட்டும் அளவில் மறைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள். எனவே, அதன் உண்மையைப்பற்றி எல்லோரும் அறிந்திருப்பது அபூர்வம். அதனால், தத்துவப் பொதுப்படையாகச் சொல்லபபோனால் கலாச்சாரப் பண்டிதர்களுக்கும் அனுபவமற்ற பச்சைக் குழந்தைகளுக்கும் புரியாமல் போய்விடும். ஒவ்வொருவனும் அவனவனின் அனுபவத்தின் கைதி. எவ்வளவு அனுபவம் கூடுகிறதோ அவ்வளவுக்கு அறிவு விரிகிறது. எனவே, நான் கூறுவது எனது அபிப்ராயமே-பாலுணர்வைப்பற்றி நான் நினைப்பது. நான் ப்ரொயிட்டைப் படிக்குமுன்பு, கின்ஸ’ அறிக்கையை வாசிக்குமுன்பு என்னைப் படித்திருக்கிறேன், மற்றவர்களைப்பற்றித் தெரிந்திருக்கிறேன், வாழ்க்கையையும் ஓரளவுக்கு வாசித்திருக்கிறேன். அதோடு சமூகத்தின் வெளிப்பூச்சைக் கண்டு பிரமித்திருக்கிறேன்; ஆத்திரப்பட்டிருக்கிறேன். எனவே, பாலுணர்ச்சிப்பற்றிய அழுத்தம் மற்றவர்கள் அறியாததினால், அதனால் அதை ஒப்புக்கொள்ள மறுப்பதினால் இங்கே அவசியமாகிறது. ஆனால், அது மட்டுமல்ல உண்மை. அதைப்பற்றி அதிகம் அறிந்திவர்களும், ஏதோ தங்களில்தான் குறை என்ற நினைவில் அதைப் பூசி மறைத்து வெளிவேடம் போடுகிறார்கள்.

புங்குடுதீவில் சில காலத்துக்கு முன் முத்தமிழ் விழா ஒன்று நடத்தினார்கள். அதில் ஓர் பேச்சாளர் எஸ்.பொன்னத்துரையையும் இன்றைய இலக்கியப் படைப்புகளையும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற தலைப்பில் நம் மரபுக்குப் புறம்பானவை என்று திட்டித் தீர்த்தார்.* அதே விழாவில்தான் சில பெண்கள் நடனம் ஆடக் கூடாது என்ற கலாட்டாவும் (பத்திரிக்கையில் செய்தியாகவும் வந்தது) எழுந்தது. நடனத்தை எதிர்த்தவர்களில், சில படித்தவர்கள் பள்ளிக்கூடப் பெண்கள் ஆடலாம் மற்ற பெண்கள் ஆடக்கூடாது என்று வாதாடினார்கள் ஏற்பட்டதால் இங்கு அது தேவையில்லை. எதிர்த்தவர்களில் வேறு சிலர் 'குனாகூபன்னாப் பேர்வழிகள்.' அவர்கள்தான் இங்கு முக்கியமானவர்கள். தங்கள் சொந்தக் குற்றத்தை மறைக்குமுகமாக நடத்தும் பகிரங்க வெளிவேடம் அவர்களுடையது. இனக் கலகக் காலங்களில் சிங்கள நாட்டில் தமிழர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் தமிழ்ப் பெண்களைக் கல்யாணம் முடித்த சிங்களவர்கள் அதிகம்! குற்றம் செய்தவனாக நினைப்பவன் முதல் கூப்பாடு போடுவான், மற்றவர்களைக் குற்றஞ்சாட்டி! பாலுணர்வுபற்றிய விசயத்திலும் நம் சமூகத்தில் அப்படி வெளிவேடம் போடுபவர்கள் ஒரு ரகம். மற்றவர்கள் இன்னோர் ரகம். அவர்கள் வெளி வேடம் போடுவர்கள் அல்ல. எதைப்பற்றியும் அறியாதவர்கள், பச்சைக் குழந்தைகள். அதற்கு ஓர் உதாரணம் அதே விழாவில் ஓர் இளம் மாணவ எழுத்தாளரைச் சந்தித்தேன். அவன் பவானியின் 'மன்னிப்பாரா?' என்ற கதையைப்பற்றிக் கூறிய அபிப்பிராயம் சுவையானது. "எங்கள் ஊரிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதற்குப் பின்தான் அந்தக் கதையைப் நம்பலாம் போலிருக்கிறது." அப்பாடி! நல்ல காலம். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர் கேள்விப்பட்டு விட்டார். இல்லாவிட்டால் அப்படி நடக்காது என்று இன்னும் எத்தனை காலம் அவர் கனவு காண்பாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். இலக்கியத்தில் பாலுணர்வைப் (காதல் என்ற ஒன்றை அல்ல) புகுத்துவதற்கு எதிராக வரும் இன்றைய பிரசாரம் அப்படி அந்த இரண்டு கோணங்களிலிருந்துதான் அதிகமாக வருகிறது. ஒன்று அதிகம் தெரிந்தும், தெரிந்தது தன் குற்றம் என்ற நினைவில் வரும் குறுகுறுப்பை மறைக்க முயலும் வெளி வேசக்கூச்சல். மற்றது ஒன்றும் தெரியாத குழந்தைப்பிள்ளைக் கூச்சல். ஆனால், இரண்டும் பாலுணர்வின் முக்கியத்துவத்தை மறைக்கவில்லை. மறைமுகமாக ஒப்புக்கொள்ளவே செய்கின்றன. அதைத் துணிவும் தைரியமும் உள்ள எழுத்தாளன் சொல்லித்தான் ஆகவேண்டும்.

________________________________________________________________________

* இதை எழுதும்போது இன்று தினகரனில் கா.சிவதம்பி எழுதியுள்ள 'அசையாத குட்டையல்ல மரபு' என்ற கட்டுரை வந்துள்ளது. "மீண்டும் அதே குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது" என்று அழகாகத் தொடங்கி அருமையாக எழுதுகிறார். அது பாலுணர்வுபற்றிய பிரச்சினைக்கும் பொருந்தும். அன்றைய பேச்சாளரும் அதைப் படிப்பாரா? படித்தாலும் புரியுமா? வாழ்க்கையைப் படிக்காதவரைக்கும் புத்தகப் படிப்பு பிரயோசனம் இல்லை. நாமாக நினைத்துக்கொண்ட, ஏற்கெனவே நமக்கு மற்றவர்களால் ஊட்டப்பட்ட, என்னங்களோடு வாழ்க்கையை அணுகுவதை விடும்வரைக்கும் வாழ்க்கையை படிக்க முடியாது.


எழுத்தாளன் ஒருவனுக்குத் துணிவும் தைரியமும் வேண்டும் அவனிடந்தான் தனித்தன்மையைக் காண முடியும். 'பாவை விளக்கை' எழுதிய அகிலன் எவ்வளவு தூரம் வாழ்க்கையைப் பூசி மறைத்து இலக்கியம் சமைத்திருக்கிறார்! அதைப் படமாக்கியவர்கள் இன்னுமொரு படி மேலே போய்விட்டிருக்கிறார்கள். கடைசியில் இலக்கியமும் வாழ்க்கையின் பச்சைப்படமாக இருக்கக் கூடாது என்பதற்காக வாழ்க்கையை விட்டு மைல்கணக்காகத் தூரே போய் விட்டிருக்கிறது! எல்லாம், சரியான ஒன்றைப் பிழையென்று சட்டம் இயற்றிவைப்பதால்! அப்படி ஒரு சட்டத்தில்தான் நம் சமூகம் இயங்குகிறது!

அப்படி ஒரு பிழையான சட்டந்தான், காலங்கடந்துவிட்ட மரபுதான், நான் சுற்றிவரக் காணும் விசித்திர நிகழ்ச்சிகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஊரில் நம்முடைய திக்கில் ஓர் வாட்டசாட்டமான வாலிபன் இருக்கிறான். மந்திரத்தில் கெட்டக்காரனாம். இரவெல்லாம் அவன் ஒரே பிஸ’. அநேகமாக ஒவ்வொரு இரவும் ஏதாவது ஒரு வீட்டில் உடுக்குச் சத்தமும் சன்னதப் பாட்டும் கேட்கும். இடைக்கிடை கூக்காட்டல்! (அம்மாடா, இந்தப் பென்களால் அப்படி எப்படித்தான் சத்தம் போல முடிகிறதோ!) எல்லாம் ஏன்? அங்குள்ள கல்யாணமாகாத குமர்ப்பெண்களுக்குப் பெரும்பாலும் பேய்பிடித்து விடுகிறதான் தீருமாம். சில சமயங்களில் ஓரிரவில் இரண்டு வீடுகள்! சில சமயம் ஒரு விட்டில் ஒன்று, இரண்டு வீடுகள்! சில சமயம் ஒரு வீட்டில் ஒன்று, இரண்டு, மூன்று பெண்கள்! தங்கச்சி, சின்னக்கா, பெரியக்கா! எதிர்வீட்டில் கல்யாணம் முடித்த நடுத்தரவயதுப் பெண். பிள்ளைகள் ஐந்து. பகலில் பார்க்கும்போது எந்தக் கோளாறும் இல்லாத தோற்றம். ஆனால் இரவில் சில சமயங்களில் காதைத் துளைக்கும் கூச்சலோடு சன்னதம்! நம் வீட்டுக்குப் பின்னால் நாலுவீடு தள்ளி ஒரு கல்யாணம் முடித்த பெண்ணை வேறு ஒருவன் இரண்டு துண்டாக வெட்டிப் போட்டான். அவனை அந்தப் பெண் 'வைத்திருந்தாளாம்'. பக்கத்து வீட்டில் புருஷன் பெண்சாதிக்கிடையே அடிக்கடி சண்டை. புருஷன், பெண்டாட்டியை கற்பூரம் வாங்கிக்கொண்டு கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போவானாம் சத்தியம் கேட்பதற்காக! வேறு ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் இல்லை. அவள் கோயில் கோயிலாகத் திரிந்தாள். திடீரென்று ஒரு பிள்ளை! பிள்ளை எப்படி வந்தது? வேறு எப்படி ஐயா வரும்? கடவுளா கொடுப்பார்? *

_________________________________________________________________________

* இங்கு பெரும்பாலும் பெண்கள்தான் உதாரணமாக வருவது கவனிக்கத் தக்கது. நான் வேண்டுமென்றே அப்படித் தெரிவு செய்யவில்லை. அப்படித்தான் நான் காண்கிறேன். ஆண்களுக்கு அப்படிக் கோளாறு ஏற்படுவதில்லை. அவர்களுக்கு வழிகள் போதிய அளவில் இருக்கின்றன. கற்பையும் காதலையும் கோரும் நம் சமூகம் ஆண்களின் சமூகந்தானே?


ஐயோ, ஏன் இந்த வேதனை எல்லாம்? இந்தச் சத்தியத்தையும் சன்னத்தையும் விட அவற்றைத் தீர்ப்பதற்கு நம் சமுதாயத்துக்கு வேறு வழி இல்லையோ?

மூச், அதுதான் நம் மரபு!

இதெல்லாம் பட்டிக்காட்டு விசயங்களாகப் படலாம். ஆனால் சிப்பதற்கு ஒன்றுமில்லை. பட்டணத்தில் நம் யந்திர வாழ்க்கையின் காரணமாக நாம் அவற்றை அவதானிக்க மறுக்கின்றோம். அதுமட்டுமல்ல. பட்டணத்தில் அப்படி இல்லையென்றால் பட்டணத்துப் பெண்கள் ஏதாவது ஒரு வழியைத் தேடிக்கொள்கிறார்கள் என்பது தான் அர்த்தம். நம் கிராமத்து ஆண்கள் தேடுவதுபோல் எப்போதும் இயற்கையான வழிகளாய் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. நகரத்து நாகரிகத்தில் sophistication என்பது பல ரகம் எடுக்கும். அப்படிச் சொல்வதால் நான் நகரத்துப் பெண்களைக் குறை கூறுகிறேன் என்பதல்ல அர்த்தம். அந்தக் கூச்சல் நான் முன்பு சொன்ன இளம் மாணவ எழுத்தாளனுடையது. ஆனால் எல்லோரும் அந்தக் கட்டத்தைத் தாண்டித்தான் போக வேண்டியிருக்கிறது. நம் மரபு அப்படி ஒரு நிலையை உண்டாக்கியிருக்கிறது. எனவே கிராமத்திலிருந்து கற்பு, காதல் என்ற எண்ணங்களால் condition பண்ணப்பட்ட நாம், மேற்கூறிய இளம் மாணவ எழுத்தாளன் நகரத்தில் ஒரு sophisticated பெண்ணைச் சந்தித்து, அவளைக் காதலித்து, பின்பு அவளைப் பற்றி உண்மையாக அறிய வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவனது நிலை எப்படி இருக்கும்?*

இந்தக் கேள்வியைக் கேட்கும்போது ஹக்ஸ்லியின் புதிய உலகத்தில் வரும் சேக்ஸ்பியர்தாசனான பழைய உலகப்பாத்திரத்தின் பைத்திய நிலைதான் நினைவுக்கு வருகிறது. நம் இளம் மாணவ எழுத்தாளனுக்குப் பைத்தியம் பிடிக்காவிட்டால் அவனது மனோவலிமையைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் அப்படிச் சொல்வது அவன் அப்போது அடையும் வேதனையை உணர்த்துவதாகாது.

சுதந்திரனில் நான் எழுதிய 'வடு' என்ற கதையிலும் வீரகேசரியில் நான் எழுதிய 'நட்சத்திரங்கள்' எத்தனையோ' என்ற கதையிலும் கலைச்செல்வியில் வந்த என் 'அழகி' யிலும் அதே இளம் - மாணவ எழுத்தாளனின் மனப்பருவத்தைக் கொண்ட கதாநாயகர்கள்தான் வருகிறார்கள். (சிலர் சாகும் வரைக்கும் அந்தப் பருவத்திலிருந்து விடுபடுவதில்லை. அந்த நிலையிலேயே வாழ்கிறார்கள். அவர்களுக்கு அதனால் மனத்திருப்தி கிடைக்கிறதென்பது உண்மை ஆனால், அவர்களை விட அனுபவம் முதிர்ந்தவர்களுக்குத்தான் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பது தெரியும்.) சிலர் அந்தக் கதைகளைப் படித்துவிட்டு முகத்தைச் சுளித்தனர். காரணம், அவர்கள் அறிவு முதிர்ந்தவர்கள் என்பதினால் அல்ல. சும்மா, அப்படி எழுதக்கூடாது என்பதற்காக!

__________________________________________________________________________

* அதை மறுபக்கம் மாற்றிக் கேட்டால் இன்னும் சுவையாக இருக்கும். நம்மூரில் உள்ள எனக்குச் சொந்தமான ஓர் பெண் ஒரு சிங்கப்பூர் குடும்பப் பையனைக் கல்யாணங் கட்டியதால் ஏற்பட்ட கலாசார மனோஇயல் மோதல்களால் அந்தப் பெண் இப்போ அங்கெடையிலும், பையன் அங்குமிங்கும், பைத்தியக்காரனாகச் சுற்றிவிட்டு இப்போ வேறு ஒருத்தியை முடித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இது கதையல்லஇ உண்மையான வாழ்க்கை. ஆமாம், நம் எழுத்தாளர்களுக்குத்தான் துணிவு போதாதே ஒழிய வாழ்க்கையில் எவ்வளவோ திகிலான விசயங்கள் இருக்கின்றனஇ கதை எழுதுவதற்கு.

இது ஒரு விசித்திரமான நிலை.

நீ காதலிலும் கற்பிலும் நம்பிக்கை வைக்கும்படி சொல்லப்படுகிறாய். அந்த நம்பிக்கையோடு நீ வாழத் தொடங்குகிறாய். ஆனால், எங்குமே உனக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. ஒருவர் அல்ல இருவர் அல்ல, பொதுவாக எல்லாருமே, முழுச் சமூகமே ஏமாற்றுபவர்களாகத் தெரிகிறார்கள். எனவே நீ கத்துகிறாய். எல்லோரையும் திட்டுகிறாய். அந்த நிலை தவிர்க்க முடியாதது ஆனால்இ முன்பு உன்னைக் காதலிலும் கற்பிலும் நம்பிக்கை வைக்கும்படி சொன்ன அதே சமூகம் இப்படிக் கத்தும் உன்னைப் பார்த்து முகத்தைச் சுளிக்கிறது. உனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டதென்று நினைக்கிறது. அது ஒரு விசித்திரநிலை. அப்படியென்றால் அது நீ அடைந்த ஏமாற்றத்தை மறைத்து வைக்கச் சொல்கிறது. முடியுமென்றால் நீ 'மற்றவர்களைப்போல்' இரகசியமாக அப்படி வாழலாம் என்று சொல்கிறது. ஆனால் வெளியே மட்டும் சொல்லக்கூடாது.

ஏன் இந்த 'டொக்டர் ஜெக்கில் அன்ட் மிஸ்ட்டர் ஹைட்' வாழ்க்கை? ஏன் இந்த அனாவசிய சன்னதமும் சத்தியமும்? காதல், கற்பு எல்லாம் இன்றைய நிலையில் பொய். காலங் கடந்த மரபு என்று தைரியமாக ஒப்புக் கொண்டால் என்ன? கடைசி, சாதாரண மனிதனால்தான் அப்படி முடியாதென்றாலும் எழுத்தாளனுக்காவது அந்த உரிமையைக் கொடுத்தால் என்ன? இந்தக் கட்டத்தில் பாலை இலக்கியத்தில் சரளமாகப் பிரயோகிப்பதை எதிர்க்கும் மூன்றாவது ரகப் பேர்வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். இவர்களை, எதிர்ப்பவர்கள் என்று சொல்வதை விட மௌனம் சாதிப்பவர்கள் என்று சொல்லலாம். பாலுணர்வுபற்றிய உண்மையை ஒப்புக்கொண்டாலும் அதைப்பற்றி மௌனம் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய கருத்து. புதிய நிலையை உணர்ந்தாலும் பழைய மரபை வழிபட மறுப்பதற்கு பயப்படும் பேர்வழிகள் இவர்கள். "ஆமாப்பா, நீ சொல்வது உண்மைதான்" என்று இவர்கள் ஆரம்பிப்பார்கள். ஆனால் முடிவு வேறாக இருக்கும். "ஆனால், அதற்காக அந்த விழல்களை வைத்து, அந்த ஊத்தைகளை வைத்துத்தானா கதை எழுத வேண்டும்? உலகத்தில் வேறு எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவே!"

வித்தியாசம் அங்குதான் வருகிறது. நமக்கு அவை விழல்களாகவும் ஊத்தைகளாகவும் படுவதில்லை. அவற்றைக் கண்டு முகம் சிவந்து வெட்கப்படும் குழந்தைப்பிள்ளைத் தனமும் நம்பிடம் இல்லை; வெருண்டோடும் பைத்தியத் தனமும் இல்லை. இன்றைய யந்திர நிலையில் பாலுணர்வு விவகாரங்களில் திளைக்கும்போதுதான் மனிதன் தன்னை உணர்ந்துகொள்ளும் நிலையையும் உயிர்த்துடிப்புடைய வாழ்க்கையையும் அனுபவிக்கிறான். அந்த உணர்ச்சியின் திளைப்பில்தான், அந்தத் திளைப்பின் முடிவிலும் கலப்பிலும்தான், அந்தத் திளைப்பின் முடிவிலும் கலப்பிலும் தான் மனிதன் இன்றைய நிலையில் ஆன்மீக உணர்ச்சியையும் அனுபவிக்க முடியும். நம் ஆழ்வாரும் நாயன்மாரும் கடவுளுடன் புணர்வதாகக் கற்பனை செய்து கொண்டு பாடவில்லையா? எனவே, ஊத்தை என்று ஒன்று கொண்டு பாடவில்லையா? எனவே, ஊத்தை என்று என்று இல்லை. அதை ஒப்புக்கொள்ளாதவரைக்கும் எழுத்தாளனாலும் வேறு விசயங்களில் அக்கறைப்படுவது இயலாத காரியம். மரபுவேலியில் அவனது மனோவேகம் தட்டுப்பட்டுத் தட்டுப்பட்டு விழுந்துகொண்டே இருக்கும். அடியோடு பிய்த்தெறிந்த பின்தான் அவனால் மற்றவற்றைப்பற்றிக் கவனிக்க முடியும். பொன்னுத்துரையின் 'தீ'யை அந்த நிலையில் வைத்துத்தான் ஆராய வேண்டும். அந்த நிலையின் காரணமாகத்தான் இலக்கியத் தரமற்ற அவ்வளவு சின்ன விசயமான 'மன்னிப்பாரா?' கூட பிரச்சினைக்குரியதாக மாறியிருக்கிறது. எனவே, முதலில் நமக்குத் தேவைப்படுவது துணிவுள்ள எழுத்தாளர்கள் தான்.

அப்படி அந்த மரபுவேலியைக் காலத்துக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் துணிவுள்ள தமிழ் எழுத்தாளர்கள் ஈழத்தில் இன்று இல்லை-பொன்னுத்துரையைத் தவிர.* டவானியை அவ்வளவு சீக்கிரத்தில் சீரியஸாக எடுத்து ஆராய்வதற்கு அவர் அப்படி ஒன்றையும் சாதிக்கவில்லை தான். ஆனால், அவரின் நிலை இங்க நான் சொல்லப் போவதை விளக்க உதவுகிறது. பவானிஇ பாலுணர்வு சம்பந்தப்படுத்தி எழுதியவை இலக்கியமாகத் தெரியாமல் சில சமயம் திடீர்த் தாக்குதலைக் கொடுக்கும் செய்திகளாகத் தான் தெரிகின்றன. 'மன்னிப்பாரா' என்ற கதையின் குறை, romanticize பண்ணப்படும் எழுத்து நடையே தவிர முடிவல்ல. முடிவு, இன்றைய சமூகத்தில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி. 'மன்னிப்பாரா' என்ற கதையை கண்டிப்பவர்கள் 'காப்பு' என்ற அவரின் கதையைப் பாராட்டுகின்றனர். காப்பு என்பது கதையல்ல. அது இக்காலப் பெண்ணொருத்தியின் wishful thinking! மரபுக்காக வேண்டி வாழ்க்கையில் காணமுடியாத ஒன்றைக் கதையில் காண முயலும் ஒருவகைக் கனவுதான் 'காப்பு' என்ற கதை. அக்கதைக்குக் கிடைத்த வரவேற்பு நம் முழுச் சமூகமே அப்படி ஒரு மனவிளைவில் சுயதிருப்தியடைந்து கொண்டிருக்கிறதென்பதையும் நம் இன்றைய இலக்கியம் வெறும் செயற்கையாக இருக்கிறதென்பதையும் தான் காட்டுகிறது. 'காப்பு' என்ற கதையை விட 'மன்னிப்பாரா' என்ற கதை எவ்வளவோ சிறந்தது. பவானியின் கதைகளில் வாழ்க்கையைப் புரிந்துகொண்ட ஒரு சாயலும், பாவனைக்காக மரபுக்கிணங்க எழுத வேண்டும் என்ற அவரே அறியாத ஓர் உந்தலும் இருப்பதைக் காணலாம். முன்னதை அவரது சில கதைகளின் எழுத்து நடையிலும் காணலாம். கருத்துக்குப் பொருந்தாத ஒரு கற்பனாவாத நடை! இன்றைய சமூகத்தில் கொஞ்சம் துணிவுள்ள எந்தப் பெண்ணிடமும் ஏற்படும் பச்சை வாழ்க்கையினதும் பழைய உழுத்த மரபினதும் போராட்டத்தின் பிரதிபலிப்பு. பவானியின் கதைகளைப் பற்றி இங்கு சொல்ல வந்தது, நமது இரண்டுங்கெட்ட சமூகம் அவரது இரண்டுங்கெட்ட கதைகளில் தெரிய வருகிறதென்பதைக் காட்டுவதற்கே. அதனால்தான் பாலுணர்வு சம்பந்தப்பட்ட அவருடைய கதைகள் (போதிய துணிவில்லாத காரணத்தால்) பொன்னுத்துரையின் கதைகளைப் போல் இலக்கியத்தரத்தை அடைய முடியவில்லை. பாலுணர்வு சம்பந்தப்பட்ட புரட்சிக்கேற்ற புதிய நடை தேவைப்படுகிறது. பொன்னுத்துரையிடம் அது இருக்கிறது. ஆனால், அவரும் அதைப் பூரணமாகப் பயன்படுத்தி விட்டார் என்று சொல்வதற்குமில்லை.
_________________________________________________________________________________

* இக்கட்டுரையில் வரும் கருத்துகள் என்னிடம் பிறப்பித்துள்ள சிறு கதைகளின் தொகுதியொன்றும் 'ஒளியை நோக்கி' என்ற நாவலும் சீக்கிரமே வெளியிடப்பட இருக்கின்றன.


கட்டுரையில் எழுதுவதுபோல் கதையிலும் கருத்துகளைப் பச்சையாகச் சொல்லிவிட முடியாது. சொல்லிவிடக் கூடாது என்பதை நான் மறுக்கவில்லை. கலையும் சீரிஸ்னஸ்ஸ”ம் சேர்ந்து, பெரும்பாலும் முறைமுகமாகத்தான் அவை வெளியிடப்பட வேண்டும். ஆனால், அதற்காகச் சில வார்ர்த்தைகள் கூடப் பச்சையாக வரக் கூடாது என்றில்லை. எல்லாவற்றையும் உவமைகளுக்குள்ளும் உருவகங்களுக்குள்ளும் ஒளித்துவிடத் தேவையில்லை. ஆனால், பொன்னுத்துரை சில சமயம் அப்படித்தான் செய்கிறார் பவானியின் இரண்டுங்கெட்ட நிலையைப்போல் பொன்னுத்துரையின் உருவகங்களும் காலங்கடந்த மரபின் அடிமன ஆதிக்கத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. உதாரணத்துக்கு ஒன்று.*

'குமிழ்' என்னும் கதையிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது. இரவில் தன் காதலியைக் காண்பதற்காக மதிற்சுவர் தாண்டிக் காதலன் என்பவன் போகிறான். ஆனால், பெண்ணின் தகப்பனாரிடம் மாட்டிக்கொள்கிறான். அப்போது இந்தச் சம்பாசணை வருகிறது. பாத்திரத்துக்கும் சந்தர்ப்பத்திற்கும் முற்றிலும் பொருந்தாத சம்பாச€ணை. அத்துடன் நினைவுக் குதிராய் வரும் கதையில் சம்பாசணை இன்னும் இயற்கையாய் இருக்குமே ஒழிய நாடகபாணியில் அ€யாது. ஆனால், அப்படி நாடகபாணியில்தான் சம்பாசணை வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் அது மனோஇயலுக்குப் பொருந்தாத ஒன்று. ஆனால், ஆசிரியரின் கூற்றுப்படி மறைபொருளில் உருவகமாகப் பேசித் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறானாம் அவன்!

சம்பாசணை ஆரம்பமாகிறது.

"இங்கு என்னவேலை?"

தகப்பனார் கேட்கிறார். தம்பி பதில் சொல்கிறார்.

"லோகினி என்ற நிலத்தைப் பண்படுத்தி எடுத்தவன்"

"உன்னைப் பண்படுத்தச் சொல்லி யாரடா லைசன்ஸ் தந்தது?"
_____________________________________________________________________________________________

* இதைத் தினகரனில் வந்த என் 'விமர்சன விக்கிரகங்க'ளில் வேறு ஓர் உதாரணத்துக்காகப் பாவித்தேன். ஆனால் பத்திரிக்கையில் அது வரவில்லை. நான் கூறிய பொன்னுத்துரையின் நான்காவது வளர்ச்சி அதனால் அங்கு விளக்கப்படவுமில்லை. கைலாசபதியைப்பற்றிய என் அபிப்பிராயமும் அப்படியேதான் அமுக்கப்பட்டு விட்டது. இதுவும் அதே மரபின் வெளிக்காட்டல்தான். நம் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் துணிவு என்பது இல்லை. அது இல்லாதவரைக்கும் விமர்சகர்கள் விக்கிரகங்களாகவே இருப்பார்கள். இலக்கியம் வெறும் சொத்தையாகவே இருக்கும்.


"சும்மா உபயோகமற்றிருந்த நிலம். அதை எந்தக் காலமும் உம்மால் உழுது பண்படுத்த இயலாது- என்றாவது, யாராவது உழவனிடம் ஒப்படைத்துத்தானாக வேண்டும். உழவன் தன் உழைப்பின் பயனை அனுபவிக்க விழைவது குற்றமா?"

"நியாய அநியாயத்தைப்பற்றிப் பேச வந்துவிட்டான், பரம யோக்கியன். இது மேய்ச்சல் நிலமல்ல. இது என் நிலம், என் சொத்து. நான் தேர்ந்தெடுக்கும் உழவனுக்குச் சாசனம் எழுதிக் கொடுப்பேன். அதற்குச் சடங்குகள் செய்வேன், உறுதிப்படுத்த. உழவுத்தொழிலுக்கும் லைசன்ஸ் வழங்குவேன். அவையெல்லாம் என் இஷ்டம். ஒருவேளைச் சோற்றுக்கே தாளம் போடும் ஆண்டிப் பயலே, போடா வெளியே!"

"நிலம் உம்முடையதாக இருக்கலாம். ஆனால் அதில் உருவாகி வரும் முத்துத் தெறிக்கும் கரும்பு என்னுடையது."

அவ்வளவும் போதும். மதில் ஏறிப்போய் அகப்பட்டுக் கொண்டு தவித்தபோது ஒருவன் பேசிய பேச்சு. அவ்வளவும் நாடகபாணி! ஆனால், விசித்திரம் என்னவென்றால் "நிலத்தைப் பண்படுத்தியிற்ற, என்னடா?" என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டு கையால் பேச வேண்டிய தகப்பனாரும் அவனோடு சேர்ந்துகொண்டு படத்தில் வரும் கதாநாயகன் பாணியிலல்லவோ பேசுகிறார்! இதுதான் இன்றைய யதார்த்தம். பொன்னுத்துரையான பொன்னுத்துரையே எழுதும் யதார்த்தம்!

நாளாந்த வாழ்க்கையில் எத்தனை பச்சையான சொற்களைப் பேசுகிறோம் என்று அறியாமலேயே சர்வசாதாரணமாக நாம் பேசுகிறோம், கேட்கிறோம். சில சமயத்துக்கு முன்கூட நான் "என்னடா...வாழ்க்கை" என்று சலித்துக் கொண்டேன்.* என் அறைக்கு ஐம்பது யாருக்கப்பால் ஓர் பெண் கிழமைக்கு ஒருக்காலாவது யாரோடாவது சண்டை போட்டுக்கொண்டு பேசக்கூடாது என்று சொல்லப்படுவற்றை எல்லாம் பேசித் தீர்க்கிறாள். மற்ற பெண்கள் கேட்டுக்கொண்டு நிற்கிறார்கள்! ஐயோ, வாழ்க்கைக்கும் இலக்கிய துறைக்கும் இடையே ஏன் இந்தளவு பெரிய இடைவெளி இருக்க வேண்டும்?

பாலுணர்ச்சி, சர்வசாதாரண மனிதவர்க்கத்தின் அடிப்படை உணர்ச்சி. அதை மனிதன் மூடி மறைத்துக் கட்டுப்படுத்த முயன்றது மற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்துவதற்கே. ஆனால், இன்று அவன் அடைந்திருக்கும் முன்னேற்றம் என்ன? காதல், கற்பு என்ற வெறும் கனவுகளோடு மாதா மாதம் இருநூறு, முந்நூறுக்கு உழைத்துக்கொண்டு, வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வாழும் ஒர் யந்திர வாழ்க்கை! அல்லது அத்தனை மனிதவர்க்கத்தையுமே அழித்துவிட முயலும் அணுகுண்டு ஆபத்து! கட்டுப்படுத்தப்பட்ட பாலுணர்ச்சி மனிதனை இன்று கடவுளாக்க முயலவில்லை. ஆன்மீக வளர்ச்சியற்ற வெறும் யந்திர வாழ்க்கையில் பாலுணர்ச்சி ஒன்றுதான் இன்று உண்மையான உயிருள்ள உணர்ச்சியாக மனிதனுக்குப் படுகிறது. கற்பும் காதலும் கடவுளின் நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பது அதனால்தான். ஆனால், உயிர்த்துடிப்பின் ஆகக் குறைந்த தரந்தான் பாலுணர்ச்சி. உயிர்த்துடிப்புக்கு அதைவிட மேலான தரம் வேறு ஒன்றிருக்கிறது. அதுதான் ஆன்மீக உணர்ச்சி. மனிதன் கடவுளாக மாற முயலும் ஞானியின் உணர்ச்சி! அதைத் தெரிவதற்கு முதலில் அதன் ஆரம்ப உணர்ச்சியான பாலுணர்ச்சியில் திளைப்பதற்கு, திளைத்துத் திருப்தியடைவதற்கு வசதி இருக்க வேண்டும். ஆனால், மனிதனை யந்திரமாக்கி விடுவதில் முனைந்துகொண்டிருக்கும் இன்றைய உலகம் அந்த வசதியைக் கொடுக்க மறுக்கிறது. ஒளித்து மறைத்து மூடிவைத்து, சாகும் வரைக்கும் அந்த அடிப்படை உணர்ச்சியைக் கூட ஓரளவுக்காவது புரிந்துகொள்ள முடியாத நிலையைத்தான் உருவாக்குகிறது. இந்த நிலையில் ஒன்றில் மனிதன் யந்திரமாக வாழ வேண்டும் அல்லது சுத்தப்பைத்தியமாகவோ அல்லது ஒர் psychopath ஆகவோ தான் வாழ வேண்டும். பின்னதில் கொஞ்சமாவது தனித்தன்மை கலந்த உயிரோட்டம் இருக்கிறது. யந்திரத்தை விட மிருகம் மேலானதுதானே?
_____________________________________________________________________________________________

* இந்தச் சொல்லைப் பூரணமாகப் பாவிக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. அதை அசிங்கப்படாமல் எப்போது முகச்சுளிப்பின்றி மனிதன் பேசுகிறானோ அப்போதுதான் மற்ற முக்கிய விசயங்களைப்பற்றி மனப்பூர்வமாக அக்கறைப்பட முடியும்.

உயிர்த்துடிப்பில் பாலுணர்ச்சியையும் ஆன்மீக உணர்ச்சியையும் அடுத்தபடியாக பசியுணர்ச்சி வருகிறது. பசியுணர்ச்சி மற்றவை இரண்டும் செயல்வடுவதற்கு உதவும் ஓர் கருவியே ஒழிய அதோடு முற்றுப் பெறும் ஒரு முடிவல்ல. முக்கியத்துவப்படி சொன்னால் ஆன்மிக உணர்ச்சி, பாலுணர்ச்சி, பசியுணர்ச்சி என்றும் அகரவரிசைப்படி சொல்லப்போனால் ஆன்மிக உணர்ச்சி, பசியுணர்ச்சி, பாலுணர்ச்சி என்றும் சொல்ல வேண்டும். ஆனால் இன்று பசியுணர்ச்சியும் அதன் வெளிக்காட்டலுமான பொருளாதார முன்னேற்றமுமே அழுத்திக் கூறப்பட்டு ஒரு ஸ்தம்பித நிலை ஏற்பட்டிருக்கிறது. வெறும் லோகாயத வாதம்! அதற்கு மீறி வேறு ஏதாவது இருக்கிறதென்றால் அது அறிவு, ஆத்மா, எல்லாம் கலந்த ஆன்மிக உணர்ச்சியல்ல. வெறும் அறிவு மட்டு ம கலந்த, கணிதம் கலந்த, தத்துவ விசாரமே. லொஜிக்கல் பாஸ’ட்டிவிஸமும்சரி, லோகாயத வாதமும் சரி மனிதனை வெறும் யந்திரமாகவே ஆக்குகின்றன. மனிதனை மனிதனாகவோ, மனிதனைக் கடவுளாகவோ ஆக்கவில்லை. இந்த யந்திர அடிப்படையில்தான் இன்று இலக்கியத்தில் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சூழலை எதிர்நோக்கும்போது இன்று ஈழத்தில் பிரபல்யம் அடைந்துவரும் 'பிரதேச வாதம்' என் நினைவுக்கு வருகிறது. முன்பு தப்பு மனப்பான்மையோடு ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட கனவுக் கதைகளோடு இந்தப் பிரதேசக் கதைகளை ஒப்பிடும்போது இவை எவ்வளவோ முன்னேறியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாதுதான். எதை எதை எழுதவேண்டும் என்று நினைப்பது ஒர் எழுத்தாளனின் சொந்த விசயம். இதைப்பற்றியும் எழுதலாம். அதைப்பற்றியும் எழுதலாம். திட்டங்களையும் கட்டங்களையும் பற்றி மட்டும்தான் எழுத வேண்டும் என்று சட்டம் வகுப்பதற்கு நல்லகாலம் நம் நாட்டில் ஒரு சர்வாதிகார எழுத்தாளர் சங்கம் இல்லை. அதுவரையிலும் இங்க எழுத்தாளர்களின் தனித்தன்மைக்கும் சுயகௌரவத்துக்கும் இடம் இருக்கவே செய்கிறது. ஆனால், இடம் இருந்தும் இல்லாததுபோல் ஏதோ சர்வாதிகாரச் சங்கந்தான் சட்டம் ஒன்று வைத்துவிட்டதுபோல் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஓரே ரீதியில் எழுதுகிறார்கள். இவரின் கதையை மற்றவருடைய கதைக்கு மாற்றலாம், மற்றவருடையதை மற்றவருக்கு மாற்றலாம். அப்படி ஒருவித ஒரே type கதைகள்! பாலுணர்ச்சியைக் கலந்து மனிதத் தன்மையைக் கலையோடு தருவதால் மாறுபடும் பொன்னுத்துரையின் தனித்தன்மைக் கதைகளையும் மிக இலகுவில் இலக்கியத் தரத்தைத் தொட்டுவிடும் ஒர் இலாவகமான நடையால் தனித்தன்மை பெறும் வ.அ. இராகரத்தினத்தின் கதைகளையும் தவிர மற்றவர்களின் கதைகள் பெரும்பாலும் பிரதேச மனம் என்ற ரீதியில் ஒரே type ஆகவே இருக்கின்றன! அதே யந்திரச்சாயல்! அதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அது மட்டுமல்ல. பிரதேச மணம் என்ற நம்மவரின் vogue பிரபல்யம் அடைய அடைய அவர்களின் பார்வை வர வரக் குறுகிக்கொண்டே வருகிறது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றையும் மறந்த ஒரு குருட்டு நிலை. சுற்றி வர என்ன நடக்கிறதென்று தெரியாத நிலை. கலை கலைக்காகவல்ல என்று சொல்லிவிட்டு சீரியஸ் பூச்சோடு அதைவிடக் குறுகிய நோக்கத்தைக் கொண்ட கட்சிக்குள் புகுந்துகொண்டு கலை கட்சிக்காக என்று சொல்வதைப் போன்ற ஒரு புதிய நிலை. ஜனரஞ்சகமான தப்பு மனப்பான்மைக் கல்கி-குமுதக் கதைகள் கூடாது என்ற கோஷம் பரந்த பார்வையுடைய ஓர் இலக்கியப் போக்கை உருவாக்குவதற்குப் பதிலாக பிரதேசம் என்ற மிகக் குறுகிய மணலுக்குள் காலத்தை, நாட்டை, உலகத்தை, பிரபஞ்சத்தை எல்லாவற்றையும் மறந்து தலையோட்டிக் கொண்டு கிடக்கிறது. ஒருவகைத் தீக்கோழி இலக்கியம். சுற்றி வர என்ன நடக்கிறதென்பதைப்பற்றிக் கவலைப்படாத புதுவகைத் தப்பு மனப்பான்மை. வேண்டுமென்றே தன்னைக் குருடாக்கிக்கொண்ட ஒரு நிலை.

இதை இன்னும் வடிவாக விளக்க வேண்டும். இன்று எழுந்துள்ள இலக்கிய விழிப்பு ஒரு கைலாசபதி, தினகரனுக்கு ஆசிரியராக வந்துவிட்டதினால் மட்டும் எற்பட்ட ஒன்றல்ல. அப்படி யாராவது சொன்னால் அதைவிடப் பைத்தியக்கார வழிபாடு வேறு ஒன்றும் இல்லை. ஒரு புது விழிப்புக்காக அரித்துக்கொண்டிருந்த சூழல் கைலாச பதியையும் அவரது சகாக்களையும் தேடிப்பிடித்துச் சுற்றியதே ஒழிய கைலாசபதியும் அவருடைய சகாக்களும் ஒரு புதிய சூழலை உருவாக்கவில்லை. 1956ஆம் ஆண்டுத் தேர்தல், சிங்களம் மட்டும் சட்டம், அதன்பின் வந்த ஆபத்து, சமஷ்டிக் கட்சி, தனித்தமிழ் இயக்கம், பிரதேசக் கோரிக்கை என்பவைதான் இன்றைய இலக்கிய விழிப்புக்கு உண்மையான காரணங்கள். தமிழ் நாட்டு இலக்கிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட முயலும் இன்றைய போராட்டமும் அதே சுயநிர்ணயத் துடிப்புத் தான். எப்படி இக்கால அரசியல் நிலை பொன்னம்பலத்தின் வீழ்ச்சிக்கும் செல்வநாயகத்தின் எழுச்சிக்கும் உதவியதோ அப்படியேதான் இதோடு சேர்ந்து வந்த இலக்கிய விழிப்பும் பழைய போக்கின் வீழ்ச்சிக்கும் புதிய போக்கின் எழுச்சிக்கும் உதவிற்று. கைலாசபதி வராவிட்டால் வேறு யாராவது ஒருவரை அது கண்டுபிடித்திருக்கும். ஆனால், கைலாசபதிதான் அகப்பட்டார். அகப்பட்ட பின் அவர் அந்தப் போக்கை ஓரளவுக்கு நிர்ணயித்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பாதிப்பும் இல்லாமலில்லை. சமஷ்டி ரீதியில், அதாவது பிரதேச ரீதியில், சுயநிர்ணயம் தேடும் ஒரு போக்கு சர்வதேசியக் கனவில் பிரதேச சுயநிர்ணயத்தை மறந்த ஒரு தலைவரைக் கண்டுபிடித்த ஒரு விசித்திர நிலை. பிரதேசவாதிகளுக்கு சர்வதேசத்தைக் கிரகிக்க முடியவில்லை, அந்த நிலையில் அவர்களுடைய உடனடித் தேவை இருக்கிவில்லை. சர்வதேசத் தலைவருக்கு பிரதேசவாதிகளைத் திருத்த முடியவில்லை. அந்தத் தில்லுமல்லான கட்டத்தை இடையில் நின்ற ரஸ்ஸ’யாவின் வெளிநாட்டுக் கொள்கைக் குரிய கருவிகளான ஒரு சில முற்போக்கு எழுத்தாளர்கள் பரிபூரணமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களிடம் இரண்டும் இருந்தன - பிரதேசமும் சர்வதேசியமும், ஆனால், அந்த இரண்டுக்கும் அவர்களிடம் வேறு அர்த்தங்களும் இருந்தன. அவர்களுக்கு சர்வதேசியம் என்றால் லோகாயதவாத ரஸ்ஸ’ய அல்லது சீனப் பொதுவுடமைவாதம். பிரதேச மணம் என்றால் தமிழ்மொழி, பிரதேச சுயநிர்ணயமல்ல. மாறாக சாதிச் சண்டையும் (இயற்கையாய் இலங்கையில் இல்லாமல் இருந்தும்) கற்பனையில் கற்பித்துக்கொள்ளும் ஆலை முதலாளி தொழிலாளிச் சண்டையுந்தான்! அதனால் இன்றைய பிரதேசக் கதைகள் இன்றைய பிரதேச நிலையைப் பிரதிபலிக்காத தீக்கோழிப் போக்கில் எழுதப்படுகின்றன. காரணம், அவற்றை எழுதுபவர்களின் கொள்கைகள் இருக்கின்றனவே, அந்தக் கொள்கைகளுக்கேற்ப மன நேர்மையோடு இன்றைய பிரதேச நிலையைப் பிரதிபலிக்க முடியாது. அதனால், அவர்கள் பிரதேச வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினைகளையும் பிரதிபலிக்காமல் சின்னக்குழிக்குள் மட்டும் தலையைப் புகுத்திக் கொள்கிறார்கள்.

...........

1962இல் இருந்து இன்று வரை அனேகமாக ஒவ்வொரு தமிழனது மனத்தையும் அரித்துக்கொண்டிருக்கும் அந்த மொழிப் பிரச்சினையை, பிரதேச நிர்ணயப் பிரச்சினையை எத்தனை எழுத்தாளர்கள் சீரியஸாக அணுகியிருக்கிறார்கள்? ஒருவருமில்லை. இங்கு பெரிய எழுத்தாளர்கள் என்று நினைத்துக்கொள்பவர்களுக்கு அது சிறிய விஷயம். தன் காலத்துக்கேற்ப பாரதியார் பாடிய சுதந்திரப்பாடல்கள் எல்லாம் இவர்களுக்குப் பிற்போக்கான பாடல்களாகப் படலாம். யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டும் மட்டக்களப்பில் இருந்துகொண்டும் ஐக்கியத்தைப்பற்றியும் தேசியத்தைப் பற்றியும் இலகுவாகப் பேசிவிடலாம். ஆனால், இங்கு இருக்கும் என்னைப் போன்றவர்களுக்குத்தான் அவற்றின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியும். தேசியம் என்றால் இங்கு ஓர் இனத் தேசியம். ஐக்கியம் என்றால் இங்கு ஓர் இனத்தின் ஆதிக்கம். என்னைப் பொருத்த வரையில் மொழியுரிமை, சமஷ்டி ஆட்சி எல்லாம் என் ஆன்மீக வளர்ச்சிக்கும் என் இனத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கும் தேவையான அடிப்படைத் தேவைகள். எனக்கு வகுப்புவாதம் பிடிப்பதில்லை. ஆனால் அதற்காக அடிமைத் தனத்தை ஆதரிப்பவனுமல்ல. சமஷ்டிக் கட்சியின் அங்கத்தவனாய் என்னால் இருக்க முடியாது. எந்தக் கட்சியும் கூடாது என்ற கொள்கையோடு அதன் சாதிச்சாய்வு, அரைமனச் சீர்திருத்தம், மத்தியதர வகுப்புப் பிற்போக்குத் தனம் எல்லாம் பிடிக்காது. ஆனால் சமஷ்டிவாதத்தை மறுக்க முடியாது. மறுப்பவர்கள் ஒன்று பிரச்சினையில் இருந்து தப்ப முயல்பவர்கள்; அல்லது துணிவற்றவர்கள். தேசியம் பேசியவர்கள், ஒர் இனம் நாடற்ற பிரசைகளாக ஆக்கப்பட்டபோது பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். தேசியம் என்றால் இன்று, இன்றைய நிலையில் பிரச்சினையைக் கடத்திக் கடத்தி அதிலிருந்து தப்ப முயல்பவர்களின் ஆயுதமாக ஆகிவிட்டிருக்கிறது. சமஷ்டி கேட்பது தேசியத்தை எதிர்பபதல்ல. அதை அறிந்தும் மறுப்பவர்கள் அதை ஒப்புக்கொள்ளத் துணிவற்றவர்கள் தான். துணிவற்ற தன்மையைத்தான் இன்று இங்கு சிலர் முற்போக்குவாதமாக்கி விட்டிருக்கிறார்கள். இவற்றை எழுதும்போது, சென்ற ஆண்டில் 1961 இல்- அவசரகாலம் பிறப்பித்த அந்த இரவையும் அதையடுத்து வந்த நாட்களையும் ஒட்டிய நினைவுகள் என் நெஞ்சில் ஓடிவருகின்றன. அங்கு யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ என்று எதரியாமல் இங்கு தவித்த நேரத்தில், ஒவ்வொரு நிமிடமும் ஒர் யுகமாகச் சென்ற நேரத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கொம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் சண்முகதாசன் அறிக்கை விடுகிறார், அது பிற்போக்குவாதிகளின் போராட்டம் என்ற பாணியில்! இப்போ அதே பேர்வழி சீனாவை முற்போக்கு நாடாகக் காட்டி க்யூபாவைப் பார்க்கும்படி நம்மை வேண்டுகிறார். சரித்திரத்தை விஞ்ஞானரீதியாக உணர்ந்தவர்கள் ஓர் இனத்தை மற்ற இனத்துக்கு அடிமைப்படுத்துவதை முற்போக்குவாதம் என்று நியாயப்படுத்தலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனும் ஓர் கடவுள் என்று நினைக்கும் நேர்மையுள்ள எழுத்தாளனால் அது முடியாது.

இக்கட்டத்தில்தான் என் சூழல், பிரதேசத்திலிருந்து சர்வதேசமாக விரிகிறது. அப்படி விரியும்போதுதான் இங்குள்ள எழுத்தாளர்களின் பிரதேசவாதத்தின் பார்வை எவ்வளவு குறுகலாக இருக்கிறதென்பதையும் என்னால் உணர முடிகிறது. இங்குள்ள எழுத்தாளர்கள் இன்னும் அப்படி ஒரு கண்கொண்டு எழுதத் தொடங்கினதாகத் தெரியவில்லை. இவர்களின் பிரதேசவாத-இன்றைய சர்வதேசியப் போக்கை வைத்துப் பார்க்கும்போது காலத்தாலும் நிலையாலும் வளர்ந்துவிட்ட பின்பும் இன்னும் விரல் சூப்பும் பிள்ளைப்பிராயப் பழக்கத்தை கூடாது என்பதல்ல என் கருத்து. அவை வேண்டும். ஆனால் அவை பரந்த பார்வையோடு வேண்டும். இன்றைய குறுகிய தீக்கோழி பார்வையே ஒரு பைத்தியமாக மாறிவிட்டதைத்தான் நான் எதிர்க்கிறேன். ஈழத்து எழுத்தாளர்களுக்கு அந்தப் பிரதேசவாசம் அல்லது வாதம், ஒரு fetish ஆக மாறிவிட்டிருக்கிறது.

சர்வதேசச் சங்கமும் ஐ.நா. சபையும் கொண்டுவராத ஒரு சர்வதேச உணர்வை இப்போ அணுகுண்டு கொண்டுவந்திருக்கிறது. சாவா? வாழ்வா?

ஆனால், வாழ்க்கை என்பதற்கு என்னைப் பொருத்தவரையில் அர்த்தம் வேறு. மனிதன் இத்தனை காலம் வாழ்ந்தும் இன்னும் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. மனிதன் எதற்காக வாழ்கிறான்?

உபநிடத கால மனிதனுக்கு அந்தக் கேள்விக்குரிய பதில் ஓரளவுக்கு நன்றாகத் தெரிந்திருக்கக்கூடும். புத்தரின் காலத்து மனிதனுக்குப் புரிந்திருக்கக்கூடும். யேசு கால மனிதனுக்கு விளங்கியிருக்கக்கூடும். ஆனால், இன்றைய இருபதால் நூற்றாண்டு மனிதனுக்கு அது புரியவில்லை. அவனுக்கு வாழ்க்கை என்றால் தொழிற்சாலை, கட்சி, சினிமா, ஒரு கிழமை உல்லாசப்பிரயாணமும் ஓய்வும் (ஆக முன்னேறிவிட்டதாகக் கருதப்படும் ரஸ்ஸ’யாவின் நிலையை உதாரணமாக வைத்து) என்றுதான் ஆகிவிட்டிருக்கிறது. வாழ்க்கையின் நோக்கம் அதுதான் என்றால், இன்று இறப்பதற்கும் இன்னும் ஒரு நூற்றாண்டு சென்று இறப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

இன்றைய லோகாயத நிலை goetheன் காலத்தைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது. பிரஞ்சுப்புரட்சிக்கு முன் எதையெதையோவெல்லாம் எதிர்பார்த்த மனிதனுக்கு நெப்போலியன் காலத்துக்குப் பின் வந்த நிலை ஏமாற்றமாகத்தான் இருந்தது. ரஸ்ஸ’யப் புரட்சிக்கு முன் எதையெதையோவெல்லாம் எதிர்பார்த்த மனிதனுக்கு ஸ்டாலின் ஆட்சிக்குபின் வந்த (இப்போ மாசேதுங்கின் காலத்தில்) நிலை ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது. பழைய நிலைக்கு ஒரு புதிய பெயர் கிடைத்திருக்கிறதே ஒழிய புதிய மாற்றம் கிடைக்கவில்லை. மாறாக, இன்னும் தனி மனிதன் என்பவன் இன்று ஒரு பெரிய பிரித்தல் பெருக்கல் கணக்கில் வரும் ஒரு unit. அவனைச் சேர்ப்பதும் கழிப்பதும் அவனைப் பொருத்த விசயமல்ல, அவனைக் கையாளும் தலைவனின் விசயம். சின்ன எல்லைப்பிரச்சினைக்கு (சீனரும் நம் கொம்யூனிஸ்ட் கட்சியும் உபகோகிக்கும் வார்த்தைகளில்) அத்தனை மனிதர்கள் பலியிடப்படுகிறார்கள் என்றால் தனிமனிதனின் நிலை எந்தளவுக்கு இன்று உயர்ந்திருக்கிறது? இந்தியத்தளபதி ஒருவர் கூறியது எனக்கு ஞாபகம் வருகிறது. எறும்பு அலைகள்போல் அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். மனித உயிர்களைப் பற்றிச் சீன அரசாங்கத்திற்கு அக்கறையேயில்லை. வாழ்க்கையின் நோக்கம் இதுதானா? முன்னேற்றம் என்பது தனிமனதனைச் சாகடிப்பதுதானா?

கோதேயின் கதாநாயகன் Faust கூறுகிறான்.

I have studied all philosophy
Medicine and jurisprudence too.
Even, to my grief, theoogy
With fervent efforts through and through,
Yet here I stand, poor fool! what's more
No whit wiser than before!
Iam master, Doctor and I have found
For ten long years that as I chose
I led my students by the nose,
First up, then down, then all around,
To see that nothing can be known!

அது பத்தொன்பதாம் நூற்றாண்டில். ஆனால், இருபதாம் நூற்றாண்டில், நம் மதிப்புக்குரிய மார்க்ஸ”ம், எங்கல்ஸ்ஸ”ம், லெனினும் ஸ்டாலினும், மாசேதுங்கும் வந்த பின்பும் என்ன வித்தியாசம்? மேலே வந்த கூற்று இந்த இருபதாம் நூற்றாண்டுக்குத்தான் இன்னும் பொருந்தும். அதே குரலை நம் நூற்றாண்டில் வாழும் ஒர் எழுத்தாளன் வேறுவிதத்தில் எழுப்புகிறான்:

"For the first time in civilized history, perhaps for the first time in all history we have been forced to live with the suppressed knowledge that the smallest facets of our personality or the msot minor projection of our ideas, or indeed the absence of personality could mean equally well that we might still be doomed to die as a cipher in some vast statistical operation in which our teeth would be counted, and our hair would be saved, but our death itself could be unknown, unhonoured, and unremarked, a death which could not follow with dignity as a possible consequence of serious actions we had chosen, but rather a death by DEUS EX MACHINA in a gas chamber or a radio active city; and so if in the midst of civilization - the civilization founded upon the Faustian urge to dominate nature by mastering time, mastering the links of social cause and effect - in the middle of an economic civilizaiton founded upon the confidence that time could indeed be subjected to our will, our psyche was subjected itself to the intolerable anxiety that death being causeless, life was causeless as well, and time deprived of cause and effect had come to a stop"*

ஒரு ஸ்தம்பிதம்! பிரமாண்டமான யந்திர முன்னேற்றம்இ ஒரு ரஸ்ஸ’யப் புரட்சி, ஒரு சீனப் புரட்சி எங்கும் தொழிலாளர் எழுச்சி - இருந்தும் மனிதன் உள்ள வளர்ச்சியில் ஒரு ஸ்தம்பிதம்! அமைதியான அமைப்பும் சரி, புரட்சிகரமான அமைப்பும் சரி, அமைப்பே அணுக முடியாத பிரமாண்டமான யந்திரமாக மாறி அதை அமைத்த மனிதனை ஆட்டிப் படைக்கத் தொடங்கி விடுகிறது. அதற்குப் பின் அமைத்தவனுக்கு சுய இயக்கம் இல்லை. அமைக்கப்பட்ட யந்திரத்துக்கு ஏற்ப அவனது இயக்கமும் எதிர்ப்பற்ற யந்திர இயக்கமாக மாறிவிடுகிறது. மனிதத்தன்மையும், உள்ளேயுள்ள தனித்தன்மையும் அமைப்பு என்ற யந்திரத்திற்கு எதிர்ப்பாக மாறினால் அதையிட்டு அமைப்பு அல்ல

____________________________________________________________________________

* The White Negro - Norman Mailer.

கவலைப்பட வேண்டியது, நீயேதான். நீயே உண்டாக்கிய அதன் வளர்ச்சி உன் சக்திக்கப்பாற்பட்ட பிரமாண்டமான வளர்ச்சியாக மாறிவிட்டது. அதன் இயக்கத்துக்கு எதிராக இனி நீ அதை அணுகினால் நீ வீசப்படுவாய்- தலை வேறு, கால் வேறு, முண்டம் வேறாகச் சிதறடிக்கப்பட்டு! பிரஞ்சுப் புரட்சிக்குப் பின் டன்ரனுக்கும் அவனது சகாக்களுக்கும் என்ன வந்தது? ரஸ்ஸ’யப் புரட்சிக்குப்பின் அதே புரட்சிவீரர்களுக்கு (மொல்கவ் விசாரணைகள் - 1936) என்ன நேர்ந்தது? மேலே நோர்மன் மெய்லர் சொன்னதுபோல் உன் சாவு ஒரு பெரும் பிரமாண்டமான கணக்கீட்டு நடவடிக்கையில் வரும் வெறும் பூஜ்யம்! உன் தலைமயிருக்கும் உன் பற்களுக்கும் மரியாதை கொடுக்கப்படும். ஆனால், உன் மரணத்துக்கு அந்த மரியாதை கிடையாது. உன் மரணம் என்பது மற்றவர்களால் கேள்விப்படாத, மரியாதை கொடுக்கப்படாத ஒரு பூஜ்யம். இன்றைய மனிதனின் வாழ்க்கை, உயிர் எல்லாம் அப்படி ஒரு பிரம்மாண்டமான கணக்கீட்டில் வரும் ஓர் பூஜ்யம். பின்னங்கூட அல்ல. அது ஹ’ட்லருக்கும் இரண்டாவது உலகமகா யுத்தத்துக்கும் சொந்தமான ஒன்று அல்ல. இன்றைய ரஸ்ஸ’யாவுக்கும் சீனாவுக்கும் சொந்தமான ஒன்றுதான். பனியால் மூடப்பட்ட பாழ்நிலத்துக்காக, செலா கணவாய் வழியாக எறும்பு அலைகளாய் ஒருவர் பிணத்துக்குமேல் ஒருவராய் அனுப்பப்பட்ட சீன வீரர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களுக்காக வருத்தப்படாமல் இருக்க முடியாது. தனிமனிதனின், தனிமனிதக் கூட்டின் வீர இயக்கம் என்று நினைத்துவிடாதீர்கள். அரசாங்கத்தால் புகுத்தப்பட்ட கொள்கை என்ற அபினின் வெறியோடு (அதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததோ ஐமிச்சந்தான்) வானொலி பத்திரிகை என்பவற்றின் உதவியோடு நடத்தப்படும் பிரசாரத்தோடு இராணுவ முறையில் தனிமனிதன் என்பவன் அந்தப் பெரும் யந்திர அமைப்புக்கு ஏற்ற முறையில் இயக்குவிக்கப்பட்ட ஒரு யந்திர இயக்கம்! அங்கே செத்தவர்களின் சாவெல்லாம் ஏதோ ஒரு பெரிய கணக்கீட்டில் வரும் ஒரு பூஜ்யம்! ஆனால், அதற்காக இது புரட்சி அமைப்பு என்று சொல்லப்படும் சர்வாதிகார அமைப்புக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல. ஜனநாயக அமைப்பு என்று இன்று சொல்லப்படுபவைக்கும் அது சொந்தமேதான். பாஸ’ஸப் போக்கை நோக்கிப் போகும் அமெரிக்காவின் வளர்ச்சி அதற்கு ஓர் உதாரணம். அங்கே தனிமனிதன் என்பவன் பூஜ்யமாகச் சாகாமல் இருக்கலாம். ஆனால் அதற்காகப் பெருமைப்பட ஒன்றுமில்லை. வாழ்க்கை என்ற பெயரில் பூஜ்யமாகவே அவன் செத்துக்கொண்டிருக்கிறான். அரசாங்கம், கட்சி, வானொலி, பத்திரிகை, கலாச்சாரம், அது, இது என்று எல்லாமாகச் சேர்ந்து தனிமனிதனை ஒரே முத்திரை பதித்த ஒரே type ஆகவே ஆக்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, இன்றுள்ள போராட்டம் தனிமனிதனுக்கும் சமூகத்துக்குமிடையேதான். தனிமனிதன் versus அமைப்பு. அந்த நிலையில் பிரச்சினை என்பது இதுதான். நீ ஒரு (rebel) புரட்சிவாதியா அல்லது சமூகத்தோடு யந்திரமாகச் (conformist) சேர்ந்து வாழ்பவனா?

ஓர் அமெரிக்க எழுத்தாளர் இன்றைய அமெரிக்க சமுதாயத்தைப்பற்றிச் சொல்லும்போது மூன்றுவகையான மனிதர்களைப்பற்றிச் சொன்னார்: மரபால் நடத்தப்படுபவர், தன்னால் தானே நடத்தப்படுபவர், மற்றவர்களால் நடத்தப்படுபவர்.* இன்றைய சர்வதேசிய நிலையைப் பார்க்கும்போது அப்படி இருப்பதையே உணரலாம். மரபால் நடத்தப்படுபவர்கள், தங்களால் தாங்களே நடத்தப்படுபவர்கள், மற்றவர்களால் நடத்தப்படுபவர்கள். ஆனால் மற்ற எவரையும் விட மற்றவர்களால் நடத்தப்படுபவர்கள் தான் இன்று அதிகம். (மரபால் நடத்தப்படுபவர்களைப் பற்றிப் பெருமிதப்பட முடியாது. அந்த மரபு ஆகப் பிற்
____________________________________________________________________________

* David Reisman : The Lonely Crowd, - `Tradition - directed' `Inner-directed', `Other-directed'

போக்கான காலத்தோடு வளராத மரபாக இருக்கும்போது - நம் தமிழர்களின் நிலை அப்படித்தான்) மற்றவர்களின் அபிப்பிராயத்துக்கும், கௌரவத்துக்குமாக அனாவசிய ஆடம்பரமாக வாழும் அமெரிக்கர்களும் வர்க்கம், கட்சி, அரசாங்கம் என்று வாழும் ரஸ்ஸ’யர்களும் மற்றவர்களால் தான் நடத்தப்படுகிறார்கள். இன்று பத்திரிக்கை, வானொலி என்பவை தனித்தன்மையைக் கூட்டுவதற்குப் பதிலாகத் தனிமனிதனின் வாழ்க்கைக்குள் மற்றவர்கள் எதிர்ப்பார்ப்பவற்றைத்தான் திணிக்கின்றன. கூட்டுறவு, ஒற்றுமை, பொதுவுடமை, முன்னேற்றம் என்பவற்றை நான் எதிர்ப்பதாக நினைக்கக் கூடாது. ஆனால், அவற்றின் பெயரால் மனிதன் வெறும் யந்திரமாக ஆக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறேன். ஒற்றுமை, முன்னேற்றம் என்பவை எல்லாம் ஒருமைப்பாடு அல்ல. ஆனால் அப்படித்தான் இன்று கருதப்படுகிறது. அந்த ஒருமைப்பாடு இராணுவமுறையில் திணிக்கப்படுகிறது - regimentation. பொதுமக்கள் முன்னேற்றம் என்பது தனிமனிதனின் முன்னேற்றமாக இருக்க வேண்டும். தனிமனிதனின் மேல்மற்றவர்களின் திணிப்பாக இருக்கக் கூடாது*. ஆனால் அப்படித்தான் இன்று இருக்கிறது.

ஏன் இந்த நிலை?

சரித்திரத்திடந்தான் அதற்குரிய பதிலைத் தேட வேண்டும். புதிய புரட்சிக்கருத்துக்கள் பரவிய பின் அதன் காரமாக
_____________________________________________________________________________

* பொதுமக்கள் திரள் என்ற பிசாசு, பொதுக்காரியங்கள், தேசியத் தொழில் முயற்சிகள், வியாபாரம், சமூகவாழ்வு, மனித ஒழுக்கம் எல்லாவற்றின் மேலுமே தன் நிழல் படும்படி உலாவி வருகிறது. மக்கள் திரளால் ஏற்படும் அபாயம், நல்ல எண்ணம் அல்து கெட்ட எண்ணத்தால் ஏற்படும் பலனைப் பற்றியதல்ல. எந்த எண்ணமும் இல்லமையாகிய சூன்யத்தினால் ஏற்படும் பலனைப் பற்றியதல்ல. எந்த எண்ணமும் இல்லமையாகிய சூன்யத்தினால் ஏற்படும் பலனைப் பற்றியதே ஆகும். தனிமனித வாழ்க்கையின்மேல் தொழிற்படும் மக்கள்திரளின் அபாரத் தாக்குதலினால் தனிமனிதன் ஊக்கமும் உற்சாகமும் அற்றவனாகவும் எதையும் ஒப்புக்கொள்ளும் கோழையாகவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் பலவீனனாகவும் ஆகிவிடக்கூடும் (ஆகிவிடுகிறான்) தொழில் வளர்ச்சியை மையமாகக் கொண்ட நாகரிகம், பொதுமக்கள் திரளால் பாதிக்கப்படும் சமூகம் இவற்றின் இடையே சிக்கிய தனிமனிதன் தன் தனிமனிதப் பண்பையே இழந்துவிடுகிறான்... தொழில்முறை வளர்ச்சிக்குச் சமமான மன அடக்கமும் ஆத்மீக வளர்ச்சியும் மேலோங்க வேண்டும்.


ஏற்பட்ட அமைப்பு இறுகிப் பிரமாண்டமான யந்திரமாக வளர்ந்த பின் ஏற்படும் ஒரு ஸ்தம்பித மந்த நிலை. அப்படி ஒரு மந்த நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். லூத்தர் காலத்தில் புனித ரோம ராச்சியத் தேவாலயத்தின் அமைப்பும் அப்படித்தான் இருந்தது. கோதெயின் காலத்தில் பிரஞ்சுப்புரட்சி நெப்போலியச் சர்வாதிகாரமாக மாறிய பின்பு அப்படி ஒரு நிலையில்தான் இருந்தது. தொழிற்புரட்சியின் தொடராக வந்த ரஸ்ஸ’யப் புரட்சிக்குப் பின் ஒன்று பொதுவுடமைச் சர்வாதிகாரம் அல்லது பாஸ’ஸச் சர்வாதிகாரம் என்று ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையும் அப்படி ஒரு புரட்சியின் ஸ்தம்பித நிலையைத்தான் குறிக்கிறது. ஏன் அந்த ஸ்தம்பிதம்? அங்குதான் தனிமனிதத்துவமும் தனித்தன்மையும் முக்கியம் பெறுகின்றன. தனிமனித எழுச்சியின் கூட்டால் ஏற்படும் புரட்சிகள் நாளடைவில் ஓர் இறுகிய அமைப்பை அமைத்துக் கொண்டு புரட்சியின் வெற்றிக்கு உதவிய அதே தனிமனிதச் சுதந்திரத்தையும் இயக்கத்தையும் சாகடிக்கத் தொடங்கும்போது ஸ்தம்பிதம் ஏற்படத் தொடங்குகிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில் தனித்தன்மைக்குக் கிடைக்கும் அற்ப உதாரணங்களில் ஒருவரான அல்பெட் சுவெய்ஷர் அதை அழகாக விளக்குகிறார்:

While it iscertain that a properly ordered environment is the condition and at the same time the result of civilization, it is also undeniable that after a certain point has been reached, external organization is developed at the expenses of spiritual life. Personality and ideas are then subordinated to institutions, when it is really these which ought to influence the latter and keep them inwardly alive....... If a comprehensive organization is established in any department of social life, the results are at first magnificient but after a time they fall off. It is the already existing resources which are realized at the start, but later on the destructive influence of such organization on what is living and original is clearly seen in its natural results and the more consistently the organization is enlarged the strongly its effect is felt in the repression of creative and spiritual activity..... civilization can revive when there shall come into being in a number of individuals a new tone of mind independent of the one prevalent among the crowd and in opposition to it, a tone of mind which will gradually win influence over the collective and in the end datermine its character.*

எனவே, இன்றைய நிலையில் அதே யந்திர அமைப்போடு சேர்ந்து தானும் யந்திரமாக வாழ விரும்பாதவன் ஒன்று சாகவேண்டும் அல்லது தானாகப் புரட்சிசெய்து ஒரு புதுவழி கண்டுபிடிக்க வேண்டும். ஒன்று கோதேயின் Whether அல்லது Faust! ஆமாம், இன்றைய நிலையில் திரும்பவும் காலத்துக்கேற்ற திருந்திய ஒரு romanticism தான் தேவைப்படுகிறது. Whether ஐப் போல் நாம் தற்கொலை செய்துகொள்ளத் தேவையில்லை. இந்த நிலை இன்னும் நமக்கு ஏற்படவில்லை+. ஆனால், அதே சமயம் Faust ஐப்போல் டொக்டராகத் தொடங்கி
__________________________________________________________________________________________

* The Decay and Restoration of Civilization - Albert Scheweitzer.

ரஸ்ஸ’யாவில் அதுதான் சிறந்த வழியாக இருக்கிறது. ஒன்று ஏதும் ஏழதாமல் பேசாமல் இருக்க வேண்டும் அல்லது எழுதியவின் கண்டனத்தையும் அவமானத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டு பாஸ்டர்நக்கைப் போல் பொறுத்துக்கொண்டு சும்மா இருக்கவேண்டும். ஆனால் அவற்றைவிட அப்படி ஒரு ஈறுகிய இயந்திர அமைப்பில் தற்கொலை மூலம் தன் எதிர்பபைக் காட்டிக்கொள்வதுதான் சிறந்த வழி. சர்வாதிகார அமைப்பில் எழுத்தாளன் தான், தனித்தன்மைத் துடிப்பின் பகிரங்கப் பிரதிபலிப்பாக இருக்கிறான். எழுத்தாளனைக் கொண்டுதான் ஓர் அமைப்பில் சுயகௌரவத்துக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் எவ்வளவு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்பதை அறிய வேண்டும். எங்கு எழுத்தாளன் தற்கொலை செய்யவேண்டிய நிலையில் இருக்கிறானோ அங்கு அவன் எழுத்துகள் பூரணமாக மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் அர்த்தம். தற்கொலையை அப்படி ஒரு இறுகிய அமைப்பில் கோழைத்தனமாகக் கொள்ளாமல் தன் தனித்தன்மையை விட்டுக்கொடுக்க விரும்பாத தனிமனிதனின் வீரம் நிறைந்த ஆகக்கூடிய எதிர்ப்பாகத்தான் கொள்ளவேண்டும். ரஸ்ஸ’யாவில்போல் இந்த நூற்றாண்டில் வேறு எந்த நாட்டிலும் அத்தனை எழுத்தாளர்கள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர்களைப்பற்றி அழகாகக் கூறுகிறார் Prlczi Horuath (Writer and Commissar)


என்ஜினியராக முடியவும் தேவையில்லை. அந்த முடிவிலிருந்துதான் இன்று நாம் எதிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோமோ அது ஆரம்பித்திருக்கிறது. எனவே, நம் முடிவு வேறாக இருக்க வேண்டும். அந்த முடிவைப்பற்றிய அபிப்பிராயம் இன்றைய உலக எழுத்தாளரிடம் பல்வேறு விதமாக இருக்கலாம். டி.எச். லோரன்ஸ் தொட்டு பெர்னாட்ஷா வரை ஹக்ஸ்லி வரை ரகம் வேறுபடலாம்; அல்லது அமெரிக்க Hipsters Beatniks ஆகவும் ஐரோப்பிய Extenstialists ஆகவும் மாறுபடலாம். ஆனால் அத்தனை வேறுபாடுகளும் ஒன்றை உணர்த்துகின்றன. அதுதான் தனித்தன்மை. அதோடு அத்தனை எழுத்தாளர்களும் ஒன்றை ஒப்புக்கொள்கிறார்கள். அதுதான் தனித்தன்மைத் தாகம். தன்னை உணர்ந்த பின்தான் மற்றவர்களை உணரலாம். தனித்தன்மை மூலந்தான் ஆன்மீக வளர்ச்சி ஏற்பட முடியும். பக்திமார்க்கம் எப்பவும் அறிவில்லாதவர்களையே எதிர்பார்க்கிறது. தனித்தன்மையின் அடிப்படையில் எழும் ஆன்மீக வளர்ச்சி ஒவ்வொருவனையும் அறிவாளியாக எடுத்துக்கொள்கிறது... ஆனால் ஒவ்வொரு வரும் அறிவாளியில்லையே. ஆமாம் அது உண்மைதான். அதனால்தான் இன்றைய இலக்கியம் அறிவை ஊட்டுவதாகவும் இருக்க வேண்டும். ஆனால், அறிவு என்பது கொள்கைப் புகட்டல் அல்ல; அனுபவத்தைக் கோரும் அறிவு. தன்னைத் தானே உணர்ந்துகொள்ளக் குடிய அனுபவ ஒளி. இன்றைய உலக எழுத்தாளர்களிடையே புத்தரின் போதனைகளும் உபநிடதங்களும் கீதையும் பிரபல்யம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. அது இன்றைய நாகரிகம், மனிதன் செல்லவேண்டிய வழியிலிருந்து தவறுதலாகப் பிழையான வழியில் பல நூற்றாண்டுகளாகச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் ஓர் உணர்வைத்தான் பிரதிபலிக்கிறது. அதனால், இன்றைய இலக்கியம் சமயமாகவும் மாறவேண்டிய நிலையிலிருக்கிறது. மாறியிருக்கிறது. சமயம் என்றால் தனித்தன்மைக்கு இடங்கொடுக்கும், தன்னால் தானே நடத்தப்படும் சுய இயக்கம் சேர்ந்த ஆன்மிக வளர்ச்சி. இலக்கியம் படைப்பவனின் தொழில் இன்று பெரியது, பொறுப்பு வாய்ந்தது; அவன் இலக்கியப் போலியாகவும் இருக்கக் கூடாது; இலக்கியச் சர்வாதிகாரியாகவும் இருக்கக் கூடாது; இலக்கிய மேதாவியாக இருக்க வேண்டும்.

`Down with the literary Supermen' என்றார் லெனின். இலக்கிய மேதாவிகளின் சூன்யம் எப்படி அரசியல் சர்வாதிகாரிக்கு - Big Brotherகளுக்கு இடமளித்திருக்கிறதென்பதை அவர் அறியவில்லை. அவர் இறந்துவிட்டார். ஸ்டாலினைப்பற்றி இன்று நாம் நன்றாக அறிவோம். அவரது அமைப்பில் பொதுமக்களின் மனப்பக்குவம் எந்த நிலையில் இருந்தது, இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஸ்டாலின் செத்தபோது அவரின் சவத்தைக் காண்பதற்கு வந்த கூட்டத்தின் நெருக்கடியில் நூறு பேருக்குமேல் இறந்தனராம். அது சர்வாதிகார வளர்ச்சியை மட்டுமல்ல, தனிமனித சுதந்திரம் இல்லாத பொது மக்கள் கூட்டத்தின் மந்த மனநிலையையுந்தான் விளக்குகிறது. அந்த நிலையைப் போக்க, மற்றவர்களுக்கு அதை விளக்க முதலில் அந்த நிலை எழுத்தாளனை விட்டுப் போக வேண்டும். எனவே, ஆரம்பத்தில் கூறிய தனித்தன்மையையே முடிவிலும் ஞாபகப்படுத்துவது நல்லது. அதை இந்த முறை அனுபவசாலியான ஜோர்ஜ் ஓர்வல் கூறுகிறார்.

"No one who feels deeply about literature, or even prefers good English to bad, can accept the discipline of a political party."

முற்றும்

----------------------------------------