கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  சிறு கை நீட்டி  
 

இளம்பிறை
எம்.ஏ.ரஹ்மான்

 

சிறு கை நீட்டி

இளம்பிறை
எம்.ஏ.ரஹ்மான்

------------------------------------------------

மரபுவின்

சமர்ப்பண நாயகன்

பொன். அநுரவின்

மகனாய்

மழலைத் தமிழ்

சிந்தும்

ராகுல்

Raahul

சிரிப்புக்கு

இது

படையல்

---------------------------------------

பதிப்புரை

தமிழ் பற்றி-தமிழ்க் கலை இலக்கியங்கள் பற்றி--அதிகமாகப் பேசப்படும் ஒரு சூழலிலேதான் நான் பிறந்து வளர்ந்தேன். இதனை என் பிதிரார்ஜிதமாக எண்ணி மகிழ்வேன். வைத்தியப் பணிக்கும் தமிழ்ப் பணிக்கும் இடையில் இதுவே ஒட்டுறவினை ஏற்படுத்தியது. விடுமுறையிலும் தமிழே சுவாசமாயிற்று. மாமாவின் (ரஹ்மானின்) அச்சுக் கூடத்திலே தங்குவேன். அங்கு அச்சிடப்படும் நூல்களின் பாரங்களை ஒன்று சேர்த்து நூலாக்கும் பணியிலே விருப்புடன் ஈடுபடுவேன். சேது அணையைக் கட்டுவதில் அணிலின் சேவையைப் போன்றது. எத்தகைய இனிமையான இளமைக் காலம்!

இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தும் பணியிலே ஈடுபடும்பொழுது, இதுவரை நூலுருப் பெறாத சிறுகதைகளும் தொகுக்கப்படுதல் வேண்டும் எனத் தீர்மானமாயிற்று. அவர் ஈழ மண்ணிலேதான் சிறுகதைக் கலை பயின்றார். இத்துறையில் பரிசுகளும் வென்றார். அவை பற்றிய பிரஸ்தாபங்கூட தவிர்க்கப்பட்டுள்ளன. எஸ்பொ நடத்திய இலக்கியச் சமரிலே அவர் தோள் கொடுத்ததினால், அவருடைய உருபு வாய்ந்த இலக்கியத் தொண்டுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. இவை வெளிச்சத்திற்கு வருதல் வரலாற்றின் உண்மையின் பாற்படும்.

அவர் இயற்றிய தொண்டும் இணைந்ததுதான் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய வளம். அவர் தொண்டுகளையும் ஆவணப்படுத்தும் முகமாக வெளிவரும் சிறு கை நீட்டியை மித்ர வெளியீடாகப் பிரசித்தப்படுத்துவதில் ஆத்ம நிறைவு அடைகின்றேன்.

டாக்டர் பொன். அநுர

1/23 Munro Street
Eastwood-2122

------------------------------------------------------

கதைகள்

பூ 17

யானை 33

தானம் 49

உண்மையில் உறுதி 73

ஈமான் 81

சிறு கை நீட்டி 99

--------------------------------------------------

என்னுரை

1960 அக்டோபர் 29--

என் இலக்கிய வாழ்வில் ஒரு பொன்னாள். இன்றும், நான் 'பொன்னு' என்று உரிமையுடன் அழைக்கும் எஸ்.பொன்னுத்துரை அவர்களின் முதற் சந்திப்பு அன்றுதான் வாய்த்தது.

1948 இல், இலங்கையில், வெலிகாமம் அறபுக் கல்லூரி மாணாக்கனாய் இருந்த காலத்திலேயே, சென்னையிலிருந்து தமிழ் நூல்களையும் சஞ்சிகைகளையும் வரவழைத்து வாசித்தல் என் வழக்கம். சஞ்சிகைகளிலே இஸ்லாமிய மாசிகைகளிலிருந்து கலைப்பொன்னிவரை அடங்கும்.

தொழில் நிமித்தம் கொழும்பு வாழ்க்கையைத் தேர்ந்தேன். ஏனைய தமிழ் இலக்கியச் சுவைஞர்களுடைய நட்பும் கிடைக்கலாயிற்று. நிறைய வாசிப்போம். வாசித்தவற்றைப் பற்றி நிறையப் பேசுவோம்; விவாதிப்போம். இவற்றின் தூண்டுதலால் எழுதுவோம்.

அக்காலத்திலேயே என் கட்டுரைகள் இஸ்லாமிய இதழ்கள் சிலவற்றிலும், சிறுகதைகள் சில இலங்கை நாளேடுகளிலும் பிரசுரமாயின. எழுத்து ஊழியத்தைத் தொடரும் ஆர்வத்தினாலும், ரெயின்போ பிரிண்டர்ஸ் என்பதை, கொழும்பு கொட்டாஞ்சேனையில் நிறுவினேன்.

1959 ஆம் ஆண்டின் கடைக்கூறு என்று நினைவு. நாவலாசிரியர் எனப் புகழ் பெற்றிருந்த இளங்கீரன் என் அச்சகத்தில் தங்கி மரகதம் என்கிற மாசிகை ஒன்றை நடத்தும் ஏற்பாடுகளைக் கவனித்தார். இலக்கியம் சார்ந்து ஏற்பட்ட நட்பினாலேயே இந்த வசதியைச் செய்து கொடுத்தேன். மாலை வேளைகளிலே, அச்சகத்தில் ஏழெட்டு இலக்கிய ஆர்வலர்கள் கூடுவார்கள். இலக்கிய உலகிலே நமது தடத்தினைப் பதித்திருந்த இளங்கீரன் நாயகமாகத் திகழ்ந்தார். எஸ்.பொவின் எழுத்து வல்லமையினாலே கவரப்பட்டிருந்த நாங்கள், அவரைப் பற்றியும் இந்தச் சந்திப்புகளிலே அதிகமாகப் பேசிக் கொண்டோம். எஸ்பொ பற்றித் தவறான கருத்துகளை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் விதைக்க ஆரம்பித்த காலகட்டம் அது. அவர் பற்றிய தகவல்கள் அநேகமானவை உண்மைக்கு மாறானவை என்பதை இளங்கீரன் பொறுமையுடன் விளக்கினார். இதனாலும், எஸ்பொவைச் சந்திக்கும் ஆவல் அதிகரித்தது. அவருடனான முதலாவது சந்திப்பினை இளங்கீரனே சாத்தியமாக்கித் தந்தார். முதற் சந்திப்பிலேயே நட்பு மலர்ந்தது. புதிய இலக்கியத் தேடலிலே இருவரும் சகாக்களாக இணைந்தோம். பின்னர், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரும் சமயங்களில் எல்லாம் எஸ்பொ என் அச்சகத்திலே தங்குவதையே வழக்கமாக்கிக்கொண்டார். அப்பொழுதெல்லாம் மரகதம் சஞ்சிகையின் வளர்ச்சியிலும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய புதுமை இலக்கியம் என்கிற வெளியீட்டின் வளர்ச்சியிலும் அவர் அக்கறை செலுத்தினார். அவர் தம்மை முற்போக்கு எழுத்தாளராகவே சம்பாவனை செய்து வாழ்ந்தார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர் முதுகுக்குப் பின்னால் நடத்தப்பட்ட தவறான பிரசாரங்களைப் பற்றியும் அவர் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை.

1962 இல் ஸாஹ’ராக் கல்லூரியில் நடத்தப்பட்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டிலே அவர் முற்போக்கு எழுத்தாளர் என்கிற வாத்ஸலயத்துடனேயே கலந்து கொண்டார்.

இரண்டு ஆண்டுகளாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அவருக்கு எதிராக நடத்தி வந்த திரைமறைவுப் பிரசாரங்கள் அந்த மாநாட்டிலேதான் அம்பலமாயின. உண்மைகளைப் புரிந்து கொண்ட அவர் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்துவிட்டு, மாநாட்டிலிருந்து வெளியேறினார். அந்த மெலிந்த உருவம், தன்னந்தனியாக மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளியேறி மருதானை வீதியிலே நடந்து செல்வது பரிதாபமாகவும் இருந்தது; அவருடைய துணிச்சல் பிரமிப்பிணையும் தந்தது நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.

இருவரும் இணைந்தோம். என் வசம் இருந்த என் பிரசுர வசதிகளை அவருடைய எழுத்துப் போருக்குப் பயன்படுத்தலாம் என்று கூறினேன். அவருக்கு அந்த நிலையில் பற்றுக்கோடாக இருந்தது என் இந்த ஆதரவு மட்டுமே.

எஸ்பொ உடல்வாகிற்கு அப்பால் வைரம் பாய்ந்தவர். சலியாத உழைப்பாளி. புதிதுகள் குறித்து இடையறாத தேடல் நடத்துபவர். பிரசுர வசதிகளற்று, அங்கீகாரம் பெறாதிருக்கும் கிழக்கிலங்கை எழுத்து வல்லபங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும் என அவர் விரும்பினார்.

1962 இல், இதனைச் சாத்தியப்படுத்தும் நோக்கத்துடன் அரசு வெளியீடு நிறுவனத்தை நிறுவினேன். கிழக்கிலங்கை வல்லபங்கள் அரசு வெளியீடாக வெளிவந்தன. சிலவற்றை அச்சிட்டுக் கொடுக்கவும் முன் வந்தேன். எஸ்பொவின் தீர்க்கதரிசனம் வென்றது.

1963 ஆம் ஆண்டு சாஹ’த்திய மண்டலப் பரிசுகளை கிழக்கிலங்கை வாழ் நால்வர் வென்றனர். ஈழத்து இலக்கிய மையம், கொழும்பு கொட்டா ரோட்டிலிருந்து கொட்டாஞ்சேனைக்குப் பெயர்த் தெடுக்கப்படுவதாயிற்று.

ஈழம் வாழ் இஸ்லாமிய வாசகர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் தமிழிலே முகிழும் புதிய எழுத்து ஆர்வங்களுக்கும் பிரசுர களம் அமைத்து, எஸ்பொவின் இலக்கியக் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒரு சஞ்சிகையைத் துவங்க நான் பெரிதும் ஆர்வமாய் இருந்தேன். தமிழ்ச் சஞ்சிகை ஒன்றினை நடத்துவது அக்கினிப் பரீட்சை நிகர்த்தது என்று எஸ்பொ கூறினார். ஈற்றில் என் ஆர்வம் வென்றது.

1964 ஆம் ஆண்டில் இளம்பிறை என்கிற மாசிகையை வெளியிடத் துவங்கினேன். ஈழத்து இலக்கிய வயலிலே புதிய ஆற்றல்களைப் பிரசித்தம் செய்வதிலே இளம்பிறை ஈட்டிய வெற்றியை வேறெந்தச் சிற்றிதழும் ஈட்டியதில்லை என்பது உண்மை. நான் சந்தர்ப்பச் சூழ்நிலைகளினால் தாய்நாடு திரும்பிப் புது வாழ்வு ஏற்படுத்திக் கொள்ளும் நிர்ப்பந்தம் நான் திரும்பிய சில ஆண்டுகளிலேயே, எஸ்பொ தம்மை 'பரதேசி'யாகப் பிரகடனப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் ஈழத்து இலக்கியம் பற்றி எழுதுவோர், இளம்பிறையின் உருபு வாய்ந்த பங்களிப்பினை மறந்தும், மறைத்தும் எழுதி வருகின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்திலே உண்மைகளை ஆவணப் படுத்துவதற்காகவே இவற்றை இங்கு எழுத நேரிடுகின்றது.

எஸ்பொவின் தொடர்பும் நட்பும் கிடைப்பதற்கு முன்னரே நான் சிறுகதைகள் எழுதத் துவங்கினேன். அவற்றிலே சில பிரசுரமுமாயின. அரசு வெளியீடு பணிகளிலும், இளம்பிறை ஆசிரியப் பணிகளிலும், இவற்றை வெளியிட மூலதனமாக இயங்கிய ரெயின்போ அச்சக நிர்வாகத்திலும் முழுமையாக ஈடுபட்டமையினால் ஆக்க இலக்கியத் துறையிலே ஈடுபடுவதற்கு அரிதாகவே நேரம் ஒதுக்கிடத் தோது வாய்த்தது.

கதைப் புனைவுகள் குறித்து அதிகமாகவே எஸ்பொவுடன் சம்பாஷணைகள் நிகழ்ந்துள்ளன. பதினேழு ஆண்டுகள் தொடர்ந்தாற் போல, வார விடுமுறைகளை அவருடன் கழித்ததுண்டு. கதையின் வஸ்து-எழுதும் உத்தி-தொனிப் பொருள் ஆகிய சகல அம்ஸங்கள் பற்றியும் அலசப்பட்டன. உருவகக் கதைத் துறையிலே நான் அதிகம் ஆர்வம் காட்டியதினால், அத்துறையில் ஈடுபடுமாறு எஸ்பொ என்னை ஊக்கப் படுத்தினார். அத்துறையில் நான் சம்பாதித்த வெற்றிக்கு அவர் தந்த ஊக்கம் பிரதான காரணி. சிறுகதைகளைத் தேவைகள் கருதியே எழுதினேன். ஒரு வகையான நிர்ப்பந்தம். மனசிலே சலனம் ஏற்படுத்திய கதைக் கருத்துக்களை நான் நெஞ்சிலே சுமந்ததுண்டு. அவை பெரும்பாலும் சிக்கலற்றவை. அவற்றை எழுத்துருப்படுத்தும் பொழுது, அதன் வடிவமைப்பிலே அதிகம் கவனம் செலுத்துவேன். நிகழ்வு-நினைவு-பழைய சம்பவங்கள் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கு வேறுவேறான பந்தி முறைகளை நான் பயிற்சிக்குக் கொண்டு வர முனைந்தேன்.

எஸ்பொ எழுத்து நடை பற்றி மு.தளையசிங்கம் பெரியதோர் விமர்சனம் எழுதியுள்ளார். அங்கீகாரம் பெறாத நிலையில் இலக்கிய உலகிலே ஓர் அங்கீகாரம் தேடிய மு.த., எஸ்பொவின் நடையைச் சாடியமை விளங்கிக் கொள்ளத்தக்கது. ஆனால் இன்று எஸ்பொவின் எழுத்து நடையும் ஆளுமையும் தமிழ் இலக்கிய உலகிலே அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முற்பட மு.த. வைத்த விமர்சனம் இன்று செல்லும் என மருளுவோர் இலர். எஸ்பொவின் எழுத்து நடை மற்றும் பல முற்போக்கு எழுத்தாளர்களைப் பீடித்தது. முற்போக்கு இலக்கிய வட்டத்திற்கு அப்பால், எஸ்பொவே தமது இலக்கிய ஆதர்ஷம் என்பதை அவர்கள் இவ்வாறு அங்கீகரித்தார்கள் என இதனை நான் விளங்கிக் கொண்டேன். எஸ்பொவின் மொழி நடை-கதையிலாவது, கட்டுரையிலாவது--கூர்மையானதாக இருக்கும். சொற்கள் அவருக்குக் கைகட்டி சேவகம் செய்யும் விதம் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தும். என்னை வருத்தி அவர் நடையைப் பயின்றேன் என்பதுதான் உண்மை.

சிறுகதைத் துறையிலே நான் எழுதியவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியாகவே சிறு கை நீட்டியைத் தொகுக்கத் துவங்கினேன். பிரசுரத்திற்குப் பத்துக் கதைகளாவது தேறும் என நான் நம்பினேன். பல கதைகளும் ஆவணக் காப்பகத்தில் நீள்துயில் பயில்கின்றனவோ நான் அறியேன். இலங்கையிலுள்ள நண்பர்கள் மூலம் நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் பாழ்.

மனஞ் சோராது கிடைக்கப் பெற்ற ஆறு சிறுகதைகளை மட்டும் இதிலே தொகுத்துள்ளேன். ஒருவனுடைய எழுத்தாற்றல் எண்ணிக்கையை வைத்து மதிப்பீடு செய்யப்படுவதில்லை என்பது என் தேற்றம். ஈழ வாசத்தின் போது, என் மனம் உள் வாங்கிய ஈழச் சூழலிலே எழுதப் பெற்ற இக்கதைகளை நீங்கள் வரவேற்று வாசிப்பீர்களென நம்புகின்றேன்.

அரசு வெளியீடு மூலம் பிரசுரமான முதல் நூல் தோணியின் ஆசிரியரும் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் நிண்டநாள் நண்பருமான வ.அ.இராசரத்தினம் தமிழகம் வந்தபோது இதற்கு முன்னுரை தந்தது பெரும் பேறாக மகிழ்கின்றேன். அவருக்கும், முன் அட்டை ஓவியம் வரைந்த மருது அவர்களுக்கும் பின் அட்டை ஓவியம் அமைத்த புகழேந்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்நூலைப் பதிப்பித்த என் கண்ணன். இனியன் டாக்டர் அநுரவுக்கு நான் இவ்வாறு நன்றி கூற முடியும்? உள்ளம் உவகையால் பொங்குகின்றது.

1996 இல் சென்னை வந்த, நீண்டநாள் நண்பரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவருமான பேராசிரியர் இர.ந.வீரப்பனார், என் கைவசமில்லாத எனது உருவகக்கதைத் தொகுதி மரபு நூலைத் தந்து, அதை மறுபதிப்புச் செய்து மலேசியாவில் வெளியிடும் தமது ஆசையை வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை எனக்கு ஓர் இலக்கியச் சுற்றுலாவையும் அமைத்துத் தந்தது.

1998 இல் ஜெர்மனியில் நடைபெறவுள்ள பண்பாட்டு விழாவிலே வீரப்பனாரின் வேண்டுதலுக்கிணங்க உ.த.ப.இயக்கச் செயலாளர் கே.டி.கணேசலிங்கம் என்னைக் கலந்து கொள்ள அழைத்துள்ளார். அந்த விழாவிலே 'சிறு கை நீட்டி' அரங்கேறுதல் என் இலக்கிய ஊழியத்திற்குக் கிடைத்துள்ள கௌரமாகக் கருதுகின்றேன்.

சென்னை

1-10-98

எம்.ஏ.ரஹ்மான்

-------------------------------------------------------

முன்னுரை

ஈழத்து இலக்கிய உலகில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த எம்.ஏ.ரஹ்மானின் சிறு கை நீட்டி என்ற சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதும்படி கேட்கப் பட்டுள்ளேன். முன்னுரை எழுதும் வாய்ப்பைப் பயன்படுத்தி இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான் அவர்களை ஈழத்தில் ஆற்றிய இலக்கிகயப் பணிகளைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கும் தெரிவிப்பது சிலாக்கியம். அவர் ஈ‘த்தில் ஆற்றிய பணி தமிழ்நாட்டில் பலர் தெரியாமலுமிருக்கலாம்.

இளம்பிறை என்ற மாசிகையை நடத்தியதால் இளம்பிறை ரஹ்மான் என வழங்கப்படும் எம்.ஏ.ரஹ்மான் அவர்கள் அம்மாசிகையைத் தொடங்கும் முன்பாக அரசு வெளியீடு நிறுவனத்தை நிறுவினார். 1960 களில் இது நிகழ்ந்தது.

ஈழத்து யாழ்ப்பாணத்திலே ஈழகேசரியோடு இணைந்த தனலக்குமி புத்தகசாலையினர் பல்வேறு இலக்கண இலக்கிய நூல்களையும், பாடப் புத்தகங்களையும் வெளியிட்டனர். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இலக்கியப்பணி புரிந்த ஈழகேசரியும் அதனோடொட்டிய பதிப்பகமும் கடையைக் கட்டிக் கொண்டன. இந்த நிலையில்தான் எம்.ஏ.ரஹ்மான் தன் அரசு பதிப்பகத்தை நிறுவினார். கிழக்கு மாகாணத்து நீலாவணையில் கவிஞர் நீலாவணன் வீட்டில்தான் அரசு பதிப்பகத்திற்குக் கால்கோள் நாட்டப்பட்டது.

அரசு வெளியீடு சுமார் முப்பதுக்கும் மேலான நூல்களை வெளியிட்டது. கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியிட ஒரு பதிப்பகம் இல்லாதிருந்த குறையை அரசு பதிப்பகம் நீக்கிற்று. அதன் ஆரம்ப வெளியீடுகளான தோணி, பகவத்கீதை வெண்பா மற்றும் மட்டக்களப்பு மான்மியம், ஏ.ஆர்.எம் சலீம் எழுதிய கிழங்கிலங்கை முஸ்லிம் புலவர்கள் பற்றிய தொகுப்பு ஆகிய நூல்களுக்கு 1962-ம் ஆண்டிற்கான இலங்கை ஸாஹ’த்ய மண்டலப் பரிசு கிடைத்தது. அரசு வெளியீட்டை நாடறியச் செய்தது. பரிசு பெற்ற நான்கு எழுத்தாளர்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையைப் புரிந்தவரான எம்.ஏ.ரஹ்மான், இளம்பிறை என்ற மாசிகையையும் தன் அச்சகத்திலிருந்து வெளியிட்டார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் பதினான்கு வயது இளைஞனாக இருந்த போதே அல்ஹ’லால் என்ற பத்திரிகையை நடத்தினார். அல்ஹ’லாலை ஆதர்ஸமாகக் கொண்டுதான் ரஹ்மான் இளம்பிறையை வெளியிட்டார். அல்ஹ’லால் என்ற அரபுப் பதத்தின் தமிழ் வடிவந்தான் இளம்பிறை.

இளம்பிறை பல இலக்கியப் பரிசோதனைகளுக்கு இடமளித்தது. இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தது இன்று சிறந்த எழுத்தாளர்களாக மதிக்கப்படும் பாணந்துறை மொயின் சமீமும், ஓட்டமாவடி எஸ்.எஸ்.எம் ஹனிபாவும் இளம்பிறைப் பண்ணையில் வளர்ந்தவர்களே.

இளம்பிறையிற் சில பக்கங்களை மாணவர்களுக்காக ஒதுக்கினார். அப்பக்கங்களில் சர்வகலாசாலைப் புகுமுக வகுப்பு மாணவர்களும், பத்தாம் வகுப்பு மாணவர்களும் எழுதினார்கள். அந்த வளரும் பயிரில் எழுதியவர்களில் ஒருவர்தான் இன்றைய எழுத்தாளரான சட்டநாதன் அவர்கள்.

இந்தியச் சஞ்சிகைகள் கனமான தீபாவளி மலர்களை வெளியிட்டது போல, இளம்பிறையும் கனமான மீலாத் மலர்களை வெளியிட்டது. அத்தோடு மரபு என்ற உருவகக் கதைத் தொகுதியையும் வெளியிட்டார். இதுவே ஈழத்தில் வெளியான முதல் உருவகக் கதைத் தொகுதியாகும். ஈழத்து இலக்கியப் பரப்பில் உருவகக் கதைஞர்களாக இருவரே தேறினார்கள். ஒருவர்! சு.வே. மற்றவர் எம்.ஏ.ரஹ்மான் என்பதே என் கணிப்பு! மரபு உருவகக் கதைத் தொகுதியை விட இளமைப் பருவத்திலே, இஸ்லாமிய வரலாற்றுக் கதைகள் என்ற நூல்களையும் எழுதினார். இளமைப் பருவத்திலே என்ற நூலில் பல்வேறு உலகப் பெரியார்களின் இளமைப் பருவ வாழ்க்கை மிக்க சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாற்றுக் கதைகளை இஸ்லாமியர் அல்லாதாரும் படிக்கக்கூடியதாக எழுதப்பட்ட நூலாகவிருந்தது.

பத்திரிக்கைத் துறையிலும், புத்தக வெளியிட்டுத் துறையிலும் இத்தகைய சேவைகளைச் செய்த ரஹ்மான் அவர்கள் வானொலியிலும், தன் கைவரிசையைக் காட்டினார். அவரின் தாஜ்மகால் நிழலில் என்ற சரித்திர நாடகம் தொடர்ந்து பல வாரங்களாக ஒலிபரப்பானது. இலங்கை வானொலியிற் தொடராக ஒலிபரப்பாகிய ஒரே சரித்திர நாடகம் அதுதான் என எண்ணுகிறேன்.

1970-ல் காலஞ்சென்ற ஏ.எஸ்.ஏ. மஜ“த் அவர்கள் தகவல் ஒலிபரப்பு உதவி மந்திரியாக இருந்தார். அவரின் அநுசரணையினாலும், வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் செவ்வாய் மலர் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார். அது முஸ்லிம் நிகழ்ச்சி என்ற பிரிவுக்குள் அடங்கினாலும் இலங்கை வானொலியில் ஓர் அற்புத சஞ்சிகையாக அது பாராட்டப்பட்டமை அதன் தனிச் சிறப்பாகும்.

இவைகளுக்கெல்லாம் மேலானதாகத் தான் இந்தியன் என்ற உணர்வுடன், தேசபிதா மகாத்மா காந்தியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஏக காலத்தில் ஐந்து நூல்களை வெளியிட்டார். காந்தியக் கதைகள், காந்தி பாமாலை, காந்தி தரிசனம், மாணாக்கரின் காந்தி, காந்தி போதனை என்பன அந்த ஐந்து நூல்களுமாகும். மகாத்மா காந்தியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய நாட்டின் எந்த மொழியிலும் தனி நபர் ஒருவர் ஒரே தடவையில் ஐந்து நூல்களை வெளியிட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. 'காந்தி போதனை' என்ற நூலை காந்திஜியின் போதனைகளை உள்ளடக்கிச் சிறுவர்களுக்காக எம்.ஏ. ரஹ்மான் எழுதினார். ரஹ்மான் அவர்கள் ஒரே தடவையில் ஐந்து நூல்களை வெளியிட்டிருப்பது ஒரு மகத்தான சாதனைதான்.

இத்தகைய மகத்தான சாதனைகளைப் புரிந்த ரஹ்மான் அவர்கள் தற்போது ஆறே ஆறு சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுதி ஒன்றைத் தருகிறார். ஈழத்திலிருக்கும்போது அவர் எழுதிய இன்னும் பல சிறுகதைகளை இலங்கைத் தேசியச் சுவடித் திணைக்களத்திற் தேடி எடுக்க முடியாமை இத்தொகுதி ஆறே கதைகளுடன் அமைவதற்கான காரணமாயிருக்கலாம். இவ்விடத்தில் இலங்கைத் தேசியச் சுவடித் திணைக் களத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் எழுதவே வேண்டும். அந்த ஆவணக் காப்பகத்தில் தமிழ் ஊழியர்கள் மருந்துக்கும் கிடையாது மேலதிகாரிகளைத் தவிர மற்றைய ஊழியர்களுக்குச் சிங்களத்தைத் தவிர தமிழோ ஆங்கிலமோ தெரியாது. அதன் காரணமாக அத்திணைக்களம் செல்லும் சிங்களம் தெரியாத தமிழர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. மேலும் தமிழ்ப் பகுதி முறையாகப் பேணப்படுவதுமில்லை.

1996-ல் நான் அங்கு கண்ட என் சிருட்டிகளை 1998-ல் தேடியபோது காணக்கிடைக்கவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் ஆவணக் காப்பகத்தில், தமிழ்ப் பகுதியே மூடப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். இந்த நிலையில் ரஹ்மான் அவர்கள் ஆறு சிறுகதைகளையாவது தேடிக்கண்டு பிடித்தது பெரிய விஷயந்தான்!

இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதும்படி நான் இந்த நாட்டிற் காலடி எடுத்து வைத்ததுமே என்னைக் கேட்டார் ரஹ்மான் அவர்கள். இது அவர் என் இலக்கியப் பணிக்காகத் தந்த கௌரவமாகவும் இருக்கலாம். என் வயதிற்குத் தந்த கௌரவமாகவும் இருக்கலாம். அது எப்படியுமிருக்கட்டும். இத்தொகுப்புக்கு முன்னரே எழுத வேண்டிய பணி என் தலையில் விடிந்தது எனக்கு மகிழ்வே.

நூலிலே உள்ள ஆறு சிறுகதைகளிலும் கரு மிகவும் 'சிம்பிள்' ஆனவைகள்தான். ஆனால் அந்தக் கதைக்கருக்களை நெய்து சிறுகதைகளாக்கியிருக்கும் உத்திதான் கதைகளுக்கு இலக்கிய அந்தஸ்தைத் தேடிக் கொடுக்கின்றன. முதற்கதையான பூவைப் படிக்கையில் என் மனைவியின் மரணத்தையொட்டி நான் எழுதிய 'ஒரு காவியம் நிறைவு பெறுகிறது' என்ற கதையைப் படிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்படியான சோகம் கதையிலே இழையோடியது. சிசேரியன் ஒப்பிரேஷனின் பின்னர் மனைவியோடு 'குடும்ப வாழ்க்கை' நடத்தினால் அவளது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும் என எச்சரிக்கிறார் டாக்டர். அவர் பணிப்புரைளை ஏற்றுத் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்கிறான் அவன். அதனைப் புரிந்து கொள்ளாத மனைவி பிணங்குகிறாள். உத்தியோக மாற்றம் எடுத்துக் கொண்டு பிரிந்து செல்கிறாள். விடுமுறைக்கு வந்தபோது அவள் தன் கணவனிடம் உடலின்பம் பெற முனைகிறாள். கணவன் சமத்காரமாக அதைத் தவிர்க்கிறான். ஏமாற்றமடைந்த மனைவி மீண்டும் பிரிந்து செல்கிறாள். சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு மருந்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். நோய் முற்றி மரணத்தைத் தழுவுகிறாள்.

டாக்டருக்கு ஆத்திரம் வருகிறது கணவன் மேல். தான் சொன்ன 'புத்திமதியைக்' கேட்காமல் மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டானே என்று அவருக்கு வந்த ஆத்திரத்தில் "நீர் ஒரு மிருகம். அவள் மூன்று மாதக் கர்ப்பிணி" என்று கர்ச்சிக்கிறார்.

"கல்யாணி பூவிலே தேன் குடிக்க வெறி கொண்டலைந்த வண்டு நானல்ல என்பதை நீ அறிவாய்" என்று ஓஹென்றி பாணியிற் கதை முடிகிறது. நாம் கல்யாணிக்காக அழுவதா? அல்லது அவள் கணவனுக்காக அழுவதா?

அடுத்ததாக வரும் யானை என்ற சிறுகதை சதுரங்கம் விளையாட்டைக் கதைக் களமாகக் கற்பித்து எழுதப்பட்டுள்ளது. அவ்விளையாட்டில் நகர்த்தப்படும் குதிரை, யானை, காலாள், தேர், அரசன் என்ற தலைப்புகளில் ஐவர் சிறுகதைகளை எழுதிச் சதுரங்கம் என்ற நூல் அரசு வெளியீடாக வந்தது. அந்நூலிலுள்ள யானைதான் இந்நூலில் இரண்டாங் கதை. இந்தக் கதையைப் பற்றி நான் ஏதும் சொல்வதற்கு முன் அக்கதையைப் பற்றிக் காலஞ்சென்ற முனைவர் சாலை இளந்திரையன் அவர்கள் குறிப்பிட்டதை மீண்டும் இங்கு குறிப்பிடுகிறேன். நேற்றுக் காலமடைந்த அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவும் அதிருக்கட்டும். அவர் சொல்கிறார்.

'பணத்தை மட்டும் சேர்த்துவிட்டாற் போதுமா? அதற்காகவே உண்ணாமல் உறங்காமல் ஓடினால் போதுமா? ஒற்றைக்கு ஒரே மகன். காலங் கடந்து பிறந்த செல்லப்பிள்ளை என்னும் உணர்ச்சிச் சூழல்களில், அவனை நல்லபடி வளர்த்து உருவாக்கும் பொறுப்பைச் சோரவிட்ட குற்றம் மாஸ்டரைச் சார்ந்ததே. ஆமாம். பையன் சதுரங்க ஆட்டத்தில் ஆரம்பக் கட்டங்களில் தவறுதல் இழைத்தது போல அவனுடைய தந்தையும் பிள்ளை வளர்க்கும் பொறுப்பில் தவறு இழைத்துவிட்டவரே.' கதையின் பாத்திரங்களைச் சதுரங்கப் பலகையிற் காய்களை நகர்த்தும் பாணியில் நகர்த்தியிருக்கிறார் ஆசிரியர்.

'மோகன் நாலாவது மூவ் ஆகக் 'காஸ’லிங்' செய்கிறான். யானை தன் இருப்பிடம் பெயர்ந்து அரசனுக்குப் பக்கத்தில் வந்து நிற்கின்றது. கோட்டை கட்டிக் காவல் செய்த பின்னரே, தன் படையின் பலத்தை எதிரி சங்காரத்திற்கனுப்பும் யுக்தி" என எழுதியிருப்பது இதைப் புலப்படுத்தும்.

சதுரங்க விளையாட்டில் ஈடுபடும் 'வளர்க்கத் தெரியாமல் வளர்த்த' பொறுப்பற்ற மகன், உத்தியோகம் பார்க்க வந்த இடத்தில் மற்ற யாழ்ப்பாணிகளைப் போல அல்லாது அவ்விடத்தில் ஸ்திரமாகக் காலூன்றித் தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் பிரயாசித்துப் பணம் பண்ணி, பண்ணிய பணத்தை நாலு தலைமுறைக்கு நிலைக்கப் பண்ணுவதில் கருத்தாயிருக்கும் ஆசிரியராக ஆனால் மகனை விட ஆசிரியரான தந்தையே முந்திக் கொணடு நிற்கிறார். எத்தனை பணம் பண்ணியும் அவரால் ஒரே மகனை நன்றாக வளர்க்க முடியவில்லையே.

தானம் என்ற மூன்றாவது கதை புத்தர் காலத்திற்குச் செல்கிறது. நகர சோபினியான கல்யாணி, புததரின் சீடரான பிக்கு ஒருவருக்குத் தானம் கொடுக்க விழைகிறாள். பிறப்பில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை என்பதைக் காட்டுவதற்காகப் புத்த பகவானே நகரசோபினி ஒருத்தியிடம் சென்று அவளிட்ட தானத்தைப் பெற்றுச் சென்றது அவள் விழைவுக்கான நம்பிக்கையை ஊட்டிற்று. அந்த நம்பிக்கையோடுதான் அவள் புத்தரின் சீடரைத் தானம் பெற அழைத்தாள்.

ஆனாற் கல்யாணியின் அழைப்பை அந்தப் பிக்கு உடனடியாக ஏற்கவில்லை. முறுவலோடு சொன்னார்.

"தானம் ஏற்க நிச்சயம் வருவேன். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாது. அதற்கான வேளை வரும், அப்போது தானம் ஏற்க நானே வருவேன். அது அதற்கு ஒவ்வோர் வேளை இருக்கிறது". கல்யாணி அந்த வேளையை எதிர்பார்த்து ஏங்கியிருந்தாள். பிக்கு குறிப்பிட்ட வேளை வரவேயில்லை. கல்யாணி ஏக்கத்தோடு அந்த வேளைக்காகக் காத்தேயிருந்தாள்.

ஒருநாள் அந்த நகர சோபினியிடம் உஜ்ஜயினி நகரத்திலிருந்து வந்த தனவணிகன் வழமை போல சுகம் பெற வருகிறான். அத் தனவணிகன் கல்யாணியால் உபசரிக்கப்படுகிறான் வழமை போல. அவனோடு கல்யாணி சல்லாபித்திருக்கையில் பிக்கு வருகிறார். தானம் ஏற்க வேளை வந்துவிட்டதா அவருக்கு?

பிக்குவிற்கும் கல்யாணிக்கும் தனவணிகனுக்குமிடையிற் சம்வாதம் நடக்கிறது. அச்சம்பாஷணைகளை மிகச் சுவையாக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். வர்ணாசிரமக் கட்டுப்பாடு, அதற்கெதிரான புத்த தத்துவம் ஆகியவைகளே சம்பாஷணையின் மையக் கரு. முடிவில் 'வேளை' வந்து விட்டது. ஆனால் அது கல்யாணிக்கல்ல, தனவணிகனுக்கு.

"அந்த வேளை உன் இல்லத்திலே சித்திக்க விருந்தமை தெரிந்துதான் இன்று இங்கு வந்தேன்" எனச் சொல்லிவிட்டு, தனவணிகன் பின்னால் வர பிக்கு நடக்கிறார். கதையும் முடிகிறது. புத்த மத தத்துவத்தைக் கதை மிக அழகாகச் சொல்கிறது.

அடுத்ததாக உண்மையில் உறுதி என்ற கதை எனக்குச் சில நினைவுகளை எழுப்புகிறது. கதைக் கரு 'சிம்பிள்' ஆகத் தோற்றம் அளிப்பினும் 'சிம்பிள்'அல்ல.

தனது உரிமைகளைப் படிப்படியாக இழந்து கொண்டிருந்த தமிழினம், தான் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க 1956-ல் இருந்தே பல போராட்டங்களை ஈழத்தில் நடத்தியது. அவைகளில் ஒன்று 1962-ல் நடந்த சத்யாகிரகப் போராட்டம். அது உண்மையில் சத்யாகிரகமா? கிடையவே கிடையாது என்பதுதான் என் கட்டித்த அபிப்பிராயம்.

1942-ல் என நினைவு. மகாத்மா காந்தி தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்திற்கான முதலாவது நபராக வினோபாஜியைத் தேர்ந்தெடுத்தார். சத்தியாகிரகிக்கு அஹ’ம்சை, உறுதி நம்பிக்கை, உண்மை ஆகிய குணங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்நான்கு குணங்களே இல்லாதவர்கள் கும்பல் கும்பலாய் அரசாங்க அலுவலகங்களின் முன்னாற் திரண்டு தரையில் அமர்ந்து கொண்டு அரசாங்க அலுவலர்களை இயங்காமற் செய்தனர். அவர்கள் அதில் வெற்றியடைந்திருக்கலாம். ஆனால் அது சத்தியாகிரகமல்ல. சத்தியாகிரகத்தைக் சொச்சைப் படுத்திய மறியற் போராட்டம்! ஆனால் அது சத்தியாகிரகம் என்றே தமிழரசுத் தலைவர்களாற் சொல்லப்பட்டது.

இந்தக் கால கட்டத்தில் எழுதப்பட்டதுதான் உண்மையில் உறுதி என்ற கதை. இக்கதை சத்தியாகிரகத்தின் தத்துவங்களைத் தொட்டத் தெளிவாகச் சொல்லும் அருமையான கதை! இத்தொகதியிலே மிகச் சிறந்த கதை அதுவாகவே எனக்குப் படுகிறது.

ஐந்தாவது இடம் பெறும் ஈமான் ஒரு இஸ்லாமியக் கதை. மொகலாயர் காலத்துக் கதை. மொகலாயர்கள் இரத்தத் தூய்மையும் குலப் பெருமையும் பேசிய ஒளரங்கசீப்பின் காலத்தில், இன்றைய இந்தியப் பர்மிய எல்லைப் புறத்தில் கதை நடைபெறுகிறது.

எத்தனை இடர் நேர்ர்ந்தாலும் இஸ்லாமிய தற்கொலை பண்ணக்கூடாது. இஸ்லாமிய மார்க்கத்திற்குத் தற்கொலை முரணானது.

இஸ்லாத்தை நம்பும் ஒவ்வொருவனும் மனிதனாக வாழ்கிறான். மனிதனாக வாழ்பவன் இறைவனை நம்புகிறான். அவனை அஞ்சலி செய்கிறான் என்றெல்லாம் இஸ்லாமியத் தத்துவங்களை எடுத்தியம்பும் கதாநாயகியான குல்ரூஹ் பேசும் எத்தனை இடர்வந்தும் இஸ்லாமிய நெறியிலேயே நிற்கிறாள்.

"இக்கணந் தொடக்கம் உங்களுக்கு உணவோ நீரோ வழங்கப்படமாட்டாது. இவ்வறையை விட்டு யாரும் எங்கும் போகவும் முடியாது" என்று பிரதம சிறைக்காவலாளி அறிவித்ததும் எழுந்து சென்று 'வுழு'ச் செய்து கொண்டு குர் ஆனைக் கையில் எடுக்கிறாள் எனக் கதை முடியும்போது, கதாநாயகியின் வைராக்கியத்தை எண்ணி வியக்கிறோம். கதையினிடையே தந்தைக்கும் மகளுக்குமிடையில் நடக்கும் சம்பாஷணைகளும், அரசியற் சூழ்ச்சிகளும், சகோதரத் துரோகங்களும் கதைச் சுவையைக் கூட்டுகின்றன.

ஆறாவது கதையாக வரும் கதையே முகப்புக் கதை. சிறு கை நீட்டி என்ற அக்கதையில் வரும் சதாசிவத்தார் அருமையான பாத்திரமாக வனையப் பெற்றுள்ளார். அவருக்குச் சரித்திரத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. மனைவி அசல் யாழ்ப்பாணத்துப் பெண் போலத் தோன்றினாலும் கதை மட்டக்களப்பிலேயே நடக்கிறது. தன் பெண் குழந்தை தொலைந்துவிட்ட காசை யாரோ பள்ளியிலுள்ள ஒரு 'கள்ளப்பெட்டை'யின் கை அழுகும் படியாக நேர்த்திக்கடன் வைக்கிறாள். அதைப் பொறுக்காத பேராசிரியர் சதாசிவம் தம் கணக்காக ஒரு ரூபாயைக் கொடுத்துத் தன் பெண் தொலைத்த ரூபாயை ஈடு செய்ய முயல்கிறார். அதற்கு அவர் பண்ணும் பிரயத்தனம் சுவையானது. ஏனென்றாற் பேராசிரியர் கணக்கிற் சுத்த சூன்யம்!

அடுக்களையிலிருந்து கேட்கும் அம்மாவின் அதிகாரக் குரலைக் கவனியாது அறைக்குள் ஆமையாய் அடங்கிச் சரித்திர சாகரத்தில் மூழ்கும் சதாசிவத்தார் தமிழகத்தில் ஆய்வுக்காக ஓராண்டு இருந்தபோது ஆஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும் என்ற 'தியரி'யில் 'எடுபட்டு' அறுவைச் சிகிச்சை செய்து சந்தான விருத்தியைத் தடை பண்ணிக் கொள்கிறார்.

ஊருக்கு வந்தபோது அவர் பெண் இறக்கிறாள்! மனைவியிடம் தான் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதை எப்படி அறிவிப்பார்? ஆசைக் கென்றிருந்த ஒரே பெண்மாண்டு விட்டாள். அவளிடத்திற்கு....

அதுதான் கதையின் முடிச்சு. இக்கதை ஈழநாடு தன் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்திய சிறுகதைப் போட்டியிற் பரிசு பெற்றது.

பொதுவாக இத்தொகுதியிலுள்ள ஆறு கதைகளும் கதை சொல்லும் நேர்த்தியிலும், கதையை வளர்த்துச் செல்லும் உத்தியிலும் சிரத்தை காட்டப்பட்டுச் சமத்காரமாக வனையப்பட்ட கதைகளாகவே உள்ளன.

சாதிச் திமிரைச் சாடியும், தொழிலாளி முதலாளி என்ற வர்க்கப் போராட்டக் கோஷங்கள் எழுப்பியும் எழுதப்பட்ட கலைத்துவமற்ற பிரச்சாரக் கதைகளே ஈழத்துச் சிறுகதைகளாகத் தமிழ்நாட்டில் அறியப்பட்டுள்ளன.

ஈழத்து முற்போக்கர்கள் இப்படியாகச் செத்த பாம்பைத் திருப்பித் திருப்பி அடித்து கொண்டிருக்கையில், முற்போக்குக் கோஷ்டியிலிருந்து விலகி நின்றவர்கள் எப்படியெல்லாம் இலக்கியப் பரிசோதனை செய்தார்கள் என்பதைத் தரிசிப்பதற்குத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு இந்த ஆறுகதைகளும் எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

1960-70 களில் எழுதப்பட்ட இக்கதைகள் ஈழத்துச் சிறுகதையுலகில் ஓர் மையல் கல என்பேன் நான். திரிகூடம்

மூதூர்

5-11-98

வ.அ.இராசரத்தினம்

பூ

இலங்கை எழுத்தாளர் சங்கம் நடத்திய அந்தச் சிறுகதைப் போட்டியிலே 687 கதைகள் பங்குபற்றின. அவற்றுள் பூ முதலாவது பரிசுக்கு உரியதென ஒரு முகமாகத் தேர்வு செய்யப்பட்டு, மட்டக்களப்பில் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் நாள் நடைபெற்ற தமிழ் விழாவிலே பரிசளிக்கப்பட்டது.

'முதல் பரிசு பெற்ற எம்.ஏ.ரஹ்மானின் பூ என்ற சிறுகதை மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது. கதையின் நடை, கதையின் திருப்பங்கள், பாத்திரங்களின் போக்குகள், அவர் கையாளும் உருவங்கள், கதையின் முடிவு எல்லாம் மிகவும் அழகாகவும், மனதைத் தொடுகின்றனவாகவும் இருக்கின்றன...'

தலைவர் சீ. ஸ்ரீநிவாசன்
முன்னுரை
போட்டிக் கதைகள்

பூத்துச் சொரிகையிலே
பூக்கருகிப் போனதுவோ?
மாதா செய் தீவினையோ
மலரமுன்னே போனாயோ...?

நீ படுத்துக் கிடந்த அறைப் பக்கமிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கின்றது. அது உன் அம்மாவின் குரல். துக்கத்திற் கனத்துக் கதறுகின்றது. எது உன் முடிவாக இருக்கக் கூடாது என்று இவ்வளவு நேரமும் பிராத்தித்துக் கொண்டிருந்தேனோ, அதுதான் உன் முடிவா? என் கல்யாணி!

"ஏய் கெழவி. இதுங் ஹோஸ்பிட்டல்
தெரியுங்தானே! சத்தங் போட வேணாங்."

கிழவியை 'நேர்ஸ்' அறைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். புழுவாகத் துடித்து, சுவருடன் தலையை மோதிக் கொண்டே குரல் எழுப்பி அழுகின்றாள். 'மேளே, கல்யாணி நீ போய் விட்டியாடி?' என்று நெஞ்சு வெடிக்கப் புலம்புகிறாள். ஒவ்வொரு வார்த்தையும் என் என்பின் குழலட்டையையுஞ் சுண்டுகின்றது.

நேர்ஸ் என்னைப் பார்க்கிறாள். எனது விழிகளை அவளது விழிகள் துழாவுகின்றன. அந்த துகட் கணப் பொழுதில் அந்தச் செய்தியை மௌன பாஷையிற் சொல்லி விட்டாள்.

மூச்சு, மூக்குத் துவாரங்கள் வழியாக வெளியேற முடியாது. துருத்தியாக உப்பி, எனது சுவாசப் பையினை அவஸ்தைப் படுத்துகின்றது. விரல் நொடிப்பு நேரத்திலே ககனத்து ஒளி முழுவதும் அஸ்தமிக்க, அமாவாசை மையிருட்டு அகண்டா காரமாக விரிகின்றது. இருள் குதிர்ந்த அந்தப் பாளையிலே சினைத்திருந்த அக்கினிக் கோளங்களெல்லாம் என் சென்னியிலே அறுந்து விழுந்து கேசத்தினைப் பொசுக்கி விட்டதைப் போன்று...சிகை எரிந்த நாற்றமோ...பிணம் வெந்து கக்கும் புலால் நாற்றமோ...? விழி மதகுகளைத் தகர்த்துப் பெருகும் கண்­ர். கால்கள் ஸ்பரிசத்தை இழந்து, இயக்க சக்தி இற்று...சுவரோரம் போடப்பட்டிருக்கும் 'வாங்'கிலே குந்துகின்றேன்.

நேர்ஸ் என்னைத் தாண்டிச் செல்கின்றாள். மரங்கொத்திப் பறவை மரத்தினைக் குடையும் பொழுது ஏற்படும் ஒலியினைப் பிரதி பண்ணுகின்றது. சீமெந்துத் தரையில் உராயும் அவளுடைய குதியுயர்ந்த சப்பாத்துகள் அவளுடைய முகத்தையும் அவள் சொல்லக் கூடிய செய்தியையும் தவிர்ப்பதற்காகத் தீக்கோழி சாகஸம் புரிந்து கரங்களுக்குள் எனது முகத்தினைப் புதைத்துக் கொள்ளுகின்றேன். சின்னி விரல் பொருந்த மறுக்கும் 'கிறாதி'யில் ஒரு விழி புகுந்து, சாப்பாத்துக் குதியினை மேய்கின்றது.

இதே போன்ற சப்பாத்துகளிலே புகுந்து, உயரத்தை அதிகரித்து, கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடைக்குள் நீ நுழைகின்றாய். நான் உன்னை உன்னிப்பாகப் பார்ப்பதை நீ எப்படி அறிந்தாய்? உள்ளுணர்வா? நவீன நாகரிகத்தின் முடக்குகளை அறிந்தவளாகக் கூந்தலைப் பல கோணங்களிலே முறுக்கிக் கொண்டை போட்டிருந்தாய். சிரசினைக் கழுத்து வாக்கிலே வெட்டி என்னைப் பார்த்தாய். புகைப் படத்திலே பார்த்த அதே முகம், அதே விழிகள், அதே நுதல், அதே மூக்கு...படத்தில் இரட்டைப் பின்னல்களுடன் மங்குளிப் பெண்ணாகத் தோன்றிய நீ...நீ கல்யாணியா? அல்லது வேறொருத்தியா? நீ உன் சிநேகிதியின் காதைக் கடித்ததும், அவள் என்னைத் திரும்பிப் பார்த்துத் தலையை ஆட்டியதும்...உனது திருட்டுப் பார்வை என்னை மேய்ந்ததும்...முதற் சந்திப்பு; அடுத்த சந்திப்பு மணவறையில் நிகழ்ந்தது.

உலகின் நவீன போக்கு என்ற ஆற்று வெள்ளத்திலே கழிந்து செல்லாது, வீட்டுக் கொல்லையிலே இருக்கும் கிணற்று நீராக என்னை வளர்த்த பெருமை என் தந்தையைச் சாரும். வாலிப உணர்ச்சிகள் பதியம் போடும் பல்கலைக் கழகத்து வாழ்க்கையிலே, பெண்களுடன் பேசக் கூச்சப்படுவேன். இருப்பினும், என் முன்னால் நடமாடும் ஒவ்வொருத்தியையும் கற்பனையிலே என் காதலியாக்கி...தினந் தினமும் புதிது புதிதாக யாரையோ காதலிக்கின்றேன் என்கின்ற ஊமைக் கற்பனையிலே கூச்சம் போக்கி, வாழ்க்கையின் சிருஷ்டி விளையாட்டிற்குள் ஒரு பெண்ணை இணைத்துக் கொள்வதற்கிடையில் என் படிப்பு முடிந்தது. மீண்டும் தந்தையின் மூக்கு நிழலிலே வாழத் துவங்குகின்றேன். ஜதை சேர்த்து வாழும் சமூகப் பண்பாட்டிற் கொப்ப என்னைக் கல்யாணச் சந்தையிலே நிறுத்தினார் அப்பா....குணமும்-குலமும் பார்ப்பதாக வெளியே விளக்கஞ் சொல்லி, சீதன ஆதனத்திலே இரையினைக் குத்தி,பெண் பார்க்கும் படலத்தினை அப்பாவே நடத்துகின்றார்...ஈற்றிலே எப்படியோ உன்னை அவருக்குப் பிடித்து விட்டது உனது புகைப்படம் என்னிடம் காட்டப்படுகின்றது. வேண்டும், வேண்டாம் என்று எதுவும் சொல்ல வில்லை. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிய மீள்முள்களாகின்றன. மௌனத்திற்குச் சம்மதம் என்ற அர்த்தம் பாய்ச்சப்பட்டு ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. உயர்ந்த கிடுகுவேலியின் 'அறிக்கை'யுள் வாழ்ந்து விட்டாலும், அம்மாவுக்குப் புதிய போக்குகள் தெரியும். நீ நகைக்கடைக்கு வரும் சமாசாரத்தை அவள்தான் சொன்னாள். உன்னை பார்த்ததிலிருந்து அங்கேயே 'சம்மதம் சம்மதம்' என்று ஓராயிரம் முறை என் மனசிற்குள் சொல்லியிருப்பேன். கல்யாணி, நீ அதியற்புத அழகியடி!

இனிய பதினைந்தாம் நாள், நீ ஆசிரியையாகக் கடமை பார்க்கும் பாடசாலைக்குப் பிரயாணமாகின்றோம்.

நெஞ்சக் குளத்திலே அந்த நினைவு வட்டம் கரையைத் தட்டுகின்றது...

ஆசை வெட்கமறியாது என்பது எவ்வளவு உண்மை... அந்தப் புகையிரதத்திற்குள் கூட்டம் முட்டி வழிவதைக் கவனித்தோமா? நீயும் நானும் மட்டும் ஏதோ தனியான பிரபஞ்சத்திலே பிரயாணஞ் செய்வதான எண்ணம் இருவரையும் இணைக்கின்றது.

"அத்தான், பெண்களை ஏன் மலருக்கு ஒப்பிடுகின்றார்கள்?"

"மென்மையினால்..."

"ஆண்களை ஏன் வண்டிற்கு ஒப்பிடுகின்றார்கள்?"

"பல மலர்கள் மீது தாவும் பலவீனம் அவர்களுக்கிருப்பதால்..."

"அத்தான்?"

உன் விழிகளில் நீர் உற்கைகள் உதிருகின்றன...குறுக்காக ஓடுவதாகத் தோன்றும் மரங்களைப் பார்க்கும் பாவனையில் மறைக்கின்றாய். "என்ன கல்யாணி?"

"நீங்கள் இந்த மலர் மீது மட்டும்....என்னால் தாங்க முடியாது..."

"பைத்தியக்காரி! கையிலே பாரிஜாத மலரை வைத்துக் கொண்டு ஊமத்தம் பூவையா நாடுவேன்?"

"கிளியைப் போல மனைவியிருந்தாலும், ஆண்கள் குரங்கைப் போன்ற ஒரு வைப்பாட்டியை நாடுவார்கள் என்று சொல்வார்கள்.." சொல்லும் பொழுதே களுக்கென்று சிரித்து விடுகின்றாய்.

உன் எதிர்ப் பக்கமாக அமர்ந்திரு நத அந்த நடுத்தர வயதுப் பெண்ணின் காதிலும் விழுந்திருக்க வேண்டும். அவள் அர்த்தபூர்வமாகச் சிரிக்கிறாள்.

குங்குமச் சிரிப்பினைக் கன்னத்திலே அள்ளி அப்பி. நீ நாணத்துடன் பட்ட அவஸ்தை.

"என்ன, சின்னக்கிளி! ஒரு வருஷத்துக் குள்ளை இஞ்சையே மாறுதல் எடுத்திட்டியே?"

"நான் தானே போகேக்குள்ளை சொல்லிப் போட்டுப் போனனான்...அவன் டாக்குத்தனுக்கு ஒரு பாடம் படிப்பிப்பனெண்டு."

"உனக்கென்ன? எம்பி உன்ர கையுக்குள்ளை."

"கையுக்குள்ளை" என்ற சொல்லை விரசஞ் சிந்தத் தொனிக்கிறாள். என்னைத் தாண்டி அந்த இரண்டு கங்காணிப் பெண்களும் நி கிடக்கும் அறைக்குள் நுழைகின்றார்கள்.

கல்யாணி, உன் கொடிவாக்கு உடம்பிலே அந்தப் பிடிவாதக் குணம் எப்படிப் புரையோடிக் கிடந்தது? நான் கற்பிக்கும் அதே பாடசாலைக்கு நீயும் மாறி வரவேண்டுமென்று ஒற்றைக்காலிலே நின்றாய். கணவனும் மனைவியும் ஒரே பாடசாலையிலே கற்பிப்பதிலே ஏற்படுஞ் சிரமங்களை விளக்கினேன். அன்பு குறையுமென்று கூடச் சொன்னேன்.

"நான் குரங்கு, எப்படிக் கொண்டு போய் மாணவர்கள் முன்னால் நிறுத்துவது என்று சொல்லுங்கோ?" என்று என் நியாயப் பேச்சு முழுவதையும் உன் குதர்க்கப் பேச்சுகளினால் முறியடித்தாய். இறுதியில் வெற்றி உனதே.

ஒன்றாகவே பாடசாலையிலும், வீட்டிலும், இருபத்திநான்கு மணிநேரமும் விட்டுப் பிரியாதே உதிர்ந்த அந்நாள்கள்...

"கல்யாணி முடிச்சு மூண்டு வருஷம். இன்னும், தேனிலவுத் தம்பதிகள்தான்" என்று வெற்றிலைத் துப்பல் தாடைவரை வழிய அழகையா வாத்தியார் சொல்லுவார். க்ஷயரோக இருமல் புரையோடக் குலுங்கிச் சிரித்து அதற்க ஒத்தூதுவார் பண்டிதா விஸ்வலிங்கம்.

மூன்று ஆண்டுகள்-ஆயிரம் நாள்கள்-இவ்வளவு சீக்கிரம் உருண்டோடி விட்டனவா? உன் அம்மா தன் பேரப்பிள்ளையைக் காணத் துடிப்பதாக நீ தெரிவித்தாய். கள்ளி, அந்தப் பிள்ளையை எப்படியும் பெறவேண்டுமென்ற விரத அனுஷ்டானங்களிலே அக்கறைகாட்டுகிறாய். விடுமுறைதோறும் ஒவ்வொரு புண்ணிய ஸ்தலமாகப் பிள்ளை வரம் வேண்டி யாத்திரை. செல்லச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரை, கீரிமலையிலிருந்து சிவனொளி பாதம்வரை எந்த ஸ்தலத்தினையும் பாக்கி வைக்கவில்லை.

கல்யாணி, உன் நோன்பு வீண் போகவில்லை. நீ கர்பவதியாக இருந்த காலத்தைப் பசுமையாக நினைக்க முடிகின்றது. தாய்மையின் பூரணத்துவத்துடன் உன் அழகு, சுந்தரப் பொய்கையிலே மிதக்கின்றது. மசக்கை ஆசைகள் பண்பாட்டினையும் எகிறி நிற்கின்றன. பெண்களால் இரகசியத்தினைக் காப்பாற்றி வைக்க முடியாது என்பதற்கு நீதானும் விதிவிலக்கல்லள். ஒருநாள், ஆசிரியர் அறையிலிருந்து நீ மாங்காய்ப் பிஞ்சுகள் தின்ற செய்தி, அன்று முழுவதும் நமது பாடசாலையிற் பரவ 'கொங்கிராஜுலேசன்' என்று எல்லோரும் என்னை ஊமை இன்பத்திற்குள் அமிழ்த்தி விட்டனர். அவர்களது கேலிப் பேச்சுகளிலேயே நான் திணறிக் கொண்டிருக்க, நீ மட்டும் அன்றலர்ந்த மலரின் மலர்ச்சியினால் உன் முகத்தை நிரப்பிக் கொண்டு, மொட்டின் இதழ்கள் பூட்டவிழ்க்கும் இரகசியமே அம்பலமாகும் குறுநகை அரும்புகின்றாய். அதனைத் தலை கவிழ்ந்து நிலத்திலே உதிர்த்தலுக்குப் பெயர்தான் நாணமா?

"நீங்கள் தானே மயில்வாகனம்?"
வேறொரு 'நேர்ஸ்' வந்து என்னைக்
கேட்கின்றாள். உணர்ச்சி படராத குரல்

அன்றும் இப்படித்தான்...நீ பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாய். குட்டி போட்ட பூனை போல எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. 'விறாந்தை'யின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை எத்தனை தடவைகள் என் கால்கள் நடந்து விட்டன? கால் உளைவோ, மன உளைவோ? அப்பாவாகும் பெருமை உள்மனசில் பொங்கி வழிய, குழந்தை பெண்ணோ, ஆணோ? என்ற ஆரூடங் கணிப்பதில் மனம் குதிக்க நடந்து கொண்டிருந்த என்னை, அந்த நேர்ஸ’ன் அழைப்புத் தரிக்கச் செய்தது. அந்த அழைப்பிலே ஓர் அவசரம். எதையோ மறைத்துச் சொல்வதான நடுக்கம் தொனித்தது.

"ஓம்"

இந்த வார்த்தையை குரல்வளைக் கிணற்றின் ஆழத்திலிருந்து எடுப்பதற்கு நான் பட்ட அவஸ்தை...

"டொக்டர் உங்களை வரட்டாம்..."

"மிஸ்டர், மயில்வாகனம்! இது மிகச் சிக்கலான கேஸ். சிசேரியன் ஒப்பரேஷன்தான் வழி...தாயையாவது காப்பாற்றலாம்."

"ஐயோ, யார் குழந்தை வேண்டுமென்றது? தாயைக் காப்பாற்றித் தாருங்கள் டொக்டர் அது போதும்." என்று அலறிவிட்டேன். உணர்ச்சிகளைப் போர்வையிட்டுப் பேசுவதுதான் நாகரிகமாம்...அந்தக் கணம், உணர்ச்சிச் சுழலிலே சகலவற்றையும் இழந்துவிட்ட துரும்பாகத் தவிக்கின்றேன்.

ஓர் உயிரைப் பிரசவிக்கச் சென்ற நீ, இரண்டு மாதங்களாக ஒரே படுக்கையாகக் கிடக்கின்றாய். அப்பொழுது பாதி பிணமாகத்தானே இருந்தாய்! ஊரார் உதவிய உதிரத்திலே நீ ஜ“வித்த காலம் அது. சிசேரியன் ஒப்பரேஷனுக்குப் பிறகு, மார்பிலே பல புதிய சிக்கல்கள் தோன்றினவாம். தொடர்ந்து மார்பிலே சத்திர சிகிச்சை. ஒரு நாள் பூராவும் ஸ்மரணையற்றிருந்தாய். டொக்டர் என்னை எப்படியோ வெல்லாம் தேற்றினார்....

அன்று எமனை ஜெயித்த நீ. இன்று தோற்றுவிட்டாய்.

நான் டொக்டரின் அறைக்குச் செல்வதற்காக நடக்கின்றேன். என் உடல் அவ்வளவு பாரமானதா? அதனைச் சுமக்க இயலாது கால்கள் இடறுகின்றன. என் தந்தையும், தாயும் வருகின்றார்கள். என் அம்மா உன் தாயைப் பிடித்துக் கொண்டு 'சலிப்பு'ச் சொல்கின்றாள்.

தந்தை என்னிடம் வருகின்றார். கண்களிலே துளிர்த்து நிற்கும் கண்­ரைச் சால்வையினால் ஒற்றியெடுக்கும் அவசரம். அப்பாவின் கம்பீரமான குரலிலே எப்படி இந்த உடைவு ஏற்பட்டது?

"தம்பி, நாங்கள் கொடுத்து வச்சது அவ்வளவுதான். வெளியாலை கார் நிக்குது. கொம்மானும் இருக்கிறார். நீ வீட்டை போ. நான் சவத்தை எடுத்துக் கொண்டு வாறன்..."

கல்யாணி! நீ இப்பொழுது சவம்.

நாளை...

சங்கிலித் தொடரான வைத்தியத்திற்குப் பின்னர் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். அந்த இரண்டு மாதங்களுக்கிடையில் நானும் டொக்டரும் நண்பர்களாகிவிட்டோம். அவர் என்னை தனியாக அழைத்தார்.

"மயிர்வாகனம்! பொதுவான கூட்டு வாழ்க்கைக்காகவும் பண்பிற்காகவும் மனிதன் தன்னுடைய சில சுதந்திரங்களையும், இச்சைகளையும் துறந்தான். சமுதாயப் பிராணியாக வாழ்வதற்குக் கட்டுப்பாடுகள் அவசியம்....தனது இச்சைகளை அடக்கி வாழ்பவனே மனிதன். நீங்கள் மனைவியை அழைத்துச் செல்லும் இக்கணம் 'நான் மனிதனாக வாழ்வேன்' என்ற சங்கற்பத்தினையும் ஏற்றுக் கொள்ளவும்", தான் சொல்ல நினைத்தவற்றை நேரடியாகக் சொல்லாது சற்றி வளைத்துக் கூற முடியாது தடுமாறுகின்றார்.

"டொக்டர்! நேரடியாகச் சொல்லுங்கள். நான் என்ன குழந்தையா?" என்று வலிந்து உரிர்க்கும் சிரிப்புடன் கேட்கின்றேன்.

"உங்களுடைய மனிவி குடும்ப வாழ்விற்கு உதவமாட்டான். குறைந்தது மூன்று வருடங்களாவது விலக்கி நடக்கவும். அதற்குப் பின்னரும் என்னிடமோ வேறு ஒரு டொக்டரிடமோ உங்கள் மனைவியை அழைத்துச் சென்று காட்டுங்கள்...அதற்கிடையில் கணப் பொழுது பலவீனத்திற்கு நீங்கள் இரையாகி விட்டால், அவளுடைய உயிரை யாராலும் மீட்டுத் தர முடியாது."

அவருடைய ஒவ்வொரு சொல்லும் என்னுடைய வாலிப எழுச்சிகளின் உயிர் முடிச்சுகளைத் திருகுகின்றன.

"இது சாமான்யமான பரீட்சையில்லை. நெஞ்சிலே வைரத்தின் வைரந் தேவை...இந்த விஷயத்தினை உங்கள் மனைவிக்குச் சொல்ல வேண்டாம். அது அவளுக்குச் சிக்கலை ஏற்படுத்தி மன நோயைக் கொண்டுவரலாம். சகஜமாக உடல் தேறி வருவதற்குப் பாதகமாக இருக்கும்...இது நீங்கள் தன்னந் தனியாக நடத்தப்போகும் போராட்டம். உங்கள் மானுஷ“கத்திற்குச் சவால்..."

"நான் மனிதனாக வாழ்வேன்!"

"தம்பி, நீ படிச்சவன். உனக்கு நானே புத்தி சொல்லுறது? விதியை யாரால் வெல்ல முடியும்...போய்க் காரிலே ஏறு."

"டொக்டர் ஒருக்காப் பாக்க வேணுமம்..."

கல்யாணி! நீ உடல் தேறியதும் மீண்டும் பாடசாலைக்கு வரத் தொடங்குகின்றாய். நீ கிட்ட நெருங்க நெருங்க நான் எட்ட எட்ட ஓடுகின்றேன்...என் உணர்ச்சிகளைப் பொசுக்கி,பொம்மையாக இயங்குகின்றேன். உன் சரசப் பேச்சுகள் எனக்கு எரிச்சலை மூட்டுகின்றன. 'மேல் படிப்புக்கு தயார் செய்கின்றேன்' என்று கவசந்தேடிக் கொள்ளுகின்றேன். இருவருக்கு மிடையில் மௌனச் சுவரொன்று எழுகின்றது...நீ என்னை வெறுக்கின்றாய் என்பது எனக்குத் தெரியும். அதனைப் போக்க வழி தெரியாது என்னுள் நானே சாம்பிக் கொண்டிருந்ததை நீ அறிய மாட்டாய். ஊசி விவகாரங்களை உலக்கையாகப் பெரிது படுத்துகின்றாய். மனக் கசப்பின் நிழல் பாடசாலை வரையும் வளர்கின்றது. என்னை அந்நியனாகப் பார்க்கின்றாய். நமது மாற்றம் பாடசாலையின் பல வதந்திகளைக் கிளப்புகின்றது. 'ஆசை அறுபது நாள்' என்று பண்டிதர், வார்த்தைக் கோடரியினால் என் நெஞ்சைப் பிளக்கின்றார்.

பல நாள்களாக சொல்ல நினைத்திருந்தரைதத் துணிந்து சொல்லுகின்றேன்.

"கல்யாணி! நல்ல சுவாத்தியமுள்ள வேறோர் ஊருக்கு நீ மாற்றிப் போவது நல்லது."

"ஓம், நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்." உன் வெறுப்பின் காங்கை என்னைச் சுடுகின்றது.

"அப்படியே செய்."

நாவலப்பிட்டிக்கு மாறுதல் கிடைக்கின்றது

டொக்டரின் அறைக்கு சமீபித்து விட்டேன். கதவைத் தட்டுகின்றேன்.

"யெஸ், கம்இன்."

புதிய இடத்திற்குச் சென்றதிலிருந்து நீ எவ்வளவோ மாறிவிட்டாய். விடுமுறை காலங்களிலே வீட்டிற்கு வந்திருந்தால் உற்சாகத்திற்குக் குறைவில்லை. அங்கே உன்னுடன் படிப்பிக்கும் நேசமணியும், தனலெட்சுமியும் வந்தால் மணிக்கணக்காக இருந்து பேசுவாய். வாடிச் சோர்ந்த மலரா?...புது மலரின் தேன் கவர்ச்சி!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நீ விடுமுறையில் வந்திருந்தது நன்றாய ஞாபகமிருக் கின்றது.

நடுநிசி. உலகமே உறக்கத்திற் சுகிக்கும் வேளை. நான் மட்டும் புத்தகங்களிலே மனசினைப் புதைத்திருக்கின்றேன். நீ திருட்டு நடை நடந்து...உன் கூந்தல் என் கழுத்திலே புரள எவ்வளவு இதமாக இருக்கின்றது...நீ என்னைத் தழுவி அணைத்து போதை ஊட்டுகின்றாய்...அப்புறம் மிருக ஆவேசம் கொண்டவளாக என்னை அழைக்கின்றாய்....வெட்கமற்று, இவ்வளவு விரசமாக நடக்க எப்படிக் கல்யாணி கற்றுக் கொண்டாய்? உன் தவிப்பிற்காக நான் அநுதாபப் படுகின்றேன். "போய்ப்படு!" உடலைப் பொசுக்கும் தணலைத் தட்டிச் சொல்கின்றேன். நெடு நேரம்வரை நிலத்தில் புரண்டு விசும்புகின்றாய்.

நீ உன்னையே இழந்து விட்டாயா?

அடுத்து நாளே நாவலப்பிட்டிக்குச் சென்றுவிட்டாய். சமாதானப்படுத்திக் கடிதங்கள் எழுதினேன். என் கைவலித்தது. நீ பதில் ஏமாப்படைகின்றாய்.

"உடல் நிலை அபாயம். உடன் வரவும்?"

இத் தந்தியை அனுப்ப எப்படி மனசு இளகிற்று?

இங்கு அழைத்து வந்து, உன்னைத் தேற்றலாம் என்று தானே கல்யாணி நம்பினேன்?

நீ ஏமாற்றி விட்டாய். என்னை இருட்காட்டில் இடறவிட்டு நீ போய்விட்டாய். ஐயோ, கல்யாணி!

டொக்டர் என்னை திருப்திதானே? உமது நோயாளி மனைவி இறந்துவிட்டாள். இரண்டாங் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்!"

டொக்டரின் ஒவ்வொரு வார்த்தையும் வெறுப்பைக் கக்கிச் சீறுகின்றன.

கல்யாணி! உன் பிரேதம் வீட்டிற்கே வரவில்லை. அதற்கிடையில் டொக்டர் பைத்தியக்காரத் தனமாகப் பேசுகின்றாரே...

"நானா?..."

நீ இறப்பதை விரும்பினேனா?...

"ஓம்; நீர் ஒரு மிருகம்! அவள் மூன்று மாதக் கர்ப்பிணி!"

உலகம் முழுவதும் சுழல்கின்றது. கல்யாணி நீயா? பெண் மென்மையினால் மட்டுந்தான் பூ என்றழைக்கப்படுகின்றாளா?

பூவிலே தேன்குடிக்க வெறிகொண்டு அலைந்த வண்டு நானல்ல என்பதை நீ அறிவாய்.

யானை

...பணத்தை மட்டும் சேர்த்துவிட்டால் போதுமா? அதற்காகவே, உண்ணாமல் உறங்காமல் ஒடினால் போதுமா? ஒற்றைக்கு ஒரே மகன்; காலங் கடந்து பிறந்த செல்லப்பிள்ளை என்னும் உணர்ச்சிச் சூழல்களில், அவனை நல்லபடி வர்த்து உருவாக்கும் பொறுப்பைச் சோரவிட்ட குற்றம் மாஸ்டரைச் சார்ந்ததே. ஆமாம்; பையன் சதுரங்க ஆட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் தவறுகள் இழைத்தது போல, அவனுடைய தந்தையும் பிள்ளை வளர்க்கும் பொறுப்பில் தவறு இழைத்து விட்டவரே...

-பேராசிரியர் சாலை இளந்திரையன்

செருக்களத்திலே

கஜ ரத துரக பதாதிகள் அணி வகுத்து நிற்கின்றன. யானையின் பலம், குதிரையின் காம்பீரியம், தேரின் வேகம்...

இவற்றை மறைப்பது போலக் காலாட்சிகளின் உபரி.

இரு பக்கமும் சமபலம்.

கட்டிலிலே பெரியவர் சுருண்டு கிடக்கிறார். எதையோ நினைத்துக் கொண்டவராகப் படுக்கை நிலையிலேயே புரண்டு டயறியைப் புரட்டுகிறார். பென்சிலை வாயிலே கவ்விக் கொண்டு மனக்கணக்கிலே லயிக்கிறார். வருமான வரிக்கான கணக்குகளுக்கு மட்டுமே எழுத்துக் கணக்குத் தேவை. தேவையும் மறுமுனை உந்துதலின் விளைச்சல். மற்றும்படி எந்த பெரிய கொடுக்கல் வாங்கலையும் மனத்திலே பதித்து வைத்துக் சீராக நடத்தக் கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

படுக்கையிலே கிடந்து பழங் கணக்குப் பார்க்கும் பெரியவர்.

செருக்களமோ? படுக்கையோ?

இது சதுரங்கப் பலகை!

அதன் இரு புறமும் மோகனும், அவனுது நண்பனும் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆரம்பக் கட்டத்திலே 'மூவ்' ஆக 'காஸ’லிங்'செய்கின்றான். யானை தன் இருப்பிடம் பெயர்ந்து அரசனுக்குப் பக்கத்தில் வந்து நிற்கின்றது. கோட்டை கட்டிக் காவல் செய்த பின்னரே, தன் படையின் பலத்தை எதிரி சங்காரத்திற்கு முன்னனுப்பும் யுக்தி!

"தம்பீ...!" உள்ளேயிருந்து தகப்பனது குரல் வலிக்கின்றது.

"வன் மினிற்...நௌ இட் இஸ் யுவர் மூவ்..." எனக்கூறி எழுந்து, ஆட்டப் பலகையை ஒருமுறை பருந்துப் பார்வையால் மனத்திலிருத்திய பின்னர் உள்ளே செல்கின்றான்.

"தம்பி, அவர் ராமச்சந்திரனைப் போய்ப் பாத்தியா? வரேக்கை புத்தகக் கடைக்கும் போயிட்டு வரச் சொன்னான்..."

அவர் ஆடமுடியாவிட்டாலும், மோகனை ஆட்டி வைக்க எவ்வளவோ பிரயத்தனம் எடுத்துக் கெள்கின்றார்.

"நான் போன் பண்ணினன்...அவர் அங்கையில்லையாம்...புத்தகக் கடைக்கும் டெலிபோன் பண்ணினனான்... இன்னமும் அந்த செக் ரியலைஸ் ஆகி வரேல்லையாம்."

மோகன், தான் இருந்தவிடத்திலிருந்தே செய்து முடித்தவற்றை எல்லாம் ஒப்புவிக்கின்றான்.

"சரி...தம்பி, நீ ஒண்டும் இன்னமும் விளங்கிக் கொள்ளேல்லை. நேரிலை போய்ப் பார்த்தால்தான் எங்கடை அவசரம் அவங்களுக்கு விளங்கும். டெலிபோன் எண்டால் தெரியாதே? ஆறுதலாக்கும் எண்டு நினைச்சுக் கொள்ளுவாங்கள். எதுக்கும் ஏழரை மணிபோலை ஒருக்காப்போய்ப் பாத்திட்டு வா...ஏழுமணிக்கெல்லாம் அவர் வீட்டை வந்திடுவார்."

"ஓ...அதுக்கென்ன போய்ப் பாத்திட்டு வாறன்...நேரம் கிடக்குதுதானே."

பெரியவர் பெருமூச்சு ஒன்றை அவஸ்தையுடன் வெளியேற்றுகின்றார்.

விறாந்தைக்கு மீண்ட மோகன் தன் நண்பன் செய்த 'மூவ்'வை அலசுகின்றான்.

* * * Sirukye1-ன் தொடர்ச்சி * * *
இவன் என்ன செய்யப் போகிறான்? டெலிபோனிலை எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாமெண்டு நினைக்கிறானே. ஒரு முறைக்கு ஆயிரம் முறைபோய் நச்சரித்தாலும் குடுத்ததை வாங்கிக் கொள்ளுறது பெரும்பொறுப்பாக இருக்கிற இந்தக் காலத்திலை என்னரை கண்ணுக்கு முன்னாலேயே இவனுக்கு இந்த அலுவல்களிலே கரிசனை உண்டாக்கி விடவேணும் எண்டுதான் நானும் பாடுபடுறன்...ஒண்டுக்கும் 'மசியமாட்டன்' என்கிறான்.

அவள், தாய்தான் செல்லம் குடுத்து எல்லாத்தையும் பழுதாக்கினது.

அவளை ஏன் குறை சொல்லுவான்? எட்டு வருஷம் பிள்ளையை இல்லையே எண்டு ஏங்கிக் கிடந்தவள். இவனுக்காகத் தவம் கிடந்தவள்.

நான் மட்டும் என்ன? அந்த நேரத்திலை கண்டிச்சு வைச்சிருந்தால் இப்பிடியா வளர்ந்திருப்பான்?

விளையாட்டு நெருக்கடிக் கட்டத்தை அடைந்து, களை கட்டுகின்றது. தகப்பன் வெளியே வரமாட்டார் என்னும் உணர்வும் தென்புதர, கைகள் தாமாகவே 'பக்கெற்றை'ப் பிரித்து சிகரெட் ஒன்றை உதட்டிற் பொருத்துகின்றன. இவன் நீட்டிய பக்கட்டிலிருந்து நண்பனும் ஒரு சிகரட்டை எடுத்துக் கொள்ளுகிறான். அவன் தட்டிய நெருப்புக் குச்சியிலேயே இவனும் பற்றவைத்துக் கொள்ளுகின்றான்.

தகப்பனுக்கு முன்னால் மோகன் புகைப்பதில்லை. அந்த அளவுக்கு மரியாதை உண்டு. ஆனால், தாய் நெருப்புப் பெட்டி எடுத்துக் கொடுப்பதுண்டு என்பது பிரஸ்தாபம்.

இருவரது உதடுகளும் சிகரெட்டுகளைக் கவ்விய படியிருக்க, கண்கள் ஆட்டப் பலகையை நோட்டமிடுகின்றன. சாம்பல் உதிராது உப்படியே யிருக்க, சிகரெட்டுகளிலிருந்து நீலப் புகை நிலை குத்தாக மேல் நோக்கி எழுகின்றது. நண்பன் இடக்கை ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கு மிடையே சிகரெட்டை இடுக்கிச் சாம்பலைத் தட்டுகின்றான். அவன் ஓர் இழுவை புகையை நெஞ்சுக்குட் புகுத்தி, இரண்டு புகை வளையங்களை வெளித் தள்ளியபடி குதிரையொன்றினால் 'செக்' கேட்கிறான். அரசனைக் காப்பாற்றிய மோகன் குதிரையின் பின்னங் காலடியினால் யானையை இழக்கின்றான். கோட்டை கட்டி அதற்குக் காவலாக வைக்கப்பட்ட யானை முன் யோசினையில்லாது அசைந்ததால் இப்படிக் குதிரைப் பாய்ச்சலுக்குள் சிக்கிவிட்டது.

கையிலே கன்னத்தைச் சாய்த்து, கழுத்தை ஒரு கோணத்திலே திருப்பி, காகப் பார்வையினால் ஆட்டப் பலகையை அலசுகிறான் மோகன்.

உள்ளே பெரியவர் உடல் குலுங்க ஒரு பாட்டம் இருமுகிறார். உழைத்து உழைத்து நைந்துபோன உடல், நோயின் உபாதையைத் தாங்க இயலாது குலுங்குகின்றது.

பம்பரம் சுழன்று கொண்டிருக்கும் வரை தன் அச்சை நிமிர்த்தி, அசைவிலேயே உறுதிச் சமநிலை போன்ற ஒரு தோற்றந் தருகின்றது. சுழற்சி மந்த கதியடைய, தள்ளாட்டம் ஏற்படுகின்றது. தள்ளாடி விழப்போகும் நிலை...

வைத்தியரின் கட்டாயத்தின் பேரில் அவர் கட்டிலிலே சுருண்டு படுத்துக் கிடக்கின்றார்.

மிஷன் பாடசாலையில் உதவி ஆசிரியராக மட்டும் வாழ்ந்திருந்தால், இன்று அவர் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியராகவே மதிக்கப்பட்டிருப்பார். ஆனால், இன்று அவர் நிலை வேறு. பென்ஷன் பணத்தை எடுத்து, எண்ணி எண்ணிச் செலவு செய்யவேண்டிய அவல நிலையுமில்லை.

சிலர் அவரை மாஸ்டர் என அழைத்தாலும் அது பெயருக்கமைந்த பட்டப் பெயராகவே பயிலப்படுகின்றது. அவர் ஒரு லட்சாதிபதி என்பதை யாவரும் அறிவர்.

வடக்கேயிருந்து வயிற்றுப் பிழைப்புக்கென்றே வரும் உத்தியோகத்தர் பலர் ஒரு காலைக் கந்தோரிலும், மறுகாலைப் புகை வண்டியிலுமாக வைத்து 'வீக்கென்ட்' பயணத்திலேயே காலத்தை விரயஞ் செய்து, இங்குமில்லாத அங்குமில்லாத திரிசங்கு நிலையிலே தொங்கி, ஊருக்கு நல்ல பிள்ளையாக, போன இடத்தில் 'பாயோடு ஒட்டிவிடாது' தப்பித்துக் கொள்ள விழையும் முயற்சியில் எதையும் சாதித்துவிடாது அல்லற்படும் காலத்தில், ஸ்திரமாக இரண்டு கால்களையும் வந்த இடத்திலேயே ஊன்றி, தன்னம்பிக்கையையும் விடா முயற்சியையும் உரமாகப் பெய்ய, ஆணிவேர் ஆழமாகச் சென்று நிலைபெற்று, மரம் தலைநிமிர, பக்க வேர்களும் சல்லிவேர்களும் பரவிப் பெருக, தனி மரமே குளிர்தரும் தோப்பாக மாறிவிட்ட பெருமை!

அந்த நிழலையும் தண்மையையும் அநுபவிப்போர் பலர்...நாணயஸ்தர் என்னும் பெயரை நிலை நாட்டியதும், அந்தப் பெயரே முதலாக நின்று திருமகளை அழைக்கின்றது. அந்தப் பெயரை உருவாக்குவதற்குத்தான் எவ்வளவு காலம்; எவ்வளவு பிரயத்தனம்.

தேடுவதைவிட, தேடியதை நாலு தலைமுறைக்கு நிலைக்கப் பண்ணுவதிலேயே பெருமை அதிகம். இருந்தும் ஆயிரம் பொன், இறந்தும் அயிரம் பொன் என்றிருக்க வேண்டுமே, யானைபோல!

சதுரங்க விளையாட்டில் நண்பனின் யானை ஒன்றை வெட்டி, அதற்காகத் தன் தேரினைப் பறிகொடுக்கின்றான். மோகன்

யானைக்கும் அடி சறுக்கும்...உண்மை தான்.

நான் எவ்வளவு நிதானமாக, மதங் கொள்ளாத யானையாக வாழ்ந்து விட்டேன். ஆனால்...

மோகனை இப்படிப் பொறுப்பில்லா தவனாக வளர்த்துவிட்ட குறை என்னையுஞ் சாரும்.

அன்றொரு நாள், பள்ளிக்கூட இன்டர்வெல் நேரத்திலை, முற்றவெளியில் கூட்டாளிகளோடு சேர்ந்து சிகரேட் புகைப்பதைப் பார்த்து, அவ்விடத்தில் வைத்தே ஒர் அறை அறைந்தேன். ஆத்திரத்தில் அது பலமாகத்தான் விழுந்துவிட்டது. வீட்டுக்கு வந்தவன், 'நச்சுக்காய் தின்று செத்துப் போவேன்' எனத் தாய்க்காரியுடன் தர்க்கம் பண்ணி கடைசியிலை நான் சமாதானஞ் செய்து பத்து ருபாக் காசும் குடுத்துப் படம் பார்க்க அனுப்பி வைச்சன்.

ஒரு அலுவலிலும் அக்கறை இல்லை. அதுதான் பெரிய யோசினை. கிரிக்கெற் எண்டு எவ்வளவு தொந்தரவு பண்ணி விட்டான். வீட்டிலை பிரக்டீஸ் பண்ணுவதற்கு ஒரு 'பாற்' (BAT) வாங்கி விளையாடினான். அதிலை ஒண்டுமில்லை. எழுபத்தைந்து ரூபாதானே? போனால் போகுது. ஒரு மாட்சிலே நல்லா விளையாடினானாம். எனக்கென்ன தெரியும்?

அவங்கள் வாத்திமாரும் சேந்துதான் பழுதாக்கினது.

வீட்டிலை படிப்பும் இல்லை, ஒண்டுமில்லை. கிரிக்கெற்தான்! பின்னர், சம்பியன் மாட்சிலே தோற்றுப் போனாங்களாம். தோற்கறதிலை ஒண்டுமில்லை. வெற்றி தோல்வி இருக்கிறதுதானே? விளையாட்டை விடுவம்.

படிக்கிறதுக்கு எத்தினை டியூஷன்? ஒவ்வொரு பாடத்திற்கும் திறம் திறம் வாத்திமாரை வைத்து டியூஷன் சொல்லிக் குடுத்தன். நான் படிக்கிற காலத்திலை இப்படி வசதியிருந்திருந்தால் எப்ப நான் இருக்க வேண்டிய நிலை என்ன?

அது சரி...இப்பத்தான் என்ன குறைவோ?

பெரியவர் மீண்டும் இருமித் தள்ளுகிறார்.

சதுரங்க விளையாட்டு, இறுதிக் கட்டத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆட்டப் பலகையிலே, காய்கள் பாலைவனத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிர்ப்புப் பெற முயலும் புல் பூண்டைப் போலிருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வீடுகளையும் வளவுகளையும் பெரியவர் வாங்கினார். எல்லாமே இப்பொழுது உயிர்ப்புக் கொண்டுவிட்டன. கைராசிக்காரர். தொட்டதெல்லாம் பொன்னாகின.

மோகனது காய்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து வருகின்றன. அரசனுக்குத் துணையாக மூன்று காலாள்களே எஞ்சியிருக்கின்றன. எதிரியின் நிலை ஏதோ படைப் பலம் பொருந்தியதல்ல. இருந்தாலும், யானையொன்று மேலதிகமாக நின்று அரசனுக்குத் துணை செய்கின்றது.

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு-அவாம் பேரறிவாளன் திரு

படுக்கையிலே கிடக்கும் பெரியவரின் நினைவுகள் வேறொரு தடத்தில் கிளை பிரிகின்றன.

ஆசிரியர் தொழிலிருந்து 'பிறி மட்சூராக' ஓய்வுபெற்ற பொழுது பிரியாவிடை ஒன்று நடைபெற்றது. அதிலே பலர் எழுந்து பேசினார்கள். அவர்களுட் பலர் கடமைப்பட்டவர்; சிலர் கடன் பட்டவர். கடன்பட்டவர்தாம் பேரறிவாளன் திருவையும் ஊருணியையும் பிணைத்துப் பேசினர்.

ஊருணிக்கு நீர் கிடைத்த வரலாறு...அது யாருக்குத் தெரியும்? யுத்த காலத்தில் ஏறாவூரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அரிசி 'ஏற்றுமதி...' பொலீஸ் கட்டுக் காவல் எல்லாவற்றிலும் மண்தூவி 'மற்றது' இறக்குமதி...சட்டென்று விளைந்த மூலதம்...பண வருவாய்க்கு பதில் சொல்ல சின்னச் சின்னக் 'கொந்தராத்துகள்...' அதுவே பெரிய பிஸ’னஸ் ஆக மாற, பல்கிப் பெருகிய பெரிய கொந்தராத்துகள்!

கண்ணுக்குள் எண்ணெய் ஊற்றிக் கொண்டுதான் போட்ட முதலைத் திருப்பி யெடுக்கவேணும் ஊருணியிலிருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போகாமற் தடுக்கப் பாடுபட்டதெல்லாம் யாருக்குத் தெரியும்?...எத்தனை சந்தர்ப்பங்களில் அவன்ரை இவன்ரை காலிலை கையிலை விழுந்து ஒவ்வொரு 'ஸ்ரேஜா'கப் 'பாஸ்' பண்ண வைத்திருக்கிறன். ஒண்டென்று விட்டிட்டு இருக்க முடிந்ததா....? பலதையும் பத்தையும் ஒரு நேரத்தில் பாத்தாத்தான் ஊருணிக்கு நீர் வரும். வாற வெள்ளம் கொஞ்சம் தங்கும்.

யானைப் பலமும் ஞாபகமும் வேண்டுமே.

நிலத்தில் விழுந்த ஊசியையும் பொறுக்கி எடுக்கத்தான் வேண்டும்.

ஊசிபோக இடம் விட்டால், உலக்கையும் போய்விடும்...

நினைவுக் கிளையின் பிறிதொரு கிளை

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் துயில் எழுந்திருத்தல் அவரது வழக்கம். எல்லோரும் விடியற்காலை குளிரிலே குதிரும் உறக்க இன்பத்தில் மூழ்கிக் கிடப்பார்கள். பிளாஸ்கிலிருக்கும் கோப்பியைத் தானே ஊற்றிக் குடிப்பார். இருபது மைல்களுக்கு மேல் கார்களிலும், லொறிகளிலும், வசதிபோல பஸ்ஸ”களிலும் தொற்றி 'சேர்கிட்'டை முடிப்பார். ஆங்காங்கு கொந்தராத்துத் தளங்களைப் பார்த்து, அததற்குத் தேவையான மணல், சீமேந்து, ஷ“ற் ஒழுங்குகளைக் கவனித்துத் திரும்புகையில் மணி எட்டை நெருங்கும். வந்ததும் வராததுமாக நாலு வாளியைத் தலையில் ஊற்றிக் கொண்டு எதையாவது கொறித்துவிட்டுப் பள்ளிக்கூடத்தை நோக்கிச் சைக்கிளைத் தள்ளுவார். பள்ளிக்கூட வேலையோடு அலுத்துப் போகிறவரல்லர். இரவு எத்தனை மணிக்கு அலுவல்கள் ஓயுமென்பது அவருக்கே தெரியாது.

ஒரு யானையை மட்டும் அதிகமாக வைத்துக்கொண்டு மோகனை மடக்கிவிட முடியவில்லை. யானையின் நேர்ப்போக்கு மூலைக்குள் மடக்கியடிக்கும் தன்மையற்றதே. மோகனின் அரசனுக்கு அங்குமிங்கும் ஒரு குறிக்கோளற்று அலைய வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது. நாலு, ஐந்து 'மூவ்'கள். மூச்சுவிட அவகாசங் கிடைத்தால் காலாளை ஏற்றி விடலாம். ஆட்டத்தின் போக்கும் மாறும். ஆனால், மூச்சுக்கு மூச்சு 'செக்'காகவே இருக்கின்றதே...அரசனில் வைத்த கையை எடுக்காமலேயே, ஒவ்வொரு செக்கிற்கும் ஒவ்வொரு இடமாகத் தள்ளிக் கொண்டிருக்கின்றான்.

ஊதாரித்தனமாகக் காய்களை இழந்ததால் ஏற்பட்ட தவிப்பு.

எத்தினை பேருக்கு எத்தினை இடத்திலை 'அப்போயின்ட்மெண்ட்' எடுத்துக் குடுத்திருக்கிறன். அந்தப் பொடியளும் என்னவோ கவனமாக வாழ்ந்து, கச்சிதமாக மூன்று நாலு சேர்த்திருக்கிறார்கள்.

இவனுக்கு என்ன வந்தாலும், தாங்குவதற்குத் தாராளமாக இருக்கிறது என்ற எண்ணம்.

'இங்கை இந்த அலுவல்களைப் பாக்க விருப்பமில்லாட்டில் கொழும்பிலை போய்ப் படியன்' என்று அனுப்பினன். அங்கே வெட்டிப் பிளந்தது எதுவுமேயில்லை.

நாகரீகப் பழக்கங்களுடன் வந்து சேர்ந்திருக்கிறான்!

உழைத்துச் சேர்க்க வேண்டாம்; சேமித்து வைத்துள்ளதை அதம்போகாது பேணவாவது தெரியுமா?

'செட்'டாகச் செலவழித்து, உடலை வருத்தினாத்தான் செல்வம் எங்களோடை தங்கும். றெயிலடியிலை இருந்து வீட்டுக்கு வாடகைக் காரிலை வந்திறங்கத் தெரியாதே? வீணாக ஏன் இரண்டு ரூபாய் குடுப்பான், சைக்கிளை றெயிலடியில் கொண்டு வந்து மோகன் வைச்சிட்டுப் போனால் சிலவு மிச்சம்.

ஆனால் அவன்....?

சைக்கிளை றெயிலடியிலை எனக்காக வைத்துவிட்டு, வாடகைக் காரிலை அவன் வீட்டு ககு வந்துவிடுவானாம். இதைப் பார்க்கத் தாய்க்காரிக்கு பகிடியாகவும் இருக்கிறதாம்.

மோகனது அரசன் தனியனாகிவிட்டான். காலாள்கள் வெட்டப்பட்டு விட்டன.

பெரியவர் தனியனாகக் கிடந்து மீண்டும் பழங்கணக்குப் பார்க்கின்றார்.

புதுக் கணக்கு ஆரம்பிக்க வேண்டியவன் தனி அரசனைக் காப்பாற்றும் பிரயத்தனத்திலே தவிக்கின்றான். ஆரம்ப கட்டங்களில் இழைத்த தவறுகளின் கூட்டு விளைவாகப் போக்கிடமில்லாத அவதியை உண்டாக்கியிருக்கிறது.

நண்பனுடைய சிந்தனையற்ற ஒரு 'மூவ்'. செக் அல்ல. ஆனாலும், மோகனின் அரசனால் எங்கும் செல்ல முடியாத நிலை. 'ஸ்ரேல் மேற்'!

ஒபீஸ் அறையில் டெலிபோன் மணி கிணுகிணுக்கின்றது.

"தம்பி, என்னெண்டு போய்க்கேள்..."

பெரியவர் கட்டிலிற் கிடந்து குரல் கொடுக்கின்றார்.

"ஓம்..." என்று உரத்துக் கூறியபடி மோகன் டெலிபோனை நோக்கிச் செல்கின்றான்.

நண்பன் ஆட்டப் பலகையை வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றான்.

"என்னவாம்?"

கட்டிலிலே சுருண்டு கிடக்கும் பெரியவர் கேட்கின்றார்.

தானம்

'முடமான இளமறியைத் தோளில் ஏந்தி, சகல உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும்படி போதித்த போதிமாதவனே! அன்பின் அறவழி போதித்த அண்ணலே! நீங்கள் கற்பித்து நிலை நிறுத்திய சீலவழி நடக்கும் அந்தப் பிக்குவானவர், என் வேண்டுதலின் பிரகாரம், இன்றாவது என் இல்லம் வந்து தானம் ஏற்றுக் கொள்வாரா? முன்பு ஒரு சமயம், நீங்கள் பரிநிப்பாணம் அடைவதற்கு முன்னர், பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இலர் என்ற போதனையைச் சாதனையில் காட்ட, நீங்களே நகர சோபினி ஒருத்தியின் இல்லம் சென்று அவளிட்ட தானத்தை ஏற்று அருள்புரிந்தீர்கள் . அந்த நகர சோபினிக்கு ஏற்பட்ட பாக்கியம் போல் எனக்கொரு பாக்கியம் கிடைப்பது எப்போ?'- புத்தர் சிலை மீது மலர்கள் தூவி, கல்யாணி தன் பிரார்த்தனையை முடித்து விழி திறந்தாள்.

இருப்பினும், அவள் மனசிலே அமைதி வசமாகவில்லை. இனந்தெரியாத அலைக்கழிவு.

எதையோ சடுதியாக நினைத்துக் கொண்டவளைப் போல, உள்ளே திரும்பி, "ஊர்மிளா...! ஊர்மிளா....!" என்று அழைக்கிறாள்.

ஊர்மிளா வருகிறாள்..."அழைத்தீர்களா, அம்மா?"

நொந்து தேய்ந்த குரலில் கல்யாணி கூறினாள்; "அழைத்தேன், ஊர்மிளா. என் மனசில் அமைதியே இல்லையடி. சூறாவளியின் வசப்பட்ட துரும்பாக என் சித்தம் தத்தளித்துக் கலங்குகிறது...என் இல்லத்தில் தானம் ஏற்கவேண்டுமென்று புனிதராம் பிக்குவை அழைத்தாயல்லவா?"

"அழைத்தேன். நேற்றுடன் மூன்றாவது தடவையாக விஹாரஞ் சென்று நினைவுபடுத்தினேன்."

"என்ன சொன்னார்? அழைப்பினை ஏற்றாரா?"

"மறுக்கவில்லை. முறுவலித்தார். 'தானம் ஏற்க நிச்சயம் வருவேன். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாது; அதற்கான வேளை வரும்; அப்போது நானே வருவேன்; அது அதற்கு ஒவ்வொரு வேளை இருக்கிறது' என்றாரம்மா."

'அது அதற்கு வேளை இருக்கிறது...!'

வாய் முணுமுணுக்க, சோர்வோடு பெருமூச் செறிந்தாள் கல்யாணி.

'அந்த அரிய வேளை எப்போதுதான் வரப்போகிறதோ? பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது? பகவானே! எனக்குக் கடைத்தேறும் பாக்கியம் கிடைக்காதா?'

எஜமானியைப் பார்க்க ஊர்மிளாவுக்குப் பரிதாபம் மேலிட்டது. ஆனாலும், அவளது சுய பச்சாதாபம் விசித்திரமாயிருந்தது. அது அதற்கு ஒரு வேளை இருப்பது போல, அவரவர்க்கும் ஒரு தொழில் இருக்கிறது. மீறி நடத்தலாகாது என்பது போன்ற ஓர் எண்ண அலை.

'பணத்திற்காக உடலின்பம் நல்குவதில் என்ன இன்பம் இருக்கிறது என்று கேட்டு சலிப்புக் கொள்கிறாள் என் எஜமானியம்மாள். பரத்தமைத் தொழிலைக் குலநெறியாகப் பயிலும் இவளா இப்படிக் கேட்கிறாள்! எனக்கு மட்டும் இவளுக்கிருக்கிற வனப்பும்-வாளிப்பும்-வீங்கு கட்டும்-பொங்கு கவர்ச்சியும்-சுகந்தமும் கருதியும் இருக்குமேயானால்--நாடிவரும் ஆடவரையெல்லாம் வேல்விழியால் வீழ்த்தி, மயக்கு மொழியால் மஞ்சத்திலே புரட்டி, குருத்துடலின் பட்டுத் தழுவலிலே அடிபணிய வைத்து, அவர்களை விடுதலை செய்வதற்குத் திறையாகச் சொத்துகள் முழுவதையும் சூறையாடி விடுவேன். ஒருவகையில் பார்த்தால் நகர சோபினிகளுக்கு க்ஷத்திரிய வாழ்க்கையைத்தான் மேற்கொண்டிருக்கிறார்கள். க்ஷத்திரிய வீரன் எதிரியைச் செருக்களத்திலே சந்திக்கிறான்; பொருதுகிறான்; வெற்றி கொள்கிறான். அந்த வெற்றியே அவனுடைய இன்பமாகவும் அமைகிறது. நகர சோபினிகளுடைய செருக்களம், உறுத்தாத மென்பஞ்சு மஞ்சங்கள்! அதிலே ஆணின் ஆண்மையைச் சாய்த்து வெற்றி கொள்ளுகின்றார்கள். அந்த வெற்றி கசக்கவா செய்கின்றது?'

'பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கின்றது?' ஊர்மிளா மனத்தில் மீண்டும் ஒலிக்கிறது எஜமானியின் பச்சாதாபக் குரல்.

'இப்படிக் கேட்கிறாள் அவள்-என் எஜமானி. தான் பெறும் இன்பத்திற்குப் பரியப் பணமும் பெற்றுச் சுகிப்பதனால் இன்பம் இரட்டிப்பாகின்றது. இடையில், பற்றுகள் இற்ற துறவியைப் போன்று வார்த்தைகளை வீணே வீசுகின்றாள். இதுவும் ஒருவகை அகம்பாவமே...எங்கே சம்பத்துகள் குவிந்து கிடக்கின்றதோ, அங்கே அகம்பாவமும் மண்டிக் கிடக்கின்றது. இளமை குலையாத எழில் பிழியும் கட்டுடல் என்றால் கொஞ்சமோ சம்பத்து?'

அலையெனக் கிளம்பும் எண்ணங்களை வாசற் கதவு தட்டப்படும் ஓசை வந்து கலைக்கிறது. தன் எஜமானியம்மாள் வெறுப்பின் மெய்மை பொய்மை அறியத் தகுந்த தருணம் வந்ததாக எண்ணுகிறாள். ஊர்மிளா. 'இன்பம் தேடி யாரோ வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது...வீடு நாடித் திரண்டு வரும் இந்த இன்பம் கசக்கின்றது எனக் கூறி என் எஜமானியம்மாள் துரத்தி விடுகிறாளா பார்ப்போம்!'

ஊர்மிளா கதவு திறக்க விரைகிறாள்.

கதவு தட்டப்பட்ட சத்தம் கல்யாணியின் காதுகளிலும் விழுகிறது. யாராய் இருக்கக் கூடுமென நினைக்கிறாள். 'கடன் கேட்கவா இங்கு வந்து கதவைத் தட்டுவார்கள்? எனக்கு எப் பிறப்பிலோ செலுத்த வேண்டிய கடனை இப்பிறவியில் இறுக்கத்தானே இங்கு வருகிறார்கள்!' என வேதனையோடு எண்ணுகிறது அவளது நெஞ்சு.

யாரென்று அறியவும் ஊர்மிளாவை அழைக்கிறாள் கல்யாணி.

ஊர்மிளா தாமதமாகவே, 'தன் கன்னங்கரிய மேனியழகில் யாராவது மயங்க மாட்டார்களா என்ற தாபத்துடன் யாரைப் பார்த்தாலும், பல்லிளித்துப் பேசுவதே அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது' என்று கோபமாக எண்ணியபடி, "ஊர்மிளா...! அடியே ஊர்மிளா...! யாருடன் அங்கே பேசிக் கொண்டிருக்கிறாய்?" என மீண்டும் அழைத்தாள்.

ஊர்மிளா அவசரமாக வருகிறாள். "அழைத்தீர்களா, அம்மா?"

"அழைத்தேனாவா? எத்தனை தடவைகள் அழைத்தேன்? இவ்வளவு நேரமும் அங்கே நின்று யாருடன் சரஸமாடிக் கொண்டிருந்தாய்?"

"சரஸமாடுவதா? யாருடன் அம்மா நான் சரஸமாடுவேன்? உங்களைத்தான் தேடிவந்திருக்கிறார்.."

"யார்?"

"உஜ்ஜேனியிலிருந்து இங்கு வாடிக்கையாக வரும் தனவணிகன்."

"உஜ்ஜேனியிலிருந்து வரும் தனவணிகனா? அவனோ பெரும் செல்வந்தன். இவ்வளவு நேரமும் அவனை வாசலிலே காத்திருக்க வைக்கலாமா? நோக்கமறிந்து நடப்பதற்கு நீ இன்னமும் கற்றுக் கொள்ளவில்லையே...அவன் அறிவுள்ளவனாக இருந்தாலும், அவசரக்காரன். என்மீது பித்துக் கொண்டு நத்தி வந்திருந்தாலும், தித்திக்கும் முத்தத்தில் சத்தான இன்பம் சித்திக்க வைக்கும் உத்தி தெரிந்த இளமையும், அழகின் இறுக்கமும் கொண்ட நகர சோபினிகள் பலர் வாழ்கின்றார்கள் என்பதையும் அவன் அறிந்து வைத்திருப்பான்...தாமதிக்காமல் போய் அவனை அழைத்துவா!"

மறுபடி வாசல்புறம் நோக்கி விரைந்தாள் ஊர்மிளா. 'பணத்திற்காக உடலின்பம் நல்கும் இந்தப் புல்லிய வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது?' என்று கல்யாணி சொன்ன வாசகம் கிணற்றுள் குரலாய் அவள் மனத்துள் எதிரொலி செய்கிறது. போதிமர நிழல் வேதாந்தம் கையோடு பொய்த்துப் போவதை ஏளமாய் எண்ணியவாறே நடந்தாள்.

ஊர்மிளாவின் பார்வை--தொழில் முறையால், எவ்வளவு இளக்காரமாய்- போலியாய்த் தான் வாழ்வதை, அந்தப் பார்வை - கல்யாணிக்கு உறுத்துகின்றது. ஆனாலும், அவளுக்கென்று ஒரு தொழில் தர்மமும் இருக்கிறது. அவள் உடலை விரும்பி ஒருவன் வாசலில் நிற்கும்போது யாக்கை நிலையாமை பற்றி நினைப்பது தவறு...! அவளுக்கு விதிக்கப்பட்டுள்ள குலதர்மம் அது...!

வணிகன் உள்ளே வருகிறான்.

"கயல்விழியே! மயல்தேனே! கொஞ்சும் கிளியே" என்றென்றைக்கும் இளமையாக இருப்பதற்கு காயகல்பம். ஏதாவது சாப்பிட்டு வருகிறாயா? கால ஓட்டத்திலே மூப்பு வந்து சேருகிறது என்பது உலகத்தோர் அநுபவம். ஆனால், நீ...? காலத்தை எதிர்த்து எதிர்நீச்சலடிக்கும் பாங்கிலே என்றுமே உடையாத வாலை இளமையைப் பிழிந்து காட்டுகிறாய்."

"உஜ்ஜேனியிலுள்ள உல்லாசினி ஒருத்தியுடன் பேசவேண்டிய வசனங்களை இடம் மறந்து இங்கே ஒப்புவிக்கிறீர்களா?" என்று சிரித்தாள் கல்யாணி.

கல்யாணியின் சிரிப்பில் என்ன கண்டானோ வணிகன். கோபித்தவனாகச் சொன்னான்: "உஜ்ஜேனியையும், வணிகத்தையும் மறந்து இன்பம் அநுபவிக்கலாமென்று இங்கு வந்தால்...?"

"மூக்கின் மீதுதான் உங்கள் கோபம் வாசஞ் செய்தாலும், அது முனிந்து கனியும் பொழுது உங்கள் முகத்திலே தனி அழகு படர்வதை அவதானித்திருக்கிறீர்களா? ஓ...ஒரு வேளை; காத்து நின்று கால் கடுத்ததால் இந்தக் கோபமோ...? அமருங்கள்!"

வணிகன் சினம் தணிந்து அமருகிறான்.

அங்கவஸ்திரத்தைப் பெற்று அதற்குரிய இடத்திலே அவன் வைக்கிறாள்.

வணிகனின் அழகை அள்ளி விழுங்கி நிற்கும் ஊர்மிளாவைக் கண்டு எரிச்சலடைந்தவள், தம்மிடமிருக்கும் மதுவகைகளுள் சிறந்த மதுவை எடுத்து வரும்படி ஆக்ஞாபிக்கிறாள்.

ஊர்மிளா அப்பால் நகர, அவனருகே அமர்ந்து, "உங்கள் பரந்த மார்பிலே சிலிர்த்து நிற்கும் ரோமம்..." என்று கூறி சிருங்கார நகை சிந்துகிறாள். பின், "நேற்று ஆழ்ந்த தூக்கத்தில் இனிய கனவொன்று கண்டேன்," என்கிறாள்.

"இனிய கனவா? நீ கண்டால் அஃது இனிமையானதாகத்தான் இருக்கவேண்டும். பொற்சிலையே, எனக்கு அதைச் சொல்வாயா?"

"சொல்கிறேன்" என்றவன் கனவு காண்பவள் போல் கண்கள் கிறங்குகிறாள். "பல நாள்கள் கழித்து வசந்த ருது வந்து சேர்கிறது. நான் அதன் எழில் பருகி மெய்ம்மறந்து நிற்கிறேன். என் பின்னால் யாரோ வந்து நின்று ஒரு மாலையைக் கழுத்தில் அணிந்து என் கண்களைக் குருடாக்குகின்றார். அந்த நிலை நீங்கிப் பார்க்கும்போது என் கழுத்திலே முத்துமாலை ஜொலிக்கிறது. பக்கத்திலே நிற்பவர் சிரித்தவாறே என்னை...தழுவுகிறார். இப்படி ஒரு கனவு கண்டால் இனிக்காதா, பின்னே?"

"அதுசரி, கனவிலே கண்ட அந்த ஆடவன் யாரோ?" என்று ஆவலோடு கேட்கிறான் வணிகன்.

"உங்களைத் தவிர வேறு எந்த ஆண்மகனை நான் கனவிலே கண்டிருப்பேன்? அந்தக் கனவை நிசமாக்குவது போல நீங்கள் என் எதிரில் வந்து நிற்கின்றீர்கள்."

அந்த நேரம் உள்ளே வந்த ஊர்மிளா, மதுக் கலசத்தை அவர்கள் எதிரில் வைத்து, எஜமானியின் ஜாடையை எதிர் பார்த்து நிற்கிறாள். "சரி, இனி நீ போகலாம். வெளியே வெளியூர் ஆலயம் ஒன்றுக்கு நடனமாடச் சென்றுவிட்டதாகவும், நாளைக்குத்தான் திரும்புவேன் என்றும் கூறி அனுப்பிவிடு."

"யார் வந்து கேட்டாலுமா?"

"உன் போக்கே மாறிவருகிறது. உனக்கு நான் சொல்வது புரியவில்லையா?"

"புரிகிறது அம்மா, நன்றாகப் புரிகிறது" என்று கூறி வெளியேறுகிறாள் ஊர்மிளா. "புனிதராம் புத்தரின் சிலையின் கீழே மதுவின் மயக்கமும், மங்கையின் சுவையும் ஊட்டும் உன்போக்கு யாருக்குப் புரியாமலிருக்கும்?' என்று மனத்துள்ளே எள்ளினாள்.

ஊர்மிளா சென்றதும் வணிகன், "கல்யாணி! நீ நகர சோபினியாக இருந்தாலுங்கூட மிகவும் இனியவள். மனமறிந்து இன்பம் சுரக்கவல்ல சுந்தராங்கி..." எனச் சொல்லி நெருங்கினான்.

கல்யாணி மதுவைக் கிண்ணத்தில் ஊற்றி, "நீண்ட பயணத்தால் களைப்புடன் காணப்படுகிறீர்கள்" என்று கூறி, அவனைப் பருக வைக்கிறாள்.

"நனி சுவை தரும் மது! ஆனாலும், உன் தேன் இதழ் நிகர்த்த சுவையை இப் பூவுலகில் வேறொரு பொருளும் தரமாட்டாது...முத்துமாலையொன்று கொண்டுவரலாமென்றுதான் நினைத்தேன். இந்த மரகதமணியின் மாந்தளிர்க் கழுத்துக்கு மரகதமாலை தான் எடுப்பாக இருக்குமென்று...எனது எண்ணத்தை மாற்றினேன்". எனக் கூறித் தன்னுடன் கொண்டு வந்திருந்த மரகதமாலையை எடுத்து அவளிடம் கொடுக்கிறான் வணிகன்.

நீங்களே அணிந்துவிடுங்களென்று, திரும்பி அமர்கிறாள் கல்யாணி.

வணிகன் மரகதமாலையை அணிவித்துவிட்டு அவளின் அடையைத் தழுவுகிறான். லாவகமாக நழுவியவள் நிலைக்கண்ணாடியில் எதிரேநின்று பார்த்து பரவசமடைகிறாள். "என்னிடமிருக்கும் எதனைக் காட்டினாலும் இதனைப் பெருநிதியமாகக் கருதிப் பாதுகாப்பேன்" என்று கூறி எழில் பிழிகிறாள்.

மஞ்சத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறாள் வணிகள்.

அவ்வேளை, வெளியே...

புத்தம் சரணம் கச்சாமி -
சங்கம் சரணம் கச்சாமி -
தர்மம் சரணம் கச்சாமி -

திடுக்குற்றாள் கல்யாணி. "இனிமையும் கம்பீரமும் சொட்டும் குரல்...நிச்சயமாக அவருடைய குரலேதான்."

கல்யாணியின் மாற்றம் வணிகன் சற்றும் எதிர்பார்க்காதது.

"பிட்சாபாத்திரம் ஏந்தித் திரியும் யாரோ ஒரு பிக்குவின் குரல்! அவர்கள் கூட உங்களைப் போன்ற நகர சோபினிகளை ஆதரித்துப் போஷ’க்கிறார்களா? அப்படியானால் அவர்களுடைய உதடுகள் எவ்வாறு புத்தரின் புனித நாமத்தைக் கூசாமல் உச்சரிக்கின்றன?" என்று ஏளனத் தொனி வெடிக்கக் கேட்கிறான்.

"அபசாரம்! அபசாரம்!" பதறினாள் கல்யாணி.

"இந்த பிக்கு தாமரையிலை நீராகவே இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் புனிதர் - புண்ணியர். என் தானத்தை ஏற்று அருளும்படி எத்தனையோ தடவைகள் வேண்டினேன். வேளை வரும்போது வந்து ஏற்றுக் கொள்ளுவதாக வாக்குத் தந்திருந்தார். அவர் நியமித்த வேளை வந்துவிட்டது போலத் தோன்றுகிறது."

"வேளையாம் வேளை! மனம் ஒன்றி, கலவி பயின்று, களிப்பு மாந்த இருவரும் படுக்கையறைக்குள் செல்லும் சமயம்தான் அந்தப் பிச்சாண்டிக்கு வேளை வந்ததா?

"அப்படியும் இருக்கலாம்".

"நான் பரியம் தந்தேன். நீயும் ஏற்றுக் கொண்டாய். உன் உடல் இன்று என் சொத்து".

"அது உண்மைதான். நான் மறுக்கவில்லை. ஆனால், எந்த நகரசோபினியும் தன் உடலுடன் சேர்த்து பரிசுத்தம் பற்றித்தான் பேசியிருக்கிறார்."

"அப்படியானால்...நான் உங்களிடம் என் சித்தத்தை அடைவு வைக்கவில்லையென்று வைத்துக் கொள்ளலாம்."

கல்யாணி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது ஊர்மிளா உள்ளே வந்தாள்.

"என்ன?" என்று கல்யாணி கேட்டாள்.

"அந்த பிக்கு வந்துள்ளார். நீங்கள் சொன்ன பிரகாரமே நீங்கள் வெளியூர் போயிருப்பதாக சொன்னேன்..."

"ஏனுடி அவரிடம் பொய் கூறினாய்?"

"நீங்கள் பணித்தீர்கள். அப்படியே சொன்னேன்."

"போய்விட்டாரா?"

"இல்லையம்மா, நான் சொன்னதை நம்ப மறுத்து உங்களிடம் சேதியொன்று தெரிவிக்கச் சொன்னார்."

"என்ன சேதி தெரிவிக்கச் சொன்னார்?"

"தானம் ஏற்க வேளை வந்துவிட்டதாக உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்."

"ஊர்மிளா! ஓடிப்போய்...வேண்டாம், வேண்டாம். நானே அழைத்துவருகிறேன்." என்று வாயிலை நோக்கி ஓடினாள்.

கல்யாணியின் பேச்சும் நடத்தையும் கண்ட வணிகன், 'செய்வதோ உடல் வணிகம். பணம் கொடுத்தவர்களுக்கெல்லாம் உடலைக் கொடுப்பது இவளுடைய குலதர்மம். இவற்றை மறுத்து, யாக்கை நிலையாமை பற்றிப் பேசும் பிக்குகளுக்குப் பின்னால் இவள் இப்படிப் பைத்தியம் கொண்டு அலைகின்றாளே!' என்று தனக்குள் முனகிக் கொண்டான்.

அது செவியில் விழுந்த ஊர்மிளா, "அப்படிப்பட்ட பைத்தியங்களைத்தானே நீங்களும் தேடி பைத்தியங் கொண்டலைகிறீர்கள்? என்னைப் போன்ற ஒரு குலமகள் காலடியில் வீழ்ந்து கிடந்தாலும் துச்சமாக மதிக்கின்றீர்கள்" என்றாள்.

"ஊர்மிளா! ஒன்றை அறிந்துகொள்ளக் கடவாய்! பசித்தாலும் புலி புல்லைத் தின்பதில்லை."

"புலி மாமிசத்தைத்தான் தின்னும், சரி! என் மேனி மட்டும் மாமிசமில்லையா?"

வணிகன் சிரித்தான், "பெண்கள் எல்லோருமே மாமிச கோளங்களினாலான உருவங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். வைரத்தின் மதிப்பு எப்போதும் நிலக்கரிக்கு ஏற்படுவது கிடையாது. நிலக்கரி அடுப்பிலே எரிக்கத்தான் உதவுகிறது."

"நிலக்கரி கறுப்பாக இருக்கலாம். அடுப்பிலே எரியலாம். ஆனால், பிறருக்குச் சக்தியூட்டுவதற்காகத் தன்னை அழித்துக் கொள்ளும் திருட்டாந்தமாக அது திகழ்கிறது."

"சாமர்த்தியமாகப் பேசுகிறாய். சொவ்வை வாய்ப் பாவையரின் தத்தை மொழிதான் தித்திக்கிறது. தத்துவங்களை ஞானியர் வாய்மூலம் கேட்கும் பொழுதுதான் தெளிவு பிறக்கின்றது...உன் எண்ணம் புரிகிறது. ஆனால், கோல மயிலின் ஆட்டங் களிக்க வந்தவனுக்கு..."

ஸாதுவை உள்ளே அழைத்து வருகிறாள் கல்யாணி.

"இந்த வீட்டின் கதவுகள் எப்பொழுதும் தங்களுக்காக அகலத் திறந்திருக்கும். உங்களுக்கு எது வேளையோ, அதுவே எனக்கும் வேளை!"

"பிக்குவே! உங்களுக்கு மட்டுமல்ல, கை நிறைய பரியப் பணம் கொண்டுவரும் யாவருக்கும் கதவுகளையும் மனங்களையும், ஏன் எதையுமே அகலத் திறந்து வைக்க வேண்டியது நகர சோபினிகள் குல ஆசாரம்...!"

வணிகனின் குறுக்கீட்டை பிக்குவானவர் விரும்பமாட்டாரோ எனக் கல்யாணி அஞ்சினாள். அதனால் அவள் அவசரமாகக் குறுக்கிட்டு, "தங்கள் வருகையால் யாருக்கும் துன்பமில்லை. சுவாமி, இடக்காகப் பேசும் இவர் உஜ்ஜேனியிலிருந்து வந்திருக்கிறார்..." என்றாள்.

"அறிவேன். ஆனால், உன் நண்பர் வந்திருக்கும் நோக்கமும், நான் வந்ததின் நோக்கமும் வெவ்வேறானவை. ஆனால், இருவரும் ஒரே வேளையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதுதான் வேடிக்கை!"

"புனிதரே! யாருக்கும் எதுவித சங்கடமும் இல்லை. இதிலே அமருங்கள்."

கல்யாணியின் விநயத்தை வணிகன் ஆட்சேபிக்கவில்லை.

பிக்கு, புத்த சிலைக்குப் பக்கத்திலுள்ள ஓர் ஆசனத்தில் அமருகிறார்.

அதுவரை பேசாதிருந்த வணிகன், "ஸாதுக்களே" கோபித்துக் கொள்ள மாட்டீர்களென்றால் ஒன்று கேட்கப் பிரியப்படுகிறேன். கேட்கலாமா?" என்று தொடங்கினான்.

"நானோ சினம் தவிரிந்தோன். தாராளமாகக் கேட்கலாம்."

"நீங்கள் புனிதர், புண்ணியர், பற்றுக்கள் எல்லாவற்றையும் கடந்தவர். கையிலுள்ள பிட்சா பாத்திரமும், மேனியை மறைக்கும் சீவர ஆடையுமே சொத்துகள் என அலையும் துல்லியர். அத்தகையவர் தானம் கேட்டு இந்தப் பொதுமகளிடம் வரலாமா? தானம் தேவையென்று கூறினாற் போதும். ஆயிரம் உயர் குலத்தோர் உங்கள் விஹாரத்துக்கே அனுப்பி வைப்பார்களே...! இந்த வேசியின் வீட்டுக்கு வருவது கேவலமாகத் தெரியவில்லையா தங்களுக்கு?"

"சநாதன தர்மப்படி நீ உயர்வு-தாழ்வுகள் பற்றிப் பேசுகின்றாய். கேவலம் என்று கூறுகின்றாய். எது கேவலம்?"

"பெண்ணாசை துறந்த நீங்கள் பெண்ணின்பத்தை அங்காடிப் பொருளாக்கிவிட்ட இந்த வீட்டுக்கு வருவதுதான்."

"நீங்கள் உன்னை உயர்குலத்தவன் என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறாய். அப்படியிருந்தும், இங்கு வருவது உனக்குக் கேவலமாகத் தோன்றவில்லையா யென்பதை ஒப்புக் கொள்கிறாயா?"

"ஒப்புக் கொள்ளுகிறேன். எனினும் நான் வந்திருப்பதின் நோக்கம் வேறு."

"நோக்கம் எதுவாக இருந்தாலும் நீ வருவதற்கு கௌரவமானதாகத் தோன்றும் ஓர் இடம், ஏன் எனக்கு மட்டும் கேவலமாகத் தோன்ற வேண்டும்?"

"ஸாதுக்களே! உங்கள் தளம் வேறு; என் தளம்வேறு; இவள் தளம் வேறு. ஒவ்வொரு தளத்திலும் உள்ளவர்களுக்கும் ஒவ்வொரு நெறி தர்மமாக அமைகிறது. ஒரு தளத்தில் உள்ளவனுக்கு தர்மமாக அமையும் நெறி, பிறிதொரு தளத்தானுக்கு ஏற்ற நெறியாக அமைவதில்லை."

"தளமும், தர்மமும்!" பிக்கு மனசுடன் பேசும் தொனியிலே பேசினார். ஆனாலும், வணிகன் செவியில் அவை விழுந்தன.

"ஆம், நீங்கள் உயர்ந்த நெறிகளைப் போதிப்பவர்கள். உங்கள் தளம் மிகமிக உயர்வானது. இவள் கேவலம் பரத்தை! இவள் தளம்..."

வணிகனை இடைமறித்து கல்யாணி சினங்கொணடு வெடித்தாள். "கேவலம்...பரத்தையா? இந்தப் பரத்தையைத் தேடித்தானே உஜ்ஜேனியிலிருந்து வந்திருக்கிறீர்கள்!"

"கல்யாணி! கோபம் தவிர். நான் உன் ஒருத்தியைப் பற்றித் தனிப்பட்ட முறையில் பேசுவதாக பிழைபடக் கருதத் தேவையில்லை" என்று அவளைச் சமாதானப்படுத்தினான் வணிகன். "உன் குலத்தில் தர்மத்தைப் பற்றித்தான் இங்கு பேச்சு எழுந்திருக்கிறது. நான் வைசியன். என் குல ஆசாரப்படி உன்னிடம் இன்பம் நுகர்வது தர்மமானது. நீ எதனையும் எனக்கு பிட்சாபாத்திரத்தில் இட்டுத் தரவில்லை. நீ கேட்கும் பரியப் பணத்தை நான் தந்துவிடுகிறேன். இன்னொரு வழியில் பார்க்கப் போனால், வேசிக் குலத்தை உருவாக்கியதே, குலமகளிரின் கற்புநெறியைக் காப்பாற்றுவதற்காகத்தான். குலமகளிர் சோரம் போனால் ஜாதிக் கலப்பு ஏற்படும். ஜாதி முறைமைகளும், ஆசாரங்களும் தர்ம முறைப்படி நடப்பதினாலேதான் உலகம் உய்கிறது என்று பரமாத்மாவே பகவத் கீதையில் போதித்திருக்கிறார்."

கல்யாணி அதற்கும் ஆவேசமாகவே பதிலளித்தாள். "கீதா போதகம், ஆகமத்திலே சொல்லப்பட்டிருக்கிறது; உதநிஷதங்கள் வலியுறுத்துகின்றன என்று கூறி மக்களுள் ஒரு சாராரை பிறிதொரு சாரார் என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சநாதன தர்மத்தை நான் வெறுக்கிறேன். அவற்றினால் வருங்காலத்தில் உலகம் உய்யப் போவதும் கிடையாது. எதிர்காலம்...போதி மாதவர் போதித்த அன்பு நெறியிலேதான் உய்யப் போகின்றது. ஒரு யானை அளவு பொன்னுடன் ஓர் இளவரசனே என் வாசலில் வந்து நின்றாலும், அவனை உள்ளே அநுமதிப்பதும் அநுமதிக்காது விடுவதும் என் இச்சை. அதுபோல் பிட்சாபாத்திர தாரியான இந்தச் ஸாதுக்கள் வருவதும் போவதும் அவர்கள் இஷ்டம். அவர்கள் சுயாதீனமான முடிவு என் பாக்கியம்."

தன் பொருட்டாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்றும், தானத்தைக் கொண்டு வரும்படியும் கல்யாணியிடம் கூறினார் பிக்கு. அவள் அப்பால் செல்லவும் பிக்கு வணிகன் பக்கம் திரும்பினார்.

"வணிகனே! நீ கல்வி கேள்விகளிலே சிறந்து விளங்குகின்றாய். நல்லது. நாம் கேவலம் பற்றிய விவகாரத்துக்கு மீண்டும் வருவோம். பிச்சையெடுப்பது கேவலமாகத் தோன்றலாம். ஆனால், அதையே நாங்கள் வாழ்க்கை முறைமையாகக் கொண்டு ஒழுகுகிறோம். வணிகனே! ஒன்றை அறிந்து கொள்வாய். கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் ஒரேயளவு மன நிறைவினை ஏற்படுத்துவதுதான் உண்மையான தானம். அந்த நிறைவு இங்கு சம்பவிக்கலாமென எண்ணித்தான் இங்கு வந்துள்ளேன். இதில் கேவலம் எங்கே இருக்கிறது?"

வணிகன் பொறுமை இழப்பது தெரிந்தது. அதை உறுதிப்படுத்தும் வார்த்தையே தொடர்ந்து பிறந்தது.

"நான்கு வர்ணத்தாருள் இவள் கடைக் குலத்தவள்!"

"அப்படியாயின், இந்தக் கடைக் குலத்தவளிடம் உடலின்பம் நுகர்வது மட்டும் ஈனமாகத் தோன்றவில்லையா?"

"அதுதான் சொன்னேனே! நான் வணிகன். வியாபாரம் என் குலதர்மம். இங்கு நான் வந்திருப்பதும் வியாபார நோக்கமாகத்தான். நான் பணம் கொடுக்கின்றேன். அவள் உடல் தருகின்றாள். என் போன்றவர்கள் இக்குலத்தாருடன் வியாபாரம் செய்ய முற்படுவதினாலேதான் இவர்களுடைய குலத்தவர்கள் வாழ்கிறார்கள்."

"வணிகனே!" கம்பீரமாக அழைத்தார் பிக்கு. "நீ சொல்லும் கோட்பாடுகள் காலாவதியாகிவிட்டன. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து மானிடகும் கடைத்தேறுவதற்குத்தான் புத்தபகவான் அவதரித்தார்."

பிக்குவின் வார்த்தைகளைக் கேட்டு நின்ற கல்யாணி, அறையெங்கும் புத்த ஞாயிறின் விரிசுடர் பரவுவது போன்ற ஓர் அகக்காட்சியின் வசமானாள். நூதனமான அநுபவம்.

பிக்கு தொடர்ந்தார். "நீ இப் பிறவியில் வணிகனாக இருக்கிறாய். முற்பிறப்பில் என்னவாக இருந்தாய்? அடுத்த பிறப்பில் என்னாவாய்ப் பிறப்பாய்? சொல்ல முடியுமா? யோசித்துப் பார்! இந்த நகர சோபினி ஏன் பரத்தையானாள்? மனம் ஒப்பியா? குல ஆசாரம் கருதியா? உன்னுடைய வார்த்தைகளில் சொல்வதானால் அவளுடைய உடல் அழுக்குகள் படிந்ததாக இருக்கலாம். ஆனால், அவளுடைய உள்ளம் சக்கரவாகப் புள் போன்ற தூய்மையானதாக இருக்கின்றதே! ததாதர் இதனையும் தெளிவாகப் போதித்திருக்கின்றார்..."

"நடைமுறையிலிருக்கும் தர்மங்களை உடைத் தெறியப் புறப்பட்ட புரட்சியாளர் என்ற வகையில் புத்தரைப் போற்றுகின்றீரா? அல்லது, உலகினை அரட்சிக்க வந்த புண்ணியர் என்ற எண்ணத்தில் புத்தரை மதிக்கின்றீரா?"

"புரட்சியாளர், இரட்சகர் போன்ற அடை மொழிகள் போதிமாதவருக்கு-துன்பம் துறந்த அந்த துல்லியருக்கு-பொருந்தாது. பிறவிச் சக்கரத்திலிருந்து கடைத்தேற சித்த பசிசுத்தம் தேவையென்று பூரணமாக நான் நம்புகின்றேன். ஒவ்வொருவனுடைய சித்தமே அவனவனுடைய இரட்சகர்."

"சித்தத்தின் இயக்கத்தினை எவ்வாறு அறிந்து கொள்ளுதல் சாலும்?"

"வணிகனே! சித்தத்தின் இயக்கத்தினை நிறம், சுவை, மணம், ஒலி, தழுவல் என்ற புலனறிந்த வழிகளால் அறிய முடியாது."

அப்போது கல்யாணி தட்டு நிறைய மலர்களையும், கனிவர்க்கங்களையும் கொண்டுவந்து பிக்குவை பவ்யமாக வணங்க, பிக்கு தானத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்.

உடனே வணிகன் கேட்கிறான். "ஸாதுக்களே! மலர்களை உங்கள் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். மலரின் அழகிலே உங்களுக்குள்ள பிரீதியினாலேதான் அவ்வாறு செய்கிறார்களென்று கூறுதல் பொருந்துமா?"

"ஒவ்வொருவனும் தன் மனப்பக்குவத்திற்கேற்பச் சிந்திக்கின்றான்...நகர சோபினியே! உனக்கு மலர் எதை நினைவூட்டுகின்றது?"

"தியாகத்தின் மகத்துவத்தை! பிறருடைய இன்பத்துக்காக மலர் தன்னையே அழித்துக் கொள்கிறது". கல்யாணி தாமதமின்றியே பதில் கூறுகிறாள்.

"பார்த்தாயா, வணிகனே! நீ வியாபாரம் என்கின்றாய். இவளுடைய மனோபக்குவம் பிறருடைய இன்பத்துக்காக தன்னையே அழித்துக் கொள்ளும் மலரைப் போன்றது. பகவான் புத்தர் உயிருடன் இருந்த பொழுது மலர்களை விருப்புடன் காணிக்கைப் பொருளாக ஏற்றார்."

அதைப் புரிந்து கொள்ள முடிந்தது கல்யாணியால்.

"மலர்கள் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன. எந்த அந்தஸ்தில் உள்ளவராலும் மனக்குறை ஏதுமின்றி அவற்றைத் தரமுடியும். அத்துடன், அநித்ய வாழ்வின் தத்துவத்தை மலர்கள் செப்பமாக விளக்குகின்றன" என்று விளக்கிய பிக்கு, வணிகனைப் பார்த்து, "வணிகனே! மலர் உனக்க எதை நினைவூட்டும்?" எனக் கேட்டார்.

"கலவின்பத்தை" என்றான் வணிகன். "ஆணும், பெண்ணும் மனங் கலந்து இல்லற இனபத்திலே தோய்ந்து ஒரு குழந்தையைச் சிருஷ்டிக்கும் சுவையை! நீங்கள் துறவற நெறியென்று இயற்கையின் உணர்ச்சிகளை மறுதலிக்கின்றீர்கள். அதனை இயற்கைக்கு முரணாக ஆணவ வழி என நான் கருதுகிறேன்."

"கலவி... இன்பம்...இயற்கை வழி...!" பிக்கு லேசாகச் சிரித்தார். "வணிகளே! கலவியின் மூலம் ஒரு ஜ“வன் தோன்றலாம். அந்தப் பிறப்புக்கூட பிரக்ஞை பூர்வமாக நடைபெறுவதில்லை. ஜ“வ உற்பத்தி என்ற ஒரேயொரு நோக்கத்திற்காகத்தான் கலவி நெறி பயிலப்படுகின்றதா? உன்னையே சுயவிசாரணை செய்து பார். ஜ“வ சிருஷ்டி நோக்கத்துடனா நீ இந்த நகர சோபினியை நாடி வந்திருக்கிறாய்? கலவி யென்பது மாமிச இச்சைகளைத் தீர்க்கும் பிறழ்வு வழி. அவ்வளவுதான். புதிய ஜ“வனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சித்தத்தினைக் கலவிக் கலையால் படைத்தல் சாலாது. எதற்கு ஆரம்பம் உண்டோ, அதற்கு அழிவும் உண்டு. சித்தத்தினை எந்த மனிதனாலும் படைக்க முடியாது. எனவே அதுவே நித்தியமானது. சித்தத்தின் நித்தியத்துவத்தை அறிதல் ஆணவமா? அலோப-அதுவேச-அமோக ஆகிய நற்குணங்கள் சித்த பரிசுத்தப் பணியில் ஈடபட்டிருப்பவனுக்கே சித்திக்கின்றது."

"அப்படியானால் உடலிச்சை...அநுபவத்திற்கு மாறானதா?" வணிகளின் கேள்வியில் விவாதக் குணம் மறைந்து அறிதல் வேட்கை நிரம்பியிருந்தது.

பிக்கு சொன்னார், "உடல் என்பது என்ன? கேசம், ரோமம், நகர், தந்தம், தோல், உதிரம், மாம்ஸம், என்பு, நரம்பு, குழலட்டை, எச்சில், பித்தம், சிலேற்பனம், சலம், மலம்...இத்தியாதிகளான முப்பத்து இரண்டு அழுக்குப் பொருள்களால் ஆனதுதானே! இந்த நிலையற்ற யாக்கையின் இச்சைகளினால் சம்சார சக்கரமென்ற பிறவிப் பெருங்கடலில் அழுந்திப் பொருந்துயர் அநுபவிக்க நேரிடுகின்றது."

"பிறவிப் பெருங்கடல்...பெருந்துயர்...கடைத்தேற மார்க்கம் என்ன, சுவாமி?"

பிக்குவின் முகத்தில் ஒளிவெள்ளம் பெருகிற்று, "துக்க, சமுதய, நிரோத, மார்க்க ஆகிய சதுராதியன சத்தியங்கள். இவ்வுலகம் துக்கமயமானது. அதனால் தான் துக்க நிலை ஏற்படுகின்றது. துன்பத்திற்குக் காரணம் இச்சைகளே என்பதை உணர்தல் சமுதய இந்த இச்சைகளை அழித்தோ அல்லது விரோதித்தோ விலகி நிற்கும் நிலையே நிரோத, இச்சைகளை அழிப்பதற்கான வழிகளை அறிதல் மார்க்க."

"அந்த ஆரிய அஷ்டாங்க மார்க்கம் எனப்படும்...நற்காட்சி, நல்லூற்றம், நல் வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைபிடி, நல்லமைதி ஆகிய எட்டுமாம் அவை. இவற்றின் வழி ஒழுகி தியானத்திலே நல்லமைதி பெற்றால் சித்தத்தை உணரலாம்."

"சித்த பரிசுத்தம் கிட்டினால்?"

"அரஹத் நிலை எய்தி நிப்பாண அடைகின்றோம். அதுவே நித்தியப் பேரானந்தம்."

...மௌனம்.

சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட பிக்கு புறப்படத் தயாரானார். விடை பெற்றார்.

"சுவாமி!..." வணிகனின் குரல் தடுக்க நின்றார். என்ன என்பதுபோல் அவனை நோக்கித் திரும்பினா‘.

"நானும் உங்கள் வட வருகின்றேன்" என்றான் வணிகன்.

கல்யாணி, தூர நின்ற ஊர்மிளா இருவருமே திடுக்கிட்டனர்.

"என்கூடவா? ஏன்?"

"அமைதி தேடி இங்கே நகரசோபினியிடம் வந்தேன். அந்த நல்லமைதியை பகவான் புத்தர் வழியில் நடந்து, விஹாரத்திலே பெறமுடியுமென்று இப்போது எனக்குத் தோன்றுகிறது."

சரியான முடிவென அவனை அங்கீகரித்தார் பிக்கு.

உடனே கல்யாணியும் தானும் வருவதாகக் கூறிப் புறப்பட்டாள். அதைப் பிக்கு தடுத்தார். "வரலாம். ஆனால், இப்போதல்ல. அதற்கும் ஒரு வேளை வரும்."

"இவர் வருகிறாரே...!"

"உஜ்ஜேனி வணிகனுக்கு வேளை வந்தது. அந்த வேளை உன் இல்லத்திலேதான் சித்திக்கவிருந்தமை தெரிந்துதான் இன்று இங்கு வந்தேன்."

பிக்கு நடந்தார். வணிகனும் பின் தொடர்ந்தான்.

புத்தம் சரணம் கச்சாமி!

சங்கம் சரணம் கச்சாமி!

தம்மம் சரணம் கச்சாமி!

பிக்குவின் குரல் தேய்ந்து மறைகிறது.

உண்மையில் உறுதி

சத்தியாகிரகம் என்பதற்கு உண்மையில்
உறுதி என்பது பொருள்.

ஒன்றுக் கொன்று சம்பந்தமற்றவனவாகத்
தோன்றும் நான்கு நிகழ்ச்சிகளை உருவகப்
பூக்களாக்கி,

அகிம்சை-

உறுதி-

நம்பிக்கை-

உண்மை

ஆகிய தொனிப் பொருளை நறுமனமாக
ஏற்று, மிக இறுக்கமாகச் சந்தியாக்கிரகத்தின்
தத்துவத்தை விளக்கி

இடையில் ஆழமான நகைச்சுவையையும்
இக்கதையில் புகுத்தியுள்ளார்.

-எஸ்.பொ.

அந்த அவசரநிலை குறித்து, பிராந்திய அரசியல் 'தலை'கள் மயிர் பிளக்கும் விவாதங்களைப் பற்றி, இரவின் மையத்தைப் பிளந்துப் உறங்கா நோன்பு இயற்றி, ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். தலைவர்கள் என்ன முடிவெடுக்கப் போகின்றார்களோ என்பதை அறியத் தினவெடுக்குந் தோள்களுடன் பொதுமக்கள் கூடியிருந்தார்கள். அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தொண்டர்களுந் 'தளபதி'களும் அரும்பாடு பட்டார்கள். நடுநிசி வைகறையாக வளர்ந்தது. அப்பொழுது தனிப்பெருந் தமிழ்த் தலைவர், கரங்குவிப்பே அவராக மக்கள் முன் தோன்றினார். நெடிதுயர்ந்த ஆரவாரம் அமைதியிற் கரையலாயிற்று. அவர் பேசத் தொடங்கினார்.

"மறக் கூட்டமே, தமிழ்ப் பெருங்குடி மக்களே! மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் அன்னார் தமிழ் இனம். துயர் துடைக்கக் களம் குதிக்கத் துணிந்தோம். 'செய் அல்லது செத்துமடி' என்பது நமது வேதம். நாம் வீர மறவர். அக்கிரமக்காரர்களுக்கு எதிராக நாம் அறப்போர் தொடுப்போம். நாளை மறுதினம் காலை ஒன்பது மணிக்கு நமது சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பமாகும். பொழுது புலந்ததும் பட்டி தொட்டிகளிளெல்லாம் இது பற்றிய விபரங்களை நமது தொண்டர்கள் பிரசாரம் செய்வார்கள்..."

பிறிதொரு கணு

'சுயேச்சைப் பிறப்பு' என்ற நூலின் ஆசிரியர் ஜோய். அவள் கணவர் ஜோர்ஜ். அத் தம்பதிகள் கென்யாவிலுள்ள மேரு தேசீயக் காட்டினூடாகச் செல்கின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான நண்பரைச் சந்திக்கிறார்கள். அது ஒரு சிங்கம். அவளுடைய நூல் படமாக்கப்பட்ட பொழுது, அதிலே நடித்த சிங்கங்களுள் அதுவும் ஒன்று. இன்று எலும்புக் குவியலாகக் காட்சி தருகின்றது. கால் ஒன்று முறிந்திருந்ததினாலும், மேலுதட்டில் எட்டங்குல நஞ்சு தீட்டிய இறகு ஏறியிருந்ததினாலும், அது மிகுந்த வேதனையுடன் காணப்படுகின்றது. ஜோர்ஜ் அந்த நச்சிறகினை அகற்றுகின்றார். ஆடு ஒன்றை வெட்டி அதற்கு விருந்து படைக்கிறார்கள். இரைக்கு அலையும் மிருகங்களிடமிருந்து அதனைக் காப்பாற்ற விடியும் வரை அத் தம்பதிகள் அதற்குக் காவல் செய்கிறார்கள்.

இன்னொரு கணு

பிரித்தானிய 'சிங்க'த்தின் அடக்கு முறை ஆட்சி பாரத மண்ணிலே கவிந்திருந்த காலம். அதன் ஓர் அங்கமாகச் சென்னை அரசு அன்னிபெஸன்ட் அம்மையாரையும் மற்றும் தலைவர்களையும் சிறைப்படுத்திக் கோயமுத்தூரில் பாதுகாப்புக் கைதிகளாக வைத்திருந்தது. அவர்களை விடுவிப்பதற்கான வழிவகைகளை யோசித்தார்கள். சத்தியாக்கிரகமே சிறந்த மார்க்கமாகப் புலப்பட்டது. அதன் கர்த்தாவான காந்திஜியை பம்பாயிலிருந்து வரவழைத்து, சத்தியாக்கிரகத்தை எப்படி நடத்துவதென ஆலோசித்தார்கள். "போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குக் குறைந்த பட்சம் எத்தனை தொண்டர்கள் தேவை?" எனப் 'பிரபலம்' ஒருவர் கேட்டார். அப்பொழுது காந்திஜியின் முகத்திலே மந்தகாச முறுவல் ஒன்று கழிந்தது. சிந்தனையிலே தரித்து, மறுகணம் அமைதியாக, "சத்தியாக்கிரகத்தை நடத்தக் கூடியவர்கள் நீங்கள் அல்லர். ஏனெனில், உங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை" என்றார் காந்திஜி. "வெற்றியின் சூக்குமம் எண்ணிக்கையிற் பெறப்படுவதில்லை. எண்ணிக்கைகளைப் பார்த்துக் கோழைகளே மகிழ்கிறார்கள்" என்று தொடர்ந்தவர் நிறுத்தினார்.

'முழு உலகமே திரண்டு நின்றாலும் தன்னந்தனியாக எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். பிரிக்கப்பட இயலாத அகிம்சையிலும் சத்தியத்திலும் பூரண விசுவாசம் பூணுவதினால் இத்தன்னம்பிக்கை பிறக்கின்றது. ஒரு தடவை முகம்மது நபியின் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது...' இவற்றைக் கூற உன்னினார். அதற்கிடையில் நபிநாயகம் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி அவர் உள்ளமெல்லாம் வியாபித்தது.

நினைவுக் கணு

நபி பெருமானார், உத்தமத் தோழராம் அபூபக்கருடன் மக்காவிலிருந்து மதீனாவுக்குத் தமது 'ஹ’ஜ்ரத்'தை மேற் கொண்டார். இடையில் எதிரிகள் வளைத்துக் கொண்டார்கள். பெருமானாரும் அபூபக்கரும் 'தௌர்'குகையிலே பாதுகாப்புத் தேடித் தங்கினார்கள். குகையின் வாசலில் எதிரிகளின் நடமாட்ட ஆரவாரம் கேட்டது. "அல்லாஹ்வின் திருத் தூதரே! நம்மைப் பிடிக்க வந்துள்ள ஆள்களின் எண்ணிக்கையைப் பார்த்தீர்களா? இத்தனை பேரையும் எதிர்த்து நாம் இருவர் என்ன செய்ய முடியும்?" என அபூபக்கர் அச்சந் தெரிவித்தார். "யா! அபூ பக்கரிப்னுஸ’த்தீக், அஞ்சவேண்டாம். நாம் இருவர் மட்டுமல்ல, நம்முடன் அல்லாஹ்வும் இருக்கின்றான்." இவ்வாறு இறுதி இறை தூதர் அமைதியாகவும், திட நம்பிக்கையுடனும் கூறினார்கள்.

நிகழ்ச்சிக் கணு

"...இவ்விதமாக அவரிடம் (நபிபெருமானிடம்) தன்னம்பிக்கை அதிகமாக இருந்த காரணத்தினால், எடுத்த காரியத்தில் அவர் வெற்றி பெற்றார்" என முகம்மது நபி அவர்கள் பற்றிய நினைவுக் கணுவை 'யங் இந்தியா' என்ற பத்திரிகையில் காந்திஜி எழுதி முடித்தார்.

நுனிக் கணுவின் தொடர்ச்சி

அக்கம் பக்கமாக இரண்டு கட்டடங்கள். ஆயிரம் சத்தியாக்கிரகிகள் அக்கட்டங்களை மறியல் செய்வது போல அமர்ந்து கெண்டார்கள். 'குண்டாந்தடி முருங்கைத்தடி' 'துப்பாக்கிக் குண்டு விளையாட்டுக் குண்டு' என்று சத்தியாக்கிரகிகள் இடையிடையே கோஷமிட்டு ஆர்ப்பரித்தார்கள். தனிப்பெருந் தமிழ்த் தலைவர் பெரியதொரு காரில் வந்திறங்கி, கரங்குவிப்பே அவராகச் சத்தியாக்கிரகிகள் முன் தோன்றினார். "தலைவரே! தொண்டர்களின் எண்ணிக்கை காணாது. படம்பிடிக்கிறவன் பின்னேரம் வருவான்" என்று தளபதி ஒருவர் அவருடைய செவிகளைக் கடித்துக் குசுகுசுத்தார். "இன்னும் சற்று நேரத்தில் தென் பகுதி ஊர்களிலிருந்து சுமார் ஐநூறு தொண்டர்கள் வந்து சேருவார்கள். அவர்களை பஸ்ஸ”களிலும், லொறிகளிலும் ஏற்றி விட்டு, அவர்களுக்கு முன்னதாகக் காரிலே வந்து சேர்ந்திருக்கின்றேன்" என்று தலைவர் அபயமளித்தார். அவர்களுடைய குசுகுசுப்பிலே ஒட்டிக் கொண்ட இன்னொரு தளபதி "இப்பொழுது வரும் தொண்டர்களுக்கு மத்தியானச் சாப்பாடு?" எனத் தமது சந்தேகத்தை விண்டார். வரும் வழியில் மாதவி ஓட்டல் முதலாளி கறுத்தாப் போடியைச் சந்தித்தேன். இறைச்சிக் கறியுடன் ஐநூறு சோற்றுப் பார்சல் அனுப்வுவதாக வாக்களித்துள்ளார்." என்றார் தலைவர் உற்சாகத்துடன். "கறுத்தாப்போடி ஒரு மகான்" என்று இரண்டு தளபதிகளும் ஏக காலத்தில் கூறினார்கள். தென்பகுதித் தொண்டர்களை ஏற்றி வந்த முதலாவது பஸ் அவ்விடம் வந்து நின்றது. தொண்டர்கள் இறங்கினார்கள். ஒருவர் ஓடோடி வந்து தலைவருக்கு மலர்மாலை சூட்டினார். 'குண்டாந்தடி முருங்கைத்தடி' போன்ற கோஷங்கள் விண்ணதிர எழுந்து மடிந்தன....

"எதுக்காம் இந்தச் சத்தியாக் கிரகம்?" என்று கேட்டபடி, 'புதிய' சத்தியாக்கிரகி ஒருவர், பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு 'பழைய' சத்தியாக்கிரகிகளுடன் கலந்து கொண்டார். "இந்த இரண்டு படமாளிகையிலும் இப்ப சிங்களப் படம் காட்டுறாங்கள். சிங்கள மொழியை நம்மீது திணிக்க நடத்தப்படும் சூழ்ச்சி இது" என்று பழையவர் ஒருவர் விளக்கினார். "முந்தி இந்தத் தியேட்டர்களில் இங்கிலீசுப் படங்கள்தானே காட்டினாங்கள்? சட்டையள உரிஞ்சு காட்டிற வடிவான படங்கள். நானும் மூன்று நாலு இங்கிலீசுப் படங்கள் பாத்தனான். வெள்ளைக்காரியள் நல்ல சாங்கம்..." என்றார் பீடிச் சுவைப்பாளர். "ஆங்கிலப்படம் காட்டினா பாதகமில்லை. சிங்கள படம் காட்டக் கூடாது என்பதுதானே எங்கள் கோரிக்கை" என்று விளக்கிய தளபதி ஒருவர் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தார். லொறி ஒன்றிலிருந்து இன்னொரு சத்தியாக்கிரகிகளின் கோஷ்டி இறங்கியது. தலைவர் கரங்குவிப்பே அவராக வரவேற்றார். 'குண்டாந்தடி முருங்கைத்தடி' போன்ற கோஷங்கள் மீண்டும் விண்ணதிர எழுந்தன!

ஈமான்

இக்கதைக்கு

மொகலாயருடைய வரலாறே

ஆதாரம்.

மொகலாயர்

இரத்தத் தூய்மையும்

குலப்பெருமையும்

பேசத் துவங்கிய ஒளரங்கஸ“ப் காலம்.

தற்கால பர்மாவின் ஒரு பகுதியாக

விளங்கும்

அரக்கோண நாடு பகைப்புலம்.

அந்த மண்ணிலே

இஸ்லாத்திலே ஈமான் பூண்ட

ஒரு பேதையின் போராட்டமே கதை.

முரண்பட்ட மனித இயல்புகள்

கதையிலே

மறைந்திருக்கும் ஊடுபா -

-எம்ஏஆர்

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடி மூலம் உணவருந்தி, சயனத்திலே உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு. தாய்மைப் பாசத்தை முகையவிழச் செய்யும் அப்பஞ்சு மெத்தை உதை, அவள் உள்ளத்தில் சம்மட்டியடியாகவே விழுகின்றது.

சிந்தனை மத்து வேதனைத் தயிரைக் கடைகின்றது.

தந்தையை இழந்து ஓராண்டு காலங்கூட
ஆகவில்லையே! அதற்கிடையில்...

"அக்கா!"

செவிப்பறையில் அந்த வார்த்தைகளின் உச்சரிப்புத் தெளிவாக விழுந்தும், அதனைக் கிரகிக்க அவள் மூளை மறுக்கின்றது. மனம் எங்கேயோ - இறந்தகால இரை மீட்டலிலேயோ, எதிர் காலக் கற்பனையிலேயோ - ஊர்ந்து தடுமாறுகின்றது.

"அக்கா!"

இந்தத் தடவை அந்த அவலக்குரலை அவளுடைய மூளை பற்றிக் கொள்ளுகின்றது. நிமிரும் விழிகள். தசையின் நீர் உலர்ந்து, எலும்புகள் புட்டியிட்டுக் காட்ட, அழகில் அவலட்சணம் பூக்கின்றது. மொட்டிலேயே கசக்கி முகரப்பட்டு, அரக்கோண மிலேச்ச அந்தப்புரத்திலே சோரம் போய்க் கொண்டிருக்கும் அவளுடைய பரிதாபக் கோலம் விழிகளை நிறைக்கின்றது.

தந்தையின் உருவத்திலே மேய்ந்த பார்வையை எங்கேயோ செலுத்துகின்றாள். இடப்பக்கமிருக்கும் நிலைக்கண்ணாடியிலே தன் பிம்பம் பிரதிபலிக்கப்படுவதைக் காண்கின்றாள். ஓராண்டுக் காலச் சூழற்சி அவளுடைய அழகு முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்டது. தன்னையே தன்னில் காணமுடியாத தவிப்பு. குல்ரூஹ் பேகம் என்னும் அழகியை அந்தப் பிரதிபிம்பத்திலே இனங் கண்டு பிடிக்குந் தவிப்பு.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஒர் உதையின் உணர்வு.



* * * Sirukye2-ன் தொடர்ச்சி * * *


"குல்ரூஹ் பேகம்! என் அன்பு மகளே! என் தந்தையார் ஷாஜஹான் பாதுஷா, என்றென்றும் உலக மக்களாற் போற்றப் படப் போகும் அதியற்புத அழகு வாய்ந்த தாஜ்மஹாலை அன்னை மும்தாஜின் ஞாபகார்த்தமாக ஆக்ரா நகரிலே நிர்மாணித்துள்ளார். அதன் அழகுக்கு ஈடாக எந்த வொரு கட்டடமும் நிறுவப்படவில்லை; நிறுவப்படமுடியாது என்று கலைஞர்களும் கவிஞர்களும் ஒரு முகமாக விதந்தேத்துகின்றார்கள். ஆனால், எனனைக் கேட்டால், உன் பேரெழிலின் ஒரு துகளுக்குத்தானும் அந்தச் சலவைக் கல் கோரி ஈடாக மாட்டாது என்று சொல்வேன்...உன் அழகை இந்த மிலேச்ச அரசனுடைய மிருகப் பசிக்கு இரையாக்கி..."

"தந்தையே...!"

"ஆம் மகளே, இரையாக்கி அந்த ஈனச் செயலுக்குப் பரியமாகக் கிடைக்கும் கப்பலிலே, புனித மக்கமாநகர் செல்வதை என்றுமே நான் ஒப்பமாட்டேன். பாபர்-ஹுமாயூன்-அக்பர்-ஜஹாங்கீர்-ஷாஜஹான் ஆகிய மொகலாயப் பேரரசர்களின் வழிவழிவந்த இந்த சூ-ஜா இளவரசன், குலப்பெருமையை ஈடுவைத்து, இந்த உயிரை உடலுடன் பிணைத்து வைக்க விரும்பமாட்டான்."

"தந்தையே! பெருமானார் பிறந்த மகத்தான புனிதம் பெற்ற மக்கமாநகர் சென்று இறுதி நாள்களை அமைதியாக, நற்கருமங்களில் ஈடுபடுவதிலும்,திருக்குர் ஆனை மனனஞ் செய்வதிலுங் கழிக்கவேண்டு மென்று உறுதி பூண்டிருந்தேன். அல்லாஹ்வின் பாதையிலேயே எனது கடைசி நாள்களை அர்ப்பணிக்கப் பூண்டிருந்த உறுதியும், நம்பிக்கையும், தணியாத ஆசையும்...என் ஆசைகளெல்லாம்...."

"மனிதனுடைய கற்பனை வளத்திற் பூக்கும் ஆசைகள். அவனுடைய ஆசைகள் அத்தனையும் நிறைவேறிவிட்டால், அவன் அல்லாஹ்வையும் அவனது தூதர் ரசூர் (ஸல்) அவர்களையும் மறந்து விடுகின்றான். பாரத உப கண்டத்தில்-மொகலாயப் பேரரசில்-எனக்குள்ள பங்கினைப் பெறுவதற்கு அங்குலம் அங்குலமாகப் போரிட்டேன். தந்தை உயிரோடு இருக்கும்பொழுது, வாரிசுகளாக அண்ணன்மார்களாம் தாராஷ’கோவும், நானும் இராசப் பிரதிநிதிகளாக இருக்கும்பொழுது, தம்பி ஒளரங்கஸ“ப் தில்லியிலே தன்னை ஆலங்கீர் பாதுஷாவாகப் பிரகடனப்படுத்திய செயலுக்காகவே அவனுடன் போராடினேன்...இந்த ஞாலம் கண்டு நடுங்கிய ஷாஜஹான் பாதுஷாவின் மாபெரும் மதிப்பை நிலை நாட்டவே போராடினேன். நான் தோற்றுவிட்டேன்...ஆனாலும் இதையும்அறிந்து கொள் மகளே...நான் போரிலே தோற்றவன்தான்...நான் பிறந்த மண்ணில், என் கப்றுஸ்தான் நிலத்திற்குத்தானும் உரித்தற்றவனாகிவிட்டேன். இந்நிலையிலும் நான் மனங்குன்றினேனல்லன். என் தோல்வி, இன்னொரு மொகலாயனையே வெற்றி வீரனாக்கியிருக்கின்றது... மொகலாயன் என்றுமே தோற்கமாட்டான்!"

"மொகலாயன் மாற்றானிடந் தோற்க மாட்டான்...ஆனால், இந்த மிலேச்ச அரசனிடம் அடைக்கலம் புகுந்து, மீள முடியாத சகதிக்குள் இறங்கிவிட்டோம்."

"அல்லாஹ்வில் பூரண நம்பிக்கையுள்ளவன் நான். அதனால் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவன். என் அருமை மகளின் கற்பை வியாபாரப் பொருளாகப் பேரம் பேசியவன், இன்று அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அதே அரியாசனத்தில் நான் நாளை அமர்ந்திருந்து, பௌத்தம் வேரூன்றியுள்ள இந்த நாட்டிலே இஸ்லாத்தையும் வளர்ப்பேன். அல்லாஹ் எனக்கு அதற்கு வேண்டிய வலிமையைத் தருவான்..."

தந்தையே! நீங்கள் என்றுமே தோற்றவரல்லர். மொகலாயன் என்றுமே தோற்கமாட்டான். தோல்வி ஏற்பட்டபொழுதும் அதனை வெற்றியின் இன்னொரு நிலைக்களனாகவே கருதினீர்கள். நம்மை அவமதித்த அரக்கோண நாட்டு மிலேச்சன் ஸம்டதுதம்மவை நூற்றைம்பது வீரர்களுடன் வெற்றிகொள்ள முடியுமென்று செருக்கோலம் பூண்டீர்கள். எம்பெருமான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதுறு யுத்தத்தை முந்நூற்றுப் பதின்மூன்று வீரர்களுடன் மட்டுமே நடத்திப் பெரு வெற்றிகொண்டார்கள். ஆனால், ஆயிரம் வீரர்களுடன் ஈடுபட்ட உஹது யுத்தத்தில் ஆரம்பத்தில் தோல்வி கிட்டிற்று. வீரமும் வெற்றியும் அல்லாஹ்வின் நம்பிக்கையிலேயே உறுதிப்படுகின்றது. அந்த அடிப்படையான இஸ்லாமிய நம்பிக்கையிலே, கெட்டியான நம்பிக்கை வைத்த சுத்த இஸ்லாமிய வீரனாக வாழ்ந்து மாண்டீர்கள். உங்கள் மகளாம் குல்ரூஹ் பேகம், மொகலாய ரத்தமுங் கெடாது, நமது மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவளாகவே வாழவேண்டுமென்பதற்காகத் தங்களுடைய மேலான உயிரைப் பணயம் வைத்தீர்கள். வங்கத்திலே நடைபெற்ற ஆயிரம் போர்களிலே தங்களுடைய உயிரைப் பலியிட்டிருக்கலாம். அச் செருக்களங்களிலே அந்த உயிரைக் காப்பாற்றியது, எனக்காக அதனைத் தியாகஞ் செய்யவா? யா, அல்லாஹ்! இதுவும் உன் திருவுளமோ? தந்தையே! ஆயிரம் வண்ண எண்ணங்களினால் உங்களுடைய உள்ளத்தை நிறைத்து வைத்தீர்கள். அத்தனை கோல நினைவுகளும் உங்களுடன் மரித்தே விட்டன. புண்ணிய பூமியாம் மக்கா சென்று, நான் ஒரு தூய அரபியனின் மனைவியாக வாழ்வதைக் கண்ணாரக் கண்டு மகிழவேண்டுமென்று நினைத்தீர்கள் - ஆனால், இங்கே -அரக்கோணத்தில் - நான் மிலேச்ச அரசனின் ஆசைநாயகியாக வாழ்கின்றேன். என் சகோதரிகளும் அவ்வாறே...இதோ எதிரில் நிற்கும் இவள்...யா அல்லாஹ்!

"என்னவேண்டும் தங்காய்! உன் பரிதாப நிலையைக் கண்டு தினமும் மனமுருகிச் சாகின்றேன். ஆனாலும், நான் என்றுமே நம்பிக்கையை இழந்தவளல்லள்...காலம் மாறும். பூவுக்கும் முகைக்கு வித்தியாசந் தெரியாது, காமக் களியிலே புரளும் இந்த மிலேச்சனின் அந்தப்புரச் சிறையிலிருந்து உங்களைக் காப்பாற்றியே தீருவேன். இவ்விடமிருந்து சென்று, ஒளரங்கஸ“ப் சிற்றப்பாவிடம் முறையிட்டு, இந்த அரக்கோண இராச்சியத்தை நிர்மூலமாக்குவேன். என் மனப்புயலை மறைத்து, வீசுந்தென்றலாக அபிநயித்து, அரக்கோண மிலேச்சனின் காமக் கழிவை என் புத்திரச் சுமையாகச் சுமக்கின்றேன்...அந்த இரும்புப் பிடிக்குட் சிக்கி இரையாகிய பொழுது, உங்களையாவது மானத்துடன் வாழவைக்கலாமென்று நினைத்தேன்...

நாக்கு அண்ணத்தில் இத்தனை ஆக்கினைகளையுஞ் சகிக்கும் அக்காள் குல்ரூஹ் பேகத்தின் துன்பங்கள் அவளுடையவைகளாகவே இருப்பதைத் தங்கை நன்கறிவாள்.

தங்களுக்காகவே இத்தனை ஆக்கினைகளையுஞ் சகிக்கும் அக்காள் குல்ரூஹ் பேகத்தின் துன்பங்கள் அவளுடையவைகளாகவே இருப்பதைத் தங்கை நன்கறிவாள்.

தன்னுடைய விழிகளிலிருந்து பிரவகிக்கும் கண்­ரை, தங்கை கவனிக்கக் கூடாது என்பதற்காக, அவள் வேறு பக்கந் திரும்புகின்றாள்.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

"தந்தையே! போரை ஒழித்து, சிற்றப்பா ஒளரங்கஸ“ப்புடன் சமாதானஞ் செய்து கொண்டாலென்ன?"

"மொகலாய வீராங்கனையின் உதடுகளா இந்த வார்த்தைகளை உச்சரிக்கின்றன?"

"உங்களுக்காகவோ, அன்றி எனக்காகவோ அல்ல. என் பிஞ்சுச் சகோதரிகளின் நிலையைப் பாருங்கள். தாயன்பை இழந்து, செருக்களப் பாசறைகளிலேயே வாழ்ந்து..."

"தெரியும் மகளே, குல்ரூஹ் பேகம்...சதா கவச மணிந்து வாழும் இந்த மார்பிற்குள் கரைந்து வாழும் தந்தையுள்ளம் படும் வேதனைகளை நீ அறிய மாட்டாய். ஒளரங்கஸ“ப்பின் உடலிலோடும் அதே இரத்தந்தான் என் உடம்பிலும் ஓடுகின்றது. அந்த இரத்தத்திற்குக் கைகட்டிச் சேவகஞ் செய்யும் பழக்கம் வரவே மாட்டாது..."

தந்தையே! உங்களுடைய மகளுடைய உடம்பிலும் அதே இரத்தந்தான் ஓடுகின்றது. அந்த உறுதியுடன்தான் இந்த அரசியற் சதியில் குதித்தேன். இதோ, பாத்திமா வந்து கொண்டிருக்கின்றாள். நான் எதிர் பார்க்கும் அந்த செய்தியுடன் தான் வருகின்றாளா?

"அம்மா, குல்ரூஹ் பேகம்!"

எதிரில் பாத்திமா நிற்கின்றாள். அவளுடைய முகம், கலவரக் காங்கையில் வரண்டு கிடக்கின்றது. பயத்தின் சவக்களை இரேகைகள் கிடங்கிட்டிருக்கின்றன. சொல்லக் கூடாதது எதையோ சொல்ல அச்சப்படுபவளாகக் காணப்படுகின்றாள்.

தங்கையின் முகம், பாத்திமா சொல்லப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றது.

தந்தையே! உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய தளபதி அமீன் துணையுடன், அரக்கோண் மிலேச்சனின் அடாத செயல்களுக்குப் பழிவாங்கி, எங்கள் மிடிமையைப் போக்கி, மொகலாயப் பெருமையை நிலைநாட்டலாமென்றிருக்கின்றேன். அல்லாஹ்! கருணை நிறைந்த இறையே! உன்னை நம்பியே இந்தக் காரியத்தை மேற்கொண்டேன். 'உன்னையே வணங்கி, உன்னிடமே உதவி தேடுபவளாக இருக்கிறேன்.'

"பாத்திமா! செய்தி கொண்டு வந்தாயா?"

"ஆம், எல்லாமே பாழ்."

"என்ன?!"

"நீங்கள் வெகு கவனமாகப் பின்னிய சதித் திட்டம், எப்படியோ அரக்கோண மகாராசாவுக்குத் தெரிந்து விட்டது. தளபதி அமீன் கைது செய்யப்பட்டு விட்டான். எந்த நேரமும் மிலேச்ச அரசன் ஸம்டதுதம்ம இங்கு வரலாம்."

தலையிலிருந்து பூகம்பம் வெடித்து, அக்கினிக் குழம்புகளைக் கொட்டிய மாதிரி துன்பச் சிதறல்.

சிலையாக, அசைவற்று, விரல் நொடிப்பு நேரம் மோனக் கோலம்.

மறுகணம்-

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

"இந்தத் துன்பங்களுக்கு விடிவே கிடையாதா? சில சமயங்களில், என் உயிரையே போக்கிக் கொள்ளலாமென்று தோன்றுகின்றது."

"மகளே" என் அன்பு குல்ரூஹ் பேகம்...எனக்கு இன்றே சத்தியஞ் செய்து தா. என்றுமே தற்கொலை எண்ணம் உன் உள்ளத்தைத் தீண்டக் கூடாது. அது நமது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறானது. இறைவன் நம்மை, தன்னை அஞ்சலி செய்வதற்காகவே படைத்தான்."

"சதா துன்பப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கும் உள்ளத்தால் இறைவனை எப்படி அஞ்சலி செய்வது?"

"முள்ளில் வாழும் ரோஜா, தன் புன்னகையால் இறைவனை அஞ்சலி செய்யும் பொழுது, மனிதனால் முடியாதா? மகளே, குல்ரூஹ் பேகம்! அல்லாஹ் மனிதனைப் படைத்தான். கோழைகளையும், நம்பிக்கையற்றவர்களையுமல்ல. இஸ்லாத்தை நம்பும் ஒவ்வொருவனும் மனிதனாக வாழ்கின்றான். மனிதனாக வாழ்பவன் இறைவனை நம்புகின்றான்; அவனை அஞ்சலி செய்கின்றான். நான் உலகின் சகலவற்றிலும் இஸ்லாத்தையே அதியுந்நதமானதாக விரும்புகின்றேன்; நம்புகின்றேன். நான் ஒரு சுத்த இஸ்லாமியன் என்று வாழ்ந்து மடிவதிலும் பார்க்க வேறு எதையும் என் பாக்கியமாகக் கருதமாட்டேன். என் அருமை மகள் குல்ரூஹ் பேகம் இஸ்லாமிய மகளாகவே இறப்பாள் என்னும் உறுதியை நான் மொகலாய சாம்ராச்சியத்தினும் மேலாகக் கருதுகின்றேன்."

"தங்களுடைய சித்தப்படியே..."

"அல்லாஹ் சித்தப்படி; அவனுடைய தூதுவரும் இறுதி நபியுமான முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் சொல்லியபடி..."

"நான் எந்த இன்னலிலும், என் உயிரை நானே மாய்த்துக் கொள்ளமாட்டேன்."

"அம்மா! எங்களை ஆயிரம் ஆக்கினைகளுக்குட்படுத்தி, ஈற்றிலே தலையைக் கொய்தெறியாது மிலேச்சனுடைய சினம் தணியப் போவது கிடையாது...அதிலும் பார்க்க நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்வதுதான் சிறந்தது..."

"பாத்திமா! நீ என் அருமைத் தோழி. என் சகோதரிகளைத் தாய்க்குத் தாயாக வளர்த்தவள். நன்றிகளை வெறும் வார்த்தைகளிலே அடக்க முடியாது...ஆனால், நான் எத்துயர் அநுபவிப்பினும், தூய இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்தவளாகச் சாவதிலேயே பெருமை அடைவேன்."

"தந்தையே! நான் தங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றியே தீருவேன் என்பது உறுதி. நான் தந்த சத்தியஞ் சத்தியமே."

அவளுடைய தங்கையும், பாத்திமாவும் பின் அறையை நோக்கிக் கலவரத்துடன் ஓடுகின்றார்கள். பரவி வரும் தீக்காட்டிலிருந்து தப்பும் அவசரம்.

குல்ரூஹ் பேகத்தின் உள்ளத்திலே புதிய உறுதி. அதனாலேற்படுஞ் சாந்தம். அது நம்பிக்கை; இஸ்லாம் ஊட்டிய நம்பிக்கை.

மிலேச்ச அரசன் ஸம்டதுதம்ப வருகின்றான். அருவருப்பின் திரள். கோபத்தில் நெருப்புக் கங்குகளைச் சுமக்கும் விழிகள்.

"கள்ளி!"

"....."

"பரத்தை!"

"....."

"அன்றே நினைத்தேன். என் சோற்றைத் தின்று, எனக்கு எதிராக வாள்தூக்கிய அந்த சூ-ஜாவின் மகள் எனக்கு விசுவாசமுள்ள மனைவியாக நடக்கமாட்டாளென்று...அழகின் வெறி மயக்கம்...போதை இன்று தெளிந்துவிட்டது."

"நான் நம்புவது ஏக இறைவன் அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களையுமே. நான் ஒழுகுவது என்றென்றும் மனித சமுதாயத்திற்குக் கலங்கரை விளக்கமாக விளங்கும் திருமறையாம் திருக்குர் ஆனையே."

"உன் பேச்சு எனக்கு விளங்கவில்லை."

"மூடனுக்கு ஞானிகளின் தீர்க்கதரிசனங்கள் விளங்கமாட்டாது. பன்றிகளுக்கு முத்துகளின் மதிப்புத் தெரிவதில்லை."

"என் மதிப்பையும் அதிகாரத்தையும் உங்கள் வம்சத்தினருக்கே உணர்த்துகின்றேன்.. உன் சிற்றப்பன் ஒளரங்கஸ“ப்பின் படை உதவியுடன் என் இராச்சியத்தை நிர்மூலமாக்கச் சதித் திட்டந் தீட்டிய உன்னையும் உன் சகோதரிகளையும் அணு அணுவாகச் சாகடிப்பேன். இன்றுமுதல் ஒரு பருக்கை உணவோ, ஒரு துளி நீரோ வழங்கப் படமாட்டாது."

அல்லாஹ் சாகும்வரை நோன்பா?

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

"மகளே! நான் என் உயிரைப் பணயம் வைப்பது, இஸ்லாமிய கர்ப்பப்பை, மிலேச்ச உதிரத்தில் உதிக்குஞ் சிசுவைச் சுமக்கக் கூடாது என்பதற்காகத்தான்..."

தந்தையே! என்னை மன்னியுங்கள். வைரத்திம் பார்க்கக் கடினமான நெஞ்சுறுதி தங்கள் மகள் குல்ரூஹ் பேகத்திடம் இருக்கின்றது. தளிர் உடலினால், மிருகபலத்தை எகிற முடியவில்லை. மன்னியுங்கள்.

"கூண்டோடு மரிக்கப்போகும் உங்களுடைய மொகலாய சரித்திரம் இந்த அரக்கோண மண்ணிலிருந்து சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டுவிடும்."

"இல்லை. அப்படி மட்டும் நினைக்கவேண்டாம். ஒரு மொகலாயனாம் தந்தை சூ-ஜா இறந்திருக்கலாம். ஆனால், இன்னொரு மொகலாயனாம் என் சிற்றப்பன் ஒளரங்கஸ“ப் ஆலம்கீர் பாதுஷா உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றான்...அவர் பாரத உப கண்டத்தின் பெரும் பகுதியை அரசாளும் ஷா-இன்-ஷா...அல்லாஹ்வில் மாறாத நம்பிக்கை வைத்துள்ள குல்ரூஹ் பேகம் பேசுகின்றேன்...உன் நாடு மொகலாய சாம்ராச்சியத்தின் அங்கமாக நிச்சயம் மாறும்."

"ஹஹ்ஹஹ்ஹா..." பிரளயச் சிரிப்பு. "ஆணவக்காரி, மொகலாயப் பெருமையையும் இஸ்லாத்தின் மேன்மையையும் நெஞ்சில் இருத்திக்கொண்டே அணுவணுவாக, உடல்வற்றி, நா உலர்ந்து செத்துத் தொலை...ஹஹ்ஹஹ்ஹா..."

அவன்-அந்த மிலேச்ச அரசன் ஸம்டது தம்ம-சென்று பல நாழிகை நேரமாகியும் அந்தச் சொற்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன...செவிப் பறைகளைப் பிரளயச் சிரிப்புக் குடைகின்றது.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்திலே உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றில் ஓர் உதையின் உணர்வு. தாய்மைப் பாசத்தை முகையவிழச் செய்யும் அப்பஞ்சுமெத்தை உதை, அவள் உள்ளத்தில் சம்மட்டியடியாகவே விழுகின்றது.

சிந்தனை மத்து வேதனைத் தயிரைக் கடைகின்றது.

"அல்லாஹ் மனிதனைப் படைத்தான். கோழைகளையும் நம்பிக்கையற்றவர்களையுமல்ல. இஸ்லாத்தை நம்பும் ஒவ்வொருவனும் மனிதனாக வாழ்கின்றான். மனிதனாக வாழ்பவன் இறைவனை நம்புகின்றான்; அவனை அஞ்சலி செய்கின்றான்."

தந்தையே! உங்களுக்குத் தந்த வாக்குறுதியை மட்டும் எந்த நிலையிலும் உங்கள் மகள் குல்ரூஹ் பேகம் காப்பாற்றுவாள். அவள் இஸ்லாமிய மகளாகவே மரிப்பாள்.

"இக்கணந் தொடக்கம் உங்களுக்கு எவ்வித உணவோ, நீரோ வழங்கப்பட மாட்டாது. இவ்வறையை விட்டு யாரும் எங்கும் போகவும் முடியாது." என, பிரதம சிறைக்காவலாளி பெருந் தொனியிலே அறிவிக்கின்றான்.

அவளுடைய உள்ளத்தில் எவ்வித சலனமுமில்லை. நம்பிக்கையின் நிறைவு.

எழுந்து சென்று, 'வுழூ'ச் செய்து குர் ஆனை எடுக்கின்றாள்.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

(குறிப்பு: 1666 ஆம் ஆண்டளவில் அரக்கோணம், மொகலாய சாம்ராச்சியத்தின் ஓர் அங்கமாக மாறியது என்பது வரலாறு)

சிறுகை நீட்டி

'நாமிருவர் நமக்கிருவர்' என்கிற கோஷம் இந்தியாவிலே பிரபலமான காலத்தில் இக்கதை எழுதப்பட்டது. இதனை மனதிலிருத்திக் கொண்டு இக்கதை வாசிக்கப்படுதல் வேண்டும்.

'ஈழநாடு' இதழ் பத்தாவது ஆண்டு நிறைவினை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலைந்து கதைகளுள் ஒன்றாக 'சிறுகை நீட்டி' தேர்ந்தெடுக்கப்பட்டது.

7-1-71 இல் ஈழநாடு, பின்வருமாறு எழுதியது:

உருவகக் கதைத் துறையிலும் சிறுகதைத் துறையிலும் எம்.ஏ.ரஹ்மான் குறிப்பிடத் தக்கவர். உத்திகளுக்கு இவர் முதலிடம் வழங்குபவர்.

காலை இளம் வேளை. அதன் மோனத்தவமியற்றுங் கோலம்.

படிப்பறையிலிருந்து அன்றைய விரிவுரைகளை ஆயத்தஞ் செய்து கொண்டிருந்த சதாசிவத்தாரின் பார்வை ஜன்னலுக்கு வெளியே தெறித்துப் பாய்கின்றது.

தனிக்கிளையைத் திருத்தவிசாகப் பெற்றிருந்த ஒற்றை ரோஜாவும் யௌவனப் பூரிப்பின் தூதாகக் குமிண் நகையை அலர்த்தும் அதன் முனைப்பும்.

பாடங்களிற் பற்று இற்றதோ? பூவிலே பற்று முற்றிக் கணிந்ததோ?

சதாசிவத்தார் விருப்பு வெறுப்பு எதற்கும் வெளிச்சமிடாத இயல்பினர். அவருடன் நீண்ட காலமாக நெருங்கிப் பழகுபவர்கள்கூட, அவர் ஆஸ்திகரா அல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு இன்னமும் ஆராய்வுகள் நடத்துகிறார்கள். அவருடைய விரிவுரைகளிலும் உரையாடல்களிலும் நாஸ்திகக் கருத்துகள் விரவிக்கிடக்கும். ஆனால், அவருடைய நெற்றியில் விபூதிப் பட்டையும் சந்தனப் பொட்டும் நித்திய அலங்காரச் சின்னங்களாக நிலைத்துள்ளன!

அலையும் மனத்தைச் சிந்தனையின் முச்சை சுண்டியிழுக்க, பார்வை மேஜைக்கு மீளுகின்றது. ஒரு ரூபாய் நாணயம், அதே இடத்தில், அப்படியே இருக்கின்றது. நூலின் பக்கங்களுக் கிடையிலே புலனைச் சிறைப்பிடிக்குந் தவிப்பு.

'பித்தா பிறை சூடி...'

மனைவியின் தேவாரம். அவளுடைய குரல் பூஜையறையிலிருந்து பக்தியின் முற்றிய பாவத்துடன் பரம்புகின்றது. குயிலின் குரலிலே மண்டிக் கிடக்குமே ஒரு வகைச் சோகம்; அஃது அக்குரலுக்குச் கரையிட்டிருப்பதான த்வனி.

நினைவுத் திரியிலே நீ ஏற்றப்படுகின்றது. உடற் கொட்டிலே செம்மிக் கிடக்கும் வெடி மருந்திலே நீ பற்றிப் படந்ததும்...

கடந்த ஐந்து ஆண்டுகளாக நியமம் நாட்டியது போல இதே வேளையில் நி உற்கைகளை உகுத்து அவருடைய உள்ளங் கருகிக் கொண்டேயிருக்கின்றது. அஃது அவர்தம் அந்தராத்மாவைத் தவிர வேறு எவருமே அறியாத பரம இரகசியம்.

'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...'

வினையின் பலிதம் நானா பக்கமும் பொறிகள் கிளம்புகின்றன. தீயின் பொறிகளா? நினைவின் பொறிகளா? அவற்றின் வண்ணமும் பல; வகையும் பல!

பொறி ஒன்று

'தோடு€டைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி...'

பக்தியின் புதுப் புனலிலே தோய்த்தெடுக்கப்பட்ட பிஞ்சுக் குரல் பூஜையறையிலிருந்து மிதக்கின்றது.

படிப்பறையிலே விரிவுரைகளை ஆயத்தஞ் செய்து கொண்டிருக்கும் சதாசிவத்தாரின் புலன் அப்பாடலிலே பசை கக்கிப் பிணைகின்றது.

பாடுபவள் ரேணு. முதிர்ந்த பக்தியைப் பிழியும் அப்பிஞ்சுக் குரலிலே தனித் த்வனி களைகட்டுகின்றது. இந்த ஈடுபாடு அவருடைய பலவீனம். அதிலேகூட ஒருவகை இதம் ஊறுகின்றது.

சின்னஞ் சிறு பெண்! அவளுடைய வயதைப் பிறந்த நாள் என்ற சரித்திர நிகழ்ச்சியிலிருந்து கணக் கெடுக்க மனம் மறுக்கின்றது. 'பெண் வளர்த்தியோ? பீர்க்கு வளர்த்தியோ? மகள் ரேணு இன்னும் ரெண்டு மூணு வருஷத்திலை புத்தி அறிஞ்சிடுவாள். நீங்கள் சிவனே என்று சரித்திரம் உண்டு-பிரசங்கங்கள் உண்டு எனத்திரியுங்கோ. அப்புறம், எது எதில் வந்து விடியப் போகிறதோ பார்த்திருங்கள்' என்று தினமும் முன்று வேளை படியளப்பது போல, இதனை ஞாபக மூட்டா விட்டால் அன்று 'பிறவா நாளே'. ஐந்து வயதை நோக்கி எழில்நடை போடும் ரவியுடன் ரேணு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, அவளை ஆறு வயதுகளுக்கு மேலே கணிக்க மனம் ஒப்புவதே இல்லை.

'தோதுதைய தெவியன் விதையேதியோர்...'

குதலையின் இனிமையும் குறும்பின் ஏமாப்பும் இழையோடக் குருத்துக் குரல் ஒன்று பூஜையறையிலிருந்து புதிதாகக் கிளம்புகின்றது.

"அம்மா! இவன் தம்பி செய்யிறதைப் பாருங்கோவன்..."

"மற்போருக்குச் சோடி கிடைத்துவிட்டதா?" அடுக்களையிற் பிரசவமான அம்மாவின் குரல் அதிகாரஞ் செலுத்துகின்றது.

"நான் தேவாரம் பாடத் துவங்கினால், அவன்தானே ஒரே ஒரே வந்து குழப்பிறவன்." --சிணுங்கலின் சிரசுதயம்.

"ரவி, அக்காச்சி பாடட்டும் மகன். நீங்க இஞ்சை அம்மாட்ட வாருங்கோ."

"மாத்தன்...நானும் பாதுவன்." அடுப்படி அதிகாரம் ரவியிடம் செலாவணியாவதில்லை.

"மகள், ரேணு! தம்பி சும்மா பாடினால் அவனுக்குத்தானே வாயுளையப் போகுது? பத்தியோடை நீங்கள் பாடினால், உங்களுடைய குரல்தானே ஆண்டவனுக்குக் கேட்கும்!" பக்கச் சாய்வாக இருந்தாலும், நடுத்தீர்ப்பு வழங்கிய திருப்பதியை அடுப்படிக் குரல் பெறுகின்றது.

சதாசிவத்தார் நூலின் பக்கங்களைப் புரட்டுகின்றார்.

நூல்கள் - படிப்பு - வித்துவம் எல்லாம் மனைவிக்கு அற்புதமானவை. எதுவும் பக்தியில் இயங்குவதான குருட்டுப் போக்கு, குருட்டு பக்தி, குருட்டுத்தனஞ் சார்ந்தன; நியாயஞ் சார்ந்தனவல்ல. ஆனால், அவளுடைய பக்தி என்ற நிலைக்களனில், அந்தக் குருட்டுப் போக்கிலேகூட நியாயம் இருப்பதான சாயல் எதனாற் தோன்றுகின்றது? அடிவானம் வெறுஞ் சாயல் என்பது புத்தி பூர்வம். ஆனாலும் அதன் ரம்மியத்தில் மனதை ஒன்றுபடுத்தவும் முடிகின்றது.

'பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே'

பிஞ்சுக் குரலிலே காம்பீரியக் கவர்ச்சி குழைத்து ரேணு தேவாரத்திற்கு முத்தாய்ப்பு வைக்கின்றாள். ரவியின், 'பிற்பாட்டு'தூர்ந்து போக பக்தியின் ஓங்காருமும், அபிநயக் கசிவும்!

சதாசிவத்தாரின் புலன் யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனுடைய வரலாற்றிலே செப்பமாக வேர் இறங்குகின்றது.

அடுத்த பொறி

பண்டைய யாழ்ப்பாண அரசின் எல்லைகளையும் பரப்பினையும் சதாசிவத்தார் பெருமையுடன் மனக்கண்களிலே துலக்கிப் பார்க்கின்றார்.

'போத்துக்கேயர் இந்த மண்ணிலே காலடி எடுத்து வைக்காதிருந்தால்...'

'இருந்தால்?' என்ற நுணுக்கமான முச்சை போட்டுக் கற்பனைப் பட்டத்தை எதிர்காற்றிலே புறக்க விடுகின்றார்.

மேலெழுந்த பட்டத்தின் வால் இடைவெளியில் அறுந்து விழுந்ததா? பட்டம் திடீரெனக் கரண மடித்துத் தொம்மென்று நிலத்திலே குத்திக் கிடக்கக் காரணம் என்ன?

"அம்மா, அம்மா..." அதற்குமேல் ஒலிகள் சொல்லுருவம் தாங்க மறுக்கின்றன. தொண்டை துக்கத்திற் கனக்க ரேணுவின் விக்கல்!

"ஏன் டீ? ஸ்கூலுக்குப் புறப்பட்டு நின்று 'முட்டைக் கண்­ர் வடிக்கிறாய்?"

வானத்தில் வலம் வரும் முகிற் கூட்டங்களிலே ஆண்டவன் தண்­ரை மறைத்து வைத்திருப்பதைப் போன்று, கண்­ரை மறைத்து வைத்திருப்பதற்குப் பெண்களின் கண்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் போலும்.

"தையற் பெட்டியிலே நான் வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணோம்."

"உனக்கு ஏது ஒரு ரூபாய்?"

"நேற்று நீங்கதானே தந்தீங்க?"

"அதைத் தையல் டீச்சரிட்டை குடுக்குத்தான் வருவா, குடுக்கலாமென்று தையற் பெட்டியிலே வைச்சிருந்தனான்."

"இப்பொழுது காசுக்குக் கால் முறைச்சு நடந்து போயிற்றுதாக்கும்..."

"நேற்றுப் பின்னேரம் ரவி என்ரை தையல் பெட்டியை எடுத்துப் பார்த்தான். நான் கண்டனான்..."

"என்னடா ரவி?"

"இல்லை அம்மா. நான் அத்தாச்சீன்ர காசு எடுத்த இல்லை. அத்தாச்சி பொய் சொல்லுது" - ரவி குரலை உச்சஸ்தாயிக்கு எழுப்புகின்றான்.

மேற்கொண்டும் ஒரு வார்த்தை கண்டித்துப் பேசினால், அவன் அடம் பிடித்தலின் அச்சியை அடைவான் என்பது அத்த ஸ்தாயியின் எச்சரிக்கை. அதைத் தீர்ப்பதற்கு அநுமாரும், அவர் உதவியுடன் பர்வதமலையும் நிச்சயந் தேவைப்படும். அஃது அம்மாவுக்குந் தெரியும்.

"தம்பி பொய் சொல்ல மாட்டான். தையற் பெட்டியை நீ ஆட்டத்திலே எங்கேயாவது வைத்திருப்பாய். யாரோ ஒரு களவாணிப்பெட்டை அதைத் திருடியிருக்கிறாள். நடந்தது அதுதான்" - பக்கத்தில் நின்று பார்த்தவளைப் போல அம்மா தீர்ப்பு வழங்குகின்றாள்.

சதாசிவத்தாராற் படிப்பறையில் குந்தியிருக்க முடியவில்லை. வெளியே வருகின்றார்.

"ஒரு ரூபாவுக்காக ஏன் இவ்வளவு பெரிய இது? நம்முடைய அஜாக்கிரதையினால் அது காணாமற் போய்விட்டது. டீச்சருக்குப் புதிதாக ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினால், விவகாரம் அவ்வளவில் முடிந்துவிடும்" எனச் சமரசத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பிக்கின்றார்.

"உங்களுக்கு மகா அலெக்ஸாந்தரைப் பற்றியும் யூலியஸ் சீஸர் பற்றியும், நெப்போலியனைப் பற்றியும் மணித்தியாலக் கணக்கிலை பேசத் தெரியும். அந்த அளவுக்கு வீட்டிலை நடக்கிறதோ, ஊரிலே நடக்கிறதோ தெரியாது. ஸ்கூலுகளிலை இப்ப வரவரக் களவாணிக் கூட்டம் புழுத்துப் பெருகுது. இன்றைக்கு ஒரு ரூபாய்க்குக் கை நீளும்...நாளைக்குப் பத்து, எங்கடை இளக்காரந்தான் களவாணிப் பட்டாளத்தை உருவாக்கும்" - மனிவி கோடை மழையாட்டம் பிரசங்கம் பொழிந்து நிறுத்தினாள்.

அவளுடைய உதட்டுக்கும் உள்ளத்திற்குமுள்ள உறவைச் சதாசிவத்தார் அறிவார். அவளுக்கு இறுக்கமான கை. யாழ்ப்பாணச் சிக்கனத்தின் அறுவடை! கல்லூரியில் சுற்று நிருபங்களாக வலம் வரும் நன்கொடை 'லிஸ்டு'களில் இரக்கச் சுபாவங் காரணமாக அள்ளிக் கொடுத்து, சம்பளத்திலே விழும் துண்டுகளுக்குப் பூரண விளக்கம் கொடுக்க முடியாது கைகளைப் பிசைந்து நிற்பது அவருடைய அநுபவம்.

வீரியம் பம்பரத்தை மணலிலே சுழலவிட்டு, அவர் படிப்பறைக்குள் மீளுகிறார்.

1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊவாப் புரட்சியிலே பங்குபற்றிய கதாபாத்திரங்களைப் பற்றிய நினைவுகளில் மனத்தினைக் குவிக்கும் முயற்சி.

"இந்தாடீ, ரேணு! டீச்சரிட்டைச் சொல்லி, அந்தக் களவாணிப் பொடிச்சியைக் கண்டு பிடிச்சு நல்ல பூசை வாங்கிக் குடு. அப்பிடி அவளைக் கண்டு பிடிக்காட்டி, ஆனைப்பந்திப் பிள்ளையாரிட்டை நேத்திக்கடன் வைச்சிட்டு வா. அந்தக் களவாணிப் பெட்டையின்ரை கையை அழுக வைச்சு ஆண்டவன் காட்டுவான்."

அம்மாவின் சுபாவமே அப்படி 'பழிகிடப்பது', 'நேர்த்திக் கடன் வைப்பது', 'கை அழுகும்', 'கண்ண விஞ்சு போகும்', என்ற சொற்றொடர்கள் பல ஏகதேசமாக வந்து விழும்.

சரித்திர பாத்திரங்கள் அவருடைய மனத்திலே ஒன்ற மறுக்கின்றன. மனத்திலே சுளுக்கு, ஊர்பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிரு ககும் அந்தக் களவாணிப் பெட்டையின் மீது அநுதாபஞ் சுரக்கின்றது.

'ஊரார் பெற்ற பிள்ளைகளை ஏன் கரிதுக் கொட்ட வேண்டும்? ரேணு மட்டும் சற்று ஜாக்கிரதையாக இருந்திருந்தால் களவே போயிருக்காதல்லவா? அத்துடன், நேர்த்திக்கடனை ஏற்று, அதற்குப் பிரதியுபகாரமாகக் கையழுகப் பண்ணுதல் ஆகிய சிரமங்களும் கடவுளுக்கு ஏற்பட்டிருக்காதல்லவா?'

மனிவியிடங் கேட்க சதாசிவத்தாரின் மனம் உன்னியது. ஆனாலும், வினையை அவர் விலை கொடுத்து வாங்க விரும்பமில்லை.

என்னுடைய எண்ணங்கள் - போக்குகள் என்ற மட்டத்திற்கு என் மனைவியால் உயர முடியவில்லை. அஃது அவள் குற்றமா? என்னால் அவளுடைய மனோபக்குவ நிலைகளுக்கு இசைவாக இறங்கிவர முடிவதில்லை. ஓடும் ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

சமகால நிகழ்ச்சிகளைப் பற்றி அவர் அதிகம் அக்கறைப் படுவதில்லை. அவை சரித்திரத்திற்குள் புகுந்த பிற்பாடுதான் சொந்த பந்தபாச உணர்ச்சிகளிலிருந்து அவற்றைப் பிரித்து வைத்து, சரித்திர நியதியான பெறுபேறுகளைக் கற்பித்தல் சாத்தியமானது என்பது அவருடைய அறிவு வாதம்.

அறிவு வயலை உணர்ச்சிப் பசு மேய்கின்றது!

இன்னொரு பொறி

சதாசிவத்தார் உலாத்தலுக்குப் புறப்படுகின்றார். அவருடைய வழியை மறிப்பவனைப்போல ரவி எதிரில் வந்து நிற்கின்றான். குறும்புத் தனம் விழிகளிலே ஒழுக, அந்த விழிகளே முகம் முழுவதையும் அடைத்திருப்பதான அபூர்வக் களை.

"அப்பா தாசு அஞ்சு. நான் ததமாத்தன்."

குதலை உச்சரிப்பில் டகரங்களையும், ககரங்களையும் தகரங்களாக மாற்றுவது எப்படி அவன் ஏகமோ, அப்படியே எண்களில் அதிக மதிப்புப் பெற்றது ஐந்துதான் என்பது அவன் நம்பிக்கை.

"ரவி, நீங்கள் யாருடைய பவுண்?"

"நான் அப்பான்த தந்தப்பவுண்...."

"அப்ப, அப்பாவுக்கு மகன் காசு காட்டுவான்!"

சங்காகக் குவிந்து கிடக்கும் பாற் கையை விரித்துக் காட்டுகின்றான். சிறு கைப்பீடத்தில் ஒரு ரூபாய் நாணயம்.

"தம்பிக்கு தீதபோத்த நான் எதுத்த."

எந்தக் காசைப் பொறுக்கி எடுத்தாலும், அஃது அப்பாவின் காசு என்பது ரவியின் கட்சி. படிப்பறைக்குள் அம்மாவோ, ரேணுவோ வருவது அபூர்வம். மேஜையின்மீது விரித்துக் கிடக்கும் நூல்கள் வனவிருட்சங்களென்றும், அவற்றினூடே அலைந்து திரியும் சிங்கம் சதாசிவத்தார் என்றும் அவர்கள் கற்பித்திருக்கக்கூடும். அந்த வனத்திலே ரவி மட்டும் அணிற் குஞ்சு போன்று துள்ளித் திரிவான். புத்தகங்களை விளையாட்டுப் பொருள்களாக்கிக் கண்ட கண்ட இடமெல்லாம் இறைத்து வைப்பான். இதற்காக ரவியை அவர் சில சமயங்களிற் சினப்பதும் உண்டு; அரிதாகக் கண்டிப்பதும் உண்டு. 'ஏண்டா ரவி! அந்தத் துருவாசர் குடியிருக்கிற ஆசிரமத்திற்குள் நீ போனாய்?' என்று அவன் அம்மாவின் சீற்றம் அவர் மீது இலக்குப் பார்ப்பதும் உண்டு. இத்தனைக்கும் ரவி தன் போக்கின் மன்னன்.

"அப்பா காசை அப்பாவிடம் மகன் தருவான்" எனச் சதாசிவத்தார் தமது கையை நீட்டுகின்றார்.

"மாத்தன் முத்தாசு தாங்க தாசு தாறன்."

"கடைக்குப் போய் மகனுக்கு நிறைய முட்டாசு வாங்கிக் கொண்டு அப்பா வருவார்."

ரவி எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டவனைப்போல களுக் கென்று சிரித்து, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை அப்பா கையிலே வைக்கின்றான்.

அவனை அள்ளி அணைத்து அவனுடைய குருத்துக் கன்னங்களிலே முத்தமிட்டு அவர் வெளியேறுகின்றார்.

சாயங்கால வேளைகளில், பொதுநூல் நிலையத்திற்குச் சென்று, அன்றைக்கு வந்திருக்கும் புதினப் பத்திரிகைகளையெல்லாம் வெள்ளாடு மேய்ச்சல் போட்ட பின்னர் வாவிக் கரையில் சுத்தமான காற்று வாங்கும் திருப்தியுடன் உலவுவார். அப்படிச் செய்வதினால் முன்னேறி வரும் உலகத்துடன் தானுஞ் சேர்ந்து முன்னேறி வருவதான எண்ணத்தின் நிறைவு.

வாவிக் கரையில், விழிகளை நிலத்திலே புதைத்துக் கற்பனைக்கு ஏதேச்சையான சுதந்திரம் அளித்து, கால்களின் இயக்க வேகத்திலே சுதந்திரம் அளித்து, கால்களின் இயக்க வேகத்திலே சஞ்சாரஞ் செய்து கொண்டிருந்த சதாசிவத்தாரை 'குட் ஈவினிங்' என்ற குரல் தடுத்து நிறுத்துகின்றது.

நிமிர்ந்து பார்க்கின்றா‘. எதிரில் வித்துவான் நடராசா பல்லெல்லாம் வாயாக நிற்கின்றார். இருவரும் பால்யத்திலிருந்து நெருக்கமான நண்பர்கள்.

"தங்களை வீட்டிற்கு வந்து பார்க்கலாம் என்றிருந்தேன்...எதிர்பாராத விதமாக..."

"பீடிகை இருக்கட்டும் என்ன விசேஷம்?"

"வந்து...நம்ம பகுதியிலுள்ள கண்ணகி அம்மன் வழிபாடு குறித்து வரலாற்று நூலொன்று எழுதியுள்ளேன். கண்டி ராஜ்யத்தின் ஓர் அங்கமாக இந்தப் பகுதி இருந்த காலத்தைப் பற்றிய குறிப்புகளும் நூலிலே வருகின்றன. கால வரையறைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை ஒரு தடவை சரிபார்த்துத் தந்தீர்களானால்..."

"அவ்வளவுதானே? நாளை மறுதினம் காலையில் வீட்டுக்கு வாருங்கள். இருவரும் ஒன்றாக அமர்ந்து சரி பார்த்து விடலாம்."

பேசிக் கொண்டு ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் வந்து விடுகிறார்கள்.

"வாருங்கள்! தேநீர் அருந்திச் செல்லலாம்." எனச் சதாசிவத்தார் அழைக்கின்றார்.

"வேண்டாம்."

"ஏன்? தேநீருக்குக்கூட இடமில்லாமல் மத்தியானச் சாப்பாட்டை வயிற்றுக்குள் போட்டு நிரப்பி வைத்திருக்கின்றீர்களா?" எனக் கேட்ட சதாசிவத்தார் கட கடத்துச் சிரிக்கின்றார்.

சிற்றுண்டிக்கும் தேநீருக்குமிடையிற் பல கதைகள் தொட்டந் தொட்டமாக உருட்டப்படுகின்றன. பழைய மதுவைப் போன்று, பழைய நினைவுகளும் போதையூட்ட வல்லன என்ற அநுபவம் இருவருக்கும்.

பில் வருகின்றது. ரவி கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தில் எண்பத்தைந்து சதங்கள் கரைகின்றன. மிச்சம் பதினைந்து சதங்களும் ரவிக்கு உவப்பான மிட்டாய்களாக மாறுகின்றன. கையும் கணக்கம் சிரி!

பிறிதொரு பொறி

மனத்திலே சோகக் கேவலின் கீறல். அதன் ரிஷ’மூலத்தை அறியும் முயற்சியில் சதாசிவத்தார் சலித்துப் போகின்றார். நேரத்தைப் போக்குவதற்காகப் படிப்பறையிலே ஒட்டிக் கிடப்பதற்கும் அலுப்பு. பஸ் நிலையத்தை நோக்கி விசுக்குப் பயணம்.

பஸ் நிலையம். பஸ் ஒன்று புறப்பட ஆயத்தமாக இருக்கின்றது. 'இதில் ஏறுவோமா? வேண்டாமா?' என மனத் தளம்பல்!

அடுத்த பஸ் என்றால் சௌகரியமாகப் போகலாம். அதுவரையில் இங்கு தூங்கிக் கொண்டு நிற்பதா? நெரிசல் என்றாலும் கல்லூரிக்குப் போய் விட்டால்...

பஸ்ஸ’லே தொற்றிக் கொள்ளுகின்றார். இருப்பதற்கு ஆசனமில்லை. அவரைக் கண்டதும் இரண்டொருவர் எழுந்து, "சேர்! இதில் இருங்கோ" என மரியாதை செய்கிறார்கள். தன்னுடைய பெருமையை நிலைநாட்டுவதற்காக மற்றவர்களுடைய உரிமைச் சௌகரியத்தை அபகரிக்க அவர் மனம் ஒப்பவில்லை. எனவே, அவற்றை மறுத்து, வெளவால் தொங்கலிற் சுகம் அநுபவிக்கும் பயணம்.

டிக்கட் பெற்றதும், இரண்டு ரூபாய் நோட்டை நீட்டுகிறார். அதே நேரத்தில், வாரின் பிடியிலே நிலை குத்திய சமநிலை வழுவுகின்றன. அதைச் சமாளித்துக் கொண்டே அகப்பட்ட இடத்திற்குள் சில்லறைகளைப் போடுகின்றார்.

அந்தச் சில்லறைகள் ஒழுகி, பஸ்ஸ’ற்குள் விழுகின்றன! 'சதாசிவம் சே'ரின் சில்லறைகளைப் பொறுக்கிக் கொடுக்கும் எத்தனத்திற் பலருடைய கைகள் பஸ்ஸ’ன் தளத்தில் நீந்துகின்றன.

முகையாக இருந்த ஞானம் இதழ் நெகிழ்த்தி...

கடந்த இரண்டு நாள்களாக அவர் அணியும் காற்சட்டையின் இடப் 'பக்கட்'டில் ஒரு ரூபாய்க் குத்தி வழுவி விழக்கூடிய அளவுக்கு ஓர் ஓட்டை அதற்குள் கைக்குட்டை மட்டுந்தான் வைப்பது என்ற பிரக்ஞை பூர்வமாகப் பிரதிக்ஞை எடுத்துள்ள போதிலும், ஞாபக மறதியிலே தொற்றிய தடுமாற்றங்களும் நடக்கின்றன.

ஞான வழித் தடத்தில் பிறிதொரு கிளை!

கிளைப் பொறி ஒன்று

சதாசிவத்தார் ஒதுக்கும் வேப்பெண்ணெய் விவகாரங்களுள் ஒன்று கணிதம். பாடசாலையின் மாணாக்கராக வளர்ந்த நாள்கள் தொட்டே கைமுனு எல்லாளன்மீது படையெடுத்த ஆண்டு, அசோகன் கலிங்கத்துப் போர் நடத்திய ஆண்டு, முஹம்மது நபி ஹ’ஜ்ரி இயற்றிய கிறிஸ்தவ சகாப்தம், நோர்மன் இனத்தார் பிரித்தானியத் தீவைக் கைப்பற்றிய ஆண்டு, பைஸாந்திய சாம்ராஜ்யத்தின் கோநகரான கொன்ஸ்தாந்திநோபிள் இஸ்லாமியர் வசமான ஆண்டு, வஸ்கோடிகாமா கள்ளிக்கோட்டையையும், கொலம்பஸ் அமெரிக்கக் கரையையும் அடைந்த ஆண்டுகள் என ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத ஆண்டுகளை அவர் 'டக் டக்' கென்று ஒப்புவிப்பார்.

'ஆனால், இன்றுகூட இரண்டை இரண்டாற் பெருக்கி, இரண்டால் வகுத்து, இரண்டைக்கூட்டி, இரண்டைக் கழித்தால் என்ன விடை? என்று கேட்டால், இரண்டு தாள்களையும் அரை மணி நேரத்தையும் செலவு செய்த பின்னர், 'இதோ தாள்கள் இருக்கின்றன. ஏதாவது விடை வரத்தான் செய்யும். நீங்களே போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்று சற்றுக் கூச்சப்படாமற் பதில் சொல்லுவார்.

மனைவி என்ற பெயரில் ஒருத்தி அவர் வாழ்க்கையிற் புகுந்து, ரூபாய் சதங்கள் என்று எண்ணிக் கணக்கு வைக்கத் தொடங்கி விட்டாள். அவளுடைய 'கசவார'ப் போக்குச் சில சமயங்களில் எரிச்சலை ஊட்டினாலும், கணக்கு வைத்துக் கொள்ளும் சனியன் தொல்லையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதான திருப்தி பல தடவைகளில் ஏற்பட்டிருக்கின்றது.

காலையில், அந்த ஊர் பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையின்மீது கசிந்த அநுதாபம் காரணமாகக் கணக்கிலே புதிய அக்கறை முறைவிட்டு மனத்தினை அலைக் கழிக்கின்றது.

இந்த வாரத்தில் இன்று மூன்றாவது 'வேர்க்கிங்டே'. ஐந்து ரூபாய் நோட்டுடன் வாரம் ஆரம்பித்தது. தேநீர் சிற்றுண்டு வகைகள் 'கண்டீன்' கணக்கில். நடராசாவைப் பார்ப்பதற்கு முன்னர், நண்பர்கள் என்ற கோதாவில் விருந்தாளிகள் தட்டுப்படவுமில்லை. எனவே, இந்தக் கணக்கின் படியும் ஒரு ரூபாய் சொச்சந்தான் செலவாகியிருக்க முடியும். மிச்சம் மூன்று ரூபாய்களும் சில்லறைகளும்...ஒரு ரூபாய் நாணயத்தை இடப் பக்கட்டிற்குள் கை தவறிப்போட, அது ஓட்டையின் மூலந் தொலைந்துபோக, ரவி மூலம், ரேணுவின் தையற் பெட்டியிலே கிடந்த பணம் என் கணக்கிலே சேர்ந்ததா?

கள்ளன் ரவியா? நானா?

ஊர் பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையைப் பற்றிய நினைவுகள்....

'வந்தாறுமூலை சென்றல் கொலிச்! சேர் இறங்கவில்லையா?' - கொண்டக்டரின் குரல்.

நன்றி தெரிவிக்கும் பாவனையும், அசட்டுத் தனமும் இணைந்து கலக்கும் பாங்கிலே அவர் முறுவலிக்கிறார்.

"ரேணு! தையல் டீச்சர் வந்தாவா?"

"வந்தா..."
* * * Sirukye 3- ன் தொடர்ச்சி * * *

"ரூபாய் களவு போனதைப் பற்றிச் சொன்னீரா?"

"சொன்னனான்..."

"பிள்ளையளை விசாரித்தா. ஒருத்தரும் எடுக்கேல்லையாம். நான் தான் வழியில் எங்கேயாவது தொலைத்திருப்பேன் என்று டீச்சர் சொல்லுகிறா ..."

"அது எப்பிடியடி வழியிலே தொலையும்? தையல் பெட்டியிலே ஓட்டையா? ரூபாய்க்குக் கால் முறைச்சதா? கேட்டியாடி டீச்சரை?"

"கேட்டா அடிப்பா..."

"அவ நொட்டத்தான் இருக்குது. நாளைக்கு ஐந்து சதம் தாறன். பிள்ளையாரின்ரை உண்டியலிலை 'அந்தக் களவாணிப் பெட்டையைக் காட்டு' எண்டு நேந்து போட்டுட்டு வா. நானும் முடிச்சிலை காசு கட்டி வைக்கிறன். ஒரு கிழமையிலே கள்ளி யார் எண்டு தெரியுதோ இல்லையோ பாப்பம்."

"சரி அம்மா..."

ரேணுவின் ரூபாய் அகப்படவில்லை. அப்படியாயின், அப்பணம் என் கணக்கிலே சேர்ந்திருக்கலாம். நாளைக்குக் காலையில் தேவாரம் முடிந்ததும், அவளிடம் ஒரு ரூபாய்க் கொடுத்து விவகாரத்தை முடித்துக் கொள்வதுதான் புத்தி.

தீர்மானத்திற்கு வந்த பின்னர், நேற்றையைப் போலவே இன்றும் உலாத்தலுக்குக் புறப்படுகின்றார்.

எந்த முடிவுக்கு வந்தாலும், ஊர்பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையின் மீது சுரந்துகொண்டிருக்கும் அநுதாபம்.

"பித்தா பிறைசூடி பெருமானே
அருளாளா..."

பக்தியின் புதுப் புனலிலே தோய்த்தெடுக்கப் பட்ட பிஞ்சுக் குரல் பூஜையறையிலிருந்து மிதந்து வருகின்றது.

ஒரு ரூபாய் நாணயம் அதே இடத்தில் அப்படியே வைக்கப்பட்டிருக்கின்றது.

ரேணு ஸ்கூலிக்குப் போகும்பொழுது அதனைக் கொடுத்து, ரவிமூலம் நான். அவளுடைய பணத்தைத் திருடியதாகப் புழுகி வைக்க வேண்டும்.

புழுகுதல் சமன் பொய்யா?

வாய்மையின் இடத்தில் வைக்கப்படும் பொய்மை எது?

1818 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊவாப் புரட்சியிலே பங்கு பற்றிய கதாபாத்திரங்களுடன் சதாசிவத்தாரின் மனம் ஒன்றுகின்றது.

மேல் காற்று இழுத்ததா? நூல் நைந்து அறுந்ததா?

"அப்பா, அப்பா" எனக் குரல் எழுப்பியபடி ரவி படிப்பறைக்குள் நுழைகின்றான்.

"என்னடா ரவி?"

"மாமா ஒதுத்தர் அப்பாவைப் பாத்த கவந்தார்..."

'யாராக இருக்கலாம்?' என்ற வினாக் 'குறியை முகத்திலே அப்பிக் கொண்டு சதாசிவத்தார் ஹோலுக்கு வருகின்றார். 'அப்பொயின்மெண்ட்' பிசகாது வித்துவான் நடராசா வந்து நிற்கின்றார்.

"வாருங்கள்....என்னுடைய படிப்பறைதான் வசதியான இடம்...ரவி, அம்மாவிடம் சொல்லுங்கோ, இந்த மாமாவுக்கு தேநீர் கொண்டு வரச் சொல்லி..."

"தேத்தாவா?"

"ஓம்..."

ரவி அடுக்களைப் பக்கமாகத் துள்ளிக் கொண்டு ஓடுகின்றான்.

சதாசிவத்தாரும் நண்பரும் படிப்பறைக்குள் நுழைகின்றார்கள்.

வித்துவ உலகம் ஒன்று அதற்குள் விரிகின்றது. நேர ஓட்டத்தின் பிரக்ஞை இற்றுவிடுகின்றது.

ஓர் உதிரிப் பொறி

சரித்திரம் என்பது எலும்புக் கூடுகளின் தேதிகளை ஞாபகத்தில் வைத்திருக்கும் வித்தையல்ல. அது ஜ“வத் துடிப்புள்ளது. இதன் காரணமாகத்தான், எதிர்காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையில் நியாய பூர்வமான வளர்ச்சியை அது கற்பிக்கின்றது. இதனை மறந்து சரித்திர உண்மைகளைச் சிறு சிறு அரசியல் ஆதாயங்களுக்காகத் திரித்துப் பேசுபவர்கள் சமுதாய விரோதிகள் - தேசத் துரோகிகள். அவர்களுக்கு ஏற்ற தண்டனை தூக்கு மேடையே.

பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பின் விரிவுரைகளுடன் சதாசிவத்தார். ஒன்றுகின்றார்.

"இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத்தையும், கலாசாரச் செல்வங்களையும் கட்டி வளர்த்ததிலும், பாதுகாப்பதிலும் தமிழர்களுடைய பங்களிப்பு மகத்தானதாகும். தனிச் சிங்கள இரத்தத்தின் இன்றைய சிரேஷ்ட வாரிசுகளாகத் திகழ்பவர்களின் மூதாதையர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகும், சுதேசியப் பண்பாட்டினை நிலைநாட்டத் தமிழ் மன்னர்கள் உழைத்தார்கள். கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் இனத்தால் தமிழன், மதத்தால் சைவன். ஆனாலும், அவனுடைய ஆட்சியிலே, அவனுடைய ஆதரவுடனேயே, பௌத்த சமயத்தின் புனருத்தாரண வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நாட்டின் வைதீக பௌத்தத்தைப் பாதுகாப்பதாக நம்பப்படும் மல்வத்தை பௌத்த பீடத்தைத் தோற்றுவிக்கக் கால்கோளாக விளங்கியவனும் அவனே. சுய நயங்களை மட்டுமே கருதி, சிங்களப் பிரதானிகள் கண்டி நாட்டின் சுதந்திரத்தை ஆங்கிலேயருக்குக் கையளிக்கப் பேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது, சிங்கக் கொடியின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இறுதி வரை போராடிய ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனும் ஒரு தமிழன். கண்டி நாடு ஆங்கிலேயர் வசமாகிய பின்னரும், மூன்று நூற்றாண்டு காலமாக அந்நியருக்கு எதிராகக் கட்டி வளர்க்கப்பட்ட சுதந்திர தாகம் தணியவில்லை. இதனால், 1818 ஆம் ஆண்டில் ஊவா சுதந்திரப் போர் வெடித்துக் கிளம்பியது. கெப்பிட்டிப்பொலவும் பங்கெடுத்த அப்புரட்சிக்கு விலபாவே தலைமை தாங்கினான். அவனும் ஒரு தமிழனே..."

விரிவுரையை இடையிற் பிளந்து, கல்லூரி பியூன் வகுப்பறையில் நுழைகின்றான். அதிபரின் குறிப்பு ஒன்று கைமாறுகின்றது.

அதைப் பிரித்துக்கூடப் பார்க்காது சதாசிவத்தார் தொடர்ந்து வகுப்பினை நடத்துகிறார்.

அணி அடிக்கிறது; பாடம் முடிவடைகின்றது. அதிபர் அனுப்பிய குறிப்பினைப் பற்றிய பிரக்ஞை முளைக்கின்றது; அதனைப் பிரித்துப் பார்க்கின்றார்.

சீதையை விழுங்கப் பூமி பிளந்தது போல, அவரையும் விழுங்கப் பூமி பிளப்பதான அவதி!

குறிப்பினை மீண்டும் ஒரு தடவை அவரால் வாசிக்க முடியவில்லை. கண்களிலே தேங்கிய கண்­ர்த் துளிகள் பார்வைக்கு அந்தகப் போர்வை விரிக்கின்றன. அழுகை என்னும் பலவீனத்திற்குள் அவர் தன்னை முற்றாக ஒப்புக் கொடுக்கின்றார்.

பின்னும் ஒரு பொறி

ரேணு! நீ இறந்துவிட்டாயா? காவோலைகளே பழுத்து விழும் என்று சொல்வார்கள். நீ பச்சைக் குருத்தடி! ஆனைப்பந்திப் பிள்ளையாரின் பகற் பூஜைக்குச் சென்று அம்மாவின் தூண்டுதலின் பேரில், ஊர்பேர் தெரியாத உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப் பட்டிருக்கும் அந்தக் களவாணிப் பெட்டையின் கை அழுக வேண்டும் என்று பிரார்த்தனை செலுத்த உன் பிஞ்சு மனம் இடம் கொடுத்ததா?

தையல் டீச்சரிடம் கொடுக்க வேண்டிய ஒரு ரூபாய் நாணயத்தைக் காலையிலே எடுத்து வைத்திருந்தேனே...அதனை உன்னிடந் தரக்கூடாது என்று தடுப்பதற்காகக் காலன், நடராசா என்ற உருவில், என் அறைக்குள் நுழைந்தானா?

ஸ்கூலில் வைத்த புத்தகங்களை இன்னொரு களவாணிப் பெட்டை எடுத்துவிடக் கூடுமென்ற அச்சத்தினாலா, எதிரே வந்த 'லொறி' யையுஞ் சட்டை செய்யாது, வீதியிலே பாய்ந்தாய்?

என் ரேணுக்குஞ்சு! லொறியின் சக்கரங்களுக்கிடையில் நீ மரணாவஸ்தைப்பட்ட அந்தக் கணம்...

அதிகாலையில், பக்தியின் புதுப் புனலிலே தோய்த் தெடுக்கப்பட்ட பிஞ்சுக் குரலிலே தேவாரம் பாடுவாயே! அதைக் கேட்டின் புற்ற கடவுளின் உள்ளத்தில், இந்தக் குருத்துப் பருவத்தில் உன்னைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற கொடூரம் எப்படி மனைகோலியது? எப்படி முற்றி விளைந்தது?

உன் கணக்குப் புத்தகத்தின் பக்கங்களுக்கிடையில் ஒரு ரூபாய் நாணயம் கண்டெடுக்கப் பட்டதே! என்னைப் போன்று நீயும் பணத்தை ஞாபக மறதியாக அங்கு வைத்து விட்டு...

ஊர் பேர் தெரியாத, உருவமே காணாத, ஆனாலும் குற்றஞ் சாட்டப்பட்ட அந்தக் களவாணிப் பெட்டையின் கை அழுகவே இல்லை. அந்த அரூபி உன் அம்மாவைப் பார்த்து நகைத்துக் கொணடிருக்கிறாளா? இல்லாவிட்டால், கடந்த ஐந்து ஆண்டுகளாக உன் அம்மாவின் உள்ளம் ஏன் அணு அணுவாகச் சாம்பி அழுகிக் கொண்டிருக்கின்றது.

அதோ, பக்தி கட்டித்த பாவத்தில் அவள் தேவாரம் பாடுகிறாள். பாடவில்லை, அழுகிறாள். ஓயாத நீண்ட அழுகுரல்...

....பொறி

"அத்தா உனக்களாயினி அல்லேன்
எனலாமே..."

பூஜையறையிலே இருந்து வரும் குரல் சோகத்தின் கனிச்சாறு பிழிகின்றது.

படிப்பறையிலிருக்கும் சதாசிவத்தாரின் கண்களிலே பனித் துளும்பல். அதற்கு அணை சமைக்கும் முயற்சியில், பார்வையை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிகின்றார்.

தனிக் கிளையைத் திருத்தவிசாகப் பெர்றறிருந்த ஒற்றை ரோஜா, யௌவனப் பூரிப்பின் மலர்ச்சி காட்டுகின்றது.

"ரவி! இங்கை வாருங்கோ...அம்மாவோட கூடத் தேவாரம் பாடுங்கோ..."

"அம்மா எல்லோருக்குமாகச் சேர்த்து நீங்கள் பாடினால் போதும்," - ஐந்தாம் தமிழ் மலர்ப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிய வண்ணம் ரவி கூறுகின்றான்.

"நான் பாடிக்கொண்டே இருக்கின்றேன். கடந்த அஞ்சு வருடங்களாக எல்லோருக்குமாகச் சேர்த்துத் தான் பாடிக் கொண்டே இருக்கிறேனேயடா...இந்த வீடு சிரிக்க ஒரு பெண் குழந்தை வந்து இந்த வயிற்றிலே பூக்க மாட்டாளா?"

ஆவேசத்தில் வெட்கம் இற்றுவிடுகின்றது.

பூஜையறையில் விம்மற் சத்தம் கேட்கின்றது.

அக்குரல் சதாசிவத்தாரின் குழலட்டையைத் திட நிலைக்குக் கொண்டு வருவதைப் போல...

"ரவி இண்டைக்கு ஆடிச் செவ்வாய். நான் விரதம். எனக்காக ஒருதடவை வந்து பாடுவா மகனே!" கெஞ்சுதலிலே விம்மல் முட்டுகின்றது.

ஒரு ரூபாய் நாணயம், அதே இடத்தில், அப்படியே இருக்கின்றது.

டீயே! இன்றைக்கு ஆடிச் செவ்வாய் விரதமா? நீ எப்படித்தான் முறையிட்டாலும், நோன்பிருந்தாலும், ஓர் இரகசியத்தை மட்டும் கடவுள் உன்னிடம் சொல்லவே மாட்டார்.

ரவி பிறந்த பிற்பாடு தென்னிந்திய கல்வெட்டுகளைப் பற்றி ஆராய்வுகள் நடத்த இந்தியாவில் ஓராண்டு காலம் வாழ்ந்தேனல்லவா? அப்பொழுது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பற்றிய அழுகுக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஓர் ஆணும் போதும் என்ற ஒருவகைத் திருப்தி. கருத்தடைக்கான சத்திரசிகிச்சை பெற்றேன். ஊர் திரும்பியதும் உனக்கு சமாதானம் கூறலாம் என நம்பினேன். ஆனால், நீண்ட நாள் பிரிவுக்குப் பின்னர் நீ என்னிடம் சொன்னவற்றைக் கேட்ட பொழுது...உன் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ள எனக்கு உரிமையுண்டா? அந்த உண்மை எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக என்னையே சுட்டுக் கொண்டிருக்கின்றது. எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இந்த உண்மையைச் சொல்லுந் துணிவு என் நாவிற்கு ஏற்படவே மாட்டாது.

"சிறையாடும் மடக்கிளியே இங்கேவா தேனேடுபால் உணத்தருவேன்..."

பூஜையறையிலிருந்து இன்னொரு தேவாரம், பக்தியின் முற்றிய பாவத்துடன் பரம்புகின்றது. அத்துடன் ரவியின் பிஞ்சுக் குரலும் நேர்த்தியாக இழைகின்றது.

* * முற்றும் * *