கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -
ஒரு வரலாற்று நோக்கு
 
 

கார்த்திகேசு சிவத்தம்பி

 

திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -
ஒரு வரலாற்று நோக்கு

கார்த்திகேசு சிவத்தம்பி

நினைவின் சுவடுகள்

நிறைவேறும் ஓர் ஆசை

1997 இல், இக்கட்டுரையை எழுதியபொழுது நான் இலங்கைக் கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தநிலைப் பேராசிரியராகக் கடமையாற்றினேன். 1998 செப்டம்பர் வரை அது நீடித்தது.

யாழ்ப்பாணத்துக்குத் திரும்பமுடியாத உடல் நிலை. பல்கலைக்கழகச் சேவையின் இறுதி வருடங்களைக் கிழக்குப் பல்கலைக்கழகத்திற் செலவிடுதலில் ஒரு தார்மீக நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு சுவாரசியமான இடம்.

நான் அங்கு தங்கிய காலத்தில் எனது போக்குவரத்துக்கான ஒழுங்கு, பல்கலைக்கழக ஊழியர் வாகனத்திற் செய்யப்பட்டிருந்தது. காலை போய் மாலை திரும்புவோம்.

அது ஒரு 'றோசா' பஸ். அதன் சாரதி அம்பலவாணர். அதில் பயணிப்போர் மோகன், சூரி, ஆனந்தராஜன், ஸ்ரீ எனப் பலர். மட்டக்களப்பின் இயல்பான கிண்டற் குறிப்புரைகள் மாறி மாறிப் பறக்கும். அதற்குள் ஓர் உறவுக்குழுமம் இருந்தது.

எனக்கு அவர்கள் அபரிமிதமான அன்பு காட்டினர். என்னை நேசித்தனர். ஒரு முதுபுலமையாளனை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை அறிந்திருந்தனர்.

அவர்களின் அந்தச் செயல்கள் எனக்கு ஒரு 'மானுடத்திடலாக' இருந்தது. நான் அதில் நின்று கொண்டு மட்டக்களப்பின் மனிதாபிமானத்தைச் சுவைத்தேன்.

அவர்களை நான் என்றும் மறக்கமாட்டேன் என்பதற்கு இச்சிறு அர்ப்பணம் சாட்சி.

சென்னை 5-10-99

கா. சிவத்தம்பி

+++++++++++++++

பதிப்புரை

ஆங்கில ஆட்சியில் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சென்று அள்ளிக் கொண்ட பிராமணர்கள் பெற்ற அதே பேறுகளைத் தாங்களும் பெறவேண்டும் என்ற நோக்கில், படித்த பிராமணரல்லாத பிரிவினரால் தொடங்கப்பட்ட 'சென்னை மகாஜன சபை'யின் தோற்றம், அன்றைய காலகட்டத்தில் பிராமணர்களின் செல்வாக்கால் அழுத்தப்பட்டுக்கிடந்த சைவம், தனித்தமிழ் உள்ளிட்ட பல்வேறு போக்குகளை எழுச்சிபெறச் செய்து இதில் கலக்க வைத்தது, பிராம­யத்தின் சமூக-பண்பாட்டுப் பிடிப்பினை எதிர்த்துத் தோற்றம் பெற்று, சமத்துவம்-சமதர்மம் உள்ளிட்ட பொருளாதாரத் தன்மைகளையும் மையப்படுத்தியதாக அமைந்திருந்த பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் அப்போது பிராம­ய எதிர்ப்புச் சக்திகளை ஈர்த்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், நீதிக்கட்சி ஆட்சியில் இடஓதுக்கீடு, கடன் நிவாரணச் சட்டம் அல்லாத வேறெந்தச் சமூக-பண்பாட்டு மாற்றத்துக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சமூக சக்தியாக மாறாமல், நிலவுடைமை மற்றும் வணிக நலன்களையே பேணிவந்த நீதிக்கட்சி செல்வாக்கிழந்து தனது இருப்பையே உறுதி செய்துகொள்ள இயலாத நிலையில், பெரியார் என்ற பேராற்றில் கலக்கவேண்டியதாயிற்று.

நிலவுடைமை-வணிகர்-படித்தவர் நலன்களை மட்டுமே அடித்தளமாகக் கொண்டிருந்த நீதிக் கட்சி, பிராமணரல்லலாத அடித்தட்டு மக்களின் எழுச்சியை அப்போ‘து உறுதிப்படுத்தியிருந்த சுயமரியாதை இயக்கமெனும் தீயில் விழுந்துவிட்டது. இந்தத் தீயில் உருக்கியெடுக்கப்பட்டதுதான் திராவிட இயக்கக் கருத்துநிலை. இது, அரசியல்-சமூக-பொருளாதார-பண்பாட்டு செயல்திட்டத்துக்கான ஒரு நிலைப்பாடு.

திராவிட இயக்கத்தின் பெயரால் அமைந்த கட்சிகள் இதிலிருந்து நழுவியிருந்தாலும், மாநிலக் கட்சிகளிலேயே திமுக இன்றும் வேறுபட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கட்சி என்ற முறையிலோ ஆட்சி வகைப்பட்டோ, திமுகவின் அரசியல் முடிவுகள்-செயல்பாடுகள்கூட, சமூக-பண்பாட்டுப் பின்னணியிலேயே மதிப்பிடப்படுகின்றன.

தங்களது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகவே பிற மாநிலங்களிலுள்ள கட்சிகள் காட்டிக்கொண்டாலும், அவை அரசியல் இயக்கங்களாகக் குறுக்கிடக்கின்றனவேயன்றி, சமூக-பொருளாதார-பண்பாட்டுத் தளத்தில் தங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. தலித் இயக்கங்களின் இருப்பு சற்று வேறுபட்டது என்றாலும், இவையும் அரசியல் அளவுகோலுக்கு அப்பாற் செல்லவில்லை.

இத்தகைய பின்னணியில் நாம் புரிந்துதுகொள்ளவேண்டிய-எதிர்நோக்கவேண்டிய தன்மைகளைத் தமக்கேயுரிய நுணுக்கத்தோடு-பார்வையோடு மார்க்žயப் பேரறிஞரும் ஆய்வுப் பேராசிரியருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்நூலில் விளக்கியுள்ளார்கள்.


11.10.1999 மே.து.ராசு குமார்.

+++++++++++++++

முன்னுரை

தமிழ்த் தேசிய உணர்வு வளர்ச்சி பற்றிய எனது ஆய்வுகளில் இது மூன்றாவது, தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி (1979) Understanding the Dravidian Movement - Problems and Perspective (1988-95) என்பனவற்றைத் தொடர்ந்து இது வருகிறது.

1996-97 இல் தமிழகத்தில் முன்னிலைப்பட்ட தலித் எழுச்சியும் சாதிச் சண்டைகளும் திராவிட இயக்கக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு' என்பது பற்றி ஒரு கருத்தரங்கத்தை நடத்துவதற்குத் தூண்டின. மதுரை ஆராய்ச்சி வட்டத்தைச் சேர்ந்த திரு.வி.எம்.எஸ். சுபகுணராஜன் முதலியோர், நண்பர் அ.மார்க்சினுடைய உதவியுடன் 1994 மே 24-25இல் 'திராவிட இயக்கமும் கருத்தியலும்: நோக்குகளும் போக்குகளும்' என்ற கருத்தரங்கை நடத்தினர். அதில் திறப்புரையாக எனது இந்தக் கட்டுரை அமைந்தது.

நான் இவ்வுரையினை எழுதுவதற்குக் காலாக இருந்த நண்பர் அ.மார்க்சுக்கு எனது நட்புக் கலந்த நன்றி.

திராவிட இயக்கச் செல்வாக்குக் காரணமாகத் தமிழ் நாட்டில் அடிநிலை எழுச்சி திடீரென வந்துவிடாது என மண்டல் கமிஷன் உள்ளிட்ட பலரது முன்னுரைப்புக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் சாதிக் கலவரங்களும் தலித் எழுச்சியும் தோன்றியுள்ளமை வெறும் சாதாரண அரசியல் நிகழ்வு அன்று. 19-20ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வளர்ச்சியின் பல அடிப்படை முரண்பாடுகளை அது வெளிக்கொணர்ந்தது. ஒருவகையில் பார்க்கும்பொழுது இந்தக் கிளர்ச்சிகளைத் தமிழ் நாட்டின் சனநாயகமயவாக்க நடைமுறையின் தவிர்க்க முடியாப் பெறுபேறு என்று கொள்ள முடியும் என்றாலும் திராவிட இயக்கம் குறிப்பாகப் பெரியாரியம் வற்புறுத்திய சமூக விடுதலை உணர்வு, பிராமணியத்துடன் நேரடி மோதுதலில் ஈடுபடாதிருந்த ஆழ்அடிநிலை மக்களிடத்துச் செல்லவில்லையோ என்ற ஐயங்கிளம்புவது இயல்பாயிற்று.

இது பற்றிய நோக்கலுக்கு வருவதற்கு முன்னர் திராவிடக் கருத்துநிலை (Dravidian Ideology) 20ஆம் நூற்றாண்டின் தமிழர் எழுச்சியில் தமிழர் பண்பாட்டில் சில மாற்று நியமங்களையும் குறியீடுகளையும் (alternate norms and symbols) உண்டாக்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது, தமிழை முதன்மைப்படுத்தும் ஒரு சிந்தனைப்போக்குக் காரணமாக, தமிழர்கள் என்கின்ற வகையில் ஒரு பொதுப்படையான எழுச்சி மேற்கிளம்புவதைக் காணலாம். இதற்குள் சாதக அம்சங்களும் உள்ளன; பாதக அம்சங்களும் உள்ளன. அவை பற்றி ஆராயாது இந்தப் பண்பாட்டு முனைப்பு ஏன் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்றுவிட்டது என்பது பற்றி நோக்குவது முக்கியமான ஓர் ஆய்வாகும்.

இக்கட்டத்தில்தான் மார்க்žய நோக்கு பயனுடையதாகக் காணப்படும். வர்க்கம் என்கின்ற எண்ணக் கரு சாதியத்தை எவ்வாறு பயன்படுத்தியுள்ளது என்பது இந்த ஆய்வுகளினூடாக வெளிவரும். அத்துடன் வரலாற்று அசைவியக்கம் என்பதும் ஒரு முக்கியமான அம்சமாகும். வரலாற்றின் இயக்கியல் தன்மை காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக ஆராய்தல் வேண்டும்.

காலனித்துவம் பாரம்பரியச் சமூக அமைப்பைச் சற்று வேறுபடுத்தியதே தவிர மாற்றவில்லை. அதனுடைய அடிப்படையான சமூக அடுக்குநிலையையும் (Social Hierarchies) அடுக்கு நிலை உணர்வையும் மாற்றவில்லை. இந்த அடுக்குநிலையோடு காலம்காலமாக ஒரு சமனற்ற பொருளாதார வளர்ச்சிப் போக்கு சம்பந்தப்பட்டிருப்பதனை, உண்மையில் தமிழ்நாட்டின் நானில ஐந்திணை வகுப்புக் காலம் முதலே இருந்து வருவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தச் சமனற்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திய சமனற்ற வாழ்நிலைப் பண்பாட்டு நிலைமைகள் பற்றி அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இந்தப் பொருளாதாரக் குழுமநிலைமையைப் பேணுவதற்கான ஒரு சமூக ஒதுக்கற்பாட்டுணர்வும் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது. சாதி அமைப்பு விதித்த தொழிற்பிரிவினை (division of labour) சமூக ஒதுக்கற்பாட்டினையும் வலியுறுத்தி ஊடாட்டங்களை மிகக் குறைந்த பட்சத்துக்குக் கொண்டு வந்தது. இந்து மதம் இதற்கான இறையியல், சடங்காசார நிலைப்பாடுகளை வழங்கிற்று. இவை யாவும் சமூக அடிநிலை பற்றிய நமது பார்வையைத் தீர்மானித்தன எனலாம்.

அதே வேளையில் சமூக விடுதலை பெற்ற இடைநிலையினர்களுக்கு வேண்டிய தொடர்ச்சியான அரசியற்கல்வி (Continued Political Education) அளிக்கப்படவில்லை. இதனால் பிராமணித்தியலும் பார்க்க 'நமது' பண்பாடு சிறப்புடையது என்ற ஒரு திருப்திநிலையே ஏற்பட்டது. இந்தத் திருப்திநிலையைச் சகலசாதி மட்டத்திற்கும் கொண்டு செல்ல முடியாததாகிவிட்டது. இதற்குக் காரணம், பிராமணிய எதிர்ப்பு முதலில் சமூக-பொருளாதார உயர்மட்டத்தினராலே மேற்கொள்ளப்பட்டமையேயாகும். அவர்கள் தங்கட்குக் கீழே வந்தவர்களைச் சமமாக நடத்தத்தயாராகவிருக்கவில்லை.

இவை காரணமாக ஒரு தேக்கம் ஏற்பட்டது உண்மையே. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சாதியொழிப்பிற்கு உதவுவதாக அமையவில்லை. முரணிலையாக அதன் 'இருப்பை', தொடர்ச்சியை அது வலியுறுத்துகிறது.

இந்த வரலாற்றுப் பொறிக்குள் நாம் சிக்கிக் கொள்கிற பொழுது விடுபடுவது என்பது மிகுந்த நிதானத்துடன் மேற்கொள்ளப்படவேண்டிய ஒன்றாகிறது (Thesis, antithesis ஆக மாறுவதற்கு இது ஒரு நல்ல உதாரணம்). இவ்வாறு நோக்கும் பொழுதுதான் காலனித்துவத்தின் தாக்கம் பற்றி நாம் போதுமான தமிழ்நிலை ஆய்வுகள் மேற்கொண்டு விட்டோமா எனும் வினா மேலெழும்புகின்றது. காலனித்துவம் இந்தச் சமூக முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக்கொண்டது என்பது பற்றிய ஒரு தெளிவும் அவசியம், இக்கட்டுரை வரலாற்றுப் போக்கினைச் மிகச்சிறிய அளவிற் பார்க்க முனைகிறது. புதிய நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியல் சமூகச் சிந்தனை உணர்வுகள் எவ்வாறு செல்லும் என்பதற்கான ஓர் இலங்கியல் உதாரணமாக இக்கட்டுரைப் பொருள் அமைகிறது.

இதனை எழுதுபொழுது எனது ஆள்நிலை (personal) விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலேயே நிற்பதாக நான் கருதும் வரலாற்றின் தர்க்கத்திற்கு இங்கு முதலிடம் கொடுத்துள்ளேன். இந்தக் கட்டுரையில் கூறப்படுவன விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டை இன்று எதிர்நோக்குகின்ற இந்த, மேற்செலவைத் தடுக்கும், கருத்துநிலைத் தடைப்பாட்டை (ideological impasse) உடைப்பதற்கான ஒரு மனந்திறந்த புலமைக் கருத்தாடல் நடத்தல்வேண்டும். அதைச் செய்வதற்கான புலமை எதுவும் வளமும் தமிழ்நாட்டில் இன்று நிச்சயமாக உண்டு.

தமிழகத்தின் இன்றைய வரலாற்றுக்கட்டம், அத்தகைய ஒரு கருத்தாடலைக் கோரி நிற்கின்றது.

சமூக சக்தியாகத் தொடங்கி, அரசியல் சக்தியாக மாறியுள்ள திராவிடக் கருத்துநிலைக்கான வரலாற்றுத் தேவை இன்று உண்டா; உண்டெனின் அது எவ்வாறு பரிணமிக்கின்றது என்பது சுவாரசியமான வினாவாகும்.

திராவிட இயக்க வளர்ச்சியைத் தமிழ்நாட்டுப் புலமையாளர் மிக நுண்ணிதாக ஆராயத் தொடங்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில், திராவிடக் கருத்துநிலையின் வகிபாகத்தை (role) மிக ஆழமாக ஆராயவேண்டிய தேவை அவசியமாகிறது, திராவிடக் கருத்துநிலை தனது வரலாற்றுப் பணியை நிறைவேற்றிவிட்டதா என்பது ஒரு முக்கிய வினாவாகும்.

இந்தக் கருத்தாடலில், மார்க்சியப் பகுப்பாய்வாளர்கள், தமிழகச் சமூக உருவாக்கம் (social formation) பற்றிய தீட்சண்ணியம் நிறைந்த ஆய்வுகளால் இக்கருத்தாடலுக்கு நிறைய உதவலாம்.

இக்கட்டுரைக்கான நன்றிக் கடப்பாட்டில் இரண்டு நிலைகளுக்குரிய நன்றிக் கடன்கள் உள்ளன. முதலில் இது 1997 இல் எழுதப்பட்டபொழுது ஏற்பட்டவை. திராவிட அரசியற் போக்குகளைச் சில புதிய கண்ணோட்டத்தில் பார்க்குத் தராக்கி டி.சிவராம் இந்தக் கட்டுரைப் பொருள்பற்றி விரிவாக விவாதித்து உதவினார். நண்பர் தெ. மதுசூதனனுடைய உதவி மறக்க முடியாதது. செ.யோகராசா சில முக்கிய நூல்களைத் தந்து உதவினார். மாநாட்டு மட்டத்தில் நண்பர் அ.மார்க்சினுடைய குறிப்புரைகள் பெரிதும் உதவின. சென்னையில் இதுபற்றி அப்பொழுது விவாதித்துதவியவர்கள் தோழர் சி.மகேந்திரன், வீ.அரசு ஆகியோர்.

இரண்டாவது கட்டம் இப்பொழுதுள்ளதாகும். இது 'ஆராய்ச்சி' சஞ்சிகைக்கான கட்டுரையாகவும் தனிச் சிறு நூலாகவும் வெளிவருகின்ற இந்தக் கட்டமாகும். மாநாட்டுக்கான கட்டுரை வரைவினைத் தமது உன்னிப்பான விமர்சனங்களை வைத்து விளங்க எடுத்துக்கூறி உதவினார் டாக்டர் மே.து. ராசுகுமார்; அவருக்கு எனது நன்றி. இவ்விடயம் தொடர்பான கருத்தாடல் நடத்தியுதவியவர் முனைவர் தெயவசுந்தரம்; இப்பொழுது இதனைத் திருத்துவதற்கான அலுவல்களில் உதவியுள்ளவர் கி.பார்த்திபராஜா; இவர்களுக்கு எனது நன்றி உரித்து.

கார்த்திகேசு சிவத்தம்பி

பல்கலைக்கழக விருந்தினர் விடுதி
மெரினா சென்னை 600 005
17.09.1999

+++++++++++++++

திராவிட இயக்கக் கருத்துநிலையின்
இன்றைய பொருத்தப்பாடு
-ஒரு வரலாற்று நோக்கு


'கருத்துநிலையின் பிரச்சினை', அது ஒரு பௌதீகக் கொள்கை அமைப்புக்குள் நின்றுகொண்டு, சமூகக் கருத்துக்கள் எவ்வாறு எழுகின்றன என்பது பற்றி ஒரு விளக்கம் தரவேண்டும் என்பதாகும். ஒரு குறிப்பிட்ட சமூக உருவாக்கத்தில் இவற்றின் (சமூகக் கருத்துக்களின்) வகிபாகம் யாது என்பதை நாம் விளங்கிக்கொள்ளல்வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தை மாற்றுவதற்கு எவ்வாறு போராடவேண்டுமென்பதைத் தெரிவித்து, சமூகத்தின் சமதர்ம மாற்றத்துக்கான பாதைகளைத் திறந்துவிடலாம். 'கருத்துநிலை' (ideology) என்பதன் மூலம் நான் கருதுவது, பல்வேறு வர்க்கங்களும் சமூகக் குழுமங்களும், சமூகமானது எவ்வாறு இயங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அந்த இயங்குமுறையின் தன்மையை அறிந்துகொள்வதற்கும், வரைவிலக்கணம், கொடுப்பதற்கும் தெளிவாக விளக்குவதற்கும் பயன்படுத்தும் மனக் கட்டமைப்புக்களையேயாகும்-அதாவது அது பயன்படுத்தும் மொழிகள், எண்ணங்களுக்கான வகைபாடுகள் சிந்தனைப்படிமங்கள், சித்திரிப்பு முறைகள் ஆகியவை கருத்துநிலையாகும்.

எனவே கருத்துநிலை பற்றிய பிரச்சினை என்பது, பல்வேறு கருத்துக்கள் எவ்வாறு மக்கள் திரள்களின் மனங்களை இறுகப்பற்றி, அதன் காரணமாக, ஒரு 'பிண்டப் பிரமாணமான சக்தியாக' அமைகின்றது என்பதேயாகும். பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இந்தப் பார்வைப்பரப்பில், கருத்துநிலை பற்றிய கொள்கை (theory) என்பது, கிராம்ஸ்சி கொள்வதுபோன்று, எவ்வாறு சில கருத்துத் தொடைகள் (sets of ideas), ஒரு வரலாற்றுக் குழுமத்தின் சிந்தனை மீது மேலாதிக்கம் செலுத்துகின்றன என்பதாகும்; அவ்வாறு செய்யும்பொழுது, அது, அந்தக் குழுமத்தை அதனுள்ளேயே நின்று அதனை ஒற்றுமைப்படுத்தி, முழுச் சமூகத்தின் மீதும் அதற்குள்ள அதன் மேலாண்மையையும் தலைமையையும் பேணுவதற்கு உதவுகின்றது என்பதை அறிந்து கொள்வதாகும். கருத்துநிலை என்பது, ஒரு குறிப்பிட்ட வகை அதிகாரத்தையும் மேலாண்மையையும் பேணுவதற்கான நடைமுறைநிலை, எண்ணக்கருக்கள் அவற்றுக்கான மொழிகள் சம்பந்தப்பட்டதாகும். அல்லது, குறிப்பிட்ட ஒரு சமூக உருவாக்கத்துக்குள், மக்களிற் பெருந்தொகையினரை, அவர்கள் தம் கீழ்நிலையை மன இசைவுடன் ஏற்றுக்கொள்வதற்கும், ஏற்று அதனுள் வாழ்வதற்கும் வேண்டிய எண்ணக்கருக்கள் முதலியன பற்றியதாகும். அது மாத்திரமல்லாது கருத்துநிலை என்பது, நடப்பு நிலையிலுள்ள முறைமைக்கெதிராக வரலாற்று முக்கியத்துவமுள்ள செயற்பாடுகளில் ஈடுபட மக்கள் திரளை ஊக்குவிக்கும், புதிய பிரக்ஞை வடிவங்கள், உலகம் பற்றிய புதிய எண்ணக்கருக்கள் தோன்றுகின்ற நடைமுறைகள் பற்றியதுமாகும். சமூகப் போராட்டத்தின்பொழுது இந்த விடயங்களே விவாதங்களுக்குள்ளானவையாக அமைகின்றன. இவற்றை விளக்குவதற்கு, இவற்றை நன்கு புரிந்துகொள்வதற்கும், இந்தக் கருத்துநிலைப் போராட்டத்தின் களங்களை விளக்கி அவற்றை வசப்படுத்துவதற்கும் எமக்கு ஒரு கொள்கை தேவைப்படுகிறது.

அது வெறுமனே ஒரு கொள்கையாகவல்லாது, நாம் விளக்கவிருக்கும் சிக்கற்பாடுகள் எல்லாவற்றுக்கும் போதுமானதான ஒரு கொள்கையாக இருத்தல்வேண்டும்.*

-- ஸ்ருவாற் ஹோல்

1

திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி நோக்க முனையும் நம்முன் உள்ள வினாக்கள் தெட்டத் தெளிவானவை:

--இக் கருத்துநிலை எவ்வாறு தோன்றுகிறது?

--அது எவ்வெவ் அமிசங்களைக் கொண்டுள்ளது?

-------

* Stuart Hall. 'The Problem of Ideology: Marxism without Guarantees', Critical Dialogues in Cultural Studies, David Morlay Kuang Hsing Chan, London, 1996.

....

--இது எவ்வாறு மக்கள் திரளின் மனங்களைக் கவ்விப் பிடித்து ஒரு பிண்டப் பிரமாணமான (நிஜமான) சக்தியாக அமைகின்றது; அமைந்துள்ளது?

என்பனவே அவை.

2

இந்த விஷயங்களைப் பற்றிய ஆய்வுக்கு இறக்குவதற்கு முன்னர், தமிழ்நாட்டின் முக்கியமான அண்மைக் காலத்துப் புலமை வளர்ச்சியொன்றினைப் பதிவு செய்தல் அவசியமாகும்.

திராவிட இயக்கம் பற்றி 1984 இல் நான் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில்

திராவிட இயக்கம் பற்றிய செயற்பாடுகளுக்குத் தளமாக எந்த மொழி அமைகின்றதோ அந்த மொழியில்--தமிழில்--இது சம்பந்தமாக விமர்சனபூர்வமான ஆய்வு எதுவும் இதுவரை வெளிவராதது துரதிர்ஷ்டவசமானது ஆகும்.

என்று குறிப்பிட்டிருந்தேன்.* ஆனால் இப்பொழுதோ, குறிப்பாக 1990 முதல் ஏற்பட்டுள்ள ஒரு புலமை முன்னேற்றம் காரணமாக இன்று இரண்டு முக்கிய வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன:

1 திராவிட இயக்கம், கருத்துநிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கங்கள், விளைவுகள் பற்றிய விமர்சனபூர்வமான தமிழ் ஆய்வெழுத்துக்கள்;

2 திராவிட இயக்கத்தின், நோக்கம், செயற்பாடு, முனைப்பு ஆகியன பற்றிய தமிழ்நிலைநிற்கும் ஒரு நோக்கினை வெளிப்படுத்துகின்ற தமிழர்களாகிய புலமையாளர்களின் ஆங்கில எழுத்துக்கள்.

முதலில் கூறப்பட்டுள்ள செல்நெறிக்கு உதாரணம் நிறப்பிரிகைக் குழுவினர் ஆற்றியுள்ள பணி. பெரியாரியம் பற்றிய விவாதத்தை ஒரு புதிய தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளமை முக்கியமான ஒரு விஷயமாகும். ஆய்வாளர்கள், விமர்சகர்கள் எனத் தனிப்பட நோக்கும்பொழுது, நிறப்பிரிகைக் குழுவினரும்

----

* K. Sivathamby, Understanding the Dravidian Movement--Problems and Perspectives, Chennai, 1995.

.....

வேறு சிலரும் முக்கியமாகின்றனர். கோ. சேவகன், கருணா மனோகரன், அ. மார்க்ஸ், பொ. வேலுசாமி, ராஜ் கௌதமன் என இந்தப் பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் ஒரே கருத்தினை உடையவர்கள் அல்லர். ஆனால் திராவிடக் கருத்துநிலை பற்றிய கருத்தாடலில் (discourse) இவர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். இந்தப் பட்டியலில் எஸ்.வி. ராஜதுரை, வி. கீதா (பெரியார் 1996) ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

திராவிடக் கருத்து நிலை, இயக்கம் பற்றிய வரலாறெழுதியலில் தமிழ் நிலைப்பட்ட கண்ணோட்டத்தை நிலை நிறுத்தி, இதுவரை இது பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் சிலவற்றின் கருத்துநிலை எடுகோள்கள் ஆகியனவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, இந்த விவாதத்திற்கு இது சம்பந்தப்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளரிடையே தமது வருகையையும் இருக்கையையும் வன்மையாகப் பதிவு செய்துகொண்டவர்களாக, எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆ. இரா. வெங்கடாசலபதி, எஸ். ஆனந்தி ஆகியோரைக் குறிப்பிடல் வேண்டும். எஸ்.வி. இராஜதுரையும் வி. கீதாவும், ஆங்கிலத்தில் இக்காலப் பகுதியில் எழுதியுள்ளனர். இந்த எழுத்துக்கள் காரணமாக, இக்கண்ணோட்டத்தில் தொண்ணூறுகளுக்கு முன்னர் நம்பியாரூரன் மங்கள முருகேசன், ஈ.சா. விஸ்வநாதன் ஆகியோரின் ஆய்வுகள் மீள நினைவுகூரப்படுகின்றன.

இந்தப் புலமைப் பங்களிப்புக்கள், திராவிட இயக்கம் பற்றியும் பெரியார் ஈவெரா அவர்களின் கொள்கைகள் பற்றியும் செய்யப்படும் ஒரு முக்கியமான சமூக-அரசியல்வாத விவாதத்தினூடேயே வந்துள்ளன. இவ்விவாதம் தமிழகத்தின் இனம், சமூக அறிவியல் ஆய்வாளர்களிடையே ஒரு புதிய முனைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாட்டினது வரலாற்றின் இதுவரை தெரியப்படாத பகுதிகள் ஆய்வு ஒளிவீச்சுகளுக்கு ஆட்படுகின்றன.

இந்தக் கருத்தரங்கினைக்கூட இந்தப் புலமையார்வத்தின் ஒரு வெளிப்பாடு ஆகவே கொள்ளவேண்டும்.

3

திராவிடக் கருத்துநிலையின் பொருத்தப்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் பொழுது, தொடக்கத்தில் திராவிடக் கருத்துநிலை என்பது யாது, அது எதனை அல்லது எவற்றைச் சுட்டி நிற்கின்றது என்பதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் அவசியம்.

தமிழ்நாட்டில் வாழும் பிராமணரல்லாத சாதிக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் சமூக நிலைமையையும் தங்கள் சமூக அசைவியக்கத்தையும் வரையறை செய்த 'பிராமணக் கருத்து நிலை' தம்மீது திணித்ததென அவர்கள் கண்ட, கொண்ட மேலாண்மைக்கெதிராக நடத்திய போராட்டங்களினூடே மேற்கிளம்பியதும், அந்தப் போராட்டங்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதுமான சிந்தனை நிலைப்பாடே, 'திராவிடக் கருத்துநிலை'யாகும்; அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் 'தமிழ்ப் பிரக்ஞை' ஏற்படுவதற்கு இது தளமாக அமைந்து வந்துள்ளது. இது, மதம் சமூக நடத்தை முறை பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தினை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது (அந்தக் கண்ணோட்டத்தின் பிரதான எண்ணக்கருக்கள் 'நாத்திகம், பகுதித்தறிவுவாதம், சுயமரியாதை' என்பனவாகும்; இது 'ஆரிய'த்தைப் 'பிராம­யமாக நோக்குவதுடன், 'திராவிடம்' என்பது 'பிராம­யம்' என்று கொள்ளப்படுவதன் எதிர்நிலையாகக் கொள்ளப்படுவதாகும். இது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வடிவம் பெற்றது. அத்துடன், இந்திய வரலாறு, பண்பாடு பற்றிய காலனித்துவ வாசிப்புக்களினால் உந்துதல் பெற்றதும் உண்மையாகும். (சிவத்தம்பி 1979).

இந்தச் சொற்பிரயோகத்துக்கு, ஆங்கில ஆட்சி, தென்னிந்திய நிர்வாகத்துக்கெனத் தோற்றுவித்த சென்னை மாநிலம் (Madras Presidency) என்ற அலகினது சனத்தொகையமைப்பினுள் ஒரு நியாயப்பாடு இருந்தது. அந்தச் சென்னை மாநிலம் உள்ளடக்கியிருந்த கன்னடப்பிரதேசம், ஆந்திரா (தெலுங்கானா நீங்கலாக), தமிழ்நாடு, (சமஸ்தானங்கள் தவிர்த்த) கேரளம் ஆகிய பிரதேசங்களை இணைப்பதற்கு, அவற்றினூடே ஓர் ஒருமைப்பாட்டைக் காண்பதற்கு, அக்காலத்திற் 'கண்டு பிடிக்கப் பெற்ற', 'திராவிடர்' என்ற மொழி நிலைக் கருதுகோள் உதவிற்று (சிவத்தம்பி 1995). இந்திய வரலாறெழுதியலில் இந்தத் தொடர், தென்னித்தியாவின் பிரிநிலைத் தன்மையையும் தமிழரின் தனித்துவத்தையும் குறிப்பாகக் கொள்ளப்பட்டது. 'திராவிடம்' என்பது 'ஆரிய'த்தின் எதிர்நிலையாகக் கொள்ளப்பட்டது.

இந்தச் சொற்பிரயோகத்துக்கான ஒரு வன்மையான தேவையுமுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் சகல சமூகக்குழுமங்களையும் 'தமிழர்' என்ற தொடராலே சுட்டிவிட முடியாது. தெலுங்கு பேசும் சில குழுமங்களும் (ரெட்டியார், நாயுடு முதலியோர்) கன்னடம் பேசும் சில குழுமங்களும் (நாயக்கர் முதலியோர்) இந்தப் பதக்குடையின் கீழ் வரமாட்டார்கள். அத்துடன் 'தமிழர்' என்னும் சொல், தமிழ்ப் பிராமணர்களையும் உள்ளடக்கிவிடும். இதனால் திராவிடர் என்ற பதப்பிரயோகம் அவசியமாகிறது என்று கருதப்படுகிறது.

மேலும் இந்தச் சொற்பிரயோகம், கடந்த காலத்து வரலாற்று நினைவுகளைத் தரும் ஒன்றாகவும் பயன்படுகிறது. இந்தியாவின் ஆரிய வருகைக்கு முற்பட்ட திராவிட வரலாற்றுப் புகழை மீட்பதற்கும் (சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றம் பற்றிய சில கொள்கைகள்) தமிழ்நாட்டில், ஆரியச் செல்வாக்குக்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் நாகரிகத்தைச் சுட்டவும் (சங்க காலம்) இந்தப் பதம் வாய்ப்பான ஒன்றாக அமைகின்றது. மாக்ஸ் முல்லர் வழிவந்த இந்தோ-ஆரிய மேன்மைக் கோட்பாட்டின் எதிர்நிலையாக இது வழங்கி வருகின்றது.

குறிப்பாக மொழியியல் ஆய்வில் இது ஒரு வரலாற்று நிதர்சனமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் வழங்கும் இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து (சமஸ்கிருதம், அதன் வழிவருவன) வேறபட்ட மொழியமைப்பைக் கொண்ட அடுத்த பிரதான மொழிக் குடும்பம் 'திராவிடமே' ஆகும். அண்மைக்கால மொழியியல் ஆராய்ச்சிகளில் திராவிட மொழியியல், இந்திய மொழியியல் துறையில் முக்கிய இடம் பெறுவதாகும்.

இவற்றைவிட 'திராவிடர்', 'திராவிடக் கருத்து நிலை என்ற இந்தப் பதப்பிரயோகங்கள், இன்று, அதாவது சமகாலத் தமிழ்நாட்டுச் சமூகப் பார்வையில், பெரியார் ஈவெராவினால் நடத்தப்பெற்ற சுயமரியாதை இயக்கத்தினை நினைவுறுத்துவனவாக அமைகின்றன. இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் மெய்யியல் எடுகோள்கள் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய பகுத்தறிவுவாதத்தின் (Atheism) அடியாக வந்தனவாகும். இங்கர்சால் என்ற அமெரிக்கச் சிந்தனையாளரின் எண்ணங்கள் இதிற் பெரும்பங்கு வகிக்கின்றன. சென்னையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில் நிறுவப்பட்ட பிரம்மஞான இயக்கம் (Theosophical Movement) சம்பந்தப்பட்டவர்கள் இங்கர்சால் பற்றிச் சிரத்தை கொண்டிருந்தனர் என்பதற்கான சில வரலாற்றாதாரங்கள் உள்ளன (ஹார்வாட் பல்கலைக்கழக இறையியல் துறை நூலகத்திலுள்ள பிரசுரிக்கப்படாத அமெரிக்க மிஷன் ஆவணங்கள்).

'திராவிடம்' என்ற இத்தொடர் இந்தியச் சுதந்திர காலத்துக்கு முன்னரிருந்து கையளிக்கப்பட்ட ஒரு சிந்தனை மரபின் பெறுபேறாக அமைகின்றது என்பது இதுவரை கூறியவற்றினாலே புலனாகின்றது. சுதந்திர காலம் முதல் இத்தொடர் வன்மையான அரசியல் கட்சிநிலைப் பதமாகவும் தொழிற்படுகிறது. 1949 முதல் இன்று வரையுள்ள சென்னை/தமிழ் நாட்டு மாநில ஆட்சி 'திராவிட' என்ற அடையைக் கொண்ட கட்சிகளால் நடத்தப்படுவதையும், அக்கட்சிகளுக்குள்ளே பிளவுகள் ஏற்படும்பொழுதுங்கூட 'திராவிட' என்ற அடை தொடர்ந்து பேணப்படுவதையும் (திமுக, அதிமுக, மதிமுக முதலியன) நோக்கும்பொழுதும் இப்பதம் ஒரு அரசியற் குறியீடு ஆகியுள்ளது என்பது புலனாகின்றது. அரசியற் பலத்தை நாடாத, ஆனால் தமிழகத்தின் பிரதான அமுக்கக்குழுக்களில் (Pressure groups) ஒன்றாக விளங்கும் திராவிடர் கழகமும் (பெரியாரின் உத்தியோக பூர்வவாரிசாகத் தன்னைச் சுட்டிக் கொள்வது) அந்தப் பிரயோகத்தையே பயன்படுத்துவது நோக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

4

'திராவிட' என்னும் அடையின் இன்றைய அர்த்த விகசிப்புக்களை நோக்கிய நாம் அடுத்து , இத்தொடர் சுட்டும் கருத்து நிலையின் இன்றைய (சமகால) பொருத்தப்பாட்டை நோக்கத் தொடங்கல்வேண்டும்.

அவ்வாறு நோக்க முனையும்பொழுது மூன்று முக்கிய விடயங்கள் ஆராயப்படவேண்டியனவாகின்றன:

1 திராவிட இயக்கம்/கருத்துநிலை பெற்றிருந்த வரலாற்று வகிபாகம்--அதாவது வரலாற்று நோக்கில் அது ஆற்றியுள்ளவை;

2 அனைத்திந்திய மட்டத்தில் இன்று காணப்படும் அரசியல் நிலைமை;

3 ஏக வல்லரசாண்மை கொண்ட பூகோளக் கிராமத்திலும், சர்வதேசியச் சந்தை முதலாளித்துவம் உலக ஆண்மை செலுத்தும் நிலையிலும், தமிழ்ப் பிரக்ஞை/தமிழ்த் தேசியம் பெறும் இடம்.

இந்த மூன்று அமிசங்களும் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியனவாகும். இந்த அளிக்கை, இந்தக் கருத்தரங்கின் தொடக்க உரையாக அமைவதால்,இப்பிரச்சினைகளின் முகப்புக் குறிப்புக்களாகச் சிலவற்றைக் கூறிச் செல்வதே பொருத்தமானதெனக் கருதுகிறேன்.

5

முதலில் திராவிட இயக்கம், தென்னிந்திய, தமிழ் நாட்டு வரலாற்றிற் பெறும் இடத்தினை நோக்குவோம்.

அவ்வாறு நோக்கும்பொழுது, முதன்முதலில் நமது கவனத்தைக் கவருவது, இந்த இயக்கத்தினது தோற்றம் வளர்ச்சியும், அந்த வரலாற்றினூடே தெரியக் கிடக்கும் இதன் நிலைப் பெயர்வுகளுமாகும் (Shifts). இந்த நிலைப்பெயர்வுகள் இக்கருத்துநிலையின் தன்மையிலும், அது ஆதரவாளர்களாலும் எதிரிகளாலும் புலப்பதிவு செய்யப்பட்ட முறைமையிலும் பல கருத்து நெகிழ்ச்சிகளை/அழுத்த வேறுபாடுகளை ஏற்படுத்தின.

இதன் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தொடங்குகின்றது எனும் வரலாறு இப்பொழுது ஓரளவுக்கு நன்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது (சுந்தரலிங்கம் 1980, இர்ஷ’க் 1969, பாண்டியன் 1995).

ஆங்கில ஆட்சியமைப்பின் குடியியல் எடுகோள்கள் இந்திய அதிகாரப் படிமுறைச் சமூகத்தின் சில எடுகோள்களை (பிறப்பால் உயர்வு-தாழ்வு) நிராகரித்ததெனினும், அதன் உள்ளூர் நிர்வாகம் அமைந்த முறைமையில் அந்த அதிகாரப்படிமுறை அரசு சேவையிலுள்ள பிராமண மேலாண்மை மூலமாகப் புதிதாக நிலைநிறத்தப்படுவது கண்டு, ஆங்கில ஆட்சி வழங்கிய சில சமத்துவ நடவடிக்கைகளினாலே மேலே நோக்கிப் புடை பெயர்ந்துகொண்டிருந்த குழுமங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் சமூகக் குறைபாடுகளை முன்வைக்கத் தொடங்குகின்றனர். இது ஆரம்பத்தில் அடிநிலைச் சமூகங்களின் சுய பிரக்ஞைப் போக்குக்களிலே காணப்படுகிறது. மிராசுதார் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயக் கூலிகளைக் குறிக்க முதன் முதலில் 'ஆதி திராவிடர்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டமையை இர்ஷ’க் (1995) குறிப்பிடுகிறார். எம்.சி.ராஜாவின் பறையர் மகாஜன சபையின் எழுச்சியும் இதனோடு தொடர்புடையதே.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னையை மையமாகக் கொண்டியங்கிய பிராமணரல்லாத, உயர் சாதிகள் என்று கருதப்படும் குழுமங்களைச் சேர்ந்தவர்கள் (தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள்) சிலர் 1916 இல் பிராமணரல்லாதார் விஞ்ஞாபனத்'தை (The non-Brahmin Manifesto) முன்வைக்கின்றனர். இக்குழுமம் தன்னைத் தென்னிந்தியத் தாராண்மைவாதக் கூட்டுக்குழு (The south Indian Liberal Fedeartion) என்று கூறிக்கொண்டது. இதுதான் பின்னர், அதன் ஆங்கிலப் பத்திரிகையின் பெயர் காரணமாக ஜஸ்டிஸ் கட்சி (Justice Party) எனப்பட்டது.

பிராமணர்களல்லாத, படித்தவர்களுக்கு உரிய அளவு உத்தியோகங்கள் கொடுபடவேண்டும் என்பதே இவர்களின் பிரதான வாதமாகும். இவர்கள் பிராமணர்களைச் சமய ரீதியாக எதிர்க்கவில்லை. மதச்சடங்குகளில் பிராமணருக்குள்ள முதன்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், இதே வேளையில் தமிழ் நாட்டில் தோன்றிய இன்னொரு சமூக இயக்கம், ஜஸ்டிஸ் கட்சியின் சமூகக் கோரிக்கைகளை ஆதரித்த அதே வேளையில், பிராமணர்களின் மத-பண்பாட்டு மேலாண்மையை நிராகரித்துச் சைவ வேளாள முதன்மையை வற்புறுத்தியது (சிவத்தம்பி 1979). இது பிராமணரின் மொழி-பண்பாட்டு மேலாண்மைக்கெதிராகத் தனித் தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தது.

ஜஸ்டிஸ் கட்சியும் தனித் தமிழியக்கத்தின் தந்தை மறைமலையடிகளும் ஆங்கில ஆட்சியை எதிர்த்தவர்களல்லர். ஆனால் இவர்களிடையே நிறுவன ரீதியான ஒருமைப்பாடு இருக்கவில்லை என்பது உண்மையே. ஆனால், திராவிடக் கருத்துநிலையின் ஒரு முக்கிய எடுகோளான ஆரிய மேன்மை நிராகரிப்பினைத் தனித் தமிழியக்கம் மிக வன்மையாக முன் வைத்தது. சைவ-வேளாளர் நிலை தமிழர் நாகரிகத்தின் ஆணிவேர் என்று எடுத்துக்கூறப்பட்டது.

ஜஸ்டிஸ் கட்சியின் கோரிக்கைகள் அதிகாரப் பகிர்வு, உத்தியோக வாய்ப்புக்கள் நிலைப்பட்டனவாகக் காணப்பட, சைவ வேளாள இயக்கமோ பிராமண எதிர்ப்புக்கு ஒரு பண்பாட்டுப் பரிமாணத்தை வழங்கிற்று.

தேசிய அரசியற் கோக்குக்கள் காரணமாகச் சென்னையில், ஜஸ்டிஸ் கட்சியினர் இரு தடவைகள் மந்திரிசபை அமைக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. அவ்வேளையில், ஜஸ்டிஸ் கட்சியில் இருந்த தமிழ்-தெலுங்கு முரண்பாடுகளும் நிலவுடைமை வணிக முரண்பாடுகளும் முனைப்பாகத் தெரியவந்தன. ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாரித் தொழில் வாய்ப்புச் சட்டத்தை அமுல் செய்தது (கேசவன்).

இந்தக் காலத்தில் (1920-37) ஈவெரா (பெரியார்), தமது சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பிக்கின்றார் (1925). இது திராவிட இயக்கத்துக்கு அதுவரை இல்லாத முற்றிலும் புதிய ஒரு பரிமாணத்தைக் கொடுத்தது.

சுயமரியாதை இயக்கம், பிராமணியத்தைச் சமூக நடவடிக்கை மட்டத்தில் எதிர்க்கும் žர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் அடிப்படையாக நாத்திகம், பகுத்தறிவுவாதம் என்பன அமைந்தன. இது மதத்தை முற்றிலும் நிராகரித்தது. இதன் காரணமாக சைவ-வேளாளப் பண்பாட்டு மேலாண்மைவாதம் பேசிய மறைமலையடிகளுக்கும் பெரியார் ஈவெராவுக்குமிடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின.

சுயமரியாதை இயக்கத்தின் மேலோங்குகையுடன், தனித் தமிழ்வாதம் முன் வைத்த சில கருத்துநிலை எடுகோள்கள் (பிராமணர்களில்லாத சைவ மதப்பயில்வு, மொழித் தூய்மை பேசதல்) நேரடியாகவும் மறைமுகமாகவும் நிராகரிக்கப்பட்டன. தமிழைச் சமயச் சார்பற்ற போக்குடையதாக்க வேண்டுமென்ற போக்கு மேலெழும்பத் தொடங்கிற்று.

சைவ வேளாளவாதம், சுயமரியாதைவாதம் ஆகியவற்றுள்ளே காணப்பட்ட கருத்துநிலை மோதல்களைத் தொடர்ந்து, திராவிட இயக்கக் கருத்துநிலை வரலாற்றின் அடுத்த கட்ட நிலைப்பெயர்வாக வருவது, 1944 இல் பெரியாரின் த€லைமையின் கீழ் தோற்றுவிக்கப்பெற்ற திராவிடர் கழகமாகும். இது ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் மேலாண்மையின் கீழ் வருவதைச் சுட்டுகிறது. இந்த இயைபின் பொழுதே 'திராவிட நாடு' என்பது உத்தியோகபூர்வக் கோரிக்கையாக முன்னுரைக்கப்படுகின்றது. ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து திராவிடர் கழகம் தோன்றிய வரலாற்றுக்குள், வர்க்கப் போராட்டக் குணாம்சங்கள் பல துல்லியமாகத் தெரிந்தன. சமீன்தார்கள், பெருநிலவுடைமையாளர்களுக்கும் புதிதாகச் சமூக அசைவியக்கம் பெற்று மேலுக்கு வரும் ஒரு மத்தியதர வர்க்கத்தினருக்குமிடையே ஒரு முரண்பாடாகவும் இதனை நோக்குதல் வேண்டும். மேலும் திராவிடர் கழகம், குறிப்பாக அண்ணாதுரையின் செயற்பாடு காரணமாகத் தன்னை ஒர் அகண்ட வெகுசன நிறுவனமாக ஆக்க முனைந்தது.

திராவிடர் இயக்கத்தில் அடுத்து ஏற்படும் நிலைப்பெயர்வு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றத்தால் (1949) ஏற்படுகிறது. இக்கட்டத்தில்தான் இது தமிழ்த் தேசியப் பிரக்ஞையை முற்று முழுதாகக் கொண்டு மேற்கிளம்புகின்றது என்பது தெரிகின்றது. இக்கட்டத்தில் சில முக்கியத் தளமாற்றப் போக்குக்கள் காணப்படுகின்றன:

(அ) தேர்தல் அரசியலில் பங்கு கொள்வது என்றதீர்மானம் (1956);

(ஆ) நாத்திக நிலையிலிருந்து விடுபடுகை (ஒன்றே குலம் ஒருவனே தேவன்);

(இ) திராவிட நாட்டுக் கோரிக்கை கைவிடப்படல் (1963).

இவை யாவற்றுக்கும் மேலாகப் பெரியாருடன் ஏற்பட்ட பிளவு மிக முக்கியமானதாகும். இந்தப் பிளவு திராவிடக் கருத்துநிலை முனைப்பில் முக்கியமான ஒரு பலவீனத்தையே தோற்றுவித்தது எனலாம்.

இந்த நிலைப்பெயர்வு நடைபெறும் காலகட்டம் முக்கியமானதாகும். இந்தியா சுதந்திரமடைந்து அது தனது சுதந்திர கால வளர்ச்சியிலிறங்கும் பொழுது, அனைத்திந்திய மட்டத்திற் காங்கிரசுக்கிருந்த மேலாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதும், முதன் முதலிற் பிரதேசவாதம் முக்கியமுறுவதும் சென்னை மாநிலத்தில் என்று கூறலாம். சுதந்திரப் போராட்ட காலத்தில்,இந்தியத் தேசிய காங்கிரஸ் தமிழ் நாட்டில் நிலவிய பாரம்பரிய சமூக வேறுபாடுகளுக்கும் சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அதிகக் கவனம் செலுத்தாது, அப்பொழுதே இலைமறை காயாகவிருந்த சமூக வேறுபாட்டு நோக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்த வேளையில், காந்தீயத்தின் அடிநிலைச் சுவறல்களையும் புறங்கண்டு, திராவிட இயக்கம், சமூக-பண்பாடு மனக் குறைபாடுகள் கொண்ட சமூகத்தினர்களின் சமூக வெளிப்பாடாக மேற்கிளம்பியது. அவ்வெளிப்பாடு முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டது திமுகவின் தோற்றத்துடனேயே--இது தமிழகத்தின் அரசியற் செல்நெறியில் ஒரு புதிய மாற்றத்தையும் புதிய தலைமைப் பாணிகளையும் புதிய அரசியல் ஆட்சேர்ப்பு--ஒழுங்கமைப்பு முறைமைகளையும் (new forms of recruitment and political mobilisation) ஏற்படுத்திற்று. திமுக அரசியலில் ஒரு புதிய சொற்களஞ்சியத்தைக் கொண்டுவந்தது.

ஆயினும் இந்த நிலைப்பெயர்வு, அரசியல்மயப்பட்டிருந்த அளவுக்கு பொருளாதாரநிலைப்பட்டிருக்கவில்லை. இந்த உண்மை, அதன் அரசியல் அதிகார வரலாற்றுக் காலகட்டத்தில் மிகத்துல்லியமாகத் தெரியத் தொடங்கிற்று. அரசியலதிகாரத்தினைப் பெற்ற நிலையில் தலைமை வேறுபாடுகள் முக்கியமடையத் தொடங்குவதை அவதானிக்கலாம். திடமான அரசியல்-பொருளாதாரச் செயல் நிகழ்ச்சி நோக்கு ஒன்றினை வகுத்துக்கொள்ள முடியாதுபோனமையால், தலைமை, சன விருப்பு முறைமையிற் (Populist) செல்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த மாற்றத்தினை, 1972 இல் ஏற்பட்ட நிலைப்பெயர்விலே காண்கின்றோம்.

அதனைக் குறிப்பிடுவதற்கு முன்னர், திமுகவில் அண்ணாதுரை இருக்கும்பொழுதே ஏற்பட்ட பிளவைக் குறிப்பிடல் வேண்டும். உள்கட்சிப் போராட்டம் காரணமாக, ஈ.வெ.கி. சம்பத் (1961) தமிழ்த் தேசியக் கட்சியைத் தோற்றுவிக்கின்றார்.

இது தலைமை காரணமாக ஏற்பட்ட பிளவே என்பது பின்னர் நடந்தவற்றாலும் மெய்ப்பிக்கப்படுகின்றது. ஆயினும் அரசியலைப் பொறத்தவரையில் திராவிடக் கருத்துநிலை முற்றிலும் தமிழ்நாடு நிலைப்பட்டதே என்ற கருத்தும் இதன் மூலம் மேலும் உறுதியாகின்றது.

எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் தோன்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கருத்துநிலை எடுகோள்களில் சில தளப்பெயர்வுகளை ஏற்படுத்துவதனை அவதானிக்கலாம். முதலாவது, (அரசியல் உத்தித் தேவைகள் காரணமாகச் செய்யப்பட்டதெனினும்) அது தன்னை அனைத்திந்திய என்ற ஒரு பெரிய வட்டத்தினுள் திராவிட இயக்கத்தைக் கொண்டு வந்தமையாகும். மாநில சுயாட்சி பற்றி ஏற்கனவே திமுக எடுத்திருந்த நிலைப்பாட்டிலிருந்து இது வேறுபடத் தொடங்குகிறதென்றே கொள்ள வேண்டும். அத்துடன் திராவிடக் கருத்துநிலையான நாத்திக நிலைப்பாட்டிலும் பெரு வேறுபாடு ஏற்பட்டது.

அஇஅதிமுகவின் தோற்றம் வளர்ச்சியுடன் திராவிட இயக்கம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்கத் தொடங்கியமையை மனத்திருத்தல் அவசியம். பெரியார் (1879-1973) தலைமை தாங்கி அவர் பின் மணியம்மை, வீரமணியின் தலைமைக்குச் சென்ற திராவிடர் கழகம், கருணாநிதி தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தலைமையில் இயங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமெனத் திராவிட இயக்கம் முக்கியமான மூன்று பிரிவுகளாகக் காணப்பட்டது. இந்தப் பிளவு நிலை காரணமாக, திராவிடக் கருத்துநிலையின் ஒருமைப்பாட்டிற் பலத்த உடைவு ஏற்பட்டது என்பதைக் கவனத்திற் கொள்ளுதல் அவசியமாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது எம்ஜிஆரின் மறைவின்பொழுது ஏற்பட்ட தலைமைப் போட்டி இந்த மாற்றங்களைக் குறிப்பிட்டுச் செல்கின்றது. எம்ஜிஆர் இறந்ததும், அஇஅதிமுகவின் தலைமைக்கு பிராமணப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

எம்ஜிஆரின் அரசியல் மேலாண்மை, திராவிட இயக்கப் போக்கில் பல மாற்றங்களை ஏற்படுத்திற்று. அரசியல்மயப்படத்தப்பட்ட திராவிட இயக்க மட்டத்தில், திராவிடக் கருத்து நிலையின் மைய அமிசங்கள் பல (நாத்திகம், தமிழ் மேன்மை வாதம் ஆகியன) கைவிடப்பெற்றன. வகுப்புவாரிப் பதவி ஒதுக்கீட்டில், கூடிய விகிதாசார ஒதுக்கலும் பாடசாலைக் குழந்தைகளுக்கான சத்துணவுத்திட்டமும் முக்கிய சமூகத்தாக்கங்களை ஏற்படுத்தினவெனினும், திராவிடக் கருத்து நிலையின் சமூக-மத நோக்குத் தனித்துவம் சிதையத் தொடங்கிற்று.

திராவிட இயக்கத்தின் மிக அண்மையில் ஏற்பட்ட 'பெயர்வு' மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றமாகும் (1993). திராவிட முன்னேற்றக் கழகத்தின் தமிழ்த் தேசியநிலைபாடுகளின் போதாமையே இதன் தோற்றத்துக்கான காரணம் என்று கருத்துநிலைபடக் கூறப்பட்டது.

திராவிட இயக்கக் கருத்துநிலையில் ஏற்பட்ட இந்த அத்தியோகபூர்வ நிலைப்பெயர்வுகளை நோக்கும்பொழுது,திராவிடக் கருத்துநிலையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கப்பட்டுள்ளது என்பது நன்கு தெரிகின்றது. அதே வேளையில் திராவிட இயக்கம், அரசியல் ரீதியாக முதன்மைப்படுத்துகின்ற தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசியவாதம் என்பன திராவிட அடையற்ற பிற கட்சிகள்--குறிப்பாகப் பாட்டாளி மக்கள் கட்சி--மேற்கொண்டுள்ளன என்பதும் தெரிகிறது.

காய்தல் உவத்தலற்று நோக்கும்பொழுது இந்த நிலைப் பெயர்வுகள், அரசியல் அதிகாரம், மதம், பண்பாடு சம்பந்தமாகத் திராவிடக் கருத்துநிலையின் தோற்றகால நிலைபாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது புலனாகின்றது.

6

மேற்கூறிய நிலைப்பெயர்வுகள் அதன் 'அரசியல்' பற்றிய புலப்பதிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினவெனினும், 'திராவிட' என்ற கருதுகோளுக்குத் தமிழ் நாட்டின் அரசியற் பிரக்ஞையில் ஒரு மைய இடமுண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது. அந்தப் பிரக்ஞை காரணமாக ஏற்பட்ட (கருத்துக்களின்) பிண்டப் பிரமாணக் கருத்துருவாக்கம் ஒன்று நடைபெறுகின்றது.

இந்த மாற்றங்களினூடே காணப்படும் ஒரு முக்கியப் பண்பினை முனைப்புறுத்திக் கூறுதல் அவசியம். அதாவது, திராவிட இயக்கம்/கருத்துநிலையின் வரலாற்றினூடே பல்வேறு சாதிக் குழுமங்களின் அரசியல் செயற்பாட்டசைவுகளைக் (Political articulation of various caste groups)காணக்கூடியதாக இருக்கின்றது. வரலாற்று ரீதியாகப் பார்க்கும்பொழுது, முதலில் பிராமணரல்லாத உயர்நிலைக் குழுமங்களும் (வேளாளர்), தொடர்ந்து நாடார்கள், முக்குலத்தோர் (கள்ளர், தேவர் முதலியோர்) ஆகியோரும் அரசியல்-சமூகச் செயற்பாட்டு வேகம் கொண்டவர்களாக மேற்கிளம்புதலைக் காணலாம்.

இந்தப் பண்பினூடே, அதிகாரப் படிநிலை வைப்பு முறைமைக்குப் (hierarchy) பழகிப்போன ஒரு சமூக அமைப்பில், ஒரு படிப்படியான சனநாயகமயப்பாடு (democratisation) ஏற்படுவதை அவதானிக்கலாம். இந்தச் சனநாயக மயப்பாடு இப்பொழுது (1997) இந்தப் படிநிலைச் சமூகத்தின் அடித்தளங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளது. அண்மைக் காலத் 'தலித்' எழுச்சியினை இக்கண்ணோட்டத்திலேயே நோக்கல் வேண்டும்.

ஆனால், இந்தப் படிப்படியான, வேகவிரைவற்ற சனநாயக மயப்பாட்டுக்குத் திராவிட இயக்கம்/கருத்துநிலையே ஒரேயொரு காரணி என்று கூறுதல் முடியாது. சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி மாற்றங்கள், மேற்கொள்ளப்பட்ட பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள், சமூகநலத் திட்டங்கள் ஆகியனவற்றுக்கு இதில் மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், திராவிடக் கருத்துநிலை இந்தச் சமூக மட்ட மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு (Political aspirations) ஒரு நியாயப் பாட்டையும் முன்னுதாரணத்தையும் வழங்கிற்று.

இந்த மாற்றத்தின் பின்புலத்திலுள்ள வர்க்க மாற்றத்தையும் அவதானித்துக் கொள்ளத் தவறக் கூடாது. சைவ, வேளாள மேலாண்மைவாதம், ஜஸ்டிஸ் கட்சி ஆகிய இரண்டும் நிலவுடைமைவாதத்தையும் மேற்கிளம்பும் வணிக மேலாண்மை வாதத்தையும் முனைப்புறுத்துவனவாகும். இந்த வர்க்கப் பின்புலம் படிப்படியாக மாறத் தொடங்கி, சமூக மேலோங்கு நோக்கம் கொண்ட மத்திய வர்க்கத்தினரை மையப்படுத்தி நிற்பதைக் காணலாம். திராவிடக் கட்சிகளிடையே ஏற்படுகின்ற பிளவுகளுக்கு, பிளவுபட்டு நிற்கும் குழுக்களின் பின்னருள்ள ஆதரவாளர்களின் வர்க்கத் தன்மையும் புதிய பல சக்திகளை 'உள்ளே' கொண்டுவருகின்றன. தொடர்புச்சாதனங்கள் வாயிலாகப் புதிய சமூக அபிலாசைகள் கொள்ளும் நகர்ப்புற ஏழைகளும் கிராமப்புற ஒதுக்குநிலைக் குழுமங்களும் (இது சாதியமைப்பால் ஏற்படுவது) இந்த இயக்கத்தின் அரசியலுக்கான 'வாக்குக் களஞ்சிய' மாகின்றன. ஆனால், இந்த ஆதரவுத் தளம் எந்த அளவுக்குத் தலைமையின் வர்க்க நிலைபாடுகளை மாற்றிற்று என்பது விவாதத்துக்குரிய ஒரு விடயமாகும்.

7

திராவிட இயக்க வரலாற்றுச் செல்நெறியிற் காணப்படுகின்ற ஒரு முக்கியமான பண்பு, ஐம்பதுகளிலும் அதற்குப் பின்பும் காணப்படும், திராவிட இயக்கத்தின் அரசியல், சமூகச் செயற்பாட்டு இரு கிளைப்பாடு ஆகும். இது ஒரு மிக முக்கியமான பண்பாகும்.

முதலில் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்த (அந்த அளவில் அதன் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த) ஈவெரா அவர்கள் 1925 முதல் சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இது முற்றிலும் சமூக žர்திருத்த நிலைப்பட்டதேயாகும். இதற்கு ஒரு வெளிப்படையான அரசியல் 'நிகழ்ச்சித் திட்டம்' இருக்கவில்லை (நிச்சயமாக அரசியல் தாக்கம் இருந்தது). ஆனால் அவர் அரசியலை முதன்மைப்படுத்திய ஜஸ்டிஸ் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொள்கிறார். 1944 இல் திராவிடர் கழகம் உருவாகுகின்றபொழுது அதற்கு நேரடியான அரசியல் நிகழ்ச்சித் திட்டமிருப்பினும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவதைப் பெரியார் விரும்பவில்லை என்றே கொள்ளல்வேண்டும். பெரியாரின் செயற்பாடு பிரதானமாகச் சமூக அசமத்துவத்தைச் சமூக மதநிலையில் எதிர்ப்பதே. 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற திராவிட முன்னேற்றக் கழகமோ, 1956 இல் முடிவெடுத்து, 1957 முதல் தேர்தல் அரசியலில் ஈடுபடுகின்றது.

திமுக அரசியற் செயற்பாட்டை அதிகரிக்க அதிகரிக்க, பெரியார் தமது நடவடிக்கைகளை, அவற்றுக்கு அரசியல் முக்கியத்துவம் உண்டெனினும், சமூகச் செயற்பாட்டுத் தளத்திலேயே மேற்கொள்கிறார்.

பாராளுமன்ற முறைமை அரசியலில் ஈடுபடுவதென்ற இத்தீர்மானம், பல தொகுநிலை அர்த்தங்களைக் கொண்டதாக அமைந்தது. முதலாவதாகக் குறிப்பிடப்படவேண்டியது இத்தீர்மானம், திமுக அனைத்திந்தியக் கட்டுக்கோப்புக்களுள், அந்தக் கட்டுக்கோப்பு (அதாவது இந்திய ஆட்சியமைப்பு முறைமை) திணிக்கும் கருத்துநிலை வரையறைகளுக்குள் நின்று, அவற்றை ஏற்றுக்கொண்டு 'அரசியல்' நடத்தவேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்திற்று. அப்பொழுதிருந்த நிலையில், அனைத்திந்தியக் கட்டுக்கோப்பை நிராகரித்து, வடக்கு தெற்கு என்ற அடிப்படையில் ஆரிய-திராவிடக் கருத்துநிலையை மேற்கொள்ளும் ஒரு கட்சியை, இத்தீர்மானம் முற்றிலும் புதிய திசைகளில் இட்டுச் செல்லும் சாத்தியப்பாடுகளைக் கொண்டதாக அமைந்தது. பிரிவினைவாதத் தடைச்சட்டத்தையொட்டி 1963 இல் திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டமையும், 1972 இல் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற எம்.ஜி.ராமச்சந்திரன் பின்னர் 1976 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தனது கட்சிக்குப் பேரிடவேண்டி வந்தமையும் இந்தத் தீர்மானத்தின் தர்க்க ரீதியான விளைவுகளாகும்.

பெரியார் தமது நடவடிக்கைகளை முற்றிலும் சமூக நிலைப்படுத்திக் கொண்டு, தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெறும்பொழுது சமகாலத்துப் போக்குகளுக்கியைய யாருக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்று தீர்மாணிக்கும் ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

இந்த இரு கிளைப்பாடு மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

8

அடுத்து, திராவிட இயக்கம், அரசியல் அதிகாரத்திலிருந்த பொழுது ஈட்டிய சாதனைகளைப் பற்றிய ஒரு மதிப்பீடு அவசியமாகிறது.

இவ்வேளையில், 'திராவிட' என்ற இந்த அடைவின் அரசியல் முக்கியத்துவத்தையும் குறிப்பாக அதன் 'வாக்கு'த் தளத்தையும் அத்தளத்தின் கால் நூற்றாண்டுக்கும் மேற்படும் காலத்தொடர்ச்சியையும் விளங்கிக்கொள்ளல் வேண்டும். 1967 முதல் 1997 வரை வந்துள்ள தமிழக மாநில ஆட்சி, 'திராவிட' என்ற தொடர் குறியீட்டைக் கொண்ட கட்சிகளாலேயே நடத்தப் பெறுகின்றது. பெயரளவில் ஒருமைப்பாடு காணப்படினும் அழுத்த வேறுபாடுகள் பல தொழிற்பட்டுள்ளன என்ற அரசியல் நிதர்சன உண்மைய ஏற்றுக்கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டின் 'பின்தங்கிய சமூகக் குழுமங்கள்' என்று கணிக்கப்பட்டுள்ள சாதிக் குழுமங்களிடையே (வன்னியர், தேவர், வேளாளக் கவுண்டர், நாடார் முதலிய குழுமங்களிடையே) திராவிட இயக்கத்துக்கான ஒரு வாக்குத்தளம் உள்ளது என்பதைத் தமிழகத்தின் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். எம்.ஜி ஆரைப் பொறுத்தவரை அவரது 'படிமம்' (அந்தப் படிமம் மக்களிடையே 'தொடர்பாடல்' செய்யப்பட்ட முறைமை) அவருக்கு நகர்ப்புறத்து, கிராமப்புறத்து ஏழைகளிடமும் குறிப்பாகப் பெண்களிடத்தும் மிகப் பெரிய கவர்ச்சியைக் கொண்டிருந்தது.

திராவிடக் கருத்துநிலையின் அரசியலாதிக்கம் காரணமாக, பிராமண எதிர்ப்பு நடவடிக்கைகளின் பொழுது முனைப்பு எய்திய சமூக நடைமுறைகள் (žர்திருத்தக் கலியாணம் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படல், தமிழின் பயன்பாடு போன்றவை), உத்தியோகபூர்வ வழக்குக்கள் ஆகின. குறிப்பாக வகுப்புரிமை ஒதுக்கீடுகள் பற்றி ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மிக முக்கியமானவையாகும். இந்த மாற்றம் காரணமாக அரசு உத்தியோகத்துறையில் பிராமண முதன்மை குறைந்து, பிராமணரல்லாதாரின் மேலாண்மை ஏற்படத் தொடங்கியுள்ளமையைக் குறிப்பிடல் வேண்டும், ஆனால், இது பிறிதொரு சுவாரசியமான சமூகச் செல்நெறிக்கு இடமளித்துள்ளது. அதாவது பிராமண இளைஞர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை விட்டு வெளிமாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லுதலும், அவர்கள் சமகாலத் தொழில் நுட்பத் துறைத் தேர்ச்சி பெறுதலும், இதன் காரணமாக இன்று முக்கியத்துவமடைந்துள்ள கன்னித் துறை முகாமைத்துவத் துறை ஆகியவற்றில் அவர்கள் முனைப்டுன் ஈடுபடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், வரன்முறையான பொருளாதாரத் துறையினை நோக்கும்பொழுது, திராவிடக்கருத்துநிலையானது (சமதர்மம், பொதுவுடைமை போன்று) திட்டமிட்ட பொருளாதார அமைப்பு முறைமையை உள்ளடக்கியதன்று. சமூகச் சமத்துவம் பேசும்பொழுது அது, குறிப்பாக அண்ணாதுரையின் பின்னர் சமதர்ம, பொதுவுடைமைக் கோஷங்களை உள்வாங்கியுள்ளதெனினும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் திட்டமிடப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென்பதைப் பற்றிய பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சத்துணவுத்திட்டம் போன்ற சில முக்கியச் செயற்பாடுகள், தமிழகத்துக் கிராமப்புறங்களில் பின் தள்ளப்பட்டோரின் கல்வி வாய்ப்புக்களை அதிகரித்துள்ளது என்பது மிக முக்கியமான உண்மையாகும். இந்தக் கல்விவட்ட விஸ்தரிப்பு, தொடர்புச் சாதனப் பரிச்சயத்தோடு (பிரதானமாக கட்புல அழுத்தம் கொண்ட தொடர்பு ஊடகங்களின் பரிச்சயத்தோடு) இணையும்பொழுது சமூக அபிலாசைகள் (Social aspiration), அதிகரிப்பதை அவதானிக்கலாம். இந்த அபிலாசை அதிகரிப்பு, அரசியல் நோக்கப்படும் முறையிலே பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

1967 முதல் மாநில ஆட்சியிலிருந்து வந்துள்ள 'திராவிட'க் கட்சிகள் மேற்கொண்ட சமூக-பொருளாதார நடவடிக்கைகளை நோக்கும்பொழுது, அரசு நிறுவன உத்தியோகங்களுக்கான வகுப்புவாரி இடஒதுக்கீடு முக்கியத்துவம் பெறுவதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். வளர்ச்சி வாய்ப்பு வசதியற்ற மக்களிடையே அரசு உத்தியோகத் துறையில் ஒரு சமத்துவமான பங்கீடு இருத்தல்வேண்டுமென்ற நோக்குடனேயே இடஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. ஐஸ்டிஸ் கட்சி அமைச்சுப் பதவியிலிருந்த காலத்திலிருந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளது.

இப்பிரச்சினையைச் சற்று உன்னிப்பாக நோக்கும் பொழுது, இது இந்தியச் சமூகத்தின் ஓர் அடிப்படைப் பண்பைப் புலப்படுத்தி நிற்பது விளங்கும். இந்தியாவின் புவிபரப்புக் காரணமாகவும், அந்தப் புவியியல் வளங்கள் நன்க பயன்படுத்தப்படாததாலும், இந்தியச் சமூக அமைப்பின் அதிகாரப் படிநிலை அமைப்புக் காரணமாகவும், அந்தப் படிநிலை அமைப்பு மத-சமூக-பண்பாட்டு நியமமாக விதித்த ஒதுக்கற்பாடுகள் காரணமாகவும், இந்தியாவில் ஒரு சமனற்ற வளர்ச்சி காணப்படுகின்றது. சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற சனநாயக எடுகோள் வந்ததும் இந்த அசமத்துவ வளர்ச்சிகளின் சமூகக் கொடூரங்கள் மிக வன்மையாக உணரப்பட்டன. எனவே, இந்தச் சமூகத்தின் சனநாயகமயப்பாட்டுக்கான எந்த முயற்சியிலும் இத்தகைய ஒரு முறைமையைக் கையாளவேண்டுவது அவசியமாகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கை இப்பிரச்சினை ஓர் அனைத்திந்தியப் பிரச்சினை என்பதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது. திறமை, வளர்ச்சி, வாய்ப்பு ஆகியனவற்றுக்கிடையே ஒரு சமன்பாடு காணவேண்டிய ஒரு நிலைமையை இது வற்புறுத்துகின்றது.

இந்த வகுப்புவாரி ஒதுக்கீடு, கல்விவாய்ப்பு உத்தியோகத் துறைகளிலே காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் (இந்தியா முழுவதிலும் கூட) இந்த ஒதுக்கீட்டுமுறைமை தொழிற்பட்டு வந்துள்ள முறைமையை நோக்கும்பொழுது இது பிராமணரல்லாத சாதிக் குழுமங்களின் நிரந்தரத்தன்மையையும் சாதிக் குழும மட்டப் பிரக்ஞையையும் மிக மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது என்பது தெரியவருகின்றது.

இது ஒரு வரலாற்று முரண் நிலையையும் தோற்றுவித்துள்ளமையை நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. அதாவது, தமிழ்நாட்டில் எந்த இயக்கம் ஒரு குறிப்பிட்ட சாதியின் சமூக-பண்பாட்டு மேலாண்மையை மறுதலித்துத் தொழிற்பட்டதோ அதே இயக்கம், சமத்துவம் பேணப்படவேண்டிய இடை, அடி நிலைகளிற் சாதியுணர்வை மிக வன்மைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் நவீன கால வரலாற்றில் சாதிக் கலவரம் என்பது ஒரு தொடர்ச்சியான அம்சமாகக் காணப்படுகின்றது.

இந்தச் சாதி கலவரங்களின் ஒரு மறக்கக் கூடாத அமிசம், இக்கலவரங்கள் சமூக மேனிலைப்பாட்டை அவாவுகின்ற குழுமங்களுக்கும்/குழுமத்துக்கும், அவர்களுக்கு நேரடியாக மேலேயுள்ள சாதிகளுக்கிடையேயுமான ஒரு பேராகவே புலப்பதிவு செய்யப்படுகிறது.

1920-30 களில் நடந்த நாடார்-வேளாளர் சண்டைகள், இப்பொழுது நடக்கின்ற தேவேந்திரகுல வேளாளர்-தேவர் சண்டைகள் ஆகியனவற்றை இக்கண்ணோட்டத்திற் பார்ப்பது அவசியம் ஆகும். இலங்கையிலும், யாழ்ப்பாணத்திற் சாதிச்சண்டை உச்சநிலைப்பட்டு நின்ற 1968 இல் (மாவிட்டபுரம் கோயிலினுள் புகுதல் விவகாரத்தில்) உண்மையான சண்டை நளவர்-பள்ளருக்கும் கோரியருக்குமே நடைபெற்றது.

இதில் நாம் முக்கியமாக நோக்கவேண்டிய அமிசம் யாதெனில், சாதியமைப்புக்கெதிராகத் தொடங்கிய போராட்டம் அடிப்படைச் சமூக-பொருளாதார அமைப்பு மாறாததனாலும், மாற்றம் ஏற்பட்டச் சிற்சில துறைகளிலுங்கூட நிலவிய 'உறவுகள்' காரணமாகவும் சாதியமைப்பு மீள் வலியுறுத்தப்படுகிறது.

இது தொலைநோக்கில் ஒட்டுமொத்தச் சனநாயகமயப்பாட்டைச் சிக்கற்படுத்துவதாக இருக்கும். ஆனால், அதே, வேளையில் சனநாயகமயப்பாட்டின் தாக்கத்தினாலேதான் இந்நிலை ஏற்படுகின்றதென்ற உண்மையையும் மறந்துவிடுதல் கூடாது.

தலித்திய எழுச்சி இந்தச் சமூகச் சிக்கற்பாடுகளின் வெளிப்பாடாக அமைகின்றது. அது பற்றிச் சற்று விரிவாகப் பின்னர் நோக்குவோம்.

9

திராவிட இயக்க வரலாறு வழிவந்த சமூக அனுபவங்கள் பற்றிப் பேசும் இந்நிலையில், திராவிட இயக்கம் அது 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதிய துறையில் ஏற்படுத்திய மாற்றங்களை நோக்குதல் வேண்டும். இது மிக முக்கியமான ஓர் அமிசமாகும். ஏனெனில் 1850, 1900,1930,1950களில் 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்பட்டனவற்றுக்கும், பின்னர் வரும் காலகட்டங்களிலே 'தமிழ்ப் பண்பாடு' என்று கருதப்படுவனவற்றுக்குமிடையிலே பார்வைப்பரப்பு வேறுபாடு உண்டு.

தமிழ்ப் பண்பாடு சம்பந்தமாகத் திராவிட இயக்கத்தின் பிரதான தாக்கம், இக்கருத்துநிலை காரணமாக, தமிழ்ப் பண்பாடு என்று கொள்ளப்படும் ஒரு 'பொதுமைப்பரப்பினை' சமயச் சார்பற்றதாக்கியமையே. (செக்கியூலர்-secular என்னும் தொடரை நாம் இன்றுங்கூட சமய நீக்கம், சமயச் சார்பின்மை என எதிர்நிலையில் மொழிபெயர்க்கின்றோமேயன்றி, அதனை ஒரு 'உடனிலைப்'பாடான -positive எண்ணக் கருவாக எழுத முடியாதுள்ளது.) சைவத் தமிழ், வைஷ்ணவத் தமிழ், கிறிஸ்தவத் தமிழ், இஸ்லாமியத் தமிழ்ப் பாரம்பரியங்கள் பற்றிய ஆய்வுகள் இக்காலகட்டத்திலே செய்யப்பட்டு, அவையாவற்றையும் தமிழின் பொதுப்பாரியத்தினுள்ளே கொண்டுவரும் ஒரு புலமைப் போக்கு இன்று வலுவுடையதாகவிருப்பினும், இவையாவற்றுக்கும் அப்பாலான, சமயச் சார்பற்ற ஒரு 'தமிழ்ப் பண்பாட்டு' இருக்கை ஒன்று உள்ளது என்ற ஒரு பார்வைப் பரப்பு இன்று உள்ளது. இதன் உருவாக்கத்திலே திராவிடக் கருத்து நிலைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.

'தமிழ்ப் பண்பாடு' எனும் பொழுது மதப் பாரம்பரியங்களுக்கு அழுத்தம் கொடுக்காது, பிற மொழிச் செல்வாக்குக்கள் குறைந்தவை/அற்றவை என்று கருதப்டும் இலக்கியங்களை முதன்மைப்படுத்தும் ஒரு செல்நெறியும் தோன்றிற்று. இதன் காரணமாகச் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்களாக எடுத்துரைக்கப்பட்டன.

இவ்வேளையில், அனைத்திந்திய, உலக மட்டத்தில் தமிழ்/தமிழ்ப் பண்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புக்கள் என்று கருதப்படுகின்ற பக்தி இலக்கியம், நடராஜர் சிலை போன்றவற்றை இக்கருத்துநிலை முதன்மைப்படுத்தாது விட்டமையையும் குறிப்பிடல் வேண்டும்.

திராவிடக் கருத்துநிலையின் தொழிற்பாடு காரணமாக முற்றிலும் அதன் தொடர்பியல் தேவைகளுக்காக, தமிழின் மொழிப் பயன்பாட்டில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. தனித்தமிழியக்கம் திராவிடக் கருத்துநிலை வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தை உணர்த்தி நிற்பதாகும். ஆனால், பெரியார், அண்ணாதுரை கருத்தாடல்களில் இந்த மொழிப் பிரயோகம் மாற்றங்களைப் பெற்றது. பெரியாரின் பயன்பாட்டில் பேச்சு நிலை வழக்கு (spoken dialict) முதன்மைப்பட அண்ணாதுரையின் பயன்பாட்டில் (பின்னர் கருணாநிதியிலும்) தமிழின் விதி முறைப் பிரயோகத்திற் (formal use) பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு குறிப்பிட்ட மொழிநடை (அடுக்குத் தமிழ்) அரசியல் சமூகத் தொடர்பாடலைப் பெரிதும் வலுப்படுத்துவதாக இருந்தது. மேலும், திராவிட இயக்கத்தினர் பத்திரிகைகளையும் தமது தொடர்பாடற் சாதனமாகக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். இவர்களது வாசக வட்டத்தின் தன்மை, பார்வைப் பரப்புக் காரணமாகத் தமிழின் பத்திரிக்கை எழுத்துத் துறையில் ஒரு புதிய 'மரபு' (idiom) தோன்றிற்று எனலாம். திராவிட இயக்கத்தின் செல்வாக்குச் சினிமாத் துறையையும் பாதித்தது. அந்தப் பாதிப்புக் காரணமாக, இந்தப் புதிய 'நடை' மிக்க பரவலினைப் பெற்றது.

தமிழ்ப் பண்பாட்டுத் துறையில் திராவிட இயக்கத்தின் தொழிற்பாடுகளை மிக உன்னிப்பாக ஆராயும்பொழுது, தமிழ்ப் பண்பாடு இவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக் கருவாகிற்று என்றும் துணிந்து கூறலாம். தமிழ் நாட்டில் ஏற்கனவே நிலவிய 'தமிழர்' என்ற சொல்லின் ஒரு பயன்பாடு பிராமணர்களல்லாத தமிழர்களையும் குறிப்பது. தமிழகத்தில் 'தமிழர்' பற்றிய குறிப்பீட்டுக்குத் 'தமிழியன்' (Tamilian) என்ற ஆங்கிலப் பிரயோகத்தையும் அவதானித்தல் வேண்டும். தமிழரைத் 'தமிழ்ஸ்' (Tamils) என்னாமல் (இலங்கையிலுள்ளது போல்), 'தமிழியன்' எனும் பொழுது, தொனிப்பொருளாக வேறுபாடு வெளிப்படுத்தப்படுகின்றது.


* * * Travida 1 - ன் தொடர்ச்சி * * *

இந்த அரசியல்மயப்பாடு காரணமாக, தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகளிலும் வேறுபாடு ஏற்படத் தொடங்கிற்று. தைப்பொங்கல், தமிழர் திருநாள் ஆகிற்று; திருக்குறள், 'உலகத்துக்கு அறிவு வழங்கிய தமிழ் மகன் திருவள்ளுவனாரின் நூல்' (சக்திப் பதிப்பக மலிவுப்பதிப்பு முன் அட்டையில்) ஆயிற்று; திருமணங்கள் பாரம்பரிய வடமொழி வரும் சடங்குகளின்றி நடைபெறத் தொடங்கின (žர்திருத்தக் கலியாணம்); தமிழ்ச் சினிமாவிற் சில குடும்பநிலைப் பண்புகள், தமிழ்ப் பண்புகளாகப் போற்றப்பட்டன. தமிழனின் மானம், தமிழச்சியின் கற்பு என்பன உருவுடைப் பொருள்கள் (reification) ஆகின அரசியல் தொடர்பாடலில் இப்பிரயோகங்கள் வலிமை மிக்க கூற்றுக்களாகின.

தமிழ்த் தேசியப் பிரக்ஞை உருவாக்கத்தில் இந்தக் குறியீடுகள் மிக முக்கிய இடம்பெறத் தொடங்கின.

10

திராவிட இயக்கம்/கருத்து நிலை தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய மிகப் பிரதானமாக 'தாக்கங்களில்' ஒன்று மதம் பற்றிய அதன் நோக்கு ஆகும்.

இவ்வியக்கம்/கருத்துநிலையின் உடனுறை நோக்கமான பிராமணிய எதிர்ப்புக் காரணமாக, திராவிட இயக்கம் அதன் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் 'வைதிக' (வேத வழி வருகின்ற) இந்து மதச் சடங்குகளை எதிர்த்தது. சைவம் ஆகமங்களை ஏற்றுக்கொண்டது. ஆனால் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், இந்து மதத்தை அதன் சகல நிலைகளிலும் நிராகரித்தது. இவர்கள் தங்கள் உந்துதற் கோட்பாடுகள் எனக் கொண்டிருந்த 'பகுத்தறிவுவாதம்', 'நாத்திகவாதம்' என்பனவும் இவர்களை அந்த நிலைக்குத் தள்ளின.

அந்தக் கண்ணோட்டத்தில் இந்து மதம் என்பது சமூகக் கட்டுப்பாட்டுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு 'ஆரிய'/பிராமணியச் சூழ்ச்சி என்றே நோக்கப்பட்டது. கிறிஸ்தவம், இஸ்லாம் பற்றி இப்பார்வை முன்வைக்கப்படவில்லை.

இந்த நோக்குக் காரணமாக, மதத்தின் சமூக வகிபாகத்தையே (Social role of religion) மறுதலிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது எனலாம். மதத்தின் மெய்யியல் தளத்தைக் கேள்விக்குள்ளாக்கி, அதன் சமூக-அரசியல் தொழிற்பாடுகளை வன்மையாகக் கண்டித்த கார்ல் மார்க்சும் எங்கெல்சும், மதத்தின் சமூக வகிபாகத்தை நிராகரிக்கவில்லை.* மார்க்ஸ் மதத்தை விவரிக்கும்பொழுது அது 'ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக' அமைவதையும், யதார்த்த வாழ்வில் மறுதலிக்கப்பட்ட விடயங்கள் மறுமையில் தரப்படும் என்ற ஒரு 'போதை' நிலையினைத் தருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

மதத்தை, குறிப்பாகத் தமிழ்நாட்டுச்சைவம், வைணவத்தைச் சமூக நிறுவனமாக நிராகரிக்கும் இப்போக்குத் தமிழகத்துப் பொதுவுடைமை இயக்கத்திலும் உண்டு. பொதுவுடைமை இயக்க--பகுத்தறிவு இயக்க வளர்ச்சி வரலாற்றின்

-----

* மார்க்ஸ்-எங்கெல்ஸ், On Religion, மொஸ்கோ, 1956.

...

ஆரம்ப நிலையில் சிங்காரவேலர், ஈவெராவுக்கிருந்த உறவு மிக முக்கியமானதாகும்.

சமனற்ற வளர்ச்சியையும் அதிகாரப் படிநிலைச் சமூக அமைப்பையும் (hierarchial society) கொண்ட ஒரு சமூகத்தில், மதம் மக்கள் மனதைச் சமூக இருக்கைக்குப் பதனப்படுத்தும் (Social conditioning) ஒரு வழிமுறையாக அமைகிறது. அந்தப் பதனப்பாடு ஒழிக்கப்படவேண்டுமெனில் உற்பத்தி முறைமையின் சமூக உறவுகள் மாற்றப்படவேண்டும். அத்துடன் இத்தகைய நிலையில் சில கருத்து நிலை/கண்ணோட்டங்கள் மேலாண்மையுடையனவாகவிருக்கும். இவை மரபு என்று போற்றப்படுவனவாகவும் அமைந்துவிடலாம். அத்தகையனவற்றை நிராகரிக்கும்பொழுது, சமூக இருக்கையைத் தொடர்ந்து பேணுவதற்கான இன்னொரு வன்மையான நோக்குமுறை வேண்டும்.

'திராவிட', 'சுயமரியாதை'க் கருத்துநிலையானது பகுத்தறிவு வாதம், நாத்திகத்தைத் தொகுநிலை அர்த்தமாகக் கொள்ளும் தன்மை இருந்தது. ஆனால் அண்ணாதுரையோ, திமுக தோற்றத்துடன் திருமூலர் திருமந்திரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வரியான 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்பதை ஒரு கோஷமாக்கினார். இது மதத்தை ஏற்பதாயிற்று. குறிப்பாகக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களிடையே திராவிடக் கருத்து நிலை பற்றிய பகுத்தறிவு நோக்கு அச்சத்தை நீக்கிற்று.

இந்தக் கோஷம் திமுகவின் மதநோக்கிற் சில முரண்பாடுகளை ஏற்படுத்திற்று

இந்த உண்மையை அறுபதுகளின் பிற்கூற்றிலும் அதன் பின்னரும் ஏற்படும் 'மத உணர்வு' (religionity) மீட்பிற் காணலாம். காஞ்சி காமகோடி பீடத்தை முதன்மைப்படுத்தி அறுபதுகளில் நடந்த மத-சடங்காசார மீட்டெடுப்பு இயக்கம், படிப்படியாகப் பிராமணரல்லாத மட்டங்களுக்கும் செல்ல, அந்நிலைகளில் முருக, மாரியம்மன் வணக்கங்கள் மிக முக்கியமாகின. திராவிடக் கருத்துநிலையைப் பரப்பப் பயன்படுத்தப்பட்ட அதே சினிமா ஊடகம் இதற்கும் பயன்படுத்தப்பட்டது. மேலும் எண்பதுகளில், குறிப்பாக நகர்ப்புறத்து ஏழைகள் மத்தியில் சபரிமலை வழிபாடு பிரபலம் பெற்றது. இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தினர்களிடையே காணப்படும் மதவழிபாட்டு நடைமுறைகள் அவர்களின் தலைமையினரிடையே விமர்சிக்கப்பட்டுள்ளது.*

----

* இந்த மாற்றங்கள் பற்றிய குறிப்புக்களுடன் வெறிவந்த 'இந்தியா ருடே' மார்ச் 1997 இதழைப் பார்க்க.

திராவிடக் கட்சிகள் மாநில ஆட்சியை ஏற்றுக்கொண்டபொழுது, அவர்களுடைய கருத்துநிலை எவ்வாறிருப்பினும், கோயில்களையும் மற்றைய மதச்சார் நிறுவனங்களையும் நிர்வகிக்கவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டது என்பதையும் இங்குக் குறிப்பிடுதல் வேண்டும். இது இந்த விடயங்களில் 'தலையீடு' செய்யவேண்டிய ஒரு நிலைமையினை ஏற்படுத்திற்று

இந்துமத மீட்டெடுப்பு நடவடிக்கைகளின் பொழுது, பிராமணரல்லாத குன்றக்குடி அடிகளார் முன்னின்று நடத்திய சமூக-மத-பண்பாட்டு நடவடிக்கைகள் பற்றி இங்குக் குறிப்பிடல் அவசியமாகின்றது. அவருடைய முயற்சிகளை (திராவிட இயக்கத்தினர்) மறுதலிப்பதில் ஒரு தயக்கம் காணப்பட்ட தென்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். குன்றக்குடி அடிகளாரின் தமிழ் நிலைப்பட்ட நடவடிக்கைகளும் முக்கியமானவையாகும். அவருடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய கருத்துநிலை முக்கியமற்றவரெனினும், பிராமணரல்லாத நிலையில் மதப் பிரசாரகராகவிருந்த கிருபானந்த வாரியாரையும் இங்குக் குறிப்பிடல் வேண்டும். இவருக்குக் கௌரவ இலக்கிய முனைவர் (DLitt) பட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டது.

மதம் என்னும் சமூக-பண்பாட்டு நிறுவனத்தை மறுதலிப்பது என்பது இந்தியா போன்ற பாரம்பரியச் சமூகம் ஒன்றிற் (traditional society) சுலபமாகச் செய்துவிடக்கூடிய விடயமன்று.

இக்கட்டத்தில், இந்தியச் சமூக அமைப்பில், மேனிலை அசைவியக்கம் (Upward social mobility) பற்றி எம்.என். சிறிநிவாஸ் கூறியுள்ள ஒரு பொதுவிதியின் செயற்பாட்டையும் நாம் இங்கு ஒளிவு மறைவின்றிக் குறித்துக் கொள்ளல் வேண்டும்.

அச்செல்நெறியை சிறிநிவாஸ் 'சமஸ்கிருதமயவாக்கம்' (Sanskritisation) என்பர். இங்கு 'சமஸ்கிருதம்' என்பது ஒரு மொழிநிலைக் குறிப்பல்ல. அதாவது அடிநிலைச் சமூகத்தினர் மேனிலை எய்தும்பொழுது, உயர்நிலைச் சமூகத்தினரின் பண்பாட்டுப் போக்குகளைக் கையேற்றுக்கொள்ளல் இந்தியச் சமூகவியலின் பொதுவிதி என்பர். இது பெரும்பாலும் பிராமணியச் சடங்குகளைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், எல்லா வேளைகளிலும் அல்ல. ஏதோ ஒரு வகையில் ஒரு 'மதநூற் பாரம்பரியத்துக்குச் செல்லல்' என்பதைக் குறிக்கும்.*

-----

* பார்க்க: M.N. Srinivas. Social Change in India.

...

இந்த சமஸ்கிருதமயவாக்கம் பல வடிவங்களில் பிராமணரல்லாதாரைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மரபின் தெய்வங்கள், இன்று பெருந்தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன.

தலித் மக்களின் வளர்ச்சியின்பொழுதும் இத்தகைய ஒரு நிலை ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே காணப்படுகின்றன.

11

திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்துநிலைப் போக்கின் ஒரு முக்கிய பெறுபேறாக அமைந்தது தமிழ்ப் பிரக்ஞை, தமிழ்த் தேசிய உணர்வு ஆகும். தமிழ் மக்கள் தங்கள் இன உணர்வு பற்றிய அரசியல் பிரக்ஞை கொள்வதில் திராவிட இயக்கத்தின் பங்கு கணிசமானதாகும். இத்துறையில் ம.பொ. சிவஞான கிராமணியாரின் தமிழரசுக் கட்சியும் ஓரளவு தொழிற்பட்டதுண்மையெனினும், தமிழ் மக்கள் தாங்கள் ஓர் அரசியற்குழுமம் என்ற உணர்வைப் பெறுவதில் இவ்வியக்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

திராவிட இயக்கத்தின் அரசியற் பயன்பாடு பற்றி ஆராய்த என்.ராம், இந்தக் கருத்து நிலை, தமிழ்த்தேசிய இன உணர்வு (nationality conciousness) உருவாக்கத்தில் முக்கிய இடம் பெறுகின்றது என்று கூறியுள்ளார் (ராம் 1978:79).

இலங்கையில் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்திலும் எடுத்துரைப்பிலும் திராவிட இயக்கத்தின் பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும். இலங்கையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிகவும் வரையறுக்கப்பட்ட ஒரு வரவேற்பே இருந்தது. ஆனால் இருந்தது என்பது உண்மை. 1920,30 களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டி என்னும் கிராமத்தில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார். இத்தகைய ஒரு குழுமம் கிழக்கிலங்கையிலுமிருந்தது. பிற்காலத்தில் தமிழரசுக் கட்சியின் பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கிய எஸ்.டி. சிவநாயகம் மட்டக்களப்பில் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார். அவர் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாக செ. இராசதுரை (பின்னர் பாராளுமன்ற அங்கத்தினர்/அமைச்சர்), எஸ்.இ. கமலநாதன் ஆகியோர் விளங்கினர். அரசியல் நிலைப்பட்ட தமிழின உணர்வு வளர்ச்சியில் 1949 இல் தோற்றுவிக்கப்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கிய ஆர்வம் காட்டிற்று. இந்தக் கட்சியினர் தங்கள் கட்சிப் பிரசாரங்களில் அண்ணாதுரை, திமுகவின் கருத்துப் பரப்புகைக்குப் பயன்படுத்திய சொற்பொழிவு முறைமையைப் பயன்படுத்தினர். இவர்களும் பாசறை, தளபதி போன்ற பதங்களைப் பயன்படுத்தினர்.

இத்தகைய பின்பற்றுகைகளுக்கு மேலே சென்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், திராவிட இயக்கத்தினருடன் நேரடித் தொடர்புகளும் ஏற்படுத்தினர். தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அ. அமிர்தலிங்கமும், பெரியாரையும் அண்ணாதுரை அவர்களையும் சந்தித்தனர் (தமிழரசுக் கட்சி வெள்ளிவிழா மலர் 1974).

இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வழிசாவழித் தமிழரிடையே, குறிப்பாக 1950 களில் திராவிட இயக்கம் முக்கியமான அரசியற் செல்வாக்குக் கொண்டிருந்தது. இச்செல்வாக்கு இலங்கையின் மலையகத்தில் (Hill Country of Sri Lanka) உள்ள தோட்டத் தொழிலாளரிடையே பரவத் தொடங்கியதும் அக்கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கைத் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இளஞ்செழியனுக்குள்ள இடம் முக்கியமானதாகும்.

இந்த வரலாற்றுண்மையை அண்மையில் வெளிவந்த பெ.முத்துலிங்கத்தின் 'எழுதாத வரலாறு' (கொழும்பு 1997) என்னும் நூல் வெளிக்கொணர்ந்துள்ளது.

12

திராவிட இயக்க/கருத்துநிலைத் தொழிற்பாடுகளின் அரசியல், சமூகப் பலாபலன்கள் பற்றி மீள்நோக்கச் செய்யும் பொழுது, இக்கருத்துநிலையானது, குறிப்பாக மாநிய ஆட்சிக் கருத்துநிலையாக மாறிய நிலையில், (அதாவது பாராளுமன்ற ஆட்சிமுறை பங்குகொள்ளலை ஏற்றுக்கொண்ட பின்னர்) இந்தக் கருத்துநிலைக்கு ஆதரவு வழங்காத, இதனைக் குரோத உணர்வுடன் நோக்கிய, கருத்துநிலையாளர்களைப் பெரும்பாலும் கொண்டிருந்த ஓர் உத்தியோகத்தர் குழாத்தினராலேயே (bureaucracy) நிர்வகிக்கப்பட்டு வந்தது என்ற உண்மையையும் பதிவு செய்தல் அவசியம். அனைத்திந்திய ஒருமைப்பாடு, பிராமண உத்தியோக மேலாண்மை, சமஸ்கிருத நெறிப்படுகை ஆகியனவற்றை எதிர்த்த திராவிட இயக்கம், மாநில ஆட்சியை ஏற்றுக்கொண்டதும் இந்த மூன்று கட்டுக்கோப்புக்களுள்ளும் நின்று இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனால், இந்தக் கருத்துநிலை வழிவரும் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

தேர்தல் அரசியலில் இறங்கியபொழுது ஏற்பட்ட நிலைப் பெயர்வுகளுடன் இதுவும் சேர, இந்தக் கருத்து நிலையின் வலிமை பெரிதும் பாதிக்கப்பட்டதெனலாம்.

மாநில நிர்வாகத்தைத் திராவிடக் கட்சிகள் ஏற்றுக்கொண்டபொழுது, தவிர்க்க முடியாத வகையிற் சில பிராமண உத்தியோகத்தர்கள் முதன்மை எய்தினர். திமுகவின் முதல் ஆட்சிக் காலத்தில் வி.பி.ராமன் என்ற அட்வகற் ஜெனரல் முதன்மை பெற்றதை ஒரு முக்கிய உதாரணமாகக் காட்டுவர்.

13

திராவிட இயக்கம்/கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றிச் சிந்திக்கும்பொழுது, முக்கியப் பிரச்சினை மையங்களில் ஒன்றாக அமைவது 'தலித்' பிரச்சினையாகும்.

எண்பதுகளின் பிற்கூற்று முதல் இது படிப்படியாக முக்கியத்துவம் பெறத் தெடங்கி, தொண்ணூறுகளில் தமிழ் நாட்டின் மிக முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக மேற்கிளப்பியுள்ளது.

தலித் இயக்கத்தின் இன்றைய எழுச்சியையும் அதன் தன்மைகளையும் மதிப்பிடுவதற்கு 1980 இல் வெளியிடப்பட்ட மண்டல கமிஷனின் அறிக்கையில் வரும் சில குறிப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. மற்றைய பின்தங்கிய சமூகத்தினரின் பிரச்சினைகளில் வடக்கு-தெற்கினை ஒப்புநோக்க முனைந்த பொழுது (தொகுதி 1, அத்தியாயம் 8) தமிழ்நாட்டின் சிறப்பு அம்சம் ஒன்று பற்றி ஆராய்கிறது:

8,13 உண்மையான நடைமுறையில் ஒதுக்கீட்டின் நன்மைகள், பின்தங்கிய சமூகங்களிடையேயுள்ள அவர்களுள் முன்னேறியவர்களான சாதிகளுக்கே சென்றுள்ளன. தமிழ்நாடு பின்தங்கிய வகுப்பினர் ஆணைக்குழு இது பற்றிச் சிறப்புக் கவனம் எடுத்தது (1970).........

இதிலுள்ள பிரதான வினா இதுதான். பின் தங்கிய வகுப்பினரிடையே 88.7% வீதமுள்ள பலங்குறைந்தனவும், சிறியனவுமான பின்தங்கிய சாதிகள், ஒதுக்கீட்டின் நன்மைகள் கையளவு குறுகிய ஒரு குழுவினரிடையே போவதை ஏன் எதிர்க்கவில்லை? கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி, இந்தச் சாதிகளிடையே தனக்கென ஓர் அரசியல் தளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால் தமிழ்நாட்டில், திராவிடக் கழகம் காரணமாக அத்தகைய நிலைமை ஏற்படவில்லை. தமிழ்ப் பண்பாட்டு மீட்பு தமிழ்நாட்டினை இறுகப் பற்றியிருக்கும் வரை, உண்மையான ஒரு பின்தங்கிய வகுப்பினர் இயக்கம் அங்கு தோன்றாது.

மற்றைய மாநிலங்களில் நடந்தேறியது போல, தமிழ் நாட்டில், ஹரிஜனங்களுக்கும் மற்றைய பின்தங்கிய வகுப்பினருக்குமிடையேயுள்ள மோதுகை, பிராமணர்-பிராமணரல்லாதார் பிளவை மறைத்துவிடாது. இங்கு ஹரிஜனங்கள் சுயமரியாதை இயக்கத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.*

1980 இல் வெளியிடப் பெற்ற இக்கருத்து ஒரு பத்தாண்டுக் கால முடிவில் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

எண்பதுகளில் படிப்படியாக முளைவிடத் தொடங்கிய தலித் இயக்கம் (ராஜசேகர் ஷெட்டி எண்பதுகளின் தொடக்கத்தில்--1981, 82--வெளிவந்த தனது நூல்களை 'தலித் வெளியீடுகள்' என்ற நிறுவனம் மூலமே கொண்டு வந்தார்) அம்பேத்கர் நூற்றாண்டு விழா ஆண்டு மதல் (1989) மிகப்பெரிதாகப் பரவி, தொண்ணூறுகளில், தமிழ்நாட்டில், பிராமண-பிராமணரல்லாதார் எதிர்ப்புணர்வு அளவுக்கு முக்கியத்துவமுடைய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இப்பொழுது தென் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் சாதிக் கலவரங்கள் (தேவேந்திரகுல வேளாளருக்கும் தேவர்களுக்குமிடையே நடப்பது) இந்த உண்மையை வலியுறுத்துகின்றன.

தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புக்கள் ஆணைக்குழு கூறியுள்ள முறையில், திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மீட்புப் பற்றிக் கொண்ட நடவடிக்கைகள்,

------

* Report of the Backward Classes Commission (Mandal Commission) First Part (Vol I & II, Government of India, New Delhi, 1980, P.32.

....

பிராமணரல்லாத மக்களிடையே ஒரு பொதுமைப்பாட்டை ஏற்படுத்தினவா என்பது இப்பொழுது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கம் தான் மேற்கொண்ட 'பிராமணரல்லாத சமூகங்களின் சனநாயகவாக்கம்' என்ற நோக்கின் தர்க்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்திருந்தால், அது ஒடுக்கப்பட்ட தமிழ்க் குழுமங்களிடத்துச் சென்றிருந்தல் வேண்டும். ஆனால், அந்த நடைமுறை பூரணப்படவில்லை என்பதை இன்றைய நிலையிலிருந்து மீளநோக்கும் பொழுது ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரலாற்றுப் பணி நிறைவேற்றப்படாது கிடக்கின்றது.

திராவிட இயக்க வரலாற்றின் சமூகப் பின்புலத்தை நோக்கும்பொழுது, திராவிட இயக்கம் என்பது பிராமணரல்லாத சமூகங்களினது அவற்றின் அதிகாரப் படிநிலை வைப்பு முறையை (hierarchical order) மீறாது அமைந்த படிப்படியான அரசியல் சமூகச் செயற்பாடு வீச்சுகளுக்கு உதவி அவற்றை அவற்றின் மேல்நிலை அசைவியக்கத்துக்கு (upward social mobility) உதவியுள்ளது என்பது நன்கு புலனாகின்றது. இந்த மேல்நிலை அசைவியக்கத்துக்கான செயற்பாட்டு வீச்சு அதிகரித்தபொழுது, மேற்கிளம்பும் சாதியினருக்கு நேரடியாக மேலேயுள்ள சாதியினர் அதனை எதிர்ப்பது ஒரு வரலாற்றுண்மையாகும். எடுத்துக்காட்டாக நாடார்கள் மேனிலையாக்கம்; இலங்கையில் மாவிட்டபுரத்தில் நடந்த போராட்டம் (1968).

திராவிட இயக்கச் செல்வாக்கால் ஏற்பட்ட இந்த மேனிலையாக்கம் தமிழ்நாட்டின் இடைநிலைச் சாதிகளோடு நின்றுவிட்டது போலத் தெரிகிறது. பெரியார் பற்றிய மீள்வாசிப்பிற்கூட, பெரியார் தாழ்த்தப்பட்டவர்களை இயக்கமாக்குவதிலும் போராடச் செய்வதிலும் போதிய முனைப்புக் காட்டவில்லை என்றும் பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓரளவு நியாயமானது இதுவே எனத் தோன்றுகின்றது என்றும் குறைந்த பட்சம் 1954க்குப் பிறகாவது அவர் தாழ்த்தப்பட்டவர் எழுச்சியில் கவனத்தைக் குவித்திருக்கலாமே என்று தோன்றுவது இயல்பு என்றும் (ராஜன் குறை, பெரியாரியம், நிறப்பிரிகைக் கட்டுரைகள், கோவை, 1995, ப.25) கூறப்படுவதை மனங்கொள்வது அவசியமாகின்றது. தனது கட்டுரையில் இந்த மனப்பதிவுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவையல்ல என்று ராஜன் குறை வாதிடுவதை இங்குக் குறிப்பிடல் வேண்டும். ஆனால் ஒரு மேலோட்டமான மனப்பதிவில் இக்கருத்து ஆழமான இடம் பெறுகின்றது என்பதை மறுக்க முடியாது. இதே கட்டுரைத் தொகுதியில் வரும் கேசவன் கட்டுரையினையும் நோக்குக.

இவ்வாறு நோக்கும்பொழுது தலித் இயக்கம் என்பது, அனைத்திந்திய இயக்கமொன்றினது தமிழ்நாடு நிலைப்பட்ட விஸ்தரிப்பு என்பதனை ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது. 'தலித்' என்ற சொற் பயன்பாட்டினையும் நோக்கல் வேண்டும். இது ஒரு மராட்டியச் சொல். 'தமிழர்' என்ற கருதுகோள் பற்றிய தலித் கண்ணோட்டங்கள் சில (அவர்களிற் சிலர் அதனை மறதலிக்கின்றனர்) இதனைக் காட்டி நிற்கின்றன. தலித் முன்னேற்றத்தினை ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்தின் ஓரங்கமாக்கல் வேண்டுமென்ற அரசியல் நிலைப்பாடுகளின் முக்கியத்துவத்தையும் நாம் இங்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

பார்ப்பனீயத்தை மறுதலித்துத் தோன்றிய திராவிட இயக்கம், திராவிடப் பண்பாடு அதன் கருத்து முன் வைப்புக்களில், 'ஆரிய' நாகரிகச் சாதனைகள் என்று கொள்ளப்படுவனவற்றுக்கு மாறாகத் திராவிட/தமிழ்ச் சாதனைகளை (இலக்கியம் முதலான) முன்வைப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அந்த வட்டத்துக்குக் கீழே சென்று, தமிழ் நாட்டின் ஒட்டு மொத்தமான சனநாயகமயவாக்கத்துக்கான கருத்துநிலைக் கூர்மையை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. சனநாயக மயப்பாட்டு வழி வரும் ஒருமைப்பாட்டைக் குறியீடு செய்யும் வகையில் அரசியல், சமூகச் சின்னங்கள் அமைவது அவசியம். இது சமூக சனமயவாக்கத்தின் தவிர்க்கப்பட முடியாத நியதியாகும்.

14

திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி நோக்கும் இம்முயற்சியில், முக்கிய இடம் பெறவேண்டியது, கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவரும் 'பெரியார் மீள்கண்டுபிடிப்பு'ச் செயற்பாடு ஆகும்.

ஆனைமுத்துத் தொடங்கிய மார்க்žய-பெரியாரியக் கட்சியின் தொழிற்பாடுகள், வட இந்தியாவில், குறிப்பாக மத்திய இந்தியாவிற் சாதி எதிர்ப்புக் கிளர்ச்சிகளின்பொழுது பெரியாரின் சேவை முக்கியத்துவம் கணிக்கப்பட்டவை போன்றவை எண்பதுகளிலே நடைபெற்றுக்கொண்டிருந்தவெனினும், 1990 களின் தொடக்கக் காலம் முதல், தமிழ்நாட்டின் இளம் புலமையாளர் மத்தியிலே, பெரியாரின் கொள்கைகளை மீள்கண்டுபிடிப்பதற்கும், அவற்றினைச் சமகாலத் தமிழ் நாட்டின் சமூக-அரசியற் போக்குக்களை விளக்குவதற்குப் பயன்படுத்துவதற்குமான ஒரு முயற்சி காணப்படுகின்றது. நிறப்பிரிகைக் குழுவினர் என்று இனங்காணப்படும் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ. வேல்சாமி (பெரியாரியம், நிறப் பிரிகை, கோவை, 1994) ஆகியோரைக் குறிப்பிடும் அதே வேளையில், பெரியார் பற்றி அண்மையில் ஒரு விரிவான நூல் எழுதியுள்ள எஸ்.வி.ராஜதுரை, வி.கீதா (பெரியார், சென்னை 1996) போன்றோரையும் குறிப்பிடல் வேண்டும். இவர்கள் மாத்திரமல்லாமல் கோவை ஞானி போன்றவர்களும் (தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள், கோவை, 1994) பெரியார் பற்றிய மீளாய்வினை வற்புறுத்தியுள்ளனர். தமிழ் நாட்டின் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு பெரியார் பற்றிய மீள்வாசிப்பு, மீள்கண்டுபிடிப்பு அவசியம் என்பதை ஒத்துக் கொள்கின்றன (ப. மாணிக்கம், ரா. நல்லகண்ணு ஆகியோருடன் நேரடி உரையாடல்).

பெரியாரியக் கண்டுபிடிப்பை முதன்மைப்படுத்துகின்ற அதே வேளையில், பெரியார் மீது அரசியற் பழி சுமத்தும் ஒரு சிந்தனைப் போக்கும் இல்லாமலில்லை என்பதைக் குணாவின் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' (1995) என்கின்ற நூல் காட்டுகின்றது.

பெரியாரை ஒரு முக்கிய எதிர்க்கலாசாரச் சக்தியாக மீள் கண்டுபிடிப்புச் செய்யும் முயற்சி அரசியல் சமூக முக்கியத்துவமுடையதாகம்.

இந்திய/தமிழ்நாட்டுச் சமுதாய அமைப்பை எவ்வாறு விளங்கிக்கொள்வது எனும் விவாதத்தில் பொதுவுடைமைவாதிகள் மேற்கொண்ட 'வர்க்கக் கருதுகோள்' போதாது என்றும், அந்தக் கருதுகோள் சாதிக்கும் வர்க்கத்துக்குமுள்ள உறவு/உறவின்மைகளைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்றும், இந்தியச் சமூக அமைப்பின் பிரதான அலகான சாதி (மத அங்கீகாரமும் மத வலிமையும் கொண்டது) எல்லாப் பொருளாதார உற்பத்தி முறைமைகளுக்கிடையேயும் தொழிற்படக்கூடியது என்றும் வாதிடும் ஒரு புலமைப் போக்கு இந்தியா முழுவதிலும் காணப்பட்டுவந்துள்ளது. சுதந்திரத்தின் பின் அரசியல் மாற்றத்தால், அடிநிலை மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் குறையவில்லை என்ற அறிக்கை, இப்பிரச்சினையை எவ்வாறு நோக்கல்வேண்டுமென்பது பற்றிய வினாக்களைக் கிளப்பிற்று. அந்த வேளையில் டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஈவெரா, ராம் மனோகர் லோகியா ஆகியோரின் செயற்பாடுகளும் சிந்தனைப் பின்புலங்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டன. 1980 களில் வெளிவந்த ராஜசேகர் ஷெட்டியின் எழுத்துக்களிலே இதனைக் காணலாம்.

தமிழ் நாட்டில் இச்செல்நெறி வேறொரு வழிமுறை வழியே மேற்கிளம்பியது.

தமிழ்நாட்டின் காங்கிரஸ் இயக்கம் காந்தியத்தின் சமூகச் žர்திருத்தத்தை முன்கொண்டு செல்லவில்லை. இங்கு ஹரிஜன இயக்கம் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இருந்ததெனினும் அது ஒரு புரவலர் மனப்பாங்குடனேயே (Patronizing attitude) செய்யப்பட்டதெனலாம். காங்கிரசுக்குள்ளேயிருந்தோர் சிலர் பிராமணரல்லாதார் நலன்களை முன்வைக்க சென்னை மகாஜன சபையினைத் தோற்றுவிக்க வேண்டி வந்தது (திருவிக முதலியோர்). வைக்கம் போராட்டம் காங்கிரசின் இது பற்றிய பலவீனத்தை நன்கு காட்டிற்று. சுயமரியாதை இயக்கத்துக்கான நியாயப்பாடு காங்கிரசின் சமூகச் செயற்பாட்டு மௌனங்களிலே தங்கியிருந்தது. தமிழ் நாட்டில் பொதுவுடைமை இயக்கம், விவசாயக் கூலிகளின் போராட்டத்தில், குறிப்பாகத் தஞ்சையில் முக்கியப் பங்கெடுத்திருந்ததெனினும், சுயமரியாதை இயக்கத்தின் சமூக நியாயப்பாட்டைக் கோட்பாட்டு ரீதியில் மறுதலித்தது. குறிப்பாக, சுதந்திரத்தின் பின்னர் இடதுசாரி இயக்கம், விவசாயிகள், தொழிலாளிகள் மட்டத்தில் முனைப்புப் பெற்றிருந்ததெனினும், தமிழ்நாட்டில் சமூக ஒழுங்கமைப்பு யதார்த்தத்தை விளக்குவதிற் சிரமப்பட்டது. திராவிட இயக்கம் பற்றிய வரன்முறையான கருத்துநிலை மதிப்பீடுகள் 1970 களிலேயே (அது மாநில ஆட்சித் சக்தியாக மேற்கிளம்பிய முன்னரே) மேற்கொள்ளப்படுகிறது. (உதாரணம் வி.பி. சிந்தன், ராம், ராமச்சந்திரனின் கட்டுரை 1978). சாதி, வர்க்கம் பற்றிய விளக்கங்கள் எளிமைப்படுத்தப்பட்ட வாய்ப்பாடு நிலையிலிருந்து விடுபட்டு அவற்றின் சிக்கற்பாட்டு முழுமையோடு பார்க்கப்படுவதற்கான அரசியற் சூழல் எல்லா வேளைகளிலும் நிலவாததாலும், தமிழ்நாட்டுச் சமூக ஒழுங்கமைப்பின் தனித்துவங்கள் பற்றிய வரன்முறையான ஆய்வுகள் இல்லாததாலும், மார்க்žயம் செலுத்தக்கூடிய ஒளிப்பாய்ச்சல்கள் விரும்பிய அளவு இருக்கவில்லை. தமிழ்ச் சமூகத்தைப்பற்றிய வரன்முறையான மார்க்žயக் கண்ணோட்ட ஆய்வுகள் 1960 களிலேயே தொடங்குகின்றன (உ-ம். நா. வானமாமலையின் 'ஆராய்ச்சி'). இக்காலகட்டத்திலேதான் மார்க்žயத் தீவிரவாதப் போக்குத் தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாட்டிற் பரவிற்று. இந்தப் போக்கிற் சென்ற இளந்தலைமுறையினர், தமிழ்நாட்டுச் சமூக நிதர்சனங்களின் உண்மை நிலையைக் கண்டு பெரியாரின் நடைமுறைகளை எதிர்க்கலாசார நடவடிக்கையாகவே கண்டனர்; காண்கின்றனர்.

இந்நிலையிலே சர்வதேச மட்டத்திற் பொதுவுடைமை இயக்கத்துக்கு ஏற்பட்ட சரிவு மிக முக்கியமான விடயமாகின்றது. 1917 முதல் சோவியத் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆட்சி முறைமை எழுபது வருடங்களுக்குப் பின்னும் இனத்துவ (ethnic) உணர்வைக் குறைக்க முடியவில்லையென்பதும், வர்க்கம், வர்க்க உணர்வுகள் பற்றிய நடைமுறை அனுபவங்கள் சமூகப் பாரம்பரியங்களைக் கணக்கெடுக்க வேண்டுமென்பதும் மிகத்துல்லியமாக எடுத்துரைக்கப்பட்டன. பெறெஸ்ரோயிகா'வுடன் தோன்றிய ஏகநிலைக் கருத்துச் சிதைவு மார்க்žயம் இந்தியச் சூழலிற் பிரயோகிக்கப்படும் முறைமைகள் பற்றிய பெருவினாக்களை எழுப்பின.

இத்தகைய ஒரு கருத்துச்சூழலில், தமிழ்நாட்டு நிலைப்பட்ட மார்க்žயச் சிந்தனை, பெரியாரியத்தை மீள்நோக்கச் செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது எனலாம்.

பெரியாரைப் பின்பற்றியவர்களிடையேயும் இம்மாற்றம் தெரியத்தொடங்குகின்றமையை அனுமானித்தல் வேண்டும். பெரியாரின் மறைவுக்கப் பின் அவரது உத்தியோகபூர்வக் கட்சி வலுவுள்ள அரசியலிலிருந்து ஒதுங்கித் தன்னை ஒரு 'அமுக்கக் குழு' (Pressure group) மட்டத்துக்குக் கொண்டுவர, பெரியார் கொள்கைகளின் அனைத்திந்தியப் பொருத்தப்பாட்டை (குறிப்பாக தலித் சிந்தனையில்) உணர்த்த பெரியார் வாரிசுகள் (ஆனைமுத்து குழுவினர்) பெரியாரை மார்க்žய அணுகுமுறைக்குள் கொண்டுவருகின்றன.

இந்த இரண்டு சக்திகளினதும் நகர்வுகள் பெரியாரியம் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்படுவதை ஒரு வரலாற்றுத் தேவையாக்கின.

பெரியாரின் மறைவின் பின்னரே இது பெரிதும் உணரப்படலாயிற்று (1973). பெரியார் பற்றிய இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசியத்தினைத் தமது அரசியல் நிலைபாடாகக் கொள்கின்றன. இலங்கையில் நடைபெறும் ஆயுதந்தாங்கிய ஈழத்துத் தமிழர் விடுதலை இயக்கத்தின் ஊடாட்டம், இந்தச் சிந்தனை உருவாக்கத்திற் கணிசமான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறலாம்.

இன்று முன்னணியில் நிற்கும் புலமை முக்கியத்துவமுள்ள பல இளைஞர்கள் இந்தக் கண்ணோட்டத்திற் பிராமணியத்தின் கடுமையான விமர்சகர்களாக உள்ளனர் என்பது கவனத்திற்கொள்ளப்படவேண்டிய ஒரு சமூகவியல் உண்மையாகும். இவர்கள் பற்றி இவ்வாய்வின் தொடக்கத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவர்களின் இந்த எழுத்துச் சிந்தனைப் போக்குகள், கடந்த சில வருடங்களாகக் காணப்படாத முறையில் தமிழ்நாட்டின் சிந்தனை வெளிப்பாடுகளில் இருதுருவத் தன்மையைக் காட்டுகின்றன.

இத்தகைய ஒரு புலமை நிலை தோன்றுவதற்கான இன்னுமோர் அரசியற் பின்புலத்தையும் அறிந்துகொள்வது அவசியமாகும்.

முன்னர் பொதுவுடைமைக் கட்சிகளோடு தொடர்புகொண்டிருந்த, அவற்றிலிருந்து பிரிந்து சென்றவர்களே பெரியாரின் மீள்கண்டுபிடிப்பில் முன்னுக்கு நிற்கின்றனர்.

ஆனால், இந்த மீள்கண்டுபிடிப்பில் ஒரு முக்கிய அமிசம் உள்ளது. இந்தப் பெரியாரிய மீட்பு, செயற்பாடு சார்ந்த ஓர் அரசியல் நடைமுறையாக மாறாது, பண்பாட்டுத் துறை நடவடிக்கையாகவே உள்ளது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.

பெரியார் பற்றிய இந்த மீள்கண்டுபிடிப்பு, சமகாலச் சர்வதேசச் சிந்தனையில் முக்கிய இடம் பெற்றிருக்கும் பெண் நிலைவாதத்தைத் தமிழ்ச் சமூகநிலைப்படுத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. குடும்பம், கற்பு பற்றிய பெரியாரின் சிந்தனைகள் இன்று சர்வதேசியப் பெண்நிலை வாதத்திலே விதந்து போற்றப்படுபவையாகவுள்ளன (நட்டாலி பிக்கெறிங்).

15

இன்றைய அனைத்திந்திய நிலைமையை எடுத்து நோக்கும்பொழுது, இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும், அவ்வப் பிரதேசங்களின் சமூக, பொருளாதார, அரசியற் பிரச்சினைகளை மையப்புள்ளிகளாகக் கொண்டே, பிரதேசக் கட்சிகள் தோன்றியுள்ளமையை அவதானிக்கலாம். அகாலி தள் (பஞ்சாப்), கண தந்திர பரிஷத் (அசாம்) போன்ற முற்றிலும் மாநில மையம் கொண்டுள்ள கட்சிகள்-தோன்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதை நோக்கும்பொழுது, தமிழ் நாட்டின் சமூக-பொருளாதார முரண்பாடுகளையும் அரசியல், பண்பாட்டுப் புலப்பதிவுகளையும் கொண்ட திராவிட இயக்கம் நிலவுவது இயல்பான ஒன்றேயாகும்.

முன்னர் கண்டபடி, இந்த இயக்கமும், முதலில் தனது தனித்துவங்களையும் ஒதுக்கற்பாடுகளையும் வற்புறுத்தி நின்ற தெனினும், காலப்போக்கிலே அனைத்திந்தியத் தேசிய இன உணர்வுடைய ஓர் இயக்கமாக மாற முனைந்துள்ளது என்பதை அவதானிக்கத் தவறக்கூடாது.

இந்தப் பிரதேசத் தள அரசியல் செயற்பாடுகள் அனைத்திந்தியக் கட்சிகளுக்கு மிகச் சுவாரசியமான, இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளன. காவிரி நீர்ப் பிரச்சினையில், காங்கிரஸ், பொதுபுடைமைக் கட்சிகள் உள்ளிட்ட கர்நாடகப் பிரதேசக் கிளைகள் ஒரு நிலைப்பாட்டையும் (தண்­ர் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டையும்) தமிழ்நாட்டுக் கிளைகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டையும் மேற்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையையும் உதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறாகத் தமிழ் நாட்டில் பிரதேசத் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும் தமிழ் நாட்டின் பிரதேசப் பிரச்சினைகளை எடுத்துணர்த்துவதற்கும் திராவிடக் கருத்துநிலை எந்த அளவுக்குப் பொருத்தமானது என்று, அதன் வரலாற்று நடைமுறைகளினடிப்படையில் வைத்து நோக்கவேண்டிய அவசியமொன்று உள்ளது.

இக் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுதுதான் 'திராவிட'/தமிழ் என்ற எண்ணக் கருக்களின் பொருளமைதி (The semantics of the concept) முக்கியமாகின்றது. இது பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம்.

16

திராவிட இயக்கத்தினது, குறிப்பாக அதன் கருத்து நிலையினது இன்றைய அவசியத்தை வற்புறுத்தி, அதற்கான தேவை பற்றிச் சிந்திக்கும்பொழுது, அனைத்திந்திய மட்டத்திற் சில பிரதேசங்களிற் காணப்படும் இந்து அடிப்படைவாதமான 'இந்துத்தவத்'தினது தன்மைகள் பற்றி உணர்ந்து கொள்வது அவசியமாகும். இந்துத்துவம் போன்ற ஒரு மத அடிப்படைவாதக் கொள்கையை எதிர்ப்பதில் பகுத்தறிவுவாதத்தைத் தளமாகக் கொண்ட திராவிடக் கோட்பாட்டுக்கு ஓர் இடமுண்டு என்பதை மறுத்தல் முடியாது.

அனைத்திந்திய மட்டத்திற் காணப்படும் இந்துத்துவ வெளிப்பாட்டின் தமிழ் நாட்டு நிலை நின்ற பாதிப்பும் முக்கியமானதாகும். இந்துத்துவக் கொள்கையை முதனிலைப்படுத்தும் பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டிற் 'பிராமணர்களின் ஆதரவு உண்மை' வலியுறுத்தப்படுகின்றது. இது தமிழ் நாட்டில் ஏற்கனவே நிலவும் பிராமண-பிராமணரல்லாதார் பிளவை மேலும் அகலப்படுத்துகிறது.

இந்த அரசியலுண்மை எம்மை இன்னொரு விடயம் பற்றிய ஆய்வுக்கு இட்டுச் சென்றுவிடுகின்றது. அதாவது அனைத்திந்திய மட்டத்தில், தமிழ்நாடு தவிர்த்த மற்றைய மாநிலங்களில் பிராமணிய எதிர்ப்பு இயக்கங்கள் உள்ளனவா என்பதையும் அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதையும் அறிதல் வேண்டும். இவ்வகையில் மகாராஷ்டிரத்தின் உதாரணம் தமிழ் நாட்டுக்குப் பெரிதும் உதவக்கூடிய ஒன்றாகும். ஜோதிராவ் பூலேயும் டாக்டர் அம்பேத்கரும் இந்த மாநிலத்திலிருந்து தோன்றியவர்களே. தலித் இயக்கம், மகாராஷ்டிரத்திலிருந்து மற்றைய பிரதேசங்களுக்குச் சென்றது.*

17

இந்தியாவில் இப்பொழுது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் 'திறந்தn பொருளாதாரக் கொள்கை', பிரதேசத் தனித்துவங்களைப் பாதிக்கும் என்பது பற்றிய ஒரு தெளிவும் இருத்தல் அவசியமாகும். ஜஸ்டிஸ் கட்சியின் தோற்றம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முனைப்பு ஆகியவற்றுக்குப் பின்னால் தமிழகத்தின் நிலையூன்றிய பொருளாதார நலன்களான நிலவுடைமையாளர், தரகு முதலாளித்துவத்தினர் போன்றோர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது இன்று பொதுவாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு பொருளியல் வரலாற்றுண்மையாகும். திராவிட முன்னேற்றக் கழகம் அதன் ஆரம்ப நிலையில் சோஷலிஸக் கொள்கைகளை வற்புறுத்தியதெனினும், அது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெரும் விவசாயிகளும் செல்வந்தக் குடியானவர்களும் (Big farmers and rich peasants) ஆதரித்தனர் என்பது தெரிய வருகிறது.

----

* பிற்குறிப்புப் பார்க்கவும்

...

இன்று காணப்படும் அனைத்திந்திய முதலாளித்துவம், தென்னாசியச் சந்தையை நோக்கி நகர்கிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் 'திராவிட' எனும் நிலைபாடு தமிழ்நாட்டினைத் தளமாகக் கொண்ட/ கொள்ள விரும்பும் முதலீடுகளுக்கு உதவும் ஒரு கருத்துநிலையா என்பதையும் மனங்கொள்ளல் வேண்டும்.

18

இவ்வாறு நோக்கும்பொழுதுதான் இனத்துவப் (ethnic) பிரக்ஞையும் அதன் பண்பாட்டுத் தளமும் முக்கியமாவதை அவதானிக்கலாம்.

இப்பிரச்சினை இன்று எம்மை வேறொரு வினாவுக்கு இட்டுச் செல்கின்றது. அதாவது 'திராவிட' என்ற அடையின் இன்றைய அர்த்தப்பாடு யாது என்பதாகும்.

நாம் ஏற்கனவே நோக்கியபடி, திராவிட என்ற அடை இன்று தெலுங்கு, கன்னடர், தமிழர், மலையாளிகள் ஆகியோருக்கான பொதுப் பெயர் என்ற நிலைமை போய், தமிழின் புராதன, 'வடமொழிப் பண்பாட்டின் எதிர் நிலை' அடையாளம் சுட்டும் ஒரு சொற்குறியீடாக, தமிழ்த்தேசியத்தின் ஒருவெளிப்பாடாக அமைகின்ற ஒரு நிலைமையைக் காண்கின்றோம்.

இந்த அடையாளத்துக்கு ஒரு பொருளாதாரப் பின்னணி உண்டு என்பதையும், அது தலித்தியத்தினாற் கேள்விக்குள்ளாக்கப்படுவதையும் ஏற்கனவே குறித்துள்ளோம்.

19

இக்கட்டத்தில் ஒரு முக்கியமான புலமைத்துவ வினாவை முன்வைப்பது ஒரு கடமையென்றே கருதுகிறேன்.

திராவிடக் கருத்துநிலை (ideology) என்பது ஒரு கருத்து நிலையா அல்லது குறிப்பிட்ட ஒரு வரலாற்றுக் கட்டத்தில் ஏற்பட்ட சமூக/ பொருளாதார/ பண்பாட்டு/ அரசியல் மாற்றங்கள் யாவற்றையும் சுட்டிநிற்கின்ற ஒரு கருத்துநிலைத் தொகுதியா (Cluster of ideologies)?

இது பற்றிய ஓர் உன்னிப்பான விவாதம் அவசியம் என்று கருதுகிறேன். திராவிடக் கருத்துநிலையின் உருவாக்கக்கூறுகளைப் பிரித்து நோக்கும்பொழுது, அவற்றுட் சில தமது வரலாற்றுப் பயன்பாட்டைப் பூர்த்திசெய்துவிட்டனவாகவும் சில அவற்றினுள்ளே கிடந்த அகமுரண்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளனவாகவும், ஆனால் சில இன்னும் வரலாற்றுத் தேவையுடையனவாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

இதன் காரணமாகவே, இந்தக் கருத்துநிலை பற்றிய சிந்திப்புக்களில் ஒரு தேக்கமிருப்பதை உணரக்கூடியதாகவிருக்கிறது (காலமாகிவிட்டது என்று கருதும்பொழுது எங்கோ ஓர் உயிர்த்துடிப்பு இருப்பது போலத் தெரிகிறது).

இந்தத் தேக்கநிலையிலிருந்து வெளிவருவதற்கு நாம் சில முக்கிய வினாக்களுக்கு விடை இறுக்க வேண்டியவர்களாகிறோம்.

(i) இது ஓர் ஆய்வு முறைமைப் பிரச்சினை--நாம் இதன் பரிமாணங்கள் யாவற்றையும் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இதன் ஓர் உள்ளக அம்சமாக இருக்கிறோமா?

(ii) இன்றைய எமது உண்மையான இரசியல் சமூகப் பிரச்சினைகள் யாவை? அவை பற்றிய தெளிவு நமக்கு இருக்கிறதா?

20

திராவிட இயக்கத்தின் வரலாறும் திராவிடக் கருத்து நிலையின் நிலைப்பெயர்வுகளும், இவற்றின் தொடர்ச்சியான வரலாற்றுப் பயன்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு நிலையில் (ஏற்கனவே குறிப்பிடப்பெற்ற), அண்மைக் காலத்தில், மிகவும் முனைப்புப் பெற்றுள்ள பிராமணரல்லாத--தமிழ் நிலைப்பட்ட சமூக அடையாளத்துக்கான புலமை எழுச்சியின் முக்கியத்துவத்தினைக் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. பிராமணரல்லாத--தமிழ் அடையாளத்தை வற்புறுத்தும் இந்தப் புலமைப் போக்கு, முன்னர் எப்பொழுதுமில்லா வகையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தன்னை நியாயப்படுத்தி எழுதிக்கொள்கிறது. இந்த எழுச்சியின் சமூக உட்கிடக்கை நன்கு உணரப்படுவது அவசியமாகும். தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளக் குறியீடுகளூடே புதைந்து கிடக்கும் சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம். அத்துடன் இந்தப் புலமைப் போக்கின் வர்க்கப் பின்புலத்தையும் அவதானித்துக் கொள்ளத் தவறக்கூடாது.

இந்தப் புலமை எழுச்சியையும் இதற்கான எதிர்வினைகளையும் (இவை இலக்கியத்திற் வெளிப்படுவதை நன்கு அவதானிக்கின்றோம்; பார்க்க: ஜெயமோகன் எழுத்துக்கள் சில) நோக்கும்பொழுது, பண்பாட்டின் அரசியல் (politics of culture) முக்கியமாகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூற்றிற் கருங்கூட்டி, இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிற் பிரதான இடத்தை வகித்த இக்கருத்துநிலை அடுத்து வரும் நூற்றாண்டிற் பெறப்போகும் இடம் யாது?

இதற்கான விடையைக் காணுவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கு.

இதற்குப் பதில் காண முனையும்பொழுது, இன்றைய உலகின் செல் நெறி ஒரு சுவாரசியமான, இரு துருவப் பாட்டைக் கொண்டது எனும் உண்மையைப் பதிவு செய்தல் அவசியம். அதாவது, இந்த உலகம் ஒரே நேரத்தில், ஒரு பூகோளக் கிராமமாகவும் (global village), அதே நேரத்தில் இனத்துவ, பண்பாட்டுத் தனித்துவங்களைப் பேணத் துடிப்பதாகவும் இயங்குகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியும் தொடர்பியற் பரம்பல்களும் முதலாவதனை எடுத்துரைக்க, இலங்கை முதல் பொஸ்னியா, பர்மா, பிலிப்பைன்ஸ் வரையுள்ள நாடுகளில் இரண்டாவதற்கான உதாரணத்தைக் காண்கின்றோம்.

இந்த இரண்டு நிலைகளையும் எவ்வாறு இணைப்பது என்பதுதான் இருபத்தோராம் நூற்றாண்டின் சவாலாக இருக்கப்போகிறது.

பிற்குறிப்பு

1997 மேயில் நிலவிய நிலைமைக்கும், இக்கட்டுரை அச்சுக்குப்போகும் 1999 செப்டெம்பர்-ஒக்டோபருக்குமிடையிலும் திராவிடக் கட்சிகளின் அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அனைத்திந்திய மட்டத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் பொழுது, தமிழக நிலையில், இது நாள் வரை திராவிடக் கருத்துநிலைக்கு முரணானது என்று கருதப்படுகிற கொள்கைகள் உடைய கட்சிகளோடு இணைந்து போட்டியிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்துத்துவக் கொள்கையின் அரசியற் சின்னமென எடுத்துக் கூறப்படும் பாரதீய ஜனதாக் கட்சியுடன் மேற்கொண்ட உறவே இங்கு பேசப்படுகின்றது.

1998 தேர்தலில் அஇஅதிமுக, பாஜகவுடன் சேர்ந்தது, அவ்வேளை திமுக தவிர்த்த தமிழ்த் தேசியக் கட்சிகளான மதிமுக, பாமக ஆகிய இரண்டும் அஇஅதிமுகவுடனிருந்தன. அது மாத்திரமல்லாமல், உத்தியோகபூர்வமாகப் பெரியாரின் வாரிசு என்று கருதப்படும் திராவிடர் கழகமும் அதற்கு ஆதரவளித்தது. அஇஅதிமுக மத்திய அரசிலும் இடம் பெற்றது.

1999 இல் அஇஅதிமுக அவ்வரசுக்கான ஆதரவை மீள்வாங்கியபொழுது, மைய அரச வீழ்வது தவிர்க்கமுடியாததாயிற்று.

அப்பொழுதும் அதனையொட்டி வந்த தேர்தலின்பொழுதும் நிலைமை மாறி, அஇஅதிமுக வீழ்த்திய கட்சிக்கு ஆதரவு கொடுப்பதென திமுக தீர்மானித்தது.

இதற்கான முழுக் காரணமும், அஇஅதிமுகவின் அரசியலுக்கு எதிர்நிலையான ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளமையே.

தமிழ்த் தேசியத்தோடு தொடர்புடையனவான பாமக, மதிமுகவும் திமுகவுடனேயே உள்ளன. திக தொடர்ந்து அஇஅதிமுகவுடன் உள்ளது.

இவ்வேளை அரசியல் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஆராய்வதற்குரிய ஒன்று அல்ல. ஆயினும் ஒன்று நிச்சயம். திராவிடக் கட்சிகளின் பிளவு வரலாற்றில் இது ஒரு புதிய கட்டம் என்பது புலனாகின்றது. ஒரு குழுமத்தின் எதிர்காலம் மற்றையதன் தோல்வியிலேயே தங்கியுள்ளது என்ற ஒரு நிலைப்பாடு திமுக, அஇஅதிமுக ஆகிய இரு பக்கங்களிலும் காணப்படுகிறது.

இதனால் ஏற்பட்டுள்ள கட்சிகளிடையே இன்றுள்ள மோதுகை, அடித்தளத்தில், இவ்வியக்கத்தினுள் தவிர்க்கமுடியாதபடி வந்து சேர்ந்த சனவிருப்புவாதப் போக்குக்கும் (Populist) இந்திய-தமிழ்நாட்டுப் பின்புலத்தில் தவிர்க்க முடியாதபடி ஏற்படும் சமூக-அரசியல் நிலைமைகளின் (பின் சுதந்திர காலம்) போக்குகளுக்கும் ஏற்பட்டுள்ள மோதுகை என்றம் கூறலாம்.

அரை நூற்றாண்டு காலச் சுதந்திர ஆட்சியின் பின் அனைத்திந்திய அரசியல் நிலையிற் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன:

1 பிரதேச நிலைபாடுகளின் வளர்முக முக்கியத்துவம். அனைத்திந்திய நோக்கு இறுக்கத்துக்கு முக்கியம் கொடுக்காத அளவுக்கு, பிரதேசப் பிரச்சினைகள் மேலெழும்பியுள்ளன.

அனைத்திந்திய ஒற்றுமையும் பிரதேசத் தனித்துவமும் எவ்வாறு இணைக்கப் பெறலாம் என்பதே இப்பொழுது நடந்து வரும் அரசியலின் சாரமாகும்.

2 பிரதேச நிலைகளின் சமூக அதிகார யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில், இந்தியச் சமூக ஒழுங்கமைப்பின் பிரதான அமிசமான 'சாதி' மேலோங்கியுள்ளது.

இது இந்தியாவின் பின் காலணித்துவப் போக்குகளில் (Post-colonial) முக்கியமானதாகும்.

வரலாற்று ரீதியாக நோக்கும்பொழுது,இந்தியச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளில் இது முக்கியமானது. ஆட்சி சனநாயகமயப்டப்பட இது தவிர்க்க முடியாத ஒன்றாகின்றது. பொருளாதாரச் சமவீனம், தொழிநுட்ப வளர்ச்சியின்மை, பாரம்பரிய உற்பத்தி முறைமை அடிநிலையில் ஆட்டம்காணாத் தன்மை ஆகியனவற்றுக்கும் இதற்கும் தொடர்புண்டு.

3 அனைத்திந்திய நிலையில் (மத்தியில்), பொருளாதார மாற்றுப் போக்குக்களுக்கு இடமெதுவும் கொடுக்காத உலகப் பொருளாதார நிலைமை-இதனால் அனைத்திந்திய வளர்ச்சிபற்றிக் கட்சிகளிடையே வேறுபாடின்மை தவிர்க்க முடியாததாகின்றது.

இத்தகைய ஒரு சூழலில் திராவிடக் கட்சிகள் மாநிலக் கட்சிகளாகவே தொழிற்படும் ஒரு நிலைமைக்குத் தள்ளப்படுகின்றன.

ஆனால் கருத்துநிலை நின்று நோக்கும்பொழுது, இதுவல்ல முக்கியம். முக்கியமானது யாதெனின்--அனைத்திந்தியச் சமூக அமைப்பில் பொதுப்படையாகக் காணப்படும் வருண/சாதி அமைப்பிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வன்மையான மாதிரியமாக (Model) திராவிடக் கருத்துநிலை இருக்கமுடியாது போயுள்ளமைதான்.

இதனைக் கூறும்பொழுது பெரியாரின் சிந்தனைப்போக்கு அப்படியான தளைநீக்கப் போராட்டத்துக்கான (liberation struggle) பல மைய அமிசங்களை உள்ளடக்கியுள்ளதாகும்.

பெரியாரியத்தின் அந்த அமிசங்கள் படிப்படியாக வெளிக்கொணரப்படும்பொழுது, அரசியற் செயற்பாட்டுநிலையில், கட்சிகள் மட்டத்தில், அக்கருத்துநிலை இறுகப் பேணப்பட முடியாதுள்ளமை (இதுவும் வரலாற்று நிர்ப்பந்தமே) உண்மையான ஓர் அவலமாகும்.

பெரியாரியத்தினைத் திராவிடக் கட்சிகளின் அரசியலிலிருந்து பிரித்து, அதனைத் தனியொரு சமூக விடுதலைக் கோட்பாடாக நோக்கும் ஒரு செல்நெறி இப்பொழுது காணப்படுகிறது.

மார்க்žயச் சிந்தனை மரபில் வந்தோர் இந்தப் புலமை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இத்துறையில் எஸ்.வி. இராசதுரை, வி.கீதாவின் ஆய்வுகள் முக்கியப் பங்களிப்புச் செய்துள்ளன என்று கூறலாம். இவ் ஆய்வில் 'நிறப்பிரிகை'க் குழுவினரான அ.மார்க்சும் அவரது புலமைக் குழுவினரும் ஏற்படுத்திய தாக்கம் மிகக் கணிசமானதாகும். பெரியாரியத்தைத் தமிழ் நாட்டுக்கு வெளியே இயைபுள்ள தலித் விடுதலைக் கோட்பாடாக்க முதலில் முயன்றவர் திரு ஆனைமுத்து அவர்கள்.

பெரியாருடைய சுயமரியாதைக் கோட்பாடு, சாதி விடுதலைக்கான பொருத்தமான வழி என்று வாதிடப்பட்டுள்ளது.

இன்று முக்கியப்பட்டு நிற்கும் பெண்நிலைவாதக் கோட்பாடுகளின் அடிச்சரமான ஆணாதிக்க விடுவிப்பில், பெரியாரின் கொள்கைகள் வகிக்கும் முக்கிய இடம் பற்றி அத்துறை விமர்சகர்கள் பெரிதும் சிலாகித்துக் கூறியுள்ளனர்.

ஆனால் இவற்றை நிறுவனமயப்படுத்தி வழிநடத்தும் ஒரு புலமைச் செயற்பாட்டு நிலையம் அவசியமாகின்றது.

தமிழ்நாட்டின் இன்றைய அரசியற் போக்குக்கள் அத்தகையதோர் ஏற்பாட்டினைச் சாத்தியப்படுத்துவனவாகவில்லை.

இந்நிலையில் அம்பேத்கார் கூறும் மாதிரியம்(model) முக்கியப்படுவது இயல்பே.

அம்பேத்கரியம், தலித் மக்களின் தளை இறுக்கத்துக்கான காரணிகளாக முதலாளித்துவத்தையும் பிராமணியத்தையும் கொள்கின்றது. எனவே, அந்தக் கண்ணோட்டத்தில் தலித் விடுதலை என்பது முதலாளித்துவத்துக்கும் பிராமணியத்துக்கும் எதிரான போராட்டமாக அமையவேண்டுமென்பதாகும்.

இந்த அடிப்படை முரண்பாட்டிலிருந்து விடுபடுவதற்கு மார்க்žயமும் அதன் வர்க்கப் போராட்டத் தளத்துடன், இன்னொரு மாதிரியாக (Model) உள்ளது. சாதி/ வர்க்கத்தைப் பிரிநிலைப்படுத்துவதிலும் இணைப்பதிலும் இந்திய மார்க்žயச் சிந்தனை மேலும் செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

மார்க்žயம் இப்பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்கின்றது என்பது ஒரு முக்கிய வினாவாகும். 'வர்க்கம்' என்னும் கோட்பாட்டை வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது, சாதியின் தோற்றத்துக்கும் தொடர்ச்சிக்குமான வரலாற்று, பண்பாட்டுக் காரணிகள் முக்கியமாகின்றன.

இது பற்றிய மார்க்žயச் சிந்தனை ஒருமைப்பாடு இல்லையென்பதை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.

அடித்தளம்/மேற்கட்டுமானம் போன்ற எளிமையான வாய்பாடுகள் கொண்டு இதனை விளக்கிவிட முடியாது. இந்திய வளர்ச்சிகளின் சிறப்பமிசங்களை இனங்கண்டு கொள்ளலும், அவை எவ்வாறு நடைமுறையில் இயங்குகின்றன என்பது பற்றியறிதலும் மிக முக்கியமானவையாகும்.

நமது சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளை விளங்கிக் கொள்ள, காலனித்துவ காலக் கருதுகோள்களைத் தடயமாகக் கொண்டமையின் வரலாற்று இயைபு பற்றி மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய காலம் விரைவில் வரும்.

'இந்தியச் சமூகம்' எவ்வாறு இயங்குகின்றது என்பது பற்றிய தெளிவு அவசியம்.

இதற்கான முதற்பணி, இந்தியச் சமூகம் பற்றிய விடயி நோக்கான (Objective) ஒரு விவரிப்பு அவசியமாகும். அந்த விவரிப்பு, இச்சமூகத்தின்/ சமூகங்களின் சகல அமிசங்களையும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கல் வேண்டும்.

அத்தகைய ஒரு விவரிப்பை முழு இந்தியாவும், இந்தியாவின் பிரதான பிரதேசங்களும் எதிர்நோக்கி நிற்கின்றன.

இக்கட்டுரையாக்கத்துக்கு உதவிய

நூல்கள், கட்டுரைகள்

கேசவன், கோ.,திராவிட இயக்கத்தில் பிளவுகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 1994.

சிவத்தம்பி, கா., தனித்தமிழியக்கத்தின் அரசியற் பின்னணி, சென்னை புக்ஸ், சென்னை, 1979.

---- Understanding the Dravidian Movement. NCBH. Chennai. 1995.

மார்க்ஸ், அ. ரவிக்குமார், வேலுசாமி, பொ. (பதிப்பாசிரியர்கள்), பெரியாரியம்--நிறப்பிரிகைக் கட்டுரைகள், விடியல் பதிப்பகம், கோவை, 1995.

Eugene F. Irshick. Politics and Social Conflict in South India, Berkeley, 1969.

Gail Omveldt, The Dravidian Movement I & II, The Hingu. 21-22 June 1999.

Geetha, V. and Rajadurai, S.V., Dalits and non-Brahmin Consciousness in Tamilnadu, Economic and POlitical Weekly, 25 Sept 1993.

--- பெரியார்--சுயமரியாதை சமதர்மம், விடியல் பதிப்பகம், கோவை, 1996.

Natalia Pikering., Recasting the Indian Nation-Dravidian Nationalism Replies to the Women's Question, Thatched Patio, Colombo, 1993.

Pandiyan, M.S.S., Notes on the Transformation of Dravidian Ideology-Tamilnadu 1900-1940, Madras Institute of Development Studies, 1994.

Rajashekar Shetty, V.I., How Marx Failed in India, Dalit Publication, Bangalore, 1981.

---- Class and Caste Struggle, Dalit Publication, Bangalore.

Ram, N., Dravidian Movement in its Pre-Independent Phases, Economic and Political Weekly, Annual Number 1979.

Ram, N., Chinthan, V.P. and Ramachandran, V.K., Dravidian Movement--A Historical Perspective, paper presented to V All India Conference of Social Scientists, Calcutta, 1978.

Sundaralingam. R., Politics and Nationalist Awakening in South India (1852-91), Delhi, 1980.

* * * முற்றும் * * *