கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  பருவமானவர்கள்  
 

தமிழில்: க. நடனசபாபதி

 

பருவமானவர்கள்

தமிழில்: க. நடனசபாபதி

----------------------------------------------------------------------

பருவமானவர்கள்

மூலம்: பெக்கி மோகன் Ph.D

தமிழில்: க. நடனசபாபதி

தேசிய கலை இலக்கியப் பேரவை

--------------------------------------------------------------------------

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு -95

நூற்பெயர் : பருவமானவர்கள்
ஆசிரியர் : பெக்கி மோகன்
தமிழில் : க. நடனசபாபதி
நன்றி : தமிழ்நாடு அறிவியல் கழகம் மற்றும்
இந்திய சுகாதார தொண்டர் நிறுவனம்
பதிப்பு : செப்ரம்பர், 2002
வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை
அச்சிட்டோர் : கௌரி அச்சகம்
விநியோகம் : சவுத் ஏசியன் புக்ஸ்,
வசந்தம் (பிறைவேற்) லிமிடட்,
44இ மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
விலை : ரூபா. 175/=

Title : Paruvamanavarkal (Adolescence)
Author : Peggy Mohan Ph.D
Translated by : K. Nadanasabapathy
Courtesy : Tamil Nadu Science Forum (TNSF) &
Voluntary Health Association of India (VHAI)
Edition : September, 2002
Publishers : Deshiya Kalai Ilakkiyap Peravai
Printers : Gowry Printers
Distributors : South Asian Books,
Vasantham (Pvt) Ltd,
No. 44, 3rd Floor,
C.C.S.M. Complex,
Colombo -11.
Tel : 335844.
ISBN No : 955-8637-10-6
Price : 175/=

------------------------------------------------------------------------------

பதிப்புரை

இன்பமான வாழ்க்கைக்கு பாலுறவுப் பழக்கவழக்கங்களும் செழுமைப்படுத்தப்படவேண்டும்

குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் இன்றும் மனித சமூகத்தின் முக்கிய கூறாகவும் தனிமனித வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அலகாகவும் குடும்பம் இருக்கின்றது. பாலியல் உறவு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாலும் இன்று குடும்பங்கள் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றன. சில குடும்பங்களில் பிள்ளைகளே இல்லை என்ற பிரச்சினை. சிலதில் கூடிய எண்ணிக்கையில் பிள்ளைகள் இருக்கின்றன என்பது பிரச்சினை@ கணவனுக்கும் மனைவிக்குமிடையேயான பாலுறவில் சமநிலையின்மை; கணவன் மனைவி என்ற உறவுக்கு வெளியில் கணவனோ மனைவியோ அல்லது கணவனும் மனைவியும் பாலுறவை வைத்துக்கொள்ளல்; திருமணமாகாதவர்கள் பாலுறவை வைத்துக்கொள்ளல்; இதனால் திருமணமாகாத பெண்கள் தாயாதலும் நெறிமுறையற்றது என்று கொள்ளப்படும் குழந்தைகள் பிறத்தலும், குடும்பத்திலுள்ள சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாதல் போன்றவற்றால் பாரிய பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

பெண்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் துன்புறுத்தல்களும் வன்புணர்ச்சியும் மேற்கொள்ளப்படுகின்றன. தந்திரமான முறையிலும் மோசடியான முறையிலும் பெண்கள் பாலியல் உறவுக்குட்படுத்தப்படுகின்றனர். சிறுவர்களும் சிறுமியர்களும் பாலியல் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

பெண்களும் சிறுவர்களும் சிறுமியர்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகத் தொடர்கின்றன. சில ஆண்களும் பெண்களும் பாலியல் வெறிக்குட்பட்டுள்ள மேனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பாலியல் உறவில் வெறுப்புக் கொண்டவர்களாகவும் பாலியல் உறவில் ஈடுபடமுடியாதபடி உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பலவீனமானவர்களாகவும் இருக்கின்றனர். இவற்றுடன் பாலியல் உறுப்புக்களில் தோன்றும் நோய்கள் பாலியல் உறவினால் பரவும் மேகநோய், செங்கமாரி, எய்ட்ஸ் ஆகிய கொடிய தொற்று நோய்களினால் பாதிக்கப் பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

குளோனிங் முறையிலும் பரிசோதனைக்குழாய் மூலமும் குழந்தைகள் உற்பத்தி செய்யப்படுவதாலும் பல சிக்கலான சமூகப்பிரச்சினைகள் தோன்றியுள்ளன. எதிர்பாலாரின் சேர்க்கையை விட ஒரே பாலாரின் தன்னினச்சேர்க்கையும் நடைமுறையில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்திற்கு மாறாக புதிய சமத்துவமான, சமநீதியை நிலைநாட்டக்கூடிய ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டுள்ளவர்கள் மேலே கூறப்பட்டுள்ள பாலியல் பிரச்சினைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளவற்றை தட்டிக்கழித்து விடமுடியாது. அவை வெறுமனே பாலியல் பிரச்சினைகளல்ல. சமூகத்தின் ஏற்றத் தாழ்வான வளர்ச்சியினால் பல்வேறுவிதமான சில திட்டமிட்ட நடவடிக்கைகளினால் வளர்க்கப்பட்டுள்ள பிரச்சினைகளுமாகும்.

நிலப்பிரபுத்துவ சிந்தனைகளின் ஆளுகைக்குட்பட்ட நாடுகளில் அல்லது சமூகங்களில் மதரீதியான அணுகுமுறைகளுக்குட்பட்ட நிலையில் பாலியல் பிரச்சினைகளுக்குட்பட்டவர்களை பிழையானவர்களாக ஒழுக்கங்கெட்டவர்களாக குற்றம்புரிந்தவர்களாக கொண்டு பிரச்சினைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றன. பாலியல் என்பது பேசப்படாத விடயமாக பாலியல் உணர்ச்சிகளை அடக்குவதனையே உயர்ந்த வாழ்க்கை முறையாக இன்னும் கொள்ளப்படுகிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் அல்லது முதலாளித்துவ சிந்தனைகளின் ஆளுகைக்குட்பட்ட சமூகங்களில் பாலியல் உறவு என்பது மிகவும் வெளிப்படையானதாக சுதந்திரமான பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வதே பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகலாம் என்று காட்டப்படுகின்றது.

மேற்படி இரண்டு விதமான அணுகுமுறைகளினாலும் பாலியல் பிரச்சினைகள் பல்வேறுவிதமாக பூதாகரமாக்கப் பட்டுள்ளதேயன்றி குறைவடையவில்லை.

திருக்குறளிலுள்ள காமத்துப்பாலில் காதல் உணர்வு பற்றி சில அனுபவத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன எனலாம். பாலுறவு பற்றி இந்தியாவில் தொகுக்கப்பட்ட 'காமசூத்ரா' உலகில் பல நாடுகளிலும் பிரபல்யம் அடைந்திருந்தபோதும் ஆணாதிக்க நிலையிலிருந்து பாலியலுறவு ஆண்களின் தேவையாக மட்டும் காட்டப்படுவதாகவே இருக்கிறது. இதுவரையும் வெளிக்காட்டப்படுகின்ற பாலுறவு முறைகளில் கூட ஆணாதிக்க அணுகுமுறைகளே பெரும்பாலும் இருப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.

பேசக்கூடாத, பேசப்படாத விடயமாக இருக்கும் சூழ்நிலையில் பருவமடைந்தவர்கள் தொடக்கம் வயதானவர்கள் வரை பலவிதமான பாலியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். பாலியலுறவு சுதந்திரமாக கட்டுப்பாடற்றதாக இருக்க வேண்டுமென்ற சூழ்நிலையில் நிலவும் அதீத பாலியல் பழக்கவழக்கங்களின் பக்கம் பேசப்படாத சூழ்நிலையிலுள்ளவர்கள் ஈர்க்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றனர்.

பொதுவாக அதீத பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலான புத்தகங்கள், சஞ்சிகைகள், சினிமாப்படங்கள் என்பன பாலியல் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதாகவே இருக்கின்றன. இவை முதலாளித்துவ சமூகத்தின் ஏகாபத்திய உலகமயமாதலின் வர்த்தகத் தேவைகளை பூர்த்தி செய்வனவாக இருக்கின்றன. இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகள் மறைமுகமாகவும், பாலியல் கல்வியூட்டல் என்று கூறிக்கொண்டு வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கும் அரசாங்கங்கள் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கைகளை எடுப்பதாக காட்டுவது வேடிக்கையானது. இது தொட்டிலை ஆட்டிக்கொண்டு பிள்ளையை கிள்ளும் நடவடிக்கையாகவே இருக்கிறது. சமூக சீரழிவின் மீது அதன் இருப்பை கட்டிக்காக்கும் முதலாளித்துவ சமூகம் அச்சீரழிவுகளுக்கு தீர்வை காணும் என்பதில் நம்பிக்கை வைக்கமுடியாது.

பாலியல் தேவை, பாலியலுறவு என்பது மனித மீளுற்பத்திக்கும் மனித உடல், உள வளர்ச்சிக்கும் மகிழ்வான வாழ்க்கைக்கும் முக்கியமானதாக கொள்ளப்படுகிறது. அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றின் வரையறை அவற்றின் தேவைக்கான, பயன்பாட்டிற்கான காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை என்பவற்றை பொதுமைப்படுத்துவது கடினமெனினும் பொதுவான அணுகுமுறைகளை கோடிட்டுக் காட்டவும், குறிப்பான பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் என்பன பற்றி தொடர்ச்சியான பிரசாரங்களும் கல்வியூட்டல்களும் அவசியமாகின்றன.

எனவே புதிய ஜனநாயகம், புதிய நாகரீகம், புதிய வாழ்வு என்பவற்றை நோக்காகக் கொண்டு செயற்படும், கலை இலக்கிய முயற்சிகளை செய்துவரும் தேசிய கலை இலக்கியப் பேரவை 'பாலியலை' ஒதுக்கி வைக்க முடியாது. பாலியல் சீரழிவுகள் பற்றி விமர்சனம் செய்வது மட்டும் போதாது. மாற்று நடவடிக்கைகளினால் மனித சமூகம் முன்னேற்றப்பட வேண்டும். பாலியல் இயல்பானது என்று கூறிவிட்டு மௌனமாக இருந்துவிடாமல் அதில் காணப்படும் கோளாறுகளால் வெளிப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

பருவமானவர்கள் என்ற இந்த நூல் பாலியல் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்ட அனைத்திற்கும் தீர்வு காணாவிடினும் 'பாலியலுறவு' பற்றிய அடிப்படை உண்மைகளை கல்வியாக ஊட்ட முயற்சிக்கிறது. இது பாலியல் பிரச்சினைகளுக்குள்ளாகும் அனைவருக்கும்குறிப்பாக பெரும்பாலும் சீரழிவுக்குள்ளாக்கப் படுகின்ற இளம்வயதினருக்கு இன்றியமையாததாகும். இளம்வயதினர் தங்களை செழுமைப் படுத்திக்கொள்ள வேண்டிய பலவிடயங்களில் பாலியலும் ஒன்றாகும்.

பாலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், பாலியல் சீரழிவுகளிலிருந்து சமூகத்தை மீட்டு பாதுகாக்கவும் தொடர்ச்சியாக பலவிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சியாக இவ்வெளியீட்டைக் கொள்வோம்.

இந்நூல் 'தமிழ்நாடு அறிவியல் கழகத்திற்காக' (Tamil Nadu Science Forum - TNSF) சென்னை சவுத்விஷன் நிறுவனத்தால் 2000 ஆண்டு ஒக்ரோபரில் Adolscence-to walk you through என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான ஆங்கிலச் சுவடியின் (text) ஆசிரியர் கலாநிதி. பெக்கி மோகன் (Paggy Mohan Ph.D) ஆவார். அதனை எமது வெளியீட்டு முயற்சிக்காக தமிழில் மொழி பெயர்த்து வழங்கியவர் க. நடனசபாபதி ஆவர்கள். இவரது மொழிபெயர்ப்பில் ஏற்கனவே "லூசுன்-போர்க்காலச் சிந்தனைகள்" என்ற நூல் எம்மால் வெளியிடப்பட்டுள்ளது.

நூல் வெளியீட்டில் எமக்குத் தொடர்ந்தும் ஆதரவாக உள்ள புத்தகப் பண்பாட்டு ஆர்வலர்களுக்கும், அச்சிட்டு உதவிய கௌரி அச்சகத்தினருக்கும், நண்பர் எஸ். இராஜரட்ணம் அவர்களுக்கும், அட்டை ஓவியத்தினை வரைந்த ஓவியர் இரா. சடகோபன் அவர்களுக்கும், கணனி வடிவமைத்த பிரியா, சிந்தியா, சோபனா ஆகியோருக்கும் எமது நன்றிகள்.

அனைவரதும் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

தேசிய கலை இலக்கிய பேரவை

44, மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.

------------------------------------------------------------

முன்னுரை

குமரப் பருவம் என்றும், கட்டிளம் பருவம் என்றும், இந் நூலில் பருவமானவர்கள் என்றும் குறிப்பிடப்படும் இப்பருவமானது மனித வாழ்வில் துரித மாற்றங்களும், சவால்கள் நிறைந்ததுமான ஒரு காலகட்டமாகும். பருவமானவர்கள் மட்டுமின்றி அவர்தம் பெற்றோர்களும் கூட பற்பல சவால்களை எதிர் கொள்கின்றனர்.

வீட்டுச் சுவர்கள்
நடுங்குகின்றன.

சன்னல் கதவுகள்
படபடக்கின்றன.

மேசைக் கதிரைகளும்
தள்ளாடுகின்றன.

தந்தையும் தாயும்
குதறும் வார்த்தைகளுடன்

சகோதரர்கள்
மிரட்சிப் பார்வைகளுடன்

அவளோ
அலட்சியத்தின்
விளிம்பில்

வெளியே சென்றவள்
வேளை தவறி
வீடு திரும்பிய வேளை.

ஓ! இது
குமரப் பருவமா?
குமுறும் பருவமா?
எங்கோஇ எப்பொழுதோ படித்த வரிகள்.

இன்று நண்பர் க. நடனசபாபதியின் பருவமானவர்கள் நூலைப் படிக்கும்போது இக் கவிதை நினைவில் வந்து மனத்தை அருட்டுகிறது. ஆம் பருவமானவர்களின் உணர்வுகளைப் புரிந்து, அவர்களின் சுதந்திரத்திற்குக் கடிவாளமிடாது, ஆதரவுடன் வழிகாட்ட நாம் தவறிவிட்டோமா? அவர்கள் மீதான அக்கறையில் நாம் தனி மனிதர்களாக மட்டுமின்றி சமுதாய ரீதியிலும் தவறிவிட்டோமா?

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலப் பகுதி பருவமடைதல் ஆகும்.

பருவமடைகின்ற, பருவமடைந்த காலப் பகுதியில் உடல் அமைப்பில் பல துரித மாற்றங்கள் நிகழ்கின்றன. உளரீதியாக மாறுபட்டதும் புதுமையானதுமான உணர்வுகள் அங்கு முகிழ் கொள்கின்றன. வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்த உறவுகள் பாடசாலை, ஆசிரியர்கள், நண்பர்கள், சுற்றவுள்ளவர்கள் என விரிந்து, இறுதியில் எதிர்பாலினரில் அக்கறை எடுக்கத் தொடங்குகிறது. விரிந்து வரும் வட்டத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைத் தேடிக் கொள்ள அவாவுறுகிறது. இந்நேரத்தில் அப் பிள்ளைகள் கண்ணாடி முன் சீப்புடனும் பவுடருடனும் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்டு சினக்காதுஇ புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் பெற்றோர்கள் எத்தனை பேர்.

கரு குழந்தையாகிறது.

அது வளர்ந்து பருவமடைகிறது.

பருவமானவர்கள் காலகதியில் குடும்ப வாழ்வில் புகுந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து, இன்னுமொரு சுழற்சிக்கு வித்திடுகின்றனர்.

நடுத்தர வயதும், முதுமையும் அண்மிக்கிறது.

ஒவ்வொரு பருவகாலங்களையும் நாம் சரிகளும் தப்புகளும் இணைய அணுகி வாழ்க்கையை ஓட்டுகிறோம். உண்மையில் எது சரி எது பிழை என அறியாமல் அனுபவத்தால் அறிவு பெற விழைகிறோம். அல்லது எம்போன்ற கற்றுக் குட்டிகளான நண்பர்கள், உறவினர்கள் மூலம் தெளிவு பெற விழைகிறோம். இது சரியானதுதானா?

விஞ்ஞானமும் அறிவியலும் வியத்தகு வளர்ச்சி பெற்றுவிட்டன. ஒவ்வொரு துறையிலும் நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்பேறாக உலகின் ஒரு மூலையில் பெற்ற ஆய்வு முடிவுகளை மறு அந்தத்தில் உள்ள கிராமங்களும் மறுகணம் பெறக்கூடியவாறு தகவல் புரட்சி வழிவகுத்துள்ளது. அவற்றைப் பெறுவதற்கு ஆங்கில மொழி அறிவின் போதாமை ஒரு தடைக்கல்லாகப் பலருக்கு இருக்கக் கூடும். அத்துடன் எமது நீண்ட வரலாறு கொண்ட பண்பாட்டுப் பின்னணியானது பருவ மாற்றங்களையும், பாலியல் பிர்ச்சினைகளையும் தமது பிள்ளைகளோடு ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடைக்கல்லாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

அதேபோல் பாலியல் கல்வி பாடசாலைக் கல்வித்திட்டத்தில் அடங்கியிருந்த போதும் மேற்கூறிய காரணங்களால் ஆசிரியர்களால் போதிக்கப்படாமல் இருப்பதையும் காண்கிறோம்.

இத்தகைய சூழலில் நடனசபாபதியின் இம்மொழிபெயர்ப்பு முயற்சி எமது சமூகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பருவமானவர்கள் பற்றிய மிக அண்மைக்கால விஞ்ஞான ரீதியான சிந்தனைகளை அது எமக்குத் தருகிறது. 2000 ஆண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலப்பிரதியை இவ்வளவு விரைவாக எமக்கு தமிழில் தரும் நடனசபாபதி எமது நன்றிக்குரியவர்.

இந்நூல் எவை பற்றிப் பேசுகிறது? பருவமடைதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் பேசுகிறது எனலாம்.

பருவமடையும் போது ஆண்களிலும் பெண்களிலும் ஏற்படுகின்ற உடல், உருவ மாற்றங்களையும் வளர்ச்சிப் படிகளையும் தெளிவாக விளக்குகிறது. அவர்களுக்கு அந்நேரத்தில் ஏற்படக்கூடிய சில சில்லறைப் பிரச்சினைகளான முகப்பருக்கள், உடல்மணம், உடல் உரோமங்கள், குரல் மாற்றங்கள், பிறப்புறுப்பின் அளவு, மார்பகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.

இவை தவிர பாலியல் உணர்வுகள், காதல், முத்தம், உடலுறவு ஆகியவை பற்றி வெளிப்படையாகவும் ஆபாசமின்றி எல்லோரும் படிக்கக்கூடிய முறையில் இந்நூல் பேசுகிறது. அவ்வுணர்வுகள் இயற்கையாகவும், பாரம்பரிய ரீதியாகவும் தணிக்கப்படும் முறைகள் பற்றிப் பேசுவதுடன் நின்றுவிடாமல் பருவமானவர்கள் வெளியே பேசக் கூச்சப்படும் முதல் வெளியேற்றம், படுக்கை நனைதல், சுயவெளியேற்றம், தன்னினச் சேர்க்கை போன்ற இளம் சமுதாயத்தினர் அறிய வேண்டிய பல்வேறு விடயங்களை பற்றி ஆணித்தரமான கருத்துக்களை துணிவாகக் கூறுவது வரவேற்கத்தக்கது.

இவை பற்றிய பல கேள்விகளைக் கேட்க எண்ணியும் வெளிப்படையாகப் பேசத் தயங்கும் இளவயதினரை தினமும் வைத்தியசாலைகளில் காண்கிறோம். அவர்கள் உள்ளக் கிடக்கையைப் புரிந்து விளக்க முற்படுகிறோம். இதற்கு மேல் இன்னும் எத்தனை பேர் வெளியுலகில் பேசா மடந்தைகளாகத் தம்முள் மறுகி, கவலையுற்றுச் சோர்ந்து கிடப்பர். அவர்கள் அனைவருக்கும் இந்நூல் வரப்பிரசாதமாகும்.

இவற்றிற்கு மேலாக கருத்தடை முறைகள் பற்றியும், இருபாலாரும் எதிர் கொள்ளும் பாலியல் வல்லுறவுகள் பற்றியும் அவற்றைத் தடுக்கும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறது. புகைத்தல், மதுபானம், போதைப் பொருட்களுக்கு ஆட்படுவதினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் எடுத்துக் கூறுகிறது.

எயிட்ஸ், ஹேர்பிஸ் அடங்கலான அனைத்து பாலியல் நோய்கள் பற்றியும் கூறுவதோடு அவற்றைத் தடுக்கும் முறைகள் பற்றிய விபரமான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே பருவமானவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு அவர்களது உடலியல், உளவியல், பாலியல் பிரச்சினைகள் பற்றி நேரிடையாகப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதால் பிள்ளைகள் வழிதவறி நடக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு மனந்திறந்து பேசுவதற்கான தெளிவையும் ஆற்றலையும் பெற்றோர்கள் பெறுவதற்கு இந்நூல் உதவுகிறது. உண்மையில் நூலின் இறுதியில் பெற்றோருக்கான வழிகாட்டலும் இணைக்கப்பட்டுள்ளது. இது நூலை முழுமைப்படுத்துகிறது. புத்தகத்தைப் படித்தும் கூட பெற்றோர்களால் வெளிப்படையாகப் பேச முடியாவிடின் புத்தகத்தை அவர்களிடம் படிக்கக் கொடுங்கள். அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பருவமானவர்களும் அவர்தம் பெற்றோர்களும் மாத்திரமின்றி ஆசிரியர்களும், இளைய தலைமுறையினருடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது என்று திடமாகச் சொல்லலாம். பாடசாலை நூலகங்களில் நிச்சயம் இடம்பெற வேண்டியது. எமது தமிழ் தினசரிகள் தமது மருத்துவப் பகுதியில் இதனைத் தொடராக வெளியிட்டால் மேலும் அழுத்தமான தாக்கத்தை எமது சமூகத்தில் ஏற்படுத்தும் என நம்பலாம்.

நூல் கேள்வி பதில் வடிவில் எழுதப்பட்டிருப்பதால் வாசகனோடு நேரிடையாகப் பேசுவது போல இருக்கிறது. இது வாசிப்பை இலகுவாக்கி வாசகனைத் தன்னோடு ஈர்த்துக் கொள்ள உதவுகிறது.

அத்துடன் நடனசபாபதியால் நல்ல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பொருத்தமான கலைச் சொற்களை மிகுந்த தேடல்களின் மூலம் பெற்றிருக்கிறார். ஆயினும் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் இறங்கும்போது ஒவ்வொரு வசனமாக மொழிபெயர்ப்புச் செய்வது அவசியம்தானா என்ற கேள்வியும் எழுகிறது. கருத்தை உள்வாங்கி தமிழ் மொழியின் வசனநடைக்கு ஏற்ப மொழிமாற்றம் செய்வது வாசகனுக்கு மேலும் ஏற்புடையதாக இருக்கும் எனப்படுகிறது.

நண்பர் நடனசபாபதி உள்ளத்தால் என்றும் இளைஞர். எமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எந்நேரமும் துடிப்பவர். விஞ்ஞான உணர்வும் விஞ்ஞான ரீதியான பார்வையும் எமது சமூகத்தில் காலூன்ற வேண்டும் என்று அவாவி நிற்பவர். பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலாமன்றம், லயன்ஸ் கழகம், இலங்கை விஞ்ஞானச் சங்கம் போன்ற அமைப்புக@டாகப் பல்வேறு சமூக சேவைகள் ஆற்றியவர். தமிழ்ப் பிரதேசங்களில் விஞ்ஞான அறிவை மாணவர்களிடையேயும் வளர்ந்தவர்கள் இடையேயும் பரப்புவதில் 1975 முதல் இலங்கை விஞ்ஞான சங்கம் ஊடாகப் பெரும் பணியாற்றி வருகிறார்.

ஊற்று, விஞ்ஞான முரசு போன்ற சஞ்சிகைகளில் இவரது பல ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. விஞ்ஞான முரசின் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கை வானொலி ஊடாகவும் விஞ்ஞான அறிவைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளார். யாழ் நீர் பற்றிய இவரது ஆக்கங்கள் பரவலான கணிப்பைப் பெற்றமை இப்பொழுதும் நினைவு கூரத்தக்கதாகவுள்ளது.

மொழிபெயர்ப்பும் இவருக்கு கைவந்த கலை. போர்க்காலச் சிந்தனைகள் என்ற நூல் சில ஆண்டுகளுக்கு முன் தேசிய கலை இலக்கியப் பேரவை ஊடாக வெளிவந்து பெரு வரவேற்பைப் பெற்றது.

காலத்தின் தேவையறிந்து அக்கறையோடு செய்யப்பட்ட அவரது இம் முயற்சியைப் பாராட்டுகிறேன். புத்தகங்களோடும், மொழிபெயர்ப்புகளோடும் தமிழ் அறிவியல் இலக்கியத்திற்கு மேலும் வேகத்தோடு அவர் பங்களிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி

டாக்டர்.எம்.கே. முருகானந்தன்
22.06.2002.
டிஸ்பென்ஸறி அன்ட் ஸேஜறி
348, காலி வீதி
கொழும்பு-06.
தொ.பே. 559545.

-------------------------------------------------------------------------------------------

என்னுரை

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் நெல்லியடிப் பிரதேசத்தில் வைத்தியத் தொழில் மேற்கொண்டு வந்த வைத்தியர் ஒருவர் பெண் ஒருத்தியின் கருப்பத்தைக் கலைக்க முற்பட்டபோது அவள் இறக்க நேரிட்டது. இதன் காரணமாக அந்த வைத்தியருக்கு நீதிமன்றம் நான்காண்டு கடூழியச் சிறைவாசம் வழங்கியது. தொடுக்கப்பட்ட வழக்கின்படி உயர் வகுப்பைச் சார்ந்த பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வாலிபனோடு உறவுகொண்டு கர்ப்பிணியானாள். வைத்தியரிடம் உண்மை நிலையைப் பாதிக்கப்பட்டவர் எடுத்துக் கூறாத காரணத்தால் கர்ப்பம் கலைக்க முற்பட்ட பெண் இறக்க நேரிட்டது.

இந்த வழக்கினை நன்கு ஆராய்ந்த போது அனர்த்தத்திற்கு மூலகாரணம் இளைஞனுக்கும் யுவதிக்கும் பாலியல் அறிவு இன்மையே என்ற முடிவுக்கு வந்தேன். பாலியல் அறிவை ஊட்டக்கூடிய நூலொன்றை யாராவது எழுதி வெளியிட மாட்டார்களா என்று எதிர்பார்த்தேன். இறுதியாக இந்தப் பணியை நானே ஏற்று இதனை மொழிபெயர்த்து வெளிக்கொணர முயன்றுள்ளேன். இந்தப் பாலியல் அறிவு பாடசாலைகளில் பயிலும் பருவமானோருக்கு அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சாதாரண மக்களையும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சென்றடைய வேண்டும் என்னும் பணியில் கடந்த இரு தசாப்த காலத்திற்கு மேலாக ஈடுபட்டுள்ள எனக்கு இதனை நிறைவேற்ற வேண்டும் என்ற அவா பெரிதும் தூண்டியது. எனது விருப்பத்திற்கு சதாகாலம் ஊக்கமும் உற்சாகமும் தந்துவந்தவர் நண்பர் சோ. தேவராஜா அவர்கள். நூலை மிகுந்த உத்வேகத்துடன் தமிழாக்கித் தந்தேன். புத்தக உருவில் உங்களிடையே உலாவரும் கைங்கரியத்தை தேசிய கலை இலக்கியப் பேரவையினர் செய்துள்ளனர்.

வைத்தியத் துறையில் புகுந்துள்ள சில கலைச் சொற்களுக்கு ஈடான தமிழ் தந்து உதவியவர்கள் பேராசிரியர் கலாநிதி அருட்பிரகாசம், கலாநிதி மதியழகன், வைத்திய மாணவன் ராஜ்கணேஷ் ஆகியோரே. இவர்கள் என்றும் எனது நன்றிக்கு உரியவர்கள் ஆவர்.

இந்நூலுக்கு முன்னுரை தந்துதவிய நண்பர் வைத்திய கலாநிதி முருகானந்தம். எனது நன்றிகள் என்றும் அவருக்கு உண்டு.

எனது முன்னேற்றத்தில் எப்பொழுதும் ஆர்வமும் அங்கலாய்ப்பும் கொண்ட எனது தாய் தந்தையருக்கு இந்த நூலை எனது காணிக்கையாக முன்வைக்கிறேன்.

எனது ஏற்றமே தனது ஏற்றம் என்று கருதி என்றும் துணை நிற்கும் எனது வாழ்க்கைத் துணைவி பெற்றுள்ள இடம் என்றும் நின்று நிலைக்கட்டும்.

கல்கிசை க. நடனசபாபதி
2002

----------------------------------------------------------------------

பொருளடக்கம்

பருவமானவர்கள் 1
உடல் மாற்றங்கள் (பெண்கள்) 2
மாதவிடாய் 8
மார்பகங்கள் 15
பருக்கள் 21
மணம் 23
உடல் உரோமம் 25
சந்தேகநிலையும் முரண்பாடுகளும் 26
உடல் மாற்றங்கள் (ஆண்கள்) 28
வளர்ச்சி 28
பருக்கள் 40
மணம் 41
ஆண்களின் குரல் 43
விருத்தசேதனம் செய்தல் 44
ஆண்குறி 45
ஹிஜ்ராக்கள் 47
பாலியலும் அது தொடர்பான பிறவும் 48
பாலியல் உந்தல் 48
சுயமாய் விந்து வெளியேற்றுதல் 50
காதல் வயப்படுதல் 57
பாலியல் 60
பாலியலால் பரவும் நோய்கள் 64
ஏமாற்றங்கள் 73
வன்கலவியும் பாலியல் துஷ்பிரயோகமும் 74
கருத்தடைமுறைகள் 80
அபாயங்களும் முரண்களும் 93
பெற்றோரிடமிருந்து விடுதலை 93
புலிமியா, அனோறெக்ஸியா,
உடற்கட்டமைத்தல் 100
இரட்டை நிலைப்பாடுகள் 109
அபாயங்களும் போதைமருந்துகளும் 114
பெற்றோருக்கு:
பூர்வீகத்திலிருந்து உயிர்வாழ்வோரே
பருவமானவர்கள் 120

-------------------------------------------------------------------

பருவமானவர்கள்: (ADOLESCENCE)

பருவமானவர்கள் பற்றிய புத்தகம் ஒன்று இரண்டாம் தசாப்த வயதை எட்டிய இலங்கைப் பிள்ளைகளுக்குத் தேவை தானா?

பருவமானவர்கள் பற்றிய அந்நிய தேசத்து புத்தகமொன்றை மேலெழுந்த வாரியாக வாசிக்கின்ற இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் இலங்கைப் பிள்ளைகள் சுவாரசியமானதுதான் என்று கூறுவர். ஆனால் இவை எமக்குப் பழக்கப்படாதவை. இதைப்பற்றி நாம் ஏன் இங்கு கவலைப்பட வேண்டும்?

டில்லியில் வாழும் பெண்ணொருத்தி இதனை இப்படிக் கூறினாள். இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிறநாட்டவருக்கு இவையெல்லாம் பிரச்சினைகளாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தாம் விரும்பியபடி எதனையும் செய்யலாம். ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பெற்றோர் எம்மை எதனையும் செய்ய விடுவதில்லை. இது எங்கள் பிரச்சினை. பருவமான இலங்கையர்கள் தாங்கள் அடைந்து வரும் மாற்றங்களைப் பற்றிய சாதாரணமாக தகவல்களைக் கூட அறியாது பருவமாற்றம் பற்றி கற்பனா உலகில் உலாவருகின்றனர். இந்தக் கற்பனைகள் எல்லாம் இரண்டாம் தசாத்த வயதை நோக்கி நடைபோடுவோரை நம்பிக்கை இழந்த நிலைக்கும் அழகீனமான நிலைக்கும் கவலை தோய்ந்த நிலைக்கும் இட்டுச் செல்கிறது. பிற நாடுகளில் வாழும் பருவமானவர்களின் கற்பனைகளோ பெரிதும் மாறுபட்டவை.

பருவமானவர்கள் என்றால் என்ன?

சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்து பிள்ளையைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை வாழ்க்கையில் அடையும் பருவமாகும்.

இதன் படி பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியானதும் உளரீதியானதுமான மாற்றங்கள் எம்மை புதிய உறவுகளை ஏற்று பொறுப்புடையோராக ஆக்குகிறது.

இப்புத்தகம் எப்படி உதவ எண்ணியுள்ளது?

முதலாவதாக, பருவமாகின்ற போது உடல் தோற்ற ரீதியான மாற்றங்களைப் பற்றிய சாதாரண தகவல்களை தருகின்றோம். இதன் காரணமாக பாதுகாப்பு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமோ என்ற அச்சம் அகலுகிறது. எம்மைப் போலவே அநேகர் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, உளரீதியான மாற்றத்தால் உலக வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. அனுபவம் நல்லதோர் ஆசிரியன். ஏற்படும் தோல்விகள் பயனுள்ள பாடங்களைத் தருகின்றன. சில சம்பவங்கள் உங்களுக்கு கவலையைத் தரும். இப்புத்தகம் உங்களுக்கு நண்பனாகச் செயல்பட்டு உங்களை வழிநடத்திச் செல்லும்.


உடல் மாற்றங்கள்;
(பெண்களே முதலில்)
(PHYSICAL CHANGES - GIRLS)

ஏன் பெண்கள் முதலில்?

ஏனெனில் பெண்கள் ஆண்களுக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பருவமாகி விடுகின்றனர்.

எப்பொழுது பருவ வளர்ச்சியடைதல் (Growth) ஆரம்பமாகிறது?

ஒன்பது அல்லது பத்து வயதிலேயே இம் மாற்றங்களைக் காணக்கூடியதாய் இருக்கும். இது சற்று முன்பாகவோ பின்பாகவோ நிகழலாம். இம்மாற்றம் ஏற்படும் சராசரி வயது பத்து ஆகும்.

பருவமாவதற்கு எது காரணமாகிறது?

இதெல்லாம் ஏற்படக் காரணமாய் இருப்பது மூளையின் ஒரு பகுதியான உப தலமஸ் ஆகும். இந்த உபதலமஸ் ஓமோன்கள் என்கின்ற இரசாயனப் பதார்த்தங்களைச் சுரக்கின்றது. இவை பருவமாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வேறு ஓமோன்களைத் தட்டி எழுப்புகிறது. இவை உங்களை வளர்ந்த பெண் ஆக்குகின்றன.

நீங்கள் ஏழுவயதாய் இருக்கும் போதே இந்த ஓமோன்கள் முதன் முதலாகச் சுரக்கத் தொடங்குகின்றன.

ஓமோன்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உரியவை. பெண்களின் உடல் கூடுதலான பெண் ஓமோன்களையும் சிறிதளவு ஆண் ஓமோன்களையும் சுரக்கின்றன.

சில பெண்கள் பருவமாவதற்கு முன் பொருமிக் காணப்படுவதேன்?

பருவமாவதற்கு சற்று முன்பாக ஏற்படும் திடீர் வளர்ச்சியின் போது சற்று பருமனாகிறார்கள். இதனை இளமைக் கொழுப்பு என்பார்கள். கூடுதலான இளமைக் கொழுப்பு பெண் பருவமாகப்போகிறாள் என்பதை மூளைக்கு அறிவுறுத்தும் அறிகுறியாகும். மெல்லிய பெண்கள் இந்த அறிவுறுத்தலைச் செய்யாதபடியால் காலம் தாழ்த்தியே பருவமாகின்றனர். வளர்ச்சி முகிழ்ந்ததும் இளமைக் கொழுப்பு மறைகிறது. 15,16 வயதைப் பெண் அடையும் போது சாதாரணமாக இது போய்விடுகிறது. அதற்குப் பிறகு ஏற்படும் பருமனை இளமைக் கொழுப்பு என்பதில்லை.

முதலில் தோன்றும் மாற்றம் என்ன?

வளர்ச்சி, நீங்கள் உயர்ந்து இருப்பீர்கள். இது நாடகம் போன்று நடைபெறுகிறது. ஏனெனில் முன்னிரு ஆண்டுகளாக வளர்ச்சி குன்றியிருக்கும். இது ஆகாய விமானம் இறங்கு பாதையில் ஓடி மேலே எழுவதற்குமுன் உள்ள நிலையை ஒத்திருக்கிறது. வளர்ச்சி ஆரம்பிக்குமுன் அநேக பெண்கள் எவ்வளவு உணவை உட்கொண்ட போதிலும் மெலிந்தும் கால்கள் நீண்டும் காணப்படுவர்.

இத்தகைய வளர்ச்சியின் போது சற்று கூடுதலாக நித்திரை கொள்ள விரும்புவர். கிழமை முடிவு நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சற்று நேரங்கழித்தே நித்திரை விட்டு எழ விரும்புவர். பிற்பகல் நேரமும் சற்று நேரம் நித்திரை கொள்ள விருப்பம் கொள்வர். ஏனெனில் வளர்ச்சிக்குரிய ஓமோன் நித்திரை கொள்ளும் போதுதான் சற்று அதிகமாகச் செயல்படுகிறது.

இந்த வளர்ச்சி ஓமோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது உண்மையில் அன்றோஜன் என்கிற ஆண் ஓமோன் ஆகும். இதில் ஆச்சரியமானது என்னவென்றால் எந்த ஓமோன் வளர்ச்சியைத் தூண்டக் காரணமாயுள்ளதோ அதே ஓமோன் வளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அதன் காரணமாகத்தான் சிலர் முன்னரே வளரத்தொடங்கி விரைவிலேயே அவர்களது வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. அதனால்தான் நன்றாக உயருவதில்லை. அதன் காரணமாகவே காலம் தாழ்ந்து வளர ஆரம்பித்தால் காலம் கடந்தே வளர்ச்சி முடிவுறுகிறது. அதனாலேயே அவர்கள் உயர்ந்து வளர்கின்றனர்.

அதோடு அதிகமாகப் பசிதோன்றி பலமுறை பசி எடுக்கிறது. அதனால் கூடுதலான உணவு உண்கின்றனர். குழந்தைப் பருவம் மாறுவதையும் புதியவகை உணவில் விருப்பமும் ஏற்படுவதைக் கண்டு தயார் பூரிப்படைகிறார். இதனால் இப்பெண்ணிற்கு உணவு தயாரிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறாள். ஏனெனில் பெண் பருவமாகிவிட்டாள். காய்கறிகளிலுள்ள நச்சுத்தன்மையை நடுநிலையாக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள். அதன் நிமித்தமே சிறுபராயத்தில் வெறுப்பு ஏற்பட்டது. காய்கறிகளும் உயிர் உள்ளவையே. அதனால் அவற்றை நீங்கள் உண்ண வேண்டும் என்பதில் அவற்றிற்கு ஆர்வமில்லை. அதனால் அவை அவற்றை நச்சுப் பொருள்களாக்கி வெறுக்கச் செய்கின்றன. அவற்றை உண்டால் வயிற்றுவலியோ தலைவலியோ ஏற்படுகிறது. அவர்கள் வளர்ச்சியுறும் போது இந்த நச்சுப் பொருள்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர். சிறுபிள்ளைகள் சில காய்கறிகளை விரும்பாதற்குக் காரணம் அதில் காணப்படும் நச்சுத் தன்மையே. கர்ப்பிணிகள் சிலருக்கு சிலவற்றை உட்கொண்டபின் சுகவீனம் ஏற்படுவதற்குக் காரணம் கருவிலுள்ளவை அவற்றைத் தவிர்க்க விரும்புவதே. அந்தக் கருவிலுள்ள அவனோ அவளோ கர்ப்பிணிகள் அவற்றை உண்டால் தமக்குத் தீங்கு விளையும் என்று கருதுகிறது.

இந்தத் திடீர் வளர்ச்சி அவளுக்கு மாதவிடாய் ஏற்படும் போது குன்ற ஆரம்பிக்கிறது. அவளுக்கு 16 முதல் 18 வயது ஏற்பட அவளுடைய வளர்ச்சி முற்றாக நின்றுவிடுகிறது.

இந்தத் திடீர் வளர்ச்சி உயரமாக்குவது மட்டுந்தான் செய்கிறதா?


உண்மையில் இல்லை. திடீர் வளர்ச்சி தோன்று முன்பிருந்தே பெண் ஓமோன் செயல்படத் தொடங்குகின்றன. அது உடலில் வேலை செய்ய ஆரம்பித்து பருவமான பெண்ணாக மாற்றுகிறது.

நீங்கள் அவதானிக்கும் முதல் மாறுதல் என்ன?

நீங்கள் உயரமாக வளரும் போது உங்கள் இடுப்புகள் அகன்று இடுப்பு என்புகள் மாற்றமடைகின்றன. உங்கள் இடுப்பு வெறும் என்பாக மட்டுமாக இராது. பெண் ஓமோன் கொழுப்பு இடுப்பில் படியத் தொடங்கி அதற்கு வட்ட வடிவத் தோற்றத்தைத் தருகிறது. முலைக்காம்புகள் வளர்வதையோ அரும்புவதையோ அவதானிக்கலாம்.

அடுத்த மாற்றம் என்ன?

யோனிப் பிரதேசத்தில் உரோமங்கள் தோன்றத் தொடங்கும். இதனை பூப்பு உரோமம் என்பர். குழந்தையாய் இருந்தபோது இருந்த உரோமம் சற்று கருமையடைந்து அதன் பிறகு மேலும் தடிப்பமாகி முரட்டுத்தன்மை அடைந்து தலைமயிரைக் காட்டிலும் கூடிய சுருளாக மாறுகிறது.

இதற்கு அடுத்த மாற்றம் என்ன?

அடுத்தபடியாக ஒரு நாள் முலைக்காம்பிற்குக் கீழே காயப்பட்டதனால் ஏற்படுவது போன்ற நோவு தென்படுகிறது. ஏதேனும் அடிபட்டுவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் பக்கவாட்டாகப் பார்க்கும் போது ஒரு மாற்றம் தென்படுகிறது. முலைக்காம்பின் கீழ்ப் பகுதி வளர்ந்துள்ளது. உங்களுக்கு மார்பகங்கள் வந்துவிட்டன.

இதே காலக்கட்டத்தில் உங்கள் உள்ளாடையில் தெளிவான வழுவழுப்பான திரவம் படிகிறது. உங்கள் யோனிப் பகுதியில் ஈரமும் வழுவழுப்புத் தன்மையையும் உணர முடிகிறது. இந்தக் கசிவு யோனி மடலிலிருந்து வெளிவருகிறது. குதப் பகுதிக்கு அருகிலுள்ள யோனிப் பிரதேசத்தின் பெரிய இடைவெளி ஊடாக வெளிப்படுகிறது.

கண்ணிற்குப் புலப்படாத மாற்றமும் உண்டா?

ஆம். உடலினுள் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த வேளையில் தான் கருப்பை, சூலகங்கள், யோனி ஆகியவை உருவாகத் தொடங்குகின்றன.

கருப்பை என்றால் என்ன?

இது பெண்ணின் வயிற்றிலிருக்கும் தலைகுப்புறப் பிடித்தகாய் போன்ற ஒரு பை ஆகும். இது மிருதுவான தசையால் ஆனது. இதில் தான் பிறப்பதற்கு முன்பு குழந்தை வளருகிறது. குழந்தை பிறப்பதற்குத் தயார் ஆனதும் தசை மெல்ல மெல்லச் சுருங்கி குழந்தையை கருப்பையிலிருந்து கழுத்துப்போன்ற பகுதியினூடாகத் தள்ளுகிறது. இக்கழுத்துப் போன்ற பகுதியை யோனிவழியாக சுத்தமான விரலை விட்டுத் தடவி அறியலாம். அது கூம்பு வடிவத்தில் கடினமாகவும், தசைப்பிடிப்பாகவும் இருக்கும்.

யோனி என்றால் என்ன?

யோனி என்பது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பிறப்புறுப்புக்கும் இடைப்பட்ட பாதையாகும். யோனியில் நுழைவிடம் பிறப்புறுப்பின் பின்புறம் குதத்திற்கு முன்பாக உள்ளது. குழந்தை பிறக்கும் போது யோனி ஊடாகத்தான் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் மாதவிடாய் வெளிவருகிறது. இதன் வழியாகத்தான் பெண் ஆணுடன் பாலுறவு கொள்கிறாள்.

சூலகங்கள் என்றால் என்ன?

கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலக முட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. இதனால்தான் குழந்தை தாயையும் தந்தையையும் ஒத்திருக்கிறது. பருவமானபின்பு சூலகங்கள் மாதம் ஒரு முட்டையை வெளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும். இம்முட்டை கருப்பையை அடைந்து ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டி குழந்தை உருவாகிறது.

கருமுட்டை என்றால் என்ன?

கருமுட்டை என்பது பெண்ணிடமிருந்து வெளிவரும் நுண்ணியகலம். இது ஆணின் விந்தோடு சேர்ந்து குழந்தையை உருவாக்குகின்றது. அது அந்தப் பெண்ணிற்குரிய சகல அம்சங்களையும் கொண்டுள்ளது. அதனால்தான் அந்தப் பெண்ணின் பிரதி அவளின் குழந்தையில் காணப்படுகிறது.

பிறப்புறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றனவா?

ஆம். வெளிப்படையான வளர்ச்சியாக தோல் மடிப்புகள் நீள்கின்றன. இது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஏற்படுகின்றது. தோல் மடிப்புகள் சிறு பெண்பிள்ளையாக இருந்த போது இருந்தது போல் இராது. இதனால் அழகு அற்றோ வேறு விதமாகவோ போவதில்லை. தேவையற்ற போதிலும் புற பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைவதேன்? ஆண்களின் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. இயற்கை, ஆணையும் பெண்ணையும் ஒரே அடிப்படையில்தான் அமைத்துள்ளது. ஆனால் சற்று மாறுபட்டுள்ளது. அவசியம் அற்ற போதிலும் பிறப்புறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. அதேபோல்தான் ஆணுக்கும் முலைக் காம்புகள் தேவையற்ற போதிலும் சற்று வளர்ச்சி அடைகின்றன.

அடுத்து நடப்பதென்ன?

எல்லாம் பெரிய மாறுதல்கள். பூப்பு உரோமம் தடிப்பாகி கூடுதலான பரப்புக்கு வியாபிக்கின்றது. நீளமாகவும் கறுப்பாகவும் மாற்றம் அடைகிறது. கைக்குளச்ச வளைவு (அக்கிள் ) பகுதியிலும் மயிர் முளைக்கிறது. அநேக பெண்களுக்கு முகப் பரு ஏற்படுகிறது. மாதவிடாய் வரத்தொடங்குகிறது.

மாதவிடாய் (PERIODS)

மாதவிடாய் என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் கருப்பை மடிப்புகளில் போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது என்ற தகவலை பெண் ஓமோன் ஆன புறோ ஜெஸ் ரெறோன் உறுதி செய்து கொள்கிறது. கருப்பமானதும் கருக்கட்டிய முட்டை போதிய ஊட்டச் சக்தியைப் பெறுகிறது. தனக்கான உணவை கருப்பை மடிப்புகளிலிருந்து பெறுகிறது.

கர்ப்பம் தரியாத பட்சத்தில் இம் மடிப்புகளில் சேர்ந்த குருதியோடு மடிப்புகள் முறிவடையும் போது நுண்ணிய குருதிக்குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதம் தோறும் யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது.

மாதவிடாய் மாதவிடாய்ச் சங்கிலியின் ஒரு பகுதியாகும். சங்கிலி என்பது மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வாகும். இந்நிகழ்வு 21 நாட்களிலிருந் 35 நாள் இடைவெளியில் இச்சங்கிலி நிகழ்கிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

முதன் முறையாக எந்த வயதில் மாதவிடாய் ஏற்படுகிறது?

சாதாரணமாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே நடக்கிறது. இந்தத் தலைமுறையில் சற்று முன்பே ஏற்படுகிறது. மெல்லியவர்களுக்கும், உடற் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் பிந்தியே நடைபெறுகிறது.

கால இடைவெளி மிகவும் கூடுதலானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அநேக பெண்கள் கூறக்கேட்டிருக்கிறோம். தாம் தமது தாய்மாரிடமிருந்து தூர உள்ள போதோ, பாடசாலையிலோ, சுற்றுலாவில் உள்ள போதோ, உறவினர்; வீட்டில் உள்ள போதோ இடம்பெற்றது என்று. தூர இடங்களுக்கு பருவம் அடையாத பெண்களை அழைத்துப் போவோர் இந்நிலை ஏற்படக் கூடும் என்று தாய்மார்களை எச்சரித்து எதை எதை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிந்திருப்பர்.

ஆகவே தமக்கு ஏற்படக் கூடியதை முன்கூட்டியே அறிந்து உதவிக்கு வரத் தாய் அருகில் இருக்க மாட்டார் என்பதற்கு ஏற்ப என்ன செய்ய வேண்டிவரும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதவிடாய் ஏற்படும் போது நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?

முதலில் உள்ளாடை கறைபடிந்து காணப்படும். முதன் முதலில் மிகவும் மங்கலாகவும் பின் கபில நிறமாகவும் (சிவப்பு நிறமாகவல்ல) வெளியேறும். அடுத்த முறையும் தொடர்ந்து ஏற்படும் அடுத்த நாள் சற்று சிவப்பு நிறமடையும். நீண்ட நாட்களுக்கு முன்பும், கிராமப் பகுதிகளில் பெண்கள் இன்றுங்கூட மாதவிடாய்க் குருதியை உறிஞ்சி விட துணித்துண்டுகளைப் பயன்படுத்துவார்கள். இத்துணித் துண்டுகளைக் பயன்படுத்திய பிறகு தோய்த்து எடுத்தல் வேண்டும். ஆனால் இந் நாட்களில் பலசரக்குக் கடைகளில் பயன்படுத்திய பின் வீசிவிடக்கூடிய சுகாதாரமான துண்டுகள் விற்கப்படுகின்றன. மாதவிடாய் ஏற்பட்ட பின் ஓடித்திரியாமல் முன் கூட்டியே ஒரு பொட்டலத்தை வீட்டில் வாங்கி வைத்திருப்பது புத்திசாலித்தனமான செயலாகும். ஆரம்ப கட்டத்திற்காவது வழமையான அளவினையே பயன்படுத்துவது உத்தமமானது. அடிப்புறத்தில் பிளாஸ்ரிக் படையுடைய பட்டைகளும் தற்போது கிடைக்கின்றன. இவை மாதவிடாய்த் திரவ வெளியேற்றங்களை உறிஞ்சி உள்ளாடைகளை நனைவதிலிருந்து தடுக்கிறது. சிலவிதப் பட்டைகளில் ஒட்டிப் பிடிக்கக்கூடிய நாடாக்கள் உள்ளாடைகளில் ஒட்டிவிட முடிவதால் உரிய இடத்திலேயே அமைந்து விடுகின்றன.

தற்போது மேல் நாடுகளில் பெண்கள் துணித் துண்டுகளையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அவற்றைத் தோய்த்து உலர்த்தி மீண்டும் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இத்துணிகள் தாம் பயன்படுத்திவிட்டு வீசிவிடும் பட்டைகளைக் காட்டிலும் சுற்றாடலுக்குச் சிநேகமானவை.

பட்டைகளை கழுவுக்குழிக்குள் போட்டு நீரைப் பாய்ச்சாதீர்கள். ஏன் எனில் அவை குழாயை அடைத்துவிடும். அவற்றை ஒன்று சேர்த்து அழுக்கு கூடையில் போடுங்கள்.

உங்கள் உள்ளாடையில் கசிவு படிந்து விடின் படிந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இத்தினங்களில் கறுப்பு நிற உள்ளாடை அணிவது புத்திசாலித்தனமானது. குறிப்பிட்ட பகுதியில் உள்ளாடை படும் இடத்தில் பட்டையைச் சுற்றி பொலித்தீனால் சுற்றிவிடுவது பாதுகாப்பானது.

தம்பன்களைப் பயன்படுத்தலாமா?

ஆம். ஆனால், அவை மிகவும் இளம் பெண்களுக்கு சிபார்சு செய்யப்படவில்லை.

தம்பன்கள் இறுக்கப்பட்ட றேயன் நூலாலானது. மாதவிடாய் வெளியேற்றத்தை உறிஞ்சும் போது விரிவடைகிறது. தம்பனைப் பயன்படுத்தும் போது அதன் வட்ட வடிவ முனையை யோனியின் மேற்பகுதிக்கு விரல் ஆழத்திற்குத் தள்ளிவிடுங்கள். சரியாக உள்ளே தள்ளப்பட்டு இருக்கும் போது இருப்பதே உபயோகிப்போருக்குத் தோற்றாது. போதிய ஆழத்தில் வைக்கப்படாவிட்டால் வெளியே வரப்பார்க்கும். வெளியே நாடாவொன்று தொங்கும். இதனை இழுப்பதனால் தம்பனை வெளியே எடுக்கலாம். ஆரம்ப கட்டத்தில் சிறிய அல்லது சாதாரண அளவானதையே பயன்படுத்த வேண்டும்.

மிகவும் இளமையான பெண்களுக்கு தம்பன்கள் ஏன் சிபார்சு செய்வதில்லை?

இளம் பெண்களுக்கு யோனித்துவாரத்தில் மென்சவ்வு ஒன்றுண்டு. இதனை ‘ஹைமன்’ (ர்லஅநn) என்பர். இது தெறிக்காமல் இருப்பது பெண்ணின் கன்னித் தன்மைக்கு ஊறு ஏற்படவில்லை என்பதற்கு அறிகுறியாகக் கொள்ளப்படுவதனால் தம்பன் பாவிக்கும் போது ஹைமன் தெறிப்படைய ஏதுவாகிறது. ஹைமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தம்பனைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

சில பெண்களுக்கு தம்பனை உள்ளே செருகுவதில் சிரமம் ஏற்படுகிறது.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் அபாயமும் ஓரளவு உள்ளது. இது மரணம் சம்பவிக்கவும் ஏதுவாகும். 25,000க்கு ஒன்றைவிட குறைவானவர் இதற்கு இலக்காகின்றனராம்.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் யோனி முகிழில் பக்hPறியா தொற்றுநோய் பரவுவதால் ஏற்படுகிறது. உடலில் தோலெங்கும் சிவப்பு சிரங்குத் தன்மை அடைந்து சொடுகுபோல உதிர்ந்து விடுகிறது. இதன் பிறகு இரத்த அமுக்கம் வீழ்ச்சியடைகிறது. பெண்ணிற்கு அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

அதிர்ச்சி நச்சுத்தன்மை தொகுப்பு நோய் காணப்படின் உடனடியாக வைத்தியர் ஒருவரை அணுக வேண்டும்.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் வெளிநாடுகளில் விற்கப்படும் அதி உயர் உறிஞ்சுத்தன்மை கொண்ட தம்பன்களோடு தொடர்புடையது. ஏனெனில் இத் தம்பன்கள் நீண்ட நேரம் உள்ளே இருப்பது தான். இந்நோய் வராமல் தடுக்க வேண்டுமாயின் சிறிய அளவினதான தம்பன்களையே பாவிக்க வேண்டும். நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறைமாற்ற வேண்டும். அதனால், இரவு வேளைகளில் பட்டைகளைப் பயன்படுத்துவது நல்லது.


மாதவிடாய் சிலவேளைகளில் நோவை உண்டு பண்ணுவதேன்?

யோசித்துப் பாருங்கள். முதலில் ஏற்படும் மாதவிடாய் நோவை உண்டுபண்ணுவதில்லை. இரண்டாண்டுகளுக்குப் பின்பே நோவு ஏற்படுகின்றது அல்லவா?

மாதவிடாய் நோவுகள் பல்வேறு இரசாயனப் பதார்த்தங்கள் இரத்தக் குழாய்க்குள் புறஸ்ரோ கிளான்டின்களிலிருந்து பாய்வதால் ஏற்படுகிறது. இது கருப்பையைப் பலமாக சுருக்குவதால் உண்டாகிறது. குழந்தை பிறக்கும் போது குழந்தையை வெளியே தள்ள கருப்பை சுருங்குவதை ஒத்திருக்கும். இது முட்டை உருவாகி கருக்கட்டக் கூடிய தகுதி பெறும்போது ஏற்படுகிறது. முதல் சில மாதவிடாயின் போது முட்டை உருவாகாது. அப்போதெல்லாம் சுருக்கம் ஏற்படாது.

இப்படியான தசைச் சுருக்கம் மாதவிடாய்க்கு முதல் நாள் ஆரம்பமாகி மாதவிடாய் நின்ற மறுநாள் முடிவுறும்.

மாதவிடாய் நோவை நிறுத்துவது எப்படி?

ஒரு சுலபமான வழி நோவுகொல்லியான அஸ்பிறினையோ பரசிட்ரமோலையோ உட்கொள்வது.

மற்றவழி வெந்நீர்ப் போத்தலை வயிற்றின் மீது வைப்பது. இது சுருங்கிய தசையை ஓய்வுபெறச் செய்கிறது.

சாதாரண வழி, தேகப்பியாசம் தேவையாயின், வழமையான காரியங்களையே செய்யுங்கள். இது தசைச் சுருக்கலிலிருந்து திசைதிருப்பி விடுகிறது. தேகப்பயிற்சி மூளையிலிருந்து நோவு கொல்லி பதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இது இயற்கையான நோவுகொல்லியாகும்.

தசைச்சுருக்கம் காரணமாக நோவு கூடுதலாக ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து வாந்தியும் கண்ணொளி இருண்டும் இருப்பின் வைத்தியர் ஒருவரை நாடவேண்டும். அவர் உங்கள் உடல் உருவாக்கும் புறஸ்ரா கிளான்டின்களின் இரசாயனப் பதார்த்த சுரப்பைத் தடைசெய்யும் மருந்தைக் குறிப்பிடுவார். நீங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தவர்களாயின் உங்களை மாத்திரைக்கு (கருத்தடை மாத்திரை) உட்படுத்த வைத்தியருக்கு முடியும். கருத்தடை மாத்திரை தசைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். புறஸ்ராகிளான்டின் சுரப்பை முற்றாகத் தடைசெய்யும். ஏனெனில் மாத்திரை கருமுட்டை உருவாக விடாது. மாத்திரையை பயன்படுத்துமுன்பு நீங்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து விட்டீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில் மாத்திரை பாவிக்க ஆரம்பித்தால் வளர்ச்சிக்கு நிரந்தர முற்று ஏற்பட்டுவிடுகிறது.

மாதவிடாய் நாட்களில் தொடர்ந்தும் வயிற்றுவலி, வாந்தி, கண்ணொளி இருண்டும் வேறேதும் காரணங்களுக்காக இருப்பின் நரம்பு வைத்தியர் ஒருவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் ஒழுங்காக ஏற்படாவிட்டால்?

இது முதல் சில வருஷங்களுக்குச் சாதாரணமாகவே இருக்கும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மாதவிடாய் வருவது ஒழுங்கு முறைப்படி இல்லாவிட்டால் வைத்தியரின் ஆலோசனை பெறுவது நல்லது. அவர் ஒழுங்காக வரச் செய்வார். மூன்று மாதங்களுக்கு (கருத்தடை) மாத்திரைகளை உபயோகிக்க வேண்டியிருக்கும். இது எப்படி மாதவிடாயை ஒழுங்கு படுத்துகிறது என்றால் தினமும் ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குப் பயன்படுத்திய பின் ஐந்து தினங்களுக்கு மாத்திரையை உபயோகியாமல் இருக்க வேண்டும். அப்பொழுது மாதவிடாய் ஏற்படும். ஐந்துநாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாத்திரைப் பாவனையை ஆரம்பிக்க வேண்டும். இது உடலில் ஒரு சீரான அமைப்பை ஏற்படுத்துகிறது.

உங்கள் வளர்ச்சி முழுமையாகிவிட்டது என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட பின்பே மாத்திரையைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது வளர்ச்சியை நிரந்தரமாக நிறுத்தி விடும்.

சில நேரங்கள் வித்தியாசமான சமயங்களில மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணம் பெண்கள் சேர்ந்து இருக்கும் போது ஒரே அறையில் இருந்தால் ஒரே சமயத்தில் மாதவிடாய் ஏற்படுகிறது. மற்றவரின் மாதவிடாய் வரும் திகதி தெரியாதிருந்த போதிலும் அவர்களுடைய உடல்கள் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்துள்ளது போலுள்ளன.

எல்லாப் பெண்களும் தங்களுடைய மாதவிடாய்த் திகதியைக் கணக்கிட்டுக் கூற இயலுமா?

முடியாது.

சில பெண்கள் தமது முழுவாழ்நாளையும் ஆராய்ந்த போதிலும் சரியான மாதவிடாய் திகதியைக் கணித்துக் கொள்ள இயலாது இருக்கின்றனர். மாதவிடாய் வந்ததும் ஆம், இது வரவேண்டிய நாள் என்று கூறுகின்றனர். அப்படி வராவிட்டால் கர்ப்பமாகிவிட்டார் என்ற செய்தி வெளிவருகிறது. இதனால் பிரச்சினை ஏதும் ஏற்படுவதில்லை.

மாதவிடாய் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்டால்.....

அநேக பெண்களுக்கு முதல் நாள் அவ்வளவு கடுமையான போக்கு இராது. அதனால் உள்ளாடைகளில் படிவதில்லை. ஆனால் பெண்கள் ஒரு பாதுகாப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் ஒரு பட்டையை தம்முடன் வைத்திருக்க வேண்டும். அதனை தமது பாடசாலைப் பையில் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்ரிக் சுற்றப்பட்டது சிறந்தது. இல்லாது போனால் பாடசாலைப் பையில் பட்டை உருக்குலைந்துவிடும்.

மார்பகங்கள்: (BREASTS)

மார்பகங்கள் என்றால் என்ன? இவை எதனால் ஆனவை?

மார்பகங்களின் பால்சுரப்பிகள் கொழுப்பால் சூழப்பட்டவை. மரவேர்களைப் போல முலைக் காம்பின் பின்புறம் பால்ச்சுரப்பிகள் உள்ளன. சிறியவை சிறியவைகளாக அமைந்துள்ளன. உண்மையில் மார்பகங்களை சூழ்ந்துள்ள கொழுப்பே அவற்றின் அமைப்பை நிர்ணயிக்கின்றது. பெரியதோ சிறியதோ என்று தீர்மானிக்கப்படுகிறது. பாலைக் கொடுப்பதைப் பொறுத்தவரை பெரியதோ சிறியதோ எல்லாமே சிறந்தவைதாம்.

ஒரு மார்பகம் மற்றையதைக் காட்டிலும் பெரிதாய் இருப்பது சாதாரணமானதுதானா?

ஆம். கைகளோ அல்லது கால்களோ அல்லது புருவங்களோ ஒரே மாதிரி இருப்பதில்லையே. பருவம் அடையும் போது மார்பகங்களின் அளவில் பெரிய வித்தியாசம் காணப்படும். இரண்டுமே வளர்கின்ற போதிலும் ஒரே அளவில் வளர்ச்சியுறுவதில்லை. சில வேளைகளில் ஒன்று முற்றாக வளர்ந்தபிறகே மற்றது வளரத் தொடங்குகிறது. பெரிதானது பெரிதாகவே இருக்க மற்றது அதனை நெருக்கிக் கொண்டபடி இருக்கும். இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.

மார்பகங்கள் உருக்குலைந்து காணப்பட்டால் என்ன?

வளர்ந்து வரும் போது மார்பகங்கள் உருக்குலைந்து தான் காண்ப்படும். அதனால் மார்புப் புற்றுநோய் ஏற்பட்டு விட்டதோ என்று நினைக்கத் தேவையில்லை. மார்புப் புற்றுநோய் பருவம் ஆகி நீண்ட காலத்திற்குப் பிறகே வருகிறது.

இரு மார்பகங்களும் பாரதூரமாக வித்தியாசப்பட்டுக் காணப்பட்டால் ஒரு குழந்தை வைத்தியரையோ பிள்ளைப்பேற்று நிபுணரையோ அணுக வேண்டும்.

மார்பகங்கள் வந்தவுடன் மார்புக்கச்சை தேவை தானா?

எல்லாப் பெண்பிள்ளைகளுக்கும் தேவையில்லை. மிகவும் சிறியவையாக இருக்கும்போது தொங்கிப் போய்விடுமோ என்ற பயத்திற்கே இடமில்லை.

மார்பகங்கள் மிகவும் பெரியவையாக உள்ளபோது மட்டுமே தொங்கிவிடுமாதலால் மார்புக் கச்சு தேவை. வேகமாக நடக்கும் போதும் ஓடும் போதும் மார்புக் கச்சை அணிந்திருப்பது வசதியாய் இருக்கும்.

முலைக்காம்புகள் கவிழ்ந்து இருப்பதனாலென்ன?

கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளுக்குக் காரணம் முலைக்காம்புகளை உள்ளுக்குள் இழுத்து வைக்கும் திசுக்களே ஆகும். கவிழ்ந்துள்ள முலைக்காம்புகளால் உள்ள பிரச்சினை குழந்தைக்குப் பால் ஊட்டும் போது சிரமம் தரும். கர்ப்பம் தரிக்கும் போதும் முலைக்காம்புகள் தாமாகவே திரும்பிவிடும். சிலவேளைகளில் முலைக்காம்புகளை நடுப்புறம் நோக்கி விரல்களால் இழுத்துவிட உதவும். இது இறுக்கமான திசுவை இளக்கி முலைக்காம்புகளை திருப்பி விடுகிறது.

கட்டாயகமாக பால் ஊட்ட தேவைப்படாவிட்டால் கவிழ்ந்துள்ள முலைக்காம்புகள் சாதாரணமானவையே. ஒருவித பிரச்சினையும் இல்லை.

பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர்கள் எப்படி மார்பகங்களைப் பெரியனவாகச் செய்கின்றனர்?

இந்தச் சத்திர சிகிச்சையானது பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனை ஆகும்.

முதலில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் மார்பகத்தின் கீழ்ப்பகுதியை வெட்டுகின்றனர். (வெட்டிய அடையாளம் தெரியாமலிருக்க) அதன் பின் ஒவ்வொரு மார்பகத்திலும் பைநிறைய சிலிகோனை நிரப்பி இந்தப் பைகள் விலாவுடன் தைக்கப்படுகின்றன. இதனால் பால் சுரப்பிகளின் கொள்கலன்கள் வெட்டப்படுகின்றன. எனவே குழந்தைக்குப் பால் ஊட்ட இயலாமல் போய்விடும். இந்தச் சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட பெண்கள் பல மாதங்களுக்குப் பிறகும் உறுத்துவதாகவும் முலைக்காம்புகள் இன்பம் ஊட்டும் தன்மையை மீண்டும் பெறுவதில்லை என்றும் குறைப்படுகின்றனர். இந்த சத்திர சிகிச்சை செய்து கொள்வது பாலியல் hPதியில் கூடிய கவர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே. ஆதலால் இது பெரிதும் வெட்கப்படக் கூடியதாகவுள்ளது.

மற்றொரு பிரச்சினை யாதெனில் பெருப்பிக்கப்பட்ட மார்பகம் என மற்றையோரால் கண்டு அறியக் கூடியதாகவுள்ளது. மார்பகக் கவர்ச்சியாகக் கொள்ளும் துள்ளும் தன்மையை அவை இழந்து விடுகின்றன. நீங்கள் முதுகுபடப் படுத்திருக்கும் போது சற்று ஒரு புறமாகச் சரிவதில்லை. பீரங்கிகளைப் போல குத்தென நிற்கும். சிலவருஷங்களுக்குப் பிறகு மார்பகங்கள் உருக்குலைந்து கோலம் கெட்டுவிடும். திசுக்களில் வடுக்கள் தோன்றுவதால் இது ஏற்படுகிறது. அநேக பெண்கள் தமது சிலின்கோ பைகளை அகற்றுகின்றனர். அவற்றைத் தயாரித்த நிறுவனங்கள் பெரும் தொகையான பணத்தை நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டியுள்ளன.

சிலிக்கோன்பைகளை உள்ளே வைத்துக்கொண்டவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வர ஏதுவாகும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மார்பகங்களை பெரிதாக்க ஏதாவது எளிய முறை உண்டா?

இதற்கான உடற்பயிற்சி ஒன்றும் இல்லை. ஏனெனில் மார்பகத்தில் தசையொன்றுமில்லை. விலாவின் பின் புறத்தில்தான் தசை உள்ளது.

மார்பகங்கள் கொழுப்பாலானவையாதலால் உடல் கொழுத்து நிறைகூடினால் மார்பகங்கள் பெருக்க இடமுண்டு.

மார்பகங்களை ஊதவைக்கும் ஒரே மருந்து எஸ்ரேஜன் என்கின்ற பெண்ணுக்குரிய ஓமோன் ஆகும். இது கருத்தடை மாத்திரையிலுள்ளது. உங்களுடைய புதிய மார்பகங்கள் சிறிது நோவுடையதாயிருக்கும். (வீங்கியும் மிருதுவாகவும் இருப்பதனால்) முழுமையான நிறை 5 கிலோகிராமுக்குக் கூடுதலாக இருக்கும். உங்களுக்கு ஏன் பெரிய மார்பகங்கள் வேண்டும். பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் மெலிந்த சிறிய மார்பகங்களை உடைய பெண்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது தெரியுமா? ஏனெனில் மெலிவானவர் நாகரிக உடையில் அழகாகத் தோற்றம் அளிக்கிறார்;. அதோடு மெலிந்து சிறிய மார்பகங்களை உடையவர்கள் மார்புக்கச்சை அணியாமல் உல்லாசமாகத் திரியலாம்.

முலைக்காம்புகள் பெரிதாகவிருந்தால் என்ன?

எத்தனையோ பெண்கள் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள் என்பதை அறிய ஆச்சரியப்படுவீர்கள். தமது முலைக்காம்புகள் மிகவும் பெரியவையாகவுள்ளன என்று ஏன் நினைக்கிறார்கள்? ஏனெனில் நிர்வாணப் பெண்களின் படங்களில் சிறிய நிமிர்ந்த முலைக்காம்புகள் உடையவர்களாகத் தோற்றுவர். எல்லோருக்கும் சிறு பிள்ளைகளாக உள்ளபோது அப்படித்தான் இருக்கும்.

முலைக்காம்புகளுக்கு கீழ் உள்ள பகுதி மட்டும் வளர்ச்சியுறுவதில்லை. முலைக் காம்புகளும் கூட முதலில் வளர்ச்சியுறுகின்றன. அவை பெருத்து கருமைநிறம் அடைகின்றன. அவை தீண்டப்படும் போது எழுச்சி பெறுகின்றன. சிறிய அளவினதாகி கூர்மையாகத் தோன்றும். இப்புகைப்படங்களில் மட்டுமே குத்தாகவுள்ளன. மற்றெல்லா நேரங்களிலும் அல்ல.

அநேக படப்பிடிப்பாளர்கள் கையில் பனிக்கட்டியை வைத்திருந்து முலைக்காம்புகளைச் சுருங்கச் செய்து நிமிர்ந்து இருக்க வைத்துப் படம் பிடிக்கின்றனர். பனிக்கட்டி இல்லாதபோது அவர்களும் மற்றவர்கள் போலவே தோற்றமளிப்பர்.

மார்பகங்கள் மிகப் பெரியதாக இருந்தால்...

பெரிய மார்பகங்களை உடைய சில பெண்கள் பிரகாசிப்பதற்கும் வேறுசிலர் அலங்கோலமாகவும் தோற்றமளிப்பதும் ஆச்சரியம் ஊட்டவில்லையா? இரண்டாம் வகைக்குக் காரணம் சோகமே.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டுவது சில மார்புக் கச்சைகளை வைத்து சாய்ந்துவிடாது பாருங்கள். புவி ஈர்ப்பு எமக்கு அறிவுறுத்துவது இதுதான். பாரமான மார்பகங்கள் மார்புக் கச்சை இல்லாவிட்டால் சாய்ந்து தொங்கும். சிறிய அளவினதே விரும்பப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யலாகாது. ஏனெனில் அது உருவத்தைச் சிதைத்து அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது . சரியான அளவானதைப் பயன்படுத்தும் போது எவ்வளவு அழகாகத் தோற்றமளித்தீர்கள் என்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

பெரிய மார்பகங்களைச் சிறியவை ஆக்க சத்திரசிகிச்சை உண்டு. இது அநேக வடுக்களை ஏற்படுத்திவிடும். பாரம் அதிகமாகி முதுகுவலி ஏற்படுமாயின் இதனைச் செய்ய யோசிக்கலாம்.

சாய்ந்து தொங்கிப் போவதைப் பற்றிய பேச்சு

அநேகமாக எல்லா மார்பகங்களும் ஒரளவு சாய்ந்து தொங்கிப் போகும். நிமிர்ந்து மேல் நோக்கி உள்ளவை கூட ஆராய்ந்து பார்த்தால் கொழுப்பெல்லாம் கீழ்முகமாகவும் முலைக்காம்பு வளைவின் மேற்பகுதியில் இருப்பதையும் காணலாம்.

அநேக நிர்வாணப் புகைப்படங்களில் கைகளை மேலே உயர்த்தி தோள்களைப் பின்னுக்குத் தள்ளியும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படவில்லையா? ஏனெனில் இது மார்பகங்களை உயர்த்துகிறது. இதனால் தொங்குவது குறைவாகத் தென்படுகிறது. அதனால் நிர்வாணக் காட்சிப்பொருள்கள் கூட தங்கள் மார்பகங்களைப் பற்றி திருப்தியற்றுத் தென்படுகிறது. ஒருபோதும் தொங்காத மார்பகங்கள் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவையே. நாம் புகைப்படங்களில் காணும் அழகிகள் அனைவரும் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களே. அப்படிப்பட்ட பெண்களின் தோற்றங்கள் வெறும் போலித் தோற்றங்களே.

இது எல்லாம் சாதாரணமே. பறவைகள் கூட தமது கூட்டில் வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ண பிளாஸ்ரிக்குகளின் மீது தமது சொந்த முட்டைகளைக் காட்டிலும் கூடிய கவர்ச்சி கொள்ளுவதைக் காணலாம்.

பருக்கள் (PIMPLES)

பருவமானவர்களுக்கு பருக்கள் தோன்றுவதேன்?

அன்ட்ரோஜன் என்னும் ஆணுக்குரிய ஓமோனே பருவமாகின்ற போது ஏற்படும் மற்ற மாற்றங்களைப் போலவே பருக்கள் தோன்றுவதற்கும் காரணம். பெண்களின் திடீர் வளர்ச்சிக்கும் உரோமங்கள் தடிப்படைவதற்கும் நீளுவதற்கும் கை இடுக்குகளிலும் கால்களிலும் உரோமங்கள் முளைப்பதற்கும் பாலுணர்வு பெருக்கெடுப்பதற்கும் இந்த ஓமோனே காரணமாகியுள்ளது.

பருக்கள்அன்ட்ரோஜன் ஓமோனின் பக்கவிளைவே ஆகும். முகத்திலுள்ள தோலில் அநேக கொழுப்பை வெளிப்படுத்தும் செபாஷியஸ் சுரப்பிகள் உள்ளன. அவை நெய்யைச் சுரக்கின்றன. அன்டறோஜன் செய்வதெல்லாம் செபம் என்கின்ற இயற்கையான நெய் சுரப்பதை அதிகரிக்கிறது. அதன் காரணமாகவே முகத்தில் கூடுதலான நெய்த்தன்மை ஏற்படுகிறது. அதே வேளை நெய்ச் சுரப்பிகளுக்கும், முகத்தளத்திற்கும் இடைப்பட்ட கலக்கோடுகளில் அதியுயர் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் நெய்ச் சுரப்பிகளுக்குரிய சிறுநாளங்கள் தடைப்படுகின்றன. அதனால் பரு ஏற்படுகிறது. சில பருவமானவர்க்கு தோளிலும் முதுகிலும் கூட பருக்கள் ஏற்படுகின்றன.

இலேசான பருக்கள் குளிர்காலங்களில் குறைந்தளவு பிரச்சினையையே தருகிறது. கோடை காலங்களில் தோல் வெப்பமாகவும் நெய்ப்பற்றுடனும் இருக்கும் போது முழுவலுவுடன் வீசும். நோவு அதிகம் தரும். பருக்கள் மாதவிடாய்க்கு சற்றுமுன்பும் பாPட்சைக்கு தயாராவதற்கு முன்பும், ஏதாவது முக்கிய நிகழ்ச்சிக்கு முன்பும் அதாவது உணர்ச்சி வசப்படும் போதும் ஏற்படுகின்றது. உடல் கூடுதலான அன்ட்றோஜன் சுரக்கிறது. அண்ட்றோஜனால் தானோ பரு ஏற்படுகிறது?

பருக்களை அகற்றுவது எப்படி?

உண்ணுகின்ற உணவுகளால் பருக்கள் ஏற்படுவதில்லை. ஆகவே உணவுப் பழக்கங்களை உடனடியாக மாற்றிவிடுவதனால் பயனொன்றுமில்லை. சொக்கலேற் உண்ணுவதை கைவிடத் தேவையில்லை.

தோலிலுள்ள கொழுப்புத் தன்மையைப் போக்க நாளுக்கு நாள் இருமுறை கழுவுவது பருக்களைப் போக்க ஓரளவுக்கு உதவும். அதோடு அழுக்குகளை அகற்றி விடுகிறது. அழுக்கு, நாளங்களை அடைத்து விடுவதனால் கரும்புள்ளிகள் உருவாகின்றன. சிறிய கடுமையான தொற்றும் தன்மையற்ற பருக்கள் மேற்பகுதியில் கருந்தன்மையை ஏற்படுத்துகிறது.

முக்கிய பருக்குழம்புகளால் எவ்வித பிரயோசனமுமில்லை. ஏன் நெய்ச் சுரப்பிகள் அடைபட்டு தொற்றுநிலையை அடைகிறது என்பதன் காரணத்தை ஆராய வேண்டும். பெரும்பாலும் முகத்தின் மேற்பகுதியிலுள்ள நெய்யை உலர்த்தி விட வேண்டும். (குளிர் காலம் போன்ற நிலை தோலிற்கு ஏற்படவேண்டும்)

கட்டாயம் பருக்கள் அகற்றப்படத்தான் வேண்டுமாயின் இதற்குக் காரணமான ஓமோன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு நெய்நாளங்கள் அடைபட்டு பக்கங்களில் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஓமோன் மருந்துகளும் அன்ட்றோஜன் தடைகளும் அன்ட்றோஜனை எதிர்த்து செயல்படவும் பரவுவதைத் தடைசெய்யவும் நுண்ணுயிர் கொல்லிகளும் வேண்டும். இவை நீண்டகாலத்திற்குரிய நிவாரணிகள். தொடர்ந்தும் பாவித்த வண்ணம் இருக்க வேண்டும். கருத்தடை மாத்திரைகூட சக்திவாய்ந்த ஓமோன் சிகிச்சை நிவாரணியாகும். சிலவேளைகளில் கூடுதலான பருக்கள் தோன்றிவிடலாம். எச்சரிக்கையாய் இருங்கள்.

வைத்தியர்கள் சிபார்சு செய்யும் நிவாரணி றெரிநோயிக் அமிலம். இது பீடா கறோரின். அதாவது கறடிலுள்ள விற்றமின் யுயிலிருந்து பெறப்படுகிறது. றெரினோயிக் அமிலம் செய்வதென்னவென்றால் தோலை புத்துயிர் ஊட்டி மேலும் வளரவிட்டு மிக விரைவாக நெய்நாளங்களை தடைசெய்யும் கலங்களைக் கொண்ட தோலைப் பிதுங்கச் செய்துவிடுகிறது. வயோதிபப் பெண்கள் றெற்ரினோயிக் அமிலம் போன்று தோலை உதிரச் செய்து, புதியதை விரைவாக வளர வைத்தால் தோல் இறுக்கமடைந்து இளமைத் தோற்றத்தைத் தரும். இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். தோலால் சூரிய ஒளியை இனிமேல் தாங்க இயலாது. ஆகவே சூரிய ஒளியைப் படவிடாமல் தடுக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இத்தனை சிக்கல்களுக்குமான தீர்வுக்கு வைத்தியர்களுடைய சிபார்சு தேவை.

மணம் (ODOR)

உடலில் மணம் வீசுவதற்கு காரணமும் ஓமோன்தானா?

இது உண்மைதான். இது திட்டமிடப்படாத பக்க விளைவு அல்ல.
உண்மையில் பூப்பு உரோமமும், கையடி உரோமமும் இந்த மணங்களை உறிஞ்சி வைத்திருக்கின்றன. ஏனெனில் இந்த மணம் பாலியல் hPதியில் கூடிய கவர்ச்சியை ஊட்டுகிறது. குறைவாக அல்ல. இந்த மணங்களுக்கு நாம் நேரடியாகச் செயல்படுகிறோம். ஆனால் நாம் இதனை உணர்வுபூர்வமாக அறிவதில்லை. இன்னமும் மிருக உணர்வு மனிதரிடையே தொடர்ந்தும் இருக்கிறது.

அநேக விலங்குகள் பாலியல் hPதியில் நிறம்பியும் பாலியல் உறவுக்குத் தயார் நிலையிலும் உள்ளது என்பதை உடல் மணம் உணர்த்துகிறது. அநேகமானவையின் மணத்தை உணரும் இயல்பு மனிதர்களைக் காட்டிலும் கூடுதலானது. உண்மையில் பிறோமோன்கள் இனக்கவர்ச்சியை ஊட்டுகின்றன.

மனிதர்கள் பிராணிகள் போல இன்றி நிலையான மணத்தையே கொண்டவர்கள். எந்நேரமும் பாலியல் உறவுகொள்ளத் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் கருக்கட்டும் நிலையிலும் கர்ப்பம் தரித்த நிலையிலும் பெண்களின் உடல் மணம் சற்று மாறுபட்டு இருக்கும்.

உடல் மணத்தைப் போக்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்?

முதலில் தினமும் குளித்துவிட்டு கை அக்கிளை நன்கு சுரண்டிக் குளிக்க வேண்டும். மிகவும் மோசமான மணத்தைத் தருவது நாட்பட்ட கைஅக்கிள் வியர்வையும், நாட்பட்ட மாதவிடாய் வெளியேற்றமும். கைஅக்கிள் மணம் போக்க மணம் நீக்கி உருண்டைகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தெளிப்பான்கள் பயன்படுத்தினால் அன்ரார்டிகாவில் ஓசோன் படையை தாக்கும் குற்றத்திற்கு உள்ளாவீர்கள். இவை சாதாரணமாக நிறம் அகற்றி அல்லது வியர்வை எதிரி. மணம் தரும் வியர்வையை நிறுத்திவிடும். கோலோன் அல்லது நறுமணப் பொருளைப் பயன்படுத்துவதால் பயனொன்றுமில்லை. இவற்றைப் பயன்படுத்தினால் இருவேறு வித மணங்கள் அதாவது நன்நாற்றமும் துர்நாற்றமும் வீசும். ஏனெனில் அவை துர்நாற்றத்திற்கு எதிராகச் செயல்படாது. முகத்திற்குப் பூசும் மாவையோ அல்லது வேறேதும் மாவையோ பயன்படுத்தாதீர். அவை வியர்வை நாளங்களை அடைத்து வேனிற் பருக்களையும் கொப்புளங்களையுமே ஏற்படுத்தும்.

தாய்ப்பாலுக்கும் அக்கிள் வியர்வைக்கும் இடையிலான தொடர்புபற்றிய தகவல் தெரியுமா? இதனால் தான் தாய்ப்பால் கோடை காலங்களில் கூடிய தண்ணீர்த் தன்மையாகவுள்ளது. இது குழந்தையின் நீர்த்தாகத்தைத் தணிக்க உதவுகிறது. (தாய்ப்பால் ஊட்டப்படும் பிள்ளைகளுக்குத் தாகம் தீர்க்க மேலதிகமாக நீர் பருக்கத் தேவையில்லை)

பையன்கள் பிரமாண்டமான வியர்வை நாளங்களைப்பற்றி அதிசயப்படுகிறார்கள்.

பூப்புப் பிரதேசத்திலுள்ள துர்நாற்றத்தைப் போக்க நித்தம் குளிப்பதனால் திருப்திப்படாவிட்டால் அமெரிக்காவில் தற்போது தயாரிக்கப்படும் தெளிப்புகளையோ காம்புவடிவில் தயாரிக்கப்பட்ட மருத்துவத் தயாரிப்புகளையோ யோனி வாயிலில் வைத்து விடலாம். சுத்தம் செய்வது, அமெரிக்காவில் பிளாஸ்ரிக் பையிலுள்ள திரவமொன்றை பிளிந்து யோனிக்குள் செலுத்தி சுத்தம் செய்கிறார்கள். இயற்கையான மணத்தை நீங்கள் இவ்வளவு தூரம் ஏன் வெறுக்கிறீர்கள் என்பதை ஆராய வேண்டும். உங்கள் சிறு பெண் தோற்றம் நீங்கி பருவம் ஆகும் நிலையை அடையும்போது இப்படியான மாற்றம் ஏற்படுவது இயல்பானதேயாகும்.

ஆனாலும் உங்கள் யோனியின் மணம் மாறுபட்டு இருக்கும் போதும் மஞ்சள் அல்லது பச்சை அல்லது வெள்ளை நிறக்கட்டியாகவும் தோன்றினால் குருப்பித்துவிட்டது என்று கருத்து. இதனை மாற்ற உங்கள் வைத்தியர் மருந்து தருவார்.

உடல் உரோமம் (BODY HAIR)

எமது அக்கிளிலும் கால்களிலும் தோன்றும் உரோமம்

கால்களிலும் அக்கிளிலும் உரோமம் தோன்றக் காரணம் அன்ட்றோஜன் என்கின்ற ஆண் இன ஓமோன். பெண்களில் பருவம் ஆகும் போதும் செயல்படுகிறது. உங்கள் கால்களிலோ அல்லது அக்கிளிலோ வளர்ந்துள்ள உரோமம் அதிகமானது என்று கருதுவீர்களாயின் அவற்றை அகற்ற இதோ சில வழிகள். சவரம் செய்து விடலாம். சவர்க்காரத்தை நுரைக்கச் செய்து வெந்நீர்க் குளிப்பு போட்ட பிறகு சவரம் செய்துவிட்டால் வெட்டுக்களோ கீறல்களோ இன்றி மிருதுவாக எடுபட்டு விடும்.

நீங்கள் மின்சார சவரப்பொறியையும் பயன்படுத்தலாம். அப்படியாயின் சவர்க்காரத்தையும் நீரையும் பயன்படுத்தத் தேவையில்லை.

மற்ற வழி ரோமம் நீக்கிக் களிகயையும் பயன்படுத்தலாம். இது உரோமத்தை மிருதுவாக்கிவிடும். அதன் பின் மெழுகு மூலம் அகற்றலாம். எப்படியெனில் சூடான (அல்லது சூடற்ற) மெழுகை காலிற் பூசி பின் மெழுகை அகற்றுவதனால் ஒட்டிக்கொண்டிருக்கும் உரோமமும் அகலுகிறது. ஆனால் உரோமம் முரட்டுத்தன்மை அற்றதாயின் பிடுங்கும் போது முறிந்து தோலுக்கு அடியில் வளர ஆரம்பிக்கும். அல்லது ஓரளவு வெளிற்றி விட்டால் குறைத்துக் காட்டும். இதற்கு உரோமத்தை வெளிறச் செய்யும் குழம்பு பாவிக்கப்படலாம். இது ஹைதரசன் பெர்ஒட்சைடு, அமோனியா கலவை ஆகும். (இதனைக் கொண்டு பூப்பு ரோமத்தை வெளிறச் செய்யக்கூடாது) இக்குழம்பு யோனித் துவாரத்திற்குள் புகுந்து அமிலம் போல எரிச்சல் ஊட்டும். உங்கள் மீசை உரோமம் கருமைநிறமாகத் தொடங்கினால் வெளிறச் செய்யலாம் அல்லது உரோமம் அகற்றும் களியைக் கொண்டு அகற்றிவிடலாம். சவரம் செய்துவிட வேண்டாம். மெழுகு பூச வேண்டாம். ஏனெனில் கூடுதலான வலிப்பைத தரும்.

அல்லது நீங்கள் அப்படியே விட்டுவிட நினைக்கக் கூடும். சிலருக்கு அக்கிள் ரோமம் என்றால் நல்ல விருப்பம். சிறிய உரோமக் கட்டு பார்க்க விரும்பத்தக்கது. அக்கிளில் கூட கால் உரோமம் கருமைநிறம் அடையாமல் மிருதுவாக இருப்பின் அதனை அப்படியே விட்டுவிடுவது இயற்கையான தோற்றத்தைத் தரும். தேவை என்று கருதினால் உடல் உரோமங்களை அகற்றி விடுங்கள். உங்கள் நண்பர்கள் செய்கிறார்களே என்று செய்ய வேண்டாம். உங்களுக்கு இருப்பது போல அவர்களுக்கும் வளர்ந்துள்ளதோ தெரியாது. அப்படியே விட்டுவிடட்டும்.


சந்தேக நிலையும் முரண்பாடும்

பெற்றோரிடமிருந்து விடுதலை

பருவமான பிள்ளைகளைப் பற்றிப் பெற்றோர் கவலைப்படுவதை விட்டுவிட வேண்டுமா?

வழமையாக அப்படியில்லை. முழுமையாக அல்லவே. சகல விதமான பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்கிவந்த பிள்ளைகளைத் திடீரெனக் கைவிடுவது சுலபமான காரியமல்ல. அவர்கள் மீது காட்டிய அக்கறையை உடனடியாக உதறித்தள்ளுவதோ, குஞ்சைக் கூட்டைவிட்டுத் துரத்தி விடுவதோ இயலாத காரியம். பருவமானவர் எல்லோரும் வயதுவந்தோரைப் போல வேலை செய்து தனியாகவாழக்கூடிய நிலையை அடையாதவர்கள். பலரும் மாணவப் பருவத்திலேயே உள்ளவர்கள்.

ஆனால் முரண்பாடுகள் ஏற்படக் காரணமாயிருப்பது இதுதான். பருவமானவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். தாங்களாகவே முடிவு எடுக்கவும், தவறுகளை இழைக்கவும், பெற்றோரின் மேற்பார்வையிலிருந்து விலகி வாழவும் விரும்புகிறார்கள்.

இந்த முரண்பாடு எம்மால் தவிர்க்கக் கூடியதா?

பார்ப்பதற்கு விநோதமாகத் தோன்றுகின்ற போதிலும் இது உண்மையில் நன்மையானதே. பருவமானவர் வெறுமனே கீழ்ப்படிவான பிள்ளையாக இருப்பதால் ஒரு பயனும் இல்லை. பருவமானவர் கூறுவதை எல்லாம் மறுப்பெதுவும் இன்றி ஏற்றுக்கொண்டு இருப்பதுதானா பெற்றோரின் கடமை. பருவமானவர் பெற்றோரிடமிருந்து எதிர்பார்ப்பது வழிகாட்டலே... ஆனால், இறுதியில் தாம் விரும்பியதைச் செய்யவே சம்மதம் தரவேண்டும்.

பருவமானவருக்கும் பெற்றோருக்கும் இடைப்பட்ட முரண்பாடு தந்தையரின் அன்புக்குள்ளாகிய பெண் குழந்தையும் தாயின் அன்பிற்குப் பாத்திரமான ஆண்குழந்தையும் என்ற நிலை மாறி தங்களை ஒத்த குழுவினரின் கவர்ச்சிக்குளாகின்றனர்.

பருவமானவர்களும் கூட உளாPதியான மாற்றங்களுக்கு உள்ளாகத்தான் வேண்டுமா?

ஆம். பாரிய மாற்றம் என்னவென்றால் தன்னைப் பற்றிய சிந்தனை உந்தப்படுகிறது. திடீரெனத் தம்மையே வெளியிலிருந்து பார்க்கத் தலைப்படுகின்றனர். தன்னை ஒரு காட்சிப் பொருளாகக் கொண்டு பார்த்து ஆராய முற்படுவர். இது ஏனெனில் உடலியல் மாற்றமேயாகும். உங்களை நீங்களே அவதானித்து கவர்ச்சியுள்ளவரா என்று ஆராய முற்படுவீர்கள். பெற்றோர் ஊட்டிய நம்பிக்கைகள் மீது தெளிவு பெற முயல்வீர்கள்.

முரண்பாடுகளினால் தந்தையாரைத் தனையன் தலைவர் எனத் துதிசெய்கின்ற நிலையிலிருந்தும் மகள் தனது தாயாரைத் துதி செய்கின்ற நிலையிலிருந்தும் விடுபட்டு தாமே தமது பாதையை வகுக்கின்ற நிலைக்கு வருவார்கள். பருவம் அடைந்தவர்கள் நன்கு சிந்தித்து செயல்படத் தொடங்குவதோடு பெற்றோர் செய்து வந்த தவறுகளையும் இனம் காணும் நிலையை அடைவர்.

சிந்தனைத் தெளிவானவர்கள் பெற்றோரா பருவமானவரா?

இந்த முரண்பாட்டில் ஒருவருமே இல்லை என்றே கூறலாம். பருவமானவர்கள் தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி பெற்றோரின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான போராட்டத்தில் முனைந்துள்ளனர் என்பது ஒரு புறத்தில் உள்ளது.

மறுபுறம் பெற்றோர் தாம் நீண்ட காலமாகவே கட்டிக்காத்த சிறுபிள்ளைகளை தற்போது இழந்து தாம் தமது முதுமைக் காலத்தில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை.


உடல் மாற்றங்கள்
(இப்போது பையன்கள்)
(PHYSICAL CHANGES - BOYS)

வளர்ச்சி (GROWTH)

எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது?

உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயதுமுதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம்.

ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்றங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஓமோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கும் போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது.

ஓமோன்கள் என்றால் என்ன?

ஓமோன்கள் உடலிலிருந்து சுரந்து பருவம் ஆகி வளர்ச்சியுற்று சிறு பிள்ளை நிலையிலிருந்து மனிதனாகச் செய்கின்றன. ஓமோன்கள் உங்கள் இன விருத்திக்கான அமைப்பை உருவாக்கி பிள்ளைகளைத் தோற்றுவிக்க உதவுகின்றன. அதாவது பருவமாகி தந்தை நிலை அடையச் செய்கிறது.

ஓமோன்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பையனுக்குக் கூடுதலான பெண்ணுக்குரிய ஓமோனான எஸ்ரஜினைச் செலுத்தினோமாயின் அவனுக்கு மார்பகங்கள் ஏற்பட்டு வளர்ச்சியுற்று தாடி உரோமங்கள் அகல ஆரம்பிக்கும். அதேபோல பெண்ணொருத்திக்கு ஆண்களுக்குரிய ஓமோனான அன்ட்றொஜன் கூடுதலாகச் செலுத்துவோமாயின் அவள் மார்பகங்களை இழந்து முகத்தில் உரோமங்கள் தோன்றி குரலும் கறகறப்பாகிவிடும்.

காணப்படும் முதல் மாற்றம் என்ன?

பருவமானவர் என்பதைக் காட்ட விதைகள் வளர்ச்சியுற்று, பெருத்து சற்று கீழ் இறங்கும். இரண்டில் ஒன்று சிறிது கீழ்முகமாக இறங்கித் தொங்கத் தொடங்கும். இது சராசரி வயது பன்னிரண்டாக இருக்கும் போது ஏற்படுகிறது. விதைகளைத் தாங்கும் விதைப்பை சற்று கருமை நிறமடைகிறது. அதேநேரம் முரட்டுத் தன்மையைப் பெறுகிறது. ஆண்குறியும் பெருத்து விடுகிறது.

விதைகள் பெருப்பதேன்?

விதை ஒவ்வொன்றிலும் இருநூற்று ஐம்பது சிற்றறைகளுண்டு. இவற்றில் இறுக்கமாய்;ச் சுருண்ட குழாய்களுண்டு. இவை விந்துகளைத் தயாரிக்கின்றன. இவை பருவமாகின்ற போது வளர்ச்சியுறுவதனால் விதைகள் பெருக்கின்றன. இந்தச் சிறுகுழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக நீட்டிப் பிடித்தோமாயின் கிட்டத்தட்ட அரை கிலோமீற்றர் நீளம் இருக்கும். இந்தக் குழாய்களை வெளியே எடுத்து நீட்ட முடியாது. அப்படிச் செய்ய இயலுமாயின் பருவமான ஆண்கள் தம்முடையவை மற்றவரைக் காட்டிலும் ஏன் நீண்டுள்ளது என்று போட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் விதைகள் பருவம் ஆனபின் அநேக காரியங்களைச் செய்ய வேண்டி உள்ளன. அவை ஓமோன்களைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்து கொண்டு ஆண்களாகத் தொடர்ந்து இருக்க செயல்பட வேண்டும். அதோடு உங்களுக்குத் தேவையான விந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

விந்துகள் என்றால் என்ன?

விந்து என்பது மிக நுண்ணிய கலங்களை உரியன. சகல உயிரியல் தகவல்களையும் தமக்குள் அடக்கி உள்ளன. இதன் காரணமாகத்தான் உரியவனின் பிரதியைப் பெறமுடிகிறது. விந்து பெண்ணின் கருமுட்டையோடு கருக்கட்டும் போது குழந்தை உருவாகிறது. பெண் கர்ப்பிணியாகிறாள்.

விதைகள் கீழ்முகமாக இறங்குவதேன்?

உடல் வெப்பநிலை கூடுதலாக இருப்பதனால் அந்த வெப்பநிலையில் விந்துகள் தயாரிக்க இயலாது. அதன் காரணம் அவை சற்று இறங்கித் தொங்க வேண்டியுள்ளன. அப்பொழுது ஓரளவு குளிர்ச்சியாக இருக்கின்றன. விந்து உருவாகின்றன. குளிர்காலங்களிலும் பயந்து நடுங்கும் போதும் விதைகள் உடலை நோக்கிச் சரிகின்றன. சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் உடல் வெப்பநிலை அதிகரித்து சுகவீனம் உற்று இருக்கும் போதும் வெந்நீரில் குளித்து இருக்கும் போதும் விதைகள் உடலிலிருந்து விலகித் தொங்கும். அவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவே இவ்வாறு ஏற்படுகிறது.

ஒருவன் காய்ச்சலாய் இருக்கும்போது தற்காலிகமாக விந்தற்றவர்கள் ஆகிவிடுவர். அந்நேரங்களில் பெண்களைக் கர்ப்பிணிகளாக்க முடியாதிருப்பர். இதனை நன்கு அறிந்த பழங்குடியினர் பாலுறவு வைத்துக் கொள்ளுமுன் விதைகளை சுடுநீரில் நீண்ட நேரம் ஊறவிடுவர். இதனால் கர்ப்பம் தரிப்பது தடைப்படும்.

ஏன் ஒரு விதை மற்றதைக் காட்டிலும் கீழ்முகமாகத் தொங்குகிறது?

இதற்குக் காரணம் இடப்பிரச்சினையே. இரண்டும் இரண்டு கால்களுக்கு இடைப்பட்ட இடத்தைப் பங்கு போடும்போது பாதுகாப்புக்கருதி ஒரே வரிசையில் இராது சற்று மேலும் கீழுமாக அமைந்து உள்ளன. இதனால் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

ஆண்குறி பலமுறை புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?

புடைத்து எழுவது முள்ளந் தண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள நரம்புத் தொகுதி செய்திகளை அனுப்ப ஆண்குறியிலுள்ள இரத்தக் கொள்கலன்களில் இரத்தம் வேகமாக உந்தப்படுகிறது. இரத்தம் நிரம்பியதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. உடலுக்கு வெளிப்புறமாக புடைத்து எழுந்து நிற்கின்றது. செங்குத்திற்கு மேலாக நிற்கும். அதே சமயம் சற்று கருமை நிறத்தையும் அடைகின்றது.

பலவிதமான தூண்டுதல்களும் கூட புடைத்தெழச் செய்கின்றன. கால்சட்டையோடு ஆண்குறி உராயும் போதும், பாலியல் எண்ணங்கள் ஏற்படும் போதும் புடைத்தெழுகிறது.

காரணம் எதுவுமின்றியும் புடைத்தெழுகிறது

இது திடீர் புடை எழுதலாகும். இயற்கை முன்கூட்டியே பயிற்சி ஒன்றை அளிக்கிறது. உங்களுக்கு பயங்கரமான அனுபவம் உண்டாகிறது. நேரம் கெட்ட நேரத்திலும் ஏற்படுகிறது. உங்களுக்கு பாலியல் வெறி ஏற்பட்டு விட்டதோ என்று பயப்பட வேண்டாம். இப்படியான புடைத்து எழுவதனால் எவ்வித தீமைக்கும் இடம் இல்லை. உங்களுக்கு புடைத்து நிற்கும் நிலை ஏற்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.

இத்தகைய திடீர் புடைப்புகள் ஏற்படும் போது பையன்கள்தான் சங்கடப்படுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் புடைத்து எழுவதைப் பற்றிப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. துருவித் துருவிப் பார்க்கின்ற பெண்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது.

பையன்களுக்கு எப்போது திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது?

சுமார் பதின் மூன்று வயதாயுள்ளபோது அதாவது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும் போது பையன்களுக்கு பெண்களை விட வேறுபட்டு இத்திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. பையன்கள் மிகவும் உயரமாக வளர்ந்து விடுகிறார்கள். ஆண்களின் உடல்கள் பெண்களைக் காட்டிலும் வளர்ச்சி ஓமோன்களைச் சுரக்கின்றன. ஆண்களுக்கான ஓமோன்கள் மற்றைய மாற்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. வளர்ச்சி ஓமோன்கள் பையன்களின் தோள்களை அகலப்படுத்தி தொண்டைக்கருகிலுள்ள சுவாசக் குழாயையும் விசாலப்படுத்தி குரலைக் கடுமையாக்குகிறது. தசைகளை வளரச் செய்து, முகத்தில் உரோமத்தை வளர்க்கிறது. பையன் வளர்ந்து மனிதனாக மாறிவிடுகிறான். இந்தத் திடீர் வளர்ச்சியின் போது முகத்தில் மூக்கு பெரிதாக வளர்கிறது. உடல் மெலிந்து விடுகிறது. கால்களும் பெருத்து விடுகின்றன. கவலைப்பட வேண்டாம். மற்றைய அவையங்களும் கால கதியில் வளர்ச்சியுறும். ஒரே நேரத்தில் அனைத்தும் ஏற்படுவது எந்திரங்களுக்கு மட்டுமே. இயற்கை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதில்லை. இந்தத் திடீர் வளர்ச்சியின் போது ஒன்றை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்கு சற்று கூடுதலான நித்திரை தேவைப்படும். பாடசாலைக்குப் போக வேண்டாத நாட்களிலும் பாடசாலையிலிருந்து திரும்பி வந்ததும் உறங்க வேண்டும் போலவிருக்கும். ஏனெனில் வளர்ச்சி ஓமோன்கள் உறங்கும் நேரத்தில் தான் கூடுதலாகச் செயல்படுகின்றன.

உங்களுக்குப் பயங்கரமான உணவுப் பிரியம் ஏற்பட்டிருப்பதை உங்கள் தாயார் குறிப்பிடுவார். சிறுவயதைவிடவும் இப்போது புதியதும் நிறமானதுமான காய்கறிகளை விரும்புவதைக் காணலாம். ஏனெனில் நீங்கள் தற்போது வளர்ந்துள்ளீர்கள். உங்கள் உடல் காய்கறிகளிலுள்ள இயற்கையான நச்சுத்தன்மையை நடுநிலைமை ஆக்கக் கூடியனவாகி விட்டது. காய்கறிகளும் உயிருள்ளவையே. தம்மை மற்றவர்கள் விரும்பி உண்பதை அவை விரும்புவதில்லை. அதனால் அவை நச்சுப் பொருள்களை உருவாக்கி விரும்பி உண்ணவிடாது செய்கின்றன. இதனால் சிறு பிள்ளைகள் அவற்றை விரும்புவதில்லை.

உடல் வளர்ச்சிக்குக் காரணமான அதே ஓமோன்கள் தான் வளர்ச்சிக்கும் முற்றுவைக்கின்றன. முடிவு என்றால் என்புகள் பூரண வளர்ச்சியை அடைந்து விட்டன. மேலும் நீண்டு விட இடமில்லை. பீங்கான்கள் எரிய10ட்டிய பிறகு மேற்கொண்டு வளராது உள்ளதுபோன்றே தான் உடல் வளர்ச்சியும் என்புகளின் வளர்ச்சியும் முற்றுப் பெறுகிறது. இறுதியான உருவத்தை அடைந்து விடுகின்றன.

அநேக உருவொத்த காகிதங்களைக் கொண்டு பந்து போன்ற உருவங்களைச் செய்வதாகக் கொள்வோம். உருவம் அமைக்கும் போது முதலில் பந்தை விரிவாக்கி நடுமையப்பகுதியை அடைகிறோம். அதே உருவத்தை அடைய பந்து சுருங்கிக் கொண்டே வந்து மறுமுனையில் முடிவுற்று வட்டவடிவமாகிறது. இதே போன்று இயற்கையும் அப்படியே செயல்படுகிறது. அதே ஓமோன் இரண்டு மாறுபட்ட காரியங்களைச் செய்கிறது. மாற்றம் முன்கூட்டியே ஏற்படும். பையன்களுக்கு முன் கூட்டியே முடிவுறுகின்றது. அது போலவே காலம் தாழ்ந்து ஆரம்பிப்பவர்களுக்கு மெதுவாகவே வளர்ச்சி ஏற்பட்டு காலம் தாழ்த்தியே முடிவுறுகிறது. ஆகவே பெண்களுக்குப் பிறகே ஆண்கள் தமக்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பது சரியான முடிவு அல்ல.

அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.

இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.

அதன் பின்பு

ஒரு சுவாரஸ்யமான மாறுதல். நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகள் கூட சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஓமோன் செய்வது என்னவென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி உறுவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில ஆண் பிள்ளைகளுக்கு ஒன்று மட்டுமே தோற்றம் அளிக்கும்.

சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது. கூர்ப்பு முறையில்: ஆனால் கூர்ப்பு என்பது எது தேவை என்று தீர்மானிப்பதில்லை. எந்த உருவம் எளிதாக அமையக் கூடியதோ அதனைச் செய்கிறது. ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் ஒரே சீராக அமைத்து விட்டு அதன் பின் மாற்றி அமைப்பது சுலபமானது. கைகளையும் கால்களையும் பெருவிரல்களோடு முதலில் அமைத்துவிடுகிறது. ஆனால் அவை அடிப்படையான உருவமைப்பே.

முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருதுவாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.

இதற்குப் பிறகு

இந்தக் கட்டத்தில்தான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண்குறியின் அடிப்பகுதியிலும் விதைப்பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.

சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்புமயிர்தான். இதனைக் கண்;டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.

பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.

சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?

இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம்பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதைய10டாக வெளிவருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி - இன்ப அதிர்ச்சி ஆகியவை ஆண்குறியில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபித்து விடுகிறது. விந்து வெளியேறியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. சிலவேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.

இயற்கை குழந்தையை உருவாக்க பெரிய உந்துசக்தியை வழங்கியுள்ளது.

விந்து என்றால் என்ன?

விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப் பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடுதலான திரவம் ஆண்குறியை அடையுமுன் சேர்கிறது. விந்துகளுக்கு இந்தத் திரவமெல்லாம் எதற்கு? மீன் அசைந்து இடம்பெயர்ந்து திரிய நீர் தேவை. அதுபோலவே விந்துகளும் திரிய திரவம் தேவைப்படுகிறது. விந்துத் திரவம் வெறும் திரவம் மட்டுமல்ல. பல விதமான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருக்கும். விந்துகளுக்குத் தேவையான ஊட்டச் சத்தை வழங்குகின்றன. ஆண்குழந்தைக்கான விந்து ஒரு நாள் மட்டும் உயிர்வாழும். ஆனால், பெண்குழந்தைக்கான விந்து மூன்று நாட்கள் வரை உயிர் வாழும்.

ஒவ்வொரு விந்து வெளியேற்றத்தின் போதும் எத்தனை விந்துகளை வெளியேற்றுகிறது?

சராசரி 409,000,000. அதாவது நானூறு மில்லியன்; ஆகும். ஒவ்வொரு முறை விந்து வெளியேற்றத்தின் போதும் வெளியாகும் விந்தின் தொகை இந்தியாவின் சனத்தொகையின் பாதியை உருவாக்கப் போதுமானது. விதைகளில் உருவாகும் விந்துகள் முதிர்ச்சி அடைய ஆறு கிழமைக் காலம் எடுக்கும். ஆரோக்கியமான விந்துகளே விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருகின்றன. நன்கு பழுக்காதவை மரணிக்கின்றன. அவை விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருவதில்லை. பயனுள்ள விந்துகளை வீணாக்குகிறோம் என்று நாம் கவலைப்படும் போது இயற்கையானது எவ்வளவு விந்துகளை உங்களுக்குத் தந்து உதவுகிறது எனச் சிந்திக்கலாம்.


திடீரென ஏன் விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது?

முதல் தரம் எப்போதும் ஆச்சரியமானதே.

சில பையன்கள் தாமாகவே தமது விந்தை வெளியேற்ற முயலும் போதும் தமது ஆண்குறியைத் தட்டி எழுப்பும் போதும். அநேக ஆண்பிள்ளைகள் இளைஞராக உள்ளபோதே இவ்வாறு செய்யத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வின் உச்சக் கட்டத்தில் விந்து வெளிப்படுகிறது.

சில பையன்களுக்கு நித்திரை செய்து கொண்டிருக்கையில் விந்து வெளிப்படுகிறது. இதற்குக் காம வெறியோடு கூடிய கனவு தோன்றும் போது, அக் காம உணர்வில் உச்சக் கட்டம் அடைந்து விந்து வெளிவருகிறது. நித்திரை கலைந்த பின் ஆடையிலோ படுக்கை விரிப்பிலோ விந்து படிந்திருக்கும். இதனை ஈரக்கனவு என்பர்.

முதல் விந்து வெளியேற்றம் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சம்பவம் என்பதை அறிந்து கொள்ளாத பையன்கள் விரக்தியும் வேதனையும் அடைவார்கள். பாலியல் பற்றிய நல்ல யோசனையை அறியமாட்டார்கள்.


அடுத்த கட்டம் என்ன?

அடுத்த கட்டம் பதின்னாலரை வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. ஆனால் ஆண்குறியும் விதைப் பையும் வளர்ச்சியுற்ற போது போலக் கருநிறம் அடைவதில்லை.

இதே காலக்கட்டத்தில் பூப்புமயிர் கருமையாகும் போது சுருளுகிறது.

உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறுகிறது?

முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில்தான் வேகத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. இதுவரை மிக மிக வேகமான வளர்ச்சியை அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதினைந்தரையாகும் போது வளர்ச்சி முற்றுப் பெறுகிறது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.

மிகுந்து இருப்பது என்ன?

விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமைநிறமாகிறது.

பூப்புமயிர் தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து வயிற்றின் கீழப் பகுதி தொப்புள் வரை பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியிலும் நடைபெறும்.

அநேக பையன்களுக்கு அவர்களின் கால்களிலும், கை அக்கிளிலும், தோள்களிலும் முதுகுகளிலும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும். ஆசிய நாடுகளில் உள்ள சில இனங்களுக்கு எவ்வித உரோமமும் முளைப்பதிலலை.

பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?

சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்களிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசையின் பிறபகுதியிலும் இறுதியாக நாடிப் பகுதியிலும் வளரத் தொடங்குகிறது.

ஆசிய நாட்டுச் சில இனங்களிடையே முகத்தில் மயிர் வளருவதேயில்லை.

பதினாறு பதினேழு வயதை அடைந்த பிறகும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு இத்தகைய திடீர் வளர்ச்சி காணப்படாவிட்டால் நீங்கள் காலம் தாழ்ந்த நேரசூசிக்கு இடப்பட்டீர்கள் என்று கருதலாம். இதனை உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஓ கதிர் மூலம் என்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயுங்கள். எடுக்கப்பட்ட ஓ கதிர்ப் படத்தை ஒரு குழந்தை வைத்தியரிடமோ என்பு வைத்தியரிடமோ காட்டுவது நல்லது. எல்லா வைத்தியர்களாலும் என்பு வளர்ச்சியை அடையாளம் காண இயலாது.

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது. உங்களைப் போன்ற பல் பிணியினரைக் கண்டிருப்பார்கள். ஆதலால் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு தேவையில்லை என்ற போதிலும் சில ஓமோன் மருந்துகளைச் சிபார்சு செய்வார்கள். ஓமோன்களின் செயல்பாடு இதுதான். துரித கதியில் செயல்படவைக்கும். இதனை காணக்கூடியதாய் இருக்கும். எவ்வளவு விரைவாகச் செயல்படத் தொடங்கியதோ அதேபோல விரைவாக நின்று விடும். ஒரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தால் தாமாகவே செயல்படத் தொடங்கி செவ்வையாக முற்றுப் பெறும்.

பருக்கள் (PIMPLES)

ஏன் பையன்கள் பருவமாகின்றபோது பருக்களைப் பெறுகிறார்கள்?

பருவமாகின்ற போது ஏற்படும் சகல வளர்ச்சிகளுக்கும் காரணமான ஆண்களுக்கான அன்ட்றோஜன் ஓமோனின் பக்கவிளைவேயாகும். அன்ட்றோஜன் ஓமோன் முகத்திலுள்ள நெய்ச் சுரப்பிகளைத் தீவிரமாக செயல்படுத்துகின்ற காரணத்தால் முகம் நொய்த தன்மையாகக் காணப்படுகிறது. பருவமாகின்றபோது அன்ட்றோஜன் ஓமோன் இச்சுரப்பிகளின் அருகிலுள்ள கலங்களின் ஓரங்களை கூடிய வளர்ச்சியடையச் செய்கிறது. இதனால் நெய்ச் சுரப்பிகள் அடைபட ஏதுவாகிறது. இதனால் குருப்பித்து பருக்கள் தோன்றுகின்றன.

இலேசான பருக்கள் குளிர்காலங்களில் பிரச்சினை தருவதில்லை. கோடை காலங்கள் வேகத்துடன் பொங்கிப் பரவுகிறது. தோல் சூடாகவும் நெய்த்தன்மையாகவும் உள்ள போதும் இது ஏற்படுகிறது.

கடுமையான பருக்கள் பாPட்சைகளுக்கு முன்பும், பெரியதான விழாவிற்கு முன்பும், மன அதிர்ச்சியின் போதும் உடல் கூடுதலான அன்ட்றோஜன் ஓமோனைச் சுரக்கிறது. கடும் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படுகிறது. அதனால் இந்த அன்ட்றோஜன் ஓமோன்தான் பருக்கள் ஏற்படக் காரணமாகிறது.

பருக்களை நீக்குவது எப்படி?

பருக்கள் உண்ணும் உணவு காரணமாக ஏற்படாதபடியால், உணவுப் பழக்கங்களை மாற்றுவதால் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சொக்கலெற் உண்பதைத் தவிர்க்க வேண்டியதில்லை.

ஆனால் முகத்திலுள்ள நெய்த்தன்மையைப் போக்க நாளுக்கு இரு முறை கழுவுவது நல்லது. இது அருகிப்போன சுரப்பிவாய்களின் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய அழுக்கை அகற்றவும் உதவும். இல்லாது போனால் கரும் புள்ளிகள் பருக்களின் மேற்பகுதிகளில் ஏற்படும். குருப்பிக்காத ஆனால் கடுமையான சிறுபருக்கள் உண்டாகும்.

அநேக பருக்குழம்புகளால் எவ்வித பயனுமில்லை. ஏனெனில் நெய்ச் சுரப்பிகள் ஏன் அடைபடுகின்றன. குருப்பிக்கிக்றன என்ற காரணத்தை அறியாதபடியால் செய்யக்கூடியது இதுதான். முகத்திலுள்ள நெய்த் தன்மையை உலர்த்தி காயவைப்பதே. சுரப்பிகள் அடைபட்டு குருப்பிக்கும் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுப்பதே உகந்தது. அதாவது குருப்பிப்பதை நிறுத்த நுண்ணுயிர் எதிரிகளைப் பாவிப்பதே. இவை நீண்ட கால நிவாரணி. நீண்ட நாட்களுக்கு உபயோகித்தபடி இருத்தல் வேண்டும்.

வைத்தியர்கள் நம்பும் புறத்தோல் நிவாரணி றெரிநோயிக் அமிலம். இது கறட்டிலுள்ள விற்றமின் யு கொண்ட பீரா கறோட்டினிலிருந்து பெறப்படுகிறது. றெரிநோயிக் அமிலம் செய்வது என்னவென்றால் தோலை மீண்டும் விரைவாகத் தோன்றத் செய்து விரவாக உதிர வைப்பது. தோலோடு கூடுதலாக வளர்ச்சியுற்று சுரப்பிகளை அடைக்கும் கலங்களையும் வெளியே தள்ளுகிறது.

இப்படியான சிக்கலான மருந்துகளை வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள்.

மணம் (ODOR)

உடல் மணத்திற்கும் ஓமோனா காரணம்?

உண்மைதான். இது வேண்டுமென்றே செய்யப்படாத பக்க விளைவு அல்ல. பூப்பு உரோமங்களும் அக்கிள் அடி உரோமங்களும் இம்மணங்களை தம்முள் அடக்கிக் கொள்கின்றன. ஏனெனில் அவைதாம் பாலியல் hPதியில் கவர்ந்து இழுக்கின்றன. எம்மை அறியாமலேயே உடல் மணங்களால் கவரப்படுகின்றோம். எமக்கு உண்மையில் உணர்வு பூர்வமாக இந்தத் தாக்கம் தெரிவதில்லை. உடல் மணத்தால் தான் விலங்குகள் மற்றைய பால் செழுமையாகவும் புணர்ச்சிக்கு தயார் நிலையிலுள்ளது என்பதையும் அறிந்து கொள்கின்றன. மானிட இனத்தைக் காட்டிலும் விலங்குகள் உடல் மணத்தால் தாக்கத்திற்கு ஆளாகின்றன. ஆகவே உடல் மணம் முதல் இடம் வகிக்கிறது.

உடல் மணத்தைப் போக்கிவிட விரும்பினால்?

முதலாவதாக தினமும் குளித்து கைகளை நன்றாகச் சுரண்டுங்கள். கேவலமான உடல் மணம் இருக்குமிடங்கள் என்பன துர்நாற்றம் அடைந்த அக்குள் அடிவியர்வையும் தூய்மை செய்யப்படாத புற இனவிருத்தி உறுப்புக்களுந்தான் காரணமாகும்.

மனிதர்கள் விலங்குகள் போலின்றி எந்நேரமும் புணர்ச்சிக்குத் தயார் நிலையில் இருக்கிறார்கள். உடல் மணம் எப்பொழுதும் ஒரே நிலையாகவே இருக்கும். ஆண்கள் பாலியல் உறவுக்கு எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதை பெண்களுக்கு ஆண்களின் உடல் மணம் காட்டிவிடும். இம்மணம் கோலோனை விட கூடிய சக்தி வாய்ந்தது. சில ஆண்களின் கோலோனில் கஸ்தூரி மணம் கலந்திருக்கும். கஸ்தூரி மான் இனத்தில் பாலியல் உறவைத் தூண்டும் மணமாகும். இந்த இரு ஆணின் மணங்களும் ஓரளவு ஒத்திருப்பதேன் என்று யோசித்துப் பார்க்கவில்லையா?

கை அக்கிள் பகுதி துர்நாற்றத்தைப் போக்க மணம் போக்கிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தெளிப்பான்களைப் பயன்படுத்துவது சிறந்தது.தெளிப்பான்களைப் பயன்படுத்துவீர்கள் ஆயின் ஓசோன் படலத்தின் தடிப்பைக் குறைத்து விட்ட குற்றத்திற்கு ஆளாவீர்கள். இவை வெறும் மணம் நீக்கிகளே அல்லது வியர்வை வெளிவருவதைத் தடுப்பவை. ஏனெனில் வியர்வைதான் துர்நாற்றத்திற்குக் காரணம். முகத்திற்குப் பூசும் மாவையோ அல்லது வெறெந்த மாவையோ பயன்படுத்தலாகாது. இவை வியர்வை நாளங்களை அடைத்துவிடும். வேனிற் கட்டியையோ அல்லது கொப்பளங்களையோ மட்டுமே ஏற்படுத்தும்.

தாய்ப்பாலுக்கும் வியர்வைக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? கோடை காலங்களில் தாய்ப்பாலில் நீர்த்தன்மை கூடுதலாக இருக்கும். இதனால் குழந்தையின் தாகம் தணிகிறது. அதனால் மேலதிக நீர் குழந்தைக்கு ஊட்டவேண்டிய தேவை இல்லை. பிரமாண்டமான வியர்வைச் சுரப்பி பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்.

பூப்பு ரோமப் பகுதி வழி வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க நெய்ச்சுரப்பியிலிருந்து வெளிவந்து படியும் வெண்படலத்தை நன்கு கழுவிவிடவேண்டும். ஆண்களுக்கு ஈஸ்வரைப் போன்ற உடல் மணம் இருக்கிறது.

ஆண்களின் குரல் (VOICE - MALE)

ஆண்களின் குரல் பருவமாகையில் ஏன் முரடாகிறது?

பருவம் ஆனதும் ஆண்பிள்ளைகளின் குரல்வளை (ஒலிப்பெட்டி) பெருக்க ஆரம்பிக்கிறது. அதன் ஒலி இழைகள் நீண்டு தடிப்பாகிறது.

ஒரு கிற்றாறையும் சிறிய வயலினையும் கவனியுங்கள். கிற்றாறின் நரம்புகள் வயலினைவிட தடித்திருக்கும். நீண்டும் இருக்கும். ஒலிப்பெட்டியும் பெரிதாய் இருக்கும். இப்பெட்டி ஒலியைப் பெரிதாக்கும். கிற்றார் தரும் ஓசை பெரியதாயும், வயலின் ஓசை சிறியதாயும் இருக்கும். வயலின் வெளிப்படுத்தும் பெரிய ஓசைகள் சரியாக அமைவதில்லை. இது போன்றதே பருவமான ஆண்களின் குரலும்.

எப்படி ஆண்களின் குரல் சிதறுண்டு போகிறது?

மனிதனைப் போன்று பையனின் குரல் கரடுமுரடாகும்போது சங்கீத சுருதியை மீறுகின்றது. பையனுக்கு இரண்டு குரல்கள் தாம் உண்டு. ஒன்று அவனுடைய இளம் பிள்ளைக்குரல் மற்றது பருவமானகுரல்.

ஆகவே குரலில் பெரிய மாற்றம் ஏற்படுகையில் அவன் தனது குழந்தைக்குரலில் முதலில் பேசுவான். பேசிய படி இருக்கும் போது குரல் முரட்டுத்தன்மை அடைய ஆரம்பிக்கிறது. குரல் முழுமையாக மாறுதல் அடைந்து விட்டபின் வயது வந்தவரின் குரல் வந்துவிடுகிறது. குழந்தையின் குரல் கடும் குரலாக மாறிவிடுகிறது. அவனுக்கு பழைய குரல் திரும்பிவராது.

சில பையன்களுக்கு இந்த மாற்றம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. பெண்ணொருத்தியை இதைப் பற்றிக் கேட்டால் ஒன்றும் தெளிவாக விளக்கக் கூடியதாக இருக்க மாட்டாள். அதே மாதிரி ஒலிக்கவும் முடியாது. ஏதோ நடந்துவிட்டது என்று மட்டுமே கூறமுடியும். எப்படிப் பேசினார்கள் என்பதில் பெண்கள் கவனம் செலுத்தவில்லை.

விருத்த சேதனம் செய்தல்
(CIRCUMCISION)

இனவிருத்திப் புற உறுப்பின் முன்தோலை அகற்றுதல்

சாதாரண மொழியில் வட்டமாக வெட்டப்படுதல் எனச் சொல்லலாம். அல்லது சுன்னத்துச் செய்தல் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஆண்குறியின் மேல் பாகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் தோல். இது உணர்ச்சி மயமான உள்ளே இருக்கும் பாகத்தை மறைத்துக் கொண்டிருக்கும்.

ஆண்குறியின் முன்தோலை அகற்றுவது எதற்காக?

அநேகமாக சமயச் சடங்காக இத்தோல் அகற்றப்படுகிறது. வைத்திய காரணங்களுக்காக பருவமானவர்களுக்கு ஆண்குறி புடைத்து எழும் போது இறுக்கமாகவும் வலியுடனும் இருப்பினும் முன்தோலை அகற்றி விடுவதுண்டு.

தற்காலத்தில் பிறந்த குழந்தைக்கும் சிறுவயதுப் பையன்களுக்கும் மயக்க மருந்து செலுத்தி இந்தச் சத்திர சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் காரணமாக வலி தோன்றுவதில்லை. சில நாடுகளில் மின் செலுத்தப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்தி வெட்டப்படுகிறது. இதனால் இரத்த வெளியேற்றம் உடன் நின்று போகிறது. குதம்பிவிடுவது தவிர்க்கப்படுகிறது.

அடிப்படை நோக்கம் இந்தச் சத்திரசிகிச்சை செய்துகொள்வது ஆண்குறியை சுத்தமாக வைத்திருக்கவல்ல. பருவமான இளைஞன் இந்த சத்திர சிகிச்சை செய்துகொள்ளும் போது நோவைத் தாங்கிக் கொள்கிறானா என்பதனை அறிந்து கொள்ளவே. அநேக ஆப்பிரிக்க நாடுகளில் இது செய்யப்படுகிறது.

இந்தச் சத்திரசிகிச்சை செய்துகொள்வதனால் ஏதாவது செயல்முறையில் நன்மை இருக்கிறதா?

ஒன்று, தானாகவே ஆண்குறியைச் சுத்தமாக வைத்திருக்கும். இச்சத்திர சிகிச்சை செய்திருக்காத பட்சத்தில் முன்தோலைப் பின்புறம் இழுத்து குளிக்கும் போதெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். சில ஆராய்சியாளர் கண்டு பிடித்திருக்கிறார்கள். சத்திர சிகிச்சை செய்து நீக்கப்படாவிட்டால் முன் தோலின் உள்ளே AIDS நோயை உண்டுபண்ணும் HIV வைரஸ் ஒழிந்திருக்கும்.

ஆனால் அதிசயம் என்னவென்றால் வேறொரு பிரயோசனமுமில்லை. ஆண் குறி புடைத்தெழுந்து நின்றால் முன்தோல் அகற்றப்பட்டதா இல்லையா என்ற வேறுபாடேயில்லை.

ஆண்குறி (PENIS)

புடைத்து நிற்கும் போது ஆண்குறியின் அளவு எவ்வாறிருக்கும்?

ஒவ்வொருவர் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள் புடைத்து நிற்கும் போது பெரியதாகத் தோன்றும்.

இந்த ஆண்குறியின் அளவு சம்பந்தான ஈடுபாடு வேதனையைத் தரும் போட்டி உணர்வில் முடியும். மற்றவைபோன்று ஆண்குறியின் அளவினை மாற்றி அமைக்கவே முடியாது. பையன்கள் ஒவ்வொரு முறையும் மேலும் சிறப்பாகச் செய்ய விரும்பி முயன்றால் ஏமாற்றமாகவே முடியும்.

பெண்கள் உண்மையில் இதனைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். பெண்களின் மார்பகங்களின் அளவினைப் பற்றி ஆண்கள் பேசிக்கொள்வதை அறிந்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் புண்படுத்தும்படியான கருத்துக்களை வெளிப்படுத்திய போதிலும் ஆண்குறியின் அளவுக்காக தாம் காதலித்த வாலிபனைக் கைவிடுவதில்லை. சில பெண்கள் பெருத்திருக்கும் ஆண்குறியைப் பற்றிப் புளுகித் திரிவதுண்டு.

ஆண்குறியின் அளவுக்காக வேதனைப்படுவீர்களாயின் இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். சில இன பாம்புகளுக்கு இரண்டு ஆண்குறிகள் இருக்கும். இது பெண்களை மிக நெருக்கத்தில் கொண்டுவர உதவும்.

ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?

இல்லை. பொதுவாக அவை நேராக இருப்பதில்லை. சில இடது புறமாகவோ வலது புறமாகவோ சரிந்திருக்கும். சில முனையில் மேற்புறமாக வளைந்துள்ளன. இப்படியும் அப்படியுமாகச் சரிந்து இல்லாதிருப்பின் கவலைப்படத் தேவையில்லை.

ஆண்குறியினை பெரிதாக்க விரும்பினால்...

நீங்கள் இதில் தீவிரமாய் இருப்பின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால் அநேக சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும். ஆண்குறி தற்போது ஒரு பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருள் போலத்தான் இருக்கும்.

ஆண்களுக்கான கருத்தடை உறை தயாரிப்பு நிலையம் இப்படியான விளம்பரத்தைச் செய்துள்ளது. இந்த உறை உங்கள் ஆண்குறியை ஆயிரத்தில் ஒரு பகுதி நீட்டக்கூடியது.

ஹிஜ்றாக்கள்! (HIJRAS)

ஹிஜ்றா என்றால் சரியாக என்ன?

விதைகள் அகற்றப்பட்டவர். விதைகள் நீக்கப்பட்டுள்ள பையன். வேறு விதமாக விதைகள் இரண்டும் வெட்டப்பட்டுவிட்டன. இதனால் ஆண்களுக்கான ஓமோன் வழங்கும் நடவடிக்கை நின்றுவிடுகிறது. இதன் காரணமாக வளர்ச்சியுற்று மனிதனாக மாறும் சகல நடவடிக்கைகளும் நின்றுவிடுகிறது. இந்தியாவில் ஆண்குறிகள் கூட வெட்டப்பட்டு விடுகின்றன. பாதிப்புக்கு உள்ளாவோர் அனைவரும் தாமாகவே விரும்பி செய்து கொள்ள முன்வருபவர்களே. இந்த சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் தம்மைப் போன்றோருடனே சேர்ந்து இருக்க விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் மீண்டும் தமது வீடுகளில் சகஜமான வாழ்க்கை நடத்த இயலாத நிலையை அடைந்துவிட்டார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

இத்தகையோருக்குத் தாடி வளருவதில்லை. வழுக்கையும் ஏற்படுவதில்லை. ஏனெனில் தாடி வளருவதும் வழுக்கை விழுவதும் அன்ட்றோஜன் என்னும் ஆண்களுக்குரிய ஓமோனால் தான் ஏற்படுகிறது. அன்ட்றோஜன் விதைகளில் தயாராகிறது. ஆனாலும் கூட இவர்கள் உயரமாக வளர்ந்திருப்பார்கள். சிறுவயதில் விதைகள் அகற்றப்பட்டிருந்தால் அதுவும் பருவமாவதற்கு முன்பு இவர்கள் பல காலங்களுக்கு உயர்ந்தபடியே இருப்பார்கள். மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பையன்களுக்கு இத்தகைய சத்திரசிகிச்சை செய்வித்து வைப்பார்கள். ஏனெனில் இந்தப் பையன்களின் இனிய குரல் மாறுபட்டுப் போகாமல் தொடர்ந்தும் வழிபாட்டின் போது தேவாலயத்தில் பாட வேண்டும் என்பதற்காக.

எல்லா ஹிஜ்றாக்களும் விதைகள் அகற்றப்பட்டவர்கள் அல்ல. சிலர் அலிகள். அதாவது இரு பாலினத்திற்கும் உரிய பண்புகளைக் கொண்டவர்கள். ஒரு பெண்ணின் புறபாலியல் உறுப்பு உள்ள இடத்தில் ஆண்களுக்கு மட்டும் உரித்தான ஆண்குறியின் முனை தென்படுகிறது. அதுபோலவே ஆண்களுக்கும் புறபாலியல் உறுப்புகள் பெண்களுக்கு மட்டும் உரியதாக உள்ளதன் ஒருபகுதி காணப்படுகிறது. சில புத்தகங்களில் காணப்படுகிறது. வெளிப்புறத்தில் ஆண் உறுப்பும் உட்புறத்தில் கருப்பையும் சூலகங்களும் இருக்குமாம். ஆண் பெண் இரண்டினையும் கொண்டிருக்கும்.

பாலியலும் அது தொடர்பான பிறவும்

பாலியல் உந்தல் (SEX DRIVE)

பருவமானவுடன் திடீர் என பாலியல் விருப்பு ஏன் ஏற்படுகிறது?

ஓமோன்கள் குறிப்பாக அன்ட்றோஜன் என்கின்ற ஆண்களுக்கான ஓமோன் ஆண் பெண் இருபாலாருக்கும் உண்டு. அன்ட்றோஜன் தான் பாலியல் உந்துதலை ஏற்படுத்துகிறது. பாலியல் உறவு கொள்ளத் தூண்டுகிறது. பாலியல் உந்துதல் இல்லாவிட்டால் பாலியல் உறுப்புகள் எல்லாம் ஒரு பயனுமற்றுப் போகும். இனமே இல்லாது போகும். எமது உயிர் அங்கிகளின் நோக்கம் இதுவல்லவே.

இதனைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்களாயின் பாலியல் விருப்பேயற்ற குழந்தைகள் பருவம் ஆன பிறகு கூட பல வாரங்களுக்கு பாலியல் சிந்தனை அற்று இருப்பர். அதன் பின்னர் எப்பொழுதும் பாலியல் சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள்.

வயது வந்தவர்களுக்கும் செயற்கை அன்ட்றோஜன் செலுத்தப்பட்டால் பருவமானவர்களைப் போலவே பாலியல் உந்தல் பெறுவார்கள். வயது வந்தவர்கள் பாலியல் உந்துதல் குறைவாக இருப்பதற்குக் காரணம் பரம்பரை அலகு (ஜீன்ஸ்) அவர்களுக்கு ஒத்துவருவதில்லை. குழந்தைகளைப் பெற்று எடுக்க வேண்டுமென்ற ஆர்வமும் இல்லை.

ஏன் பருவமானவர்கள் உடனடியாக பாலியல் உறவு கொள்வதில்லை?

சிலர் ஈடுபடுகிறார்கள். அநேகம் பேர் அப்படியில்லை. ஏனெனில் இது அவ்வளவு சுலபமானதல்ல. மனிதக் குழந்தைகள் நிலையான குடும்பங்களில் தாய் தந்தையர் அரவணைப்பில் வாழ்கிறார்கள். பாலியல் உறவுகொள்ள பெண்ணிற்கும் பையனுக்கும் இடையே நெருக்கம் கூடுதலாக இருத்தல் வேண்டும். குழந்தை பிறக்குமுன்னும் பின்னும் பெண்தானே குழந்தையோடு கூடிய அளவு ஈடுபாடு கொண்டிருப்பதனால் பெண்கள் கூடிய நெருக்கமான உறவுகள் ஏற்படுவதை விரும்புகின்றனர்;. பையன்கள் பாலியல் உறவை வெறும் ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர். பெண்கள் ஏன் இதில் கூடுதலான தயக்கம் காட்டுகிறர்கள் என்பது ஆண்பிள்ளைகளுக்கு விளங்கவில்லை. (இதே ஆண்கள் தான் பெண்கள் உடன் சம்மதத்தைத் தெரிவித்தால் மிகவும் மலிவானவர்கள் என்றும் கருத்து வெளியிடுகிறார்கள்) இத்தகைய ஆண்களின் அணுகுமுறையைப் பெண்கள் எதிர்க்கிறார்கள. சும்மா பார்த்து ரசிப்போம் என்ற பாணியில் நடக்கிறார்கள். பொறுப்பெதுவும் கட்டுப்பாடு எதுவுமற்ற பாலியல் உறவை விரும்புகிறார்கள். திருமணம் செய்வது பற்றிச் சந்தேகம் கொள்ளுகிறார்கள். (திருமணம் முறிவில் முடிவுற்றுவிடுமோ என்று கருதுகிறார்கள்) சில பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்து கணவன்மார்கள் இன்றியே வளர்த்தெடுக்கிறார்கள்.

பாலியல் உறவுகொள்ள தயார் நிலை அடையாத பருவமானவர்கள் செய்வதென்ன?

உண்மையில் கூடிய நேரத்தை விரக்தியிலும் எட்டாக் கற்பனையிலும் செலவிடுகின்றனர். இது தீமையானது அல்ல. ஏனெனில் பாலியல் உறவு பற்றி அநேக கற்பனை எண்ணங்கள் தோன்றுகின்றன. இதனைப் பற்றி அநேக புத்தகங்கள் பலவற்றைத் தருகின்றன. பெண்கள் அநேக ஆபாசப் புத்தகங்களைப் படிக்கின்றார்கள். பருவமானவர்கள் செய்கின்ற மற்ற நடவடிக்கை தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதாகும். இதனால் பாலியல் வெறி ஓரளவுக்குத் தணிகிறது. தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதால் உள்ள சில நன்மைகள்.
- வேறு ஒருவரும் தேவைப்படாது. எல்லாம் நீங்களே!
- யாருமே கருப்பம் தரிக்கமாட்டார்கள்.
- யாருக்கும் எந்த நோயும் தொற்றிக்கொள்ளாது.
- உங்கள் உடலைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.


சுயமாய் விந்து வெளியேற்றுதல்
(MASTURBATION)

சுயமாய் விந்து வெளியேற்றல் என்றால் என்ன?

தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன?

பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.

இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது)

ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல

சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.

இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விரக்தியை வெளிப்படுத்தும் ஓர் அம்சமே. இது பாலியல் பிரச்சினை என்று கொள்ள இயலாது. விருப்பம் இல்லாத ஆசிரியர் ஒருவரோடு பழகுகின்ற நிலையே. விரைவில் பிள்ளைகள் சுயமாக விந்தை வெளியேற்றுவது நல்லதோர் உணர்வைத் தருகிறது என்றும் சலிப்பு ஏற்படுவதை நீக்கும் நிவாரணி ஒன்று என்றும் கருதுகிறார்கள். பலமாதங்களுக்கு இதனைத் தொடராதே இருப்பர்.

ஏன் பெற்றோர் சுயமாக விந்தை வெளியேற்றுவதைத் தவறு என்கிறார்கள்?

பிள்ளை ஓமோன்களால் வழி நடத்திச் செல்லும் போது பெற்றோர்களால் தம்பிள்ளைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை. பிள்ளைகளில் பெரியமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளை மாற்றம் காரணமாக பருவமாகின்றபோது பாலியல் உந்தல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடாதே என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை அடக்கி ஆள முயலுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களுக்குமே இப்படிப்பட்ட போக்கு இருப்பதில்லை. பிள்ளைகளின் விந்து வெளியேற்றும் போக்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.

மற்றது பெற்றோரின் பாலியல் வேட்கை தணிந்து வரும்பொழுது பிள்ளைகள் பருவமாகியவர்கள் விந்து வெளியேற்ற ஆரம்பிக்கின்றார்கள். பருவம் ஆனவர்களுக்கு பாலியல் தாகம் தம்மைப் போலக் குறைவாக இல்லையே என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.

வருத்தமான சம்பவம் அல்லது விஷயம் என்னவென்றால், பாலியல் உந்தல்கள் வெட்கப்படத்தக்கவை என்றும் தூய்மையற்ற செயல் என்றும் கருத்து புகுத்தப்பட்டுள்ளதால் பருவம் ஆனவர்களின் பாலியல் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது.

சுயமாக விந்தை வெளியேற்றுவது பையன்களை பலமற்றவர்களாக்கிவிடும் என்று கூறுகிறார்களே!

விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்.

பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது.

விந்து வெளியேறியதும் ஓய்வு கொண்டால் தான் மறுபடியும் ஆண் உறுப்பு புடைத்தெழும் என்பதில்லை. அடுத்த புடைத்தெழும் நிகழ்வு சில நிமிட நேரங்களுக்குள் அல்லது சில மணி நேரங்களுக்குள் ஏற்பட்டு விடும். இது பாலுணர்வு அற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதும் இல்லை. முழுநாளும் எந்திரங்களைப்போல இதைத்தான் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு வேறு பல வேலைகளும் உண்டு.

அநேக விளையாட்டு வீரர்கள் பெரிய விளையாட்டுப் போட்டிக்குமுன் பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பதேன்?

அவர்கள் பாலியல் உறவுகொள்வதையோ சுயமாகவோ விந்து வெளியேறுவதையோ விரும்புவதில்லை. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆவேசமாக விளையாட இடமுண்டு. இன்பம் துய்த்த சந்தோசத்தோடு விளையாடச் சென்றால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

சுய வெளியேற்றத்தின் பயனால் விந்தின் தொகை குறைந்துவிடுமா?

ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை வெளியேறினால் தொகை குறையக் கூடும். சில தினங்களுக்கு தடிப்பாக இருக்கும். வெளியேற்றப்படாதிருந்தால் இது எல்லா வெளியேற்றங்களுக்கும் பொருந்தும். சுயமாக வெளியேற்றும் போது நீங்கள் விந்துவின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். அதேவேளை பாலியல் உறவு கொள்ளும் போது வெளியேறுவது கண்ணுக்குப் புலப்படாது. நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுவதில்லை. ஏனெனில் விந்தை மீதப்படுத்தவிரும்புகிறீர்கள். விந்தை ஆண்தன்மையே அற்ற கணவன்மார்களின் மனைவியருக்கு செயற்கை சினைப்படுத்தல் செய்ய தானம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுகிறீர்கள் அவ்விதம் செய்ய விரும்புவதால் கவலைப்பட வேண்டாம். சில மணி நேரங்களில் சகஜமான தொகையை மீண்டும் பெற்றுவிடுவீர்கள். உங்கள் விந்து எண்ணிக்கைக்கு ஏற்ப சுயமாக விந்தை வெளியேற்றுவதால் பாலியலில் ஈடுபடத் தகுதியற்றவர்கள் ஆகிவிடமாட்டீர்கள். குழந்தைகளை உருவாக்கும் ஆசையும் முயற்சியும் அற்றுப் போகாது.

ஒன்றை மற்றதாக்குவது என்றால் என்ன?

பாலியல் உறவுமூலமோ அல்லது சுயவெளியேற்றுதல் முறைமூலமோ விந்தை வெளிவர விடாது பாலியல் உறவைத் திசை திருப்பும் நோக்கில் விளையாட்டிலோ சங்கீதத்திலோ இலக்கிய முயற்சியிலோ திசை திருப்பி விடலாகும். விரக்தி முயற்சிக்கு உத்வேகம் ஊட்டுகிறது.

திசை திருப்பிவிடுவது பாலியல் உறவாலோ சுயமாகவோ விந்து வெளியேற்றுவதைத் தவறான செயல் என்ற கருத்தினைக் கொண்டதாலோ அல்ல. திசை திருப்பி விடுவது இரண்டாம் வகைச் செயலாகவே கருதுகிறார்கள்.

இது பிரம்மச்சரியத்தைப் போன்ற செயல்தானா?

அப்படி ஒன்றும் இல்லை. ஆரம்ப கட்டங்களில் பிரம்மச்சரிய பயிற்சி பெறும் இளம் வயதினர் விரக்தி நிலை அடைவர்.

பிரம்மசாரியாவது பற்றிய இந்து சமயக் கொள்கை என்னவென்றால் இதில் ஈடுபடுவோர் பாலியல் உணர்வுகளை ஒதுக்கிவிட வேண்டும் என்பதாகும். சிற்றின்பம் மிருகங்களுக்கே உரியது. இதை விட உயர்வான பேரின்பம் பிரமச்சரியத்தால் கிடைக்கின்றது எனப்படும்.

ஒரு துளி விந்து நூறு துளி இரத்தத்திற்குச் சமம் என்கின்ற கருத்து உணர்த்துவது என்ன?

இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான். முன்னொரு காலத்தில் பூமி தட்டையானது என்று ஒரு கருத்து நிலவியது. புதிய தகவல்களின் அடிப்படையில் இக்கருத்துகள் தவறானது என்று அறிந்து கொண்டனர்.

உண்மையில் உங்கள் உடல் விந்தைத் தயாரித்தபடி இருக்கும். நீங்கள் சுயமாகவோ பாலியல் உறவு மூலமாகவோ விந்தை வெளியேற்றாவிட்டால் தேக்கம் ஏற்பட்டு தொகை பெருகி இரவில் கனவில் பாலியல் சிந்தனை ஓங்கி படுக்கையை ஈரமாக்குகின்றனர். இதனை ஈரமாக்கிய கனவு என்பர். இத்தகைய வீணடிப்புக்களைப்பற்றி இயற்கை பதட்டப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புடைத்nழுந்து விந்து வெளியாகும் போது நூற்றுக்கணக்கான மில்லியன் விந்துக்கள் வெளியாகின்றன. இவற்றில் ஒன்றோ இரண்டோ மட்டுமே தேவைப்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் ஒன்றுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் குழந்தை ஒன்றுக்கு உரியவராக விரும்பவில்லை.

சுய விந்து வெளியேற்றுவது நிரந்தரப் பழக்கமாகப் போய்விடும் என்கிறார்களே?

உண்மையில் நடப்பது இதுதான். சுய விந்து வெளியேற்றம் சதா காலமும் செய்துவந்து ஓமோனின் செயல்பாடு ஓய்ந்து விட பல நாட்களுக்கோ வாரங்களுக்கோ சுய விந்து வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது. ஓமோன் செயல்பாடு நிலையாக இருப்பின் சுய விந்து வெளியேற்றம் தொடர்ந்தபடி இருக்கும்.

இதனைப் பழக்கமான செயல் என்று கொள்ள முடியாது. மனவுறுதி அற்றவர் என்று கூறவும் முடியாது. பாலியல் உந்தல்கள் குறைவாகவுள்ளவர்குறைவாகவே சுயமாக விந்து வெளியேற்றத்தில் ஈடுபடுவார்கள். கூடுதலான அளவு பாலியல் உந்தல்கள் உடையோர் அதிகமாக சுயவிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே விதமானதே.

ஒரு பருவமானவர் சுயமாக விந்து வெளியேற்றுவதற்கு எப்பொழுதும் வெறுப்புற்று இருப்பதற்குக் காரணம் தீர்க்க முடியாத மன உளைச்சலே. இப்படிப்பட்ட நிலையில் ஆலோசகர் ஒருவரை அணுகி உதவி பெறுவது நல்லது.

சுயமாக விந்து வெளியேற்றுவது பருக்கள் தோன்றவும் பார்வை குன்றவும் காரணமாகுமா?

பருவமாகின்ற போது பொதுவாக பிள்ளைகளுக்கு பருக்கள் தோன்றுவதும், கண்பார்வை பாதிக்கப்படுவதும் சாதாரண சம்பவங்களே. பருவமானவர்கள் சுயமாக விந்து வெளியேற்றத் தொடங்குகிறார்கள்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே வேளையில் நடக்கின்றதால் சுயமாக விந்து வெளியேற்றுவதுதான் மற்ற இரண்டுக்கும் காரணமென்று கொள்ள முடியாது. அல்லது பார்வைக் குறைபாடுதான் பருக்கள் தோன்றக் காரணம் என்று கொள்ள முடியாது. இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது காரணம் ஆகாதல்லவா?

சுயமாக விந்தை வெளிப்படுத்தினால் சித்தசுவாதீனம் ஏற்படும் என்று கூறக் காரணம் என்ன?

சித்த சுவாதீனம் உற்றவர்கள் புத்தி பேதலித்து இருக்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற சிந்தனை இன்றி வெளிப்படையாவே சுயமாக விந்தை வெளியேற்றுகிறார்கள். இச்செயலுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியே காரணம்.

இத்தகைய சித்த சுவாதீனம் பாரம்பரியமானதே. உங்களிடம் பரம்பரை அலகு இல்லாவிட்டால் இது ஏற்படும். பரம்பரை அலகு இருப்பின் இந்நிலை ஏற்படாது. சுயமாக விந்தை வெளியேற்றுவதால் இத்தகைய கோளாறுகள் ஏற்படாது. ஆனால் இவை அனைத்தும் பருவம் ஆன பிறகே ஏற்படுகிறது.

சுயவிந்து வெளியேற்றம் இடைவிடாது செய்து வருவதற்கு குழம்பிய மனநிலையே காரணமாகிறது. வேறு காரணங்களாகவும் இருக்கக் கூடும். நன்கு பயிற்றப்பட்ட மனநோய் வைத்தியரை அணுகி இத்தகையோர் ஆலோசனை பெறுவது நல்லது. மனவேதனைக்குரிய காரணத்தை அறிந்து கொண்டால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள இயலும். இதனை அறிந்து நிவர்த்தி செய்த பிறகு அடிக்கடி சுயமாக விந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது.

சுயமாக விந்து வெளியேற்றிவருபவர் வெறொரு பெண்ணோடு பாலுறவு கொள்வது கடினமானதா?

இல்லை. உங்கள் உடலைப் பற்றி நன்கு அறிந்த பிறகு வேறொருவரோடு பாலுறவு கொள்வது சுலபமாகிவிடும்.

காதல் வயப்படுதல் (FALLING IN LOVE)

பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்?

கவனம் ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண் முதல் மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும் இடம்பெறும்.

இக்கவர்ச்சி ஒரு பட்சமானது. ஒருவர் கவர்ச்சி ஏற்பட்டு அதிக நேரம் அதேநினைவிலேயே ஊறியிருப்பார். இதனைத் தமக்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். அவர்கள் முன்பு வெட்கப்பட்டோ அல்லது வாய்மூடி மௌனிகளாகவோ இருப்பார்கள்.

இந்தக் கவர்ச்சி முறையை ஈர்க்கப்படுதல் என்றும் கூறுவர். ஆனால் ஈர்க்கப்படுவது என்பது அவ்வளவு கடுமையாகக் கொள்ளாத நிலையே. ஆனால் கவரப்படுவது என்பது ஏதோ விதமான சிநேகபூர்வமான நிகழ்ச்சியாகும்.

இந்தியாவில் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப் பழக வாய்ப்பில்லாது இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பஸ்களில் அன்றாடம் பயணம் செய்பவர்களில் ஒருத்தியை தன்னுடையவள் என்று கருதிக்கொள்வார்கள். தான் நினைத்து இருப்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கவும் முயலுவதில்லை. ஆனால் வேறோர் ஆடவன் அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டால் ஆவேசம் கொள்வான். சில வேளைகளில் அவளுக்கு வெகுமதி கொடுக்க முன்வருவான். அவளுக்கு ஏன் தனக்கு அது கொடுக்கப்பட்டதென்றே தெரியாது.

ஒருதலைக்காதல் ஏற்படுவது மாற்றுப் பாலினரோடுதானா?

அப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. இது பருவமானவர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் ஒரே பாலினரிடம் தோன்றுகிறது. இந்த உணர்வு தன்னினச் சேர்க்கையில் முடிந்து விடும் என்று நினைக்க வேண்டுமென்பதில்லை.

நீர் தன்னினச் சேர்க்கையாளனாக மாறினால் என்னவாகும்?

இயற்கையாக ஏற்படுவதையே செய்கிறீர்கள். ஒரே இனத்தவரிடமே விருப்பு ஏற்படுகிறது. காதலும் பிறக்கிறது.

ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல. இது ஒரு மாற்று வழியே.

நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல் மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடி நிச்சயித்துத் திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில் இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர் தன்னினச் சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர் என்று ஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச் சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்த மட்டில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது பற்றியும் கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன் வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதி சீர்குலைந்துதானே இருக்கும்.

இக்காலங்களில், ஓரினச் சேர்க்கையாளனாக இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவு பிரச்சினையாயிருக்காது. எப்ப்பொழுதுமே வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமான செயல்தான். உங்கள் பெற்றோர் உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச் சமாளிப்பது சிரமமானதே. நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலை அல்ல. வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.

காதலிப்பது என்பதும் ஒருவரை ஒருவர் காதலிப்பது என்பதும் ஒன்றல்ல. இதுவெல்லாம் ஒரு கனவே. வாழ்வை ஓர் இன்பப் பூங்காவெனக் கருதுவது ஆகும்.

காதலிப்பது தவறானது என்றா கருதுகிறீர்கள். உலகில் பாடப்படும் பிரபலமான பாடல்கள் எல்லாமே காதல் பாடல்களே.

பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன?

தனது நாக்கை மற்றவரின் நாக்கோடு படரவிடுவது. தனது நாக்கை மற்றவரின் வாய்க்குள் நாக்கின் மீது படரவிட்டுக் குடாய்வது. இதனை ஆழ்ந்த முத்தம் என்றும் அழைப்பர். இதனை பிறெஞ்சு முத்தம் என்பர். இது பிறெஞ்சு மக்களுக்கு உரியதோ என்றதனால் அல்ல. ஆங்கில எழுத்தாளர்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் காரியங்களை எல்லாம் பிறெஞ்சு என்றுதான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஆண்களின் கருத்தடை உறையை “பிறெஞ்சுத் தோல்’’ (குசநnஉh டநவாநச) என்பார்கள்.

சாதாரணமுத்தம் என்றால் சிலவேளைகளில் வெறுப்பைத் தரும். சிலரை முத்தம் செய்ய நாம் விரும்புவதில்லை. ஏனெனில் அவர்களின் வாய் அசுத்தமாய் இருப்பதனால்.

பிறெஞ்சு முத்தத்தால் AIDS நோய் பரவும் என்பதற்கு ஆதாரமே இல்லை. ஆனால் செங்கமாரி (Hepatitus ‘B’) பரவும்.

செல்லம் பொழிவது என்றால் என்ன?

செல்லம் பொழிவது என்பது பாலியல் நடவடிக்கையின் ஓர் அங்கமே. முத்தம் இடுவதைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தது. ஆனால் பாலியல் தொடர்பைக் காட்டிலும் ஒரு படி குறைந்தது.

பாலியல் உணர்வைத் தூண்டும் பிரதேசங்களில் தட்டிக்கொடுப்பதை செல்லம் பொழிவது என்பார்கள். பெண்களுக்கான இத்தகைய பிரதேசங்கள் மார்பகங்கள், முலைக்காம்பு, யோனிப் பகுதி. ஆண்களுக்கோ ஆண் உறுப்புப் பகுதி ஆகும். சிலருக்கு நெஞ்சகத்துக் காம்புப் பகுதியும் ஆகும். தடவுவதோடு நில்லாது அப்பகுதியைத் துருவி ஆராயவும் செய்வர். இதனால் மற்றவருடைய பாலியல் உணர்வைத் தட்டி எழுப்புவர்.

பாலியல் (SEX)

பாலியல் உறவு என்றால் என்ன?

பாலியல் உறவு என்றால் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வது. எப்படியெனில் ஆணின் பாலியல் உறுப்பை பெண்ணின் யோனிக்குள் புகுத்துவது.

உன்னத நிலை என்ன வென்றால் இருபாலாரும் பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது. ஆண் உறுப்பு புடைத்தெழவும் பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருக்கவும் ஆன நிலை. பெண்ணின் யோனிப் பகுதி ஈரமாயிருப்பதற்குக் காரணம், பல்வேறு பகுதிகளிலிருந்து சுரக்கும் ஈரப் பதார்த்தங்களே. யோனிப்பாகம் ஈரமாயிருந்தால் ஆணின் பாலியல் உறுப்பு எளிதாக உட்புகும்.

ஆணின் பாலியல் உறுப்பு பெண்ணின் யோனிக்குள் புகுந்தவுடன் விந்து வெளிப்பட்டுவிடாது. பலமுறை ஆண் பாலியல் உறுப்பை யோனிக்குள் அசைய விடும் போது யோனித்துவாரத்தின் பக்கத் தசைகளோடு ஆண் பாலியல் உறுப்பு உராயப்படும் போது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு விடுகிறது. வெளிவரத் துடிக்கும் விந்து எப்படியும் வந்தே தீரும். எக்காரணம் கொண்டும் திருப்பிச் சென்றுவிடாது. விந்து வெளிவரத் தயார் நிலையிலேயே உள்ளது. ஆணின் பால் உறுப்பு சுருக்கம் அடைந்து விந்தை வெளியே தள்ளுகிறது.

ஆண் உறுப்பின் யோனித் துவார உராய்வுகள் பெண்ணின் யோனியையும் யோனிவாயிலில் இருக்கும் உணர்ச்சி உறுப்பையும் தட்டி எழுப்புகிறது. உணர்ச்சியை எழுப்பும் நிகழ்வு ஆணுக்கும் பெண்ணிற்கும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை.

ஆணின் பாலியல் உறவின் எழுச்சியின்போது விந்து சிந்திச் சிதறி வெளியேறுகிறது. பெண்ணிற்கு ஏற்படும் பாலியல் எழுச்சி அல்லது உந்தல் சுருதி முறையில் யோனித் தசைகளில் சுருக்கம் ஏற்படச் செய்கிறது. இது யோனிக்கருகிலுள்ள இரத்தக் குழாய்களில் நெருடலை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் பாலியல் உறவின் போதும் ஏற்படுகிறது. இருபாலாரின் பாலியல் உணர்வின் உச்சக்கட்டத்தை அடைய உடல் எங்குமுள்ள தசைகளின் சுருக்கம் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவாக தசைகள் ஓய்வடைகின்றன. ஆகவே இன்ப உணர்வுகள் யோனிப் பிரதேசத்தோடு மட்டுப்படாமல் அதற்கு அப்பாலும் வியாபிக்கிறது.

பாலியல் உறவு கர்ப்பம் தரிப்பதில் முடிவுறும். ஆணின் அல்லது பெண்ணின் மலட்டுத் தன்மை காரணமாகவோ அல்லது நம்பக் கூடிய கருத்தடை உபகரணத்தைப் பயன்படுத்துவதாலோ தவிர்க்கப்படுகிறது.

முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும் போதே இது சாத்தியமாகிறது. இரு பங்காளரில் ஒருவருக்கு எய்ட்ஸ் (AIDS) இருக்குமாயின் பாலியல் உறவின் போது மற்றவருக்கு எயிட்ஸ் (AIDS) வியாதியை உண்டு பண்ணும். HIVS பரிசோதனை கூட இரண்டு கிழமைகளுக்கு முன்பிருந்த நிலையைத்தான் காட்டும். இருவருக்கும் ஆன தகுந்த பாதுகாப்பு கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதே.

பாலியல் உறவுக்கு முன் செய்யும் நடவடிக்கை என்றால் என்ன?

யோனிக்குள் ஆணின் பாலியல் உறுப்பைப் புகுத்துமுன் இரு பங்காளிகளின் உணர்வுகளும் சரியாகத் தட்டி எழுப்பப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆணுறுப்பை யோனிக்குள் நுழைக்குமுன் முன்நடவடிக்கையாக உணர்ச்சி தட்டி எழுப்பப்பட வேண்டும். பெண்களுக்கு முன்னரேயே ஆண்களுக்கு பாலியல் உணர்வு உச்சக் கட்டத்தை அடைந்து விடும். இந்த நிலை இரு பங்காளிகளும் இளைஞராக இருக்கும்போது ஏற்படுகிறது. பாலியல் உறவுக்கு முன் செய்யும் முன் நடவடிக்கை இதற்கு ஈடுசெய்கிறது. நன்மையும் புரிகிறது.

சமய தாபனங்கள் காட்டும் வழி என்ன?

பெண் முதுகுப் புறம் கீழே இருக்க உடலை நீட்டிய நிலையில் படுத்திருக்க அவள் மீது குப்புறப்படுத்து பாலியல் உறவில் ஈடுபடுவது சாதாரணமான பழைமையான உறவு முறை. இதற்கு இப்பெயரை வழங்கியவர்கள் பசுபிக் தீவினர். இத்தகைய முறைதான் இன்பத்தை அள்ளித் தரும் முறையென நம்பினார்கள். வெள்ளையரின் சமய தாபனங்கள் குந்தி இருந்து ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து பாலியல் உறவில் ஈடுபடும் முறையை எடுத்துக்காட்டினர். வேறு விதமாகக் கூறுவதாயின் எந்த முறையிலாவது ஈடுபட்டு இன்பத்தின் உச்ச நிலையை அடைந்தால் போதும்.

பாலியல் உறவு கொள்வது முறையான வழியில் என்றீர்கள். பாலியல் உறவுக்கு வேறெதும் முறை இருக்கிறதா?

மற்ற முறைகளில் ஒன்று வாய்வழி அடுத்தது குதம் வழி.

வாய்வழிப் பாலியல் உறவு என்றால் என்ன?

வாய்வழியான உறவு என்றால் உங்கள் வாயை பங்காளியின் பாலியல் புற உறுப்பின் மீது பயன்படுத்தி பாலியல் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைய வைத்துவிடுவது. பெண்ணொருத்திக்காயின் பெண் குறியை நாக்காலும், உதடுகளாலும் தடவித் தூண்டிவிடுவது. ஆணுக்காயின் ஆண்குறியை எடுத்து வாய்க்குள் வைத்து விடுவது. இறுதியில் புடைத்தெழும். இறுதியில் விந்து வெளிவரும். தடுக்க வேண்டாம்!

வாய்வழியாக நடத்தப்படும் பாலுறவால் கர்ப்பம் தரிக்காது. விழுங்கிய விந்து கருப்பையை அடையாமல் வயிற்றுக்குள் நேரே சென்றுவிடும். ஆனால், விந்து வாய்க்குள் புகுந்தாலும் AIDS பரவும். உங்கள் பங்காளியைப் பற்றித் தெளிவாகத் தெரியாமல் இருந்தால் கருத்தடை உறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதோடு பாலியல் hPதியில் பரவும் நோய்கள் தொற்றக்கூடும்.

குதம் வழியான பாலியல் உறவு என்றால் என்ன?

குதம் என்றால் மலவாசல் என்றும் அழைக்கலாம். குதம் வழியான பாலியல் உறவு என்பது ஆண்குறியைக் குதத்திற்குள் புகுத்தி விடுவது ஆகும். குதம் வழியிலுள்ள இறுக்கான அமைப்பு ஆணின் பாலியல் புறவுறுப்புக்கு மேலதிக தூண்டுதல் வழங்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை பெரும் வேதனையும் வலியும் தருகிறது. குதத்தைச் சுற்றியுள்ள தசைகளை ஓய்வில் வைத்திருக்கும் உத்தியை அறிந்திருந்தால் மட்டுமே இந்த வேதனையிலிருந்து ஓரளவு விடுதலை பெறலாம். பெண் இந்த முறையால் இன்பம் அடைவதில்லை.

அநேக ஆண்களும் பெண்களும் குதம் வழியான பாலியல் உறவினை வாழ்நாள் முழுவதும் பெறாமலேயே இருக்கின்றனர்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இரு ஆண்களாயின் குதம் வழியாக ஆண்குறி நுழையும் போது இருவருக்கும் இன்ப உணர்வு ஏற்படுகிறது. புறஸ்றோற் சுரப்பியின் இன்பம் வாங்கிகளின் மீது ஆண்குறி உராயும் போது இன்பம் சுரக்கின்றது. (புறஸ்றோற் சுரப்பி தான் விந்தை திரவம் கலந்ததாகத் தருகிறது)

குதவழி பாலியல் உறவாலும் கருத்தரிப்பு நடைபெறாது. ஆனால் AIDS பரவும் அபாயம் பெரிதும் உண்டு. குதப்பாதை மிகவும் இறுக்கமாக இருப்பதனால் அதிக அளவு உராய்வும் அதன் பயனாகச் சிறுகாயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாக விந்து மற்றவரின் குருதி ஓட்டத்துடன் கலந்து விட இடமுண்டு. மற்றவரிடம் AIDS வியாதிக்கான HIV இல்லை என்று உறுதியாகத் தெரியாவிட்டால் குதவழி பாலியல் உறவுக்கென அமைந்த கருத்தடை உறையையோ அல்லது சாதாரண கருத்தடை உறைதான் இருப்பின் அதில் இரண்டு உறைகளையோ அணிந்து கொண்டு பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.

பாலியலால் பரவும் நோய்கள்
(SEXUALLY TRANSMITTED DISEASES)

AIDS என்றால் என்ன?

AIDS என்பது Acquired Immune Deficiency Syndrome அதாவது தேடிக் கொண்ட நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நோய்த் தொகுதி சுருக்கமாக (தே.நோ.கு.தொ) எனலாம். தே.நோ.கு.தொ HIV என்கின்ற வைரசால் ஏற்படுகிறது. HIV என்பது Human Immuno deficiency Virus. அதாவது மானிட இன நோய் எதிர்ப்புக் குறைப்பாட்டு வைரஸ் ஆகும். சுருக்கமாகக் குறிப்பிட்டால் மா.நோ.வை. எனலாம். எல்லோரும் அறிந்தது HIV என்பதே. HIV வைரஸ் என்பது நோய் எதிர்ப்பு ஏற்பாட்டுக் கலங்களோடு போரிட்டு வென்று விடுகிறது. ஒருமுறை இந்த வைரஸ் எமது நோய் எதிர்ப்புக் கலங்களை வென்று உடலுக்குள் புகுந்துவிட்டால் AIDS வியாதி உடலில் விருத்தியடைய 8 முதல் 10 வருடங்கள் வரை எடுக்கும். HIV இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்காவிட்டால் இருப்பதே தெரியாது. மற்றவர்களுக்கும் அப்படியே. 8-10 வருடங்களில் இந்த வைரஸ் பரவும்.

உங்கள் நோய் எதிர்ப்பு ஏற்பாட்டை HIV வெற்றி கொண்டுவிடுமாயின் சாதாரணமாக உங்களைப் பீடிக்காமல் தடுக்கும் ஏற்பாடு தகர்க்கப்பட்டுவிடும். அதன் பின் மரணம் சம்பவிக்கும்.

AIDS ஆபத்தானது. மரணத்தில் தான் முடியும். இதுநாள்வரை இந்நோயைக் குணப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை.

HIV எப்படி வருகிறது?

HIV பீடிக்கப்பட்டவரிடமிருந்து பீடிக்கப்படாதவருக்கு உடல் திரவங்கள் ஊடாக அதாவது குறிப்பாக பாதகத்துக்குள்ளான குருதி அல்லது பாதகத்துக்குள்ளான விந்து வழியாகப் பரவுகிறது.

குருதி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு பரவுவது இரு முறைகளில் ஆகும். ஒன்று குருதி வழங்குவதன் மூலமும் அல்லது பிணியாளருக்கு மருந்து செலுத்திய ஊசியைக் கொண்டு மற்றுமொரு பாதிக்கப்படாதவருக்குச் மருந்து செலுத்தும் போதும் ஆகும்.

குருதி வழங்கும் போது வழங்குபவரின் குருதியில் HIV இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளல் வேண்டும். மருந்து செலுத்தும் போது ஏற்றும் குழாயில் புதியதோர் ஊசி உங்கள் முன்பாகப் புகுத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெறொரு விதமாகவும் குருதி மூலம் HIV பரவுகிறது. வெளிப்புறக் காயங்களின் மூலம் பாதிக்கப்பட்டவரின் குருதி பாதிக்கப்படாதவருக்கும் பரவும்.

பாலியல் உறவு மூலம் பாதிக்கப்பட்டவரின் விந்து பாதிக்கப்படாதவருக்கு பரவும்.

இதுதான் HIV பரவும் இருவழி. வைரஸ் உடையத்தக்கது. உடலுக்கு வெளியே இந்த வைரசு நீண்ட நேரம் உயிர்வாழாது. அதனால் கழிவிடங்கள், கட்டியணைத்தல், முத்தமிடல், கைகளைத் தழுவுதல் மூலம் நோயால் பீடிக்கப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்படாதவருக்கு நோய் பரவாது. நீச்சல் குளங்களில் நுளம்பு கடிப்பதாலும் பரவிவிடாது.

உடல் திரவங்கள் என்றால் என்ன?

உடல் திரவங்கள் என்று குறிப்பிடப்படுபவை குருதி, விந்து, யோனிக்கசிவுகள், எச்சில் ஆகும்.

அப்படியென்றால் குருதி, விந்து ஆகிய இரண்டு மட்டும் ஏன் குறிப்பிடப்படுகின்றன?

இரத்த வழங்கலின் போது, பயன்படுத்தப்பட்ட மருந்து செலுத்தும் ஊசிகளால் தோலுக்கூடாக HIV குருதியினூடாக மற்றவரின் உடலினுள் புகுகிறது. இது உடலின் மேற்பகுதியில் தங்கி இருப்பதில்லை. பாலியல் உறவின் போது உறுப்பு உள்நுழைவு காரணமாக சிறு சிறு காயங்கள் ஏற்படுவதனால் HIV உள்ள விந்து தோல் ஊடாக உடல் எங்கும் பரவுகிறது.

பிறெஞ்சு முத்தத்தாலும் HIV புகுவதற்கு ஓரளவு இடமுண்டு. பாதிக்கப்படாதவரின் வாயில் இருக்கும் காயங்களில் பாதிக்கப்பட்டவரின் எச்சில் ஊடாக HIV பரவக்கூடும். ஆனால் ஆச்சரியம் என்வென்றால் HIV மக்கள் நினைப்பது போல மற்றவருக்குப் பரவிவிடாது. காயங்கள் எதனையும் சந்திக்காது வயிற்றை அடையும் எச்சில் வயிற்றிலுள்ள பலமான அமிலங்களால் சமிபாடு அடைந்து விடுகிறது.

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கும் HIV தொற்றுவதில்லை. ஏனெனில் அவர்களின் பாலுறவின் போது பாலியல் உறுப்புகள் உள்நுழைவதில்லை. அதனால் HIV உட்புக வாய்ப்பில்லை. அதேவேளையில் யோனியிலோ, குதத்திலோ, ஆண்குறியிலோ எவ்வித வெட்டோ காயமோ இல்லாவிடினும் HIV நுழைந்து பரவுவது சற்று கடினமாக இருக்கும். இந்த வைரசு பிளவுபடக்கூடியது. ஆதலால், தோல் உட்புகாது விடின் இறந்துவிடும். பாலியல் உறவு கொள்ளும் போது சின்னஞ்சிறிய வெட்டோ காயமோ ஏற்பட்டு இருக்கின்றதோ என்பது தெரியாதிருக்கும். ஆகவே ஓரளவு கவனமாய் இருப்பது நல்லது .

AIDS என்பது ஓரினச் சேர்க்கை நோய் எனப்படுவது ஏன்?

இத்தகைய கருத்து வெளிவந்ததற்குக் காரணம் ஆரம்பத்தில் AIDS நோயாளராக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களே. அவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாலல்ல. பாலியல் உறவு கொண்டதாலேயே. பாலியல் உறவால் ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவக்கூடும். இதன் விளைவாக ஆண்கள் கூடுதலான கவனத்துடன் நடக்கத் தொடங்கி ஆண் கருத்தடை உறைகளைப் பயன்படுத்துவதோடு HIV பற்றிய அறிவையும் மற்றவர்களுக்குப் புகட்ட ஆரம்பித்து விட்டனர்.

AIDS என்பது வேறொருவரின் பிரச்சினைதான் என்று நினைப்பது முட்டாள்தனம். தற்காலத்தில் பெருமளவில் AIDS நோயால் பீடிக்கப்படுபவர்கள் ஆண் பெண் பாலியல் உறவினாலேயே ஆகும். குறிப்பாக பலருடன் பாலியல் உறவு கொள்ளும் போது ஏதோ ஒருவர் HIV உடையவராயின் இந்நோய் பரவும். அடுத்தபடியாக AIDS நோயாளருக்குப் பயன்படுத்திய மருந்து செலுத்தும் ஊசியையே நோயால் பீடிக்கப்படாதவருக்கும் உபயோகிப்பதால் ஏற்படும்.

கருத்தடை உறை (Condom) என்றால் என்ன?

(கருத்தடை உறை பாலியல் உறவு கொள்ளும் போது ஆணின் பாலியல் உறுப்பு மீது அணியும் றப்பர் உறை)

உறைகளில் உள்ள இடைவெளியில் வெளிப்படும் மேலதிக விந்து தேங்கி விடுவதால் நோயற்றவரின் பாலியல் உறுப்பிலுள்ள காயங்களில் பட்டு உடலில் பரவுவது தவிர்க்கப்படுகிறது. உடல் திரவங்களாலான குருதி ஊடாகப் பரவும் வாய்ப்பை இழக்கிறது.

கருத்தடை உறை கருத்தரிப்பதையும் தடுக்கிறது. இதனால் ஆணின் விந்து பெண்ணின் முட்டையைச் சந்தித்து உறவு கொள்ளும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது.

கருத்தடை உறைகள் ஒருமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. பாலியல் உறவுக்குப் பின் சேர்ந்த விந்துக்களுடன் வீசி எறியப்படுகிறது.

தற்காலத்தில் பெண்கள் அணியக்கூடிய கருத்தடையும் வெளிவந்துவிட்டது. யோனித்துவாரத்தின் மிக அடிப்பகுதியில் வளையம் ஒன்றால் முனை பிடிக்கப்படுகிறது. பூப்பு என்புக்கு முன் தொடங்கி கருப்பைக் கழுத்துப் பகுதி வரை செல்கிறது. இதன் நோக்கம் ஆணின் கருத்தடை உறையை மட்டும் நம்பியிராமல் பெண் தனது சொந்தப் பாதுகாப்பு நிமித்தம் பயன்படுத்துவது. ஆண் கருத்தடை உறையைப் பயன்படுத்த விரும்பாவிட்டாலும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

பாலியல் உறவினால் HIV பரவுவதைத் தடுக்கவுள்ள ஒரே வழி கருத்தடை உறையைப் பயன்படுத்துவது.

பாலியல் உறவு மூலம் பரவி குணப்படுத்த முடியாத நோய் வேறெதும் உள்ளதா?

ஆம். ஹேப்ஸ். இந்நோயினால் மரணம் சம்பவிக்காது. வாழ்நாள் முழுவதும் உடனிருந்து அவ்வப்போது வேதனைதந்து கொண்டிருக்கும்.

ஹேப்ஸ் (Herpes) என்றால் என்ன?

ஹேப்ஸ் ஒரு வைரஸ். இது உடலிற்குள் இருக்கும். அடிக்கடி வாயிலும் பாலியல் உறவு கொள்ளும் பகுதியிலும் குதத்திலும் தொப்புளங்களாகவும் புண்களாகவும் தலை காட்டும். எப்பொழுதும் ஒரே இடத்தில் தான் இந்தத் தொப்புளங்களும் புண்களும் காணப்படும். இவை கடும் வேதனை தருவன. ஏனெனில் உணர்வு நரம்புகளில் வீக்கம் தோன்றும். உளைச்சல் படும் போது ஹேப்ஸ் புண்கள் தோன்றுகின்றன.

நோவைத் தணிக்கக்கூடிய சில கழிம்புகள் உள்ளன. ஆனால் அவற்றால் முற்றாகக் குணப்படுத்த முடியாது. நோயையும் ஒழித்துவிட முடியாது. எந்த நேரத்திலும் மீண்டும் வரும்.

இதனை தவிர்த்துக் கொள்ளவுள்ள ஒரே வழி ஹேப்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவரோடு எவ்வித பாலுறவும் வைக்காமல் இருப்பதே. ஹேப்ஸ் புண்கள் ஆறும் வரையாவது தவிர்ப்பது நல்லது.

எது சாதாரணமான பாலியல் உறவால் பரவும் நோய்?

சிஸ்ரிரிஸ் (Cystitis)

சிஸ்ரிரிஸ் என்பது சிறுநீரைச் சேகரித்து வைக்கும் மென் சவ்வினாலான பையில் ஏற்படும் வீக்கம் ஆகும். பெரும்பாலும் இது பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தேனிலவு நோய்த் தொகுதி என்றும் அழைப்பர். ஏனெனில் பெண்கள் முதன் முறையாகப் பாலுறவு கொள்ளும் போதுதான் ஏற்படுகிறது. பாலியல் உறவால் பரவும் நோய்களில் மிகவும் குறைந்த வீரியமுடையது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் பெண்கள் ஓரளவு பயந்து விடுவார்கள்.

சிஸ்ரிரிஸ் ஆண்களோடு பாலுறவு கொள்வதால் மட்டும் பரவுவதில்லை. கருத்தடை உறை அணிந்து பாலுறவு கொண்டாலும் கூட ஏற்படுகிறது. உண்மையில் நடப்பது இதுதான். பெண்ணின் வெளிப்புற பிறப்புறுப்பிலிருக்கும் பக்hPறியா பாலியல் உறவின்போது ஆண்குறியின் அசைவுகளினால் சிறுநீர் சேகரிக்கப்படும் பையை அடைகிறது.

இந்நோயின் அறிகுறி பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இது வயிற்றில் அதிக நோவைத் தருகிறது. நோயை உணரும் நரம்புகள் பெண்ணின் பிறப்புறுப்புக் கருகில் இருப்பதனால் பாலியல் உறவின் போது ஏற்படும் உராய்வை ஒத்து இருக்கிறது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு சிறுநீரில் குருதியின் அடையாளம் தென்படுகிறது.

பெண்ணிற்கு சிஸ்ரிரிஸ் அடிக்கடி ஏற்பட்டால் ஆணின் சிறுநீரில் பக்hPறியா உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். அவன் மீண்டும் நோய் பரவ வழி வகுப்பான். வேறொரு ஆலோசனை என்னவென்றால் பாலியல் உறவுமுடிந்தவுடன் சிறுநீர் கழியுங்கள். அல்லது சிறுநீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும் விதத்தில் பழச் சாற்றைப் பருகுங்கள்.

பாலியல் உறவால் பரவக்கூடியதும் குணப்படுத்தக்கூடியதுமான பயங்கரமான நோய் எது?

ரிறைகோமோனியாசிஸ், கண்டியாசிஸ், கிளாமீடியா, கொன்ஹோறியா, சிபிலிஸ் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.

இவை நுண்ணுயிர்க் கொல்லிகளால் குணமாக்கலாம். சில மாத்திரைகளை யோனி முகிழிற்குள் புகுத்திவைப்பதால் சுகப்படுத்தலாம். இந்நோயின் புதிய தோற்றங்கள் நடைமுறையிலுள்ள நுண்ணுயிர்க் கொல்லிக்குக் கட்டுப்படாது. மேலும் வீரியம் கூடிய நுண்ணுயிர்க் கொல்லியே தேவைப்படுகிறது.

ரிறைகோ மோனியாசிஸ் (Trichomoniasis) என்றால் என்ன?

யோனி முகிழிலிருந்து துர்நாற்றம் வீசும் மஞ்சள் கலந்த வெண்ணிற கழிவுப் பொருள் கசிவடைகிறது. ஆணின் ஆண்குறி வீங்கி இருக்கும். அல்லது பெண்ணின் யோனிப் பகுதியில் சொறிவும் வீக்கமும் காணப்படும்.

கண்டிடியாசிஸ் (Candidiasis) என்றால் என்ன?

இந்நோயின் அறிகுறி யோனி முகிழிலிருந்து தடிப்பான வெள்ளை நிறக் கழிவு கசிகிறது. யோனிப் பிரதேசத்தில் சொறியும் உணர்ச்சி தோன்றுகிறது. இது பொதுவாகக் காணப்படும் நோய். இதனை சாதாரணமாகக் குணப்படுத்தலாம். பெண்ணிற்கு மட்டும் ஏற்பட்டாலும் கூட ஆண் பெண் இருவரையும் வைத்திய சிகிச்சைக்குட்படுத்தல் வேண்டும்.

கிளமீடியா (Chlamydia) நோய் இருக்கிறது என்று எப்படி அறியலாம்?

இந்நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத போதிலும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்ச்சி தென்படும்.

பெண்களைப் பொறுத்தவரை இந்நோயால் பெரிய ஆபத்து யாதெனில் இடுப்பு வீக்கநோய் ஏற்பட சூலகங்களிலிருந்து கருப்பைக்கு கரு முட்டைகளை எடுத்துவரும் குழாய்கள் அடைபடுகிறது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. அதோடு கருப்பைக்கு வெளியே கருவுண்டாகிறது. கருவில் வளரும் குழந்தை கருப்பைக்கு சூலகங்களிலிருந்து வரும் முட்டை எடுத்துவரும் குழாயில் (குயடடழியைn வரடிநள) நாட்டப்பட்டு வளர்கிறது. அதாவது கருப்பையிலிருந்து வெகுதூரத்தில் வளருகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவசரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்படல் வேண்டும். இல்லையேல் குழாய்க்குள் குழந்தை வளர்ந்து வந்தால் குழாய் வெடித்துப் போக ஏதுவாகும்.

கிளமீடியா இருப்பதாகச் சந்தேகம் எழுந்தால் பாலியல் உறவு கொண்ட ஆண் - பெண் உடன் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

கொன்ஹொறியா (Gonhorrea) நோயின் அறிகுறிகள் என்ன?

இதுவும் கிளாமீடியா போன்றதே. கிளாமீடியாவால் வரும் ஆபத்துக்களே இந்நோயினாலும் ஏற்படுகிறது. ஆனால் இதனால் தொண்டை வலியும் வயிற்றோட்டமும் ஏற்படுகிறது.

இதனாலும் இடுப்பென்புப் பகுதியில் வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு புறஸ்ரேட் சுரப்பியில் நோய் தொற்றிப் பரவுகிறது. இருவருக்கும் மூட்டுகள், தோல், குருதியோட்டம் ஆகியவற்றில் பரவுகிறது.

சிபிலிஸ் (Syphilis) நோயின் அறிகுறிகள் என்ன?

இது இருப்பதன் அறிகுறி ஆண்குறியின் மீது நோவற்ற வடு காணப்படும். இது போலவே பெண்ணின் யோனி முகிழ்வாயிலும் அல்லது குதவாசலிலும் காணப்படும்.

இந்த நிலையில் நோயைக் குணப்படுத்தாவிட்டால் தோலில் கொப்பிளங்கள் தோன்றும், அதோடு நோயாளர் பார்வை இழப்பார். இந்த நிலைக்குப் பிறகும் நோயைக் குணப்படுத்த முயலாவிட்டால் இதயமும் மூளையும் பாதிப்புக்குள்ளாகும். இதன் விளைவாக மரணமும் சம்பவிக்கும்.

சிபிலிஸால் பீடிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கின்ற குழந்தையும் கூட சிபிலிஸ் உடன் தான் பிறக்கும். பார்வை குன்றியும், சித்தம் பேதலித்தும், உடல் ஊனமுற்றும் இருக்கும்.

சிபிலிஸ் நோய்க்கு இலக்கானால் பாலியல் உறவுகொண்ட இருவரையும் பரிசோதனைக்குட்படுத்தி வைத்திய சிகிச்சை செய்தல் வேண்டும்.

பாலியல் உறவால் ஏற்பட்ட குணப்படுத்த முடியாத வேறேதும் நோய் இருக்கிறதா?

ஆம். செங்கமாரி - மங்கமாரி (Hepatitis B) இதற்கான தடுப்பூசி இருக்கிறது தான். இந்நோய் ஓய்வாய் இருப்பதாலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாலும் சாதாரண செங்கமாரி நோயைப் போலவே குணப்படுத்தலாம். ஆனால் இந்நோய் உங்களைப் பலவீனமாக்கி, ஈரலையும் சிதைவுக்குள்ளாக்கி விடும்.

செங்கமாரி மங்கமாரி (Hepatitis B) என்னால் என்ன?

இந்நோயின் அறிகுறிகள் இருமல், தொண்டைப்புண், மூட்டு வலி என்பனவாகும். அதோடு செங்கமாரி அறிகுறிகளான கடும் அலுப்பும் உணவில் விருப்பு இன்மையும் ஆகும். காமாலை நோயின் அறிகுறிகளான தோலின் நிறம் மஞ்சள் ஆவதும் கண்கள் வெளிறி இருப்பதும் சிறுநீர் கடும் கபில நிறமாயும், மலம் வெண்களிமண் உருவிலும் தோன்றும்.

செங்கமாரி - மங்கமாரி நோய் HIV போல மாசுபட்ட குருதியாலும் மாசுபடர்ந்த மருந்து செலுத்தும் ஊசியாலும் பரவக்கூடியது. HIV யை விட தொற்றில் பரவுவதில் தீவிரமானது.

ஏமாற்றங்கள் (DISAPPOINTMENTS)

முதல் தடவை பாலியல் உறவு புத்தகங்களில் கூறியுள்ளது போல ஆச்சரியமான விஷயந்தானா?

வழமையாக இல்லை. ஆபாசமான புத்தகங்களும் சஞ்சிகைகளும் பாலியல் உறவுபற்றிப் பல பல விஷயங்களை முதன் முறையாக ஈடுபடுபவரை பாலியல் உறவில் எதிர்பார்க்க வைக்கின்றன. இவையெல்லாம் பெரிதும் மிகைப்படுத்தியே தருகின்றன. இப்படி மிகைப்படுத்தித் தராவிட்டால் நாம் அவற்றை வாங்கிப் படிக்க மாட்டோம் அல்லவா? பெண் முதன் முறையாக பாலியல் உறவு கொள்ளும்போது உணர்ச்சியின் உச்சத்தை அடையாத நிலையிலும் விந்து வெளிவந்து விட்ட நிலையிலும் காதல் கதை எழுதப்பட்டிருந்தால் என்ன கருதியிருப்பீர்கள்? ஆனால் இதுதான் வழமையான நிலைமை. இதுதான் உண்மையும் கூட.

இந்தப் புத்தகங்களும் சஞ்சிகைகளும் திட்டமிட்டவொரு பாலியல் உச்சநிலையையே எடுத்துரைக்கின்றன. நடைமுறையில் அவற்றில் காட்டிய நிலையை அடையாவிட்டால் எமக்கு தளர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்படுகின்றது. அநேக பெண்களும் ஆண்களும் கூறுவது இதுதான். உண்மையில் முதன் முதலில் பாலியல் உறவு கொள்ளும் போது அடைந்த இன்பத்தைக் காட்டிலும் அதற்கு முன்பு மனதில் ஏற்பட்ட இன்பம் மிகவும் கூடுதலானது என்பதேயாகும்.

அநேக பெண்களுக்கு முதலில் ஈடுபடும் பாலியல் உறவு சற்று வேதனை தருவதாகவே இருக்கும். முதன் முதலாக ஆண் உறுப்பு யோனித்துவாரத்தில் ஊடுருவுகையில் ஹைமன் என்னும் மென்சவ்வு தெறித்துவிடுவதால் மட்டுமன்றி ஏற்படும் அச்சமும் காரணமாகிறது. யோனித்தசைகள் இறுக்கம் அடைகின்றன. கைவிரல் கூட உட்புக முடியாத அளவு இறுக்கம் அடைந்துவிடுகின்றன. இதனால் பாலியல் உறiவு பெண்களுக்கு நோவைத் தருகின்றது. ஆண்குறியை யோனிக்குள் செலுத்துவதும் சிரமமாகிறது.

முதன் முறைதான் இந்தச் சங்கடம் தோன்றுகிறது. அடுத்து அடுத்து ஈடுபடுகையில் அற்றுப் போகிறது. புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் குறிப்பிடப்பட்ட அதியுயர் பாலியல் உறவு இன்பம் என்பது வெறும் கற்பனையேதான்.

எல்லாப் பெண்களுக்கும் பாலியல் உறவுக்கான உச்ச இன்பக் கட்டம் ஏற்படுகிறதா?

இல்லை.

வன்கலவியும் பாலியல் துஷ்பிரயோகமும்
(RAPE AND SEXUAL ABUSE)

நீங்கள் ஒரு பெண்ணாயிருந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

முதலில் மனதில் படிய வைத்துக் கொள்ளுங்கள். தவறு உங்களுடையது அல்லவென்று. ஏனெனில் மிக விரைவில் இச்சம்பவத்தோடு சமரசத்திற்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபடப்போபவரைக் கண்டு புன்னகை புரிவதோ, உரையாடுவதோ தவறில்லை. இன்னமும் கூட இது பெண்ணின் குற்றமேயல்ல.

இந்நிகழ்ச்சி தொடர்பாக வழக்கொன்று பதிய விரும்பினால் பொலிஸ் நிலையத்திற்கு சில நண்பர்களுடனோ, அல்லது பெண்களின் கூட்டத்தோடோ அல்லது பெற்றோருடனோ அல்லது உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது முற்றாக உங்கள் நிலையை விளங்கியவராகவோ இருப்பார்கள் என்று நீங்கள் கருதினால் அவர்களுடனே செல்லுங்கள். உங்கள் குழுவில் ஒரு ஆண்மகனாவது இருத்தல் வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் மட்டும் சென்று வழக்குப் பதிய விரும்பினால் பொலிசார் சிலவேளைகளில் உதாசீனம் செய்து விடலாம். ஆனால் ஆண்மகன் யாராவது இருந்தால் நிலைமையே வேறுதான்.

பாலியல் வல்லுறவை நிரூபிப்பதற்கு காலம் தாழ்த்தாமல் முறைப்பாடு செய்தல் வேண்டும். 24 மணிநேரத்திற்குள் அல்லது 48 மணி நேரத்திற்கு மேல் செல்லக் கூடாது. பயன்படுத்தப்பட்ட ஆடையைத் தோய்க்கவோ மாற்றவோ கூடாது. கவலையான விஷயம் என்னவென்றால் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரின் பாலியல் திரவத்தோடு உள்ள தொடர்பை பேணிவைத்து வெளிப்படுத்தக் கூடியதாய் இருக்க வேண்டும் என்பதாகும்.

பாலியல் வல்லுறவுக்கான சட்ட வரைவு இதுதான். ஆணின் ஆண்குறி பெண்ணின் யோனிக்குள் புகுத்தப்பட்டு விந்து வெளிவந்திருக்க வேண்டும். யோனியில் விந்துத்திரவம் இல்லாவிட்டால் சட்டப்படி பாலியல் வல்லுறவு நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும் கூட தாக்கியதாக, பலாத்காரம் செய்ததாக பெண்மைக்குப் பாதிப்பு விளைவித்ததாக முறைப்பாடு செய்யலாம். இந்த முதன் முறைப்பாட்டு அறிக்கைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் வைத்திய சாலைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்படுவார். முதன் முறைப்பாட்டு அறிக்கையின் பிரதி ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

பொலிசுக்குச் சென்று முறைப்பாடு செய்யத்தான் வேண்டுமா?

இல்லை. பாதிப்பை விளைவித்தவரை நன்கு தெரியுமாயின் அதோடு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரின் ஒத்தாசை இருக்குமாயின் விஷயத்திற்கு முடிவு கண்டுவிடலாம்.

சில பெண்கள் முறைப்பாடு செய்தாக வேண்டும் என்று கருதுவது பயன் எதனையும் தாம் பெறலாம் என்பதற்காகவல்ல. இப்படிப்பட்ட நிலைமை வேறெந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக. அநேக பாதிப்பிற்குள்ளானவர்கள் மனம் தளர்ந்து போய் உடனடியாகத் தமது வீட்டைச் சென்றடையவே விரும்புகிறார்கள். நடந்தவற்றை எல்லாம் முற்றாக மறந்துவிட்டு இப்படிப்பட்ட சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள்.

பாலியல் வன்கலவி செய்வோரிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

எந்தச் சந்தர்ப்பத்திலும் பகல் வேளையிலும் தனித்துச் செல்லாதீர்கள். வேறு யாராவது வீதியிலோ, பூங்காவிலோ இருந்தால் பாலியல் வல்லுறவு புரியவுள்ளோர் உங்களை அணுக அஞ்சுவார்கள்.

தனிவழியில் செல்ல நேர்ந்தால் பயந்தது போலவோ மனம் தளர்ந்து இருப்பதாகவோ காட்டிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் இத்தகையோர் அவர்களின் கவர்ச்சிக்குள்ளாகுகின்றனர்.

அச்சமூட்டக் கூடியவருடன் தனிமையில் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அநேகமான வல்லுறவுகள் வீட்டிலேயே இடம்பெறுகின்றன. பாதகம் செய்வோரில் பெரும்பாலானோர் முதிய உறவினரோ குடும்ப நண்பரோ தான். உங்கள் பெற்றோருக்கு நன்கு அறிமுகமான ஒருவரால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தால் நம்ப மறுப்பார்கள். உங்கள் மீது பழியைச் சுமத்துவார்கள்.

முதலில் பாதகம் செய்ய வருவோரைத் தாக்க முயலாதீர்கள். அவர்களை வன்முறைக்குத் தூண்டியவர் ஆவீர்கள். நீங்கள் வெறும் வல்லுறவுகுள்ளாக்கப் படுவதோடு மட்டும் ஆளாகாமல் தாக்கப்பட்டோ சில வேளைகளில் கொல்லப்பட்டோ விடுவீர்கள். இவற்றைக் கூடியவரை தவிர்க்க முயல வேண்டும்.

பெண்கள் மீதான வேறேதும் பாலியல் வன்முறைகள் உண்டா?

சந்தர்ப்பக் கற்பழிப்பு
சந்தர்ப்பக் கற்பழிப்பு எனின் ஒரு பெண் இன்னொருவனோடு மனம் ஒப்பி வெளியே செல்ல ஏற்பாடு செய்கிறாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அவளுடன் பாலுறவு கொள்ள விரும்புகிறான். ஆனால் அவளுக்கோ அந்த விரும்பமேயில்லை. அவன் வற்புறுத்துகிறான். தான் ஒரு ஆண் மகன் என்று காட்டிக் கொள்ள விரும்புகின்றான். அவனோடு வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பாத காரணத்தால் மௌனமாக இருக்கின்றாள். அவளுடைய மறுப்பையும் கூட சம்மதத்தின் அறிகுறியாகக் கருதி பாலியல் உறவில் பலாத்காரமாக ஈடுபடுகிறான். இத்தகைய பாலியல் உறவை சந்தர்ப்பக் கற்பழிப்பு என்பர்.

திருமணக் கற்பழிப்பு (தாம்பத்தியக் கற்பழிப்பு)
மனைவி விரும்பாத போது கணவன் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்துவது. திருமணம் செய்துகொண்டபடியால் கணவன் தான் விரும்பும் போதெல்லாம் பாலியல் உறவுக்கு மனைவி இணங்க வேண்டுமென்று கருதுகிறான். இலங்கைச் சட்டம் இத்தகையதை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. திருமணமான கணவர் மனைவி சம்பந்தப்பட்ட உரிமைகள் பற்றி பலவாகப் பேசப்பட்ட போதிலும் கணவனின் தொல்லைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடித்தப்பிய பெண்ணை நீதிமன்ற உதவியுடன் மீட்கவும் தொடர்ந்து அவளுடன் பாலுறவு கொள்ளவும் இயலும்.

பையன்கள் எப்படி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள்.

பலாத்காரமாக குதம் வழியாகப் பாலுறவு கொள்வது என்பது முன்பு எப்போதும் இத்தகைய உறவு கொள்ளாத பையனுக்கு மரண வேதனையைக் குதத்தில் ஏற்படுத்தும். குதவாயிலை மூடிக்காக்கும் வளையத் தசைகள் விரிந்து கொடுக்காதபடியால் கிழிந்துவிட ஏதுவாகும். அதனால் குருதிக் கசிவு ஏற்படுகிறது.

பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன?

பாலியல் உறவு அல்லது கற்பழிப்பு அல்லது வன்கலவி என்பதைத் தவிர மற்றவையெல்லாம் பாலியல் hPதியான பலாத்காரங்கள் என்பதால் பாலியல் துஷ்பிரயோகங்கள் எனப்படும். இந்த நடவடிக்கைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

பெண்களாலும் கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்ய இயலுமா? அல்லது கற்பழிப்புப் போல ஆண்களுக்கே மட்டும் உரியது தானா?

பெண்களும் கூட பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடலாம். தம்மைக் காட்டிலும் பலம்குறைந்த பெண்களிடமும் பையன்களிடமும் நடந்துகொள்வர். அலுவலகத்தில், வீதியில், வீட்டில் தமது அதிகாரத்தை இதற்குப் பயன்படுத்துவர்.

பெண்கள் எப்படி பையன்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

பாலியல் உறவு உட்பட அனைத்து முறைகளையும் பயன்படுத்துவர். பையன் சம்மதிக்காவிட்டாலும் சம்மதிக்க வைப்பர். அநேக பையன்கள் கூறக் கேட்டிருக்கிறோம். தாங்கள் தங்களுடைய பாலியல் உறவின் முதல் அனுபவத்தைப் பெற்றது தம்மைவிட வயதில் கூடுதலாய் உள்ள பெண்களிடமிருந்தே. பையன் விரும்பாவிட்டால் அவனுடைய மனதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அவன் பெண்களைப் போலக் குற்றவாளியாகக் கருதப்பட மாட்டான். அத்தோடு தான் எதனையும் பறிகொடுக்கவில்லை என்று கருதுகிறான்.

அதேவேளை சிறுவன் பாலியல் உறவுக்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டான். அவமானத்திற்குட்படுத்தப்பட்டதாகவும் கருதுகிறான். இதனை அநேகமான பையன்கள் வேறுவிதமாகவும் அர்த்தம் கொள்ள முற்படுகிறார்கள். தாங்கள் பெண்களைக் கவரக்கூடிய ஆணழகர் என்று கருதுகிறார்கள். இப்பையன்களை பயன்படுத்தியவர்கள் நினைப்பது இதுதான். தாங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கு எவ்வித கோபமும் காட்டவில்லை. அதனால் அச்சிறுவர்கள் தம் முழுவிருப்பத்தோடு தான் ஈடுபட முன்வந்தார்கள் என்பதாகும்.

சிலர் மானசீகமாக வயது மூத்த பெண்களோடு பாலியல் உறவில் மீண்டும் மீண்டும் ஈடுபட எத்தனிக்கிறார்கள். அவமானப்பட்டதாகக் கருதாமல் விருப்பத்துடனேயே ஈடுபட முற்படுகின்றனர்.

வெறும் மிரட்டலும் கூட பாலியல் துஷ்பிரயோகமென்று கருதப்படுமா?

ஆம். இதற்குப் பிரதான உதாரணம் பாலியல் உறுப்புகளைப் பலரறியக் காட்டுவது அம்பலப்படுத்துவது என்று சுருக்கமாகக் கூறலாம்.

அம்பலப்படுத்துபவர் பாலியல் உறுப்பை சந்தேகம் கொள்ளாத அன்னியர் முன்னிலையில் காட்டுவதால் பாலியல் இன்பம் பெறுகிறார். அவர் பெறுகின்ற பரிசு பார்த்தோருக்கு அதிர்ச்சி ஊட்டுவதே. பூங்காவிலோ வேறு பொது இடத்திலோ பல ஆண்களின் இயல்பு பெண்ணொருத்தி இருந்தால் அவள் முன்பு பகிரங்கமாக சிறுநீர் கழிப்பது. அம்பலப்படுத்துவோர் இதனை விட வெளிப்படையாகவே பலவற்றையும் செய்வார்கள். எம்மை நோக்கி வரும் போது பாலியல் உறுப்பைப் பகிரங்கமாக காட்டிக் கொண்டே வருவார்கள்.

பொதுவாக அம்பலப்படுத்துவோர் பாலியல் வல்லுறவில் ஈடுபட மாட்டார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளை உதாசீனம் செய்தோமாயின் தாம் காட்டிய வேடிக்கை விலை போகவில்லை என்று ஏமாந்து போவர். அவர்கள் புண்படுத்துபவர்களே தவிர ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் அல்லர்.

வேறு விதமான பாலியல் துஷ்பிரயோகமும் உள்ளதா?

ஆம். அநேகமான பெண்கள் பஸ்களில் பிரயாணம் செய்வதை வெறுக்கிறார்கள். ஏனெனில் சில ஆண்கள் பெண்களின் மார்பகங்களையும் புட்டங்களையும் தடவி விளையாடுவதோடு தமது ஆண் குறிகளை அவற்றின் மீது உராய்கிறார்கள். அதோடு பெண்களைப் பழிப்பதோடு பொதுவிடங்களில் அவர்கள் பெண்களைக் கட்டித் தழுவ முயலுகிறார்கள். இச்செயல்களின் நோக்கம் பெண்கள் விரும்பாதபோது அவர்களிடம் நெருங்கி இன்பம் அடைய விரும்புவதேயாகும்.

இத்தகையவற்றை இல்லாது செய்ய வேண்டுமாயின் பெண்களும் ஆண்களும் ஒன்றாகப் பழகும் நிலையும் சமத்துவமும் சமூகத்தில் நிலவி, பெண்கள் உரையாடுவதற்கும் இயலாதவர்கள் என்ற நிலை மாறவேண்டும். இரு பாலாருக்கும் உள்ள இடைவெளி குறுக வேண்டும். அல்லது குறைய வேண்டும். இந்த நிலை வரும் வரை பெண்கள் பலம் பொருந்தியவர்களாகவும் உரிமையோடு பொதுவிடங்களில் நடமாடுவதாகவும் இருந்து கொள்ள வேண்டும். பெண்களை மதித்து நடக்கத் தெரியாத ஆண்களைத் திருப்திப்படுத்த முயலுவதில் பயன் ஒன்றும் இல்லை.

உங்களிடம் ஆதரவானவர்கள் சூழ்ந்து இருக்கும் போது உரத்த குரலில் நடந்தவற்றை எடுத்துக் கூறுங்கள். பெண்கள் அமைதியாகவும் வெட்கப்பட்டும் இருந்தால் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கும்.

கருத்தடை முறைகள் (CONTRACEPTIVES)

கருத்தரிக்காமல் இருக்கச் செய்ய வேண்டுவது என்ன?

பாலியல் உறவு கொள்ளாமல் இருப்பது மட்டுந்தானா? கருத்தடை உபகரணங்களைப் பயன்படுத்தலாமே!

பாலியல் உறவு முதன்முறைதான் என்பதற்காக அதிர்ஷ்டவசமாக ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்று மனப்பால் குடிக்காமல் இருங்கள். காதலனோ காதலியோ இருப்பின் சிலவேளைகளில் பாலியல் உறவு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். ஆகவே பாதுகாப்பு நிமித்தம் கருத்தடைச் சாதனம் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் உறவு கொள்ளத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள் என்று நினைக்கத் தேவையில்லை.

ஆண்டு தோறும் ஐந்திற்கு நான்கு பெண்கள் கருத்தடைச் சாதனமின்றி பாலியல் உறவுகொள்வதால் கருத்தரித்து விடுகிறார்கள்.

எது பாதுகாப்பான கருத்தடைச் சாதனம்?

ஆண் கருத்தடை உறை

ஆண் கருத்தடை உறை என்பது ஆண்குறியை இறுக்கமாகப் பற்றி மூடிக் கொள்ளும் இரப்பராலான உறை. பாலியல் உறவு கொள்ளுமுன் இதனை ஆண்குறியின் மீது போர்த்திக் கொள்ளவேண்டும். பாலியல் உறவுக்கு முன் என்று கூறுவது உறுப்பு புடைத்து நிற்குமுன். புடைத்தெழும் போது உறுப்பின் மீது போடுவது சிரமம்.

வேறெந்த கருத்தடை சாதனமும் HIV யிலிருந்து உங்களைப் பாதுகாக்காது. கருத்தடை உறை விந்துகளையும் HIV யையும் பெண் யோனிக்குள் புகவிடாது. யோனிக்குள் புகாதபடியால் உடல் திரவங்கள் ஆணோடு கலப்பதும் தவிர்க்கப்படுகிறது. ஆணுறையில் தடவப்பட்ட உராய்வு நீக்கி விந்துகளையும், HIV யையும் கொன்றுவிடும். ஆணுறையை மேற்பகுதியிலிருந்து அகற்றிவிட வேண்டும்.

ஆணுறையால் பக்க விளைவுகள் எதுவுமில்லை.

ஆணுறையை எந்த மருந்து விற்பனை நிலையத்திலும் வைத்தியரின் சான்று இன்றியே விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆணுறை தான் ஆண்கள் பயன்படுத்தக்கூடிய ஒரே கருத்தடைச் சாதனம். பெற்றோலிய உபபொருளான வாசிலினை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் வாசிலின் ஆணுறை செய்யப்பட்ட றப்பர் பொருளைக் கரைக்கக்கூடியது. ஆண்குறியை வெளியே எடுக்கும் போது ஆணுறையும் உடன் வெளிவர வேண்டும். இல்லாது போனால் ஆணுறை உள்ளேயே நின்றுவிடும்.

மற்றைய கருத்தடை சாதனங்கள் HIV க்குத் தடை ஏற்படுத்தாதா?

இல்லை.

இவற்றைப் பயன்படுத்தத் தகுந்த இருவரும் HIV அற்றவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டவர்களும் முறையான தம்பதிகளுமே ஆவர்.

HIV பரிசோதனைகூட இரண்டு வாரங்களுக்கு முன் உங்கள் உடலில் இந்த வைரஸ் இருந்ததா என்பதை எடுத்துக்காட்டும்.

இருவரில் ஒருவருக்குக் கூட HIV அற்றவர் என்று குறிப்பிடுவது அந்தத் தம்பதியர் இருவரும் தம்மட்டிலே பாலியல் உறவு வைத்துக் கொண்டு இருப்பவர்கள். உங்கள் இருவருக்கும் அப்பால் வேறொருவருடன் உறவு கொள்ளும் போது ஆணுறைகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்.

முறையான பாலுறவு கொள்ளாமலே கருப்பம் தரிக்க முடியுமா?

ஆம். ஆனால் இது அசாதாரணமானதே.

இது எப்படி ஏற்படுகிறது என்றால் இருவரும் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் ஆண் தனது ஆண்குறியை பெண்ணினது பிறப்புறுப்பின் மீது உராய்வான். ஆனால் உட்புகுத்தாதிருப்பான். உறுப்பு புடைத்து விந்து வெளிப்படும் போது நீந்திக் கொண்டு அவளுடைய சூலகத்து முட்டையை நோக்கி கருப்பையை அடையும். அவை மூன்று தினங்கள் வரை யோனிப்பகுதியில் உயிர் வாழும். அதுபோலவே AIDS நோய் தரும் HIV வைரசும், பாலியல் உறவைத் தவிர்க்கும் நோக்கத்தோடு இருந்த போதிலும் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டும்.

ஆணின் உறுப்பு புடைத்தெழாவிட்டாலும் கூட விந்தில் ஆண் அணுக்கள் காணப்படும். ஆணுறுப்பு புடைத்தெழும் போது வெளிப்படும். இதோடு சேர்ந்து HIV யும் பரவும் அபாயம் உண்டு.

திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு தடை செய்யப்பட்ட கர்பிணிகள் கன்னிப் பெண்களாகக் காணப்படுவதாக வைத்தியர்கள் அறிவிக்கிறார்கள். இப்பெண்கள் பாலியல் உறவு கொள்ளாதவர்களே. அதோடு யோனி முகிழ் அருகிலுள்ள மென்சவ்வு (ர்லஅயn) எவ்வித பாதிப்புக்குள்ளும் ஆகாத நிலையில் காணப்படுகிறது.

கருத்தடையை ஏற்படுத்த ஓமோன்களைப் Hormones பயன்படுத்தலாமா?

ஆம். இருவித ஓமோன் கருத்தடைச் சாதனங்களுண்டு. ஒன்று மாத்திரை வடிவிலும் மற்றது ஊசி மருந்து வடிவிலும் இருக்கும். ஆனால் ஓமோன் பாவனையின் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். புற்றுநோய், குருதி உறைதல் கோளாறுகள், உயர்குருதி அமுக்கம், ஈரல் கோளாறுகள், மைகிறெயின் தலைவலி ஆகியவை இருக்கும் போது மாத்திரையை உபயோகித்தால் பிரச்சினை பெரிதுபடும். அதோடு வலிப்பு ஏற்படுகையில் வைத்திய சிகிச்சையை மேற்கொள்ளும் போது மாத்திரை பேராபத்தை ஏற்படுத்தும். புகை ஊதினால் பெரிய சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

மாத்திரை எப்படி வேலை செய்கிறது?

மாதவிடாய் வந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு நாளுக்கு ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குத் தொடர்ந்து பாவிக்கப்படுகிறது. பிறகு 5 நாட்களுக்கு மாத்திரை ஒன்றையும் பயன்படுத்தாமல் இருந்து மாதவிடாயைச் சந்திக்கிறோம்.

மாத்திரை பயன்படுத்தும் போது முட்டை உற்பத்தி ஆவதில்லை. அதனால் விந்து முட்டையுடன் கருக்கட்டுவதில்லை. இதிலுள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் சில சமயங்களில் மாத்திரையை உட்கொள்ள மறந்துவிட்டால் கருத்தரிப்பதிலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும் நிலையை அடைவதில்லை. அதனால் மாதவிடாய் வருவதற்கு முன் மனத்தளர்ச்சி ஏற்படுகிறது. உங்களுடைய நிறையும் சுமார் 5 கிலோகிராம் அதிகரிக்கிறது. மார்பகப் புற்றுநோயும் நாளங்களில் குருதி உறைவும் ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்நிலை நீண்ட நாட்களுக்கு மாத்திரையைப் பயன்படுத்துவதாலும் சிகறட் புகைப்பதாலும் வரக்கூடும்.

ஊசிமூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்து என்பதென்ன?

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் இந்தக் கருத்தடை மருந்து செலுத்தப்படுகிறது.

இந்த முறையிலுள்ள தீங்கு என்னவென்றால் இதனால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்ட போதிலும் உங்களுக்கு மனமாற்றம் ஏற்பட்ட போதிலும் இம்மூன்று மாதகாலங்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள இயலாது.

இந்தக் கருத்தடை முறையை அரசாங்கம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டென்று அநேகர் கருதுகிறார்கள்.

நீங்கள் மறந்துவிட முடியாத வேறேதும் கருத்தடை சாதனம் உண்டா?

ஆம். வளையம். யோனித் துவாரத்திற்குள் பொருத்தப்படும் வளையம் ஐருனு (ஐவெசய ருவநசiநெ னுநஎiஉந) இது கருப்பைக்குள்ளேயே இருக்கும். வைத்தியரின் உதவியுடனேயே இது உட்செலுத்தப்பட வேண்டும். ஒரு மெல்லிய நூலிழை வெளிப்புறமாகத் தொங்குகிறது. நீங்கள் விரும்பாதபோது இந்தச் சாதனத்தை இந்த நூல் இழையை இழுப்பதன் மூலம் அப்புறப்படுத்தலாம்.

முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்ட வளையம் அப்பிறிகொட் விதைகள். இவற்றை ஒட்டகத்தின் கருப்பைக்குள் வைப்பதனால் அவை கருத்தரிப்பது தடுக்கப்படுகிறதாம். இதைச் செய்வது ஏனெனில் கருத்தரித்திருந்தால் ஒட்டகங்களால் சுமையைத் தூக்க இயலாது. பாலைவனங்களில் அவற்றைப் பயன்படுத்த இயலாது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் வளையங்கள் அனைத்தும் செப்பு சேர்க்கப்பட்டவை. செப்பு வு வளையங்கள் ஆங்கில எழுத்து வு வடிவத்தில் இருக்கும். இது கருக்கட்டிய முட்டையை கருப்பையில் இடம்பெறவிடாது. கருக்கட்டி சிசு இருந்த போதிலும் மாதவிடாய் ஏற்படும்.

இதனைப் பற்றி பெண்கள் கூறும் குறைபாடு என்னவெனில் மாதவிடாயின் போது அதிக நோவினைத் தருகிறது.

இதிலுள்ள நன்மை யாதெனில் இது தொடர்ந்து உள்ளே இருக்கையில் கருத்தரிக்க 80% வாய்ப்பு இல்லை. இதனால் பூரண பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாதபோதிலும் மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு இடமில்லை. கருத்தடை உறையை விரும்பாதவர்கள் வளையங்களைப் பயன்படுத்தலாம்.

வேறேதும் கைப்பற்றி விடாத கருத்தடைச் சாதனம் உண்டா?

ஆம். கருப்பையின் கழுத்துப் புறத்தை மூடிவிடும் இறப்பர் அல்லது பிளாஸ்ரிகால் ஆன மென்சவ்வு உறை.

மென்சவ்வு உறை (Diaphragm) என்பது என்ன?

மென்சவ்வு உறை வட்டவடிவ வில்லை முடி இறப்பரால் ஆன மென்சவ்வு உறை. ஆகையால் அது ஆங்கில எழுத்து ‘O’ வடிவத்தில் அமைந்திருக்கும். இதனைப் பயன்படுத்துவோர் தாமாகவே யோனித்துவாரத்திற்குள் வைத்து வட்டவடிவ வில்பகுதியை யோனி வாயிலில் நங்கூரமிட வேண்டும். பூப்பு என்புக்குச் சற்று மேலாகவும் கருப்பையின் நுழைவாயிலான கழுத்துப் பகுதியிலிருந்து எட்டவும் அமையும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். மென்சவ்வு முழுவதின் மீதும் விந்து கொல்லி ஜெல்லியைப் பூசிவிட வேண்டும். ஏனெனில் கருப்பைக்குப் போகும் பாதையை தடைசெய்வது போதாது. விந்தின் ஆண் அணுக்கள் மூன்று நாட்கள் வரை உயிரோடு இருக்கும். சில இடைவெளிகள் ஊடாக உள்ளே புகுந்துவிடுவது சாத்தியமாகும். விந்து கொல்லியைத் தடவியிருந்தால் ஆபத்து ஒன்றுமின்றி எட்டுமணி நேரங்களுக்குப் பிறகு மென்சவ்வை எடுத்துவிடலாம்.

எல்லாப் பெண்களுக்கும் யோனி வௌ;வேறு அளவினதாக இருப்பதனால் பொருத்தமான அளவுடைய மென்சவ்வை வைத்தியர் ஒருவரின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுத்துக்கொள்வதும் அவருடைய ஆலோசனைபெற்று பொருத்திக் கொள்வதும் உசிதமானது. அவர் தகுந்த பிரயோக முறைகளையும் வழங்குவார். மருந்துச்சாலையில் தகுந்த அளவினதை வாங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று சுமார் ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

உளவியல் hPதியில் பாலியல் உறவுக்கு இத்தகைய மென்சவ்வு பயன்படுத்துவது குறையை விளைவிக்குமோ என்று நினைக்கத் தூண்டும். இத்தகைய சிந்தனையே இன்றிச் சில பெண்கள் இதனை ஒவ்வொரு இரவும் பூண்டு கொள்வார்கள். பாலியல் உறவுக்குச் சற்று முன்புதான் தேவை என்றே கருதுவதில்லை.

இதனால் பக்கவிளைவுகள் ஒன்றுமேயில்லை. ஏனென்றால் எவ்விதமான மருந்தையோ அல்லது இரசாயனப் பொருளையோ உட்கொள்வதில்லை. விந்துகொல்லிகளைப் பயன்படுத்தினால் கருப்பம் தரிக்காது என்று முழுமையாக நம்பலாம்.

கருப்பப்பைக் கழுத்து உறை (Cervical Cap) என்றால் என்ன?

கருப்பப்பைக் கழுத்து உறை என்பது மிகவும் சாதுவானதும் பாதுகாப்பானதுமான கருத்தடைச் சாதனமாகும். இது மிகவும் மலிவானதுமாகும். இதனால் இதனை யாரும் உற்பத்தி செய்வதில்லை. இதனைத் தயாரித்து விற்பதனால் அதிக லாபமும் கிட்டாது. ஒரு மூடி பலவாண்டுகளுக்கு மட்டுமல்ல. ஆயுள் காலம் முழுவதற்கும் நின்று நிலைக்கக் கூடியது. ஆணுறையை இதோடு ஒப்பிடும் போது ஆணுறையோ ஒவ்வொரு முறை பாலுறவு கொள்ளும் போதும் மாற்ற வேண்டும். ஆனால் இது அப்படியல்லவே.

கருப்பை கழுத்துறை கழுத்து வாயிலை சரியாக மூடியிருப்பதனால் கருப்பைக்குள் விந்தை உட்புக விடாது. இது சரியாகவே வாயிலை மூடிவிடுவதனால் மூடிமீது விந்து கொல்லியைப் பூசவேண்டிய அவசியம் இல்லை. அநேக பெண்கள் இதனை அந்த இடத்திலேயே பலநாட்களுக்கும் இருக்க விட்டு விடுவார்கள்.

மென்சவ்வினைக் காட்டிலும் இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இடத்தை விட்டு அகலாதிருக்க அடிக்கடி நகர்த்தியபடி இருக்க வேண்டியிராது.

கருப்பைக் கழுத்தை இறுகப் பிடித்தபடியே இருக்கும். இதனால் ஆண்களுக்கு எவ்வித தொல்லையும் ஏற்படாது. வளைய மென்சவ்வின் ஓரங்களில் படும்போது ஆண் குறியின் முனை காயப்பட இடம் உண்டு. ஏனெனில் உலோக வில்லின் மீது இறப்பர் பூசப்பட்ட பொருளே மென்சவ்வு. கருப்பைக்கழுத்து மூடியால் இப்படியான பிரச்சினை ஒன்றுமே ஏற்படாது.

இவை மட்டுந்தானா கருத்தடைச் சாதனங்கள்?

இல்லை. இன்னமும் அநேகம் உள்ளன. சுலபமாகக் காரியம் ஆற்றக் கூடியவற்றை மட்டுமே பயன்படுத்துவோம்.

இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு மக்கள் எதனைப் பயன்படுத்தினார்கள்?

குடும்பத்தைக் கட:டுப்படுத்த அநேக முறைகளை மக்கள் அந்நாளில் கையாண்டார்கள். அவை எல்லாம் பூரணவெற்றியளிப்பவை அல்ல. முழுச் சமூகத்தையும் நோக்கினால் திட்டமிடப்படாமல் ஏற்பட்ட மக்கட் பேறுகள் மிகக் குறைவே.

சில ஆதிக்குடிகள் தற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய மூலிகைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். அந்த மூலிகைகளைப் பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமான காரியம். இதனால் நீண்ட காலப் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதோ தெரியாது. அநேகமாகப் பலரும் கையாண்ட முறைகள் சுருதிமுறையும் உச்சக்கட்டம் அடைந்ததும் அகற்றிவிடுவதும் ஆகும்.

சுருதி முறை (Rhythm method) என்பதென்ன?

ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் நின்று முதல் பத்து நாட்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளிவருகிறது. அப்பொழுதுதான் கருக்கட்டுகிறது. முட்டை வெளிப்படும் காலம் சுமார் பத்து நாட்களுக்கு நீடிக்கும்.

பெண்ணிற்குக் கருமுட்டைகள் உருவாகும் போது உடல் வெப்பநிலை சாதாரண நிலையிலிருந்து ஓரிரு பாகை கூடுதலாக இருக்கும். யோனியில் ஏற்படும் திரவக் கசிவுகள் சாதாரணமாய் வழுக்கிப் போவதைக் காட்டிலும் தடித்துக் காணப்படும். ஒரு துளியை எடுத்து பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து அமுக்கினால் நாலைந்து அங்குலம் நீளும்.

சாதாரணமாகத் தம்பதிகள் செய்வது இதுதான். இப்படி முட்டை உற்பத்தி ஆகும் நாட்களைக் கண்டறிந்து அந்த நாட்களில் பாலுறவைத் தவிர்த்துக்கொள்வர்.

பெண்கள் கைகொள்ளும் விரத நாட்களும் இதோடு தொடர்புடையதே. விரத நாட்களில் பாலியல் உறவு கொள்வதில்லை.

விந்து வெளிவருமுன் ஆண்குறியை எடுத்து விடுவது என்றால் என்ன?

இது என்னவென்றால் ஆண்குறி புடைத்து விந்து வெளிவர இருக்கும் தருணத்தில் ஆண்குறியை பெண்ணின் யோனியிலிருந்து எடுத்து விடுவதாகும். புடைத்து விந்து முறையாக வெளிவருமுன்பே பல ஆண் அணுக்களைக் கொண்ட விந்துத்துளியொன்று யோனிக்குள் புகுந்துவிடக்கூடும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குடும்பங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இம்முறை முற்றுமுழுதாகத் தோல்வியானது என்று கூற முடியாது. சில பெண்கள் கருத்தரித்தபோதிலும் மக்கள் தொகை பாரிய பெருக்கம் ஏற்படவிலலை என்பதைக் காணலாம்.

கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் கருத்தரித்துவிட்டால் அதன் பிறகு செய்யக் கூடியது என்ன?

ஆம். இதனால் பிறக்கின்ற பெண் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும். அந்த மருந்திற்குப் பெயர் “மாத்திரைப் பின் விடிவு” - “Morning after pills”

மாத்திரைக்குப் பின் விடிவு கருமுட்டை கருக்கட்டிய போதிலும் மாத விடாய் வெளிப்படுத்தக்கூடிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஓமோனைக் கொண்டது. இதனால் கருப்பம் தரித்துவிட்டோம் என்று அஞ்சத் தேவையில்லை. ஆனால் இதன் பிறகு பலமாதங்களுக்கு மாதவிடாயில் அநேக குழப்பங்கள் ஏற்படும். மாதவிடாய் ஒழுங்கு இடைவெளியில் வர நீண்ட நாட்கள் எடுக்கும். அதோடு அதன் பிறகு பிறக்கின்ற பெண் குழந்தைக்கு கருப்பப் பைப் பற்றுநோய் வரக்கூடும். பெரியதொரு விலையை அல்லவோ கொடுக்க வேண்டியுள்ளது.

‘மாத்திரைக்குப் பின் விடிவு’ வேறொரு பிச்சினைக்கும் வழிவகுக்கிறது. சிறிய அளவு ஓமோனைப் பயன்படுத்துவதால் கருப்பம் தரிப்பது தடுக்கப்படுவதில்லை. ஆனால் குழந்தையைச் சீர்குலைக்கும்.

நீங்கள் கருப்பம் தரித்தால்?

இரு வழிகள் உண்டு. ஒன்று குழந்தையைப் பெற்றெடுப்பது. மற்றது கருப்பத்தைச் சிதைப்பது. கருப்பச் சிதைவு என்பது குழந்தை வளருவதற்கு முன்பே கருப்பத்தைச் சிதைத்துவிடுவது. இரண்டு வித முடிவுகளுமே உளாPதியான வேதனையையே தருகிறது. கருப்பைச் சிதைவு அல்லது பிள்ளையைப் பெற்றெடுப்பது.

கர்ப்பச் சிதைவு செய்ய விரும்பினால்......

கருத்தரித்து மூன்று மாத காலத்திற்குள் கருச்சிதைவு செய்வது சுலபம். இதற்கென பயன்படுத்தும் முறையை ‘விரிவாக்கலும் தூய்மை செய்தலும்’ என அழைப்பர். இதை ஆங்கிலத்திலும் னுடையவழைn யனெ ஊரசநவவயபந - னுரூஊ என்பர். கருப்பையின் கழுத்துப் பாகத்தை அகலமாக்கி உள்ளே உள்ளவற்றைச் சுரண்டி எடுப்பது. இப்படிச் சுரண்டும் போது கருப்பை வரிகள், கரு, தொப்புள் கொடி அனைத்துமே அப்புறப்படுத்தப்படுகின்றன. தொப்புள்க்கொடி மூலம் தான் ஊட்டச்சத்து தாயிடமிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கு செல்கிறது.

வேறொரு முறையும் உண்டு. இது துன்பமோ வலியோ குறைவாயுள்ள முறையாகும். கருச்சிதைவு உள்ளவற்றை உறிஞ்சி எடுப்பதன் மூலம் செய்யப்படுகிறது. இதனால் கருவில் உருவான சிசுவோடு தொப்புள் கொடி, கருப்பை வரி ஆகியவை உறிஞ்சி அகற்றப்படும். இம்முறையினால் மாதவிடாயையும் ஒரே தரத்தில் அகற்றிவிடுகிறது.

நாட்களைக் கடத்தினால் கருச்சிதைவு செய்துகொள்ள முடியாது. உங்களுக்குத் தேவையானது உவர்நீர்த் தூண்டுதலே. உவர்நீர் கருப்பையில் செயற்கையாகப் பிரசவவேதனையை உண்டுபண்ணிவிடும். குழந்தை பிறந்துவிடும் ஆனால் இறந்தே பிறக்கும். கருப்பைக்கு வெளியே உயிர் வாழாது.

கருச்சிதைவு செய்ய இருப்பின் தாயின், தந்தையின் குருதி வகையைத் தெரிந்திருத்தல் வேண்டும். பெண்ணின் குருதி வகை சுர் மறையாகவும் ஆணின் குருதி சுர் நேராகவும் இருப்பின் கருச்சிதைவு செய்த பிறகு பெண்ணின் உடலில் ஆணின் சுர் நேருக்கு எதிரான புறபொருள் எதிரி உருவாகிறது. ஆகவே இதன் பிறகு பிறக்கும் குழந்தைக்கு தந்தையாரின் சுர் நேர் பெறும். அக்குழந்தைக்கு சுர் நோய் ஏற்படும். இது சாதாரணமாக உயிருக்கே ஆபத்தானது. சுர் மறை குருதித் தொகுதியைக் கொண்ட தாய்மாருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை. ஏனெனில் அநேகரிடம் இருப்பது சுர் நேர்குருதித் தொகுதி. சுர் நோயைத் தருகின்ற புறபொருள் எதிரியைக் கட்டுப்படுத்துவது றோகம் (சுர்ழுபுயுஆ) என்னும் ஊசி மருந்தைச் செலுத்துவதால் ஆகும். இதனை கருச்சிதைவு ஏற்பட்டவுடன் செலுத்த வேண்டும். புறபொருள் எதிரி எதுவும் உருவாவதற்கு முன்பாகவும் வைத்திய சாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவும் இந்த ஊசி மருந்தைச் செலுத்தியிருக்க வேண்டும்.

கருச்சிதைவுக்குப் பிறகு ஓரிருநாட்களில் நடைபெறும். ஆனால் இது அநேக நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இந்தக் குருதி வெளியேற்றம் கருப்பையிலிருந்து யோனி வழியாக நடைபெறும்.

‘மாத்திரைக்குப் பின் விடிவு’க்குப் (Morning after pills) பதிலாக வேறுவிதமாக கருச்சிதைவு ஏற்படுத்தலாமா?

ஆம். ஆரம்பக்கட்டத்திலேயே அதாவது கணக்குப்படி அடுத்த மாத மாதவிடாய் வருமுன் செய்தல் முறையாகும். முன்கூட்டியே காலிசெய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். கர்ப்பிணி ஆகியுள்ளோம் என்று அறிந்து கொள்வதற்கு முன்பேயே அல்லது கருவில் சிசு உருவாவதற்கு முன்பேயே செய்து கொள்ளும் கருச்சிதைவு முறையாகும். சிசு கருப்பைக்குள் அதன் வரிகளில் நாட்டப்பட்டு விடுமுன்னே நடைபெறுகிறது.

‘மாத்திரைக்குப் பின் விடிவு’ முறையைக் காட்டிலும் பாதுகாப்பும் பயனும் உள்ள முறை உறிஞ்சி எடுக்கும் முறை. மாத்திரைக்குப்பின் விடிவு முறையைக் கையாளுவதால் மாதவிடாயில் நீண்ட கால உழைச்சல் ஏற்படுவதோடு காலப் போக்கில் பிறக்கப்போகும் பெண்குழந்தைக்கு ஏற்படப் போகும் பாதிப்பும் இராது. கருத்தரித்து விட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த நிலையைக் காட்டிலும் இது தரும் உளாPதியான பாதிப்பு மிகவும் குறைவு. உங்களுக்கு சுர் மறை இனக் குருதியாய் இருந்தால் வைத்தியசாலையை விட்டு வெளியேறுமுன் சுர்ழுபுயுஆ மருந்து ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இது வருங்காலத்தில் பிறக்கப்போகும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுர் வியாதியிலிருந்து பாதுகாக்கும்.

முன்கூட்டியே காலி செய்யும் கருச்சிதைவு முறை இன்னமும் பல படிகள் முன்னேற வேண்டும். ஆற்றிய பாலுறவை மீண்டும் அடைவது சிரமம். பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணொருத்திக்கு காலி செய்யும் முறையைச் செய்யும் படி ஆலோசனை கூறலாம்.

குழந்தையொன்று வேண்டும் என்று கருதினால்...

குழந்தை அதிஷ்டசாலிதான். இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வெறும் பருவமானவர்கள் மட்டுமாயிருந்து கொண்டு ஓர் ஆணை மணப்பதோ அல்லது குடும்பம் நடத்துவதோ இயலாத காரியம். திருமணக் கட்டளைச் சட்டத்தின்படி பெண் 14 வயதையும் ஆண் 16 வயதையும் அடைந்திருந்தால் தான் திருமணம் செய்து கொள்ளலாம். அதோடு தந்தையாகப் போபவன் அந்தப் பொறுப்பை ஏற்க விரும்புவதில்லை. வெறுமனே பொழுதைப் போக்கித் தப்பித்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். திருமணம் செய்து கொண்டு விட்டாலோ பாடசாலை உயர்கல்வி கற்பதெல்லாம் மாற்றம் அடைந்துவிடும். பொறுப்புகள் நிரம்பிய திருமணம் செய்தவராகிவிடுகிறீர்கள். இருந்த போதிலும் சந்தோஷம் அடைந்து வாழ்வீர்கள்.

உங்கள் பெற்றோர் பாதுகாப்பும் உதவியும் தந்து கொண்டு இருப்பவர்களாயின் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தையொன்றைப் பெற்றெடுக்கலாம். ஆனாலும் நீங்கள் எடுத்துள்ள முடிவு ஒரு பயங்கரமானது என்று நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத தாயாக இருப்பதனால் நீங்களும் உங்கள் குழந்தையும் சமூகத்தில் வித்தியாசமாக நடத்தப்படப் போகிறீர்கள்.

இலங்கை இதற்கெல்லாம் அனுசரணையான நாடல்ல என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நிலைகளைச் சந்திக்க மனவுறுதி வேண்டும். நன்றாக ஆழமாகச் சிந்தியுங்கள்.

வெறோரு வழியும் உண்டு. குழந்தை ஒன்றைத் தத்து எடுத்துக் கொள்வது. குழந்தை பெற்றெடுக்க முடியாத பல பெற்றோர் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். வாழ்க்கை வழமைபோலத் தொடர்ந்து நடக்கும். பெற்றெடுத்த குழந்தையை தத்தெடுப்போருக்குக் கொடுக்கும் போது குழந்தையைக் காலப்போக்கில் வெறுக்கத் தலைப்படுவர். ஏனெனில் திருமணம் ஆகுமுன் பிறந்த குழந்தைக்கு சமூகம் மதிப்பு அளிப்பதில்லை.

அபாயங்களும் முரண்களும்
(RISK AND CONFLICT)

பெற்றோரிடமிருந்து விடுதலை

அதிர்ச்சி ஊட்டக் கூடிய விதத்தில் பெற்றோருக்கு முதன் முறையாக முதுமையின் அறிகுறிகள் தென்படத் தொடங்குகின்றன. இந்த வயதில் தான் பெற்றோர் இருவரிடையே பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சிலவேளைகளில் தாம் பிரிந்து வாழ்ந்தால் என்ன என்று நினைக்கவும் தலைப்படுகின்றனர். மேலும் இது அவர்களுக்கு நெருக்கடி நிரம்பிய காலம். பிள்ளைகளின் உதவியை நாடும் நிலைக்கு உந்தப்படுகின்றனர். பிள்ளைகளோ பிரிந்து தனியாக விரும்புகின்றார்கள். இதனால் பெற்றோர் பிள்ளைகளின் சுதந்திரப் போக்கிற்கு எதிராகச் செயல்படுகின்றனர். பிள்ளைகளின் மீதுள்ள அவர்கள் உரிமை வேட்கை உச்சத்தை அடைகிறது.

பருவமானவர்கள் தமது உரிமைக் கோரிக்கைகள் வரம்பை மீறிவிட்டனவென்று அறிவதெப்படி?

ஒருவழி இருக்கிறது. உங்கள் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று கருதினால் சற்று பொறுத்துச் சிந்தித்துப் பெற்றோரின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி அணுகிச் செயல்படுவீர்களென ஆராயுங்கள். நீங்கள் பெற்றோரின் ஸ்தானத்திலிருந்து பார்க்கும் போது ஒன்றும் இதற்குச் செய்து கொள்ள இயலாது என்று கருதுவீர்களாயின் நீங்கள் கோரியது அதிகப்படியானது என்ற முடிவுக்கு எளிதில் வரலாம். ஆகவே எழுந்துள்ள பிரச்சினைகளுக்குக் காரணமானவர் பெற்றோர் அல்லர் நீங்கள் தான்.

எமது பாட்டனார் காலத்திலோ அல்லது எமது கிராம மக்களிடையேயோ இத்தகைய பிரச்சினை இருக்கவில்லை ஏன்?

இரண்டு காரணங்கள்.

முதலாவதாக இத்தகைய முரண்பாடுகள் வெளிவர பெற்றோருடன் ஒளிவு மறைவின்றி விஷயங்களை அணுக வேண்டும். முன்னாளில் கிராம மக்களின் அதிகாரப் பிரயோகம் எல்லாவித எழுச்சியையும் அடக்கிக் கட்டுப்படுத்தக் கூடியது. இதனால் பருவமானவரின் புரட்சிகள் அனைத்துமே நசுக்கப்பட்டு விடும்.

எமது பாட்டனார் காலத்திலோ, கிராம மக்களிடையேயோ மக்கள் சிறுவயதிலேயே திருமணமாகி விடுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறியோ வெளியேறாமலோ குடும்பத்தவரை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் விரக்தியடையும் நிலயை எய்துவதில்லை. பாலியல் உறவு கொள்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். குடும்ப உறவையே தொடர்ந்தும் பேணி வருகின்றார்கள். வயது வந்தோர் நிலைக்குத் தயார் செய்து கொள்வதில்லை. ஆனால் வயது வந்தோர் சுமக்க வேண்டிய பொறுப்புக்களை சுமக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

பருவமானோர் மனோநிலை மாற்றம் காண்பது என்பது இது தானா?

பருவமானவர்கள் தற்போதெல்லாம் மனோநிலை மாற்றத்திற்குள் ளாகிறார்களே என்று கூறக் கேட்கிறோம். இதனால் முன்பெல்லாம் நல்ல தகுந்த காரணங்களுக்காக கோபமோ, கவலையோ, மகிழ்ச்சியோ அடைந்தார்கள்.

உணர்ச்சிகள் திடீரெனவோ, ஆகாயத்திலிருந்து பிறப்பதில்லை. நடந்தேறிய சில சம்பவங்களே உணர்ச்சி மேலிடத் தூண்டுகிறது. மனம் புண்படும் வகையில் சிலர் சிலவற்றைக் கூறிவிடுவதாலோ முகக்கண்ணாடியில் உங்களையே நீங்கள் பார்க்கும் போது தோன்றுவது உங்களுக்கு பிடிக்காததாக இருக்கும் போதோ ஏற்படுகிறது. அல்லது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் மன ஏக்கத்தைப் பெருக்குவதும் உலகமும் வாழ்க்கையும் வெறுமையானவையே என்கின்ற எண்ணத்தைத் தருவதாயும் இருப்பதாய் இருந்தால் மன உழைச்சல் ஏற்படுகிறது. எல்லாமே நடந்து முடிந்த சம்பவங்களாக இருக்க வேண்டுவதில்லை. மனதில் தோன்றுபவையும் கூட.

சிலசமயம் ஏற்படும் உணர்ச்சிகள் பெற்றோரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கிய, தனிமையிலிருந்து சிந்திக்க விரும்பும் நிலையிலும் பிறக்கின்றன.

ஓமோன்கள் என்றால் என்ன? பெண்களுக்குத் தான் மனோநிலைமை கூடுதலாகக் காணப்படுவதாகக் கூறுகிறார்களே ஏன்?

அநேகமான பெண்களுக்கு அப்படியில்லை. பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது என்று கூறுவது கடினம். பெண்கள் எப்படி நடக்க வேண்டுமென்று பெரியோர்கள் விரும்புகிறார்களோ அதற்கிணங்க நடக்க முயலும் வகையில் அழவேண்டும் என்று கூறப்பட்டால் கூடுதலாக அழுவார்கள். ஆண்களோ அழ மாட்டார்கள் தானே? அதனால் கோபப்படுபவார்கள் அல்லது ஆவேசம் அடைவார்கள்.

பெண்கள் மாதவிடாய்க்கு முன்பு மனத் தளர்ச்சி அடைகிறார்கள். ஆதலால் விரைவாக இதனை எப்படிக் கையாளுவதென்று அறிதல் வேண்டும். அல்லது இதில் எவ்வித கவனமும் செலுத்தாமல் இருப்பது. சாதாரணமாக மனத் தளர்ச்சியடைவோர் மாதவிடாய் வருமுன் மனத் தளர்ச்சியடைவோரே.

இந்தத் தலைமுறை ஏன் வித்தியாசமானது?

மிகப் பெரிய அம்சம் பாடசாலை. பாடசாலை என்றால் பெற்றோரிடமிருந்து சில மணி நேரங்கள் வாரத்திற்கு சுமார் ஆறு நாட்களுக்குப் பிரிந்து வாழுதல். இந்த நேரங்களிலும் நாட்களிலும் வகுப்புத் தோழர்களுடன் சமவயதினருடன் செலவிடுகிறோம்.

பெற்றோரைப் பொறுத்தவரை அவர்களிடமிருந்து கற்பதைக் காட்டிலும், உங்கள் சமவயதினருடன் நெருங்கிப் பழகி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதையே பருவமானோர் விரும்புகின்றனர். இதுவே பெற்றோரைப் பொறுத்தவரை தீய அம்சமாகும். இந்தப் பார்வையே பருவமானவரிடம் கூடுதலாக வலுப்பெறுகிறது. அதேசமயம் பெற்றோரிடமிருந்தும் அகன்று போகின்றனர்.

இதிலுள்ள நல்ல அம்சம் சமூகத்தில் பெரிய மாற்றமும், புதிய கருத்துக்கள் மலர வாய்ப்பும் ஏற்படுகின்றது. காலா காலமாக செய்து வந்தவற்றை எல்லாம் கைவிட்டு புதிய முறைகள் தலைகாட்டுகின்றன. முரண்பாடுகள் எல்லாம் இந்த மாற்றங்களைப் புகுத்துவதற்காகவே. சமூகம் தானாகவே நிலையை மாற்றிக் கொள்ளாது.

பாடசாலை போவோருக்கு புதிய கருத்துக்களைத் தருவதெது?

பெருமளவில் தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சி, வானொலி, படங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரபல புத்தகங்கள், தொடர்பு சாதனங்கள் எல்லா வயதினரையும் அடையக் கூடியது. பெற்றோராலோ இது இயலாது. நல்லதோர் ஆசிரியரால் ஒரு பாடசாலையில் தான் செல்வாக்கைப் பயன்படுத்த இயலும்.

பாடசாலை செல்லும் பருவமானவர்களை தொடர்பு சாதனங்கள் தம் வயப்படுத்துவது போல மற்றவர்களால் முடியாது. இந்தப் பிராயத்தில் தான் ஒருவர் தன்னைத் தானே பார்த்து ஆராய்வதும் நீண்ட நேரம் தம் வயதுக்காரருடன் செலவிடுவதும் ஆக பருவமானவர்கள் இருக்கின்றனர். பருவமானவர்கள் தொடர்பு சாதனங்களாhல் பெரிதும் கவரப்படுகின்றார்கள். அதில் காட்டப்படும் இலட்சியவான்களாக தம்மை மாற்றிக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

பருவமானவர்கள் தொடர்பு சாதனங்களுக்குக் கட்டுப்பட்டு விடுவது தவறா?

ஆம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம்.

அநேக நவநாகரிகக் கலாசாரம், சங்கீதம், நடனம், நவநாகரிக ஆடை அணிகள் ஆகியன நல்ல அம்சங்களே.

தீயவை என்று கொள்ளக் கூடியவையை பார்த்துப் பின்பற்ற முடியாத நிலையிலுள்ளோர் இந்த நிலையில் தம்மை நன்கு பார்த்துத் தாமும் அந்த இலட்சியப் படைப்புகளைப் போல மாற எத்தனிக்கின்றனர். அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமானவையல்ல. காட்சிப்பொருளாக அமைந்தவை, சிறந்த விளையாட்டு வீரர், வர்த்தகத்துறையில் உன்னத நிலையை அடைந்தவர்கள் போன்றோரே அந்த இலட்சியப் படைப்புகள் ஆகும். அப்படியானோரின் நிலையை அடைய முடியாது போனால் மனத் தளர்ச்சியடைந்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட மனோநிலை மாற்றங்கள் திடீர் என்று ஏன் ஏற்படுகின்றன? பருவ மாற்றத்தை ஏற்படுத்தும் ஓமோன்களின் செயற்பாடு தானா?

பருவமானதால் சுய சிந்தனை அடைந்தவராகி எதனையும் முழுமையாக ஆராயத் தலைப்படுவர். எல்லா விஷயங்களிலும் தீவிர தாக்கம் அடைவர். கூடிய கவனம் செலுத்தாதவற்றிலும் கூடியகவனம் செலுத்தி குற்றம் காணத் தலைப்படுவர். தவறு என்று கருதினால் சினம் கொள்வர் அல்லது விசனம் கொள்வர். நல்லதொரு காரியம் நிறைவேறி விட்டால் மகிழ்ச்சி கொள்வர். இது பருவமானரின் நிலைமை.

இதோடு புதிய உறவினரும் அதிகரிப்பர். ஒரே வயதினரின் உறவும் பெருகும். இவை பெரும்பாலும் அநேக தோல்விகளைச் சந்தித்த நிலையை உருவாக்கும். சம வயதுள்ளவர்களுடன் சேர்ந்து குழுக்களாகி ஒருவரை ஒருவர் அழுத்தத்தைப் பிரயோகித்து விஷயங்களை ஏற்க நிர்பந்திப்பர். பெருந்தொகையினர் தாங்கள் செய்தவற்றைச் செய்ய பருவமான சிலரை நிர்ப்பந்திப்பர். இதனால் சச்சரவுகளும் முரண்பாடுகளும் தோன்றும். ஆனால் பருவமானவர் தமது பெற்றோரின் உதவியை நாட விரும்புவதில்லை. ஆனால் முன்பெல்லாம் பெற்றோரின் உதவியையும் ஆலோசனையையும் நாடினர். இதனால் தனிமையாகவே அநேக உணர்ச்சியை எழுப்பும் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது.

பருவமானவர்கள் மட்டுமல்ல வயது வந்தவர்களிடம் கூட மனோ நிலை மாற்றம் காணப்படுகிறது. வயது வந்தோர் இத்தகைய பிரச்சினைகளைச் சந்தித்து பழக்கப்பட்டவர்களாதலால் இவற்றைச் சுலபமாகக் கையாளக் கூடிய நிலையில் உள்ளனர். எல்லா வயது வந்தவர்களும் இத்தகைய பக்குவ நிலையை அடைந்தவர்கள் போலவே நடந்து கொள்கின்றனர்.

அழுத்தம் அதிகரிக்கும் போது பருவமானவர்களும் வயதுவந்தவர்களும் தற்கொலை புரிந்து கொள்ளத் தூண்டப்படுவதேன்?

உண்மை தான். சிறுபிள்ளைகள் இப்படி நடந்து கொள்வது அபூர்வமானது.

பருவமானவர்கள் மீது உலகம் பெரிய சுமையைப் போட்டு விடுகிறது. முன்பு போல இவற்றிற்குத் தீர்வுகாண பெற்றோரின் உதவியை நாடுவதில்லை. பாடசாலையில் தரப்படும் வீட்டு வேலையோ, பாPட்சையோ அல்லது மெலிவதோ தகுதியாவதோ சமூகப் பிரச்சினையோ அனைத்துமே தங்களால் தீர்க்க வேண்டியவையே என்று கருதுகிறார்கள்.

அநேக பருவமானவர்கள் பாPட்சையில் சித்தியடையாவிட்டால் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிக்கொள்கிறார்கள். தோல்வியென்ற எண்ணம் அவர்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. சதாகாலமும் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பொல்லாத உலகம் முடிந்த அளவு சிறப்பாகச் செய்தால் போதும் என்று பருவமானவரைக் கூறி உற்சாகப்படுத்துவதைவிடுத்து வழமைக்கு மாறாக மிகவும் சிறப்பாகவும் உயர் நிலை அடைய வேண்டும் என்று வருத்துவதால் இந்நிலை பருவமானவர் மனதில் உருவாகிறது. தாமாக உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுக்கும் செயலுருவுக்கும் எதிரானவையாகவே உள்ளது. உணர்ச்சிமயமான சமூகத்திலுள்ள பிள்ளைகளுக்கு எதிரான போராகும்.

தற்கொலை முயற்சி என்பது இறந்து போவதல்ல. உதவி வேண்டுமென்பதற்கான நடவடிக்கையேயாகும். சரியான படி நடத்தப்படவில்லை என்பதை அறிவிக்கும் எதிர்ப்பின் அடையாளமே. அதிக எதிர்பார்ப்பும் இல்லை.

நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென விரும்பியுள்ளீர்களாயின் உங்களுக்கு ஆறுதல் கூறக் கூடியவர்களுடன் கலந்து உரையாடுங்கள். மாமனோ மாமியோ ஆசிரியரோ நண்பரோ உங்கள் பிரச்சினையையும் நிலைமையையும் நன்கு அறிந்தவரால்தான் சுலபமாகத் தீர்க்க இயலும்.

யாராவது ஆணோ பெண்ணோ தற்கொலை புரிய இருப்பதாகக் கூறினால் தீவிரமாக அணுகுங்கள். உதவி பெற நாட்டம் கொண்டே பருவமானோர் இப்படி அறிவிக்கின்றனர். சில நேரங்களில் தற்கொலை புரிய முயலுவர். அவனோ அவளோ கூறுவதை அவதானியுங்கள். அவர்களோடு பேசுங்கள். அவர்கள் உங்களோடு பேசும் போது பேச்சைத் திசை திருப்ப முயலாதீர்கள். இப்படிச் செய்வதால் தற்கொலை செய்யவிருப்பவரில் மனமாற்றம் ஏற்பட்டு விடாது. இது சலிப்பை உண்டாக்கும் அல்லது மனத் தளர்வைத் தான்; அதிகரிக்கும். இது பற்றி ஆலோசனை வழங்குவோருடன் உரையாடலாம். உங்கள் பாசத்தின் ஒரு பகுதியை விழுங்கி விட்டு தற்கொலை செய்வதிலிருந்து காக்கிறது.

புலிமியா, அனோறெக்ஸியா, உடற்கட்டமைத்தல் (Bulimia, Anorexia, and Body building)

காட்சிப் பொருள்களைப் போல் தோற்றமளிக்க விரும்புவது தவறா?

முதலாவதாக இந் நாட்களில் காட்சிப் பொருள்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ள விரும்புவோர் உயரமானவர்களாகவும் இயற்கைக்குப் புறம்பாக நீண்டிருக்கும் கைகால்களை கொண்டவர்களாகவும் இருக்க விரும்புகின்றனர். அதனால் அவர்களை 90மூ வீதமான சமூகத்தவரிடமிருந்து பிளக்கிறது. இந்தக் காரணங்களுக்காக இவர்கள் காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். எல்லோரையும் போலவே இருக்கின்றவர்களை காட்சிக்கு வைக்கப்படும் பொருள்களாக ஏன் தெரிவு செய்ய வேண்டும்? இவளைப் போல விளங்க ஏன் விளம்பரப்படுத்தப்பட்ட பொருள்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்? இதனால் அவள் வித்தியாசமான தோற்றம் உள்ளவளாக இருக்க வேண்டும்.

இரண்டவதாக, காட்சிக்குத் தம்மைக் காட்ட விரும்புவோர் மெல்லியவராகவே உள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. சமூகத்திலள்ள 90% மேலானவர்களை விட மெல்லியவர்களாகவே காட்சி தரும் பெண்கள்/ஆண்கள் இருக்கின்றனர். சிலர் வலுக்குறைந்தவர்களாகவும் பட்டினி பல நாட்களாக இருந்ததாகவும் சொல்லக் கூடிய விதத்தில் மெலிந்து காணப்படுகின்றார்கள். உண்மையிலேயே இப்படிப்பட்ட நிலைக்குக் காட்சிப் பொருள்களாக காட்டப்பட்டோர் வைக்கப்படுகின்றனர்.

ஆரோக்கியமானவர் இப்படி மெல்லியவராக இருக்க முடியாது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் செய்து கொண்டாலும் இப்படித் தோற்றமளிக்க முடியாது. உங்கள் உடல் தனது நிறைகுறைந்து போவதற்கு எதிர்ப்பு நல்கும். பட்டினியே கிடந்து வந்தாலும் நிறைகுறைந்து போக விடாது. உங்கள் அநுசேதனம் (Metabolism) குறைந்து போகவே குறைந்தளவு எரிபொருளே தகனத்திற்குத் தேவைப்படும். இதனால் வெகு விரைவில் களைப்புத் தோன்றும். உடலின் நோக்கம் நீண்ட காலத்திற்கு வாழ்வதே.

இளைஞர்கள் அளவுக்கதிகமாக மெலிந்தால் உடல் தனது இயற்கையான பாதுகாப்புகளை இழந்து பட்டினி பசி ஆகியவற்றிற்கு எதிராகச் செயற்படும் திறனை இழந்து விடுகிறது. இதற்குக் காரணமான நோய் புலிமியா நோவோசா, அதைவிடப் பயங்கரமான அநோறெக்சியா நோவோசா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

புலிமியா நேவோசா (Bulimia nervosa) என்றால் என்ன?

புலிமியா நோவோசா என்பது இளைஞர்கள் உண்பதன் மூலம் தனது நிறையைக் குறைத்து உண்ட மேலதிக உணவை வெளியே கொப்பளித்துத் தள்ளிவிடுவதாகும். புலிமிய நோயாளர் தம்மை மெலியச் செய்ய எத்தனிக்கின்றனர். தாம் பெரிதும் கொழுத்து இருப்பதாகவும் அதனால் பார்ப்பதற்கு அலங்கோலமாக இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்
.
புலிமிய நோயாளருக்கு அதீத பசியிருப்பதனால் நிறைய உண்ண விரும்புகிறார்கள். நியை உண்டு விட்டு பெருமளவு உணவைக் கொப்பளித்துத் தள்ளிவிட முயலுகிறார்கள். இதனைச் செய்வதனால் குற்றவுணர்வு ஏற்படவே ஒரு நாளோ அல்லது அதற்குக் கூடுதலான நாட்களோ எதனையும் உண்ணாமல் இருந்து கூடுதலாக உட்கொண்டதற்கு ஈடு செய்கின்றனர்.

இந்தக் குறைபாடை புலிமியா நேவோசா தருகிறது. இது உளஞ்சார்ந்த குறைபாடே அல்லாமல் வயிற்றோடு சம்பந்தப்பட்டதல்ல. உளாPதியான குறைபாடுடையோர் அல்லாதோரால் அல்லாமல் வேறொருவரால் புலிமியப் பிணியாளர் போல வெளியே எடுத்துக் கொப்பளித்து விட இயலாது. தங்களுடைய அநுசேதனம் கீழ்முகமாகப் பெயர்கிறது என்பதை அறிய மாட்டார்கள். இவர்களுக்குக் களைப்பும் தோன்றுவதில்லை. இது சாதாரணமான நிலைப்பாடல்ல.

கவலைக்கிடமான சம்பவம் என்னவென்றால் புலிமியா தமது கூடுதலாக இருந்த நிறையைக் குறைக்கத் தலைப்படுவதைப் பெருமையுடன் கூறுவது தான் முதல் நிகழ்வாகவுள்ளது. இது புலிமியா நோய் நன்மை பயப்பதாகக் கருதவைக்கிறது. தொடர்பு சாதனங்கள் மட்டுமல்ல, எமது அநேக நண்பர்கள், உறவினர்கள், தாய்மார்கள் மெல்லியவர்களாக வேண்டும் என்றே கூறி வருகின்றனர். சுய அழிவுப் போக்குகள் தான் புலிமியாக் குறைபாடுகளுக்குக் காரணம் என்று திட்டமாகக் கூறமுடியாது. நன்கு தெரிந்தவர்களால் தான் ஏற்படுகிறது என்று தெரிகிறது அல்லவா? நாம் பித்துப் பிடித்த காலத்தில் வாழ்கிறோம்.

புலிமியாப் பிணியாளர்களில் 90% தினர் பெண்களாவர். சம்மதத்தை பெறத் தம்மைத் தாமே வருத்திக் கொள்வது பெண்களின் இயல்பாகும். ஆண்களும் கூட இப்பாதையைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

கட்டாய உடற்பயிற்சி கூட புலிமியா போன்றதொன்று தானா?

ஆம். சிலவேளைகளில் இதனை புலிமியா உடற்பயிற்சி என்றும் அழைப்பார்கள். உணவை அளவுகடந்து உண்டு விட்டு அனைத்தும் சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக நிரம்பிய அளவில் உடற்பயிற்சி செய்வார்கள். இதற்கும் சாதாரணமான உடற்பயிற்சிக்கும் உள்ள வித்தியாசம் குற்ற உணர்வு காரணமாக மேலதிகமான உடற்பயிற்சியிலீடுபடுவது. வேண்டாத மேலதிக உணவை இல்லாது செய்வது. இதனை வேறு விதமாகக் கூறுவதாயின் மேலதிக உணவைச் சமிபாடடையச் செய்வது.

அநோறெக்ஸியா நேவேசா (Anorexia nervosa) என்றால் என்ன?

அநோறெக்ஸியா நோவோசா என்பது உண்ணாமல் இருத்தல் ஆகும். இதனைச் சிலர் மரணம் ஏற்படும் வரை கையாளுகிறார்கள். அநேக பருவமானவர்கள் தமது உடல் வளர்ச்சி, மார்பகங்களின் வளர்ச்சி, மாதவிடாயில் நிலைகுலைவு ஆகியவற்றை அவதானிக்கிறார்கள். அநேகமாக எலலா அநோறெக்ஸியா பிணியாளர்கள் பெண்களே. அதோடு பருவமானவர்களும் வசதி படைத்த குடும்பத்தினருமே.

சமூக காரணங்களுக்காக அதிக அளவு உணவை உட்கொண்டு புலிமியா நோயாளரைப் போல வாய்வழியாக வெளியேற்றுகிறார்கள். மற்றப்படி அநொறெக்ஸியா வியாதிகள் தமக்குத் தீங்கு விளைவித்து விடுமோ என்று அஞ்சி உணவை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். பட்டினி கிடக்கும் அளவிற்கு நன்கு மெலிந்து விட்டபோதிலும் தாங்கள் பெரிதும் கொழுத்திருப்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மெலிந்திருக்கிறார்கள் என்று நண்பர்கள் கூறிய போதிலும் அவர்கள் கூற்றை நம்பாமல் ஏதோ பொறாமையுடன் கூறுகிறார்களோ என்று நினைத்துப் பயந்தே இருப்பார்கள்.

அநோறெக்ஸி பிரச்சினைகளுக்கு அடிப்படையாகவுள்ளதும் கடும் எதிர்பார்ப்புமாக உள்ளது பாராட்டு அல்ல. ஆனால் உயிரைக் கட்டுப்படுத்துவதே. அநேக அநோறெக்ஸ் நோயாளிகள் கூடுதலான பலாபலனைப் பெறத் துடிப்போர். அதேவேளை முழுமையான வெற்றியை அடையவில்லையே என்று ஏங்குபவர். எல்லாமே பிழையாகி தமது கட்டுப்பாட்டை மீறிவிட்டது என்று முடிவினை அடையும் போது அவர்கள் கட்டுப்படுத்தக் கூடியது அவர்களுடைய உடலையும் உண்ணும் உணவையுமே. ஒரு விதத்தில் பார்க்கும் போது மறுப்புத் தெரிவிப்பது போன்றும் தற்கொலை முயற்சியைப் போன்றும் உள்ளது. உண்மைப் பிரச்சினையை வெற்றி கொள்ள முடியாமல் தன்னையே பலியிடும் முயற்சி போன்றதே.

அநோறெஸியா நோயாளிகள் தாம் தமது தாயாரைப் போல கொழுத்தவர்களாக இராமல் மெலிந்தவர்களாக இருக்க விரும்பி பாரம்பரியத்தைத் தகர்த்தெறியத் தம்மையே வாட்டிக் கொள்கிறார்கள்.

இதற்குப் பரிகாரம் வலுக்கட்டாயமாக உணவ10ட்டுவதை விடுத்து அவர்களைத் தொடர்ந்து உயிருடன் வைத்திருப்பதே. இவர்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய ஒரே வழி இவர்கள் தங்கள் வாழ்வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மதிக்கவும் வேண்டும். ஏனெனில் இவ்வியாதிக்காரர்கள் சாதாரணமாக ஆற்றலும் புத்திக் கூர்மையும் உடையவர்கள். சிறந்த வழி இவர்களுடன் அன்பான உறவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் இவர்களுக்கு மீண்டும் நம்பிக்கை வளர்கிறது. ஆனால் தட்டுவதும் தவறுவதுமாயிருக்கும். சில அநோறெக்ஸியா நேவோசா வியாதிக்காரர்கள் உயிர்போகும் வரையும் கூடப் பட்டினி இருப்பவர்கள். இந்நிலையை முறியடிப்பது கடினமான காரியம்.

கவலைக்குரிய விஷயம் யாதெனில் தற்காலத்தில் இந்நோயாளரின் தொகை பெருகிக் கொண்டே வருகிறது. இது இப்போது ஆண்களையும் பற்றத் தொடங்கி விட்டது. இக்காலத்தில் தொடர்பு சாதன உருவங்களும் முழங்குவது, மெலிந்து காணப்படுபவர்களே சந்தோஷமானவர்கள் என்பதாகும். நடுவயதினரும் பருவமடையாத பிள்ளைகளும் கூட இந்நோய்க்கு இலக்காகிறார்கள். தங்களுடைய உருவத்தைக் கண்டு கவலைப் படுகிறார்கள்.

உண்மையில் நீங்கள் நிறை கூடியவர்களாய் இருந்தால்

வைத்தியக் கணிப்பின் படி நீங்கள் நிறை கூடியவர்களாயின் வைத்தியர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுங்கள். கண்டவற்றையும் உட்கொள்ளும் வயதில் இது சாத்தியமே.

இந்நாட்களில் வைத்தியர்களையும் மெல்லியவராக இருக்க வேண்டும் என்கின்ற வெறி பற்றிக் கொண்டது. அவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் தொங்கவிடும் உயரம் நிறைப்பட்டியல்கள் கூட இதனைத் தான் வலியுறுத்துவதாக இருக்கிறது. நீங்கள் நன்றாகவே தோற்றமளிப்பீர்கள். நிறையைப் பொறுத்துப் பெண்களைக் கவலை கொள்ள வைக்கச் சதி முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. பெண்களாய் இருப்பதற்கென சிறிது அளவு கொழுப்பு வெளிப்படுகிறது. மெலிந்து இருந்து கொண்டு ஆண்களைப் போல தசைப்பிடிப்பாக இருக்க முடியாது. ஆண்களுக்கு இதனைக் கொடுப்பது ஆண்களுக்கான ஓமோன்களே.

கொழுத்திருப்பது ஆரோக்கியத்திற்குக் குந்தகமானதா? இதற்கான விடை அவ்வளவு தெளிவானதாக இருப்பதில்லை. உடல்பெருத்த அநேக பெண்கள் வைத்தியப் பிரச்சினைகளை எதிர்நோக்குவது உணவுக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதாலேயே அநேக பெண்கள் தாமாகவே உணவுக் குறைப்பை மேற்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்கி வருகிறார்கள். காட்சிப் பொருள்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரை போல உடல் மெலிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இல்லாது போனாலும் கூட இவர்கள் அழகுடனே தோற்றம் அளிக்கின்றார்கள்.

எப்படி நிறையைக் குறைப்பது? தேவையற்றதும் வெறுமனே கலோரி அளவை மட்டும் கூட்டக் கூடியதுமான உணவைக் குறைத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பாயிருங்கள். இச்செயல் அநுசேதனத்தின் வேகத்தைக் கூட்டுகிறது. உங்கள் உடல் நிறையும் குறைகிறது. ஏனெனில் உங்கள் உடல் எந்திரம் மிகவேகமாகச் செயல்படுகிறது. இன்னமும் கூட உணவு உட்கொள்வதைக் குறைக்கத்தான் வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவீர்களாயின் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டுதான் இருப்பீர்கள். நீங்கள் இதனைக்; கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டீர்கள்தானே!

ஓமோன் கொண்ட மருந்துகள் பெண்களின் நிறையைக் குறைக்க உதவுகிறதா?

ஆம். அநேக விளையாட்டு வீராங்கணைகள் ஓமோன் கொண்ட மருந்துகளை உட்கொள்வதனாலேயே போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியை இழப்பர்.

இவர்கள் தமது நிறையைக் குறைத்து விடுவது இப்படித் தான். பெண்களுக்கான ஓமோன்கள் பெண்களின் உடலில் காணப்படும் கொழுப்பை மார்பகங்கள், இடுப்புப் பகுதி, தொடை ஆகிய பகுதிகளுக்கு விநியோகம் செய்கிறது. அதேவேளை ஆண்களுக்கான ஓமோனான ரெஸ்ரோஸ்ரிறோன் தசையைக் கூட்டுமே தவிர கொழுப்பை அல்ல. இதனால் தான் ஆண்கள் பெண்களைப் போல நிறைய அதிகரிப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. பெண்ணொருத்தி ரெஸ்ரோஸ்ரிறோன் ஓமோனைப் பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் அவளிடம் காணப்படும் பெண்மைக்கான கொழும்புகள் அற்று போய், எலும்புக் கூட்டுத் தசைகள் கூடிவிடும். ஆகவே அவள் மெலிந்து போக மாட்டாள். அது மட்டுமல்ல ஆண்களுக்கே உரிய பாலியல் இயல்புகள் அவளிடம் பெருகும். உதாரணமாக ஆண்களுக்கான பாலியல் இயல்புகளான தாடிவளருதல், உடலெங்கும் கூடுதலான உரோம வளர்ச்சி, தடித்த குரல், ஆண்களின் பாலியல் புற உறுப்புத் தோற்றம் ஏற்பட ஏதுவாகும். அதோடு மலட்டுத் தன்மையும் தலைகாட்டும்.

உடலை மெலிய வைக்கும் மற்றொரு மருந்து அம்பிரமின்கள். இது உடலின் அனுசேதனத்தைக் கூட்டி உணவு உட்கொள்ளும் விருப்பத்தை இல்லாது ஆக்குகிறது. இதனால் உங்கள் இதயத்தில் தாக்கம் ஏற்படுகிறது. அம்பிரமின்கள் விளையாட்டுப் போட்டிகளில் தடைசெய்யப்பட்ட வேறொரு மருந்து.

பெண்மைக்குத் தேவைப்படுவது ஓரளவு கொழுப்பு ஆகும். பருவமாகும் போது ஏற்படுகின்ற இந்த மாற்றத்திற்கு எம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.

ஓமோன் மருந்துகள் ஆண்களை உயரமானவர்களாகவும், தசைப்பிடிப்பானவர்களாகவும் மாற்றி விடுமா?

ஆம். எந்த ஓமோன் உயரமாக வளர்வதற்குக் காரணமாகவுள்ளதோ, அதே ஓமோன் உயர்ந்து வளர்வதற்கும் முடிவுகட்டுகிறது. எவ்வளவு விரைவாக வளரத் தொடங்குகிறீர்களோ அதே வேகத்தில் வளர்ச்சியும் முடிவுக்கு வந்து விடுகிறது.

என்புகளின் வளர்ச்சி முற்றுப் பெற்றவுடன் ஓமோன், வளர்ச்சிக்கு உதவி புரியாது. மேலும் வளர்ச்சியடைவதற்கு இடமிராது. பீங்கான் இறுகிக் கோப்பை ஆனபின் மேலும் வளர்ச்சியடையாது அல்லவா? காரியங்களை அவற்றின் போக்கிலேயே விட்டிருந்தால் வளர சற்று கூடுதலான காலம் எடுத்திருக்கும். அதேவேளை சற்று அதிகப்படியாகவும் வளர்ந்து இருக்கலாம்.

ஓமோன் மருந்துகள் தசை வளர்ச்சியைக் கூட்டுவதோடு மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விடும். பாலியல் ஆண் உறுப்பு விதைகளைச் சுருக்கிச் சிறியதாக்கி விடும். அழகானவராகத் தோற்றமளிப்பதற்குத் தருகின்ற தலையான வெகுமதி இதுவாகும்.

பையன்கள் உயரமானவர்களாகவும் தசைப் பிடிப்பானவர்களாக இருக்க விரும்புவதேன்?

தொடர்பு சாதனங்களில் வரும் காட்சி தருவோரின் படங்களும் விளம்பரங்களில் காட்டப்படும் படங்களும் பார்க்கும் எல்லாமே பெரிதாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தையே ஊட்டுகிறது. காட்சி தருபவர்களில் அல்லது விளம்பரங்களில் உயரம் குறைவானவர்களையே காண முடியும்.

இதற்குக் காரணம் உலகில் உயரம் குறைவானர்கள் மிகச் சிலர் மட்டுமே இருப்பதனாலா? இல்லை. ஏனெனில் விளம்பர உலகில் அனைத்துமே ஒரே மாதிரியானவையாக இருக்க வேண்டுமென்றே கருதுகிறது. நவீன தொடர் மாடிகள், அலுவலகச் சீருடைகள், வளர்க்கப்படும் நாய்கள் அனைத்துமே ஒரே மாதிரியானவையாகவே இருக்க வேண்டும் என்கின்ற சிந்தனை வளர்ந்துள்ளது. கவலைக்கு இடமான சம்பவம் யாதெனில் பெண்களும் உயர்ந்த தசைப் பிடிப்பான ஆண்களையே நாடுகிறார்கள்.

விளம்பரங்களில் காட்சி தருவோரை தெரிபவர்கள் பெரிய வர்த்தக தாபனங்களைச் சார்ந்தவர்களே. இவர்கள் உயரமானவர்களும் அல்லர் - உயரம் குறைவானவர்களும் அல்லர். தொடர்பு சாதனங்களில் காட்சி தருவோரின் உயரங்களோடு எவ்வித தொடர்புமே அற்றவர்கள், புத்தகங்களிலோ திரைப்படங்களிலோ காட்சி தருபவர்கள் உயரமானவர்களும் தசைப்பிடிப்புள்ள ஆண் அழகர்களுமே.

இரட்டை நிலைப்பாடுகள்
(DOUBLE STANDARDS)

ஆண் பெண் இருபாலருக்குமான போக்கில் உள்ள வித்தியாசத்திற்கும் காரணமாயுள்ளது ஓமோன்கள் தானா?

இல்லை. இருபாலரிடையேயும் காணப்படும் பாரிய வித்தியாசங்களுக்குக் காரணம் வளர்க்கப்பட்ட நிலையையும் பழக்கி வைக்கப்பட்ட வித்தியாசமான முறையுமே ஆகும். உதாரணமாகப் பெண்கள் உணர்ச்சிமயமானவர்களாகவும் அமைதி காப்போராகவும், ஆண்கள் தமது பலவீனங்களை வெளிக்காட்டக் கூடியவர்களாகவும் ஆவேசப் போக்குடையவராகவும் வளர்க்கப்படுகிறார்கள். இவை குழந்தைப் பருவத்திலேயே உருவாகி விடுகிறது. பெண் பிள்ளைகள் பிறருக்கு மகிழ்ச்சி ஊட்டக் கூடிய வித்திலும், இனிய மெல்லிய குரலிலும் பேச வேண்டுமெனவும், ஆனால் பையன்கள் சற்ற குறும்புக்காரராகவும் ஒருவரோடு ஒருவர் சண்டை போடுபவர்களாகவும் இருக்கும் படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். பெண்களும் ஆண்களும் விளையாட வழங்கப்படும் விளையாட்டுச் சாமான்கள் கூட அதற்கேற்பவே அமைகிறது. இவை பிற்காலங்களில் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. அநேக பையன்களுக்குத் தமது மனதில் எழுந்தவற்றை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலையும் துன்பம் நேர்கையில் மனம் விட்டு அழ முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். ஆகவே தமது விருப்பிற்கு மாறானவற்றை வெளிக்காட்ட உள்ள வழி வன்முறையும் மதுபானமுமே என முடிவு செய்வர். பெண்களே எதற்கும் ஆண்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். மின் விளக்கை அணைப்பதற்குக் கூட ஆண்களே உதவிக்கு வரவேண்டிய நிலையிலிருக்கின்றனர். பெண்கள் சுதந்திரமாக வாழ அஞ்சியே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதுவே பருவமான பையன்களுக்கும் பருவமான பெண்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையாகும். தம்மை அணுக அனுமதிக்காத பலமான பெண்களால் ஆண்கள் கவரப்படுகிறார்கள். பழக்கப்பட்ட முறைப்படி பெண்கள் நல்லவர்களாயின் சாந்தமானவர்களாகவும் ஆண்களை உயர்வானவர்கள் என்று நினைப்பவர்களாகவும் உண்மையில் கவர்ந்திழுக்கக் கூடியவர்கள் மிகவும் 'மலிவான"வர்களாகவும் கருத இடம் உண்டு. அனேக பையன்கள் பலம் பொருந்திய பெண்களைக் கேலி செய்வார்கள். கேலி செய்து தம் வயம் இழுக்க முயலுவார்கள். சண்டையிடுவது பெண்கள் விரும்பாதவொன்று.

கவர்ச்சிகரமான பெண்கள் தமக்கு ஏன் ஆண் பிள்ளைகளின் நட்புக் கிட்டவில்லையே என்று சிந்திக்கிறார்கள். இப் பெண்கள் ஆண்களின் நட்பை நாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள் ஆண்களை உணர்ச்சியே அற்றவர்கள் என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள்.

அநேக பெண்கள் உன்னத இலட்சிய ஆண்கள் பெரிய பலசாலிகள் என்று நினைக்கிறார்கள். அநேக நல்ல பையன்கள் தம்மை விரும்புகிறார்கள் இல்லையே என்று ஏங்குகிறார்கள். பெண்கள் மறுப்பது போலப் பாசாங்கு செய்கிறார்கள். அதன் பிறகு தம்மை ஏன் விளங்காமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள் என்று பெண்கள் நினைக்கிறார்கள். தங்களுடைய விசனத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு இப்பெண்களுடைய தவறுகள் தான் என்ன என்பதை ஆண்கள் ஏன் சொல்லத் தயங்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.

பையன்கள் பெண்களை வெறுப்பது போல் ஏன் நடக்கின்றார்கள்?

இரு முக்கிய காரணங்கள். அவை பாதுகாப்பின்மையும் விரக்தியுமே ஆகும்.

பாதுகாப்பின்மை எப்படிப் பையன்கள் பெண்களை விரும்பாமலிருக்கச் செய்கிறது?

யாராவது செல்வாக்குள்ள ஆண்களின் கூட்டத்திலிருந்து மற்றைய பெண்கள் கூட்டத்தோடு போட்டியிட விரும்பாத நிலைமை. வெளியாரை விட நன்கு விளங்குவார்களோ என்று நம்பாத நிலையில் அவர்கள் தோல்வியில் தான் முடியும். இதனால் பெண்களைப் போட்டியிட விடாமல் வைத்திருப்பது சுலபமானதே. இந்த முறையில் எந்தவொரு பையனும் முயலாமலேயே பெண்களை விடச் சிறப்பாக விளங்குவார்கள்.

மிக இலேசான முறை யாதெனில் பெண்களை போட்டிகளில் பங்குகொள்ள விடுவதில்லை. 'இந்தப் பெண்களுக்கு என்ன தெரியும்?" என்று கூறி ஒதுக்கி விடுவது. வேலை வழங்குவதிலும் பெண்களை ஒதுக்குவார்கள். திறமையும் ஆற்றலும் படைத்த பெண்களை வேலைக்கு அமர்த்தாமல் ஆண்களையே தெரிவு செய்வர். மிகவும் கேவலமான நிலை என்னவென்றால் பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது. இதுவே பாதுகாப்பின்மையின் உச்சக் கட்டம் ஆகும். பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் ஆண்களோடு சண்டையிடுவதைக் காட்டிலும் பலம் குறைவான பெண்களோடு சண்டையிட ஆண்கள் விரும்புகிறார்கள்.

ஆண் பெண்களிடையே விரக்தி என்பது எப்படி பிரச்சினையை உருவாக்குகிறது?

பாலியல் உறவு கொள்வது மறுக்கப்படுவதைக் காட்டிலும் பெண்களின் நட்பு இன்மையே ஆண்களுக்கு விரக்தியை கூடுதலாக ஏற்படுத்துகிறது. ஆகவே அவர்களின் கவனத்தை ஈர்;க்க அவர்களைக் கோபமூட்டுகின்றார்கள். தங்களொடு பெண்கள் பேசுவார்களோ என்று இந்த ஆண்களால் கற்பனை செய்யவே முடியவில்லை.

நமது நாடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாரிய வகுப்பு வேறுபாடு இருக்கிறது. வசதி குறைந்த குடும்பத்தைச் சார்ந்த பையன்கள் வசதியான குடும்பத்தைச் சார்ந்த பெண்களைக் கோபமூட்டுவார்கள். பொதுவிடங்களில் காணும் போதெல்லாம் இந்தப் பெண்களை தாக்குவதாகவும் மிரட்டுவார்கள். இப்பெண்கள் ஓட்டிச் செல்லும் ஈருளிகளுக்கு அருகே நெருங்கி வருவார்கள். சில வேளைகளில் இப் பெண்களின் மார்பகங்களையோ அல்லது புட்டங்களையோ பற்றிக் கொள்வார்கள். கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இப்பெண்களால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை. இப்பெண்களோ சம்மதம் தெரிவித்தாலோ விலை மலிந்தவர்களாகக் கணிக்கப்படுவார்கள். இந்தப் பையன்கள் அஞ்சுவதெல்லாம் இப்பெண்களின் கோபமடைந்த சகோதரர்களோ அல்லது தந்தைமாரோ இவர்களுடைய கோரிக்கைகளுக்கு மறுப்புத் தெரிவித்தால் இப்பெண்கள் இந்தப் பையன்களின் மதிப்புக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் இப்பெண்கள் உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இது வேறொரு விதமான கீழ்த்தரமான ஒதுக்குதலாக இப்பையன்களால் கருதப்படுகிறது. முற்காலத்தைப் போன்ற சமத்துவப் பார்வைக்கு இடமில்லை.

பெண்களின் தவறுகள் என்று எதுவுமே இல்லை. இவர்களும் மற்றெல்லோரையும் போலப் பொது இடங்களில் நடமாடும் உரிமை பெற்றவர்களே. இவர்கள் தவறொன்றும் புரியாதவர்கள். ஆதலால் குற்றவாளிகள் என்று தம்மை நினைக்கத் தேவையில்லை. காலங்களோ மாறியபடி இருக்கின்றன. ஆகவே நீங்கள் பையன்களின் பாதுகாப்பை நாட வேண்டுவதில்லை. உங்களை அவர்கள் சகோதரிகள் போல நடத்த வேண்டும் என்பதுமில்லை. நீங்களும் மனிதர்கள் என்று கருதி உங்களை இவர்கள் மதிக்கப் பழக வேண்டும்.

ஏன் பெற்றோர்கள் பெண்களைப் பேதமாக நடத்துகிறார்கள்?

நாம் சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம். சுமார் ஒரு தலைமுறைக்கு முன்பு பெண்கள் குறைந்த அளவு உரிமைகளையே அனுபவித்து வந்தார்கள். பெற்றோரும் பெண்களின் கல்விக்குப் பணம் செலவிடத் தயாராயில்லை. அந்த நாட்களில் பெண்கள் பெற்றோராலும் சகோதரர்களாலுமே பராமரிக்கப்பட்டு வந்தார்கள். பணத்தை இப்பெண்களின் திருமணச் செலவுக்கென்றே சேமித்து வந்தார்கள்.

பெருமளவிலான பெண்கள் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வாழ்க்கையிலோ காதல் முயற்சியிலோ தம்மால் போராடி வெல்ல முடியாது என்று இவர்கள் நம்பினார்கள். இவர்களுக்கு வேறொரு வழியும் இருக்கவில்லை.

தற்போதைய பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் சமமாகவே நடத்துகிறார்கள். பெற்றோரும் தமது பெண்களும் தமது ஆண்பிள்ளைகளைப் போலவே முன்னேற்றம் காணவேண்டும் என்று விரும்புகிறார்கள். சில வேளைகளில் பெண்களுக்கே கூடிய உரிமையும் வழங்குகிறார்கள்.

ஆனாலும் சில பிற்போக்குவாதிகள் இன்னமும் கூடத் தமது பெண்பிள்ளைகள் நன்றாகவே முன்னேற வேண்டுமென்று கருதிய போதும் பாதுகாப்பு நிமித்தம் வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டுமென்று கருதுகிறார்கள். ஆண்களின் வாசனை வீசிவிடக் கூடாதென்று மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.

கூடிய அளவில் இதனைப் பெரும் பிரச்சினையாகப் பெண்கள் எண்ணுவதில்லை. அநேக பெண்கள் தம்மையொத்த பெண் பிள்ளைகளுடனம் குடும்ப உறப்பினர்களுடனும் நேரத்தைச் செலவிடவே விரும்புகிறார்கள். வேறு சிலர் தாம் முன்பு விரும்பிப் பழகிய பெண்களையே வெறுத்தொதுக்க ஆரம்பிக்கிறார்கள். வெறுக்க முக்கிய காரணம் இவர்கள் கொண்டாட்டங்களுக்கு போவதற்கும் ஆடவ நண்பர்களைக் கொண்டிருப்பதற்கும் அனுமதி பெற்று இருப்பதே. இதனால் இப்பெண்கள் தாம் பிற பெண்களால் முட்டாள்களாக மதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடப்படுவோமோ என்று நினைப்பதால் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

இந் நிலையைப் பெற்றோர்களுடன் கலந்துரையாடினால் அவர்கள் கூறுவது இது தான், 'இது இந்நாளில் பெண்பிள்ளைகளுக்குப் பாதுகாப்பானதாகவில்லை" என்பதே. ஓரளவுக்கு இது உண்மையும் கூட. அதே வேளை ஆண்களுக்கும் கூட இது பொருந்தும்.

பெண்களுக்கு எப்படிக் கூடுதலான சுதந்திரம் கிடைக்கிறது?

பொதுவாக பொறுத்திருத்தல் வேண்டும். மேற்படிப்பிற்குப் போகுமுன்போ அல்லது தகுதியான உத்தியோகம் கிட்டு முன்போ வீட்டை விட்டு வெளியேறக் கூடாது.

நல்லதொரு வழி தகுந்தவொரு உறவுக்காரப் பெண்மணியைத் தெரிந்தெடுப்பது. அப்பெண்மணி உங்கள் பெற்றோரைக் காட்டிலும் வயது குறைந்தவர்களாக இருக்க வேண்டும். அல்லது மகளொருத்தி இல்லாதவளாக இருத்தல் வேண்டும். உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இடையே சமநிலைப்படுத்தபவராக இவள் அமையலாம். தங்கள் மகளுக்கு ஏன் அதிக சுதந்திரம் வழங்கவில்லை என்பதை தமது மனதைத் திறந்து கூறக்கூடும். நீங்கள் வீட்டிற்கு வெளியே இருக்கையில் உங்களுக்கான பொறுப்பை ஏற்பவராக இருத்தல் கூடும்.

அல்லாது போனால் நீங்கள் வீட்டில் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டிருந்து உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் தீராத வேதனையாகவே இருப்பீர்கள். ஆகவே இத்தகைய ஏற்பாடு நல்லது தானே. உங்கள் பெற்றோரின் புகைப்படத்தில் கவலை தோய்ந்த முகத்தைக் காணும் போது தீராத வேதனையைச் சில ஆண்டுகளின் பிறகு நீங்கள் அடைவீர்கள்.

அபாயங்களும் போதை மருந்தகளும்

பருவமானவர்களுக்கு கூடிய சுதந்திரம் அளிப்பது தீங்கு விளைவிக்கும் என்று பெற்றோர் கருதுவதேன்?

ஏனெனில் பருவமானவர்கள் தான் ஆபத்துக்களைச் சந்திக்கக் கூடியவர்கள். உங்களுக்கு இது தெரியாதா? ஏன் பருவமானவர்கள் ஆபத்தைச் சந்திக்கத் துணிகிறார்கள்?

வழக்கம் போல ஓமோன்களே காரணம். வயது போய் விட்டதும் காரின் ஓட்டும் வேகம் குறைந்து போவதையும் அதிக வேகத்தில் ஓடும் வாகனத்தைச் சமாளிக்க முடியும் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலையையும் அடைந்து விடுவீர்கள். இருந்த போதிலும் நிங்கள் பழைய நீங்கள் தான்.

பருவமானவர்கள் கூடிய வேகத்தில் செயற்படும் அநுசேதனம் இருந்த போதிலும் ஆபத்துக்களைச் சந்திக்கத் துணிவதில்லை. எல்லாப் பருவமானவர்களும் எல்லாக் காலங்களிலும் அப்படி இருப்பதில்லை. இதற்குப் பின்னணியில் காரணம் ஒன்றுண்டு. ஆபத்துக்களைச் சந்திக்கத் துணிவதில்லை. எல்லாப் பருவமானவர்களும் எல்லாக் காலங்களிலும் அப்படி இருப்பதில்லை. இதற்குப் பின்னணியில் காரணம் ஒன்றுண்டு. ஆபத்துக்களைச் சந்திக்கும் போது எல்லைகளை விஸ்தரிக்க வேண்டியிருக்கும். புதிய விவகாரங்களைச் செய்ய வேண்டும். அதாவது துணையாக ஒருத்தியை வரிந்து கொள்ள வேண்டும். முதுமை அடைந்தவர்கள் துணையாக ஒருத்தியைக் கவர்வது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவர்ளால் பெரிய ஆபத்துக்களைச் சந்திக்கும் ஆற்றல் அற்றுப் போகிறது. ஆபத்துக்களில் சிக்கி முட்டாள்களாக இவர்களால் இயலாது.

இத்தகைய துணிவுகள் எல்லாம் பெரும்பாலும் பருவமானவர்களாலும் வயது வந்தோரில் அசாதாரண நிலையை அடைந்தவர்களால் மட்டுமே இயலும்.

பருவமானவர்களுக்கு இது சாதாரண சம்பவமே. இவர்களுக்குத் தான் எவ்வித ஆபத்தையும் சந்திக்கும் விருப்பம் இருக்கிறது. ஏனெனில் உலகில் தமக்கென ஓரிடத்தைக் கைப் பிடித்துக் கொள்ள இயலும் சில ஆபத்துக்களைச் சந்திக்க உந்தப்படுகிறார்கள். ஏனெனில் பாதுகாப்பான இவ்வுலகில் இவையெல்லாம் சிரமமானவை அல்ல. ஆபத்தானவற்றில் ஈடுபட அவர்களுடைய உடல் இடமளிப்பதில்லை.

ஆபத்தானவற்றைச் சந்திப்பதனால் உள்ள தீங்கு தான் என்ன?

ஆபத்தைச் சந்திப்பதனால் உள்ள தீங்கு என்னவென்றால் சிலவேளை நிரந்தர பாதிப்புக்குள்ளாகி விடுவீர்கள். பருவமான இளைஞர்களே விபத்துக்களில் முக்கியமாகப் பங்குபற்றுபவர்கள். விபத்துக்கள் பெரும்பாலும் மரணத்தில் முடியும். விபத்து மரணங்கள் கூடுதலாக இளைஞர்களையே பாதிக்கிறது.

மற்றைய ஆபத்து என்னவென்றால் சில தீய பழக்கங்களில் மாட்டிக் கொள்கிறார்கள். இத்தகைய தீய பழக்கம் வாழ்நாள் முழுவதுமே கூடவே தொடர்ந்து இருந்து விடும். உதாணரமாகச் சிகறெட் பழக்கம்.

பருவமானவர்களுக்க சிகறெட் ஏன் ஆபத்தானது?

அநேகமான தீய பழக்கங்களில் ஈடுபடுபவர்கள் பருவமானபோதே ஆரம்பித்து விட்டவர்களே ஆவர். சற்று வயது வந்தபிறகு பழகத் தொடங்கியோர் மிகச் சிலரே.

இதனை நன்கறிந்த சிகறெட் உற்பத்pயாளர்கள் பருவமானவர்களையே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். செல்வந்த நாடுகள் புகைப்பிடிப்பதற்கு எதிராக செயல்படுவதால் புகைபிடிப்போரின் தொகை குறைந்துள்ளது. இதனால் தான் இந்நிலையங்கள் தங்கள் கவனத்தை எல்லாம் கீழைத் தேயங்களுக்குத் திருப்பியுள்ளனர். ஏனெனில் தமது வியாபாரத்தை நிலை நிறுத்த பருவமானவர்களே ஆபத்துக்களைத் துணிவுடன் எதிர்நோக்கக் கூடியவர்கள். நீண்ட கால ஆரோக்கியத்திற்கான ஆபத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

காலப் போக்கில் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடவோ மாற்றவோ முற்பட்டால் பொல்லாத போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடுவார்கள்.

சிகறெட்டிலுள்ள பெரும் ஆபத்து என்னவென்றால் அதிலுள்ள சிறுதுணிக்கைகள் தொண்டை மட்டத்தோடு நில்லாது மற்றைய மாசுகளைப் போல நகரக் கூடியவை. சிகறெட் துணிக்கைகள் இறுதியாக நுரையீரலை அடைகின்றன. இவையே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காதரணமாய் உள்ளன.

மிகுந்த இளம் வயதில் புகைப்பழக்கத்தை ஆரம்பித்தால் உங்கள் வளர்ச்சியும் குன்றி முழு வளர்ச்சியையும் அடையாமல் போய்விட நேரிடும். சிகறெட் புகையிலையோடு கஞ்சாவைக் கலந்து புகைத்தால் உத்வேகம் அதிகரிக்கும் என்று கருதுகிறார்கள்.

சிகறெட் போலவே மதுபானமும் பழக்கமாகக் கூடியதுதானா?

ஆம் என்றும் கூறலாம். இல்லை என்றும் கூறலாம்.

சிலர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி மதுவுக்கே அடிமையாகி விடுகின்றனர். அன்றாடம் மதுபானம் இல்லாமல் அவர்களால் இருந்து கொள்ள இயலாது. மதுபானப் பழக்கம் ஒரு நோயே. மனக் கட்டுப்பாடற்ற நிலையல்ல.

சாதாரணமாக மதுபானம் உட்கொள்பவரெல்லாம் மதுவுக்கே அடிமை ஆவதில்லை. மதுவுக்கு அடிமையாவதற்கு பரம்பரையலகு காரணமாகிறது. இது குடும்பத்தினருக்கு பரவக் கூடியது. பரம்பரையலகு சம்பந்தப்படாதிருந்தால் எவ்வளவு தான் மதுபானம் அருந்தி வெறி கொண்டாலும் குடிப்பழக்கம் ஏற்பட்டு விடாது. மதுபானம் குடிப்பதில் பெரும் விருப்பு ஏற்படாது. அதே வேளை பரம்பரை அலகு இருப்பின் குடிக்க ஆரம்பிக்காவிட்டாலும் எந்நேரமும் மதுவுக்கு அடிமையாகக் கூடும்.

மதுவுக்கு அடிமையானோருக்கு நடப்பது இது தான். இவர்களுடைய ஈரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலிலள்ள நச்சுப் பொருள்களை நீக்கும் பணியைச் செய்வது ஈரலே. இவர்களுடைய ஈரல் கடும் செங்கபில நிறத்திலிருந்து மென்சிவப்பு நிறத்தை அடைகிறது. இவர்களுடைய ஈரல் செயலிழந்து போகிறது. இந்நிலை அடைந்து விட்டால் குடிப்பதை முற்றாக நிறுத்தி விட வேண்டும். அப்பொழுது தான் ஈரலைப் பாதுகாக்க இயலும். ஒரு விதமாகக் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டாலும் கூட மீண்டும் குடிக்கத் துடிப்பர். சிறிதளவு குடிப்பது என்று ஆரம்பித்து மயக்கம் அடையும் வரையும் தொடர்ந்து குடிப்பர்.

குடிக்கு அடிமையான ஆண்கள் எதிர் நோக்கும் மற்றொரு பிரச்சினை இவர்கள் பாலியல் உறவு கொள்ளவே தகுதியற்றவர்கள் ஆகிவிடுவார்கள். முதல் கட்டமாக இவர்கள் மதுவருந்தி வெறிகொள்வார்கள். மிகவும் முற்றிய நிலையில் நிரந்திர வெறியர்கள் ஆகிவிடுவார்கள்.

சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் போதைவஸ்துக்கள் என்ன?

கஞ்சாவும் அதிலிருந்து பெறப்படும் போதைவஸ்துவுமே.

கஞ்சா இலைகளிலிருந்து பெறப்படும் பசைப்பொருள். இது கஞ்சா இலைகளைக் காட்டிலும் செறிவு கூடியது. இதனை புகையிலையோடு கலந்து புகைப்பார்கள். வேறு விதமாகவம் பயன்படுத்துகிறார்கள். பசையைப் பாலோடு கலந்து கரைத்து உட்கொள்வார்கள். வெறியேற்பட சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும். அதுவரை தொடர்ந்தும் குடித்துக் கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக பெரும் தொகையான அளவினை உட்கொண்டிருப்பார்கள்.

இதன் விளைவு என்னவென்றால்; ஒரு கனவு நிலை, சிதறுண்ட காலமும் இடமும் சுய நினைவுக்கும் தடுமாற்றத்திற்கும் இடையில் மிதக்கும் நிலை மாறி மாறி ஏற்படும். மதுபானம் அருந்திய நிலைக்கும் இதற்குமிடையே பாரிய மாற்றம் தென்படும். சிலருக்குத் தலை சுற்றுவதும் உண்டவை வாய்வழி வெளிப்படும் நிலையும் காணப்படும்.

போதை ஏறிய நிலையில் வாகனங்களைச் செலுத்தக் கூடாது. சில சாரதிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றியே வாகனத்தைச் செலுத்துவார்கள். பாதையில் போவோருக்கு என்ன தான் நடக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

மிகுந்த பாதகத்தை விளைவிக்கும் போதைப் பொருள்கள் தான் என்ன?

அபினிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் எனக் கூறுவர். இவற்றை ஹிறோயின் (ர்நசழin), மோர்பீன் (ஆழசிhiநெ)

இவற்றிலுள்ள குறைபாடு என்னவென்றால் எவரும் மிக விரைவிலேயே இவற்றிற்கு பழக்கப்பட்டு விடுவார்கள். அல்லது அடிமையாகி விடுவார்கள். இதற்கு அடிமையானோரை மாற்றி விடுவது மிக மிகக் கடினமான காரியம்.

முதலில் குறிப்பிட்ட அளவிற்குப் பழக்கப்பட்டு விட்டால் அளவை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு உந்தப்படுவார்கள். இது மேலதிகமாகப் பயன்படுத்தி விட்டோம் என்ற நிலை வரை போகும். சிலவேளைகளில் இந்த போதை வஸ்துகளுக்க அடிமையானோர் ஊசி மூலம் ஏற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு உந்தப்படுவார்கள். இதனால் HIV சுலபமாகப் பரவும்.

வேறெதும் வஸ்த்துக்களும் உண்டா?

இருவகை மருந்துகள் - உற்சாக மூட்டிகளும் சாந்தப்படுத்துபவைகளும், ஆகாயம் வழியாக சுமந்து செல்லவைப்பவையுமே.

இவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன?
1. இவற்றிலொன்றை எப்பொழுதும் நம்பியிருப்பது.
2. உங்கள் உடலையும் மனதையும் பாதிக்கும்.
3. இவற்றிற்குத் தரக் கட்டுபாடு இல்லை. ஏனெனில் சட்ட விரோதமானவை.
4. இதன் பிரயோகத்தால் பொலிசாரிடம் சிக்க வேண்டியிருக்கும்.


பெற்றோருக்கு :

பருவமானவர்கள் பூர்வீகத்திலிருந்து உயிர்வாழ்வோரே

எதனை வைத்து வாழ்ந்து வருகிறோம்?

உங்களுக்கே உரித்தான பருவமாகும் நிலை.

அதோடு உங்களுடைய பருவமான பிள்ளைகளைக் கண்டு உயிர் வாழ்கிறீர்கள்.

உங்கள் அனுபவங்களை எப்படி வரைந்து காட்ட உள்ளீர்கள்?

உங்களுக்குக் குழந்தைகள் பிறக்குமுன் குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிப்படித்த புத்தகங்கள் நினைவிருக்கிறதா? உங்கள் இயற்கையான இயல்புகள் எல்லாம் சரியானவையே. குழந்தைகளோடு ஊடாடுவது பருவமானவர்களோடு ஊடாடுவதைக் காட்டிலும் சுலபமானது. இதிலுள்ள முக்கிய விஷயம் - குழந்தைகள் உங்களை மதிப்பீடு செய்வதோ சண்டையிடுவதோ நீங்கள் செய்த தவறுகள் இவை என்று குற்றம் சாட்டுவதோ இல்லை. ஆகவெ எவ்வித பாசாங்குகளையும் காட்டாமலேயே குழந்தைகளுடன் உறவாட முடியும். என்ன செய்வது என்று தெரியாத போது கேலியும் புரியலாம்.

பருவமானோரின் பிரச்சினைகளை அணுகும் போது பெற்றோர் அதிகாரம் என்னும் போர்வைக்குள் ஒழிந்து கொண்டு வித்தியாசமான முறையில் செயற்பட வேண்டியிருக்கும். அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. நாம் இருப்பது போலவே தொடர்ந்து இருப்போமாயின் பெரிய நிம்மதி ஏற்படும்.

ஒரே விஷயத்தைத் தம்பிள்ளைகளுக்குத் தருவது பழைய சம்பிரதாயமாகும். மனிதரெல்லாம் ஒரே மாதிரியானவர் அல்ல. விதவையானவர், பிரிந்து வாழ்பவர், விவாகரத்து செய்து கொண்டவர் எல்லாம் தனியாகவே உழைத்து வாழ வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் பெற்றோர் மாற்றாந் தாயாகவோ தந்தையாகவோ உள்ளனர். வெறுப்பில் மிதக்கும் பருவமானவர்களை வழிப்படுத்த விதிமுறைகளை வகுக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் பெற்றோர் தமது பிள்ளைகள் பாடசாலை விடுதிகளில் இருப்பதனால் விடுமுறை நாட்களில் மட்டுமே காணக் கூடியதாக உள்ளனர். இதனால் இவர்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் பெருமளவில் ஏற்படுவதில்லை. உண்மையில் உலகம் புதுமைகள் நிறைந்திருப்பதால் சிறுவர்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பருவமானவர்களுடைய தேவைகளைப் பெற்றோர்கள் நன்குணர்ந்து செயற்பட்டால் எல்லாமே தீர்வினை எளிதில் எட்டி விடும். தனிமையில் வாழும் பெற்றோர்கள் பருவமானவர்களிடம் இறுகப் பற்றுக் கொண்டிருந்தாலும் எல்லாம் சரியாகவே நடைபெற்று விடும். உங்கள் பருவமான பிள்ளைகளுக்கு விஷயங்களை நன்கு விளங்கிக் கொள்ளப் போதிய வாய்ப்பைத் தந்தால் எல்லாவற்றையும் நன்றாகவே விளங்கிக் கொள்வார்கள்.

பெற்றோருக்கு எது செய்வது சிறந்த பலனை அளிக்கும் என்று தெரியாது. 'எனக்கு இது விளங்கவில்லை. நீ என்ன நினைக்கிறாய்?" என்று கூற முற்பட்டால் பருவமானவருக்கு அமைதியைத் தரக் கூடியதாக இருக்கும். காலணி தவறுதலாக மறுகாலில் புகுத்தப்பட்டிருந்தால் பருவமானவர் பொறுப்புடன் செயற்பட்டு சரி செய்து கொள்ள வேண்டும். உண்மையில் பெற்றோர் தமது விசேஷமான ஆற்றல்களை பருவமானவர்கள் மீது வெளிப்படுத்துவதில் பூ10ரிப்படைகிறார்கள். தமது தீர்க்கமான பார்வையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்குச் சகல ஆற்றல்களும் ஏற்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் வளர்த்து வருகிறார்கள்.

பருவமானவர்களோடு ஊடாடுவதற்கு வேறேதும் நல்ல முறைகள் உள்ளனவா?

எவருடனும் சிறந்த முறையில் உறவு கொள்ள வேண்டுமாயின் உறவு ஒரு தலைப்பட்சமாக இருக்கக் கூடாது. பருவமானவரும் ஆலோசனை வழங்க இயலும் என்று கருத வேண்டும். சிறப்பான பெற்றோர் பருவமானவர் உறவு எனின் பருவமானவர்கள் தாம் தமது பெற்றோரைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். இப்படி நினைக்க பருவமானவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

இதன் கருத்து உங்களுடைய (பெற்றோர்) போக்கை முற்றாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதில்லை. பருவமானவர் கடைப்பிடிப்பவை தவறானவை என்று தெரிந்த பிறகு அவற்றை அங்கீகரிக்க வேண்டுமென்பதில்லை. பருவமானவர் நீங்களும் தங்களைப் போலவே இருக்க வேண்டுமென்று விரும்புவதில்லை. பருவமானவருக்கு அச்சமும் தர்மசங்கடமும் ஏற்படுத்தி விடும். பெற்றோரும் தம்மைப் போல ஆரம்பித்தால் அவர்கள் உங்களையும் தங்கள் குழாத்தில் இணைத்து கொண்டவொரு நல்ல நண்பர் என்றே கருதுகின்றனர். சுலபத்தில் திருத்திவிட முடியாததொரு மூத்த உறுப்பினர் என்று உங்களைக் கருதுகின்றனர். இப்பண்புகளொடு தாம் கடந்து வந்த பருவமான நிலையின் போது கடைப்பிடித்தவற்றையே நீங்களும் கடைப்பிடித்து நடந்து செல்ல வேண்டுமென்று விரும்புகின்றனர். பெற்றோரிடமிருந்து ஓரளவு அடக்கு முறையையும் ஆத்திரத்தையும் எதிர் பார்க்கிறார்கள். இது அவர்களின் இயற்கையான சுபாவம் என்றே நம்புகிறார்கள். பெற்றோர் தமது உணர்ச்சிகளை மூடிவைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் பருவமானவர்கள் விரும்புவதில்லை. எந்த நேரத்திலும் வெடித்துக் கொப்பளிக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறார்கள்.

பருவமானவர்கள் தமது பெற்றோரை வேண்டாம் என்று நினைக்கிறார்களா?

இல்லை. அவர்களுக்குப் பெற்றோர் தேவை. ஏனெனில் அவர்கள் சிறுபிள்ளை நிலைக்கும் வயது வந்தோர் நிலைக்கும் இடைப்பட்ட இடத்தை வகிக்கிறார்கள். போராட்டங்களுக்கெல்லாம் நடுவே வழிதவறியவர்களோ அதே வேளை தங்களைத் தனியாக விட்டு விட வேண்டும் என்றோ பருவமானவர்கள் நினைக்கிறார்கள். தமக்கு மனவைராக்கியம் இல்லாத படியால் தமக்கு சில போதனைகள் ஊட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

பருவமானவரோடு மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளலாமா?

சில வேளைகளில். ஆனால் எப்பொழுதும் இல்லை. பெற்றோர்களிலிருந்து சிறிதளவு மாறுபட்டு இருக்கின்றார்கள். உங்களுடைய தீர்மானங்கள் நியாயமானவையாகவும், பிள்ளைகளும் அவற்றை ஏற்பதாயிருந்தால் உங்களுடையவையும் பிள்ளைகளுடையவையும் ஒன்றாகவே அமைந்திருக்கும். ஆனால் வீட்டில் நகைச் சுவையான அணுகுமுறையாக இருக்கக் கூடும். நகைச் சுவையானவை நீண்ட காலம் தவறான எண்ணம் கொண்டு நிலைக்க விடாது.

ஏன் பருவமானவர்கள் காலந்தாழ்த்தி அதன் காரணமாகப் பிந்தி விடுகின்றார்கள்?

மெதுவாக அசைந்து செல்வதும் பிந்துவதும் உங்கள் நிலையை உறுதிப்படுத்தவே ஆகும். பெற்றோருக்கு மாறாக நடப்பதும் சில ஆபத்துக்களை எதிர்நோக்குவதும் பருவமானவர்களின் சுபாவம் ஆகும்.

பெற்றோரின் முடிவுகள் நியாயமானவையாக இருந்தும் பருவமானவர் அவற்றை எதிர்க்கப் போதிய வாய்ப்பு அளிக்காத போது பிரச்சினை பெரிதாகி விடுகிறது. இதனால் பருவமானவர்கள் வேண்டுமென்றே நேரத்தை கடத்துவதிலும், பாPட்சைகளுக்கோ, பாடசாலைத் தேர்வுகளுக்கோ சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. இது பெற்றோரைப் புண்படுத்தும். பருவமானவர்கள் அநேக வாய்ப்புகளை நழுவ விடுவார்கள். பாPட்சை நாட்களில் பாடசாலை பஸ்ஸை வேண்டுமென்றே தவறவிடுவார்கள். குழம்பிய நிலையில் அறையை வைத்திருக்க வற்புறுத்துவார்கள்.

செய்வது என்ன? இவை எல்லாவற்றோடும் வாழப் பழக வேண்டும்.

நீங்கள் விரும்பினால் சத்தம் போட்டுக் குழப்புங்கள். இங்கு இது தான் தீங்கொன்றும் விளைவிக்காத புரட்சியாகும். இது செய்ய வேண்டிய உன்னத காரியமில்லை என்பது இவர்களுக்குத் தெரிந்ததே. பருவமானவர் வெறியோடு போய் தமது அறையைத் துப்பரவு செய்வார்கள். முக்கியமானதொன்றைச் செய்ய ஆரம்பிக்கும் போது தாங்கள் ஒரு தொடர் வண்டியை (வசயin) பிடிப்பதற்குச் செல்ல வேண்டுமாயின் விரைவாகவே புறப்படுவார்கள். கல்வித் திணைக்களம் நடத்தும் பாPட்சையில் மோசமாக செய்வதற்கு நடு நடுங்குவார்கள்.

எங்கள் பிள்ளைகள் வெளியே சென்றால் பெரிதும் கவலைப் படுகிறோம்

கவலைப்படுவது இயற்கையே. நாம் அவர்கள் மீது அக்கறை காட்டுகிறோம் என்பதன் அறிகுறி அதுவாகும்.

எக்காலமும் அவர்களைப் பெற்றோர் பாதுகாப்பது கடினம். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வழி தெரியாது திணறுவார்கள். ஆகவே தான் அவர்கள் வீட்டில் இருக்கும் போதே ஓரளவு சுதந்திரத்துடன் வாழ்ந்து தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லை எனில் பின்பு பல சங்கடங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதற்கு ஒரே வழி இவர்கள் ஓரளவுக்காவது வெளியிலிருந்து தம்மைச் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது அவ்வளவு சுலபமானது அல்ல. நீங்கள் எல்லை இல்லாமல் கவலைப்பட்ட படியே இருக்க வேண்டும். ஆனாலும் கூட இது ஆபத்தானதொன்று தான்.

நாம் ஏன் ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டும்?

உலகெங்கும் வீட்டிற்கு வெளியே வாழ்பவர்கள் அந்நியர்களுடன் பழகும் போது அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தெரிந்தது தானே? காலமெல்லாம் பெற்றோரின் பராமரிப்பிலும் கண்காணிப்பிலும் உள்ளவர்கள் இத்தகைய நிலைமைகளைச் சமாளிக்க இயலாது இருப்பார்கள். இவர்களுக்கு வீதியில் செல்வோரைத் தவிர்ப்பது எப்படி, யாரையுமே கவனிக்காமல் வீதி வழியே விரைவாக நடந்து செல்வது எப்படி, எந்நேரம் அழகாகக் காட்சி தருவது, எந்நேரம் அழகின்றித் தோற்றமளிப்பது போன்றவை எல்லாம் தெரியாமல் திணறுவார்கள்.

அனுபவத்திலிருந்து தம்மைப் பாதுகாக்கப் புறப்படுவோர் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இவர்கள் பாடங்களைக் கற்று கொள்வதெல்லாம் பல கஷ்டங்களின் ஊடாகத் தான்.

ஆகவே பருவமானோருக்கு உரிமைகள் பலவற்றையும் வழங்கி இவர்களின் விருப்பப் படியே நடக்க விட்டால் இவர்கள் வலியவர்கள் கூறியபடியே நடக்க வேண்டியிருக்கும். வலிமை பொருந்திய மக்கள் பெற்றோராய் இருக்க வேண்டுமென்பதில்லை.

எங்கள் பெண்கள் ஆண்களுடன் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டால்...

எமது பெண் பிள்ளைகளைப் பாதுகாக்க இரு வழிகள் உண்டு.

ஒன்று எமது பெண்களை ஆண்களிடமிருந்து பிரித்து வைத்தல். இது உடனடியான பிரச்சினைக்கு தீர்வாகும். ஆனால் இது நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வாகாது. இவை அனைத்தும் ஏற்படுவது இப் பெண்கள் தாமாகவே தனியே வாழ முற்படும் போது தான். ஆண்களுடன் ஆன பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டோம் என்று கூறிக் கொள்வதெல்லாம் தமது பெற்றோரைத் திருப்திப்படுத்தவே. ஆனால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முற்று முழுதாகச் சமாளிக்கவல்ல. காட்சியில் தோற்றமளித்த இளைஞன் தனது அதிகாரத்தைச் செலுத்துவான். இதுவும் பெற்றோரைப் போன்றதொன்றே.

இரண்டாவதாக உங்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்தும் ஓரளவு சுதந்திரத்தைப் பெண்களுக்கு வழங்குங்கள். ஆண்களால் வருவனவற்றைச் சமாளிக்கக் கூடிய உத்திகளை இவர்களுக்குக் கற்றக் கொடுக்க வேண்டும். இது தம்மைப் பெண்கள் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை ஊட்டும். ஆண்களுக்கு கண்மூடித்தனமாகக் கீழ்ப்படியும் நிலையை மாற்றியமைக்கும். இவர்கள் கைக் கொள்ளும் உறவுமுறைகள் எல்லாமே சுய கௌரவத்தின் அடியாகவே இருக்கும். ஆம். சிறு சிறு பிரச்சினைகளும் மன வேதனைகளும் ஏற்படத்தான் செய்யும்.

மணப் பெண்கள் மீது பிரயோகிக்கின்ற வன் முறைகளை இக்காலத்தில் சில குடும்பங்களில் காண்கிறோம். இவர்களிடம் எதிர்பார்ப்பது கற்பும் பணிவுமே. இவளும் வலிமையுடையவளாயிருந்து இத்தகைய நிலைமைகளைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

தாங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று கருதும் வலிமையுடைய பெண்கள் ஆண்களின் நட்பை எளிதில் அடைய முடிவதில்லை. பையன்களைப் பற்றிப் பெற்றோர் கொண்டிருக்கும் அச்சத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம். பையன்கள் இத்தகைய பெண்களோடு தமது திருவிளையாடல்களைப் புரிய இயலாது என்று நன்றாகத் தெரிந்துள்ளார்கள்.

எமது பருவமானவர்களைப் பொருள் hPதியிலும் பொறுப்புள்ளவர்களாக்குவது எப்படி?

ஒரு நல்ல வழி. வாரந்தோறும் ஒரே அளவு பணத்தைச் கைச் செலவுக்காகக் கொடுத்து அவற்றைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்த வேண்டும். இவர்களோடு அன்புடன் இருக்கும் போதும் வெறுப்புடன் இருக்கும் போதும் இத் தொகையில் மாற்றம் செய்யாதிருக்க வேண்டும். இது ஒரு மாதச் சம்பளம் போன்றதே. இத்தொகையிலிருந்து தான் இவர்கள் தமக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுடைய செலவினங்கள் சிலவற்றிற்கு உங்கள் சொந்தப் பணத்தைக் கொடுக்க முற்பட்டால் நிலைமையைச் சீர்குலைத்து விடும். அவர்கள் எப்படிச் செலவிடுவது எனவும் எதனை வாங்குவதெனவும் திட்டம் இடவே முடியாது.

குடும்பச் செலவினங்களை அவர்களோடு கலந்தாலோசிப்பதும் நல்லதே. உதாரணமாக மாதம் மாதம் செலுத்த வேண்டிய பெரிய செலவினங்களைக் கூற வேண்டும். இந்நிலையில் இவர்களின் சில கோரிக்கைகளை நிறைறே;ற இயலுமா என்று இவர்களையே கேட்க வேண்டும். பண நிலை பற்றிய இரகசியங்களைக் கூறாது மறைப்பதால் பெற்றோரிடம் நிரம்பப் பணம் தேங்கி இருக்கிறது என்று பிள்ளைகள் நினைக்கக் கூடும். தாம் விரும்பும் எதனையும் வாங்கித் தரக் கூடிய நிலையில் பெற்றோர் இருக்கிறார்கள் என்று பிள்ளைகள் நினைக்கக் கூடும்.

பருவமானவரிடம் உங்கள் பண நிலையை மறைத்து வைத்தீர்களாயின் இவர்கள் ஒரு போதும் பண விஷயத்தில் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ள மாட்டார்கள்.

எமது பிள்ளைகள் எம்மிடம் முன்பு போலப் பற்று உடையவராக இல்லையே என்பது வருத்தத்தைத் தருகிறது அல்லவா?

அன்பான பெற்றோரை சிறு பிராயத்தில் கட்டித் தழுவ வேண்டுமென்று விரும்பிய தமது பிள்ளைகள் பருவமானது எட்டி நிற்க எத்தனிப்பது பெற்றோருக்கு வேதனையைத் தருவது உண்டு. இது எல்லாப் பெற்றோருக்கும் ஏற்படுவது தான். சிறு பிள்ளைகளாய் இருந்த போதும் பருவமான போதும் பிள்ளைகள் மீது பெற்றோருக்கிருந்த பாசம் ஒரே அளவானதாகவே இருந்த போதிலும் பிள்ளை காட்டும் வித்தியாசம் பெற்றோருக்கு பெரும் வேதனையே தரும்.

நாம் இதனை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். பருவமானவர்கள் தமக்கென வயது வந்தவர்களின் குழாத்தில் இடம்பெற இடம் ஒதுக்கத் தலைப்படுவார்கள். முன்பு இவர்கள் தம்மைக் குளியலறையில் குளிப்பாட்ட அனுமதித்தவர்கள் பருவமானதும் தனிமையை விரும்பி முன்பு போல அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இதனை முதலில் ஏற்றுக் கொள்ளப் பெற்றோருக்கு இயலாது. ஆனால் நிலைமை மாறி விட்டது. வலிமையும் சுதந்திரமும் கொண்ட இளைஞர்களைப் பெற்றோர்கள் நம்புகிறார்கள். இப்படித்தான் எல்லாமே நடைபெறுகிறது.

---------------------------------------------------