கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கந்தன் கருணை  
 

என். கே. ரகுநாதன்
அம்பலத்தாடிகள்
நடிகர் ஒன்றியம்

 

கந்தன் கருணை

என். கே. ரகுநாதன்
அம்பலத்தாடிகள்
நடிகர் ஒன்றியம்

தேசிய கலை இலக்கியப் பேரவை


--------------------------------------------------------------------------------

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடு - 100
நூற்பெயர் :கந்தன் கருணை
பதிப்பு :ஜனவரி, 2003
வெளியீடு :தேசிய கலை இலக்கியப் பேரவை
அச்சிட்டோர் :கௌரி அச்சகம்
முகப்பு ஓவியம் :இரா. சடகோபன்
விநியோகம் :சவுத் ஏசியன் புக்ஸ்,
வசந்தம் (பிறைவேற்) லிமிடட்,
44, மூன்றாம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி,
கொழும்பு -11.
தொலைபேசி : 335844.
வசந்தம் புத்தக நிலையம்
05, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
விலை: ரூபா. 200/=


Title :Kanthan Karunai
Edition :January, 2003
Publishers :Dheshiya Kalai Ilakkiyap Peravai
Printers ::Gowry Printers
Cover Design :R. Shadagopan
Distributors :South Asian Books,
Vasantham (Pvt) Ltd,
No. 44, 3rd Floor,
C.C.S.M. Complex,
Colombo -11.
Tel : 335844.
Vasantham Book House,
405, Stanly Road,
Jaffna.
ISBN No :955-8567-03-5
Price: Rs.200/=

--------------------------------------------------------------------------------

பதிப்பும் தொகுப்பும்
தமிழ் மக்கள் மத்தியில் நிலமானியத்தின் எச்ச சொச்சமான சாதியமைப்புக்கெதிரான 'சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்' என்ற பதாகையின் கீழ் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் விடுதலைப் போராட்ட வீரத்தில் விளைந்த பயிர்தான் 'கந்தன் கருணை' எனும் நாடகமாகும்.

சமத்துவத்தை சாதிக்க விரும்பிய எழுத்தாளர் கலைஞர் தோழர்களுக்கிடையிலான சந்திப்பின் விளைவு இந்நாடகமாகும்.

இந்நாடகத்தின் மூன்று எழுத்துருக்களை இங்கு தொகுத்துள்ளோம். எழுத்தாளர் என்.கே. ரகுநாதன் 11.12.1999ல் நூலாக வெளியிட்ட எழுத்துருவும் அம்பலத்தாடிகள் 1973.10.21ல் வெளியிட்ட நூலின் பிரதியையும், நடிகர் ஒன்றியம் ஆகியன தயாரித்த எழுத்துருக்களையும் இணைத்துள்ளோம். இதற்கு அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்கிய என்.கே.ரகுநாதன் அவர்களுக்கும் அம்பலத்தாடிகள், நடிகர் ஒன்றியக் கலைஞர்களுக்கும் எமது நன்றிகள்.

இந்நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்களினதும் தயாரிப்பாளர்களினதும் கருத்துக்களையும் நூலின் குறிப்புக்களையும் பின்னிணைப்பாக்கியுள்ளோம். அத்துடன் இந்நூலின் வெளியீட்டுக்காகவே கவிஞர் இ.முருகையன், தோழர் சி.கா. செந்திவேல், பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் கட்டுரைகளை எழுதித் தந்தனர். அவற்றைப் பின்னிணைப்பில் இணைத்துள்ளோம். இத்துடன் லண்டனிலிருந்து கொழும்பு வந்திருந்த கந்தன் கருணை நெறியாளர் அ.தாஸீசியஸ் அவர்களுடன் நேரில் கேட்டு எழுதிய கட்டுரையையும் பின்னிணைப்பில் இணைத்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.

இந்நூல் எமது 100வது வெளியீடாகும். எமது நாடகநூல் வெளியீட்டு வரிசையில் இது பன்னிரண்டாவது நூலாகும்.

அட்டைப்படம் வரைந்த ஓவியர் இரா. சடகோபனிற்கும் கணனி வடிவமைத்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும், இந்நூலை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும், திரு.எஸ்.இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.

நூல் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

தேசியகலை இலக்கியப் பேரவை
இல. 44, 3-ம் மாடி,
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி
கொழும்பு - 11
தொலைபேசி : 335844


--------------------------------------------------------------------------------

சமர்ப்பணம்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் உருவாக்கத்தில் முன்னின்றவரும் அம்பலத்தாடிகளின் கூட்டு முயற்சியால் காத்தான் கூத்து மெட்டில் உருவாகிய கந்தன் கருணை நாடக வார்ப்பில் பங்கு கொண்டு அதன் ஐம்பதுக்கு மேற்பட்ட அரங்கச் செயற்பாட்டிற்கு தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்றவருமான தோழர் கிருஷ்ணபிள்ளை சிவஞானத்தின் மறக்க முடியாத நினைவுகளுக்கும்

வெகுஜனப் போராட்டங்களில் முன்னிலைப் போராளியாகவும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை நாடகத்தில் நாரதராகவும் நடித்து அந் நாடகத்தின் வெற்றிக்கு தன் குரல் வளத்தாலும் நடிப்பாற்றலாலும் மக்கள் மத்தியில் ‘நாரதர் சிவராசா’ என வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட தோழர் குமாரசுவாமி சிவராஜாவின் நினைவுகளுக்கும்

கந்தன் கருணை நாடகத்தில் நவீன சூரனாகத் தோன்றி ‘டேய் ஆரடா கோவிலுக்கு நுளைய வந்திருக்கிறியள்’ என்று இறுமாப்பு வேடம் தாங்கி நடித்து மக்களின் பாராட்டைப் பெற்ற நவிண்டில் சிவராஜாவின் நிறைவுகளுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.


--------------------------------------------------------------------------------

உள்ளடக்கம்

பக்கம்கந்தன் கருணை (ஓரங்க நாடகம்) 01 - என். கே. ரகுநாதன்கந்தன் கருணை 30(காத்தான் கூத்துப்பாணி இசைநாடகம்)- அம்பலத்தாடிகள்கந்தன் கருணை 109
- நடிகர் ஒன்றியம்பின்னிணைப்பு -01 136
- இளைய பத்மநாதன் பின்னிணைப்பு -02 139
- இ. சிவானந்தன்பின்னிணைப்பு -03 141
- சி. மௌனகுருபின்னிணைப்பு -04 145
- க. சொக்கலிங்கம்பின்னிணைப்பு -05 146
- இ. முருகையன்பின்னிணைப்பு -06 152
- சி.கா. செந்திவேல்பின்னிணைப்பு -07 160
- எச்.எம்.பி. முஹிதீன்பின்னிணைப்பு -08 166
- பேராசிரியர் சி. மௌனகுரு
பின்னிணைப்பு -09 180
- ஏ.சி. தாஸீசியஸ்

--------------------------------------------------------------------------------

கந்தன் கருணை(ஓரங்க நாடகம்)என். கே. ரகுநாதன்

--------------------------------------------------------------------------------

சில குறிப்புகள்

+1969ஆம் ஆண்டில் இந்நாடகம் எழுதப்பட்டது.

+முதலில், நெல்லியடி அம்பலாத்தாடிகள் சார்பில் நண்பர் இளைய பத்மநாதன் இதனைக் காத்தான் கூத்துப் பாணியில் உருவமைத்து, வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடை ஏற்றினார். நாடகம், நூலாகவும் வெளியிடப்பட்டது. மிக அண்மையில் சென்னையிலும் மேடையேற்றப்பட்டது.

+கலாநிதி மௌனகுரு, அ. தாஸீசியஸ், குழந்தை ம. சண்முகலிங்கம், பிரான்சிஸ் ஜெனம் மற்றும் பல முன்னணி நாடகக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, நாடகத்தை மோடியுற்ற வடிவில் நெறிப்படுத்தி, பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு சரஸ்வதி மண்டபம் உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் மேடையேற்றினர்.

+சமகாலப் பிரச்சினையொன்றை முன்னெடுத்து அதனை மக்கள் மத்தியில் பரப்பியதன் மூலம், அந்தப் பிரச்சினையை வென்றெடுக்கச் சகல மக்களையும் அணி திரட்டிய சிறப்பு இந்நாடகத்துக்குரியது.

+“முற்போக்கு கலைஞர்களின் சிறந்த நாடகங்களில் பொதுப்படையாகவும், கருத்து ரீதியாகவும் அலசப்படும் பிரச்சனைகள், கந்தன் கருணை என்ற இந்த நாடகத்தில், குறியீடுகளுக்குள் புகலிடம் தேடாமல், மிகத் துல்லியமாகவும், கூர்மையாகவும், அழுத்தமாகவும் சித்திரிக்கப்பட்டு நேரடியாகவே மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது” என்று பேராசிரியர் கைலாசபதி இந் நாடகத்தைப் பற்றிக் கருத்து வெளியிட்டுள்ளார்.

+நாடகம் எழுதப்பட்டு மூன்று தசாப்தங்கள் நிறைவுற்ற போதும் அக்காலத்தவர்க்கு மூலப் பிரதியைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இன்றுள்ள இளம் தலைமுறையினர் நாடகத்தைப் பார்க்கவே சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இவற்றை ஈடுசெய்வதற்கு நாடகத்தின் மூலப் பிரதி தற்போது அச்சில் வெளிக் கொணரப்படுகின்றது. நாடகம் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கிய காரணமாகும்.

+“சாதி ஒழிந்து விட்டது!” என்று சிலர் முணுமுணுக்கிறார்கள். சிறுபான்மைத் தமிழர்களின் விடிவுக்காகவே தன் வாழ்நாள் முழுதும்பாடுபட்டுழைத்து மறைந்த தோழர் எம்.சி.சுப்பிரமணியம் நினைவாக அண்மையில் ஒரு சிறப்பு மலர் வெளிவந்திருக்கிறது. அம்மலரில் “துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்து கிடக்கின்றன: மரித்துவிடவில்லை!” என்று ஓர் அன்பர் கருத்தை முன்வைத்துள்ளார். இவற்றின் அடிப்படையில் எதிர்கால சமுதாயம் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள, இந் நாடகப்பிரதி தன் பங்களிப்பை நல்குமாக!

என்.கே.ரகுநாதன்
தெஹிவளை.
11.12.1999


--------------------------------------------------------------------------------

காட்சி ஒன்று


தேவலோகம்

பாத்திரங்கள் : நாரதர், முருகன், தெய்வானை.

(திரை விலகுகிறது. நாரதர் வருகை)

பாட்டு -
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை
வேலவா, வடிவேலவா - அங்கோர்
வெற்பு நொறுக்கிப் பொடிப் பொடியானது
வேலவா, வடிவேலவா!

சொல்லினைத் தேனிற் குழைத் துரைப்பாள்
சிறு வள்ளியைக் - குறவள்ளியைக் - கண்டு
சொக்கி மரமென நின்றனை தென்மலைக்
காட்டிலே, வடிவேலா!

கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
காதகன் கொடும்பாதகன் - சிங்கன்
கண்ணி ரண்டாயிரம் காக்கைக் கிரையிட்ட
வேலவா, வடிவேலவா!

வேலவா, வடிவேலவா, வடிவேலா வா! வடிவேலா வா!

(நாரதர் முருகன் கொலுவீற்றிருக்கும் அலங்கார மண்டபத்தை வந்தடைகிறார்)

முருகன்: நாரதரே, வருக! வருக!! ஏது, நாமார்ச்சனை பலமாக இருக்கிறதே! எங்கிருந்து வருகிறீர்?

நாரதர்: கந்தா, கடம்பா, கார்த்திகேயா, வெவினை தீர்த்தருளும் வேல்முருகா! அடியேன் லோகசஞ்சாரி என்பதுதான் தங்களுக்குத் தெரியுமே. பூலோகத்தில் இருந்து சத்தியலோகம் செல்லும் வழியில், தங்கள் அனுக்கிரகம் பெற வந்தேன். ரக்ஷ்ஷித்தருள வேண்டுகிறேன். தெய்வானைத் தேவீ, திருமகளே, பாலித்தருள் செய்க! வள்ளி நாயகீ, வேடர் குலக் கொழுந்தே, (வள்ளி நாயகி அங்கில்லாததால் சிறு துணுக்குற்று) முருகா! எங்கே, வள்ளியைக் காணவில்லை.

முருகன்: நாரதரே பண்பாட்டின் பிறப்பிடம் என்று முன்னொரு காலத்தில் போற்றப்பட்ட பாரத பூமியில் தோன்றிய நாகர்கள், தமக்குச் சுயநிர்ணய உரிமை கோரிக் கலகம் செய்து வருகின்றார்கள். இந்திய அரசு தனது படை பலத்தால் நாகர்களின் கிளர்ச்சியை நசுக்க முயன்று வருகின்றது. நாகர்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகின்றனர். அவர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு வள்ளி அங்கு சென்றுள்ளாள்.

(இந் நாடகம் எழுதப்பட்ட 1969ம் ஆண்டுக் காலத்தில், மலைக்குறவர்களான நாகர்கள், தமக்குச் சுயநிர்ணயம் கோரிக் கிளர்ச்சி செய்தனர்.)

நாரதர்: அப்படியா?.... (கேலியான தொனியில் இழுத்தபடி) நான் என்னமோ..... ஏதோ..... என்று நினைத்தேன்.....

முருகன்: ஏன் இழுக்கிறாய்? நீ நினைத்ததைச் சொல் நாரதரே!

நாரதர்: தெய்வானை நாச்சியுடன் உல்லாசமாக இருக்கிறீர்கள். வள்ளியை..... வழி அனுப்பி விட்டீர்களோ என்று நினைத்தேன்.

தெய்வானை: நாரதர் சும்மா வந்திருக்கமாட்டார். ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று நான் முதலிலேயே நினைத்தேன்.

நாரதர்: இல்லைத் தேவீ! சேவலும் மயிலுமின்றி முருகனைக் காண முடியாது. அதேபோல, வள்ளியும் தெய்வானையுமின்றி; காணவும் முடியாதே!... அதனால்தான் அப்படி நினைத்தேன்.

முருகன்: நாரதா, இன்று உனக்கு இப்படிச் சந்தேகம் வரக் காரணம் யாதோ?

நாரதர்: சொன்னால் கோபிக்க மாட்டீர்களே?

முருகன்: கோபிக்க மாட்டேன் சொல்!

நாரதர்: எப்படியானாலும் வள்ளி... குறமகள்தானே! இழிந்த குலத்தவள்தானே..!

முருகன்: (ஆத்திரத்துடன்) நாரதா! என்ன விளையாடுகிறாய், உனக்கு இன்று வேறு இடம் கிடைக்கவில்லையா?

தெய்வானை: நான் அப்போதே சொன்னேனே, நாரதர் ஏதாவது சுமையுடன்தான் வந்திருப்பார் என்று.

நாரதர்: சொன்னால் கோபிக்க மாட்;டேன் என்றீர்கள். இப்போ இருவருமே என் மீது பாய்ந்து விழுகிறீர்கள். நான் மனதில் பட்டதைச் சொன்னேன்.

முருகன்: நாரதரே! வள்ளி குறமகள் என்று தெரிந்துதானே அவளை ஆட்கொண்டு கடிமணம் புரிந்தேன். அப்பப்பா! அவளை இணங்க வைப்பதற்கு நான் பட்டபாடு உனக்குத்தான் தெரியுமே! பிறகு எதற்குச் சந்தேகம்?

நாரதர்: ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்று அனுபவஸ்தர்கள் சொல்வார்கள், காட்டு மலரான வள்ளி, இளமை முறுக்குடன் இருந்தபோது, அவளை அடையத் துடித்திருப்பீர்கள். பின், மோகம் தணிந்ததும் கை கழுவி விட்டிருப்பீர்களோ.. என்று சந்தேகித்தேன்.

தெய்வானை: நாரதரே! நீ சொல்வதைக் கேட்கவே என் காதுகள் கூசுகின்றன.

நாரதர்: தேவீ! பூலோகத்தில் இந்த வழக்கம் இருந்து வருகின்றது. அந்த வழக்கம் ஒரு வேளை தேவலோகத்தையும் பற்றிவிட்டதோ என்று நினைத்தேன்.

முருகன்: நாரதரே! பூலோகத்திலுள்ள எனது அடியார்கள் சாதி பேதம் பாராட்டக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே, குறவர் குலப் பெண்ணான வள்ளியைக் கடிமணம் செய்தேன். அப்படி இருக்கும் போது ஏன் தவறாக நினைக்கிறாய்?

நாரதர்: (ஏளனச் சிரிப்புடன்) முருகா! என்னை ஏமாற்ற வேண்டாம். வள்ளி உண்மையாகவே வேடர்குலப் பெண்ணாக-ஒரு கீழ்சாதிப் பெண்ணாக இருந்து இருந்தால், அவளை நீ திருமணம் செய்திருக்க மாட்டாய். தெய்வானையைப் போல வள்ளியும் தெய்வப் பெண்ணே! திருமாலின் புத்திரியே! அவள் பூமியில் சிவமுனிவரிடம் தோன்றி, வேடர் குலத்தவர் இடையே வளர்ந்தவள் என்ற கதை உலகறிந்தது தானே!

முருகன்: பேதத்தை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காகவே இத் திருவிளையாடலை நிகழ்த்தினேன்.

நாரதர்: சமத்துவத்தை உயர்த்த வேண்டுமானால், உண்மையில் ஓர் அசல் வேடர்குலப் பெண்ணையே திருமணம் புரிந்திருக்க வேண்டும். தெய்வப் பெண்ணைப் பூலோகத்திற்கனுப்பி வேடர்கள் மத்தியில் வளரச் செய்து, அவளைத் திருமணம் செய்வதில் என்ன சமத்துவம் இருக்கிறது? போலிச் சமத்துவம்!

முருகன்: (தடுமாற்றத்துடன்) என்ன நாரதரே! வேடிக்கை செய்வதுதான் உனது வழக்கம். ஆனால், இன்று வலுச்சண்டைக்கு வருகிறீரே! பிறப்பினால் உயர்வு என்றும் தாழ்வென்றும் இல்லை. எல்லா உயிர்களும் ஒன்றே! அப்படி இருக்கும்போது வேடர் குலம் என்றும் வேதியர் குலம் என்றும் பேதங்கள் கற்பிக்கலாமா?

நாரதர்: சண்முகா! என்னை மன்னித்தருள வேண்டும். பூலோகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கியுள்ளது. அக்கிரமம் தாண்டவமாடுகின்றது! உங்களுடைய அடியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு திருக்கூட்டம் செய்யும் அட்டூழியங்களை நேரில் பார்த்து வருகிறேன். அந்த வயிற்றெரிச்சலில் பேசிவிட்டேன்.

தெய்வானை:
வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்க நாங்கள்தானா அகப்பட்டோம்?

நாரதர்: தேவீ, பொறுத்தருள்க! முருகனுடைய பெயரைக் களங்கப்படுத்துகிற காரியம் நடைபெறுகிறது அங்கே! முருகனே தலையிட்டுப் பரிகாரம் தேட வேண்டும். அதனால்தான் இங்கு வந்தேன்.

முருகன்: பூலோகத்தில் என்ன நடக்கிறது நாரதரே!

நாரதர்: வேலவா! வேதம் முழுதும் அறிந்தவன் நீ. அதை உன் தந்தைக்கு உபதேசம் செய்து ஞானபண்டிதன் என்று பெயரும் பெற்றவன். ஆனால் உனக்கு பூலோக வேதம் தெரியாது. அங்கே பேதங்கள் பெருகிவிட்டன. உலகம் உய்ய உழைக்கும் உத்தமர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்பவர்கள், தங்களைத் தாங்களே, உயர்சாதியினர் என்று கூறிக் கொண்டு, உண்டு கொழுத்து வாழ்கிறார்கள்: திமிர் பிடித்துத் திரிகிறார்கள். உண்மையான உழைப்பாளிகள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். நசுக்கப்படுகிறார்கள். அவர்களுக்குச் சமூகத்தில் உழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முருகன்: (ஆத்திரத்துடன்) எங்கே நடக்கிறது இதெல்லாம்?

நாரதர்: “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பன போன்ற உயர்ந்த தத்துவங்களின் அடிப்படையில் வாழ்ந்த தமிழர் மத்தியில்தான் இந்த அக்கிரமம் நடக்கின்றது. அருள்வேந்தன் இராவணேஸ்வரன் ஆண்ட இலங்காபுரியின் வடபகுதியில், யாழ்ப்பாணம் என்ற அசல் தமிழ் நாடு ஒன்றிருக்கிறது.

முருகன்: ஓ, தெரியுமே! என் கோயில்கள் நிறைய உண்டே அங்கு.

நாரதர்: அந்தக் கோயில்களில் ஒன்றில்தான் இந்த அக்கிரமம் தலைவிரித்தாடுகின்றது. கோவிலில் வழிபட வரும் உழைப்பாளிகளை உண்மையான அடியார்களை உள்ளே செல்லவிடாது தடுத்து வைத்துள்ளார்கள். உள்ளே செல்ல முற்படுபவர்களைத் திமிர் பிடித்த சாதி வெறியர்கள் அடித்தும் உதைத்தும் தீப்பந்தத்தால் சுட்டுப் பொசுக்கியும் துன்புறுத்தி வருகின்றார்கள்.

முருகன்: (கோபத்துடன்) எந்தக் கோயிலில் இத்திருவிளையாடல் நடைபெறுகிறது?

நாரதர்: மாவிட்டபுரம் என்னும் திருத்தலத்தில்! முருகா, நீ குடிகொண்டிருக்கும் கோயிலில்தான்.

முருகன்: (ஆச்சரியம் பொங்க) என் கோயிலில்?

நாரதர்: ஆம்,முருகா! உன் கோயிலில்தான்! மாவைக் கந்தன் ஆலயத்தில்தான்!

தெய்வானை: நாரதரே! கோயிலில் பூஜை நடக்கின்றதா?

நாரதர்: பூஜையாவது, புனஸ்காரமாவது? கோயிற் கதவுகளை இழுத்து மூடி, பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். போதாததற்கு கோயிலைச் சுற்றிச் சண்டியர்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.

முருகன்: வேதாகமப்படி பூஜை நடக்கும் கோயிலாயிற்றே அது?

நாரதர்: வேதமாவது, ஆகமமாவது! அதைத் தங்கள் அக்கிரமத்துக்குத் துணையாகவல்லவா வைத்து இருக்கிறார்கள்.

தெய்வானை: என்ன அநியாயம் எனக்கு உடம்பு எல்லாம் நடுங்குகின்றது!

முருகன்: நாரதா, எனக்கு மூச்சுத் திணறுகிறதே!

நாரதர்: (வேடிக்கையாக) மூச்சுத் திணறாமல் என்ன செய்யும் முருகா? இருட்டறைக்குள்-மூலஸ்தானத்துக்குள் அல்லவா உன்னைப் பூட்டி வைத்திருக்கிறார்கள் உன் “பக்தர்கள்”.

தெய்வானை: நாரதரே இத்தனை அக்கிரமங்களும் நடக்க அங்கு ராஜாங்கமே இல்லையா?

நாரதர்: ராஜாங்கம் இருக்கிறது. ஆட்சியாளரே இது போன்ற சமூகக் குறைபாடுகளை ஒழிப்பதற்கு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

முருகன்: சட்டமா? எதற்குச் சட்டம்?

நாரதர்: உன் அடியார்கள் உன் திருக்கோயிலுள் சென்று வணங்குவதற்குச் சட்டம்!

முருகன்: (காதுகளைப் பொத்திக்கொண்டு) சிவ... சிவ... கோயிலுக்குச் சென்று வணங்குவதற்குச் சட்டமா? பூலோகத்தில் ஆத்ம நெறியே அழிந்து விட்டதா?

தெய்வானை:
தெய்வத்தை வணங்கக் கட்டளையா?

நாரதர்: அவசரப்படுகிறீர்களே! தெய்வத்தை வணங்கச் சட்டமல்ல. வணங்கச் செல்பவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்கச் சட்டம்!

தெய்வானை:
வேடிக்கையாயிருக்கிறதே! தெய்வத்தை வணங்கச் செல்பவர்களைத் தடுப்பதற்கு ஒரு கூட்டம்?

முருகன்: அவர்களைத் தண்டிப்பதற்கு ஒரு சட்டம்!

நாரதர்: அப்படி இருக்கிறது வேலவா, பூலோக வேதம்!

தெய்வானை:
சீ, வெட்கமாயிருக்கிறதே!

முருகன்: நாரதா! அண்மையில்தான் ஆட்சியாளர் இச்சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ?

நாரதர்: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்த சட்டம் இது. சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்று அதற்குப் பெயரும் வைத்திருக்கிறார்கள்.

(1956ம் ஆண்டளவில்)

தெய்வானை:
அப்படியானால் இவ்வளவு காலமும் ஏன் இச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை?

நாரதர்: யார் அமுல்படுத்துவது? சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அரசாங்க அதிகாரிகளே சாதி வெறியர்களும் பிற்போக்குவாதிகளும் தானே! தங்களின் சுகபோகத்தைப் பாதிக்கும் சட்டத்தை அமுல்படுத்த முட்டாள்களா அவர்கள்?

முருகன்: அப்படியானால் ஏன் இச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்?

நாரதர்: பூலோகத்தில் ஜனநாயகம் என்ற பெயரில் ஒருவித மாய ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் சமத்துவம், சம அந்தஸ்து என்று சொல்லிக்கொண்டு, அவர்களைக் கண்ணா மூச்சி காட்டவல்லது இந்த அரசு முறை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளுக்காகக் கிளர்ந்தெழும்போது, அக் குறைகளைத் தீர்க்க முயல்வதாகப் பாசாங்கு காட்டிக் கொள்கிறது. ஆனால் நடைமுறையில் அது பிற்போக்கு வாதிகளையே பாதுகாக்கிறது. பல்லாண்டு காலமாகச் சாதிக் கொடுமைகளுக்காளாகி வந்த மக்கள், தங்கள் விமோசனத்துக்காகக் குரல் எழுப்பியபோது, சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் என்ற இச்சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இச்சட்டத்தின் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் பொது மயானங்களில் பிணத்தை எரிக்கவும், பொதுக் கிணறுகள், தேநீர்க் கடைகள் போன்றவற்றில் சரி சமமாக நடாத்தப்படவும், ஆலயங்களுள் சென்று வழிபாடு செய்யவும் அவர்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர்களைத் தடுப்பவர்களைத் தண்டிக்கவும் விதி செய்யப்பட்டது. ஆனால் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.

முருகன்: மயானங்களில், இறந்தவர்களின் பிணத்தை எரிப்பதற்குக் கூட இந்த மக்களுக்கு உரிமை கிடையாதா?

நாரதர்: கிடையாது வேலவா! வில்லூன்றி என்ற மயானத்தில், ஓர் உறவினரின் பிணத்தை எரிக்கச் சென்ற முதலி சின்னத்தம்பி என்பவனை அங்கேயே வைத்துத் துப்பாக்கியால் சுட்டுப் பிணமாக்கி விட்டார்கள், பாதகர்கள்!

தெய்வானை:
என்ன கொடுமை!

நாரதர்: (ஏளனச் சிரிப்புடன்) நீங்கள் கொடுமை என்கிறீர்கள்! செத்த பிணத்தைச் சுட்டெரிக்கும் மண்ணுக்கே சாதி பார்க்கும் “மகத்தான கலாசாரம்” தேவி இது!

முருகன்: இது போன்ற அக்கிரமச் செயல்கள் எவ்வளவு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நாரதரே!

நாரதர்: பல்லாண்டு காலமாக

முருகன்: இப்போது மட்டும் அவர்களுக்கு எப்படி இந்த உணர்ச்சி ஏற்பட்டது? தங்கள் அடிமை விலங்கை அறுத்தெறிய அவர்கள் எப்படித் துணிந்தார்கள்?

நாரதர்: கொடிய அரக்கன் சூரனைக் கொன்றொழித்த தங்களுக்கா நான் இதனைச் சொல்ல வேண்டும்? அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மம் வீறுகொண்டெழுவது இயற்கை நியதிதானே முருகா! அதனடிப்படையில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு, தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கத் துணிந்து விட்டார்கள்.

முருகன்: ஆம் நாரதரே! அடக்குமுறை ஒரு போதும் வெற்றி பெற முடியாது. அதை உடைத்தெறிய பாதிக்கப் பட்டவர்கள் அணிதிரளவே செய்வார்கள். அதுசரி, மாவிட்டபுரத்தில் இப்போ என்ன நடைபெறுகிறது?
நாரதர்: அராஜகம் நடைபெறுகிறது! அங்கே ஆலயமணி ஒலிப்பது நின்றுவிட்டது. பூஜைகள் இல்லாது ஒழிந்து விட்டன. பக்தர்கள் தங்கள் தெய்வத்தை வணங்க முடியாது திண்டாடுகிறார்கள்.

முருகன்: அவ்வளவு தூரம் அக்கிரமம் தலை தூக்கவிட்டதா? துஷ்டர்களின் அட்டகாசம் மேலோங்கிவிட்டதா?

நாரதர்: அட்டூழியங்களுக்கு மத்தியிலும் கோயிலை வணங்கச் செல்லும் அடியார்கள் பொறுமையாய் இருக்கிறார்கள். ஆலய வாயிலிலே அமைதியாய் இருந்து திருக்கதவுகள் திறப்பதை எதிர்நோக்கி இருக்கிறார்கள். பசி தாகத்தையும், கொடிய வெயிலையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். உனது முருக நாமத்தைப் பஜனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

முருகன்: அப்படியா நாரதரே! நாம் உடனே புறப்பட வேண்டும். பூலோகம் சென்று எமது அடியார்களை ர~pத்து வரவேண்டும்!

நாரதர்: அப்படியே ஆகட்டும் முருகா! இதோ புறப்பட்டு விட்டேன்.

தெய்வானை:
(முருகனிடம்) நாதா, நானும் உங்களுடன் வருகின்றேன். பூலோகத்தைப் பார்த்து வெகு நாளாகிவிட்டது. வள்ளியுமில்லாமல் என்னால் தனியே இருக்கவும் முடியாது.

முருகன்: தேவீ! அக்கிரமம் தலை தூக்கியுள்ள இடத்துக்கு நீ வருவது நல்லதல்ல. பூலோகத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

தெய்வானை:
வள்ளியைத் தனியே கலகப் பிரதேசத்துக்கு அனுப்பி உள்ளீர்கள். நான் மட்டும் வரக்கூடாதா? அதுவும் உங்களுடன்.

நாரதர்: தேவீ! அவள் வள்ளி. காட்டிலும் மேட்டிலும், குடிசையிலும் வாழ்ந்து பழகியவள். தாங்களோ தேவயானி. பெரிய இடத்துப் பெண். துன்பத்தை உங்களால் தாங்க முடியாது.

முருகன்: ஆம் தேவீ! கலங்காதே! நாம் விரைவில் திரும்பி விடுவோம்!

(இருவரும் டங் என்று மறைகின்றனர்)


--------------------------------------------------------------------------------

காட்சி இரண்டு


பூலோகம்

பாத்திரங்கள் : முருகன், நாரதர் (மனித உருவில்)

(உஷத்காலம், கீரிமலையில் நீராடி, இடுப்பிலே வேட்டிக்கு மேலே ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு, வெடவெடக்கும் குளிரில் மாவிட்டபுரத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும்)

முருகன்: ஆகா என்ன சுகம். என்ன ஹிதம்! விடிகாலையில் இக் கங்கையின் ஸ்பரிஷம் உடலைச் சற்றே வருத்தினாலும், உள்ளத்துக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது நாரதரே! மனசு படிகம் போலத் தூய்மையாயிருக்கிறது. புனித தீர்த்தம் அல்லவா?

நாரதர்: அளவுக்கு மிஞ்சிப் புகழாதீர்கள் முருகா! உங்கள் மனது தூய்மையானது. கங்கை ஒன்றையும் புனிதமாக்க வில்லை... ஹி... ஹி... (கேலியாகச் சிரிக்கிறார்).

முருகன்: நாரதரே! உனக்கு என்ன கோளாறு பிடித்துவிட்டதா? புனித கங்கையைப் போய் இப்படிக் கீழ்மையாகப் பேசுகிறீரே! கர்ம பலனால் நகுலமுனிக்கு கிடைத்த கீரிமுகத்தையே மாற்றி ஜென்ம சாபல்யம் செய்த கங்கையாயிற்றே நாரதரே!

நாரதர்: புனித கங்கை நகுல முனியை ரட்சித்ததுடன் நின்று விட்டதா? அது வெறும் கட்டுக் கதை முருகா! பிறகு ஒரு புதுமையும் நடைபெறவில்லையே முருகா!

முருகன்: (கோபத்துடன்) என்ன சொல்கிறாய் நீ! புதுமையாய் இருக்கிறதே நீ சொல்வதெல்லாம்.

நாரதர்: புதுமைதான் முருகா! காலம் காலமாய் அக்கம் பக்கத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்லாது, தூரந் தொலையில் இருந்தெல்லாம் வந்து இக் கங்கையில் நீராடுகிறார்களே, அவர்களின் மனம் ஒன்றும் சுத்தமாகவில்லையே!... தங்களில் ஒரு சாராரைத் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து இருக்கிறார்களே! அவர்கள் பாடுபட்டு உழைப்பதால் தான் நாடு வாழ்கிறது. ஆனால் அவர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.

முருகன்: ஆச்சரியமாய் இருக்கிறதே முருகா!

நாரதர்: அனைவரும் ஆண்டவன் படைப்பே என்று சொல்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. அந்த ஆண்டவனையே வணங்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்களே கொடியவர்கள்! அதுவும் உங்கள் திருக்கோயிலில்!

முருகன்: எனக்கு உள்ளம் கொதிக்கிறது நாரதரே. பூலோகத்தில் அந்தளவு தூரத்துக்குத் தர்மநெறி சீரழிந்து விட்டதா?

நாரதர்: அதைத்தானே, இப்போ நேரில் பார்க்கப் போகிறோமே! இதோ ஆலய வாசலுக்கு வந்து விட்டோம். இங்கு நடப்பதைக் கண்முன்னே காண்போமே...


--------------------------------------------------------------------------------

காட்சி மூன்று


மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் முகப்பு

வெளிமண்டபத்துக்கும் உள்மண்டபத்துக்குமிடையில் உள்ள இரும்புக் கிராதியின் கதவு அடைக்கப்பட்டுத் தாழ்ப்பாள் ஒன்றினால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பூட்டிய கதவுக்குப் பக்கத்தில் கரிய திருமேனி கொண்ட நவீன சூரன் ஒருவன் நிற்கின்றான். வேட்டியை மடித்துக்கட்டி, அதற்கு மேலே ஒரு துண்டு. உச்சி பிளந்த தலைமுடி. நெற்றியில் முக்கீற்று விபூதி.

அவனுக்கு அக்கம் பக்கமாகச் சில குண்டர்கள். இரும்புக் கிராதிக்கு உள்ளேயும் குண்டர்கள்.

மூலஸ்தானக் கதவு அடைக்கப்பட்டுள்ளது.

வெளிமண்டபத்தையொட்டிய வெற்றுத் தரையில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் சம்மணங்கட்டியிருந்து முருக பஜனை செய்கிறார்கள்.

(மாவிட்டபுர ஆலயத்துக்கு மனித உருவில் வந்த முருகனும் நாரதரும் வெளிமண்டபத்துக்கு அப்பால் நின்று, அங்கே நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிமண்டபத்தில் அமைதியாக அமர்ந்திருந்த பக்தர்கள்; முருகனை வேண்டிப் பஜனை செய்கின்றார்கள்.)

பஜனை :
ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா, ஓம்!
ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா, ஓம்!

காலமெல்லாம் கடிதுழைத் தெம்
உடல் நலிகின்றோம் - எம்
கால் வயிற்றுக் கஞ்சிக்காகத்
துயர் வடைகின்றோம். -ஓம் முருகா

உழைத்துழைத்து உருக்குலைந்தும்
மீட்சியில்லையே - நம்
உழைப்பையெல்லாம் சுரண்டுவோர்க்கும்
வீழ்ச்சி இல்லையே! -ஓம் முருகா

ஏழை சிந்தும் கண்ணீரை உன்
கண் திறந்துபார் - நாம்
வாழ உந்தன் வரமளித்தெம்
துயர் இதனைத் தீர்! -ஓம் முருகா

சமத்துவத்தைப் பேணி வையம்
ஓங்கி வளருது - இங்கே
சாதி பேசிக் கோயில் வாசல்
சாத்திக் கிடக்குது! -ஓம் முருகா

தாள் பணிந்தோம் வேல் முருகா
தயை புரிவாயே - திருத்
தலம் திறந்துன் பக்தர் நமக்
கருள் பொழிவாயே! -ஓம் முருகா
(மூன்று இளைஞர்கள் கோயிலுக்குச் சென்று வணங்குவதற்காக வாசலண்டை செல்கின்றார்கள்.)

சூரன் : (அவர்களை மிறாய்த்துப் பார்த்தபடி) எங்கை போறியள்?

இளைஞன் 1 :
நாங்கள் கோயில் கும்பிட வந்தனாங்கள்.

சூரன் : உள்ளே போகேலாது. வெளியாலை நிண்டு கும்பிடுங்கோ.

இளைஞன் 1 :
தெய்வச் சன்னதியிலை ஏனையா உள்ளே, வெளியே எண்டு பாக்கிறியள்?

சூரன் : எளிய சாதி உள்ளை போறதில்லை. வெளியாலை நிண்டுதான் கும்பிடோணும்.

இளைஞன் 2 :
சாதியை எழுதி நெத்தியிலை ஒட்டியிருக்குதோ? நீ என்ன சாதி எண்டு கண்டுபிடிக்கிறது?

சூரன் : என்னடா கதைக்கிறாய்? என்னை யாரெண்டு தெரியாதோடா? (கோபத்துடன்) போங்கடா அங்காலை! அங்கை இருந்து பாடுறவங்களோடை போய் நீங்களுமிருந்து பாடுங்கோடா!

இளைஞன் 3 :
என்ன? மரியாதையில்லாமல் எடா, புடா எண்டு கதைக்கிறீர்? பெரிய படிப்பாளி எண்டு சொல்லுறாங்க... இது தானோ படிப்பின்ரை இலட்சணம்? மனிசக் குணத்தைக் கொஞ்சமும் காணேல்லையே...?
இளைஞன் 2 :
சகல மனிசரும் ஆண்டவன் படைப்பே எண்டு சொல்லி வைச்சிருக்கிறாங்க... படிச்ச மனுஷங்கள்.

சூரன் : கனக்க கதைக்காதையுங்கோ! வீண் தொந்தரவுதான் வரும்.

இளைஞன் 2:
அதைத்தான் நாங்களும் ஒருக்கால் பாத்திட்டுப் போக வந்தனாங்கள்.

(சத்தியாக்கிரகம் இருந்தவர்களில் ஒருவர் ஓடிவந்து “இங்காலை வாருங்கோ தம்பிமாரே! எங்களோடை வந்திருங்கோ” என்று அழைத்துப் போகிறார்)

(தூரத்திலிருந்து பார்த்தக் கொண்டிருக்கும் முருகன் நாரதரைப் பார்த்து, அவர் வேளையிற் சொன்ன சம்பவங்கள் கண்முன்னே நடைபெறுவதைக் கண்டு, வியப்போடு கண்ணைச் சிமிட்டுகிறார்)

(மேலும் மூன்று, நான்கு இளைஞர்கள் கோயில் வாசலண்டை செல்கிறார்கள்)

சூரன் : எங்கை போறியள்?

வந்தவர்கள் :
(ஒருமித்த குரலில்) நாங்கள் கந்தனை வணங்க வந்தனாங்கள்.

சூரன் : வணங்குங்கோவன்.

வந்தவர்கள் :
நாங்கள் உள்ளை போய்க் கும்பிடப் போறம்.

சூரன் : உள்ளை போகேலாது.

வந்தவர் 1 : ஏன் போகேலாது?

சூரன் : பூட்டிக் கிடக்குது.

வந்தவர் 2 :
ஏன் பூட்டி வைச்சிருக்கிறியள்?

சூரன் : அது... வந்து... கண்ட நிண்ட சாதியளையும் உள்ளை விடேலாது.
வந்தவர் 3 :
என்னையா கதைக்கிறியள்? எல்லாரையும் கடவுள் தானை படைச்சவர்? பிறகென்ன, கண்ட நிண்ட சாதிக்கதை?

சூரன் : அந்தக் கதை இந்தக் கதை ஒண்டும் வேண்டாம். போற இடத்தை போய் உங்கடை அலுவலைப் பாருங்கோ?

வந்தவர் 3 :
எங்கடை அலுவல் இங்கைதான்! கந்தக் கடவுளைக் கும்பிடத்தான் வந்தனாங்கள். நீங்கள் வழி மறிக்காதையுங்கோ!

சூரன் : எங்கடை கோயில்! அதைப் பூட்டுறதும் திறக்கிறதும் எங்கடை விருப்பம்!

வந்தவர் 4 :
உங்கடை கோயிலில்லை. இது கந்தசாமியின்ரை கோயில். அதைக் கும்பிடுறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு. மறிக்கிறதுக்கு ஒருவருக்கும் உரிமை இல்லை.

சூரன் : என்ன கனக்கக் கதைக்கிறாய்?

வந்தவர் 4 :
நீங்கள் விசர்க் கதையெல்லாம் கதைக்கிறியள். அதுக்குத்தான் நான் பதில் சொன்னனான்.

சூரன் : போதும், போ அங்காலை.

வந்தவர் 4 :
அங்காலை போகேல்லை. (மூலஸ்தானத்தைக் காட்டி) இங்காலைதான் போகோணும்.

சூரன் : போ, பாப்பம்!

வந்தவர் 4 :
போகத்தான் போறம்!

(சற்றுத்தூரத்தில் நின்ற குண்டன் ஒருவன் மெல்ல நகர்ந்து வந்து, சூரனாரின் காதுக்குள்ளே ஏதோ இரகசியமாகச் சொல்கிறான்).

சூரன் : (ஆச்சரியம் மேலிட, வாதாடிய அந்த இளைஞனைப் பார்த்து) நீ, நிச்சாமத்து விதானை வேலாயுதம் பிள்ளையின்ரை பொடியனெல்லே?

வந்தவர் 4 :
ஓ! நான் அவற்றை மோன்தான்!

சூரன் : சீ! உனக்கு வெக்கமில்லையே? ஏன் இவங்களோடை கூடிக்கொண்டு வந்தனி? நீ எப்பவும் கோயிலுக்கு உள்ள வரலாம் போகலாந்தானே!

வந்தவர் 4 :
நான் மட்டும் வரேல்லை. இன்னும் கனபேர் வந்திருக்கிறம். நாங்கள் எல்லாரும் ஒரு இனம். ஒரு வர்க்கம்! உலகத்திலை நடக்கிற கொடுமைகள், அக்கிரமங்களை இல்லாமல்ச் செய்ய ஒண்டாய்ச் சேர்ந்திருக்கிறம்... நாங்கள் எல்லாரும் கோயிலுக்கை ஒண்டாய் வந்து கும்பிடவேணும்.
சூரன் : ம்... சேர்ந்து என்ன செய்யப் போறியள்?

வந்தவர் 4 :
உலகம் ஊத்தையாய்ப் போச்சு. படிஞ்ச தூசி ஒருக்காலும் தானாகப் போகாது. அதைத் தட்டித் தான் அப்புறப்படுத்த வேணும். அதைத்தான் செய்யப் போறம்!

சூரன் : சரி, போய்த் துடையுங்கோ!

இருவர் : (சூரனின் நெஞ்சை சுட்டிக்காட்டி) முதல்லை இங்கை படிஞ்சிருக்கிற தூசியை துடைக்க வேணும். உன்ரை நெஞ்சிலை படிஞ்சிருக்கிற தூசியை...

(சூரன் வாய் பேசாது அவர்களை நிமிர்ந்து பார்க்கிறான். அதற்கிடையில் சத்தியாக்கிரகி ஒருவன் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்களும் வேண்டா வெறுப்பாக அங்கு செல்கிறார்கள்)

(முருகனும் நாரதரும் கோயில் வாசலை நோக்கி வருகிறார்கள். அருகில் வந்ததும்)

சூரன் : எங்கை போறியள்?

நாரதர் : நாங்கள் சுவாமி கும்பிட வந்தனாங்கள்... உள்ளுக்கை போய்க் கும்பிடவேணும்!

சூரன் : உள்ளை போகேலாது. இதிலை நிண்டு கும்பிடுங்கோ... இல்லாட்டி...

நாரதர் : இல்லாட்டி?

சூரன் : அங்கையிருந்து பசனை வைக்கினம். அவையோடை போயிருந்து நீங்களும் பசனை வையுங்கோ!

முருகன் : நாங்கள் பசனை வைக்க வரேல்லை. கந்தனைக் கும்பிடத்தான் வந்தனாங்கள். கதவைத் திறந்து நாங்கள் உள்ளை போக வழி விடுங்கோ!

சூரன் : அப்படி விடேலாது.

நாரதர் : ஏன் நந்தி மாதிரி வழி மறிச்சுக் கொண்டு இருக்கிறியள்?

சூரன் : நளம், பள்ளுகள் வந்தால் வழி மறிக்கத்தானே வேணும்!

நாரதர் : நந்தனாருக்கு வழிமறிச்சது போல?

சூரன் : ஓ! அந்தப் பறைக்கூட்டமும் உதுக்கை இருக்குதுகள்.

நாரதர் : அது, அந்தக் காலம்! நந்தனாரை வழிமறிச்சு, அவரை அக்கினி பகவானுக்குப் பலி கொடுத்திட்டுச் சிவலோகம் அனுப்பியாச்செண்டு கதை கட்டி விட்டியள்... இப்ப அப்படி நடக்காதெண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ!

சூரன் : என்ன, கனக்க கதைக்கிறாய்?

நாரதர் : நீங்க முரட்டுக் கதை கதைச்சால், நாங்கள் அதுக்குப் பதில் சொல்லத்தானை வேணும். நந்தி மாதிரி நிக்காதீங்க. வழி விடுங்க!

சூரன் : வழி விடேலாது.

நாரதர் : (முருகனைத் தொட்டுக் காட்டி) இவர் ஆரெண்டு தெரியுதே? இவர்தான் உள்ளை இருக்கிற கந்தன். அவரையே மறிச்சு வைச்சிருக்கிறிங்க...

சூரன் : ஹ... ஹ... ஹா கந்தன்! இந்தக் கந்தனுகள், வேலனுகள்தான் இப்ப கோயிலுக்கை போகத் துடிக்கினம். கந்தனாம், கந்தன்!

நாரதர் : அவர் குடியிருக்கிற கோயிலுக்கை அவர் போகத்தானை வேணும். தடுக்கிறதுக்கு நீ யார்?

முருகன் : வழிவிடுங்கள். நாங்கள் மட்டுமல்ல, இங்கே முருக நாமம் பாடிக்கொண்டிருக்கிற பக்தர்கள் அனைவரும் கந்தனை வழிபட வழிவிடுங்கள்!

சூரன் : முடியாது. அங்காலே போங்கள்!

நாரதர் : இந்த அக்கிரமத்தின் பலனை நீங்கள் அடையத்தான் போறியள்!

சூரன் : என்ன செய்வியள்?
(தள்ளி நிற்கும் குண்டர்களைக் கை தட்டி அழைக்கிறார்)

(அதற்குள் சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் சிலர் ஓடிவந்து அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகிறார்கள். முருகள், அவர்களை நோக்கிக் கை அசைத்து)

முருகன்: உங்கள் போராட்டம் வெல்லட்டும்! கந்தன் உங்களுக்கு அருள் பாலிப்பான். நாம், இதோ போய் வருகிறோம்! (என்று சொல்லிவிட்டு, நாரதரை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு முன்னால் உள்ள பனங்கூடல் காணிக்குச் செல்கின்றார்)


--------------------------------------------------------------------------------

காட்சி நான்கு


பாத்திரங்கள் : நாரதரும், முருகனும்.

நாரதர் : முருகா, பார்த்தீர்களா? இந்த நாரதன் சொன்னதைக் கண்முன்னே கண்டீர்கள்தானே!

முருகன்: ஆம், நாரதரே! யாவும் அறிந்தோம்! இந்தப் பக்தர்கள் சாந்தி வழியிலே தமது கோரிக்கைக்காகப் போராடுகிறார்கள். இந்த மார்க்கம், ஒரு போதும் அவர்களுக்கு வெற்றியளிக்கப் போவதில்லை. நான் அவர்களுக்கு என் வேலைக் கொடுத்து அதன் மூலம் வெற்றியீட்ட அனுக்கிரகம் புரிகிறேன். இதோ...

(தனது வலக்கரத்தை உயர்த்தி, மானசீகமாகத் தன் கை வேலைப் பெற்று, இரு கரங்களாலும் அதனைத் தன் பக்தர்களுக்குக் கொடுத்தருளி, ஆசீர்வதிக்கின்றார். அத்துடன் இருவரும் மறைகின்றார்கள்)

-திரை-


--------------------------------------------------------------------------------

கந்தன் கருணை
(காத்தான் கூத்துப்பாணி இசை நாடகம்)


மூலக்கதை : என்.கே.ரகுநாதன்

நாடக வார்ப்பு : “அம்பலத்தாடிகள்”


--------------------------------------------------------------------------------

அவர்க்கே உரித்தாம்

வீர மரணத்தால்
மரணத்தை வென்றுவிட்ட
தீரர்- தீண்டாமையாம்
தீமைக்கு எதிர் நின்ற
வீரர் அவர் தமக்கே
உரித்தாம் இச்சிறு நூல்.


--------------------------------------------------------------------------------

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைவர்
திரு.எஸ்.ரீ.என்.நாகரத்தினத்தின்
வாழ்த்துச் செய்தி

பன்னெடுங் காலமாக, இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக வடபகுதியில் நிலவிவரும், எதுவித நீதி நியாயமுமற்ற காட்டுமிராண்டித்தனமான தீண்டாமைக்கும், சாதி ஒடுக்கு முறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் காலத்துக்கு காலம் தமது எதிர்ப்பைத் தனி நபர் அல்லது குழு ரீதியான போராட்டங்கள் மூலமும், தனிப்பட்ட சங்கங்கள், நிறுவனங்கள் மூலமும், வேறுபல வழிகளிலும் காட்டி வந்துள்ளனர். எனினும் 1966-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21-ம் திகதி சுன்னாகத்தில் இருந்து ஆரம்பித்த பிரசித்த பெற்ற ஊர்வலத்தின் பின்னர், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டமன்றி, தீண்டாமைக்கெதிராக ஐக்கியப்படக் கூடிய சகல மக்களையும் அணிதிரட்டித் தனது போராட்டப்பாதையை முன் வைத்த போதுதான் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் ஒரு புதிய வடிவை எடுத்தது. அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் பொது இடங்களான பல கோயில்களும் தேனீர்க்கடைகளும் திறந்து விடப்பட்டதும் இன்றைய சரித்திரம்.

இப்போராட்டங்களில் அணி அணியாகத் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் முற்போக்கு எண்ணம் கொண்ட கணிசமான பலர் நேரடியாகவும் பொருளாதார, தார்மீக ரீதியிலும் ஆதரவளிப்பது முக்கிய அம்சமாகும்.

இவ்வகையில் “அம்பலத்தாடிகள்” மன்றத்தினரின் “கந்தன் கருணை” நாடகம் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கதாகும். கலை, இலக்கியப் பிரச்சாரத் துறையில் எமது இயக்கத்தின் முன்னோட்டத்துக்கு அந்நாடகம் பெரிதும் உதவியது.

இந்த “அம்பலத்தாடிகள்” இன்றைய சமுதாய மாற்றத்துக்கான பொதுப் பிரச்சினைகளை மையமாக வைத்து, இன்னும் பல உயிர்ப் படைப்புக்களை உருவாக்க வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.

அன்பன்
எஸ். ரீ. என். நாகரத்தினம்
30A, ஸ்ரான்லி வீதி
யாழ்ப்பாணம்.


--------------------------------------------------------------------------------

நாடகத்திற்கு ஓர் அறிமுகம்
கலாநிதி க. கைலாசபதி

கடந்த இரு தஸாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் நாடகங்களைப் பற்றிப் பலவிதமான சர்ச்சைகளும், வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வந்துள்ளன. தமிழ் நாடகக் கலையின் இன்றைய நிலை, அதன் குறைபாடுகளுக்கான காரணங்கள், அதன் எதிர்காலம் இவை குறித்து இரங்கி ஏங்கும் எத்தனையோ குரல்கள் ஒலித்துள்ளன. இவற்றைக் கூர்ந்து கவனித்தால் ஓருண்மை பொதுவாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் காணலாம். அதாவது தமிழ் நாடகங்கள் நாம் திருப்தியடையும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை என்பதாம். குறிப்பாகத் தற்காலத் தமிழிலக்கியப் பரப்பிலே கவிதை, சிறுகதை, நாவல் என்பன வளர்ந்திருக்கும் மட்டத்திற்கு நாடகம் விருத்தியடையவில்லை என்பது அப்பட்டமான உண்மை ஆகும். இந்த நிதர்சன உண்மையை ஏற்றுக்கொண்டதும், இக்குறையை எவ்வாறு நிவிர்த்திக்கலாம் என்னும் நியாயமான கேள்வி எழுகின்றது. இதற்கு ஏகமனதான விடை இருக்கும் என எதிர்பார்க்க இயலாது. எழுத்தாளர்களினதும், திறனாய்வாளர்களினதும் கலைக்கொள்கை, சமுதாய நிலைப்பாடு, உலக நோக்கு முதலியவற்றுக்கியைய இவ்வினாவுக்குரிய விடையும் வேறுபடும்.

“கந்தன் கருணை” என்னும் இந்நாடகப் பிரதியைப் படித்த பொழுது நமது நாடகக் கலைக்குப் புதுநோக்கும் போதிய வலுவும் அளிக்கக்கூடிய ஒரு நெறி இதில் உள்ளடங்கி இருப்பதைக் கண்டேன். இந்நெறியை மேலும் பலர் கைக்கொண்டு இத்தகைய நாடகங்களை எழுதித் தயாரிப்பார்களாயின் இத்துறையில் எம்மை எதிர்நோக்கும் “பற்றாக்குறை” பெருமளவிற்கு நீங்கும் என்றே எண்ணுகிறேன். இக்கூற்றுக்கு இரண்டொரு விளக்கங்கள் அவசியமாயுள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியளவிலிருந்து எமது வாழ்க்கையிலும் கலை இலக்கியத்திலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட அந்நியத் தாக்கத்தின் விளைவுகளில் ஒன்றாக “டிராமா” எனப்படும் மேனாட்டு நாடகவகை சிறப்பிடம் பெற்று வந்துள்ளது. காலனித்துவ அமைப்பிலே ஆங்கிலக் கல்வியும் அதையொட்டிய மதிப்பீடுகளும், செல்வாக்கும் நாட்டில் மேலோங்கிய பொழுது அவற்றின் நிழலில் வளர்ந்த புதுமுறை ‘டிராமா’வும் போற்றப்பட்டதில் வியப்பெதுவுமில்லை. இப் புதுமுறை ‘நாடகம்’பன்னெடுங்காலமாக இருந்து வந்த மரபுவழி நாடகத்திலிருந்து சிற்சில அம்சங்களில் வேறுபட்டது.

மரபுவழிக் கூத்தில் ஆடலும் பாடலும்,ஓரளவிற்கு மிகை நடிப்பும் இவற்றுக்கு நிறைய வாய்ப்பளிக்கும் புராண இதிகாசக் கதைக் கூறுகளும் பிரதான அம்சங்களாய் விளங்கின. புதுமுறை நாடகத்தில், ஆடல் பாடல் என்பவற்றிற்குப் பதிலாக இயல்பான உரையாடல் இடம்பெற்றது. பொருளைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடான வரையறைகள் இல்லாவிடினும், பெரும்பாலும் சமகாலச் சமுதாய வாழ்க்கையின் அம்சங்கள் சிறப்பிடம் பெற்றன. சுருங்கக்கூறின், டிராமாவில் குறிப்பாக (நகர) வாழ்க்கையிற் காணக்கூடிய நடையுடை பாவனை, பேச்சு முதலியவற்றை ஏறத்தாழ அவை உள்ளவாறே கதை நிகழ்ச்சிகளின் வாயிலாக நடித்தல் நவீன நாடகத்தின் தலையாய பண்;பாய்க் கருதப்பட்டது. இதனையே இயற்கை நவிற்சி என்றும் வற்புறுத்தினர்.

இத்தகைய நாடக வகையே ஏற்புடை மாதிரியாயும் உயர்வு நயமுடையதாயும் கருதப்பட்டமையால், நாளடைவில் எமது நாடகம் கட்டிறுக்கமான வரையறையைப் பெறுவதாயிற்று. அதாவது நாடகம் என்ற சொல்லின் பொருள் வரம்பு சுருங்குவதாயிற்று. நவீன மேடையமைப்பு, ஒலி, ஒளியமைப்பு, ஒப்பனை என்பனவற்றின் பெயரில் அணிமணியாடைத் தொகுதிகளும், வியப்பையுண்டாக்குவதையே நோக்கமாய்க் கொண்ட வெற்றலங்காரங்களும் முதன்மை பெற்றன. மேடைக் காட்சியமைவு (செற்ஸ்) நாடக மாந்தரை விட முக்கியமாய்க் கருதப்படலாயிற்று. நாடகத்தின் உயிர்நிலையான நிகழ்ச்சிப் புணர்ப்போ, முரணோ, ஆன்ம அனுபவமோ சிறப்பிழந்தன. ஏல விற்பனையிலே ஒருவரை மிஞ்சி மற்றொருவர் விலையைக் குறிப்பது போன்று, ஒரு தயாரிப்பாளரை விஞ்சி மற்றொருவர், “தத்ரூபமான” காட்சியமைவுகளை மேடையிற் காட்டும் நிலை தோன்றியுள்ளது. இவை யாவற்றின் விளைவாலும், நாடகச் சுவைஞர்கள் அதாவது இரசிகர்கள் கேவலம் வெறும் பார்வையாளராகவே அமர்ந்து காட்சிகளைக் கண்டுவிட்டுப் போகின்றனர்.

இத்தகைய ஓர் அவலநிலைக்கு எதிர்விளைவாகவே சமீப காலங்களில் அமெரிக்கா, ஐரோப்பா முதலிய மேலைப் புலங்களில் சம்பிரதாயமான “டிராமா” வகையை நிராகரித்து விட்டு, மக்களோடு நேரடியான தொடர்பு கொள்ளக் கூடிய வௌ;வேறு நாடக முறைகளைக் கலைஞர்கள் கையாளத் தொடங்கியுள்ளனர். கீழைத்தேய மரபுவழிக் கூத்து முறைகளைக் கூட அவர்கள் ஆங்காங்கே தழுவிக் கொண்டுள்ளனர்.

“டிராமா” என்ற இயற்பண்பு வாய்ந்த நாடக வகை ஒரு வாய்ப்பாடாக அமைந்துவிட்டதெனப் பலர் இப்பொழுது எண்ணுகின்றனர். உலகின் சில பகுதிகளிற் காணப்படும் இப்போக்கிற்கு இயையவே ஈழத்திலும் நாடகத் துறையில் மாற்றத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. சிறப்பாகச் சிங்களக் கலைஞரும் ஓரளவிற்குத் தமிழ்க் கலைஞரும் அண்மைக் காலத்தில், கூத்து வடிவத்தை நாடுவதற்கும் இதுவே காரணமாகும். நொண்டி நாடகத்திலிருந்து பள்ளு நாடகம் வரை, வில்லுப் பாட்டிலிருந்து கதாகாலட்சேபம் வரை, தெருக்கூத்திலிருந்து பொம்மலாட்டம் வரை, மக்கள் மத்தியில் வழங்கி வந்துள்ள கலை வடிவங்களும் கரகம் முதல் காவடி ஈறான சடங்கு வழிபாட்டு முறைகளும் நமது நாடக மரபுக்கு உரியனவே. இவையெல்லாம் வௌ;வேறு அளவிலும் வகையிலும் கருத்தை உணர்த்தவும் கதையைக் கூறவும் பயன்பட்டனவேயாகும். ‘டிராமா’ முறை செல்வாக்குப் பெற்றபின் இவை தீண்டத்தகாதனவாய்ப் புறக்கணிக்கப் பட்டன. இதனால் எமது மக்களின் அனுபவ மரபிலும் வளத்திலும் பெரும்பகுதி பயன்படாமற் போனது. வர்க்க சமுதாயத்திலே கீழ்மட்டத்து மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவதைப் போலவே, அவர்தம் அருஞ்செல்வங்களாய ஆடலும் பாடலும் அனாதரிக்கப்பட்டன.

மரபுவழிவரும் இக் கூத்து முறையைப் பேணுவதோ அப்படியே இயங்க வைப்பதோ நாடக வளர்ச்சிக்கு உதவும் என்று நான் கூறவில்லை. ஆனால், நாடகம் என்ற வரம்புக்கு அப்பால் அது இது காலவரை நிறுத்தப்பட்டமையால் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் காலத்திற்கேற்ற மாற்றம் பெறும் வாய்ப்பினை இழந்தது என்பதே நாம் இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டியதொன்றாகும்.

‘டிராமா’ என்றதுமே, ஒரு குறிப்பிட்ட விதமான நாடகப் பிரதி, வசதிகள் பல வாய்க்கப்பெற்ற மண்டபம், ஒலி-ஒளிக் கருவிகள், மேடையமைப்புத் தளபாடங்கள் முதலியன இன்றியமையாதவை என்று நாம் நம்புமளவுக்கு, நாடகம் பற்றிய மனப்பதிவு எமக்கிருக்கிறது. இத்தகைய ஒரு நாடகம் அரங்கேற்றுவதற்குப் பணம் கணிசமான தொகை தேவைப்படுகிறது. பொதுமக்கள் பலரின் சக்திக்கு அப்பாற்பட்ட தொன்றாகி விடுகிறது. இதனாலேயே யப்பான், இந்தோனீஷியா, வங்காளம் முதலிய நாடுகளில் மரத்தினடியிலும், தெருச் சந்தியிலும், கடற்கரையிலும் நின்று நடிகர்கள் தாமே உடன் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவினதான தளபாடங்களுடன் நாடகம் ஆடும் குழுக்கள் தோன்றின. இவற்றை “வாழும் நாடகக் குழுக்கள்” என்றும் “நடமாடும்; நாடகக்காரர்” என்றும் அழைக்கின்றனர். இப்புதிய போக்கின் விளைவாக நாடகக் குழுக்கள் பல்கிப் பெருகின் மொத்தத்தில் நாடகக் கலை துடிப்பும் செழிப்பும் பெற்றது. பலரது உள்ளார்ந்த-உள்ளடங்கிக் கிடந்த கலையாற்றல் வெளிப்பட்டது.

மேலே விவரித்த பின்னணியிலேயே கந்தன் கருணை நாடகத்தை நான் நோக்குகிறேன். திரிலோக சஞ்சாரியான நாரதரும், கலியுகவரதனான கந்தனும் அவன் காதற்குரியாரும் மேலேழுந்தவாரியாகப் பார்க்குமிடத்துப் பழைய புராணக் கதாபாத்திரங்களேயாவர். எனினும் அவர்கள் ஆய்ந்து பங்கு பற்றும் சம்பவங்களோ நாம் கண்முன் காண்பவை. மக்களுக்கு நன்கு தெரிந்த கதைக் கருவை முற்றிலும் புதிய தேவைக்காகப் பயன்படுத்தியிருத்தல் கவனிக்கத்தக்கது.

இன்னொரு விதத்திலும் இந்நாடக முயற்சி விதந்துரைக்க வேண்டியது. நவீன இலக்கியத்தின் பெரும்பகுதியான (கவிதை, சிறுகதை, நாவல் போன்ற) ஆக்கங்கள் தனி நபர்களினால் சிருஷ்டிக்கப்படுவன. தனிநபர்கள் படித்துச் சுவைப்பதற்காகப் படைக்கப்படுவன: அவ்வாறு தனிமையில் படித்து இன்புறுவதற்காகப் படைக்கப்படும் இலக்கியங்களும், நூற்றுக் கணக்கானோர் ஒருங்கிருந்து பார்த்துச் சுவைக்கும் நாடகத்திற்கும் சில பல வேறுபாடுகள் உள்ளன. ரசனையில் உள்ள வித்தியாசம் ஒருபுறமிருக்க, கலையாக்கத்திலும் முக்கியமான வேறுபாடுகள் உள. நாடகம் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு ஆகும். கூட்டு முயற்சியிற் பிறந்து, கூட்டமாக மக்கள் இருந்து அனுபவிக்கும் கலை வடிவத்துக்குச் சமுதாய முக்கியத்துவம் நிரம்பவுண்டு. இந்நாடகமும், எழுத்தாளர் என்.கே.ரகுநாதன், கலைஞர்கள் (அம்பலத்தாடிகள்) சேர்ந்து உருவாக்கியதொன்று, தனிமனிதவாதம் அழிந்து சமூகப் பிரக்ஞை நாடகத்தின் தோற்றத்திலேயே முக்கியமாயிருக்கிறது. இயக்கத்தின் சாயலைப் பெற்றுவிடுகிறது. ‘பெயர் பெற்ற’ நாடகாசிரியர்களுக்காகக் காத்திராமல் தொடர்பும் ஆர்வமும் உடைய சிலரது முயற்சியால் நாடகம் சிறப்பாக மேடையேற்றப் படலாம் என்பதற்கு இந்நாடக முயற்சி தக்க எடுத்துக்காட்டாகும்.

கடந்த பத்தாண்டு காலத்திற்குள் ‘டிராமாவின்’ அதீத செல்வாக்கை எதிர்த்து, மரபுவழிக் கலை வடிவங்களை ஏற்றவாறு பயன்படுத்தித் தேசியப் பண்பு பொருந்திய நாடகங்களை உருவாக்குதல் வேண்டுமென்ற வேணவா சிலரிடத்துக் காணப்பட்டது. சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

இருவகையாக இப்பரிசீலனை முயற்சிகள் வெளிப்பட்டு உள்ளன. முதலாவது, யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வழங்கிவரும் நாட்டுக் கூத்துப் பாணியில், சமகாலப் பிரச்சினைகள் சிலவற்றைக் கதைவடிவிலே மேடையேற்றுதல் ஆகும். இப்போக்கிற்குச் சிறந்த உதாரணமாக, சி.மெனகுரு தயாரித்தளித்த சங்காரம் என்னும் நவீன வடமோடிக் கூத்தைக் குறிப்பிடலாம். ;ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைக் காவியப் பண்புடன் காட்டுவதாய் இந்நாடகம் அமைந்ததும் இரண்டாவது, ‘இயல்பான’ உரையாடலுக்குப் பதிலாக, கவிதையில் பாத்திரங்கள் கதைக்கும் கவிதை நாடகங்களைக் குறிப்பிடலாம். இவையும் ‘டிராமா’க்களுக்கு மறுதலையாகத் தோன்றியனவே. இ.முருகையன் எழுதி, நா.சுந்தரலிங்கம் தயாரித்தளித்த கடூழியம் என்னும் குறியீட்டு நாடகத்தை இப்போக்கிற்குச் சிறந்த உதாரணமாய்க் காட்லாம். இதுவும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் எழுச்சியைச் சித்திரிப்பதாகும்.

இவற்றை நோக்கும் பொழுது முக்கியமான ஓருண்மை புலப்படுகின்றது. அடிப்படையான-சமதாய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை கலைஞர்கள் எடுத்தாள முனையும்போதே வடிவத்திலும் பாரதூரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சங்காரம், கடூழியம் ஆகியவற்றில் பொதுப்படையாகவும் கருத்து ரீதியாகவும் அலசப்பட்ட பிரச்சினை கந்தன் கருணை என்னும் இந்நாடகத்தில் மிகவும் துல்லியமாகவும், கூர்மையாகவும், அழுத்தமாகவும் சித்திரிக்கப் படுகிறது. குறியீடுகளில் புகலிடம் தேடாமல், நேரடியாகவே பிரச்சினையை முன்வைத்து நிவாரண மார்க்கம் தேடும் இலக்கிய நோக்கையும் இதிற் காணலாம்.

ஆக, எளிமை, கூர்மை, பயன்பாடு, மக்கட்சார்பு, கூட்டு முயற்சி, தேசியப் பண்பு முதலாய நல்லம்சங்கள் நன்கு பொருந்திய நாடகமாகக் கந்தன் கருணை விளங்குகிறது. தன்னளவில் நிறைவு தருவதாயும், பிறருக்கு முன்மாதிரியாயும் இது அமையும் என நம்புகிறேன்.


--------------------------------------------------------------------------------

கதையின் கதை
என்.கே.ரகுநாதன்

யாழ்ப்பாணத்தில் நிலவும், நிலவுடைமைச் சமுதாயத்தின் மிச்ச சொச்சமான சாதி முறையையும் தீண்டாமைக் கொடுமையையும் எதிர்த்த கிளர்ச்சிகள் பன்னெடுங்கால வரலாற்றையுடையன. காலத்துக்குக் காலம், கிராமங்கள் தோறும் நடைபெற்று வந்த, சிறிதும் பெரிதுமான சாதியடக்கு முறையிலான அக்கிராமங்கள், தனிப்பட்ட முறையிலோ அன்றிக் கிராமம் தழுவிய முறையிலோ எதிர்க்கப்பட்டு வந்துள்ளளன. பொது ஸ்தாபனங்களில் உரிமை கோரும் அடிப்படையில் 1947-ம் ஆண்டு வில்லூன்றி மயானத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், சாதியடக்குமுறைக் கெதிரான கிளர்ச்சிகள் ஒரு பொதுமையான உருவம் பெற்றதைக் குறிப்பிடலாம். அதன் பின்பு, அண்மைக் காலங்களில், சங்கானை, கரவெட்டி, அச்சுவேலி, கொடிகாமம் போன்ற இடங்களில் முன்பு நடைபெற்றதைவிட உருவத்திலும், குணாம்சத்திலும், கனத்திலும் முற்றிலும் வித்தியாசமான முறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி வெறியர்களையும் பிற்போக்குவாதிகளையும் எதிர்த்து உக்கிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். இழப்புகளும், தியாகங்களும் தவிர்க்க முடியாதவையாயிற்று. வெற்றிகளும், போராட்ட அனுபவங்களும் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் முன்னெடுத்துச் சென்றன.

இதனையடுத்து, ஆலயப் பிரவேசத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்து, சாதிவெறியர்களும், பிற்போக்குவாதிகளும் ஆலயங்களில் வியூகம் அமைத்து நின்றபோது, ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த எதிர்ப் புரட்சியாளர்களை முறியடிக்க அணி திரள வேண்டியது தவிர்க்க முடியாத சரி;த்திரக் கடமையாயிற்று. முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்கு நாடு முழுதும் பொங்கெரி பரந்தது போன்ற உத்வேகம் தலைதூக்கியது. பன்றித்தலைச்சி, மாவிட்டபுரம், செல்வச்சந்நிதி போன்ற இடங்களில் நடந்த ஆலயப் பிரவேசப் போராட்டம், வட இலங்கையைக் கிடுகிடுக்க வைத்தது எனலாம். பிற்போக்குவாதி, தனது வர்க்க சுபாவத்தின்படி உடனடியாக அடி பணியாவிட்டாலும், ‘மீசையில் மண் ஒட்டாத’இ கதையாக, அடுத்த ஆண்டுகளில் அவன். ‘சமாதானமாக’ ஆலயக் கதவுகளைச் சகல மக்களின் வழிபாட்டுக்கும் திறந்துவிட்டமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும்.

இந்தப் போராட்ட காலத்திலெல்லாம், நடுநிலைமை வகிப்பதாகச் சொல்லிக் கொண்ட ஒரு பகுதியினர் ‘தர்மோபதேசம்’ செய்ததை நாம் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. ‘கோயிலுக்குள் சென்று வணங்கினால்தான் ஆண்டவன் அருள்புரிவானா? அவன், அங்கும், இங்கும், எங்கும் இருக்கின்றானே!’ என்று தத்துவம் பேசினார்கள் இவர்கள். இது, பச்சையாக, பிற்போக்குவாதிகளுக்கு உதவும் வாதம் என்பதில் சந்தேகமென்ன? இவர்கள், பிற்போக்குவாதிகளுக்குச் சாதகமாகத் திருவாய் மலர்ந்தருளியதைப்போல, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலுள்ள, ‘கனவான்கள்’ சிலரும் “ஆண்டவன் எங்களை உள்ளே வரச் சொல்லிக் கேட்கிறானோ? வெளியே நின்று வணங்கி நாம் ஆசார சீலராகவில்லையோ?” என்று பித்தலாட்டம் செய்தனர். இந்த இருசாராரின் பசப்பு வார்த்தை களிலும் மயங்காது, ஒடுக்கப்பட்ட மக்கள் சரியான போராட்டப் பாதையில் முன் சென்றனர்.

உண்மையில், இந்த ஆலயங்களில் நடைபெற்றதென்ன? “ஆசார சீலராய் எவரும் உள்ளே சென்று வணங்கத் தடையில்லை” என்று பிற்போக்குவாதிகள் மாயமாலம் செய்தார்கள். ஆனால் ஆலயங்களில் ஆசார சீலம் நிலை தடுமாறிற்று. கோயில்களுக்குள் பயங்கரமான ஆயுதங்களும், சண்டியர்களும், சாராயம் போன்ற குடிவகைளும் நிறைத்து வைக்கப்பட்டமை நாடறிந்த கதை. பிற்போக்குவாதிகள், இவற்றை நிறைத்து வைப்பதற்காகக் கர்ப்பக் கிரகத்திலிருந்த தெய்வத்தை நிர்த்தாட்சணியமாக வெளியே, புழுதியில் வீசியெறிந்தார்கள். அப்படி வெளியே, புழுதியில் வீசியெறியப்பட்ட தெய்வத்தை எடுத்து, புழுதி துடைத்து உள்ளே பிரதிஷ்டை செய்ய ஒடுக்கப்பட்ட மக்கள் முயற்சியெடுத்தார்கள் என்று யாரும் பசப்ப முன்வரவில்லை. கோயில்கள், சாதியடக்கு முறையின் நிலைக்களனாகப் பாவிக்கப்படும் அநாகரிகமான ஏகபோகத்தை உடைத்து சகல மக்களுக்கும் அங்கு வணங்கும் உரிமையை நிலைநாட்டவே அவர்கள் ஒன்று திரண்டனர் என்பதே உண்மையாகும்.

* * *

“எல்லாம் வல்ல ஆண்டவன், அடியார்க்கெல்லாம் அருள்பாலிக்கும் ஆண்டவன், ஆண்டாண்டு காலமாய் இந்த மக்கள் அல்லற்படுவதை அறியாதிருக்கிறானா? சாதியமைப்பைக் கட்டிக் காக்கும் நிலைக்களனாக, ஆண்டவா, நீ குடிகொண்டிருந்கும் கோயிலையே பாவிக்கிறார்களே பாவிகள். இதை நீ சகித்துக் கொண்டிருக்கிறாயா? துஷ்டர்களை நிக்கிரகம் செய்து சிஷ்டர்களாகிய எம்மைப் பரிபாலிக்க மாட்டாயா? எம் குறை தீராதா? நாம் ர~pக்கப்படமாட்டோமா?” என்றெல்லாம் ஆலய வாயில்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலித்தது. “கந்தா, கடம்பா, கார்த்திகேயா, முருகா, ஷண்முகா! நீ உண்மையிலேயே எம்மத்தியில் தோன்றி இந்த அக்கிரமத்துக்கு ஒரு முடிவு காணமாட்டாயா?” என்று அவர்கள் பிரலாபித்தார்கள். உண்மையே கந்தன் உருவில் வந்து, தங்கள் குறை தீர்க்க மாட்டாதா? என்று ஏங்கினார்கள். அக்கிரமத்தைப் பூண்டோடு அறுக்க, “கந்தா, உன் கைவேலைத் தா” என்று இரந்து வேண்டினார்கள். எழுத்தாளன் நெஞ்சில் கருணை சுரந்தது; கந்தன் கருணை பிறந்தது. இதுவே கதையின் கதையாகும்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயப் பிரவேசப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமன்றி-இந்த மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவாக, நாடு முழுவதுமுள்ள நல்லவர்களையும், முற் போக்காளர்களையும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஒரே அணியில் திரட்டியது. ஆலயப்பிரவேச இயக்க உச்சக்கட்ட காலமான, 1969-ம் ஆண்டில், பரபரப்பான சூழ்நிலையில், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தனது இரண்டாவது மாநாட்டைக் கூட்டியது. இம் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் பிரசுரிப்பதற்காக, கந்தன் கருணை என்ற தலைப்பில், நான் ஓரங்க நாடகமொன்றை எழுதினேன். மாநாடு நெருங்கிய சமயம், சிறப்பு மலரை விரைவில் அச்சிட்டு முடிக்க வேண்டியிருந்ததால், அம்மலரில் கந்தன் கருணையைப் பிரசுரிக்க முடியாமல் போயிற்று. சில மாதங்களின் பின், நெல்லியடி அம்பலத்தாடிகள், மேடையேற்றுவதற்கு ஒரு நாடகம் எழுதித் தரும்படி கேட்டனர். நான் கந்தன் கருணையைத் தூக்கிக் கொடுத்தேன். ஓரங்க நாடகமான கந்தன் கருணை, காத்தவராயன் கூத்து ரூபத்தில் மாற்றப்பட்டு, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும், கொழும்பு-சரஸ்வதி மணடபத்திலும் மேடையேற்றப்பட்டது. காத்தவராயன் கூத்துக்கு அடுத்தபடியாக, அதே கூத்து வடிவத்தில் உருவாக்கப்பட்ட நாடகம்; கந்தன் கருணையாகும்.

தேவையே ஒரு பொருளின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் பிறந்து, அம்மக்களின் போராட்டத்துக்கு ஓர் ஆதர்ஸமாக, ஆயுதமாக மிளிரும் கந்தன் கருணை பல இடங்களில் மேடையேறிப் பெருமை பெற்றுள்ளது. இந்த நாடகத்தின் மூலக்கதையை எழுதியவன் என்ற வகையில் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

* * *

எதிரி மூர்க்கத்தனமாகத் தாக்க வருகின்றான். அவனை எதிர்த்துத் தாக்கி முறியடிக்க வேண்டும். வேலியில் கிடக்கும் பட்ட தடியோ, வீட்டு அடுக்களையில் கிடக்கும் ஒரு பாறாங்கத்தியோ அல்லது கொல்லன் பட்டடையில் உள்ள ஒரு கட்டாரியோ ஏதோ ஓர் ஆயுதம் வேண்டிக் கிடக்கிறது. அவசரத்தில், மிக அருகில் கையில் பட்டது வேலியில் கிடந்த பட்ட தடிதான். பிடுங்கி, உருவி, எதிரியின் மண்டையைப் பிளந்து அவன் கொட்டத்தை அடக்க முடிந்தது. கொல்லன் பட்டடைக்கு ஓடிப்போய் “அழகாய், கூராய், ஒரு வேல் வடித்துத் தா” என்று கேட்கலாம்; வாங்கலாம்; எதிரியையும் சாய்க்கலாம். ஆனால் அவனைச் சற்றும் முன்னேற விடாமல் அவன் மூர்க்கத்தை, அது எழுந்த அந்தக் கணத்திலேயே மட்டம் தட்டி அடிபணிய வைக்க உதவிய பட்ட தடிக்குள்ள ஆயுதப் பெருமை, வேலுக்குள்ள பெருமைக்குச் சற்றும் குறைந்ததன்று. அந்தச் சந்தர்ப்பத்தில் பட்ட தடிதான் ஆயுதம்.

கந்தன் கருணை நாடகம் இப்போது கூட்டு முயற்சி. எனினும் அதற்குரிய ஆயுத மதிப்பு எத்தகையது என்பதில் சந்தேகமில்லை. வெறும் கலைவாதம் பண்ணும் எழுத்தாளர்கள் சாகாத சிரஞ்சீவி இலக்கியங்கள் படைப்பதற்காகவே, பேனா முனையில் தவஞ் செய்கின்றார்கள். எங்களுக்கு அத்தகைய சிரஞ்சீவி இலக்கியங்கள் வேண்டாம். சீறி வரும் விஷப்பாம்பை அடித்துக்கொல்ல, சிறிய தடியோ, பெரிய தடியோ உடனடியாக வேண்டும்.அந்த நேரத்தில் அந்தக் கம்புதான் எதிரியை வீழ்த்திய ஆயுதம். அது சிரஞ்சீவியாயிருக்கும்! அதற்காக, பாம்பை எப்பொழுதும் தடியால்தான் அடித்துக் கொல்ல வேண்டுமென்று அர்த்தமுமல்ல. கலை, இலக்கியத்தைப் பொறுத்தவரை, அந்த ஆயுதம் எப்பொழுதும் பலமுள்ளதாயும், உடனடியான பயன்பாட்டுக்கு உரியதாயும் அமைய வேண்டும். அந்த வகையில், கந்தன் கருணை ஒடுக்கப்பட்ட மக்களின் கைவேலாகி அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் தன் பங்கைச் செலுத்துகின்றது என்பதில் ஐயத்துக்கிடமேயில்லை!


--------------------------------------------------------------------------------

கந்தன் கருணை


--------------------------------------------------------------------------------

நாடகத்தில் நடமாடுவோர்

முருகன்
நாரதர்
தெய்வயானை
பக்தர்
சூரனார்
அடியார்கள் 6
சண்டியர் 2
காவலர் 2


--------------------------------------------------------------------------------

அவை அடக்கம்

ஏட்டின் எழுத்தறியோம்
எழுத்தாணி எடுத்தறியோம்

பாட்டைப் படித்தறியோம்
பாடும் வகை நாமறியோம்

வித்துவக் கவிஞரல்ல
வித்தைகள் கற்றோரல்ல

கந்தன் கருணைப்பாட்டு
காத்தான் கூத்துமெட்டு

அம்பலத்தாடிகள் நாம்
அம்பலத் தாடவந்தோம்

தப்புத் தவறிருந்தால்
செப்பனிட எடுத்துரைப்பீர்


--------------------------------------------------------------------------------

காட்சி ஒன்று


(திரை விலகுகிறது - நீலவானம் - நாரதர் நிழல் பெரிதாக நீலவானத்தில் தெரிகிறது - நிழல் உருவில் நாரதர்.)

நாரதர்: நாராயண... நாராயண...

பிரம்ம தேவன் பேரன் நான்
புராண கால முனிவன் நான்
நாராயணன் பக்தன் நான்
நாரதர் எந்தன் நாமம் தான்

உலகத்தில் உள்ள தீமைகள் தான்
பலரறியக் கூறுவேன் நான்
கலகத்தால் நன்மை செய்பவன் தான்
உலகத்திற்கே நல்லவன் நான்

(நிழலை நோக்கி நாரதர் மெதுவாக வருகிறார் - வானில் நிழல் சிறுத்துக்கொண்டே வருகிறது.)
நாராயண... நாராயண...

ஏழிசையும் யாழில் மீட்டி
நாவில் பாட்டும் முழங்கவே
தாளக்கட்டை தாளம் இட்டே
நாரதமாமுனி தோற்றினார்

(நீலவானத்திற்கு அருகில் நாரதர் தோற்றுகிறார் - முன் நோக்கி அலங்கார நடையுடன் மெதுவாக வருகிறார்.)

நாராயண... நாராயண...

வணக்கம் வணக்கம் தந்தே
நாரத மாமுனி நான் - இங்கே
வந்தேன் சபைதனிலே
நாரத மாமுனி நான்

ஈரேழுலகம் சென்றேன்
நாரத மாமுனி நான் - அங்கே
ஈழநாடும் கண்டு வந்தேன்
நாரத மாமுனி நான்

ஈழநாட்டின் வடக்கினிலே
நாரத மாமுனி நான் - அங்கே
யாழ்ப்பாணம் பார்த்து வந்தேன்
நாரத மாமுனி நான்

யாழ்ப்பாணச் சீர்கேட்டை
நாரத மாமுனி நான் - இங்கே
யாரிடத்தில் போய் உரைப்பேன்
நாரத மாமுனி நான்

நாராயண... நாராயண...
அந்த யாழ்ப்பாணக் குடாநாடு இனிமேலும் சீர்கெட்டுப் போக வேண்டுமா? அங்கு நடக்கும் அநியாயங்களுக்கு ஒரு முடிவு காண வேண்டாமா? இதைப் பொறுத்துக் கொண்டிருப்பதா? கூடாது! கூடவே கூடாது!!... கலகத்தில்தான் நியாயம் பிறக்கும். அதுவும் இந்த நாரதன் கலகம் என்றும் நன்மையிலேயே முடியும். உம்... (சிந்தனையுடன்) அந்த அநியாயங்களை, அங்கு நடக்கும் அக்கிரமங்களை, யாரிடத்தில் சென்று முறையிடுவேன்? இதற்குத் தகுந்தவர் யார்?... சண்முகா!... முருகா!... கந்தா!... உன்னையன்றி வேறு யார் உளர்? அன்று தேவர் துயர் தீர்க்கச் சூரனை வதைத்த பெரும்! இன்று இப்பாரில் உள்ளோர் துயர் தீர்க்க உன் சக்தி வேல் எடுத்து வருவாயப்பா.

(நாரதர் முன்னோக்கி வருகிறார்-திரை மூடுகிறது-திரைக்கு முன் வந்து)

இதோ! இப்பொழுதே செல்கிறேன். என் வேலனிடம் செல்கிறேன்...

நாராயண... நாராயண...

வேலனைத் தேடி யல்லோ
வேதியன் நான் - இப்போ
வேகமாய்ப் போகின்றேனே
வேதியன் நான்

குமரனைத் தேடியல்லோ
கோள் முனி நான் - அவன்
குன்று நோக்கிப் போகின்றேனே
கோள் முனி நான்

சண்முகனைத் தேடி யல்லோ
சன்னியாசி நான் - இந்தச்
சங்கதியைச் சொல்லப் போறேன்
சன்னியாசி நான்

(நாரதர் அலங்கார நடையுடன் வெளியேறுகிறார். திரை விலக இரண்டாம் காட்சி ஆரம்பம்).


--------------------------------------------------------------------------------

காட்சி இரண்டு


(நீலவானம்-புகைமண்டலம்-நட்சத்திரங்கள் மின்னுகின்றன- ஒரு பக்கம் குன்று-அக்குன்றின் பின்புறமிருந்து ஒளிக்கதிர்கள் வீசுகின்றன- குன்றின் மேல் தெய்வயானை சகிதம் அருள்புரியும் பாவனையில் முருகன் நிற்கிறார்-மணி ஓசை ஓங்காரம் செய்கிறது-உறுமி, தப்பு, தப்பட்டை முதலியன ஒலிக்கின்றன. உடுக்கு வேகமாக ஒலிக்கின்றது)

(நாரதர் அலங்கார நடையுடன் வருகிறார்)

நாரதர்: வேலனைத் தேடியல்லோ
வேதியன் நான் - இங்கே
வேகமாய் வந்து நின்றேன்
வேதியன் நான்

(முருகனுக்கு அருகில் சென்று)

கந்தா! கடம்பா! கார்த்திகேயா! குகா! குமரா! குறத்தி மணாளா!சண்முகா! சரவணா! சுப்ரமணியா!...

முருகன் : வருக, வருக, நாரதரே! உமது வரவு நல்வரவாகுக. இன்று என்ன கொண்டுவந்தீர்? மாங்கனியா? அல்லது இன்னும் ஒரு கன்னியா, கலகம் இல்லாவிட்டால் காலடியும் எடுத்து வைக்கமாட்டீரே?

நாரதர் : நாராயண.. முருகா! அடியேன் கலகம் செய்ய மட்டும்தான் வரவேண்டுமா? தங்கள் அருள் பெற வரக்கூடாதா? தேவர் குறைதீர்த்த தேவா! (வணங்கி) வணங்குகிறேன். என்னை இரட்சித்தருள வேண்டும்.

முருகன் : (அருள் புரிதல்)

நாரதர் : (தெய்வயானையைப் பணிந்து) தேவர் குல தேவி! தேவேந்திரன் திருமகளே! பாலித்தருள் செய்க.

தெய்வயானை :
(அருள் புரிதல்)

நாரதர் : (பார்க்காது பாசாங்கு செய்தபடி) வேடர் குலக் கொழுந்தே! வள்ளி அம்மையே! (நிமிர்ந்து பார்த்து திடுக்குற்றதுபோற் காட்டி) முருகா! எங்கே வள்ளி அம்மையைக் காணவில்லையே! தங்கள் காதல் நாயகி வள்ளி அம்மை எங்கே?

முருகன் : நன்று... நாரதரே... நன்று (சிரித்து) உமது நாடகத்தை நன்றாகத்தான் ஆரம்பித்துள்ளீர். தொடர்ந்து நடாத்தும். என் காதல் நாயகி (அழுத்தமாக)வே...டர்... குலக்கொழுந்து எங்குற்றார் என்றுதானே கேட்கின்றீர்?

நாரதர் : ஆம் முருகா! ஆம்... வள்ளி அம்மையைத் தாங்கள்.

முருகன் : நாரதரே! என் வள்ளி அங்கே...

சீற்றம்தான் கொண்டல்லோ வள்ளிநாயகி
எந்தன் வள்ளி நாயகி
எந்தன் வள்ளி நாயகி
போனாவாம் சீக்கிரமாய்

நாரதர் : ஏன் கொண்டா சீற்றம் வள்ளி அம்மை
எங்கள் வள்ளி அம்மை
எங்கள் வள்ளி அம்மை
எங்கு போனா சீக்கிரமாய்

முருகன் : தொழிலாளர் துயர் தீர்க்க வள்ளிநாயகி
எந்தன் வள்ளி நாயகி
எந்தன் வள்ளி நாயகி
போனாவாம் இலங்காபுரி

நாரதர் : இலங்கைக்கா? முருகா! நானும் அங்கிருந்துதானே வருகின்றேன். தங்கள் காதல் நாயகி வள்ளி அம்மை இலங்கையின் எந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார்கள்?

முருகன் : நாரதரே! அங்கே இலங்கை நாட்டின் மத்தியிலே.

மலைக்கு தலை நடுவே
இலங்கை மலைநடுவே
மலையகத் தோட்டங்களாம்
தேயிலைத் தோட்டங்களாம்

நாரதர் : ஆம் முருகா! ஆம், அழகான தேயிலைத் தோட்டங்கள்.
முருகன்: அந்த அழகான,

மலையகத் தோட்டங்களில்
தேயிலைத் தோட்டங்களில்
நிலையின்றி வாடுகின்றான்
கூலியாள் மாளுகின்றான்.

நாரதரே! இலங்கையின் குறிஞ்சி நில மக்கள், இழப்பதற்குத் தம் விலங்குகளைத் தவிர வேறு ஏதும் இல்லாத பாட்டாளி மக்கள், தோட்டத் தொழிலாளர்கள். அவர்கள் தாம் படும் பாட்டைக் கதிர்காமத்தில் சென்று முறையிட்டார்கள். குறமகள் அல்லவா வள்ளி? தன் மலையக மக்களை நேரில் கண்டு அவர்கள் துயர் தீர்க்கப் புறப்பட்டுவிட்டா.

நாரதர் : நாராயண! நாராயண!! (கன்னத்தில் போட்டு) முருகா! என்னை மன்னித்தருள வேண்டும்.

முருகன் : மன்னிப்பா!

நாரதர் : ஆம், முருகா! தங்களைத் தவறாக நினைத்து விட்டேன். இது யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளதால் ஏற்பட்ட பழக்கதோஷம். மன்னித்தருள வேண்டும்.

தெய்வயானை :
என்ன நாரதரே! விளக்கமாகக் கூறும்.

நாரதர் : நான் சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே.

தெய்வயானை :
என்ன நாரதரே! பீடிகை பலமாக இருக்கிறது... நான் பார்த்துக் கொள்ளுகின்றேன். பயமின்றிக் கூறும்.
நாரதர் : தேவி! தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

முருகன் : கூறும் நாரதரே! பயமின்றிக் கூறும். நீர் வந்த நோக்கம் நிறைவேற வேண்டாமா? உம்... உம்... கூறும்.

நாரதர் : முருகா... நான் நினைத்தது... நான்... தவறுதான். இருந்தாலும் கூறிவிடுகிறேன். ஒருமுறை, ஒரே ஒரு முறை என் சந்தேகத்தைக் கூறிவிடுகிறேன். முருகா... முருகா...

விவாகம் செய்தீர்கள் என்றும் பாராமலே
நீங்கள் பாராமலே - அம்மையை
விலக்கிவிட்டடீர்கள் என்றே கருதிவிட்டேன்
நானும் கருதி விட்டேன்.

முருகன் : (திடுக்குற்று - தெய்வயானையைப் பார்த்து)
என்ன!... தேவி! நாரதர் என்ன கூறுகின்றார்!

தெய்வயானை :
விலக்கி ஏன் வைக்க வேண்டும் நாரதரே
ஐயா நாரதரே - வள்ளி
விட்டகுறை என்ன நாரதரே
கூறும் நாரதரே

நாரதர் : கீழ்சாதி மகள்தான் வள்ளி அம்மை
எங்கள் வள்ளி அம்மை - என்றே
களங்கம்தான் கண்டீரோ தேவர் நீங்கள்
தாயே தேவர் நீங்கள்

தெய்வயானை :
கீழ்சாதி மகள்தான் வள்ளி அம்மை
எங்கள் வள்ளி அம்மை - என்றே
களங்கம் ஏன் கண்டீரோ நாரதரே
கூறும் நாரதரே
நாரதர் : வேடர் குலம் என்றே களங்கம் கண்டு
தாயே களங்கம் கண்டு - அம்மையை
விலக்கி விட்டீர்கள் என்றே நான் நினைத்தேன்
தாயே நான் நினைத்தேன்.

தெய்வயானை :
என்ன கூற்றுக் கூறிவிட்டீர், நாரதரே, என்ன கூற்றுக் கூறிவிட்டீர்? வேடர் குலமா? கீழ்சாதியா!! இப்படியும் ஒரு கொடுமை உண்டா? தேவர் உலகில் இல்லாத முறை கூறுகின்றீரே. நீர் இதை எங்கு கண்டீர்?

நாரதர் : தேவி..

பள்ளன் என்றும் பறையன்
நளவனென்றும் - சாதிகள்
பண்பின்றிப் பலவுண்டு தேவியரே

தெய்வயானை :
என்ன! பள்ளனா! அப்படி என்றால்?

நாரதர் : தாயே...

பள்ளன் என்றால் கீழ்சாதி
என்கிறாரே - அவன்
பனையேறும் தொழிலாளி தேவியரே

தெய்வயானை :
பனையேறுவதால் அவன் கீழ்சாதியா?

நாரதர் : தமிழர்கள் வகுத்த
முறையிதுவே - செய்யும்
தொழிலாலே சாதி கண்டார் தேவியரே

முருகன் : சிவ சிவ, கேட்கவே காது கூசுகிறது நாரதரே! இந்த சாதிமுறை எந்த உலகத்திற்கும் ஒவ்வாதது. காட்டுமிராண்டித்தனமானது. இதை ஒழிப்பதற்காகவே... நான்...

சாதிமுறை கூடாதென்றே - புவியில்
சாதிமுறை கூடாதென்றே - வேடர்
சாதிமகள் வள்ளியை நான் மணம் புரிந்தேன்
சாதிமுறை கூடாதென்றே

சமத்துவத்தைக் காட்டிடவே - புவியியல்
சமத்துவத்தைக் காட்டிடவே - இரு
சாதிகளிலும் இருந்து பெண் எடுத்தேன்
சமத்துவத்தைக் காட்டிடவே

தேவர் மகள் தெய்வானையுடன் - இந்திரன்
தேவர் மகள் தெய்வானையுடன் - வேடர்
தேவி வள்ளி நாயகியைச் சேர்த்து வைத்தேன்
தேவர் மகள் தெய்வானையுடன்

நாரதர் : (ஏளனச் சிரிப்பு) முருகா! ஒன்று இரண்டு திருமணங்களால் சாதி முறையை ஒழித்துவிட முடியுமா?

சாதிமுறை இன்னும்
மாறவில்லை - தங்கள்
சாதனையும் அதனை ஒழிக்கவில்லை

முருகன் : இன்னுமா சாதிக்கொடுமைகள் அழியவில்லை! நாரதரே! என் தேவியருக்கு அன்றைய நிலையை எடுத்துக் கூறும். தீண்டாமையின் கொடுமைகள் எவ்வாறு இருந்தன என்று கூறும்.
நாரதர் : தேவி...

கீழ்சாதி என்றே அன்று
போட்டுவிட்டார் கட்டு
தோளால் சால்லை அகற்றி
வைத்தார் கமக்கட்டில்

இதுமட்டுமா... அன்று...

மேல் சட்டை போட்டிருந்தால்
மேல்சாதி பொறுக்காது
கீழ்சாதிப் பெண்கள் என்றே
கிழித்தாரே அடுக்காது

பெண்களின் மேல்சட்டைகளைக் கொக்கைச் சத்தகத்தால் கிழித்தார்களே... இது மட்டுமா கொடுமை... தேவி...

வெளியிலே கீழ்சாதியைப்
பார்த்துவிட்டால் பாவம்
வழியிலே இழுத்து வந்தார்
காவோலை அது பாரம்

முருகன் : மேல் சாதி மக்கள் அன்றே
அடக்கி வைத்தார் கொடுமை
கீழ்சாதி மக்கள் என்போர்
இன்றுமா அவர் குடிமை

நாரதரே! இன்றுமா அந்தக் கொடுமைகள் காணப்படுகின்றன?

நாரதர் : இல்லை முருகா இல்லை, தீண்டாமைக் கொடுமைகள் சிறிது மாற்றம் அடைந்துள்ளன. ஆனால் அவை முற்றாக மறைந்து விடவில்லை.
முருகன் : மாறுகின்றன.. முற்றாக மறையவில்லை, என்ன நாரதரே! விளக்கமாகக் கூறும்.

நாரதர் : முருகா! பாரிலே சாதிக்கொடுமை, இந்தத் தீண்டாமை... நில உடைமைப் பிரபுத்துவ சமுதாயத்தின் மிச்ச சொச்சமாகும். முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியில் சாதிப் பாகுபாடு மாற்றம் அடையக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆனால் முழுமையான சமத்துவம் நிலவ வேண்டுமாயின் சமதர்ம சமுதாயம் தோன்ற வேண்டும். முருகா! சமதர்ம சமுதாயம் தோன்ற வேண்டும்.

தெய்வயானை :
நாரதரே! இந்தச் சாதிக்கொடுமை இன்று எந்த அளவில் உள்ளது?

நாரதர் : உலக வரலாற்றிலே யாழ்ப்பாணத் தமிழனுக்கு, இந்தச் சாதிக்கொடுமை ஒரு தனி இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் அளவிற்கு உள்ளது.

தெய்வயானை :
நாரதரே! என்ன கூறுகின்றீர்?

நாரதர் : ஆம் தேவி!... யாழ்ப்பாணத் தமிழனுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவனுக்கு ஒரு தனியான குணமும் உண்டு.

தெய்வயானை:
யாழ்ப்பாணத் தமிழனுக்கு தனிக்குணமா? அது என்ன தனிக்குணம்?

சைவக்குடிமக்கள் யாழ்ப்பாணத்தார் - அவரின் சொந்தக் குணம் என்ன சொல்லிடுவீர்

நாரதர் : ஆமாம் சொந்தக் குணம்தான். பிறவிக் குணம். அவர்களுக்கு உரிமையான தனிக்குணம்.

எங்கள் தேவியர்க்கும் எடுத்துரைப்பேன் - இது எங்கும் இல்லாக் குணம் தனிக்குணம்தான்.

சாதியிலே பள்ளன் பறையன் என்றே - பார்த்து
சாத்திவிட்டார் கோயிற் கதவுகளை

தேவி! இந்தக் குணம், எந்த மதத்தவர்க்கும், எந்த இனத்தவர்க்கும் இல்லாத ஒரு தனிக்குணம். இந்த யாழ்ப்பாணத் தமிழனுக்கே சொந்தமான தனிக்குணம்.

தெய்வயானை :
தமிழ் மக்களா! சங்கம் வைத்து மொழி வளர்த்த தமிழ் மக்களின் பரம்பரையினரா, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடிகளா, ஆலயங்களில் தீண்டாமை பார்க்கிறார்கள்! வெட்கக்கேடு, வெட்கக்கேடு.

முருகன் : நாரதரே! கூறுங்கள், தீண்டாமை எந்த அளவில் உள்ளது என்று என் தேவிக்கு எடுத்துக் கூறுங்கள்.

நாரதர் : தேவி! இது மட்டுமா... இன்னும் கூறுகிறேன். கேளுங்கள்.

சுடுகாட்டினிலும் சாதி பார்ப்பார்
தேவியரே கேளும் - சுடும்
சடலங்களையும் பிரித்து வைத்தார்.
தேவியரே கேளும்

தேனீர்க்கடைகளிலும் சாதிபார்ப்பார்
தேவியரே கேளும் - குடிக்கும்
பேணிகளையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்
பள்ளிக் கூடங்களில் - சாதி பார்ப்பார்
தேவியரே கேளும் - படிக்கும் பிள்ளைகளையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்

கிணறு குளங்களிலும் சாதி பார்ப்பார்
தேவியரே கேளும் - தண்ணீர்க்
கிணறுகளையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்

முடிவெட்டிடவும் சாதி பார்ப்பார்
தேவியரே கேளும் - முடி
வெட்டுபவனையும் பிரித்து வைத்தார்
தேவியரே கேளும்

தெய்வயானை :
போதும் போதும்... கேட்கவே அவமானமாக இருக்கிறது.

முருகன் : விடாதீர் நாரதரே விடாதீர். வந்த காரியம் ஆக வேண்டாமா, கூறும் மேலும் கூறும்.

நாரதர் : தேவி...

கோவியன் வண்ணான் என்றும்
பிரித்து வைத்தார் - அவர்க்கும்
பாவிகள் தனித் தொழில்
ஒதுக்கி வைத்தார்

வேளாளன் என்பதொரு
உயர் சாதியாம் - அவர்கள்
வேதியர்க்கும் அங்கே
கீழ்சாதி தான்

தேவி! தொழிலுக்குத் தொழில் சாதி, மரவேலைக்கு ஒரு சாதி, இரும்பு வேலைக்கு ஒரு சாதி, பொன் வேலைக்கு ஒரு சாதி, மண் வேலைக்கு ஒரு சாதி, சாதி... சாதி... சாதி... எதுவுமே சாதிக்கமாட்டார்கள். சாதி மட்டும் பார்ப்பார்கள். சாதிப் பாகுபாடுகளுக்குச் சிகரம் வைத்தாற்போல் தீண்டாமைக் கொடுமைகள்... தேவி! இன்னும் கூறட்டுமா?

முருகன் : கூறும் நாரதரே கூறும்.

தெய்வயானை :
போதும் நாரதரே போதும், எங்கள் ஆலயங்கள் அநேகம் உள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டிலா இந்த அக்கிரமங்கள்? நாரதரே! இன்று எங்கு ஆலயக் கதவடைப்பு நடக்கின்றது?

நாரதர் : தேவி! அநேகமான ஆலயங்களில் கதவடைப்புத் தான். முக்கியமாகத் தங்கள் நாதன். என் ஆண்டவன் திருமுருகன் எழுந்தருளியிருக்கும் ஆலயம் ஒன்றைக் கூற முடியும். (தெய்வயானையின் காதில் இரகசியமாகக் கூறுகிறார்.)

தெய்வயானை :
சுவாமி
(முருகனின் காதில் இரகசியமாகக் கூறுகிறார்)

முருகன் : நாரதரே! அந்தக் கோயிலா?

நாரதர் : ஆம் முருகா ஆம்... அதே கோயில்தான்... அங்கே இன்று...

மந்தி மறிக்குதையே -
வாசலிலே
மந்தி மறிக்குதையே
குந்தி இருந்து
மந்தி மறிக்குதையே
வாசலிலே குந்தி இருந்து
மந்தி மறிக்குதையே.

முருகன் : நாரதரே! அன்று நந்தனை நந்தி மறைத்த கதை நான் அறிவேன். இது என்ன மந்தி மறிக்கும் கதை! புதுக்கதை, கேட்கவே வெட்கக் கேடாக இருக்கிறது.

நாரதர் : ஆம் முருகா ஆம்... வெட்கக்கேடுதான்

சந்தி சிரிக்குதையே -
பார்த்து
சந்தி சிரிக்குதையே
மந்தியைப் பார்த்து
சந்தி சிரிக்குதையே
வாசலில்லாத மந்தியைப் பார்த்து
சந்தி சிரிக்குதையே.

முருகன் : நாரதரே! என்று கோயில் முன்னே நின்று அட்டகாசம் புரியும் அந்த மந்தியை விரட்ட அங்கு மானிடர்தான் இல்லையோ?

நாரதர் : மந்தியைத்தான் விரட்டச் சென்றால்
வேலவா கேளும்
மனிதக் காவல் நாய்கள் கடிக்குதையோ
வேலவா கேளும்
அடியாரைக் கோயில் முன்னே
வேலவா கேளும்
தடி கொண்டே அடித்தாரையோ
வேலவா கேளும்

தீயோர்கள் கோயில் முன்னே
வேலவா கேளும்
தீப்பந்தத்தாலே சுட்டாரையோ
வேலவா கேளும்
முருகன் : நாரதரே! இந்த அநியாயங்களை மக்கள் பொறுத்துக் கொண்டா இருக்கிறார்கள்.

நாரதர் : முருகா! பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. எங்கு அடக்குமுறை உண்டோ அங்கு எதிர்ப்பும் உண்டு. இந்த அநியாயங்களை எதிர்த்து மக்கள் போராடத் துவங்கிவிட்டார்கள்.

தெய்வயானை :
சுவாமி! மக்களே விழித்தெழுந்துவிட்டார்கள். தாங்கள் பார்த்துக் கொண்டா இருப்பது? அன்று தேவர் குறை தீர்த்த தேவா! இன்று பாரில் உள்ளோர் குறை தீர்க்க தேவலோகம் விட்டு பூவுலகம் செல்வோம்.

முருகன் : நாரதரே! இனிமேலும் நான் பொறுத்துக்கொண்டு இருப்பதா... முடியாது.

வென்று வந்தேன் சூரனை
வென்று வந்தேன் - அன்று
வேலேந்தி நானும்
வென்று வந்தேன்

போய்வருவேன் நானும்
போய்வருவேன் - இன்று
பொல்லாதாரை ஒழிக்க
போய் வருவேன்

வேலேந்தி நானும்
போய்வருவேன் - அந்த
வீணரை வீழ்த்;;தியே
நான் வருவேன்

தெய்வயானை :
சென்று வருவோம் நாம்
சென்று வருவோம் - அந்த
சாதி வெறியர்களைச்
சாய்த்து வருவோம்
சென்று வருவோம் நாம்
சென்று வருவோம் - அவரை
சங்காரம் செய்திடவே
சென்று வருவோம்

முருகன் : தேவியும் வரவேண்டுமா! வேண்டாம் தேவி, வேண்டாம்.

போராட்டம் நடக்கும் இடம்
தேவியரே கேளும் - நாங்கள்
போர்க்கோலம் பூண்டு போறோம்
தேவியரே நில்லும்

தெய்வயானை :
கட்டாயம் நான் வருவேன்
நாதாவே கேளும் - அது என்
கடமை என்று நீர் அறிவீர்
நாரதரே கூறும்

முருகன்: தேவி நான் ஒருவன் போதாதா அந்த கலியுக அசுரனை அடக்க?

(நாரதரைப் பார்த்து)

நாரதரே! நீர்தான் தேவிக்கு நியாயம் கூற வேண்டும்.

நாரதர்: நாராயண... நாராயண...

தெய்வயானை :
நாரதரே! இது என்ன நியாயம். வள்ளி தன் கடமையை ஆற்ற மலையகம் செல்லலாம் நான் என் கடமையயைச் செய்ய யாழ்ப்பாணம் செல்லக் கூடாதா?

நாரதர் : நாராயண... நாராயண...

முருகன் : என்ன நாரதரே! நாராயணன் நாமத்தைக் கூறிவிட்டு வாழா இருக்கின்றீர்.

நாரதர் : முருகா தேவி கூறுவதிலும் நியாயம் இருக்கிறது.

முருகன் : அப்படியானால் போராட்டம் நடக்கும் இடத்திற்குக் கூட்டிச் செல்வதா?

நாரதர் : வேண்டாம். அம்மையார் இந்தப் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வரவேண்டாம். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குப் பெரும் பிரச்சினை ஒன்று உள்ளது. தேவி விரும்பின் தன் பங்கைச் செலுத்துவதற்கு அப் பிரச்சினையில் ஈடுபடலாமே.

முருகன் : ஒரு கல்லில் இரு கனிகளா! நாரதரே! நீர் சரியான ஆள் தான் ஐயா.

தெய்வயானை :
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குப் பிரச்சினையா?

நாரதர் : தேவி! இது ஒரு பெரும் பிரச்சினை. தாங்களே ஆராய்தல் சாலச் சிறந்தது. என் ஆண்டவன் முருகன் முன் செல்ல வழி அனுப்பி வையுங்கள்.

முருகன் : போகவிடை தான் தருவாய்
போருக்கு நானும் - தீமை
போக்கிடவே அனுப்பிடுவாய்
தேவியரே நீரும்

தெய்வயானை :
வெற்றிவாகை சூடி வாரீர்
நாதாவே சென்று - அந்த
வீணர்களை அடக்கி வாரீர்
நாதாவே வென்று.

(முருகனும் நாரதரும் முன் வருகிறார்கள்-திரை மூடுகிறது- திரைக்கு முன் நின்று)

முருகன் : பூலோகம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - நாங்கள்
போர்க்கோலம் பூண்டு செல்வோம்

நாரதர் : பூலோகம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - நாங்கள்
போர்க்கோலம் பூண்டு செல்வோம்

முருகன் : யாழ்ப்பாணம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - போவோம்
யாருக்குமே அஞ்சமாட்டோம்

நாரதர் : யாழ்ப்பாணம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - போவோம்
யாருக்குமே அஞ்சமாட்டோம்

(முருகனும் நாரதரும் வெளியேறுகிறார்கள்-திரை விலக மூன்றாம் காட்சி ஆரம்பம்)


--------------------------------------------------------------------------------

காட்சி மூன்று


(கோயிற் கோபுரம்-பக்தர்கள் காவடியாட்டத்துடன் வருகிறார்கள்)

[காவடி ஆட்டம்]

மயிலிற் காவடியாம் - முருகனுக்கு
மயிலிற் காவடியாம்
மக்கள் குறை தீர்க்க
மனங் கொண்டாடும்
மயிலிற் காவடியாம் - முருகனுக்கு
மயிலிற் காவடியாம்

சேவற் காவடியாம் - சுப்பனுக்கு
சேவற் காவடியாம்
சேவை செய்திடச்
சித்தம் கொண்டாடும்
சேவற் காவடியாம் - சுப்பனுக்கு
சேவற் காவடியாம்
தேரிற் காவடியாம் - தேவனுக்கு
தேரிற் காவடியாம்
தொண்டு செய்திடத்
திடம் கொண்டாடும்
தேரிற் காவடியாம் - தேவனுக்கு
தேரிற் காவடியாம்

ஆட்டக்; காவடியாம் - அழகனுக்கு
ஆட்டக் காவடியாம்
அன்பு கொண்டே
அடியவர் ஆடும்
ஆட்டக்; காவடியாம் - அழகனுக்கு
ஆட்டக் காவடியாம்

(காவடி ஆட்டக்;காரர்கள் ஆடியபடி அரைவட்டமாக நிற்க, கரகம் ஆடியபடி உள்ளே வருகிறது)

[கரக ஆட்டம்]

தேடுகினம் தேடுகினம் தேவி தேவி - அம்மா
தேடுகினம் தேடுகினம் மாரி தேவி

தொழிலாளர்; தேடுகினம் தாயே தாயே - அம்மா
தொழுதிடவே தேடுகினம் மாரி தாயே

ஏழைமக்கள் தேடுகினம் அம்மா அம்மா - அம்மா
எழில் முகத்தைத் தேடுகினம் மாரி அம்மா

விவாசாயி தேடுகினம் ஆச்சி ஆச்சி - அம்மா
விருப்புடனே தேடுகினம் மாரி ஆச்சி

உலகத்து நாயகியே தேவி தேவி - அம்மா
ஊழிக்கூத்து ஆடனணை மாரி தேவி

தேசாதி தேசமெல்லாம் தாயே தாயே - அம்மா
திருநடனம் செய்யனணை மாரி தாயே

நகருக்கு நகர் சென்று அம்மா அம்மா - அம்மா
நடமாடி வாவனணை மாரி அம்மா

ஊர்விட்டு ஊர்தாண்டி ஆச்சி ஆச்சி - அம்மா
உருவாடி வாவனணை மாரி ஆச்சி

தொழிலாளர் துயர் தீர்க்க தேவி தேவி - அம்மா
துடித்தோடி வாவனணை மாரி தேவி

பாட்டாளி துயர் தீர்க்க தாயே தாயே - அம்மா
பறந்தோடி வாவனணை மாரி தாயே

ஏழை மக்கள் துயர் தீர்க்க அம்மா அம்மா - அம்மா
எழுந்தோடி வாவனணை மாரி அம்மா
விவாசாயி துயர் தீர்க்க ஆச்சி ஆச்சி - அம்மா
விரைந்தோடி வாவனணை மாரி ஆச்சி

தேடுகினம் தேடுகினம் தேவி தேவி - அம்மா
தேடுகினம் தேடுகினம் மாரி தேவி.

(உடுக்கு முதலிய வாத்தியங்கள் விரைவாக ஒலிக்கின்றன- காவடிகள், கரகத்தைச் சுற்றி ஆடுகின்றன-ஆடியபடியே அடியவர்கள் கோயிலுக்குள் செல்ல முயலுகிறார்கள்-சூரனார் கோயிலுக்குள் இருந்து வெளியே வந்து)

சூரனார் : டேய்! யாரங்கே! சாத்தடா கதவை. கதவைச் சாத்தடா. எளியதுகள் எல்லாம் எழும்பி வந்திட்டினம். டேய், நிறுத்து காவடியை. காவடியோடை வந்தனியளோ? தூரப்போ. கிட்ட வராதே. ஒருத்தனும் வாசற்படி தாண்டக்கூடாது. போ...
கோபுர வாசல் தாண்ட -
பள்ளரே உங்கள்
கோத்திரத்தில் வழியுமில்லை

சாத்திரத்தில் இடமுமில்லை -
சாதகமாகவே
சாத்திரத்தில் இடமுமில்லை

கோயிலுக்குள் பனையுமில்லை -
நீங்கள் சீவக்
கோயிலுக்குள் பனையுமில்லை

நந்தனை மறித்த நாங்கள் -
பறையா உங்கள்
நந்தனை மறைத்த நாங்கள்
தட்டாமல் வெளியே போடா -
நளவா நீயும்
தட்டாமல் வெளியே போடா

டேய்... எல்லாரும் போ.. எட்டப் போ... கிட்ட வராதே... தீண்டாதே துடக்கு... பிராயச்சித்தம் செய்யவேணும் போ...

பக்தர் : பிறப் பொக்கும் என்றே சொன்னார் - தமிழர்
பெரும் புலவர் வள்ளுவனார்

சாதியைச் சாடிநின்றே - தமிழில்
போதித்தார் ஒளவைப் பாட்டி

சாதிகள் இல்லையடி - பாரதி
சாற்றிடுதல் பாவம் என்றார்

ஒன்றே குலம் என்றெமக்கு - திருமூலர்
மந்திரமும் தந்தார் அன்று
காந்தியும்தான் சொல்லி வைத்தார் - ஐயாவே
காதினாலும் கேட்டீர் இல்லை

புத்தர்முதல் யேசுவரை - ஐயாவே
புத்தி சொன்னார் கேட்டீர் இல்லை

எத்தனைபேர் சொல்லி வைத்தார் - ஐயாவே
அத்தனையும் மறந்துவிட்டீர்

சூரனார் : என்ன! என்ன!! நியாயம் பேசுகிறீரே? என்னோடை நியாயம் பேசுகிறீர் நீர்... டேய்!

மேல்நாடு சென்றவன் நான் -
பல பெரிய மனிதருடன்
மேற்படிப்புப் படித்தவன் நான்

ஓய், நியாயம் பேசுகிறீர் நீர்...

சட்டங்கள் கற்றவன் நான்-
பல சட்ட நிபுணரும்
சித்தி பெற்றார் என்னாலேதான்

வேதங்கள் கண்டவன் நான் -
பல வேதியரும்
வருவாரே என்னிடம் தான்

ஓய், சாத்திரம் பேசுpறீரோ... நீர்... சாத்திரம்

சாத்திரத்தில் மேதை நான்
பல சாஸ்திரிகளும்
சாற்றிடுவார் நீ அறிவாய்

(சிறிது அமைதியாக) எடே பொடியள்! உங்கடை கொப்பன்மார் எங்களைக் கண்டால் என்ன மட்டு மரியாதை. எவ்வளவு அடக்க ஒடுக்கம். நீங்கள் ஏன்ரா இப்ப கெட்டுப் போறியள். நான் நாலும் அறிஞ்சவன், சட்டங்கள் தெரிஞ்சவன் எண்ட முறையிலே உங்களுக்குச் சொல்லுறன், எல்லாரும் மரியாதையாக உங்கடை வீடுகளுக்குப் போங்கோடா. வந்த வழியைப் பார்த்துக்கொண்டு வீட்டுக்குப் போங்கோடா பொடியள். (பக்தரைப் பார்த்து) எட மேனை! நல்ல பிள்ளை மாதிரி உவங்களைக் கூட்டிக் கொண்டு வீட்டை போ...

பக்தர் : ஐயா! பெரியவரே! சட்டம் எங்கள் பக்கம்தானே இருக்கு...

சட்டம்தான் இருக்குதையா
கோயிலுக்குள் செல்ல - இந்தக்
கோயிலுக்குள் செல்ல - அந்தச்
சட்டத்தை எதிர்த்திட்டால்
இழுத்திடுவேன் கோட்டில்

சூரனார் : (அலட்சியமாகச் சிரித்து) சட்டம் பேசுறார் பொடிப்பயல். எப்பவடா கோடு கண்டனியள்.

கோடுபல கண்டவன் நான்
போடா நீ வெளியே - இங்கே
போடா நீ வெளியே - அங்கே
கோட்டில் வந்து பேசு இப்போ
போடா நீ வெளியே

வழக்குப் போடப் போறாராம். டேய், கோட்டில் வந்து சந்திக்கிறன். போடா போ.

பக்தர் : வாயில் வந்ததைப் பேச வேண்டாம்
பெரியவரே கேளும் - ஐயா
பெரியவரே கேளும் - மெய்யாய்
வாசல்படி தாண்டப் போறோம்
பெரியவரே கேளும்

கண்டபடி பேச வேண்டாம்!
கற்றவரே கேளும் - ஐயா
கற்றவரே கேளும் - மெய்யாய்
கதவு தாண்டிச் செல்லப் போறோம்
கற்றவரே கேளும்

(பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சித்தல்)

சூரனார் : தம்பி, இங்கே ஓடிவாங்கோ... தம்பி, ஓடிவாங்கோ... ஓடிவாங்கோ தம்பி...

(காவலர் இருவர் வருதல்)

தம்பி... தம்பி...

சண்டாள இந்தப் பாதகரை - தம்பி
சப்பாத்தால் உதைத்துத் தள்ளிவிடு

தடுத்திவும் இங்கே வருகின்றார் - தம்பி
தடிகொண்டே அடித்து விரட்டிவிடு

துவக்குகிறார் இங்கு போராட்டம் - தம்பி
துவக்குகளால் சுட்டுத் தள்ளிவிடு

(காவலர்கள் பக்தர்களைத் தள்ளுதல்)

பக்தர் : ஐயா! காவலரே! நாங்கள் கலாட்டா செய்ய வரவில்லை.

ஆலயத்துள் நாமும்
வணங்க வந்தோம் - ஐயா
அதிகாரத்தால் எம்மை வெருட்டுகிறார்

அன்புடனே நாமும்
வணங்கையிலே - ஐயா
அநியாயமாய் எம்மை விரட்டுகிறார்

சூரனார் : அன்புடன் வந்திருக்கினமாம்அன்புடன். எங்கே ஆட்களைப் பாப்பம், ஆர் வந்திருக்கினம் எண்டு. உதார் உங்காலை? எடி வள்ளி! எடி மேனை நீயுமேடி? நாசமாப் போச்சு. பெண்டுகளும் வந்திருக்கிறியளே... நல்லது பெண்டுகளும் வந்திருக்கினம். வாருங்கோ... உதார் உது, இங்காலை வா, முகத்தைப் பாப்பம்... எட நீ எங்கடை புளியடி தம்பிப்பிள்ளையின்ரை பொடியன் எல்லே! நீ ஏன் உவங்களோட வந்தனீ, எட பேப் பொடியா...

மேல்சாதி மகனல்லோ நீதான் - தம்பி
மேல்சாதி மகனல்லோ நீதான் - தம்பி
கீழ்சாதியாருடன் ஏன் நீயும் சேர்ந்தாய் - தம்பி
ஏன் நீயும் சேர்ந்தாய்

எங்கள் பிள்ளையடா நீதான் - தம்பி
எங்கள் பிள்ளையடா நீதான் - தம்பி
இங்காலே நீ வந்து எம்முடன் சேர்வாய்
எம்முடன் சேர்வாய்

என்ன எங்கடை பக்கத்துக்கு வரமாட்டியோ... நீயும் உவங்களோடைதான் நிப்பியோ? எட நீங்கள் அண்டாடங் காச்சியளடா. எங்கடை கால் செருப்புக்கும் பெறுமதி இல்லாத நீங்கள் உவங்களோடைதான் நிப்பியள். பின்ன நில்.
(காவலரைப் பார்த்து) தம்பி உவங்கள் பலாத்காரம் பாவிக்க வந்திருக்கிறாங்கள் உவங்களை விடக் கூடாது.

கெட்டவங்கள் எல்லாம் வந்து
வீதியிலே கோயில் வீதியிலே
கதவுடைக்க நிற்கிறாங்கள்

பக்தர் : கெட்டவங்கள் நாங்கள் இல்லை
வீதியிலே கோயில் வீதியிலே
கதவுடைக்க நிற்கவில்லை

சூரனார் : பக்தியைக் கெடுக்கிறாங்கள்
கோயிலிலே எங்கள் கோயிலிலே
பலாத்காரம் செய்யிறாங்கள்

பக்தர் : பக்தியைக் கெடுக்கவில்லை
கோயிலிலே நாங்கள் கோயிலிலே
பலாத்காரம் செய்யவில்லை

சூரனார் : பலாத்காரம் செய்யவில்லையோ? பின்னை இப்ப என்ன செய்யிறியள்? இங்க மல்லுப் பிடிக்கிறியள். பலாத்காரம் இல்லையாம்.

பக்தர் : ஐயா! கோயில் கும்பிட வாறது பலாத்காரமோ? அல்லது கும்பிடுவதைத் தடுத்து நிறுத்துவது பலாத்காரமோ? குறுக்கே நின்று நீங்கள்தான் பலாத்காரம் செய்கின்றீர்கள். வழியை விட்டு விலகுங்கள். பலாத்காரத்திற்கு இடமே இல்லை.

சூரனார் : (சண்டியன் ஒருவன் வந்து சூரனாரின் காதில் ஏதோ கூறுகிறான்-சரி எனத் தலை அசைத்து அவனைக் கோயிலுக்குள் போகும்படி சைகை செய்துவிட்டு- காவலரை நோக்கி)

தம்பி காவலரே! வீண் கலவரம் ஏற்படும் போல கிடக்கு. பிறகு என்னிலை குறை சொல்லாதையுங்கோ. (அடியார்களைப் பார்த்து) உவங்களோடை இனி நான் கதைக்கத் தயாராயில்லை. ஏலுமெண்டதைப் பார்க்கட்டும். டேய் உங்களாலை ஏலுமெண்டதைப் பாருங்கோ. டேய் என்னைக் கிழவன் எண்டு நினைக்கிறியளோ. ஒருத்தனும் காலடி எடுத்து வைக்கக் கூடாது. நாரி எலும்பு முறிப்பன்.
(பக்தர் கூடிக் கதைத்துவிட்டு கோயிலுக்குள் செல்ல முன்னேறுகிறார்கள்-சிறு கலவரம் ஏற்படுகிறது-சண்டியர்களும் தடிகளுடன் கலந்து கொள்ளுகிறார்கள்-காவலர் தலையிட்டு பக்தர்களை வெளியே தள்ளி விடுகிறார்கள்-சூரனார் கோயிலுக்குள் சென்று விடுகிறார்-திரை மூடுகிறது-காவலரும் பக்தர்களும் திரைக்கு வெளியே நிற்கிறார்கள்.)

பக்தர் : ஐயா, (காவலரைப் பார்த்து)
சட்டத்தில் இடமிருக்கு
உள்ளே போவதற்கு
சட்டத்தில் இடமிருக்கு

பட்டத்தால் வேலையில்லை -
அவர் படிப்புப்
பட்டத்தால் வேலையில்லை

ஐயா! கலாட்டா செய்தது யார்? ஆயுதங்களுடன் வந்தவர்கள் யார்? நாங்களா? அவர்களா?

(காவலர் போய்விடுகிறார்கள்)

பண்புடனே நாமும் வந்தோம்
பாரிலுள்ளோர் பாரும் - ஐயா
பாட்டுடனே நாமும் வந்தோம்
பாரிலுள்ளோர் கேளும்

பக்தி மயமாக வந்தோம்
பாரிலுள்ளோர் பாரும் - ஐயா
பலாத்காரம் செய்யவில்லை
பாரிலுள்ளோர் கேளும்

(பாடிக் கொண்டே பக்தர்கள் போகின்றார்கள்-திரை விலக, நான்காம் காட்சி ஆரம்பம்)


--------------------------------------------------------------------------------

காட்சி நான்கு


(கோயிற் கோபுரம் தூரத்தில் தெரிகிறது-நாரதரும் முருகனும் வருகிறார்கள்)

முரு10நார : பூலோகம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - நாங்கள்
போராட வந்து சேர்ந்தோம்

யாழ்ப்பாணம் நோக்கியல்லோ
நோக்கியல்லோ - வந்தோம்
யாருக்குமே அஞ்ச மாட்டோம்

(பஜனை செய்வது கேட்கிறது)

கதிர்காமக் கந்தனுக்கு - வேல் வேல் வேல்
கதியிங்;கு வேறில்லை - வேல் வேல் வேல்

சந்நிதியில் சுப்பனுக்கு - வேல் வேல் வேல்
சந்நதங்கள் தந்திடுமே - வேல் வேல் வேல்
நல்லூரின் நாதனுக்கு - வேல் வேல் வேல்
நல்லவைகள் செய்திடுமே - வேல் வேல் வேல்

மாவையிலே முருகனுக்கு - வேல் வேல் வேல்
மார்க்கமதைக் காட்டிடுமே - வேல் வேல் வேல்

(பஜனை செய்வதை முருகனும் நாரதரும் காது கொடுத்துக் கேட்கிறார்கள்)

முருகன் : நாரதரே! அதோ, என் பக்தர்கள் பாடுகிறார்கள். சற்றுக் கேளும்.

நாரதர் : ஆம் முருகா! ஆம்... அவர்கள்
பண்ணிசை கேட்கையிலே

முருகன் : மேனி சிலிர்க்குது
பண்ணிசை கேட்கையிலே

நாரதர் : பாசத்;தைதப் பார்க்கையிலே

முருகன் : உள்ளம் குளிருது
பாசத்தைப் பார்க்கையிலே

நாரதர் : பக்தியை உணர்கையிலே

முருகன் : கண்ணீர் மல்குது
பக்தியை உணர்கையிலே

ஆகா! என்ன பக்தி! என்ன பக்தி! இந்த அடியார்களையா கோயில் வெளியே நிறுத்துவது!

நாரதர் : முருகா! தங்கள் அடியார்களை விடுத்து, சற்று அந்தப் பக்கம் பாருங்கள்.

கோயில் கதவடைப்பு
என் துரையே பாரும் - உங்கள்
கோயில் படும் சீர் கேட்டை
அங்கே கொஞ்சம் பாரும்

உள்ளே இருப்பவர்கள்
என் துரையே பாரும் - அவர்கள்
உட்பூட்டுப் பூட்டிவிட்டார்
அங்கே கொஞ்சம் பாரும்

பக்தர்கள் வணங்கும் இடம்
என்துரையே பாரும் - நீரால்
பாவிகள் நனைக்கின்றார்கள்
அங்கே கொஞ்சம் பாரும்

முருகன் : கொடுமை... கொடுமை... அசுரக் கொடுமை...

நாரதர் : முருகா! அதைப் பாருங்கள்.

வேலி அங்கே சுற்றிப்
போட்டிருக்கு - எங்கள்
வேலவனைக் காணத் தடுப்பதற்கு
சண்டியர்கள் சுற்றி
நிற்கின்றார்கள் - எங்கள்
சண்முகனைக் காணத் தடுப்பதற்கு

(சண்டியர்கள் வந்து போகிறார்கள்)

காடையர்கள் சுற்றித்
திரிகின்றார்கள் - எங்கள்
கந்தையனைக் காணத் தடுப்பதற்கு

முருகா...! முருகா...!

வேதமல்லோ இவை
பேசுகினம் - மனம்
வேகுதையா மெத்த ஆழமாக

முருகன் : நாரதரே! அதோ பாரும் அங்கே...

சகடையில் இருப்பவன் யார்
நாரதரே கேளும் - அங்கே
சண்டியர்கள் மத்தியிலே
நாரதரே கூறும்

நாரதர் : அவனா? முருகா!... அவன்

சாதி வெறியர்களின்
தான்தோன்றித் தலைவன் - அவன்
சரியான பெயர் கூறின்
கலியுக சூரன்

முருகன் : தலையும் நரைச்சுப் போச்சு
நாரதரே பாரும் - அந்த
தடிக் கிழவன் செயலைச் சற்று
நீர் எனக்குக் கூறும்

நாரதர் : புலியாட்டம் ஆடுகிறான்
என் துரையே கேளும் - அவன்
கடதாசிப் புலியாவான்
நீரும் கொஞ்சம் பாரும்

முருகன் : நாரதரே!... இவன் ஒரு இரக்கமற்ற அசுரன்... இவன்

தலையிலல்லோ கனம்
மெத்தவுண்டு - இந்தத்
தறுதலையின் கனம்
தட்ட வேண்டும்

அழிவையல்லோ இவன்
தேடிக் கொண்டான் - மிக்க
ஆழத்திலே காலை
விட்டு விட்டான்

நாரதரே! இவன்தானோ இப்போ ப10சாரி?

நாரதர் : பூசாரியா!... முருகா!
குருக்கள் இங்கே இவனைச்
சேர்த்துக் கொண்டே - இவன்
கொள்கையிலே துணையாய்
நிற்கின்றாரே

சாவி இப்போ இவன்
கைகளிலே - இங்கே
சாத்திவிட்டான் கோயில்
சாதி பார்த்து

முருகன் : நாரதரே! ‘எம்பீ” மார்கள் எங்கு சென்றார்கள்? இவர்களுக்கு ஒருவரும் துணையாக வரவில்லையே.

எம்பீமார்கள் நாரதரே
எங்கு சென்றார் - அவர்
இங்கு வந்தேன் இவர்க்கு
உதவவில்லை

நாரதர் : முருகா!... ‘எம்பீ”மாரும் ‘எம்பீ”யாக விரும்புகிறவர்களும் இங்கு வரமாட்டார்கள்.

தேர்தலிலே வெல்ல
வேண்டுமென்றே - இங்கே
தோன்றிடவே கொஞ்சம்
கூசுகினம்

சாதிமான்கள் துண்டு
நின்றுவிடும் - அவர்
சாதியிலே கொஞ்சம்
சாடி விட்டால்

பத்திரிகை நியாயம்
பேசிவிட்டு - அவர்
மெத்தையிலே வீட்டில்
தூங்கி விட்டார்

வாக்குத்தான் பொறுக்கிகள்
எம்பீமார்கள் - அவர்
வாக்குக் கணக்கெடுத்தே
எதுவும் செய்வார்

நாரதர் : முருகா! கோயில் முகப்பை விடுத்து வாருங்கள். தெற்கு வீதிக்குச் சென்று அங்கு என்ன நடக்கின்றது என்று கவனிப்போம்.

(முருகனும் நாரதரும் முன் வருகிறார்கள்-திரை மூடுகிறது- நாரதரும் முருகனும் திரைக்கு முன் நின்று)

முருகன் : நாரதரே! அதோ! அங்கே... அந்தப் பக்கம் பாரும். அங்கே வாகனங்களில் ஏதோ ஏற்றுகிறார்களே. அவை என்ன?

நாரதர் : ஆயுதங்கள் ஐயா
ஏற்றுகிறார்கள் - உங்கள்
ஆலயத்துள் இருந்து
எடுத்த வந்தார்

(சண்டியர்கள் கட்டுக்கட்டாக ஆயுதங்களைச் சுமந்து போகிறார்கள்.

முருகா!... பார்த்தீர்களா
கெட்டவனும் கத்தியும்
அங்கே உண்டு - உங்கள்
கோயிலுக்குள் இருந்து
எடுத்து வந்தார்

எறிகுண்டு துப்பாக்கியும்
அங்கே உண்டு - உங்கள்
ஆலயத்துள் இருந்து
எடுத்து வந்தார்

(சண்டியர் போத்தல்கள் சிலவற்றை மறைத்தும் மறைக்காமலும் கொண்டு போகிறார்கள்)

முருகன் : நாரதரே! கோயிலுக்குள் இருந்து போத்தல்கள் கொண்டு வருகின்றார்களே, அவை என்ன? பால் போத்தல்களா? அல்லது நெய்ப் போத்தல்களா?

நாரதர் : இல்லை. முருகா! இல்லை... அவை

சாரயப் போத்தல்களே
சண்முகா அந்தச்
சண்டியர்க்குக் கொடுத்திடவே

வேலவனே உந்தன் ஆலயத்துள்

கள்ளும்தான் முட்டிகளில்
கந்தா அந்தக்
காடையர்க்குக் கொடுத்திடவே

முருகன் : இது என்ன அநியாயம்... அக்கிரமம்... என் அடியார்களைக் கொன்று குவிக்கவா மதுபானங்களும் ஆயுதங்களும் வந்தன? நாரதரே! வாரும் நாமும் கோயிலுக்குள் சென்று நடப்பதைக் கவனிப்போம்.

(முருகனும் நாரதரும் செல்கிறார்கள்-திரை விலக, ஐந்தாம் காட்சி ஆரம்பம்)


--------------------------------------------------------------------------------

காட்சி ஐந்து


(கோயிற் கோபுர வாசல்-சூரனார் அமைதியின்றிக் காணப்படுகின்றார்-சண்டியர்கள் அவருடன் ஏதோ தர்க்கம் செய்துகொண்டு நின்றுவிட்டுச் செல்கிறார்கள்)

சூரனார் : (தனிமையில்) எல்லாம் என்னாலைதான் வந்ததாம்! தங்கடை வருவாய் குறைஞ்சு போச்சுதெண்டு குருக்களவைக்குக் கோவம். அட, இவர்கள் கூலிக்கு மாரடிக்க வந்தவர்களுக்கு ஏன் என்னிலை கோவம். என்னோடை வந்து மோதுப்படுறாங்கள். இவையளுக்குக் குடுக்கிறதைக் குருக்களவை குடுக்கவில்லைப்போல. நானும் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி வந்து நல்லாய் மாட்டுப்பட்டுப் போனன்... இருந்தாலும் விடக்கூடாது. எளியதுகளை இதில அடக்கினால்தான் நாங்கள் மனிசராய் உலாவலாம். (முருகனும் நாரதரும் வருகிறார்கள்) உதார் வாறது, வேஷம் கட்டிக்கொண்டு? வாறாங்கள். கையிலை வேலும் கிடக்கு. பேசாமல் காணாதமாதிரி உள்ளே போகட்டோ? சீ... சீ... கண்டிட்டாங்கள் போல கிடக்கு. இனிமேல் போகக் கூடாது. என்ரை கவுரவம் என்ன ஆகிறது? என்ன வந்தாலும் விடக்கூடாது. வரட்டும். செய்யிறன் வேலை. (சூரனார் வாசலை மறைத்துக் கொண்டு நிற்கிறார்)

முருகன் : நாரதரே! அதோ சூரன் கோயில் வாசலை மறித்துக் கொண்டு குறுக்கே நிற்கின்றான். வாரும். அவனைத் தாண்டிக் கோயிலுக்குள் செல்வோம்.

(நாரதரும் முருகனும் சூரனுக்கு அருகில் செல்கிறார்கள்)

சூரனார் : ஏய்! ஆர் நீங்கள்?... என்ன சங்கதி? எங்கே போறியள்? வேஷம் கட்டிக்கொண்டு வெளிக்கிட்டு இருக்கினம் ஆரை ஏமாற்ற? டேய்!

உள்ளே போக வேண்டாம்
வெளியே நில்லுங் கோடா
உங்கள் வேஷம் எல்லாம்
இங்கே செல்லாதடா

(முருகனைப் பார்த்து)

வேலவன் போல் நீயும் வேஷம்தான் பூண்டு
வருகின்றாயோ என்னை ஏமாற்ற இன்று

உள்ளே போக வேண்டாம்
வெளியே நில்லுங் கோடா
உங்கள் வேஷம் எல்லாம்
இங்கே செல்லாதடா

(நாரதரைப் பார்த்து)

நாரதர் போல் நீயும் வேஷம்தான் பூண்டு
நடிக்கின்றாயோ என்னை ஏய்த்தி;ட இன்று

உள்ளே போக வேண்டாம்
வெளியே நில்லுங் கோடா
உங்கள் வேஷம் எல்லாம்
இங்கே செல்லாதடா
(முருகனைப் பார்த்து) ஓய்! உம்முடைய பேர் என்ன? ஊர் என்ன? விலாசமும் உண்டோ?

முருகன்: (நாரதரிடம்) நாரதரே!...

நான்தான் இந்தக் கோயில் கந்தன் - இங்கே
நான்தான் இந்தக் கோயில் கந்தன் - என்றே
நன்றி கெட்ட இவனிடம் கூறிவிடும்
நான்தான் இந்தக் கோயில் கந்தன்

(முருகன் கோபத்துடன் காட்சியளிக்கின்றார்)

நாரதர்: (சூரனிடம்) ஐயா சூரனாரே!...

சத்தியமாய் இவரே கந்தன் - ஐயா
சத்தியமாய் இவரே கந்தன் - ஐயா
சாத்த வேண்டாம் கதவுதனைத் திறந்துவிடும்
சத்தியமாய் இவரே கந்தன்

சூரனார்: கந்தனோ!... என்ன... என்ன பேர், கந்தனோ!

கந்தன் வேலன் என்ற
பெயருடனே - கந்தன்
கோயிலுக்குள் எவரும் போகேலாது

அழகன் முருகன் என்ற
பெயருடனே - முருகன்
ஆலயத்துள் எவரும் போகேலாது

கந்தனாம் கந்தன், எங்கத்தையில் கந்தனவை வந்திருக்கினம்... கவுண்மேந்து ஏஜெண்டுமார், டேய்!
நான்தான் இங்கே அதிகாரி
சொன்னேனே கேளு - படி
தாண்டத்தானும் உரிமையில்லை
தட்டாமல் போடா

சாதியிற் குறைந்தவர்க்குச்
சொன்னேனே கேளு - கதவு
சாத்தயே இருக்குமிங்கே
போடா நீ போடா

நாரதர் : (முருகனைக் காட்டி) ஐயா! இவர் உள்ளே இருக்கிற ஆள்தான்.

சூரனார் : சொல்வாக்குப் பேச நீயும்
வந்தாயோ பாரு - நீயும்
வந்தாயோ பாரு - எந்தன்
செல்வாக்கு இருக்குமிடம்
செல்லாது இங்கே

நாரதர் : நாராயண!... நாராயண!...

சூரனார் : சண்டித்தனம் பண்ண நீயும்
வந்தாயோ பாரு - நீயும்
வந்தாயோ பாரு - எந்தன்
சண்டித்தனம் கேட்டுப் பாரு
சந்தியிலே சொல்வார்

நாரதர் : நிலையற்ற மானிடனே! போதும் ஐயா போதும் தற்பெருமை.

போதும் ஐயா போதும்
தற்பெருமை - உள்ளே
போகவிட்டுப் பேசும் நற்பெருமை

(முருகனைப் பார்த்து) கந்தா! கடம்பா! குகா! குறத்தி மணாளா! தங்களையுமா வெளியே நிறுத்திவிட்டார்கள்?

கந்தன் கோயில் வெளியே
நின்றால் ஐயா - உள்ளே
கல்லுருவம் தானே மீதியாகும்

முருகன் : (கோபத்துடன்) நாரதரே! இனிமேலும் பொறுக்க முடியாது. வாரும் இவனைத் தாண்டி உள்ளே செல்வோம். (முருகன் வேலைச் சுழட்டிக் கொண்டு கோயிலுக்குள் செல்ல முயலுகிறார்)

சூரனார் : டேய்! கலாட்டா பண்ணாதே. கோயில் எண்டும் பாக்கமாட்டன். தெரியுமோ என்ரை குணம்?... தம்பி! தம்பி! ஓடி வாங்கோ காவலரே! ஓடி வாங்கோ.

(முருகன் முன்னேறுகிறார் - சூரனார் பயத்துடன் கோயிலுக்குள் சென்று கதவுகளை மூடிவிடுகிறார்)

முருகன் : நாரதரே! என் இரத்தம் கொதிக்கிறது. இப்பொழுதே இவனையும் இவன் கூட்டத்தையும்... (ஆத்திரத்துடன் பற்களைக் கடிக்கிறார்)

நாரதர் : முருகா! அமைதி கொள்ளுங்கள். சற்றுப் பொறுத்துப் பார்ப்போம். இன்று போய் நாளை வருவோம்.

முருகன் : நாரதரே!

வரமாட்டேன் நானும்
வரமாட்டேன் வரமாட்டேன்
இந்தக் கலியுக சூரனைச் சங்காரம் செய்யாமல்
வரமாட்டேன் நானும்
வரமாட்டேன் வரமாட்டேன்

யார்தான் என்னை எதிர்த்திட்டாலும்
நீர்தான் என்னைத் தடுத்திட்டாலும்
இந்தப் பொல்லா அசுரனைச் சங்காரம் செய்யாமல்
வரமாட்டேன் நானும்
வரமாட்டேன் வரமாட்டேன்

நாரதர் : நாராயண!... நாராயண!... முருகா! அமைதி கொள்ளுங்கள் அமைதி. இந்தச் சாதிக் கொடுமை தமிழ் இனத்தில் படிந்துள்ள தூசு, அது விலகிவிடும்.

முருகன் : தூசு தானாக விலகாது, நாரதரே! தூசு தானாக விலகாது. அதற்கும் விளக்குமாறு வேண்;டும்.

விளக்குமாறு எட்டா
இடத்தை விட்டு - என்றும்
விலகாது தூசு தானாகவே

நாரதர் : உண்மை முருகா! உண்மை. முற்றிலும் உண்மை.

விளக்குமாறு எட்டா
இடத்தை விட்டு - என்றும்
விலகாது தூசு தானாகவே

முருகா! இங்குள்ள ஒரு சூரனை அழித்து விட்டால் போதுமா? தமிழ் இனத்தை மூடியுள்ள தூசு இவன் ஒருவன் மட்டும் இல்லை. இவன் போல் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் தாங்கள் அழிக்க வேண்டுமா? வேண்டாம் முருகா வேண்டாம். சிலரை அழித்தொழிப்பதால் நிலைமை சீரடைந்துவிடாது. முருகா! இது புராணகாலம் இல்லை. மக்கள் யுகம் முருகா! இது மக்கள் யுகம்.

மக்களேதான் மக்கள்
மட்டுமே தான் - உலகில்
மாற்றத்தை ஆக்கும்
இயக்க சக்தி

முருகா! தாங்கள் வேலெடுத்துப் போரிட வேண்டாம். மக்களிடம் தங்கள் சக்தியைக் கொடுத்து விடுங்கள். அவர்கள் சகல கொடுமைகளிலும் இருந்து விடுதலை பெற அவர்களுக்கு நல் வரம் அருளுங்கள்.

(அடியார்கள் கோயிலை நோக்கி வருகிறார்கள்)

பக்தர்: கோத்திரங்கள் கூறி எம்மை -
தடுத்திட்டாலும்
காத்திருக்கப் போவதில்லை

சாத்திரத்தை மாற்றுகிறார் -
உயிர்விட்டாலும்
சாத்திரத்தை மாற்றிடுவோம்

பாளையினைச் சீவும் கையால் -
சாதி வெறிப்
பேயினை நாம் சீவிடுவோம்

கோயிலுக்குள் வணங்க வந்தோம் -
கதவு தாண்டிக்
கோயிலுக்குள் சென்றிடுவோம்

நாரதர்: முருகா! அதோ தங்கள் அடியார்கள் வருகிறார்கள். அவர்களிடம் தங்கள் சக்தியைக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

(அடியார்கள் முருகனுக்கு அருகில் வருகிறார்கள்)
முருகன் : தந்துவிட்டேன் இன்றே
தந்துவிட்டேன் - எந்தன்
தந்தை தந்த சக்தியைத்
தந்துவிட்டேன்

சங்கரன் தான் தந்த
சக்தி வேலை - இன்றே
சமத்துவம் காண்பதற்கே
தந்துவிட்டேன்

(முருகன் பக்தரிடம் தன் வேலைக் கொடுத்ததும் அடியார்கள் எல்லோர் கைகளிலும் வேல்கள் மின்னுகின்றன-அடியார்கள் வேல்களைத் தாங்கிய வண்ணம் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்)

முரு10நாரதர் : சென்று வருவோம் நாம்
சென்று வருவோம் - நீவிர்
வென்றிடுவீர் நாம்
சென்று வருவோம்

(முருகனும் நாரதரும் சென்று மறைகிறார்கள்-உடுக்குகள் பலமாக ஒலிக்கின்றன-பக்தர்கள் கோயிலை நோக்கித் திரும்புகிறார்கள்-சூரனார் கோயில் கதவுகளைத் திறந்து வெளியே வருகிறார்-பக்தர்கள் உருவுடன் கோயிலை நோக்கி முன்னேறுகிறார்கள்-சூரனார் பயத்துடன் பின் அடைகின்றார்- கோயிற் கதவுகள் திறக்கின்றன-பக்தர்கள் கோயிலை நோக்கி மேலும் முன்னேறுகிறார்கள்-கோயில மணி ஒலிக்கின்றது திரை மூடுகின்றது)

-முற்றும்-


--------------------------------------------------------------------------------


வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி பாவங்களை தெளிவாகவும் அழுத்தமாகவும் மனதில் தங்குமாறும் வெளிப்படுத்த காத்தான் கூத்து மெட்டு ஒரு சிறந்த சாதனமாகும். இந்த மெட்டில் காந்தவராயர் கதையைத் தவிர, வேறு எந்த நாடகமும் நடிக்கப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. இந்த மெட்டில் வித்தகரான திரு. சி. கணபதிப்பிள்ளை அண்ணாவியார் அவர்களைத் தலைவராக “அம்பலத்தாடிகள்” முத்தமிழ்ச் சங்கம் பெற்றிருப்பது எமது நற்பேறாகும் அன்னார் வடமராட்சிப் பகுதியில் மாதனை, சுப்பர் மடம், கரவெட்டி, அல்வாய் போன்ற இடங்களிலும்; முல்லைத்தீவுப் பகுதியில் வட்டுவாகல் போன்ற இடங்களிலும் காத்தவராயர் கூத்தைப் பழக்கி மேடை ஏற்றி இம்மெட்டுப் பல இடங்களிலும் பரவ வழி செய்துள்ளார். அண்ணாவியார் அவர்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே இம்மெட்டுக்களுக்கு ஓர் இலக்கணம் வகுக்க முடிந்தது.


காத்தான் கூத்து மெட்டு
“அம்பலத்தாடிகள்”

பாட்டிலே ‘பொப்’ புகுந்து படுத்தும் பாட்டைக் கண்ட பின்னும் நாட்டிலே நமக்கிருக்கும் நல்ல பல மெட்டு;களை நினைத்திடவும் வேண்டாமோ? ‘பொப்’ இசை என்று ஒன்று பாடுகிறார்; பாடட்டும். அதற்கு, தப்பான கருத்துடைய தறுதலைப் பாட்டுக்களா பாடவேண்டும்? ‘பொப்’ பாட்டைக் கேட்டவுடன் ஆட்டம் இடுப்பொடிய வருகிறதாம். நம் முன்னோர் பாடி வைத்த கரகப் பாட்டிலே ஒன்றை உடுக்கடித்துப் பாடிவிட்டால் பாட்டியும் தான் சும்மா இருப்பாளேர் எட்டி மிதித்து, இருந்தெழுந்து ஆடாவோ?

கரகம், காவடி, கும்மி, தாலாட்டு, கப்பற் பாட்டு, ஒப்பாரி என ஒவ்வொன்றிற்கும் எத்தனை பாட்டுக்கள்! எத்தனை மெட்டுக்கள்!! இத்தனைக்கும் மேலாக வடமோடி, தென்மோடி என வந்திருந்தோர் எழுந்தோடிவிடாது பார்த்திருந்த நாட்டுக் கூத்துக்களின் பாட்டுக்கள் எத்தனை! மெட்டுக்கள் எத்தனை!!

நம் முன்னோர் நமக்களித்த நல்ல பல செல்வங்கள் நாதியற்று நைந்து புதைந்து நயமின்றிக் கிடக்கின்றனவே. அவற்றைத் தோண்டி எடுத்துத் துடைத்துத் துப்புரவு செய்து தக்கதொரு இடத்தில் தவறாது வைத்திடும் நாள் எந்நாளோ? என ஏங்கித் தவிக்கிறதே உள்ளம்.

காத்தான் கூத்தைக் கண்டிருந்தோர் நாத்தான் சும்மா இருக்குமோ? அவர் கையும் காலும்தான் சும்மா கிடக்குமோ? தலையும்தான் அசைந்து தாளத்திற்கு ஆடாதோ? இத்தனை ஆட்டம் ஆட்டும் அத்தனை சக்தி உள்ள காத்தான் கூத்துப் பாட்டில் எத்தனை மெட்டுக்கள்! காத்தான் கூத்து மெட்டு காதிலே கேட்டுப் பழக்கப்பட்டோர்; அறிவர்.

இடத்திற்கும் குணத்திற்கும் தக்கபடி தகுந்த பல மெட்டுக்கள் காத்தான் கூத்தில் உள. ஆனால் கர்நாடக இசைக்குக் கற்றறிந்த பெரியார்கள், வித்துவான்கள், பாடகர்கள் இராகம் அமைத்து இலக்கணம் செய்தது போல்;; இராகம், கிளை இராகம் என வளர்த்துப் பெயரும் சூட்டி நடமாட விட்டதுபோல்;;; இந்த நாட்டுக் கூத்து மெட்டுக்கு நல்லதொரு பெயர்தானும் வைத்து மகிழ்ந்தாரோ? பெயர்தானும் இருந்ததுவோ? இல்லையோ எமக்கின்று தெரியவில்லை. பெயர் இருந்தால் நல்லதுதான். இன்னமெட்டிற்கு இன்ன பெயர் என்று ஒன்று சூட்டிவிட்டால், “பாடு இன்ன மெட்டை” என்று பெயர்சொல்ல, பாடுவோர்க்கும் சுகம்தானே? தேர்ச்சி பெற்ற அண்ணாவிமார்கள் இப்பெயர்களை ஏற்பாரோ? என்னவோ? எமக்காவது இது உதவட்டும். மேன்மேலும் நாடகங்கள் இந்த மெட்டில் வளரட்டும்;;;; மெட்டும் வளரட்டும்.

வணக்கம்:

கடவுள் வணக்கம் செய்து காப்புப் பாடித் துவங்கிடுவோம்!

ஓரானைக் கண்ணே கண்ணே - எங்கள்
உமையாள் பெற்ற பாலகனே

எனப் பல பாட்டுக்கள் தொடர்கின்றன.

இது ஒரு மெட்டு. காத்தான் கூத்தில் கடவுள் வணக்கத்திற்கெனத் தனியான மெட்டு இதற்கு “வணக்கம்” என்றே பெயர் வைத்தால் என்ன?


தோற்றம்:

காத்தான் கூத்தில் நல்லதொரு பாணி உண்டு. அதுவே, மேடையிற் தோன்றும் நடிகர்கள் தாம் இன்ன பாத்திரம் எனச் சபையோர்க்கு முன்னமே எடுத்துரைத்தல், பூமாதேவி அம்மன், பாறுவதி அம்மன்,சோமசுந்தரம், கறுப்பாசி, காத்தலிங்கச் சாமி, தொட்டியத்துச் சின்னான், ஆதி சிவனார், கிட்டிணர், தேவடியாள், ஆரியப்பூமாலை என இன்னோரன்ன பல பாத்திரங்களும் தம்மை அறிமுகம் செய்யும் பாணி ஒரே பாணி, உதாரணத்திற்குச் சில பார்ப்போமா?

பூமாதேவி அம்மன் தோற்றம்:
பூமியைத் துளைத்தல்லவோ
பூமா தேவியம்மன் - ஒரு
பூவாய் மலர்ந்தாவாம்
பூமாதேவி அம்மன்

சிவனார் தோற்றம்:
காவி உடுத்தல்லவோ
ஆதி சிவனாரும் - ஒரு
காரணமாய் வேடம் கொண்டேன்
மாய சிவனாரும்

முதற்காத்தான் தோற்றம்:
சோம னுடுத்தல்லவோ
காத்தலிங்கச் சாமி - ஒரு
சொருகு தொங்கல் ஆர்க்க விட்டேன்
காத்தலிங்கச் சாமி

ஆரியப்பூமாலை தோற்றம்:
அறிந்திடுவீர் தெரிந்திடுவீர்
சபையோரே கேளும் - நானும்
ஆரியப்பூமாலை வாறன்
பெரியோரே கேளும்

இவ்வாறே பல பாட்டுக்களில் தாம் வருவதும், போவதும், நினைப்பதும், செய்வதும் கூறிச் செல்கின்றன பாத்திரங்கள். இதற்கு என்ன பெயர் சூட்டலாம்? தோன்றும்போது பாடுவதால் “தோற்றம்;” என்போமா?


ஆங்காரம்

துரிதமாய்ப் பாடி துடுக்காக வரும் இரு பாத்திரங்கள் உள. அவை வைசூரராசன், முத்துமாரி அம்மன்.

வைசூரராசன் தோற்றம்:
தங்கப் பல்லக்கில் ஏறியல்லோ
வைசூர ராசன் - அவன்
தானோடி வாறானாம்
வைசூர ராசன்

முத்துமாரி கூற்று:
மணி மந்திர வாளெடுத்து
முத்துமாரி அம்மன் - அவ
மாட்டிக் கொண்டா உடைதனிலே
முத்துமாரி அம்மன்

சீறி எழுந்தல்லவோ
முத்துமாரி அம்மன் - உங்களை
சீக்கிரத்தில் சாய்ப்பனடா
முத்துமாரி அம்மன்

சிவனுக்கு முத்தெறிந்து நோய் கொடுத்தபோது முத்துமாரி :

மொட்டாக்கைத் தான் திறந்தோ
முத்துமாரி அம்மன் - அவ
மூன்று முத்தைத்தான் எறிந்தா
முத்துமாரி அம்மன்.

இப்படியாகப் பாட்டுக்கள் அடுக்கடுக்காய்ச் செல்கின்றன. அகங்காரம் செருக்குடன் அடித்துக் கூறும் மெட்டதனால் இதற்கு “ஆங்காரம்;” என்றால் என்ன?


பெருமிதம்:

நடுக்காத்தான் வருகிறார் தன் பெருமை கூறி அங்கே:

ஆதிசிவன் மைந்தனல்லோ - நானும்
ஆதிகாத்தான் ஓடிவாறேன் பெரியோரோ
ஐயா சபையோரே.

மாமாவும் பெருமை கூறுகிறார்:

சரிகை வேட்டி தானுடுத்தே - மாமா
சரிகைச் சால்வை தோளில் போட்டேன் டாபர் மாமா
நான் ஒரு தாசி மாமா.
இந்த மெட்டில் துரிதம் இல்லை; ஆங்காரம் இல்லை . எச்சிலே வைத்து எழப்பமாகப் பாடும் மெட்டு. பெருமைகூறி வருவதனால் இதற்கு “பெருமிதம்” என்றே சொல்வோமா?


தர்க்கம்:

வந்து சேர்ந்தவர்கள் உரையாடி விபரம் பல கூறி தர்க்கங்கள் செய்திடுவார். தாயும் தனயனும் தர்க்கம் செய்யும் இடங்களோ இந்தக் கூத்திற் பல. ஒன்று இரண்டைப் பார்ப்போமா?

முத்தனே மகனே வாய்திறந்து - எனக்கொரு
உத்தாரம் மகனே சொல்லேனடா.

இன்னும் ஒரு பாட்டைக் கேட்போம்:

காத்தான்: கண்டு வந்த அம்மா மாலையரை
தாயே மாலையரை - எனக்கு
கைப்பிடித்துக் கலியாணம் செய்வாயோணை
செய்து தருவாயோணை.

முத்துமாரி: கண்டு வந்த மகனே மாலையரை
மகனே மாலையரை - உனக்
கைப்பிடித்துக் கலியாணம் செய்து தாறேன்
மகனே செய்து தாறேன்.

இப்படித் தர்க்கங்கள் செய்யத் தகுந்த இடங்களில் இந்த மெட்டு வருவதனால் இதற்கு “தர்க்கம்” என்றிடுவோமா?


சல்லாபம்:

கேலி, கிண்டல், காதல், சல்லாபம், சரசம் என சில ஆங்காங்கு இருக்க வேண்டாமா? இதுவும் நாடகப் பண்புதானே. இதற்கும் இடம் உண்டு. காத்தான் கூத்து மெட்டில். அத்தான் சிவனாரும் மச்சாள் முத்துமாரியும் சரசமாடுகிறார்களே! பார்ப்போமா? இது வயது வந்தவர்களுக்கு மட்டும்!
முத்துமாரி: கொஞ்சிக் கொஞ்சி அத்தாரே விளையாட - நானொரு கொஞ்சுங்கிளி அத்தாரிடம் கேட்க வந்தேன்.

சிவனார்: கொஞ்சிக் கொஞ்சி மச்சாளே விளையாட - உனக்கு
கொஞ்சுங்கிளியாக வாறேனேடி.

இப்படியாகக் கிள்ளிக் கிள்ளி, நுள்ளி நுள்ளி, கட்டிக் கட்டி, அணைத்தணைத்து இருவரும் சரசமாடும் பாட்டுக்கள், அப்பப்பா! அருமை! அருமை!! இறுதியாக ஒரு பாட்டு :

முத்துமாரி: படுத்துக் கொண்டே அத்தாரே பால்கொடுக்க - நானொரு
பாலகனை அத்தாரிடம் கேட்க வந்தேன்.

சிவனார்: படுத்துக் கொண்டே மச்சாளே பால்கொடுக்க
- நானொரு
பாலகனாய் மச்சாளே வாறேனடி.

மகன் தாயாரிடம் கலியாணம் பற்றிக் கூறுகிறார்:

என்னோட்ட பெற்றவளே தோழரெல்லாம்
- சின்னச் சின்ன
இளந்தாரிமார் கலியாணம் ஆனாரம்மா.

போகவிடை அம்மாவே தாவேனணை - அந்தப்
பொற்கொடியாள் ஆரியமாலையிடம்.

தமயனை, தம்பி தாயாரிடம் கேலி செய்கிறார் :

மாலைக்கெல்லோ எங்கள் அண்ணர் ஆசைப்பட்டு அங்கு
மார் விலங்கோ பெற்றவளே மாட்டிக் கொண்டார்.

இவ்வாறாக சரசமும், சல்லாபமும், கிண்டலும், கேலியுமாக வரும் பாட்டுக்களுக்கு ஒரு மெட்டு. அதுவும் வெட்டி வெட்டிப் பாடும்பொழுது ஒரு அழகு; இழுத்து நீட்டி முழக்கிப் பாடினாலோ தனி அழகு. அதற்குச் “சல்லாபம்” என்றிட்டால் என்ன?


தவம்:

;காத்தான் கூத்தில் தவம் இயற்றி வேண்டுதல் செய்யும் காட்சிகள் பல. தவசுப் பாட்டு ஒன்றைக் கேட்போமா?

இருந்த அருந்தவசு முத்துமாரி அம்மன்
எழிலிலங்க சோதி மின்ன.

இப்படித் தொடரும் பாட்டுக்கள் பல. ஒருவரை வரவேண்டிப் பாடுதலும் இந்த மெட்டிலே அமைந்து விட்டது.

தோளோடு தோளுதித்த - எந்தன்
தோழமையே வாவனிங்கே.

தேவடியாளைத் தாய் எழுப்புகிறாள் கேட்போமா:

பொழுதே விடியுதடி
என் மகளே - எடி தேவடியாள்
பொற்கோழி கூவுதடி.

தாயிடம் வேண்டுதல் செய்கிறாள் மகள்:

வாழ்த்தி வரங் கொடம்மா
பெற்றவளே தாயே - எனக்கு
மணி மந்திரவாள் கைக்கொடம்மா.

குற்றம் பொறுத்தருள வேண்டுதல்:
தெரியாமல் செய்த குற்றம்
அம்மாவே - எங்கள்
தேவி பொறுத்திடணை.

இப்படியாக வேண்டி வேண்டித் தவம் இருக்கும் இந்த மெட்டை“தவம்” என்றே கூறிடுவோமா?


சீற்றம்:

கர்நாடக சங்கீதத்தில் குணங்களைக் குறிப்பதற்கும் இராகங்கள் உள்ளன போல், இங்கும் நாம் சிலவற்றைக் காணலாம். கோபத்துடன் கூறுகிறார் வைசூரராசன். கவனிப்போமா?

ஆர் குடிகெடுக்க வந்த
சண்டாளத் துரோகி - நீயும்
பாவி இங்கு வந்தாயோடி
போ போ போ.

கோபத்திலே வருவதனால் இந்த மெட்டிற்குச் “சீற்றம்” என்ற பெயர் பொருந்தாதா?


ஆனந்தம்:

மஞ்ச ளெல்லோ சின்னான் மயக்குதடா
- துரையே
மதிமயக்கம் எனக்குக் கொள்ளுதடா.

காத்தான் ஆனந்தமாகக் கூறுகின்றார். வேறும் ஒரு இடத்தில் தாயாரிடம் கூறுகிறார்:

வென்று வந்தேன் அம்மா வென்று வந்தேன் - அந்த
வேல்விழியாள் ஆரியமாலையினை.
சின்னான் காத்தானைச் சந்தோசப்படுத்துகின்றார் :

பாக்கையெல்லோ சின்னான் நான் எடுத்து - வெகு
பக்குவமாய்க் காத்தான் கைக் கொடுத்தேன்.

சிவனார் பிள்ளை வரம் கொடுத்து கூறுகி;றார் :

பிள்ளை யென்றும் பெண்ணே நீ எடுத்து - வெகு
பிரியமுடனே பெண்ணே நீ வளர்ப்பாய்.

இவ்வாறாக ஆனந்தமாக வருகிறது பாட்டுக்களும் மெட்டுக்களும். ஆனந்தமான மெட்டு “ஆனந்தம்” என்றே இருக்கட்டுமே?


இரக்கம்:

காத்தான் கூத்திலே மனதை உருக்கும் மெட்டும் உண்டு.

சிவன்: தாலி பறி போகுதடி பார்வதியே பெண்ணே உந்தன் தலைவன் இங்கே மாழுகிறான் உத்தமியே கண்ணே.

இப்படிப் பல தொடர்கின்றன.

காத்தான் பள்ளிக்கூடம் செல்ல மறுக்கி;றார்:

பள்ளிக்கூடம் போகச் சொன்னால்
பெற்றவளே தாயே - எனக்குப்
பயம் பயமாய் வருகுதணை
பெற்றவளே தாயே

தாயார் ஏழுகடல் தாண்டி வரும்படி கட்டளை இட்டதும், காத்தான் தான் இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்:

திங்கள் ஒரு திவசம்
பெற்றவளே தாயே - எனக்கு
திதி முறையாய் செய்யேனணை
பெற்றவளே தாயே.

காத்தான் கழுமரத்தில் இருந்து பாடும் பாட்டுக்கள் கண்ணீர் மல்க வைக்கும். “ஓராம்படி ஏறச் சொன்னால்” என்று துவங்கும் பல பாட்டுக்கள் உள. இப்படியே இரங்க இரங்கப் பாடும் பாட்டுக்கு “இரக்கம்” என்றால் என்ன?

காத்தான் கூத்து மெட்டில் மேலும் ஆழமாக மூச்சடக்கி மூழ்கிப் பார்க்கலாம். தாக்குப் பிடிக்க முடியவில்லை. மூச்சுத்திணறுகிறதே. நல்ல மெட்டுக்கள் பத்துப் போதும்:- வணக்கம்; தோற்றம்; ஆங்காரம்; பெருமிதம்; தர்க்கம்; சல்லாபம்; தவம்; சீற்றம்; ஆனந்தம்; இரக்கம்.

இந்த மெட்டுக்களை அடிக்கு அடிவேறாக்கி எச்சிலும் (உயர்ந்த ஓசை) தக்கிலும் (உட்பட்ட ஓசை) மாறிமாறிப் படித்திட்டால், ஆகா! கேட்பதற்குக் கொடுத்து வைக்க வேண்டுமே! தாள நடையிலே துரிதம் (விரைவாக) விளம்பம் (தாமத தாளம்) மாறிமாறி வரும்போது, கூறி விளங்காது; கேட்டுப் பார்க்க வேண்டும். மத்திமத்தில் வைத்துப் பாடினாலும் நன்றுதான். மெட்டுக்களுக்கு மெருகூட்டி அனுக்கங்கள் வைத்து அசைவு சேர்த்துப் பாடினால் கேட்கவும் வேண்டுமா? இது ஒரு மக்கள் மெட்டுத்தான் ஆனாலும் அண்ணாவிமார்கள் அடி எடுத்துத் தர வேண்டும்.

காத்தான் கூத்துப் பாடல்களில் கும்மி உண்டு;; தாலாட்டு உண்டு; ஒப்பாரியும் உண்டு.

கும்மி: கார்த்திகைத் தீபனடி
கண்டவர்க்கு நேசனடி
நேர்த்தியிலும் நேர்த்தியடி
என் பாஞ்சாலங்குயிலே.
தாலாட்டு: ஆராரோ ஆரிவரோ - தம்பி
ஆரமுதே கண்வளராய்.

கப்பற்பாட்டு: ஏலயேலோ கித்தையா ஏலயேலோ
காத்தானும் சின்னானும் ஏறிய கப்பல்
கனதூரமாகவே போகுது கப்பல்
ஏலயேலோ கித்தையா ஏலயேலோ.

ஒப்பாரி: முத்துக் கிணற்றடியில்
எனக்கு வாய்த்த மருமகளே
முத்துச் சறுக்கி விழுந்தாயோ.

கரகப்பாட்டு, காவடிப்பாட்டு என்பன வேறாக வளர்ந்து விட்ட மெட்டுக்களானாலும், இங்கும் புகுந்துள்ளன.

கரகம்: முந்தி முந்தி நாயகர்க்கோ முத்துமாரி அம்மன்
முக்கண்ணார்க்கு முன் பிறந்த மாரிதேவி அம்மன்.

காத்தான் கூத்திலே ஆங்காங்கு வந்து புகுந்த மெட்டுக்களும் பல உள.

சிந்து பைரவி இராகத்திலே அமைந்த பாடல் ஒன்று :-

வரமாட்டேன் தம்பி நான் வரமாட்டேன்
அந்தத் தையலாள் மாலையை
மாமணம் செய்யாமல்
வரமாட்டேன் வரமாட்டேன்
நீதான் என்னைத் தடுத்திட்டாலும்
தாய்தான் என்னை வெறுத்திட்டாலும்
அந்தத் தையலாள் மாலையை
மாமணம் செய்யாமல்
வரமாட்டேன் வரமாட்டேன்

மத்தியமாவதி இராகத்தில் ஒன்று :-

அக்கக்கா இது சொக்கட்டான்
விளையாட்டோ கவிபாடட்டோ.

சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் இருந்து ஒரு மெட்டு :-

(சிங்கத்தால் நானடைந்த...)

ஆனை புலி கரடி என் மகனே பாலா அங்கே
அத்தனையும் காவலடா என் மகனே சீலா.

வள்ளி திருமணத்தில் இருந்து ஒரு மெட்டு :-

(யார் காணும் நீர்...)
வெள்ளிமலை மலைமீதேறி நானும்
விருது வேட்டை சுழன்றாடுறன் பார்.

“கண்டதுண்டோ கலியுகத்தில் காணப்போறோமோ”. இது அன்று மிகவும் பிரபல்யமான ஒரு பாட்டு. இந்த மெட்டும் இங்கே இடம்பெற்றுவிட்டது.

முக்கால் வலமாய் வந்த முத்துமாரி அம்மன்-அவ
முடிவணங்கித் தென்றனிட்டா மாரிதேவி அம்மன்.

வேறும் பல மெட்டுக்கள் காத்தான் கூத்தில் புகுந்துள்ளன.

நாரதர் வருகை :

சம்போ சங்கர கௌரீசா
சாம்ப சங்கர கௌரீசா...
பாரமும் புரி நூலும் சடையும்...

எனத் தொடரும் பாடல்களும்

மாயன் உரைத்த கதையை - அந்த
ஆச்சிக்கு ஓடோடி நான் சொல்லப் போறன்

என வரும் பாடலும் நாரதருடன் வந்து புகுந்த மெட்டுக்கள்தான்.

வேறும் சில புகுந்துள்ளன :
நாட்டுப் பாடல் மெட்டுப் போல் தோன்றும் ஒன்று :

பாலும் இந்தா பெற்றி பெற்றி - இப்ப
பழமும் இந்தா இறங்கு இறங்கு.

வில்லுப் பாட்டுக்களில் உபயோகிக்கப்படும் மெட்டுக்களிலும் ஒன்று :
மலைக்கு மலை நடுவே
அங்கே மலைநடுவே
மலையாள தேசமம்மா
அம்மா தேசமம்மா.

எங்கிருந்தோ “ட்ராமா” மெட்டும் ஒன்று புகுந்துவிட்டது :

பிள்ளை இல்லை இல்லை என்று
மைத்துனா - நானும்
பெரும் சாபம் போட்டேன்
காணும் கோபாலா.

பத்துச் சொந்தமான மெட்டுக்களுடன் இவ்வாறாக வந்த பல மெட்டுக்களையும் தன்னுள் அடக்கிக் காத்தான் கூத்து மெட்டாகத் தன் பாணி மாறாது தனிப் பாணியாகக் - காத்தான் கூத்துப் பாணியாக அமைந்துவிட்டனவே இந்த மெட்டுக்கள்.

இம் மெட்டுக்களில் என்ன, ஓசை ஒரே மாதிரியாக இருக்கிறதே, இது வெறும் தாலாட்டுப் பாடல்கள்தானே எனச் சிலர் கூறுவதும் கேட்கிறது. இராகம் தெரியாதோர்க்கு கர்நாடக இசை எல்லாம் ஒரே இழுப்பாகத்தான் இருக்கும். அதுபோல காத்தான் கூத்தை அறியாதோர்க்கும் எல்லாம் ஒரே தாலாட்டுப் போற்தான் தோன்றும். காது பழக வேண்டும். கேட்டுத் தரம் பிரிக்கப் பயிற்சி வேண்டும்.

மெட்டுக்கள் வளர ஒரு வழி வகுத்தாற் போதுமா? புராண வழமைகளைத் தொடர்ந்து பாடி வந்தால் நாட்டுக் கலைஞர்களுக்கு உயிர் ஊட்டியதாகுமா? செத்த பிணத்திற்குச் சரிகை வேட்டி கட்டி மெத்தையில் வைப்பதனால் என்ன பயன்? புத்துயிர் ஊட்ட வேண்டும்! புத்துயிர் ஊட்ட வேண்டும்!! புத்துயிர் என்றால், புதுக்கருத்துக்கள்! புதுக்கதைகள்!! எப்படி இது வருமோ? எங்கிருந்து தோன்றிடுமோ?


--------------------------------------------------------------------------------

கந்தன் கருணை

நெறியாள்கை : அ. தாஸீசியஸ்
தயாரிப்பு : நடிகர் ஒன்றியம்


--------------------------------------------------------------------------------

காட்சி ஒன்று



நாரதர் :
பிரம்ம தேவன் பேரன் நான் புராண கால முனிவன் நான்
நாராயணன் பக்தன் நான் நாரதர் எந்தன் நாமம் தான்.

உலகத்தில் உள்ள தீமைகள் தான் பலரறியக் கூறுவேன் நான்
கலகத்தால் நன்மை செய்தவன்தான் உலகத்திற்கே நல்லவன் நான்

ஏழிசையும் யாழில் மீட்டி நாவில் பாட்டும் முழங்கவே
தாளக் கட்டை தாளம் இட்டே நாரதமாமுனி தோன்றினார்.

பாரிலுள்ள துயர்கள் யாவும் மறையும் மார்க்கம் காணவே
ஊருக்குள்ளே எங்கும் சென்று உரைத்திடுவேன் உண்மைகள்.

ஈரேழுலகம் சென்றேன் நாரதமாமுனி நான் - அங்கே
ஈழநாடும் கண்டு வந்தேன் நாரதமாமுனி நான்.

ஈழநாட்டின் வடக்கினிலே...............
பக்தர்கள் :
1. சைவக் குடி மக்கள் யாழ்ப்பாணத்தார் - அவர்க்கும்
சொந்தக் குணம் உண்டு சொல்லிடுவோம்.

2. சாதியிலே பள்ளன் பறையன் என்றே - பார்த்து
சாத்திவிட்டார் கோயிற் கதவுகளை.

3. தேனீர்க் கடைகளிலும் சாதி பார்ப்பார் - குடிக்கும்
பேணிகளையும் அவர் பிரித்து வைப்பார்.

4. முடி வெட்டவும் சாதி பார்ப்பார் - இங்கு
முடி வெட்டுபவரையும் பிரித்து வைப்பார்.

5. கோவியன் வண்ணான் என்றும் பிரித்து வைத்தார் - அவர்க்குச்;
பாவிகள் தனித்தொழில் ஒதுக்கி வைத்தார்.

6. சைவக் குடி மக்கள் யாழ்ப்பாணத்தார் - அவர்க்கும்
சொந்தக் குணம் உண்டு சொல்லிடுவோம்.

நாரதர் : ஈழநாட்டின் வடக்கினிலே நாரதமாமுனி நான்-அங்கே
யாழ்ப்பாணம் பார்த்து வந்தேன் நாரதமாமுனி நான்.

யாழ்ப்பாணச் சீர்கேட்டை...............

சூரர்கள் :
1. தட்டுவம் பெட்டிகள் எட்டி நின்றேந்தினீர்
தந்தனம் அன்னதானம்
கிட்டவந்தின்று நீர் கைகளை ஏந்திட
கூச்சமாய் இருக்குதோடா.

2. உங்களுக்கவ்வள வுன்னத பக்திதான்
உண்மையெண்டால் உடனை
எங்கடை கோயிலை வெல்லொரு கோயிலை
இண்டைக்கே கட்டுங்கோவன்.

3. சந்நதி நல்லூரை மாவையை மிஞ்சிட
நல்லொரு கோயிலை கட்டி
எங்களை அழைத்தங்கு உள்ளட விடுவதால்
உங்களை உயர்த்துங்கோவன்.

4. சேர்த்தவை தந்ததோ சில்லறைக் காசுகள்
செய்வதோர் திருவிழாதான்
ஏற்றதை விட்டது எங்கடை பிழையெடா
இனி இந்த வழக்கம் விடோம்.

5. சாப்பிட வழியில்லை சமபந்தி போசனம்
சங்கேனம் இல்லையோடா?
பேய்க்கதை பேசினால் பொல்லுகள் வெளிவரும்
போடா இவ்விடத்தை விட்டே.

நாரதர் : யாழ்ப்பாணச் சீர்கேட்டை நாரதமாமுனி நான்-இங்கே
யாரிடத்தில் போய் உரைப்பேன் நாரதமாமுனி நான்.

நாரதர் : அந்த யாழ்ப்பாணம் சிறு குடாநாடே
ஆயினும் அநீதிகள் பெருகி
அழுகலாய் நாறும் நிலைமைகள் மிகுந்தால்
அடுக்குமோ? அநாகரிகமே.
அநாகரிகத்தின் பொந்துபோல் இன்னும்
நொந்து தேய்வதுவோ
புதியதோர் கலகம் நான் மூட்டி
போக்குவேன் கொடுமை, நீக்குவேன் துயர்கள்
ஆக்குவேன் சமநிலை அமைதி.
எங்குதான் போவேன்? யாரிடம் சொல்வேன்?
எவரிடம் முறையிடின், சிறந்த
இனிய நற்பலன்கள் ஏற்படும்? இந்த
முனிவனின் திட்டங்கள் பலிக்கும்?
கந்தவேளிடமே செல்லுவேன், முருகா!

கார்த்திகை மாதரின் மைந்தா!
கதிர் வடிவேலாஃசூரனை வதைத்த
தேவனே, வேலுடன் எழுவாய்.

நாரதர் : வேலனைத் தேடியல்லோ வேதியன் நான் - இப்போ
வேகமாகப் போகின்றேனே வேதியன் நான்.

குமரனைத் தேடியல்லோ கோள்முனி நான் - அவன்
குன்று நோக்கிப் போகின்றேனே கோள்முனி நான்.
சண்முகனைத் தேடியல்லோ சன்னியாசி நான் - இந்தச்
சங்கதியைச் சொல்லப்போறேன் சன்னியாசி நான்.

நாரதர் : கந்தனே, குமரா! கார்த்திகை மைந்தா கடம்பனே,
சண்முகா, முருகா!

முருகன் : கலக நாரதரே வருக, இன்றென்ன கையிலே ஏந்தி நீர் வந்தீர்? முந்தியே போல மாங்கனி ஒன்றா?

நாரதர் : முருகனே அருள் செய்ய வேண்டும்.

முருகன் : முழுவதும் சொல்க, இன்னுமோர் இளைய அழகிய குறமகள் உண்டா?

நாரதர் : வந்து சேர்வதன் முன் இப்படி எல்லாம் வாய் மலர்ந்தருளுவதேனோ? வணங்கவே வந்தேன், கலகம் மூட்டுவது மட்டுமா நாரதன் வேலை.

முருகன் : சிந்தை நோ எதற்கு?

நாரதர் : திருவருள் புரிக! தேவர் தம் சிறைதனை மீட்ட திவ்விய வடிவேல் தரித்த என் செவ்வேள் சேந்தனே, திருவருள் புரிக. இந்திரன் மைந்தன் கடூழியம் ஒழித்த ஏந்தலே திருவருள் புரிக.

நாரதர் : இளையவேல் அருகில் உரிமையோடமரும் இந்திர குமாரியே அருள்க.

நாரதர் : வள்ளி நாயகியே!................. ஐயனே எங்கே வள்ளி நாயகியார்.

முருகன் : அப்படித் தொடங்கும் உமது நாடகத்தை. சும்மா நீர் வருவதுமுண்டோ?

முருகன் : சீற்றம்தான் கொண்டல்லோ வள்ளி நாயகி, உள்ளத்தில் உறுதி கொண்டு
செயல்படு திடமும் கொண்டு
போனாவாம் சீக்கிரமாய்.

நாரதர் : ஏன்; கொண்டா சீற்றம் வள்ளியம்மை, எங்கள் வள்ளியம்மை எங்கள் வள்ளியம்மை எங்கு போனா சீக்கிரமாய்.

முருகன் : தொழிலாளர் துயர் தீர்க்க வள்ளி நாயகி,
அவன் துயர் துடைக்க
அடிமை விலங்கொடிக்க
போனாவே லங்காபுரி.

நாரதர் : தொழிலாளர் துயர் தீர்க்க வள்ளியம்மை,
எங்கள் வள்ளியம்மை
எங்கள் வள்ளியம்மை
எப்பகுதி சென்றடைந்தா?

முருகன் :
1. மலைக்கு மலை நடுவே இலங்கை மலை நடுவே
மலையகத்தோட்டங்களாம்-தேயிலைத் தோட்டங்களாம்.

2. மலையகத் தோட்டங்களில்-தேயிலைத் தோட்டங்களில்
நிலையின்றி வாடுகின்றான் - கூலியாள் மாளுகின்றான்.

தெய்வானை :
3. தோட்டத் தொழிலாளி-விலங்கை ஒடிக்க என
கேட்டு முறையிட்டார்-கதிர்காமக் கந்தனிடம்.

4. கொடுமைகள் ஆய்ந்தறிந்து-உரிமையை நாட்ட என
குறமகள் வள்ளியம்மை-குறை தீர்க்க நேரில் போனா.

நாரதர் : அவ்வளவேதான் விஷயமா? நானோ அடாதன பலப் பல நினைத்தேன். செய்திடத் தகாத பெரும் பிழை இழைத்தேன். சிந்தனை குழம்பினேன் போலும்! சீரெல்லாம் குலைந்து கலைந்த யாழ்ப்பாணம் சென்றதன் பலாபலன் போலும்.

முருகன் : வருந்திட வேண்டாம் நாரத முனியே! மனதில் நீர் நினைத்ததைச் சொல்லும்.

நாரதர் : மன்னிக்க வேண்டும் எம் பெருமானே!

முருகன் : மறைத்திடாதனைத்தையும் கூறும்.

நாரதர் : விவாகம் செய்தீர்கள் என்றும் பாராமலே
நீங்கள் பாராமலே - அம்மையை
விலக்கி விட்டீர்கள் என்றே கருதிவிட்டேன்,
நானும் கருதிவிட்டேன்.

தெய்வானை :
விலக்கி ஏன் வைக்க வேண்டும் நாரதரே
ஐயா நாரதரே - வள்ளி
வள்ளி விட்ட குறையென்ன நாரதரே
கூறும் நாரதரே.

நாரதர் : கீழ்சாதி மகள்தான் வள்ளியம்மை
எங்கள் வள்ளியம்மை - என்றே
களங்கம்தான் கண்டீரோ தேவர் நீங்கள்
தாயே தேவர் நீங்கள்.
தெய்வானை :
கீழ்சாதி மகள்தான் வள்ளியம்மை - என்றே
எங்கள் வள்ளியம்மை - என்றே
களங்கம்தான் கண்டீரோ நாரதரே
கூறும் நாரதரே.

நாரதர் : வேடர் குலம் என்றே களங்கம்; கண்டு
தாயே களங்கம்; கண்டு - அம்மையை
விலக்கி விட்டீர்கள் என்றே நான் நினைத்தேன்
தாயே நான் நினைத்தேன்.

முருகன் : என்ன நீர் இப்படியோர் அநியாயத்தை
இயல்பான இழிவழக்காய் எடுத்துச் சொன்னீர்
புன்மை தரு புது வழக்கம் பூமி தன்னில்
பூத்திட நீர் ஊற்றி வந்த புல்லர் யாரோ
என்னருமைத் துணைவியையே இகழ்ந்து கூறும்
இப்படியோர் குலவழமை இருக்குமானால்
சன்னதமே கொண்டுடனே போவேன் நானும்
சமத்துவத்தைப் பூவுலகில் பரப்பத்தானே.

பக்தர்கள்: பள்ளன் என்றும், பறையன், நளவன் என்றும்
சாதிகள் பண்;பின்றி பலவுண்டு பெரும் கொடுமை
பள்ளன் என்றால் கீழ்ச்சாதி என்கிறாரே
அவன் பனை ஏறும் தொழிலாளி அறிவீரே.

நாரதர் : தமிழர்கள் வகுத்த முறையிதுவே
செய்யும் தொழிலாலே சாதி கண்டார் பாரினிலே.

முருகன் :
1. சாதி முறை கூடாதென்றே-புவியில்-
சாதி முறை கூடாதென்றே
வேடர் மகள் வள்ளியை நான் மணம் புரிந்தேன்-
சாதிமுறை கூடாதென்றே

2. சமத்துவத்தைக் காட்டிடவே - புவியில்
- சமத்துவத்தைக் காட்டிடவே
வேடர் தேவர் பேதம் இன்றி பெண் எடுத்தேன்
- சமத்துவத்தைக் காட்டிடவே

நாரதர் : சாதிமுறை இன்னும் மாறவில்லை - தங்கள்
- சாதனையும் அதனை ஒழிக்கவில்லை

தெய்வானை :
சாதிமுறை இன்னும் சாகலையா - உழுத்த
- சமூகமைப்பு இன்னும் மீந்திருக்கா

நாரதர் : சாம்பிளுக்கு இரண்டொரு திருமணங்கள் - வடக்கில் - சாதி முறை தனையே ஒழித்திடுமா?

பக்தர்; : சுடுகாட்டினிலும் சாதி பார்ப்பார் சண்முகா கேளாய் - சுடும்
சுடும் சடலங்களையும் பிரித்து வைத்தார்-சண்முகா கேளாய்

நாரதர் : கீழ் சாதி என்றே அன்று போட்டுவிட்டார் கட்டு

பக்தர்; : சட்டைகளைப் போடாதே - அட நீ
சால்வை தரிக்காதே
எட்டி நில், தீண்டாதே - என்று சொல்லி
இறுமாந்து கொக்கரித்தார்.

நாரதர் : கீழ் சாதி என்றே அன்று போட்டுவிட்டார் கட்டு
தோளால் சால்வை அகற்றி வைத்தார் கமக்கட்டில்

பக்தர்; : பள்ளிக்கூடங்களில் சாதி பார்ப்பார் படைத்தவனே கேளாய் - படிக்கும் பிள்ளைகளையும் பிரித்து வைத்தார் படைத்தவனே கேளாய்

நாரதர் : மேல் சட்டை போட்டிருந்தால் மேல்சாதி பொறுக்காது
பக்தர்; : குமரிகள் போட்ட சட்டைகள் எத்தனை
கொழுவிக் கிழித்தார்கள் - திமிர் இது - என்ன
உனக்கோ சட்டை - தூசே - என்றார்கள்.

நாரதர் : மேல் சட்டை போட்டிருந்தால் மேல்சாதி பொறுக்காது
கீழ் சாதிப் பெண்கள் என்று கிழித்தீரே அடுக்காது.

பக்தர்; : கிணறு குளங்களிலும் சாதி பார்ப்பார் கந்தா நீ கேளாய் -
தண்ணீர்க் கிணறுகளையும் பிரித்து வைத்தார் - கந்தா நீ கேளாய்.

நாரதர் : வெளியிலே கீழ்சாதியைப் பார்த்துவிட்டால் பாவம்.

பக்தர்; : உன் நிழல் பட்டுவிட்டால் அடச்சீ
உடனே குளிக்க வேணும்
சின்ன மனிசனடா என்று சொல்லித்
தீங்கு பல புரிந்தார்.

நாரதர் : வெளியிலே கீழ்சாதியைப் பார்த்துவிட்டால் பாவம்
வழியிலே இழுத்து வந்தார் காவோலை அது பாரம்.

பக்தர்; : முடி வெட்டவும் சாதி பார்ப்பார் முருகா நீ கேளாய் - முடி வெட்டுபவனையும் பிரித்து வைத்தார் - முருகா நீ கேளாய்

முருகன் : மேல்சாதி மக்கள் அன்றே அடக்கி வைத்தார் கொடுமை
கீழ்சாதி மக்கள் என்போர் இன்றுமா அவர் குடிமை.

நாரதர் : மேல்சாதி மக்கள் அன்றே அடக்கி வைத்தார் கொடுமை
கீழ்சாதி மக்கள் என்போர் இன்றும்தான் அவர் குடிமை.

தெய்வானை :
யாழ்ப்பாண மக்கள் இன்னும் இப்படியா - உள்ளார்
பாழ்போன கொடுமை ஏன்தான் மாறிடவே இல்லை.

நாரதர் : சாதி என்னும் அமைப்பு முறைச் சமூகம் தன்னில்
சார்ந்த நில உடைமைகளின தெச்ச சொச்சம் மாறிவரும் முதலாளித்துவ சமூகம்
மாற்றமதில் இது சிறிது மாறக் கூடும்
ஆதியிலே அரும்பிய இவ் அநியாயத்தை
அழித்தொழிக்க வேண்டுமெனில் அதற்கு நாட்டில்
சாதி மத இன பேதம் சற்றும் இல்லாச்
சமதர்ம சமுதாயம் தோன்ற வேண்டும்.

மரவேலை பொன்வேலை மேசன் வேலை
மண்வேலை கம்மாலை இரும்பு வேலை
அதுவேலை இதுவேலை ஆய்ந்து சாதி
ஆயிரங்கள் பூமிதனில் வகுத்து வைத்தார்
பொதுவேலை நாடுய்யப் பொருந்து வேலை
எதுவேனும் செய்தறியா எத்தரானார்
சதிவேலை தமக்கெல்லாம் சிகரமாகச்
சாதியொடு தீண்டாமை தோற்றி வைத்தே.

முருகன்; : வென்று வந்தேன் சூரனை வென்று வந்தேன்-அன்று
வேலேந்தி நானும் வென்று வந்தேன்
போய் வருவேன் நானும் போய் வருவேன்-இன்று
பொல்லாதாரை ஒழிக்கப் போய்வருவேன்
வேலேந்தி நானும் போய்வருவேன்-அந்த
வீணரை வீழ்த்தியே நான் வருவேன்.

தெய்வானை :
வென்று வந்தீர் சூரனை வென்று வந்தீர் - சுவாமி
வேலேந்தி அன்று வென்று வந்தீர்
அதர்மம் என்றறிந்ததும் பொங்கிடுவீர் - சுவாமி
அநியாயம் நிலைக்குதே பொறுக்கலாமோ?

முருகன்; : போகவிடைதான் தருவாய் போருக்கு நானும்- தீமை
போக்கிடவே அனுப்பிடுவாய் தேவியரே நீரும்

தெய்வானை :
வெற்றி வாகை சூடிவாரீர் நாதாவே சென்று-அந்த
வீரர்களை அடக்கி வாரீர் நாதாவே வென்று

முருகன்; : பூலோகம் நோக்கிச் செல்வோமே - நாங்கள்
போர்க்கோலம் பூண்டு செல்வோமே

நாரதர்; : பூலோகம் நோக்கிச் செல்வோமே - நாங்கள்
யாருக்கும் அஞ்ச மாட்டோமே

முருகன்; : யாழ்ப்பாணம் நோக்கிப் போவோமே - நாங்கள்
யாருக்கும் அஞ்ச மாட்டோமே

நாரதர்; : யாழ்ப்பாணம் நோக்கிப் போவோமே - நாங்கள்
யாருக்கும் அஞ்ச மாட்டோமே நாங்கள்.


--------------------------------------------------------------------------------

காட்சி இரண்டு


பக்தர் :
1. உலகத்து நாயகியே தேவி தேவி-அம்மா தேவி தேவி அம்மா
ஊழிக்கூத்து ஆடனணை மாரி தேவி

2. தேசாதி தேசமெல்லாம் தாயே தாயே - அம்மா தாயே தாயே
திருநடனம் செய்யனணை மாரி தேவி

3. நகருக்கு நகர் சென்று அம்மா அம்மா- அம்மா அம்மா
நடனமாடி வாவனணை மாரியம்மா

4. ஊர் விட்டு ஊர் தாண்டி ஆச்சி ஆச்சி-அம்மா, ஆச்சி ஆச்சி
உருவாடி வாவனணை மாரி ஆச்சி

5. பாட்டாளி துயர் தீர்க்க தாயே தாயே - அம்மா பறந்தோடி
வாவனணை மாரித் தாயே.

சூரர் : ஆரிங்கு வாறவன் அடித்து முறி காலினை
ஆடவோ காவடியும் நீ
அடியெடுத்தங்காலை வைத்தியோ முதேவி
அதிலையே சாகடிப்பேன்
காவடியும் ஒரு கேடு, கீழ்சாதி போ தூர
கதவுகளை அடித்து மூடு
ஆரங்கு ஓடிவா, அடியடா கொட்டனால்
ஆற்றைவாய் பார்க்கிறாய் நீ
கோபுர வாசல் தாண்ட - பள்ளரே உங்கள்
கோத்திரத்தில் வழியும் உண்டோ

பக்தர் : ஒன்றே குலம் என்றெமக்கு - திருமூலர்
மந்திரமும் தந்தார் அன்று
சூரன் : சாத்திரத்தில் இடமுமில்லை - சாதகமாகவே
சாத்திரத்தில் இடமுமில்லை

பக்தர் : சாதியைச் சாடி நின்றே - தமிழில்
போதித்தார் ஒளவைப் பாட்டி

சூரன் : கோயிலுக்குள் பணையும் இல்லை - நீங்கள் சீவக்
கோயிலுக்குள் பனையுமில்லை

பக்தர் : சாதிகள் இல்லையடி - பாரதி
சாற்றிடுதல் பாவம் என்றார்.

சூரன் : நந்தனை மறித்த நாங்கள் - பறையா உங்கள்
நந்தனை மறித்த நாங்கள்

பக்தர் : புத்தன் முதல் காந்தி வரை - ஐயாவே
புத்தி சொன்னார் கேட்டீர் இல்லை

சூரன் : தட்டாமல் வெளியே போடா - நளவா நீயும்
தட்டாமல் வெளியே போடா

பக்தர் : எத்தனையோ பேர் சொல்லி வைத்தார் - ஐயாவே
அத்தனையும் மறந்து விட்டீர்.

சூரன் : எங்களைக் கண்டதும் உங்கடை கொப்பன்மார்
எத்தனை கும்பிடுகள்
உங்கடை கெடுமதி இருக்குது குறுக்காலை
உய்யிற வழி இல்லையா?
நன்று தெரிந்தவன் சட்டங்கள் என்பதால்
நான் ஒன்று கூறுகின்றேன்.
நின்று வீணாக நீர் நாசமாய்ப் போகாது
வீடு திரும்பிடுவீர்.

பக்தர் : சட்டம்தான் இருக்குதையா கோயிலுக்குள் செல்ல- இங்கு கோயிலுக்குள் செல்ல - அந்தச்
சட்டத்தை எதிர்த்திட்டால் இழுத்திடுவோம் கோட்டில்.

சூரன் : கோடு பல கண்டவன் நான் போடா நீ வெளியே-இங்கே
போடா நீ வெளியே - அங்கே
கோட்டில் வந்து பேசு இப்போ போடா நீ வெளியே

பக்தர் : வாயில் வந்ததைப் பேசவேண்டாம் பெரியவரேகேளும்-ஐயா பெரியவரே கேளும் - மெய்யாய்
வாசல் படி தாண்டப்போறோம் பெரியவரே கேளும்.

சூரன் : வாசல் படி தாண்ட வந்தால் காலடித்து முறிப்பேன்-உன்ர
காலடித்து முறிப்பேன் - நீ
வாசல் படி தாண்டிப் பாரு காலடித்து முறிப்பேன்.

பக்தர் : கண்டபடி பேச வேண்டாம் கற்றவரே கேளும்-ஐயா கற்றவரே கேளும் - மெய்யாய்
கதவு தாண்டிச் செல்ல வேண்டாம் கற்றவரே கேளும்.

சூரன் : வாசல் படி தாண்ட வந்தால் காலடித்து முறிப்பேன்-உன்ர
காலடித்து முறிப்பேன் - நீ
வாசல் படி தாண்டிப்பாரு காலடித்து முறிப்பேன்.

சூரன் : சண்டாள இந்தப் பாதகரை-தம்பி சப்பாத்தால் உதைத்து தள்ளிவிடு
தடுத்திடவும் இங்கே வருகின்றார்- தம்பி தடிகொண்டு அடித்து விரட்டிவிடு
துவக்குகிறார் இங்கு போராட்டம்-தம்பி துவக்குகளால் சுட்டுத் தள்ளிவிடு.

பக்தர்; : ஆலயத்துள் நாமும் வணங்க வந்தோம் - ஐயா
அதிகாரத்தால் எம்மை விரட்டுகின்றார்.
அடியாரைக் கோயில் முன்னே வேலவா கேளும்
தடிகொண்டே அடித்தாரையா வேலவா கேளும்

தீயோர்கள் கோயில் முன்னே வேலவா கேளும்
தீப்பந்தத்தால் சுட்டாரையோ வேலவா கேளும்

அன்புடனே நாமும் வணங்க வந்தோம் - ஐயா
அதிகாரத்தால் எம்மை விரட்டுகிறார்.

சூரன் : அன்புடன் வந்தவர் ஆக்களைப் பாப்பம்
அடடடா அசலடா பக்தி
என்னை நீ ஏய்க்கவா? இதுமோர் வேஷமா?
இவனிடம் பலிக்குமா பாய்ச்சா?
பெண்டுகள் பிள்ளைகள் பெருகிடும் பக்தியோ
பெருக்கெடுத்தோடுதாம் பேயா
உங்களை நம்பி நான் உள்ளட விடுவனா
உலக்கையன் நான் என நினைப்போ?

மேல்சாதி மகனல்லோ நீதான் - தம்பி
மேல்சாதி மகனல்லோ நீதான் - தம்பி
கீழ்சாதியினருடன் ஏன் நீயும் சேர்ந்தாய்
ஏன் நீயும் சேர்ந்தாய்
மேல்சாதி மகனல்லோ நீதான்...

பக்தர்; : உழைக்கின்ற ஒரேசாதி நாங்கள் - ஐயா
உறிஞ்சுகின்ற மறுசாதி நீங்கள் - ஐயா
உழைக்கின்ற, உறிஞ்சுகின்ற இரு சாதி உண்டே,
இரு சாதி உண்டே
உழைக்கின்ற ஒரேசாதி நாங்கள்.

சூரன் : வெள்ளாளர் குலமல்லோ நீ தான் - மகனே
வெள்ளாளர் குலமல்லோ நீ தான் - மகனே
பள்ளுப்பறையோடு ஏன் நீயும் சேர்ந்தாய்
வெள்ளாளர் குலமல்லோ நீ தான்.

பக்தர்; : வெள்ளாளர் என்;றே நீரும் கூறும் - ஐயா
வெள்ளாளர் என்;றே நீரும் கூறும்
பலர் எங்கள் பக்கத்தில் உ;ளார்கள் காண்பீர்

பக்தர் : உழைக்கின்ற ஒரேசாதி நாங்கள் - ஐயா
உறிஞ்சுகின்ற மறுசாதி நீங்கள்
உழைக்கின்ற, உறிஞ்சுகின்ற இரு சாதி உண்டே,
இரு சாதி உண்டே

சூரன் : எங்கள் பிள்ளையோடா நீ தான் - பேயா
எங்கள் பிள்ளையோடா நீ தான் - பேயா
ஏன் தான் நீ கோடாலிக் காம்பாகிப் போறாய்,
காம்பாகிப் போறாய்.

சூரன் : கெட்டவங்கள் எல்லாம் வந்து வீதியிலே
கோவில் வீதியிலே
கதவுடைக்க நிற்கிறார்கள்.

பக்தர் : கெட்டவங்கள் நாங்கள் இல்லை வீதியிலே
கோவில் வீதியிலே
கதவுடைக்க நிற்கவில்லை.

சூரன் : பக்தியைக் கெடுக்கின்றார்கள் கோயிலிலே
எங்கள் கோயிலிலே
பலாத்காரம் செய்கிறார்கள்.

பக்தர் : பக்தியைக் கெடுக்கவில்லை கோயிலிலே
நாங்கள் கோயிலிலே
பலாத்காரம் செய்யவில்லை.


--------------------------------------------------------------------------------

காட்சி மூன்று



பக்தர் : கதிர் காமக் கந்தனுக்கு - வேல் வேல் வேல்
கதியிங்கு வேறில்லை - வேல் வேல் வேல்

முருகன் : பண்ணிசை கேட்கையிலே.......

நாரதர் : மேனி சிலிர்க்குது பண்ணிசை கேட்கையிலே

பக்தர் : சந்நிதியில் அப்பனுக்கு - வேல் வேல் வேல்
சந்நதங்கள் தந்திடுமே.

பக்தர் : கதிர் காமக் கந்தனுக்கு - வேல் வேல் வேல்
கதியிங்கு வேறில்லை - வேல் வேல் வேல்

முருகன் : பாசத்தைப் பார்க்கையிலே.

நாரதர் : உள்ளங் குளிருது/பாசத்தைப் பார்க்கையிலே.

பக்தர் : நல்லூரின் நாதனுக்கு - வேல் வேல் வேல்
நல்லவைகள் செய்திடுமே- வேல் வேல் வேல்

பக்தர் : கதிர் காமக் கந்தனுக்கு - வேல் வேல் வேல்
கதியிங்கு வேறில்லை - வேல் வேல் வேல்

முருகன் : பக்தியை உணர்கையிலே.

நாரதர் : கண்ணீர் மல்குது பக்தியை உணர்;கையிலே.

பக்தர் : மாவையிலே முருகனுக்கு - வேல் வேல் வேல்
மார்க்கமதைக் காட்டிடவே - வேல் வேல் வேல்
கதிர் காமக் கந்தனுக்கு - வேல் வேல் வேல்
கதியிங்கு வேறில்லை - வேல் வேல் வேல்

முருகன் : றோட்டிலே முடக்கிலே நிற்கும் வாகனத்தால்
இறக்கிறார் என்னது பாரும்
போற்றுமோர் கோயிலின் புனிதமாய்ச் சேர்க்கும்
பொருள்களோ அவை நன்கு பாரும்.

நாரதர் : கொட்டனும் கத்தியும் அங்கே உண்டு-உங்கள்-
கோவிலுக்கு எடுத்து வந்தார்
எறிகுண்டு துப்பாக்கியும் உண்டு - உங்கள் -
ஆலயத்துள் அடுக்க எடுத்து வந்தார்.

முருகன் : போத்தல்கள் நெய்யோ புதுமணப் பந்நீரோ-புதுப்
பசும்பால் அடைத்தவையோ?

நாரதர் : சாராயப் போத்தல்களே, அந்தச்
சண்டியர்க்கு கொடுத்திடவே வேலவனே
உந்தன் ஆலயத்துள் கள்ளும் தான் முட்டிகளில் - கந்தா
அந்தக் காடையர்க்குக் கொடுத்திடவே.

பக்தர் : வேலி அங்கே சுற்றிப் போட்டிருக்கு - எங்கள்
வேலவனைக் காணத் தடுப்பதற்கு

சண்டியர்கள் சுற்றி நின்றார்கள் - எங்கள்
சண்முகனைக் காணத் தடுப்பதற்கு

காடையர்கள் சுற்றி நின்றார்கள் - எங்கள்
கந்தனைக் காணத் தடுப்பதற்கு

வேதமல்லவோ இவை பேசுகினம் - மனம்
வேகுதையா மெத்த ஆழமாக

நாரதர் : கோவில் கதவடைத்த என் துரையே பாரும்-உங்கள்
கோயில் படும் சீர்கேட்டை அங்கே கொஞ்சம் பாரும்
உள்ளே இருப்பவர்கள் என் துரையே பாரும்-அவர்கள்
உள்பூட்டுப் பூட்டி விட்டார் என் துரையே பாரும்.

முருகன் : சகடையில் இருப்பவன் யார் நாரதரே கேளும்-அங்கே
சண்டியர்கள் மத்தியிலே நாரதரே கூறும்.

நாரதர் : சாதி வெறியர்களில் தான்தோன்றித் தலைவன்-அவன்
சரியான பெயர் கூறின் கலியுக சூரன்.

முருகன் : தலையிலல்லோ கனம் மெத்தவுண்டு - இந்தத்
தறுதலையின் கனம் தட்டவேண்டும்.

நாரதர் : அழிவையல்லோ இவன் தேடிக் கொண்டான் - மிக்க
ஆழத்திலே காலை விட்டு விட்டான்.

முருகன் : ஆசாரம் பேசும் இவ்வாசாட பூதியோ
பூசாரியாகிறான் பூவுலகிலே.

சூரன் 1 : கையிலே வேலோடு கந்தவேள் வேஷத்தில்
கீழ்சாதி வாறாங்கள் - ஓ ஓ ஓ
கையிலே யாழொடு நாரதர் வேஷத்தில்
பக்கத்தில் இன்னொருத்தன்
ஏழை எளியதை இங்கே அடக்கியே
பதமாய் வசக்காவிட்டால்
எங்கடை கௌரவம் என்னவாய் போவது
எங்கை வரட்டும் பாப்பம்.

சூரன் 2 : உள்ளே போக வேண்டாம் வெளியே நில்லுங்கோடா
உங்கள் வேஷம் எல்லாம் இங்கே செல்லாதடா

சூரன் 3 : வேலன் போல் நீயும் வேஷம் தான் பூண்டு
வருகின்றாயோ என்னை ஏமாற்ற இன்று

சூரன் 4 : உள்ளே போகவேண்டாம் வெளியே நில்லுங்கோடா
உங்கள் வேஷம் எல்லாம் இங்கே செல்லாதடா
சூரன் 5 : நாரதர்; போலும் வேஷம்தான் பூண்டு
நடிக்கின்றாயோ என்னை ஏய்;த்திட இன்று

சூரன் 6 : உள்ளே போகவேண்டாம் வெளியே நில்லுங்கோடா
உங்கள் வேஷம் எல்லாம் இங்கே செல்லாதடா

முருகன் : நான்தான் இந்தக் கோயில் கந்தன் - இங்கே
நான்தான் இந்தக் கோயில் கந்தன் - என்றே
நன்றிகெட்ட இவனிடம் கூறிவிடும்
நான்தான் இந்தக் கோயில் கந்தன்.

நாரதர் : சத்தியமாய் இவரே கந்தன் - ஐயா
சத்தியமாய் இவரே கந்தன் - ஐயா
சாத்த வேண்டாம் கதவுகளை திறந்துவிடும்
சத்தியமாய் இவரே கந்தன்.

சூரன் 1 : கந்தன் கந்தன் ஆ... கந்தன், ஓகோகோ
கந்தன் கந்தன் கந்தன்
கந்தனாம் கந்தன்! இவன் எங்கத்தைக் கந்தன்?

சூரன் 2 : கந்தன் வேலன் என்ற பெயருடனே - கந்தன்
கோயிலுக்குள் எவரும் போகேலாது.

சூரன் 3 : கந்தனாம் கந்தன்! இவன் எங்கத்தைக் கந்தன்?

சூரன் 4 : அழகன் முருகன் என்ற பெயருடனே - முருகன்
ஆலயத்துள் எவரும் போகேலாது.

சூரன் 5 : கந்தனாம் கந்தன்! இவன் எங்கத்தைக் கந்தன்?

சூரன் 6 : நான்தான் இங்கே அதிகாரி சொன்னேன் கேள்-படி தாண்டத்தானும் உரிமையில்லை தட்டாமல் போடா

சூரன் 7 : கந்தனாம் கந்தன்! இவன் எங்கத்தைக் கந்தன்?

சூரன் 8 : சாதியிற் குறைந்தவர்களுக்குச் சொன்னேனே- கதவு
சாத்தியே இருக்குமிங்கு போடா நீ போடா.

சூரன் 9 : கந்தனாம் கந்தன்! இவன் எங்கத்தைக் கந்தன்?

நாரதர் : அவர்தான் மூலஸ்தானத்திலிருப்பார் - உள்ளே
அவர்தான் மூலஸ்தானத்திலிருப்பார்
அதனை நீரறியோரே மானிடரே
அவர்தான் மூலஸ்தானத்திலிருப்பார்.

சூரன் 1 : செல்வாக்குப் பேசும் நீயும்
வந்தாயோ பாரு- நீயும் வந்தாயோ பாரு-எந்தன்
செல்வாக்கு இருக்குமிடம் செல்லாது இங்கே.

சூரன் 2 : சண்டித்தனம் பண்ண நீயும்
வந்தாயோ பாரு-நீயும் வந்தாயோ பாரு-எந்தன்
சண்டித்தனம் கேட்டுப் பாரு சந்தியிலே சொல்வார்.

நாரதர் :
1- போதும் ஐயா போதும் தற்பெருமை-உள்ளே
போகவிட்டுப் பேசும் தற்பெருமை

2- கந்தன் கோவில் வெளியே நின்றால் ஐயா-உள்ளே
கல்லுருவம் தானே மீதியாகும்.

3- போய் வருவோம் வாரும் போய் வருவோம்-முருகா
புல்லரின் பூமியை விட்டகல்வோம்.

முருகன் :
1- வரமாட்டேன் நானும் வரமாட்டேன் வரமாட்டேன்
இந்தக் கலியுலக சூரனைச் சங்காரம் செய்யாமல்
வரமாட்டேன் நானும் வரமாட்டேன்.

2- யார்தான் என்னை எதிர்த்திட்டாலும் நீர்தான் என்னைத் தடுத்திட்டாலும்
இந்தப் பொல்லாத அசுரனைச் சங்காரம் செய்யாமல்
வரமாட்டேன் நானும் வரமாட்டேன் வரமாட்டேன்.

நாரதர் : இந்தொரு சூரனைச் சங்காரம் செய்வதால்
என்னத்தைக் கண்டு விட்டீர்?
மக்களை வாட்டிப் பிழிந்திடும் சூரர்கள்
இன்னும் இருக்கிறாரே.

இரண்டொரு சூரனை சங்காரம் செய்வதால்
இன்னும் பிரச்சனைகள்
இல்லாமற் செய்திடல் இன்றைய காலத்தில்
இயலாத சங்கதியே.

மாநிலம் ஆண்டிடும் மாபெரும் சக்தியும்
மக்களின் சக்தியே தான்
மாற்றத்தை ஆக்கிடும் மாட்சிமை வாய்ந்ததும்
மக்களின் சக்தியே தான்.

மாவலி கங்கை கிளை விடு தன்மையாய்
மக்களின் சக்தி கூடி
மாற்றம் நிகழ்த்துமோர் ஆற்றல் வெளிப்பட
மக்களின் சக்தி இதோ.
சூரன் : கோபுர வாசல் தாண்ட-பள்ளரே உங்கள்
கோத்திரத்தில் வழியும் உண்டோ?

பக்தர் : கோத்திரங்கள் கூறி எம்மை-தடுத்திட்டாலும் காத்திருக்கப் போவதில்லை.

சூரன் : சாத்திரத்தில் இடமுமில்லை-சாதகமாகவே
சாத்திரத்தில் இடமுமில்லை.

பக்தர் : சாத்திரத்தை சாற்றுகின்றார்-உயிர் விட்டாலும்
சாத்திரத்தை மாற்றிடுவோம்.

சூரன் : கோயிலுக்குள் பனையுமில்லை-நீங்கள் சீவக்
கோயிலுக்குள் பனையுமில்லை

பக்தர் : பாளையினை சீவும் கையால்-சாதி வெறிப்
பேயினை நாம் சீவிடுவோம்.

சூரன் : தட்டாமல் வெளியே போடா-நளவா நீயும்
தட்டாமல் வெளியே போடா

பக்தர் : கோயிலுக்குள் வணங்க வந்தோம்-கதவு தாண்டிக்
கோயிலுக்குள் சென்றிடுவோம்.

கந்தன் : தந்துவிட்டேன் இன்றே தந்துவிட்டேன்-எந்தன்
தந்தை தந்த சக்தியைத் தந்துவிட்டேன்.
சங்கரன் தான் தந்த சக்தி வேலை-இன்றே
சமத்துவம் காண்பதற்கே தந்துவிட்டேன்.

பக்தர் : கோவிலுக்குள் வணங்க வந்தோம்-கதவு தாண்டிக்
கோவிலுக்குள் சென்றிடுவோம்.


-முற்றும்-


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்புக்கள்


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 01

நூல் :“புது வசந்தம்”
(தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெள்ளிவிழா சிறப்பிதழ்)
ஆசிரியர் :‘அம்பலத்தாடிகள்’- இளைய பத்மநாதன்

முதலில் அம்பலத்தாடிகளின் “கந்தன் கருணை” (1970) நாடகத்திற்கும் எனக்கும் உள்ள உறவைத் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. இளைய பத்மநாதன் அதை எழுதினார், நெறியான்கை செய்தார், பல இடங்களில் மேடையேற்றினார், என்று தவறுதலாகச் சில இடங்களில் கூறப்பட்டுள்ளது. நான் அதன் நாடக ஆசிரியன் இல்லை-என்.கே.ரகுநாதன் அவர்களின் “கந்தன் கருணை” வசன நடையில் அமைந்த அங்கத நாடகக் கையெழுத்துப் பிரதியை மூலமாகக் கொண்டு, பலர் கூட்டாகப் பல நாட்கள் உழைத்து, காத்தவராயன் பாணிக் கூத்தாக உருவாக்கினோம். நான் அதை (சரியான அர்த்தத்தில் கூறுவதாயின்) நெறியாள்கை செய்யவுமில்லை-அதில் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள், தரமான நடிகர்கள், தாமாகவே இயங்கினார்கள். நான் அதை மேடையேற்றவும் இல்லை-முதல் மேடையேற்றம் ‘அம்பலத்தாடிகள்’ முயற்சி. தொடர்ந்து பல இடங்களிலும் மேடை ஏற்றியது. ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ மொத்தத்தில் கூறுவதானால், அது ஒரு கூட்டு முயற்சி. அதற்குப் பின்னால் வலுவான இயக்கம் இருந்தது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக முன்நின்று உழைத்த சிலருள் நானும் ஒருவன் என்ற பெருமைக்கு உரியவன். (அம்பலத்தாடிகளின் “கந்தன் கருணை” 1973ல் பிரசுரமானது. கூட்டு முயற்சியின் தொடர்ச்சியாக அதன் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். அத்துடன் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும்-அது வேறு விஷயம்).

இந்தப் பின்னணியில், கந்தன் கருணை நாடகத்துடன் ஏற்பட்ட உறவால் நான் பெற்ற அனுபவங்கள் பல, கசப்பானவையும் உள, பயனுள்ள பாடங்களும் பல. அவற்றுள் ஒரு பாடத்தைப் பற்றியே இங்கு கூற விழைகிறேன். மருதனாமடம் (இடம் சரியாக நினைவிலில்லை) சந்தை மைதானத்தில் அமைந்த நாடக அரங்கில் “கந்தன் கருணை” மேடையேறுகிறது. நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் வழமையாகக் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் காத்தவராயன் கூத்திலிருந்து சில பாடல்களைப் பாடுவார். இது ஒரு வகையில், நாடகத்தின் முன் நிகழ்வாக (உரசவயin-சயளைநச) அமையும். என்றும் பாடுகிறார். நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு பார்வையாளர்களுடன் இருக்கிறேன். எமக்கு முன்னாலிருந்த கிழவர், “என்ன இது கந்தன் கருணை எண்டாங்கள், காத்தவராயன் பாட்டுப் பாடுறாங்கள். காத்தவராயன் எங்கட கூத்து, இவையள் என்ன செய்யினம் பாப்பம்”இ என்று சற்று உரக்கவே கூறுகிறார். அவர் குரலில் ஓர் உரிமைக் கோரிக்கை இருந்ததை உணர முடிந்தது. நாடகம் ஆரம்பிக்கிறது. நாரதர் தோன்றி யாழ்ப்பாணத்திலுள்ள தீண்டாமைக் கொடுமை பற்றி விளக்கிப்; பாடுகிறார். கிழவர் நிமிர்ந்து உட்காருகிறார். “காத்தவராயன் கூத்தில எங்கட பிரச்சினை பேசுறாங்கள்”இ கிழவர் நாடகத்தில் முழுமையாக மூழ்கிப் போகிறார். நாடகம் கூறும் செய்தியில் மட்டுமல்ல அதன் உருவத்திலும் அவர் தன்னை அடையாளம் காண்கிறார். “எங்கட கூத்து, எங்கட பிரச்சினை”-எங்கள் வாழ்க்கை, எங்கள் அரங்கம்- எங்கள் உள்ளடக்கம், எங்கள் உருவம். ஒரு நாடகத்தின் முழுமையை இங்குதான் காண்கிறேன். பார்வையாளர்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல அதன் அரங்க வடிவத்திலும் தம்மை அடையாளம் கண்டுணர வேண்டும்.

உருவம் இல்லாமல் உள்ளடக்கம் இல்லை. உள்ளடக்கம் இல்லாமல் உருவம் இல்லை. நாம் சிந்திப்பதே உருவத்தில்தான். இது நியதி, இருந்தாலும் உள்ளடக்கத்தையும், உருவத்தையும் பிரித்துப் பார்க்க முடியும். அவ்வாறு பார்க்கும்போது இன்னொரு உருவத்திலோ, உள்ளடக்கத்திலோ வைத்துத்தான் பார்க்க வேண்டும். ஆனாலும், உள்ளடக்கம் தன்னியல்பாக ஒரு உருவத்தைக் கொள்வதில்லை. அதற்கும் வேறு புறக்காரணிகள் வேண்டும். கலைப்படைப்புகளைப் பொறுத்தவரை உள்ளடக்க உருவ இணைப்பைக் கொண்டுவரும் புறக்காரணி படைப்பாளியே. கலை வடிவ வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்பு உடையதாக இருந்தாலும், கரு உரு சேர்க்கை படைப்பாளியிடமே உண்டாகிறது. அது அவரவர் ஆற்றல், அறிவு, வசதி, தேவை, அரசியல் நிலைப்பாடு சம்பந்தப்பட்டது. நாடக அரங்கில் அரங்காக்கத்துக்கான வடிவத்தைத் தேர்வு செய்வதும் ஓர் அரசியல் நடவடிக்கை. ஆகவே உள்ளடக்கம் மட்டுமல்ல உருவமும் செய்தியாகும். இதை “கந்தன் கருணை” அரங்காங்கத்தின் போது உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால் அவைக்காற்றும்போது அறிந்து கொண்டேன். இது ‘உருவவாதம்’ அல்ல, உள்ளடக்கங்களை உருவப்படுத்துவதற்கான வாதம். கலைப்படைப்பில் உருவமும் அதனளவில் பெரும் பங்கு வகிக்கிறது. உருவ, உள்ளடக்க உறவு வேறு. அரசியல் அரங்கில் மட்டும் (pழடவைiஉயட வாநயவசந) ஈடுபாடு கொண்டிருந்த என்னை, “கந்தன் கருணை” அனுபவம், அரங்கி;ன் அரசியலிலும் (வாநயவசந pழடவைiஉள) ஈடுபட வைத்தது. இதைத் தொடர்ந்தே எமது நாடக மரபு பற்றிய எனது பார்வை விரிவடைந்தது.

-நன்றி-


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 02

நூல் : “இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் நாடக அரங்கம்”
ஆசிரியர் : இ. சிவானந்தன்
25.07.79 - நடிகர் ஒன்றியத்தின் வெளியீட்டுரையிலிருந்து

1970 வரைவும் “கூத்தாடிகள்”இ “நாடோடிகள்”இ “மட்டக்களப்பு நாடக சபா”இ “எங்கள் குழு”இ எனப் புறம்பான அமைப்புகளின் கீழ் நாம் நாடகங்களைத் தயாரித்திருந்தாலும் நடிப்பு, தயாரிப்பு, உதவிகள், மேடையேற்றம் போன்றவற்றில் இவ்வமைப்புகளிடையே ஊடாட்டமும்; உறவும் நிரம்பியிருந்தன. எனவே ஒரு பொது நிறுவனத்தின் கீழ் ஒன்று சேர்வதற்கு எமக்கு எவ்வித தடையும் சிரமமும் இருக்கவில்லை, இந்த அமைப்பே 1970-இல் ஆரம்பிக்கப்பட்ட “நடிகர் ஒன்றியம்” ஆகும்.

ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுச் சில மாதங்களாக அது நடிக நடிகையரும், நெறியாளரும், ஆக்க கர்த்தாக்களும் கலை ஆர்வலரும் ஒன்று கூடித் தமது பிரச்சினைகளை அலசி ஆராயும் ஓர் அமைப்பாகவே இருந்தது. 1970-இல் ஏற்பட்ட ஓர் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து அதுகாலவரை அடக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் இருந்த ஆக்கச் சக்திகள் கிளர்ந்தெழத் தொடங்கின. ஈழத் தமிழ் நாடகத் துறையும் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியது. “வேதாளம் சொன்ன கதை”இ “கடூழியம்”இ “புதியதொரு வீடு” போன்ற நாடகங்கள் அடுத்தடுத்து மேடையேறின. எனினும் ஏப்ரல் 1971இல் எமது நாட்டைக் கலக்கிய ஆயுதப்புரட்சி, இக் கலை, கலாசாரப் புத்துணர்வை மீண்டும் மந்தமடையச் செய்தது. ஆரம்பகாலத்தில் கலைஞர்களிடத்தேயும் படைப்பாளிகளிடத்தேயும் கிளர்ந்தெழுந்த சுதந்திர உணர்வு மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. இந்த மந்தகாலம் எமது நிதர்சனச் சூழலை நன்கு ஆராய்ந்து நம்மை நாமே மீளாய்வு செய்வதற்கும் மீள் சுத்திகரிப்புச் செய்வதற்கும் உதவியது. இதன் பேறாக எமது தொழிற்பாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஊடகமாக மட்டுமன்றி பரவலாக எம்மெல்லோரிடத்தும் பொதிந்து கிடக்கின்ற ஆக்கச் சக்தியையும் செயற்திறனையும் ஒன்று திரட்டி நெறிப்படுத்தி வெளியிடும் வெளிப்பாட்டு ஊடகமாகவும் நடிகர் ஒன்றியம் அமைய வேண்டும் என உணரப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நாடக மேடையேற்றத்தில் தீவிரமாக இயங்கிவந்த ‘அம்பலத்தாடிகளின்’ முக்கியஸ்தர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர். இவர்களும் நடிகர் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ளவே, அவர்கள் முன்னர் மேடையேற்றிய “கந்தன் கருணை”யைப் புது மெருகூட்டி நவீனப்படுத்தி மேடையேற்றும் பணியில் ஒன்றியத்தினர் இறங்கினர். இந்நாடகம் மேடையேற்றத்தில் பெரும் வெற்றியளிக்கவே தயாரிப்பு அம்சமும் நடிகர் ஒன்றியத்தின் ஒரு முக்கிய பணியாயிற்று...


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 03

நூல் : “பழையதும் புதியதும்”
ஆசிரியர் : சி. மௌனகுரு
பக் : 124-127

புதிய கருத்துக்களை பழைய பாணியிற் கூறிய இன்னொரு நாடகம் நெல்லியடி அம்பலத்தாடிகளினால் நடிக்கப்பட்ட காத்தான்கூத்துப் பாணியில் அமைந்த கந்தன் கருணை ஆகும். ஈழத்தின் வடபகுதியில் பிரபல்யம் பெற்ற காத்தான்கூத்தின் பாடல்கள் இனிமையானவை. அவ்வினிய மெட்டுக்களில் இந்நாடகத்தின் பாடல்கள் அமைக்கப்பட்டு துள்ளு நடையுடன் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. 1969இல் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அனுமதிக்க முடியாது என்ற அன்றைய பெரியவர்கள் தடுத்ததன் பின்னணியிலே இந்நாடகம் உருவாயிற்று. பூலோகத்திலே யாழ்ப்பாணத்திற்கு வந்த நாரதர் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குச் செல்லுகிறார். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலின் வெளியே குழுமியிருப்பதைக் கண்டு அந்தக் கொடுமையைக் கந்தனிடம் சென்று முறையிடுகின்றார். வானிணின்று இறங்கி கந்தனும் நாரதரும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குள் வருகிறார்கள். கந்தன் என்ற தாழ்த்தப்பட்ட தமிழ் மகன் ஒருத்தன் கந்தசுவாமி வேடமிட்டுக் கொண்டு களவாகக் கோயிலுக்குள் வருவதாகக் கருதி வாசலில் நின்ற கலியுக சூரனான அக்கோயில் தர்மகர்த்தா அவரைத் தடுக்கிறார். கந்தனுக்கும் கலியுக சூரனுக்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. இறுதியில் கோபமுற்ற கந்தன் தனது சக்திவேலை வெளியிலே தடுத்து வைக்கப்பட்ட உண்மையான பக்தர்களான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களிடம் கொடுத்து, கோயிலை உடைத்துக் கொண்டு உட்செல்லுமாறு சொல்லிச் செல்கிறான். உண்மைப் பக்தர்கள் ஆலயப் பிரவேசத்திற்கு அணி திரள்கிறார்கள். இந்நாடகம் அன்று ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு உணர்வையும் உற்சாகத்தையும் ஊட்டியது. யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் மக்கள் ஆதரவுடனும் பிற்போக்காளரின் பலத்த எதிர்ப்புகளுடனும் மேடை பல கண்டது. மரபுவழிக் காத்தான்கூத்துப்; பரிமாணங்களை இதனாற் பெற்றது. கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலும் 1972இல் மேடையேறியது. உடை, ஒப்பனை, மேடைப் பயன்பாடு என்பனவற்றில் இதிற் காணப்பட்ட செம்மைக்கு வித்தியானந்தனின் கூத்துக்களும் சிறிது காரணம் எனலாம். எழுத்தாளர் ரகுநாதனின் மூலக்கதை ஒன்றினுக்கு அம்பலத்தாடிகளே நாடக உருக்கொடுத்தனர். நாடக உருவாக்கலில் பின்னாலிருந்து செயற்பட்டவர்களுள் மிக முக்கியமானவர் இளைய பத்மநாதன் ஆவர்... ...

... பழைய கூத்து மரபில் புதிய உள்ளடக்கத்தைப் புகுத்திய நாடகங்களான கந்தன் கருணையும், சங்காரமும் புதிய உருவத்தில் தயாரிக்கப்பட்டன. இவ்வழியில் புதிய உருவத்தில் தயாரிக்கப்பட்ட இன்னுமோர் நாடகம் ஏகலைவன் ஆகும். கந்தன் கருணை அ. தாசீசியஸ் நெறியாள்கையில் கொழும்பு நடிகர் ஒன்றியத்தின் தயாரிப்பாக 1974இல் கொழும்பு லும்பினி அரங்கிலும், நாடக அரங்கக் கல்லூரி தயாரிப்பாக 1979இல் யாழ்ப்பாணத்திலும் மேடையேறியது. சங்காரம் நாடக அரங்கக் கல்லூரி தயாரிப்பாக இக்கட்டுரை ஆசிரியரின் நெறியாள்கையில் யாழ்ப்பாணத்தில் 1980இல் மேடையேறியது. ஏகலைவன் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் 1988இல் நெல்லியடியில் மேடையேறியது. ஏகலைவனில் நடித்தவர்கள் நெல்லியடியில் மகாவித்தியாலய உயர்வகுப்பு மாணவிகளாவர். இவை ஒவ்வொன்றின் உருவ அமைப்பையும் தனித்தனியாக நோக்குதல் அவசியம்.
கந்தன் கருணை
அம்பலத்தாடிகள் நெல்லியடியில் மேடையிட்ட கந்தன் கருணையை அ. தாசீசியஸ் நடிகர் ஒன்றியத்துக்காகவும், யாழ்ப்பாண நாடக அரங்க கல்லூரிக்காகவும் முறையே 1974, 1979களில் நெறியாள்கை செய்தபோது உருவத்திலும் மாறுதல்கள் பலவற்றைக் கொணர்ந்தார். காட்சிகளைப் புலப்படுத்த பின் திரைகளை உபயோகித்தல் காத்தான்கூத்து மரபு. திரைகளை மாற்றுதல் மூலமும் முன் திரைகளைத் திறந்து மூடுதல் மூலமும் காட்சி மாற்றம் மரபுவழிக்கமையத் தயாரிக்கப்பட்ட கந்தன் கருணையில் முன்னர் உணர்த்தப்பட்டது. ஆனால் திரைகளை மாற்றாது, முன் திரையை மூடித் திறக்காது திறந்த மேடையில் நிகழ்வுகள் முழுவதையும் தாசீசியஸ் அமைத்தார். பாத்திரங்களின் அசைவு மூலம் காட்சி உணர்த்தப்பட்டது. கலியுக சூரனுக்குப் பதிலாகச் சூரர்கள் உருவாக்கப்பட்டனர். நடந்து நடந்து பாடுவதை விடுத்து மேடை அசைவுகள் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் திட்டமிட்டு அமைக்கப்பட்டது. துள்ளல் ஆட்ட முறையே காத்தான்கூத்து மரபு. தாசீசியஸ், இதில் தோன்றிய நாரதர், கந்தன், பக்தர்கள், சூரர்கள் அனைவருக்கும் வௌ;வேறு ஆட்ட முறைகள் அமைத்தார். வடமோடி ஆட்ட முறைகளும்,கண்டிய நடன முறைகளும் இதிற் புகுத்தப்பட்டன. வடமோடி ஆட்ட முறைகளை அமைப்பதில் தாசீசியஸிக்கு உதவியதுடன் இந்நாடகத்தில் 1974இல் கந்தனாகவும் இக்கட்டுரையாசிரியர் நடித்தார். 1974இல் மேடையேறிய இந்நாடகத்தில் பிரபல நாடக நெறியாளர்களான பாலேந்திரா, இளைய பத்மநாதன் ஆகியோரும் அன்று இந்நாடகத்தில் நடித்தனர். பாலேந்திரா பக்தர்களுள் ஒருவராகப் பங்கேற்றார். இளைய பத்மநாதன் பக்தர்களின் தலைவனாகப் பங்கேற்றதுடன், காத்தான்கூத்திசையை நாடகத்தில் அமைப்பதில் தாசீசியஸ_க்கு பெரும் துணை புரிந்தார். உடுக்கு மாத்திரம் அன்றி சகல வாத்தியங்களும் பின்னணிக்குப் பயன்படுத்தப்பட்டன. கந்தன் ஆட்டத்திற்கு மிருதங்கமும், சூரர்கள் ஆட்டத்திற்கு டோல்கியும், பக்தர்கள் ஆட்டத்திற்கு உடுக்கும் பின்னணியாக அமைந்தன. வாத்தியங்கள் மூலம் பாத்திர குணாதிசயங்கள் பற்றிய உணர்வைப் பார்வையாளர் மத்தியிற் பதிக்க எடுத்த முயற்சி இதுவெனலாம். மேடையிற் பல்வேறு விதமான ஆட்ட அசைவுகள், மேடைக் கோலங்கள் என்பன போடப்பட்டன. இவை முன்னைய, காத்தான்கூத்துப் பாணியிலமைந்த கந்தன் கருணையிற் காணப்படாத ஒன்று. இதில் பாத்திர ஒப்பனை, உடை அமைப்பு என்பன மோடியுற்ற பாணியில் வடிவமைக்கப்பட்டன. பழைய கந்தன் கருணைப் பாடல்கள் நீக்கப்பட்டு புதிய பாடல்கள் சில நவீன மேடைக்கு ஏற்ப சேர்க்கப்பட்டன. இப்பாடல்களை முருகையன், சிவானந்தன் ஆகியோர் எழுதி உதவினர். 22.2.1975 தினகரனின் இந்நாடகம் பற்றிய விமர்சனம் எழுதிய எச்.எம்.பி.முஹைதீன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இதன் சிறப்பு என்னவென்றால் இதன் நாடக- இசைமுறை இணைப்பு வெற்றி பெற்றுள்ளமைதான். பாரம்பரிய யாழ்ப்பாண, மட்டக்களப்பு வடமோடிக் கூத்துமுறை குறிப்பாககக் காத்தான்கூத்து இசைமுறையுடன், கண்டிய நடன அசைவுகளும் கலக்கப்பட்டு ஒரு பரீட்சார்த்த நாடகமாகக் கந்தன் கருணை அமைகிறது. இந்த நாடகம் இசைக்கூத்து முறையையும் நடனக்;கூத்து முறையையும் நடனக்;கூத்து ஆகிய இரண்;டினையும் ஒன்றிணைத்து ஒரு புது அமைப்பைத் தமிழ் இரசிகர்களுக்கத் தந்துள்ளது. கந்தன் கருணை புதிய கூத்து வடிவம் ஒன்றிற்றுக் கட்டியம் கூறுவதாக அமைந்து.


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 04

நூல் : “ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி” - 1977
ஆசிரியர் :க. சொக்கலிங்கம்
பக் :48

1973ஆம் ஆண்டிலே ‘அம்பலத்தாடிகள்’ ஆலயப் பிரவேசத்தைக் கருவாகக் கொண்டு யாழ்ப்பாணத்திலே நிலவிவந்த காத்தான் கூத்துப் பாணியிலே கந்தன் கருணை என்னும் நாட்டுக் கூத்தை மேடையேற்றி அதை நூல்வடிவிலும் வெளியிட்டுள்ளனர். சமயத்தில் ஆழமான அறிவோ, வேத சிவாகம உணர்வோ இல்லாத கோயில் அருச்சகரும் சமயத்தை தமது காப்பரணாகக் கொண்டு பழைமையான சாதியாசாரங்களின் பாதுகாவலராக விளங்குங் கோயிற் காவலரும் முருகக் கடவுளையே கோயிலுள் விடாது தடுப்பதாகச் சித்திரிக்குத் அங்கதச் சுவை மிக்க கூத்தே கந்தன் கருணை. ‘பழைய கலை மரபுகளுக்குப் புதிய இரத்தத்தைப் பாய்ச்சி அவற்றைத் தமது போராட்டத்திற்குப் பயன்படுத்தல் வேண்டும்’ என்ற குறிக்கோளை முன்வைத்து இந்நாடகாசிரியர் இதனை யாத்துள்ளார்.


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 05

இ. முருகையன்
நீர்வேலி தெற்கு, நீர்வேலி
29.12.2002.

பின்னிணைப்பு-03இல், சி.மௌனகுரு அவர்கள் தெரிவித்துள்ளவாறு, அ.தாஸீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் நடிகர் ஒன்றியம் மேடையேற்றிய ‘கந்தன் கருணை’யில் பழைய ‘கந்தன் கருணை’களில் இடம்பெற்ற பாடல்களுக்குப் பதிலாக, புதிய பாடல்கள் சில நவீன மேடைக்கு ஏற்பச் சேர்க்கப்பட்டன. இப்பாடல்களிற் பலவற்றை என் தம்பியார் இ. சிவானந்தன் எழுத, மற்றும் சிலவற்றை நான் இயற்றிக் கொடுத்தேன். அப்பாடல்கள் எவையெவை என்று இனங்காட்டிச் சில குறிப்புகள் தருவது பொருத்தமாகும்.

(i) [பக்கம் 113, 114]
நாரதர் : அந்த யாழ்ப்பாணம் சிறு குடா நாடே
ஆயினும் அநீதிகள் பெருகி
அழுகையாய் மாறும் நிலைமைகள் மிகுந்தால்
அடுக்குமோ?
அநாகரிகத்தின்
பொந்து போல் இன்னும் நொந்து தேய்வதுவோ?
புதியதோர் கலகம் நான் மூட்டி,
போக்குவேன் கொடுமை, நீக்குவேன் துயர்கள்
ஆக்குவேன் சமநிலை அமைதி.
எங்கு நான் போவேன்? யாரிடம் சொல்வேன்?
எவரிடம் முறையிடின், சிறந்த
இனிய நற்பலன்கள் ஏற்படும்? இந்த
முனிவனின் திட்டங்கள் பலிக்கும்?
கந்தவேளிடமே செல்லுவேன்;
முருகர்
கார்த்திகை மாதரின் மைந்தா,
கதிர்வடி வேலா, சூரனை வதைத்த
தேவனே, வேலுடன் எழுவாய்.

இந்தப் பாடல், எழுசீர் ஆசிரிய விருத்தம் என்று பேசப்படும் செய்யுள் வகையின் ஒவ்வோர் அடியையும் நீட்டி, இருமடங்காக்கி அமைக்கப்பட்டது. அதனால், இதனைப் பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம் என்று சொல்லலாம். என்றாலும், வேறுவிதமான ஓசை அமையும் வண்ணமும் பதினான்கு சீர் ஆசிரிய விருத்தங்களை அமைப்பது சாத்தியமே.


(ii) [பக்கம் 114-115]
மேல் வந்தது போன்ற பதினான்குசீர் ஆசிரிய விருத்தமே, இங்கு, முருகன், நாரதர் ஆகிய இரு பாத்திரங்களுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டு, இந்தக் கட்டத்தின் உரையாடல், பாடல் வடிவத்திலே புனையப்பட்டுள்ளது
நாரதர் : கந்தனே, குமரா,கார்த்திகை மைந்தா,
கடம்பனே, சண்முகா, முருகா!
முருகன் : கலக நாரதரே, வருக. இன்றென்ன
கையிலே ஏந்தி நீர் வந்தீர்?
முந்தியே போல மாங்கனி ஒன்றா?
நாரதர் : முருகனே, அருள் செய்ய வேண்டும்.
முருகன் : முழுவதும் சொல்க, இன்னுமோர் இளைய
அழகிய குறமகள் உண்டா?
நாரதர் : வந்து சேர்வதன்முன் இப்படி எல்லாம்
வாய் மலர்ந்தருளுவதேனோ?
வணங்கவே வந்தேன்;; கலகம் மூட்டுவது
மட்டுமா நாரதன் வேலை?
முருகன் : சிந்தை நோ எதற்கு?
நாரதர் : திருவருள் புரிக.
தேவர்தம் சிறையினை மீட்ட
திவ்விய வடிவேல் தரித்த நம் செவ்வேள் -
சேந்தனே, திருவருள் புரிக.
இந்திரன் மைந்தன் கடூழியம் ஒழித்த
ஏந்தலே திருவருள் புரிக.
இளைய வேள் அருகில் உரிமையோடமரும்
இந்திர குமாரியே, வருக.

[இந்திரன் மைந்தன் சயந்தனைப் பணயக் கைதியாகச் சூரன் வைத்திருந்தான். கடூழியச் சிறையில் வைக்கப்பட்டிருந்த சயந்தனை விடுவிக்கும் நோக்கத்துடன், முருகன் சார்பில் வீரவாகு தேவர் தூது சென்றார். தூது பலிக்கவில்லை. வன்முறைப் போரினாலேதான் சயந்தனும் ஏனைய தேவர்களும் விடுவிக்கப்பட்டனர். இது புராண மரபுச் செய்தி.

இந்திரகுமாரி-தெய்வயானை அம்மை. அவள் செவ்வேளாகிய முருகனின் அருகில் அமரும் உரிமை பெற்றவள். இதுவும் புராண மரபு தழுவிய கதைப் புணர்ப்பு.]


(iii) [பக்கம் 116]
நாரதர் : அவ்வளவே தான் விஷயமா? நானோ
அடாதன பலப்பல நினைத்தேன்.
செய்திடத் தகாத பெரும் பிழை இழைத்தேன்
சிந்தனை குழம்பினேன் போலும்!
சீரெல்லாம் குலைந்து கலைந்த யாழ்ப்பாணம்
சென்றதன் பலாபலன் போலும்.
முருகன் : வருந்திட வேண்டாம், நாரத முனியே!
மனத்தில் நீர் நினைத்ததைச் சொல்லும்.
நாரதர் : மன்னிக்க வேண்டும், எம் பெருமானே!
முருகன் : மறைத்திடாது அனைத்தையும் கூறும்.



(iஎ) [பக்கம் 117]
முருகன் : என்ன, நீர் இப்படி ஓர் அநியாயத்தை
இயல்பான இழிவழக்காய் எடுத்துச் சொன்னீர்!
புன்மை தரு புது வழக்கம் பூமி தன்னில்
பூத்திட நீர் ஊற்றி வைத்த புல்லர் யாரோ?
என்னருமைத் துணைவியையே இகழ்ந்து கூறும்
இப்படி ஓர் குலவழமை இருக்குமானால்,
சன்னதமே கொண்டுடனே போவேன் நானும்,
சமத்துவத்தைப் பூவுலகில் பரப்பத் தானே.

[இது வழமையாக எண்சீர் விருத்தம் எனப்படுவது. எண் சீர் விருத்தங்களில் எத்தனையோ விகற்பங்கள் உண்டு. என்றாலும், சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் மிகவும் பிரபலமாயிருந்த செய்யுள் வகை இது.

அப்பரின் தாண்டகங்கள், சித்தர் பாடல்களில் ஒரு கணிசமான பகுதி, பாரதி பாட்டுக்களிற் சில, பாரதிதாசன் பாட்டுகளிற் பல, “மஹாகவி”, நீலாவாணன், இ.நாகராஜன் முதலியோரின் ஆக்கங்கள் பல, கண்ணதாசன், வாணிதாசன், சுரதா, வேழவேந்தன் முதலான திராவிட இயக்கக் கவிஞர்களின் பாட்டுகளிற் பெருவாரியானவை எண்சீர் விருத்தங்களாய் இயன்றவை.

பல்வேறு வகைப்பட்ட உள்ளடக்கங்களையும் எடுத்துக் கையாளக் கூடிய வாய்ப்பும் வலுவும் இந்தச் செய்யுள் வகைக்கு உண்டு. கவிஞர்கள் விட்டுவீதியாக உலாவுவதற்கு வசதியான ஒரு பா வடிவம் இது. சிற்சில பாவடிவங்களின் புறவழகுத் தேவைக்காக, சொல்லெளிமையைப் பலியிட வேண்டி நேர்வதுண்டு. ஆனால், எண்சீர் விருத்தங்களில், இந்த விதமான விபத்துகள் நேர்வது மிகவும் குறைவு.]


(எ) [பக்கம் 120]
நாரதர் : சாதி என்னும் அமைப்பு முறை சமூகம் தன்னில்
சார்ந்த நில உடைமைகளின் எச்ச சொச்சம்.
மாறிவரும் முதலாளித்துவ சமூகம்
மாற்றமிதில் இது சிறிது குறையக் கூடும்;
ஆதியிலே அரும்பிய இவ்வநியாயத்தை
அழித்தொழிக்க வேண்டும் என்றால், அதற்கு நாட்டில்
சாதிமத இனபேதம் சற்றும் இல்லாச்
சமதர்ம சமுதாயம் தோன்ற வேண்டும்.

மரவேலை, பொன்வேலை, மேசன் வேலை
மண்வேலை, கம்மாலை இரும்பு வேலை
அது வேலை, இது வேலை ஆய்ந்து சாதி
ஆயிரங்கள் பூமிதனில் வகுத்து வைத்தார்
பொது வேலை, நாடுய்யப் பொருந்தும் வேலை
எதுவேனும் செய்தறியா எந்தரானோர்,
சதிவேலை தமக்கெல்லாம் சிகரம் ஆனார்
சாதியொடு தீண்டாமை தோற்ற வைத்தார்.

மேற்காட்டிய பாடல்களே தாஸீசியசின் வேண்டுகோட்படி, அவர் ஆலோசனையுடன் என்னால் இயற்றப்பட்டவை.

‘கந்தன் கருணை’ எழுத்துரு திடுமென்று வானத்திலிருந்து குதித்ததல்ல. ஒரு சரித்திர காலகட்டத்தில் மேற்கிளம்பி நின்று உறுத்திக் கொண்டிருந்த சமூக நோய்களை உற்றுணர்ந்த ஒரு கலைஞர் கூட்டம் அதனை உருவாக்கிற்று.

அதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் என்.கே. ரகுநாதன். அவர் அந்த முன்முயற்சியைத் தொடக்கி வைத்தார். இதே காலப்பகுதியிலே தான் சிங்கள மொழியிலும் நாடக முயற்சிகள் தலை தூக்கின. ஒத்த கருத்துள்ள கலைச் சிந்தனையாளர்களிடையே கொடுக்கல் வாங்கல்களின் தேவைகளும் அவசியப்பாடும் நன்கு உணரப்பட்டன.

பேராசிரியர் சரச்சந்திரவின் ஆய்வுபூர்வமான அணுகுமுறையானது, தமிழர்தம் கூத்து முறைகளைச் சார்ந்துதான் சிங்களப் பெருமக்களும் தமது கூத்துக் கலைவடிவங்களைச் செம்மைப்படுத்தி வாழ்வித்தனர் என்ற செய்தியைக் கலைவல்லார் மத்தியில் தெருட்டி உணர்த்திற்று. அதே சமயத்தில், சிங்கள அரங்கின் பிரதான அம்சங்களாக, சடங்குகளும் தொன்மங்களும் பெரும் பங்களிப்பைச் செய்யும் நிலைமை தோன்றிற்று. புதிய புதிய பரிசோதனைகள் நாடக அரங்குகளில் மேற்கொள்ளப்பட்டன.

‘நாடகமும் அரங்கியலும்’ தனியொரு கற்கை நெறியாக நிமிரலாயிற்று. இருமொழிக் கலைஞர்களும் அரங்கியற் பட்டறைகளை ஒழுங்கு செய்து இத்துறையிலே முன்னெடுப்புகள் சிலவற்றை மேற்கொள்ள முயன்றனர்.

இவ்வாறான ஏதுக்களின் நல்விளைவுகளுள் ஒன்றுதான், நாடகமானது ஒரு கூட்டு முயற்சி நோக்கின் வெளிச்சத்தில் வளரத் தலைப்பட்டமை ஆகும்.

‘கந்தன் கருணை’ அந்தப் புதிய நோக்கின் நற்பேறாக நாம் படைத்துக் கொண்ட ஒன்றாகும்.

எனவேதான், ‘கந்தன் கருணை’யின் எழுத்துருவை வெளியிடுகையிலும் அந்தக் கூட்டுணர்வு முத்திரையினை நன்கு பதித்து வைப்பதே சிறந்தது என்றும், இப்போதைய வெளியீட்டில், எழுத்துருவின் பரிமாணத்தின்போது மலர்ச்சி பெற்ற மூன்று முக்கிய கட்டங்களையும் தெளிவாகக் காட்டுதல் வேண்டும் என்றும் புத்தக வெளியீட்டாளர்கள் எண்ணிச் செயற்பட்டனர் போலும்.

இப்போதைய புத்தகத்தில், நாடகத் தயாரிப்பின்போது முழுமூச்சாய் முயன்றுழைத்த கலைஞர்களின் தனித் திறமைகளினாலும் அவற்றின் கூட்டுச் சேர்க்கையாலும் புனையப்பட்ட பாடல்கள் யாவும் சேர்க்கப்பட்டுள்ளன. புதியனவாய் இயற்றப்பட்டவை சிலவும், ஏலவே இருந்த பொதுச் சமூகச் சேமநிதியத்திலிருந்து தெரிந்து எடுக்கப்பட்டவை சிலவுமாக அவை பல்விதப்பட்டு உள்ளன எனலாம்.


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 06

சி.கா. செந்திவேல்
கொழும்பு
03.01.2003.

காலத்தின் தேவையை நிறைவு செய்து கொண்ட ஒரு கலைவடிவம்தான் கந்தன் கருணை நாடகம். உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் மக்கள் கலைக்குரிய முழுமையான அம்சங்களுடன் அமைந்த இந் நாடகம் போராட்டத்தில் பிறந்து மீண்டும் அப்போராட்டத்திற்கே பணி புரிந்து பலம் சேர்த்துக் கொண்டது. கந்தன் கருணை நாடக வார்ப்பிலும் அதன் ஐம்பது தடவைகளுக்கு மேற்பட்ட அரங்க செயற்பாட்டிலும் பங்கு கொண்டவர்கள் மத்தியில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அவ்வாறு பங்குபற்றிய நினைவுகளையும் அனுபவங்களையும் இந்நாடக நூலிலே பதிவு செய்துகொள்வது பயன் தருவதாக அமையும் என நம்புகின்றேன்.

1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி என்பது வடபுலத்தின் வரலாற்றிலே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய எழுச்சி நாளாகும். தமிழர்கள் மத்தியில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேணப்பட்ட பழமைவாத அமைப்புக்கூறாக நீடித்து வந்த சாதிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக வீறுகொண்டெழுந்த புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களுக்கு அந்நாளே வழிகாட்டி நின்றது.

அத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பதற்கு 1967ல் தோற்றுவிக்கப்பட்ட போராட்ட அமைப்பே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமாகும். அதன் இரண்டாவது மாநாடு 1969ல் யாழ்ப்பாணத்தில் மிக விரிவாக நடாத்தப்பட்டது. அதற்கான மாநாட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அம்மலரில் வெளியிடுவதற்கென ஆசிரியரும் எழுத்தாளருமான என்.கே. ரகுநாதனால் எழுதப்பட்டதே கந்தன் கருணை மூலக் கதையாகும். நாரதர் முருகன் ஆகிய இரு கதாபாத்திரங்களின் மூலமாக அன்று இடம்பெற்றுவந்த மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டம் பற்றிய ஒரு சித்திரிப்பாகவே அம் மூலக்கதைப் பிரதி அமைந்திருந்தது. நாரதர் பாத்திரம் ஊடாக சாதி தீண்டாமைக் கொடுமையின் அம்சங்களை முருகனுக்கு எடுத்துக்கூறும் சம்பாசனை வடிவிலேயே மூலப்பிரதி ரகுநாதனால் எழுதப்பட்டிருந்தது. மிகவும் சுவாரஷ்யமாக அமைந்திருந்த அப்பிரதியை மேற்படி மாநாட்டு மலரில் இடம் காலம் போதாமை காரணமாக வெளியிட முடியவில்லை. ஆனால் அப்பிரதியை இரண்டு மூன்று தடவைகள் வாசித்து பார்த்துக் கொண்டதன் மூலம் அதன் உள்ளடக்கம் என்னில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

நான் 1965ம் ஆண்டிலிருந்து கட்சியின் முழுநேர அரசியல் ஊழியனாக செயற்பட்டு வந்தபோதிலும் 1969ல் வடமராட்சிப் பிரதேசத்தில் அதிக வேலைகளைச் செய்யுமாறு கட்சித் தலைமை பணித்திருந்தது. அதற்கிணங்க நெல்லியடியை மத்தியாகக் கொண்டு வேலைகள் விரிவுபடுத்தி முன்னெடுக்கப்பட்டன. அங்கு ஒரு கட்சி காரியாலயமும் இருந்தது. அவ்வேளை அடிக்கடி அரசியல் வகுப்புக்கள், கலந்துரையாடல்கள், கூட்டங்கள் இடம் பெற்றும் வந்தன. நெல்லியடியில் இளம் தலைமுறையினர் மத்தியில் கட்சிக்கு பலமும் அடித்தளமும் இருந்தது.

1969ல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மாநாட்டிற்கு பின்பு ஒரு நாள் நெல்லியடிக் காரியாலயத்தில் ஒரு அரசியல் கலந்துரையாடலுக்காக நெல்லியடி கட்சி-இளைஞர் அணியைச் சேர்ந்த தோழர்கள் கூடி இருந்தனர். அவர்களில் இளைய. பத்மநாதன் (பத்தண்ணா) மறைந்த கு.சிவராசா, சி.சிவஞானம் உட்பட பல தோழர்கள் இருந்தனர். அவ்வேளையிலேயே மாநாட்டு மலருக்காக என்.கே.ரகுநாதனால் எழுதப்பட்டு பிரசுரிக்க முடியாது போன கந்தன் கருணை எழுத்துப் பிரதி பற்றி எடுத்துக் கூறினேன். எனது மனதில் படிந்து கொண்ட அப்பிரதியின் அம்சங்களை மிகச்சுவையுடன் தோழர்களுக்கு எடுத்துக் கூறினேன். அதன் பின் அரசியல் கலந்துரையாடலும் இடம்பெற்றது. முடிந்த பின் பத்தண்ணா நான் கூறிய கந்தன் கருணைப் பிரதி பற்றிய தனது கவனத்தைக் கூறி அப்பிரதியை அடுத்த தடவை வரும்போது வாங்கி வரும்படியும் கேட்டுக்கொண்டார்.

கட்சி வெகுஜன இயக்கப் பணிகளும் போராட்டங்களும் உச்சநிலையில் காணப்பட்ட அக்காலகட்டத்தில் என்.கே. ரகுநாதன் மாஸ்ரருடன் மிக நெருக்கமாக இருந்து வந்தவர்களில் நானும் ஒருவன். அவரும் வெகுஜன இயக்க வேலைகளில் கலை இலக்கிய ஆக்கங்களில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக மாநாட்டை ஒட்டிய ஓவியக் கண்காட்சி ஒன்றை நடாத்துவதில் அவரதும் ஆசிரியர் மு. தங்கவடிவேல் அவர்களதும் பங்கும் பணியும் முக்கியமானதாக இருந்தது. இச்சந்தர்ப்பத்தில் என்.கே. ரகுநாதன் எழுதிய கந்தன் கருணைப் பிரதியை கேட்டு வாங்கிச்சென்று பத்தண்ணாவிடம் கொடுத்தேன். அவ்வேளை அப்பிரதி கோடிட்ட வெள்ளை முழுத்தாள்கள் ஐந்து அல்லது ஆறு பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. பத்தண்ணா அதனை எழுதி பிரதியெடுத்தபின் மூலப்பிரதியை என்னிடம் திருப்பித்தர அதனை மீளவும் ரகுநாதன் மாஸ்ரரிடம் ஒப்படைத்துக் கொண்டேன். அவ்வேளை ரகுநாதன் மாஸ்ரருக்கும் நெல்லியடித் தோழர்களுக்கும் அதிக நெருக்கமோ அறிமுகமோ இருக்கவில்லை.

ரகுநாதனின் மூலப் பிரதியை படித்துப் பார்த்த பத்தண்ணாவிற்கு அதனை நாடகம் ஆக்கினால் எப்படி இருக்கும் என்னும் அரங்காற்றச் சிந்தனை விரிவடையத் தொடங்கியது. தனக்குள் உருவாகியவற்றை ஏனைய தோழர்களுடன் அவ்வப்போது கலந்து பேசியும் கொண்டார். என்னுடனும் அடிக்கடி

பேசிக்கொள்வார். இச்சந்தர்ப்பத்திலேயே நெல்லியடியில் வசித்து வந்த மாதனையைச் சேர்ந்த அண்ணாவியார் கணபதிப்பிள்ளை பற்றிய நினைவை பத்தண்ணா மீட்டுக்கொண்டதுடன் மக்கள் மத்தியில் தாக்கம் மிக்க கலைவடிவமாகத் திகழ்ந்து வந்த காத்தான் கூத்து மெட்டில் கந்தன் கருணையை நாடகமாக்கும் நோக்கை ஏனைய தோழர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒருநாள் இரவு எட்டு மணியளவில் நெல்லியடி காளிகோவில் வாசல் மணல்பரப்பில் அண்ணாவியார் கணபதிப்பிள்ளை கையில் உடுக்குடன் இருந்து காத்தான் கூத்துப் பாடல்களை முழுமையாக எல்லா மெட்டுகளுடனும் பாடுகிறார். பத்தண்ணா உட்பட நாம் எல்லோரும் காத்தான் கூத்தின் பல்வேறு மெட்டு;க்களையும் அவற்றுக்கு இசைவாக உடுக்கு நாதம் எழுப்பி நின்றதையும் கேட்டுப் பரவசமடைந்து நின்ற காட்சி இப்பொழுதும் கண்முன்னே நிற்கிறது.

அடுத்து சில நாட்களாக அண்ணாவியார் கணபதிப்பிள்ளையும் பத்தண்ணாவும் இரவிரவாக காத்தான் கூத்து மெட்டுப் பற்றிக் கலந்து பேசுவதும் பாடுவதும் அதற்கேற்ப பாடல்களை இயற்றுவதுமாக இருந்தனர். இவை பற்றி ஏனைய தோழர்களோடு பத்தண்ணா கலந்து பேசிக்கொள்வார்.

ஒரு பெரும் கூட்டு முயற்சியாக கந்தன் கருணை நாடகப் பிரதி உருவாக்கம் பெற்றது. நாரதராக தோழர் கு. சிவராசா வேடமேற்றார். நல்ல குரல் வளமும் அதற்கேற்ற உணர்ச்சி-உணர்வு என்பனவும் சிவராசாவிற்கு நாரதர் வேடம் பொருத்தமாக அமைவதற்கு வசதியாயிருந்தது. முருகனாகச் சிவபாதம் வேடமேற்றார். தெய்வயானையாக சாந்தலிங்கம், நவீன சூரனாக (~~அடங்காத்தமிழன்|| சுந்தரலிங்கமாக) நவிண்டில் சிவராசாவும் பக்தர்களின் தலைவனாக சோதியும் நடித்தனர்.

அண்ணாவியார் கணபதிப்பிள்ளை உடுக்குவாத்தியத்துடன் பிரதான பக்கப்பாட்டாளராகவும் அவருடன் வேறு தோழர்களும் இணைந்து பாடினர். பத்தண்ணாவும் நானும் பிரதி ஒப்புநோக்குநர்களாக இருந்தோம்.

நாடகம் முதல் தடவையாக நெல்லியடி காளிகோவில் வீதியில் அரங்கேறியது. முதல் தடவையிலேயே மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுக் கொண்டது. பழைமை வாய்ந்த நாட்டுக் கூத்து மெட்டில் புதிய கருத்துக்கள் கலைத்துவமாக வார்த்துக் கொடுக்கப்பட்டது.

போராட்டங்கள் பரந்து நின்ற அன்றைய காலகட்டத்தில் கந்தன் கருணை காத்தான் கூத்து மெட்டிலான இந்நாடகம் வடபுலத்தின் பல்வேறு கிராமங்கள் நகரங்களில் மக்களின் பலத்த ஆதரவுடன் அரங்கேறியது. முதலாவது அரங்கேற்றத்திற்குப் பின்பு கூட்டான கலந்துரையாடல்கள் மூலமும் பார்வையாளர்களிடமிருந்து வந்த கருத்துக்கள் மூலமாகவும் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு நாடகம் முழுமையாக்கம் பெற்றது.

மூலப்பிரதி என்.கே.ரகுநாதனுடையதாக அமைந்திருந்த போதிலும் அதனை ஒரு பெரும் கூட்டு முயற்சியாக காத்தான் கூத்து மெட்டில் மக்கள் கலைவடிவமாக மாற்றுவதில் பத்தண்ணாவின் கடும் உழைப்பை, விடாமுயற்சியை எக்காரணம் கொண்டும் குறைத்து விட முடியாது. இருப்பினும் கந்தன் கருணை நாடகத்தின் வெற்றியை ஒரு பெரும் கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகவே கண்டு கொள்ள முடியும். இந் நாடகத்தின் வரவுடனேயே அம்பலத்தாடிகள் அமைப்பும் தோற்றம் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கந்தன் கருணை நாடகம் வடபுலத்தின் சாதிய தீண்டாமைக்கு எதிராகப் போராடி நின்ற தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தை அனைத்து மக்கள் மத்தியிலும் வலியுறுத்தி நின்ற கலைவடிவமாகத் திகழ்ந்தது. அதனால் சாதிய தீண்டாமையை எதிர்த்து நின்ற மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. அதேவேளை சாதிய வெறி கொண்டோர் மத்தியில் கடும் எதிர்ப்பையும் பெற்றுக் கொண்டது. தமிழர்கள் மத்தியில் இடம்பெற்று வரும் சம்பவங்கைளயும் நிகழ்வுகளையும் நாடகம் பிரதிபலித்து நிற்பதாகவே மக்கள் மத்தியில் வரவேற்புடன் பேசப்பட்டது.

ஒரு முறை மாவிட்டபுரம் கோவிலுக்கு இரண்டு கி.மீ. தூரத்தில் காங்கேசன்துறைப் பகுதியில் இந் நாடகம் அரங்கேறியது. நாரதர் முருகனுக்கு சாதிய தீண்டாமை பற்றியும் ஆலயத்திற்கு செல்லவிடாது தாழ்த்தப்பட்ட மக்கள் வழி மறிக்கப்படுவது பற்றியும் காத்தான் கூத்து மெட்டின் பாடல்கள் ஊடாக எடுத்து விளக்கும் காட்சி இடம்பெற்றுக் கொண்டிருந்தது. யாரோ சாதிய வெறி கொண்டோர் சிலர் மறைந்து நின்று மேடையை நோக்கி கல் எறிந்தார்கள். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் மீது கற்கள் விழுந்து ரத்தம் பீறிடுகிறது. ஒருவர் தூஷண வார்த்தைகளைக் கூறியபடி மேடைக்கு முன்னால் வர, முருகனாக நடித்துக் கொண்டிருந்தவர், கையில் வைத்திருந்த வேலால் குழப்ப வந்தவருக்கு அடிக்கிறார். வேல் இரண்டாக முறிந்து விடுகிறது. சிறு சலசலப்பிற்குப் பின் நாடகம் தொடர்கிறது. உடுக்கு வாசித்த அண்ணாவியார் சிறிது நேரம் காணாமல் போகிறார். அவரைத் தேடிப் பிடித்து மீண்டும் பழையபடி நாடகம் வெற்றிகரமாக மக்கள் ஆதரவோடு அரங்கேறி நிறைவு பெற்றது.

வேறும் சில இடங்களில் இந்நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே தூரத்தில் சாதிய-தீண்டாமை பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். பொலீஸ் தலையீடுகள் கூட இடம்பெற்ற சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. மந்துவில் பகுதியில் நாடகத்திற்கு முதல் நாளே பொலீஸ் வந்து அச்சுறுத்தியதுடன் அம்பலத்தாடிகளின் நாடகத் திரையையும் ஏனைய உபகரணங்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

அம்பலத்தாடிகள் அரங்கேற்றிய கந்தன் கருணை வடபுலத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட தடவைகள் ஆற்றுகை செய்யப் பெற்ற அதேவேளை அந்நாடகத்தின் பிரதியை வாங்கி தாமாகவே பல்வேறு கிராமங்களில் பயிற்சி செய்தும் அரங்கேற்றிக் கொண்டனர்.

புத்தூர் நவயுக நாடக மன்றமும், சாந்தையில் விநாயகர் நாடக மன்றமும், காலையடி மறுமலர்ச்சி மன்றமும், சங்கானை தோழர் பசுபதி தலைமையிலான நாடகக் குழுவினரும் மேடையேற்றினர் என்பதை அறிந்துள்ளேன்.

கொழும்பில் அம்பலத்தாடிகள் இந்நாடகத்தை அரங்கேற்றிய பின்பு நடிகர் ஒன்றியம் அம்பலத்தாடிகளின் பிரதியில் இடம்பெற்ற பாடல்களில் சில மாற்றங்களைச் செய்தும் புதிய பாடல்களை இணைத்தும் நவீன பாணியில் அரங்கேற்றினர். தாஸீசியஸ் அதனை முன்னின்று நெறிப்படுத்தினார். அதன்பின் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியினர் வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேற்றினர்.
இவ்வாறு என்.கே. ரகுநாதனின் மூலப்பிரதியான கந்தன் கருணையானது அம்பலத்தாடிகளின் ஊடாக பல்வேறுபட்ட கலைஞர்களின் கூட்டு முயற்சியால் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று நின்றது. உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்ட கந்தன் கருணை காத்தான் கூத்து மெட்டு நாடகமானது மக்கள் கலைவடிவத்திற்கான முன்னுதாரணமாகிக் கொண்டது. இன்றும் பல கிராமங்களிலே அந் நாடகத்தின் பாடல்கள் காத்தான் கூத்து மெட்டில் பாடப்படுவதை சில சந்தர்ப்பங்களில் கேட்க முடிகிறது.

கந்தன் கருணையின் வெற்றிக்கு காரணமானவர்களில் நாரதராக நடித்த தோழர்.கு.சிவராசா மறைந்துவிட்டார் என்பது துயரமானதாகும். அந் நாடகத்திற்குப் பின் அவர் நாரதர் சிவராசா என்றே அழைக்கப்பட்டார். மேலும் அந் நாடகத்தின் ஆக்கத்திற்கு பின்புலமாகவும் அரங்காற்றுச் செயற்பாட்டில் முன்னணியிலும் இருந்து வந்தவர் தோழர்.கி.சிவஞானம். அவரும் அண்மையில் மறைந்து விட்டார், இவர்கள் இருவருக்கும் முன்பாகவே சூரனாக நடித்த தோழர் நவிண்டில் சிவராசாவும் மறைந்து விட்டார். எனினும் அவர்களின் நடிப்பும் பாட்டும் செயற்பாடும் எம் உள்ளத்தில் நீக்கமற நிறைந்துள்ளன.

அக் காலத்தில் ஒரு புறம் வெகுஜனப் போராட்ட எழுச்சி தந்து கொண்டிருந்த உற்சாக சூழல், மறு புறம் எதிர்ப்பு அலைகளுக்கு எதிரான போராட்ட உணர்வு, இவற்றின் மத்தயில் அம்பலத்தாடிகள் ஒரு பிரதேசத்தில் நாடகம் நடத்துவதாயின் ஆகக் குறைந்தது ஐம்பது இளைஞர்களாவது பங்கு கொள்வர். எல்லோரும் தமக்குரிய வேலைகளைப் பொறுப்பேற்று நாடகத்தின் வெற்றிக்குத் தோள் கொடுத்து நிற்பர். இந் நாடகம் அரங்கேறிய ஒவ்வொரு இடத்திலும் நான் அவர்களில் ஒருவனாக நின்று பங்கு கொண்டு அரங்க ஆற்றுகையில் பிரதி ஒப்பு நோக்குநர் பணியினை அவ்வேளை செய்து வந்தேன் என்பது இன்றும் மனதிற்கு மகிழ்ச்சி தரும் கடந்த கால நினைவாகும்.

கந்தன் கருணை நாடகத்தின் ஊடாகப் பல்வேறுபட்ட பகுதிகளிலும் மக்கள் மத்தியிலும் பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது. கந்தன் கருணை நாடகத்தின் வெற்றி எந்தவொரு தன்முனைப்புக் கொண்ட தனி மனித முயற்சியின் வெற்றி என்று எவரும் உரிமை கோர முடியாது. கூட்டு முயற்சியில் ஒவ்வொரு தனி மனிதரும் தமது ஆகக் கூடிய ஆற்றல்களை வெளிப்படுத்திப் பயன்படுத்தியதன் விளைவானதே கந்தன் கருணை வெற்றி பெற்றதன் அடிப்படையாகும். சமூக முரண்பாடும் அதன் தீர்வுக்கான போராட்ட வழிமுறைகளும் எவ்வாறு ஒரு மக்கள் கலைவடிவமாக கூட்டு முயற்சியின் ஊடே வெளிப்பட முடியும் என்பதற்கு கந்தன் கருணை அடைந்த வெற்றி முன் மாதிரியாகும். அது கூட்டு முயற்சி மட்டுமன்றி தன் முனைப்பு அற்றவாறு மீண்டும் மீண்டுமான விமர்சனத்தினூடே செப்பனிடப்பட்டதுமாகும். அத்தகைய மக்களுக்கான இக் கலைவடிவம் மூன்று பாகங்களை உள்ளடக்கி நூலாக வருவதன் மூலம் செழுமையான ஒரு வரலாற்றுப் பதிவாகியும் கொள்கின்றமை மன நிறைவைத் தருகின்றது.

ஏற்கனவே அம்பலத்தாடிகள் கந்தன் கருணையை நூல் ஆக்கம் செய்திருந்தனர். அவை யாவும் ஏற்கனவே தீர்ந்து போய்விட்டன. இப்போது தேசிய கலை இலக்கியப் பேரவை இதனை மூன்று பிரதிகளின் தொகுப்பு நூலாக வெளியிடுவது காலத்தால் உகந்த ஓர் முயற்சி என்றே கூறுதல் வேண்டும். கந்தன் கருணை நாடகத்தின் உள்ளடக்கத்தில் எடுத்துக் கூறப்படும் சாதியம்-தீண்டாமை இந்நாடகம் அரங்கேறிய முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும் பல்வேறு நிலைகளில் நீடித்துக் காணப்படும் அவலம் இன்றும் இருக்கவே செய்கிறது. இச் சூழலில் இந் தொகுப்பு நூலின் வரவானது முக்கியத்துவம் பெறும் ஒன்றாகவே உள்ளது.


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 07

நடிகர் ஒன்றியத்தின் கந்தன் கருணை
எச்.எம்.பி. முஹிதீன்


அண்மையில் லும்பினி தியேட்டரில் மேடையேறிய, ~கந்தன் கருணை|, நம் காலத்தில் தமிழ் சமூகத்தை இறுகப்பிடித்துக் கொடுமைப்படுத்தும் ஒரு முக்கிய பிரச்சினையை- ஜாதிப் பிரச்சினையை-மிக அற்புதமாகக் கலையம்சத்துடன் மேடையில் நிறுத்தி, மேல்சாதி வெறிபிடித்தவர்களைக் கூட சற்று சிந்திக்க வைக்கும் விதத்தில் தனது அடிப்படை நோக்கைக் கனகச்சிதமாக நிறைவேற்றியுள்ளது.

'கலையும் இலக்கியமும் மக்களுக்காகப் படைக்கப்பட வேண்டும். மக்கள் கலை என்பது, மக்களுடைய பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுவதுடன் நிற்காது, அப்பிரச்சினைக்குரிய தீர்வையும் காட்டக்கூடியதாக இருக்க வேண்டும்' என்பது, ஒன்றியத்தின் லட்சியமாகப் பிரகடனமாகிறது. இந்த லட்சியத்தையே ~கந்தன் கருணை| பிரதிபலிக்கிறது.

இதன் சிறப்பு என்னவெனில், இதில், நாடக-இசை முறை இணைப்பு வெற்றி பெற்றுள்ளதுதான். பாரம்பரிய யாழ்ப்பாண, மட்டக்களப்பு வடமோடி கூத்துமுறை, குறிப்பாகக் காத்தான்கூத்து இசை முறையுடன், கண்டிய நடன அசைவுகளும் கலைபூர்வமாகக் கலக்கப்பட்டு, ஒரு புது பரீட்சார்த்த நாடகமாகக் ~கந்தன் கருணை| அமைகிறது.

என்னைப் பொறுத்தமட்டில், மேற்கத்திய நடன, நாடக அமைப்பு முறைகளுடன் இதை நான் ஒப்புநோக்கினால், இந்த நாடகம், இசைக்கூத்து முறையையும், நடனக் கூத்து ஆகிய இரண்டினையும் ஒன்றிணைத்து, ஒரு புது அமைப்பை தமிழ் ரஸிகர்களுக்குத் தந்துள்ளது.

ஒரு புதிய பரீட்சார்த்தத்தை மேடையேற்றத் துணிந்த ஒன்றுக்கே, நடிகர் ஒன்றியத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அதுவும், ஒரு தணலாகத் தகதகக்கும் ஒரு பிரச்சினையை, துணிவுடனும், திடசித்தத்துடனும், சிந்தனைத் தெளிவுடனும், இலட்சிய நோக்குடனும் நடிகர் ஒன்றியம் மேடையேற்ற முன்வந்ததை நான் இதயபூர்வமாக வரவேற்கிறேன்@ வாழ்த்துகிறேன்.

பழசுபட்ட, மறக்கப்படவேண்டிய காட்சிப் பொருட்களாக மாத்திரம் வைக்கப்பட வேண்டிய சில புராண காலத்துக் கதைகளையும், உள்ளடக்கங்களையும் வெளிப்படுத்தும் சாதனங்களாக வடமோடியையும், தென் மோடியையும் சிலர் உபயோகப்படுத்திவரும் இந்த கட்டத்தில், அந்த சம்பிரதாயங்களை உடைத்துத் தகர்த்துக்கொண்டு, ஒரு அதிமுக்கிய சமுதாயப் பிரச்சினையை, அதிலும் இன்;றைய நம் சமூகத்தை எதிர்நோக்கும் பிரச்சினையை கலை ரதத்தில் ஏற்றி வலம் வரச் செய்தமை மிகச் சிறப்;புடைத்த பணியாகும்.

இனி, கதைக்கு வருகிறேன். நாரதர், யாழ்ப்பாணம் வருகிறார். ஜாதிக் கொடுமைதனைப் பார்க்கிறார். உடனே கந்தனிடம் ஓடுகிறார். நாரதர் போகும் வேளையில், அங்கு கந்தப் பெருமான் தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். அங்கு வள்ளி இல்;லை. வள்ளியைப் பற்றி வினவுகிறார் நாரதர். வள்ளி தாழ்ந்த ஜாதி வேடுவப் பெண் என்பதால், வேலவன் அம்மையைத் துரத்திவிட்டாரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி, யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஜாதிக் கொடுமைகளை, அதை சாக்காக வைத்து விளக்குகிறார்.

ஜாதிக் கொடுமையைக் கேள்வியுற்ற கந்தன், யாழ்ப்பாணம் வருகிறான். அங்கு, உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதிகள் என்ற பேதத்தின் கோரக் கொடுமையினை கண்ணாரக் காண்கிறான். உயர் ஜாதியினர் தாழ்ந்த ஜாதியினரை கோயிலுக்குள் செல்வதைத் தடுக்கும் காட்சியினை கண்முன்னே பார்க்கிறான். கோயிலைச் சுற்றியும் வேலியும், கம்பிகளும். இவை தாழ்ந்த ஜாதியினரைத் தடுக்கப் போடப்பட்ட அரண்கள்.

இந்த சந்தர்ப்பத்தில், தடை போடப்பட்டு, அமளிதுமளி நடக்கும் கோயிலண்டை, தனது பெயரில் விளங்கும் கோயிலண்டை கந்தபிரானே பிரசன்னமாகிறான். உயர் ஜாதிக்காரர்களின் ஏஜெண்டுகள், நிஜக்கந்தனை உள்ளே விடாமல் தடுத்து விடுகிறார்கள். அதோடு நிற்கிறார்களா, இல்லை! கந்தனை சுற்றி நின்று கிண்டலும் பண்ணுகிறார்கள்!

நாரதர், உயர் ஜாதியினரின் கூலிப் பட்டாளத்திடம் மன்றாடுகிறார். இவர் தானப்பா உங்களின் கந்தன்-நிஜக் கந்தன். உள்ளே இருப்பது கல் மாத்திரம்தான் என்று கூட, வலியுறுத்திக் கூறிப் பார்க்கிறார். கந்தனாக இருந்தாலென்ன, அவன் அப்பனாக இருந்தாலென்ன, தாழ்ந்த ஜாதியினருக்குப் பரிந்துபேச வந்தவனுக்கு கோயிலுக்குள் இடமில்லை என்று அவர்கள் நிச்சயப்படுத்திக் கூறிவிடுகிறார்கள்.

கந்தன் பொங்கி எழுகிறான். அசுரர்களை சம்ஹாரம் செய்த தனது வேலாயுதத்தை, மக்கள் சக்தியிடம் ஒப்படைக்கிறான். அவர்கள், ஐக்கிய சக்தியாகி, கோயில் பிரவேச நேரடிப் போரில் இறங்குகிறார்கள்@ வெற்றி மார்க்கத்தில் நடைபோடுகிறார்கள். நாடகம் முடிகிறது.

முதற் தடவையாக சங்காரத்தில் அதிமுக்கிய சமூகப் பிரச்சினையொன்றை முன்னுக்கிழுத்து வந்து, அந்தப் பிரச்சினையின் தீர்வுக்குக் கடவுளையும் கூட்டி வந்து, விடிவு காண்பிக்க முயலும் ஒன்றியத்தின் ஒரிஜனாலிட்டி சிறப்பாக இருக்கிறது.

நாடகம் முழுவதும், நகைச்சுவைப் பாணங்களும், அரசியல் கணைகளும், சிந்தனையைத் தூண்டும் வெடில்களும் தாராளமாக வந்து விழுகின்றன. ரஸிகர்கள், நடுத்தர ரஸிரகள் கூட அன்று வயிறு குலுங்க சிரித்தனர்@ ரசித்தனர்@ சிந்தித்தனர்@ தொடர்ந்து சிந்திப்பர் என்பது உறுதி.

ஒன்றிரண்டு ஹாஸ்யங்கள், பிரமாதம். யாழ்ப்பாணம் வந்த கந்த பெருமான், தடை செய்யப்பட்ட கோயிலண்டை வருகிறான். அங்கு சூரர்களான சில காடையர்களும், சண்டியர்களும் கோயிலை மூடி, ஜாதிப் பிரச்சினையை முன்வைத்து பக்தர்களைத் தடுக்கின்றனர். இதை அறியாத வேலன், அங்கு நெய் போத்தல்களும், பால் போத்தல்களும் குவிந்திருப்பதை, நாரதரிடம் சுட்டிக்காட்டி, அவை தன்மீது அவர்கள் காட்டும் பக்திப் பெருக்காகக் கருதி களி பேருவகை கொள்கிறான்!

கந்தனின் களிப்பைத் துண்டிக்கிறார் நாரதர். அவை நெய் போத்தல்களுமல்ல, பால் போத்தல்களுமல்ல, எண்;ணெய்ப் போத்தல்களுமல்ல. அவை சாராயப் போத்தல்கள், மண்ணடைத்த போத்தல்கள், மற்றவை வெடி குண்டுப் போத்தல்கள். தொடர்ந்து நாரதர், ~~இவை உங்களின் பக்தர்களை ஒழித்திட வந்த அழிவுக் கருவிகள்...|| என்று விளக்கம் தரும்பாணி, நல்ல நகைச்சுவை.

அடுத்த காட்சி, ஆத்திரம் கொண்ட கந்தன், தானே கந்தன் என்று பிரகடனப்படுத்துகிறான். பாவம் அதைச் சொல்லிவிட்டு, உயர் ஜாதி சூரர்கள் மத்தியில் அவன் படும்பாடு சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நிகழ்ச்சியாகும்.

இந்த சமயத்தில் நாரதர் முன்னுக்கு வந்து, ~~சத்தியமாகச் சொல்கிறேன், இவர்தான் நிஜக்கந்தன். கோயிலைத் திறவுங்கள்|| என்று கூறுவதும், சூரர்கள் சிரிப்பதும், கிண்டல் பண்ணுவதும் அழகுற அமைகிறது.

ஓரிரு கட்டங்களில், காத்தவராயன் சாயல் இடையில் வந்தாலும், முழு முயற்சியில் அது குறைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. அதே நேரத்தில், தாளத்துடன் இசை நீண்டுவிடாமல், கருத்துடன் சுருக்கமான அடிகள் வெளிப்படுத்தப்படுகின்றன. தெளிவான கருத்து வெளிப்பாட்டுக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. பாத்திரங்கள் மேடை பா மீட்ட, அவைகளைப் பின்னணியில் மீண்டும் இசைக் கோஷ்டியினர் பாடுவது மிகத்தெளிவாகக் கருத்துக்களை ரஸிகர்களின் இதயத்தில் பதித்தன.

பக்தர்கள் கைகளை முன்னேநீட்டி, ~ஒரே குலம் ஒருவனே தேவன்| என்ற திருமூலர் மந்திரத்தில் துவங்கி, பாரதிவரை பல தமிழ்ப் பேரறிஞர்களின், ஜாதிக் கொடுமைக்கு எதிரான கருத்துக்களை ஆணித்தரமாக அடித்துக் கூறுவதும், அதற்கு, சூரர்களின் சார்பில் பாத்திரமேற்றவர்கள், பக்தர்களைத் தாக்கித் தகர்க்க முன்வந்து எதிர்த்துக் குரல் கிளப்புவதும், அதற்கமைய ஆடும் நடனமும், கையாண்ட அபிநய முறையும், அண்மைக் காலத்தில் புதுப்பிக்கபபட்டு வந்த ~~பீக்கிங் ஒப்பரா|| நடன சாயல்களையும், கருத்து வெளிப்பாட்டு முறையையும் நம் நினைவுக்குக் கொண்டுவரவே செய்கின்றன. விசேஷமாக, சீனத்தில் 60 கோடி மக்கள் இதுவரை பாரத்து ரசித்துள்ள ~வெள்ளை முடி மங்கை| நடன நாடகத்தில் வரும், நடன அசைவுகளையும் நம் ஞாபகத்திற்கு இந்நாடகம் கொண்டு வருகிறது.

நாரதராக நடித்த ச. முத்துலிங்கமும், கந்தனாக நடித்த சி. மௌனகுருவும், பாரம்பரிய கூத்து முறைக்கு இம்மியளவும் மாசு கற்பிக்காமல், புதுமைப் பாணிகளையும் விட்டுவிடாமல் மிகச் சிறப்பாக நடித்தனர். இவ்விருவரும், இவர்களுடன் சூரர்களிலும், பக்தர்களிலும் பலர் தமது பாத்திரங்களாக மட்டும் கொள்ளாமல், அவைகளை நிஜமாகக் கொண்டு, உள்ளார்ந்த உணர்வுடனும், லட்சியப் பிடிப்புடனும் தமது பாத்திரங்களுக்கு உயிரூட்டியது, இந்த நாடகத்திற்கு வலிமையையும், வஜ்ர உறுதியையும் தந்தன.

இந் நாடகத்தில் சில குறைபாடுகளும் இருக்கவே செய்தன. பாடுபவர்களின் குரலும், இசைச்சுருதியும் பல கட்டங்களில் ஒத்துவரவே இல்லை. நாடகத்தின் ரஸனைக்கு இது ஒரு தடையாக இருந்தது. தாழ்ந்த ஜாதிகளில் அதிமுக்கியமானவை ஐந்து என்று பரவலாகக் கூறப்படுகிறது. இந்த ஐந்து ஜாதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஐவருள் ஒருவர், மேல்ஜாதியினராகக் கருதப்படுகிறார். இவரை நீக்கினால், ஜாதிகள் நாலாகின்றன! இது திருத்ததிற்குரியதே என்று பலரும் என்னிடம் கூறினார்கள்!

நாடகக் கலையில், சர்வ நாடுகளையும் தழுவிய ஒரு மரபுண்டு. அதுதான், மேடையில் பாத்திரங்களின் உள்நுழைவும், வெளியேற்றமும். இந்த மரபினால் நாடகம் பூர்த்தியுறுகின்றது.

~கந்தன் கருணை|யில் இந்த மரபு பெரும்பாலும் இல்லவே இல்;லை. எல்லோரும் மேடையில்! குறிப்பிட்ட காட்சியுடன் சம்பந்தப்படாதவர்களும் கூட, மேடையில் வீற்றிருக்கிறார்கள். இதில், மாற்றம் கொண்டு வருவது இந்நாடகத்தின் தரத்தை இன்னும் உயர்த்திவிடும் என்பது என் அபிப்பிராயமாகும்.

நாடகம் ஆரம்பத்தில், குறிப்பாக முதற் காட்சியில், விறுவிறுப்பாக இருக்கவில்லை. இதற்கு ஆட்டச் சுணக்கமும், இசை பாடல் இணக்கமின்மையுமே காரணங்கள் என்பது எனது அபிப்பிராயமாகும். ஆனால், படிப்படியே இதில் அபிவிருத்தி ஏற்படுவது காணக்கூடியதாக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்பைக்கொண்டு வர நல்ல வாய்ப்புண்டு. இதை உபயோகிக்காமல் விட்டது ஒரு குறைபாடுதான்.

இந்த நாடகத்தில் ~உடுக்கி|ன் மகிமை, சிறப்பாக வெளிப்பட்டது. அதில், கலையம்சம் மட்டுமின்றி, உள்ளத்தைத் தொடும் நெகிழ்ச்சியும் இருந்தது இ;ங்கு குறிப்பிடத்தக்கதாகும். ~மேடை மீது|ம், ~மேடைக்குப் பின்னும்| எல்லோருமே நன்கு சமாளித்தார்கள்.

புரட்சிகரமான கருத்துக்களை, பழைய கலை மரபுகளின் துணையுடன், புதிய பாணியில் மக்கள் மன்றத்தின் முன் வைத்து, சிரிப்பையும், சிந்தனையையும் மட்டுமின்றி, நமது நாளங்களையும், நரம்புகளையும் முறுக்கேற்றும் ~கந்தன் கருணை| பல மேடைகளை அவசியம் காணவேண்டியதொரு நாடகமாகும்.

தினகரன்
22.02.1975


--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 08

இசைப்பார் இல்லை என்பதால்
அந்த இராகம் இல்லாமலா போய்விடும்?

[கந்தன் கருணைக் காலகட்டம், பங்கேற்பு பற்றிய
சில மனப் பதிவுகள்]

பேராசிரியர் - சி.மௌனகுரு


1969ம் ஆண்டானது ஈழத்துத் தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்கால கட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரம் மிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ் ஆண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களைத் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டும் என்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்குமுறைக்கு எதிரான இப்போரை, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் திறந்தவிடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்கணும் பேசப்பட்டது.

தமிழர்க்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு.சி.சுந்தரலிங்கம் அவர்களே, தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த்தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

அப்போராட்டம் ஈழம் எங்கணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச் சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சாத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.

அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாயினர். அவ்வுரிமைப் போரில் பங்குகொண்ட பலருக்கு அன்று பிரபல்யமாயிருந்த மாசே-துங் சிந்தனைகளும், மாபெரும் சீனக் கலாசாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.

தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும், சாதிக் கொடுமைக்கும் எதிராகக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர்.

போராடிய மக்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் ‘இரத்தக் கடன்’ எனும் சாதி எதிர்ப்புப் போராட்டக் கவிதைத் தொகுதியொன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டான்.
சாதித் திமிருடன் வாழும் தமிழன் - ஓர்
பாதித் தமிழனடா
என்று அவன் பாடினான்

சங்கானைக் கென் வணக்கம்
சரித்திரத்தில் உன் நாமம்
மங்காது யாழகத்து மண்ணில் பலகாலம்
சங்கையிலே நீ யானை
சங்கானை
என்ற அவனது பாடலும்

எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்
நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்
என்ற வரிகளும் அன்று இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் நாவெல்லாம் ஒலித்தன.

சாதிபேத எதிர்ப்புக் கதைகள், நாடகங்கள், ஓவியங்கள், ஓவியப் புத்தகக் கண்காட்சிகள், கருத்தரங்குகள் எனப் பல புரட்சிகரக் கலைப் படைப்புகள் வெளிவந்தன. புரட்சிகரச் சூழல் புரட்சிகரக் கலைகளை வெளிக்கொணரும் என விமர்சனங்கள் எழுதினர். இலக்கியம் பிரசாரம் செய்யலாமா என்ற காரசாரமான விவாதங்கள் நடந்தேறின. எல்லா விவாதங்களுக்கும் அப்பால் இக்கலை இலக்கியங்கள் அன்று களத்தில் நின்று போராடிய போராளிகளுக்கு உற்சாகமூட்டின. பலம் தந்தன. போராட்ட உறவுகளை இறுக்கமாக்கின.

அந்தப் போராட்ட வீரர்களையும் அக்காலத்தில் அப்போராட்டத்திற்குச் சார்பாக எழுந்த கலை இலக்கியங்களையும் இன்றைய தலைமுறையினர் அறியார். தமிழர் வரலாறு, தமிழக்கலை இலக்கிய வரலாறு எழுதுவோரும் அவை பற்றிக் குறிப்பிடுவதில்லை.

“இசைப்பா இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்? ஆம் அந்த ராகம் மானிட விடுதலையின் பூபாளராகம், காலை வேளை ராகம். மத்தியான-பின்னேர-இரவு ராகங்களின் முன்னோடி அது”.

இக்கால கட்டத்தில் ஈழத்து தமிழரிடையே ஐந்து முக்கிய நாடகங்கள் எழுந்தன. அவையாவன சங்காரம், குடி நிலம், கந்தன் கருணை, கோபுர வாசல், கோடை ஐந்தும் ஈழத் தமிழரிடையே காணப்பட்ட சாதிக் கொடுமைகளைச் சாடிய நாடகங்கள்.

1969இல் கொழும்பிலே லும்பினி அரங்கிலே நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மகாநாட்டிலே சங்காரமும் குடிநிலமும் மேடையேறின. சங்காரம் நாடகத்தைத் தயாரித்தது மட்டக்களப்பு நாடக சபா. அந் நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்தவர் மௌனகுரு. மட்டக்களப்பு நாடக சபாவின் இயக்கு சக்திகளாக கவிஞர் சுபத்திரனும், வடிவேலுவும், இன்பமும், சிவராஜாவும் செயற்பட்டார்கள்.

இராஜ இராணிக் கதைகளையும்,மகாபாரதக் கதைகளையும் கருப் பொருளாகக் கொண்டிருந்த மட்டக்களப்பு வடமோடி நாடக மரபுக்குள் சாதிபேத எதிர்ப்பு, மானுட வர்க்கத்தின் விடுதலை, சமத்துவமான எதிர்கால சமூகம் என்பவற்றை உள்ளடக்கமாக வைத்து நெய்யப்பட்ட நாடகம் அது. ‘சாதி அரக்கனைச் சாய்த்த கதை’ என்ற அந் நாடகத்திற்கு சங்காரம் என்று நாம் கரணம் சூட்டியவர் கவிஞர் முருகையன். முதன்முதலில் பழைய நாடக வடிவமொன்று புதிய கருத்தைக் கூறப் பாவிக்கப்பட்டது.

லும்பினி அரங்கிலே நடைபெற்ற இந் நாடகம் அன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களிடையே உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. அவர்களை ஊக்குவித்தது.

லும்பினி அரங்கில் இதனோடு குடி நிலம் என்னும் நாடகமும் அரங்கேறியது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வழமையான பாணியில் அமைந்த ஆனால் கருத்துச் செறிவு மிக்க நாடகம் அது. இருக்க ஒரு குடி நிலம் இல்லாமையே தீண்டாமைக்கான காரணம் என்பதனையும் சாதிமான்களின் அடக்குமுறையையும் அம்பலப்படுத்திய நாடகம் அது.

இவற்றுள் சங்காரம் தந்த அருட்டுணர்வு அன்று பலரையும் தாக்கியது என்பது பின்னர் தெரிய வந்தது. அந் நாடகம் பற்றி சிறந்த விமர்சனங்கள் வெளியாயின. அந் நாடகத்தை கொழும்பில் இயங்கிய நாடகக் குழுவான எங்கள் குழு இலவசமாக லும்பினி அரங்கில் மீண்டும் மேடையேற்றிப் பிரபல்யப்படுத்தியது.

1969ன் பிற்பகுதியில் மாவிட்டபுத்தில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டத்தினை மக்களுக்கு உறைக்கும்படியாகக் கூறும் முகமாக கந்தன் கருணை தயாரிக்கப்பட்டது. இந் நாடகத்தை எழுதியவர்கள் நெல்லியடி அம்பலத்தாடிகள். இதன் மூலக்கதை என்.கே.ரகுநாதனுடையது. இதனைத் தயாரிப்பதில் நெல்லியடி முற்போக்குக் கலைஞர்களும், இளைய பத்மநாதனும் பெரும் பங்கு வகித்தனர்.

தன் கோயிலுக்குள் புகுவதற்காக கோயிலுக்கு வெளியே நின்று போராடும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடவுளான கந்தனே தன் சக்தி வாய்ந்த வேலைக் கொடுத்து போராடத் தூண்டுவதைக் கருவாகக் கொண்டது இந்நாடகம். சங்காரம் மட்டக்களப்பு வடமோடி நாடக மரபைக் கையாண்டது போல கந்தன் கருணை யாழ்ப்பாணத்துச் சிந்து நடைக் காத்தான் கூத்தினைக் கையாண்டது.

யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்பை முன்னெடுத்தோரிடம் இந் நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமது கூத்து மரபில் புதிய கருத்துக்களை மக்கள் கண்டனர். பிற்போக்கு வாதிகளின் பலத்த எதிர்ப்புக்கும், பயமுறுத்தல்களுக்கும் மத்தியில் யாழ்ப்பாணமெங்கணும் இந் நாடகம் மேடையேறியது. (இத்தகைய மேடையேற்றத்தை யாழ்ப்பாணத்தில் 1985களில் மண்சுமந்த மேனியர் கண்டது).

1969ல் பழைய நந்தன் சரித்திரக் கதையை ஆலய நுழைவுப் போருக்குப் பொருத்தமானதாக மாற்றி, நந்தனின் ஆலயப் பிரவேசத்தை புதிய முறையில் நாடகமாக்கிளார் கவிஞர் முருகையன். அந் நாடகத்தின் பெயர் கோபுர வாசல்.

1969ல் சாதிப் பிரச்சினையை நேரடியாகத் தொடாவிடினும் அப்பிரச்சினை சார்பாக மஹாகவியும் ஒரு நாடகம் எழுதினார். அந் நாடகத்தின் பெயர் கோடை. அந் நாடகத்தை கொழும்பில் இயங்கிய நாடோடிகள் நாடகக் குழுவினர் தயாரித்தனர். இதிலே அ.தாஸீசியஸ், ஸ்ரீநிவாசன் இருந்தனர். இந்நாடகத்தை நெறியாள்கை செய்தவர் அ.தாஸீசியஸ். மேளகாரர் வீட்டில் பிராமணர் இட்லி சாப்பிடுவதாக அதில் ஒரு காட்சியை மஹாகவி எழுதியிருந்தார். அதனை எதிர்த்து சனாதனிகள் (சென்சார்) அக்காட்சியை எடுத்துவிட்டு நாடகத்தை நடத்தும்படி உத்தரவிட்டனர். அக்காட்சிதான் முக்கியமானது; அதை எடுப்பதாயின் நாடகம் நடத்த மாட்டேன் என்று மறுத்து நின்றார் அ.தாஸீசியஸ். முற்போக்கு எண்ணம் கொண்டோர் தாஸீசியஸ் பக்கம் நின்றனர்.

1969களில் எங்கள் குழு என்ற ஒரு நாடகக் குழுவும் கொழும்பில் இயங்கியது. விடிவைநோக்கி, அபசுரம், இருதுயரம், கடூழியம் போன்ற மானுட விடுதலை நாடகங்களை மேடையிட்ட இந் நாடகக் குழுவில் நா.சுந்தரலிங்கம், இ.சிவானந்தன், முருகையன், கந்தசுவாமி போன்றோர் முக்கியஸ்தர்களாயிருந்தனர்.

இவ்வண்ணம் அன்றைய இளம் நாடகக்காரர்களான மௌனகுரு, தாஸீசியஸ், சுந்தரலிங்கம், இளைய பத்மநாதன், இ.சிவானந்தன், முருகையன், சத்தியநாதன், பாலேந்திரா, சிவபாலன், ஸ்ரீநிவாசன், கந்தசுவாமி என்ற பலர் ஒன்றிணைந்தனர்.

நாடகத்தை-அரங்கியலை மானுட விடுதலைக்கு பாவிக்கும் இக் குழுவினருக்குள் ஒரு புரிந்துணர்வும் ஒருமைப்பாடும் ஏற்பட்டது. சங்காரம் தயாரித்த மட்டக்களப்பு நாடக சபாவும், கந்தன் கருணை தயாரித்த நெல்லியடி அம்பலத்தாடிகளும், கோடை தயாரித்த கொழும்பு நாடோடிகளும், அபசுரம், கடூழியம், விடிவைநோக்கி நாடகங்களைத் தயாரித்த கொழும்பு எங்கள் குழுவும் 1972ம் ஆண்டு கொழும்பிலே நாடகத்திற்காக ஒன்றிணைந்தன. இவ்வொன்றிணைப்பு 1972ல் கொழும்பில் நடிகர் ஒன்றியத்தினைத் தோற்றுவித்தது.

யாழ்ப்பாண நடிகரும், மட்டக்களப்பு நடிகரும், கொழும்பு நடிகரும் ஒன்றிணைந்து நடிகர் ஒன்றியத்திற்காகப் பல திட்டங்களைத் தீட்டினர்; செயற்பட்டனர்.

நடிகர் ஒன்றியத்தின் முதன் முயற்சியாக கந்தன் கருணையை மீண்டும் நடிகர் ஒன்றியம் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. நவீன நாடக நெறிமுறைகளுக்கியைய அதனைத் தயாரிக்கும் பொறுப்பு அ.தாஸீசியஸிடம் விடப்பட்டது. நடிகர் ஒன்றியத்தில் அ.தாஸீசியஸ், இ.சிவானந்தன், நா.சுந்தரலிங்கம் ஆகியோருடன் இன்னும் பலரும் தீவிர செயற்பாட்டாளர்களாகச் செயலாற்றினர்.

ஈழத்தின் பெரும்பாலான முற்போக்கு நாடக சக்திகள் கொழும்பில் சங்கமித்தன. 1972, 1973, 1974, 1975களில் இவர்களிற் பெரும்பாலானோர் கொழும்பிலே உத்தியோக நிமித்தம் வாழ வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டமையும் இதற்கு வாய்ப்பாயிற்று. இந்தச் சக்திகளின் சங்கமிப்பில் அ.தாஸீசியஸின் நெறியாள்கையில் 1973ல் நடிகர் ஒன்றியத்தின் முதல் தயாரிப்பாக கந்தன் கருணை கொழும்பில் மேடையேறியது. பத்திரிகைகள் நாடகத்தை வெகுவாக வரவேற்றன. நாடக ஆர்வலர்கள் நடிகர் ஒன்றியத்தின் வளர்ச்சியில் பெரும் உற்சாகம் காட்டினர்.

இந்த நாடக உருவாக்கம் அற்புதமான ஓர் அனுபவம். மறக்க முடியாத காலங்கள் அவை. அதிலே கந்தனாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறத்தாழ 30வருட காலத்துக்கு முந்திய துடிப்பான அந்த இளவயது நிகழ்வுகளை மீண்டும் அசைபோடுவது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செயல் மாத்திரமன்றி, உளத்துக்கும் உற்சாகமும், வலிமையும் தரும் செயலுமாகும். அத்தோடு இளம் தலைமுறை நாடகக் கலைஞர்கட்கு பழைய செய்திகள் பலவற்றைத் தரும் முயற்சியுமாகும்.

2
கந்தன் கருணைக்கு ஏற்கனவே இரு நாடக எழுத்துருக்கள் இருந்தன. ஒன்று என்.கே.ரகுநாதன் எழுதிய உரையாடலில் அமைந்த ஒரு நாடக எழுத்துரு, மற்றது நெல்லியடி அம்பலத்தாடிகள் தாம் நடிப்பதற்கு என்.கே.ரகுநாதனின் எழுத்துருவை அடிப்படையாகக் கொண்டு காத்தான் கூத்து பாணியில் உருவாக்கிய பாடல்களில் அமைந்த எழுத்துரு. தாஸீசியஸ் இரண்டாவது பிரதியை அடிப்படையாக வைத்தே அதற்கு மேடை வடிவம் கொடுத்தார்.

ஆற்றல் வாய்ந்த நெறியாளன் எழுத்துருவை அப்படியே ஒப்புவிப்பவனல்ல. எழுத்துரு ஒரு சிருஷ்டியாயின் எழுத்துருவின் அவைக்காற்று வடிவம் இன்னொரு சிருஷ்டியாகும். ஆற்றல் வாய்ந்த நெறியாளனான தாஸீசியஸின் நெறியாள்கையில் கந்தன் கருணை எழுத்துரு இன்னொரு வடிவம் பெற்றது.

தாஸீசியஸ் நவீன நாடக நெறிமுறைகளை நன்கு அறிந்த ஓர் நெறியாளன். மக்கின்ரயரிடமும், ஐராங்கனி சேரசிங்காவிடமும் பயிற்சி பெற்றவர். நவீன சிங்கள நாடகக் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டவர். ஆங்கில நாடக ஈடுபாடு மிக்கவர். மரபு வழிக் கூத்தில்-சிறப்பாக யாழ்ப்பாணக் கூத்தில் அபிமானமும், காதலும், பாண்டித்தியமும் உடையவர். நாடக உலகில் நல்ல பல நாடகங்களை மேடையேற்றி நல்ல பெயர் பெற்றிருந்தவர்.

மரபு வழிக் காத்தான் கூத்தினுக்குள் புதிய கருவை நெல்லியடி அம்பலத்தாடிகள் புகுத்தி கந்தன் கருணையை உருவாக்க அதனை நவீன நாடக வடிவத்துக்குள் கொண்டு வந்தார் தாஸீசியஸ். அவர் பழைய நாடகத்தை விட பல மாற்றங்களைச் செய்தார்.

பழைய கந்தன் கருணை சுட்டிப்பாக ஆட்களை இனம் காட்டியது. தாஸீசியஸ் அதனை மாற்றி மனிதப் பொதுமைப் படுத்தினார். கோயிற் போராட்டத்தை அசுரர்களுக்கும் பக்தர்களுக்கும் நடக்கும் போராட்டமாக்கினார். கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதை மறித்து அடாவடித்தனமும், பலாத்காரமும், அடக்குமுறையும் பாவிப்போர் அசுரர்கள். கோயிலுக்குள் நுழைய போராடும் மக்கள் பக்தர்கள். முருகன் இப்பக்தர்களிடம்தான் இறுதியில் தனது சக்தி வேலைக் கொடுக்கின்றான்.

மேடை அசைவுகளில் அவர் செய்த மாற்றங்கள் பிரதானமானவை. முருகனும் நாரதரும் ருஊயிலிருந்து னுஊக்கு அசையும் முறைமை. பக்தர்களும் அசுரர்களும் மோதும் இடங்கள், ஆட்டக் கோலங்கள், கந்தன், நாரதர், அசுரர்களின் மேடை அசைவுகள் என்பன கணக்காகத் திட்டமிடப்பட்டன.

திரையை அடிக்கடி திறந்து மூடாது ஒரே காட்சியில் அனைத்து நிகழ்வுகளையும் மேடைக்குள் கொணர்ந்தார் (பழைய கந்தன் கருணை அடிக்கடி திரை திறந்து மூடிய நாடகமாகும்).

நெல்லியடி அம்பலத்தாடிகளின் கூத்து காத்தான் கூத்து மெட்டில் மாத்திரமே அமைந்திருந்தது. தனது புதிய கந்தன் கருணையில் அவர் ஏனைய இசைகளையும் இணைத்தார். பழைய கந்தன் கருணை துள்ளு நடையில் மாத்திரம் அமைய தாஸீசியஸ் தாம் தயாரித்த கந்தன் கருணையில் மட்டக்களப்பின் வடமோடி, ஆட்டமுறைகள், கண்டிய நடன அசைவுகள், யாழ்ப்பாணக் கிறிஸ்தவக் கூத்து அபிநயங்கள் என்பனவற்றைப் புகுத்தி அதனை ஈழத்துத் தமிழ்க் கூத்துச் சாயலுடையதாக்கினார்.

அனைத்துத் திறமைகளையும் ஒன்றிணைத்தமை தாஸீசியஸின் தனித் திறமை.

கந்தன் கருணையில் கந்தனாக என்னை நடிக்கும்படி தாஸீசியஸ் கேட்டுக் கொண்டார். அது தாஸீசியஸின் தனி முடிவானாலும் அதில் சுந்தரலிங்கம், சிவானந்தன், இளைய பத்மநாதன், கந்தசுவாமி ஆகியோரின் ஆலோசனைகளும் அடங்கி இருந்தன. இளைய பத்மநாதன் பக்தர்களின் தலைவர். நாடகத்தில் அவர் ஒரு முக்கிய போராளி. மறைந்த நா.சிவராஜா அசுரர்களின் முக்கிய தலைவர். திவ்வியராஜா (இன்று கனடாவில் இருக்கிறார்), பக்தர்களில் ஒருவர் . பாலேந்திரா (அவைக்காற்றுக் கலைக்கழக ஸ்தாபகர், லண்டன்), பக்தர்களில் ஒருவர். மறைந்த இ.சிவானந்தன், பக்தர்களில் ஒருவர். முத்துலிங்கம் (ஆங்கில ஆசிரியர், மாலைதீவு) நாரதர். இவர்கள்தான் இப்போதைக்கு ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

நாடக ஒத்திகை கொள்ளுப்பி;ட்டி, சீ அவெனியூவிலுள்ள ஒரு வீட்டிலும், வெள்ளவத்தை பாமன் கடையில் நான் தங்கியிருந்த பி.பி.ஸி.சுந்தரலிங்கத்து வீட்டு மொட்டை மாடியிலும் நடைபெறும். ஒத்திகைக்கு அனைவரும் கூடுவோம். தாஸீசியஸ் மேடை அசைவுகளைப் படம் கீறி விளக்குவார். அவர் கற்பனைக்குள் இருக்கும் கந்தன் கருணையை நாம் புரிந்து கொள்வோம். சுந்தரலிங்கம், சிவானந்தன், இளைய பத்மநாதன், முத்துலிங்கம், நான் கூறும் ஆலோசனைகளை தாஸீசியஸ் உள்வாங்கிக் கொள்வார். தாஸீசியஸ் தலைமை தாங்க ஒரு கூட்டுப் பொறுப்புடன் கூட்டுத் தயாரிப்பாக கந்தன் கருணை உருவாகிக் கொண்டு வந்தது.

நடிகர்கட்கு வடமோடி ஆட்டங்கள் பழக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. காத்தான் கூத்துப் பாடல் பழக்கும் பொறுப்பு இளைய பத்மநாதனிடம,; தாம் கற்ற கண்டிய நடன அசைவுகளை முத்துலிங்கமும், தாஸீசியஸ_ம் பயிற்றுவித்தார்கள். ஒரு மாத காலத்துக்கு மேல் கடுமையான பயிற்சி. தனிப்பட்ட முறையில் சிவானந்தனும், பாலேந்திராவும், இளைய பத்மநாதனும் இன்னும் சில இளைஞர்களும் வெள்ளவத்தையில் பாமன் கடையில் நான் வசித்த வீட்டில் வந்து ஆட்டம் பழகினர். தாஸீசியஸ_ம் என்னிடம் பழகியதாக ஞாபகம்.

அற்புதமான காலங்கள் அவை. கொள்கை ஒருமையும், முற்போக்கு எண்ணமும், ஆர்வமும், அர்ப்பணிப்பும், துணிவும் கொண்ட திறன் மிகுந்த ஓர் இளைஞர் குழாம் ஒன்றிணைந்து ஈழத்துத் தமிழ் நாடக உலகை தம் தோள்களிலே சுமந்த காலம் அது. தாஸீசியஸின் மனைவி விமலா (இப்போது லண்டனில்), கந்தசாமியின் மனைவி பார்வதி (இப்போது கனடாவில்), சிவானந்தனின் மனைவி முத்தாச்சி (இப்போது வன்னியில்), எனது துணைவியார் சித்திரலேகா (இப்போது மட்டக்களப்பில்), இன்னும் ஜெஸி (தாஸீசியஸின் தங்கை), பெயர் ஞாபகம் வராத பல பெண்கள் இந்நாடக இயக்கத்தில் இணைந்திருந்தனர். ஆலோசனைகள் வழங்கினர்;; பக்கபலமாக நின்றனர்;;; விமர்சனம் செய்தனர்;;; உற்சாகமூட்டினர். நாடக கொம்யூனாக நாம் வாழ்ந்த காலம் அது. அப்போது அனைவரும் இளம் வயதினர். அனைவரும் மணமான புதுத் தம்பதிகள். பார்வதியும், முத்தாச்சியும், விமலாவும் கொண்டு வரும் பலகாரங்கள், சாப்பாடுகள், குளிர்பானங்கள் நடிகர்கட்குப் பெரும் உற்சாகமளிக்கும்.

வடமோடிக் கூத்தினை நடிகர்கள் அனைவருக்கும் பழக்க நான் எடுத்த கடும் முயற்சிகள் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றன. ஆடுவதற்கு உடம்பு ஒத்துழைக்காத சிலருக்கு ஆட்டம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஆட்டத்தை தன் வயப்படுத்த சிவானந்தன் எடுத்த அருமுயற்சிகளை பகிடியுடனும் வியப்புடனும் நாம் பார்த்து மகிழ்வோம். சுந்தரலிங்கத்தின் கிண்டல்கள் சிரிப்பொலி கிளப்பும்.

கந்தனும் தெய்வயானையும் தேவ உலகில் இருத்தல்; நாரதர் வருகை; பின்னர் நாரதர் கந்தனுடன் வான வீதி வழியாக இலங்கை வரல்; மாவிட்டபுரக் கோயிலுக்கு முன் பக்தர்கள் நிற்றல்; காவடியாட்டம்; பக்தர்கள்-அசுரர்கள் போர்; கந்தன்-நாரதர் உரையாடல்; கந்தனை அசுரர் தடுத்தல்;; பின் கந்தன் உக்கிரமான ஓர் ஊழித் தாண்டவமாடி சக்திவேலைப் பக்தர்களிடம் தருதல் என்ற வகையில் தாஸீசியஸ் நாடகத்தை அமைத்திருந்தார்.

தாஸீசியஸ_டன் வேலை செய்வது நல்ல அனுபவமாக இருந்தது. ஏற்கனவே பேராசிரியர்களான வித்தியானந்தன், சிவத்தம்பி, கைலாசபதி ஆகியோரின் கீழ் நாடகப் பயிற்சிகளைப் பெற்றும், இணைந்தும், தனியாகவும் நாடகங்களைத் தயாரித்த எனக்கு தாஸீசியஸின் முறைமை புதுமையாகவும் வித்தியாசமாகவும் தெரிந்தது. மரபுவழி நாடகமொன்றை எவ்வாறு நவீனமாக மேடையில் அளிக்கை செய்யலாம் என்பதை நான் தாஸீசியஸிடம் கற்றுக் கொண்டேன். நான் தாஸீசியஸிடம் கற்றவை அதிகம். அபாரமான கற்பனைத் திறன் வாய்ந்தவர் தாஸீசியஸ். படீர் படீர் என கற்பனை பண்ணுவார். மாற்றி மாற்றி அசைவுகளை அமைப்பார். அது அவருடன் கூட வேலை செய்பவர்கட்குச் சிரமம் தரினும் ஒரு கலைஞனின் குணாம்சம் அது. என்னை உருவாக்கும் போது எழுதி அழித்து, எழுதி அழித்து, திருப்தி வரும்வரை எழுதி அழித்து முழுமை காணும்வரை உழைப்பதுதான் ஓர் உண்மைக் கலைஞனின் இயல்பு. அக்கலைஞனின் முயற்சியினை நான் தாஸீசியஸிடம் கண்டேன்.

இளைய பத்மநாதன் அழகாகப் பாடுவான். உச்சக்குரல் அவரது. வடமோடி ஆட்டத்தை நான் பழக்குகையில் அதனை உள்வாங்கி அவர் அசைந்து வருவதும், தாஸீசியஸ் வடமோடி ஆட்டத்தை உள்வாங்கி ஆடி வருவதும் மிக அழகாக இருக்கும். பத்தண்ணாவின் குரலை நாம் அனைவரும் ரசிப்போம். எனது ஆட்டத்தை அவர்கள் வியப்பார்கள். இவ்வண்ணம் அனைவரும் தம்மிடமிருந்த திறமைகளை ஆளுக்காள் முழு நிறைவோடும் மகிழ்வோடும் பகிர்ந்தும், மற்றவரிடமிருந்து எடுத்தும் வளர்ந்த காலங்கள் அவை.

தாஸீசியஸ் என்னிடம் “மௌனகுரு நாடகம் படிப்படியாக உச்சம் நோக்கிச் செல்கிறது. உச்சத்தின் உச்சமாக கந்தனின் ஊழித் தாண்டவம் அமைய வேண்டும். ஊழித் தாண்டவத்தின் உச்சத்தில் வேலாயுதத்தை போராடும் பக்தர்களின் கையில் கந்தன் கொடுத்து அவர்களைப் போராடப் பணிக்க வேண்டும். அதன் உச்சமாக ஆயுதம் கையிலேந்திய மக்கள் முழு உணர்வுடன் கொடுமைகளின் குறியீடாக அடைத்துக் கிடக்கும் கோயிற் கதவுகளை உடைத்து ஆயுத பாணிகளாகச் செல்ல வேண்டும் என்று நாடகத்தினுடைய தனது நோக்கத்தையும், நாடகக் கட்டமைப்பையும் எனக்கு விளக்கி அந்த நடன அமைப்பை உருவாக்கும் பொறுப்பை என் சுதந்திரத்திற்கே விட்டிருந்தார்.

இரண்டு நாள் சிந்தனை-இரண்டு நாள் பயிற்சி எடுத்த பின்னர் ‘தத்தகிட தத்தகிட தத்தகிட தீம் தீம்’ என்ற தாளக் கட்டுடன் அமைந்த பொடியடி, நாலடி, எட்டடி, பாய்ச்சல் என்ற வடமோடி ஆட்டமுறைகளைத் தொகுத்து நான் உருவாக்கிய கந்தனின் ஊழித் தாண்டவ ஆட்டத்தை நான் தாஸீசியஸ_க்கு ஆடிக் காட்டியபோது தாஸீசியஸ் என்னைப் பார்த்த அந்தத் திருப்தியான பார்வை; தாஸீசியஸிற்கேயுரிய சிரிப்பு; அந்த ஆட்டத்தில் தாஸீசியஸ் தோய்ந்து நின்ற விதம் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாடகம் மேடையேறிய போதெல்லாம் இக்கடைசிக் காட்சி கரகோஷம் பெற்றது. நாடகத்தில் அக்கடைசிக் காட்சி மிக உச்சமாக இருந்ததாக நாடகம் பார்த்த பலர் அபிப்பிராயப்பட்டனர்.

நாம் உருவாக்கிய அந்த ஆட்டம் நாடகத்தின் உச்சத்திற்கு உதவியதாயினும் தாஸீசியஸின் திட்டமும், கற்பனையும்தான் அந்த ஆட்டத்திற்கு அடித்தளமாகும். தாஸீசியஸிடம் நிறைந்த கற்பனை இருந்தது. ஆனால் அதனை வெளிக்கொணரத் திறன் வாய்ந்த கலைஞர்கள் இன்மைதான் அன்றைய துயரம். தாஸீசியஸ_க்கு மாத்திரமல்ல இப்பிரச்சினை. அன்றைய சிறந்த தமிழ் நாடக தயாரிப்பாளர் அனைவரும் இப்பிரச்சினையை முகம் கொண்டனர். தொழிற் தேர்ச்சியும் திறனும் மிக்கோராக நமது சிங்களச் சகோதரக் கலைஞர் இருக்க நாமோ அமெச்சூராக அன்றிருந்தோம். இதனாலேதான் எமக்கு ஒரு மாதக் கடும் பயிற்சி தேவைப்பட்டது.

பயிற்சி அற்றோராகவும் கருத்து மிக்கோராகவும் நாமிருந்தோம். கருத்துச் செழுமை இல்லாதோராகவும் பயிற்சியுடையோராயும் அவர்கள் இருந்தனர். பேராசிரியர் சிவத்தம்பி கூறியது போல “எமது நாடகம் கோயில் இல்லாத விக்கிரகம் போலிருந்தது. அவர்களது நாடகம் விக்கிரகம் இல்லாத கோயில் போலிருந்தது”. எங்களிடம் விக்கிரகம் இருந்தமைக்குக் காரணம் நாடகத்தை நாம் சமூக மாற்றத்திற்குரிய ஒரு சக்தியாக வளர்த்து எடுத்தமைதான்.

நவீன நாடகம் என்ற வகையில் நவீன ஒளியமைப்பு, இசை அமைப்பு, ஒப்பனை என்பவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அசுரர்கள்-பக்தர்கள் மோதலில் பறையும், உடுக்கும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டன. மிருதங்கம், வயலின், ஆர்மோனியம், டோல்கி என்பன பயன்படுத்தப்பட்டன.

ஒளியமைக்கும் பொறுப்பினை நா.சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றிருந்தார்கள். நாடக ஓட்டத்திற்கு இயைய ஒளி அமைப்பு இணைந்திருந்தது. உணர்வுகளைத் துலக்கமாகக் காட்ட நிற ஒளிகள் பயன்படுத்தப்பட்டன. பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் துல்லியமாகக் காட்ட ஒளிப் பொட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

தாஸீசியஸ் நாடகத்தையும், நிகழ்வுகளையும் அமைத்த விதம் அற்புதமானதாக இருந்தது. (அவை தனியாக எழுதப்பட்ட வேண்டியவை).

கந்தனும் நாரதரும் தேவ உலகில் இருந்து புறப்பட்டு வான வீதி வழியாக
யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வோமே - நாங்கள்
யாருக்கும் அஞ்ச மாட்டோமே
என்று பாடியபடி செல்லும் பாடலும் காட்சியும், கந்தன் கோயிலுக்குள் செல்ல முயன்றதும், அசுரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு நின்று
கந்தனாம் கந்தன் - இவன்
எங்கத்தேக் கந்தன்
என்று பாடியபடி ஆடும் காட்சியும் பாடலும் இறுதிக் காட்சியில் மேடை முழுவதும் சுழன்று ஆடியபடி அதே வேகத்தில் வந்து கந்தன்
தந்துவிட்டேன் நான் தந்துவிட்டேன் - அன்னை
தந்த சக்திவேலைத் தந்துவிட்டேன்
என்று உச்சாடனத் தொனியில் கூறி வேலைப் பக்தர்களிடம் கொடுப்பதும் தாஸீசியஸ் காட்சிகளைச் சுவைபட அமைத்தமைக்குச் சில உதாரணங்கள். இப்பாடல்களும் காட்சிகளும் இந் நாடகத்தைப் பார்த்தவர்களின் வாயிலும் மனதிலும் நீண்ட நாட்கள் இருந்ததாகப் பின்னர் அறிய முடிந்தது.

இக் கந்தன் கருணையை நடிகர் ஒன்றியம் பம்பலப்பிட்டி சரஸ்வதி அரங்கிலும், பேராதனைப் பல்கலைக்கழகத் திறந்த வெளி அரங்கிலும் மேடையிட்டது. அங்கெல்லாம் பலத்த வரவேற்பைப் பொதுமக்களிடம் இந் நாடகம் பெற்றது. புதிய பல நண்பர்கள் அறிமுகமாகினர்.

நடிகர் ஒன்றியத்தின் கந்தன் கருணையைப் பார்க்க நெல்லியடி, யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து பலர் கொழும்பு வந்திருந்தனர். நாடகத்தை ரசித்த அவர்கள் இக்கந்தன் கருணையில் அழகியல் தன்மை அதிகம் இருந்ததாக விமர்சனம் வைத்தனர். கலை என்பதில் அழகு இருப்பது மிக அவசியமான ஒன்றுதானே.

1980களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி கந்தன் கருணையை மீண்டும் தயாரித்தது. தாஸீசியஸே அதனை நெறியாள்கை செய்தார். றேமன் கந்தனுக்கு நடித்தார். றேமனுக்கு சில அபிநயங்களைப் பழக்கும்படி தாஸீசியஸ் என்னிடம் வேண்டிக் கொண்டார். அப்போதுதான் யாழ்; பல்கலைக்கழகத்தில் புதியதொரு வீடு பழக்கிக் கொண்டிருந்தேன். தாஸீசியஸ்ஸை அங்கு வந்து எமது மாணவர்கட்குப் பல பயிற்சிகள் கொடுக்குமாறும் நாம் வேண்டிக் கொண்டோம். அதற்கிணங்க தாசி வந்து உதவி புரிந்தார். மாணவர் நிறைந்த பயன் பெற்றனர். பிரான்சிஸ் ஜெனம், லோகேஸ்வரன், விஜயன் போன்ற சிறந்த கலைஞர்கள் நாடக அரங்கக் கல்லூரியின் கந்தன் கருணைத் தயாரிப்பில் பங்கு கொண்டனர். (இந்நாடக அரங்கக் கல்லூரி சங்காரத்தையும் 1983ல் மேடையேற்றியது. அதை நெறியாள்கை செய்யும் பொறுப்பையும், ஆட்பலத்தையும் எமக்கு அளித்தது. யாழ்ப்பாணத்தில் அம்மேடையேற்றம் பெரு வெற்றி கொண்டது).

சங்காரமும், கந்தன் கருணையும் ஈழத்துத் தமிழ் நாடக மரபில் தூக்கி எறிய முடியாத கேள்விக் குறிகளாக நிற்கும் இரண்டு நாடகங்கள். அவற்றை நெறியாண்ட நெறியாளர்களின் திறமை, அந்நாடகங்களின் அவைக்காற்று முறைமை, அழகியல் திறமை என்பனவற்றிற்கெல்லாம் அப்பால் அவை சமூகம் பற்றி எழுப்பும் வினாக்களும், விமர்சனமும் உன்னதமான உலகை நோக்கிய அவற்றின் தூர நோக்குமே இவ்விரண்டு நாடகங்களும் இன்றும் பேசப்படுவதற்கான காரணங்களாகும்.



--------------------------------------------------------------------------------

பின்னிணைப்பு - 09

ஏ.சி.தாஸீசியஸ்
09.01.2003.

கந்தன் கருணையைப் பற்றிப் பேசும் போது நான் இன்றைய காலத்தைப் பார்க்கிறேன். இன்றைய காலத்தில் வளவும் வேலியும் கிராம எல்;லையும் சிதறிப் போச்சு. பலத்த அடிவிழுந்து சனம் ஓடத்தொடங்க எல்லாவற்;றையும் கைவிட நேர்ந்து போச்சு. சாதி, சமயமாய் ஒன்றாய் இருந்தவர்கள் இடம்பெயர்ந்து சாதி, சமயத்தை கைவிட நேர்ந்தது. இது அடி விழுந்ததால் வந்தது.

சாதி என்பது புரையோடிப் போனதால் முப்பது நாற்பது வருடத்திற்கு முன்னைய தேவைகருதி முற்போக்காளர் செயற்பட்டனர்.

ஐரோப்பாவிலும் ~~சாதி|| மானிய காலத்திலிருந்தது. கைத்தொழில் புரட்சி, தொழிலாளர் விழிப்புணர்வு, தொழிற் சங்கங்களின் எழுச்சியால் மாறிவிட்டது.

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் 13, 14, 15ம் நூற்றாண்டுகளில் நிலவிய மானிய சமுதாயத்தின் இழிவுமுறையை இன்றும் கடைப்பிடித்துக் கொண்டுள்ளனர்.

கிணற்றுத் தவளைகளான எங்களுக்குள் புரையோடி இருந்ததை இன்னொருவர் அடிக்க முதல், முற்போக்கு அணிகள் சாதி தகர்ப்புக்கான ஒரு தேவையாக இந்த ~ஆலயப் பிரவேசம்| ~சாதி ஒழிப்புப் போராட்டம்| என்பனவற்றை நடாத்தின.

சாத்வீகம் என்று கதைப்பதிலும் அடி போடும் போது-நடைமுறையில் இயங்கியபோது உறைத்தது. எமது நாட்டில் படித்தவர்கள், தமிழ்நாட்டில் பெரியார் போன்றோரின் கருத்துக்களை வெறுமனே கூட்டத்தில் மட்டும் பேசினர். நடைமுறையில் கொடுக்கிழுத்துச் சாதியைக் கடைப்பிடித்தோம்.

இதன் ஒரு பின்னணி, இடதுசாரி அணிகள், முற்போக்காளர்கள், கலைஞர்கள் எடுத்த முயற்சிதான் வெளிநாட்டு சஞ்சிகை இறக்குமதியை எதிர்த்தது. அதேபோல்தான் சாதிப் போராட்ட செயற்பாடுமாகும்.

இன்னொரு பின்னணி, எமது நாடகப் பின்னணி. பேராசிரியர் சு.வித்தியானந்தன் நாடகத்தில் குறிப்பிட்ட சாதிக்குரிய நாட்டுக்கூத்தை - கிராமத்துக்குரியதை எல்லோரும் பங்கெடுக்கவும் பார்த்து ரசிக்கவும் தொன்மையையும் அழகுகளையும் போற்றும்படி செய்தவர். இதுவும் எமக்கு ஒரு வழியைத் தோற்றுவித்தது. எனினும் அப்போதைய நாடகங்கள் முற்போக்கு நோக்கையோ சமுதாய விழிப்பையோ கொண்டிருக்கவில்லை.

சில நாடகங்களில் பேராசிரியர் க. கைலாசபதி எமக்கு வழிகாட்டியாக இருந்தபடியால் எமது சகோதர இனமான சிங்கள மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வில் நாமும் அத்துடன் சேர்ந்து இழுபட்டோம்.

இவை நேரடியாக தாக்கம் ஏற்படுத்தாவிடினும் மறைமுகமாக உந்துசக்தியாக இருந்தது. முருகையனின் கடூழியம், மௌனகுருவின் சங்காரம், நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பு ஆகிய நாடகங்கள் சமூக சீர்த்திருத்தம் செய்வதற்கு வழிகாட்டியாயிருந்தன.

இடதுசாரிகள், முற்போக்காளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் சரியான பாதையை திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொள்ள சமூகப் பிரக்ஞையுள்ள கலைஞர்கள் தமது மனச்சாட்சிக்குப் பங்கமின்றி நடக்கத் தாமும் தமது ஆயுதங்களைப் பயன்படுத்தி பணிபுரிய வேண்டியதால் சமூக விழிப்புணர்வுள்ள நாடகங்கள் அந்நாட்களில் வந்தன.

கே.எம். வாசகரின் நாடகங்களை பல்கலைக்கழகப் பட்டமின்றியபடியால் தூக்கிப்பிடிக்க மறுத்தாலும் மக்கள் மத்தியிலிருந்து பல சமூக விழிப்புள்ள நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.

இலவசக்கல்வியின் பின் காற்சட்டை போடாத அப்பாக்களின் பிள்ளைகளும் பல்கலைக்கழகம் சென்றதும் தாம் வானத்தில் மிதந்துகொண்டிருக்கும் மாயைக்குள் தம்மைப் புதைத்துக் கொண்டிருந்த போதும் கே.எம். வாசகர், அந்தனி ஜீவா, லடீஸ் வீரமணி, சுஹைர் ஹமீட், மாத்தளை கார்த்திகேசு, கலைச்செல்வன் போன்றோர் மக்கள் விழிப்புப்பெறும் நாடகங்களை அரங்கேற்றினர்;.

ஆனால் யாழ் மக்களிடையே மிகவும் புரையோடிப் போயிருந்த சாதியப்பாகுபாட்டை உடைக்க கந்தன் கருணை வந்தது.

என். கே. ரகுநாதன் எழுதிய கந்தன் கருணையை நான் பார்க்கவோ படிக்கவோ இதுவரைக்கும் கிடைக்கவில்லை.

ஆனால் அம்பலத்தடிகள் அரங்கேற்றிய நாடகத்தை நூலிலும் சரஸ்வதி மண்டபத்திலும் பார்த்தேன். ஐந்தரை மணிநேர நாடகம் அது. சனத்திற்குப் பொறுமை இருக்கவில்;லை அதை ரசிப்பதற்கு. அந்த நாடகம் கிராமங்களுக்குப் பொருந்தும். ஆனால் நகரங்களுக்குப் பொருந்தாது. சமகால நிகழ்வை ஒரு பிரதி விம்பமாக மட்டுமே காட்டியது. அந்த நாடகம் இன்னும் கூடிய தாக்கம் செலுத்தும் என்பதனால் அதனை கலைத்துவப்படுத்தி இறுக்கமாக பிரக்ஞைபூர்வமாக கொடுக்க விரும்பினேன். அவர்களிடம் நான் நேரடியாகக் கேட்டேன். முற்போக்காளருக்கு என்னிலை பயம். ஆக அழகுபடுத்தி நாடகத்தின் கருத்தைக் கெடுத்துப்போடுவன் என்று. தோழர் நா. சண்முகதாசன் பயப்பிடாமல் தாஸியிடம் கொடுங்கள் என்றார். அந்த நம்பிக்கையில் பத்தண்ணா புத்தகத்தை கொண்டுவந்து என்னிடம் தந்தார். உடனடியாகவே இரண்டரை மணிநேரமாக சுருக்க வேண்டுமென்றேன். பத்தண்ணா தயக்கத்துடன் சம்மதித்தார்.

அடுத்த யோசனை, யார் அதைச் சுருக்கி எழுதுவதென்பது! அப்போது நான் சொன்னேன் நாடகம் தயாரிப்பிலும் நிகழ்த்துகையிலும் எப்படி ஒரு கூட்டுகலையோ அதேபோன்று ஓர் உறுதியான கருத்து இருந்தால் தனி ஒரு நாடக ஆசிரியனுக்குப் பதிலாக ஒரு கூட்டுக்குழுவாகவே அதை எழுதலாம் என்று சொன்னேன்.

உடனே Too many cooks will spoil the soup என்றனர். நான் கூறினேன், ஹொலிவூட் திரைப்படங்களுக்கு கூட்டாகவே கதை எழுதுகிறார்கள். பயப்படாமல் எழுதுவோம் என்றேன்.

தயாரிப்பில் நடிகர் ஒன்றியம் என்பதில் கூத்தாடிகள், நாடோடிகள், எங்கள் குழு, அம்பலத்தாடிகள், மட்டக்களப்பு நாடகசபா, மலையக இளைஞர் குழுவும் சேர்ந்து இறங்கினோம். சகல பிரதேச கூத்து வடிவங்களும் இணைக்கப்பட்டன. மட்டக்களப்பு, மாதோட்டம், மலையக அருச்சுனன் தபசு ஆகிய பல மெட்டுகளில், தாளங்களில் பாடல்களை எழுதினோம். ஆட்டங்களைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு ஆட்டத்தை மௌனகுருவும் மாதோட்ட ஆட்டத்தை ஞானம்லம்பேட்டும் கண்டிய நடனத்தை நானும் பழக்கினோம்.

வசனத்தை குறைத்து அதற்குப் பதிலாகப் பாடல்களை எழுதினோம். கூத்துப்பாடல் எழுதிய அநுபவம் முருகையனுக்கு முன்னர் இருந்ததில்லை. கிராமத்துக் கூத்துக்களை அக்கூத்துக் கலைஞர்கள்தான் எழுதலாமே தவிர அதை மற்றவர் எழுத இயலாதென்றார்.

நாடகத்துக்கு நாம் றெடியானவுடன் கட்டம் கட்டமாக பிரித்து பாடல்களை எழுதுவதற்கு ஒவ்வொருவரிடம் கொடுத்தோம். அதில் வரும் ஆசிரியம், அகவல் ஆகியன முருகையனுடையவை. 'பாடிக்காட்டு, எழுதுகிறன்' என்றார் முருகையன். நான் பாடினேன், அவர் எழுதினார். இளையபத்மநாதன் காத்தான் மெட்டுக்களை எழுதினார். சில பாடல்களை ச. முத்துலிங்கம், நா. சுந்தரலிங்கம், சி. மௌனகுரு, அ. தாஸீஸியஸ் ஆகியோர் எழுதினர். எல்லோரும் கூத்தை எழுதலாம் என்பதை எழுதிக் காட்டினோம்.

இதற்குள் கவிஞர் இ. சிவானந்தன் தான் நடிகனாக வரவேண்டுமென்று கூறி பிடிவாதமாக வந்தவர். அவர் கேட்டார், 'நடிகனாக வாற சிவானந்தன் சரி, கவிஞர் சிவானந்தனுக்கு என்ன உதுக்குள்ள பங்கு' என்று. அந்த இடத்தில் ஒரு பதினைந்து இருபது பேர் நாம் கூடியிருந்தோம். நான் எனது நிகழ்ச்சிக் குறிப்பைத் தூக்கி அவர்களுக்கு முன்னால் போட்டேன். 'மற்றவை எல்லாரும் பிழைச்சால் சிவானந்தன் இதை எழுதுவார்' என்று குறிப்பிட்டிருந்ததைக் காட்டினேன். "கோயிலுக்குள்ள ஒரு பெரிய கூட்டம் நடக்குது. கூட்டத்தை நடத்திவிட்டு வெளியில் வந்த தருமகர்த்தா வெளியில் நிக்கிற மக்களை வெறியோட நையாண்டியாகக் கேக்கிறதை எழுது" என்றேன். "சரி பாடடா" என்றார். நான் சந்ததம் நாலு வரிவரியாகப் பாடினேன். உடனடியாகவே 'நிப்பாட்டடா' என்றார். அடுத்த நிமிடம் பீறிட்டுக்கொண்டு வந்தது.

"தட்டுவம் பெட்டிகள் எட்டிநின் றேந்தினீர்
தந்தனம் அன்னதானம்.......
அதை அவர் எழுதிய பின் 'இதைப் பாடடா' என்றார். எழுத்து, சொல், தாளம் எதுவும் பிசகாமல் அப்படியே அவரது கூற்று வந்து குதிச்சுது.

அன்;றைக்கு எங்களது பக்குவமின்மையோ என்னவோ தெரியாது. எல்லோரும் சிவானந்தனை கட்டிப் பிடிச்சுத் தூக்கினம். இண்டைக்கு அப்படிக் காரியம் செய்யிறதை எங்கட நாகரிகம் விடாது. ஆனால் இண்டைக்கும் நான் அந்தத் தாஸீஸியஸாகத்தான் இருக்கிறன். எனக்குள்ள இண்டைக்கும் சிவானந்தன் இருக்கிறார்.

நாடகம் அரங்கேறி எங்கள் நோக்கத்துக்கும் முற்போக்கு அணிக்கும் நடிகர் ஒன்றியத்துக்கும் நெறியாளர் என்றவகையில் எனக்கும் அது ஒரு பெருமையைத் தேடித் தந்ததென்றால் சிவானந்தனின் பங்கு அதற்குள் மிகப்பெரியது.

இந்த நாடகத்தைப் பார்க்க சிங்களக் கலைஞர் உட்பட பலபேர் வந்தனர். ஹென்றி ஜெயசேன இன்னும் சிலசிங்களக் கலைஞர்களும் கைலாசபதியோட ஒரு வெள்;ளையரும் வந்திருந்தனர். கைலாசபதி பாராட்டிவிட்டு அடுத்தநாள் யாழ்ப்பாணம் செல்வதாகவும் இதுபற்றி நீளமாகக் கதைக்க வேண்டுமென்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அவர் யாழ் போகமுதலே இரவிரவாக ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தார். "பாராட்டுவதைவிட உனக்கு நன்றி சொல்லிகிறேன் தாஸ" என்று கடிதம் அனுப்பிவிட்டு றெயின் எடுத்தார்.

இந்நாடகம் நடந்து எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு நான் லண்டன் போனபிறகு எண்பத்தேழோ எண்பத்தெட்டோ தெரியாது. நான் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்த கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தேன். காலை கருத்தரங்கு, மாலை எனது பயிற்சிப் பட்டறை. அதில் ஹென்றிக் (Hendrique) என்ற ஒல்லாந்துக் கலைஞரும் அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டார். அவர் 'சமூகப் பணியில் நாடகங்கள்' என்பது பற்றி குறிப்பிடும்பொழுது இலங்கையில் தான் பேராசிரியர் கைலாசபதியுடன் கூடிப்பார்த்த 'கண்டான் கரு நாய்' என்ற நாடகத் தாக்கத்தை தானும் கைலாசபதியும் மறுநாள் றெயினில் விவாதித்துச் சென்றதாகவும் அனுராதபுரத்தில் தான் இறங்கியதாகவும் அதைபற்றிச் சிலாகித்து நிறையப் பேசினார். அதுபற்றிய விவாதம் நடக்கையில் அதன் நெறியாளர் நான் என்பதை அடக்கத்துடன் சொல்லவேண்டியேற்பட்டது. அதன்பின் மாலைக் கருத்துப் பட்டறையிலும் கந்தன் கருணை நாடகக் காட்சிகளை நாம் பயன்படுத்தினோம்.

இதில் பங்குபற்றிய மாணவர்கள் பலர் பட்டதாரிகள். எனக்குப் பின்னொரு காலத்தில் ஏதென்ஸ் நகரில், ஆம்ஸ்ரடாமில் அந்த நாட்டு மக்களுக்கே பயிற்சிப்பட்டறை நடாத்தவும் அதனால் ஏதோ சம்பாதிக்கவும் வழி பிறந்தது.

கந்தன் கருணை நாடகம் ஒரு வெறும் நாடகமாக இருந்திருந்தால் அது மறக்கப்பட்டிருக்கும். நாடகம் என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. சமுதாயச் சீர்திருத்தத்திற்கான ஒரு ஆயுதம் என்பதை உணர்த்தி நின்றபடியால் கலைஞர்கள் எந்த வழியில் செல்லவேண்டும் என்பதற்கு இன்று அது ஒரு வழிகாட்டி என்றுதான் நினைக்கிறேன்.

நிறைவாக, கந்தன் கருணை மூலம் ஒரு நல்ல பணியைச்செய்ய எமக்கு இடம் தந்த அம்பலத்தாடிகளையும், நடிகர் ஒன்றியத்தையும், அதற்குப் பாடல்களை எழுதிய அத்தனை கவிஞர்களையும் அதற்குப்பின் புதுவடிவமிட்டு பிற்காலத்தில் பாலமாகக் கொண்டுபோய் மேடையேற்ற உதவிய நாடக அரங்கக் கல்லூரியையும் குழந்தை ம. சண்முகலிங்கத்தையும் நான் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

நீண்டகாலமாக ஏதோ ஒருவழியில் இந்த அநுபவங்களை மற்றவர்களுடன் பங்குபோட வேணும் என்று எனக்குள் ஒரு மனப்பிசைவு. இன்றைக்கு தேசிய கலை இலக்கியப் பேரவையால் அதற்கும் ஒரு வழி கிடைத்துள்ளது. அவர்களுக்கும் நான் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

--------------------------------------------------------------------------------