கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். | ||
மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை | ||
வடலி | ||
சி. சிவசேகரம் |
வடலி சி. சிவசேகரம் தேசிய கலை இலக்கியப் பேரவை ------------------------------------------------------ வடலி சி. சிவசேகரம் 1999 புரட்டாதி தேசிய கலை இலக்கியப் பேரவை சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் (பிரைவேட்) லிமிடட் 44, மூன்றாவது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத்தொகுதி, கொழும்பு- 1. தொலைபேசி 2335844 தொலைநகல் 075- 524358 ------------------------------------------------------- பதிப்புரை தேசிய கலை இலக்கியப் பேரவையின் இருபத்தைந்தாண்டு நிறைவையொட்டி மாதாந்தம் ஒரு நூலை வெளியிடுவதெனத் தீர்மானித்துச் செயற்பட்டு வருகின்றோம் கொழும்பில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எமது மாதாந்த வெளியீடுகளை வெளியிடுவதென்பதும் அன்றைய தினமே எமது புத்தகப்பண்பாட்டுச் செயலர்களூடாக விநியோக இணைப்பை சீரமைப்பதுமென்ற திட சங்கற்பத்துடன் முயன்றுவருகின்றோம். இந்நிகழ்வின் மூலம் எழுத்தாளர்-வெளியீட்டாளர்-வாசகர் மத்தியிலான உறவையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கின்றோம். எமது செப்டெம்பர் மாத வெளியீடாக கவிஞர் சி. சிவசேகரம் அவர்களின் வடலி என்ற கவிதைத்தொகுதியை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால மனிதர்களின் வாழ்வின் அவலங்களையும் நெருக்கீடுகளையும் தீண்டிவரும் முயற்சியாக இக்கவிதைகள் அமைகின்றன என நம்புகின்றோம். ஈழத்துக்கவிஞர்களின் வரிசையில் மக்கள் நலனுக்கும் கவித்துவத்தின் அழகியல் அடிப்படை அம்சங்களுக்கும் இடையில் சமநிலை கண்டு சமூக மாற்ற நோக்கில் கவிதை படைக்கும் கவிஞர் சி.சிவசேகரத்தின் ஏனைய கவிதை நூல்களுக்கு வரவேற்பளித்தமை போல் இந்நூலுக்கும் வாசகப் பெருமக்கள் தமது ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் வெளிப்படையான விமர்சனங்களையும் வரவேற்கின்றோம். நன்றி தேசிய கலை இலக்கிய பேரவை 44, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுக்கட்டிடத்தொகுதி, கொழும்பு 11 ---------------------------------------------------------------- உங்களிடம் இன்னும் சில கவிதைகளுடன்.... இத்தொகுதியிலுள்ளவை, கடிகாரம் என்ற தலைப்பிலானது நீங்கலாக, 1994 இலும் பின்னரும் எழுதப்பட்டவை. தாயகத்தில் பிரசுரமான கடிகாரம், ஏகலைவ பூமியில் வரவிருந்தது. கவனப்பிசகாக தவறவிடப்பட்டது. 1994-1996 காலத்தில் நான் எழுதியவற்றில் பல போரின் முகங்கள் தொகுதியில் வந்தவை. அக்கால இடைவெளியில் எழுதப்பட்டு (நோர்வே) சுவடுகளில் வெளியான அயல் உல்லாசப்பிரயாணிகட்கான வரவேற்பு விளம்பரம், பணங்கய்ச்சி மரம், இன்னொரு காதலின் கதை, அந்திமம், (ஒல்லாந்து) அஆஇ யில் வெளியான தெரு, லண்டனிலிருந்து நியூஹாம் தமிழர் நலன்புரிச்சங்கத்திற்காக பத்மநாப ஐயர் வெளியிட்ட கிழக்கும் மேற்கும், இன்னுமொரு காலடி போன்ற சிறப்பிதழ்கட்காக எழுதிய நாராய் நாராய், மாநகரும் மானுடரும், புதிய உலக அமைப்பும் அமைதியும், பினோஷேக்காக ஒரு கவிதை என்பன புலம்பெயர்ந்தோர் ஏடுகட்காக எழுதப்பட்டவை. பூனைக்குத் தோழர்கள் இலங்கையில் ஒரு அரசியல் விமர்சன ஏட்டுக்கு அனுப்பபட்டு தபாலில் தவறவிடப்பட்டாதக கூறப்பட்டது பின்பு பிரான்சிலிருந்து இவ்வருடம் "தோற்றுத்தான் போவோமா" என்ற சபாலிங்கம் நினைவு மலருக்கு அதை அனுப்பினேன். தமிழகத்திலிருந்து வந்தைலக்கு சஞ்சிகையில் களவு பற்றிய ஒரு பாடம், உன் தெய்வமும் என்பன வெளியாயின. பிரசுரமான பிற, ஈழத்து ஏடுகளான தாயகம் , புதிய பூமி, தேசிய கலை இலக்கியப்பேரவையில் 25 ஆவது ஆண்டு மலரான புது வசந்தம், சிறுவன் மணியதாஸ் நினைவுமலர் ஆகியவற்றில் வந்தவை.போரும் அமைதியும் பற்றிய ஒரு நவீனத்துவ பின் வாசிப்பு, தமிழகத்தின் சதங்கையிலும் வந்தது. பல்லி, வந்திப்பு, பச்சோந்தி, நிலவு, காணற்போன வண்ணாத்துப்பூச்சிகள் ஆகியன ந்னமும் அச்சேறாதவை. சில கவிதைகளைப்பற்றிய குறிப்புக்கள் இங்கு அவசியமாகின்றன. நண்பர் செந்திவேலின் மகன் மணியதாஸ் இறந்தபோது நான் லண்டனில் சிறிதுகாலம் தங்கியிருந்தேன். அந்தச்சாவினை இயற்கையான சாவாக என்னால் ஏறக முடியவில்லை. ஏனெனில், வடக்கின் போர்ச்சூழல் குழந்தைக்ளின் உடல் நிலையையும் உள நிலையையும் பல வகைகளிலும் பாதித்துள்ளது. முன்னறிந்திராத அளவில் இன்று சில பாரிய நோய்கள் பரவலான அளவில் காணப்படுகின்றன. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதிய அந்தக் கவிதையைப் போராற் பறிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர் அனைவருக்குமான ஒரு அஞ்சலியாகவே எழுதினேன். அதையே இத்தொகுதியின் பெயராகவும் தெரிந்துள்ளேன்..போர்ச்சூழல் தொடர்பான கவிதைகளுக்கு இன்றைய நிலையில் விரிவான விளக்கங்கள் தேவையில்லை. குரங்குகள் பற்றிய ஒரு விசாரணை யாரைக்குறிக்கிறது என்று விசாரணைகள் நடந்ததாக அறிந்தேன். மக்களின் நலனையும் உணர்வுகளையும் மதிக்காத எவரையும் அது குறிக்கலாம் என்பதே உண்மை. மந்திப்பு, தபாலில் தவறியதாக கூறப்பட்ட இன்னொன்று. படிமக்கவிதைகள் ஒரு பம்மாத்தாகப் பல்கிப்பெருகிய சூழலில் 1995 வாக்கில் அவற்றின் ஏளனமாக அது எழுதப்பட்டது. பச்சோந்தி, வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றமான தோற்றத்தைக் காட்டுகிற ஒரு ஆக்கம் கவிதைகளை மீள நோக்கும் போது , போரின் முகங்கள் தொகுதியின் நீட்சியாகவே பலவும் தோன்றுகின்றன. போர் எங்களை முகத்தில் உற்றுநோக்கியவாறு இருக்கையில் , கவிதையில் அதன் முகமே அதிகம் வரையப்படுவது இயல்பானதே. எனினும் கவிஞர்கள் சோர்ந்துவிடக்கூடாது. ஒடுக்குமுறைப்போருக்கு எதிரானதும் நியாயத்திற்கானதுமான குரலாகவே கவிதை ஒலிக்க வேண்டும். என்பது என் எண்ணம். கவிதைகளை வரிசைப்படுத்துவதிற் சில பிரச்சனைகள் இருந்தன. ஏனெனில் விடயச்சார்பாக நோக்கினாற் பல கவிதைகள் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுட் தேறும். எனவே, அண்ணளவாக தேசிய இன ஒடுக்கல், சாதியம், ஆணாதிக்கம், ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த வாழ்க்கை, பிற விடயங்கள் என்ற வாறு வரிசைப்படுத்தியுள்ளேன். கவிதைகளைக் கணினி அச்சிட்டுப் பதிப்பித்த நண்பர் கே. தியாக ராஜாவுக்கும், பிரதியைப் பிழை திருத்தி உதவிய நண்பர் சோ. தேவராஜாவுக்கும், முகப்புப் படம் வரைந்த இளம் ஓவியர் எஸ் நளீமுக்கும் மீண்டும் எனது கவிதைத்தொகுதி ஒன்றை வெளியிட முன்வந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் நேர்த்தியாக அச்சிட்டுத்தரும் டெக்னோ பிரின்டர்ஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றிகள். சி. சிவசேகரம். பேராதனை 28-8-99 --------------------------------------------------------------- வடலி இந்தக் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம் பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும். எத்தனையோ பெரும் புயல்கள், இடிமழைகள், சுடு வேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம். பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார் போயொழிந்தார். ஆனாலும் எங்கள் கரும்பனைகள் எங்கள் வெளிகளிலே ஓலையிலே முடிபுனைந்து ஓங்கி அரசாளும் எனவேதான் எத்தனைநாள் போனாலும் எத்தனைதான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும். பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என்றாலும் வெட்டிச் சரித்தீர் குண்டு எறிந்து கூரைகளைப் பறித்தீர் அன்னையரின் தந்தையரின் ஆதரவை நீர் பறித்தீர் அங்கங்க்குறைத்தீர். அமைதி கெடச்செய்தீர். கல்வி பறித்தீர். போர்க்களத்துட் புகுவித்தீர் பிஞ்சிற் கருக்கிப் பிணமாகத் தேய்வித்தீர். பனைபோல அல்ல பாரிலுள்ள மானுடர்கள். பனைகளிலும் மிக வலியோர் அவர்தமது பாலகர்கள் இங்கே விழுவர் இங்கேயே வேர்விடுவர் இங்கே முளைப்பர் நிமிர்வர் காடாய் அவர் விரிவர் ---------------------------------------------------------------- கொல்லுங் கரங்கள் சூரியகந்தவில் சிறுவர்களைப் புதைத்த கரங்கள் எவையோ அவையே செம்மணியிலும் இளைஞர்களைப் புதைத்தன. சூரியகந்தவின் பிணங்கள் மௌனச் சாட்சிகளாகி கொலைசெய்தோர் யார் என அறியப்பட்ட பின்னரும் கொலைஞகட்கு அபயமளித்த கரங்கள் எவையோ அவையே செம்மணியின் புதைகுழிகளைத் தோண்டாமல் மறிக்கின்றன. அடக்குமுறை அதிகாரத்தை வலுப்படுத்தவே புதைகுழிகளில் அத்திவாரம் இடப்படுகிறது. புதைகுழிகளின் எலும்புகள் வெளியேற்றப்படும்போது அதிகார நிறுவனம் ஆட்டம்காணுகிறது. பிணங்கள் கிடந்த குழிகளின் வெற்றிடம் விழுகின்ற அதிகாரத்தை விழுங்க்க காத்திருக்கிறது எனவேதான் புதைகுழிகள் மீளத் தோண்டப்படுவதை அதிகாரத்தின் கரங்கள் மறிக்கின்றன. அதிகாரம் எத்தனைநாள் இனவாதம் பேசினும் அதன் கொலைக் கரங்கட்கு இனவேறுபாடு இல்லை. அவை நீளுகிற எல்லைவரை புதைகுழிகளும் நீளுகின்றன. அதே அரசு, அதே காவற்படைகள், அதே கொலைக்கரங்கள், அதே விசாரணைகள், அதே மழுப்பல்கள், அதே மூடிமறைப்புக்கள், மீண்டும் அதே புதைகுழிகள். ---------------------------------------------------------------- அமைதியான இரவொன்றில் வீல் வீல் வீல் வீல் அயலில் ஒரு குழந்தை அழுகிறது. வீல் வீல் வீல் வீல் வெளியே நாயொன்று ஊளையிடுகிறது வீல் வீல் வீல் வீல் தூரத்தே வண்டுகள் கீச்சிடுகின்றன. கண் காணாத தொலைவில் போரொன்று தொடர்கிறது செவிக்கெட்டாத தொலைவில் வேட்டுக்கள் அதிர்கின்றன மனிதர் மேனி நடுங்குகின்றனர் மனிதர் ஓடிச் சிதறுகின்றனர் மனிதர் வீழ்ந்து மரிக்கின்றனர். உண்ண உணவும் உறுஞ்ச நீரும் வழங்கிய மண் மறுபடியும் குருதியை அருந்துகிறது. மாநகரின் அமைதியான இரவொன்றில் வானொலியின் செய்தி அறிக்கை மெல்ல ஒலிக்கிறது "பயங்கரவாதிகளின் தாக்குதல் முற்றாக முறியடிக்கப்பட்டுவிட்டது அரச தரப்பில் சேதங்களில்லை உயிரிழப்பும் இல்லை" வீல் வீல் வீல் வீல் அம்புலன்சுகள் கூவுகின்றன இரவின் வீதிகளில் மோனம் சூழமுன் போரின் உண்மைகளைச் சுமந்தபடி அம்புலன்சுகள் விரைக்கின்றன. ---------------------------------------------------------------- (தணிக்கை உத்தரவுகளுக்கமைய கவிதை எழுதுதல்) **** பற்றிப் பேசாதிருத்தல் அரசாங்க ஆணைப்படி ******ச் செய்திகளுக்கு பூரணமான தடை ****** பற்றிய செய்திகளை தொலைக்காட்சியிலோ வானொலியிலோ ஒலிபரப்பவும் புதினத்தாள்களில் பிரசுரிக்கவும் மின்மடல் மூலமோ தொலைமடல் மூலமோ தொலைபேசி மூலமோ பரிமாறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்க ஆணை. அதற்கும் மேலாகப், பொறுப்பதிகாரிகள் மாநகரின் பெருந்தெருவை இரவுபகலாக அளந்தபடி கூவுகிற அம்புலன்சுகளின் சைரன்களின் மின்கம்பிகளைத் துண்டிக்கலாம் இரத்ததான விளம்பரங்களை முற்றாக நிறுத்திவிடலாம். இனி வரமாட்டாத மகனையோ கணவனையோ காதலனையோ சகோதரனையோ தோழனையோ எண்ணி அழுகுரல் எழுப்பும் ஒவ்வொரு வாயிலும் ஒரு துணிப்பந்தை அடைக்கலாம். அல்லது நாம் அதற்குப்பதிலாக ****** செய்வதை நிறுத்த வழிதேடலாம். ****** இல்லையாயின் ******ச் செய்திகளைத் தடைசெய்யும் தேவையும் இல்லாதுபோய்விடலாம்... ---------------------------------------------------------------- வேள்வி எதை வேண்டி எழுகிறது இந்தப் பெருநெருப்பு? எதை வேண்டி நிகழ்கிறது இந்தப் பெருவேள்வி?இனமென்று மொழியென்று மதமென்று காற்றடிக்க வீரியமாய் இங்கு ஒரு தேசத்தின் பேராலே தொடர்கிறது பகைமைத்தீ. தீ வளர்க்கவேண்டியும் தீ வளர்க்க வேண்டாதும் தீபற்றி நன்கு அறிந்தும், அறியாதும் தீக்குட் குதிக்கின்றார்: சுள்ளிகளாய்ச் சடலங்கள் நெய்யெனச்செங்குருதி பெய்யப்பெருகி விரிகிறது நெடுநெருப்பு எல்லையற எட்டியன எல்லாம் தமதாக்கும் பொற்கரங்கள். இம்மண்ணை வளைத்து ஓமகுன்றம் ஒன்றமைத்துக் கனல் மூட்டிப்போய்விட்டார். போனவரின் கற்சிலைகள் காவற் தெய்வங்கள் போல் மூலைக்கு மூலை கைவிறைத்து நின்றிருக்க இம்மண் எரிகிறது எம் மனிதர் எரிகின்றார், எம்மனங்கள் எரியாமல் ஏன் பார்த்து நிற்கின்றோம்? எவர்க்காக இவ்வேள்வி, எவர்க்காக இந்நெருப்பு? ---------------------------------------------------------------- பலி பூசாரி கூவுகிறான்: "தின்பண்டங்கொண்டுவா திரவவகை கொண்டுவா என்னுடைய சாமி பசியாற வேண்டுமே இன்னமும் நீ நிற்பதேன் சொன்னதெல்லாம் கொண்டுவா". பூசினியின் காய் அறுத்தோம் பலகாரம் பழவகைகள் பற்பலவும் நாம் படைத்தோம் பொங்கல் உலை வைத்தோம் பால் மோரும் இளநீரும் போதாத சாமிக்கு சாராயம் கள்வகைகள் சீராக நாமீந்து கோழி அறுத்தோம் ஆடும் பலி தந்தோம் காசு பணம் தந்தோம், கட்டிடவும் துணி தந்தோம் உரக்க உடுக்கடித்துப் பூசாரி கூவுகிறான்: "தின்பண்டங்கொண்டுவா திரவவகை கொண்டுவா" லட்சக்கணக்கான மானிடரின் உடலங்கள் வெட்டி வழிந்த வெங்குருதி குடக்கணக்காய் கொட்டிக்கறுத்த தரை மீது நின்றபடி பறை ஒலி போல் வேட்டதிர, அழுகை ஒலி சங்கூத வெறியோடிச்சிவப்பான விழிகள் கனல் கக்க உடுக்கடித்துப் பூசாரி உரு ஆடிக் கூவுகிறான்: "கோழிகளும் ஆடுகளும் கொண்டு பசி தீருவதோ சாராயம் கள்ளருந்தித் தாகம் தணிகுவதோ பத்தாயிரம் உயிர்கள் பலி கேட்கும் தெய்வமிது ரத்தத்தைக் கொண்டுவா, நரபலியைக் கொண்டுவா. கிழடுபட்ட தசை வேண்டாம் இளைய தலைமுறையின் இனிய தசை கொண்டுவா பட்டம் பதவி பல அதிகாரம் பணமுடையோர் பெற்றெடுத்த பிள்ளைகளின் ஊளைத்தசை வேண்டாம் சிங்களத்தின் ஏழைகளின் சிறுவர்காளைக்கொண்டுவா. பச்சை கறுப்போடு பழுப்பாடை அணிவிது ஒட்ட முடி நறுக்கித் தொப்பி தலைக்கேற்றி சப்பாத்துக்கால்களுடன் போர்ச்சாமி சந்நிதியில் வெட்டிச் சரிக்கப் பத்தாயிரம் புதல்வர் கட்டி இறுகக் கயிற்றால் பிணைத்தெனினும் கட்டாயமாய் எனது களத்தினுக்குக் கொண்டுவா. ---------------------------------------------------------------- திருக்கோணமலைத் துறைமுகம் எத்தனையோ கப்பல்களைக் கண்டது இத் துறைமுகம் எத்தனையோ கப்பற்காரர்களைக் கண்டது இந்நகரம் அம்மா சொன்ன கப்பல்கள் ஆச்சி சொன்ன் கப்பல்கள் நானுங் கண்ட கப்பல்கள் வெள்ளைத் தொப்பி வெள்ளை உடை வெள்ளைத்தோல் மாலுமிகள் விரைவாக அடையுண்ட கதவிடுக்கின் வழிப் பாய்ந்து அம்மாவின் கண்களை ஆச்சியின் கண்களை அகல விரித்தது அச்சமா ஆவலா அதிசயமா கடற்சிறையின் கதவு திறந்து மாலுமிகளை விடுவிக்கும் துறைமுகம் கால்களை அகட்டிச் சரிந்து மாலுமிகள் நடந்த தெருவழியே கைகளிற் கிடக்கும் சில்லறை கரைய மீண்டும் சிறைக்கு அனுப்பிவைக்கும் துறைமுகம் வந்தவை போர்க்கலங்கள் என்பதை மறக்கடிக்கும் வாண வேடிக்கை துறைமுகத்து வானத்தின் இருளைப் பொய்ப்பிக்கும் அம்மா சொன்ன ஆச்சி சொன்ன நான் கண்ட கப்பலகள் பின்னர் வரவில்லை கப்பலாற் கழித்துவிட்ட வண்ண வண்ணக் கொடிகள் மட்டும் கலியாண வீடுகளில் கோயில் விழாப்போதில் தோரணங்கள் மேலாகத் தொங்கிப்பறந்து மெல்ல மறைந்து இன்று நெடுங்காலம் பின்னரும் கப்பல்களைக்கண்டது இத்துறைமுகம் வணிகக் கப்பல்கள் மீன்பிடிக்கப்பல்கள் இன்னமும் முன்போல, முன்போலல்லாத போர்க்கப்பல்கள் வந்து போகின்றன துறைமுக விளிம்பில் கடலின் ஓரத்தில் படகுத் துறையில் எவரதோ வீட்டில் காவல் நிலையத்தில் நடுத்தெருவில் அரச அலுவலகத்தில் அகதிமுகாமில் ஒரு கப்பலுக்காக ஊர் திரும்பிச்செல்வதற்கு ஒரே ஒரு கப்பலுக்காக காத்திருக்கிறார்கள் அம்மா கண்ட கப்பல்கள் ஆச்சிகண்ட கப்பல்கள் நான் கண்ட கப்பல்கள் ஊர் திரும்பிச் செல்வதற்கு ஒரே ஒரு கப்பல் ---------------------------------------------------------------- போரும் அமைதியும் -ஒரு நவீனத்துவப் பின் வாசிப்பு போரென்று ஒன்று இல்லாத போது அமைதியென்ற ஒன்று பொருளற்று விடுகிறது எனவே/ எனவோ/ எனினும்/ எனுமாறு/ எவ்வாறும் போர் மூலம் அமைதி எனவும் அமைதிக்கான போர் எனவும் போரும் அமைதியும் வாசிக்கப்படுகின்றன. மேலும் கட்டுடைப்பின் ஈற்றில் அமைதியெனின் போரென்றும் போரெனின் அமைதியென்றும் மீள வாசிக்கலாம். மெய்யாக, இன்னும் எதையும் அதுவாக அன்றி வேறு எதுவாகவும் வேண்டின் எவரும் (எவரும் எனின் எவருமே என்னற்க) எவ்வாறும் வாசிக்கலாம். இதுவரை எவரும் போரையும் அமைதியையும் கட்டுடைத்து அமைதி மூலம் போர் எனவும் போருக்கான அமைதி எனவும் மீள வாசித்ததில்லை. (வாசித்து மீளவில்லை எனவுங் கொள்க) வாசிப்புகளின் வரையறையின்மை கருதி இனியும் அவ்வாறே இருக்க வேண்டியதில்லை ஆதலின் இதையும் அமைதிக்/ போருக் +கு/ கும்/ குரிய/ கோ/ கே/ காக/ காகா//// என்று எவ்வாறுங் கொள்க/ கொள்ளற்க. ---------------------------------------------------------------- குரங்குகள் பற்றிய ஒரு விசாரணை குரங்குகள் குரங்குகள் குரங்குகள் ஊரின் மரங்கள் மீது குரங்குகள் மதில்கள் மீது குரங்குகள் வீடுகளின் கூரைகள் மீதும் வீதிவழி எங்கணும் வாகனங்கள் மீதும் குரங்குகள் கண்கள் பாய்கிற ஒவ்வொரு திசையிலும் கண்கள் விழுகிற ஒவ்வொரு இடத்திலும் குரங்குகள் தனியாகவும் கூட்டமாகவும் குரங்குகள் குரங்குகள் இவை எங்கிருந்து வருவன எனக் கேட்டேன் தென்திசையின் வனங்களில் இருந்து என்றனர் சிலர் மேற்கென்றும் வடக்கென்றும் கூறி மறுத்தனர் சிலர் கோட்டைச் சுவர்களின் பின் குடியிருக்கும் மலைக்காட்டுக் குரங்குகளும் சேர்த்தி இதிலென்று திருத்தினர் சிலர் என்றோ ஒரு காலம் போல் கடல் கடக்கக் கற்பாலம் அமைத்து வந்தவைதாம் இவை யென்றும் தமக்கிடையே கதைகூறி வாதிட்டு இருந்தனர் சிலர் குரங்குகளால் எவருக்கும் தொல்லையேதும் இல்லையா எனக் கேட்டேன் குரங்குத் தொல்லை போனால் வேறேதாவது தொல்லை தொல்லையே இல்லாத ஊரொன்று உனக்குத் தெரிந்தால் சொல்லென்றார்கள் உளவாளிக் குரங்குகள் கதவிடுக்குகளாலும் பிரித்த கூரை வழியாகவும் வீட்டினுள் பார்ப்பதுண்டு அதிகாரிக் குரங்குகள் கதவுகளை நீக்கியும் யன்னல்கள் வழியாக்ழ்வும் நினைத்த பொழுது வீட்டுக்குள் வருவதுடன் கையில் அகப்பட்டதைத் தின்கிறதும் சிலசமயம் கொண்டு செல்கிறதும் உண்டு காவலாளிக் குரங்குகள் சிறுவர்களை மிரட்டுவதோடு இளம்பெண்களுடன் சேட்டைகள் செய்வதும் உண்டு குரங்குகள் பற்றி எவரும் எதுவுமே செய்வது இல்லையா என்று கேட்டேன் என்ன செய்யலாம் என்று என்னையே திருப்பிக் கேட்டார்கள் என்ன செய்தாலும் குரங்குகள் எப்போதும் வந்தபடியும் போனபடியும் தான் என்று ஆறுதலாகவே சொன்னார்கள். கையில் அனுமார் படம் இருந்தால் குரங்குகளால் பயமில்லை என்றனர் சிலர். தன்னுடைய அனுமார் படத்தையும் அடையாள அட்டையையும் குரங்கு கிழித்துவிட்டது என ஒருவர் முறையிட்டார் முறையிட்டவருக்கு பக்தி போதாது என இன்னொருவர் கண்டித்து விளக்கினார். எப்படியும் எல்லாருக்கும் குரங்குகளுடன் வாழ்ந்து பழகி விட்டது குரங்குகள் பற்றிய முறைப்பாடுகளும் குறைந்து விட்டன அதைவிடக் குரங்குகள் கொலைக் கருவிகள் காவுவதில்லை எவரையும் கடத்திச் செல்வதில்லை பெண்கள் மீது பாலியல் வன்செயல் புரிவதில்லை விசாரணையின்றியோ விசாரணையுடனோ எவரையும் மறியலில் வைப்பதில்லை என்றவாறாக ஊரில் இப்போது குரங்குகள் பற்று நல்லெண்ணமே உள்ளது. குரங்குகள் ஊருக்குள் வந்த காரணம் காடுகளில் நிகழும் போரெனவும் மரங்களின் அழிவு எனவும் உணவு போதாமை எனவும் குரங்குகளின் சார்பான நியாயமும் பரவலாக ஏற்கப்பட்டது போர் முடிந்த பிறகு குரங்குகளிடமே ஊரை ஒப்படைத்துக் காட்டுக்குள் போய் விடலாமென்றும் சிலர் கூறி வருகிறார்கள் ஆனால் போர்தான் முடிகிற பாடாக இல்லை ---------------------------------------------------------------- பூனைக்குத் தோழர்கள் நண்பனே நீ அரசினரின் சித்திரவதை முகாமொன்றில் செத்திருக்கலாமே; அவர்கள் முழுகடித்த ஒரு கலத்தோடு போயிருக்கலாமே; அவர்களுடைய துப்பாக்கி வேட்டுக்கு பலியாகியிருக்கலாமே; இல்லையேல் காணாமற் போனோருள் ஒருவனாகப் புதைகுழி ஒன்றுள் அடையாளம் இழந்திருக்கலாமே; குண்டு விழுந்து சரிந்த கூரை ஒன்றன் கீழோ சாய்ந்த சுவரொன்றன் கீழோ புதையுண்டிருக்கலாமே; போகட்டும், அகதி முகாமொன்றில் பட்டினியோ பெரும்பிணியோ உன்னைமெல்ல அரித்திருக்கலாமே ஆனாலும், அவ்வாறு நிகழாமல் எமனுலகு போய்விட்டாய். உனக்காக இரங்குகிறான் இங்கொருவன்- நண்பனாம். நினைவுகளைக் கொஞ்சம் இரை மீட்டுப் பார்க்கிறான் நிலையாமை என்றும் சாவின் நிச்சயமென்றும் சொல்லுகிற வார்த்தை சுடலை ஞானம் தான். உன் சாவைக் கொணர்ந்தவர்கள் அவனுக்கு இனியவர்கள் உன் கொலையை, கொலைஞர்களை ஏசிடவும் முடியாமல் கொலைச்செயலை வீரமெனக் கொண்டாட முடியாமல் திணறுகிறான், பாவம். சாவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கையிலே ஏனிந்த விதமாய் உன் நண்பனது வாயடைக்க முதலைகளுங்கூடக் கண்களிலே நீர்வற்ற வான வெளியிலுந்தன் சாவினை நீ தேடினாய்? (1998 ஒக்டோபரில் விமான விபத்தில் இறந்த சசி கிருஷ்ணமூர்த்தி பற்றிய சில இரங்கற் சொற்களின் அருவருப்பாக எழுதப்பட்டது) ---------------------------------------------------------------- பல்லி சந்தடி குறைந்த அத் தெருவழியாய் வழமைபோல அவன் நடந்து போனான் விரையும் ஒரு வாகனம் முன்பின் தெரியாத முகங்கள் சுவர்வழியே ஒரு பூச்சி மின்னலென வெட்டி மறைந்த ஒரு நாக்கு அவன் காணாமற் போகக் கண்டவரைக் கண்டவர் யார்? ---------------------------------------------------------------- காணாமற்போன வண்ணாத்துப்பூச்சிகள் என் குழந்தைப் பருவத்துத் துயிற்பொழுதுகளில் வண்ணத்துப்பூச்சிகள் ஏராளமாகச் சிறகடிப்பன என் அம்மா எனக்காகச் சேகரித்து வைத்த வண்ணத்துப்பூச்சிகள் என் அம்மாவுக்கு அம்மாவின் அம்மா சேமித்துவைத்தவை. என் குழந்தைகட்காக நான் அவற்றைச் சேமித்து வைத்தேன் என் குழந்தைகள் வெடிமணம் கமழும் இந்த இரவு வேளைகளில் அலருகின்றனர் என் குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சிகளைக் களவாடியது யார்? என் குழந்தைகளின் குழந்தைகளின் துயிற் பொழுதுகளுக்கு நானன்றி அவற்றை மீட்டுத்தரப்போவது யார்? ---------------------------------------------------------------- ஏழை அழுத கண்ணீர் பற்றி கூரிய வாளை ஒக்கும் (?) ஏழை அழுத கண்ணீர் வயல்களைச் சேறாய் உழுது சென்றது, பாலைவனத்தில் பயிர்கள் விளைத்தது. ஆலையிற் கரும்பைச் சாறுபிழிந்தது, தறிகளில் வழிந்து துணிகளை நெய்தது, ஆழக்கடலில் மீனை வளைத்தது, கடலின் நீரில் உப்பு விளைத்தது, மண்ணைக் குடைந்து பொன்னை எடுத்தது, உலைகளில் கொதித்து இரும்பை அடித்தது. ஏழை அழுத கண்ணீர் எசமானர்களின் உடலை வளர்த்தது, எசமானியரின் முகத்திற் சொலித்தது, பல்லாக்குகளிற் சுமந்தும் வந்தது தருமம் பற்றிய போதனை கேட்டது, நீதி யுரைக்கும் நூல்களைக்கண்டது சட்டங்களின் முன் பணிந்து நின்றது. ஏழை அழுத கண்ணீர் தோளிற் கிடந்த துணியை இழந்தது, வாயில் இருந்த உணவை மறந்தது, இரவற் கூரையை உறுதி செய்தது. ஏழைகள் கண்களை உலர்த்திப்பழகினர் கண்களிற் தேக்கி மறித்த கண்ணீர் எரியும் வயிற்றிற் கொதித்து எழுந்தது ஏழ்மையைப் போற்றும் நூல்களை எரித்தது, அழுத கண்ணீர் உறையிற் கிடந்தது, அழாத கண்ணீர் உலகை அசைத்தது. ---------------------------------------------------------------- பல ஆயிரம் வருடம் முன் தொடுத்த பாணம் எய்தவனிருக்க அம்பை நோவானேன் என்கிறீர் ஐயா, உண்மைதான். என்றாலும் இவ் அம்பு எப்போதோ எய்தது. இதன் முன்பு ஏழுமரம் துளைத்த பாணமெலாம் எம்மூலை நிற்குமோ நீர் சொல்லும். என் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன் தலை கொய்து பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டி சிரமறுத்து பரம்பரைக்குப் பரம்பரையாய் எல்லாத் தலையும் அறுத்தெறிந்த அம்பீது. அப்பன் தலைபறித்து ஆத்தாள் தலைபறித்து என் அண்ணன் என் அக்காள் என் தம்பி என் தங்கை எல்லார்க்கும் குறி வைத்து எகிறி வரும் இவ் அம்பு என் மீதும் பாய்கையிலே எய்தவனைத் தேடி எங்கெங்கே நான் போவேன்? என் தலையும் என் சுற்றம் எல்லாரது தலையும் எற்றி எறிந்து இனி வருகும் பரம்பரையும் இலக்காகும் முன்னாலே இவ் அம்பை நாங்கள் இப்போதே முறித்தெறிவோம். அதன் பின்பு அம்பை நாம் நோகோம் எய்தவனை நாம் நோகோம். ---------------------------------------------------------------- என்னுடைய தெய்வமும் உன்னுடைய தெய்வமும் என்னுடைய தெய்வம் ஊரெல்லையில் உட்கார்ந்திருக்கிறது கறுப்பாய்க் களிமண்ணாய்க் கண்களை முழித்தபடி கையிலே அரிவாளுடன் பற்கள் தெரியச் சிரிக்கிறது உன்னுடைய தெய்வமே உயர்ந்தது என்கிறாய் அது சிணனானால் என்ன மாலானால் என்ன அல்லாவோ அல்லை அந்த பரமபிதா எனில் என்ன எதுவுமே அல்லாத பரம்பொருள்தான் எனில் என்ன என்னுடைய தெய்வம் உன்னுடைய தெய்வத்தைவிட எனக்கு எட்டுந்தொலையிலுள்ளது உன்னுடைய தெய்வம் உன்னை மோட்சத்துக்கு வழிகாட்டும் என்னுடைய தெய்வம் நான் அயலூர் போய் வரும் வரையும் எனக்காக காவலிருக்கும் உனக்கு அது போதுமோ போதாதோ எனக்கு இது போதும் என் ஊரானைக் கேள் உன் தெய்வம் பற்றி நீ சொல்லும் ஒவ்வொரு கதைக்கும் தன் தெய்வம் பற்றி அவன் இன்னொரு கதை வைத்திருக்கிறான் ---------------------------------------------------------------- கிளி அழகான பறவை கிளி அழகான பறவை கிளியின் நிறம் பச்சை. கிளியின் அலகு சிவப்பு நிறம் கிளி..... நிலத்தில் சிவந்த வளைந்த மலர்கள் மேலே மரத்தின் நிறம் பச்சை முள்ளில்லாத மலையகத்து முள் முருக்கு. இதழ் விரிந்து வாடி உதிருமுன் காலை மலர்கையில் மலர்கள் விழுகின்றன. விழுந்த மலர் ஒன்றைக் கையில் எடுக்கிறேன் சிவந்த வளைந்த மலர் போன்ற தனது அலகினால் முழுதும் விரியுமுன் ஒவ்வொரு மலராகக் கொத்தி விழுத்துகிறது. முள் முருக்கம் இலைகளின் பசிய நிறத்தில் ஒரு கிளி. கிளி அழகான பறவை சேனையில் சோளப் பயிர்களிடையே கிளிகளை விரட்டக் கல் எறிகிறானே அந்தச் சிறுவனிடம் போய்ச் சொல்லிப்பாருங்கள். ---------------------------------------------------------------- கற்புப் பற்றிய ஒரு பாடம் இதுவரை கற்பின் மேன்மை பற்றிக் கற்றோம் இனிக் கற்புக் கரசியரிடம் சிறிது கேட்போம் சூரியனை எழாதே என்று மறித்தவளே சூரியன் எழாததால் உயிர் தப்பியவர் யார்? யமனோடு போராடி உயிரை மீட்டவளே மீட்டெடுத்த உயிர் எவருடையது? நீதி தவறிய மாநகரைச் சுட்டவளே அறுந்துபோன முலை யாருடையது? கணவனைப் பிரியாமற் காட்டுக்குப் போனவளே தீக்குளித்த பின்னாலும் சந்தேகம் தீர்ந்ததா? வாளியை அந்தரத்தில் விட்டு அவசரமாய் ஓடியவளே வாளியில் இருந்த நீர் யாருடைய தேவைக்கு? சோரம் போன கணவனைத் தாசி மனைக்கு சுமந்துபோய்க் கற்பின் மகிமையை பறைசாற்றும் மாதரே உங்கள் கற்பால் உங்களுக்கே பயனில்லாதபோது எங்களுக்கு எதற்கு? உடன்கட்டை ஏற எவனாவது ஆண்பிள்ளை ஆயத்தமா என்று கேளுங்கள் அவனது கற்பைப் பரீட்சிப்போம். ---------------------------------------------------------------- இன்னுமொரு காதலின் கதை மாலைப் பொழுதுகளின் கடற்கரை மணல் விளிம்பில் விழுந்து விழுந்து சிரித்த அலைகளுடன் பகிர்ந்த பகிடிகளையும் கவிழ்ந்து கிடந்த வள்ளங்களின் காவலுட் கைகளாற் பரிமாறிய ஸ்பரிச வார்த்தைகளையும் நீ திரும்பக் கேட்கவில்லை. முற்றவெளியில் எல்லோரது காதற் கதைகளையும் கேட்டுச் சுவைத்தபடி புற்றரை மீது ஊருகிற காற்றுக்குங் கேளாமற் கூறிய மௌன ரகசியங்களையும் வீதியோரமாக விரிந்து இற்கிற மரக்குடைக் கீழ் நின்று களவாகக் கொய்த முத்தங்களையும் நீ மீளக் கேட்கவில்லை, மௌனவேளைகளின் மனத் துடிப்புக்களையும் விலகிச்செல்லலின் வேதனை மிகுந்த இன்ப எதிர்பார்ப்புகளையும் நேரத்தின் நகர்வை வெறுத்துக்கழித்த வேளைகளின் பின் நேரத்தின் நகராமையை வெறுக்கும் ஏக்கங்களையும் நீ திரும்பக் கேட்கவில்லை, நிச்சயமான காதலின் நிச்சயமற்ற மறுநாளைப் பற்றிய ஆசை மிகுந்த அச்சங்களையும் நீ கேட்கவில்லை, ஒலியும் எழுத்தும் இல்லாது விழிகளும் இதழ்களும் வீதிகளின் இரைச்சலூடு பரிமாறும் மொழிகளையும் தற்செயலான மோதல் போன்று நிகழும் அரைகுறைத் தழுவல் களையும் வேலி மறைவுகளின் அரை நிமிடத்து அரவணைப்பின் பெருமூசுக்களையும் நீ கேட்கவில்லை தபாற்காரச் சிறுவனது வேர்வை நனைந்த சட்டைக்குள் மறைந்துவந்த கடிதங்களையும் நீ கேட்கவில்லை கொண்டுவந்து தருவதாக வாக்களித்த நிலவையும் வனவில்லையும் நீ கேட்கவில்லை. கொண்டுவர மறந்த கொய்யாப் பழங்களையும் மல்லிகைப் பூச்சரத்தையேனும் நீ நினைவூட்டிக் கேட்கவில்லை, இன்னும் மீறப்பட்ட உறுதி மொழிகளையும் நீ கேட்கவில்லை, நள்ளிரவு தாண்டியும் நித்திரையை மறித்த நினைவுகளை அந்த நினைவுகட்கும் எட்டாத இனிமையுடைய அதிகாலைக் கனவுகளை என்றாலும் கேட்பாய் என நினைத்தேன் நீ கேட்கவில்லை. இக்காதற்கதை முடிந்தது என்பதைக் கூற என் சொற்கள் தடுமாறிய வேளை, நான் வருமெனக் காத்திருந்த கண்ணீரோ சுடு சொற்களோ கெஞ்சுதலோ இல்லமல் என்னுடன் ஒரு வார்த்தையும் வாதாடாமல் எழுந்தாய், என்னுடைய காதல் பொய் என்பது உன் தீர்ப்பு. நான் இல்லை என்பதுபோல என்னைத் துளைத்துத் தூரச் சென்றது உன்பார்வை, எந்தக் குண்டாலும் அதைவிட நிச்சயமாய் என்னைக் கொன்றிருக்க முடியாது. ---------------------------------------------------------------- களவு பற்றிய ஒரு பாடம் களவு பெருகி வருகிறது கதவுகளைத் தாழிடுக, யன்னல்களைப் பூட்டுக, எப்போதும் விழிப்புடன் இருந்திடுக. இருந்தார்கள், ஆனாலும், களவு பெருகி வருகிறது. சந்தேக நபர்கள் சகலரையும் சிறையிடுக, மேலுஞ் சிறைகளைக் கட்டியெழுப்புக. கட்டினார்கள், அனாலும் களவு பெருகி வருகிறது. சிறைச்சாலைகளிற் கண்டிப்பை வலுப்படுத்துக, காவலை அதிகப்படுத்துக, காவல் நாய்களையும் சிறைக்காவலரையும் எச்சரிக்கை மணிகளையும் அவதான விளக்குகளையும் இருபத்து நான்கு மணிநேர விழிப்பில் வைத்தார்கள். ஆனாலும் களவு பெருகி வருகிறது. சிறைக் கைதிகளை ஒளிபுகாத வாகனங்களிலேற்றிக் கவனமாகவே கொண்டு திரிந்தார்கள். ஆனாலும் களவு பெருகி வருகிறது. வீட்டுச் சுவர்களில் எச்சரிக்கை மணிகளையும் அவதான விளக்குகளையும் பொருத்தி உயர்ந்த மதில்களின் உள்ளும் புறமும் தடித்த காவலாட்களையும் நெடிய நாய்களையும் காவலிருத்தி மின்கம்பி வேலிகட்கும் சுவர்கட்கும் பின்னால் மறிக்கப்பட்ட கடற்கரைகட்கும் தோட்டங்கட்கும் சன்னந்துளையாத இருண்ட கண்ணாடி பொருத்திய வண்டிகளில் ஆயுதந்தரித்த சாரதிகளுடன் போய் வந்தார்கள். ஆனாலுங் களவு பெருகி வருகிறது தேசம் இரண்டுவிதமான சிறைக்கூடங்களாயானது: சட்டத்துக்கு எட்டுந்தொலைவில் உள்ளோர்க்கு ஒன்று எட்டாத தொலைவில் உள்ளோர்க்கு ஒன்று அனாலுங் களவு பெருகிவருகிறது. ---------------------------------------------------------------- அமெரிக்க தேசத்துக்காக மரித்தோர் ஏ, அமெரிக்க தேசமே உனக்காக மரித்தோரின் பட்டியல் மதில் நீளத்துக்கு இருக்கிறது ஆயிரம் மீற்றர் உயரத்திலிருந்து உயிருக்கும் அஞ்சாமல் குண்டு வீசும் வீரத்தை மெச்சியவர்கள் சன்னந்துளையாத கண்ணாடிக்கதவுகளின் பின்னிருந்து சொன்னார்கள்: இந்த விமானங்கள் பாதுகாப்பானவை. உயிரிழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை. ஆனாலும் விமான வீரர்களின் பேர்களும் அந்த மதில் நீளப் பட்டியலில் உள்ளது மரித்தோர் பட்டியலை முழுமைப்படுத்த வேண்டுகிறாய் தாம் ஏன் மரித்தோம் என்று அறியாது, அமெரிக்க தேசமே, உனக்காக கொல்லப்பட்ட லட்சக்கணக்கான வியட்நாமியர்களின் பேர்கள் எந்த மதிலிற் பொறிக்கப்பட்டுள்ளன? நீ இருப்பதையே அறியாத அரை வயிற்றுக் கறுப்பர்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு இன்னும் எத்தனை போர்கள்? எத்துணை நீளத்துக்கு மதில்கள்? ---------------------------------------------------------------- பினோஷேக்காக ஒரு கவிதை அவர்களது லாபத்தில் ஒரு பகுதி காணமற்போனபோது சனனாயகம் பற்றி நிறையவே பேசப்பட்டது. சனனாயகத்தைத் துப்பாக்கி முனைகள் தாங்கி நின்றபோது மனித உரிமைகள் ஒவ்வொன்றாகக் காணாமற் போயின அதன்பி காணாமற் போன உரிமைகள் பற்றிக் குரல்கள் எழுந்தன. குரல்கள் எழும் போதே குரல் கொடுத்தோர் ஒவ்வொருவரகக் காணாமல் போயினர் அதன்பின் காணாமற் போனோர் பற்றிய கேள்விகள் எழுந்தன. கேள்விகள் எழும்போதே கேட்கப்பட்டோர் ஒவ்வொருவராக காணாமற் போயினர். கேள்விகள் மட்டும் புதை குழிகட்கு வழிகாட்டிவிட்டு மௌனமாயின அதன்பின் மண் மேடுகள் மீது புல் முளைத்துப் புதைகுழிகளும் ஒவ்வொன்றாகக் காணாமற்போயின. கேள்விகளும் காலத்தினுட் கரைந்து காணாமற்போயின என்று காலடியை மெல்ல வெளியில் வைத்தான். மௌனங் கலைத்து ஒரு கேள்வி காலை இடறியது; இன்னொன்று கைகளைப் பிணைத்தது; வேறொன்று சிறைக்கூடமாக விரிந்தது. கேள்விகளாற் சூழப்பட்ட அவனை மீட்க அவர்கள் வரவில்லை. அவர்களது லாபம் குறைவின்றிக் கிடைக்கிறது. அவன் போனால் என்ன லாபம் குறைவுபடும் வேளை அவர்கட்காக புதிய குழிகளை வெட்ட இன்னொரு கொலைகாரன்..... ---------------------------------------------------------------- புதிய உலக அமைப்பும் அமைதியும் அவர்கள் அமைதியை வேண்டுகின்றனர். தங்கள் மூதாதையர் செய்த தவறுகளைத் தவறாது கண்டிக்கின்றனர். தங்கள் மூதாதையர் கால் வைத்த இட்மெல்லாம் சிந்தப்பட்ட குருதியையிட்டும் திருடப்பட்ட பொருளையிட்டும் ப்றிக்கப்பட்ட மண்ணையிட்டும் மிகவும் வருந்துகின்றனர். தங்கள் மூதாதையர் வேரறுத்தோர் தசைகளிலே விளைந்த கோப்பித்தோட்டங்களையும் தேயிலைக்காடுகளையும் கரும்பு வயல்களையும் தங்கச் சுரங்கங்களையும் பற்றி மிகவும் வெட்கப்படுகின்றனர் நீங்கள் நடந்தவற்றை மறந்து தமது நண்பர்களாக இருப்பதைஅவர்கள் மிகவும் வேண்டுகின்றனர் அத்தோடு உங்கள் வாழ்வு மிகவும் சீரழிந்தும் வறுமைப்பட்டும் உங்கள் பண்பாடு சிதைக்கப்பட்டும் நீங்கள் கடவுளரால் நிராகரிக்கப்பட்டும் இருப்பதை அவர்கள் நன்றாக உணர்கின்றனர். உங்கள் மண்ணின் மீதும் உழைப்பின் மீதும் உங்கள் ஆளுமையை வலியுறுத்தி அவர்கள் அதிகாரத்தை வலியுறுத்தி அவர்களது அதிகாரத்தை மறுதலித்துக் கிளர்ந்து போராடிக் கலகஞ்செய்து உலக அமைதியை நீங்கள் குலைக்காதவாறு அவர்கள் உங்கள் மீது போர் தொடுக்கும் போதும் ஒன்றை மட்டும் மறவாதீர்: உலகம் உள்ளபடியே உள்ளவரையில் அவர்கள் அமைதியையே வேண்டுகின்றனர். ---------------------------------------------------------------- அயல் உல்லாசப் பிரயாணிகட்கான வரவேற்பு விளம்பரம் வருக நல் விருந்தினரே வருக. நும் வரவு நலன் மிகவென இந்நாடு தன் விமான நிலையத்தில் நுமது பாதங்கள் நோவாமற் கம்பளம் விரிக்கிறது. கை கூப்பி வரவேற்கிறது. வெல்கம், ஆயுபோவன், வணக்கம், நும் கழுத்தில் மாலைகளைச் சூட்டி மகிழ்வித்துச், சொகுசான வாகனத்திலேற்றி நும்மை இந்நாடு தன் குளிரூட்டப்பட்ட ஹோட்டல்கட்குக் கொண்டு செல்கிறது. நீவிர் மனங்கனிந்து சிந்துகிற சில்லறைகட்காய்ப் பல்லிளிக்கும் இந்நாடு நும் பெட்டிகளைச் சுமக்கிறது. நீச்சற் குளத்தருகே நீளத்துவாலைகளுடன் நுமக்காகக் காவலிருக்கிறது. இந்நாடு தன் கடலோர மணற்பரப்புகளிற் தன் பிள்ளைகளின் கால் படாது மறித்து நுமக்காக ஒதுக்குகிறது. நுமக்கு விஸ்கியீம் கோக்கும் அலுத்தால் மரமேறிச் செவ்விளநீர் பிடுங்குகிறது. நுமக்குக் களிப்பூட்டத் தன் மாலைப்பொழுதுகளில் ஒப்பனை செய்து வேடம் பூண்டு கூத்துக்கள் ஆடுகிறது. நும் படுக்கையறைகளில் அம்மணமாய்க் காத்திருக்கிறது. அவசியமானால் இந்நாடு தன் குழந்தைகளையும் தருவதற்குச் சித்தமாய் இருக்கிறது. இவ்விடுமுறை கழிந்து நீவிர் சென்றாலும் விருந்தினரே, இன்னொருகால் வருக. நும்மிடம் இந்நாட்டை அடகுவைத்த எசமானரின் எசமானர்காள், இந்நாட்டின் அறிதுயில் கலையும்வரை வருக. ---------------------------------------------------------------- பணங்காய்ச்சி மரம் பணங்காய்ச்சி மரமேறிக் காய்பிடுங்கவும் மரத்தை உலுப்பிக் காய் பொறுக்கவும் பணங்காய்ச்சி மரமிருக்கும் இடந்தேடி அவர்கள் எல்லோரும் தான் போனார்கள் ஆண்களும் போனார்கள். பெண்களும் போனார்கள். வலியவர்களும் மெலியவர்களும் போனார்கள். கற்றவர்களும் கல்லாதவர்களும் நல்லவர்களும் அல்லாதவர்களும் உள்ளவர்களும் இல்லாதவர்களுமாக அவர்கள் எல்லோரும் போனார்கள். பணங்காய்ச்சிமரம் டொலர், டொயிஷ்மார்க், யென், பவுண் என வண்ண வணமாய்க் காய்த்துத்தள்ளியது பணங்காய்ச்சி மரத்தைநாடிக் கிராமத்திலிருந்து பட்டணத்துக்குப் போனார்கள். பட்டணத்திலிருந்து பெருநகரத்துக்கும் நாட்டைவிட்டு நாட்டுக்கும் போனார்கள். நடந்தும் வண்டில்களேறி நகர்ந்தும் போனார்கள். கடலிலுங் காற்றிலும் மிதந்தும் போனார்கள். குதிரைகளின் முதுகில் அமர்ந்தும் வாகனங்களின் அடியிற் பதுங்கிக்கிடந்தும் போனார்கள். மின்சாரவேலிகளைத் தாண்டிக் குதித்தும் பாதாளச் சாக்கடை வழியே குனிந்தும் போனார்கள். எப்படியெப்படிப் போகலாமோ அப்படியப்படியெல்லாம் பணங்காய்ச்சி மரத்தின் திசை நோக்கி அவர்கள் எல்லாரும் போனார்கள். ஊரைவிட்டும் உறவைவிட்டும் போவதை எண்ணி அழுதுகொண்டு போனார்கள். சிரித்துக்கொண்டு போனார்கள். சஞ்சலத்துடன் போனார்கள். சந்தேகங்களுன், நிச்சயத்துடன், நம்பிக்கைகளுடன் போனார்கள். போன எல்லோருமே எதிர்பார்ப்புகளுடதான் போனார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பூசைகள், தோத்திரங்கள், பணிவிடைகள் எல்லாமே செய்தார்கள். பணங்காய்ச்சி மரம் கொஞ்சம் உண்ணவும் உடுக்கவு கொடுத்தது. தங்குவதற்கு நிழலுங் கொடுத்தது. விளையாடவும் பொழுதைப்போக்கவும் வழிகளைக்கொடுத்தது. பிடுங்கியும் பொறுக்கியும் எடுத்த காய்களை விலையாக வாங்கிக்கொண்டது. அவர்களது சுதந்திரத்தைக் களவாடிக்கொண்டது. பணங்காய்ச்சி மரத்துக்குச் சொந்த மண்ணென்று எதுவுமில்லை என்றும் அதன் வேர்கள் உலகெங்கும் பரவி எல்லா மண்களதும் வளங்களை உறுஞ்சிக்கொள்கிறது என்றும் அறியமாட்டாதவர்கள் அறிந்து சொன்னவர்மீது எரிந்து சினந்தார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பணிவிடை செய்வதே தங்களது பிறவிப்பயன் என்று உரத்துக் கூறினார்கள். பணங்காய்ச்சி மரத்தை நோக்கிய தங்களது பயணம் வீண்போகவில்லை என்று மெய்யாகவே அவர்கள் நம்புகிறார்கள். இன்னமும் பணங்காய்ச்சி மரத்தை நோக்கிப் போகிறவர்களை எல்லோரும்தான் வரவேற்கிறார்கள். எல்லோருந்தான் வழிமறிக்கிறார்கள். ---------------------------------------------------------------- துருவன் என் தந்தை மடியில் நான் அமர்ந்த காட்சி எனது மாற்றாந்தாயின் மனதில் பொறாமைத்தீயாக மூண்டெழுந்தது. நான் வேகினேன். என் புண்களை ஆற்றவோ வெம்பி அழுத என் புண்களைத் துடைக்கவோ இயலாது என் தந்தையைத் தடுத்தது அவரது கோழத்தனம். கொடுமையைத் தாங்கிய என்னாற் கோழைத்தனத்தைத் தாங்க இயலவில்லை. நாடு நீங்கிக் காடேகினேன். முன் கண்டிராத இன்னல்கள், முன் அறிந்திராத இடர்கள், எண்ண முனையாத துன்பங்கள், என் பயணம் ஒரு நீண்ட நடைத்தவமாகத் தொடர்ந்தது. என் முகத்தில் அறைந்த மணற் புயல்களையும் என்னை முழுக்கி எழுப்பிய பேரலைகளையும் கால்களைத் தீய்த்த சுடுமணல் வெளிகளையும் வழிமறித்த மாமலைகளையும் சூறைக்காற்றையும் கடல் ஆழத்தையும் சதுப்பு நிலங்களையும் தாண்டினேன். புகலிடம் ஒன்றே இலக்காக நெடுந்தொலைவுகளைக் கடந்தேன். என் கடுந்தவம் வென்றது. என் தவம் எனக்கு இரங்கியது. வடபுலத்து வான வெளியிலே எனக்காக ஒரு இடத்தை ஒதுக்கிய தேவனே, எனக்கு நிலையாக ஒரு நிழல் தந்த தேவனே, எல்லாமுன் முன்னமே அறிவாயா? அவ்வாறெனின் ஏன் என்னிடம் நீ கூறவில்லை? தேவனே நீ தந்த இடத்தில் நான் ஒரு பெரும் கற்குவியலிடையே இன்னொரு கல். ஒரு கோடி மின்மினிகளிடையே இன்னொரு மின்மினி. எண்ணி மாளாத தாரகைகளிடையே இன்னொரு தாரகை. என் தனிமையை நீ அறிவாயா? ஒன்றோடொன்று ஒட்ட இயலாத வைரங்களூடு ஒளியைப் பாய்ச்சி வர்ணச் சிதறல்களால் வேடிக்கை காட்டுகிற தேவனே வைரக்கல்லின் தன்மையை நீ அறிவாயா? அதன் வேதனையை நீ அறிவாயா? கடுமையை மீறிய அதன் கண்ணீரை நீ அறிவாயா? ஓய்வின்றீ இயங்குகிற எந்திரத்தின் பற் சக்கரங்களின் உயிரற்ற இயக்கத்தை நீ அறிவாயா? இயந்திரப் பேரொலியினிடையே அவற்றின் அழுகுரலை நீ அறிவாயா? தீயினின்றும் தப்பி வந்த என்னை இந்தத் துருவத்துக் கடுங்குளிர் உறையச் செய்கிறது. சுடு சொற்களென எனைச் சூழச் சொரியும் எரிகற்களைக்கண்டு என் மனம் மரத்துப் போயிற்ற். என் மண்ணில் ஒரு சொல் மூட்டக்கூடிய நெருப்பின் வெப்பத்தை இந்த வடபுலத்து வானத்தின் நெருப்புக் கோளங்களால் ஏன் மூட்ட இயலவில்லை? என்னைச் சூழும் இக்குளிர் என்னுள்ளும் குடிகொண்டுவிட்டதா? நான் காண்பதெல்லாமென்ன? இதயங்கல்லான பனிப்பாறைகளையும் தங்கள் கடுமையைப் பனிப்போர்வையால் மூடிமறைக்கும் கற்குன்றுகளையும் வடபுலத்து மண்ணுடன் என் உறவை மறிக்கும் பனிப்படலத்தின் எல்லையற்ற விரிவையும் தவிர என் கண்களுக்குத் தெரிவதென்ன? வட துருவ வானிலே வண்ண ஒளிகளாய் மாயங்காட்டும் தேவனே, சொல்! என்றுமே எனதாக முடியாத இந்த வடபுலத்து வானவெளி நடுவே என்னை ஏன் கொண்டுவந்து வைத்தாய்? கணினிகளின் கட்டளைக்கிசைய ஒளிவிடும் உயிரும் உறவுமற்ற வண்ண விளக்குகளின் நடுவே நான் காற்றில் தடுமாறும் ஒரு மெழுகுதிரியின் சுடருக்காக ஏங்குகிறேன். சாவுக்கும் வாழ்வுக்குமிடையே தடுமாறும் ஒரு அகல்விளக்குக்காக ஏங்குகிறேன். நடுங்குகிற ஒரு குத்துவிளக்கு சுடருக்காக ஏங்குகிறேன். எரிகின்ற எனது தேசத்துக்காக ஏங்குகிறேன். தன் மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டு களிமண் சட்டியில் வைத்துப் பராமரிக்கப்படும் காட்டுச்செடிபோல என்தாய் மண்ணுக்காக ஏங்குகிறேன் என் சகோதரனே, என் இன்னொரு தாய் மகனே நான் சொல்வதைக்கேள். அகதி மின்னலின் ஒளியைக்கண்டு பொறாமைப்படாதே. அந்நிய வானில் அகதி நட்சத்திரமும் தடுமாறிப்புரளும் எரிகின்ற துண்டமும் ஒன்றேதான், நான் ஒளிரவில்லை, எரிகின்றேன். என் மண்ணிலிருந்து என்னை விரட்டிய தீ இன்னமும் என்னுள் எரிகிறது. அது உன்னையும் எரிப்பதை நீ அறிவாயா? நீ அதை அறிவாயெனின் யார் அதை உனக்கு எடுத்துரைப்பார்? பொத்திய கைகள் மூட்டிய பொறாமைத்தீயைப் பொத்தி வைக்கவும் முடியாது, பொத்தி அணைக்கவும் முடியாது. மூட்டிய கைகளையே சுட்டெரிக்கும் தீ அது. இன்று எரிகின்ற மண் தனியே என் மண்ணுமல்ல, உன் மண்ணுமல்ல,. இது எங்கள் மண். இதன் தீயை எங்களால் அன்றி எவரால் அணைக்க முடியும்? எம்மண்ணை எங்களாலன்றி எவரால் மீட்க முடியும்? என் சகோதரனே, சென்றதை வெறுமனே மறந்துவிடுவது தீர்வல்ல, தப்பி ஓடுவது. தவறுகளை அறிவது/ தவறுகளினின்று கற்பது, தவறுகளை திருத்துவது, தவறுகள் மீளநேராமல் தவிர்ப்பது. இதுவே மீட்சிக்கான பாதை, கல்லும் முள்ளும் நிறைந்த போராட்டப்பாதை. இந்தமண்ணை இந்த தீயினின்று உனக்காகவும் எனக்காகவும் மீட்டாக வேண்டும். அதைவிட மேலாக எங்கள் எதிர்காலத்தின் குழந்தைகட்காக மீட்டாக வேண்டும். ஒரு புதிய தொடக்கத்திற்கான வேளை நெருங்குகிறது. கனல் நெருப்பையும் கடுங்குளிரையும் விட அதிகமாகக் காலம் நம்மை நெருக்குகிறது. சகோதரனே, அன்று கைகோத்து விளையாடிய நாங்கள் ஒன்றாகக் கைகோத்து நடக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. உன் அழைப்புக்காக என் செவிகள் இன்னும் அகலத் திறந்துள்ளன. வடபுலத்து வானத்தின் எரிகற்களின் ஓயாத இரைச்சலையும் ஊடுருவி உன் சொற்கள் எழட்டும். முதலில் மெலிதாக எழுந்தாலும் மீள மீள உச்சரிக்க அவை உரத்து எழுந்து வான் முகட்டில் எதிரொலித்து வடபுலத்தை அடையட்டும். எரிகின்ற எமது மண்ணின் ஒவ்வொரு சாம்பற் துளியினின்றும் உயிரைஒ மீள உருவாக்கும் வித்தையை ஒன்றாகப் பயில்வோம், வா! ---------------------------------------------------------------- நாராய் நாராய்.... நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்து பயன்மிக அறிந்த பனை செறி நாடார் வழிப சென்றே பலதிசை பரந்தார் வருகுவ தென்நாள் அறிவையோ நாராய் திரைகட லோடித் தம்முயிர் பேணத் திரிந்தவர் தமக்கோ எங்கணும் அவலம் கரியவர் அயலார் என வசை கேட்போர் கவலைகள் நீயும் உணர்வையோ நாராய் அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி அந்நிய மண்ணில் அண்டிக்கிடந்து மிகநலி மாந்தர் தம்நகர் மீளும் வகையென ஒன்றேன் மொழிவையோ நாராய் பெருங்குளிர் வருமும் கடல்பல தாண்டிப் புலம்பெயர் புள்நீ கிளையுடன் மீண்டும் வருகுவை நின்மண் தவறுதல் இன்றிப் பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நாராய் நினக்கோ யாதும் ஊரே நாராய் நின் இனம் யாவரும் கேளிர் பாராய் எங்கள் மனிதரின் நிலையை நாராய் நமக்கோர் நல்வழி கூறாய். ---------------------------------------------------------------- மாநகரும் மானுடரும் ஒவ்வொன்றும் விலக்கின்றி மற்ற ஒவ்வொன்றும் போல வளர்வதன்றி வேறு வழியின்றி மாநகரம் வளர்கிறது. அதன் விளிம்பு அயல்களைக் கரைத்துப் புரள்கிறது. அதன் மையம் வானை விழுங்கி உயர்கிறது மாநகரம் தனது முகத்தை மொழியைப் பண்பாட்டை அடையாளத்தை இழக்கிறது வருவதையன்றி வேறு வழியின்றி மனிதர் மாநகருள் வருகின்றனர். மாநகரின் மையத்தின் கோபுரங்களுட் புதைகின்றனர் அதன் விரையும் விளிம்பினுள் கரைகின்றனர் மாநகரின் முகத்தை மொழியைப் பண்பாட்டை அடையாளத்தை தமதாக்கும் முயற்சியில் தமது நாட்களை இழக்கின்றனர் விலக்கின்றி மனிதர் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரும் போல மாநகரம் போல தமது...... ---------------------------------------------------------------- அந்திமம் வேனிற்கால மாலைப்பொழுதுகள் என்றுமே வீண்போனதில்லை. வானத்தின் அந்திவர்ணங்களை இலைகளின் அந்திக்காலம் வாங்கிக்கொண்டது. தொடர்வன மரணங்கள். சருகுகளை அள்ளி அலுத்த பூங்காவின் பராமரிப்பாளர் ஏக்கத்துடன் விழாத இலைகளை எண்ண அண்ணாருகிறார் அரச மருத்துவமனை முகாமையாளர் (செலவுகள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும்) சாக மறுக்கின்ற கிழவர்களை எண்ணுகிறார் ---------------------------------------------------------------- தெரு மாநகரின் முகில்கள் விரைந்தோடுகிற குறுகலான வானவீதியைக் கடக்க நிலவுக்கு நெடுநேரமெடுத்தது: இருமருங்குமிருந்த கொங்கிறீற்றுச் சுவர்களின் ஒளிச்சதுரங்களால் உபயோகமில்லை. சற்றுமுன்னர் தெருக்கரையில் நின்ற தாத்தாவுக்கும் வெகுநேரம் எடுத்தது. ---------------------------------------------------------------- மந்திப்பு எனக்கு மந்திப்பாக இருந்தது மக்நீசியா சாப்பிட்டுப் படுத்தேன் எனக்குள்ளிருந்து பாலாறு பெருகி ஓடி வானவீதியில் நட்சத்திரங்களை முழுகடித்தது கனவுகண்டு விழித்தேன் ஆனாலும் மலம் மட்டும் கழியவில்லை தொடர்ந்தும் மந்திப்பாக இருந்தது ஆமணக்கெண்ணை சாப்பிட்டுப்படுத்தேன் எனக்குள்ளிருந்து எண்ணைக்கிணறு பெருகி வழிந்து கொதித்து பூமி தீப்பற்றி எரிந்தது கனவு கலைந்து எழுந்தேன் இன்னமும் மந்திப்பாகவே இருந்தது கடுக்காய் சாப்பிட்டுப் படுத்தேன் எனக்குள்ளிருந்து மரங்கள் வளர்ந்து மேகங்களைப்பிடித்து சூரிய வெளிச்சத்தை மறித்தன கனவுக்குள்ளிருந்து எழுந்தேன் மந்திப்புத் தொடர்ந்தது சவர்க்காரத் திரி வைத்துப் படுத்தேன் எனக்குள்ளிருந்து திராவக ஊற்று பொங்கிச் சாக்கடை வழியே ஓடி கடல்களில் மீன்களைச் சாகடித்தது கனவை நீங்கி எழுந்தேன் மந்திப்பு மட்டும் மாளவில்லை மருந்தெடுப்பதில்லை என்று முடிவு செய்தேன் தற்கொலை முயற்சி என்று என்னைப்பிடித்துச்சென்று மருத்துவமனையில் அடைத்தார்கள் மலக்குவியல்களால் சூழப்பட்டேன் கனவல்ல ஆனாலும் மலம் மட்டும் கழியவில்லை. ---------------------------------------------------------------- பச்சோந்தி: ஒருபுறம் எங்களது உறவுக்கு இவ்வேலி சாட்சி நண்பகலின் சுடு வெயிலில் நிகழும் எங்கள் சந்திப்பில் ஒரு சொல்லும் பரிமாறாது, எந்தனை நீ உந்தனை நான் நோக்கி நிற்கும் பொன்னான பொழுதை வெறும் மோனம் ஆளும். நின்றபடி பார்த்து அலுத்த படலை சோரும். சின்ன ஒரு முறுவலும் நீ செய்ததில்லை என்றாலும் என்கதை நீ அறிவாய் போல உன் தலையைச் சாய்த்து ஒருகால் ஒயிலாய் வெட்டி ஒன்றுக்கும் சைகை இது இல்லை என்று கண்சிமிட்ட உனக்கியலும் அந்த ஆற்றல் என்னிடத்து இல்லை. நீ என்னை வென்றாய். உன் மொழியை விளங்க எனக்கு ஆற்றல் இல்லை, என் மொழியை நீ அறியாய். என்ன செய்வேன்? எம்மிடையே பொது மொழியென்று ஒன்றிருந்தால் இம்மோனச்சுவர் என்றோ தகர்ந்திருக்கும். ஒருவேளை நெடுநேரம் கதைகள் பேசி நெருங்கியதோர் நட்புறவும் மலர்ந்திருக்கும். மறுபுறத்து யோசித்துப் பார்த்தால் எங்கள் உரையாடல் வரையின்றி நீண்டு ஈற்றில் ஆதிமுதற் குரங்கின் அடிவந்த எங்கள் மூதாதையர் பெருமை இன்னும் முன்னோர் சாதிமத மேம்பாடும் அன்னார் அன்று பாதி உலகு ஆண்டிருந்த கதை நான் பேச, இம்மண்ணில் குரங்கினங்கள் தோன்ற முன்பே உன் முன்னோர் உலகமெலாம் ஆண்டார் என்றும் அன்னாரின் உடல் வலிமை உயரம் வேகம் என்றெல்லாம் நீ சொல்ல நான் மறுக்க நம்மிடையே வீண்கதைகள் நீண்டு பின்னர் நம்முறவு சீரழிந்து அழிவுபட்டு மாளுதற்கோ நம்மிடையே கதைகள்? வேண்டாம் மூளுகிற பகை எமக்குள் என்றும் வேண்டாம். நாளும் நடு வெயிலில் நம் உறவு நட்பாய் வாழட்டும் நெடுங்காலம் மோனமாக ---------------------------------------------------------------- பச்சோந்தி: மறுபுறம் எங்களது உறவுக் கிவ்வேலி சாட்சி நண்பகலின் சுடு வெயிலில் நிகழும் எங்கள் சந்திப்பில் ஒரு சொல்லும் பரிமாறாது எந்தனை நீ உந்தனை நான் நோக்கி நிற்கும் பொன்னான பொழுதை வெறும் மோனம் ஆளும் நின்றபடி பார்த்தலுத்த படலை சோரும். சின்ன ஒரு முறுவலும் நீ செய்ததில்லை என்றாலும் என்கதை நீ அறிவாய் போல உன் தலையைச் சாய்த்தொருகால் ஒயிலாய் வெட்டி ஒன்றுக்கும் சைகை இது இல்லை என்று கண்சிமிட்ட உனக்கியலும் அந்த ஆற்றல் என்னிடத்து இல்லை நீ என்னை வென்றாய் உன் மொழியை விளங்க எனக்கு ஆற்றல் இல்லை என் மொழியை நீ அறியாய் என்ன செய்வேன் எம்மிடையே பொது மொழியென்றொன்றிருந்தால் இம்மோனச்சுவர் என்றோ தகர்ந்திருக்கும் ஒருவேளை நெடுநேரம் கதைகள் பேசி நெருங்கியதோர் நட்புறவும் மலர்ந்திருக்கும் மறுபுறத்து யோசித்துப் பார்த்தால் எங்கள் உரையாடல் வரையின்றி நீண்டு ஈற்றில் ஆதிமுதற் குரங்கினடிவந்த எங்கள் மூதாதையர் பெருமை இன்னும் முன்னோர் சாதிமத மேம்பாடும் அன்னார் அன்று பாதி உலகாண்டிருந்த கதை நான் பேச இம்மண்ணில் குரங்கினங்கள் தோன்ற முன்பே உன் முன்னோர் உலகமெலாம் ஆண்டார் என்றும் அன்னாரின் உடல் வலிமை உயரம் வேகம் என்றெல்லாம் நீ சொல்ல நான் மறுக்க நம்மிடையே வீண்கதைகள் நீண்டு பின்னர் நம்முறவு சீரழிந்து அழிவுபட்டு மாளுதற்கோ நம்மிடையே கதைகள் வேண்டாம் மூளுகிற பகை எமக்குள் என்றும் வேண்டாம் நாளும் நடு வெயிலில் நம் உறவு நட்பாய் வாழட்டும் நெடுங்காலம் மோனமாக ---------------------------------------------------------------- நிலவு புகையிரத மேடை, பேர்ப்பலகை மின்விளக்குகள் எல்லாமே என்னை விலகிச் சென்றுவிட்டன. மரங்களும் கம்பங்களும் தலைதெறிக்க ஓடுகின்றன. யன்னலூடு தலை நீட்டும் அந்த நிலவுத்துண்டு மட்டும் என்னைத் தொடர்ந்து வருகிறது. அம்மாவின் நினைவுத்துண்டு போல. ---------------------------------------------------------------- கடிகாரம் நேரத்தைக் கணக்கெடுத்துக் காலத்தை ஆள்வதற்குக் கண்டறிந்த தோர் கருவி நிழல் பதித்து மணல் வழித்து நாடி துடிக்கப் பல்முளைத்த சில்லுருட்டிக் கைகாட்டி மணியொலிக்கக் கற்றதொரு கடிகாரம் கூண்டுகளிற் கூவிக் கோபுரத்திற் கொலுவிருந்து சங்கிலியிற் கோத்துச் சட்டையிலும் தொற்றிக் கைகளிலும் ஏறியபி கையிழந்த கடிகாரம் எண்சிமிட்டப் பழகியது பாடப்பழகியது பேசப்பழகியது காணுந்திசை தோறும் கால்பதிக்கும் இடந்தோறும் கடிகாரம் கடிகாரம் வேலைக்குப் போவென்று ஏவும் துயில் கலைக்கும் ஓய்வாக இருக்குங்கால் எழுந்திரென எனைவிரட்டும் ஓடென்று சொல்லும் நேரம் அளந்து கணக்கெடுத்து விரும்பியதைச் செய்வதற்கு வேளையெதும் இல்லையெனத் தீர்ப்பு வழங்கி எந்தன் காலத்தை ஆள்வதற்கோ கண்டறிந்தார் கடிகாரம் |