கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்  
 

எம்.ஏ. நுஃமான், அ.யேசுராசா

 

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்

எம்.ஏ. நுஃமான், அ.யேசுராசா

-------------------------------------

பதினொரு
ஈழத்துக் கவிஞர்கள்



தொகுப்பு
எம்.ஏ. நுஃமான்
அ. யேசுராசா



க்ரியா

+++++++++++++++++++++++++

PATHINORU EELATHUK KAVIGNARKAL
A Collection of Modern Tamil Poems
Edited by: M.A. Nuhman, A.Jesurajah
Copyright: Poets



First Edition: August 1984
O
Published by: Cre-A
268 Royapettah High Road Madras 600 014
O
Printed at Annam Printers Madras 600 014
Jacket Photograph and
Design by: N. Vasanthakumar
Jacket printed at Sudarsan Graphics Madras 600 017
O
Price: Rs. 20.00

+++++++++++++++++++++++++

ஓர் அறிமுகம்

மஹாகவி

கண்களும் கால்களும்
அகலிகை
தேரும் திங்களும்
இதயகீதம்
மீனவர் பாடல்

முருகையன்

அகிலத்தின் மையங்கள்
கூற்றுவன் கொலு
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு
எங்கள் துணையே இனிய உலகமே...
வேலியும் காவலும்

நீலாவணன்

போகின்றேன் என்றோ சொன்னாய்
துயில்
பனிப்பாலை
பாவம் வாத்தியார்
ஓ....வண்டிக்காரா!

மு.பொன்னம்பலம்

மதிப்பீடு
மின்னல்
சுய ஆட்சி
தரிசனம்
அகவெளி சமிக்ஞைகள்

எம்.ஏ.நுஃமான்

வைகறை நிலவு
உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்...
புகைவண்டிக்காகக் காத்திருக்கையில்
இலைக்கறிக்காரி
தாத்தாமாரும் பேரர்களும்

சண்முகம் சிவலிங்கம்

சந்தியிலே நிற்கிறேன்
ஆக்காண்டி
மறுதலை
வெளியார் வருகை
நீர் வளையங்கள்

தா.இராமலிங்கம்

ஆசைக்குச் சாதியில்லை
தூக்கட்டும்! தூக்கட்டும்!
எதிர்காலம்
சீவியம்
நான் யார்?

சி.சிவசேகரம்

இலையுதிர்கால அரசியல் நினைவுகள்
சித்திரையில் மாவலி
எங்கள் இயக்கம்
பயணம்
ஒரு இரவு

அ. யேசுராசா

அறியப்படாதவர்கள் நினைவாக
சங்கம்புழைக்கும் மாயாகோவ்ஸ்கிக்கும்
உன்னுடையவும் கதி
புதிய சப்பாத்தின் கீழ்
சூழலின் யதார்த்தம்

வ.ஐ.ச. ஜெயபாலன்

இளவேனிலும் உழவனும்
நம்பிக்கை
பாலி ஆறு நகர்கிறது
கடற்புறம்
கன்னியாகுமரியில் ஒரு கவிதைப்பொழுது

சேரன்

இரு காலைகளும் ஒரு பின்னிரவும்
கானல் வரி
மயான காண்டம்
காற்றில் எழுதுதல்

கவிஞர்கள் பற்றிய குறிப்புகள்

-----------------------------------------------

ஓர் அறிமுகம்

ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் சில முக்கியமான போக்குகளைப் பிரதிபலிக்கும் பதினொரு கவிஞர்களின் 55 கவிதைகளக் கொண்டது இத்தொகுதி. 1960 முதல் இன்றுவரையுள்ள சுமார் இருபது ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. மஹாகவி முதல் சேரன் (கவியரசன்) வரை ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. அவ்வகையில் இருபது ஆண்டுகளையும் ஐந்து தலைமுறையும் இத்தொகுப்பு உள்ளடக்குகிறது எனலாம்.

ஈழத்திலே இன்று நூற்றுக்கணக்கானே'ர் கவிதை எழுதிவருகின்றனர். அவர்கள் எல்லோரையும் பிரதிபலிக்கும் கவிதைத் தொகுதி ஒன்றைத் தருவது சாத்தியமான காரியம் அல்ல. அது எமது நோக்கமும் அல்ல. ஏ.அல்வறஸ் என்பவர் தொகுத்து பதினாலு பதினாலு பதிப்புகள் கண்ட புதிய கவிதை (The New Poetry*) என்னும் ஆங்கிலக் கவிதைத் தொகுதிக்கு அவர் எழுதிய முன்னுரையில் வரும் ஒரு கூற்றை அடியொற்றிச் சொல்வதானால் இது ஒரு தனிப்பட்ட தொகுப்பு (This is a personal anthology) எனலாம். இன்று ஈழத்திலே எழுதும் எல்லாவகையான கவிஞர்களையும் - எழுதப்படும் எல்லாவகையான கவிதைகளையும் இத்தொகுப்பு பிரதிபலிக்கின்றது என்று நாம் கூற மாட்டோம். மிகப் பிரபலமான ஈழத்துக் கவிஞர்கள் பலர் இத் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. எமது ரசனைக்கேற்க இன்றைய ஈழத்துக் கவிதையின் வெவ்வேறு கலைமுறைகளைப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான கவிஞர்கள் என்று நாம் கருதும் சிலரை, முதன்மையாகப் பிற நாட்டினர்க்கு அறிமுகப்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும். இதன் மூலம் இன்றைய ஈழத்துக் கவிதையின் வளமான சில பண்புகளை அவர்கள் கிரகித்துக் கொள்ளக்கூடும் என்பது எமது நம்பிக்கை. இத்தகைய ஒரு தொகுப்பில் வேறு இன்னால் இன்னாரையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம் என்று சிலர் ஆலோசனைகள் கூறக் கூடும். அது தவறாகாது. ஆயினும், ஈழத்துக் கவிதையில் பரிச்சயமும், இலக்கியக் கூர்உணர்வும், விமர்சனச் சம நிலையும் உள்ள எவரும் இங்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட கவிஞர்களுள் யாரையேனும் தவிர்த்திருக்கலாம் என்று கூறமாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.

_____________________________________________
* The new Poetry, by A.Alvares, Pequin 1980


2

ஈழத்திலே நவீன தமிழ்க் கவிதைக்குச் சுமார் நாற்பது ஆண்டுகால வரலாறு உண்டு. 1940 களிலிருந்து தான் இங்கு நவீன தமிழ்க் கவிதை- அதன் முழு அர்த்தத்தில்-தோன்றி வளரத் தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரையுள்ள இந்த நாற்பது ஆண்டுகளில் ஐந்து தலைமுறைக் கவிஞர்களை நாம் இங்கு இனங்காண்கிறோம். இச்சிறு அறிமுகத்திலே இந்த ஐந்து தலைமுறைக் கவிஞர்களையும் அவர்களது கவிதைப் போக்குகளையும் பற்றி விரிவாக மதிப்பிடுவது சாத்தியமல்ல.* ஆயினும் இத்தொகுப்பில் இடம பெறும் பதினொரு கவிஞர்களும் எவ்வெத் தலைமுறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது பயனுடையதாக அமையும்.

கவிதைத்துறையில் பிரவேசித்த காலத்தைக் கொண்டே கவிஞர்களின் தலைமுறை கணிக்கப்படுகின்றது. ஆயினும்,ஒரு தலைமுறையைச் சேர்ந்த கவிஞர் அந்தத் தலை முறைக்குள்ளேயே முடக்கிவிடுவதாகக் கருதக்கூடாது. பொதுவாக, தான் எழுதத் தொடங்கிய காலப்பகுதியிலன்றி அதை அடுத்துவரும் காலப்பகுதிகளிலேயே ஒரு படைப்பாளி முதிர்ச்சியடைவதை நாம் அவதானிக்கிகிறோம். அதேவேளை தான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தின் முத்திரைகளை அவனுடன் தொடர்ந்து வருவதும் தவிர்க்க முடியாதது.

____________________________________________________
* இதுபற்றி அறிய விரும்புவோர் பார்க்கவும் : இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம். வாசகர் சங்க வெளியீடு, இலங்கை 1979.

இவ்வகையில், 1940களில் உருவாகிய ஈழத்து நவீன கவிதையின் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவர் மஹாகவி. ஆயினும், 1971இல் மரணிக்கும் வரை சுமார் முப்பது ஆண்டுகள் இடையறாது அவர் கவிதைகள் எழுதிவந்தார். 1950களில் முதிர்ச்சியடைந்து 1960களில் தனது உச்ச நிலையை அடைந்தவர் அவர். முருகையனும் நீலாவணனும் 1950களில் உருவாகிய இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த 1950களில் உருவாகிய இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். 1975இல் மரணிக்கும்வரை நீலாவணன் தேக்க மற்றுக் கவிதை எழுதிவந்தார். முருகையன் இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர். 50களிலும் 60களிலும் மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகிய மூவருமே ஈழத்தின் பிரதான மூத்த கவிஞர்களாக விளங்கினர். மு.பொன்னம்பலம், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம் ஆகியோர் 1960களில் ஆரம்பத்தில் கவிதைத் துறையில் பிவவேசித்தவர்கள். இவர்கள் மூன்றாவது தலைமுறையினர். இன்றும் தொடர்ந்து எழுதி வருபவர்கள். சி.சிவசேகரம், அ.யேசுராசா, வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோர் 1970களின் தொடக்கத்தில் அல்லது 1960களில் பிற்பகுதியில் கவிதைத்துறையில் பிரவேசித்தவர்கள். நான்காவது தலைமுறையினர் இவர்கள். 1970களின் பிற்பகுதியிலே ஏராளமான இளைஞர்கள் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களுள் பத்துப்பதினைந்து பேராவது குறிப்பிடத்தகுந்த கவிதைகள் எழுதி வருகின்றனர். இவர்களே ஐந்தாவது தலைமுறையினர். சேரன் இத்தலைமுறையின் முதன்மையான இடம் வகிக்கின்றார்.

தலைமுறைப் பகுப்பு வெறும் காலரீதியானது மட்டுமல்ல. இவர்கள் எழுதத் தொடங்கிய காலப்பகுதியில் நிலவிய கவிதைபற்றிய நோக்குகளும், சமூக அரசியல் சக்திகளும் இவர்களது கவிதைப் போக்குகளில் கணிசமான பாதிப்பைச் செலுத்தி இருக்கின்றன என்பதையும் நாம் அவதானிக்கலாம். உருவ அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நோக்கினால் முதல் இரு தலைமுறைகளையும் சேர்ந்த மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகியோர் செய்யுள் வழிக் கவிஞர்களே. தொடக்ககாலத்தில் யாப்போசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய இவர்கள் பிற்காலத்தில் பேச்சோசைக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்காலத் தேவைக்கேற்ப மரபுவழிச் செய்யுளை நவீனப்படுத்தியவர்கள். ஆயினும், செய்யுளுக்குப் புறம்பான ஊடகத்தில் கவிதை இயற்றப்பட்ட முடியும் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அதுமட்டுமன்றி இவர்கள் அதற்கு எதிரானவர்களும் கூட. மஹாகவி, நீலாவணன் ஆகியோர் செய்யுளுக்குப் புறம்பான கவிதை முயற்சிகளை எதிர்த்துக் கவிதைகள் எழுதியுள்ளனர். முருகையன் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இது இவர்களது தொடக்க காலத்தில் உருவான மனப்பாங்கின் வெளிப்பாடே எனலாம்.

இந்த உருவ அம்சத்தைப் பொருத்தவரை மூன்றாவது தலைமுறையினரிடையே அதிக நெகிழ்ச்சி காணப்படுகிறது. எம்.ஏ.நுஃமான் தனது கவிதைகளுக்குச் செய்யுளையே ஊடகமாகக் கொள்ளும்போதிலும் செய்யுள் மட்டுமே கவிதையின் ஊடகமல்ல என்ற கருத்தை வலியுறுத்தி வருபவர். மு.பொன்னம்பலம், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் செய்யுள்களையும் வசனத்தையும் தேவைக்கேற்ப தங்கள் கவிதையின் ஊடுகமாகப் பயன்படுத்துபவர்கள். தா. இராமலிங்கம் ஆரம்பத்திலிருந்தே மரவுவழிச் செய்யுளை நிராகரித்து வந்துள்ளார். ஆயினும் தன் கவிதைகளில் கூடிய அளவு இத்திசைக் கோலங்களை அமைத்துக்கொள்பவர் அவர். பல்வேறு வகையான செய்யுளடிகள் அவரது கவிதையில் கலந்து வருவதும் உண்டு.

நான்காவது, ஐந்தாவது தலைமுறையினரிடம், சிலர் விதி விலக்காக, செய்யுளை முற்றாகக் கைவிட்ட நிலையினைக் காண்கின்றோம். ஆயினும் அதிக நெகிழ்ச்சியுடைய செய்யுள் வடிவமான 'அகவல்' இவர்களுட் சிலரின் சில கவிதைகளின் முழுமையாகவும் இடைப் பிறவரலாகவும் (யேசுராசா, சேரன்) வரக் காணலாம். ஆக கடந்த நாற்பது ஆண்டுகளில் செய்யுள்பற்றிய மனப்பாங்கு நெகிழ்ச்சியுற்று வந்திருப்பதையே இவர்கள் மூலம் நாம் உணர்கின்றோம்.

கவிதையின் ஊடகத்தில் மட்டுமன்றி அதன் வெளிப்பாட்டு முறையிலும் ஒவ்வொரு தலைமுறையினரிடையும் நுட்பமான வேறுபாடுகள் இருப்பதையும் நாம் அவதானிக்கலாம். உதாரணமாக, ஒரே பொருளைப் (சாதிக்கொடுமை) பற்றிய மஹாகவியின் தேரும் திங்களும் சேரனின் மயான காண்டம் ஆகியவற்றின் வெளிப்பாட்டு முறையை ஒப்புநோக்கலாம். அவ்வக் கவிஞருக்கே உரிய தனித்துவமான வெளிப்பாட்டு முறையை அவை காட்டும் அதேவேளை அவரவர் காலத்துக்கே உரிய சில பொதுப் பண்புகளை அவை கொண்டிருப்பதையும் கூர்ந்து நோக்குவோர் உணரலாம்.


3

இலக்கிய கூர்உணர்வு உடையவர்கள் இத்தொகுதியில் இடம்பெறும் பதினொரு கவிஞர்களிடமும் வெவ்வேறு விதமான கவிதைப் பாணியை இனங்காண முடியுமென்று நம்புகிறோம். இது இக்கவிஞர்களின் தனித்துவமாகும். ஈழத்து நவீன கவிதை இத்தகைய தனித்துவமான ஆளுமைகளாலேயே வளம் பெற்றுள்ளது. மஹாகவி யதார்த்த நெறிநின்று, மனிதனின் தன்னுணர்வுக்கு-அவனது ஆற்றலுக்கு அதிக அழுத்தம் கொடுப்பவர். காட்சிப் படி மங்களினூடு அதைக் கவிதையில் வார்ப்பவர். இதிகாசக் கதையான அகலிகைக்கு அவர் கொடுக்கும் புதிய விளக்கத்தில் கூட நாம் இதைக் காணலாம். அகலிகை கல்லாவது யாருடைய சாவத்தினாலுமல்ல. தன்னுணர்வின் விழிப்பினால்தான். இந்திரன மேனி-யல்லாம் புண் உண்டாவது யாருடைய சாபத்தினாலுமில்லை; தன் பொல்லாமையின் நோண்டுதலால்தான். அகலிகையைப் போல் மிக இறுக்கமான காட்சிப் படிமங்களை அவரது கவிதைகள் எல்லாவற்றிலும் காணலாம். இப்படிமங்களினூடு வாசனை ஓர் உணர்வுச் சூழலுக்குள் கொண்டு போவது மஹாகவியின் பாணி.

முருகையனின் பாணி இதிலிருந்து வேறானது. கருத்து அல்லது சிந்தனை வெளிப்பாடுதான அவரது கவிதையின் பிரதான அம்சமாகும். விஞ்ஞானத்துக்குரிய பொதுமைப்படுத்தும் சிந்தனைமுறையை இவரது பெரும்பாலான கவிதைகளின் காணலாம். முருகையனின் கவிதைகள் வாசகனை ஓர் அறிவுச் சூழலுக்குள் கொண்டு செல்வன. நீலாவணனிடம் இரு எதிர்நிலைப்பட்ட (Constrasting) போக்குகளைக் காணலாம். ஒன்று, மஹாகவியிடம் காணப்படும் யதார்த்த நெறி. மற்றது, மரபு சார்ந்த ஆன்மீகக் குறியீட்டு நெறி. அவரது பாவம் வாத்தியாரிலும் பனிப்பாலையிலும் இவ்விரு எதிர்நிலைகளைக் காணலாம்.

மூன்றாம், நான்காம் ஐந்தாம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுட் பெரும்பாலோர் மார்க்சீயச் சார்புநிலையாளர்கள். ஆயினம், இவர்கள் மார்க்சீயத்தை உள்வாங்கிக்கொண்ட முறையிலும் அதை வெளிப்படுத்தும் முறையிலும் ஆளுக்கு ஆள் வெவ்வேறு அளவில் வேறுபடுகின்றனர். அதுவே அவர்களது தனித்துவம். மு.பொன்னம்பலத்தை இங்கு தனியாகக் குறிப்பிட வேண்டும். ஈழத்துக் கவிதையிலே அவர் வேறு ஒரு போக்கைப் பிரதிபலிக்கின்றார். மு. தளையசிங்கம் முன்வைத்த மார்க்சியத்தை நிராகரித்து மார்க்சியத்துக்கப்பால் தேடும் ஆன்மிகப் போக்கு அவருடையது. கவிதையின் யதார்த்தத்தை விட ஆத்மார்த்தத்தை வலியுறுத்துபவர் அவர். அவரது அகவெளி சமிக்ஞைகள் இதை நன்கு புலப்படுத்தும். இராமலிங்கமும் ஆன்மீக நோக்குடையவரே. ஆயினும் சமூக யதார்த்தத்தில் அவரது காலல்கள் நன்கு பதிந்துள்ளன.

தற்காலத் தமிழகக் கவிதையிலே இத்தகைய தனித்துவ வேறுபாடுகளை நாம் அபூர்வமாகவே காண்கின்றோம். பாரதி, பாரதிதாசனிடம் காணப்பட்டது போன்ற அல்லது கு.ப.ரா., பிச்சமூர்த்தி போன்றவர்களிடம் காணப்பட்டது போன்ற துலக்கமான ஆளுமை வேறுபாடுகளை இன்றையத் தமிழகக் கவிஞர்கள் வெளிப்படுத்தவில்லை. பொதுவாகச் சொல்வதானால் எழுத்து மரபினர், வானம்பாடி மரபினர் என இரு மரபினரையே நாம் அங்கு காண்கிறோம். குழுத் தனித்துவத்துக்குள் தனித்தனி ஆளுமைகள் பெரிதும் மறைந்து போய்விட்டன என்றே தோன்றுகிறது. ஈழத்திலே இத்தகைய குழு மரபுகளை அவதானிக்க முடியவில்லை. தனி அறுமைகளே பிரகாசிக்கின்றன.


4

இத்தொகுப்பில் இடம்பெறும் பதினொரு கவிஞர்களும் வெவ்வேறு அளவில் தங்களுக்கென்ற தனித்துவமான பாணிகளைக் கொண்டுள்ளனர் என்று கூறும் அதேவேளை அவர்களிடம் சில அடிப்படை பொதுப் பண்புகளையும் நாம் இங்க சுட்டிக்காட்ட வேண்டும். அதில் முதன்மையானது அவர்களின் சமூகச் சார்பாகும். ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் பிரதான பண்பே அதன் சமூகச் சார்புதான். கவிதைகள் சமூக, அரசியல் பிரச்சினைகள் தொடர்பான கவிஞனின் பார்வையை, அனுபவத்தை, சமூக நிலைப்பட்ட சிந்தனைகளை வெளிப்படுத்துவதையே நாம் இங்கு சமூகச் சார்பு என்று கருதுகின்றோம். இதிலே சமகாலப் பிரக்ஞை முக்கியமானது. மஹாகவி கூறியுள்ளது போல்

இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள்

முதலியவையே ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் பிரதான பொருளாய் அமைந்துள்ளன. மஹாகவி, முருகையன், நீலாவணன் முதலிய முன்னே'டிகள்- இவர்களது நோக்கும் போக்கும் வெவ்வேறாய் இருப்பினம்-சமூகச் சார்பினை ஈழத்துக் கவிதையின் பிரதான பண்பாக நிலை நிறுத்தினர். இவர்களை அடுத்த தலைமுறைகளில் உருவாகிய மார்க்சிய தத்துவசார்புடைய கவிஞர்களும் மார்க்சிய எதிர்ர்புக் கவிஞர்களும் கூட கவிதையின் சமூகச் சார்புக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தனர். வாழ்க்கை, சமூகம் பற்றிய ஓர் ஆழமான பார்வையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பொருள் அடிப்படையில் இவர்களின் கவிதைகளைப் பாகு படுத்துவது இவற்றின் சமூகச் சார்பை மிகை எளிமைப் படுத்துவதாக அமைந்து விடலாம். எனினம், சாதியமைப்பு, வர்க்க முரண்பாடு, இன ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் எவ்வாறு முகம் கொடுத்துள்ளனர் என்பதை புலப்படுத்துகின்றன என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்றைய ஈழத்துக் கவிதை பிரதானமாகச் சமூகச் சார்புடையது என்று நாம் கூறும்போது அது முற்றிலும் தனி மனிதச் சார்பற்றது என்று பொருளாகாது. எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூகச் சார்பையும் தனிமனிதச் சார்பையும் வேறுபடுத்தி நோக்கவும் முடியாது. கவிதை முழு மொத்தமான வாழ்க்கை அனுபவ வெளிப்பாடுதான். கவிஞன் சமூக மனிதனாக இருக்கும் அதேவேளை தனிமனிதனாகவும் இருக்கிறான். இவ்விரட்டைத் தன்மைஒன்றை ஒன்று பாதிப்பது ; ஒன்றில் ஒன்று தங்கி இருப்பது. கவிஞனும் ஒரு சமூகமனிதன் என்ற வகையிலே தனக்கும் சமூகத்துக்கும் பொதுவான சமூக, அரசியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அதற்கு முகம் கொடுக்கின்றான். அதேவேளை அவன் ஒரு தனிமனிதன் என்ற வகையிலே அவனுக்கென்று தனிப்பட்ட (Personal) அனுபவங்களும் பிரச்சினைகளும் உண்டு. அவற்றுக்கும் அவன் கவிதை வடிவம் கொடுக்கின்றான். இவ்வகையிலே இன்றைய ஈழத்துக் கவிதையில் கவிஞர்களின் தனிமனிதச் சார்பான வெளிப்பாடுகளையும் காண்கிறோம். இத்தொகுப்பிலும் அத்தகைய சில கவிதைகளைக் காணலாம். ஆயினும், இன்றைய ஈழத்துக் கவிதையில் சமூகச் சார்பே ஆதிக்கம் செலுத்தும் (Dominant) அம்சம் எனல் தவறாது.

சமகாலத் தமிழகக் கவிதையுடன் ஒப்புநோக்குகையில் இது எதிர்நிலையானது என்று தோன்றுகிறது. தமிழகக் கவிதை பிரதானமாக அதீத தனிமனிதச் சார்பானது ; பெரிதும் உள்நோக்கானது. எழுத்து காலகட்டத்திலிருந்து இப்பண்பு தொடர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தருமு சிவராமு. நகுலன் போன்றோர் இதன் துருவமுனைகள் எனலாம். (சிவராமு ஈழத்தவர் எனினும் அவரது இலக்கிய வாழ்வு தமிழகத்துக்கே உரியது). வானம் படிக் குழுவினரே அங்கு கவிதைக்கு ஒரு சமூகச் சார்பைக் கொடுக்க முயன்றனர். ஆயினும், புனைவியல் பாங்கே (Romanticism) அவர்களிடம் மேலோங்கி காணப்படுகின்றது எனலாம்.

ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் பிறிதொரு முக்கிய பண்பு அதன் ஸ்தூலத் தன்மையாகம் (Concreteness). திட்ட வட்டமானதாக, நேரடியான பொருட் புலப்பாடு உடையதாகக் கவிதைகள் அமைவதையே நாம் ஸ்தூலத் தன்மை என்று குறிப்பிடுகின்றோம். ஸ்தூலமான கவிதைகள் எளிதில் புரிந்துகொள்ளத் தக்கவையாகவும். வாசகனது உணர்வில் நேரடியாகத் தைக்கக்கூடியவையாகவும் உள்ளன. இத்தகைய கவிதைகள் கவிஞன் தனக்குத் தானே பேசிக்கொள்கின்றன. கவிஞனின் அனுபவத்தை அவனது உணர்வை எளிதில் வாசகனுக்குள்ளும் இறக்கிவிடுகின்றன. இதனால் கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடைய எளிமையான, அதேவேளை வலிமையான செய்திப் பரிமாற்ற சாதனமாகவும் அவை அமைந்து விடுகின்றன. பெரும்பாலான கவிதைகள் உண்மையான, அன்றாட வாழ்க்கை அனுபவத்துடன் உறவுடையனவையாக இருப்பதும், அன்றாட வழக்கில் உள்ள இயல்பான மொழியமைப்பைப் பயன்படுத்துவதும் இதன் காரணமாகலாம். ஆயினும் இருண்மைப் பண்புடைய (Obscurity) அல்லது இலகுவில் பிடிபடாதத் தன்மையுடைய கவிதைகள் இங்கு எழுதப்படாமலும் இல்லை. இத்தொகுப்பிலுள்ள நீலாவணனின் பனிப்பாலை, சண்முகம் சிவலிங்கத்தின் வெிளியார் வருகை ஆகிய கவிதைகளை இதற்கு உதாரணமாகத் தரலாம். ஆயினும், இத்தகைய வெளிப்பாட்டு முறைகள் ஈழத்துக் கவிதையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன.

மறுதலையில் இன்றையத் தமிழகக் கவிதை பெரும்பாலும் சூக்குமமானது (Abstract) எனலாம். பிடிபடாத்தன்மை அல்லது இருண்மை இவற்றின் பொதுப்பண்பாகக் காணப்படுகின்றனது. கவிதை மொழியிலே தற்போக்கான அம்சங்களை (Idiosyncratic features) - தனியாளுக்குரிய (Private) குறியீடுகள், படிமங்கள் போன்றவற்றை - அதிகம் கையாள்வது இதன் முக்கிய காரணம் எனலாம். அதீத தனிமனிதவாதமும், அக நோக்கும் இதனை நிர்ணயிக்கின்றன போலும். சமூகச் சார்புடைய அல்லது புறநோக்கான கவிதைகள் எழுதும் வானம்பாடிக் கழவினர் கூட, சிலர் விதிவிலக்காக, இத்தகைய மொழிக் கூறுகளையே பயன் படுத்துகின்றனர். சற்று டாம்பீகமான மொழிப் பயன்பாட்டினால் செயற்கையான அல்லது சாதாரண வழக்கில் இருந்து முற்றிலும் வேறான மொழிநடை ஒன்றையும் உருவாக்குகின்றனர். இவை அவர்களது கவிதைகளுக்கும் ஒரு சூக்குமத் தன்மையைக் கொடுத்து விடுகின்றன. ஆனால், ஈழத்துப் பிடிபடாக் கவிதைகள் கூட இயல்பான மொழி நடையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறுவதன் மூலம் இன்றையத் தமிழகக் கவிதை முழுவதுமே சூக்குமமானது என்று நாம் கருதுவதாகக் கொள்ளக்கூடாது. ஆனால் அதுவே ஆதிக்கப்பண்பு எனல் தவறாகாது.

இந்தச் சிறு அறிமுகத்தில் சமகால ஈழத்துக் கவிதையையும் தமிழகக் கவிதையையும் ஒப்புநோக்கி ஆராய்வது எமது நோக்கமல்ல. எனினும் இன்றைய ஈழத்துக் கவிதையின் தனித்துவமான சில அம்சங்களை இனங்கண்டு கொள்வதற்கு இத்தகைய சில குறிப்புகள் பயன்படக்கூடும் என்றே கருதுகின்றோம். ஆனால், இரண்டு கவிதைப் போக்குகளிலும் எது சிறந்தது என்று மதிப்பிட நாம் முன்வரவில்லை. இரண்டும் வேறுபட்ட போக்குகள் என்பதைப் புரிந்து கொண்டால் இப்போதைக்குப் போதுமானது.

இத்தொகுப்பிலே ஒவ்வொரு கவிஞரது படைப்பாக ஐந்து கவிதைகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. இவைதான் அவவக் கவிஞர்களின் சிறந்த படைப்புகள் என்று கருதத் தேவையில்லை. முடிந்தவரை ஒவ்வொரு கவிஞரதும் பன்முகப்பட்ட கவிதைப் போக்கை எடுத்துக்காட்டும் வகையிலேயே வெவ்வேறு வகையான கவிதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 1960க்கு முன்னர் எழுதத் தொடங்கியவர்களிடம் இருந்தும் 60க்குப் பின்னர் அவர்கள் எழுதிய கவிதைகளே இத்தொகுப்பில் தரப்பட்டுள்ளன. அவ்வகையிலே கடந்த இருபது ஆண்டு காலத்தில் ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த ஈழத்துக் கவிஞர்கள் பதினொருவரின் பன்முகப்பட்ட கவித்துவ வெளிப்பாடுகளின் ஒரு சிறு பகுதியையே இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. இன்றைய ஈழத்துக் கவிதையை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இது ஒரு நுழைவாயிலாக அமையும் என்பது எமது நம்பிக்கை.

தங்கள் படைப்புகளை இத்தொகுப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்த கவிஞர்களுக்கு, எமது நன்றிகள்; நண்பர் பத்மநாப ஐயரின் அயரா முயற்சியில்லாமல் இந்நூல் உருவாகியே இருக்க முடியாது. ஈழத்து இலக்கிய உலகம் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது.



மஹாகவி


கண்களும் கால்களும்


பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பெண்ணுமே
பின்னடைந்த வயதினன் அல்ல. என்
ஆசைக் கெந்தப் பொருள் நிகர்நிற்கும் என்று
ஆய்கிறாள், தலைசாய்த்து. நுனிவிரல்
பூசித் தந்த சுண்ண'ம்பொடு வெற்றிலை
போட்டனன். வெறும் வாய் சிறப்புற்றது.
வீசிச் சென்றது காற்று, வெளியிலே.
வீட்டுள்ளே அதன் ஆட்டங்கள் கேட்டன.

கூப்பிட்டாள். ஒருபேடு நுழைந்தனன்
கொண்டுவந்த விசிறியைத் தந்திவன்
காப்புச் செய்த கலகலப்பால் இரு
காதினூடும் கவனத்தை ஈர்க்கிறாள்.
தீப்பட்டே எரிகின்றது போற் சிறு
திண்ணை மீதினிற் சடையைத் திருத்தினாள்
சிந்தை தன்நிழற் பாலோ செலுத்தினாள் !

சின்ன வாயில் உதிரம் வழிந்தது.
சிரித்த போதங்கு பாலே பொழிந்தது.
கன்னத்தே இன் கனிகள் கனிந்தன
கடவுளே! அவள் பெண், என தாண்மையை
என்ன பாடு படுத்த முனைகிறாள்!
எதுக்காக உணர்வுள் மனைகிறாள்?
தின்ன வந்த புலியையும் கூடவா
திட்டமிட் டிவன் தூண்டத் துணிகிறாள்?

ஓசை தீண்டிமெய் ஓடித் சிலிர்த்திட
ஒற்றை மூச் செறிந்தாள் அவள். மூத்தவள்
பேசிப் பேசித் தொலைத்த பொழுதொடு
பேரம் நின்று, பிரியம் முன்னேறிற்று.
காசைக் கண்டந்தக் காந்தன் விரியுமோ!
கற்பெனச் சொல்லும் வெற்பும் சரியுமோ!
பாசி மூடிக் கிடக்கும் குளத்திலும்
பச்சைத் தண்­ர் பருகக் கிடைக்குமோ?

அன்பு காட்டிட ஆணை பிறந்ததோ!
அழகு கால் தொடரச் சென் நிளையவள்
இன்பத்திற்கோர் கதவு திறக்கிறாள்.
என் வழிக்கோர் கைகாட்டி மடக்கினாள்.
இன்றிதோ கட்டிடந்து பிடுங்கிய
இளமைமுன் மறி ஒன்று நடந்தது.
பின்புறத்தில் இவ் வையம் புதைந்தது
பிரளயம் சுவர்க் குள்ளே' சுழல்வது!

நறுமணம் கமழ்கின்றது. மூலையில்
நட்ட சந்தனக்குச்சி மலர்ந்ததோ!
திருவிளக் கொற்றை நாக்கை வளைத்தது.
தின்று தின்றது கொன்றிட நின்றதால்.
இருள் இடுக்கில் ஒளித்துக் கிடப்பதை
இங்கு காட்டிக் கிடப்பது யார்உஎது?
பெரு நெருப்புக் கரியாய்ச் சமைந்தது
பெண்மையோ என்முன் பிய்ந்து விழுந்தது!

-நஞ்சிலே பல் நொடியிற் சுழன்றிட
நேர்ந்த கோலத்தை அள்ளி நிமிர்த்தி, நான்
'கொஞ்சுவாய்' எனில் ஒப்பினன். ஆயினும்
கோறை போன்ற விழிகளிற் சற்றுமே
அஞ்சல், மோதல், அழைத்தல் கிடைத்ததா?
அன்பைக் காலிடைத் தேடவும் கூடுமோ?
கஞ்சன் முன்பு கொடுத்ததுண்டே, அது
காசுபாரும்! குளத்தில் இறங்கினேன்.

நேரம் கைகொட்டித் தாளங்கள் போட்டதா,
நீண்டு நீண்டு நிமிடம் வளர்ந்தன.
சோரம் போனதுண்டா எனதாண்மையும்!
சோம்பிப் போவதுண்டோ இந்தச் சோலியும்!
பாரம்தான் சுமந்தாள். கற்புப் பாறைமுன்
பாதியோ -டழுந்தேன். அது பாவையே!
ஓரக் கண்ணிலும் சேதி கண்டேனில்லை.
ஓமப்பா, உயிர்க் காதல் உண்டேனில்லை.


அகலிகை


இந்திரன் இறங்கி வந்தான்
இமயத்தின் அடிவா ரத்தே.
சந்தனம் கமழும் மார்புச்
சால்வையிற், சரிகை மீதில்
பிந்திவந் தெறிக்கும் தேய்ந்த
பிறையின் செந் நிலவு பட்டுச்
சிந்திற்று, மருண்டங்கே ஓர்
சிள்வண்டு வாய் மூடிற்றாம்.

கற்களிற் படாத காலில்
கழல் ஒலி கிளம்ப வில்லை
நிற்கவும் இல்லைத், தோள்கள்
நிமிர்ந்தவன் நடந்து சென்று
புற்றரை அடைந்த போது
பாதத்தைப் பொறுக்க வைத்தான்.
சிற்றாற்றின் அரவம் கேட்டுச்
செல்கின்றான் அதனை நாடி.

பாதையில், விடியும் போது
பகல்போல விரியப் போகும்
போதினைப் பிடுங்கி, கைக்குள்
பொத்தினன், மோந்து பார்த்தான்
ஆதலும் வாழ்ந்தோர் நாளில்
அழிதலு மான இந்த
மேதினிச் சிறப்பை கண்டு
வெறுத்தாலும் கவர்ச்சி கொண்டான்.

கையினில் நீரை அள்ளக்
குனிந்தவன் களைப்பைத் தீர்த்தான்.
ஐய, எச் சுவையும் அற்றும்
தேவரின் அமுதை வென்றி
செய்ததைச் சிந்தித்தானே'?
சிரித்தனன் சிறிது, முன்னர்
கொய்தபூ கீழே வீசிக்
குகை ஒன்றைக் குறுக லுற்றான்.

முத்தினால் நிறைந்த வான
முடி, இந்த நிலத்தில் உள்ள
அத்தனை பட்டும் ஒவ்வா
அழகிய நிறமேலாடை,
கத்தி, காற்செருப்புக் காப்புக்
கழற்றி, ஓர் ஒதுக்குத் தேடி
வைத்துப்பின் திரும்பிப் பள்ள
வழியினைத் தொடர லானான்.

இருட்டிலும் நுழைய வல்ல
இந்திர நோக்கிலே, அம்
முரட்டுவான் மரங்கள் சூழ்ந்து
முதிர்ந்த காட்டிடை ; நீர் ஓடம்
புறத்திலே, கமுகும் தெங்கும்
புலப்பட, இரண்டு கண்கள்
உருட்டினன் ஊன்றி நோக்கி
உள்ளதோர் குடிலும் கண்டான்.

வேலியில், முள் இல்லாத
வெண்டியை மெல்லத் தாண்டக்
கோழிகள் விழித்துக் கொண்டு
குசுகுசுத்தன மாங்கொப்பில்.
ஓலையோ டிழைத்த தட்டி
ஓட்டையில் நாட்டம் வைத்து
மாலுண்ட வானக்காரன்
மறுகினான் நோக்கி நோக்கி.

அகலிகை தளிர்கை கொஞ்சம்
அசைந்ததும், அருகில் தூங்கும்
மிகுதியாய் நரைத்த நெஞ்சுக்
கோதமர் மேற்படர்ந்து
புக, இவர் விழித்துப் பார்த்துப்
பொழுதாயிற் றென்ப தெண்ணி
அகன்றதும், ஆனயாவும்
அவன் அங்கு நின்று கண்டான்.

ஆதரவு அயலிற் தேடி
அலைந்தகை விரல்கள் மீண்டு
பாதிமூடாமென் மார்பிற்
பதிந்தன. நெளிந்த வாயின்
மீது, புன் முறுவல் மீண்டும்
விளைத்தனள், முயன்று பின்னர்
மாது குப்புறப் புரண்டு
மணையினை அணைக்க லானாள்.

கோதமர் நடந்து சென்று
குந்திய கல்லின் மீது
சாதலே நிகர்க்க ஏதோ
தவம்புரிந் திருந்தார்; வீட்டில்
காதலின் பிடிப்பிற் சிக்கிக்
கலங்கினானது கால் மாட்டில்
நீதிகள் நினையா னாகி
நெடும்பிழை இழைப்பான் நின்றான்.

காட்டுக்குள் அமைந்தும், அந்தக்
கடும்தவமுனிவர் செய்த
வீட்டுக்குள், இன்று மட்டும்
விலங்குகள் நுழைந்த தில்லை.
பாட்டுக்கோர் உருப்போல்வாளைப்
பச்சையாய்க் கண்ட போதை
ஈட்டிபோல் இதயத் தேற
இந்திரன் எதுசெய் தானே'?

துடித்தனள், எனினும் பட்ட
துன்பினுள், வலியோன் கைக்குள்
பிடித்தது பிடித்ததால், அப்
பிடிபிடி கொடுத்தாள், வந்த
அடுத்தவன் அழுத்த மாக
ஆசைகள் புதைக்கக் கண்கள்
எடுத்துநோக்காது சோர்ந்தும்
உலகையே இழக்க லானாள்.

பித்தம் கொண்டவனைப் போலப்
பிதுங்கிய விழியிற், காதல்
அர்த்தங்கள் சிதறிப் பாய
அவள் உடல் தனதேயாக்கி
முத்தங்கள் பறித்தான் அன்னான்
முகம் முழுவதுமே, இன்பிற்
கத்துங்கால் மாது சற்றே
கண்ணிமை திறந்து போகப்.....

பார்த்ததும்; துவண்டு மேனி
படபடத்திட மே-லல்லாம்
வேர்த்தது. வேர்த்த போதே
விறைத்தது; விறைப்பு மூச்சை
நூர்த்தது, நூர்ந்து போனாள்.
நொடியிலே நொடிந்து, கண்கள்
பார்த்ததே பார்த்த பாங்கிற்
பாவை கல்லாகி விட்டாள்.

அந்தரத் தவர்கள் வேந்தன்
ஆயிரம் உளைவை நெஞ்சிற்
தந்தவள் நிலையைக் கண்டு
தான்மிகக் குறுகிப் போனான்.
வந்தவர் முனிவர், நேர்ந்த
வகையினை அறிந்து கொண்டு
தம்தொழில் பிறிதென்பார்போல்
தாடியை வருடி மீண்டார்.

நில்லாமல் நழுவியோடி
நீங்காத வாழ்விலே, தன்
பொல்லாமை நெடுக நோண்டப்
புண்ணுண்டான் தேவராசன்.
எல்லாம் போய்க் கல் ஒன்றாக
எஞ்சிய பாழிடத்தே
நல்லார்கள் மிதிக்கத் தக்க
ந'ள்வரை கிடந்தாள் நங்கை.....


தேரும் திங்களும்


"ஊ-ரல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே;
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை"
என்று
வந்தான் ஒருவன்.

வயிற்றில் உலகத்தாய்
நொந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப்
பெற்ற மகனே அவனும்.
பெருந் தோளும்
கைகளும், கண்ணில் ஒளியும், கவலையிடை
உய்ய விழையும் உளமும் உடையவன்தான்.

வந்தான். அவன் ஒரு இளைஞன்;
மனிதன் தான்.
சிந்தனையாம் ஆற்றற் சிறகுதைத்து வானத்தே
முந்த நாள் ஏறி முழுநிலவைத் தொட்டுவிட்டு
மீண்டவனின் தம்பி
மிகுந்த உழைப்பாளி!

"ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல்
வேண்டும்" எனும் ஒர் இனிய விருப்போடு
வந்தான் குனிந்து வணங்கி வடம் பிடிக்க.

"நில்!" என்றான் ஓரான்
"நிறுத்து!" என்றான் மற்றோரான்.
"புல்" என்றான் ஓராள்
"புலை" என்றான் இன்னே'ராள்
"சொல்" என்றான் ஓராள்
"கொளுத்து" என்றான் வேறோராள்.

கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்-லன்று செந்நீர் தெறிந்து
நிலம் சிவந்து
மல் லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.

ஊ-ரல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
பா-ரல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.

முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது!


இதய கீதம்


நாடிக்குழாய் வைத்து நன்றாகக்
கேட்டு விட்டும்,
'ரீரிக்...ரிரிக்....ரிக்' என அங்கோர்
மின் கருவி
பாடிக் குறிக்கும் குறிப்பு ஒன்றைப்
பார்த்து விட்டும்,
மூடிக் கிடக்கும் அறையுள்
முடுக்கிய ஓர்
காண' ஒளியின் கதிர் நிழலைக்
கண்டு விட்டும்,
வாழ் நாளைப் பற்றி வறையறைகள்
கூறுகிறார்:

"தூங்குகையிலோ துணைவி
உடன் சரிந்து
வாங்கில் அமர்ந்து கதைவளர்க்கும்
வேளையிலோ,
ஒன்றைக் குறித்து, அக் குறித்த
ஒரு செயலைச்
சென்று தொடங்கச் சிறுபொழுது
முன்னரே'
நின்றுவிட நேரலாகும்
இதயம்!" என்றார்:
நன்றாகச் சொன்னர்! நமமே
குறித்துக் கொள்.

"சப்பென்றுணவு சலித்தால்,
சலிக்கட்டும்;
உப்பை இனிமேல் ஒதுக்கி
விடும்!" என்றார்.
ஐயகோ, ஏற்றேன், "அரிய
முயற்சிகளை
வை ஓர் புறத்தே; வருந்திப்
பெரும்பணியில்
ஈடுபடாதே; இரவு
துயில் குறைத்தல்
கூடாது!" கொஞ்சம் நினைப்பைக்
குறுக்கு!" என்று
பட்டியலை நீட்டிப் பளீர் என்
றெதிர் எறிந்தால்
தொட்ட தொழிலைத் தொடரா
தொழிவதோ?

இம்மாநிலத்தே இறவாது
பல்லாண்டு
சும்மா கிடந்து சுகமாய்
இருப்பதிலும்,
கொண்டு வா பார்ப்போம் கொலை எருமை
பூட்டிய நின்
வண்டியினை எனது வாசலுக்கு!
நான் இங்கே
சூழ்வேன்; சுழல்வேன்; சுமப்பேன்
சுவைத் திருப்பேன்;
வாழ்வேன் மடியும்வரை.


புதியதொரு வீடு என்ற பாநாடகத்தின்
இசைப் பாக்கள்

மீனவர் பாடல்


ஏலேயேலோ....... தந்தையாம்
ஏலேயேலோ.......
ஏலேயேலோ....... தந்தையாம்
ஏலேயேலோ.......

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்;
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.

வெறுவான வெளி மீது
மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று
கரகங்கள் ஆடும்.

நெறி மாறுபட நூறு
சுழி வந்து சூழும்
நிலையான தரை நீரில்
இலை போல் ஈடாடும்.

இருளே'டு வெளியேறி
வலை வீசினாலும்
இயலாது தர வென்று
கடல் கூறல் ஆகும்.

ஒரு வேளை முகில் கீறி
ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள
உயிர் வெந்து சாகும்.


2

காலை எழுந்துவந்து
கண் நிறைந்த சூரியரே
மாலை இறங்குகிறீர்
நாலு பணம் காணே'மே!

சுற்றிச் சுழன்று வந்து
சூழுகிற காற்றுகளே
பற்றிப் பிடிக்க ஒரு
பாரை படக் கூடாதோ?

அண்ண'ந்து பார்த் தழுதற்
கங்கிருக்கும் விண்வெளியே
உண்ண'திருங்கள் என
உத்தரவு போடுவையோ?

ஆடி அலை சிலுப்பும்
அன்புடைய தண்­ரே
ஓடிக் களைத்து விட்டோம்;
ஒன்பது பேர் வாழே'மோ?

நீலக்கடல்! உனது
நித்திலங்கள் தேவையில்லை
ஏலும், எனில் சிறிய
காரல் எமக் கீயாயோ?

வெள்ளாப்பிலே யிருந்து
வேறு தொழில் பார்க்கவில்லை;
உள்ளம் சிறிதெனினும்
ஓ! கடலே நீ இளகு.

தூர இருந்து கதை
சொல்லுகிற தூண் விளக்கே
ஆரை நினைத்ததனால்
அப்படிக் கலங்குகிறாய்?

சேலை கிழிந்த தென்று
செப்பி நின்ற உத்தமி, உன்
ஓலை அடகு வைத்தே
உண்பதற்கு நான் இருந்தேன்.

நாளை உயிர் சுமந்து
நாம் நடத்தல் எவ்விதமோ?
மீளும் பொழுது வர
வேகுதடி எம் வயிறு....

போகாத வழி மீதில்
ஆர் போயினார்கள்?
பொல்லாத பழி ஏதும்
ஆர் எண்ணினார்கள்?

ஆகாத செயல் ஒன்றை
ஆரே புரிந்தோம்?
அலை மீதில் உவர் நீரை
உழவே அலைந்தோம்.


4

வாடை குளிர்ந்த தெனில்
வாடி விடலாமோ?
வாரும் கடல் முழுதும்
ஓடி வலை வீச.

பாடொன் றிரண் டகல
முன் பகலும் ஆகும்
பாரும், கிழக்கில் ஒரு
வெள்ளி ஒளி வீசம்.

கோடை, கொடும்பனி
மழை, குளிரை அஞ்சிக்
கோடிப் புறத்தினில்
உறங்கி விடலாமோ?

ஆடை களைந்து தலை
மீதினில் அணிந்தோம்;
ஆழக் கடல் தயிர்
எனக் கடைய வந்தோம்.


5

கட்டு மரம், தோணி உண்டு
கடல் நிறைய வேலை உண்டு
பட்ட மரம் போல நின்று
பயன் இழக்கும் எண்ணம் இல்லை.

கைகளுண்டு, தோள்க ளுண்டு
கருங்கலில் போல் திரண்டு ருண்டு
-பய் தடிக்கும் பேய் மழையில்
பீதி படா நெஞ்சம் உண்டு.

சேர்ந் திருக்கும் நோக்கம் இல்லை
சுகம் எடுக்கப் பார்க்கவில்லை
நேர்ந்து விட்ட தீங்குகளை
நினைத் திருக்க நோ மில்லை.


6

உறவினரை அயலவரை
அனைவரையும் கூட்டி,
உடல் வளையக் கடல் மடியில்
ஒரு வலையை இட்டோம்.

எறி வலையில் தனி மனிதன்
ஒரு சில மீன் கண்டான்;
பல மனிதர் தொகை தொகையாய்ப்
பொது வலையிற் கண்டோம்.


7

உய்வோம் என்னூர் முழுதும்
ஒன்றுபட்டு நின்ற துண்டு
நைலோனில் வலைகளுண்டு
நாளை யினி நம் வசமே!


8

ஆண்டவனார் படைத்த கடல்
அத்தனையும் மீன்கள்
அத்தனையும் அள்ளி வந்து
வைப்பவர்கள் நாங்கள்.

வேண்டுபவர் வேண்டியவா
றெய்துகிற மீன்கள்
வெங்கடலைப் போய்க் கடைந்து
தந்திடுவோம் நாங்கள்


9

தூரத்து வெண்மணலில்
தோன்றுகிற சோபை என்ன?
ஈரத்தில் பூத்து நிற்கும்
செவ்வரத்தை என்றிடவோ!

செவ்வரத்தைப் பூ நிறத்தில்
சேலையில்லை கண் மணிக்கே;
அவ்வளவு தூரத்தும்
அவளுதடு மின்னிடுமோ?

அவளுதட்டின் செம்மையிலே
அள்ளுறும் தாம்பூலம்
அவள் இடுப்பின் மென்மையிலே
அன்பான கைக் குழந்தை

அன்பான கைக் குழந்தை
ஆண் மகனாய் நாளை யின்றே
என்னே'டு தோள் புறத்தில்
இருந்து வலை வீசிடுவான்;

இருந்து வலை வீசிடுவான்
இரண்டு வரி பாடிடுவான்;
வருந்தி உடல் வேர்வை விழ
வாழ்வை அவன் வாழ்ந்திடுவான்.


10

வெள்ளி சிணுங்கி அழ
விண்ணிறைந்த கும் மிருட்டில்
துள்ளி எழுந்து வந்து
தோணியினைத் தள்ளி விட்டோம்.

மெள்ளச் சுழன்றெழுந்து
மேல் விழும் இக் காற்றை எங்கள்
வள்ளம் சிரிக்கிறது;
வார் கடலின் நீர் கிழித்தோம்...

வீசி எறிந்த வலை
வீழ்ந்தமிழ்ந்து போகிறது
மூசி வியர்வை விழ
முக்கி முக்கி நாம் இழுத்தோம்.

ஆசையுடன் வலையை
ஆதரித் திழுத்து நின்றோம்;
பாசி கிடைக்கிறது,
பாரையும் கிடக்கிறது;

சூரை, முரல், திரளி
சூரை, சுறா,சூவாரை
கீரை, கெழுத்தி, ஓட்டி
கெண்டை, கயல், கொய், மணலை.

ஓராக் கிடக்கிறது
ஒய்வறியாக் காரணத்தால்
ஆரும் மகிழ்வடைய
ஆதவம் உதிக்கிறது....


11

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்....
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்...

எறிகின்ற கடல் என்று
மனிதர்கள் அஞ்சார்
எது வந்த தெனின் என்ன?
அதை வென்று செல்வார்.

ஏலேயேலோ...... தத்தைதாம்
ஏலேயேலோ......
ஏலேயேலோ...... தத்தைதாம்
ஏலேயேலோ......


முருகையன்

அகிலத்தின் மையங்கள்


தனிமையில் நின்றேன், வயல் -வளி நடுவில்;
என்னைச் சூழ எழுந்து வீசிய
காற்றில் நெல் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது.
நாலு திசையிலும் பார்வையை ஓட்டினேன்.
எட்டுத் திக்கும் என் கட்புலம் புகுந்தன.
நிலத்தையும் நோக்கினேன்; நீல வானையும்
என் கண் கூர்மை எட்ட முயன்றது.
அடியான் எனது பார்வையில் விழுந்தது.

மண்டலமிட்டு வளைந்த கோட்டிலே
அடுத்த சிற்றூர்ப் பனைகள் தெரிந்தன.
கண்ணுக் கெட்டிய தூரம் வரையும்
ஓவென விரிந்த ஒரு வெளி ஆகையால்,
வடக்கிலே இரண்டொரு மருதங்கன்றுகள்
தனித்து நின்று தலையசைத்து ஏங்கின.
பிள்ளையார் கோயில் மணி அசை கோபுரம்
மெள்ள ஒன்றியாய் மிளிர்ந்து கொண்டிருந்தது.

மேற்கிலே சூரியன் விழுந்து கொண்டிருக்கிறான்
மண்டலமிட்டு வளைந்தது தொடுவான்;
இருள் மெதுவாக இறங்கவும்
வெள்ளிகள் கண்களை விழிக்கத் தொடங்கின;

அண்ண'ந்து பார்த்தேன்-அது ஒரு கரிய
பிரமாண்டமான பெரிய கிண்ணியே!
வெள்ளிகள் கண்களை விழித்துச் சிமிட்டின.
பாதிக் கோளக் கவிழ்ப்பே வானமாம்.
நான் அக்கவிழ்ப்பின் நடுவிலே இருந்தேன்.
தரை ஒரு வட்டத் தட்டம்; அத்தட்டின்
மையம் என் கால்களில் வந்து விழுந்தது.
தொடுவான் மண்டல வட்டமும் கூட
நடுவிலே என்னையே நாட்டி வைத்தது.

எனக்குப் புலப்படும் அகிலம் முழுவதும்
என்னையே மையமாய்க் கொண்டு திகழ்ந்தது.
நானே மன்னன்! முதல்வன்
நானே இறைவன் என்று நம்பினேன்.

நாலாம் தெருவின் நல்ல தம்பியும்,
நயாகரா வீழ்ச்சியின் நதானியேல் பிலிப்சும்,
குற்றாலத்துக் குமார் ஜெய்சிங்கும்,
எஸ்கிமோ இனத்தவனாகிய ஜே'வும்,
நானே மன்னன்; நானே முதல்வன்
நானே இறைவன் என்று கூவினார்.

எனையோர் இதனை அறியார் போலும்!
நானே அகில நடுவில் இருப்பவன்.

நானே அகில நடுவில் இருப்பவன்.

இப்படி யாரும் எண்ணலாயினார்.
தமிழகத்தாரே' தாம் நடு என்றனர்.
இலங்கையர் எனிலோ யாம் நடு என்றனர்.
மற்றொரு சிற்றூர் வயோதிபர்-குருக்கள்
சர்வமும் தனது தலையிலே எனவும்
எண்ண லாயினார், இறுமாப்புடனே!

திருவாரூரிலே தேர் விழா நடந்தது;
ஒவ்வொரு 'நாளினை' உன்ளே வைத்த
தலை பல ஆயிரம் சார்ந்தன ஒருங்கே.
அகில மையங்கள் ஆயிரம், ஆயிரம்
அங்கே கூடி அமர்க்களப் பட்டன.
எனக்குப் புலப்படும் எனது பேருலகின்
அண்ட சராசர மையம் நான் ஆயினம்,
அகிய மையங்களே' அனந்தமாம் என்பதைத்
தேர் விழா செப்பமாய் எனக்குப்
போதனை செய்து புரிய வைத்ததே.


கூற்றுவன் கொலு


தென் புலத்தின் நகரிலே....
சா எனும் செய்ய மாளிகை மண்டபத்தே
ஒரு
குன்றை ஒத்த உடலுடன், அங்கதோ
கூற்றுவன் கொலு வீற்றிருக்கின்றனன்.
நின்று பற்பல தூதுவர்
நீண்ட அந் நேர் வரிசையில்
ஏவல்கள் கேட்கிறார்.
துன்பம் மிக்கவன்போல்
ஒரு தூதுவன் சொல்வது என்னவோ?
நாங்களும் கேட்கலாம்.

"சாவின் மன்னவ, தாள்கள் பணிகிறேன்.
தங்கள் ஆட்சியின் கீழே
உயிர்த்திரள் யாவும் என்று
நாம் எண்ணி இருக்கிறோம்.
என்ன செய்யலாம்? இன்று ஒரு மானுடன்
தாவி ஓடிச் சகோதரன் தொண்டையைத்
தாக்கினான், உயிர் போக்கினான் என்பதால்
ஆவி போக்குதல் நம் செயல் என்கிற
ஆதிபத்திய ஆட்சி தொலைந்தது.

"நேற்று மட்டும் மனிதன் மனிதனை
நேயமோடு நினைத்து நடத்தினான்.
ஊற்றை ஒத்துச் சுரந்த பிரிவினால்
உலகம் எங்கும் உயர்வு செழித்தது
சீற்றம் என்பது ஒன்று இன்று பிறந்ததால்,
செம்மை யாவும் சிதறி அதிர்ந்தன.
கூற்றுவத் தொழிலாளர் என நமைக்
கூறிக்கொள்ளும் நிமிர்வு குனிந்தது."

0

ஆண்டு நூறுகள் - ஆயிரம், ஆயிரம் -
ஆன பின்பு, ஒரு நாள்,
எம பட்டினம் மீண்டு சென்று
நாம் கண்டதொரு செய்தி-
வீற்றிருந்த இயமனின் முன்பு வந்து
ஈண்டு நின்றிலர் தூதுவர்.
ஆசனம் இட்டிருந்தால்,
ஏறி இருந்தனர்.
நீண்ட மூக்கும் நெளிந்த புருவமும்
நேர் வகிடுமாய்த் தூதுவன் பேசினான்-


** P=PATHINORU, E-ELATHU, K-KAVINGARGAL**
** pek001.mtfன் தொடர்ச்சி**

இறப்பின் மன்னவ,
எங்கள் பெருமையை
இன்றும் ஒர் சிறு மானுடப் பூச்சியன்
குறைக்க என்று தொடங்கியிருக்கிறான்.
கோபம் கொண்டவன்
அண்ணனின் தொண்டையை அறுப்பதற்கும்
அரிந்திடற்கென்றுமாய்
ஆயுதம் பல ஆயிரம் செய்கிறான்.
தறிப்பதற்கெனக் கோடரி, குத்த வேல்,
தாக்க என்று மழுப்படை, அம்பு, வில்...

"இன்னும் எண்ணில பல் படை செய்துளான்
இயம தூதுவர் என்ற மதிப்பினைச்
சின்னபின்னமாய்ச் செய்தது வையகம்.
சிறிதும் இல்லைப் பயம் எமைக் கண்டதும்
என்ன செய்யலாம்?"
என்று அவன் சொன்னதை
ஏற்றனன் செவி கூற்றுவன்.
'நல்லது.
சொன்ன நீ இனிப் போகலாம்' என்பதைச்
சொல்லிடாது
ஒரு பார்வையிற் காட்டினான்.


0

காலம் ஓடி விரைந்தது
பின்னும் அக்காலதேவனின் பட்டினம் சென்று,
நாம்
ஞாலமீதில் இப்போது உள மாதிரி
இயன்றதாகிய அலுவலகத்திலே
காலை நீட்டி, கதிரையிற் சாய்ந்த
அக்காலதேவனைக்
கண்டு திரும்பினோம்.
மூலை தோறெலாம் மேசை அருகிலே
முனைந்திருந்த அலுவலர் எண்ணிலார்.

பருந்தாய் ஒரு காகிதக் கட்டிலே
பச்சை மையில் அடித்த பெட்டீசத்தை
விருத்தனாய் ஒரு தூதுவன் தந்ததும்
மேலும் கீழும் பிரித்து, அதை நோக்கினான்.
கருத்தினோடு அதை வாசிக்க, வாசிக்க.
கண் இரண்டும் சிரித்தன.
கூற்றுவன்
பிரித்த காகிதக் கட்டை அப்பால் வைத்துப்
பேசினான் சில சொற்கள்-
நகைப்புடன்!

"மிச்சம் நல்லதிச் செய்தி.
புவியினை மெல்லக் கொல்லும்
நியூத்திரன் குண்டுகள்-
நச்சை ஒத்த படைக்கலம்-உண்டெனில்
நம்மில் உற்ற பொறுப்பும் ஒழிந்தது.
சொச்ச நேரம் சதுரங்கம் ஆடலாம்,
சுவைத் திரைப்படம்-வீடியோ-பார்க்கலாம்
மெச்சினோம்.
இனிமேல், அந்த மாந்தரே
விரைந்து செய்குவார் எங்கள் தொழிலையும்.

"ஆதலால், இம்மகஜரைக் கொண்டுபோய்
அடுப்பிலே வை.
குழம்பு கொதிக்குமே!
காதலாலும்
களிதரு நாடகக் காட்சியாலும்
விருந்துகளாலுமே
தீதிலா இந்நகரை நிறைந்திடச் செய்க"
என்று
சிகறெற்றை மூட்டினான்.

ஊதினான் புகை,
உள்ள மகிழ்வினால்.
'உய்ய' என்றே மின் விசிறி சுழன்றது.



இரண்டாயிரம் ஆண்டுப் பழைய
சுமை எங்களுக்கு


இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.
மூட்டை கட்டி அந்த முழுப்பாரம் பின் முதுகிற்
போட்டுக் குனிந்து புறப்பட்டோம் நீள்பயணம்.
தேட்டம் என்று நம்பி, சிதைந்த பழம்பொருளின்
ஓட்டை, உடைசல், உளுத்த இறவல்கள்,
பீத்தல், பிறுதல், பிசகி உதிர்ந்தவைகள்,
நைந்த கந்தல்-நன்றாக நாறிப் பழுதுபட்டுச்
சிந்தி இறைந்த சிறிய துணுக்கு வகை-
இப்படி யான இவற்றையெல்லாம் சேகரித்து
மூட்டை கட்டி, அந்த முழுப்பாரம் கண் பிதுக்கக்
காட்டு வழியிற் பயணம் புறப்பட்டோம்.

இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு.


மூட்டை முடிச்சு முதலியன இல்லாதார்
ஆட்டி நடந்தார், இரண்டு வெறுங்கையும்.
பாதை நடையின் பயணத் துயர் உணரா
மாதிரியில் அந்த மனிதர் நடந்தார்கள்.
ஆபிரிக்கப் பாங்கில் அவர்கள் நடந்தார்கள்.
மற்றும் சிலரோ வலிமையுள்ள ஆயுதங்கள்
பற்றி, முயன்று, பகை களைந்து, மேலேறி
விண்வெளியை எட்டி வெளிச்செல்லு முன்பாக
மண் தரையில் வான வனப்பைச் சமைப்பதற்கும்,
வாய்ப்பைச் சமனாய்ப் பகிர்ந்து சுகிப்பதற்கும்
ஏய்ப்பை ஒழித்தே இணைந்து நடப்பதற்கும்
நெஞ்சம் இசைந்தார்.
நிகழ்த்தினார் நீள்பயணம்.
பின் முதுகிற் பாரப் பெருமை இலாதவர்கள்
இத்தனையும் செய்தார்.
இனியும் பல செய்ய
எத்தனிப்போம் என்றார்.
இவை கண்டும்,
நாமோ
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமையைச்
சுருங்கும் படியாய்க் குறைத்துச் சிறிதாக்கிக்
கைப்பைக்குள் வைத்துக் கருமங்கள் ஆற்றுகையில்,
வெற்றுக்கை கொண்டும் வியப்புகளை ஆக்குகையில்
புத்தி நுட்பம், செய்கை நுட்பம், போக்குநுட்பம் என்பவற்றால்
சித்தி பல ஈட்டிச் செகத்தினையே ஆட்டுகையில்,
நாங்கள் எனிலோ நலிந்து மிகவிரங்கி,
பின் முதுகைப் பாரம் பெரிதும் இடர்படுத்த
ஊருகிறோம், ஊருகிறோம்-ஓயவில்லை,
ஊருகிறோம்.

வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி
அப்பாலே செல்லும் அறிவோ குறைவு
ஓ!
இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;
பண்பாட்டின் பேராற் பல சோலி எங்களுக்கு.


எங்கள் துணையே இனிய உலகமே....


உலகமே,
எம்மை உணர்த்தும் குரு நீ.
விலகி உனை ஒதுக்கி விட்டோமேல்,
நாம் இல்லோம்,
ஏதும் அறியோம்-எது உண்மை, பொய் என்ற
பேதம் அறியோம்
பிறவிப் பயன் அறியோம்.

உண்டி பெறவும், உடை பெறவும், பல்கோடி
பண்டங்கள் செய்து பயன் பெறவும் நீ þவ்ண்டும்.
ஆகையினால் உன்னை அறிந்து கொள்ள ஆசை உற்றோம்.
தேகமும், தேகத்தின் உள் மலர்ந்த சித்தமுமே
ஆயுதங்கள் ஆக்கி எங்கள் ஆய்வைத் தொங்கிவிட்டோம்
போயொழிந்த பல்கோடி ஆண்டுகளின் போக்கிடையே
உன்னை அறிய, உணர, முயன்று வந்தோம்.
என்ன உன்றன் மாட்சிமை!
நாம் இன்றும் திகைக்கின்றோம்.

தேகமும் நீ;
தேகத்தின் உள் மலர்ந்த சித்தமும் நீ.
ஆகையினால், எங்கள் அறிவின் குரு நீயே.


2

எம் முன்னே தோன்றும் இயற்கை-இயவுள் நீ.
'நீ' என்று சொல்லல் நியாயமா?
ஏ, உலகே!
நீ என்ன முன்னிலையா?
நாமும் உன்னில் ஓர் கூறே
ஆகையினால், முன்னிலையும் தன்மையும் நீ அல்லையோ?

'நீ' என்று சொல்லுவதும் குற்றம்.
'நாம்' என்பதுவும்
போதாதே!
ஆகையினால் 'நேம்' என்று சொல்லுவமா?
நேம் என்ற நாமம் உயர்திணையோ, அஃறிணையோ?
ஆறறிவு கொண்டே அறிவோமை உன்னுடைய
கூறாகக் கொண்டுள்ளாய்.
ஆதலின் நேம் என்னல்
உயர்திணையே தானோ, உயர்திணையே தானோ?

உலகே, உனை விளிக்க ஏற்ற இலக்கணமும்
மாந்தர் மொழியில் மலரவில்லை
ஆகையினால்,
எம் வசதி நோக்கி இனி உன்னை 'நீ' என்றே
சொல்லுவம்.
குற்றம் பொறுத்தல் உனது கடன்.


3

பேருலகே, உன் பெரு மாண்பு-பரிமாணம்
தேருவதோ மிச்சம் அருமை.
அறிவோம்.
தொலைகாட்டி, றேடியோ ஏற்பு முறைகள்
அலைவாங்கும் நுட்பங்கள், ஆய்வறிவு நுண்கணிதக்
கம்பியூட்டர்ச் செயல்கள் காட்டி வைத்த சான்றுகளால்
உன் பருமன் என்ன வரிசை என நாம் அறிவோம்.
ஆதலினால், நாம் உன் அணுவின் அணு எனினும்
காதல் செயும் எங்கள் கருமம், இன விருத்தி,
ஞான முனைப்பின் எழுச்சி, செயல் முயல்வு
போல உள்ள பண்பு, புதுமைப் பிறப்பாக்கம் -
இன்னவற்றை ஈட்டி இருக்கும் எங்கள் சித்தங்கஙள
சின்னவையா, என்ன?
சிறப்பாக நற்பேற்றின்
கூர்மை விளைவுக் கொடுமுடிகள் அல்லவோ?

கூர்மை விளைவுக் கொடுமுடிகள் நாம் எனினும்
நீயோ முடிவிலி.
ஓர் எல்லை இல்லா நீட்டி கொண்டாய்.
ஓயாத ஓட்ட உழற்சியாம் காலத்தின்
நட்ட நடுவே நடுபட்டு, நாடுகளாய்,
கண்டங்கள் ஆகி, கடல் போர்த்த பூமியாய்,
வெட்டை வெளியாய், வெறு விண்ணாய், கோள்களாய்,
நட்சத்திரப் குலையாய், நாகப் பெரும் பாழாய்
அப்பால் விரையும் நெபுலப் புகைச் சுருளாய்,
உண்மை பொய்மை கூடி ஒருங்கே குழம்புகிற
விண்குளத்தின் சேறாய் விசிறலுள்ள வாயுவாய்,
žறலாய், மாறலாய், žர்ப்பாட்டுச் செல்வளத்தின்
தேறலாய் எல்லாம் திகழ்கின்றாய்.
ஆதலினால்,
கூர்மை விளைவுக் கொடுமுடியாம் எம்மை விட
மேம்பட்ட சித்த மிளிர்வுச் சுடரொளிகள்
உன்னிடத்தே எங்கேனும் உண்டாக்கி வைத்திருப்பாய்.

முன்னும் நிகழ்வும் எதிர்வும் என மூன்றாகும்
கால விகற்பக் கரவுகளில் எம்மை விட
மேம்பட்ட சித்த மிளிர்வுச் சுடரொளிகள்
ஈன்றிருப்பாய்;
ஈனுகிறாய்;
இல்லையெனில் ஈனுவாய்.

இவ்வாறு நாங்கள் எடுகோள்கள் வைத்தாலும்
உண்மை பொய்கள் சற்றும் உணர இயலோம் நாம்!
ஏனென்றால் நீயோ அனந்தம்-
முடிவிலி நீ.
எல்லையே இல்லாய்.
எனவே, திடமாக
யாதையுமே நிச்சயிக்க எம்மால் இயலவில்லை.

கூர்மை விளைவுக் கொடுமுடிகள் நாம் எனினும்
யாதையுமே நிச்சயிக்க எம்மால் இயலவில்லை.


4


என்றாலும் நாங்களே இவ்விடத்து மன்னர்கள்
குன்றியும் கூனிக் குனிந்தும் நடக்கின்ற
தாழ் விலங்கு போலன்றி,
தாள் ஊன்றி மண்ணிடையே
வாழ்விலெங்கும் பச்சை இலையை வளரவிட்டே
ஊமையாய் நிற்கும் உயிரினத்தைப் போலன்றி,
நாங்கள் விழிப்புடையோர்.
நாவின் அசைப்புடையோர்.
தேங்கி நின்ற சித்தம் தெளிய, உயிர்ப்பெய்திச்
சூடு கொண்டு, சக்திச் சுறுசுறுப்பின் வீறு கொண்டு
கைக்குத் துணையாய்க் கருவி எடுத்தவர்கள்.
பேச்சாலே செய்தி பிறர்க்குணர்த்தும் வல்லமையும்
வீச்சாலே கத்திகொண்டு வெட்டித் திருத்துகிற
ஆற்றலும் கொண்ட அறிவின் குழந்தைகள் நாம்
எண்ணத்தின் பாய்வை இழுத்துப் பிடித்து வைத்து
மெய்மையுடன் மோதவிட்டு, மேம்பிறந்த போதத்தால்
புத்தி மெருகுப் பொலிவை எய்தி மின்னெறிக்கும்
சித்தங்கள் கொண்டோம் சிறியோம்-
எனில், வல்லோம்.

5

வல்லவர்கள் நாங்கள்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திச்
சில்லறையாய்த் தோன்றும் சிறிய பிரச்சினைகள்
வேரோடு கல்லி விழுத்தி வெறும் நீறாக்கப்
போராடி வெல்வோம்
பொதுமை அறம் மலர
எங்கள் அறிவின் எழுச்சி எனும் ஆயுதத்தை
உன்மீது தீட்டி, உனது சில பாகத்தை
மாற்ற முயல்வோம்.
மனம் உவந்து அம் மாற்றத்தை
ஏற்பாய் நீ என்ற இயற்கைப் பெருவிதியும்
நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.

நல்லுலகே,
நீ எமக்குத்
தாயாகித் தந்தையாய்த் தக்க பெருங் காவலுமாய்
நோயாகி, நோய்க்கு மருந்தாகி மேம்பாட்டாய்,
ஆண்டானாய் எம்மை எல்லாம் ஆட்டி வைக்கும் நீயே,
பின்
தோண்டி உனை நாம் உழுதால்,
பயன் பயக்கும்
தொண்டனாய்,
அற்பத் தொழும்பனாய்க் கீழ்ப்படுவாய்.
எங்கள் துணையே, இனிய உலகமே,
பங்கங்கள் பூண்டும் பரந்துபட்ட பூரணமே,
நீயன்றி வேறு நினைக்கத் தெரியோம் நாம்.
நீ விதிக்கும் எல்லைக்குள் நின்று சுழலுகிறோம்.
முன் அறியோம்; பின் அறியோம்; முடிவு தெரியோம் நாம்:
மின்னலொத்த இன்றை நிகழ்வும் முழுதுணரோம்.

ஆயினுமே உன்பொருட்டாய் அஞ்சுகிலோம்
அஞ்சலியோம்:
தாயே எனஉருகித் தஞ்சம் அடையோம நாம்,
நீ வணக்கம் கோரி எம் முன் நிற்கவில்லை- ஆதலினால்!

6

தொட்டளைவோம்;
எய்தித் துளைப்போம்;
தழுவுவோம்;
கிட்ட நெருங்கிப் பொருந்தி விளை ஆற்றுவோம்.
துன்பம் எழுந்தால், துடைப்பதற்குச் சூழ்வோம் நாம்.
இன்பமே எங்கள் இலக்கு.

7

இன்பமே எங்கள் இலக்கெனினும், நாம் நீதிப்
பண்புகளை நாடும் படைப்பு.


வேலியும் காவலும்


வேலிக்குப் பயிர்கள் மேலே
விருப்பமே இல்லைப் போலும்!
-சோலிக்கு முடிவு காண்பம்!
சுடுவம்,என்று எழும்பிச் சென்று
தீ வைத்து முடிந்த வேலி
திருப்தியை அடைந்திருக்கும்-
கோபத்தைத் தீர்த்திருக்கும்.
குவிந்ததோ-பயிரின் சாம்பல்!

2

தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு:
பயிர் பச்சை
நீட்டமாய் நீண்டு நெருங்கி மதாளித்துச்
சேட்டமாய் நிற்கிறது, செந்தளிர்ப்பாய்
காய் கனிகள், பூக்கள் குலுங்கும்
புளுகமுள்ள கொப்புகளைக்
காட்டி நிற்கும் கண்குளிர, இன்பச் சிறு செடிகள்.

கற்கள் மலிந்த கலட்டித் தரையிலே
புற்கள் படர்ந்து புலுண்டுவது தான்
இந்தக் காணி நிலத்தின் இயற்கை.
அதை மாற்ற என்று
தீர்மானஞ் செய்த செயற்கை வலிமையினால்,
கிண்டிக் கிளறி, கிணறிறைத்து நீர் பருக்கிக்
கொண்டிருக்கும் செய்கை
கொடுத்த பலன்களினால்
தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு, மதாளிப்பு!

'நீர் இறைப்புத் தீண்டாமல் நிற்கின்ற
புல் நுனிகள்
காய்ந்து சருகாய்க் கருகி இருந்தாலும்,
பூச்சி அரித்துவிட்ட பூசணியின் சாம்பல் இலை
ஓட்டை பிடித்துக் துவண்டு கிடந்தாலும்,
நோய்பிடித்த கத்தரியின் நூறிலையில் தொண்ணூறு
சூம்பிக் குனிந்தபடி தொய்ந்து கிடந்தாலும்,
அங்கங்கே நல்ல அழகான பச்சை உண்டு.
கண் களிர-
இன்பச் சிறு செடிகள்-
தோட்டம் எங்கும்!

தோட்டமோ கொஞ்சம் செழிப்பு-
மதாளிப்பு!'


3

சுற்றி நின்ற வேலி
சுருக்கென்று žறிற்றாம்
நட்ட நடு இரவில்-
நாலுபேர் காணாத கன்னங்கரி இருட்டில்-
காற்சட்டை போடாமல்
தோட்டத்துள் வேலி நுழையத் தொடங்கியதாம்-
வேலி
பயிரை எல்லாம்
மேய என்று போயிற்றாம்.
மேயத தொடங்கி விறுக்கென்று சப்பிற்றாம்.
மென்று மென்று தின்றதாம்,
மேல் இருந்த கொப்புகளை வாரி இழுத்து
வளைத்து, முறித்தெறிந்து,
வேரோடு வாங்கிப் பிடுங்கி மிதித்ததாம்.
ஓங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித்
தீங்கு பரத்திச் சிதைத்ததாம் தோட்டத்தை
பற்றாத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல்,
பெற்றோலை ஊற்றி நெருப்பும் கொளுத்திற்றாம்!
வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும்
வெந்து பொங்கிப் புதைந்து கரியாகி
நொந்து சுருண்டு-
வெறுங் சாம்பலாய்ப் போயினவாம்.

4

வேலை நிறுத்தமொன்றை
வேலை அற்ற சண்டியர்கள்
ஏவற் பேய் ஆகி இழுத்து விழுத்துதல் போல்
வேலி பயிரை எல்லாம்
மேய்த்துவிட்டுப் போயிற்றோ?

காலிப் பயல்கள் கடையை உடைப்பதுபோல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?

காடையர்கள் நூலகத்திற் கைவரிசை காட்டுதல்போல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டுப் போயிற்றோ?
கொன்று
தெருவிற் பிணங்கள் எறிவதுபோல்
வேலி பயிரை எல்லாம்
மேய்ந்துவிட்டு•ப போயிற்றோ?

5

வேலிக்குப் பயிர்கள் மேலே
வெறுப்புத்தான் இருக்கும் என்றால்-
வேலி ஏன்? காவல் ஏனோ?
காவலோ வேலியாலே?


நீலாவணன்

போகின்றேன் என்றோ சொன்னாய்!


மண்ணிடை இரவுக் கன்னியின் ஆட்சி
இன்னும் தேயவிலை-இளம்
தென்னையின் ஒலை பண்ணிய இன்பப்
பாட்டுகள் ஓயவிலை.
என்கடை வாயில் உன்னிதழ் ஊட்டிய
ஈரம் காயவிலை - எழில்
மின்னிடும் என்றன் மென்முலை தானும்
பின்னே சாயவிலை!

குறுமணல் மீது கொண்டல் தவழ்ந்த
சுவடும் மாறவிலை - அங்கு
புறவுகள் வந்து குறுநடை கொண்டு
கோலம் கீறவில்லை.
இரவின் 'அம்மிக் -குருவிகள்' இன்னும்
இல்லம் சேரவில்லை - என்னை
இடைவெளி யின்றி இறுக அணைத்த
இதமும் தூரவில்லை!

பருவப் பெண்ணாம் இரவுக் கன்னி
தவறிப் பெற்ற பயல் - அந்தப்
பரிதிக் குஞ்சைக் ககனத் தெருவின்
முடிவில் போட, அவன்
உருவப் பொலிவின் உதயத் தொளியில்
உறவை வெட்டுகிறாய் - பொல்லா
உதிர கடலின் நடுவில் படகில்
நடையைக் கட்டுகிறாய்!

"விண்ணின் தாரை எண்ணிப் பொழுதை
வீணாக்கிட வல்ல - அணு
விஞ்ஞா னிகள்போல் மண்மேல் உயிர்கள்
நீறாக் கிடவல்ல!
உண்­ர் என்றே மீன்கொடு வந்திவ்
வுண்ணா உலகத்தின் - பசி
ஓட்டப் போகின் றேனென் றோசொன்
னாய்" என் உயிரத்தான்!

வேம்புக் குமரி தென்றல் காற்றின்
வெறியைச் சாடுகிறாள்- அந்த
வீம்புக் காரன் விரகப் பேயோ
டவளைக் கூடுகிறாள்!
தேம்பிக் கொண்டே ஆடையை அள்ளி
மார்பை மூடுகிறாள் - உன்னைத்
தேடித் தேடி ஆழிக் கரையில்
ஒரு பெண் வாடுகிறாள்!


துயில்


'இந்த உலகில்
இருந்த சில நாழிகையில்
எந்தச் சிறிய உயிரும்
என் ஹ’ம்சையினால்
நொந்தறியா....
யாதும் எனை நொந்ததிலை' என்கிற
அந்த இனிய நினைவாம்...
அலங் கிர்த்த் தாலாட்டுக்(கு)
என் இதயம் தந்து...
பழம் பிசைந்த
பால் கொஞ்சம் ஊட்டப்
பருகி, அதைத் தொடர்ந்து
கால் நீட்டிப் போர்த்தேன், என்
கம்பளியால்.

தாலாட்டில் மாலாகி
என்னை மறந்து துயில்கையில்...வீண்
ஒப்பாரி வைத்திங்கு
உலகத்தைக் கூட்டாதே!

அப்பால் நடப்பை அறிவேன்
அதை ரசிக்க
இப்பயலை மீண்டும்
எழுப்பித் தொலைக்காதே!
தப்பாக எண்ணாதே,
தாழ்ப்பாளைப் பூட்டி விடு!

மேளங்கள் கொட்டி, என்றன்
மேட்டிமையைக் காட்டாதே!
தாளம் மொழிந்து
நடிக்காதே! என் பயண
நீள வழிக்கு நில
பாவாடை தூவாதே!
ஆழம் அகலம்
அளந் தெதுவும் பேசாதே!

மோனத்தில் உன் உணர்வை மொண்டு
இதய நெடும் வானத்தில்
நீ தீட்டி வைத்திருக்கும்
என்னுடைய தீன உருவை
முழுதும் வடித் தெடுத்து
மீன் விழியில் இட்டு விளக்கேற்றி
தொட்டிலிலி நம்
காவியத்தைப் பாடிக் களி!

பின் இயற்கையொடும்
சாவியலை எள்ளிச் சிரி.


பனிப்பாலை

பனி மழையும் குளிர் காற்றும்
பாதையெல்லாம் சவசவப்பும்
இனியனவாய் எதுவுமிலா
இருள் தூங்கும் பனிப்பாலை!
தனிமையிலே வழி நடக்கும்
இளவயதின் வழிப்போக்கன்
உனை வருத்தச் செய்திடலாம்
ஒருகல், மேல் போவாயேல்....

குன்றிரண்டின் நேர்கீழே
குளிர் காய்ந்து செல்ல இடம்
ஒன்றுளது;தேடிப்பார்
ஓடி நட போய் விடலாம்!

பள்ளத்தைக் கண்டுபிடி;
சாம்பரினைத் தட்டிவிடு
உள்விட்டுன் கைத்தடியால்
உராய்ந்து கிளறிப் பார்!
துள்ளுகிற நாய் நாக்கில்
கொள்ளிகளை அள்ளி யெறி!
பள்ள மெலாம் சிவந்தெரியும்
பனிக் குளிரும் தீர்ந்து விடும்!


வழிப்போக்கர் - பனிஇரவின்
வாதையினைப் போக்குதற்கு
குளிர்காயும் குளிர் நெருப்பின்
அருகினிலே, தரியாத
வழிப்போக்கர் - மிகச்சிலரே
வந்து சென்றார் இவ்வழியே.
வழிப்போக்கர் மிகப்பலபேர்
இனிமேலும் வரக்கூடும்

என்பதற்காய்க் குழி நெருப்பை
மூட்டிவிட்டே போவார்கள்
என்பதனால் என்றென்றும்
இந்த நெருப் பெரிநதிருக்கும்.
அன்பு மன ஆழ் குழியுள்
அமைந்தடங்கி ஓளிர்வது போல்
இந்த நெருப் புக்குழியுள்
எந் நாளம் அவியாது!

இன்று நீ குளிர்காயும்
இச்சிவந்த குளிர் நெருப்பில்
என்றேனும் இனும் ஒருவன்
குளிர்காய நேர்ந்திடலாம்

உன் போலவே, அவனும்
குழி நெருப்பை வளர்த்திடலாம்
முன்னொருகால் ஓர் மனிதன்
மூட்டி வைத்தான் இந் நெருப்பை,
கல்லோடு கல் பொருத்திக்
கடைந்து கன காலமெலாம்
தொல்லைபல பட்டலுத்தும்,
தோல்வி பல கண்டு கண்டும்,
எல்லையுற்ற தன்னுழைப்பு
யாவினையும் தோற்றீற்றில்
எல்லோரும் குளிர்காய
இந்நெருப்பை மூட்டி வைத்தான்!

'நாளை வர இருக்கின்ற
ஏழை வழிப் போக்கன், வரும்
வேளை வரை குழிக்குள்ளே
நெருப் பிருக்க மாட்டாது
வாழ்வென்று வருவோனை
வருத்துமிந்தக் குளிர் பாலை
ஊழென்ற காரணத்தால்
உண் டுறிஞ்சச் சம்மதியேன்!,

'கம்பளிகள், சப்பாத்து,
காலுறைகள் இருக்குமெனும்
நம்பிக்கை கிடையாது,
நாளை வரும் மனிதனிடம்!
அம்மம்மா கொடிய பனி,
அவன் மிகவும் துயர் படலாம்!
அம்மனிதன் சாவதனை
சம்மதிக்க முடியாது!

ஆகையினால்....இந்த நெருப்
பணையாமல் எரிந்திருக்க
ஆகுதியாய்த் தன்னையே
அர்ப்பணித்தான் அம்மனிதன்!

போகின்ற வழிப்போக்கர்
குளிர் காய்ந்து, தம் சுமைகள்
'சோக நெருப் பெரிக!' எனச்
சொல்லியதில் வீசுகிறார்!

அவன் மூட்டும் தியாக நெருப்
பணையாமல் வளர்ந்திடல் பார்
அவன் மூட்டும் தியாக நெருப்
பணையாமல் நிமிர்த்திடல் பார்!


பாவம் வாத்தியார் !


வாழத் தெரியாமல் வம்புகளில் போய்மாட்டும்
ஏழைப் புலவர் பெருமானே, என்ன இது!
கையிலே மூட்டை முடிச்சும் கவலைகளோர்
பையிலுமாய் நிற்கின்றீர்! 'பஸ்' சுக்கோ? நீண்டதொலை
துரப்பயணம் போல்! தொந்தரவே! - எங்களது
ஊரார் உமையிந்த ஊரைவிட்டே ஓட்டுதற்காய்....

கல்முனைக்குப் போயலைந்து காசம் கொடுத்து 'ரைப்பிங்'
செல்லையா அண்ணரது சிந்தனையைப் போட்டுடைத்து,
வெல்ல முடியாது சோடித்த பிட்டிசத்தில் -
சொல்ல வெட்கமே; எனினும் சொல்லமலும் போக
ஒண்ணா திருக்கிறது ! ஓம் அந்தப் பிட்டிசத்தில்
உன்னாணை நானுமொரு கையொப்பம் போட்டதுண்மை!
ஏனென்பீர்? ஏதும் எனக்கோ தெரியாது...!
நானுமிந்த ஊரில்நெடு நாளாக வாழ்கிறவன்.
போடென்றார் போட்டேன்! நான் போடாதுவிட்டிருந்தால்-
ஓடென் றுமையேபோல் ஊரைவிட்டே ஓட்டிவிட்டால்....!

ஊரையே கூழாக்கி ஊதிக் குடிக்கும் கைக்
காரரிவர்! கை நிறையக் காசும், எடுபிடியாள்,
ஏராளமான இனசனமும் உள்ளவர்கள்!
ஆரவரைக் கேட்பவர்கள்? ஆலயங்கள் -கூப்பன்
கடைகள் அரசாங்க நன்கொடைக் காசு
கிடைக்கின்ற சங்கங்கள் எத்தனையோ....அத்தனையும்
ஆண்டே அனுபவிக்கும் ஆகப் பெரியவர்கள்!
வேண்டியவர்!-உம்மை விளங்காமல் வைக்கவில்லை!
நீர் இந்த ஊர்க்கு நியமனம் பெற்றுவந்த
நேரத்தில், இவ்வூர் இருந்த நிலைமைகளும்
ஆறே ழே ஆண்டில் அடைந்த வளர்ச்சியையும்,
ஊரோடு கூட உணர்வேன் யான்; உண்மையில் நீர்
வாழத் தெரியாத வாத்தியார் தான் அண்ணே!

ஏழேழ் தலைமுறையாய் எம்மூரின் கோயில்
மதிலாய் உயர்ந்து நிற்கும் மாபெரிய காடு!
அதிலே உமக்கென்ன அக்கறையோ? பள்ளிச்
சிறுவரை விட்டுச் சிரைத்து நிலவேர்
அறுத்துப், பிடுங்கி, அகற்றி, அம்மன் வீதியினை
வெட்டை வெளியாக்கி வெள்ளைமணல் கொட்டிவைத்தீர்!
புற்றுடைத்துப் பாம்புகளும் போக விடைகொடுத்தீர்!
மாரியம்மன் நேர்த்தி மதுவாக ஆண்டுதொறும்
சாராயம் கொண்டு தருவார்கள், சான்றோர்கள்
ஆனபக்தி மான்கள்! அவற்றையெலாம்-பூசாரி
ஆணையிடக் கொண்டுபோய் 'அம்மன் பரிகலங்கள்'
எல்லாம் மதுவெடுக்க என்றிருந்த காட்டையெலாம்
தொல்லைமிகப் பட்டுவெட்டித் துப்புரவு செய்தீரா...!
அம்மாள் உமது செயலை ஒரு பொழுதும்
சம்மதியாள் என்பதையூர்ச் சான்றோர்கள் நன்கறிவார்!
அம்மட்டுந் தானா....? அவசரக்காரன் நீர்!
சும்மா கிடவாமல் சோலிக்குள் மாட்டுகிறீர்!

கூப்பன் கடையோர் குடும்ப நிருவாகக்
காப்பில் இருப்பதையும், கல்லாவூர்ப் பாமரர்க்கு
உள்ளபடி பண்டம் உதவா துறவினர்க்கே
கள்ளத் தனமாய்க் கடந்தலையும்-கண்டித்துப்
பேசி, அதைப்பெரிதாய்ப் பேப்பரிலும் போடுவித்தீர்!
வாசித்துக் கேட்டவர்கள் வாழ்த்தினார்! வாய்திறந்து
பேசினால்...அன்றுமது வீட்டிற் பொழிந்த கற்கள்
'வேசி மகன்' என்ற வெறிச் சொற்கள்...பாய்ந்துவந்தே
எங்கள் மனைக்கும் எரியூட்டி வீணாகச்
சங்கை குறைந்திந்தச் சந்தியிலே விட்டிருக்கும்!

பள்ளிக்கூடத்தில் பசலிரவாய்ப் பாடுபட்டுச்
சொல்லிக் கொடுத்துச் சுணையேற்றிக், கல்வியிலே
நாட்டத்தைக் கூட்டி நயம்பலவும் துய்க்கவைத்தீர்!
வீட்டுக்கு வீடு பிள்ளை வீசிப் பிடித்தீரே!
பெற்றார் தினங்கள் - விளையாட்டுப்போட்டி - மற்றும்
சுற்றுலா என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தீரா!...

வாசிக சாலை, வளர்ந்தோர் வகுப்புவைத்தீர்!
காசு விளையாட்டுக் காவாலிக் காளைகளை
ஏசி, விவசாயம் - ஏற்ற தொழில் செய்ய வைத்தீர்!
கூசும் படியாம் குணக்கேட்டைக் கொல்லுகிறீர்!
'நாடகங்கள் போட்டூரை நையாண்டி செய்கின்றான்!
வாடா வெளியாலே வாத்தியுனைப் பல்லுரைடப்போம்!
என்றார் சினந்தார் எழுந்தார்கள் போடிமக்கள்,
என்ன புதினம்!-இளந்தாரிக் கூட்டமென்று...
பாலன், அழகையா, பார்த்தன், சிவம், சாமி
வேலன் வயித்தி உங்கள் முன்னைநான் மாணாக்கர்
கூட்டத் திருந்து குதித்து வெளியேறி
வீட்டிலிருந்து கொம்பும் வீரர்களைக் கூப்பிட்டே.....

'உண்மைகளை ஊரில் உறையும் சிறுமைகளை
சொன்னால் உமக்குச் சுருக்கென்று தைப்பானேன்?
பிள்ளையார் கோயில் பெயரில் பிறவூர்வாழ்
வள்ளல்கள், தானம் வழங்கும் வயல் நிலங்கள்
பெற்றுவந்த கோயில் பிராமணனைத் தன்னுடைய
கற்பால் வளைந்து கலியாணம் செய்தவளின்
சொத்தாமோ?...கோயிற் சுதந்திரமோ? குஞ்சியப்பன்
அத்தானும் மாமாவும் அண்ணாவும் தம்பியுமாய்ச்
சாப்பிடவா கூட்டுறவுச் சங்கக் கடை? சனத்தை
எய்ப்பதற்கா? இல்லையது எல்லோர்க்கும் உள்ளதுவோ?
சாக்குவிற்ற காசெங்கே? சாராய மாயிற்றோ?
போக்கணம் கெட்டவரோ போடிமக்கள்? - சங்கத்துக்
கட்டிடம் கட்டவென்று காசுபெற்றீர் ஆட்சியிடம்;
எட்டு வருடங்கள்! எங்கேயோய்...கட்டிடம்?
கல்வீடு - உழவுமெஷ’ன் - கார்-காணி-கையிருப்பு
எல்லாம் உமக்குமட்டும் எவ்வகையாய் எய்தினவோ!
எதிவைகள்? ஏதிவைகள்? எல்லாம் பகற்கொள்ளை!
சாதுக்கள் போன்றே சனத்துள் நடக்கின்றீர்!
எல்லாம் எமக்கும் புரிகிறது! கள்ளர்களே!
'பல்லுடைப்போம்' என்றெவரைப் பண்புகெட்டுப் பேசுகிறீர்
என்றுரத்துக் கேட்டார் இளைஞர், எதிர்த்தவரை;
ஒன்றும் விளங்காமல் உர்ப்பெரியர் யோசித்தார்!
அன்றிரவே பிட்டிசத்தை அச்சடித்தார்! - உம்மீதில்
ஒன்றிரண்டா குற்றங்கள்! - 'ஊரைக் கெடுக்கின்றீர்!,
சாராயம் போடுவதே சத்தமிடக் காரணமாம்!,
ஆரோ ஒருத்தி தொடுப்பு! அவள்பேர் பூரணமாம்!,
ஆரையும்கண்டால் அரசியலே பேசுகிறீர்!,
காரணம் நீர்...ஆள்பெரிய 'கம்யூனிஸ்ட்' காரனாம்!,
மாணவர்க்கும் அந்த மனப்பான்மை ஏற்படுத்தி
மானம் கெடுக்கின்றீர்...மாபெரிய போடிகளை!'

'ஏன்? என்றிவற்றை விசாரித்து - இங்கிருந்தும்
ஏன் இவரை மாற்றல் இயலாது?' என்று
அமைச்சு முதல் கல்வி ஆலோசகர் வரை
உமக்கு நடவடிக்கை...ஓம்! உடனே வேண்டுமென்
'இங்கிலிஷ“ல்' நன்றாய் இயற்றி இருந்தார்கள்!
சங்கிலிப்போடி குற்றச் சாட்டர்;...அதைத் தொடர்ந்து -
பத்தாண்டின் முன்பு செத்த பல்லன் கணபதியன்
வத்தவக் காயன், வழுக்க மொட்டை மூத்ததம்பி,
பத்தினியன், குஞ்சன், பனையான், பலாக்கொட்டை,
பொத்துவிலான் பொன்னன், பொருக்கன், நரைச்žனி,
கண்டாரை வாலாட்டிக் கந்தன் முதலானோர்
கண்டபடி யாகவெல்லாம் கையொப்பம் போட்டிருந்தார்!

நானொருவன் மட்டுமுமை ஆதரித்தல...?
வீணென் றுணர்ந்தேன்; விதி! யென்றே ஒப்பமிட்டேன்!

மாற்றம் தொலைக்கோ? மனிதருள்ள ஊர்தானோ...?
ஆற்றைக் கடக்கும் அவதிகளம் உண்டாமோ?
பள்ளி தளபாடம் உள்ள நல்ல கட்டிடமோ?
பிள்ளைகளும் ஆங்கு படிக்க வருவாரோ?
போக்கு வரவு பொருந்தும் இடமிலையேல்
ஆக்கினைதான் ஐயோ!...அதற்கென்ன போய்வாரும்?

நீதியைப் பற்றி நினைவார்க்கு நேர்வதிதே!
சாதிக்கு மட்டுமே சங்கைசெய்யும் எங்களின் ஊர்!
நீர் உமது வார்த்தைகளால் நீதித் தீ மூட்டுகிறீர்
ஆர்செய்வான் நீரோர்...அரசாங்க...ஊழியன்!

வாழப் பழகுங்கள் வாத்தியார்! வையகத்தில்-
ஆள்வோர் சிலபேரும் ஆளப்படுபவர்கள்
கோடிக் கணக்கும் குவிந்து, தமை இழந்து,
பேடிகளாய்ப் -பேயாய்ப் - பிணமாய்க் - குருடாகிச்,
சாராயத் துள்ளிகளில் சத்தியத்தைப் பூசிப்பார்!
ஆராண்டால் என்ன? அந்த ஆள்வோர் திருப்புகழைப்
பாடி, நான் என்னுடைய பங்கைப் பெறுகின்றேன்.
கூடினால் நல்ல குடி - விருந்து கொண்டாட்டம்!
எல்லாம் கிடைக்கும் எனக்கு! - உமக்குமவர்
இல்லையென்றா சொன்னார்கள்? ஏனிந்தப் பொல்லாப்போ?
ஆராரோ அக்கினியை அள்ளி விழுங்குகிறான்!
ஊரைச், சுளையிருக்க உள்ளால் உறிஞ்சுகிறான்!
காணாமலா ஊரார்? கண்டாலும்....பேசாமல்...
மானமாய் வாழ மனத்தைப் பழக்கிவிட்டார்!
நானும் அவர் வழியில் நாணயமாய் வாழ்பவன்! நீர்,
வீணாக வம்பை விலைகொடுத்து வாங்கிவீட்டீர்!

என்ன சிரிக்கின்றீர்? எங்கிருந்தால் என்ன கற்றார்!
என்றோ?...சரிதான் நீர் எப்பொழுதும் கூவதே!-
'ஆளுமே அன்றி, அறியாமைக் கீழ்ப்படிந்து
ஆளப்படுமோ அறிவு?' அதோ...ஸ்தான்!
ஏறுங்கள்; உள்ளே இடமும் இருக்கிறது;
வாருங்கள் ஐயா! வணக்கம், போய் வாருங்கள்!


ஓ! வண்டிக்காரா!


ஓ...ஓ...வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போம் முன்னோட்டு

ஓ...ஓ...வண்டிக்காரா

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு
நாமும் நமது பயணம் தொலைய
நடந்து செல்வோம் கூட்டு.

ஓ...ஓ...வண்டிக்காரா

பனியின் விழிநீர்த் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தோயும் நிலவின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே...

ஓ...ஓ...வண்டிக்காரா


மு.பொன்னம்பலம்


மதிப்பீடு

எனக்கோ வயது இருபத்தைந் தாகிறது
வாழ்க்கை இதுகால் வரைந்த வரலாற்றை
மீட்டுச் சுவைத்து மதிப்பீடு செய்கின்ற
வேட்கை எனக்குள்ளே விம்மி எழுகிறது.
ஏட்டை எடுப்பேன் எழுதிக் கணக்கெடுக்க.

அணைந்த நெருப்பாய், அவிந்த குமிண்சிரிப்பாய்
காற்றில் கலந்தஎன் கால்நூற்று ஆண்டாளே,
பாலை மணலில் பதிந்த அடிச்சுவடாய்
தூர்ந்து தெரிகின்ற காலச் சுவடுகளே,
நீங்கள் எனைப் பிரிந்து நீள்தூரம் செல்கின்றீர்,
போங்கள். இதுகால் புணையாய், அலைகடலாய்
வாழ்ந்து எனக்கு வரலாறு தந்திப்போ
போகின்றீர். நானோ, பொருமி எழுந்தெதிரே
எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே
குந்தியிருக்கும் றொபின்சன் குறுசோப்போல்
பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற
ஓர்தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.

நீரோடு முத்தம் நிகழ்த்தும் அடிவானின்
ஓரத்தில் ஆடி ஒளிரும் ஒரு சுழிப்பில்
தன்னை இனங்கண்டு தாவும் மனப்பேடு.

என்ன அது? வாழ்வின் இலக்கோ? கலைத்துடிப்பின்
சின்னக் கனவுலகோ? žர்பெற் றொளிர்கின்ற-
முன்னர் ஒருகவிஞன் போக முனைந்திட்ட-
"எல்டொறடோ" என்கின்ற இன்ப மணிப்புரியோ?
ஏதோ அறியேன். இளையாய் முதுகெலும்பின்
கோதில் உருள்கின்ற குன்றி மணித்துடிப்பில்
பீறியெழும் மின்னல் பெருக்கின் நொடியில் அவை
எல்லாம் புரியும்;இருந்தும் புரியாது.
மல்லாந்து அங்கேகும் மார்க்கம் அறியாது
பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற
ஓர்தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.

நானேறிப் பாயிழுத்த நாவாய் அனுபவத்தின்
போதாக் குறையாலோ பிஞ்சில் பழுத்ததிலோ
மோதுண்டு கல்லில் முடமாய்ஜடமாகி
ஓரம் கிடக்கிறது. ஓய்ந்து தனிமனுவாய்
குந்தி யிருக்கும் றொபின்சன் குறுசோப்போல்
நானிங்கு. ஏதேனும் நாவாய் வருஞ் சிலமன்...?

ஆவல் விழியீற்றில் ஆட, அடிவானம்
கூவும் மௌனக் குரலில் உளம் ஓட.......
காத்துக் கிடக்கின்றேன், காலம் வரும்வரைக்கும்.

பாட்டில் விழுந்த பழைய வியாபாரி
ஏட்டைப் புரட்ட இதயத் திருப்திக்காய்ப்
பார்க்கும் பழங்கணக்காய், நானும் பழையவற்றின்
ஈர்ப்பில் மனதை எடுத்து நடக்கின்றேன்.

அம்மா எனும் அந்த அன்பு மலைக்கோயிற்
சன்னிதியில் நான்முன்னர் தாவித் தவழ்கையிலே
என்ன நினைவையவள் என்னில் செதுக்கினளோ?
சோறூட்டி?, வானம் தொடுத்த மலர்ச்சரத்தின்
ஊர்காட்டி, அன்பு ஒழுக்கி வளர்த்த அவள்
என்ன நினைவையெலாம் என்னில் செதுக்கினளோ?

என்ன நினைத்திருப்பாள்? என்றன் மகன்பெரிய
மன்னனாய், காரில் மதிப்போடு மாற்றரின்
கண்ணில் படவாழும் காட்சி வழியிலவன்
என்னை நிறுத்தி இறும்பூது எய்திருப்பான்.

என்ன பிழை? இற்றைச் சமூக இயல்புகளின்
சின்னம் அவள்; வேறு சிந்தை அவட்கேது?

பாவம், ஒய்! என்னை நிதம் பள்ளிக் கனுப்பியவள்
மோகமுற, நானோ முருங்கை மரக்கிளையில்
காகம் இருந்து கரையும் அழகினிலும்,
வேகமுடன் காற்று விரைய நிலமிருந்து
சேவல் உதிர்த்த சிறகு மிதப்பதிலும்,
அண்ணாந்து பார்த்தாலோ அங்கே கரும்பருந்து
பண்ணாய் விசும்பில் படரும் சுருதியிலும்
ஏதோ கனவை இயற்றத் தொடங்குகிறேன்.

பள்ளியிலே ஆசிரியர் "பேயா, உனக்கிங்கு
கல்வி வராது! களிமண்ணே மூளை" யென
அன்னார் திருமொழிக்கு அப்பழுக்கு நேராது
கண்ணன், சிவபெருமான், காரம் பசுவெல்லாம்
மண்ணில் சமைத்தேக, மாணவர்கள் கொண்டாட,
ஆதிச் சிவனார் அடிநுனியைக் கண்ட, புது
மாலயனாய் என்றன் மனது சிறகடிக்க.....

அந்தி அடிவான், அமுதக் கடைசலென
குந்தி யெழும்நிலவு, பூவரசங் குழையூடாய்
சிந்திக் கிரணங்கள் செல்லம் பொழிகின்ற
காலைப் பரிதி, ககனச் சிறுபறவை,
"ஏலோ" எனநீர் இறைப்போர்- இவையெனது
பிஞ்சு மனதைப் பிசைய, மறுகணமே
பெஞ்சில் எடுத்தெச்சில் பெய்து சுவரெல்லாம்
நெஞ்சில் புரண்ட நினைவுக்குத் தொட்டிலிட.....
என்ன விதமாய் இளமை மறைகிறது!

கன்னக்கோல் இட்ட களவாய், நெருப்புற்ற
பொன்னுருக்காய், மின்சிரிப்பாய், போகந் தருந்திகிலாய்
சின்ன வயது சிறகடிக்க, நான்பெரிய
மன்னனாய் அல்ல அல்ல, மண்டூகம் என்கின்ற
பட்டத்தை வாங்காக் குறையாய் படித்தந்த
"எஸ்எஸ்ஸ’" என்னும் இடறும் பரியின்
பிடரி பிடித்தேறி - பின்னங்கால் தந்தஉதை
இன்னும் விலாநோக-எப்படியோ தொத்தியதில்
வெற்றி முழக்கமிட்ட வீர வரலாறு....

தூர ரயில் கூவும். தொத்துதற்கு முன்அம்மாள்
ஈர முகம்நோக்கி, "எல்லாம் சரி" யென்று
கூறிப் பிரிந்து கொழும்பு நகர்வந்தால்,
ஏதோ கடையில் இருந்து கிறுக்குகின்ற
மாதம் வயிற்றை நிரப்பும் ஒருவேலை.

பேதாதா? என்னைப் படைத்தோன் படியளந்தான்.
வாழ்கஅவன். வேலை முடிந்து அறையடைந்து
பாட்டில் விழுந்து முகட்டில் விழிபதித்தால்,
ஓட்டு ரயிலாக ஓடும் எலிக்குஞ்சு.
நீட்டு ரயிலாய் நெளியும் ஒருசாலை-

வேட்டை, அடடா, இதுகால் விழுந்திருந்த
"தொட்டில் பழக்கம்" சுரீரென்று பற்றியெழச்
சிற்பி ஒருவன் செதுக்கத் தொடங்குகிறான்.
எட்டாக் கனியாய் இருந்த நிலாப்பேடு,
கொட்டும் மழை, விண் குடையும் பிரளயங்கள்,
மொட்டாக்கில் வாழும் மரும முடிச்சுக்கள்,
கிட்டாப் பொருளாய்க் கிடந்து கரங்காட்டும்.

எல்லாம் எதிர்வந் திரங்கிக் கரங்கூப்ப
சொல்நுழையா ஊரெல்லாம் தேரோட்டி அங்குலவி
வில்லாள னாய்அகிலம் வென்ற களிப்போடு
மீண்டும் உலகிறங்க, முன்னா லுளயன்னல்
வாங்கும் நிகழ்வில் விழிப்போய் நனைகிறது.

என்ன சனங்களிவர்? ஏதோ வெறியில்
கடலைக் சிதறலென கால்போன
உடலை நடத்துகிறார். ஓவென் றிரைந்தவரைத்
தின்று பசியாறத் திரியும் அசுரக்கார்
வண்டியினம். நித்தம் வாய் பிளந்து கொக்கரிக்கும்
வானொலிகள். றோட்டில் விழுந்து புரள்கின்ற....
கூனல், முடம், நொண்டிக் குப்பை - இவற்றுள்ளே
என்ன நினைப்போரோர்?

எனக்கே எனதுருவம்
கொன்னை நினைவாய்க் குருடாய், குறைச்சிலையாய்த்
தன்னை இழந்தழிய, தாவி வெளியுலகக்
குப்பைக்குள் நானும்போய் குன்றி மணிபொறுக்க
ஆயத்தம் ஆகின்றேன். அப்போதான் அங்கவளைச்
சந்தித்தேன்.

ஐயா, நம் சங்கத் தமிழ்க்காதல்
வந்ததுவோ எச்சில் வடிய, ஒருதலையாய்-
வாடாமல் சட்டை அணிந்து, தலைமயிரை
நீரோடு எண்ணை நிரவி நிமிர்த்திவிட்டு,
மாதாந்தம் பெற்ற வருவாயில் மண்வீசி,
ஓடோடி நாளும் உரோமம் சிலிர்த்தெழும்பக்
காதலித்தால்-அந்தக் கனகி புரிந்த வினை
வார்த்தைக் கடங்காத வானச் சிதறல்களாய்,
பூச்சரமாய் ஆச்சரியம் புரிந்து, சிலநாளில்
புஸ்வாண மாகப் புரியாத் துயரத்தில்
மூழ்கி அடியேன் முணுமுணுக்க,
ஓர் கடிதம்
அம்ம அனுப்புகிறாள்: "என்றும் சிவபெருமான்
முன்னிட்டு வாழுற மோனுக் கெழுவது.....
இங்கு கடன்காரர் என்னை நெருக்கீனம்
கூப்பன் எடுக்கவும் காசில்லை. ஏதேனும்
பாத்தனுப்பு. இப்படிக்குன் தாயார்" என்றந்தக்
கடிதம் கதைக்கிறது: கர்ம வினையால்தான்
விடிய அவள் வயிற்றில், வீணே எனைநம்பிக்
காலம் கழிக்கின்ற கட்டுப் பிணிப்பையெலாம்
நாயாய்க் கழிக்கும் நமைச்சல் எனக்குள்ளே.
ஆனாலும் ஏதோ அனுப்பித் தொலைக்கின்றேன்.

காதல் ஒடிந்துவிழக் காமம் தலைதூக்கும்.

சேலைச் சரசரப்பு, சின்ன இடை, காற்றால்
மேலெழும்ப ஆடை அதனுள் மினுங்குகிற
வாழைத் தொடைகள், வயிற்றின் இடைவெளியில்
ஆளுக்கு எதையோ அருட்டி வி, நானே
எனக்குக் குருவாய் இருந்து படித்த வித்தை
உத்தி பலவுண்டுதவிக்கு. அவைவிரிக்கின்
உட்பிரிவு கூடும். உமக்கேன்?-இவையென்னை
ஆட்சிபுரிந்து அளந்த திரவியங்கள்......

அம்மி இருந்து அகன்ற இடமாயென்
கன்னங் குழியோட, கண்டால் எனதம்மா
"கோதாரிப் போவான்கள்" என்றுக் கொழும்பூரில்
சோறாக்கிப் போட்டோரைத் திட்டித் தொலைத்திருப்பாள்.

இப்படியாக இனிமை எனக்களித்துக்
காலங்கள் வேப்பமரக் காயாய் உதிர்கிறது.
ஏனப்பா மேன்மேலும் இந்தச் சனிவாழ்க்கை?
நானெப்போ என்னை நசுக்கித் தொலைத்திருப்பேன்
ஆனால் முடிகிறதா? அந்தக் கருவானின்
கூனல் முடிவில, குதிக்கும் ஓருசுழிப்பில்
ஏனோ இதயம் இழைய, மறுகணமே
இங்கு வதிகின்ற எல்லா உயிரினமும்
என்கீழ் இயங்கிவர, இப்பார் முழுவதையுமோர்
சங்காய் எடுத்தூதும் சக்தி எனக்கேற.....

அன்றொருநாள் கேளும், அருமையாய் என்பேரில்
தந்திவரும் "அம்மா சாகக் கிடக்கின்றா
வந்துபார்" என்று. வயிற்றில் அடித்தபடி
ஓடுகிறேன். அங்கு உருவம் அழிந்தம்மா
கட்டிலிலே. என்செய்வேன். காசம் அவளுக்கு.
முட்டிச் சுவரோடு மோதி அழுகின்றேன்.

வட்டிலிலே சோறு வழங்கி எனையணத்த
பட்டுச் சிறுகரங்கள், பார்த்த மறுகணமே
ஓத்தித் துயரை எடுக்கும் ஓளிவிழிகள்,
வற்றிக் கிடந்தாலும் வந்து எதிர்நின்ற
என்னை இனங்கண்(டு) இறக்கை அடித்திட
இந்தக் கணப்பொழுதில், ஆமய்யா, என்னோடு
இந்த உலகமே இதுகால் இழைத்திருந்த
பாவமெலாம் நீங்கிப் பரிசுத்தம் பெற்றிருக்கும்.

எல்லாம் முடிகிறது. எங்கோ நெடுந்தொலைவில்
மல்லாந்து, அம்மா மரணத் துணையோடு
சொல்லாட, நானோ சுருண்டு கொழும்பூரில்.....
எல்லாம் முடியும்.
இளைய பரம்பரையின்
செல்வன் இதுகால்நான் சேகரித்த கையிருப்பை
எண்ணிக் கணக்கிட்டேன்: ஏ, என்னை விட்டோடும்
காலக் கொழுந்துகளே : கையொடிந்து இங்கேநான்
எங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே
குந்தி யிருக்கும் றொபின்சன் குறுசோப்போல்
பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற
ஒர்தீவில் வந்து ஒதுங்க்கி கிடக்கின்றேன்.

தூரத்தே அந்தச் சுழிப்பின் ஒளியாட்டம்.
ஏதேனும் நாவாய் இனியும் வருஞ்சிலமன்...?


மின்னல்

யன்னல் இடுக் கிடையே
மின்னல் தெறிக்கிறது!
பருக விழிவாயின்
கதவு திறபடு முன்
நழுவும் அணில் வாலா?
அரவின் எயிற்றிடையே
நெரியும் தவளையின் கால்
கிண்ணி நடுக்கமென-
இல்லை-
அச்சத்துக் கழகெங்கே?
சாவுக்கு ஒளியேது?
அது,
சாவின் நிழலல்ல!
நினைவிற்குள் நிற்காது
நெஞ்செல்லாம் தானாகி
உருவில்லா மன்மதனாய்
ஒளிந்தும் தெரிந்தும்
கஞ்சத் தனம் தன்னைக்
காட்டப் புரிவதனால்
தன்பால் எமையிழுக்கும்
இன்பப் புதுக்கவியா?
மின்னல் கவிதையா?
அல்ல-
கவிதைக்குள் சிக்காது
கவி நெஞ்சு புரிகின்ற
காலத்தின் நேரத்தின்
கட்டுக்கு மேலாக
நிற்கும் ஒரு துடிப்பின்
நிழலாய்,
வானப் பெருநீரில்
வெட்டும்
நீர்க் கோடு!

சுய ஆட்சி

நிழல் விழுக்காத தென்னகக் கோவில்
உயர்ந்து நிற்கிறது.
தனது நிழலைத் தன்னிலேயே பெய்து உள்ளழித்து
தென்னகக் கோவில் உயர்ந்து நிற்கிறது.
என்னை ரசி, எனது நிழலை ரசிக்காதே
என்னிலேயே தஞ்சம் புகு, என் நிழலிடமல்ல.
என்னிலேயே என் ரசிப்பு, என்னிலேயே என் தஞ்சம்.

மனித வாழ்க்கை கலை நிழல் விழுத்தி நீண்டு கிடக்கிறது.
கலை நிழலில் ரசிப்பு, கலைநிழலில் தஞ்சம், வாழ்க்கையிலல்ல.
வாழ்க்கையில் கலை இல்லை, ரசிப்பில்லை; கலையில்தான்
வாழ்க்கை, ரசிப்பு.
தன்னை விட்டுத் தன்னைக்காண (தன்னை ரசிக்க)
நிழலிடம் ஓடும் மனிதன்.

மனிதச் செயல்கள் குணநிழல் விழுத்தாது
தென்னகக் கோபுரமாய் எழுந்து நிற்கும்போது
மனித வாழ்க்கையின் ரசிப்பிடமாய் முன்னீளும் கலைநிழல்
உள்ளழித்து வாழ்கையிலேயே பெய்யப்படுகிறது
இப்போ-
மனித இருப்பே கலை
கலை எனப்பட நிழல்
இருப்பெடுக்கப்பட்டு கணக்கு முடிக்கப்படுகிறது.
கலைப் பேரேடு மூடப்படுகிறது; சுயவாழ்க்கை தொடங்குகிறது.


தரிசனம்


கிருஷ்ணனைப் பார்க்க ஆவல் எழுந்தது
பொன்னாலைச் சந்தியில் பஸ்ஸை விட்டிறங்கி
வடக்காய் கிடக்கும் ரோட்டில் திரும்பி
கிருஷ்ணன் கோயிலை நோக்கி நடந்தேன்
ரோட்டின் மேற்கால் - காரைதீவைப்
பிரிக்கும் கடலின் இரைச்சல் கேட்டது
இடைக்கிடை தெரிந்த பனைவளவுள்ளே
கடற்கரைக் காற்று புகுந்து பறைந்தது
கடலை நோக்கி வலைகளைக் காவிச்
செல்லும் வலைஞர் சிலர் எதிரானார்
நண்டு காரப் பெண்டுகள் சென்றார்.

தெருவின் ஓரமாய் இருந்தது கோவில்
செல்ல முன்னமே, மரங்களின் இடையே
கோபுரம் நின்று வாவென அழைத்தது
எனது நரம்பில் ஏதோ அதிர்ந்தது!

கோவில் இருந்த தெருவின் ஓரம்
ஆலும் வேம்பும் அழகிய அரசும்
திகுதிகு வென்று நின்றன, அவற்றின்
நிழல்விழுந் தேனோ நெஞ்சில் படர்ந்தது
திடீரென உணர்வின் திக்குக ளெல்லாம்
காற்றால் உதைத்த கதவுகள் போன்று
சாத்திக் திறந்து சமிக்ஞைகள் விழுத்த
கோவில் முன்றலில் கால்பதிக் கின்றேன்
ஆரும் இல்லை, ஐயரைத் தவிர.

குப்பென அமைதி, குழைதழை யெல்லாம்
நிற்பன போன்ற ஓர்நிலை,நின்றேன்
துவாரகை பாலன் சுவடுகள் எங்கோ
பதிவன போன்ற நெரிவுகள் மணலில்
எனைத்தொடர்ந் தவனா வருகிறான் பின்னால்?
களிப்பெழத் திரும்பிப் பார்க்கையில், மேலால்
விசுக்கெனச் சிட்டுக் குருவிதான் விரையும்!
கோயிலை ஐயர் திறக்கையில் தெரிந்த
திரையிலே காற்றின் விரல்விழும் போது
ஒளிவதங் கவனா? உள்ளறை நடுவே
மின்னிய சுடரின் புன்னகை எனையே
கண்ணிமைக் காது...ஆயினம் என்ன?
அவன் எனைக் காண வருவதாய் இல்லை
சமிக்ஞைகள் அரவம் சந்தடி அன்றி
ஆளின்னும் வெளியே வருவதாய் இல்லை.

கோயிலைச் சுற்றிக் கும்பிட்ட பின்னர்
வாயிலில் நின்று தெருவினை வெறித்தேன்
ஆலும் வேம்பும் அழகிய அரசும்
திகுதிகுவென்று நின்றன அவற்றின்
நிழல்விழுந் தேனோ நெஞ்சில் படர்ந்தது

பாரத யுத்தம், பார்த்த சாரதி...
சக்கரம் சுழன்று சிதறிய தேர்கள்
களிறுகள் காலால் துவைபடும் உடல்கள்
அறுபடும் தலைகள், கூக்குரல் ஓலம்
ஆசைகள் பாசம்...அவற்றிடை தர்மச்
சக்கரம் சுழலும், சுழற்சியில் உலகக்
குப்பைகள் பற்றிக் குபீரென எரியும்

நினைவிலே தோய்ந்து நிற்கிறேன், பழைய
கதைசில வந்து சென்றன ஆயின்
அவன் வரவில்லை, ஆதவன் வந்து
உச்சியில் உருண்டான், ஓவெனத் தூரக்
கத்திய கடலும் ஓய்ந்தது, அப்போ
தெருவில் யாரோ வருகிற ஓசை
படபடப் போடு விழிகளைப் பதித்தேன்
குறுக்குக் கட்டு, கூனிய தோற்றம்
இடுப்பிலே தொங்கிய பறியசை வுள்ள
நண்டுக் காராப் பெண்ணவன்-வந்தாள்
வந்தவள் நின்று கோயிலைப் பார்த்து
"மாயவா!" என்றாள், அவ்வளவே அக்குரல்
வீதிபோல் என்னுள் விரிந்தது, வந்த
தேவைகள் எல்லாம் தீர்ந்திட நின்றேன்
கோயில் திறந்து மணி குலுங்கிற்று
பூசை நேரம்..............


அகவெளி சமிக்ஞைகள்

அகநோக் கென்பது
மனதின் பேச் சொழிந்த
முழு விழிப்பின்
உட் பொழிவு.

விவகாரத்தில் வெளிநீட்டிய மனத்தலைகள்
உள்ளிழுத்துக் கொள்ள,
ஏறிய ஜ்வாலையில்
எண்ணிறந்த நாளங்களில்
பொன்னின்ப உட்சொரிவு.

தூண்டில் இரையோடு
ஆழஆழ உள்ளிறங்கும் மீனென மனம்
ஓர் உந்தல்
மனம் வெளியே தூக்கியெறியப் பட்டதா?
மனம் வாழ்ந்த துளிப் பொட்டலில்
சமுத்திரத்தின் பேர் நுழைவு.
அங்கிருந்து மேலெழுந்த வெண்குமிழாய்
எழுங்கதிரை விழுங்கிய நான்-
பிரபஞ்ச உள் விரிவு.


2

தர்க்கிக்காதே,
தரவுகள் கேட்டு நிற்காதே-அவை பழைய யுகத்தவை
வந்தமர்க.
X-ray கருவிகள் போல் அவை இயங்கட்டும்
கொலைகள் புரிந்தவன் யாரோ
சாட்சி வலையில் விழுந்த அப்பாவி எவனோ!
சாட்சிவலையில் விழுந்த அப்பாவி
உண்மைகளை தர்க்கங்களும் விஞ்ஞானமும்
தந்து கொண்டிருக்கட்டும்
ஆனால் இவற்றால் கைதிகளாக்கப்பட்டுள்ள
கடவுளின் சேவர்களை விடுவியுங்கள்
தியான ஊடறுப்பின்
வெள்ளி நீக்கல்களால் அவர்கள்
வெளிவரட்டும்.


எம்.ஏ.நுஃமான்


வைகறை நிலவு

வைகறை நிலவு வாசலில் விழுந்தது.
நெய் உறைந்ததுபோல்
நீண்ட வானில்
மேற்கே கவிழ்ந்து விழப்பார்க்கிறது.
மேகக் கூட்டம் மிதந்து சென்றது.
போகப் போகப்
புதைந்து புதைந்து
வெள்ளிப் பூக்கள் மிளிர்ந்தன மங்கி.

வெள்ளிப் பூக்கள்
மேகக் கூட்டம்
தள்ளித் தெரியும்
தனித்தனி மரங்கள்
வைகறை நிலவு வரைந்த நிழல்கள்....!

வைகறை நிலவு வாசலில் விழுந்தது
இலைகளுக் கூடே நிலவு வழிந்தது
நிலவுத் துளிகள் நெளிந்தன மண்ணில்
வைகறை நிலவு...
மணக்கும் பூக்கள்...
பனிக்குளில் சுமந்து பரவும் காற்று...
அமைதி அழகை அணைத்துப் புணர்ந்தது.

அடுத்த அறையில்
குறட்டைச் சத்தம்
இடைக்கிடை கேட்கும்;
எனினும்
வைகறை நிலவு வாசலில் விழுமே


உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும்...

குளத்தங் கரையில்
குந்தி இருக்கிறேன்
அழகழகாக அந்தி மாலையில்
குளத்து நீருள் கொட்டிய நிறமெலாம்
கரைந்து கரைந்து
கறுப்பாகின்றன.

விரைந்து செல்கின்றன பறவைக் கூட்டம்
எருமைகள் கூட எழுந்து செல்கின்றன
தவளை ஒன்றும் சப்திக் கின்றது.

குளத்தங் கரையின் குளிர்ந்த புற்களைப்
பச்சைக் கம்பளப் படுக்கையாய் நினைத்துச்
சாய்ந்து கிடக்கிறேன்.
சரிவில் மாடுகள்
மேய்ந்து மேய்ந்து வீடு செல்கின்றன.

ஆயினும் நான்இங்கு அமைதியாக
ஓய்வு தேடி உட்கார்ந் திருக்கிறேன்.
யாரோ ஒருவன்
அமைதியாக
ஓய்வுதேடி உட்கார்ந் திருக்கவா
புற்கள் இங்கு புதிதாய் முளைத்தன?

புற்கள் ஊடு புகுந்து திரியும்
சிற்றெறும் பிதனைச் சிந்தனை செய்யுமா
என்பதைப் பற்றி ஏதும் அறியேன்.
ஆயினம் நான் இங்கு அமர்ந்திருக் கின்றேன்.

மேய்ந்து மேய்ந்து வீடுசெல் கின்ற
மாடுகள் பற்றியும்
வயல் வரம்புகளிற்
குந்தி இருக்கும் கொக்குகள் பற்றியும்
சத்த மிட்ட தவளை பற்றியும்
புத்தி போன போக்கில்
எதையோ
நினைந்து நினைந்து
நெடுமூச் செறிகிறேன்.

இனையவை பற்றி நான் எண்ணுதல் போல
இந்த மனிதன் ஏன்இங் கிருக்கிறான்?
இந்த மனிதர் யார்? என இவைகள்
என்னைப் பற்றியும்
எண்ணுதல் கூடுமா?

என்னைப் பற்றி எண்ணா விடினும்
புதியதாய் வளர்ந்த புற்களில் அமர்ந்து
நான்
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் போல
எதைஎதைப் பற்றியோ
இவைகளும் எண்ணிச்
செல்லுதல் கூடுமா?

திரும்பிப் பார்க்கிறேன்.

வீதியில் கார்கள் விரைந்து செல்கின்றன.
வீதியில் மனிதரும் மிகுந்து செல்கின்றனர்.
எங்கெங் கேயோ இவர் செல்கின்றனர்!

எங்கெங் கேயோ ஏகும் இவர்களுள்
இன்ப நினைவுத் தொல்லைகள் உடனும்
இன்ப நினைவின் இனிமைகள் உடனும்
செல்லு கின்றவர்கள் சிலர் இருப்பார்கள்
இல்லை என்று
நான் எப்படிச் சொல்லுவேன்!

அவசரமான ஆயிரம் வேலைகள்
இவர்களுக் கிருக்கலாம்!

ஆயினும் இங்குதான்
இவர்களைப் பற்றி எண்ணுதல் போல
இவர், எனைப் பற்றியும் எண்ணுதல் கூடுமா?
என்பதைப் பற்றியும ஏதும் அறியேன்.

இந்நேரத்தில் எதைஎதைப் பற்றியோ
இங்கிருந்து நான் எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் கூடுமே!

இதோ, என் நாட்டில் இனிய சூரியன்
அஸ்த்தமிக் கின்றது.
ஆயின் இந்நேரம்
வேறொரு நாட்டில் விடிந்து கொண்டிருக்குமே!

இங்கே பறவைகள் இல்லம் செல்கின்றன
அங்கே பறவைகள் அணியணி யாக
இரைதேடற் காய் எழுந்து செல்லுமே!

இரவுண வுக்காய் இவர்கள் செல்கையில்
காலைப் பானம் கைகளில் ஏந்தி
அங்கே அவர்கள் அருந்தலாம் அன்றோ?

யாரோ ஒருவன் நீராடற்காய்
நீருட் துள்ளி நீந்தத் தொடங்கலாம்
யாரோ ஒருத்தி தன் மார்புக் கச்சையை
அணிந்து கொள்ள ஆரம் பிக்கலாம்.

இந்நேரத்தில் எதைஎதைப் பற்றியோ
இங்கிருந்து நான் எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் கூடுமே!

இதோ!
நான் கிழக்கில் என்முகம் திருப்பிக்
கிழக்கில் இருண்டு கிடப்பதைக் காண்கிறேன்.
கிழக்குத் திசையின் கிழக்கில் இந்நேரம்
நள்ளிரவாகி நாடுகள் உறங்குமே
வெள்ளிகள் வானில் மினங்கிக் கிடக்குமே
சந்திரன் எழுந்து தண்ணொளி சிந்துமே

சந்திரன் எழுந்து தண்ணொளி சிந்துமா?
அன்றேல் மேகம் அணைத்துக் கிடக்குமா?
என்பதைப் பற்றியும் ஏதும் அறியேன்.

ஆயினும் வீதியில் ஆட்கள் செல்லலாம்.
எங்கோ ஒருவனின் இல்லத் திருந்து
குறட்டைச் சத்தமும் கொஞ்சம் கேட்கலாம்.
எங்கோ ஒருவனின் இல்லத் திருந்து
குழந்தைகளின் அழுகுரல் கேட்கவும் கூடும்.

இனிய உணர்வுடன் எவனோ ஒருவன்
மனைவியை அணைத்து மகிழவும் கூடும்.
இன்னும் ஒருவன் தன் காதலியின்
கன்னம் வருடிக்
கதைக்கவும் கூடும்.

இரவு விடுதியில் எவளோ ஒருத்தி
ஆடை களைந்தே ஆடவும் கூடும்.

வேத நூலை விரித்து வைத்தே
ஓதி ஒருவன் உருகவும் கூடும்.
குடியானவனின் குடிசையில் யாரும்
இருமிக் கொண்டும் இருக்கலாம் அன்றோ?

இந்நேரத்தில் எதைஎதைப் பற்றியோ
இங்கிருந்து நான் எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் கூடுமே!

இதோ, இந்நேரம் எத்தனை பேரோ
மரணவஸ்தையில் வருந்துல் கூடும்
பிரசவ வேதனை கொண்ட பெண்கள்
எத்தனை பேரோ இரங்குதல் கூடும்.
எத்தனை எத்தனை இடத்தில் இந்நேரம்
மரண ஊர்வலங்கள் வருதல் கூடுமோ?

இந் நேரத்தில் இங்கிருந்து நான்
எதைஎதைப் பற்றியோ எண்ணுதல் போல
எங்கெங் கேயோ
எத்தனை பேரோ
எதை எதைப் பற்றியோ
எண்ணுதல் கூடுமே

இந்த மாதிரி எண்ணிச் செல்கையில்
இந்த உலகுதான் எத்தனை பெரியது!

மேற்கை நோக்கி விரைந்து சென்றால்
மேற்கோ மேற்கிலே விரைந்து செல்கின்றது.
வடக்கை நோக்கி வடக்கே சென்றால்
வடக்கு வடக்கிலே வழிச்செல் கின்றது.

கிழக்கை நோக்கி கிழக்கே சென்றால்
கிழக்கு கிழக் கெனக் கிழக்கே போகிறேன்.
தெற்கை நோக்கித் தெற்கே சென்றால்
தெற்கு தெற்கிலே செல்லக் காண்கிறேன்.

இப்படி யாக
என்னைச் சுற்றிய
இந்த உலகுதான் எத்தனை பெரியது!

என்னைச் சுற்றிய இப்பெரும் உலகைச்
சின்னஞ் சிறியதாய்ச் சிருஷ்டித் திருந்தேன்.

இதோ என் கிழக்கென
எட்டிப் பிடித்தேன்.
இதோ என் மேற் கென
எண்ணிக் கொண்டேன்.

இந்த மாதிரி
எண்ணும் போதில்
இந்த உலகுதான் எத்தனை சிறியது!

மற்றவைகளை மறந்து விட்டு
என்னைப் பற்றியே எண்ணும் போதில்
இந்த உலகுதான்
எத்தனை சிறியது!

குளத்தங் கரையின் குளிர்ந்த புற்களைப்
பச்சைக் கம்பளப் படுக்கையாய் நினைத்து
ஓய்வுக் காகச் சாய்ந்திருக் கின்ற
இந்நேரத்தில்.....
இந்நேரத்தில்.....
இந்த உலகின் சந்தையில் நிகழும்

நிகழ்ச்சிகள் பற்றி நினைத்துப் பார்க்கையில்
அகஉலகத்தின் ஆழத்தே, நான்
எதை உணர்கின்றேன் என்பதைத்
தெளிவாய்
எடுத்துச் சொல்ல இயல வில்லையே!

எறும் பொன்று எனது எழுதும் தாளில்
உலாவி உலாவி
ஊர்ந்து திரிந்தது
ஏன் அவ் எறும்பு என் எழுதும் தாளில்
ஊர்ந்து திரிந்ததோ?

ஒவ்வொன்றாக
என்ன எழுதினேன்
என்பதை அறியவா.........?

சின்ன எறும்பு சொல்லும் வழியிலே
எனது தாளும் எதிர்ப்பட் டதனால்
தனது கால்களால் தாண்டித் தாண்டிச்
செல்லற் காகவே திரிகிற தன்றோ?

இல்லை என்று நான்
எப்படிச் சொல்லுவேன்!

ஒவ்வோர் உயிரும்
ஒவ்வோர் உலகாய்ச்
சுற்றிச் சுற்றிச் சுழல்கிற வழியில்
மற்றவற்றையும் வந்து காண்கின்றன.

தனியே செல்லும் தங்கள் பாதையில்
துணைநிற்பவற்றுடன் துணையாய் நின்றும்
எதிர்த்து நிற்பதை எதிர்த்து நின்றும்
சுற்றிச் சுற்றிச் சுழன்று செல்கின்றன.

சுற்றிச் சுற்றிச் சுழலும் உயிர்களின்
வழியிலே நானும் வந்து நிற்கிறேன்.
இதனை விட்டு நான் எங்குதான் செல்வேன்......!
பாழ் வெளிக் கப்பால்
தனித்த பாதையில்
சுற்றிச் சுற்றி நான் சுழலவும் கூடுமா?

யார் என் நண்பர்?
யார் என் பகைவர்?
எனது சுழற்சியில் இவர்களைக் காண்பேன்.

மற்றவை எனது
வழியிலே வருக!
மற்றவை எனது வழியிலே வருங்கால்
சுற்றலின் முடிவு
சோபன மாகுக!

இருட்டு வந்தெனை எழுப்பி விட்டது.
மரங்கள் அசைந்து மகிழும் படியாய்க்
காற்று வீசிக் கடந்து சென்றது.
மேற்கில் இருந்தோர் வெள்ளி வீழ்ந்தது
குவளை பூத்த குளத்தில் இருந்து
தவளை ஒன்றும் சத்தம் இட்டது.

ஆட்கள் யாரோ
யாரையோ நோக்கிக்
கூக்குரல் இட்டுக் கூப்பிடு கின்றார்.

ஆலையின் இலைகளில்
அணைந்தும் ஒளிர்ந்தும்
மின்மினிப் பூச்சிகள் மினுங்கு கின்றன.
இன்னும் இன்னும்
இப்படி இப்படி
எல்லா உயிர்களும் இயங்கு கின்றன.

போய்க் கொண்டிருக்கும் போதில்
சேய்மை அண்மையில்
செல்வதைக் கண்டேன்.


புகைவண்டிக்காகக் காத்திருக்கையில்......


வண்டி இன்னும் வரவே இல்லை.
கைகளிற் சுமையுடன்
காத்திருக் கின்றேன்
வண்டி இன்னும் வரவே இல்லை.

கோட்டைப் புகைவண்டி நிலையம்
கூட்டமோ எங்கணும் அலையும்
பெட்டிகள்
படுக்கைகள்
பிறபொருட் சுமைகள்
அங்கும் இங்கும்
ஆட்களோ அதிகம்.

வாயில் இருந்து புகைவிடும் வண்டிகள்
வாயில் இருந்து புகைவிடும் மனிதர்கள்.....
சப்பாத் தோசை
தட்......தட்......என்னும்
எப்புறம் திரும்பினும்
இரைச்சலே கேட்கும்.
கதைப்பும் சிரிப்பும் காதிலே மோதும்...
சாமான் வண்டியின்
தடதடச் சத்தம்
இடைக்கிடை பெரிதாய்
என்னைக் கடக்கும்.

வண்டி இன்னும் வரவே இல்லை.
இத்தனை பேரின்
மத்தியில்-தனியே
கைகளில் சுமையுடன் காத்திருக் கின்றேன்.
வண்டி இன்னும்
வரவே இல்லை.

எத்தனை மனிதர்
இங்கிருக் கின்றார்?
இருந்தும் என்ன?
இருந்தும் என்ன?
சிறுநீர் கழிக்கச்
செல்லலாம் என்றால்
யாரிடம் எனது
கைச்சுமை கொடுப்பேன்....?

உடறட்ட மெனிக்கா...
உத்தர தேவி...
ஒவ்வொன் றாக ஓடிச் சென்றது.
எனது வண்டியை இன்னும் காணேன்.
இத்தனை மனிதர்
மத்தியில்,
தனியே
கைகளில் சுமையுடன் காத்திருக் கின்றேன்,
வண்டி இன்னும்
வரவே இல்லை.


இலைக்கறிக் காரி

லெக்கேறி...ரீக்....கீ....கோ!
என்று தெருவில்
தொலைவில் ஒருமூடை
சுமந்து நடந்துவரும்
செல்லாளிகள் கூவல்
தெருவெங்கும் கேட்கிறது.

அல்லயலில்
வேலி அடைப்புக்குப் பின் இருந்து
'கொண்டாகா'
என்றொருத்தி கூப்பிட்டாள்.

போய்க் கடப்பைத்
தள்ளிவிட்டுச் சென்று
தலைச்சுமையைக் கீழிறக்கி
வைத்தாள், முருங்கை மரத்தடியில்.

வீதியெல்லாம்
அல்லாடி வந்த அவளின் தளர்ந்த உடல்
காலை வெயிலில்
கசிந்து நனைந்துளது.
சிலைத் தலைப்பால் சிறிது
துடைத்து விட்டான்.

சாக்கில் இருந்த
தளிர்த்த இலைக்கறியில்
தட்டில் எடுத்துவைத்தாள்
பத்துச் சதத்துக்கு.

'நட்டங்கா' இன்னமும்
நாலுபுடி வை' என்றாள்
'கட்டாகா' என்றாள் கறிக்காறி.
எப்படியும் நீ
இப்பிடித்தான் நல்ல அறும்பு'
என்வறின் சொன்னாள்

உச்சி வெயில்ல
வயல்ல சுழியோடிப்
பிச்சிவந்து விக்கும்
புழைப்பு புள்ள என் புழைப்பு
நாளும் முழுப் பொழுதும்
நாயா அலஞ்சு
சதிரத்தைச் சாறாப் புழிஞ்சா
கிடைக்கிறது
என்னத்துக் காகும்
இரண்டு குமர்கெடக்கு...

முந்தானையில் காசை
முடிந்தபடி எழுந்த
செல்வானைப் பார்த்து-
திரும்பி உட் செல்லுகையில்,
'எல்லார்க்கும் கக்கிசம் தான்
என்ன செய்யலாம்' என்றாள்

'லெக்கேறி.....ரீக்.....கீ......கோ'
என்று, தெருவில்
தொலைவில் ஒரு மூடை
சுமந்து நடந்து செலும்
செல்லானின் கூவல்
தெருவெங்கும் கேட்கிறது.


தாத்தாமாரும் பேரர்களும்


இருந்தது;
எங்கள் தாத்தாவுக்கோர்
யானை இருந்தது
கொம்பன் யானை....

தெரியுமா?
இந்தச் செய்தி உமக்குத்
தெரியுமா காணும்?
தெரியாதாயின்
இன்று தெரிந்து கொள்.
எங்கள் தாத்தா
அன்றே பெரிய கொம்பன் யானை
வைத்திருந்ததை இவ்வையகம் அறியும்....

அத்திலாந்திக் கரைவரை எங்கள்
தாத்தா யானையில் சவாரி செய்தார்.
அந்தலூசின் சமவெளி யூடே
எங்கள் தாத்தா யானையில் சென்றார்.
இந்தியாவில் எண்ணூறு ஆண்டுகள்
எங்கள் தாத்தா யானையில் இருந்தார்.
žனா வரையும் சென்று வந்ததாம்
அவரது யானை;
கொம்பன் யானை....

யானைவைத் தாண்ட பரம்பரை நாங்கள்
உலகின் பாதியை ஆண்டவர் நாங்கள்
உலகம் எங்கும் அறிவொளி பரப்பி
வைத்தவர் நாங்கள்;

பல் கலை ஞான
எழுச்சி எங்கள் பின்னால் வந்தது.

அந்தலூசின் சமவெளி இடையே
இன்றும் நீங்கள் இதனைக் காணலாம்
பாக்தாத் நகரில் படிக்க வந்த
ஐரோப்பியரிடம் அதனைக் கேட்கலாம்....

தெரியுமா?
இந்தச் செய்தி உமக்குத்
தெரியுமா காணும்?
தெரியாதாயின்
இன்று தெரிந்து கொள்!
எங்கள் தாத்தா

அன்றே பெரிய கொம்பன் யானை
வைத்திருந்ததை இவ்வையகம் அறியும்

இருந்தது;
எங்கள் தாத்தா வுக்கோர்
யானை இருந்தது;
கொம்பன் யானை...


2

இருந்ததா?
உங்கள் தாத்தாவுக் கோர்
யானை இருந்ததா?
கொம்பன யானையா?

எங்கே அந்த யானை இப்போது?
எங்கே அந்தக் கொம்பன் யானை?
யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
எங்கே உங்கள் கொம்பன் யானை?

கால்நடையாக வந்து நிற்கிறாய்
அழுக்குத் துணியை அணிந்து நிற்கிறாய்
உன்னைப் பார்த்தால் அப்படி ஒன்றும்
யானைக் காரரின் பேரப் பிள்ளையாய்த்
தெரிய வில்லையே,
தெரியவே இல்லையே!

இருந்ததா?
உங்கள் தாத்தாவுக் கோர்
யானை இருந்ததா?
கொம்பன் யானையா?

எங்கே அந்த யானை இப்போது?
எங்கே அந்தக் கொம்பன் யானை?
யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
எங்கே உங்கள் கொம்பன் யானை?


3

எங்கே எங்கள் கொம்பன் யானை?
எங்கே அந்தக் கொம்பன் யானை?

எம்மை படைத்த இறைவனுக் காக
எம்மைப் படைத்த இறைவனின் ஆட்சியை
நிறுவுதற் காகக்
குருதியும் சொரிந்த
நாங்கள்,

அந்த நன்னெறி விட்டும்
நீங்கி விட்டதால்...
நீங்கியே விட்டதால்...
எங்கள் இறைவன் எமக்கு வகுத்த
வீதியை விட்டும் விலகி விட்டதால்...




















உருகி உருகி ஒவ்வொரு பொழுதும்
தொழுது நிற்பதைத் துறந்து விட்டதால்...
வாய்மை நெறியை மறந்து விட்டதால்...
ஆன்ம வலிமையை அகற்றி விட்டதால்...
நாங்கள் எங்கள் யானையை இழந்தோம்
என்றே இன்று கேள்விப் படுகிறோம்.

இருந்தது;
எங்கள் தாத்தாவுக் கோர்
யானை இருந்தது
கொம்பன் யானை


4

இளைய தலைமுறையின்
ஏழ்மைக் குரலே
பழைய செய்தியைத் திருப்பிச் சொல்கிறாய்.
இக்பால் என்ற கவிஞனிடத்துக்
கடனாய்ப் பெற்ற பழைய சொற்களைத்
திரும்பவும் வந்து என்னிடம் சொல்கிறாய்...

ஆனால் சந்றே ஆழ்ந்து கவனி
யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
சற்றே கவனி, சற்றே கவனி!

உமையாக்களின் உருவிய வாளில்
இரத்த வாடை இருக்குதா என்று
சற்றே கவனி சற்றே கவனி....

அப்பாசியர்களின் அரண்மனை எங்கும்
இரத்த வாடை இருக்குதா என்று
சற்றே கவனி சற்றே கவனி....

சுல்தான் அணிந்த தொப்பியின் உள்ளே
இரத்த வாடை இருக்குதா என்று
சற்றே கவனி சற்றே கவனி.....

இரத்த வாடையை இனங்கண்டனையா?
அந்த வாடை யாருக் குரியது?
செங்கடலாகத் திரண்டு கிடப்பதில்
பாதி இரத்தம் யாருக் குரியது?

ஓ! அது உங்கள் தாத்தா வுடையதா?
ஆமாம், உங்கள் தாத்தா மார்கள்
அதிகாரத்துக் காகத் தமக்குள்
பொருதிக் கொண்ட போது வடிந்த
இரத்த மணம்தான் இங்கு மணப்பது.

அதிகா ரத்துக்காக அவர்கள்
பொருதிக் கொண்ட போதெலாம்
நீங்கள்
யானையின் கீழே நசிந்து மடிந்தீர்
யானையின் பின்னால் நடந்து திரிந்தீர்
அம்பாரி மீதில் அவர்கள் இருக்கப்
பார்த்து மகிழும் பாக்கியம் பெற்றீர்.

இரத்தினக் கற்கள் இழைத்துப் பண்ணிய
சிம்மாசனத்தில் அவர்கள் இருக்க
கொம்பன் யானையை எண்ணிக் கொண்டே
பழம்பாய் மீதில் படுத்துக் கிடந்தீர்.
அவர்கள் வசித்த அரண்மனை யுள்ளே
தொங்கிய பட்டுத் துணிகளுக்காக
நீண்ட நேரம் நீங்கள் உழைத்தீர்.

அவர்கள் வசித்த அரண்மனை உள்ளே
அந்தப் புரத்தில்,
அரிவையர் துயின்ற
மெத்தையை மேலும் மென்மைப் படுத்த
நித்திரையின்றி நீங்கள் உழைத்தீர்.

அவர்கள் தங்கள் அந்தப் புரத்து
அரிவையர்க் காக அமைத்துத் தந்த
தாஜ்மஹாலின் சலவைக் கற்களை
வியர்வைத் துளிகளால் மினுக்கித் துடைத்தீர்.
தங்கக் குவளையில் தாத்தா பருகினார்
உங்கள் அடுப்பில் பூனை துயின்றது.


5

தெரிந்ததா?
இந்தச் செய்தி தெரிந்ததா?
நீங்களும் உங்கள் தாத்தாமாரும்
எந்த உறவில் இணைப்புண் டுள்ளீர்
என்ற செய்தி இன்று புரிந்ததா?

தாத்தா மார்கள் ஆட்சியாளர்
பேரப் பிள்ளைகள் ஆளப் பட்டோர்.

நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை
இழக்க எதுவும் இருக்கவும் இல்லை.
ஆட்சியாளரே யானையை இழந்தார்
அவர்களே தங்கள் அரண்மனை இழந்தார்
ஐரோப்பாவில் அரும்பி வளர்ந்த
புயலில் அவர்கள் புரண்டு போயினர்.

அன்று வீசிய அந்தப் புயலில்
அவர்கள் தங்கள் அரண்மனை இழந்தார்
இரத்தினக் கற்கள் இழைத்துப் பண்ணிய
சிம்மா சனத்தைத் தீடிரென் நிழத்தார்
தாத்தாமார் தம் சிம்மா சனத்தில்
ஐரோப் பியர்கள் அமரக் கண்டார்.

அவர்கள் வளர்த்த கொம்பன் யானை
ஆடி அடங்கிக் கிடக்கக் கண்டார்.
நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை
இழக்க எதுவும் இருக்கவும் இல்லை.


6

இழந்ததை மீண்டும்
எப்படிப் பெறலாம்?
தாத்தா மாரின் தத்துவ ஞானிகள்
எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம்
எழுந்து வந்தனர்.
இழக்க எதுவும் இல்லா திருந்த
பேரப் பிள்ளையின் பிடரி பற்றினர்...

எழுந்திரு பிள்ளாய் எழுந்திரு...
உங்கள்
விழுமிய செல்வம் விழுங்கப் பட்டது
யானைவைத் தாண்ட பரம்பரை நீங்கள்
உலகின் பாதியை ஆண்டவர் நீங்கள்
உலகை உய்விக்க வந்தவர் நீங்கள்
இன்று நீங்களேன் எல்லாம் இழந்து
ஒன்று மற்றவர் ஆகி யுள்ளீர்....?
எழுந்திரு பிள்ளாய் எழுந்திரு.

விழிக்க வேண்டிய வேளையும் வந்தது
தாத்தா மாரின் தத்துவ ஞானிகள்
எழுத்தாளர்கள் கவிஞர்கள் எல்லாம்
எழுந்து வந்துமை எழுப்பி விட்டனர்.

ஆட்சி யாளர் தாத்தா வாகினர்
ஆளப் பட்டோர் பேரர் ஆகினர்.
ஆடி அடக்கிக் கிடந்த அந்தக்
கொம்பன் யானை உணர்ச்சி கொண்டது.


7

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும்
தேசிய எழுச்சிகள் திரண்டு கிளர்ந்தன
இரத்த வாடை எங்கும் நிறைந்தது.

ஐரோப் பாவின் ஆட்சி யாளர்
திருப்பி அளித்த சிம்மாசனத்தில்
மீண்டும் உங்கள் தாத்தா அமர்ந்தார்.
ஆமாம்,
நீங்கள் மீண்டும் அந்த
அம்பாரி மீதில் அவர்கள் இருக்கப்
பார்த்து மகிழும் பாக்கியம் பெற்றீர்.

தெரியுமா?
இந்தச் செய்தி தெரியுமா?
நீங்கள் எதையும் இழக்கவும் இல்லை
இழக்க எதுவும் இருக்கவும் இல்லை.


8

பிறைக் கொடி பறக்கும்
இடங்களில் எல்லாம்
நேற்று நடந்த நிகழ்ச்சிகள் என்ன?

யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
சற்றே கவனி, சற்றே கவனி
இந்தோனேசிய மண்ணிலே சிதறிச்
சிந்திய குருதியைச் சற்றே கவனி.

ஜோர்த்தான் நாட்டின் ஆற்றங் கரையில்
பெருகி ஓடிய குருதியைக் கவனி.
வங்க தேசக் கங்கைக் கரையின்
இரத்தச் சகதியை இன்னும் கவனி.

இந்தக் குருதியைச்
சிந்தியோர் யாவர்?
இந்தக் குருதியைச் சிந்திய மக்களின்
நெஞ்சைப் பிளந்த
தோட்டா யாரது?

உனக்கும் அவர்க்கும் ஆண்டவன் ஒன்றே
உனக்கும் அவர்க்கும் வேதமும் ஒன்றே
நீங்கள் உங்கள் வாழ்கையை மீண்டும்
கேட்கும் வரைக்கும்
கேட்கும் வரைக்குமே
பள்ளி வாயிலில் ஒன்றாய்த் தொழலாம்
சகோத ரத்துவச் சரடு திரிக்கலாம்...

யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
கண்விழித் தெழுக
கண்விழித் தெழுக!

அவர்கள் உனது தாத்தா அல்லர்
அவர்கள் உனது உறவினர் அல்லர்
அவர்கள் உன்னைச் சுரண்டிக் கொழுத்தோர்

மீண்டும் மீண்டும்
சுரண்டுதற் காகச்
சகோத ரத்துவச் சரடு திரிப்போர்...

பிறைக் கொடி பறக்கும்
இடங்கள் தோறும்
உலகில் உள்ள மூலைகள் தோறும்
மஞ்சத் தோடும்
மாளிகை யோடும்
ஆட்சி யோடும்
ஆணவத் தோடும்
வாழ்வோ ரெலலாம் மற்றொரு சாரார்...

பஞ்சத் தோடும்
பட்டினி யோடும்
வெஞ்சத் தோடும்
வேதனை யோடும்
வாழ்வோ ரெல்லாம் மற்றொரு சாரார்....

யானைக் காரரின் பேரப் பிள்ளாய்
கண்விழித் தெழுக
கண்விழித் தெழுக

சகோதரத்துவச் சாம்பலில் இருந்து
வர்க்க உணர்வுடன் நீவிழித் தெழுக!


சண்முகம் சிவலிங்கம்


சந்தியிலே நிற்கிறேன்!

சந்தியிலே நிற்கிறேன்;
பகல் சாய்கிறது.

மங்கல் இனி வந்து விடும்
அதைத் தொடர்ந்து வரும் விடிவு.

அதுவரையில்,
இந்த மக்கள் போய்த் துயில்வர்.

இருளகன்று விடிகையிலே,
முந்திடு வார்;
வேலை செய்வார்;
முறுவலிப்பார்;
பின்னிரவு வந்து விடும்
போய்த் துயில்வார்...

மறு தினமும் எழுந் திருந்து
"இன்றுமட்டும்-
இனித் துன்பம் இல்லை" என்பார்
போய் உழைப்பார்.

சந்தியிலே நிற்கிறேன்
பகல் சாய்கிறது.

வயிரண்ணன் வண்டியிþ சம்மாளம்...
மாடிரண்டும்.
தளர் நடையில், சென்ற தடம் செல்லும்

ஆங்கே,
திடீரென்று அவர் விழித்து
'இந்தா படித்தா' என்றிரைக்கிறார்.

எனினும் அந்த,
நொந்தலுத்த மாடுகளோ
நோவறியா

ஆதலினால்,
வந்த நடையே தொடரும்
வயிரண்ணனும் அயர்வார்

சந்தியிலே நிற்கிறேன்;
பகல் சாய்கிறது.

என் இனிய
சுந்தரக் கனவுகள்-வான்
தொடர்கிறது....

சுமந்த மக்கள்
வெந் தெழுவார்;
சமர் செய்வார்
வில் நிமிர்த்தும் துரியர் படை
வென்றிடுவார்
நல்ல பல விதி செய்வார்
அதுவரையில்.

இந்த மக்கள் போய்த் துயில்வார்.

இருள் அகன்று விடிகையிலே
முந்திடுவார்;
வேலை செய்வார்
முறுவலிப்பார்-
அவ்வளவே!


ஆக்காண்டி


ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்,
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.

கண்­ர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.

நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.

žலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.

வீதி சமைத்தேன்.

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே;
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மியழவில்லை.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்த்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்.

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்-

பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆனவரைக்கும்,
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்,
போனவரைக் காண்கிலனேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.



மறுதலை


நீ....
இன்னும் மலர்கின்றாய்...
நிழல் தேடி
நான் அலைந்து
வாடி
நலிந்து
மிகத் தேய்ந்து
போன இடம் பாராது
வந்த இடம் தேராது
பாதியிலும் பாதி -பரதேசி ஆண்டியாய்,
தூசும் புழுதியும் தோயத் திரும்புகையில்
ஓ!
நீ இன்னும் அங்கே நிறைய மலர்கின்றாய்...
உன்றன் அருகில் ஓடுகிற நீர் வாய்க்கால்
இந்த விதியிலிக்கு ஏன் வரண்டு விட்டது?

எல்லாம் முடிந்தது....
எல்லாம் முடிந்ததென
உள்ளம் உணரும் ஒரு கண நீக்கலில்
நிம்மதி நீண்ட வெளியாய்த் தெரிகிறது.
நிம்மதிதான், எந்த நிகழ்வும் முடியுமெனில்...

நான் அதுவல்ல
அதுவாக என்னை நான்
வீணாய் உருவகித்து, சற்று மினக் கெட்டதெல்லாம்
ஊமை மயக்கமென இப்போதுணர்கிறேன்.

நான் அதுவல்ல
அது என்னில் உள்ளதல்ல
ஏதேனும் முன்னர்
இருந்ததெனச் சொன்னாலும்
ஆள் இப்போ காலி.
ஆமாம்,
பாலை-வெறும் தரிசு.
நான் அதுவல்ல
அது என்னில் உள்ளதல்ல....
என்றாலும்
நீ அங்கே இன்னும் மலர்கின்றாய்

வாழ்வு மகத்தானதே
ஆயின் அதை வழுவித்
தாழ விடும் போது அதுவே தலைச் சுமை
வீண் மயக்கம்
கோடி விழலான சிந்தனைகள்

ஆலாப் பறக்கையிலே
கீழே
எறும்பு ஊரும்
எறும்பூ ஊரும் பாதையிலே
ஈசல் முளைத்து வரும்
ஈசல் சிறகொடித்து
எங்கெங்கோ போய் மடியும்.
போய் மடிந்த
ஈசற் புதற்களைத் தேடுகிறேன்...

இந்த நிராசையை முன்னர்
இக்ழ்ந்ததுண்டு.
'வாழ்வின் முனைவுக்கு இது மாறு'
என்றதனை
நானும் உறுதியாய் நம்பி நிராகரித்தேன்
ஆயினும்,
வாழ்வின் ஆராத காதலுக்குக்
கீழே அடி வேராய்
பின்னிக் கிடப்பதுவும்
வாழ்வு முனைவின் மறுதலையாய் உள்ளதுவும்
இந்த நிராசையே என இப்போதுணர்கிறேன்.
இந்த நிராசைகளே எனது நிகங்கள்.

எனது முனைவுகள் இன்னும் மயக்கமே
என்றாலும்
நீ அங்கே இன்னும் மலர்கின்றாய்.

உன் முன்னே,
என் நினைவு ஊர்ந்த சிறு தடமும்
இல்லாமல்,
காற்று இரவு பகலாக
மேய்ந்த கடற்கரையின் வெள்ளை மணல் போல
தூர்ந்து அழிதல் ஒன்றே சுகம்
அந்த 'நிர்மூல
சம்ஹாரம்'ஒன்றை
நினைவு தழுவுமெனின்
இந்த விதமாய் எழுதிக் கிளர்வதுமேன்?
இந்த எழுத்தும் எனது மயக்கமென்பேன்.
நிராசையின் கீதமும் வாழ்வின் ஒரு முனைப்பே.
'சம்ஹாரம்'கோருகிற
அற்ற நிலைச் சார் பினுக்கும்
வாழ்வின் நிறைவு மிகத் தேவை.
அஃது அற்ற
கோழியின் மேச்சலில் இன்னும் குறுகுறுத்து
ஓடி அலைந்தே ஒடிந்து திரும்புகையில்
ஓ!
நீ இன்னும் அங்கே நிறைய மலர்கின்றாய்.


வெளியார் வருகை

நேற்று முழுதும் அலைச்சல்.
இரவு போய்ச் சாப்பிட்டேன்
பின்னர் படுக்கையில் சாய்ந்துவிட்டேன்...

மூத்திரம் பெய்ய இடையில் முழித்தெழுந்தேன்,
வார்த்தடியை நீக்கிக் கதவைத் திறக்க
-இருள் போர்த்தித் தெரிந்தது
கோடிக்குள் போகையிலே
வானத்தை அண்ணாந்து பார்த்தேன்
வடிவாக, வெள்ளிகள் பூத்து மினுங்கின.
மூத்திரம், பெய்யும் பொழுது
பிறகும் ஒருமுறை
அண்ணாந்து பார்த்தேன்-அடடா,
-ஓ அடடா!

வெள்ளிகள் கீழே விரைந்திறங்கி வந்தனவே.
நம்பொணாது
கண்களை தேய்த்துக் கசக்கினேன்
உண்மைதான்;
வெள்ளிகள் கீழே விரைந்திறங்கி
எங்களது
தென்னைகளின் மேலே திரியத் தொடங்கின பார்!

பூர€ணையைப் போன்ற புதுச் சிவப்புக் கோளங்கள்
உச்சந்தலையில் ஒருசிறிய கற்றைமயிர்.
பக்கமிரண்டும் பசுவின் சிறுகொம்பு.
"இப்படித்தானோ இருப்பன வெள்ளியெல்லாம்?"
மூத்திரம் பெய்தபடி
என்னுள் முனகுகையில்,
"ஓம்" எனப்
பின்வீட்டுக் கணபதியர் ஒப்புகையில்
தென்னோலையின் வளைந்த சிறுநுனியைத்
தொட்டபடி
வந்த கோளத்தின் வடிவம் பெருகிறது.
தோளும் முகமும் சுடர்ந்து பொலிகிறது
மார்பும் புயமும் வயிறும் தெரிகிறது.

"இப்படித்தானோ இருப்பன வெள்ளியெல்லாம்?"
மூத்திரம் பெய்தபடி மேலும் முனகுகையில்
"ஓம்" என
மீண்டும் கணபதியர் ஒப்புகையில்
தென்னோலையின் வளைந்த சிறுநுனியைத்
தொட்டபடி
இன்னும் வெள்ளிகள்,
இன்னும் வெள்ளிகள்
மேற்குக் கிழக்காய்
இன்னும் மூத்திரம்,
இன்னும் மூத்திரம்,
இன்னும்,
மூத்திரம் பெய்து முடியவே இல்லை!

விடிகிறது.
இந்த வெள்ளி வீரர்கள்
எங்கு படிந்தனரோ?
பாலையோ? அன்றிப் பனிவெளியோ?
எந்த மலையிலோ எந்தக் கடலிலோ?
வாரிச் சுருட்டி படுக்கையை விட்டெழுந்து
மண்டபத்துள்வந்தேன்.
விடிந்து வரும் பொழுதில்,

எல்லாக் கதவும் திறந்து கிடந்தன.
எல்லாக் கதவும் திறந்தே கிடப்பதால்
வெள்ளிகள் இங்கேதேன்
வந்திறங்கி விட்டாரோ?

வாசலுக்குவந்தேன்
வளவெல்லாம் நோக்கியபின்
கூரையினைப் பார்த்தேன்
ஒருவன் அங்கே கால்கத்தி
நின்கின்றான்.
வெள்ளி நிலத்தவனோ?
காக்கி உடையணிந்து துப்பாக்கி வைத்திருந்தான்
போர்க்கவசம் ஒன்றைத் தலையில் புனைந்திருந்தான்.
பார்த்துப் பயந்தேனோ?
பார்க்காதவன்போல வீட்டுள் புகுந்தேன்.
பிறகு வருகையிலே
கூரையின் ஓரம் அயலவர் கூடிநின்றார்.
வீரனின் விழுவானோ?
அலலால் மெசின்துவக்கால்
'பட்பட்' என்றெங்களை பட்டாஸ் கொழுத்துவானோ?
ஊமை நிசப்தம்.
ஒருகணம் நீள்கிறது
ஆட்கள் சுவரை வளைத்துக் குவித்தார்கள்
நானும்,
படியால் நடந்து நெருங்குகின்றேன்.
ஆரோ ஒருவர்
அலவாங்கு வைத்திருந்தார்.
"என்னத்துக் கிந்த அலவாங்கு?"
எனக் கேட்டேன்.
"பாரும்இதோ" என்றார்கள்.
பாதி முகம் அழிந்து
பக்கக் குடல் சிதறி,
வீரன்
அழுகும் வெறும்பிணமாய் வீழ்ந்துள்ளான்.

ஆர் ஆராரோ வீட்டில்
அதற்கிடையில் கூடிவிட்டார்
மாவடியின் கீழே வடிவான கூடாரம்.
ஊதுவத்திபற்றி
தடித்த ஒரு மனிதர்
சாமிபடத்திற்குப் பூசைநடத்துகிறார்
"எங்கே என் பிள்ளை?"
எனக்கேட்டேன்
என்மகனைத் தந்தார்கள்.
தூக்கித் தவசியிடம் செல்கின்றேன்
"என்ன இவையெல்லாம்?"
என்கிறேன் இங்கிலீசில்.
"எல்லாம் வெளியாரை எற்பதனால்-"
என்றவரும் இங்கிலீசில் சொன்னார்
"இனிஎன்ன செய்வது?" என்றேன்.
"பெண்டு
பிள்ளை யாவரையும்
போலிசில் ஒப்படைத்து
வந்த நீர் விட்டுக்குக் காவல்இரும்" என்றார்.

சிந்தித்தேன்.
நாங்கள் ஒருவனைத் தீர்த்துவிட்டோம்.
நாங்களேதான்
இந்த நமனைப் பலிகொண்டோம்.
வந்தால்,
இனியும் அவர்களை மாய்ப்போம் நாம்.
இந்த வழியே,
இனிமரணத்துள் வாழ்வோம்.

"குத்துவோம், வெட்டுவோம்,
கொத்தி விழுத்துவோம்.
இந்த வழியே,
இனி மரணத்துள் வாழ்வோம்"
என்றேன்....
விழித்தேன்...
"எழும்புங்க கோப்பி" என்று
வந்தவளைப்பார்த்தேன் மருண்டு.


நீர் வளையங்கள்

இன்று மிகத் துயர் உற்றேன்.
என் இனிய நண்ப,
இவ்விரவின் நிலவொளியில் என்னுடன் நீ இருந்தால்
வெண்பனியின் துனி சொட்டும்
பூங்கொத்தைப் போன்று விம்முகிற என் நெஞ்சில்
ஆறுதல்கள் தருவாய்.

'இன்று, இந்த மிகச் சிறிய சம்பவத்திற்காக
இவ்விதமோ துயர் உறுதல்'
என்று நினைப்பாயோ?

இன்றளவும் வாழ்ந்துள்ளேன்;
எனினும் எனதன்பஇ
எனது மனம் பூஞ்சிட்டின் மென் சிறகுத் தூவல்.
என் பாதம்,
இடர் கல்லில் அழுந்தாத ரோஜா.
என் நண்பர் மிக இனியர்;
சுடு சொல்லை அறியார்;
கண்­ரின் துளிபோல
காலம் எனும் நதியில் கலப்பதற்கே உயிர் செய்த
காதல் உரு ஆனார்.....

போகட்டும்.....
இன்று முதல் கசப்புகளை வாங்கிப் புசிக்கின்றேன்,
அதற்கென்ன!.........
என்மனதை, என்றும்
நோகாது வைத்திருக்க வேண்டுமென எண்ணேன்;
நொந்தவர்தான், வாழ்க்கையிலே சாதனைகள் செய்தார்.
ஆதலினால்,
என் மனதைக் கல்லாக்கிக் கொள்வேன்.
அம்புவரும்;
அது முறியும்;
நான் நடந்து செல்வேன்.

ஏகமும்,
தாம் என்று எண்ணுபவர் மாள்வார்
இப்பெரிய உலகினிலே எத்தனைபேர் உள்ளர்;
ஆகாய வீதியிலே
என் நெஞ்சைக் கிள்ளி அத்தனையும் இட்டதுபோல்
மின்னுகிற
வெள்ளிப் பூ அனந்தம் என்பதைப் போல்
தினம் மேதை பூப்பார்;
பூச் சிவந்த சேவல்,
ஒரு நாள்
இரவு
கூவும்.

என் இதயம்
இப் பரந்த வான் முழுதும் ஆகி இருப்பதனை
ஆர் அறிவார் என் இதய ஊற்றே?....
என் எதிரில் தெரிகின்ற வான்முழுவதும்,
இந்த இரவெல்லாம் ஒளிர்கின்ற கற்கண்டுத்தூளும்
பொன்னிதயம், என்னுள்ளே,
நெடுஞ்சுரங்கமாகிப் புக்கின்ற அழகைத்தான்
ஆர் கண்டார் அன்ப?

விண்வெளியில்
உதிர்ந்துள்ள இவ்வெள்ளிப் பூக்கள் மீது யான்
அடிவைத்து நடக்கின்ற போதில்,
"என்ன இவன் அழகு"
என்று இவர் வியந்து கொள்ளும்
இனிய பொற்காலம் ஒன்று வந்திடுமோ?--

அல்லால்,
இன்றிரவு,
இதோ வெளியில்,
என் கிணற்று வாழை இலைகளிலே,
நிலவினிலே,
பனித்துளிகள் பட்டு,
இச்'
என்ற முத்தத்தில் ஒலியுடனே
அவைகள் இழிந்து
நிலம் சொட்டுவதைப் போல் மறைந்து போமோ?.....
.........?
அச்-செ-ய-லு-ம்-
எனக்கு மிக உவப்புளதே - ஆகா!
அலை கடலும்,
புவி முழுதும்,
அருமை உயிர்ச்சிட்டும்,
சப்திக்கும் ஒருங்கமைந்த ஓசையில்
என் குரலும் சங்க மிக்க
என் இயல்பை நான் பாடுகின்றேன்
இச்சை மிகும் சுருதியினே
இதனின்று வேறாய் எழுப்புகிற நரம்புகளை
நாம் முறிந்து வைப்போம்;
"எச்சிறிய புல்லும்"இ
அதன் இயல்பினிலே முழுமை.
இடுகாட்டில் முளைக்கின்ற கழனியும் ஓர் அருமை!
அப்படியே நாம் ஆனோம்.
அதோ இந்த நிலவில்
அகன்ற இலைவாழையிலே பனிசொட்டும் கீதம்,
,இச்'
என்ற ஒலியுடனே எழுகிறது மீண்டும்;
இனி என்ன!
போய் துயில்வேன், என் உயிரின் கண்ணே.



தா. இராமலிங்கம்


ஆசைக்குச் சாதியில்லை


வேளாளர் குடிப் பிறந்து
பிறர்
ஆசார முட்டையிலே மயிர் பிடிக்கும்
மேற்சாதி நான்!
என்றாலும்
மருந்துக்கு நல்ல தென்றால்
கள்
அருந்துவதில் என்ன குற்றம்?
கள் பருகச் சென்றேன்....
முற்றத்தில்,
முட்டியிலும் சட்டியிலும்
ஈக்கள் நுரை மிதக்கும்,
கள்ளு நிறைந்திருக்க,
"நயினார் இருங்கள்!" என்று
பள்ளர் குடிப் பிறந்தாள்
இட்ட பன்னாங்கிலே
உட்கார்ந்தேன்.
பிளாவில் கள் நிறைத்துக்
கை நீட்ட
அவள் குனிந்து
காமத் திரியினிலே
தீக்குச்சி தட்டி வைத்தாள்.
கண்ணிலே பிளாக் கோலிக்
கள்ளு நிறைந் திருக்கும்
பெண்ணின்
நெஞ்சு முட்டி வழிகின்ற
பருவம் பருகுதற்குக்
கையைப் பிடித்தேன்
திடுக்கிட்டு நடு நடுங்கிக்
கள் சிந்த.
எனை நோக்கிக்
கையை உதறி விட்டு
வீட்டுக்குள் ஓடி விட்டாள்.
பின்னாலே நான் நகர்ந்தேன்.
உதட்டுக்கு முட்டி கட்ட
வாய் துடித்து
அவள் முன்னாலே நின்றேன்.
கூசாது,
'தீயணைக்கும் படை இரங்கி
இயக்கு கிளி!' எனக்
கெஞ்சி இரந்து
இன்பம் நுகர்ந்தேன்
என்
ஆசார முட்டையிலும்...ஆசார முட்டையிலும்
கறுப்பு மயிர் கண்டேன்.


தூக்கட்டும்!
தூக்கட்டும்!


தூக்கட்டும்!தூக்கட்டும்!
தூய்மை துலங்க . ஒரு
யுகம் பிறக்கும்!

கற்புக் கரசியாய்
வாழ் என்று வாழ்த்திச்
சிலப்பதிகாரமும்
žதனம் தந்தார்!

பாத்தி பிடிப்பார்
அள்ளி இறைப்பார்
பிஞ்சு மாதுளை
வெள்ளை மணிகளில்
இரத்தம் பிடித்திடும்
பொதிந்த ஆசைகள்
முற்றும் பலித் திடும்
என்ற கனவுடன்
கைப்பிடித் தேகினேன்!

புகுந்த புதுமனையில்
கறந்த மனப்பாலைக்
காச்சி உறிஞ்சுதற்கு
ஈரவிறகு தந்தார்.
புகைக்குடித்து அடுப்பூதிப்
புகைச் சூண்ட பால் குடித்தன்!

காலம் கழிந்த தன்றிக்
கனவு பலிக்கவில்லை.

அரை வெறியில் வந்திடுவார்.
'சுடுகுது சுடுகுது
மடியைப் பிடி' என்பார்!
மின்னுவது போலிருக்கும்
பாட்டம் ஓய்ந்து
சிலு நீரும், சிந்தி விடும்
போய் விடுவார்!

பித்தம் மிகுந்து நான்
வாயுள் விரலோட்டி
வாந்தி எடுப்பமென்றால்
வீ­ர் வடிவதன்றி
வெப்பம் தணிவதில்லை.

யானைத்தீ நோய் போக்கப்
படலை பல திறந்தன்
மூலிகைகள் சேர்த்து
இடித்துப் பிழிந்தெடுத்து
நாள் தோறம் நள்ளிரவில்
நால்ல மருந்து தந்தான்.
கள்ளப் புரியன் என்றார்!

கணவன் அறிந்து விட்டான்
மீசை துடித்து நின்றான்
கற் பெங்கே என்று
கஞ்சி வடிக்கலுற்றான்!

என்தன் பிணி நீங்க
இறைவன் வழிபட்டுக்
கற்பைக் கொளுத்தி விடக்
கற்பூரமாய் எரிந்து
காணிக்கை ஆன நென் றேன்!

வாய் முழுதும்
தணல் கொட்டி
அடைந் திடுவேன்!
ஊன் கொழுப்பு
அடக் கிடு வேன்!
என்று இரைந் தெழும்பக்
கள்ள இறைவனிடம்
காணாமல் ஓடிவிட்டன்.

நிரை மீட்பேன்! நிரை மீட்பேன்!
குறிசுட்ட மாட்டைக்
கொண்டேகப் பார்க்கிறியோ?
மடி விட்டால் நாளை
பராமரிப்பு யார் பொறுப்பு?
என்று
உறுமி வந்தான்
ஓங்கிய கத்தியோடு!

ஓங்கிய கத்தியை உருவி எறிந்தும்
திருகிய கைகளை முறுக்கி விலக்கியும்
முகத்தில் அறைந்து நிலத்தினில் வீழ்த்தி
நெஞ்சில் இருந்து நெரிக்க முயல்கையில்

ஓலமிட்டேன் நான்!
ஓலமிட்டேன் நான்!
ஓடி வந்தயல்
விளக்குப் பிடித்து வேலியால் பார்த்தது
விலக்குப் பிடிக்க எவருமே வந்திலர்.

உலக்கை கிடந்தது!
வலக்கை துடித்தது!
உச்சந் தலை அடி!
ஓங்கி ஒரே அடி!

விளக்கு உடைந்தது...
வெள்ளம் பாய்ந்தது...
ஊடு பத்தியே ஒளியும் அணைந்தது!
நாய்கள் படலையில் கூடிக் குலைத்தன.
நெஞ்சில் மணிக் கூடு வேகமாய் ஓடிற்று!

அவன் கட்டிய தாலியை அறுத் தெறிந்தேன்.
என் காதலன் மடியினிற் கிடந் தழுதேன்,
நீடிய சிறையினில் பட்ட துன்பம்
ஈடு செய் இன்பம் தந்து விட்டான்.

உயிரோடு ஊறியது
வாசம்
குடி போக மாட்டாது.

தூக்கட்டும்! தூக்கட்டும்!
இந்தப் புண்ணிய பூமியைக்
கை கூப்பி விடை பெறுறன்!


எதிர்காலம்

இன்று சலூன்களிலே
கத்தரிக் கோல்களுக்கோ
ஒய்வு உளைச்சல் இல்லை.
நாங்கள்
நித்தம் முகம் வழித்துச்
சித்தம் சிதைத்து விட்டோம்!
இனி
இயல்பாய் வளரட்டும்
இளைஞர்களே
சுயமாய் ஓளிவிடட்டும்
செயற்கை முறையினிலே
சேறு புழுக்கிறதே!
வாடிக்கையாய் நாங்கள்
வழிப்பயணம் செய்துவந்த
ஓற்றையடிப் பாதை
இனி உதவமாட்டாது!

வகுப்பறை வாழ்க்கையிலோ....
கரும்பலகைத் தளமெங்கும்
வெண்கோட்டு விளக்கங்கள்
மலகூட உட்சுவரில்
கரிக்கோட்டுச் சித்திரங்கள்!

வெளியெல்லாம் நாங்கள்
விளையாடித் திரிந்தோமே....
வாலறுந்த பட்டம்
தலை குத்தி வந்து
தரையோடு மோதுவதும்
கயிறறுந்த பட்டம்
காற்றோடு அள்ளுண்டு
மரத்தோடு மோதுவதும்...

கவனம் கவனம் கால் சறுக்கூது
பின்னாலே திரிந்து
போட்ட கணக்கெல்லாம்
பொய்யாகிப் போச்சு!
என்ன இளைஞர்களே
இதுவும் தெரியாதோ
எங்கள் விடுதலைத் தலைவர்கட்கும்
வெளிப் பல்லுத்தான் வெள்ளை!

காற்றடிக்கும் காலமிது
இளைஞர்களே
கைவிளக்கை நம்பி
இனி இருட்டில் போகாதீர்!
இனி என்ன!
இன்னுமோர் பாட்டம் பெய்தால்
வெள்ளத்தில் அமிழ்ந்து போவோம்
விதி இது என்று வெம்பி
வெறுங் கையோடிருப்போமானால்....
žச்ž எமக்கும் கல்யாண ஆசையோ
சந்ததிக்கு முதிசம் சாக்கடை ஓரமோ
இளைஞர்களே எச்சரிக்கை!
புயல் எழுந்து வீசிடலாம்
உயர் மரங்கள் முறிந்திடலாம்
குடியிருக்கும் வீட்டுக்
கூரை பறந்திடலாம்!
வீணாகக் சக்தியினை
விழுலுக்கிறையாமல்
வாருங்கள் இளைஞர்களே
வந்தொன்று சேருங்கள்!
காற்றடிக்கும் காலமிது
கைவிளக்கை நம்பி
இனி இருட்டில் போகாதீர்.


žவியம்

சேர்க்கை விட்டிறங்கிக் கோழி கொக்கரிக்குது
போர்வையுள் கிடந்து பிள்ளை குறட்டை விடுகுது!
மணிக் கூட்டு வாழ்க்கைக் காரர்
என் சொல்லுக் கேட்க மாட்டார்!

கூனிக் குறுகி விட்டன்
கோலூன்றி நடக்கின்றன்.

பார்வை மழுங்கிப்
பாக்கிடித்துத் தின்கின்றன்
மணிக் கூட்டு வாழ்க்கைக் காரர்
பரிகாசம் பண்ணுறார்கள்!

பூட்டி பிறந்தின்று முப்பத் தொன்று!

கூட்டி மினுக்கித்
துடக்குக் கழித்துப்
பூட்டி நகையும்
அழகு பார்த்து....

அடுப்பு மேடை வெடித்துக் கிடக்குது
அப்பி மெழுகிச் செப்பம் ஆக்கு
சாணி அள்ளுவது கவனம் மோனை
காலி மாடு காலால் அடிக்குது!
நாணயம் பூட்டி வண்டில் பழக்காராம்
தொட்டில் தீனியைத் தின்று தின்று
ஏரி கொழுத்துத் திமிர் எடுக்குது!
பிடரி குலுக்கித் தலையை உதறி
பிணைத்த கயிற்றை இழுத்துக் கழற்றி
கன்னி நாகுவைச் சுற்றித் திரியுது
பிடிக்கப் போனால்
இடிக்க வருகுது!

கோழி கிளறிக் குடங்கரை குதம்பூது
பாசி பிடித்துக் கிணற்றடி வழுக்கூது
மண் வெட்டிப் போடவோ ஆண் பிள்ளை இல்லை
படிப்புக் குலையாத žவியம்!
சுருட்டு நழுவாத வாயும்
செருப்புக் கழட்டாத காலும்
மடிப்புக் குலையாத žவியம்!
விடியத் துவங்கி நானும் கத்துறன்
இருந்த இடத்தாலும் எழும்பாது களாம்
நான் பெற்ற பிள்ளை பத்திரிகை படிக்குது
அவன் பெற்ற பிள்ளை ரேடியோக் கேட்குது
வெட்டி நாட்டிய வேலிக் கதியாலை
வெள்ளாடு கால் போட்டுக் காந்தித் தின்னூது
கட்டிப் போட்டு வளர்க்க என்னவாம்
ஓட்ட விட்டு எறிந்து துரத்தெடா!
பீத்தல் žலை கிழியுது என்று
சூத்தைப் பல்லனும் சொல்லிச் சிரிக்கிறான்.

ஐயர் வாற நேரம் ஆகுது
மான் தோலைத் தேடி எடுத்துவை மோனை!
மான் தோலுமோ முழுதும் மயிர்கொட்டிப் போட்டுது
இனி என்ன?
என்னோடு அதற்கம் உடன் கட்டைதான் நிகழும்!

தாலி கழற்றிக் கையில் கொடுத்துச்
சுடலை அனுப்பிச் சும்மா இருக்கிறன்
யார்தான் உயிரோடு இருக்கப் பிறந்தவர்கள்?
குருத்தோலை வருவதும்

காவோலை ஆகிக்
கழன்று விழுவதும்
எங்கும் நிகழ்வது தான்!

அடைப் பேட்டைத் தூக்கி
எறிந்து துரத்தினால்
இடப் போகுதோ முட்டை
ஏனாக்கும் துரத்தினான்?

முலை தெரியுதாம் மூடி மறைக்கட்டாம்!
குத்த விட்டுச் சட்டை போடுறார்
கிழட்டுப் பாச்சிக்குச் சாத்திரம் பார்க்கிறார்!

பூட்டி பிறந்தது வெள்ளி திசையிலாம்
வீட்டில் இனிமேல் விளக்கெரியுமாம்.

சடைச்சி நாயைப் பிடித்துக் கட்டெடா
ஐயர் வந்தால் வாயிற் போட்டிடும்!


நான் யார்?

கனவு கண்டு ஏன் புலம்புறீர்
என்று தட்டித் துணைவி எழும்பினாள்.

காளி கண்களில் தணல் சிவந்தது
கோர தாண்டவம் கொந்தளித்தது
கும்பி தணலெலாம் கோலி அகப்பையால்
உடலம் எங்கணும் வீசிக் கொட்டினான்
என்று சொல்லியே
நான் நடுங்கினன்.

அம்மை நோய் உற்றீர் ஆபத்து ஐய!
தொத்தி விடும்பிறர்மேல் இது வகனம்!!
தூரத்தே கொட்டிலில் ஒதுங்கிக் கிடப்பீர்
பழந்தண்ணி பனங்கள்ளு பழவகை உண்பீர்
வெக்கைகள் யாவும் விஷம் எனக் கொள்வீர்
வேப்பிலை மஞ்சள் சாந்தம் இடித்து
மேனிவரு எலாம் பூசி உலர
தலை முழுக்காடி
நீர்
விடுதலையாவீர்!
என்று பலன் எலாம் விரித்துக் கூறினாள்.

மீண்டும் கனவுகள் தொடர்ந்து வந்தன:

அகழி சூழ் மதில்கள் தாண்டிச்
சிறைக் கோட்டை!
அங்கு
அடைபட்டுக் கிடப்பவர்கள்
மிஞ்சி நடந்தவர்கள்.
குடி திரண்டு வருகிறார்
படை திரண்டு வருகிறார்
கோலோடு வருகிறார்
வேலோடு வருகிறார்
இடிக்கிறார் துவைக்கிறார்
சிறைக் கோட்டை உடைக்கிறார்!

நான் யார்? நான் யார்? நான் யார்?
நான் தான் பதினாலாம் லூயி!
நான் தான் பதினாலாம் லூயி!!

குடி திரண்டு வருகிறார்
படை திரண்டு வருகிறார்
வாள் ஓங்கி வருகிறார்
வேல் ஓங்கி வருகிறார்
துண்டு துண்டமாய்
வெட்டப் போகிறார்!

நான் யார் ? நான் யார்? நான் யார்?

எறிந்து அலை கழுவும் கடல் முற்றத்தில்
எழுந்து நின்றது ஓர் சிவனின் கோவில்
முழுநிலவு பூத்திருக்கும் வேனை தோறும்
அடித்தலைகள் அரித்துவரும் அத்திவாரம்!

ஓர் இரவு,
முகில் திரண்டு கறுகறுத்து
மின்னி மின்னி,
தணல் பிளந்து கக்கியது
புயல் எழுந்து வீசியது!
அலைகள் கெம்பி
இரைந்து கெம்பி
மோதியது அடித்தளங்கள்!

மல்லாந்து போயிற்றுக் கோயிற் கோட்டை!
மூலைத் தானம்
விறாண்டி வறுகியது அலைப்பெருக்கம்
வாரி ஓடி,
அமிழ்த்தியது ஆழத்தில் லிங்கம் தன்னை!
பின்னொருநாள் ஆழ்கடலில்
அமிழ்பொருள்கள் முத்துக் கள்
கல்லுறைந்த நண்டுகள்
நாடிச் சுழி ஓடித்
தேடித் திரட்டிவர
அகப்பட்ட லிங்கத்தை
வெளிக் கொணர்ந்து ஆராய்ந்தேன்!

நான் யார்? நான் யார்? நான் யார்?

***

கடுந்தரையில் கிணறு ஒன்று!
தண்­ர் அள்ளி
வாயிலே,
விட்டுப் பார்த்தேன்,
பச்சை உப்புத்
துப்விவிட்டன்!

மணற் தரையில் துரவு ஒன்று!
எட்டிப் பார்த்தன்.
ஒரே காவி! சவர்க்கட்டி!
முகங் கோணிற்று!!

வயல் வெளியில் குளம் ஒன்று!
கிட்டச் சென்றன்
கோடை வெயில் சேறுசுரி
குருவி எச்சம்!
விடாய் மிகுந்து
நாவரண்டு
சோர்ந்து போனன்!

நான் யார்? நான் யார்? நான் யார்?

* * *

என்று நான் கனவைச் சொல்ல,

விடி வெள்ளி காலிச்சு
வெகுநேரம் ஆகுது
வண்டிலைப் பூட்டுவம்
வழிப் பயணம் தூரம் அல்லோ?

இரவெல்லாம் விளக்கேற்றி
எருதுக்குத் தீனிவைத்து
அச்சுக் கொழுப்பேற்றி
எல்லாம் ஒழுங்கு!
இனித் தாமதம் இல்லை
வண்டிலைப் பூட்டிவம்
ஏறி அமர்ந்திடத்
தில்லை அம்பலம்
இப்ப போய் விடும்

என அவள் கூறி நின்றாள்.

** இதன் தொடர்ச்சி PEK004.MTFல் வருகிறது**








** PEK003 ன் தொடர்ச்சி**

இலையுதிகால அரசியல் நினைவுகள்

உலர்ந்த காற்று மரங்களை உலுப்பும்
மெலிந்த கிளைகளில் முறைத்துப் பழுத்த
இலைகள் மெல்ல மரத்தின் நீங்கி
வலிய காற்றின் வழியில் ஓடும்
பிரிந்த இலைகள் தரைமேல் வீழ
மரங்கள் மேலும் செழுமை நீங்க
விழுந்த இலைகள் சருகாய் மாறப்
பூங்கா மெலல இடு காடாகும்.
பறவைகள் போவன. அணில்கள் அகல்வன
இரவில் மரங்கள், பேய்கள் கையில்
ஏந்தி நிற்கும் துடைப்பம் போல....
இலையுதிர் காலம் இத்தனை கொடிதோ?

நாட்கள் குளிர்மிக, மரங்கள் மீதும்
மண்ணின் மீதும் வெண்பனி வீழ
வெண்பனிப் படலம் பூமியை மூட,
பறவைகள் இன்றி - அணில்கள் இன்றி.
மரங்கள் மட்டும் நேராய் நிற்க,
கம்பளி உடைக்குள் மேனி நடுங்கினும்
வெண்பனி அழகை மறுத்தற் கில்லை

மீண்டும் மலர்கள் மண்ணைப் பெயர்க்கப்
பறவைகள் மெல்லப் பாடத் தொடங்க
அணில்கள் தாவ வஸந்தம் வந்தது
மரங்கள் மீது இலைகள் போர்த்தன.

இலையுதிர் காலம் கொடியது தானோ?


சித்திரையில் மாவலி

மார்கழி மேக மழைநீர்ப் பெருக்கில்
மூழ்கி அமிழ்ந்த மாவலி இன்று
சித்திரை வெயிலில் மேனி உலர்த்தும்.

ஆழங் குன்றிய அகண்ட ஆற்றின்
இருகரை மேலும் இறந்த மரங்கள்,
பூமிச் சிறையைப் பெயர்த்த வேர்கள்.
கழுவித் தேய்ந்த கரைகள் மீது
காய்ந்த வண்டற் தூசியில் மாதம்
நான்கு முந்திய சுவடுகள் தெரியும்.

ஆற்றின் பழுப்பு உடலின் மீது
தேமல் போன்று தேங்கிய நீரில்
பகலில் மண்ணும் பாசியும் கல்லும்
மெல்லச் சறுக்கும் மீனும் தெரியும்.

பள்ளத் தாக்கிற் பரவிய மணல்மேல்
மெள்ள ஊரும் மெலிதோர் கோடு
இந்த மாவலி இரவிற் தவழும்
மென்குளிர் காற்றில் மேனி நடுங்க,
நீரில் விழுந்த நிலவு நொறுங்கும்;
மூங்கில் மரங்கள் முறிந்தே தெரியும்.

மனக்கண் நோக்கில் மாவலி மணல்மேல்
ஒருநூ றாண்டுகள் முன்னம் ஓடிய
மாநதி மீண்டும், மீண்டும் தெரியும்.


எங்கள் இயக்கம்


நமது இயக்கம்
ஓரிரு வழிகளில்
மாநதி போன்றது.
எங்கெங் கிருந்தோ
வழி வழி வந்து
இணைவன பிரிவன
உயர்வன வழிவன
நீர்த்துளி பற்பல
தனித் தனியாக
இனங்க கண்டறியோம்
நதி யென்றறி வோம்.
கலையென்னும் குறிக்கோள்
தரையென்னும் யதார்த்தம்
காலத் துடனே
வழி சில மாறினும்
குறிக் கோள் மாறா
நதியும்.
நம்முடை இயக்கமும்
ஒரு சில வழிகளில்
ஒன்று போலவன!
ஒன்று போல்வன!!

* * *

நமது இயக்கம்
ஓரிரு வழிகளில்
நதியின் கரையின்
மூங்கில் போன்றது
ஆத்திரங் கொண்டு.
-žறிடும் காற்றில்
வளைந்து பின்னர்
வானுற நிமிரும்.
தவறி முறிந்து
போயினும் கூட
மண்ணிற் பிறந்து
வேர்களைப் பரப்பிய
மூங்கில் மறுபடி
தழைத்துச் செழிக்கும்.
நிலைமை உணர்ந்து
நடப்பதில் சொந்த
நலத்தை நம்பி
இருப்பதில் எங்கள்
இயக்கமும் மூங்கிலும்
ஒன்று போல்வன!
ஒன்று போல்வன!!

* * *

நமது இயக்கம்
ஓரிரு வழிகளில்
காலை வானில்
காரிருள் பிளந்து
செங்கொடி எழுப்பும்
சூரியன் போன்றது.
தொடரும் விடிவை
வருமுன் கூறும்
இத்துணை மங்கிய
ஓளயில் உலகம்
விடியுமோ என
சிலர் ஐயுறினும்-
உறுதி கொண்டு
வளர்ந்து புதிய
நாள் செயும் வகையில்
எங்கள் இயக்கமும்
எழுத் சூரியனும்
ஒன்று போல்வன!
ஒன்று போல்வன!!


பயணம்

பகலின் நலிவு இருளின் வலிவு.
இன்னும் ஒருமுறை இரவு வெல்லும்.
ஓங்கும் மரங்கள், இலைகளில் இரவு
காயத், தீய்ந்து கரியாய் மாறம்.
நெடிய தென்னை தலையை விரிக்கப்
பேய்கள் அஞ்சி ஒடுங்கி நிற்பன.
சின்ன வண்டுகள் சில்லென அலறத்
தவளைகள் மேனி நடுக்கங் கேட்கும்.
வான வெளியில் நிலவு தடுக்கி
மேகக் குளத்தில் வீழ்ந்து மூழ்கும்.
இருளோ இன்னும் இன்னுஞ் சூழும்.

நீண்ட பயணம் போக வேண்டும்-
விழிகள் மெல்லக் குருடாய் மாற
இடறுங் கால்கள் வழியைத் தேடும்
நாளைக் காலை விடியக் கூடும்
இருளை மீறி இரண்டு அடிதான்
முன்னே போக முடியினும் போவேன்.
விடியலைக் காத்து நிற்குமோ காலம்?


ஒரு இரவு


மாலையிலே முத்தரும்பும் என் பவள மல்லைகையில்
இரவிரவாய் பூவிரிந்து விடியலிலே மணம் பரவும்
மணம்பரவு முன்னாலே மலர்கள் சிதறி விழும்
மண்ணோடு மண்ணாகும்.

ஆனாலும் என் பவள மல்லிகையோ மறுபடியும்
மாலை அரும்பி ராவிரிய மொட்டு விடும்.
வெள்ளி மலர் விரிந்து
வானவெளி எங்கும் இரவிரவாய் மலர் குவியும்.
அள்ள முடியாமல் வாயு சலித்திருக்கும்,
கடல் கதறும், சேவலமும்,
கதிரோன் துயில் கலையும், வானம் கனல்கொள்ளும்
பூக்கள் எரிந்தொழியும்.

ஆனாலும் வான்மேட்டில் பூச்சொரியும் என்மரமோ
இன்னோர் இரவுக்காய் இரகசியமாய் மொட்டுவிடும்.
இருளில் இரவிரவாய் இறங்கிவரும் பனிமலர்கள்.
பின்னிரவில் மலர்கவிந்து விடியலிலும் மீந்திருக்கும்.
காலைத் தணல்நெருப்பில் கண்முன்னே மலர் அழியும்.

ஆனாலும் பனியுதிர்க்கும் என்வான நெடுமரமோ
மறுநாள் மலர்பொழிய முழுநாளும் நீருறுஞ்சும்.



அ. யேசுராசா


அறியப் படாதவர்கள் நினைவாக


மரித்தோரின்நாள்:
கல்லறைத் திருநாள்!
விரிந்துகிடக்கின்ற சவக் காலைக்கதவுகள்
வந்து போனபடி, பெரிய சனக்கூட்டம்.

கல்லறைகள் எழுந்துள்ளன;
வாழ்ந்து சொகுசாக
மறைந்து போனவரின்,
நினைவைக் கல்லுகளில்
வரைந்த அடையாளம்.
பூவெழுத்தில் விவரங்கள்,
'சிலுவை' 'சம்மனசு'
'கன்னிமரியாளாய்ச்'
சுரூபங்கள்;
கூலிக் குழைத்த
மேசன் தொழிலாளர் கைவண்ணம்.

தென்கிழக்கு மூலை,
வரிசையாய்க் கல்லறைகள்:
'சங்கைக் குரிய கன்னியர்கள் தந்தையர்கள்'
படுத்துக் கிடக்கிறாராம்;
பளிங்கில் அவர்நினைவு
பொறிக்கப் பட்டுளன.

கிணற்றருகில்
தென்னை மரத்தடியில்,
பட்டிப்பூ மலர்ந்துள்ள
சிப்பிச் சிலுவை
மேடுகளின் கீழெல்லாம்
மனிதர் புதைபட்ட, அடையாளம்.
பேரும் தெரியாது,
ஊரும் தெரியாது,
யாரென்றும் அறியப்
படாத மனிதர்கள் இங்கு புதைந்துமுளார்.

யாரென் றறியப் படாதவரென்றாலும்,
அவரைக் குறிப்பாக
உணர முடியுந்தான்....!

'ஒருகரையில்' நின்றபடி
கரைவலையை இழுத்தவர்கள்:
தாமிழுத்தமீனில் சம்மாட்டி கொழுத்திருக்க
மெலிந்து கருவாடாய்க் காய்ந்து மடிந்தவர்கள்....

'அலுப் பாந்தி' அருகில்
மூட்டை சுமந்தவர்கள்; பார விறகுவைச்சு
கை வண்டில் இழுத்தவர்கள்....'

'பொழுது புலராத விடி காலைதொடங்கியதும்
நகரை ஊடறுத்த வீதிகளின் வீடுகளில்,
நாளும் அழுக்குகளைக் களைந்துசுமந்தவர்கள்....'

என்ற உழைப்பாளர் தாம்புதைத்து கிடப்பார்கள்!

செத்துப் புதைபட்டுக்
கிடந்த மண்மீதும்
எல்லை கட்டி,
கல்லறையாய் மேடுகளாய்
வர்க்கத்தின் முத்திரைகள்
வர்க்கத்தின் முத்திரைகள்!


சங்கம் புழைக்கும்.....மாயாகோவ்•ஸ்கிக்கும்.....


'சங்கம் புழை!
உன்நெஞ்சைமுட்கள் கிழித்த கதையறிவேன்
"குளிர்ந்துபோன என் நிராசை நித்தமும்
மூடுபனியாக, உன் வீதியிற்படரும்"
என்படிதுயரில் நீசெத்துப் போவாய்
உயிர்தின்றது உன் காதல்.

"....நொறுங்கியது காதற் படகு
வாழ்வும் நானும் பிரிந்தனம்...."
ஓ! மாயாகோவ்ஸ்கி,
துயரினிலாழ்ந்தாய்;
குண்டுகளால் அதை வெல்லப்பார்த்தாய்.

காதலின் வஸ“கரக்
கடுமைதாக்க
நானும்உம்போல மனமழிந்த கவிஞன்தான்
இந்த வண்ணமெல்லாம்
நமக்கேன் நிகழ்கிறது?;
மெல்லிதயங்கொண்டிருந்தோம் என்ப தாலா?

முதிரா இளைஞர் செயலென்று
உம்மையெலாம்
எள்ளுவார் அணி சேரேன்;
என்றாலும்,
உமது வழி தொடரேன்
செய்வதற்கு இன்னும்
பணிகள் மிகஉளதே!;
செயலற்று வாழ்வில் ஒதுங்கமுடியாது:
'பிறத்தியானெல்லாம்
உள், நுழையுங் காலம்!'
முள்முடி குத்தும்
சிலுவை உறுத்தும்தான், என்றாலும்
சாவு வரை வாழ்வேன்!
சாவுக்கு அப்பாலும்
என் செயலிற் கவியில்
உயிர்த்தெழுவேன்;
உயிர்த்தே எழுவேன்!


உன்னுடையவும் கதி


கடற்கரை இருந்து நீ
வீடு திரும்புவாய்
அல்லது,
தியேட்டரில் நின்றும்
வீடு திரும்பலாம்.

திடீரெனத் துவக்குச் சத்தங் கேட்கும்,
சப்பாத்துகள் விரையும் ஓசையும் தொடரும்.
தெருவில் செத்து நீ
வீழ்ந்து கிடப்பாய்
உனது கரத்தில் கத்திமுளைக்கும்;
துவக்கும் முளைக்கலாம்!
'பயங்கரவாதி' யாய்ப்
பட்டமும் பெறுவாய்,
யாரும் ஒன்றும் கேட்க ஏலாது.

மௌனம் உறையும்;
ஆனால்
மக்களின் மனங்களில்,
கொதிப்பு உயர்ந்து வரும்.



[இலங்கையின் வடபகுதியில் (யாழ்ப்பாண மாவட்டத்தில்) 1979 ஜுலை-டிசம்பர் வரை அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டிருந்த சூழலில் இக் கவிதை எழுதப்பட்டது.]


புதிய சப்பாத்தின் கீழ்

சமாந்திரமாய்ச் செல்லும்
கரிய தார் றோட்டில்,
நடந்து செல்கிறேன்.
கண்களில்,
பிரமாண்டமாய் நிலை கொண்டு
கறுத் திருண்ட
டச்சுக் கற் கோட்டை;
மூலையில்,
முன்னோரைப் பய முறுத்திய
தூக்குமரமும் தெளிவாய்.

பரந்த புற்றரை வெளியில்
துவக்கும் தாங்கிய
காக்கி வீரர்கள்;
அரசு யந்திரத்தின்
காவற் கருவி.
என்றும் தயாராய்
வினைத்திறன் பேண
அவர், அணிநடை பயின்றனர்;
சூழ்ந்த காற்றிலும்,
அச்சம் பரவும்.

முன்னூறு ஆண்டுகள் கழிந்தனவாயினும்
நிறந்தான் மாறியது;
மொழிதான் மாறியது;
நாங்கள் இன்றும்,
அடக்கு முறையின் கீழ்.....


சூழலின் யதார்த்தம்

எனது முகமும்
ஆன்மாவும்
அழி மையென,
மூடுண்ட வட்டத்துள்
ஒடுங்கி இருக்கக்
கேட்கப் பட்டேன்.

கால நகர்வில்
தாங்காமையில் வெளிவந்து
சிறு தூரம்
நடக்கத் தெடங்கினேன்.
தடிகளுடன் எனைச் சூழ்ந்தனர்;
'கலகக்காலன்' என்று சொல்லி.



வ.ஐ.ச. ஜெயபாலன்



இளவேனிலும் உழவனும்


காட்டை வகிடுபிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப்பாதை.
வீடுதிரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில்
கலப்பை சுமந்து
தொடர்கிறான்.

தொட்டதெல்லாம் பொன்னாக
தேவதையின் வரம்பெற்ற
மாலைவெய்யில்
மஞ்சட்பொன் சரிகையிட்ட
நிலபாவாடை
நீளவிரிக்கிறது:
இதயத்தைக் கொள்ளையிட
வண்ணத்துப் பூச்சிகள்
வழிமறிக்கும்
காட்டுமல்லிகைகள்
காற்றையே தூதனப்பி
கண்சிமிட்டும்.

அழகில்
கால்கள் தரிக்கும்.
முன்நடக்கும் எருதுகளோ,
தரிக்கா.

ஏழையவன்
ஏகும்வழி நெடுந்தூரம்.


நம்பிக்கை

துணை பிரிந்த கயிலொன்றின்
சோகம் போல
மெல்ல மெல்ல
கசிகிறது ஆற்று வெள்ளம்.
காற்றாடும் நாணலிடை
மூச்சுத் திணறி
முக்குளிக்கும் வரால் மீன்கள்.
ஒரு கோடை மாலைப்பொழுது அது.
என்ன ருகே
வெம் மணலில்
ஆலம்பழக் கோதும்
ஐந்தாறு சிறு வித்தும்
காய்ந்து கிடக்கக்
காண்கின்றேன்
என்றாலும்,
எங்கோ வெகு தொலைவில்
இனிய குரல் எடுத்து
மாரி தன்னைப் பாடுகிறான்
வன்னிச் சிறான் ஒருவன்.


பாலி ஆறு நகர்கிறது

அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்கு கின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி

ஏது மொரு ஆர்ப்பாட்டம்
இல்லாமல் முன் நோக்கி
பாலி ஆறு நகர்கிறது.
ஆங்காங்கே நாணல்
அடங்காமல் காற்றோடு
இரகசியம் பேசி
ஏதேதோ சலசலக்கும்.
எண்ணற்ற வகைப் பறவை
எழுப்பும் சங்கீதங்கள்.
துள்ளி விழுந்து
'துழும்' என்னும் வரால்மீன்கள்.

என்றாலும் அமைதியை
ஏதோ பராமரிக்கும்
அந்த வளைவை அடுத்து
கருங்கல் மறைப்பில்
அடர்ந்துள்ள நாணல் அருகே
மணற் கரையில் ஒரு மருங்கம்
ஓங்கி முகடு கட்டி
ஒளி வடிக்கும்
மருத மர நிழலில்
எங்கள் கிராமத்து
எழில் மிகுந்த சிறு பெண்கள்
அக்குவேறு ஆணிவேறாய்
ஊரின் புதினங்கள்
ஒவ்வொன்றாய் ஆராய்ந்து
சிரித்து
கேலி செய்து
சினந்து
வாய்ச் சண்டை யிட்டு
துவைத்து
நீராடிக் களிக்கின்றார்.

ஆனாலும்
அமைதியாய்ப்
பாலி ஆறு நகர்கிறது
அந் நாளில்
பண்டார வன்னியனின்*
படை நடந்த அடிச் சுவடு
இந்நாளும் இம்மணலில்
இருக்கவே செய்யும்
அவன்
தங்கி இளைப்பாறி
தானைத் தலைவருடன்
தாக்கு தலைத் திட்டமிட்டு
புழுதி படிந்திருந்த
கால்கள் கழுவி
கைகளினால் நீரருந்தி
வெள்ளையர்கள் பின் வாங்கும்
வெற்றிகளின் நிம்மதியில்
சந்றே கண்ணயர்ந்த
தரை மீது அதே மருது
இன்றும் நிழல் பரப்பும்
அந்த வளைவுக்கு அப்பால்
அதே மறைப்பில்
இன்னும் குளிக்கின்றார்
எங்களது ஊர்ப் பெண்கள்
ஏது மொரு
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
பாலி ஆறு நகர்கிறது.



* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.


கடற்புறம்

காலமகள் மணலெடுத்து
கோலமிட்ட கடற்புறத்தில்
ஏழை மகள் ஒருத்தி.

முன்னே கடல் விரியும்
முது கடலின் பின்னாடி
விண்ணோ தொடரும்
விண்ணுக்கும் அப்பாலே
விழி தொடர நிற்கின்றாள்.

தாழை மர வேலி,
தள்ளி ஒரு சிறு குடிசை;
சிறுகுடிசைக்குள்ளே
தூங்கும் சிறு குழந்தை

ஆழ்க்கடலில்
ஆடுகின்ற தோணியிலே
தாழம்பூ வாசம்
தரைக் காற்று சுமந்து வரும்.
காற்று பெருங்காற்று
காற்றோடு கும்மிருட்டு.
கும்மிருட்டே குலைநடுங்கி
கோசமிட்ட கடல் பெருக்கு.

கல்லுவைத்த கோவிலெல்லாம்
கைகூப்பி வரம் இரந்த
அந்த இரவு
அதற்குள் மறக்காது.
திரை கடலை வென்று வந்தும்
திரவியங்கள் கொண்டு வந்தும்
இந்த சிறு குடிசை,
இரண்டு பிடி சோறு,
தோணி உடையான்
தரும்பிச்சை என்கின்ற
கோணல் நினைப்பு;
பெருமூச்சு.

தானாய் விடி வெள்ளி
தோன்றுகின்ற சங்கதிகள்
வானத்தில் மட்டும்தான்.
வாழ்வில் இருள் தொடரும்.


கன்னியாகுமாரியில் ஒரு கவிதைப் பொழுது


யாருக்கிந்தச் செங்கதிர்ச் செல்வன்
மாலைப்பொழுதில் பொன் உருக்குகிறான்.
வடியும் பொன்னில் தோயும் முகில் மந்தை
மேலைவான் சுவரெங்கும் முதுகு தேய்கும்.
காவிரிக் கொடியையே வேருடன் விழுங்கிய
வரட்சி என்னும் தீ நா அரக்கனை
சாரல் சரங்களை எய்து வருணன்
சங்காரம் செய்யும் வசந்த நாட்கள்.

குமரிக்கு வந்த அலைப்பெண்டுகள்கூட
கற்களில் நீல முந்தானை வெளுக்கும்,
மழையும் ஓய்ந்துபோய் வானமும் தெளிந்துபோய்
தென்னை மரங்களும் சேச்சின் முகப்பும்
சின்னக் குடில்களும் சிலதில் புகையும்
கடல் அலைமீது மரப் புணைபற்றி
அலைகள் போன்ற ஆதிசேடன் தலைமேல்
கண்ணாய் ஆடும் மீனவச் சிறுவரும்
கடலின் பிணக்கால் மணற்கரை தோறம்
கைமை நோற்கும் கட்டு மரங்களும்
இந்தியா அடங்கிலும் புகழப்படுகிற கன்னியாகுமரியில்
எண்ணவும் படாமலோர் கிராமமும் இருந்தது.

கலகலப்பான கடைத்தெருக் கூட்டமும்
நீருள் வைத்த தேன் சாடி தன்னை
தேடும் எறும்புச்சாரியைப் போல
பளிங்கு வளாகம் சூடப்பட்ட
விவேகானந்தப் பாறையில் மொய்க்கும்
யாத்ரீகர்களும் உல்லாசிகளுமாய்
இந்தியா முழுவதும் பேசப்படுகிற கன்னியாகுமரியில்
எண்ணவும் படாமல் ஓர் கிராமமும் இருந்தது.

தற்காலிகமாய்
சித்தன் போக்கும் சிவன் போக்கும் எய்தி
எங்கும் சிதறும் உல்லாசப் பயணிகள்.
குளித்த சாம்பரை உதறும் கோழிபோல்
தேடிய துயர்களை உதறும் மானிடர் நடுவே
சோகம் நசுக்கத் தொய்ந்துபோய் இருந்தேன்.

உலகப் பந்தில் கேட்பாரின்றி
என்னரும் ஈழத்தமிழர் தாய்நாடு
எரியூட்டப்படும்
துயர்ச் சுமையுள்ளே திணறிப் போனேன்.
தமிழைப் பேசும் காரணமாக
மானிட இருப்பே மறுக்கப்பட்டது.
குடிசையில் பற்றிய தீயிடம் தப்ப
கூரை முகட்டில் ஏறிடும் வாழ்வு.
சிறு புழுக்கூட திரும்பிக் கடிக்கும்
வேளைகள் உள்ளதே.

எமது வாசல் மாக்கோலங்கள்
தேடுவாரற்றுச் சிதைந்து போனது.
எமது இளைஞரின் இரத்தக் கோலம்
ஒவ்வோர் வாசற்படியிலும் கனன்றது.
சிறு புழுக்கூட திரும்பிக் கடிக்கும்
வேளைகள் உள்ளதே.

பைசிக்கிள் வண்டியில் சூரிய உதயத்தை
ஏந்தியபடிக்கு
கிராமங்கள் தோறும் கதவைத் தட்டும்
வீரமங்கை யூலியை நினைத்தேன்.
அவளது கனலை குதறும் கனவில்
வவுனியா வீதியில் ராணுவ உடையில்
அலையும் ஓநாய்கள் சிலதையும் நினைத்தேன்.
எனது தங்கை எனது அம்மா
எனது வீடு
எத்தனை நினைவுகள் அத்தனை பதறல்கள்.

குமரித்தாயே
அண்டை வீடு எரியும்போது
சோம்பல் முறிக்கும் இந்திய சனங்களின்
குமரித் தாயே
தென்றல் கரத்தால் என் கண்­ர் துடைத்தனை
நான் ஒருவனம் அல்லன்
ஒருவன் நானுமல்லன்.



சேரன்


இரு காலைகளும் ஒரு பின்னிரவும்

இன்றைக்கு, இப்படித்தான்
விடியல்:
இருள் முழுதும் பிரியாது,
ஒளி நிறைந்து விரியாத
ஒரு நேரம்
விழித்தெழுந்து வெளியில்வரக்
கிணற்றடியின் அரசமரக் கிளைகளிலே
குயில் கூவும்;
'ஓ' வென்று நிலத்தின் கீழ்
ஆழத்துள் விரிந்திருந்த
கிணறு,
சலனமற்று உறங்கியது
என் மனம் போல.

இன்றைக்கு இப்படித்தான்
விடியல்!

நாளைக்கும்,
இப்படித்தான் விடியும்
என்று நினையாதே.
பாதிராத்திரியும் மெதுவாகப்
போனபின்பு, 'கேற்' றடியில்
அடிக்குரலில் ஜ“ப் வண்டி உறுமும்;
சப்பாத் தொலிகள் தடதடக்கும்,
அதிர்ந்ததென
எம் வீட்டுக் கதவுகளோ
விரிந்து திறந்து கொள்ள,
அப்போதுதான்,
அடுத்தநாள் பரீட்சைக்கு
விரிவுரைக் குறிப்புக்கள்
விழுங்கிக் களைத்ததில்
விழிகள் மூடிய
அந்த இரவிலே-

'அவர்கள்' கூப்பிடுவது
கேட்கும். காதில்
ஊளையிடும் காற்று.
'எங்கே அவன்?' என்று
கேட்பார்கள். கேட்கையிலே
பிழைபட்ட தமிழ்,நெஞ்சில்
நெருட எழுந்துவரும்.

வார்த்தையற்று
அதிர்ந்து போய்,
'இல்லை' எனத் தலையாட்ட
இழுத் தெறிவார்கள் ஜ“ப்பினுள்.
நிறுத்தாத எஞ்சின்
அப்போதும் இரைந்தபடி.

பிறகு-?
பிறகென்ன, எல்லாம்
வழமைப்படி,

காலை; வெறும் சூரியன்
வெய்யில்! நிலத்தில்
எனக்குமேல்
புல்!

சிலவேளை- வீடுவந்து
கதவு திறப்பதற்காய்க்
குரல் காட்டித் திறக்கமுன்பு
இருமிச் சளி உமிழ
முகம் திருப்ப
உள் ளிருந்தும்,
அம்மா இருமும் ஒலி கேட்கும்!

கதவு திறப்பதற்காய்க்
காத்திருந்தேன்.
வெளியுலகம்
இப்போதும் முன்போல
அடங்கி இருக்கிறது.


கானல் வரி

மறுபடியும்
எல்லோரும் வந்தாயிற்று
மாமா, சித்தப்பா,
மணியக்கா,
அண்ணாந்து சாய்ந்தபடி,
அப்பா கதிரைக்குள்.

சுருட்டு புகை கிளப்பும்
மார்பு மயிர்க் காட்டில்
மேய்கிற விரல்கள்.

மறுபடியும்,
காணி உறுதிகள்,
கூறைச் சேலையுடன்
உறங்கி, உறங்கி,
அதற்கும் தொற்றிய,
நம்தலீன் வாசனை.

சரசா! எனது அருமைச் சரசா!!

நீ என்ன செய்வாய்?
அவர்களோ உள்ளே
உனது விலைக்குப் பேரம் பேசுவர்.

மகிழம்பூ சிந்தியிருக்கும்
தண்­ர் ஊற்றவும்
பாலாய் நெளிகிற நிலவில்
இரவு.
குந்தியிருப்பாய் கிணற்றுக் கட்டில்
கண்களை மூடி, கற்களை எறிந்து.
குருட்டுச் சாத்திரம்
பார்த்தபடியே.

'இம் மு€றேனும்...'

காத்திரு.
உனக்காய் இவர்களனைவரும்
கொண்டு வருவார்;
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்
பொன்னிற இறகுகள்
தலையில் மினுங்கும்
'தூய க்ஷத்திரியனை'

பார்த்திரு.
உனது கூந்தல் வெளுத்த
பின்பும் கூட.


நதிமூலம்

உன் வட்டத்துக்குள்
நான் வந்தாயிற்று,
எப்போதோ.

இன்று,
நீ விலகப் போகிறாய்
என்று தெரிந்தும்,
நான் நீயாக முடியாமலும்
நடுவில்,
அந்தரங் கொண்டு.....

இப்போதும் கூட
கிழக்குப்புற மலை உச்சியில்
நீ--
மேற்குப்புற உச்சியில்
நான்.
அர்த்தத்தோடு;
பார்த்துக் கொள்ளலாம்
நெருங்கித் திரியலாம்
நீயும் கீழே இறங்கலாம்
நானும் கீழே இறங்கலாம்
(எவ்வளவு காலம் வரை?)

நடந்ததெல்லாம் கனவுகளாய்
நிறம்மாற,
உன் விலகலை எற்று,
சுமையுடன் நான் இறங்கலாம்!
நீயும்,
கிழக்கிருந்து தனியே
இறங்கி நடக்கலாம்,
பிறகு நெடுவழியும்
தனித்துத்தான் உன்பயணம்
என நான் அறிவேன்!

ஆனால்--
வாழ்க்கை, ஒரு காற்று மாதிரி
பூவையும் உதிர்க்கும்;
இலையையும் உதிர்க்கும்;
மரத்தையும் முறிக்கும்--
எப்போ தென்று தெரியாமல்.
உனக்கு மேலும் ஒரு பூ,
எனக்கு மேலும் தான்
நாங்கள் இணைந்த போது.
இனி,
எதை எதையெல்லாம்
இந்தக் காற்று
எங்கள் மீது,
உதிர்க்குமோ தெரியாது--

அன்றைக்கு--
சூரிய கிரகணம் நிகழ்ந்தவேளை,
அந்தி நேரமும் மஞ்சள் வெயிலும்
திடீரென்று வந்தபோது
எனக்கு,
சூரியனைப் பார்க்க ஆசையாயிற்று.
வேண்டாம் என்றாய்

அப்போது
காற்றே இல்லை!

இனி--
நீள வழிப்பயணம்
நடப்போம் என்ன?


மயான காண்டம்


அன்றைய இரவு,
அடர்ந்ததான கறுப்புப் போர்வையுள்
பூமி இருந்ததாய் எனக்குத் தெரிந்தது.
அதுவுமல்லாமல்,
வெளிச்சம் இருந்த ஞாபகமும் இன்றி
ஓலையின் அசைவு,
ஒரு குழந்தையின் அழுகை,
தொலைவிருந்தெழுந்து வருகிற ரயிலின் நீண்ட குரல்
ஒன்றுமில்லாது,
ஒரு எழுதப்படாத சோகம்....

பாருங்கள்,
ஒரு கதை போல சனங்கள்
எனக்கு அதைச் சொல்லமுன்பு
அன்றைய இரவு நான் உணர்ந்த சோகம்
அதிசயமில்லையா?

முகமும் விழிகளும் இல்லாத
வெறும் மனிதர்களுக்கு
அவனது மரணம் ஓர் செய்தி போல....
நீளவும் தூக்கம் வரும்வரை
கதைக்கிற செய்தி....
இன்றைக்கு இரவு அன்று போலல்ல.
நிலவு தெறித்த இலைகள் சுவரில் மிதக்கின்றன
விளக்கில்லாத தெருவில் விட்டில்களுமில்லை;
நான் கதை எழுதத் தொடங்கும்போது
முகமற்றவர்கள் தூங்கப் போய் விட்டார்கள்.

அன்றிரா;
நான் போனபோது
வைத்தியசாலையில், 'கேற்'றின் வெளிப்புறம்
குனிந்த தலையுடன் நின்றனர் சிலர்;
மிக மெதுவாக உள்ளே சென்று
வைத்திய சாலையின் நீள நடந்து
மாடிப்படிகளை நுனிக்கால் கடக்க...,

18ஆம் வார்ட்
விறாந்தையில் கூட ஓரிரு கட்டில்கள்
விளக்கு வெளிச்சம்;
வெள்ளைச் žருடை
இங்கேதான் உன்னை வளர்த்தியிருந்தனர்....
வெண்முகில் பரப்பாய் உயரே இருந்து
கட்டிலின் விளிம்பு வரையும் தொங்கிய
வெண்ணிறத் துகிலை நீக்கி,
உடலைக் காட்டினாள் ஒருத்தி;

மற்றவள்
ஒருபுறம் சரிந்து கிடந்த முகத்தை
ஓரக் கைகளால் அசைத்து நிமிர்த்தவும்
ஒருகணம்,
எனது குருதி நாடிகள் உறைந்து போயின.
கால்களின் கீழே
பூமி பிளந்து சரிவதான உணர்வு எழுந்தது.

என்ன விதமாய் இப்படி நிகழ்ந்தது....?

உன்
நிமிர்ந்த நடையும், நறுக்கிய மீசையும்
சுருண்டு கிடந்த மயிரும்
எனது நினைவில் இருந்தன;
வடலிகள் விரியும் சுடலையின் பக்கமும்
கிழக்கே பனைவெளிப் புறத்திலும்
அப்பால், 'உயனைவெளி' யிலும்
உனது ஆடுகள் திரிய,
அவற்றின் பின் நீ
žட்டி ஒலியுடன் தொடர்தலும்
எனது நெஞ்சில் உள்ளது.

செம்மண் நிலத்தின் மார்பு பிளந்து
வேர்விடும் கிளுவையை,
சிவப்பு முன்முருக்கைத்
தோண்டவே உயரும் அலவாங்கின் நுனி
எவ்விதம் உனது நெஞ்சுள் இறங்கிற்று?
முன்ணைய நாளின் நினைவுகள்
எனது நெஞ்சில் இருந்தன:

பொன் வண்டுகள் மினுங்கும் என்று
இலந்தை மரங்களை மேய்ந்து திரிந்ததும்,
மணிப்புறா பிடிக்க வைத்த கண்ணியில்
அடுத்த வீட்டுக் கோழிகள் நெரிந்ததும்
உனக்குத் தெரியும்;
மீண்டும் மீண்டும்
பிள்ளையார் கோவிலின் தீர்த்தக்கரையில்
குந்தி இருந்ததும்,
பயறு கொய்ததும்,
அடுத்த வீட்டுச் சந்திரன், அலி எனச் சொன்னதில்
அவனை இழுத்து வந்து அப்பால் விரிந்த
சணல் மரப்புதர்களுள் அவனைப் புரட்டி
இடுப்பில் இருந்த துணியை உருவித்
திகைப்புக் கொண்டதும்,
திரும்பிப் பறந்ததும்...

இவற்றை மறத்தல் இயலுமா எனக்கு?
மேற்கே போனாய் நீ.
நான்,
இன்னும் கிழக்கே நடந்தேன்
நண்ப,
இன்று இப்படித்தான் உன்னைக்
காண நேர்கிறது...
'இரத்தமும் சதையும்
நிணமும் எலும்பும்....'

அன்று,
வானை நோக்கி எலும்புகள் நீட்டிச்
செத்துப் போன ராட்சச மரமாய்
நெருப்பில் கருகி நின்றது வீடு....

உனது வீட்டை இரவில் கொளுத்தினர்
சூரியன் பிளந்து சிதறும் குருதியாய்
கிடுகுகள் விலக்கி ஒளிரும் கதிர்களை
தெருவில் நின்று பார்க்க நேர்ந்தது....

உனது நிலத்தை அவர்கள் பறித்தனர்...

இன்று,
உன்னைக் கொன்றனர்;
உன்னை அவர்கள் கொன்றனர்...

இன்றோ பழைய கதையை மீண்டும் பார்க்கிறேன்...
ஆவரசஞ்செடி; அதன்புறம் கள்ளி,
ஆட்களேயின்றிச்
சூரியன் மட்டும் தனித்துப்போன இவ்வெளியில்
இன்றும்,
ஆள்காட்டிகளே கூக்குரல் எழுப்ப
உன்னை எரித்துத் திரும்பினர்;
பிறகு நாங்களும்.

நெருஞ்சி மலர்கள் மஞ்சலாய் நிமிர்கிற
மண்ணில்,
ஒருபிடி கூட உனக்குச் சொந்தமில்லை...
உனது அப்பன்,
பனையில் இருந்து தவறி வீழ்ந்ததில்
ஒரு கணப் பொழுதில் வார்த்தைகளிழந்து
ரத்தமாய் உறைந்தவன்;
அவனது அப்பன்,
செத்துப் போனதும்,
'காய்க்கும் நன்றாய்' என்பதனாலே
மாதுளம் பாத்தியுள் ஆழப்புதைந்தவன்...
இன்று,
ஒன்றுமே இல்லை....
உன்னையும் வெட்டினர்....

ஆயிரம் விரல்கள் உன்னை நோக்கித்
துவக்கு முளைகளாய் நீண்ட போதும்
கோடையில் வெடிக்கிற யாழ்ப்பாணத்தின்
பாலைமண்ணில் உறுதியாய் நிமிர்ந்தாய்....

உன்னைக் கொன்றனர்
உன்னை அவர்கள் கொன்றனர்...

எழுதப்படாத சரித்திரம்
துயர் சூழ்ந்து
ரத்தம் சிந்திய நிலங்களின் மீது
நெல் விளைகிறது;
சணல் பூக்கிறது; மழை பெய்கிறது...

நீ துயில்க.
அந்நியர்கள் வந்துவிட்டார்கள் என்பதையாவது
நான்,
அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்...


காற்றில் எழுதுதல்


எண்ணிக் கொஞ்ச வார்த்தைகள்
அவற்றிடையே
மிகப்பெரிய மௌனம்
உறைந் திருந்தது.
என் இதழ் நுனிகளிலும்
உன் முலை ஓரத்திலும்
ஈரம் உலரும் முன்பாக
ஒரு பகலின் பின் பாதி
உன்னோடு போயிற்று...

சித்திரையில்,
முள்முருக்குச் சிவப்பாகிறது.
அதன் உச்சிக் கொம்புகளில்
இலை இல்லை
அங்கு,
குந்த வரும் குருவிகளோ
கொடி உயரம் போகிறது
துணை பிரிந்து...

பிரிய சகி,
'இரண்டு சிட்டுக் குருவிகளை
அனுப்பு' என்கிறாய்;
•மக்கு நுனியில் வைக்கோல் மடலைச்
செருகிக் கொண்டு
ஆண் பறவை கூடு கட்டப்
போய் விட்டது.
பெண் பறவையோ வெனில்
விறாந்தைச் சுவரின் நிலைக் கண்ணாடியோடு
போர் புரியத் துவங்கி விட்டது.
எப்படி இவற்றை நான்
உன்னிடம் அனுப்ப?
வண்ணாத்திப் பூச்சிகளிலோ
எனக்கு நம்பிக்கை இல்லை,
ஒரு நடுப்பகல் நேர
அந்தரப் புணர்ச்சியிலேயே
வீரிய மிழந்து போய்
மல்லிகைக் கொடியோர
மெல்லிய நிழலில்
காற்று அரிர,
இறகுகளை உதைத்துக் கொண்டு
மூச்சு விடுகின்றன.

என் சோகத்தின் பாரத்தை
அவை எவ்வாறு ஏந்திப்
பறக்க முடியும்?

உனது வீடு தூரமில்லை;
நேரில் வருவதே நான் விரும்புவது.
ஆனால், பார்
கண்களுக்குத் தெரியா வலை
காலங் காலமாய்
நெருப்பைக் காலின் கீழ்
மிதித்து வைத்துள்ள
இரும்புப் பாறை...

உருகும் வரையில்
உள்ள காத்திருப்பில்
ஏது அர்த்தம்?

பொய்கைக் கரை ஓரப்
பூவரசு நீழலிலே
உன் வீடும் இல்லை;
என் வீடும் இல்லை;
நம் வீடு!

---------------------------------------------------------------------

கவிஞர்கள் பற்றிய குறிப்புகள்

மஹாகவி

(1927-1971) யாழ்ப்பாணத்திலுள்ள அளவெட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். பண்டிதன், புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனைப்பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளர். சொந்தப் பெயர் து.உருத்திரமூர்த்தி. இடைநிலைக்கல்வியோடு 19ஆம் வயதில் அரச எழுதுவினைஞராகக் சேர்ந்தார். 1967 முதல் இலங்கை நிருவாக சேவையில் (C.A.S.) சேர்ந்து உயர் அதிகாரியாகக் கடமையாற்றினார்.

1943இல் இருந்து இவரது கவிதைகள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகத் தொடங்கின. ஆரம்பகாலத்தில் சில சிறுகதைகளும் எழுதியுள்ளர். ஏராளமான கவிதைகள், ஐந்து காவியங்கள், மூன்று மேடைப் பாநாடகங்கள், சுமார் பத்து வானொலிப் பாநாடகங்கள் என்பன இவரது படைப்புள். ஈழத்தில் முதலாவது கவிதை ஏடான 'தேன் மொழி' (1955-1956)யின் இணை ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.

இதுவரை வெளிவந்த நூல்கள்:

வள்ளி (1955), குறும்பா (1966) கண்மணியாள் காதை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971), வீடும் வெளியும் (1973), இரண்டு காவியங்கள் (1974),புதியதொரு வீடு (ஆறு நாடகங்கள் தொகுப்பில்-1979)


முருகையன்

(1935- ) யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள கவ்வயல் கிராமத்தில் பிறந்தவர். விஞ்ஞானப் பட்டதாரியும் கலைப் பட்டதாரியுமான இவர் இலங்கைக் கல்விச் சேவையில் (Sri Lanka Education Service) சேர்ந்து தற்போது முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.

1950 முதல் கவிதை எழுதிவரும் இவர், இதுவரை ஏராளமான கவிதைகளும் சில காவியங்களும், ஆறு மேடைப் பாநாடகங்களும், பன்னிரெண்டு வானொலிப் பாநாடகங்களும் எழுதியுள்ளர். ஆங்கிலத்திலும் தமிழிலும் இலக்கியம், இலக்கியத் திறனாய்வு பற்றிய பல கட்டுரைகளும் எழுதியுள்ளர். ஆங்கிலத்தில் இருந்து பல கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள இவர் 'நோக்கு' என்ற காலாண்டுக் கவிதை இதழின் (1964-1965) இணை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளர்.

இதுவரை வெளிவந்த நூல்கள்:

ஒரு வரம் (1964), வந்து சேர்ந்தன, தரிசனம் (1965), நெடும்பகம் (1967), கோபுவாசல் (1969), கவிதை நயம் (இணை ஆசிரியர் - 1970), ஒருசில விதி செய்வோம் (1972), ஆதிபகவன் (1978).

முகவரி: இ. முருகையன், விநாயகர் பவனம், நீர்வேலி தெற்கு, நீர்வேலி, இலங்கை.


நீலாவணன்

(1931-1975) கிழக்கில்ங்கையிலுள்ள பெரிய நீலாவணை என்னும் கிராமத்தில் பிறந்தவர். கிராமத்தின் பெயரையே புனைபெயராக்கிக் கொண்டார். நீலா-சின்த்துரை, கொழுவுதுறட்டி, அம்மாச்சி ஆறுமுகம், வேதாந்தி முதலிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளர். சொந்தப் பெயர் கே.சின்னத்துரை. பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

1953இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. நூற்றுக்கணக்கான கவிதைகளும், இரண்டு காவியங்களும்,சில பாநாடகங்களும், நடைச்சித்திரங்களும் கூட எழுதியவர். இவரது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள் சிலவும் பிரசுரமாகியுள்ளன.

சில இதழ்களே வெளிவந்த 'பாடும்மீன்' என்னும் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும், கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

இதுவரை வெளிவந்த நுல்கள் :

வழி (1976), வேளாண்மை (1982)


மு. பொன்னம்பலம்

(1939 - ) யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தவர். தற்போது ஆத்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை மாற்ற முயலும் சர்வமத சங்கம் -பூரண சர்வோதய இயக்கத்தில் முழுநேர ஊழியராகப் பணிபுரிகிறார்.

1950களின் இறுதியிலிருந்து கவிதை எழுதிவரும் இவர் சில சிறுகதைகளும் எழுதியுள்ளார். விமர்சனத் துறையிலும் அதிக ஈடுபாடு உடையவர். மு.தளையசிங்கம் இவரது சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த நூல்:

அது (கவிதைத் தொகுதி) (1938)

முகவரி: மு. பொன்னம்பலம், 8ஆம் வட்டாரம், புங்குடுதீவு, இலங்கை.


எம்.ஏ.நுஃமான்

(1944- ) கிழக்கிலங்கையில் உள்ள கல்முனைக்குடியில் பிறந்தவர். மொழியியலில் எம்.ஏ. பட்டதாரி. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

1960 முதல் கவிதை எழுதிவரும் இவர், சில சிறுகதைகளும் எழுதியுள்ளர். இலக்கிய விமர்சனம், மொழியில், நாட்டார் வழக்கியல் ஆகிய துறைகளில் பல கட்டுரைகளும் எழுதியுள்ளர். 'கவிஞன்'என்ற காலாண்டுக் கவிதை இதழை சிலகாலம் (1969-1970) நடத்திய இவர் வாசகர் சங்க வெளியீடாக பல இலக்கிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தின் ஊடாக பிறமொழிக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தும் வருகின்றார்.

இதுவரை வெளிவந்த நூல்கள்:

தாத்தாமாரும் பேரர்களும் (1977), இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (1979- கூட்டு ஆசிரியர்), பல•!தீனக் கவிதைகள் (1981) அழியா நிழல்கள் (1982), மழை நாட்கள் வரும் (1983) முகவரி: எம்.ஏ. நுஃமான், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம், இலங்கை.


சண்முகம் சிவலிங்கம்

(1940- ) கிழக்கிலங்கையிலுள்ள பாண்டியிருப்பு என்னும் கிராமத்தில் பிறந்தவர். விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக் கடமையாற்றுகின்றார்.

1960களில் இருந்து கவிதை எழுதிவரும் இவர் பல சிறுகதைகளும், பிரசுரமாகாத இரு நாவல்களும் எழுதியுள்ளார். இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ள இவர், பிறமொழிக் கவிதைகள் பலவற்றை தமிழில் மொழி பெயர்த்தும் உள்ளார்.

இது வரை நூல்கள் எதுவும் வெளிவரவில்லை.

முகவரி: சண்முகம் சிவலிங்கம், அமலபதி, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கை.


தா. இராமலிங்கம்

(1933- ) யாழ்ப்பாணம், சாவகச் சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் பிறந்தவர். பட்டதாரி ஆசிரியரான இவர் தற்போது மீசாலை, வீரசிங்கம் மஹாவித்தியாலயத்தில் பணிபுரிகிறார்.

1960களின் முற்பகுதியில் இருந்து கவிதை எழுதிவரும் இவரது புதிய கவிதை நூலொன்று 'அகால மரணங்கள்' என்ற பெயரில் அண்மையில் வெளிவர உள்ளது.

இதுவரை வெளிவந்த நூல்கள் :

புதுமெய்க்கவிதைகள் (1964), காணிக்கை 91965)

முகவரி : தா. இராமலிங்கம், மீசாலை வடக்கு, கொடிகாமம், இலங்கை.


சி. சிவசேகரம்

(1942 - ) யாழ்ப்பாணத்தில் உள்ள இணுவில் கிராமத்தில் பிறந்த இவரின் சொந்த ஊர் திருகோணமலை. பொறியியல் துறையில் கலாநிதிப்பட்டம் (லண்டன்) பெற்றவர். தற்போது பேராதனைப் பல்கலைக்கழக பொறியற் பீடத்தில் இயந்திரப் பொறியில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றுகின்றார்.

இயந்திரப் பொறியியல் பற்றியும், தமிழ் சிங்கள எழுத்துச் žர்திருத்தப் பிரச்சினைகள் பற்றியும் ஆங்கிலத்தில் சுமார் 50 ஆய்வுக் கட்டுரைகளும், விஞ்ஞானம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் தமிழில் சுமார் 30 கட்டுரைகளம் எழுதியுள்ளர்.

1957 அளவில் கவிதை எழுதத் தொடங்கியபோதும் 1970களின் நடுப்பகுதியை அடுத்து எழுதியவற்றையே முக்கிய மானதாகக் கருதுகின்றார். சுமார் 35 கவிதைகளே இதுவரை பிரசுரமாகியுள்ளன. பிறமொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார்.

இதுவரை வெளிவந்த நூல்கள்:

மா ஓ சேதுங் கவிதைகள் (1976)

இலங்கையின் இன்றைய அரசியல் நிலையும் தேசிய சிறுபான்மை இனப் பிரச்சினையும் (சிறு பிரசுரம்-1976) Technical Report Writing (Co-Author, 1979) முகவரி : சி. சிவசேகரம், பொறியியற்பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை, இலங்கை.


அ. யேசுராசா

(1946 - ) யாழ்ப்பாணத்திலுள்ள குருநகர் கிராமத்தில் பிறந்தவர். அஞ்சலதிபர், தந்தியாளர் சேவையிலுள்ள இவர், தற்போது கொழும்பு மத்திய தந்திக் கந்தோரில் கடமையாற்றுகிறார்.

1968 முதல் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவரும் இவர், இலக்கியம், நாடகம், திரைப்படம் பற்றிய விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1975இல் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் 'அலை' என்னும் காலாண்டிதழின் இணையாசிரியராக இருப்பதோடு, யாழ் திரைப்பட வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் இயங்கி வருகிறார். 'அறியப்படாதவர்கள் நினைவாக' என்ற பெயரில் இவரது கவிதைத் தொகுதி ஒன்று விரைவில் வெளிவர உள்ளது.

இதுவரை வெளிவந்த நூல்:

தொலையும் இருப்பும் ஏனைய கதைகளும் (1974)

முகவரி: அ. யேசுராசா, 48, சுயஉதவி வீடமைப்புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம், இலங்கை.


வ.ஐ.ச. ஜெயபாலன்

(1944 - ) யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவர். பொருளியல் துறையில் பட்டதாரியான இவர் தற்போது சமூகவியல் ஆய்வில், குறிப்பாக சாதி அமைப்புபற்றிய ஆய்வில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.

1970 முதல் கவிதைகள் எழுதிவரும் இவர், சில சிறுகதைகளம் எழுதியுள்ளார். இவரது சில சமூக ஆய்வுக் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. இதுவரை இவரது நூல்கள் எதுவும் வெளிவரவில்லை.

முகவரி: வ.ஐ.ச. ஜெயபாலன், 61,4ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம், இலங்கை.


சேரன்

(1958- ) யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியில் பிறந்தவர். இவர் மஹாகவியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சமூகவியல் ஆய்வு, தொல்பொருயியல் ஆய்வுத் திட்டங்களில் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார்.

1972இல் இவரது முதலாவது கவிதை பிரசுரமாகியது. எனினும் 70களின் பிற்பகுதியில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினார். கவியரசன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளர். சிறுகதைகளும் எழுதிவரும் இவர், இலக்கிய விமர்சன ஈடுபாடும் உள்ளபர். ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். பலருடைய நூல்கள் இவரது அட்டை ஓவியத்துடன் வெளிவந்துள்ளன.

வெளிவந்த நூல்கள் :

இரண்டாவது சூரிய உதயம் (1983)

விரைவில் இவரது 'அறியப்படாத காலம்' கவிதைத் தொகுதி வெளிவர உள்ளது.

முகவரி: உ. சேரன், 'நீழல்' அளவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை.

--------------------------------------------------------------------